28/9/16

இவர்கள் தெய்வங்கள்



காவிரி பிரச்சனை கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த நாள். நிஜமாகவே பஸ்கள் கொளுத்தப் பட்டு எரிந்த ஊரடங்கு உத்தரவு, மாநில எல்லைகளில் வாகனங்கள் நிறுத்தம் எனப் பதட்டமாக இருந்த அந்த நாளின் இரவில் இரவு 1 மணிக்குக் கர்நாடக மாநில எல்லையில் வந்து நிற்கிறது ஒரு பிரபல மருத்துவ மனையின் ஆம்புலன்ஸ். அதிலிருந்து ஒரு நோயாளியுடன் இருக்கும் ஒரு சக்கர நாற்காலியை வேகமாகத் தள்ளிக்கொண்டு 4 பேர் கொண்ட ஒரு டாக்டர் குழு தமிழ் நாட்டு எல்லைக்கு விரைகிறது. பாதுகாப்பு நின்றிருக்கும் போலீஸார் அந்த நள்ளிரவில் நடந்து கொண்டிருப்பது என்னவென்று திகைத்து நிற்க அந்த டாகடர் குழு சேலத்திலிருந்து வந்த எல்லையில் தமிழக ரிஜிஸ்ட்ரேஷன் எண்ணுடன் காத்திருந்த ஒரு ஆம்புலன்ஸில் ஏறியவுடன் அது சேலத்துக்கு பறக்கிறது.
நாக்பூரிகிருந்து பங்களுர் மணிப்பால் மருத்தவமனையில் குடல் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டிருந்த ஒருவருக்கு, மாற்று அறுவை சிகிச்சைமூலம் குடலை மாற்ற வேண்டும் என முடிவு செய்யப்பட்டிருந்தது. அவரும் அவரது டாக்டர்களும் கடந்த இரண்டு வருடமாக உடல் உறுப்பு தானம் செய்துவிட்டு இறந்த ஒரு கொடையாளிக்காகக் காத்திருந்தனர்.
சேலத்திற்கு அருகில் சாலை விபத்தில் முதல் நாள் இறந்த ஒருவர் தன் உடலுறுப்புக்களை தானமாக வழங்கியிருந்தார். அந்தச் செய்தியை அறிந்த மணிப்பால் மருத்தவ மனை அதில் குடலை மாற்று அறுவை சிகைச்சை மூலம் தங்கள் நோயாளிக்கு அறுவைச் சிகிச்சைமூலம் மாற்றத் தீர்மானித்தது. அதன் விளைவு தான் சினிமா காட்சிப் போல இந்தப் பயணங்கள்.
இந்த அறுவை சிகைச்சையை நடத்தியவர் ஒலித்செல்வன் (Dr Olithselven) இவர் மணிப்பால் மருத்தவமனையின் குடல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்.பாண்டிச்சேரி ஜிம்ப்பரில் படித்து, அங்குப்  பணி புரிந்தவர்.

