30/4/15

நிலம்- சட்டமும் அரசியலும்



நிலம் கைக்கப்படுத்தும் அவசர சட்டம் அவசியமா?
இந்திய பாராளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக ஓர் அவசர சட்டம் அறிவிக்கப்பட்டு, அது பாராளுமன்றத்தில் மக்களவையில் நிறைவேறி  ஆனால் மாநிலங்களவையில்  நிறைவேறாமல் காலாவதியாகும் கடைசிகட்டத்தில் மீண்டும் ஒரு முறை அவசர சட்டமாக பிரகடனபடுத்தபட்டிருக்கிறது.  நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டத்தொடர் நடந்துகொண்டிருக்கும்போது இப்படி ஓர் அவசர சட்டத்தை குடியரசுத்தலைவர் அறிவிக்க முடியாது. என்பதற்காகவே தொடரின் இடையில் மாநிலங்களின் அவை கூட்டத்தொடரை மட்டும் முடிந்ததாக அறிவித்து விட்டு அவசர சட்டம் மீண்டும் அறிவிக்கப் பட்டிருக்கிறது. இப்படி அவசர அவசரமாக அறிவிக்கப் பட்ட சட்டம் 
-நிலம் கைகபடுத்தும் அவசர சட்டம். 
இது என்ன சட்டம்? 
நிலம் என்பது மக்களின் உணர்வுகள் சார்ந்த ஒரு விஷயம் என்பதை உலக சரித்திரம் நமக்குச் சொல்லுகிறது. காலம் காலமாக மன்னர்கள் போரிட்டதும், மக்களாட்சி மலர்ந்த பின்னரும் குடும்பங்கள் நிலத்திற்காக உறவுகளை மறந்து பிளவுபட்டு வழக்காடிக்கொண்டிருப்பதும் இந்திய மண்ணுக்கே உள்ள சில தனிப்பெருமைகளில்  ஒன்று. நிலத்தின் மதிப்பு என்பது இங்கு வெறும் பணத்தினால்மட்டும்  மதிப்பிடப்படுவதில்லை. மக்களின் வாழ்வியல், மொழி, கலாச்சாரம் போன்ற பலவற்றிற்கு நிலம் ஒரு முக்கிய அடிப்படையாக இருக்கிறது. ஒவ்வொரு துண்டு நிலத்துக்குபின்னாலும் . சிலவற்றில் ரத்தம் சிந்தப்பட்டகதைகள் உட்பட ஒரு வரலாறு இருக்கிறது.  இந்த நிலையில் ஆங்கில ஆட்சிக்காலத்தில் அரசின் திட்டங்களுக்கு மக்களின் நிலங்களை  எடுத்துக்கொள்ள 1894ல் ஒரு சட்டத்தை இயற்றியது. இதன்படி அரசு எப்போது வேண்டுமானலும் எங்கு வேண்டுமானாலும் தேவையான அளவு நிலத்தை எடுத்துக்கொள்ளலாம். அதற்கான  நஷ்ட ஈடு அரசாலேயே நிர்ணயக்கபட்டு. தாமதமாகத்தான் கொடுக்கப்படும். என்ற அளவிலிருந்த ஒரு மோசமான சட்டம்.  பிரிட்டிஷ் ஆட்சி கொடுத்துவிட்டுப்போன பல சட்டங்களைப்போல இதையும் சுதந்திர இந்திய அரசு பயன் படுத்திக்கொண்டு வந்தது. மக்களுக்கு தங்கள் உரிமை குறித்த விழிப்புணர்வு இல்லாத காலகட்டம் அது. இந்த துருப்பிடித்த சட்டத்தைக்கொண்டே அரசுபல லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை எடுத்து அதன் திட்டங்களுக்கு பயன் படுத்தியது. ஆங்கில ஆட்சிக்கும்  இதற்கும் உள்ள ஒரே வித்தியாசம். நிலங்கள் எடுக்கபட்டபின்னர் பாதிக்கப்பட்டவர்கள் வழக்கு தொடர்ந்து அதை தலைமுறைகளை தாண்டியும் போராடுவார்கள்  ஒரு கட்டத்தில் ஒய்ந்து போவார்கள். உதாரணம்.  தமிழகத்தில் நெய்வேலி சுரங்கத்திற்கு எடுக்கப்பட்ட நிலங்களுக்கான நஷ்டஈடு வழக்குகள் இன்னும் கோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது. 
 1894 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட வந்த‌ நிலச்சட்டத்தைத் தான் இந்திய அரசு  2007 வரை பயன்படுத்தி வந்தது. எப்பொழுதெல்லாம் நிலம் கையகப்படுத்துதலில் பிரச்சனை ஏற்படுகின்றதோ அப்பொழுதெல்லாம் அதற்குத் தேவையான சிறு மாற்றங்களை மட்டும் அந்தச் சட்டத்தில் அரசு  செய்து கொண்டிருந்தது.  தொண்ணூறுகள் வரை இதில் பெரிய அளவில் பிரச்சனையில்லை, ஏனென்றால் அரசு மட்டுமே பெரிய அளவில் நிறுவனங்களைக் கொண்டிருந்தது. அரசுக்கு மட்டுமே பெரிய அளவில் நிலத்தேவை இருந்தது. இந்தச் சட்டத்தின் மிகமுக்கியமான பிரச்சனை நிலத்திற்குண்டான மதிப்பை விட மிகக்குறைவான தொகை வழங்கப்பட்டது, நிலத்தை இழப்பவர்களுக்கு உரிய மறு வாழ்வு பற்றியோ, மீள் குடியமர்வு பற்றியோ இந்தச் சட்டம் பேசவேயில்லை என்பதே. அதனால் நிலங்களை மட்டுமே நம்பி வாழ்ந்த பழங்குடி, பட்டியலின்‌ மக்களும் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். அவர்கள் தங்கள் வாழ்விடங்களிலிருந்து பிடுங்கி வெளியேற்றப்பட்டனர். உள்நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் மக்களில் இவர்களின் எண்ணிக்கையே அதிகம். சமூகத்தில் விளிம்பு நிலையில் இருக்கும் இம்மக்களின் குரல் ஆளும் அதிகார வர்க்கத்திற்கு எட்டவேயில்லை.

1990ஆம் ஆண்டு முதல் இந்தியா தனியார்மயத்தைக் கொள்கையாக ஏற்றுக்கொண்டு செயல்படுத்தத் தொடங்கியது. இதற்குப் பின்னர் தனியாரும் நிலம் கையகப்படுத்தலில் கலந்து கொண்டதாலும், அரசு அவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்ததாலும் நிலங்களை வைத்திருந்த மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் அதிகரித்தன. இப்பொழுது சமூகத்தின் நடுத்தர வர்க்கமும் பாதிக்கப்பட்டது. நிலம் கையகப்படுத்துதலினால் பல இடங்களில் மோதல்கள் வெடித்தன. நர்மதா அணைக்கு எதிரான போராட்டம், நந்திகிராம், சிங்கூர், கலிங்கநகர், நியாம்கிரி போராட்டங்கள் எல்லாம் இது குறித்து ஒரு தெளிவான சட்டம் அவசியம் என்பதை அரசுக்கு உணர்த்தின.

