23/2/13

சீனப் பெண் எழுதிய முதல் தமிழ்புத்தகம்



சீனா ரேடியோ இண்டெர்நேஷனல் (CRI) என்பது சீன அரசு வெளிநாட்டினருக்காக பல நிகழ்ச்சிகளை ஒலிபரப்பும் வானொலிநிலையம். 70 ஆண்டுகளாக இயங்கி கொண்டிருக்கும் இந்த நிலையம் இப்போது 60  நாடுகளுக்கு அந்தந்த நாட்டு மொழிகளில் நிகழச்சிகளை வழங்குகிறது. இந்திய மொழிகளில் கடந்த 49 ஆண்டுகளாக நிகழ்ச்சிகளை வழங்கும். இதன் தமிழ் ஒலிபரப்பு மிகவும் பாப்புலர். 22000க்கும்மேல் பதிவு செய்து கொண்ட நேயர்கள் இருக்கிறார்கள். 150 நேயர் மன்றங்களும் செயல்பட்டுவருகின்றன. இந்த தமிழ் ஒலிபரப்பின் தலமைப்பொறுப்பில்லிருப்பவர் திருமதி ஸ்ஹோ ஜியாங். இவர் 

”சீனாவில் இன்ப உலா” என்று ஒரு தமிழ் புத்தகமெழுதியிருக்கிறார். கலைமகள் என்ற தன் தமிழ் பெயரில் எழுதுகிறார்.  ’சீனர் எழுதிய முதல் தமிழ் புத்தகம்’ என்ற பெருமையைப் பெற்றிருக்கும் இந்த  புத்தகத்தை கெளதம் பதிப்பகத்தினர் வெளியிட்டிருக்கிறார்கள். இந்த ஆண்டு சென்னை புத்தக கண்காட்சியில்  இந்த புத்தகம் விற்பனையிலிருந்தது.
சீனாவில் இன்ப உலா என்ற இந்த புத்தகம் சீன கலாசாரம் மற்றும் சீன நகரங்களான பெயிஜிங்,ஷாங்காய் தோன்றிய வரலாறு, திபெத்திய நாகரிகம் போன்றவைகளைப் பேசுகிறது. மாறிவரும் சீன நாகரிகங்கள் வாழ்க்கைமுறை படு வேகமாக இயங்கும் புதிய மெட்ரோ ரயில், ”798” என்ற பெயரில் இயங்கும் கலைகூடங்கள் நிறைந்த பகுதி போன்றவைகளை விளக்கி இதிலிருக்கும் 26 கட்டுரைகள் சொல்லுகிறது சுருக்கமாக சொன்னால் மாறிவரும் சீனாவை பார்க்க விரும்புபவர்களுக்கு  ஒரு. தமிழ் கைடு.
 ”எங்கள் நிலயத்தின் 61 மொழி ஒலிபரப்புகளுக்கு உலகெங்குமிருந்து ஆண்டுக்கு 5 லட்சம் கடிதங்கள் வருகின்றன. அதில் மிக அதிகம் வருவது தமிழ் கடிதங்கள் தான்.அவைகளில் பல சீனாவில் பயணம் செய்வதையும் இடங்களையும் பற்றிய கேள்விகள். இதுதான் என்னை இந்த புத்தகத்தை எழுத தூண்டியது” என்கிறார் இவர்.

திருமதி ஸ்ஹோ ஜியாங் . 15 ஆண்டுகளுக்கு முன் சீன பல்கலைகழகத்தில் தமிழ் படித்தவர் சீனாவில் தமிழ் கற்பிக்க படும் ஒரே இடமான கம்னியூகேஷன் யூனிவர்ஸிட்டி யில் பட்டபடிப்பு முடித்தவர்.  “.புரிந்துகொள்ளவே முடியாத தமிழ் எழுத்துகளுடன் போராடி கற்று கொண்டேன்” என்று சொல்லும் இவர் இன்று சரளமாக இலங்கைத்தமிழ் வாசனையுடன் தமிழ் பேசுகிறார். 2003. 2004 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் சீன வானொலி தமிழ் நேயர்மன்ற கூட்டங்களில் பங்கேற்க பயணங்கள் செய்திருக்கிறார். 13 ஆண்டுகளாக நிலையத்தில் பணியாற்றும் இவர் இப்போது அந்த நிறுவனத்தின் துணைத்தலைவராக பதவி உயர்ந்திருக்கிறார்.
அடுத்த ஆண்டு மொழி தொடர்பாக ஒரு களப்பணி செய்ய தமிழ்நாட்டில் தங்கபோவதாக சொல்லும் இவர் தன் அடுத்த புத்தகத்தை சீன மொழியில் தென் இந்தியாவைப்பற்றி எழுதப்போகிறார். ”இந்தியாவை பார்க்கவரும் சீனர்கள் புது டெல்லி வந்து பார்த்த பின் அங்கிருந்து வட இந்தியாவிலுள்ள சில புத்தர் கோவில்களுக்கு  மட்டும் சென்று திரும்புகின்றனர். அவர்களுக்கு தென் இந்தியாவை அறிமுகபடுத்த விரும்புகிறேன்.  இப்போது சீனாவில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் லைப் ஆப் பை படத்தினால் சீனர்களுக்கு தெனிந்தியாவின் மீது ஒரு ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது”  என்கிறார்.




1 கருத்து :

  1. மேன்மிகு ரமணன் அவர்களுக்கு
    எமது சீனாவில் இன்ப உலா புத்தகம், எம்மை பற்ரியும் கல்கி வார இதழிலில் நன்கு அறிமுகபடுத்தியதற்கு மிக்க நன்றி
    CRI யின் செய்தியும் பார்வையும் பகுதிக்கு நீங்கள் பங்களிக்க கோருகிறேன். திரு ஸ்வாமி தொடர்வார்.
    நன்றி
    கலை மகள்
    Zhao Jiang
    Director
    China Radio International
    22/02/13

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள்