31/8/14

கங்கை கரை ரகசியங்கள் ....7



இன்று காசியாக அறியபட்டிருக்கும் இந்த பழமையான நகரின் பெயர் வாரணாஸீ. இப்படித்தான் இதிகாசங்களிலும் முகம்மதியர் படையெடுப்புகளின் போதும் இந்த பெயரால் தான்  அழைக்கபட்டிருக்கிறது. இங்கு பேசப்பட்ட மொழிகளில் ஒன்று பாலி மொழி. அதில்  ”பருணாசி” என்று சொல்லபட்டு வந்த இது ஆங்கிலேயர் ஆட்சியில் பனாரஸ் ஆகியிருக்கிறது.  ஆன்மிகத்தை தாண்டி  ஆங்கிலேயர்கள் இதை கைவினைக்கலைஞர்களின் நகரமாக பார்த்து அதை ஊக்குவித்திருக்கிறார்கள். அவர்களினால் தான் இங்கிருந்த  மிக நுண்ணிய வேலைப்படுகளிடுன் கூடிய பட்டுநெசவு தொழில் இங்கிலாந்து வழியாக உலகை எட்டியிருக்கிறது. 
குறைந்த விலையில் நல்ல பனாரஸ் சாரி வாங்கவேண்டும்  என்று குழுவிலிருந்த பலர் புறபட்டபோது, நாம்  இந்த சேலைகள் தயாரகுமிடத்தை பார்க்க வேண்டும் என்று  விரும்பி விசாரித்து கொண்டிருந்தோம்.  நம்முடன் இணைந்தவர்கள் குழுவிலிருந்த இரண்டு வெளிநாட்டினர்.  ”அதற்கு நீங்கள் பாலத்தை தாண்டி கங்கையின் மறு கரையிலிருக்கும் ராம்நகருக்கு  போகவேண்டும்” என்றார்கள். 14 கீமி தூரத்தில் 6 கீமி நீள பாலம். அந்த பாலத்திலிருந்து கங்கையையும் அத்தனை படித்துதுறைகளையும் பார்த்தது   இப்போதும் கண்ணில் நிற்கும் காட்சி. ஒரு நல்ல ஓவியத்தை பார்த்தது போலிருந்தது
.  மறு கரையிலிருக்கும் பனாரஸ்  நாம் பார்த்த காசிக்கு எந்தவித சம்பந்தமும்மில்லாத ஒரு தொழில்நகரம். பட்டுநெசவு, சரிகைஉற்பத்தி, பித்தளை பாத்திரங்கள், பூஜைபொருட்கள் உற்பத்தி என பல தொழில்கள். எல்லா தொழில்நகரங்களுக்கும் உள்ள பிரச்சனைகளுடன் இருக்கிறது. இந்நகர் வாசிகள் காசி நகருக்கு வருவதில்லை. பிஸினசில்தான் கவனமாகயிருக்கிறார்கள். இந்நகருக்கு முன்னே இருப்பது ராம்நகர். அங்கும்  எல்லா வீடுகளிலும் பட்டுநெசவுதுத்தொழில். தொழிலாளிகளில் பலர்  சந்தோஷமாகயில்லை. ஒரு புடவையை முடிக்க 15 நாள் ஆகும் டிசைனைப்பொறுத்து 1000 ரூபாய்வரை கூலி  கிடைக்கும். அதை புடவையின் தயாரிப்பு நிலையை பொறுத்து  அவ்வப்போது கொடுப்பர்கள் என்கிறார். 40 ஆண்டு இந்த தொழிலை செய்யும் நெசவாளி ஒருவர்
தான் நெய்து கொண்டிருக்கும் புடவையின் விலை தனக்கு தெரியாது என்றும் சொல்லுகிறார்.
ராம்நகரில் தான் பனாராஸ் மன்னரின் அரண்மனை. கங்கையின் கரையில் ஒரு கம்பீரமான கோட்டை. அதன் மதில் களை தாண்டி அரண்மனை. பாராட்டும்படியான பாராமரிப்பு  இல்லையென்றாலும் பளிச்சென்று அரண்மைக்கான களையுடன் இருக்கிறது.  அரச வம்சத்தின் இன்றைய தலைமுறை குடும்பத்தினர் இங்குதான் வசிக்கிறார்கள்.
கடைசி மன்னர் 2000ல் மறைந்த பின்னர்  வாரிசுகள் அரசர்கள் அழைக்கபடவேண்டியது இல்லை என்பது சட்டமானலும் இங்குள்ளவர்களுக்கு இவர் மாட்சிமைதாங்கிய மன்னர்தான். காசி விஸ்வநாதர் கோவிலின் தலமை அறங்காவலர். பனாரஸ் இந்து பலகலை கழகத்தின் வேந்தர்  எல்லாம் இவர் தான்.  கோவில் விழாக்கள், சிறப்பு பூஜைகள் எல்லாவற்றிக்கும் இவர் உத்தரவு தர வேண்டும்.  அரண்மனைமுகப்பில் கொடி ஏற்ற பட்டிருந்தால் மன்னர் அரண்மனையில் இருக்கிறார் என்று அர்த்தமாம். 
அரண்மனையின் ஒரு பகுதி  சரஸ்வதி மஹால். அது அருங்காட்சியமாக மாற்றப்பட்டிருக்கிறது.  மன்னர் வம்சங்களின்  கலைப்பொருட்களின் சேமிப்புகள்.   ஆடை அணிகலன்களுடன் அவர்கள் பயன்படுத்திய பல்லக்குகள் - தந்தம், மூங்கில், வெள்ளி என பல பல்லக்குகள். விதவிதமான வாட்கள், கடிகாரங்கள், எல்லாம். துளிசிதாஸ் எழுதிய ராமசரித்திரத்திரத்தின்  மூலப்பிரதி கண்ணாடிப்பேழைக்குள் பட்டு மெத்தையில் இருக்கிறது.  கடைசி அரசர் துப்பாக்கிகளின் காதலராம். 1000 வகை துப்பாக்கிகள். குறிபார்த்து சுடுவதில் வல்லுரான அவரால்  தூக்கி எறியபட்டபோது சுடப்பட்ட  நாணையங்கள் உருக்குலைந்தநிலையில் அந்த துப்பாக்கிகளுக்கு அருகில் வைக்கபட்டிருக்கிறது.  வெளியே வந்த நாம் பார்ப்பது பெரிய திறந்த வெளியின் முன்னே  ஷெட்களில் அணிவகுத்து நிற்கும்  சாரட்டுகள், பழைய கார்கள்.
இந்தியாவிற்கு வந்த முதல் ரோல்ஸ் ராய்ஸ், ஸுடூடிபேக்கர்  போன்ற கார்கள்.  எல்லவாற்றிலும் ராஜ இலச்சினை. எல்லாவற்றிலும் நம்பர் பேளேட்டில் எண் 1.  இந்த காட்சியகத்தின் பணியாளார்கள் மன்னரின் அரண்மனை பணியாளார்கள். இன்றைய மன்னர் என்ன கார் பயன்படுத்துகிறார்? என்ற நாம் கேட்டதற்கு பதில் ”மன்னரின் சொந்த விஷயங்களை நாங்கள் பேசுவதில்லை.”  வெளியில் வரும் போது எவரும் பார்க்ககூடிய ஒரு விஷயத்தை கூட சொல்ல மறுக்கும் அந்த ஊழியரின் ராஜ விசுவாசம்  நமக்கு சிரிப்பை வரவழைக்கிறது..  நதிக்கரையிலிருக்கும்  அந்த கோட்டையின் அருகிலிருந்து எதிர்கரைக்கு  படகிலும் போகலாம் என்பதை அறிந்தவுடன் மீண்டும் ஒரு முறை கங்கையில் படகில் போகும் வாய்ப்பு என்று மனம் துள்ளியது. படகு  கிளம்பியதும் பக்கத்து படித்துறையில் பார்த்தது வாரியிறைத்த வானவில்லாக பரந்து கிடந்த பட்டுசேலைகள். விசாரித்ததில் அது பனாராஸ் சேலையில் ஒரு வகைஎன்றும். கெமிக்கல் இல்லாத இயற்கைமுறையில் தயாரிக்கபட்ட சாயத்தில் தோய்க்கபட்ட நூல்களினால் நெய்தது என்றும் அதை கடைசியில் மீண்டும் இப்படி  ஒரு முறை இப்படி உலர்த்துவார்கள் என்றும் சொன்னார்கள்
முதல் முறை கரையின் அருகிலேயே படகில் பயணித்த நாம் இன்று கங்கையையின் குறுக்காக பயணித்து மறுகரைக்குப் போகிறோம். எதிரே தெரியும் படித்துறைகள் நம்மை நெருங்குகிறது. படகில் நம்முடனேயே  வரும் போட்டோகிராபர்  விரும்புவர்களை கங்கையின் பின்னணியில் படமெடுத்து, உடனே அதை படகிலேயே இருக்கும் பேட்ரியில் இயங்கும்  ஒரு பிரிண்ட்டரில் படமாக்கி தந்துகொண்டிருக்கிறார்.  20 ருபாய்களுக்கு நடு கங்கையில் படமெடுத்து பிரிண்ட்ட தருகிறார்கள் டிஜிட்டல் டெக்னாலாஜி உபயம்.
ஓவ்வொரு ”காட்”லும் ஒரு கோவில் மூன்று வேளைபூஜை. அதனால் எந்த படித்துறையில்  நீங்கள் குளித்தாலும் முதலில் அங்குள்ள தெய்வத்தை வழிபட்டபின்னரே நகருக்குள் செல்ல வேண்டும்.  , குழந்தை பிறப்பு, கல்வியின் துவக்கம், திருமணம், உடல்நலம், குடும்பத்தினர் நலம் மணவாழ்வுநலம், இறுதியாக மரணம் என்று மனித வாழ்வு சம்பந்தபட்ட ஓவ்வொருவிஷயத்திற்கும் இந்த  கங்கைக்கரையில் ஒரு தெய்வ சன்னதியிருப்பது பார்க்கும்போது எப்படி இந்த கங்கைக்கரை வாழ்வோடு  இணைந்த ஒரு விஷயமாகியிருக்கிறது என்று புரிகிறது. 
படகு மணீகர்ணா தீர்த்த கட்டத்தை நெருங்குகிறது.   தொலைவிலிருந்து பார்த்த புகையும் நெருப்பும் இப்போது பளீரென தெரிகிறது. மிதக்கும் படகிலிருந்து கரையில் நிகழும் மனித மரணத்தின் கடைசிகாட்சிகளை பார்க்கும்போது மனம் கனமாகி  இனம்தெரியாத உணர்வுகள் நம்மை தாக்குகிறது. எரிவது எவரோ என்றாலும் ஐயோ என்ற எண்னம் எழுவதை தவிர்க்க முடியவில்லை. பார்த்துகொண்டு இருக்கும்போதே  பத்து நிமிடத்தில் வந்த இரண்டு உயிரற்ற உடல்கள்,  அவைகளுக்கு இடமில்லாதால் எரிந்துகொண்டிருப்பவைகள் தகனமேடையிலிருந்து கிழே தள்ளப்பட்டது, உடல்களை எரியூட்ட படகுகளில் வந்துகொண்டிருந்த விறகுகள்,
எல்லாம்  அவர்களுக்கு இது  தினசரி வாடிக்கை என்பதை புரியவைத்தது. ஆனால் நமக்கு மறக்கவிரும்பும் மனதை பிசைந்த காட்சிகள் அவை. சராசரி ஒரு நாளைக்கு 50 உடல்கள் வரும்,  இரவு பகலாக எரியும் இந்த நெருப்பை பல நூறு ஆண்டுகளாக அணைப்பதே இல்லை என்று என படகோட்டி சொன்னபோது இந்த உலகில் நிரந்தரமாக நடக்கும் விஷயங்களில் மரணமும் ஒன்று, நமக்கும் ஒரு நாள்  நிகழும் அது வரை அது பார்க்கும்போது  வருத்தமான விஷயமாகத்தான் இருக்கும் என்று உரைத்தது. .  உயிரற்ற உடல்கள் உருக்குலைந்ததை அத்துணை அருகில் பார்த்ததினால் நம் மனம் கனமாக இருப்பதைப்போல நம்படகும் கனமாகிவிட்டதோ என்று எண்ணும் அளவிற்கு படகும் மெல்ல செல்கிறது. நீரின் வேக  ஓட்டம் போதுமானதாக இருப்பதால் துடுப்பு போடவில்லை என்ற படகோட்டி சொல்லுகிறார். 
படகு கரையை அடைந்தாலும் காட்சியின் தாக்கம் கரையவில்லை. சாலையில் நடக்கும்போது காசிநகரின் எல்லாப்பகுதிகளிலும் கேட்கும் டிரிங், டிரிங் சைக்கிள் ரிக்‌ஷாகளின் மணியோசையும்,பலமொழிகளின் ஓசையும் மெல்ல நம்மை இந்த உலகிற்கு இழுத்துவருகிறது.
நாளைகாலை  புத்த கயாவிற்கு போக இருக்கும் விவரங்களை அறிவிக்கிறார்கள்.  இறப்பின் துயரத்தை பார்த்து  துவண்டு துறவறம் பூண்ட புத்தரை தரிசிக்க நாமும் இன்று அத்தகைய  சோகங்களை பார்த்தபின் போகப்போகும் வினோத ஒற்றுமையை எண்ணிக்கொண்டே தூங்கச்செல்லுகிறோம்
^^^^^^^^^^^^^^
சத்குருவின் பதில்கள்