. இந்தப்  போராட்டங்களின் விளைவாக‌ அன்றிருந்த‌ காங்கிரசு தலைமையிலான அரசிற்குப் புதிய சட்டத்தை வடிவமைக்க வேண்டிய தேவையேற்பட்டது.
இதற்காக 2007 ஆம் ஆண்டும், 2009ஆம் ஆண்டும் இரண்டு பாராளுமன்ற கூட்டுக்குழுவை உருவாக்கியது, இந்த இரண்டு குழுவிற்கும் தலைமை வகித்தது பா.ஜ.கவினரே – முதல் குழுவிற்குக் கல்யாண சிங்கும், இரண்டாவது குழுவிற்குச் சுமித்ரா மகாஜனும் (இன்றைய பாராளுமன்ற சபாநாயகர்) தலைமை வகித்தனர். 2013 ஆம் ஆண்டு இந்தச் சட்டம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொழுது அதை ஆதரித்துப் பா.ஜ.க வாக்களித்தது. இந்தச் சட்டம் வெறும் நிலத்தைக் கையகப்படுத்துதல் என்பதை மட்டும் பார்க்காமல், நிலத்தை விற்றவருக்கான மறு வாழ்வு, மீள் குடியமர்வு, அந்த நிலத்தை நம்பி பணிபுரியும் தொழிலாளர்களுக்கான இழப்பீடு, நிலம் கையகப்படுத்துதலினால் ஏற்படும் சமூகப் பாதிப்பு என விரிவாகப் பேசியது, மேலும் நிலத்திற்கான தொகையும் முன்பு போல் இல்லாமல் கிராமப்புற பகுதிகளில் சந்தை மதிப்பை விட நான்கு மடங்காக‌வும், நகர்ப்புற பகுதிகளில் சந்தை மதிப்பை விட இரண்டு மடங்கும் தர வேண்டும் என நிர்ணயத்துள்ளத்து. அன்று இந்த சட்டத்தைவடிவமைத்தில் தலைமை தாங்கி, ஆதரவளித்த பா.ஜ.க இன்று ஆட்சிக்கு வந்தவுடன் செய்த முதல் வேலை-
அந்தச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வந்து நீர்த்துப் போகச் செய்திருப்பது .இது இந்தத் தேசம் அடிக்கடி சந்திக்கும் அரசியல் ஆச்சரியங்களில் ஒன்றுதான் என்றாலும்    இந்தத் திருத்தங்களுக்கு அரசியல் காரணங்கள் கற்பிக்கப்பட்டு காங்கிரஸும் மற்ற கட்சிகளும் எதிர்க்கின்றன. என்னவானாலும் இதை சட்டமாக விடமாட்டோம் என சவால் விடுகின்றன.

 சட்டவடிவில்/ திருத்தங்களில் அப்படி என்ன பிரச்சனை?
இந்தச் சட்டப்படி அரசு  அரசுத் திட்டங்களுக்காகவும் , தனியார் நிறுவனங்களுக்காகவும் நிலத்தை மக்களிடம் இருந்து  அரசு கையகப்படுத்தலாம்.
இந்தச் சட்டம் மூலம் என்ன காரணங்களுக்காக நிலத்தைக் கையகப்படுத்தலாம் என ஒரு பெரிய பட்டியல் போட்டுள்ளது. இந்தப் பட்டியலில் அடங்காதது எதுவுமே இல்லை. இது போதாது என்று அரசு நினைத்தால் இந்தப் பட்டியலில் எப்போது வேண்டுமானாலும் எதையும் சேர்க்கலாம்  என்ற வாசகத்தை அரசு சேர்த்துள்ளது. சுருக்கமாகச் சொல்வதென்றால் மக்களின் நிலங்களை அரசு விரும்புபோது எளிதாக எடுத்துக் கொள்ளமுடியும் என்பதுதான்.
2013 ஆம் ஆண்டுச் சட்டம் சில திட்டங்களுக்கு 70 விழுக்காடு, சில திட்டங்களுக்கு 80 விழுக்காடு நில உரிமையாளர்களின் ஒப்புதல் கட்டாயம் வேண்டும் எனச் சொல்கின்றது, இன்று பா.ஜ.க அரசு மேற்கொண்டுள்ள‌ திருத்தத்தின் மூலம் நில உரிமையாளர்களின் ஒப்புதல் இல்லாமலேயே நிலங்களை அவர்களிடமிருந்து வாங்க முடியும்.


2013ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சட்டத்தின் கீழ் ”பெரும்பான்மைத் திட்டங்கள்” என்று சொல்லப்பட்டிருந்தது.. ஆனால் இன்று பா.ஜ.க அரசு மேற்கொண்டுள்ள திருத்தத்தில் பின்வரும் திட்டங்களுக்கு 
“சமூகப் பாதிப்பு ஆய்வு, விசாரணை” (Social Impact Assessment, Investigation) , “உணவு பாதுகாப்பிற்கான சிறப்பு ஏற்பாடு”, 
“நில உரிமையாளர்களிடம் இருந்து ஒப்புதல் பெறுதல்” (Consent from Land Owners) போன்ற பிரிவுகளிலிருந்து விலக்க‌ளிக்கப்பட்டுள்ளது. 

அதாவது கீழ்கண்ட இந்தத் திட்டங்களுக்கு ஒப்புதல்பெற,மக்கள்விருப்பங்களை அறிய, விளைநிலங்களை எடுக்க அனுமதி தேவையில்லை. 

