30/5/13

எத்தனை நாள்தான் ஏமாற்றுவார்கள்..



ஜூன் மாத ஆழம் இதழில் எழுதியிருப்பது 



சில ஆண்டுகளுக்கு ஒருமுறை வரவேண்டிய நேரத்தில் வராது ஏமாற்றி, ஏராளாமான இன்னல்களை விளைவிப்பது  நம் நாட்டின் பருவ மழைகள். ஆனால் ஆண்டு தோறும் நாட்டின் ஏதாவது ஒரு மாநிலத்தில் வெடித்து கிளம்புவது நிதி நிறுவனங்களின் மோசடிகள்.இத்தகைய நிதி மோசடித் திட்டங்களில் மோசடி செய்யப்பட்ட பணம் திரும்பக் கிடைத்ததில்லை.  ஒவ்வொரு முறையும் மோசடி செய்த தனி நபர்களின் சூழ்ச்சி, தந்திரம் அல்லது ஏமாற்றப்பட்டவர்களின் ஏமாளித்தனம், அல்லது மோசடியை தடுக்கும் பொறுப்பில் உள்ள அரசு அமைப்புகளின் கவனமின்மை என்று புதுப்புது காரணங்கள் சொல்லபடும். 3 நாட்கள் முதல் பக்கத்தில் தலைப்பு செய்தியாகி, சட்டமன்றத்தில் ரகளையாகி கவன ஈர்ப்பு தீர்மானத்துக்குபின், கமிஷன் அமைப்பதும் ஒழுங்குமுறை சட்டங்களை வலுவாக்கி இனிமேல் இப்படி நடக்க விடாமல் தடுத்து விடுவதாக அரசு சொல்வதும்,வாடிக்கையாகி போன விஷயம்.  ஆனாலும் தொடர்ந்து சாதாரண மக்களின் சேமிப்புகளை சூரையாடும் நிதித் துறை மோசடிகள் மீண்டும் மீண்டும் தலையெடுக்கின்றன.

 இப்போது கொல்கத்தாவை மையமாகக் கொண்டு மேற்கு வங்காளத்திலும், வடகிழக்கு மாநிலங்களிலும் செயல்பட்டு வந்த சாரதா குரூப்பைச் சேர்ந்த நிறுவனங்கள் பொதுமக்களிடமிருந்து பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் நிதி திரட்டி பின் அதை மறைய வைத்து திவால் ஆகியிருக்கின்றன. இந்த நிறுவனத்தின் செயல்பாட்டில் அரசியல்வாதிகள், ஊடக தொழிலதிபர்கள், அதிகார இடைத்தரகர்கள், வழக்கறிஞர்கள் என்று பல தரப்பட்டவர்களுக்கு  தொடர்பு இருப்பது தற்போது அம்பலமாகியிருக்கிறது. முதலீடு செய்தவர்கள் இழந்த மொத்ததொகை எவ்வளவு என்பது இன்னும் கண்டுபிடிக்கபடவில்லை. கைதான இதன் அதிபர் சொன்ன பல தகவல்களில் ஒன்று நிறுவனத்தை நடத்தும் போது ஏற்கனவே ரூ 2,000 கோடிக்கு கமிஷன், போனஸ், மார்கெட்டிங் அலவன்ஸ் என்று பணம் வழங்கியிருக்கிறேன் என்பது.  இந்த தொகை திரட்டிய மொத்த பணத்தில் 30% என்று வைத்துக் கொண்டால் மட்டும் மொத்தம் சுமார் ரூ 6,000 கோடி திரட்டியிருக்கிறது இந்த நிறுவனம்.  இது இந்தியாவில் இதுவரை  ஒரு தனியார் நிதி நிறுவனம் திரட்டிய நிதி ஆதாரங்களிலேயே மிக அதிகமானது.

இவர்களால் எப்படி இது முடிந்தது?     
          