 நம் வேதங்கள்  இந்த காசிநகரில்தான்  எழுதபட்டதாக சொல்லப்படுகிறதே?


 பலர் நினைப்பது போல நமது நான்கு வேதங்களும் ஒருவராலோ அல்லது ஒருசிலராலோ  எழுதப்படவில்லை.  நீண்ட காலத்திற்கு வாய்வழியாக சரியான ஒலி வடிவில் மற்றவர்களுக்கு சொல்லபட்டிருக்கிறது. அது இங்கு நிறைய நடந்திருக்கிறது. வேதங்கள் இந்த பூமியின் மிகத் தொன்மையான நூல்களாக இருப்பினும், மற்ற எந்த நூலையும் விட விரிவான, விஸ்தாரமான உள்ளடக்கம் கொண்டவை. வேதங்கள் யாரோ  ஒருவர் எழுதி வைத்த ஒழுக்க விதிகள் அல்ல. அவை வெளிநிலை மற்றும் உள்நிலை சம்பந்தமான பல ஆழமான கண்டுபிடிப்புகளின் தொகுப்பு. பலர் செய்திருக்கிறார்கள். 
வடிவத்தை யந்திரம் என்றும், ஒலியை மந்திரம் என்றும், இவை இரண்டையும் இணைத்துப் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை தாந்திரீகம் என்றும் சொல்கிறோம்.
வடிவங்களை ஒலியாக மாற்றுவதைப் பற்றி வேதங்களின் பல்வேறு பகுதிகள் பேசுகின்றன. ஒரு ஒலியை, ஒலி அளக்கும் கருவியான ஆசிலாஸ்கோப்பிற்குள் செலுத்தினால், அது அந்த ஒலிக்கு ஏற்ப ஒரு வடிவத்தைக் கொடுக்கிறது. ஒவ்வொரு ஒலிக்கும் ஒரு வடிவம் இருக்கிறதென்று இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது. அதே போல ஒவ்வொரு வடிவத்திற்கும் ஒரு ஒலி இருக்கிறது. ஒலிக்கும், வடிவத்திற்குமான இந்த உறவை வேதங்களில் மிக விரிவாக விளக்கியிருக்கிறார்கள். ரிக், சாம, மற்றும் அதர்வண வேதங்கள் பெரும்பாலும் இந்தப் பிரபஞ்சத்தை ஒலி வடிவமாக மாற்றி, அந்த ஒலியை உச்சரிப்பதன் மூலம் இந்த பிரபஞ்சத்தை நமக்குள் எதிரொலிக்கச் செய்வது பற்றித் தான் பேசுகின்றன. ஒலியின் மீது ஆளுமை பெறுவதன் மூலம், வடிவத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்த முடியும். இதுதான் மந்திரங்களின் விஞ்ஞானம்.

துரதிருஷ்டவசமாக, காலப்போக்கில் மந்திரங்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு, தவறாகப் பயன்படுத்தப்பட்டுவிட்டன. வேதங்கள், மனம் மற்றும் உள்நிலை சார்ந்த அறிவியல் என்பதால் அவற்றைக் கற்க ஆழமான ஈடுபாடும், அர்ப்பணிப்பும் தேவை. அதற்காக நீங்கள் உயிரையே விடத் தயாராக இருக்கவேண்டும்; இல்லாவிட்டால் அவை உங்களுக்குப் பலன் தராது. உங்களுக்கு கல்வித்தகுதியாகவோ, வேலைவாய்ப்பாகவோ இதை நினைத்தால், இதனால் உங்களுக்கு எவ்விதமான பயனும் கிடைக்காது. உங்களையே அதற்கு அர்ப்பணித்தால்தான், உங்களுக்குப் அதன் பயன் கிட்டும். இதற்குத் தேவையான உண்மையான அர்ப்பணிப்பு இல்லாமல் போனதால், எல்லா வகையான தவறான புரிதல்களுக்கும், பயன்பாடுகளுக்கும் ஆளாகி இந்த விஞ்ஞானம் சீரழிந்துவிட்டது.
வேத முறைகள் எப்போதுமே மனிதனின் புரிதலை ஆழமாக்குவதை நோக்கித்தான் இருந்ததே தவிர அவன் அறிவை விஸ்தாரமாக்கவதற்காக ஏற்பட்டதில்லை.  உங்கள் புரிதல் பொருட்தன்மையைத் தாண்டி உயரும்போதுதான், உண்மையான ஆன்மீகப் பயணம் துவங்குகிறது  இதைத்தான் நம் முன்னோர்கள் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இதைச் செய்து கொண்டிருந்தார்கள்; 