அ) தேசத்தின் பாதுகாப்புத் தொடர்பான திட்டங்களுக்கு
ஆ) கிராமப்புற கட்டமைப்புத் தொடர்பான திட்டங்களுக்கு (மின்னுற்பத்தி திட்டங்களையும் சேர்த்து)
இ) கட்டுப்படியாகும் வீட்டுமனை திட்டங்கள், ஏழை மக்களுக்கான வீட்டுமனைத்திட்டங்களுக்கு
ஈ) தொழிற்பாதைகள் தொடர்பான திட்டங்களுக்கு (எ.கா – சென்னையிலிருந்து பெங்களூர் வரை ஒரு தொழிற்பாதையாகும்)
உ) கட்டுமானப்பணிகள் தொடர்பான திட்டங்களுக்கு, இதில் அரசு-தனியார் கூட்டுத்திட்டங்களும் அடக்கம்.
இந்தத் திட்டங்களின் படி வகைப்படித்தினால் இந்தியா முழுவதும் நடைபெற்று வரும் பணிகளில் குறைந்த பட்சம் 90 விழுக்காடு பணிகளை இந்த ஐந்து திட்டங்களில் ஒன்றாக வகைப்படுத்தமுடியும். இதன் மூலம் இந்த 90 விழுக்காடு திட்டங்களுக்கான நிலக்கையகப்படுத்துதல் சட்டத்தின் முக்கியமான பிரிவுகளிலிருந்து விழக்களிக்கப்படுகின்றது.
இதுமட்டுமின்றி மேலும் சில திருத்தங்களையும் புதிய சட்டம் மூலம் பா.ஜ.க அரசு செய்துள்ளது. முந்தைய சட்டத்தில் அரசு அதிகாரிகள் தவறிழைத்தால் அந்தத் துறையின் தலைமை நிர்வாகி தண்டிக்கப்படுவார் என இருந்தது இன்று அதை மாற்றி அரசு அதிகாரிகள் தவறிழைத்தால் அந்தந்த அரசின் – மத்திய,மாநில அரசுகளின் அனுமதியில்லாமல் வழக்கே பதியக்கூடாது எனச் சொல்கிறது  திருத்தம் 
இதில் மிக முக்கியமானது விட்டுமனைத்திட்டங்கள்/கட்டுமானப்பணிகள். இதில் அரசுடன் தனியார்  பன்னாட்டு நிறுவனங்கள் இணைந்து(private and  public participation) பெரிய அடுக்குமாடிகளும் வீடுகளும் உருவாக்கும் திட்டங்களும் அடங்கும்.
இதில் பெரும் முதலாளிகளுக்கு ஏழைமக்களின் நிலங்களை அரசே வாங்கி கொடுத்துவிடும் அபாயம் இருக்கிறது என்கின்றன எதிர்க்கட்சிகள் 
இல்லை இது நாட்டை வேகமாக வளர்ச்சிபாதைக்கு இட்டுச்செல்லும் திட்டம் என்கிறது அரசு. 

அவசர சட்டத்தை நடைமுறை சட்டமாக தீவிரமாக இருக்கிறது மத்திய அரசு. மிக மிக அரிதாகச் செய்யக்கூடிய பாரளாமன்ற மரபான இரு அவைகளின் ஒருங்கிணைந்த கூட்டத்தை கூட்டி பெரும்பான்மை பலத்தின் மூலம் மசோதாவை நிறைவேற்றவும் கூட தயங்காது ஆளும் கட்சி என்ற நிலை  இப்போது உருவாகியிருகிறது. 
 ஆனால்  இத்தகைய சட்டங்கள்  நடைமுறையில் இல்லாவிட்டாலும் மாநில அரசுகள் அவர்கள் வசம் உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி நிலங்களைக் கையகப்படுத்தி கொண்டும் பன்னாட்டு நிறுவனங்களை பயன் படுத்த அனுமதித்துக் கொண்டும் இருக்கிறார்கள் என்பது தான் உண்மை.   இதில் முன்னணியிலிருப்பது தமிழ் நாடு என்பது ஓர் ஆச்சரியமான உண்மை.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் கார தொழிற்சாலை அமைக்க 2300 ஏக்கர், நெல்லை மாவட்டம் சங்கரன்கோயில் அருகே சோலார் திட்டத்திற்காக 1,500 ஏக்கர் என விளைநிலங்களைக் கையகப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது. அதுவும் நீர் ஆதாரத்தோடு விளங்கும் விளைநிலங்களை  அரசு கையகப்படுத்தி பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்கிக்கொண்டிருக்கிறது.

 கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கு 2300 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்படுகிறது.  இதற்கான பணிகளை வருவாய்த்துறையினர் தொடங்கியுள்ளனர்.  கிருஷ்ணகிரி மாவட்டம்  ஓசூர் தாலுகாவில் சிப்காட் சார்பில் புதிய உற்பத்தி மண்டலம் அமைக்க( நியூ மேனுபேக்சரிங் ஜோன்)  தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக 2012 நவம்பர் 21ம்  தேதி தொழில்துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மொத்தம் 2,300 ஏக்கர் நிலம் கண்டறியும் பணி மேற்கொள்ளப்பட்டது. முதல் கட்டமாக சூளகிரி  ஒன்றியம் அட்டக்குறுக்கி, தோரிப்பள்ளி, நல்லகானகொத்தப்பள்ளி உள்ளிட்ட பஞ்சாயத்துகளில் 834 ஏக்கர் விளைநிலத்தைக் கையகப்படுத்த வருவாய்த்துறை மூலம்  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. 

.* பெருந்துறை பகுதியில் 72 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டு,300கோடி மூலதனத்தில்  கோக நிறுவனம் தனது ஆலையை அமைத்து காவிரி ஆற்றில் தினமும் 35 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுத்து குளிர்பானமும், குடிநீரும் தயாரிக்க உள்ளது.  இந்தியாவில் கோக நிறுவனம் 40 இடங்களில் தொழிற்சாலைகள் அமைத்திருக்கின்றன. அவற்றில் பலவற்றில் சுழலை மாசு படுத்தியதாக வழக்குகள் போராட்டங்களை சந்தித்துக்கொண்டிருக்கின்றன. 

கேரளாவின் பிளாச்சிமடா பகுதி மக்கள் 10 ஆண்டுகளாகத் தொடர்ந்து போராட்டம் நடத்தி கோக ஆலை நிர்வாகத்தை அங்கிருந்து  அகற்ற கேரள மாநில அரசு உத்தரவிட்டிருக்கிறது  அந்தத் தொழிற்சாலை தமிழகத்திற்கு இடம் பெயர்கிறது. அரசு இடம் தந்திருக்கிறது.
ஒருபுறம் மாநிலஅரசுகள் இப்படி நிலங்களைகையகபடுத்திக் கொண்டிருந்தாலும் மத்திய அரசு ஏற்கனவே கையகப்படுத்தியிருக்கும் நிலங்களும், பெரும் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட  நிலங்களிலும் எந்தப் பணியும் நடைபெறவே இல்லை என்பது மற்றொரு முரண். 