இரு மாநிலங்களுக்கிடையே நடக்கும் போராட்டங்களினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதை காரணமாகக் காட்டி இதை நாங்கள் தவிர்த்திருக்கலாம். ஆனால் காத்திருக்கும் ஒரு நோயாளின் உயிரைக் காப்பாற்ற வேண்டிய கடமையும், உடனே பயன் படுத்தி நன்கொடை கொடுத்த நபரின் தியாக உணர்வுகளை மதிக்க வேண்டிய பொறுப்பும் டாக்டர் என்ற முறையில் எங்களுக்கு இருக்கிறது. அதனால் தான் துணிந்து ஆபத்தானது என்று தெரிந்தும் இந்த முடிவை எடுத்தோம். பிரச்ச்னைகளையும் விளம்பரத்தைத் தவிர்க்க இரவு எல்லையைக் கடக்க திட்டமிட்டோம். மாநில எல்லையில் ஒரு கிமீ அந்த இரவில் நடந்தபோய் தமிழக ஆம்புலன்ஸ்ஸில் ஏறும் வரை திக் திக் தான். போர் நடக்கும் இரண்டு நாடுகளின் எல்லையைக் கடப்பது போலிருந்தது.” என்கிறார் டாக்டர் ஒலித்செல்வன் (Dr Olithselven)
பங்களூரிலிருந்து சேலம் வர 4 மணி நேரமாகியிருக்கிறது. சேலத்துக்குக் காலை  3 மணிக்கு வந்த இந்த மருத்தவர் குழு ஒரு நிமிடம் கூட வீணாகாமல் அறுவை சிகைச்சையை துவக்கிவிட்டார்கள், 12 மணி சஸ்பென்ஸ்க்கு பின்னர் அறுவை சிகிச்சை வெற்றியென மருத்தவர் குழு அறிவிக்கிறது
அந்த நிமிடத்தில் ஒரு தமிழ் கொடையாளியினால் மறுவாழ்வு பெற்ற அந்த நோயாளியின், அவரது குடும்பத்தினர் அடைந்த சந்தோஷத்தைப் பார்த்தபோது ஆபத்து நிறைந்த முடிவை எடுத்தது சரியானது தான் என்ற எண்ணம் எழுந்தது என்கிறார் டாக்டர் ஒலித்செல்வன் (Dr Olithselven)

கர்நாடக மாநிலத்திலிருந்து சென்னைக்கும், அந்த மாநிலத்தின் பல பகுதிகளுக்குச் சொகுசு பஸ்களை இயக்கிக் கொண்டிருக்கும் நிறுவனம் தமிழகத்தைச் சேர்ந்த கேபி என்.
இவர்களது பஸ் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையத்தில் போராளிகள் புகுந்து 52 பஸ்களையும் பெட்ரோல் விட்டு எரித்துவிட்டார்கள். பஸ்களை இழந்த வேதனையிலும் சேலத்திலிருக்கும் அந்த நிறுவனத்தின் தலைமையகத்தில் தங்கள் டிரைவர்கள், ஊழியர்கள் என்ன வானார்கள்? என்ற கவலையில் இருந்தனர்

மறுநாள் காலையில்நாங்கள் பத்திரமாக ஹோசூர் வந்துவிட்டோம்என்று அவர்கள் சொன்ன தகவல் தலமையகத்தினருக்கு ஆச்சரியமாக இருந்தது. எப்படி நிகழ்ந்தது இது?
கர்நாடகாவைச் சேர்ந்த சாமராஜ்பேட் பகுதியில்சிவா டிராவல்ஸ்என்ற நிறுவனம் நடத்தி வரும் சிவண்ணா என்பவர், இந்த ஓட்டுநர்களை தன்னுடைய லாரிகளில், பத்திரமாக ஓசூருக்கு அழைத்துவந்துவிட்டார். .
என்னுடைய டிராவல்ஸ் நிறுவனத்தின் சேவை, பெரும்பாலும் தமிழகத்தில் நடைபெறுகிறது. தமிழ்நாட்டு மக்களின் உப்பை நான் சாப்பிட்டிருப்பதாக என் மனதில் தோன்றியது. கர்நாடகத்தில் தவித்த தமிழ் ஓட்டுநர்களை காப்பற்ற வேண்டியது என்னுடைய கடமை என்று நினைத்தேன். அதனால்தான் அவர்களைப் பாதுகாப்பாக ஓசூர் கொண்டு சேர்த்தேன், என்கிறார் நெகிழ்ச்சியுடன் சிவண்ணா பாதுகாப்பாகத் தமிழ்நாட்டிற்கு சென்ற ஓட்டுநர்கள் அனைவரும், அவர்களது வீடுகளுக்குத் திரும்பியதும் தனக்கு  தொலைபேசியில் அழைத்து நன்றி தெரிவித்தபோது   மிகவும் மகிழ்ச்சியாக் இருந்தது  என்கிறார் திருசிவண்ணா.
மனிதாபிமான அடைப்படையில் கூடக் காவிரி நீரை நமக்குத் தராமல் கர்நாடக அரசு தடுக்கலாம். ஆனால் நல்ல மனிதர்களின் மனதிலிருந்து பெருகி வரும் மனிதாபிமான ஆற்றை  அவர்களால்  தடுக்க முடியாது


கல்கி 02./10.16 இதழில் எழுதியது 


21/9/16

குளச்சல் துறைமுக திட்டத்தில் என்ன குழப்பம்?