25/8/14

கண்ணனின் கனவு



 முன்னாள் நடிகை வைஜைந்திமாலா. 54 வருடங்களுக்கு முன் தான் கதாநாயகியாக நடித்த  கல்கியின் அமரகாவியாமான பார்த்திபன் கனவு  ஒரு ஒலிபுத்தகமாக வரும் என்றோ அதை தானே வெளியிடுவோம்  என்றோகனவிலும் நினைத்துகூட பார்த்திருக்கமாட்டார். சமீபத்தில்  பொன்னியன் செல்வன் நண்பர்குழுவினர் மூலம் திரு பாம்பே கண்ணன்  இந்த காவியத்தை  ஒலி புத்தகமாக்கி வெளியிட்டிருக்கிறார்.  இவர்  சிவகாமியின் சபதம், பொன்னியன் செல்வன் காவியங்களையும் ஒலி புத்தகமாக்கியிருப்பவர். தமிழ் படிப்பதை மெல்ல மறந்துவரும்  இன்றைய இனிய இளையதலைமுறையினர் படிப்பதைவிட கேட்பதையே அதிகம் விரும்புகிறார்கள் என்பதை உணர்ந்து இவர் இதுபோன்ற  ஒலிபுத்தகங்களை தயாரிக்கிறார். மேடை நாடகங்களில் நீண்ட அனுபவம்  கொண்ட இவர்  இதைவெறும் வியாபார முயற்சியாக இல்லாமல் ஒரு தவமாகச் செய்து கொண்டிருக்கிறார்.
மிகுந்தசிரமங்களுக்கிடையே தகுந்த குரல்களை தேடிபிடித்து பயிற்சி அளித்து ஒலிப்பதிவை மேற்பார்வையிட்டு தயாரிக்கிறார்.
நல்லி குப்புசாமி,  வைஜந்திமாலா, சிவசங்கரி, ஏ ஆர் எஸ்,இந்திரா செளந்தர்ராஜன்  கலந்துகொண்ட விழாவில் பேசியவர்கள் அனைவரும்  அமரர் ஆசிரியர் கல்கியின் பல்வேறு முகங்களைப் பற்றி பாராட்டி பேசினார்கள்
.தான் பிறப்பதற்கு மூன்பே தங்கள் குடுமபத்துக்கு அறிமுகமானவர் கல்கி  என்று ஆரம்பித்து  ”கல்கி மாமா” என்று உரிமையோடு பேசிய சிவசங்கரி தொழில்நுட்ப வசதிகளற்ற காலத்திலேயே அமரர் கல்கியின் கடின உழைப்பு ஆச்சரியத்தை தருகிறது என்றார்.  பார்த்திபன் கனவு எழுதிய பின் அதன் முந்தியகாலகட்ட கதையாக சிவகாமியின் சபதத்தை தொடர்ந்த (backword integration) டெக்னிக் பிரமிப்பூட்டும் விஷயம் என்றார்.  . முடிவு தெரியாமல் போய்ச் சேர்ந்துவிடுவோமோ என்கிற ஆதங்கத்தில் “நான் சாகறத்துக்குள்ள பொன்னியின் செல்வன் முடிஞ்சுடுமோன்னோ...” என்று அவரின் பாட்டி கேட்டு கொண்டே இருந்ததை சொன்னபோது அரங்கம் சிரிப்பில் அதிர்ந்த்து. 
 விழாவின் ஆரம்பத்தில், பார்த்திபன் கனவிலிருந்து சில காட்சிகளை நாடகமாக நடித்தது நிறைவாக இருந்தது உடை, மேக் அப், நடித்தவர்கள், தமிழ் உச்சரிப்பு, ஒலி/ஒளி அமைப்பு எல்லாமே அருமை,    நாயகன் விக்கரமனாக நடித்த சூரஜ், நாயகி குந்தவியாக நடித்த  அர்ச்னா நாளைய நம்பிக்கை நட்சத்திரங்கள் எனபதை நிருபித்தார்கள். இந்த டீமையை வைத்து முழு நாடகமாகவே போடலாம்.
வளரும் தொழில் நுட்பத்தில் இப்படி ஒலிபுத்தகங்கள் உருவாவது பரிமாணவளர்ச்சி, வருங்காலங்களில் இதுதான் புத்தகங்களின் வடிவமாக இருக்கபோகிறது.. தனது புத்தகங்களும் இப்படி ஒரு நாள் வெளிவரும் என்றார் இந்திரா செந்திர்ராஜன்.
ஒலிபுப்த்தகம் வெளிவர நண்பர் பாம்பே கண்ணன் அவர்களின் அயராத உழைப்பையும் தயாரிப்பாளர் சிகே வெங்கட்ராமன் அவர்களின் பெருந்தன்மையையும் மகிழ்ச்சியுடன் பாராட்டிய ஏஆர்ஸ்...  நாடக நடிகர்களின் சிறப்பான நடிப்பை பாராட்ட விட்டுபோனதற்காக மன்னிப்பு கேட்டு மீண்டும் மைக்குவந்து அவர்களை பாரட்டி நன்றியும் சொன்னார். 30 ஆண்டுகாலமாக நாடகமேடையை நேசிப்பவர் இலையா?
1960ல் கறுப்பு-வெள்ளை பார்த்திபன் கனவில் நடித்த வைஜயந்திமாலா பாலி  இப்பொழுதும் டிரிம்மாக இருக்கிறார். தன் மெல்லிய குரலில்  மெல்ல நாலுவரிகளில்பேசி  தன் பேச்சைமுடித்துகொண்டார். 
அரங்கம் நிறைந்திருந்தததைவிட ஆச்சரியம் நடுவே குத்துபாட்டு ரிங்டோன்கள் ஒலி  தொல்லையிலாததுதான்.
 ஒலிப்புத்தகத்தில் நடிக்கும் போது நடிகர்கள் வசனங்களைப் வெறுமனே படிக்காமல்.  நடிக்கிறார்கள்  அந்த பாத்திரமாகவேமாகி பேசுகிறார்கள்.  இதை நன்கு தெரிந்தவர் இயக்குனர் பாம்பே கண்ணன். ஆனாலும் ஒலிபுத்தகத்திற்கு குரலால் உயிர் கொடுத்தவர்களை அன்று  ஏன் மேடையில் கெளரவிக்கவில்லை என்று தெரியவில்லை. 
 மூன்று தலைமுறைகளை கடந்த கலாபூர்வமான கல்கியின் காவியங்கள்  அடுத்த தலமுறையையும் அடைந்து அதையும் தாண்டி நிற்க உதவும்  பாம்பே கண்ணனின் இந்த  ஒலிபுத்தக முயற்சி பெரிதும் பாராட்டபட வேண்டிய ஒன்று
(31/8/14 கல்கி)

23/8/14

உயிர் துறக்கும் உரிமை



ஒரு மனிதனுக்கு தான் உயிரை விரும்பிய போது துறக்கும் உரிமை உண்டா? தன்னுயிரை தானே மாய்துகொள்வது என்பது  தற்கொலை அதுவும் அதற்காக முயற்சிப்பதும்  உலகின் பல நாடுகளில் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். ஆனால் ஸ்விஸ் நாட்டில் இது  குற்றமில்லை. சட்ட விதிகளுக்குட்பட்டு ஒருவர் தன் மரணத்தை தீர்மானித்துகொள்ள முடியும்.
ஸூரிச் நகரில் இதை செய்து கொடுப்பதற்காகவே ஒரு அமைப்பு செயல் படுகிறது. அதன் பெயர் டிகினாட்ஸ் (DIGNITAS) இவர்கள் தன் உயிரைப்போக்கிக்கொள்ள விரும்புகிறவர்களுக்கு, உடல் ரீதியாக எந்த பிரச்ச்னைகள் இல்லாவிட்டாலும் கூட, மரணத்தை அவர் விருப்பம்போல செய்ய திட்டமிட்டுகொடுத்து அனுமதிகள் பெற்று செய்துகொடுக்கிறது.
இதைப்போல  உலகின் 23 நாடுகளில, உயிரை விரும்பி போக்கிகொள்ளு விரும்புபவர்களின் 38 சொஸைட்டிகளின் கூட்டமைப்பு ஒன்றும் 1980லிருந்து இயங்கி வருகிறது.  1998ல்  துவக்கபட்ட டிகினாட்ஸ் அமைப்பில்  உலகின் பல பகுதிகளிலிருந்தும் பதிவு செய்துகொண்டிருக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 7000 த்த தாண்டுகிறது.  உயிர் போக்கி கொள்ள விரும்புகிவர்களைத்தவிர இந்த அமைப்புக்கு உதபவர்களும் இதில்  அடக்கம். இதுவரை  உலகின் வெவேறு நாடுகளைச்சேர்ந்த 1800 பேருக்கு  அவர்கள் விரும்பியபடி உயிரை போக்கிகொள்ள உதவியிருக்கிறது.  அதிகமாக பயன் படுத்தியவர்கள் ஜெர்மானியர்கள் இதுவரை 840 பேர். குறைவாக  செய்துகொண்டிருப்பவர்கள் இஸ்ரேலியர் 19 பேர். மிக குறைவாக பயன்படுத்திய நாடுகளில் இந்தியா ஒன்று. இதுவரை இதைப்பயன்படுத்திய இந்தியர் ஒருவர் மட்டுமே. இந்த சேவைக்கு இவர்கள் வசூலிக்கும் கட்டணம்10,500 ஸ்விஸ்பிராங்க்கள் இந்திய மதிப்பில் ரூபாய் 7 லட்சம்
ஏன் இவ்வளவு கட்டணம்?  இதில் பதிவுகட்டணம். ஆலோசனை கட்டணம், உயிரைபோக்கிக்கொள்ள உதவும் சேவைக்கான கட்டணம் உதவும் டாக்டரின் பீஸ்,அரசாங்கத்துக்கு அனுப்பும் ரிப்போர்ட்,  எரிப்பது புதைப்பது மற்றும் இறுதிச்சடங்குகளுக்கான செலவு, அவசியமானால் குடும்பத்தினருக்கு பதில் கோர்ட் கேஸ்களை சந்திக்க நேரும் செலவு  எல்லாம் அடங்கும் என்கிறார்  இந்த அமைப்[பின் தலைவர்  லூட்விக் மின்லி.
 81 வயது ஆகும் இவர் ஒரு வழக்கறிஞர், மனித உரிமை ஆர்வலர்.. விரும்பும் நேரத்தில் விரும்பும்படி இறப்பது தனிமனித உரிமைகளில் ஒன்று என்பது இவர் வாதம்.  சரி இதில் டாக்டர் எங்கிருந்து வருகிறார்.? உயிரை போக்கிகொள்ள வேதனை தராத விஷ ஊசி போட்டுகொள்ள ஒரு டாக்டரின் மருந்து சீட்டு வேண்டும். அதற்காக தான் அவருக்கு பீஸ். நல்ல உடல் நிலையில் இருப்பவருக்கு அத்தகைய விஷமருந்துக்கு  டாக்டர் அனுமதி தரலாமா?. இது இன்னும் ஸ்விஸ்  சட்டம் மறுக்காத விஷயம். என்கிறார் லூட்விக்.

 ஸ்விஸ் நாட்டு சட்டங்களின் படி  தன் சொந்த நலனுக்காக ஒரு தற்கொலையை மறைத்தால் குற்றம். ஆனால் கெளரமாக இறக்க விரும்பும் ஒருவருக்கு விஷ மருந்து கொடுத்து இறக்க உதவிசெய்தால் அது குற்றமாக கருத படமாட்டாது.
 ” நாங்கள் செய்வதில் சொந்த நலனோ அல்லது நிகழந்ததை மறைப்பதோ இல்லை.  உருப்பினர் விரும்புவதைச் செய்கிறோம்  அதனால் சட்டபடி  இதில் எந்த தவறும் இல்லை” என்கிறார்.