 சென்ற ஆண்டு நவம்பர் மாதம் பாரளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தலைமை கணக்காளரின் அறிக்கைப்படி “சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக” (SEZ) கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் 38 விழுக்காடு இன்னும் பயன்படுத்தப்படவேயில்லை என்கிறது. 2006 ஆண்டு அம்பாணி நவி மும்பை சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்காகக் கையகப்படுத்திய 1250 ஏக்கரையும் இன்னும் பயன்படுத்தாமல் அப்படியே வைத்துள்ளார், அதே போல அத்தானிக்கு குறைவான விலைக்கு வழங்கிய வனப்பகுதியும் இன்னும் பயன்படுத்தப்படாமல் உள்ளது. இப்படி நிலங்களை வாங்குவதன் மூலம் வங்கிகளில் கடன் பெற்றுக்கொள்ளும் நிறுவனங்கள், அவற்றைப் பயன்படுத்தாமல் பின்னாளில்  தங்களது விருப்பம் போல பயன்படுத்திக்கொள்ளும் ஆபத்தும் இருக்கிறது.
நாட்டின் 120 கோடி மக்களுக்கு உணவளிக்கும் விவசாயத்துறை உள்நாட்டு உற்பத்தியில் மொத்தம் 14 சதவீதம் மட்டுமே பங்களிக்கிறது.. 60 சதவீத மக்கள் விவசாயத்தால் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். ஆனால் அரசாங்கள் இதில் போதிய அக்கறை செலுத்தாதால் மக்கள் விவசாயத்தை விட்டு வேறு தொழிலுக்கு நகர்ந்துகொண்டிருக்கிறார்கள்.
 தமிழ்நாட்டில்மட்டுமே 9 லட்சம் பேர் விவசாயத்தை விட்டு வெளியேறி விட்டனர். கடந்த 2011ல் தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது கண்டறியப்பட்ட புள்ளி விவரம் இது. தற்போது இந்த எண்ணிக்கை   மேலும்  அதிகரித்திருக்கலாம். இது மிக ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். இந்தியாவின்  உணவுப் பாதுகாப்புக்கு நிரந்த ஆபத்தை ஏற்படுத்தும்.தொழில் வளர்ச்சியை அதிகப்படுத்த இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும், மற்ற மாநிலத்துடன் போட்டி போட்டு வருகின்றது, அதனால் வரும் தொழிற்சாலைகளுக்கு அனைத்து சலுகைகளையும் அவர்களுக்கு அளிக்கின்றன, மாநிலங்களுக்கு அப்படி வரும் பெரும் திட்டங்களுக்கு மாநில அரசு மக்களின் விளை நிலத்தைப் பறித்து தந்து கொண்டிருக்கின்றன.  இந்த நிலையில்  இப்போதைய நடைமுறைகளை  இந்தச் புதியசட்டம் எளிதாக்கிவிடும் என்ற அச்சம் மக்களிடையே வேகமாகப் பரவத்துவங்கியிருக்கிறது.
நிலம் என்பது மக்களின் சொத்து. நிறுவனங்கள் அதை வாங்க விரும்பினாலோ அல்லது அரசு தன்னுடைய திட்டங்களுக்காக வாங்க விரும்பினாலோ முடிந்த அளவு குறைவாக வாங்க வேண்டும். அதுவும் மக்களின் விருப்பம் இருந்தால் மட்டுமே வாங்க வேண்டும் என்பது அரசின் கொள்கையாக இருக்க வேண்டும். அந்த வகையில்தான் நில கையகப்படுத்தும் சட்டங்கள் அமைய வேண்டும்நாட்டின் அனைத்து கட்சிகளும் சமூக அமைப்புகளும் விவசாயிகளுக்கு எதிரான இச் சட்டத்தை  எதிர்த்துக் கொண்டிருக்கும்போது, அதன் நியாய பக்கத்தை அலசி ஆராயமல் பெரும்பான்மை பலத்தின் மூலம்மட்டுமே சட்டங்களை நிறைவேற்ற முயற்சிப்பது நல்லாட்சிக்காக  ஓட்டளித்த மக்களின் மேலுள்ள அக்கறையைக் காட்டவில்லை.
இந்திய அரசியலில்  ஆளும் கட்சியினர் அவசரமாகச் செய்த தவறுகளுக்கு மிகப்பெரிய விலையைக் கொடுத்திருக்கின்றன.
 பிஜெபிக்கு அந்த நிலை ஏற்பட்டுவிடுமோ? 
-------------------------------------------------------------------------------------------------


  • Krishnaswami Cvr great and complete information, thanks
    19 hrs · Unlike · 1
  • Bala Mukundhan Ramanan Vsv அற்புதமான எழுத்து. மிகவும் தெள்ளத் தெளிவாக எழுதியிருக்கிறீர்கள். நிலம் என்பது ஆசாபாசங்களில் முதலிடம் வகிப்பது. எனவே அது தொடர்பான எந்த ஒரு செயலும் தர்க்கங்களுக்கும் வாதங்களுக்கும் நிச்சயம் இடம் கொடுக்கும். இந்த விஷயத்தில் ஆளும் கட்சி மற்றும்...See More
    17 hrs · Unlike · 3
  • Saketh Raman The whole agitation is not by Farmers who own very small cultivable lands. They know, their land is not at risk of being usurped by Govt. Besides, Govt has clearly stated that all requirement of lands will be in a particular order namely, First Govt La...See More
    14 hrs · Unlike · 3
  • Ramamurthy Subrahmanyam Thanks a ton for the nice article which was very lucid&informative Ramanan Vsv. Why don't u post an English translation for the benefit of our friends who may not follow Tamil!
    13 hrs · Unlike · 1
  • Rajan Venkatasubramaniam அருமையான விளக்கமான பதிவு- நன்றி ரமணன்.....
    10 hrs · Unlike · 1
  • Perumal Maruthu "நிலம் என்பது மக்களின் உணர்வுகள் சார்ந்த ஒரு விஷயம் என்பதை உலக சரித்திரம் நமக்குச் சொல்லுகிறது. காலம் காலமாக மன்னர்கள் போரிட்டதும், மக்களாட்சி மலர்ந்த பின்னரும் குடும்பங்கள் நிலத்திற்காக உறவுகளை மறந்து பிளவுபட்டு வழக்காடிக்கொண்டிருப்பதும் இந்திய மண்ணுக...See More
    9 hrs · Like · 2
  • Rajaraman Subramanian Good sharing.
    7 hrs · Like
  • Ramthilak Rajagopalan Ramanan Vsv nice narration with explanation of correct position explaining how politicians change colours from being opposition party to coming power that too if with absolute majority. Money money...




23/4/15

இலவச இணைய சுதந்திரம் பறி போகிறதா?