சாரதா குழுமத்தை உருவாக்கியவரும் சேர்மனாக பொறுப்பு வகித்தவருமான சுதிப்தா சென், 2008 வரை மிக சாதரண அளவில் இயங்கிகொண்டிருந்த ஒரு ரியல் ஏஸ்டேட் நிறுவனத்தின் உரிமையாளார். நிலம் வாங்கி விற்பது, சிறிய அளவிலான  அடுக்குமாடிகட்டிடங்கள் நிறுவது போன்ற நிறுவனத்தை நடத்தி கொண்டிருந்த இவரின் கனவுகள் பிராமாண்டமானவை. சகாரா குழுமம் போல தன் நிறுவனத்தை வளர்க்க பேராசை கொண்டு அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார். கட்டிட தொழிலுக்கு அதிக அளவில் பணம் தேவைப்பட, அப்போது  அவர் துவக்கியது சாரதா சிட்பண்ட். அன்னை சாராதாதேவி மீது மிகுந்த மதிப்பு கொண்டவராகவும் அவரது கோட்பாடுகளின் படி ஏழைகளுக்கு உதவுவது தன் நோக்கம் என அறிவித்துகொண்டிருந்தார்.  இவரே எதிர் பார்க்காத அளவில் சிட் பண்ட்டில் பணம் வரவு அதிகமாகி கொண்டிருந்தது. இந்நிலையில்  அவருக்கு கிடைத்த நண்பர்கள் ரத்தன் திப்பு, ஷிவ்நாராயணதாஸ். இவர்கள் மல்டிமார்கெட்டிங் என்ற வலைப்பின்னல் மூலமாக நெட் ஒர்க்கிங்களை உருவாக்கி பணம் உற்பத்தி செய்யும் கில்லாடிகள். இவர்கள் ஆலோசனைப்படி சாராதா சிட்பண்ட் முகவர்களின் மூலமே மிகப்பெரிய நெட் ஒர்க்கிங்கை உருவாக்கி பல ஆயிரம் கோடிகளை பெற்று ரியல் எஸ்டேட் பிஸினை வளர்க்கலாம், அதற்கு தங்களுக்கு  30%^ கமிஷன் எனற திட்டத்தை சுதிப்தா சென்னுக்கு ”விற்று” அவர்களும் பார்ட்னர்களாக இணைந்து சாரதா ரியாலிட்டிஸ் என்ற நிறுவனத்தையும் சில நாட்களிலேயே சாராதா என்ற  துவக்க பெயருடன் 160 கம்பெனிகளையும் ஆரம்பித்துவிட்டார்கள். ஆடம்பரமான அலுவலகங்கள், ஆர்பாட்டமான விளம்பரங்கள்  அமைச்சர்கள் பங்கேற்ற துவக்க விழாக்கள் என குறுகிய காலத்தில் பிரம்மாண்டமான வளர்ச்சி என்ற தோற்றத்தை ஏற்படுட்த்திவிட்டார்கள்.
தங்களிடம் மூதலீடு செய்யப்படும் பணத்தை ரியல் ஏஸ்டேட், ஏற்றுமதி, ஹோட்டல்கள் போன்ற துறையில் பயன்படுத்தி சேமிப்பாளர்களுக்கு பெருமளவு லாபம் தரப்போவதாக ஆடம்பரமான விளமபர அறிக்கைகளை சுதிப்தா சென் சேர்மன் என்ற பெயருடன்  ஒரு மிகப்பெரிய முதலீட்டார்கள் “மாநாட்டில்” வெளியிட்டார்கள்.  15 முதல் 120 மாதங்கள் வரையிலான திட்டங்களில் ரூ 10,000 முதல் ரூ 1 லட்சம் வரை முதலீடு செய்பவர்களுக்கு 12 முதல் 24 சதவீதம் வட்டி தருவதாக வாக்குறுதி அளித்திருந்தார்கள். ""மாதம்தோறும் ரூ.2,000 செலுத்தினால் 15-ஆவது மாதத்தில் ரூ.35,000 கிடைக்கும். ஒரு லட்சம் ரூபாய் வைப்புநிதியாகச் செலுத்தினால் மாதம் ரூ.2,000 வட்டி கிடைக்கும்''. இப்படித்தான் சொன்னார்கள்; சொன்னதைப் போலவே சிலருக்கு சிலகாலம் கொடுத்தார்கள்! வைப்புத் தொகை முதிர்ச்சி அடைந்த பிறகு சேமிப்பாளர் விரும்பினால் பணத்துக்குப் பதிலாக நிலம் அல்லது அடுக்குமாடிபிளாட் வாங்கிக் கொள்ளலாம். என்ற அறிவிப்பும் செய்யபட்டிருந்தது. கிழக்கு, வடகிழக்கு இந்தியாவின் பல நகரங்களில் ஒன்றன்பின் ஒன்றாக கிளை அலுவலகங்கள் திறக்கப்பட்டன. . மேற்கு வங்காளம், வடகிழக்கு மாநிலங்கள், ஒரிசா, ஜார்கண்ட், மாநிலங்களில் 4 ஆண்டுகளில் 300க்கும் மேற்பட்ட அலுவலகங்கள் திறக்கபட்டிருக்கின்றன.
 சாராதா சிட்பண்ட் என்ற நிறுவனம் இந்த குழுமத்தின் நிறுவனங்களில் ஒன்றே தவிர இந்த முதலீடுகளுக்கும் அந்த சிட்பண்ட்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை விளமபரங்களில் தெளிவாக சொல்லபடவில்லை. பணத்தை முதலீடு செய்பவர்கள் புதிய வைப்பாளர்களை கொண்டு வந்தால் புதிய வைப்புத் தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் அவர்களுக்கு கிடைக்கும். அவர்கள் அறிமுகப் படுத்திய முதலீட்டாளர்கள் அறிமுகப்படுத்தும் ஒவ்வொருவரின் வைப்புத் தொகைக்கும் இவர்களுக்கும் கமிஷன் வரும். மல்டிலெவல் மார்கெட்டிங் என்ற இந்த முறையில் , முதலில் பணம் போட்டவர்களுக்கு வட்டி கொடுக்க பிறகு முதலீடு செய்பவர்களின் பணத்தை பயன்படுத்துவது என்ற இந்த முறைக்கு பொன்சி என்று பெயர். இந்தமுறை சேமிப்புகள் தடை செய்யபட்ட ஒன்று, சட்டபடி குற்றமாகும். ஆனாலும்  இந்த திட்டங்களை இவர்கள் பிரபலப்படுத்தியிருக்கிறார்கள்.
ஓய்வு பெற்ற முதியோர்கள், நடுத்தர வர்க்கத்தினர், சிறு வணிகர்கள், உழைக்கும் மக்கள் என்று பல தரப்பினரும் தமது சேமிப்புகளை அதிக லாபம் கிடைக்கும் இந்த திட்டத்தில் முதலீடு செய்திருக்கின்றனர். பல ஆயிரம் கோடி அளவிலான நிதி கொட்ட ஆரம்பித்திருக்கிறது. முதலீட்டாளர்களுக்கு வைப்புத் தொகை, முதிர்ச்சியடையும் நாள், முதிர்ச்சித் தொகை இவற்றை குறிப்பிட்டு சுதிப்தா சென்னின் பெயரை முத்திரையாக பதித்து கொடுக்கும் நிதி சான்றிதழ்களை சேமிப்பாளார்கள் மகிழ்ச்சியுடன் வாங்கிகொண்டார்கள் இந்த நிலையில் கடந்த ஏப்பரல் இரண்டாம் வாரத்தில்  கம்பெனி சில நாட்களுக்கு முன் வழங்கிய காசோலைகள் பணம் இல்லாமல் திரும்பின. இதையடுத்து, பணம் கட்டியவர்கள் சீட்டு கம்பெனி அலுவலகங்களை முற்றுகையிட்டனர். இதற்கிடையே சுகிப்தா சென் தலைமறைவாகிவிட்டார்.