ஆனால் இவரின் இந்த அமைப்பை கண்டனம் செய்பவர்களும் இருக்கிறார்கள். இந்த மனிதனினால் ஸ்விஸ் நாட்டின் பெருமை குறைகிறது. தற்கொலை செய்யதுகொள்ளவிரும்புவர்களின் சொர்க்கமாக ஸ்விஸ் மாறுவதை  நாங்கள் விரும்பவில்லை என்கிறார்கள் இவர்கள்

 தற்கொலை செய்துகொள்வது  தடைசெய்யபட்டிருக்கும் இந்தியா போன்ற நாடுகளிலிருப்போருக்கு இது நல்ல வாய்ப்பாகிடாதா? மேலும் இம்மாதிரி வசதிகள்  அதிகமான தற்கொலை முயற்சியை ஊக்குவித்துவிடாதா?
இல்லை என்கிறார் லூட்விக்.” இந்திய சட்டங்கள் பிரிட்டிஷாரால்  இந்திய வாழ்க்கைமுறைகளை  நெறிகளை பின்பற்றாமல் இயற்றபட்டவை. இந்திய வேதங்களில் ஒரு மனிதன் தன் குடும்ப பொறுப்புகளை முடித்தவுடன் உணவு நீர் இவற்றை துறந்து  நீண்ட பயணம் செய்து உயிர் துறக்கும் உரிமை தரபட்டிருக்கிறது  இந்திய ஜெயின் சமூகம் இதை அனுமதிப்பதோடு  கெளரவமாகவும் கருதுகிறதே என்கிறார்.  மேலும் இந்த அமைப்பினால் தற்கொலைகள் பெறுகாது  ஒவ்வொரு வெற்றிகரமான தற்கொலைக்கும் பின்னால் 49 தோற்ற முயற்சிகள் இருக்கிறது. மேலும் எங்களிடம் விரும்பி வருவர்களை மறுநாள் காலையில் நாங்கள் கொன்று விடிவதில்லை. 3 கட்ட ஆலோனைகள் வழங்க படுகிறது, மனம் மாற, வாழும் வழிக்கான வெளியேரும் கதவுகள் திறந்தே இருக்கும். அந்த பச்சை விளக்கு காட்டப்படும் கட்டத்தில் பலர் மனம் மாறியவர்கள் பலர். இருக்கிறார்கள்.””
 இந்தியாவில் சட்டம் என்ன சொல்லுகிறது.?
தற்கொலை மரணங்களில் பல வகைகள். உணர்ச்சி வசப்பட்டு உயிர் போக்கிக்  கொள்வது,  உடல் உபாதைகள் பொறுக்காமல் உயிரைபோக்கிகொள்வது, டாக்டரின் உதவியோடு கருணைக்கொலை செய்ய வேண்டுவது எல்லாம் இந்தியாவில் குற்றம்.  உடலில் உயிர் மட்டும் தங்கி மற்றவை செயலிழந்த கட்டத்தில் கூட கருணைக் கொலையை கூட கோர்ட் அனுமதியில்லாமல் டாக்டர்கள் செய்ய முடியாது.  1994ல்  தற்கொலை முயற்சி  என்ற குற்றவியல் சட்டமே சட்டவிரோதமானது என  உச்ச நீதி மன்றம் ஒரு அதிரடி தீர்ப்பு வழங்கியிருந்தது. ஆனால் 1996ல் மற்றொரு  தீர்ப்பில் “வாழும் உரிமைகள் என்பதில் சுய மரணத்தை வரவழைத்துகொள்வது அடங்காது” என்றும் 1994 தீர்ப்பு தவறு என்றும் சொல்லபட்டது. கருணைக்கொலைகளுக்கு அனுமதிக்க அரசின் சட்டம் தேவை என்று சொன்னது இந்த தீர்ப்பு. இதுவரை  மரணம் அடையமுடியாமல் தவித்து கொண்டிருக்கும் உடல்நிலையை காரணம் காட்டி உறவினர்கள் கருணைக்கொலைக்கு அனுமதிகோரி 15  வழக்குகள் தொடரபட்டிருக்கின்றன. எதற்கும் அனுமதி தரப்படவில்லை.  இது நாடுதழுவிய அளவில் விவாதிக்க பட வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் என்பதால் சமீபத்தில் உச்சநீதி மன்றம்  மாநில அரசுகளின் ஆலோசனைகளை கேட்டிருக்கிறது
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ? 





______________________________________________________
கருணைக்கொலை தவறில்லை: சிவசங்கரி
கருணைக்கொலை என்ற வார்த்தையே புதிதாக இருந்த 1980-களில் கருணைக்கொலைஎன்ற நாவலை எழுதியவர் எழுத்தாளர் சிவசங்கரி. நாவல் வெளிவந்து 30 ஆண்டுகள் ஆகியும் கருணைக்கொலை குறித்த விவாதங்கள் தொடர்கதையாகவே இருக்கின்றன . “கருணைக்கொலை என்பது சட்டத்தால் மட்டும் முடிவு செய்யப்படக்கூடியது அல்ல. அது உணர்வுப்பூர்வமானது. அது தற்கொலையின் இன்னொரு வடிவம் என்று மத்திய அரசு சொல்வதும் ஏற்றுக் கொள்ளத்தக்கது. அதே சமயம், நோயின் இறுதி நிலையில் இருக்கிற ஒருவர், அதன் வலியை தாங்க முடியாமல் கருணைக்கொலை முடிவை எடுப்பதில் தவறில்லை.
நான் வாழ்ந்தது போதும், என்னால் இந்த வேதனைப் பொருத்துக்கொள்ள முடியவில்லை என்று கதறுகிறவரை, ‘நீ வாழ்ந்துதான் ஆக வேண்டும்என்று நிர்பந்திப்பது நியாயமில்லை. எனவே இதுபோன்ற வழக்குகளில் நான் கருணைக்கொலையை ஆமோதிக்கிறேன்என்கிறார் சிவசங்கரி.
 _______________________________________________________________________________

7 கருணைக் கொலையை அரங்கேற்றிய மருத்துவர்


பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மருத்துவர் ஒருவர் 7 நபர்களை கருணைக் கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
கருணைக் கொலை என்பது பிரான்ஸ் நாட்டில் ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்றாகும், இதற்கு அந்நாட்டு ஜனாதிபதி பிரான்சிஸ்கோ ஹோலண்டேவும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இருப்பினும், மிகவும் தீவிரமான கட்டத்தில் நடைபிணமாய் வாழும் ஒரு சிலரை, மருத்துவர்கள் சேர்ந்து ஆலோசித்து கருணைக்கொலை செய்யலாம்.
இந்நிலையில், மருத்துவர் நிக்கோலஸ் என்பவர், தன்னுடைய நோயாளிகளில் 7 பேரை கருணைக்கொலை செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இது தொடர்பாக நடைபெற்ற வழக்கில், கருணைக்கொலை செய்யப்பட்ட குடும்ப நபர்கள், இந்த மருத்துவர் செய்தது எங்களுக்கு பெரிய உதவி என்றும் அவரை கைது செய்து சிறையில் அடைக்க கூடாது எனவும் சாட்சி கூறியுள்ளனர்.
இதனால் டாக்டரை விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது







21/8/14

சீனாவின் குரு காணிக்கை






யோகா குரு அய்யங்கார் தன் பிராணாயமத்தை கடைசி மூச்சை நேற்று நிறுத்திவிட்டார்.  இரண்டு ஆண்டுகளுக்கு முன் கல்கியில் எழுதிய கட்டுரையின் மீள்பதிவு