இன்றைக்கு இணையம் என்பது பலரின் வாழ்வில் ஒர் அங்கமாகிவிட்டது. கட்டற்ற சுதந்திரமாக  நல்லது, அப்படி இல்லைஎனக்கருதப்படுவது எல்லாம் மிக எளிதில் வசப்படும்  இந்த வலிமையான ஆயுதம் உலகெங்கும் இலவசம். யூ டியூப்பில் படம் பார்க்கலாம், பதிவேற்றம் செய்யலாம், ஃபேஸ்புக், லிங்க்டுஇன் கணக்கு தொடங்கலாம், கூகுள், யாகூ எதில் வேண்டுமானாலும் எதையும் தேடலாம். ஃபிலிப்கார்ட், அமேசான் என எந்தவோர் இணைய வணிகர்களிடமும் பொருள் வாங்கலாம், ரயில் பயணச் சீட்டு முன்பதிவு செய்யலாம். மின் கட்டணம் செலுத்தலாம், நெட் பேங்கிங் செய்யலாம், இவை அனைத்துக்கும் தேவை நீங்கள் இணையத்துக்கான இணைப்பு (நிரந்தரமாக அல்லது தாற்காலிகமாக) பெற்றிருக்க வேண்டும். அவ்வளவுதான்
இப்போது இதில் சில வசதிகளை கட்டணசேவையாக அறிமுகபடுத்துவது குறித்து விவாதம் எழுந்திருக்கிறதுஇப்படி செய்தால் ஒருசில தொலைபேசி நிறுவனங்களுக்கு  அதிக லாபம் ஈட்டும் வழியாகவும்இணைய பயனாளிகள் சில நிறுவனங்களின் பிடியில் மட்டும் சிக்கி கொள்வார்கள் என்று எதிர்ப்பு அலை எழுந்திருக்கிறது.
சமநிலை இணைய சேவை வேண்டும் (நெட் நியூட்ராலிட்டி) என்பது உலகம் முழுவதிலும் இணையப் பயன்பாட்டில் இருப்போர் வலியுறுத்தும் கருத்து. இணையத்தைப் பயன்படுத்தும் நபர் எதை வேண்டுமானாலும் பார்க்க, எந்த இணைய சேவை நிறுவனத்தின் தகவல் களஞ்சியத்துக்குள்ளும் நுழைந்து பார்க்க, எந்தவோர் இணைய வணிக நிறுவனத்துடனும் இ-வர்த்தகம் செய்யத் தடையில்லாத நிலைமைதான் சமநிலை இணைய சேவை என்பது.
உலகில் பல நாடுகளில் இதற்காக தனி சட்டங்கள் வந்துவிட்டன. அமெரிக்காவில் சமநிலை இனைய வசதி  அரசால் உறுதி செய்யபட்டிருக்கிறது.
ஆனால் ஆனால்,இந்தியாவில் சேவைகளைக் கட்டுப்படுத்துதல், சேவைகளுக்குக் கட்டணம் விதித்தல், சேவைகளைத் தரவரிசைப்படுத்துதல், சில சேவைகளுக்கு அதிவேகம் நிர்ணயித்தல் ஆகிய உரிமைகளை தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கோருகின்றன. இதற்கு முக்கிய காரணம்  2014ஆம் ஆண்டில் வெறும் ரூ.62,162 கோடி ஏலம் போன அலைக்கற்றை, தற்போது இரட்டிப்பு கட்டணம் கொடுத்து நிறுவனங்கள்  ஏலம் எடுத்திருக்கின்றன..  அதை எப்படி சம்பாதிப்பதுஅதனால் அரசிடம் அவர்கள் இந்த கட்டண சேவைக்கு அனுமதி கேட்கிறார்கள்
.வழக்கமான தொலைபேசி சேவை, குறுந்தகவல், எம்எம்எஸ் ஆகியவற்றைப் பயன்படுத்தாமல், வாட்ஸ் அப் , முகநூல், லைன், வைபர், வீசாட் போன்றவற்றின் மூலம் தகவல், விடியோ, புகைப்படம் பரிமாறிக்கொள்வதால் உலகம் முழுவதிலும் உள்ள தகவல் தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு 50 லட்சம் கோடி அமெரிக்க டாலர் இழப்பு ஏற்படுகிறது என்பது அவர்கள் வாதம். இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு ரூ.3,700 முதல் ரூ.4,000 கோடி இழப்பு ஏற்படுவதாக மதிப்பிடப்படுகிறது
இதற்காக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்காற்று ஆணையம் (டிராய்) தனியார் தொலைபேசி நிறுவனங்களுக்கும் பொதுமக்களுக்கும்  இணைய சேவை (நெட் நியூட்ராலிட்டி) குறித்த உங்கள் கருத்துகள், இதில் நீங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள்தீர்வுகள்  என்ன என்று கேட்டு ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார்கள்
செய்தி வெளியானவுடன்  இந்தியஇணைய குடிமகன்கள்(நெட்சிட்டிசன்) கொதித்து எழுந்திருக்கின்றனர். முக நூலில், டூவிட்டர்களில் ஆதரவு திரட்டி அரசுக்கு அனுப்பிகொண்டிருக்கிறார்கள் பல லட்சகணக்கானபேர் எனது இணையம் அதில் சம நிலை  எனது உரிமைஎன மெயில்கள் அனுப்பி கொண்டிருக்கிறார்கள்  நீங்களும் உங்கள் கருத்துகளை இம்மாத இறுதிக்குள் அனுப்பலாம்.
தொலை பேசி நிறுவனங்களுக்கு  இதனால் ஒன்றும் பெரிய இழப்பு அல்ல. அவர்கள் மொத்த வருவாயில் 5% குறைவு, அவ்வளவே. மேலும் ஏர்கண்டிஷன், 62 அங்குல எல்சிடி டிவி பயன்படுத்தினாலும், 40 வாட்ஸ் குண்டு பல்பு பயன்படுத்தினாலும் மின்கட்டணம், ஒரே மாதிரியானது தானே?   இணையத்தில் மட்டும் பயன்படுத்தும் தளத்திற்கேற்ப எப்படி மாறுபட்ட கட்டணம் வசூலிக்கமுடியும் என்கிறார்கள் இணைய பாதுகாப்பு போராளிகள்.
யோசிக்க வைக்கும் கேள்வி தான்.

.

.






13/4/15

உறங்கிக்கொண்டிருக்கும் புயல் மீண்டும் வருகிறதா?