குளச்சல்துறைமுக திட்டத்தில்என்ன குழப்பம்?
இந்திய கடற்கரை 7,516 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. 12 பெரிய துறைமுகம் உட்பட மொத்தம் 200 துறைமுகங்களுக்கு மேல் இந்தியாவில் உள்ளன. கடந்த வருடத்தில் இந்த 12 பெரிய துறைமுகங்களில் தான் மொத்த இந்திய வர்த்தகத்தில் 70 சதவீத வர்த்தகம் கடல் மார்க்கமாகவே நடைபெறுகிறது. இதனால்தான் மத்திய அரசும் கப்பல் துறைக்கு மிகுந்த முக்கியத்துவத்தை அளித்து மிகப் பெரிய திட்டங்களையும் கொண்டுவந்து கொண்டிருக்கிறது.
சமீபத்தில் நீண்ட நாளாகப் பேசப்பட்டு வந்த திட்டமும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் கனவுத் திட்டமுமான குளச்சல் துறைமுகத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இத்திட்டத்திற்கு ஒருபுறம் பலத்த வரவேற்பும் மறுபுறம் கடுமையான எதிர்ப்பும் கிளம்பியுள்ளது..
போர்த்துக்கீசிய காலத்திலிருந்து மிகப் பெரிய இயற்கை துறைமுகமாக இயங்கி வந்த  இது  சிறிய அளவில் மீன் பிடித் துறைமுகம் இயங்கி வந்தது. புராதன துறைமுகமான இதனை, கப்பலில் உலகைச் சுற்றி வந்த வாஸ்கோடகாமா கொளச்சி என்று தனது குறிப்புகளில் எழுதியிருக்கிறார்.
குளச்சல் துறைமுகம். மீன்வளமும், சங்கு, சிப்பி போன்றவையும் அதிகமாகக் கிடைக்கும் பகுதி. இந்த இயற்கை துறைமுகத்தை வர்த்தக துறைமுகமாக மாற்றுவதற்கு நீண்ட காலமாகவே பல்வேறு தரப்பினர் முயற்சித்து வந்தனர். 1998, 2000 மற்றும் 2010-ம் ஆண்டுகளிலேயே வர்த்தக துறைமுகமாக மாற்றுவதற்கு ஆய்வுகள் நடத்தப்பட்டன. ஆனால் பல்வேறு காரணங்களுக்காக இந்தத் திட்டத்தைக் கைவிட்டனர்.
கடந்த மக்களவைத் தேர்தலின் போது கன்னியாகுமரி தொகுதியில் போட்டி யிட்ட பாஜக வேட்பாளர் பொன்.ராதா கிருஷ்ணன் வாக்குறுதி கொடுத்தார். தேர்தலில் வெற்றிபெற்று அமைச்சரான பிறகு துறைமுகம் அமைப்பதற்கான முயற்சிகளை எடுத்து வந்தார். குளச்சல் துறைமுகம் அமைப்பதற்கான ஆய்வும் நடத்தப்பட்டது. ஆய்வு முடிவில் குளச்சலில் இருந்து இனையம் என்ற பகுதியில் அமைக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும் ஜனவரிமாதம் தேதி பார்வையிட்டு விரைவில் துறைமுகம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும் என்று அறிவித்தார்.. கடந்த மாதம் மத்திய அரசு சிறப்பு நிதித் திட்டத்தின் கீழ் குளச்சலுக்கு அருகே உள்ள இனையம் பகுதியில் மிகப் பெரிய பன்னாட்டு சரக்கு பெட்டக மாற்றும் மையம் அமைப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இத்துறைமுகம் அமைப்பதற்கு 25,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மூன்று கட்டங்களாக பணிகள் நடைபெற்று 2030ல் முழுமை அடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குளச்சல் இனயம் துறைமுகத்தால், அதன் அருகே 40 கிமீ தொலைவில், கேரளாவில் அமைந்துள்ள விழிஞ்சம்  துறைமுகம் பாதிப்படும் என அம்மாநிலம் எதிர்ப்புக் குரல் எழுப்புகிறது. அந்த மாநில முதலமைச்சர் பினராய் விஜயன் தலைமையில் டெல்லிக்குப் படையெடுத்து பிரதமர் மோடியிடம் முறையிட்டுள்ளனர். ஆனால் பிரதமர்  அதை ஏற்கவில்லை
முதல் கட்டப் பணியில்  2,500 கோடி ரூபாய் அளவுக்குத் தனியாரின் முதலீடு இருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடல் பகுதியில் 500 ஏக்கர் அளவுக்குத் துறைமுகம் உருவாக்கப்படவுள்ளது.
.இந்தியாவில் 16 மீட்டர் மிதவை ஆழமுள்ள சரக்கு கப்பல்களைக் கையாளும் நவீன துறைமுகங்கள் இல்லை. இதனால் மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரும் சரக்கு பெட்டகங்கள் கொழும்பு சென்று, அங்கிருந்து சிறிய கப்பல்களில் இந்திய துறைமுகங்களுக்கு வருகின்றன

