26/7/17

ஒரு மஹாராஜா ஏழையாகிவிட்டார்.


உலகம் முழுவதும் உள்ள 41  நகரங்களையும் இந்தியாவில் 72 நகரங்களையும் இது இணைக்கும் ஏர் இந்தியாவின் மஹாராஜாவிற்கு சொந்தமாக 140 விமானங்கள் இருக்கின்றன. ஆனால் ஏர் இந்தியா நிறுவனம், 52,000 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்குகிறது. ஒவ்வொரு மாதமும் ஏர் இந்தியா ஈட்டும் வருமானத்தைவிட 300 – 400 கோடி ரூபாய் அதிக செலவு செய்கிறது.  இந்த நிலையில் எந்த ஒரு தனியார் நிறுவனமும் இயங்க முடியாது.
140 விமானங்கள், 2,000 விமானி¬கள், 2,000 தொழில்நுட்ப வல்லுனர்கள்,  விமானங்களை பழுதுபார்க்கச் சொந்த இடம், விமானங்களை நிறுத்துவதற்கு முன்னுரிமை என்று  மிகப்பெரிய கட்டமைப்பை கொண்டஏர் இந்தியா கடுமையான நஷ்டத்தை சந்திக்கக் காரணம் என்ன?  சுருக்கமாகச் சொல்வதானால் சொல்லுவதானால் நிர்வாக குளறுபடி, அரசியல்வாதிகளின் தலையீடு, அதிகாரிகளின் மெத்தனம், போட்டி மனப்பான்மை இல்லாமல் இயங்கியது. தான்.
1990களில் விமானச்சேவைத் தனியாருக்குத் திறந்துவிடப்பட்ட பின், ஏர்இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனங்களை நவீனமயமாக்குவதை மத்திய அரசு சரியாக திட்டமிட்டுச் செயலாற்றவில்லை.  குறிப்பாக, ஏர்இந்தியாவிற்குப் புதிதாக 26 விமானங்களை வாங்க வேண்டும் என அந்நிறுவனம் 1996இல் வைத்த கோரிக்கையை எட்டு ஆண்டுகளுக்குப் பிறகுதான் மத்திய அரசு பரிசீலிக்கத் தொடங்கியது.   இந்த காலகட்டத்துக்குள்   நாட்டின் மிகப்  பெரிய விமான நிறுவனமாக இருந்த ஏர் இந்தியாவின் வளர்ச்சி  உள்நாட்டுச் சந்தையில் 13 சதவீதமாகச் சுருங்கி விட்டது. ஜெட் ஏர்வேஸ்,  இண்டிகோ போன்ற தனியார் நிறுவனங்கள் நல்ல வளர்ச்சி கண்டன.
தாமதமாக விமானங்கள் வாங்க முடிவு செய்தபோது அரசியல் விளையாடியது.  தேவைக்கு அதிகமாக விமானங்கள் வாங்கித்-தள்ளியது.. ஐ.மு.கூ.,வின் முதல் ஆட்சியில், 70,000 கோடி ரூபாய் செலவில், 111 விமா¬னங்¬களை வாங்க முடிவு செய்யப்பட்டது. ஏர் இந்தியா 33,197 கோடி ரூபாய் செலவில் 50 விமானங்கள் வாங்குவதற்கு, போயிங் நிறுவனத்தோடு ஒப்பந்தம் போட்டது. கடன் வாங்கி விமானங்களை வாங்குவது, பின்னர் வருவாய் ஈட்டி கடனை திருப்பிச் செலுத்துவது என்பதே திட்டம். ஆனால், அது நடைபெறவில்லை.  மாறக கடன் தான் அதிகரித்தது.
இவ்வளவு விமானங்கள் வாங்கியதற்கு காரணம் தனியார் போட்டியை சமாளிக்க முடியாமல் தவித்துக்கொண்டிருந்த இந்தியன ஏர்லயன்ஸ்   நிறுவனத்தை ஏர் இந்தியாவுடன் இணைத்து ஒரே நிறுவனமாக்கியதனால்  என்று சொல்லப்பட்டது  ஆனால் விளைவுகள் வீபரிதமாக இருந்தது. 2002 – 03ல் இவ்¬விரு விமான நிறு¬வ-னங்¬களின் மொத்த நஷ்¬டம், 63 கோடி ரூபாய்¬ தான். ஆனால், 2010 – 11ல் அதுவே 7,000 கோடி ரூபா¬யைத் தொட்¬டது. அடுத்த ஐந்து ஆண்¬டு¬களில் 20,000 கோடி ரூபா¬யைத் தாண்டியது. ஏர் இந்தியாவால், ஏற்கனவே உள்ள கடன்களுக்கு வட்டியைக் கூட செலுத்த முடியவில்லை. இந்த மாதிரி நிலையிலிருந்த  மல்லையாவின் நிறுவனத்தை வராகடன் பட்டியலில் சேர்த்து போராடத்தொடங்கியிருக்கும் வங்கிகள் இதில்அப்படி செய்ய முடியாது காரணம் இது பொதுத்துறை. இதன் கடனகள் அரசால் உத்தரவாதமளிக்கபட்ட ஒன்று.  அதாவது என்றாவது ஒரு நாள் கடன் திரும்பி வந்துவிடும்- நீங்களும் நானும் கட்டும் வரிப்பணத்திலிருந்து அரசு கொடுத்துவிடும்
 செயல்பாட்டு திறன்களை  மேம்படுத்தி, செலவுகளைக் குறைத்து, 2017க்குள் லாபம் ஈட்ட வேண்¬டும் என்ற  நிபந்தனைகளுடன் மத்திய அரசு, ஏர் இந்தியாவுக்கு 30 000 கோடிகள்  கடன் கொடுத்தது. 2015 –16ல் மட்டும் 105 கோடி ரூபாய் லாபம் கிடைத்தற்கு காரணம்  விமான எரிபொருள் விலை சரிவு. இப்போது மீண்டும் நஷ்டம்.
“ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த தடங்களில் கூடுதல் விமானங்களை இயக்குவதற்காக 16 விமானங்களை குத்தகைக்கு எடுத்த வகையில் 2005க்கும் 2010க்கும் இடையே ரூ 4,234 கோடி இழப்பை ஏர் இந்தியா நிறுவனம் சந்தித்திருக்கிறது” என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. தேவைப்பட்டதை விட மிக அதிகமாக எண்ணிக்கையில் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தங்களை போட்டுக் கொண்டதால் ரூ 68,000 கோடி இழப்பு ஏற்பட்டது என்று சிஏஜி அறிக்கை தெரிவிக்கிறது.

