27/5/14

மிஸ்டர் எடிட்டர்

பெ. கருணாகரன் FB லிருந்து

காகிதப் படகில் சாகசப் பயணம்
மிஸ்டர் எடிட்டர்
புதிய தலைமுறை முதல் இதழ் வெளிவந்த சமயம். அப்போது நிறைய வாசகர் கடிதங்கள் அலுவலகத்துக்கு வந்திருந்தன. அவற்றைப் படித்துக் கொண்டிருந்தபோது, அதில் ஒரு கடிதம். உங்கள் இதழின் பெயர் புதிய தலைமுறை’. இளைஞர்களுக்கான இதழ் என்று வேறு சொல்கிறீர்கள். ஆனால், அதன் ஆசிரியர் மாலன். அவர் என்ன புதிய தலைமுறையா? இளைஞரா?’ என்று அந்தக் கடிதத்தில் கேட்டிருந்தார் ஒரு வாசகர். மொட்டைக் கடிதமாக இருந்திருந்தால் தூக்கி எறிந்திருப்போம். எழுதியவர் ஊர் திருவண்ணாமலை என்று நினைவு. முகவரியுடன் தொலைபேசி எண்ணும் கொடுத்திருந்தார்.
அந்த எண்ணில் தொடர்பு கொண்டு அவரிடம் பேசினேன். புதிய தலைமுறைஎன்பது வயது சார்ந்ததல்ல. புதிய சிந்தனை சார்ந்தது. வயதுக்கும் புதிய சிந்தனைக்கும் சம்பந்தமில்லை. அனுபவப் பின்புலத்துடன் வெளிப்படும் புதிய சிந்தனைகள் வீரியமுள்ளவை. சமூக அக்கறையுடன் சிந்திக்கும், புதிய மாற்றங்களைக் கொண்டு வர உழைக்கும், துடிக்கும் யாரும் புதிய தலைமுறைதான். அந்த வகையில் அப்துல் கலாம் புதிய தலைமுறைதான். மாலனும் புதிய தலைமுறைதான்.
அடுத்து, இளமைக்கும் வயதுக்கும் சம்பந்தமில்லை. வயது என்பது உடலின் முதிர்ச்சி. இளமை என்பது மனதின் எழுச்சி. மனயெழுச்சி உள்ள யாரும் இளைஞர்தான். எந்தச் சமூக அக்கறையும் இல்லாமல் மன எழுச்சியில்லாமல் இன்று டாஸ்மாக்கில் சரிந்து கிடக்கும் 20 வயதுக்காரன் கூட முதியவர்தான்...என்றேன். நான் கூறியவற்றை அந்த வாசகரால் மறுக்க முடியவில்லை. ஏற்றுக் கொண்டார். மாலன் சாரைப் பற்றி எழுதத் தொடங்கும்போது, அந்த திருவண்ணாமலை வாசகரிடம் கூறியதுதான் நினைவுக்கு வருகிறது. அவர் ஒரு புதிய தலைமுறைஇளைஞர்.
எல்லோருக்கும் வடக்குப் பக்க வாசல் என்றால் அவரது வாசல் தெற்குப் பக்கமாகவே இருக்கும். அமைந்த பாதையில் செல்வதை விட, நமக்கான பாதையை நாமே புதிதாய் அமைத்து அதில் பயணப்பட வேண்டும் என்பதே அவரது சிந்தனைப் போக்காக இருக்க வேண்டும் என்று புரிந்து கொள்கிறேன். ஒரு ஐடியாவைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தால், அதை எப்படி பிரசென்ட் செய்ய வேண்டும் என்பதை முதலில் விவரிப்பார். அவர் சொல்லும்போதே இந்த இதழ் இதனை இப்படி அணுகும். அநத இதழ் அப்படி எழுதும் என்று கூறுபவர், ‘புதிய தலைமுறையில் அது எப்படி எழுதப்பட வேண்டும் என்றும் மற்றவர்களிடமிருந்து எப்படி வித்தியாசப்படுத்த வேண்டும் என்று விரியும் அவரது வழிகாட்டல்கள்.