பல ஆயிரக்கணக்கான சாதாரண மக்கள் தங்கள் சேமிப்பை ஒரே நாளில் இழந்த சோகம்  வங்காள மாநிலத்தை மட்டுமில்லை தேசத்தையே தாக்கியது. இதுவரை 5 சேமிப்பாளர்களின் தற்கொலைகள் பதிவு செய்யபட்டிருக்கிறது. தன் மகன் இப்படி மக்களை ஏமாற்றிய  ஒரு நிறுவனத்தில் ஏஜெண்ட்டாக இருந்த அவலத்தை பொறுக்காமல் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார் ஒரு தந்தை  தங்கள் ஓய்வு ஊதியத்தை முழுவதும் இழந்த முதியவர்கள் பலர் மனநிலை பாதிக்கபட்டிருக்கின்றனர்.

வங்காள போலீசாரின் வேண்டுகோளின்படி , காஷ்மீர் போலீஸார் குல்மார்க்கில் ஒரு ஆடம்பர ரிசார்ட்டில்  பதுங்கி இருந்த சுகிப்தா சென் மற்றும் சீட்டு கம்பெனி நிர்வாகிகளூம் கைது செய்யப்பட்டு. அவர்கள் 3 பேரும் கொல்கத்தாவுக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணயில் சி.பி.ஐக்கு சுகிப்தா சென் எழுதிய 18 பக்க கடிதம் ஒன்றை கொடுத்து ஆச்சரியபடுத்தினார் சென். . இதில், தன்னை மிரட்டி பணம் பறித்த அரசியல்வாதிகள் உட்பட 22 பேரின் பெயர்களை அவர் குறிப்பிட்டுள்ளார். திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த எம்.பி.க்கள் சினிஜாய் போஸ், குணால் கோஷ் ஆகியோர் தன்னை மிரட்டி பணம் பறித்ததோடு சீட்டு கம்பெனியையும் சுரண்டியதாக கூறியுள்ளார். இது வங்காளத்திலும் டெல்லியிலும் பல அரசியல் வாதிகளை  தூக்கமிழக்கசெய்திருக்கிறது. தன் கட்சிகாரர்கள் பெயர் இருப்பதால் மம்தாவிற்கு இது இன்னும் ஒரு தலைவலியாக சேர்ந்திருக்கிறது.

