28/9/16

இவர்கள் தெய்வங்கள்



காவிரி பிரச்சனை கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த நாள். நிஜமாகவே பஸ்கள் கொளுத்தப் பட்டு எரிந்த ஊரடங்கு உத்தரவு, மாநில எல்லைகளில் வாகனங்கள் நிறுத்தம் எனப் பதட்டமாக இருந்த அந்த நாளின் இரவில் இரவு 1 மணிக்குக் கர்நாடக மாநில எல்லையில் வந்து நிற்கிறது ஒரு பிரபல மருத்துவ மனையின் ஆம்புலன்ஸ். அதிலிருந்து ஒரு நோயாளியுடன் இருக்கும் ஒரு சக்கர நாற்காலியை வேகமாகத் தள்ளிக்கொண்டு 4 பேர் கொண்ட ஒரு டாக்டர் குழு தமிழ் நாட்டு எல்லைக்கு விரைகிறது. பாதுகாப்பு நின்றிருக்கும் போலீஸார் அந்த நள்ளிரவில் நடந்து கொண்டிருப்பது என்னவென்று திகைத்து நிற்க அந்த டாகடர் குழு சேலத்திலிருந்து வந்த எல்லையில் தமிழக ரிஜிஸ்ட்ரேஷன் எண்ணுடன் காத்திருந்த ஒரு ஆம்புலன்ஸில் ஏறியவுடன் அது சேலத்துக்கு பறக்கிறது.
நாக்பூரிகிருந்து பங்களுர் மணிப்பால் மருத்தவமனையில் குடல் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டிருந்த ஒருவருக்கு, மாற்று அறுவை சிகிச்சைமூலம் குடலை மாற்ற வேண்டும் என முடிவு செய்யப்பட்டிருந்தது. அவரும் அவரது டாக்டர்களும் கடந்த இரண்டு வருடமாக உடல் உறுப்பு தானம் செய்துவிட்டு இறந்த ஒரு கொடையாளிக்காகக் காத்திருந்தனர்.
சேலத்திற்கு அருகில் சாலை விபத்தில் முதல் நாள் இறந்த ஒருவர் தன் உடலுறுப்புக்களை தானமாக வழங்கியிருந்தார். அந்தச் செய்தியை அறிந்த மணிப்பால் மருத்தவ மனை அதில் குடலை மாற்று அறுவை சிகைச்சை மூலம் தங்கள் நோயாளிக்கு அறுவைச் சிகிச்சைமூலம் மாற்றத் தீர்மானித்தது. அதன் விளைவு தான் சினிமா காட்சிப் போல இந்தப் பயணங்கள்.
இந்த அறுவை சிகைச்சையை நடத்தியவர் ஒலித்செல்வன் (Dr Olithselven) இவர் மணிப்பால் மருத்தவமனையின் குடல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்.பாண்டிச்சேரி ஜிம்ப்பரில் படித்து, அங்குப்  பணி புரிந்தவர்.

இரு மாநிலங்களுக்கிடையே நடக்கும் போராட்டங்களினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதை காரணமாகக் காட்டி இதை நாங்கள் தவிர்த்திருக்கலாம். ஆனால் காத்திருக்கும் ஒரு நோயாளின் உயிரைக் காப்பாற்ற வேண்டிய கடமையும், உடனே பயன் படுத்தி நன்கொடை கொடுத்த நபரின் தியாக உணர்வுகளை மதிக்க வேண்டிய பொறுப்பும் டாக்டர் என்ற முறையில் எங்களுக்கு இருக்கிறது. அதனால் தான் துணிந்து ஆபத்தானது என்று தெரிந்தும் இந்த முடிவை எடுத்தோம். பிரச்ச்னைகளையும் விளம்பரத்தைத் தவிர்க்க இரவு எல்லையைக் கடக்க திட்டமிட்டோம். மாநில எல்லையில் ஒரு கிமீ அந்த இரவில் நடந்தபோய் தமிழக ஆம்புலன்ஸ்ஸில் ஏறும் வரை திக் திக் தான். போர் நடக்கும் இரண்டு நாடுகளின் எல்லையைக் கடப்பது போலிருந்தது.” என்கிறார் டாக்டர் ஒலித்செல்வன் (Dr Olithselven)
பங்களூரிலிருந்து சேலம் வர 4 மணி நேரமாகியிருக்கிறது. சேலத்துக்குக் காலை  3 மணிக்கு வந்த இந்த மருத்தவர் குழு ஒரு நிமிடம் கூட வீணாகாமல் அறுவை சிகைச்சையை துவக்கிவிட்டார்கள், 12 மணி சஸ்பென்ஸ்க்கு பின்னர் அறுவை சிகிச்சை வெற்றியென மருத்தவர் குழு அறிவிக்கிறது
அந்த நிமிடத்தில் ஒரு தமிழ் கொடையாளியினால் மறுவாழ்வு பெற்ற அந்த நோயாளியின், அவரது குடும்பத்தினர் அடைந்த சந்தோஷத்தைப் பார்த்தபோது ஆபத்து நிறைந்த முடிவை எடுத்தது சரியானது தான் என்ற எண்ணம் எழுந்தது என்கிறார் டாக்டர் ஒலித்செல்வன் (Dr Olithselven)