புதிய தலைமுறையில் வேலைக்குச் சேர்ந்த புதிதில் நான் கொஞ்சம் திணறித்தான் போனேன். காரணம், நான் வணிகப் பத்திரிகைச் சூழலில் வளர்ந்து வந்தவன். ஆனால், ‘புதிய தலைமுறையின் உள்ளடக்கமோ வேறு. இங்கு சினிமா இல்லை. ஆன்மீகம் இல்லை. அரசியல் இல்லை. வம்புகள் இல்லை.
இந்நிலையில் என் பார்வை வேறு. அவரது பார்வை வேறு. செய்திகளின் தேர்வு முறையிலும் இருவரும் இரு துருவங்களே. நான் புதிய தலைமுறையில் சேர்ந்தபோது, பெங்குவினைத் தூக்கிச் சகாராவில் போட்டது போலவோ, அல்லது, ஒட்டகத்தைக் கட்டி இழுத்து வந்து அண்டார்டிக்காவில் விட்டது போலவோ, தட்ப வெப்பநிலை மாறி தவித்தது உண்மை. இந்தப் புரிந்து கொள்ளலில் இருந்த இடைவெளியில் அவரை விட்டு மனதளவில் நான் வெகுதூரம் விலகி நின்றேன். முதல் இதழ் வெளிவந்த பிறகுதான் நான் புதிய தலைமுறையின் உள்ளடக்கத்தைப் புரிந்து கொண்டேன். அவரும் என்னைப் புரிந்து கொண்டார்.
புதிய தலைமுறையில் நான் எழுதிய முதல் கட்டுரை, ‘CAT’ நுழைவுத் தேர்வு பற்றியது. எடிட்டோரியல் மீட்டிங்கில் கர்ணா... நீங்க கேட் எக்ஸாம் பற்றி எழுதிடுங்க...என்று அவர் கூலாகச் சொன்னவும் திகைத்து விட்டேன். கேட் நுழைவுத் தேர்வா? நான் கேள்விப்பட்டதே இல்லையே... எனக்குப் பூனையைப் பற்றித் தானே தெரியும். ஙேஎன்று விழித்தேன். என்றாலும் என்னை நான் தைரியப்படுத்திக் கொண்டு அது குறித்த தகவல்களைத் திரட்டினேன். அந்தக் கட்டுரை அச்சாகி இதழில் வந்தபோது, ஏராளமான பாராட்டுக் கடிதங்கள் வந்தன. ஒரு பள்ளி நிர்வாகி அந்தக் கட்டுரையை வெட்டி தங்கள் பள்ளி நோட்டீஸ் போர்டில் ஒட்டியிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். இதற்கு முன் எவ்வளவோ கதைகள், கட்டுரைகள், கவிதைகள் எழுதி அதற்கு வாசகரிடமிருந்து நிறைய பாராட்டுக் கடிதங்கள் வந்தாலும் அந்தக் கடிதம் மறக்க முடியாதது. அதன் பிறகு ஸ்ரெஸ் இன்டர்வியூ, ஸ்காலர்ஷிப், எமப்ளாய்மெண்ட் என்று புதிது புதிதாக எழுதினேன். என் எழுத்தின் நிறமும் தேர்வுகளும் கொஞ்ச கொஞ்சமாய் மாறத் தொடங்கின. அதற்குக் காரணம் மாலன் என்றால் மிகையல்ல.
அடுத்த தலைமுறையைப் பற்றியே எப்போதும் அவரது சிந்தனைகள் இருக்கும். எந்த ஒரு சமூக, அரசியல் நிகழ்விலும் இளைய தலைமுறையின் பார்வை என்ன என்று தெரிந்து கொள்வதிலேயே அவரது ஆர்வம் இருக்கும். தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி, கண்டுபிடிப்பு, வேலை வாய்ப்பு, கல்வி மேம்பாடு என்று அனைத்திலும் புதிதாய் அறிமுகமாகும் விஷயங்களையே முன்னிறுத்தி புதிய தலைமுறைஇருக்க வேண்டும் என்பதே அவரது கனவு.