 புதிய தலைமுற 16/4/15 இதழில் எழுதியது 

(பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் சதி திட்டம் தீட்டியதாக பாஜ மூத்த தலைவர் எல்.கே. அத்வானி உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுகள்  கைவிடப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் 4 வாரத்தில் பதிலளிக்கும்படி எல்.கே. அத்வானி, ஜோஷி உள்பட 20 பேருக்கு நோட்டீஸ்  அனுப்ப சமீபத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.  இந்தவழக்கு, இந்த  அதிரடி உத்தரவின் பின்னணியைப் பற்றிய ஒரு அலசல் ).
டிசம்பர் 6 1992. இந்திய வரலாற்றில்  ஒர் கருப்பு பக்கம். ராமஜன்ம பூமியாக வர்ணிக்கபடும்  அயோத்தியாவில், இருந்த பாபர் மசூதி இடித்து தரை மட்டமாக்க பட்டதும் அதன் விளைவாக எழுந்த கலவரங்களும் போராட்டங்களும் கால் நூற்றாண்டை கடந்த பின்னரும் அழியாவடுக்களாக இன்றும்  பலர் மனதிலிருக்கிறது.  கர சேவைக்காக போன பக்தர்கள் கூட்டம் தலைவர்களின் எழுச்சி மிக்க பேச்சுகளால் ஆவேசம் அடைந்து, உணர்ச்சி வசப்பட்டு அந்த பழைய கட்டிடத்தை இடித்துவிட்டார்கள் என்று சொல்ல பட்ட இந்த ”விபத்து” குறித்து, நீண்ட காலம் தொடர்ந்து , வழக்குகளும் கமிஷனின் விசாரணைகளும் நடந்து ஒய்ந்திருக்கும் நிலையில்  உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட   ஒரு மனுவின் அடிப்படையில்  இந்த நோட்டீஸ்கள் அனுப்ப பட்டிருக்கிறது. . பதில்களை ஏற்று உச்ச நீதிமன்றம் வழக்கை விசாரிக்குமானால் மீண்டும் உயிர் பெறப்போவது வழக்கு மட்டுமில்ல. சில அரசியல் பிரச்னைகளும்தான்.
என்ன வழக்கு? ஏன் தலைவர்கள் மீது வழக்கு?
அயோத்தி நகரம் கடவுள்-அரசர் இராமர் பிறந்த இடமென்றும் இந்தியாவின் புனிததன்மை வாய்ந்த இடங்களுள் ஒன்றாகவும் ருதப்படுகிறது.  1528இல் முகலாயர் படையெடுப்பிற்குப் பின் முகலாய படைத்தலைவர் மிர் பாங்கியினால் முகலாயப் பேரரசர் பாபரின்பெயரால் அயோத்தியில் ஒரு மசூதி கட்டப்பட்டது. அங்கிருந்த இராமர் கோயிலை இடித்த பின்னரே மீர் பாங்கி மசூதியைக் கட்டினார் என்று இந்துக்கள் நம்புகின்றனர். ராமர் சிலைகள் பின்னாளில் கொண்டுவந்து வைத்து வழிபட்டனர் இந்துக்கள் என்று இஸ்லாமியர்கள் சொல்லுகின்றனர். ஆனால்  பல ஆண்டுகளாக இந்த இடம்  இந்துக்களாலும் இஸ்லாமியர்களாலும் மத வழிபாடுகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆங்கிலேயேர் ஆட்சிகாலத்திலியே இடத்திற்கு உரிமை கோரி வழக்குக்குள் இருந்த போதிலும் அது மத மோதலாகவோ கலவரமாகவோ இல்லை.  இந்திய விடுதலைக்குப் பிறகு, பல இயக்கங்கள் அவ்விடத்தைச் சொந்தம் கொண்டாடி புதிய வழக்குகளைத் தொடர்ந்தன.
பாரதிய ஜனதா கட்சி (பாஜக) 1989 தேர்தலின்  இந்த அயோத்தி பிரச்சனையை தேர்தல் களத்தில் வைத்தது. . செப்டம்பர் 1990இல் பாஜக தலைவர் எல். கே. அத்வானி அயோத்தி பிரச்னையை நாடெங்கும் எடுத்துச் செல்லும் வழியாக ஓர் இரதப் பயணத்தைத் (இரத யாத்திரை) தொடங்கினார். இதனால் நாடெங்கும் மதவாத உணர்ச்சி அலைகள் வீசத்துவங்கின.  இன்னும் அந்த அலைகள்  ஒயவில்லை.
அயோத்தியில் இருந்த ராமர் கோயிலை இடித்துவிட்டுதான் பாபர் மசூதி கட்டப்பட்டது. எனவே நாங்கள் பாபர் மசூதியை இடித்துவிட்டு ராமர் கோயில் கட்டப் போகிறோம்என்ற பழிக்குப் பழிபாலிடிக்ஸ்தான் இதன் அடிப்படை. ‘1996&ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ம் தேதி  பகல் 12.15 மணிக்கு அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிகள் தொடங்கும்என்று வெட்ட வெளிச்சமாக அறிவித்துவிட்டுதான் அயோத்தியை நோக்கி கிளம்பினார்கள் பா.ஜ.க., விஸ்வ இந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளின் தொண்டர்கள். சுமார் 2 லட்சம் பேர். பெருங்கூட்டமாக குவிந்துவர அயோத்தி குலுங்கியது. உணர்ச்சிபூர்வமான பேச்சு  ஒருங்கிணைக்கப்ட்ட கூட்டு நடவடிக்கையின் விளைவுவாக  475 ஆண்டுகள் பழமையான பாபர் மசூதி இடித்து தரை மட்டமாக்கப்பட்டது.
தேசமே அதிர்ந்துது போனது. கலவரங்கள் வெடித்தன,  சட்டம் மெதுவாக அதன் கடமையை செய்ய ஆரம்பித்தது.

பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு இரண்டு குற்றப் பத்திரிகைகளை தாக்கல் செய்தது. மசூதியை இடித்ததாக `பெயர்  தெரியாத லட்சக்கணக்கான கரசேவகர்கள் மீது ஒரு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மசூதியை இடிக்க சதி திட்டம் தீட்டியதாக பாஜ மூத்த தலைவர்  எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மத்திய அமைச்சர் உமாபாரதி, முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் உள்பட 20 பேர் மீது மற்றொரு  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தவிர மதக் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியது, தேச ஒற்றுமைக்கு எதிராக செயல்பட்டது, உள்பட  பல்வேறு பிரிவுகளின் கீழ் அத்வானி உள்ளிட்டோர் மீது மற்றொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
 சதி திட்டம் தீட்டியதாக அத்வானி, ஜோஷி உள்ளிட்ட பலர் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் இல்லாததால் அவற்றை கைவிடுவதாக 2001,
  மே 4ம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது
. அலகாபாத் உயர் நீதிமன்றம் 2010 மே 21ம் தேதி அளித்த தீர்ப்பில், சதி திட்டம் தீட்டியதாக தொடரப்பட்ட குற்றச்சாட்டில் ஆதாரம் இல்லை  என்று அத்வானி உள்ளிட்டோரை விடுதலை செய்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது.
ஆனால், அத்வானி உள்பட பிறர் மீது  கூறப்பட்டுள்ள மற்ற குற்றச்சாட்டுகள் குறித்து ரேபரேலி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை தொடர்ந்து நடத்த அனுமதி அளித்தது.
அலகாபாத் உயர் நீதி மன்ற தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய அரசு முடிவெடுத்தது.  ஆனால் 6 மாதங்களுக்குள்ளாக செய்திருக்கவேண்டிய மேல் முறையீட்டை 8 மாதத்திற்கு பின்தான் செய்தது வழக்கை குறிபிட்ட கால கெடுவுக்குள் செய்யாமல் தாமதபடுத்தி செய்திருந்தது. இம்மாதிரியான நடைமுறை வீதிமீறல்கள் செய்வது  எதிர்வாதம் செய்யபவர்களுக்கு அனுகூலமாக முடியும்.ஆனால் உச்ச நீதிமன்றம் தாமதத்தை கண்டித்து காரணம் கேட்டு சிபிஐயை விளாசியது. தாமதத்திற்காக சொல்லபட்ட காரணம் ”வழக்கில் சம்பந்தபட்டவர்கள்  அனைவரும் மிக முக்கிய அரசியல் வாதிகள் என்பதால் மிக ஜாக்கிரதையாக கையாளுகிறோம்” என்பது. அப்போது ஆட்சியில் இருந்தவர்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணி. அவர்கள் இந்த வழக்கைஏன் தமாதப்படுத்தினார்கள்? என்பது இந்திய அரசியலில் புரிந்து கொள்ள முடியாத புதிர்களில்  ஒன்று.
இப்போது மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.
 இந்த கட்டத்தில் தான்  தற்போது மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் அத்வானி உள்ளிட்டோர் மீதான சதி திட்டம் தீட்டிய வழக்கில் மேல்முறையீடு செய்வதில் சிபிஐ  காலதாமதம் செய்து வருகிறது.  வழக்கை நீர்த்துபோகும் வகையில் சிபிஐ செயல்படுகிறதுபிஜே பி கட்சியின் செல்வாக்கு மிகுந்தவர்கள் ஆட்சியிலும் மூக்கிய பதவிகளிலும் இருக்கிறார்கள். மேலும் இந்த வழக்கில் தலைவர்கள் விடிவிக்கபட்ட்து நீதிமன்ற வரலாற்றில்  வழங்கப்பட்ட முக்கியமா அநீதி.  செயலைதூண்டியது, அதைச்செய்யவசதிகள் செய்துகொடுத்தது மசூதியை உடைத்தது எல்லாமே ஒரு சதிச்செயலின் அடிப்படையில் எழுந்த விஷயம். அப்படியிருக்க சதித்திட்டத்தைமட்டும் தனியாக பிரித்து குற்றத்திற்கான ஆதாதரம் இல்லை என சொல்லியிருப்பது நீதிமன்ற த்தின் தவறு என்பதால்  . அத்வானி உள்ளிட்டோர் மீதான சதி திட்டம் தீட்டிய வழக்கை  மீண்டும் முழுமையாக விசாரிக்க உத்தரவிட  வேண்டும் என்ற ஹாஜி மக்மூத் அகமதுவின் மனுவை  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல். தத்து  தலைமையில் நீதிபதி அருண் மிஸ்ரா அடங்கிய பெஞ்ச் ஏற்றுகொண்டு நோட்டீஸ்கள் அனுப்பிருக்கிறது.