முதன்முறையாக குளச்சலில் 16 மீட்டர் மிதவை ஆழமுள்ள அதிநவீன துறைமுகம் அமைக்கப்பட்டால் இந்திய சரக்கு பெட்டகங்கள் வெளிநாடுகளில் இருந்து நேராக இங்கு வந்து சேரும். இங்கிருந்து உலக துறைமுகங்களுக்கு செல்ல வாய்ப்பு ஏற்படும். இதன்மூலம் புதிய தொழில் முதலீடுகள் குவிய  வழிவகுக்கும். பொருளாதார ரீதியில் தென்பகுதி வளர்ச்சிக்கு வாசல் திறக்கும்.
கடலை ஆழப்படுத்த ரூ.809 கோடி செலவாகும். இது முதற்கட்ட பணிக்காக ஒதுக்கீடாகும் ரூ.6,575 கோடியில் இருந்து அளிக்கப்படுகிறது. கடலை ஆழப்படுத்தும்போது கிடைக்கும் மணலைக் கொண்டு கடற்கரையை ஒட்டி 230 ஏக்கர் நிலம் செயற்கையாக உண்டாக்கப்பட்டு அதில் துறைமுகம் அமைக்கப்படும்.

சரக்குப் பெட்டகம் மற்றும் சரக்குப் போக்குவரத்தின் நுழைவு வாயிலாக குளச்சல் துறைமுகம் திகழும். சர்வதேச கப்பல் போக்குவரத்தில் அரபிக்கடல் நாடுகளையும், வங்கக்கடல் நாடுகளையும் ஒருங்கிணைக்க முடியும் என வல்லுநர்கள் கூறுகின்றனர். தென் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். தமிழகம் மட்டுமின்றி, ஒட்டு மொத்த இந்தியாவின் கடல் வாணிபம் மேம்பட்டு, பொருளாதார வளர்ச்சிக்கு குளச்சல் துறைமுகம் வித்திடும்என்கிறது அரசின் குறிப்பு.
ஆனால் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே  , இனயத்தில் சர்வதேச துறைமுகம் அமைக்க, உள்ளுர் மற்றும் சுற்றுப்புற பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பான போராட்டங்களும் நடந்து கொண்டு வருகின்றனஅரசியல் கட்சிகளும் தேர்தல் நேரத்தில் இந்தப் போராட்டங்களை ஆதரிக்கும் நிலை எழுந்திருக்கிறது.