பொருளாதாரத்தில் பின்தங்கிய, போதிய பின்புலம் இல்லாதவர்களை முன்னுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதில் துடிப்புள்ளவர். புதிய தலைமுறையில் பத்திரிகைத் துறையில் நுழைய விரும்புகிறவர்களுக்காகப் பயிற்சிப் பத்திரிகையாளர் திட்டம் உண்டு. இளைஞர்களைத் தேர்வு செய்து, நிருபர்களாக ஓர் ஆண்டு பயிற்சி அளிக்கிறோம். இந்த நிருபர்களைத் தேர்ந்தெடுப்பதில் அவர் கையாளும் அணுகுமுறை வித்தியாசமானது. முதல் சுற்றில் விண்ணப்பித்தவரின் அறிவாற்றல், மொழியாற்றல் சோதிக்கப்படும். அதில் தேறியவர்களை நேர்காணல் செய்வோம். இந்த நேர்காணலில் அவரது சுற்றுச்சூழல் பரிசீலிக்கப்படும். கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை. அடுத்து அவரது குடும்பப் பின்னணி ஆராயப்படும். தந்தையை இழந்தவர், வறுமையில் உழல்பவர், டீக்கடைக்காரரின் மகன் என்று சமூகத்தின் அடித்தட்டிலிருந்தவர்களே பயிற்சிப் பத்திரிகையாளர் திட்டத்தில் தேர்வானவர்கள். இங்கு ஜாதி கேட்கப்படாமலே, ஒரு சமூக நீதியை நடைமுறைப்படுத்தினார் மாலன். அந்தப் பயிற்சிப் பத்திரிகையாளர்களில் பலர் இன்று எங்கள் புதிய தலைமுறையின் விழுதுகளாய் வளர்ந்து நிற்கிறார்கள்.
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களை மேம்படுத்தும் இன்னொரு திட்டம்தான் இலவச உயர் கல்வித் திட்டம். இந்தத் திட்டத்தின் மூலம் நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வெளியேறி பலர் நல்ல பணியிலும் இருக்கிறார்கள் என்பதில் எனக்கும் பெருமைதான்.
தொடர்ந்து பத்திரிகைகளில் எழுதியவர்களே எழுதாமல் புதிது புதிதாய் பலருக்கும் வாய்ப்பளிக்கபப்பட வேண்டும் என்பதும் அவரது விருப்பம். திசைகள் இதழில் அப்படி வாய்ப்பளிக்கப்பட்ட இளைஞர்கள் பலர் பத்திரிகைத் துறையில் பிரபலமானது கடந்த காலம். வைத்த கன்றுகள் விருட்சங்கள் ஆனதைக் கண்டு தோட்டக்காரர்கள் ஓய்ந்து விடுவதில்லை. அவர்கள் தொடர்ந்து அடுத்த தலைமுறைக்கான புதிய கன்றுகளை வளர்க்கும் முயற்சியில் இறங்கி விடுவார்கள். மாலனும் அப்படிப்பட்ட தோட்டக்காரர்தான். இப்போது கூட சென்னைப் புறநகர்ப் பகுதியின் குடிசைப் பகுதிகளைச் சேர்ந்த ஏழைக் குழந்தைகளுக்காக ‘SLUM KIDS JOURNALIST‘ பயிற்சித் திட்டம் நடைமுறையில் உள்ளது. அதன்படி குடிசைப் பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகளை விட்டே அவர்கள் பகுதியைப் பற்றியும் அவர்களது பிரச்சினைகள், எதிர்காலக் கனவுகள் பற்றியும் எழுதச் சொல்லி புதிய தலைமுறையில் வெளியிட்டு வருகிறோம். பள்ளி மாணவனுக்கும் பத்திரிகையாள மனோபாவம் வரவேண்டும் என்பதே அதன் நோக்கம். இது அந்தக் குழந்தைகளின் எழுத்துத் திறமை, சமூக அக்கறையை மேம்படுத்துவதோடு, குழந்தைகளின் மனோவியலை புரிந்து கொள்ளவும் நமக்கு வாய்ப்பாகிறது.