சீனாவில் இந்திய அரசின்  உதவியுடன் முதல் முறையாக ஒரு யோகா உச்சி மாநாடு  தென் சீனாவில்  குன்ஸாஹு(GUNGZHOU)  என்ற ஒரு பெரிய தொழில் நகரில்  சில வாரங்களுக்கு முன் நடைபெற்றது. தலைமை விருந்தினாராக் அழைக்கபட்டிருந்தவர் யோகா குரு பி கே எஸ் அயங்கார். அவர் உலகின் பல நாடுகளுக்கு பயணம் செய்திருந்தாலும் சீனாவிற்கு இதுதான் முதல் முறை.  புனாவில் யோகா பள்ளியை   நடத்திவரும்  இந்த குருவிற்கு  அங்கே எதிர்பாராத ஆச்சரியங்கள் பல  காத்திருந்தன. 200டாலர் கட்டணம் கட்டி மாநாட்டிற்கு வந்திருந்த 1300 பேர் களில்  சில மாணவர்கள் ஒருங்கிணைந்து அவருடைய அய்யங்கார் பாணி யோகசனங்களை  தவறில்லாமல் செய்துகாட்டினார்கள். . அதைவிட ஆச்சரியபடுத்திய விஷயம் அவரது அய்யங்கார் ஆசனங்கள் சீனாவில் மிகவும் பாப்புலர் என்பதும், அந்த நாட்டில்  17 மாநிலங்களில், 57  நகரங்களில்  அவரது பாணி யோகவை கற்பிக்க பல பள்ளிகள் இருப்பதும் 30, 000க்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றிருக்கிறார்கள் எனபதும் தான். பல பள்ளிகளில் ஆசிரியர்கள் ரிஷிகேஸ் வந்து  இவரது சீடர்களிடம் பயிற்சி பெற்றவர்கள்.  சீனர்கள் தங்களது குருவிற்கு மிகுந்த மரியாதை அளிப்பவர்கள். தாங்கள் பயிலும் யோக கலையின் பாணியை உலகிற்கு அறிமுகபடுத்திய குருவை சந்திப்பதை வாழ்வின் பெரிய வாய்ப்பாக கருதிய சீன இளைஞ்ர்கள் அவரை  பல நகரங்களில் வரவேற்றனர்.  “சீனர்களுக்கு யோகா பற்றி ஓரளவு தெரியும் என்பதை மட்டுமே அறிந்திருந்த எனக்கு  யோகா அங்கு இவ்வளவு பிரபலமாக் இருப்பதை பார்க்கும்போது  மிகவு சந்தோஷமாக இருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் சீனா யோகாவில் இந்தியாவை முந்தி விட்டால் கூட நான் ஆச்சரியபட்மாட்டேன் “  என்று சொல்லும் அய்யங்கார் கர்நாடக மாநிலத்தில்  பெல்லூர் என்ற சிறிய கிராமத்தில் மிக ஏழைக்குடும்த்தில் பிறந்தவர். சிறுவயதிலியே பெற்றோர்களை இழந்து மைசூரிலிருக்கும் புகழ்பெற்ற யோகாசன ஆசிரியாரான தன் மாமா கிருஷ்ணமாச்சாரியாரின்  வீட்டில் தங்கி அவருடைய உதவியாளாரக பணிசெய்து யோக கலையை கற்றவர். 15 ஆண்டு ப்யிற்சிக்குபின்னர்   மராஷ்ட்டிர மாநிலத்தில் புனா நகருக்கு வந்து யோகா பயிற்சி பள்ளியை  துவக்கி  அதை வளர்த்தவர். தானே கற்று உணர்ந்த சில பழைய யோகயாசன முறைகளை செம்மைப்படுத்தி கற்பித்துவந்தார். எளிதான  இந்த யோகா பாணி அய்ங்கார் ஆசனங்கள் என்று பிரபலமாகி இன்று இந்தியாவில் பல இடங்களிலும், உலகின் பல நகரங்களிலும் பரவியிருக்கிறது.  ’ ‘யோகா லைட் ஆப் லைஃப்’ ‘ என்ற இவரது புத்தகம் உலகம் முழுவதும் அதிக அளவில் விற்கும்  யோகா புத்தங்களில் ஒன்று
இந்த பயணத்தில்  பல  சீன நகரங்களில் யோகானசஙகள்  செய்து காட்டியும் அது குறித்து விளக்க உரையையும் நிகழ்த்தியிருக்கும் இந்த குருவின் படத்துடன் சீனா நாட்டின் அஞ்சல்துறை  ஒரு விசேஷ  தபால் தலை வெளியிட்டு கெளரவித்திருக்கிறது. இத்தகைய கெளரவம் பெறும்  முதல் இந்தியர் இவர்தான். சீன அரசுக்கு  தெரிவித்த நன்றி உரையில்” என் வாழ் நாள் முழுவதும் சந்தோஷப்படும்  வகையில் என்னை சீனாவின் ஒரு அடையாளமாக  கருதி  இந்த மகத்தான கெளரவத்தை அளித்தற்கு  மிக்க நன்றி  என குறிப்பிட்டிருக்கிறார். இனி ஆண்டுக்கு ஒருமுறை சிலமாதங்களாவது சீனாவில் யோகா வகுப்புகள் நடத்தபோவதாக அறிவித்திருக்கும் இவருக்கு வயது- ஒன்றும் அதிகமில்லை 93 தான்.



19/8/14

புதிய இஸ்லாமிய தேசம் உருவாகிறதா?

ஆழம் ஆகஸ்ட் இதழில் எழுதியது. 

New post on ஆழம்

புதிய இஸ்லாமிய தேசம் உருவாகிறதா?