அரசியலாகும் மக்களின் சோகம்
எந்த விஷயமானாலும் அதை அரசியலாக்கி தங்கள் தனித்தன்மையை காட்டுவதில் நம் அரசியல் வாதிகளை  எவரும்  மிஞ்ச  முடியாது. புகாரைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறு முதலீட்டாளர்களுக்காக ரூ.500 கோடி நிவாரண நிதியை அரசு வழங்கும் என்று முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். புகையிலை மீது இப்போதுள்ள 25 சதவீத விற்பனை வரியை 10 சதவீதம் மேலும் அதிகரிப்பதன் மூலம் 150 கோடி ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படும். இதன் மூலம் சிறு முதலீட்டாளர்களுக்குத் தேவைப்படும் நிதி திரட்டப்படும் என்று அறிவித்துள்ளார். தன் கட்சிகார்களை காப்பற்றும் முயற்சி என சிபிஎம் இதை வார்ணிக்கிறது.
இது எந்த வகையிலும் நியாயமானது அல்ல. சுனாமி, புயல் போன்ற பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும், பெருவிபத்துகளில், ஏன் சாலை விபத்துகளில்கூட பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் அரசு நிவாரண உதவித் தொகை வழங்குவது இன்றியமையாதது. அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு, "சாரதா' சீட்டு நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து பணத்தை இழந்தவர்களுக்கெல்லாம் பணத்தைத் திருப்பி அளிப்பது, தவறான முன்னுதாரணமாகிவிடும் "பல பேருடைய பணத்தை ஒரு சிலர் ஏமாற்றி ஏப்பம் விடுவார்கள். அதனால் ஏற்படும் இழப்பை அரசு கஜானாவிலிருந்து எடுத்து ஈடு செய்வார்கள்' என்றால் எப்படி? பேராசைப் பட்டவர்கள் பெரு நஷ்டம் அடைந்தால்தான், இதுபோன்ற ஏமாற்று நிறுவனங்கள் மீண்டும் மீண்டும் உருவாகாமல் இருக்கும். "சாரதா சிட்பண்ட்' நிறுவன அதிபர் மட்டுமல்ல, அத்துடன் தொடர்புடைய திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்ட அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதுதான் நியாயம்.”  என்று தினமணி தன் தலையங்கத்தில்  பெரும்பாலன மக்களின் எண்ணத்தை பிரதிபலித்திருந்தது..
"சாரதா' சீட்டுநிதி நிறுவன முறைகேடுகள் பத்திரிகைகளில் வராமல் இருக்க வேண்டும் என்பதற்காக, தானே ஒரு தொலைக்காட்சி சேனலை ரூ.10 கோடிக்கு வாங்கி, ரூ.40 கோடியில் மேம்படுத்தியிருக்கிறார் சுதீப்த சென். ஒரு பத்திரிகையை வாங்கி நடத்தியிருக்கிறார். இந்த ஊடகங்களில் "சிறப்பு சேவைக்காக' திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு பதவிகள் தந்து "பல லட்சம் ரூபாய்' மாத ஊதியம் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னின் நிறுவனம் வளரவளர அவருக்கும் அவரது குழுவிற்கும் அரசியல் ரீதியான பாதுகாப்பு தேவையாகிவிட்டது. அதற்காக அவர்கள நாட, அவர்கள் இந்த பணம் காய்க்கும் மரத்தின் விளைச்சலில் பங்கு கேட்க ஆரமபித்துவிட்டார்கள். தன் கடிதத்தில் சென் எதற்காக, யாருக்கு எவ்வளவு செலவழித்தேன் என பட்டியல் இட்டு கொடுத்திருக்கிறார். ரகசியம் என்று தலைப்பிட்டு சிபிஐ டைரக்டருக்கு எழுதபட்டிருக்கும் கடிதத்தின் இந்த பகுதி  மட்டும் கொல்கத்தாவின் எல்லா செய்திதாள் அலுவலகத்திற்கும் வந்தது. தன்னை பற்றியும், சாராதா குழுமம் பற்றியும் தவறான முறையில் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகமல் இருக்க அதன் அதிபர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பணம் கொடுத்தது, ஊடகங்களில் செல்வாக்கு பெற தனியாக பத்திரிகைகளூம், டிவி சானல்கள் ஆரம்பிப்பது போன்றவைகளுக்கு உதவ அரசியல் வாதிகளுக்கு பணம். ஒரு அரசியல் வாதியின் செல்வாக்கை பெற அவரது நஷ்டமான கம்பெனியை நல்ல விலை கொடுத்து வாங்கியது,  செபி அமைப்பு சாராதா நிறுவனங்கள் பற்றி கேள்விகள் எழுப்பிய பின்னர் அவர்களை சமாளிக்க செபியின் தலவர் யூகே சின்ஹாவின் நண்பர்களை அறிமுகபடுத்த உள்ளூர் கால்பந்தாட்ட குழு தலைவருக்கு பணம்   என்று இது போன்று அடிதடி மிரட்டல்கள் முதல் அரசு அதிகார மிரட்டல்கள் வரை சமாளிப்பதற்காக சுமார் ரூ 270 கோடி ரூபாய் செலவழித்திருக்கிறேன் என்று எழுதி கையெழுத்துடன் சிபிஐக்கு அனுப்பிவிட்டு அதன் நகலை தன்னை கைது செய்த போலீஸிடம் கொடுத்திருக்கிறார் சென். 270 கோடிகளுக்கு சென் கணக்கு சொல்லும் அதே கடிதத்தில் தன் கைவசம் இருக்கும் சொத்துக்கள்  வெறும் 30 கோடிகள் என்றும் பட்டியல் தந்திருக்கிறார். முடிந்தால் விற்று எடுத்து கொள்ளுங்கள் என்பது  இதற்கு அர்த்தம்  மீதி என்ன வாயிற்று? எங்கே  யாருடைய பாதுகாப்பில் பதுக்க பட்டிருக்கிறது?  ஆண்டவனுக்கும் சென்னுக்கும் மாத்திரமே தெரிந்த விஷயம் இது. கடிதம் ஒரு நல்ல வழக்கறிஞர்கள் குழுவினால் தயாரிக்கபட்டிருக்க வேண்டும் என்கிறது வங்காள போலீஸ். இந்த கடிதத்தில் சொல்லபட்டிருக்கும் ஒரு விஷயம் தமிழ்நாடு சம்பந்தபட்டது.

திருமதி மனோரஞ்சனா சின்ஹ் என்பவர் பாசிடிவ் குரூப்ஸ் நிறுவனத்தை சென்னுக்கு விற்பதற்காக தொடர்பு கொண்டாராம். இவரது நிறுவனமான GNN  இந்தியா என்ற நிறுவனத்திற்கு சென்னிடம் 25 கோடி கடன் வாங்கியிருந்தார். அவரை சென்னையில் உள்ள வழக்கறிஞர் திருமதி நளினி சிதம்பரத்தின் அலுவலகத்திற்கு அழைத்துப் போனதாகவும்.  கன்சல்டன்சி கட்டணமாக ஆண்டுக்கு ரூ 1 கோடி என்று  நிர்ணயக்கபட்டது என்
றும்  ப சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்தின் ஆதரவு இருந்தால் மத்திய அரசுடனான சிக்கல்களை எளிதாக தீர்த்துக் கொள்ளலாம் என்று மனோரஞ்சனா சின்ஹ் சொன்னாதால் இதை செய்தேன் என்றும் சொல்லியிருக்கிறார். மேலும் வடகிழக்கு பகுதியில் தான் ஒரு சானல் ஆரம்பிக்க உதவும்படி திருமதி நளினி கேட்டதாகவும் சென் சொல்லியிருக்கிறார். நளினி  சிதம்பரம் இதை மறுத்து அறிக்கை வெளிட்டிருக்கிறார்.  திருமதி மனோரஞ்சனா கம்பெனி லாபோர்டில்  ஒரு வழக்குகாக தன்னை நியமித்திருந்தாகவும், சாராதா குழுமம் மனோரஞ்சனாவின் டிவி கம்பெனியில் முதலீடு செய்ய விரும்பியபோது , அத்தகைய முதலீடு நல்லதல்ல என்று தன் கட்சிகாரருக்கு ஆலோசனை வழங்கியதாகவும் திருமதி நளினி தெரிவிக்கிறார். நிர்ணயக்கபட்ட கன்சல்டன்சி  கட்டணம் பற்றி எதுவும் சொல்லவில்லை.