ஒரு விமான நிறுவனம் கடன் இல்லாமல் இயங்கமுடியாது. .  ஜெட் ஏர்¬வே¬ஸுக்கு உள்ள கடன், 7,223 கோடி . இண்டிகோவின் கடன் 3,201 கோடி ரூபாய் . ஆனால் ஏர் இந்தியாவின் கடன் அதன் வருவாயாக மதிப்பிட்டிருக்கும் தொகையை விட பலமடங்கு அதிகம்.  சுருக்கமாக சொல்லுவதானால் ஏர் இந்தியா திவாலாகிக்கொண்டிருக்கிறது. வேறு வழியில்லாமல், ஏர் இந்தியாவை விற்றுவிட வேண்டிய நிலை  இன்று எழுந்திருக்கிறது. இந்நிலையில் ஏர் இந்தியாவின் பங்குகளை விற்பனை செய்வதற்கு மத்திய அமைச்சரவை கடந்த மாதம்  ஒப்புதல் வழங்கியிருக்கிறது. இந்த முடிவு இந்த அரசுக்குப் புதிதல்ல  கடந்த 2001ம் ஆண்டே ஏர் இந்தியாவின் 60 சதவீத பங்குகளையும், இந்தியன்  ஏர்லைன்சின் 51 சதவீத பங்குகளையும் விற்க அப்போது ஆட்சியில்   இருந்த பாஜ கூட்டணி அரசு முடிவு செய்தது. இதற்கு நாடு முழுவதும் எழுந்த எதிர்ப்பு காரணமாக அப்போது  அது கைவிடப்பட்டது.  அதே முடிவு இன்று வேறு வடிவம் எடுத்திருக்கிறது.
“இந்தியாவின் 86 சதவீத விமானச் சேவையை தனியாரால் வழங்க முடி-யும் என்றால், 100 சதவீதத்தையும் அவர்களால் வழங்க முடியாதா?” என்று  கேட்கிறார் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ,
சரி இவ்வளவு நஷ்டத்தில் இருக்கும் இந்த நிறுவனத்தை யார் வாங்குவார்கள்?  கடன்களை தள்ளுபடி செய்துவிடுவார்களா? வட்டியை மட்டும் தள்ளுபடி செய்வார்களா? அதெற்கெல்லாம் ரிசர்வ் வங்கி அனுமதிக்குமா? போன்ற கேள்விகள் எழுந்திருக்கின்றன. அரசு எப்படி, எவ்வளவு பங்குகளை விற்கப்போகிறது என்பதை முடிவு செய்ய ஒரு குழுவை அமைத்திருக்கிறது.
டாடா குழு¬மம் ¬ ஏர் இந்தியாவை வாங்க விருப்பம் தெரிவித்திருக்கிறது.. அதற்கு காரணம் டாடா நிறுவனத்தின்  நிதி வலிமை மட்டுமில்லை..  ஏர் இந்தியாவை துவக்கியதே ஜே.ஆர்.டி. டாடா¬ தான். 1932ல் டாடா ஏர்-லைன்ஸ் என்ற பெயரில் ஆரம்பித்த விமான நிறுவனமே, 1953ல் நாட்டுடைமை ஆக்கப்பட்டு ஏர் இந்தியா ஆனது. அன்றைய பிரதமர் நேருவின் விருப்பத்தை ஏற்று  நீண்ட அதன் தலைவராக  இருந்தார்.ஜேஆர் டி.   அந்த சென்டிமென்ட் ஒரு காரணம். மேலும் டாடா நிறுவனம் ஏர் ஆசியா  என்ற நிறுவனத்திலும் நிறைய முதலீடு செய்திருக்கிறது.
 இன்று டாடா மட்டுமல்ல, இன்னும் மூன்று விமான நிறுவனங்கள் ஏர் இந்தியாவை வாங்க விரும்புகின்றன என்ற செய்திதான் ஆச்சரியத்தைத் தருகிறது.  இந்தியாவிலும், வெளிநாடுகளிலும்  ஏர் இந்தியாவிற்கு இருக்கும் கட்டமைப்புகளை இன்று உருவாக்கப் பெருமளவில் முதலீடு செய்ய வேண்டியிருக்கும் என்பதால் விமான நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன என்கின்றனர் வல்லுனர்கள். மேலும்    சிறந்த தலைமை, கண்டிப்பான நிர்வாகம், திறமையான நிதிமேலாண்மையினால் 2 அல்லது  3 ஆண்டுகளில் நிலைமையைச் சீராக்கி லாபம் ஈட்ட முடியும் என இந்த நிறுவனங்கள் நம்புகின்றன. 1983 ல் இங்கிலாந்தின் பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் சந்தித்த இதே நிலை தனியார் நிர்வாகத்தால் 1987ல் லாபம் ஈட்டும் நிறுவனமாக மாறிய முன்னுதாரணத்தைக் காட்டுகின்றனர்.
1953ல் விமானச் சேவையை அரசுடைமையாக  அறிவித்து அரசு  டாடா ஏர்லைன்ஸை எடுத்துக்கொண்டபோது  ஜே ஆர் டி டாடா சொன்னது “மக்கள் நலனுக்காக  விமான சேவை நாட்டுடமையக்கப் படுவதை நான் ஏற்கிறேன். ஆனால் இந்தியாவின் புதிய அரசாங்கத்துக்கு, விமான நிறுவனத்தை நடத்துவதில் எந்த அனுபவமுமில்லை. அதனால் பிரச்சனைகளை சந்திப்பார்கள்.”
இந்த வார்த்தைகள் இன்றும் உண்மையாக இருப்பது தான் ஆச்சரியம்
kalki 30/07/17

















கருகிய கனவுகள்


மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் மருத்துவர் ஆக முடியாது 
தமிழக அரசு கடந்த சில மாதங்களாக,மாணவர்களையும், பெற்றோர்களையும் குழப்பி வந்த நீட்  (NEET) பிரச்சனையில் உயர் நீதிமன்றம் ஒரு அதிரடி தீர்ப்பைக் கொடுத்திருக்கிறது. இதன் மூலம் நீட் தேர்வில் தகுதிபெறாத தமிழக மாணவர்கள் +2 வில் மிக அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் கூட   மருத்தவ கல்லூரிகளில் சேரமுடியாது. 
 நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு 90-க்கும் மேற்பட்ட நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தன. தமிழகத்தில் மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு கிடையாது.
இந்த நடைமுறைகளை மாற்றும் வகையில் மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய அளவில் ஒரே நுழைவுத் தேர்வை நடத்த இந்திய மருத்துவ கவுன்சில், இந்திய பல் மருத்துவ கவுன்சில் ஆகியவை முடிவு செய்தன. இதை எதிர்த்து வேலூர் சிஎம்சி உள்ளிட்ட தனியார் மருத்துவக் கல்லூரிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்கில்  கடந்த 2013 ஜூலை 18-ம் தேதி தேசிய நுழைவுத் தேர்வு நடத்தத் தடை விதித்துத் தீர்ப்பளித்திருந்தது.இந்தத் தீர்ப்பை எதிர்த்து இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததின் விளைவாக  2013ல் பிறபித்த தடையுத்தரவை ரத்து செய்து தேசிய அளவில் ஒரே மருத்துவ நுழைவுத் தேர்வை நடத்த  உச்ச நீதி மன்றம் அனுமதி அளித்தது 
இந்த  உச்சநீதிமன்றத் தீர்ப்பு இந்திய மருத்துவ கல்வியில் ஒரு மிகப்பெரிய மாறுதலை உருவாக்கியது இளநிலை படிப்புகளுக்கு மட்டுமல்லாது முதுநிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கும் நாடு முழுவதும் ஒரே முறையில் நடத்தப்படும் நீட் தேர்வு தமிழகத்திலும் மத்திய அரசு கட்டாயமாகி உள்ளது. என்றும் அறிவித்துள்ளது. இந்த நுழைவுத் தேர்வுகளை நடத்துவதற்காகவே தனி அமைப்பையும் உருவாக்கியுள்ளது.  கடந்த மே மாதம் 7ம் தேதி நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் 11.3 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர்.      தமிழகத்தில்  எழுதியவர்கள் 83000க்கும் மேற்பட்டவர்கள் அதில் தேர்வு பெற்றிருப்பவர்கள் 32570 பேர். இதில்மிகப் பலர் சிபிஎஸ் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் காரணம் இந்த நீட் தேர்வின் கேள்விகள் 80% சிபிஎஸ் பாடத்திட்டத்திலிருந்து கேட்கப்பட்டவை.
  மாநில பாடத்திட்டத்தில் +2 படித்த மாணவர்கள் இந்தத் தேர்வை சரிவரச் சந்திக்க முடியாமல் போய்விட்டது   என்பதைக் கணித்த அரசு  தமிழக அரசுஇந்நிலையில் நீட் தேர்விலிருந்து தமிழக அரசின் இளநிலை, முதுநிலை மருத்துவ இடங்களுக்கு விலக்கு பெறுவதற்காக தமிழக சட்டமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றி குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பியது. இதன் மூலம் தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு வாங்கிடலாம் எனஅறிவித்தும் விட்டது. ஆனால்  இரண்டு சட்ட மசோதாக்களுக்குக் குடியரசுத்தலைவரின் ஒப்புதலைப் பெற  மத்திய அரசு  அனுப்ப வில்லை. தங்களது சொந்தப் பிரச்சனைகளில் மத்திய அரசின் தயவை நாடி நிற்கும். மாநில அரசும் போதிய அழுத்தத்தை மத்திய அரசுக்குக் கொடுக்க வில்லை
. இவ்வாண்டு, நீட் மூலம் தான் தமிழ்நாட்டிலும் மாணவர் சேர்க்கை என அறிவித்து அதற்கான பணிகளை வாரியம்  துவங்கியிருந்தது. இந்த விஷயத்தில் தங்கள் முயற்சிகள் தோல்வியடைந்ததை உணர்ந்த மாநில அரசு அதை மறைப்பதற்காக, மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்குத் தனி ஒதுக்கீடு கொண்டு வர  ஒரு அரசாணை பிறப்பித்தது. அதாவது, தமிழக அரசின் மருத்துவக் கல்லூரிகளில் மத்திய அரசின் அகில இந்திய தொகுப்பிற்கு வழங்கப்படும் 15 விழுக்காடு இடங்கள் போக மீதி உள்ள 85 விழுக்காடு இடங்களில் 15 விழுக்காடு இடங்களை சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கும், 85 விழுக்காடு இடங்களை மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கும் வழங்கிட அரசாணை வெளியிட்டது.