அயோத்தி நிகழ்வும் அரசியலும்.
பாபர் மசூதி இடிப்பு நிகழ்வு இந்திய அரசியலில்  சில புதிய அத்தியாங்களை உருவாக்கின. மதவாதத்துக்கும் வாக்குபெட்டிக்கும்  உறவு வலிமையானது..
‘‘இந்திய முஸ்லிம்களை இந்தியாவுக்கு எதிரான சக்தியாக மாற்ற பாகிஸ்தான் உளவு நிறுவனம் ஐ.எஸ்.ஐ. எவ்வளவோ முயற்சித்தது. ஆனால் இஸ்லாமியர்கள் நாங்கள் இந்தியர்என்று ஒருங்கிணைந்து நின்றார்கள். பாபர் மசூதியை இடித்ததன் மூலம் ஐ.எஸ்.ஐ. செய்ய முடியாததை பா.ஜ.க.வும்,  ஆர்.எஸ்.எஸ்ஸும் ஒரே நாளில் செய்து முடித்தன’’  என்று இந்திய உளவு நிறுவனம் ராவின் முன்னால் உளவு அதிகாரி ராமன் தனது புத்தகத்தில் எழுதியிருக்கிறார்.நெருக்கடி நிலையை முழுமுச்சாய் எதிர்த்து அரசியலில் ஜனநாயகவாதிகளாக நிலை நாட்டிக் கொண்டவர்கள் மதவாத அரசியல்வாதிகளாக அடையாளம் காணப்பட்டார்கள்.
பார் மசூதி இடிப்பை தொடர்ந்து கிரிமினல் வழக்குகளைத் தவிர மத்திய அரசு ஒரு கமிஷன் அமைத்தது.விசாரணைக் கமிஷன் தலைவர் லிப்ரான்.
பாபர் மசூதி இடிப்புச் சம்பவத்திற்கும் 1992 ல் டிசம்பர் பதினாறாம் தேதி அதாவது பாபர் மசூதி இடிக்கபட்ட பத்து நாட்களுக்குப் பின நீதிபதி லிப்ரான் தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கபட்டது. சர்ச்சைக்குரிய கட்டிடத்தை இடித்ததில் மாநில அரசு - முதல்வர், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், மற்றும் மதவாத அமைப்புகளின் பங்கு என்ன? உத்திரப்பிரதேச அரசின் பாதுகாப்பு குறைபாடுகள் என்ன? இவை பற்றி விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி கமிஷனை மத்திய அரசுகேட்டுக்கொண்டது.விசாரணைக் கமிஷனின் கெடு காலம் மூன்று மாதம் என்றும் அறிவித்தது.
48 முறை நீடிக்கபட்ட கமிஷன் விசாரணை செய்ய நீதிபதி லிப்ரன் பதினேழு ஆண்டு காலம் எடுத்து கொண்டார். பதினேழு ஆண்டு விசாரணைக்கு மத்திய அரசு செலவு செய்த தொகை எட்டு கோடி ரூபாய். கமிஷனின் ரகசிய அறிக்கை அதிகாரபூர்மாக வெளியிடப்படாமலேயே கசிந்து வெளியாகிவிட்டது. அத்வானியின் ரத யாத்திரை, மசூதி இடிக்கப்படுவதற்கு முதல் நாள் அயோத்திக்கு வந்து உரையாற்றிச் சென்ற வாஜ்பாய், இடிக்கப்படும் புகைப்படங்கள், வீடியோ ஆதாரங்கள், மசூதி இடிக்கப்பட்டதை நியாயப்படுத்தி பால்தாக்கரே, கல்யாண் சிங், உமாபாரதி ஆகியோர் வெளியிட்ட அறிக்கைகள் (ராமனுக்கு அயோத்தியில் கோயில் கட்டாமல் வேறு எங்கு கட்டுவது?’ &ஜெயலலிதா) என்று பல ஆதாரங்கள் அறிக்கையில் சொல்லப்பட்டிருந்தாலும்  கமிஷனின் அறிக்கையின் அடிப்படையில் அரசு எந்த வழக்கையும்  தொடரவில்லை.
தினசரிகளில் அவ்வபோது 4 பக்கத்தில் தலைகாட்டிக்கொண்டிருந்த இந்த விஷயம் மெல்ல மறக்கப்பட்டுகொண்டிருந்தபோது  கடந்த ஆண்டு  துவக்கத்தில்
பாபர் மசூதி இடிப்பு வி.ஹெச்.பி., சிவசேனாவால் நடத்தப்பட்ட திட்டமிடப்பட்ட சதிச் செயல் என்றும்,  இந்த இரு அமைப்புகளும் தங்களது தொண்டர்களுக்கு பல மாதங்களுக்கு முன்பாகவே பயிற்சி அளித்ததாகவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் பலிதானி ஜாதாஎனும் பெயரில் தற்கொலைப்படைகளும் அமைக்கப்படதாகவும் கூறப்பட்டுள்ளளது. பயிற்சி குஜராத்தில் ஒரு கிராமத்தில் முன்னாள் ராணுவ அதிகாரிகளால் அளிக்கபட்டது. எதற்கு பயிற்சி என்று சொல்லப்படாத நிலையில் கடின மலைஏற்றம், கயிற்றில் தொங்கி சுவற்றை உடைப்பது போன்ற பயிற்சிகள் தரப்பட்டன. இந்த படைக்கு லக்‌ஷ்மண சேனை என்று பெயர்.  என ஒரு அதிரடி செய்தியை வெளியிட்ட்து கோப்ரா போஸ்ட். கோப்ரா போஸ்ட் என்பது ஒரு புலனாய்வு இணைய பத்திரிகை. (டெஹ்ல்கா மாதிரி) இதன் இணை ஆசிரியர்  கே ஆஷிஷ்  பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக ஓர் ஆய்வு நூல் எழுதுவதாக  சொல்லி , 23 முக்கிய தலைவர்களை பேட்டி எடுத்துள்ளார்இவர்களில் 15 பேரை நீதிபதி லிபரான் கமிஷன் குற்றவாளிகள் என்று குறிப்பிட்டுள்ளது. 19 பேர் குற்றவாளிகள் என்று சிபிஐ தனது குற்றப்பத்திரிக்கையில் தெரிவித்துள்ளது. ஆப்ரேஷன் ஜென்மபூமிஎன்ற பெயரில் நடத்தப்பட்ட சதிச்செயலின் அடித்தளம் வரை சென்று கண்டறிந்த பல உண்மைகளை வெளியிட்டிருக்கும்  'கோப்ரா போஸ்ட்'  இது எங்களது இரண்டாண்டு புலானாய்வு. அத்தனைக்கும் பதிவு செய்யபட்ட ஆதாரம் இருக்கிறது வழக்குகளை சந்திக்கதயார் என சவால் விட்ட்து. ஆனாலும் ஐமு அணி அரசு  அசையவில்லை யார் மீதும் வழக்கு எதுவும் போடவில்லை.