இனி என்ன நடக்கும்?
திரு சென்னை தவிர இருவர் மட்டுமே  கைது செய்யபட்டிருக்கும் நிலையில், நாட்டில் முதல் முறையாக கைதான உடனேயே ஒரு 28 பக்க கடித்தை கொடுத்து, அதில் ஆளும் கட்சியின் எம்.பி களின் பெயர்களையும் சொல்லி  போலீஸை திணர அடித்த கில்லாடி சென்&கோ எல்லாவற்றையும் எதிர்பார்த்தே செயலாற்றுவது போல் தோன்றுகிறது. மாநில அரசு முன்னாள் நீதிபதி தலமையில் விசாரணை கமிஷனை நியமித்திருக்கிறது. இதுவரை 6000 பேர் தாங்கள் ஏமாற்றபட்டதாக புகார் தந்திருக்கிறார்கள்.  செபி சாரதா நிறுவனங்களை மூட உத்தரவிட்டிருக்கிறது விசாரணை முடிந்து அந்த அறிக்கையின் அடிப்படையில்  வழக்கு பதிவு செய்யபடவே ஆண்டுகள் பல ஆகும். அப்புறம் வழக்கு, அப்பீல் என குறைந்த பட்சம் 15 ஆண்டுகள் ஆகும் அதற்குள் மீடியாக்களும் மோசடியால் பாதிக்கப்டாதவர்களும் விஷயத்தை மறந்தே போவார்கள். இந்த மோசடித் தொழில் வலைப்பின்னலில் அரசியல் வாதிகள்,வங்கிகள், அரசுத்துறைநிர்வாகிகள் போலீஸ் போன்ற துறைகளில் இருக்கும் சிலரும்  பங்குதாரர்களாக இருக்கிறார்கள். அதனாலேயே பரபரப்பான பத்திரிகை செய்தியினைத் தாண்டி இந்த குற்றவாளிகள் தண்டிக்கப்படபோவதில்லை என்பதோடு பறிகொடுத்த பணமும் மக்களுக்கு .திரும்பக் கிடைக்கபோவதில்லை..என்பது தான் நிதர்சனமான உண்மை. ஏற்கெனவே இதுபோன்ற தனியார் சீட்டு நிதி நிறுவனங்களில், வாழ்க்கை முழுதும் சேமித்த தொகையை வைப்புநிதியாக வைத்திழந்த சம்பவங்கள் தமிழ்நாட்டிலும்10 ஆண்டுகலுக்கு முன் நடைபெற்றது. அப்போது, அந்த நிறுவனங்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்தும், வங்கிக் கணக்குகளை முடக்கியும், புகார் தந்தவர்களுக்கு மிகச் சிறிய முதலீட்டுத்தொகை ஓரளவுக்குத் திரும்ப வழங்கப்பட்டது. அதிலும்கூட முழுமையாக நடைபெறவில்லை. அதேபோல் இதிலும் நடக்கும் வாய்ப்புகள்தான் அதிகம். அப்பாவி இந்தியனை ஏமாற்றும் இந்த சூப்பர் இந்தியன்களை  காப்பாற்ற சட்டங்களில் போதுமான ஓட்டைகள் இருக்கிறது...
சட்டம் என்ன சொல்லுகிறது?
இதுபோன்ற சீட்டு நிதி நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது மாநில அரசு அல்ல மத்திய அரசுதான் என்று மம்தா பானர்ஜி மத்திய அரசைக் குற்றம் சாட்டுகிறார். ஆனால் நீண்ட நாட்கள் இதற்கான  சரியான சட்டங்கள் இல்லாத நிலையில்  மத்திய அரசு “சீட்டு நிதி நிறுவன சட்டத்தை 1982ல் கொண்டுவந்தது. இச்சட்டத்தின்படி நாட்டில் உள்ள சீட்டு நிறுவனங்கள் மத்திய அரசின் நிதிதுறையில் பதிவு செய்து கொண்டு செயல்பட்டு வருகின்றன ஆனால் இந்த சட்டத்தில் உள்ள  மிகப்பெரிய ஓட்டை  சீட்டு நடத்தும் நிறுவனங்களைக் கண்காணிக்கும் பணி மத்திய அரசுக்குக் கிடையாது; அதனை அந்தந்த மாநில அரசுகள்தான் கட்டுப்படுத்த வேண்டும். இதனால் பதிவு செய்த பின்னர் இந்த நிறுவனங்கள் தவறு செய்தால் அதை கண்காணித்து தண்டிக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசையே சார்ந்தது.   சிட்பண்ட்களை நடத்தும் புத்திசாலிகள்  சிட் பண்ட்டுடன்  வங்கி அல்லாத நிதி நிறுவனம், டைரக்ட் செல்லிங்  பணபத்திரங்கள் விற்பது போன்ற பல விஷயங்களுக்கு மத்திய மாநில அரசின் பல்வேறு துறைகளில் அனுமதி வாங்கி வைத்திருப்பார்கள், பெரும்பாலும் இந்த துறைகள் அனுமதிகளைத்தான் வழங்குகின்றனவே தவிர கண்காணிக்கும் அதிகாரங்களை கொண்டவையில்லை.. அதனால் இந்த நிறுவனங்கள் பிரச்சனை வரும்போது தரும் தகவல்களை குழப்பி போலீஸையும் கோர்ட்டையும் திணர அடிப்பார்கள். இம்மாதிரி இப்போது நடந்துகொண்டிருக்கும் வழக்குகள் ஏராளம். இதைத் தவிர எந்த பதிவும் செய்யாமல் சிறிய அளவில் சிட்பண்ட்கள் நடத்தி ஏழைமக்களை ஏமாற்றி தலைமறைவாகிறவர்களும் மிக அதிகம். பதிவு செய்யாமல் சீட்டுகள் துவக்குவது  ஒரு குற்றமாகாது என்பது இவர்களுக்கு எளிதாக கைகொடுக்கும் ஒரு ஆயுதம்.. மேலும் பதிவு செய்த சிட்நிறுவனங்களுக்கென  மத்திய அரசின் சட்டம் ஒன்று இருந்தும் கண்காணிக்கும் பொறுப்பு மாநில அரசிடம் இருப்பதால்  ஓரளவு அரசியலும் விளையாடி சாதரண மனிதனின் சேமிப்பை பாதுகாக்க முடியாத அவல நிலை நீடிக்கிறது. கேரள மாநிலத்தில் அரசாங்கமே ஒரு சிட்பண்ட் நிறுவனத்தை ஒரு கார்ப்ரேஷனாக நடத்துவதோடு மாநிலத்தில் உள்ள  மற்ற சிட்பண்ட்டில் சேமிப்போருக்கு அந்த நிறுவங்களைப்பற்றிய தகவல்களையும் தருகிறது. மற்ற மாநிலங்கள் பின்பற்ற வேண்டிய ஒரு நல்ல மாடல் இது.
மக்கள் ஏன் சிட்பண்ட் களில் சேருகிறார்கள்?