இந்த அரசாணையைத்தான்  செல்லாது எனச் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தீர்ப்புக்கான முக்கிய காரணங்களாக நீதி மன்றம் சொல்லியிருக்கும் விஷயங்கள் இரண்டு. ஒரே வகுப்பில் படித்த மாணவர்களிடையே வெவ்வேறு பாடத்திட்டங்களில் படித்தவர்கள் என்பதால் தகுதி நிலையிலேயே  வேறுபாடுகாட்டுவது  எல்லோருக்கும் சமத்தவம் என்ற நிலைக்கு மாறுபட்டதாகிவிடும். இரண்டாவது இந்த அரசாணையை  வெளியிட்டிருப்பது அரசின் செயலாளர்கள். ஒரு அரசின் கொள்கை முடிவுகள் அமைச்சரவையால் பரிசிலிக்கபட்டு ஒரு ஆணையாக வெளியிடப்பட்டிருக்க வேண்டும் அல்லது  சட்டமன்றத்தில் சட்டமாக அறிவிக்கப்பட்டிருக்க வேண்டு,ம்  ஆனால் இது அப்படிச் செய்யப்படவில்லை. 
தமிழக அரசு  உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யப் போவதாக அறிவித்திருக்கிறது  
ஆனால் . இப்படி வெவ்வேறு பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்காகத் தனி இட ஒதுக்கீடு வழங்குவது அரசியல் சட்டரீதியாக செல்லுமா? தமிழக பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு மட்டும்  85 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவதை உச்ச நீதிமன்றம் ஏற்குமா? என்பது  மிகப்பெரிய கேள்விக்குறி.  ஏனெனில், அரசியல் சட்டப்படி, சமூக ரீதியாக கல்விரீதியாக பின்தங்கியவர்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு வழங்க முடியும். இப்படிப்பட்ட ஒதுக்கீடுகள் சட்ட ரீதியாகச் செல்லுபடியாகும் எனச்சொல்ல முடியாது. மேலும் 50 விழுக்காட்டுக்கு மேல் எந்த இட ஒதுக்கீடும் செய்யக்கூடாது எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்புகள் வழங்கியுள்ளது, ஏற்கனவே, குஜராத் உயர் நீதிமன்றம் இதுபோன்ற ஒரு ஒதுக்கீட்டை ரத்து செய்துள்ளது. எனவே, தமிழக அரசின் இந்த ஒதுக்கீடு  அறிவிப்பு ஒரு கண்துடைப்பு நாடகம். .

மாநில அரசு என்ன செய்ய வேண்டும்?                            
இதைக் கெளரவ பிரச்சனையாக கருதாமல் நீட் தேர்வை ஏற்று நமது மாநில பாடதிட்டங்களை மாற்றி அமைத்து தமிழக கல்வித்தரம் சிபிஎஸ் பாடத்திட்டத்தைவிட உயர்ந்தது என நீருபிக்க வேண்டும் 
 நீட் தேர்வு ஒரு தகுதிகாண் தேர்வுதான்(qualifying test).அது ஒரு போட்டித் தேர்வு அல்ல (Not a competitive test). என்பதை உணர்ந்து நமது மாநில மாணவர்களை அதற்கு தயாரிக்கும் வகையில் பாடத்திட்டங்கள்  செழுமையாக்கப்படவேண்டும். இதற்கான அறிவிப்புகளை தமிழக அரசு அண்மையில் செய்திருக்கிறது. இதை அறிவிப்போடு நிறுத்தாமல் உண்மையாகவே செயலாக்கவேண்டும். 
குறைந்த மதிப்பெண் பெற்ற பணக்கார வீட்டுப் பிள்ளைகள், ஒரு கோடி முதல் ஒன்றரைக் கோடி ரூபாய்வரை கொடுத்து, தனியார் கல்லூரி மற்றும் நிகர்நிலைப்பல்கலைகளில் மருத்துவ இடங்களைப் பெறும்கொடிய வழக்கம் இந்தத் தேர்வு முறையினால்  முடிவுக்கு வருகிறது. பத்துக்கோடி ரூபாய்கொடுத்தாலும், நீட் தேர்வில் தேறாவிட்டால் மருத்துவஇடம் கிடைக்காது. என்று எழுந்திருக்கும் நிலையை வரவேற்க வேண்டும்.
சட்டம். உச்ச நீதிமன்ற தீர்ப்புகள், புதிய கல்விக் கொள்கை எனப் பல விஷயங்கள் சம்பந்தப்பட்டிருக்கும் இந்தப் பிரச்சனையில் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் மருத்தவ கல்லூரி கனவுகளுடன் மாநில பாடத்திட்டத்தில் இந்த ஆண்டு மிக நல்ல மதிப்பெண்கள் பெற்றிருக்கும்  மாணவர்களும், கருகிய அவர்களின் கனவுகளை கண்டு கண்ணீர் விடும் அவர்கள்  பெற்றோர்களும் தான்.