இனிமேல்  என்ன நடக்கலாம்? 
அரசியலின் போக்கை நீதிமன்ற வழக்குகளின் முடிவுகளும், அரசின் முடிவுகள் வழக்குகளின் போக்கையும் மாற்றும் என்பதை சமீப அரசியல் சரித்திரங்கள் நமக்கு சொல்லுகின்றன.  இந்த வழக்கை உச்சநீதி மன்றம்  தீவிரமாக விசாரிக்க ஆரம்பித்தால், சமீபகாலமாக அது கடைப்பிடிக்கும் வழிமுறையான ஒரு சிறப்பு புலனாய்வை அமைத்து நேரடியாக தங்களிடம்  அறிக்கைகள் தந்து  குறிப்பிட்ட கால கெடுவுக்குள்  வழக்கை முடிக்க செய்யும். அல்லதுசிபிஐயை கண்டித்து உடனடியாக வழக்கை நடத்தி முடிக்க முடுக்கிவிடும்.
கிளமாக்ஸாக மனுவே தள்ளுபடியும் செய்யபடலாம். (வாய்ப்பு மிக குறைவு. விபரங்கள் கேட்டபின் பொதுவாக தள்ளுபடி செய்யப்படுவதில்லை)
எப்படி நடந்தாலும் அது அரசியலில் நேரிடையான தாக்கத்தை விளைவிக்கும். காரணம் எவ்வளவு விரைவாக நடைபெற்றாலும் வழ்க்கு முடிய ஒராண்டு ஆகும்
 இந்த வழக்கின்  முடிவுகள் வரும்போது 2016ல்  சில மாநிலங்கள் தேர்தலை சந்திக்கிறது. அதில் ஒன்று இந்த காட்சிகளின் களனான உத்திரபிரதேசம்,
இப்போது உபி சட்டமன்றத்தில் 403 சீட்டுகளில் வெறும் 47 மட்டுமே வைத்திருக்கும் பிஜெபி. கடந்த நாடாளுமன்றத்தில் கூட்டணியோடு 83 சீட்டுகளில் 70ஐ பெற்றிருப்பதால் 2017 ல் அங்கு மாநில ஆட்சியை பிடிக்கும் கனவில் இருக்கிறது.  இந்த வழக்கில் தலைவர்கள் வீடுவிக்க பட்டால் தங்கள் மீது பூசப்பட்டிருக்கும் மதவாத கரை மறைந்து விட்டதாக அறிவித்துவிடுவார்கள். மாறாக தண்டிக்கபட்டால் ராமருக்காக நாங்கள் செய்த தியாகம் என அந்த அனுதாபத்தை ஓட்டாக மாற்ற முயற்சிப்பார்கள்.
வழக்கு தீவிர கட்டத்தை அடைவதற்குள் காங்கிரஸின் தலைவராகியிருக்கும் ராகுல்  இந்த வழக்கினையே ஆயூதமாக கையிலெடுத்து பிஜேபியின் மதவாத அரசியலை  கண்டனம் செய்து களமிறங்கும் வாய்ப்பும் இருக்கிறது. ஆட்சியிலிருந்த போது கிடைத்த வாய்ப்பை நழுவவிட்டவர்கள் இதையாவது கோட்டைவிடாமல் செய்யவார்களா என்ற  கேள்வியும் எழுகிறது. .
எந்த பிரச்னையிலும் ஒரு வாய்ப்பை கண்டுபிடிப்பவர்கள் அரசியல் வாதிகள். பிஜெபி தங்கள் உட்கட்சி அரசியல் பிரச்னைகளை சரி செய்ய  இந்த வழக்கை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டாலும் ஆச்சரியம் இல்லை.. மோடி பிரதமரான நேரத்தில்  கட்சியின் மூத்த தலைவர்கள் ஒரங்கட்டபட்டார்கள்:. இந்த வழக்கில் சம்பந்தபட்டவர்களும் அவர்கள்தான். காங்கிரஸ் ஒரு கட்டத்தில்  முன்னாள் பிரதமர்  நரசிம்ம ராவை ஒதுக்கி அவர் மீதுள்ள வழக்குகளை அவரே சமாளித்துகொள்ள வேண்டும் என சொன்னது போல  இவர்களையும் பிஜேபி ஒதுக்கி விடும் ஒரு நிலையும் ஏற்படலாம். அதன் மூலம் இன்றைய தலைவர்கள் தாங்கள் மதவாத தீவிரவாதிகள் இல்லை என்ற பிம்பத்தை ஏற்படுத்தவும் முயற்சிக்கலாம்.
எப்படியாக இருந்தாலும் இந்த வழக்கு 2016 மாநில தேர்தலுக்குமுன் மக்களின் மிக கவனம் பெரும் வழக்காக இருக்கும்.

”இந்திய அரசியலின் முக்கிய முடிவுகள் இப்போது கோர்ட்களில் எடுக்கபடுகிறது. மக்கள் தேர்தல் முடிவுகளைப் போல சில  வழக்குகளில் நீதிமன்றத்தின் முடிவுகளை காண  ஆவலுடன் காத்திருக்கிறார்கள்” என ஒரு ஆங்கில நாளிதழின் மூத்த செய்திஆசிரியர் எழுதுகிறார்.

அது இந்த வழக்குக்கும் பொருந்தும்.