by ரமணன்
Chapter01எரிந்து கொண்டிருக்கிறது எண்ணெய் பூமி. இரானுடன் சண்டை, குவைத் ஆக்கிரமிப்பு, சதாம் எழுச்சி வீழ்ச்சி, அமெரிக்க முற்றுகை என்று கடந்த முப்பதாண்டுகளாக உலகச் செய்திகளில் தொடர்ந்து இடம்பெற்று வந்த இராக்கில் அண்மையில் உள்நாட்டுப் போர் மூண்டுள்ளது.
ஏன் இந்தப் போர்?
சற்றே முந்தைய வரலாற்றை ஆராய்ந்தால் இதற்கு விடை கிடைக்கும். மேற்கு ஆசியாவில் அமைந்துள்ள நாடு இராக். சவூதி அரேபியாவுக்கு அடுத்தபடியாக, உலகின் இரண்டாவது பெரிய எண்ணெய் வளமிக்க நாடும்கூட. மெசபடோமிய வண்டல் சமவெளி, ஜாக்ரோஸ் மலைத்தொடர்கள், சிரியா பாலைவனம், வடக்கு பெர்ஷிய வளைகுடாவை ஒட்டிய (58 கிலோமீட்டர் நீளம்) கடற்கரை என வேறுபட்ட நில அமைப்புகளை உள்ளடக்கிய நாடு. வடக்கில் துருக்கியும், கிழக்கில் இரானும், தென்கிழக்கில் குவைத்தும், தெற்கில் சவூதி அரேபியாவும், தென்மேற்கில் ஜோர்டானும், மேற்கில் சிரியாவும் எல்லைகளாக அமைந்துள்ளன. யூப்ரடிஸ், டைக்ரிஸ் என இருபெரும் ஆறுகள், வடமேற்கில் இருந்து தென்கிழக்கை நோக்கி, இராக்கின் மையப் பகுதியைக் கிழித்துக்கொண்டு ஓடுகின்றன. இதனால் பாலைவனம், ஸ்டெப்பி புல்வெளி என்பதோடு வளமான வேளாண் நிலங்களும் இராக்கில் உள்ளன. இராக்கின் புராதனப் பெயரான மெசபடோமியா என்பதற்கு ஆறுகளுக்கு இடையில் அமைந்துள்ள நிலம் என்று பொருள்.
நதிக்கரைகள்தான் நாகரிகங்களின் தொட்டில் என்பதற்குச் சான்றாக வரலாறு சொல்லும் இடங்களில் இந்தப் பகுதியும் ஒன்று. உலகுக்கு எழுத்துமுறையை வழங்கிய இந்த மண்ணில்தான் இப்போது வன்முறைக் கலாசாரம் வேறூன்றியிருக்கிறது. பாபிலோனிய பேரரசிலிருந்து தொடர்ந்த நீண்ட நெடிய மன்னர் பரம்பரைகளை வரலாறாகக் கொண்ட இராக் மற்ற நாடுகளைப்போல ஆங்கிலேயர் பிடியில் கொஞ்ச காலம் சிக்கியிருந்தது. நாற்பதுகளில் இராக் மீண்டும் மன்னராட்சிக்கு திரும்பியது. ஆனால் 1958ல் நடந்த ராணுவப் புரட்சியால் மன்னராட்சி முடிவுக்கு வந்தது. இதை தொடர்ந்து அடுத்தடுத்து ராணுவ அதிகாரிகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தனர். 1978ல் சதாம் உசேன் இராக் அதிபராகப் பொறுப்பேற்றார். 2003ல் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினரிடம் சிக்கும்வரை யாரும் அசைக்க முடியாத சர்வாதிகாரியாக சதாம் இருந்தார்.
பேரழிவை ஏற்படுத்தக் கூடிய ரசாயன ஆயுதங்களைத் தயாரித்து பதுக்கி வைத்திருப்பதாகக் கூறி 2003ல் இராக்கைத் தனது ஆளுகையின்கீழ் அமெரிக்காவும் அதன் நேச நாடுகளின் படையும் கொண்டுவந்தது. இந்தப் போரின் இறுதியில்தான் தப்பியோடிய சதாம் உசேன் கண்டுபிடிக்கப்பட்டார். அப்போது ஷியா முஸ்லிம்கள் தலைமையிலான ஆட்சியை அமெரிக்கா உருவாக்கியது. அவர்கள் சதாமை 2006ம் ஆண்டு தேச துரோகத்துக்காகத் தூக்கிலிட்டனர். சன்னி பிரிவு முஸ்லிம்கள் ஒதுக்கப்பட்டனர். ராணுவம், அரசு நிர்வாகத்தில் அவர்களின் ஆதிக்கத்தை அடியோடு ஒழித்தனர். பல கட்சி நாடாளுமன்ற முறை உருவாக்கப்பட்டு அமெரிக்கச் சார்பு ஆட்சி அமைக்கப்பட்டது.
அப்போது ஒதுக்கப்பட்ட சன்னி பிரிவினர் ஆயுதமேந்தி போராடத் தொடங்கினர். சிறு கலவரங்கள் ஆரம்பமாயின. 2011ல் அமெரிக்கப் படைகள் இராக்கிலிருந்து வெளியேறியதும் இக்கலவரங்கள் தீவிரமடைந்தன. ஆளும் ஷியா முஸ்லிம் அரசுக்கு எதிராக சன்னி பிரிவைச் சேர்ந்த தீவிரவாதிகள் நடத்திவந்த பயங்கர தாக்குதல்கள் இப்போது உள்நாட்டுப் போராகி உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
இந்தப் போரை நடத்துபவர் யார்?
‘நாங்கள்தான்’ என்று ஐ.எஸ்.ஐ.எஸ் எனற அமைப்பு அறிவித்தபோது அமெரிக்க உளவு அமைப்புகள் ஆச்சரியமடைந்தன. காரணம் அவர்கள் கணிப்புப்படி இந்தப் புரட்சிகர அமைப்பு அதிக நிதி வசதி இல்லாத, பயிற்சிகள் ஏதும் பெறாத ஒரு சிறு குழு. இதன் தலைவர் யார் என்பதை அறிந்துகொண்டபோது அதைவிட ஆச்சரியம் அடைந்தது அமெரிக்கா. இந்த இயக்கத்தின் தலைவராக அறியப்பட்ட அபுதுவா என்பவர் 34 வயதில் அமெரிக்க ராணுவ அதிகாரிகளால் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டவர். அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு இராக்கின் கண்காணிப்பு முகாமில் கைதியாகக் கழித்தவர். அப்போதெல்லாம் மிக அமைதியானவராகத் தோற்றமளித்த அப்பாவி. ஒரு மசூதியில் குமாஸ்தாவாகப் பணியாற்றிவந்த இவரைச் சந்தேகத்தின்பேரில் கைது செய்தார்கள். விசாரணையின் முடிவில் இவர் ஓர் அச்சுறுத்தல் அல்ல என்று கூறி விடுதலை செய்துவிட்டார்கள். இராக்கின் பல நகரங்களைப் புரட்சிப் படைகள் கைப்பற்றி வருவதாகக் கடந்த இரண்டு மாதங்களாக வெளிவரும் செய்திகளின் பின்னணி இவர்தான். அப்பாவி என்று நினைத்து விடுதலை செய்த அமெரிக்கா இப்போது இவர் தலைக்கு 10 மில்லியன் டாலர் பரிசு அறிவித்திருக்கிறது. சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டபோது, ‘உங்களையெல்லாம் நியூ யார்க்கில் சந்திக்கிறேன்’ என்று சிறை அதிகாரிகளிடம் அபுதுவா கூறினாராம். அவை சாதாரண வார்த்தைகளல்ல என்பது இப்போது நிரூபணமாகியுள்ளது. இன்னொரு பெரும் அமெரிக்கத் தாக்குதலை எதிர்கொள்ளவேண்டியிருக்குமோ என்றும் அமெரிக்கா அச்சப்படத் தொடங்கிவிட்டது. அந்த அச்சத்தின் விலைதான் 10 மில்லியன் டாலர்.
அல் காயிதாவைப்போல் மற்றொரு சவாலாக இப்போது ஐஎஸ்ஐஎஸ் பார்க்கப்படுகிறது. இஸ்லாமிக் ஸ்டேட் ஆஃப் இராக் அண்ட் லெவாண்ட். இராக், சிரியா, லெபனான் போன்ற பிரதேசங்களை உள்ளடக்கிய அகண்ட இஸ்லாமிய தேசம் அமைப்பதுதான் இந்த இயக்கத்தின் கனவுத் திட்டம். 2003ல் இராக்கில் அமெரிக்கா போர் நடத்தியபோது சின்னதொரு போராளிக் குழுவுக்குத் தலைவராக இருந்த அபுதுவா இன்று ஒரு போரையே தலைமை தாங்கும் அளவுக்கு உயர்ந்தது எப்படி என்னும் கேள்விக்கு விடை தேடத் தொடங்கியபோது அமெரிக்க உளவுத்துறை சில விஷயங்களைக் கண்டுபிடித்தது.
  • அல் காயிதாவின் இராக் கிளையான ஐ.எஸ்.ஐ. (இஸ்லாமிக் ஸ்டேட் ஆஃப் இராக்) அமைப்பில் கவுன்சில் உறுப்பினராக இருந்திருக்கிறார்.
  • 2009ல் அமெரிக்கக் கண்காணிப்பு முகாமில் இருந்து விடுதலை ஆன சில மாதங்களில் ஐஎஸ்ஐ தலைவர் அபு ஓமர் அல் பாக்தாதி திடீரென்று கொல்லப்பட, அவருடைய இடத்தை இவர் நிரப்பியிருக்கிறார்.
  • இராக்கில் நடந்துவரும் பல்வேறு வன்முறைச் சம்பவங்களுக்கும், தீவிரவாத தாக்குதல்களுக்கும் இவரே காரணம்.
எல்லாப் புரட்சித் தலைவர்களைப்போல இவருக்கும் பல பெயர்கள், முகங்கள். ஊடகங்கள் சொல்லும் அபுபக்கர் அல் பாக்தாதி என்பவரும் இஸ்லாமிய பயங்கரவாதக் குழுக்களிடையே பிரபலமான டாக்டர் இப்ராகிமும் ஒருவர்தான் என்பதை ஊர்ஜிதம் செய்ய அமெரிக்காவுக்கு ஓராண்டாகியிருக்கிறது. மக்கள் மத்தியில் பிரபலமான இவருடைய பெயர் அபுதுவா. தனது படைகளுடன் பேசும்போதுகூட ஸ்பைடர்மேன் ஸ்டைலில் முகமூடி அணிந்திருப்பதால் அவர் முகம் பலருக்குத் தெரியாது. இப்போது அமெரிக்கா வெளியிட்டிருக்கும் படம்கூட பத்தாண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டதுதான்.
இந்த ஸ்பைடர் மேன் அபுதுவா மதக்கல்வியில் பிஹெச்டி முடித்தவர் என்று சொல்லப்படுகிறது. பல்வேறு இடங்களுக்குச் சென்று மதப் பிரசாரம் மேற்கொண்டு தீவிரவாத வெறியை ஊட்டுவதில் தன் வாழ்நாளைச் செலவழிக்கிறார். உலகளவிலான ஜிகாதி அறிவுஜீவிகளின் மத்தியில் இவருக்கு நல்ல செல்வாக்கு இருக்கிறது. ஒசாமா பின்லேடன் மரணத்துக்குப் பிறகு அல்காயிதா மீதிருந்த நம்பிக்கை இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்களிடையே குறைந்துவரும் நிலையில், அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுபவராக அபுதுவா உருவெடுத்திருக்கிறார். குறிப்பாக இராக்கில் அடுத்தடுத்து சிறைகள்மீது திடீர் தாக்குதல்களை நடத்தி ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை விடுதலை செய்த இவரது நடவடிக்கைக்கு சன்னி இஸ்லாம் வகுப்பினரிடையே நல்ல வரவேற்பு ஏற்பட்டது.
அல் காயிதா இவரைத் தங்கள் தலைவராக ஏற்கவில்லை. அவர்களிடையே நிறைய முரண்பாடுகள் நீடிக்கிறது. நீங்கள் இராக்கில் மட்டும் தலைவராக இருங்கள் என்று சொல்லிவிட்டது. அபுதுவா தன் பங்குக்கு, நாங்கள் அல் காயிதாவின் கட்டுப்பாட்டில் இல்லாத சுதந்தர இஸ்லாமிய அமைப்பு என்றே அறிவித்துள்ளார். ஆனால் அவரது கனவு மிகப்பெரியது என்பதில் சந்தேகமில்லை.
இஸ்லாமிய தேசக் கனவு
அபுதுவாவின் கனவு அகண்ட இஸ்லாம் தேசம். ஐரோப்பாவில் ஸ்பெயினின் வடக்கு எல்லையில் தொடங்கி, வட ஆப்பிரிக்கா, தெற்கு ஆசியா முழுக்க ஒரே இஸ்லாமியக் குடையின் கீழ் அமையவேண்டும் என்று அவர் விரும்புகிறார். இஸ்லாமிய ஆளுகைக்குள் இருக்கும் பிரதேசங்களை ஷரியத் சட்டம்தான் ஆளவேண்டும். இந்த லட்சியத்துக்கு முதல் படியாகத்தான் சிரியா, இராக் இரண்டு நாடுகளையும் கைப்பற்றும் நோக்கில் சிறிது காலமாகப் போராடிவருகிறார்கள். சிரியாவில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் இவர்களது பங்கு கணிசமாக இருந்தது. இராக்கிலும் பல்வேறு சிறுநகரங்களை வென்றெடுத்திருக்கிறார்கள். இந்தக் கட்டுரை எழுதும்போது பாக்தாத்தை நெருங்கியிருந்தார்கள். முதல்கட்ட வெற்றியை ருசித்தபின் சிரியா மற்றும் இராக்கில் இதுவரை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு கைப்பற்றியிருக்கும் பகுதிகளை தனி நாடாக இந்த அமைப்பு அறிவித்திருக்கிறது. இந்த நாட்டுக்கு ‘இஸ்லாமிய தேசம்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். இதற்கு கலிபாவாக (மன்னராக) அபுதுவா இருப்பார் என்று அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். இனி ஐஎஸ்ஐஎஸ் என்ற பெயரில் இயங்கப்போவதில்லை என்றும் இஸ்லாமிய தேசம் என்னும் பெயரில் இயங்குவோம் என்றும் அறிவித்திருக்கிறார்.
உருவாகியிருக்கும் புதிய இஸ்லாமிய தேசத்தில் உலகெங்கும் வாழும் முஸ்லிம்கள் வந்து குடியேறவேண்டும் என்று கலிபா அழைப்பு விடுத்துள்ளார். நீதிபதிகள், மருத்துவர்கள்,பொறியாளர்கள், ராணுவ மற்றும் நிர்வாகத் திறமை கொண்டவர்கள் இந்தப் புதிய இஸ்லாமிய தேசத்துக்கு வரவேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.
சிரியா, சிரியர்களுக்கு மட்டுமானதல்ல. இராக், இராக்கியர்களுக்கு மட்டுமானதல்ல. முஸ்லிம் மக்களே உங்கள் நாட்டுக்கு விரைந்து வாருங்கள். அல்லாஹ் காட்டிய வழியில் நமது புனிதப் போரை நடத்துவதைத் தவிர இந்தப் புனிதமான ரமலான் மாதத்தில் செய்யக்கூடிய புனிதமான பணி வேறு எதுவுமே இருக்கமுடியாது. எனவே இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நமது முன்னோர்களின் வழியில் செல்வோம்!’
நிதி எங்கிருந்து வருகிறது?
அமெரிக்க உளவு நிறுவனங்கள் மண்டையை உடைத்துக்கொண்டிருக்கும் கேள்வி இது. முன்னாள் அதிபர் சதாமின் ரகசிய சொத்துக்கள் இவர் வசம் வந்திருக்குமோ என்ற சந்தேகமும் எழுப்பப்பட்டிருக்கிறது. கடத்தல் வேலைகளில் ஈடுபட்டு நிதி திரட்டியதாக அமெரிக்கா சந்தேகப்படுகிறது. அல் காயிதாவுக்கு முன்பு நிதி கொடுத்துக் கொண்டிருந்த புரவலர்கள் இப்போது இந்த அமைப்புக்கு உதவுகிறார்களா என்பதையும் ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள்.
தாங்கள் கைப்பற்றும் நகரங்களில் இருக்கும் செல்வங்களை அப்படியே சூறையாடும் பழங்கால ராணுவ பாணியை இந்த அமைப்பு பின்பற்றுகிறது. சமீபத்தில் இராக்கின் மொசூல் நகரை கைப்பற்றியபோது, அங்கிருந்த வங்கியை சூறையாடியதன்மூலம் மட்டும் சுமார் நானூறு மில்லியன் டாலர் கொள்ளையடித்திருக்கிறார்கள். ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு இப்போது இரண்டு பில்லியன் டாலர் சொத்து மதிப்பு இருக்கலாம் என்பது அமெரிக்க சிஐஏவின் மதிப்பீடு.
விளைவுகள் என்ன?
இஸ்லாம் மதத்தினரின் இரு பிரிவுகளுக்கிடையே பெரும் பிளவு ஏற்படும் அபாயம் இருக்கிறது. இராக்கில் முதலில் தாக்கப்பட்டவை வழிபாட்டுத்தலங்கள்தாம். வடக்கு இராக் பகுதியில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், ஷியா பிரிவு மசூதிகளையும் வழிபாட்டுத் தர்காக்களையும் இடித்து வருகின்றனர். புல்டோசர் மற்றும் வெடி மருந்துகளை வைத்து இவற்றைத் தகர்த்தெறிந்த படங்கள் வெளியாகியிருக்கின்றன. வடக்கு மாகாணமான நினேவெஹ் பகுதியில் உள்ள மொசூல், டல் அஃபர் ஆகிய நகரங்களில் இத்தகைய வழிபாட்டிடங்கள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. இந்த மதவெறிப்போக்கு மற்ற இஸ்லாமிய நாடுகளுக்கும் பரவும் அபாயம் உள்ளது. அவ்வாறு நேர்ந்தால் அதனால உலக அமைதி பாதிக்கப்படும் அபாயமும் அதிகம்.
தீவிரவாதிகள் ஒடுக்கப்படாவிட்டால் இராக் இரண்டாக உடையும் அபாயமும் இருப்பதைப் பலரும் சுட்டிக்காட்டுகிறார்கள். இந்த நிலை இராக்குக்கு ஏற்பட்டதற்கு அமெரிக்கா ஒரு முக்கியக் காரணம் என்பதை மறுக்கமுடியாது. நிலைமை கைமீறி சென்றுவிட்ட நிலையில் தற்சமயம் அமெரிக்காவும் நேச நாடுகளும் இந்தப் பிரச்னையில் தலையிடத் தயங்குகின்றன. இராக்கிலிருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுவோம் என்ற அறிவிப்புடன் தேர்தலைச் சந்தித்த பராக் ஒபாமா இனி போர் எதுவும் நிகழந்தால் அமெரிக்கா தலையிடாது என்று அறிவித்திருக்கிறார். ஆனால் தன்னை உலக போலிஸாக அழைத்துக்கொள்ளும் அமெரிக்காவால் சும்மாயிருக்கமுடியுமா? முடியாது, இராக்கின் நிரந்தரப் பகையாளியான இரான் உதவியுடன் இன்னொரு போரை அமெரிக்கா உருவாக்கும் என்று சில ஐரோப்பியப் பத்திரிகைகள் எழுத ஆரம்பித்திருக்கின்றன.
இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?
இராக்கில் தீவிரவாதத் தாக்குதல்களால் அரசு நிர்வாகம் அடியோடு சீர்குலைத்துவிட்டது. நிவாரணப் பணிகளைக்கூட மேற்கொள்ளமுடியவில்லை. அகதிகள் நிலைமை பரிதாபகரமானதாக உள்ளது. இராக்கின் உள்நாட்டுப் போரால் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. கச்சா எண்ணெய் இறக்குமதியை நம்பியுள்ள நமது பொருளாதாரத்தை இது நிச்சயம் பாதிக்கும். பெட்ரோல் விலையேற்றம் நேரடியாகப் பொதுமக்களைப் பாதிக்கும். உள்நாட்டுப் போரால் பல லட்சம் பேர் சொந்த நாட்டிலேயே அகதிகளாகி தவிக்கின்றனர். அங்கு வேலை செய்யும் இந்தியர்கள் நிலைமை இன்னும் மோசம். ஏராளமான இந்தியர்கள் இராக்கில் இன்னமும் உள்ளனர். அவர்களில் பலர் தனியார் நிறுவனங்களில் ஒப்பந்தத்தின்பேரில் வேலைசெய்பவர்கள். எந்த நிமிடமும் சேமிப்புகள் பறிக்கப்பட்டு அகதிகளாக அவர்கள் வெளியேறலாம். இப்போதே பலர் வெளியேறிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
இந்திய முஸ்லிம் இளைஞர்கள் இந்த ஜிகாதியில் பங்கு கொள்ள விசாவுக்கு விண்ணப்பித்திருப்பது அபாயத்தின் அறிகுறி. இந்தியா தங்கள் பக்கம் இருக்கிறது என்று உலகை நம்பவைக்க ஐஎஸ்ஐஎஸ் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு இது இடமளிக்கும். உலகின் மிக ஆபத்தான மனிதராக அபுதுவாவை மேற்கத்திய ஊடகங்கள் அடையாளம் காட்டுகின்றன. வீரமும் அறிவும் ஒருங்கே அமைந்திருக்கும் தீவீரவாதத் தலைவர் என்பதால் அமெரிக்கா இவரை இன்னுமொரு பின்லேடனாகவே பார்க்கிறது. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு இந்தியாவிலிருக்கும் இஸ்லாமியர்களை அவர்களுடைய ஆதரவாளர்களாகவே பார்க்கிறது. இந்திய அரசின் மென்மையான போக்கையும் இவர்கள் சாதகமாகவே பார்க்கிறார்கள். எனவே ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த இந்திய அரசு தவறினால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியாவின் மிகப்பெரிய பிரச்னையாக இது வளர்ந்துவிடக்கூடும்.
*****
  • 2003ல் அமெரிக்காவும் தோழமை நாடுகளும் இராக்கை ஆக்கிரமித்த அதே வேகத்தில் இந்த இயக்கம் பாக்தாத்தை நெருங்கிவந்துகொண்டிருக்கிறது.
  • ஐஎஸ்ஐஎஸ் அல் காயிதாவைவிடவும் ஆபத்தானது என்று சிலர் கருதுகின்றனர். ஆப்பிரிக்க நாடுகளில் இயங்கிவந்த பொகோ ஹரம் போன்ற உள்ளூர் தீவிரவாதக் குழுக்களுடன்தான் இந்த இயக்கத்தை ஒப்பிடமுடியும் என்றும் அவர்கள் சொல்கின்றனர்.
  • ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தை முறியடிக்கும் திறன் மட்டுமல்ல எதிர்த்து நின்று போவராடும் திறனும் பலமும்கூட இராக் ராணுவத்திடம் இல்லை. பின்வாங்கிச்செல்லும் இராக் ராணுவத்தினரிடம் இருந்து ஆயுதங்களைக் கைப்பற்றி தன் பலத்தை இந்த இயக்கம் பெருக்கிகொண்டுள்ளது.
  • ஐஎஸ்ஐஎஸ் இதுவரை ஈட்டியுள்ள வெற்றிக்கு முதன்மையான காரணம் செயலிழந்தும் அதைவிட அச்சமூட்டும்வகையில் நம்பிக்கையிழந்தும் காணப்படும் இராக் ராணுவம்தான்.
  • உள்ளூர் மக்களின் நம்பிக்கையை வென்றெடுத்தது இந்த இயக்கத்தின் இன்னொரு முக்கிய பலம்.
  • பலரும் நினைப்பதைப் போல் ஐஎஸ்ஐஎஸ் இஸ்ரேல்மீது தாக்குதல் தொடுக்காது என்று சிலர் உறுதியாக மறுக்கின்றனர். சன்னி இஸ்லாமிய சமூகத்தின் ஏகப் பிரதிநிதியாக மாறுவது மட்டும்தான் இந்த இயக்கத்தின் நோக்கம், இஸ்ரேலுடன் மோதுவது அல்ல என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.
ரமணன் | August 18, 2014 at 12:21 pm | Categories: அரசியல்உலகம் | URL:http://wp.me/p2eZn6-155
Comment   See all comments