19/7/17

சீனாவின் புதிய “பட்டுபாதை”



சுமார் 2000 ஆண்டுகளுக்கு மேலாக மேற்குலகையும் சீனாவையும் இணைத்த  ஒரு வர்த்தக பாதை  சினாவின் “சில்க் ரூட்” (–பட்டுப் பாதை) என்பதை வரலாறு நமக்குச்சொல்லுகிறது.  இந்தத் தொன்மையான பட்டுப்பாதையின் வழித்தடத்தில் சீனா, இந்தியா, இலங்கை இணைந்திருந்தன. சீனாவைச் சேர்ந்த ஃபாஹியான் போன்ற  புத்தமத அறிஞர்கள்  இந்தப் பாதையில் பயணித்துதான் இலங்கைக்கு புத்தமதத்தை எடுத்துச்சென்றனர். காலப்போக்கில் நாடுகளுக்கிடையே நிலவும் இன்றைய நவீன எல்லைக்கோடுகள் இந்தப் பாதையை வெறும் சரித்திரபுத்தகங்களில் இடம் பெறும் ஒரு வார்த்தையாக மட்டும்  மாற்றிவிட்டது 

இந்த சில்க் ரூட் எனும் பாரம்பரியப் பாதையை மீண்டும்  துவக்கி தங்கள் பெருமை மிக்க கலாச்சாரத்தை தொடரப்போவதாக சிலஆண்டுகளுக்கு   முன் சீன அரசு அறிவித்திருந்தது.   2013 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இந்தத் திட்டத்திற்கு  'ஒன் பெல்ட், ஒன் ரோடு' (One Belt, One Road-OBOR))   என்று பெயரிட்டது.  
கடந்த 3 ஆண்டுகளாக மிகத் தீவிரமாக இந்தத் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது.  பாரம்பரியமான  பட்டுப்பாதையாக இல்லாமல்  உலகப் பொருளாதார குறியீட்டில்(GDP) 60%த்தை நிர்ணயிக்கும் முக்கிய 58 நாடுகளைத்  தரை, கடல் வான் வழியாக இணைக்கும் ஒரு மிகப்பெரிய திட்டமாக அறிவித்திருக்கிறது.  OBOR திட்டத்தின்  கட்டுமானங்களின் மதிப்பீடு  1  டிரில்லியன் டாலர்கள். (ஒரு லட்சம் கோடி டாலர்கள்)
முதல் கட்டமாக  சீனாவின் முக்கிய நகரான குன்மிங் மற்றும் கொல்கத்தா இடையே, அதிவேக ரயில்கள் செல்லும் வழித்தடத்தை அமைப்பதற்கு, சீனா  ஒரு திட்டத்தை முன் வைத்தது.. இந்த வழித்தடம், வங்கதேசம், மியான்மார் வழியே செல்லும் என்பதால், 4 நாடுகளின் வர்த்தகத்தை, மேம்படுத்துவதற்கு, இது உதவும் என்று  சொல்லி 2,800 கி.மீ தூரத்துக்கு அதிவேக ரயில் தடத்தை அமைக்க, 4 நாடுகளின் பிரதிநிதிகளின் கூட்டம் ஒன்றை சீனா  ஏற்பாடு செய்தது. இந்தியா உடனடியாக ஏற்காத இந்த  யோசனையை மற்ற நாடுகள் வரவேற்றன. 
 இந்த பிரம்மாண்டமான திட்டத்தின் அடுத்த  முக்கிய கட்டமாக லண்டனில் இருந்து சீனா வரையிலான  12.500 கி.மீ தொலைவுள்ள வழித்தடத்தில் சரக்கு ரயிலை வெற்றிகரமாக இயக்கிச் சாதித்துள்ளது சீனாவின் ரயில்வே துறை.                                                                                                                                              சீனா ரயில்வே கார்ப்பரேஷனின் ஈஸ்ட் விண்ட் சரக்கு ரயில் கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி லண்டனில் இருந்து புறப்பட்டது. 20 நாள் பயணத்திற்குப் பின்னர் சீனாவின் முக்கிய வர்த்தக நகரமான ‘யிவு’வை அடைந்தது.   மறுபடியும் பிறந்திருக்கும் சில்க் ரூட்டின் வெற்றியாக வர்ணிக்கப்பட்டது இந்தப் பயணம்.                                        லண்டனில் இருந்து புறப்பட்ட இந்த சரக்குரயில், பிரான்ஸ், பெல்ஜியம், ஜெர்மனி, போலந்து, பெலாரஸ், ரஷ்யா மற்றும் கஜகஸ்தான் வழியாகச் சீனாவை வந்தடைந்துள்ளது. இதே போல் 2014ஆம் ஆண்டு சீனாவில் இருந்து ஸ்பெயினின் மேட்ரிட் நகருக்கு ஒரு  சரக்குரயில்  இயக்கப்பட்டது.  இந்தச் சோதனை ஓட்டங்களைச் தொடர்ந்து  கடந்த மே மாதம் பிஜெய்ங் நகரில் இந்த “ஒன்பெல்ட். ஒன்ரோட்”  திட்டத்திற்காக ஒரு உச்சி மாநாட்டைக் கூட்டியது சீனா.   29  நாடுகளின் தலைவர்கள் உள்ளிட்ட 130 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற இந்த மாநாட்டில் 70 நாடுகள் இந்தத் திட்டத்தில்  சீனாவுடன் ஒத்துழைக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கின்றன.  இங்கிலாந்து ஜெர்மனி போன்ற வலிமையான நாடுகள் பங்கேற்ற இந்த மாநாட்டில் இந்தியாவும் அமெரிக்காவும் பங்கேற்க வில்லை. சீனாவுடன் கருத்து வேறுபாடு உள்ள வியட்நாம், இந்தோனேசியா போன்ற நாடுகள்  பங்கேற்றன. பாகிஸ்தான், நேபாளம், இலங்கை உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். 
. நமது பக்கத்துவீட்டுக்காரர்களை இதில் பங்கேற்பதை தவிர்க்க நமது அரசால் எடுக்கப்பட்ட ராஜதந்திர முயற்சிகள் வெற்றியளிக்க  வில்லை. பாகிஸ்தான் மகிழ்ச்சியுடன் வரவேற்றிருக்கிறது.. திட்டம் மிக வேகமாக உருவெடுத்துக்கொண்டிருக்கிறது. 
“பாரம்பரிய கலாச்சார பாதை என்பதெல்லாம்  கண்துடைப்பு.''சீனாவின் '' ஒன் பெல்ட் ஒன் ரோடு'' எனப்படும் சில்க் ரூட் திட்டம்  உள்நோக்கம் கொண்டது என்கிறார் அமெரிக்காவின் பசிபிக் கப்பற்படை கமாண்டர் ஸ்காட் ஸ்விப்ட்.  சீனா, இந்திய இடையே கடல் எல்லைப் பகுதியில் தொடர்ந்து சிக்கல் இருந்து வருகிறது. இந்திய கடற்பரப்பை தொடர்ந்து சீனா சொந்தம் கொண்டாடி வருவதுடன், தெற்கு சீனக் கடல் பகுதியிலும் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. இது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துக்கொண்டிருக்கும் ஒரு பிரச்னை. . மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் இருக்கும் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களைக் குறிவைத்து நிலம் மற்றும் கடல் வழியாக சில்க் ரோடு என்ற திட்டத்தை பெரிய பொருளாதார செலவில் கொண்டு வருகிறது சீனா. இந்த திட்டம்.   வெறும் வணிகம் மட்டும் குறிக்கோளாகக்கொண்டது இல்லை அதற்கும் அப்பாற்பட்ட பல விஷயங்களைக்கொண்டது. என்கிறார் இவர். 