குறுகிய காலத்தில், அதிக பயன் கிடைக்க கூடிய வகையிலான சலுகை திட்டங்களை, சீட்டு நிறுவனங்கள் அறிவிக்கின்றன. கேட்டதும், கடன் கிடைக்கிறது. ஆனால், வங்கிகளின் செயல்பாடுகள், நகர்ப்புறங்களிலேயே, முடங்கிவிடுகிறது.கிராமப்புற மக்கள், வங்கிகளுக்கு சென்று, கடன் பெறுவது என்பது, அவ்வளவு எளிதான விஷயமல்ல. ஆனால், இதுபோன்ற விஷயங்கள் எல்லாம், சீட்டு நிறுவனங்களில் இல்லை. இதனால், சீட்டு நிறுவனங்களை நோக்கி, மக்கள் படையெடுக்கின்றனர். முறையாக செயல்படும் சீட்டு நிறுவனங்கள் பல இருந்தாலும், மோசடி செய்யும் நிறுவனங்கள், அதிகரித்துவிட்டன. எனவே, வங்கிச் சேவை, அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் வகையில், மிக எளிதாக்கப்பட வேண்டும்.
என்கிறார் மேற்கு வங்கத்தை சேர்ந்த பிரபல பொறுளாதார நிபுணர் அஜிதா ராய் சவுத்திரி. கிராமபுற மக்களின் தேவைக்க ஏற்ப இன்னும் வங்கி சேவைகள் எளிதாகவேண்டும் இல்லாவிட்டால் இந்த நிலை தொடரத்தான் செய்யும் என்கிறார் இவர்.      சென்னையிலிருக்கும்  IFMR  என்ற  ஆராய்ச்சி நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் ஆராய்ச்சி கட்டுரையில் நாட்டில் வங்கிகிளைகள் அதிகரித்து வந்தாலும்  இன்னும் பலர், 5முதல் 10 சதவீத குடும்பங்கள் சிட்பண்ட்களில்தான் சேமிக்கிறார்கள் என்ற தகவலை சொல்லுகிறது. கிராமபுறங்களில் இன்னும் 40% மக்களுக்கு வங்கி வசதிகள் இல்லை நாட்டில் உள்ள பதிவுசெய்யபட்ட சிட்பண்ட்களில் 30000 கோடிகளுக்கு பிசினஸ் நடைபெறுகிறது (பதிவு செய்யபடாதவைகள் மூலம் இன்னும் அதிகம்) நாட்டில் 10000 க்கும் மேற்பட்ட பதிவு செய்ய்பட்ட சிட்பண்ட் கம்பெனிகள் இருக்கின்றன அதில் சுமார் 2000 தமிழ்நாட்டில் இருக்கிறது. இவைகள் செய்யும் பிசினஸ் ஆண்டுக்கு 4000கோடிக்கும்மேல்.  2003லிருந்து 2010 வரை ஆண்டு தோறும் சிட்பண்ட்களில் சேமிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையும் அதிலும் தென் இந்தியாவில் தமிழ்நாடு கேரளா, ஆந்திர மாநிலங்களில் தொடர்ந்து அதிகரிப்பதையும் சுட்டிகாட்டுகிறது. கேரளாவில் 9%க்கும்  அதிகமான குடும்பங்கள் சிட்களில் சேமிக்கின்றன. அதாவது 10க்கு ஒரு குடும்பம் சேமிக்க  சிட்பண்டைதான் அறிந்திருக்கின்றன.  வங்கிகளின் அலட்சிய போக்கு, எளிதில்கடன்வழங்காத நிலை போன்றவைகளும், எந்த நேரத்திலும் நெருக்கடியிலும் அணுக முடியும் என்ற  வசதிகளும் தான் இதற்கு காரணம் என்கிறது இந்த அறிக்கை.
 ஒவ்வொரு மாநிலத்திலும் குறைந்த பட்சம் 2 சிட்பண்ட் நிறுவனங்களாவது நீண்ட நாள் மக்களின் நம்பிக்கை பெற்று வெற்றிகரமாக இயங்கிவருகிறது. தமிழகத்தில் பாலுசேரி, ஸ்ரீராம் போன்ற நிறுவனங்கள், ஆந்திராவில் மார்கதரிசி போன்ற நிறுவனங்கள் தொடர்ந்து நல்ல முறையில் இயங்குகின்றன.  சீட்டு கம்பெனி ஒழுங்காக நடத்தபட்டால் சிட்பண்ட் நிறுவனங்கள் வீழ்ச்சி அடையவேமுடியாது. லாபம் குறைந்த அளவே கிடைத்தாலும் விதிமுறைகள் ஒழுங்காக பின்பற்றபட்டால் நஷ்டம் வர வாய்ப்பில்லை என்கிறார் திரு தியாகராஜன், இவர் 1974ல் துவக்கப் பட்டு இன்று 3000 கோடி அளவில்  வளர்ந்திருக்கும் ஸ்ரீராம் சிட்பண்ட்டின் நிறுவனர்.
 இப்போது இருக்கும் சிட்பண்ட் விதிகள் கடுமையானவை. போதுமானவை அவைகள் ஒழுங்காக கடைபிடிக்கபட்டாலே போதுமானது.  தமிழ் நாட்டில் எந்த பதிவு செய்யபட்ட சிட்பண்ட்டும் இதுவரை திவாலாகவில்லை. மேற்கு வங்கத்தில் திவாலான சாரதா ஒரு பதிவு செய்யப்படாத சிட்கம்பெனி அவர்கள் செய்தது மோசடி அவர்களையும் சிட்பண்ட் என மீடியாக்கள் வர்ணித்து  நல்ல சிட்பண்ட் நிறுவனங்களில் மூதலீடு செய்திருப்பவர்களையும்  அனாவசிய பீதிக்குள்ளாக்கிறார்கள் என்று மீடியாவை சாடுகிறார் திரு சிவராமகிருஷ்ணன். இவர் 1947லிருந்து தொடர்ந்து இயங்கிவரும் பாலு சேரி சிட்பண்ட் நிறுவனத்தின் உரிமையாளார். அகில இந்திய சிட்பண்ட்களின் சங்க செயலாளார்.
 அரசாங்கங்கள் என்ன செய்யலாம்?