கர்நாடக மாநிலத்திலிருந்து சென்னைக்கும், அந்த மாநிலத்தின் பல பகுதிகளுக்குச் சொகுசு பஸ்களை இயக்கிக் கொண்டிருக்கும் நிறுவனம் தமிழகத்தைச் சேர்ந்த கேபி என்.
இவர்களது பஸ் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையத்தில் போராளிகள் புகுந்து 52 பஸ்களையும் பெட்ரோல் விட்டு எரித்துவிட்டார்கள். பஸ்களை இழந்த வேதனையிலும் சேலத்திலிருக்கும் அந்த நிறுவனத்தின் தலைமையகத்தில் தங்கள் டிரைவர்கள், ஊழியர்கள் என்ன வானார்கள்? என்ற கவலையில் இருந்தனர்

மறுநாள் காலையில்நாங்கள் பத்திரமாக ஹோசூர் வந்துவிட்டோம்என்று அவர்கள் சொன்ன தகவல் தலமையகத்தினருக்கு ஆச்சரியமாக இருந்தது. எப்படி நிகழ்ந்தது இது?
கர்நாடகாவைச் சேர்ந்த சாமராஜ்பேட் பகுதியில்சிவா டிராவல்ஸ்என்ற நிறுவனம் நடத்தி வரும் சிவண்ணா என்பவர், இந்த ஓட்டுநர்களை தன்னுடைய லாரிகளில், பத்திரமாக ஓசூருக்கு அழைத்துவந்துவிட்டார். .
என்னுடைய டிராவல்ஸ் நிறுவனத்தின் சேவை, பெரும்பாலும் தமிழகத்தில் நடைபெறுகிறது. தமிழ்நாட்டு மக்களின் உப்பை நான் சாப்பிட்டிருப்பதாக என் மனதில் தோன்றியது. கர்நாடகத்தில் தவித்த தமிழ் ஓட்டுநர்களை காப்பற்ற வேண்டியது என்னுடைய கடமை என்று நினைத்தேன். அதனால்தான் அவர்களைப் பாதுகாப்பாக ஓசூர் கொண்டு சேர்த்தேன், என்கிறார் நெகிழ்ச்சியுடன் சிவண்ணா பாதுகாப்பாகத் தமிழ்நாட்டிற்கு சென்ற ஓட்டுநர்கள் அனைவரும், அவர்களது வீடுகளுக்குத் திரும்பியதும் தனக்கு  தொலைபேசியில் அழைத்து நன்றி தெரிவித்தபோது   மிகவும் மகிழ்ச்சியாக் இருந்தது  என்கிறார் திருசிவண்ணா.
மனிதாபிமான அடைப்படையில் கூடக் காவிரி நீரை நமக்குத் தராமல் கர்நாடக அரசு தடுக்கலாம். ஆனால் நல்ல மனிதர்களின் மனதிலிருந்து பெருகி வரும் மனிதாபிமான ஆற்றை  அவர்களால்  தடுக்க முடியாது


கல்கி 02./10.16 இதழில் எழுதியது 


கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்