இதில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கவனத்தில் கொள்ளப்படவில்லை என்பது இந்தியா பங்கேற்காதற்காக முதலில் சொல்லபட்ட காரணம். ஆனால் உண்மையான காரணம்  பின்னால் வெளியானது.
 சீனா பாகிஸ்தானை இணைக்கும் பொருளாதார நெடுஞ்சாலை இந்தியா சொந்தம் கொண்டாடும் பல்திஸ்தான் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய இடம் வழியாகப் பொருளாதார நெடுஞ்சாலை அமைக்கச் சீனா திட்டமிட்டிருப்பதை இந்தியா ஏற்கவில்லை.  பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாகச் செல்லும் இந்த நெடும்பாதை குறித்து இந்தியா தனது ஆட்சேபணைகளை  பதிவு செய்திருக்கிறது.
“அண்டை நாடுகளின் வளர்ச்சிக்குச் சீனா மேற்கொள்ளும் பங்களிப்பே இது, சீனாவின் ஆக்கப்பூர்வமான பங்களிப்பான இந்தப் பாதை அரசியல் மற்றும் எல்லை தகராறு குறித்தது அல்ல, பொருளாதாரப் பாதை மட்டுமே” என்கிறார்  சீனாவின், வெளியுற  அமைச்சர்  “

உலகின் மிக சக்தி வாய்ந்த  முதல் நாடாக, சீனா இன்னும் 10 ஆண்டுகளுக்குள் ஆகி விட  வேண்டும் என்ற  சீன அதிபர் ஜின்பிங்கின் கனவின் வடிவமே அவருடைய இந்தச்  செல்லத் திட்டம்.  இந்த மிகப்பெரிய தடையில்லாத பாதையை நிறுவதின் மூலம்.  பல ஆசிய, ஐரோப்பிய நாடுகளை தங்கள்  வணிக சாம்ராஜ்யத்தின் எல்லைக்குள் கொண்டுவந்து  சீனாவின் உற்பத்திக்கு மிகப்பெரிய சந்தையை உருவாக்கி அதன் மூலம்  சீனாவின் பொருளாதார வலிமையைப் பெருக்குவதுதான் திட்டம். அதைப்புரிந்து கொண்டதனால்தான் அமெரிக்கா எதிர்க்கிறது. எல்லைப் போரில் எழுந்த பரஸ்பரம் நம்பிக்கையற்ற நிலையினால் இந்தியா ஏற்க மறுக்கிறது.    என்று ஐரோப்பிய பத்திரிகைகள் எழுதுகின்றன. 
60 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் எல்லைப் பிரச்சனையை முடிவுக்கொண்டுவர இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் தருவதை இந்தியா ஒரு நிபந்தனையாக பயன்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் ஒரு கருத்து எழுந்திருக்கிறது.
சீனாவின் புதிய பட்டுப்பாதை முழுமை அடைய இந்தியா ஒத்துழைக்கப்போகிறதா? அல்லது ஒதுக்கித் தள்ளபோகிறதா??
திறமையான இரண்டு  செஸ் ஆட்டகாரகளின் இறுதி ஆட்டத்தை கவனிப்பது போல பல ஆசிய, ஐரோப்பிய நாடுகள் கூர்ந்து கவனித்துக்கொண்டிருக்கின்றன.

 கல்கி 22/07/17ல் எழுதியது

12/7/17

கடவுளை வீட்டிற்கு கொண்டு வருவோம்







சர்வ தேச சிலைகடத்தல் மன்னன் கபூர் கைது. பல கோடிகள் மதிப்புள்ள  பழமையான சிலைகள் கைப்பற்றப்பட்டன. தங்கள் நாட்டுக்குக் கடத்தப்பட்டு வந்த 1000 ஆண்டு பழமையான நடராஜர் சிலையை ஆஸ்திரேலியா பிரதமர் நமது பிரதமரிடம் கொடுத்தார் போன்ற  தலைப்புச்செய்திகளை அவ்வப்போது பார்க்கிறோம். 
அபின் கஞ்சா போன்ற போதைப்பொருட்களை கடத்துவதைவிட சிலைகடத்தல் மிகப்பெரிய லாபத்தைக் கொடுக்கும் பிஸினஸ் என்பதால் உலகின் பல இடங்களில் கபூர்கள் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு இந்தியா ஒரு முக்கிய டார்க்கெட். தமிழக காவல் துறையில் இதற்காக உயர் அதிகாரியின் தலைமையில் சிலைகடத்தல் தடுப்பு பிரிவு ஒன்று கடந்த சில ஆண்டுகளாக இயங்கிவருகிறது. 
ஆனால்  தன்னாலார்வர்கள் குழு ஒன்று மிகத்தீவிரமாக இந்த விஷயத்தில் பணியாற்றி அரசுக்கு உதவுகிறார்கள் என்பது பலர் அறியாத  விஷயம்.


திரு விஜய்குமார் சென்னையைசேர்ந்தவர்.  தற்போது சிங்கப்பூரில் காஸ்ட் அக்கடெண்ட் ஆகப் பணியாற்றிக்கொண்டிருப்பவர். இவரது  இணைய தளம் இந்தியா பிரைட் பிராஜெக்ட்.(INDIA PRIDE PROJECT) 2013லிருந்து  இயங்கும் அந்தத் தளத்தில்  இந்தியாவில் காணாமல் போன கடவுள் உருவங்களின் படங்களை வெளியிட்டு விபரங்களைப் பதிவு செய்து வருகிறார். “நம் கடவுள்களை திருப்பிவீட்டிற்கு கொண்டுவருவோம்”  என்ற திட்டத்தை அறிவித்திருக்கிறார்கள்.  இதன்படி   ஏதாவது பெரிய மியூசியங்களில் அல்லது ஆர்ட் டீலர் என்று அழைக்கப்படும் விற்பனையாளர்களின் கேட்லாக்களில் தெய்வச்சிலைகள்  இருந்தால் இவருக்குத் தெரியப்படுத்த வேண்டும். அதை இவர்களின் குழு ஆராய்ந்து சம்பந்தபட்டவர்களைத்தொடர்பு கொண்டு மீட்கும் முயற்சியில் இறங்குகிறார்கள். இதைத்தவிர நேரடியாகவும் இவர்கள் களத்தில் மிகச் சிறப்பான பணியைச் செய்கிறார்கள். பல மியூசியங்களிலிருக்கும் சிலைகளை ஆராய்ந்து அது எங்கிருந்து வந்திருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்கிறார்கள்:. இதற்காக இவர்கள் ஜேம்ஸ்பாண்ட் பாணியில் ரகசிய அதிரடி வேலைகளையும் செய்கிறார்கள். சம்மந்தப்பட்ட இடங்களில் தொடர்புகளை உருவாக்கிக்கொள்வது அவசியமான ஆவணங்களின் நகல்களைப்பெறுவது போன்ற பணிகள்.  இவருடைய குழுவில் சரித்தஆராய்ச்சியாளார். சிலையின் வயதைக்கணக்கிடுபவர். சந்தை விலை எவ்வளவு என மதிப்பிடுபவர்,   போன்ற எக்ஸ்பர்ட்களும்.  இருக்கின்றனர்.  அனைவரும் தன்னார்வலர்கள். 
 தமிழக போலிஸ் இதுவரை மீட்ட சிவபுரம் நடராஜர்  (11 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்ட 10ம் நூற்றாண்டு சிலை), தஞ்சை பிகதீஸ்வரர் கோவிலிருந்து காணாமல் போன  ஐம்பொன் கணேசா, போன்றவற்றை  மீட்க இவர்கள் தந்த முக்கிய ரகசிய தகவல்கள், ஆவணங்கள் தான் உதவியிருக்கின்றன. இதுவரை 60 சிலைகளை மீட்க உதவியிருக்கிறார்கள். பிரமிக்கத்தக்க இந்தப் பணியைச் செய்யும் இவர்கள் மீடியா வெளிச்சத்தைத் தவிர்க்கிறார்கள். விளம்பரத்தை விரும்பவதில்லை. அவர்களின் இணைய தளத்தில் கூட இந்த அணியினரின் படங்கள் இல்லை. அமெரிக்கர்- தென்கிழக்கு ஆசியாவில் நமக்காக பணிசெய்பவர்.  இந்தியர்- தொன்கலை நிபுணர் அமெரிக்காவில் நம் பணி செய்பவர் என்ற ரீதியில்தான் தளத்தில்  நிழல் முகங்களுடன் விபரங்கள் இருக்கின்றன.பாதுகாப்பும் ஒரு காரணமாக இருக்கலாம்.
இவர்கள் தமிழகக் கோவில் சிலைகளை மட்டுமில்லாமல் மத்தியபிரதேசத்திலிருந்து கடத்தப்பட்ட இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த செம்பழுப்பு  சலுவைக்கல்லில் உருவான யஷ்ணியின் சிலையை மீட்கவும் உதவியிருக்கிறார்கள்.