14/8/14

சத்தமில்லாமல் ஒரு சாதனை



இமயமலையின் மடியில் திரிகூட மலைச்சரிவிவில் 5200 அடி உயரத்தில் ஜம்முவிலிருந்து 50 கீமீ தொலைவில் இருக்கிறது வைஷ்ணோதேவி கோவில். ஆண்டுக்கு  50 லட்சம் பக்கதர்களை ஈர்க்கும் இந்த கோவிலுக்கு   செல்ல ரயில் வசதி கடந்த மாதம் தான் துவக்க பட்டிருக்கிறது.  அருகில் இருக்கும் கத்ரா  என்ற நகரத்தின் ரயில் நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். பிரதமர் திறந்துவைக்கும் அளவுக்கு இந்த கிராம ஸ்டேஷனுக்கு என்ன முக்கியத்துவம்.?

 ஜம்மூ காஷமீர பகுதிகளில் ரயில் பாதைகள் என்பது நாட்டின் விடுதலைக்கு முன்பிருந்தே பேசபட்டக்கொண்டிருக்கும் ஒரு விஷயம். ஆனால் நிதி நிலைமை,அரசியல், தீவரவாதிகள் அதீதமானபனி, குளிர் போன்ற பல பிரச்னைகளினால் எந்த முன்னேற்றமும் காணமலிருந்தது.   கடந்த சில ஆண்டுகளாக மிக அமைதியாக  கடும் சவாலான இந்த பணிகளை, உலக சாதனைகளை படைக்கும்  அளவில் செய்து கொண்டிருக்கிறது இந்திய ரயில்வேயின் பொறியியல் துறை. ஜம்முவிலிருந்து கத்ராவின் அருகிலுள்ள  ராணுவ கேந்திர
மான உதம்பூர் என்ற நகர் வரை சில ஆண்டுகளுக்கு முன்னரே ரயில் பாதைகள் அமைக்கபட்டுவிட்டாலும் அங்கிருந்து கத்ரா வரையான் 26 கீமி  தூர பாதை போட 4 ஆண்டுகளாகின.  காரணம் இந்த இடைப்பட்ட தூரத்திலிருக்கும் மலைகளும் கணவாய்களும்.  7 பெரிய, 29 சிறிய பாலங்கள் ஒரு 11 கீமி தூரத்திற்கு ஒரேகுகைப்பாதை (டனல்) 22 வளைவுகள், மலைகளுக்கிடையே குறுகிய இடைவெளி (ஒரு இடத்தில் 25 அடிகள் மட்டுமே)  என சவால்கள் நிறைந்த பணி இது. நிச்சியம் முடியாது என வெளிநாட்டு நிற்வனங்கள் கூட ஏற்க தயங்கிய பணி இது.  மொத்த செலவு இந்த 26 கீமிக்கு 1130 கோடி ரூபாய்கள்.