  இந்த எதிர்ப்பு  ஏன் எழுந்திருக்கிறது ?

மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுமா?
இனையம் துறைமுகம் கடல் பகுதியில் 500 ஏக்கரில் அமைக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. இந்த 500 ஏக்கர் முழுவதும் மணல் நிரப்பப்படும் பொழுது அந்தப் பகுதியின் சூழலியல் சமநிலை பாதிக்கப்படும் என்று சூழலியலாளர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமல்லாமல் தற்போது துறைமுகம் அமைக்கப்படும் இனையம் பகுதி அதிக கடல் அலைகளையும் நீரோட்டத்தையும் கொண்டது. மிகப் பெரிய அலைகளைத் தடுப்பதற்கு குறைந்தது இரண்டு அலைமுறிகள் அமைக்கப்பட வேண்டும். ஐந்து கிலோ மீட்டருக்கு அலைமுறி அமைக்கப்படும் போது சிறு மீனவர்களும் பல பாரம்பரிய தொழில்களும் அழிந்துவிடும் என்கின்றனர். மேலும் இதற்கான செலவும் அதிகம். மேலும் இந்தச் சரக்கு முனையத்திற்குத் தேவையான சாலைகள், ரயில் பாதைகள் அமைப்பதற்குக் கடற்கரையிலிருந்து 1,500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இனையம் பகுதி அதையொட்டிய மீனவ கிராமங்களில் கிட்டத்தட்ட 25,000 மீனவர்கள் வாழ்ந்து வருகின்றனர். நிலம் கையகப்படுத்தும் போது இவர்கள் எங்கே போவார்கள்? இவர்களின் வாழ்வாதாரம் என்னாவது? என்ற கேள்விகள் எழுகின்றன.
பொருளாதார ரீதியில் நன்மையா?
மொத்தம் இந்தியாவில் 12 பெரிய துறைமுகங்கள் இருக்கின்றன. அதில் 3 துறைமுகங்கள் தமிழ்நாட்டில் இருப்பது நமக்குப் பெருமையான விஷயம்தான். 4-வதாக இனையம் துறைமுகமும் வர இருக்கிறது. ஆனால் பொருளாதார வகையில் இந்தத் துறைமுகம் நன்மையை ஏற்படுத்தாதுஎன்கிறார்பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் பொறியாளர் சுந்தர்ராஜன்.  ``தற்போது அமையவிருக்கும் இனையம் துறைமுகத்திற்கு அருகில் மூன்று துறைமுகங்கள் இருக்கின்றன.இனையத்திலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் விழிஞ்சம் சர்வதேச துறைமுகமும் 271 கிலோ மீட்டர் தொலைவில் வல்லர்பாதம் பன்னாட்டுச் சரக்கு பெட்டக மாற்று முனையம் மற்றும் தூத்துக்குடியில் சர்வதேச துறைமுகமும் உள்ளது. மேலும் கொழும்பு துறைமுகமும் அருகே உள்ளது. இப்படி அருகருகே மிகப்பெரிய துறைமுகங்கள் இருக்கையில் நான்காவதாக இந்தத் துறைமுகத்தை அதிக முதலீட்டுத் தொகையில் அமைப்பதால் ஒரு நன்மையும் ஏற்படாது. ஏனெனில் அருகருகே மிகப் பெரிய துறை முகங்கள் இருக்கும் பொழுது கப்பல்கள் வருவது எண்ணிக்கை அளவில் மிக குறையும். இதனால் துறைமுகங் களிக்கிடையே சரக்குகளைக் கையாளு வதில் ஏற்றத்தாழ்வு ஏற்படும். இந்த ஏற்றத்தாழ்வு அருகிலுள்ள துறைமுகங்களுக்கு பொருளாதார இழப்பை ஏற்படுத்தும்’’ என்கிறார் இவர்.
கொழும்பு துறைமுகத்துடன் போட்டி போடமுடியுமா?
மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பா நாடுகளில் இருந்து வரும் கப்பல்கள் கொழும்புக்கு அதிகம் செல்கின்றன. தென்னிந்தியாவில் உள்ள அனைத்துத் துறைமுகத்திலும் மொத்தம் 30 லட்சம் டன் சரக்குகள்தான் கையாளப்பட்டு வருகிறது. ஆனால் கொழும்பு துறைமுகத்தில் மட்டும் 50 லட்சம் டன் சரக்குகள் கையாளப்பட்டு வருகிறது. இதைக் காரணமாக கொண்டுதான் குளச்சல் துறைமுகம் கொண்டு வரத் திட்டமிடப்பட்டது. ஆனால் கொழும்பு துறைமுகத்தில் சரக்குகளை கையாளுவதற்கு விதிக்கப்படும் கட்டணம் மிகக் குறைவு. இதனால் பெரும்பாலும் சரக்குக் கப்பல்கள் கொழும்பை நோக்கிச் செல்ல வாய்ப்பு அதிகம் இருக்கிறது. கட்டணத்தைக் குறைத்தால் மட்டுமே இந்தத் துறைமுகத்திற்கு கப்பல்கள் வருவது அதிகமாகும் அது நம்மால் முடியாது. . அதுமட்டுமல்லாமல் சரக்குக் கப்பல்கள் வருவதால் துறைமுகப் பகுதியை அதிகம் ஆழப்படுத்த வேண்டிருக்கும். இதற்கு மிக அதிக அளவில் செலவு ஏற்படும். இவ்வளவு தொகை செலவழித்துக் கொண்டு வரப்படும் இந்தத் திட்டம் பொருளாதார அளவில் பின்னடைவைத்தான் ஏற்படுத்தும்.
 ஏன் உள்ளூர் மக்கள் ஆதரவு இல்லை?
நாங்கள் பல நாட்களாகக் கேட்டுக்கொண்டிருப்பது ஒரு நவீனமான மீன்பிடி துறைமுகம்தான்அரசியல் வாதிகள் அந்த வேண்டுகோளை  சரக்கு துறைமுகம் என மாற்றி  எங்களையும் எங்கள் கிராமத்தையும் அழிக்க நினைக்கிறார்கள். நாங்கள் விடமாட்டோம் போராடுவோம் என்கிறார்கள் உள்ளூர்  மீனவர்கள்