 இவர்களது வெற்றிப் பட்டியலில் கடைசியாக இணைந்திருப்பது  1000 ஆண்டு பழமையான நரசிம்ஹி என்ற காளியின் உருவம். இது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மியூசியத்தில் இருந்தது. அதற்கு அவர்கள்  இட்டிருந்த பெயர் பெண் புலி.   இது பல ஆண்டுகளுக்கு முன் விருத்தாசலம் கோவிலிலிருந்து திருடப்பட்டிருக்கிறது.
 

எப்படி இவர்கள் இதைச்செய்கிறார்கள்.? ஒரு மியூசியத்தில் அல்லது விற்பனையாளர்களின் கேட்லாக்கில் இருக்கும் ஒரு சிலையை தங்களிடமுள்ள படங்களுடன் ஆராய்கிறார்கள். உருவம் ஒத்திருந்தால் மேலும் ஆராய்ச்சியில் இறங்குகிறார்கள். அந்தக் கோவிலில் இந்தச் சிலை திருடப்பட்டிருப்பது புகார் செய்யப்பட்டிருக்கிறதா?  போன்ற விபரங்களுடன் வல்லுநர் அறிக்கைகளுடன் சரித்திர சான்றுகளுடன் மியூசியம் அதிகாரிகளை அணுகி முதலில் அது திருடப்பட்டது என்பதை நிலை நிறுத்துகிறார்கள்.  பின்னர்  இந்திய அரசு, தமிழக அரசின் போலீசுக்கு விபரங்கள் தந்து விசாரணையைத்துவக்க வைக்கிறார்கள். வழக்கும் பதிவு செய்ய உதவுகிறார்கள். இதில் பல பிரச்சனைகளையும் சந்திக்கிறார்கள்.

  2013ல் முதலில் எங்கள் குழு கண்டுபிடித்தது  ஆஸ்திரேலியா மியூசியத்திலிருக்கும் விருத்தாசலம் கோவிலின் அர்த்தநாரிஸ்வரர் சிலை. காணாமல் போய் 12 ஆண்டுகளாக அதற்காக எந்தப் புகாரும் கொடுக்கப்பட்டிருக்கவில்லை. ஒரு சிலை திருடப்பட்டிருக்கிறது என்பதற்கு அடிப்படை ஆதாரம் அதைக் காணோம் என்று போலிஸில் செய்யபட்டிருக்கும் புகார். அதுவே இதற்கு இல்லை. 
 இதனால் தான் நாங்கள் கோவிலின் அரிய சிலைகள் பட்டியலிடப்பட்டு டிஜிட்டல் ஆவணமாக்கி ஆன் லையன்ல் தேடும் வசதியோடு இருக்க வேண்டும் எனச் சொல்லுகிறோம்.  நாங்கள் அதை முயற்சித்துக்கொண்டிருக்கிறோம் என்கிறார்  விஜய் குமார்
இவர்களும் தமிழக போலீஸும் சந்திக்கும் மற்றொரு சவால்  தமிழகத்திலிருக்கும் 4500 கோவில்களில் இருக்கும் பல சிலைகளின், சிற்பங்களின் புகைப்படங்களோ விபரங்களோ கிடையாது. காணாமல் போனால் அடையாளம் சொல்லக்கூட முடியாது. இவர்கள் முயற்சியில் 900 ஆண்டு பழமையான நடராஜர் சிலையும், ஒரு 1000 ஆண்டு பழமையான சம்பந்தர் சிலையியும் வெளிநாட்டு மியூசியத்தில் இருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.  அவை தமிழ் நாட்டிலிருந்துகடத்தப்பட்ட தொன்ம சிலை  என்று நம்புகிறார்கள். ஆனால் அவை எந்தக் கோவிலுடையது என்பது தெரியாதால் அதை மீட்கும் முயற்சியைத்  துவக்க  முடியவில்லை.
 எப்படி? ஏன்? இந்த ஆர்வம் இவருக்கு.  “கல்லில் கவிதை” என்ற இவரது  வலைப்பூவில் தமிழக கோவில்களின் அழகான சிற்பங்களைப் பற்றி  தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி வந்த இவர். அதற்கான தகவல்களை சேகரிக்கும்போது சிலைகளின் திருட்டு மற்றும் கடத்தல் பற்றி அறிந்திருக்கிறார். “ஆர்வம் அதிகரித்ததினாலும் , என் மாதிரி எண்ணங்கொண்ட நண்பர்களின் இணைந்ததாலும்  தான்   இந்த இணைய தளம்” என்கிறார்.  இந்தத் தளம் இயங்குவதற்கு முன்னால் சிலைதிருட்டு/கடத்தல் என்பது மிகப்பெரிய அளவில் அரசால் கண்காணிக்கப்படவில்லை. அவ்வப்போது சில சிலைகள் மீட்கப் பட்டாலும் அது தொடர்பாக வழக்குகள் போடப்பட்டதில்லை சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்க பட்டதுமில்லை.  இதனால் தான் நியூயார்க் மெட்ரோபோலிஸ் மியூசியத்துக்கு  கடத்தல் மன்னன் கபூர் தன் மகளின் பிறந்த நாள் பரிசாக ஒரு சந்தரதுர்கா சிலையை அன்பளிப்பாக வழங்க முடிந்திருக்கிறது என்கிறார். சுபாஷ் கபூர் இப்போது புழல் சிறையில் இருக்கிறார். அவர்மீது  3 சிலைகளைக் கடத்திய வழக்கு இருக்கிறது.  ஆனால் அவரது நியூயார்க் கோடவுனில் இருப்பது 26000 சிலைகள் 
ஒவ்வொரு 10 ஆண்டுகளிலும் நமது 10,000 சிலைகள் திருடப்படுகின்றன. இதுவரை நாம் 70000 சிலைகளை இழுந்திருப்போம். அதில்  முனைந்தால் நிச்சியமாக 10000 சிலைகளை மீட்க முடியும். ஏனென்றால் அதில் 4000க்கும்மேல் மியூசியங்களில் இருக்கிறது. இப்போது 60 சிலைகள் வரை  எங்களால் அடையாளம் காணப்பட்டிருக்கிறது. அவற்றைக் கொண்டுவரமுடியும் . திருட்டு என ஆதாரங்களுடன் நிரூபிக்கப் பட்டால் மியூசியங்கள் தந்துவிடுவார்கள்  அதனால் தான் எங்களுடன் ஒத்துழைக்க ஆர்வலர்களை அழைக்கிறோம்.
என்ன செய்ய வேண்டும்?  எப்படிச் செய்ய வேண்டும்.? 
மீயூசியங்களில் அல்லது எங்காவது நீங்கள் பார்க்கும் இடங்களில் சிலைபற்றிய சந்தேகம் வந்தால் அதன்படத்தை பேஸ்புக்கில் போடுங்கள். எங்கள் தளத்துக்கு அனுப்புங்கள். . உள்ளூர் அரிய சிலைகளின் படங்களையும் விபரங்களையும் போடுங்கள்.  மற்றவற்றை நாங்கள் செய்வோம் என்கிறார்.