போதுமான சட்டங்கள், கட்டுபாடுகள் இருக்கின்றன, நல்ல கம்பெனிகள் இயங்கின்றன, சிட்கள் மூலம் பல மக்கள் பயன்பெறுகிறார்கள் என்பதை புள்ளிவிபரங்கள் புரியவைத்தாலும்  2011 ஆண்டு மட்டும் மல்ட்டிலெவல் மார்கெட்டிங்கில் மணிப்பூரிலும், கேரளாவிலும், குறைந்தவிலைக்கு தங்கம் என்று ராஜஸ்தானிலும், மரங்களில் முதலீடு எனறு டெல்லியிலும்,இரட்டிப்புதொகைக்கான கடன் பத்திரம் என்று உத்திரபிரதேசத்திலும், ஈமு கோழிபண்ணைகள் என தமிழ் நட்டிலும் லட்சகணக்கான மக்கள் பல கோடிக்கணக்கான ரூபாய்களை, சேமித்தபணத்தை இழந்திருக்கிறார்கள்.  ஆசைகளை  தூண்டிவிட்டு மக்களின் அறியாமையை சுரண்டி காசாக்கும் இந்த கும்பல்களிடமிருந்து ஏழைமக்களை, சட்டம் பதிவு போன்றவைகளை அறியாத சாதாரண மக்களை தொடரும் இந்த துயரங்களிலிருந்து  காப்பாற்றவேண்டிய  தார்மீக கடமையை மாநில, மத்திய அரசுகள் செய்ய முடியாதா?  கிழ்கண்டவற்றை பின்பற்றினால்  எளிதாக செய்ய முடியும்.

1) பதிவு செய்யபடாமல் சிட்பண்ட்கள் நடத்துவது கிரிமினல் குற்றமாக்கபடவேண்டும். எல்லா மீடியாக்களையும் பயன்படுத்தி இதை பெரிய அளவில் கிராமபுறங்களில் விளம்பரபடுத்த வேண்டும். மாநில அரசுகள் கிராம மக்களின் வதிக்காக மட்டும் சிட் கார்ப்ப்ரேஷன்களை துவக்கி சிட்களை நடத்தி நிர்வகிக்கவேண்டும்
2)சிட்பண்ட்டாக பதிவு செய்யபட்ட நிறுவனங்கள் வேறு மாதிரியான நிதி நிறுவனங்களை ( மல்ட்டி லெவல் மார்கெட்டிங் மாதிரி )  எந்த வகையிலும் வடிவத்திலும்  நடத்த அனுமதிக்க கூடாது.
3) வங்கி அல்லாத நிதிநிறுவனங்கள் டெப்பாசிட்களுக்கும் கடன்களுக்கும் நிர்ணயக்கும் வட்டிவிகிதங்களை ரிசர்வ் வங்கியின் வழிமுறைகள் மூலம் கட்டுபடுத்த வேண்டும்.
செய்வார்களா?




25/5/13


உழவுக்கு வந்தனை செய்யும் மன்னர்

பாங்காங் நகரில் தாய்லாந்து மன்னரின் பிரமாண்டமான அரண்மனை வளாகத்தில் கிழக்கு புற மைதானத்தில் மக்கள் கூட்டம் காத்திருக்கிறது. மாலை 3 மணி. பெரிய நீலநிற பென்ஸ் காரில் வந்த இளவரசர் மஹாவஜ்ரலோங்கோன் ( Maha Vajiralongkorn ) தேசீய கிதம் முழங்க மரியாதைகளை ஏற்று மேடையில் அமர்கிறார்.

மேடையின் கீழே பளிச் வெள்ளையில் கம்பீரமாக இரண்டு பெரிய காளை மாடுகள் மஞ்சள்நிற ”பட்டு சட்டை” அணிந்து காத்திருக்கின்றன. அரண்மனையின் தலமை பண்டிட் மண்டியிட்டு  மன்னரிடம் நெல்மணிகள் நிறைந்த தங்க வெள்ளி பாத்திரங்களை நீட்டி ஏதோ சொல்லுகிறார். வாத்தியங்கள் முழங்க சங்கு ஒலிக்க காளை மாடுகளை இணைத்து நுகல் தடியில் ஒர் ஏர் பூட்டபடுகிறது. ஏரின் மேல் விவசாய கடவுள் உருவம் வைத்து பூஜிக்கபடுகிறது.