சேது சமுத்திரம் திட்டம் என்னவாயிற்று என யாருக்கும் தெரியவில்லை.மதுரையில் சர்வதேச விமானநிலையம் உருவாக்கும் திட்டம் கிடப்பில் கிடக்கிறது. விமான ஓடுபாதை விரிவாக்கத்திற்கு ஆர்ஜிதம் செய்யப்பட்ட 620 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு விமான ஆணையத்திடம் ஒப்படைக்காமல் இழுத்தடிக்கிறது. சென்னை முதல் குமரி வரை இரட்டை ரயில் பாதை அமைக்கும் திட்டம் பாதியில் நிற்கிறது. இதனால் புதிய ரயில்களை காணோம். இதுபோன்ற முக்கிய திட்டங்களின் முடக்கத்தால் தென்தமிழக வளர்ச்சியில் தேக்கநிலை நீடித்துக்கொண்டிருக்கும் போது என் இப்படி ஒரு பெரிய திட்டத்தில் பணத்தை வீணடிக்க வேண்டும் என்கிறார்  மத்திய அரசின்  ஒரு  முன்னாள் மூத்த அதிகாரி.


தமிழகத்திற்கு இவ்வளவு பெரிய திட்டத்தைக் கொண்டு வந்த அளவில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனுக்கு நிச்சயமாகப் பாராட்டுக்கள் தெரிவிக்க வேண்டும். ஆனால் அதற்கான இடத்தைத் தேர்வு செய்ததிலும்உள்ளூர் மக்களின் ஆதரவைப் பெற முயற்சிக்காலும்   மத்திய அரசு அவசரம் காட்டிவிட்டதோ என்று தோன்றுகிறது

(18/09/16) கல்கியில் எழுதியது