எளிதாகத்தானே இருக்கிறது செய்வோமே?  

7/7/17

தெரியுமா? தென்கொரியர்களின் மொழி -தமிழ்!



அந்தப் பொன்மாலைப் பொழுதில் மஹாபலிபுர கடற்கரையில் மெல்ல மறையும் சூரியனை ரசித்துக்கொண்டே நடந்து கொண்டிருக்கின்றனர் ஒரு கொரிய நாட்டுத் தம்பதியினர்.. கணவர் சில நாட்களுக்கு முன் சென்னை அலுவலகத்தில் பதவி ஏற்றிருக்கும் அதிகாரி. பின்னாலிருந்து  " அப்பா" என்று குரல் கேட்கவும் ஆச்சரியத்துடன் திரும்பிப்பார்க்கிறார். ஆச்சரியத்துக்குக் காரணம் அவர் மகனும் மகளும்  முன்னால் சென்றுகொண்டிருக்கிறார்கள்.  நம் மொழியில் யார் நம்மை அழைக்கிறார்கள்? என்று திரும்பிப்பார்த்த அவர் பார்த்தது ஒரு தமிழ் குடும்பத்தை.   தன் மொழியில் அப்பா என்றால் தந்தை என்பது போல தமிழிலும் தந்தைக்கு அப்பா தான் என்பதை அறிந்து ஆச்சரியப் பட்டுப் போகிறார் அந்ததென் கொரிய நாட்டுக்காரர். 
அவர் திரு குயூங்குசூ கிம் (KYUNGSOO KIM)  தென் கொரியாவின் தூதர்.

சென்னைத்திரும்பியதும். தன் அலுவலகம் மூலம் கொரிய, தமிழ் மொழிகளுக்கிடையே உள்ள ஒற்றுமைகளைப் பற்றி அறிந்து, ஆச்சரியபட்டு அது குறித்த தகவல்களைசேகரிக்கிறார்.  இரு  மொழிகளுக்கு இடையே உள்ள ஒற்றுமைகள் குறித்து தமிழ் நாட்டில்  பல ஆய்வுகள் செய்யப்பட்டிருப்பதையும் அறிந்து வியக்கிறார்.  இதில் தன் பங்காக எதாவது செய்ய வேன்டும் என்று கருதி தமிழை முறையாக கற்றுக்கொள்ளத் துவங்குகிறார்.
 சென்னையில் இன்று 4000க்கு மேற்பட்ட கொரியர்கள் வசிக்கிறார்கள். ஹூண்டாய், ஹூன் போன்ற பல நிறுவனங்களில் பணிபுரிபவர்களுடன் அவர்களது குடும்பங்கள்.
கொரிய மொழியில் பல தமிழ் வார்த்தைகள் இருப்பதையும், அது தமிழில் பேகசப்படுவது போலவே உச்சரிக்கப்படுவதை முதலில்  சொன்னவர்கள் பிரெஞ்ச் பாதிரியார்கள். இரண்டு நாடுகளிலும் பணிபுரிந்த பாதிரியார்கள் கண்டுபிடித்த விஷயம் இது. அன்று முதல் ஆய்வுகள் தொடர்ந்துகொண்டிருக்கிறது.  ஹவாய் பல்கலைக்கழகத்தின்  “கொரிய மொழி மையம்” இதுகுறித்து பெரிய அளவில் ஆய்வுகள் நடத்தி கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறது. இவர்கள் ஆய்வின் படி  கிட்டத்தட்ட  கொரிய மொழியில்  4000 தமிழ் வார்த்தைகள் இருக்கின்றன.  பல வார்த்தைகளின் பொருளும் அதேதான் மட்டுமில்லை ஒலிக்கும் பாணியும் உச்சரிப்பும் கூட தமிழ் போலவே இருப்பது தான் ஆச்சரியம்.
இரு நாடுகளுக்குமிடையே உள்ள உறவு முதல் நூற்றாண்டில் துவங்கியிருக்கிறது. சூரோ என்ற அரசன் கார்க் என்ற பகுதியை ஆண்டுவந்தார்.கார்க் என்ற சொல்லுக்கு  பண்டைய தமிழில் மீன் என்று பொருள். அந்த மன்னரின் கொடியில்  மீன் சின்னம். இருக்கிறது.  அவரும் அன்றைய பாண்டிய(வேளநாடு) மன்னர் ஆயியும் நல்ல நண்பர்கள்.  அவர்குடும்பத்தைச்சேர்ந்த ஒரு தமிழ் பெண்ணை  கார்க் நாட்டின் இளவரசர்      திருமணம் செய்துகொண்டதால்,  வணிகம்,  அரசுப்பணிகளில், படைகளில் நிர்வாகத்தில் தமிழர்கள் இணைந்திருக்கிறார்கள்.  பின்னாளில் சூரிரத்னா என்ற   அந்தப் பெண்  நாட்டின் அரசியாகியிருக்கிறார்.
 இன்றும் அவரது  சமாதி கிம்ஹே என்ற கொரிய நகரில் இந்த விபரங்கள் பதிக்கப்பட்ட கற்பலகையுடன் இருக்கிறது.    கொரியா நாட்டில் சொல்லா என்பது ஒரு மாவட்டத்தின் பெயர் இது சோழ என்ற  சொல்லின் திரிந்த வடிவம் என்று கருதப்படுகிறது. இது போன்ற பல விஷயங்களை ஆய்ந்து நிறைய எழுதியிருக்கிறார்கள் என். கண்ணன், ஒரிஸாபாலு,  நாகராஜன் போன்ற  வரலாற்று ஆய்வாளர்கள்.
"மொழி மட்டுமில்லை கலாச்சாரத்திலும் நிறைய ஒற்றுமைகள். கொரிய குழந்தை முதலில்; அறிந்து கொள்ளும் வார்த்தைகள் அப்பா, அம்மா தான். என்பது மட்டுமில்லை. குழந்தையைத் தொட்டிலில் இடுவது, வாசலில் மாவிலைத் தோரணங்கள் கட்டுவது, போன்ற பல விஷயங்களில் தமிழ் நாட்டைப் பார்க்கிறேன். தென்கொரியாவில் மாங்காய் கிடையாது. அதனால் மிளகாய் தோரணம் கட்டுகிறார்கள்.  குழந்தைக்குத் திருஷ்டி கூடாது என்ற பழக்கமும் இருக்கிறது".  என்கிறார்  கொரிய தூதர் குயூங்குசூ கிம்  . இவர்  தமிழ் நாட்டில் ஆர்வத்துடன் பல விஷயங்களைக் கூர்ந்து கவனித்து தனது கட்டுரைகளில் எழுதுகிறார்.. அவர் சொல்லும் பல விஷயங்களில் ஒன்று தமிழக கிராமங்களில் இருப்பது போலத்தான் கொரிய கிராமங்களில் குடிசைகள் அமைக்கப்படுகின்றன. உரலுக்கும்  உலக்கைக்கும்  அதேபெயர்கள், அதே பயன்கள் என்பது தான்.  இப்போது தமிழ் கற்றுவரும் இவர்  தமிழ் இலக்கணம் எழுவாய்- செயப்படுபொருள்- வினைச்சொல் அடிப்படையில் தான் கொரிய மொழியின் இலக்கணமும் இருக்கிறது  என்கிறார்.  கொரியர்களும் தமிழர்களைப்போல் அத்தை, மாமன், தாய்மாமன் உறவு முறைகளும் அதில் திருமணமும் செய்துகொள்கிறார்கள்.( சண்டைகள் வருவதும்  உண்டாம். )
தென்கொரியாவைச்சேர்ந்த ஒரு எண்ணை நிறுவனத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றும் திரு நாராயணன் கண்ணன் 10 ஆண்டுகளாக அங்கு வசிப்பவர்.  அங்கு ஒரு அறக்கட்டளையை நிறுவி இரு மொழிக்கும் உள்ள தொடர்பு பற்றி ஆராயந்துவருகிறார். பல ஆண்டுகாலம் சீன மொழியைப் பயன்படுத்திய கொரியநட்டினர் 10ஆம் நூற்றாண்டில் ஹங்குல் என்ற மொழியை தாய் மொழியாக ஏற்றனர். இது தமிழ்மொழியின் சாயலில் இருக்கிறது. இந்த ஹங்குல் மொழியை ஏற்றபின்னர்தான் கொரியமக்களின் பொருளாதாரம் வேகமெடுத்திருக்கிறது. இன்று கொரியாவில் 99%மக்கள் கல்வியறிவு பெற்றிருக்கிறார்கள். மொழியை முன்னிறுத்தியே  எந்த ஒரு நாடும் முன்னேறும் என்பதற்கு  இது சான்று என்கிறார். இவர் செம்மொழி மாநாட்டில் பங்கேற்று இது குறித்த தனது கட்டுரையை வாசித்தவர்.
கொரிய மொழியில் பல வார்த்தைகள் தமிழ் சாயலில் இருக்கிறது. உரத்துக்கு- உரம், கண்ணுக்கு -நுகண், பல்லுக்கு =இப்பல் புல்லுக்கு =புல் எனப் பல வார்த்தைகளில் அதே பொருளில் இருப்பதை விட ஆச்சரியம் அவர்கள் தூரி, தூரி, சாஞ்சுக்கோ, கொஞ்சு ஜம்ஜம், அபூபா, ஜோ ஜோ  என  சிறு குழந்தைகளைக் கொஞ்சுவதில் கூடத் தமிழ் கொஞ்சுகிறது. மொழி, கலாச்சாரம் போல சில உணவு வகைகளையும் தோசை, கொழுக்கட்டை  சுண்டல்  ஊறுகாய் போன்றவற்றிலும்  தமிழ்நாடு இருக்கிறது.