வறுமை என்பது சாபமல்ல. அது ஒரு நிலை. அதை வெல்ல வேண்டும் என்கிற முயற்சியும் துடிப்பும் இருந்தால் அவர்களுக்குக் கரம் கொடுத்துத் தூக்கி விட அவர் என்றும் தயங்கியதே இல்லை. பத்திரிகை சாராமல் ஆதரவற்றோர் இல்லங்களில் பல குழந்தைகளை இவர் தத்தெடுத்து அவர்களுக்கான கல்விச் செலவுகளை ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்பது பலரும் அறிந்திராத தகவல்.
அவர் எப்போதாவது ஆசிரியர் குழுவினர் ரிலாக்ஸ் செய்து கொள்ள மாமல்லபுரம் போன்ற இடங்களுக்குச் சென்று வரலாம் என்று கூறினால் நான் டென்ஷன் ஆகி விடுவேன். ஏனென்றால் அங்கேயும்போய் எடிட்டோரியல் மீட்டிங்தான் நடக்கும். தங்கள் பணி அனுபவம், பத்திரிகையில் இன்னும் என்னென்ன மாற்றங்கள் கொண்டு வரலாம்? லே அவுட் எப்படி இம்ப்ரூவ் செய்யலாம் என்கிற ஆலோசனைக் கூட்டமாகவே அது அமையும். பலர் ரிலாக்ஸ் செய்து கொள்வதென்பது ரூம் போடுவது, சினிமா பார்ப்பது, தூங்குவது என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். என்னைப் பொறுத்த வரை ஓய்வு என்பது ஒரு வேலை அலுப்பேற்படுத்தினால், இன்னொரு வேலையைச் செய்வதுதான்...என்பார். அது உண்மைதான். அவரை ஓய்வில் பார்ப்பது அரிது. இதழியல், இலக்கியம், அரசியல், பெண்ணியம், சுற்றுச் சூழல் என்று பல்வேறு தளங்களிலும் இயங்கிக் கொண்டே இருப்பார். அலுவலகத்தில் மட்டுமின்றி வீட்டிலிருந்தும் கட்டுரைகளை அனுப்புவார். ஞாயிற்றுக்கிழமைகளிலும் இது தொடரும். இவர் என்ன இயந்திரமா என்று கூட சில நேரங்களில் தோன்றுவதுண்டு. இப்போது யோசித்துப் பார்க்கும்போது, அவர் பத்திரிகைத் தொழிலை எந்த அளவுக்கு நேசிக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
பெண்களின் மீது மிகுந்த அக்கறை உள்ளவர். வீட்டில் குடும்பத் தலைவியாகவும் அலுவலகத்தில ஓர் ஊழியையாகவும் இரு வேறு பாத்திரங்களை வகிக்கும் அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படக் கூடாது என்று நினைப்பார். அலுவலகத்தில் தங்களுக்கு நேரும் பணிச்சூழல் பிரச்சினைகளை அவரிடம் தாராளமாகப் பகிர்ந்து கொள்ளலாம். மகப்பேறு அடைந்த பெண்கள் அலுவலகம் வருவதில் டைம் அட்ஜஸ்ட் மெண்ட், மகப்பேறு விடுமுறைக் கால நீட்டிப்பு என்று சலுகைகள் உண்டு. ஒரு பெண் ஊழியருக்குத் தன் கைக்குழந்தையைப் பார்த்துக் கொள்ள ஆள் இல்லை. அலுவலகத்துக்குக் குழந்தையைக் கூட்டி வந்து இரண்டு தினங்கள் வைத்துக் கொள்ளவா என்று கேட்டபோது, அதை அனுமதித்த அவர், யார் வேண்டுமானாலும் குழந்தையை அழைத்து வந்து அலுவலகத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று பொது உத்தரவே போட்டார். அலுவலகத்திலேயே பெண் ஊழியர்களின் குழந்தைகளைப் பராமரிக்க ஒரு பராமரிப்பு இல்லம் அமைக்க வேண்டும் என்பது அவரது கனவு. பெண்களின் மீதான பிற்போக்குத்தனமான திணிப்புகளை அவர் கடுமையாக விமர்சிப்பார். பெண்களை ஒரு மலர் என்றோ, மான் என்றோ வர்ணித்தால் கடும் கோபப்படுவார். பெண் என்பவள் ஒரு மனுஷி. அவளை ஒரு சக மனுஷியாகவே பாருங்கள் என்பார். எதையும் அவருக்கு ரொமன்டைஸ் செய்யக் கூடாது.