 இந்திய ரயிவேயின் சவாலான பணி இதோடு நிற்கவில்லை. பாராமுல்லா என்ற ஜம்மூவின் மற்றொரு எல்லை வரை  தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.  இந்த பாதையில்   இரண்டு உயர்ந்த மலைகளுக்கு இடையே சென்னாப் என்ற நதி ஒடுகிறது 4000 அடி அகலத்தில் இருக்கும் இந்த நதியின் இருப்புறமும் இருக்கும் இரண்டு மலைகளை இணைத்து ஒரு பாலம் அமைக்கிறார்கள். நதியின் நீர் மட்டத்திலிருந்து  1200 அடி உயரத்தில் நிறுவபட்டுக்கொண்டிருக்கும் இந்த பாலம் இரண்டு மலைகளையும்  இணைக்கும் ஒரு பிரமாண்டமான வில் போன்ற அமைப்பின் மீது  ரயில் பாதை அமையப்போகிறது. முடிந்த பின் இதுதான் உலகின் மிக உயரமான இடத்தில் இருக்கும் ரயில் பாதையாக இருக்கும். பாலம் துவங்கும் இடத்திலும் முடியும் இடத்திலும் மலையை குடைந்த குகை பாதைகள்.

 குதுப்மினாரை விட 5 மடங்கும், பாரிஸ் ஈஃபில் டவரைவிடவும் அதிக உயரத்தில் இருக்கும். இந்த இடத்தில் பாலமும் அதில் ரயில் பயணமும் பாதுகாப்பாக இருக்குமா என்பது குறித்து  ஐஐடி, ராணுவ ஆராய்ச்சிமையங்கள், தனியார் நிறுவனங்கள் 6 ஆண்டுகள் ஆராய்ந்திருக்கிறார்கள். அந்த கணவாயில் காற்றுகாலங்களில் பயங்கரமான காற்று வீசும். அதனால் காற்றின் வேகத்தை கண்காணிக்கும் கம்யூட்டர்கள் கருவிகள் பொருத்தபட்டிருக்கும் இந்த பாலம் அம்மாதிரி சமயங்களில் ரயிலை செல்ல அனுமதிக்காது.  26000 டன் ஸ்டீல் பயன்படுத்தி கட்டபடும் இந்த பாலத்திற்கு எளிதில் பெயிண்ட் அடிக்கமுடியாதால் 35 வருடத்திற்கு நிற்கும் ஒரு புதுவகை பெயிண்டை பயன்படுத்தபோகிறார்கள்.
உலக பொறியிற்சாதனைகளைல் ஒன்றாக நிறக் போகிற இந்த பாலம் முழுக்கமுழுக்க இந்திய தொழிநுட்பத்தினால் ஆனது.  ஆலோசனைகள் அன்னிய நிறுவனங்களிடமிருந்து பெறபட்டாலும் கட்டுமானம், நிர்வாகம் கொங்கன் ரெயில்வேயினுடையது. பல மலைகள குடைந்து ரயில் பாதைகள் அமைத்த அனுபவம் மிக்கவர்கள்.
பல ஆயிரம்கோடிகள் செலவில் உருவாகும் இந்த பாலம் எல்லைபகுதியில், தீவரவாதிஅளின் அச்சுறுத்தல்கள் நிறைந்த பகுதியில் இருப்பாதால் தொடர்ந்து  இந்திய ராணுவத்தின் கண்காணிப்பில் இருக்கும்.



அடுத்த முறை ரயில் பயணத்தின் போது வசதி குறைவுகள் பிரச்சனைகளை பற்றி விமர்சிக்கும் முன் ஒரு கணம்  நமது ரயில்வேயின் இந்த சாதனையையும், கடுமையாக உழைக்கும் பொரியிலாளர்களையும்  நினைத்து பாருங்கள்  நன்றி   சொல்லுங்கள்.

10/08/14 கல்கியிலிருந்து...


10/8/14

ஒரு கொடி பிறக்கிறது


உன்னதமான தியாகங்களுக்கும்,ஆயுதமேந்தாத  புரட்சிக்கும் பின்னர் கிடைத்த நமது சுதந்திரத்தின் முதல் அடையாள சின்னம் நமது தேசீயக்கொடி.இந்த கொடியின் பாரமபரியத்தை கெளரவத்தையும் பாதுகாக்க  தனி சட்டமும். கையாள விதிமுறைகளும் உள்ளன. தேசீயகொடி அரசு அலுவலகங்களில் தினமும், குடியரசு, சுதந்திர தினங்களில் மட்டுமே தனியார் இல்லங்களில்  பறக்கவிடப்டலாம் என்ப்து விதி.  தனியாரும் தங்கள் இல்லத்தில் தினமும் ஏற்றும் வகையில் இதை மாற்றி அமைக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் 2002ல் ஜிண்டால் என்பவர் போட்ட பொதுநல வழக்கில் வழங்கபட்ட தீர்ப்பின் படி இப்போது வீடுகளிலும் தேசியகொடி எற்றலாம். ஆனால் ஏற்றும்முறை, நேரம், ஏற்றி இறக்கும் நேரத்தில் கொடிக்கு கொடுக்க வேண்டிய மரியாதைகளின் விதிமுறைகளில் மாற்றமில்லை. .
 தேசியகொடி கதர் துணியில் அல்லது கதர் பட்டுதுணியில் மட்டுமே தயாரிக்கபடவேண்டும். பேப்பர், பிளாஸ்டிக், நைலான்களில் தயாரிக்கப்ட்டிருந்தால் அது சட்டபடி தவறு. மூன்றாண்டு சிறையும் அபராதமும் தண்டனை. தேசீயக்கொடி நிர்ணயக்கப்பட்ட அளவுகளில் அனுமதி பெற்றவர்கள் மட்டும்  தான தயாரிக்கலாம். மற்றவர்கள் தயாரித்தால் அது குற்றம்.  அனுமதிக்கபட்ட 9 அளவுகளில்தான் கொடி தயாரிக்கபட வேண்டும். சட்டைபையில் குத்தி கொள்வதிலிருந்து, பாராளுமன்றத்தில் பறக்கும் மிகப்பெரிய கொடி வரை அளவுகள் நிர்ணயக்கபட்டிருக்கிறது. அரசு மரியாதையாக அஞ்சலிக்காக  மரணத்திற்கு பின் சவப்பெபட்டியின் மீது போற்றபடும் கொடியின் அளவுகள் கூட சட்டத்தில்சொல்லபட்டிருக்கிறது. இந்த வகைகொடிகள் கம்பங்களில் ஏற்றமுடியாதபடி வடிவமைக்கப்ட்டிருக்கும், கொடியின் அளவுகள் மட்டுமில்லை  பயன்படுத்த வேண்டிய கதர் துணியின் தரமும்  ஒரு சதுர அங்குலத்தில் எவ்வளவு நூல்இழைகள் என்பதும் கூட நிர்ணயக்கபட்டிருக்கிறது. அனுமதி பெற்றிருக்கும் நிறுவனம் தேர்ந்தெடுத்த கதர் துணியை பிரோ ஆப் இந்தியன் ஸ்டாண்ட்ஸ் அமைப்புக்கு அனுப்பி ஒப்புதல் பெறவேண்டும். ஒப்புதல் கிடைத்தபின் அதில் வண்ணம் ஏற்றி கொடியாக தைத்த பின்னர் மீண்டும் ஓப்புதலுக்கு அனுப்பவேண்டும். தையலின் வகைகள் கூட நிர்ணயக்கபட்டிருகிறது.  கொடியின் அளவு என்பது ஏற்றுவதற்கு வசதியாக கயிறு நுழைக்க உருவாக்கபட்டிருக்கும் பகுதியை சேர்க்காமல் கணக்கிடப்படும். கயிறு கோர்க்கும் பகுதிக்கு கொடியின் வண்ணங்களிலியே சற்று கனமான வேறு வகை கதர் துணி பயன்படுத்தபடவேண்டும். கதர்,மற்றும் கிராம வாரிய கமிஷனின் கர்நாடக மாநில பிரிவு தான் மத்திய அரசால் கொடி தயாரிக்க அனுமதிக்கபட்டிருக்கும் ஒரே நிறுவனம். தர கட்டுபாடுகளினாலும் ஆண்டு முழுவதும்  விற்பனையில்லாதாலும் கொடிகளின் விலை அதிகமாகியிருக்கிறது. குறைந்த பட்ச விலை 100ருபாய். கடந்த ஆண்டு தேசியக்கொடிகளின் விற்பனை இரண்டு மடங்காக பெருகியிருந்தது உண்மையென்றாலும் சந்தோஷபடமுடியவில்லை. காரணம் விற்றது கதர் கொடிகள் இல்லை சீனாவிலிருந்து திருட்டு தனமாக  சந்தைக்கு வந்த பளபளபான “பட்டு” “கொடிகள்.தான்.  ஏன்?  விலை 30 ரூபாய் தான்.!
சொந்த தேசத்தின் கொடியையே திருட்டு மார்கெட்டில் அன்னிய நாட்டு பொருளாக வாங்குவர்களை நினைத்து வருந்துவதா? அல்லது இவ்வளவு சட்டதிட்டங்கள் இருந்தும் கண்காணிக்காத அதிகாரிகளை நினைத்து வருந்துவதாஎன்று புரியவில்லை.