பின்னர்  சிவப்பு உடையணிந்த விவசாயிகள் அருகில் வர, அரண்மனை அந்தணர்கள் பின் தொடர மாடுகள் மைதானத்தின் மத்திய பகுதியை அடைகிறது

நாட்டின் விவசாயத்துறை முதல் அதிகாரி ஏர்பிடித்து நிலத்தை உழ துவங்குகிறார். நிஜமாகவே ஏர்தடியில் காலை அழுத்தி உழுகிறார். உழுதுகொண்டுபோகும் ஏரின் பின்னே  அரண்மனையில் தினசரி வேதம் சொலும் அந்தணர்கள் மந்திரம் சொல்லி புனிதநீர் தெளித்து வண்ணம் நடக்கிறார்கள். பஞ்சகச்சவேஷ்ட்டியின் மேல் வெள்ளைகோட்டும் கால்களில் சாக்ஸ் ஷூ வுடன் அரண்மனை அந்தஸ்த்தை குறிக்கும் நீண்ட சரிகை அங்கியையும் அணிந்திருக்கிறார்கள். 4கிராமிய பெண்கள் பாடியபடி நெல் மணிகள் நிறைந்த கூடையுடன் உடன் வருகிறார்கள். அதிலிருந்து எடுத்து முதன்மை பண்டிட் விதைகளை வீசித்தெளித்த வண்ணம் நடக்கிறார். அந்த கணத்தில் தாய்லாந்தின் இந்த ஆண்டின் நெல் விதைப்பு துவங்கி விட்டது.

நேரடி ஒளிபரப்பில் இந்த காட்சியை பார்த்தவுடன் நாட்டின் பல பகுதிகளிலும் இதே நேரத்திற்கு விவசாயிகள் தங்கள் நிலத்தில் நெல்விதைப்பை துவக்குகிறார்கள். சுற்றி சுற்றி 3 முறை நடைபெறும் இந்த உழுவுப் பணியில் மற்ற அதிகாரிகளும் பங்கேற்கிறார்கள்.
. ஒவ்வொரு ஆண்டும் அரண்மனை ஜோசியர்களாலால் நல்ல நாள் நேரம் பார்த்து குறிக்கபட்டு  இந்த  ”முதல் ஏர் செலுத்தும் உழவுவிழா” நாள் அறிவிக்கபட்டு அரண்மனை வளாகத்தில் கடந்த 200 வருடங்களாக கொண்டாடபடுகிறது. அன்று  தேசிய விடுமுறையும் அறிவிக்கபடுகிறது. இந்த ஆண்டு இது கடந்த மே மாதம் கொண்டாடபட்டது. பாங்காக் நகர் விழா கோலம் பூண்டிருந்தது. போஸ்ட்டர்கள் பேனர்களுக்கு அனுமதியில்லாத அந்த நகரில் இந்த விழாவினால்ஆங்காங்கே இளவரசரின் பிரமாண்ட சைஸ் படங்கள்

விழாவில் உழவு முடிந்தவுடன் அந்த காளை மாடுகளுக்கு உணவாக அரிசி, மொச்சை, உளுந்து,புல், நீர், அரிசியிலிருந்து தயாரிக்கபட்ட ஒயின் என 6 விதமான உணவுவகைகள் வாழைஇலை தொன்னைகளில் வைத்து காட்ட படுகிறது. முதல் மாடு முதலில் எதை சாப்பிடுகிறதோ அதன் மூலம் இந்த ஆண்டு எப்படி இருக்கும் என்று அரண்மனை அந்தணர்களால் கணித்து அறிவிக்கபடுகிறது. இம்முறை முதலில் புல்லை சாப்பிட்டதால் இந்த ஆண்டு  மழை சுமாராக இருந்தாலும் மிக அதிகமான நெல்விளைச்சல் இருக்கும் என கணிக்கபட்டு அறிவிக்கபட்டது. காளைகள் சாப்பிடும் வரை காத்திருந்த இளவரசர் இசை முழங்க அரண்மனைக்கு  திரும்புகிறார். அதுவரை கட்டுபாட்டுடன் இருந்த மக்கள் கயிற்றை  அறுத்துகொண்டு ஒடி வந்து தூவப்பட்ட நெல் மணிகளில் கிடைப்பதை பொறுக்கிஎடுக்கிறார்கள். அரண்மணை புரோகிதர்களால் பூஜிக்கபட்டு மன்னாரல் ஆசிர்வதிக்க பட்ட அந்த நெல் மணிகள் தங்கள் நிலத்தில் இடபட்டால் அல்லது வீட்டில் வைத்திருந்தால் சுபிட்சம் பெருகும் என்பது  அவர்களின் நம்பிக்கை.

உலகின் அரிசி உற்பத்தியில் 4 வது இடத்திலும் அரிசி ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இரண்டாவது இடத்திலும் இருக்கும் தாய்லாந்து  நாட்டின்  பொருளாதரத்தை நிர்ணயிக்கும் உழவு தொழிலுக்கு உண்மையாகவே வந்தனம் செய்கிறத  
கல்கி 2613

24/5/13

ஜன கண மன


மாலனின் ஜன கண மன வை கவிதா பதிப்பகம் இபோது மறுபதிப்பாக வெளியிட்டிருக்கிறது.  ஹிந்துவில்(24/05/13)வந்த அதன் விமர்சனம் இது