தனது சகாக்களுக்கு வெளியிலிருந்து விருதுகள் கிடைத்தால் மிகவும் மகிழ்வார். நான் தமிழ்ப் பேராய விருது வென்ற தகவலை அவரிடம் சொன்னபோது, அவர் அமெரிக்கா செல்வதற்காக விமான நிலையத்தில் இருந்தார். ‘‘அதைப் பற்றிய தகவலை இந்த இதழிலேயே வைத்து விடுங்கள்...என்றபோது, அந்த விருதை அவரே வாங்கி விட்டதான மகிழ்ச்சி அவர் குரலில். பொன். தனசேகரன் லால்டி மீடியா விருது, வாங்கியபோதும், யுவகிருஷ்ணா, அதிஷா இருவரும் சுஜாதா விருது வாங்கியபோதும், கீதா SCARF விருது வாங்கியபோதும் அது குறித்த தகவல்களை பத்திரிகையில் இடம் பெறச் செய்தார்.
ஒரு பத்திரிகையில் வேலை செய்பவர் இன்னொரு பத்திரிகையில் எழுதக் கூடாது என்பது ஒரு பொதுவிதி. ஆனால், ‘புதிய தலைமுறைஆசிரியர்க் குழுவினருக்கு அந்த விதி இல்லை. எங்கு வேண்டுமானாலும் எழுதலாம். முன் கூட்டி ஒரு வார்த்தை அவரிடம் கூறிவிட்டால் போதும். சமுக வலைத்தளங்களில் எழுத பல இதழ்களில் தடையுண்டு. ஆனால், நாங்கள் சமூக வலைத்தலங்களில் உலாவத் தடையில்லை. சமூக வலைத்தளங்களையும் தகவல் தெரிந்து கொள்ளும் ஒரு களமாகவே அவர் பார்க்கிறார்.
ஒரு பத்திரிகையாளன் எந்தக் கட்சியைம் சார்ந்திருக்கக் கூடாது. ஆனால், இங்கும் அதற்கு விதிவிலக்கு. எந்தக் கட்சியில் வேண்டுமானாலும் இருந்து கொள்ளுங்கள். அது உங்கள் சுதந்திரம். ஆனால், பத்திரிகையில் எழுதும்போது அது வெளிப்படக் கூடாது. எதையும் சகித்துக் கொள்வேன். பத்திரிகையின் பெயரை யாராவது கெடுக்க முயன்றால் அதனைச் சகித்துக் கொள்ள மாட்டேன்என்பார்.
அவரது ஒரே மைனஸாய் நான் பார்க்கும் விஷயம் அவரது கோபம். பணியில் சேர்ந்திலிருந்தே மூன்று மாதங்கள் அவரது கோபத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு மன உளைச்சலுக்கு உள்ளானேன். வேலையை விட்டு விடலாமா என்று கூட தீவிரமாய் ஒரு கட்டத்தில் யோசித்துண்டு. என்றாலும் அப்படி விட்டுவிட மனமில்லை. காரணம், எனக்கிந்த வேலை பிடித்திருந்தது. பணிச்சூழல் பிடித்திருந்தது.
ஒரு நாள் அவருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். அதில், அவரது கோபத்தைப் பற்றிக் குறிப்பிட்டு, ‘நீங்கள் ஒரு சாதாரண மனிதராய் இருந்தால், நீங்கள் கோபப்படுவது குறித்து நான் வருத்தப்பட மாட்டேன். ஆனால், குரு ஸ்தானத்தில் இருப்பவர். நாங்கள் உங்களிடம் கற்க வேண்டிய விஷயங்கள் நிறைய. ஆனால், எங்களுக்கு உங்களை நெருங்க கொஞ்சம் அச்சமாக இருக்கிறதே. உங்கள் கோபம் தடுக்கிறதே...என்று அந்த மின்னஞ்சலில் குறிப்பிட்டிருந்தேன்.
அதற்கு அவர் அன்றிரவே பதிலளித்தார். அந்தப் பதில் மின்னஞ்சலில், ‘நான் கோபப்படுகிறேன் எனப் பலர் சொல்லியிருக்கிறார்கள். அதை வெல்ல தொடர்ந்து முயன்று வருகிறேன். கோபத்திற்குப் பயந்து யாரும் என்னோடு பேசாதிருக்க வேண்டாம். தாராளமாக அணுகிப் பேசலாம். விவாதிக்கலாம். தங்கள் தரப்பு நியாயங்களை எடுத்துச் சொல்லலாம். நான் அவற்றை என்றுமே அனுமதிக்க மறுத்ததில்லை
என் கோபம் தனிமனிதர்கள் மீதானதல்ல. நான் எந்த சகாவையும் தனிப்பட திட்டியதில்லை. அவர்களிடம் ஒப்படைத்த பொறுப்பை அவர்கள் சரிவரச் செய்யாது போனால், அதை உரித்த நேரத்தில் செய்யாது போனால், அல்லது அது குறித்து அக்கறையற்று இருந்தால் கோபப்படுவதுண்டு. அதற்கு வேலை கெட்டுப் போகிறதே என்பதுதான் காரணம். திறமைக் குறைவை நான் பொறுத்துக் கொள்வேன். ஆனால் பொறுப்புணர்வற்ற தன்மையை நான் சகிக்க மாட்டேன். காரணம் திறமையை வளர்த்துக் கொள்ள இயலும். ஆனால் பொறுப்பின்மை அக்கறையின்மையால் விளைவது. அது மனோபாவம்.
கடந்த 3 மாதங்களில் நான் எதற்காகவெல்லாம் நம் குழுவினரை கோபித்துக் கொண்டிருக்கிறேன் என எண்ணிப் பாருங்கள். தனிப்பட்ட விதத்தில் எவரையேனும் விமர்சித்திருந்தால் வருந்துகிறேன்.
என்னைப் பொறுத்தவரையில் பத்திரிகையாளன் என்பது ஒரு வேலை அல்ல. ஒரு தொழில். Profession அதைக் குறித்த பெருமிதங்கள் எனக்கு உண்டு. நான் பத்திரிகையாளனானதே அந்தப் பெருமிதத்தால்தான். இது ஒருவன் காசுக்குப் பார்க்கிற வேலை அல்ல என்பது என் எண்ணம். இது வெறும் உடல் உழைப்பு அல்ல. மூளையால் செய்கிற வேலை அல்ல. உடல் மூளை இவற்றுடன் மனமும் இணைந்து வேலை செய்ய வேண்டும். கதை எழுதுவது போல படைப்பு அல்ல. ஆனால், படைப்பாற்றலும் வேண்டும். வேறு எந்தத் தொழிலிலும் இத்தனை அம்சமும் இணைந்தது கிடையாது.
எனவே என் சகாக்கள் இதை ஒரு வேலையாகப் பார்க்காமல் தொழிலாகப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எதிர்பார்ப்பு எனக்கு உண்டு. என் கோபத்தைப் பொருட்படுத்த வேண்டாம். எவரும் எப்போதும் என்னிடம் எதையும் பேசலாம்.என்று அந்த மின்னஞ்சலில் அவர் குறிப்பிட்டிருந்தார்.


கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்