 
மொழி, உணவு மட்டுமில்லை .நட்பு பாராட்டுவதிலும்  தமிழர்களைப் போலத்தான் என்கிறார் திருமதி மீரா.
ஒரு பெரிய கார் தயாரிக்கும் நிறுவனத்தின் உயர் அதிகாரி யெங் மின் ஓ வின் குடும்பம் அண்மையில் சென்னைக்கு வந்தது.  அவரது மனைவி காங் மின் (KANG MIN)   ஆங்கிலம் அதிகம் அறியாத குடும்பத்த லைவி.  உள்ளூர் மொழியும் தெரியாத புதிய சுழலில் மிரண்டு, கலங்கிய அவருக்குப்   பக்கத்து பிளாட்டில் வசிக்கும் இவர் “ நான் உன் தாய் மாதிரி பயப்படாதே எல்லா உதவியும் செய்வேன்” என்று  ஆறுதலாக ஆங்கிலத்தில்  சொன்னதில் அவருக்குப் புரிந்த  வார்த்தைகளில் ஒன்று  “மதர்”   ஒ! நீங்கள் எனக்கு  “அம்மா” என்று சொல்லி சந்தோஷமானார். அன்றிலிருந்து அந்தப்பெண்மணியை அவர் இந்திய அம்மா என்றுதான் அழைக்கிறார். மெல்ல  தமிழும் ஆங்கிலமும் கற்றுவருகிறார். குழந்தைகளுக்குச் சென்னையும் உணவும்  ரஹ்மானின் இசையும் மிகவும் பிடித்துவிட்டது.

5000 கீமிக்கு அப்பால் சீனாவைத்தாண்டியிருக்கும்  கொரியாவில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே  தமிழ் மொழியும் கலசாரமும் வேறுயூன்றியிருப்பதில் நம்மைப்போலவே கொரியர் பெருமையும் சந்தோஷமும் அடைகிறார்கள்.  ஆனால் எங்கள் தொப்புள் கொடி உறவு முப்பாட்டன் வாழ்ந்த நிலம் என்றெல்லாம் அரசியல் செய்ய முடியாது. புதிய அரசியல் கட்சிகளுக்கு தென்கொரியாவில் அனுமதியில்லை.
கல்கி 9/07/17

4/7/17

இரண்டு நாடகங்கள்

சென்னை அலையன்ஸ் பிரான்சிஸ் அரங்கம். அமைதியாகியிருக்கும்  பார்வையாளர்கள்.   ஆங்கில நாடகம் ஒன்றின்  துவக்கத்துக்காக காத்திருக்கிறோம்.  மேடையில் இருள் கவிகிறது. நிழலுருவாக பாத்திரங்கள்.  மெல்லத்துவங்கி அதிகரிக்கும் தவிலின் ஓசை அதிகரிக்கும் போது ஒளியுடன் முதல் காட்சி விரிகிறது. தன்னை மதித்து கெளரவத்துடன் நடத்தாமல் தன் நண்பர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்  “உன் கணவர்” எனத் தாயிடம் சீறும் மகன். தந்தையின் பெருமையகளைச் சொல்லி அவனைச் சமாதானப்படுத்தும் தாய் என்று துவங்கும் அந்தக் காட்சி இன்று பல குடும்பங்களில் நிகழும் ஒரு காட்சி போலிருந்தாலும் - நாடகம் மஹாபாரத்திலிருந்து  ஒரு கதை.

. தூரோணாச்சாரியாரை  ஒரு ஆசானாக,  போர்முறைகளை நன்கறிந்தபடைத்தலைவனாக நாம் அறிந்திருக்கிறோம். அந்த துரோணரின்  குடும்பத்தில்  அவருக்கும், அவரது மகன், மனைவிக்கிடையே நடந்த உணர்ச்சி கொந்தளிப்பு போராட்டங்களின் இறுதியில்   ஒவ்வொருவரும் உணரும் உணமையைச்சொல்லுவது தான் ‘WHEN THINGS FALL APART’ என்ற ஆங்கில நாடகம்.
JUST US  சென்னையில் இயங்கும் ஒரு பல்கலை குழு.  இயல் இசை நாடகம் என இயங்கிக்கொண்டிருக்கும் இந்தக் குழுவின் ஆங்கில நாடகங்கள் இந்திய இதிகாசங்களின் பாத்திரங்களின் உளவியலை ஆழ்ந்து நோக்கும் பார்வையிலிருக்கும்.  பல இந்திய நகரங்களிலும் வெளிநாடுகளிலும் நிகழ்ச்சிகளை நிகழ்த்தியிருக்கும் இந்தக் குழுவினர் தங்களது 10ஆம் ஆண்டுவிழாவை  “JUSTFEST” என்று இரு நாள் விழாவாகக் கொண்டனார்கள். அதன் முதல் நாளில் அரங்கேறியது தான் இந்த நாடகம்.
ஒரு நாடகத்தின் வெற்றியின் பெரும்பங்கு அதன் முக்கிய நடிகர்களின்  திறமையில்தானிருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் நாலே காதா பாத்திரங்கள் கொண்ட ஒரு நாடகத்தில்  எந்த ஒரு கலைஞரும் அடுத்தவரை மிஞ்சிவிடாமல்  கன கச்சிதமான நடிப்பால்  அவர்களுடைய  பாத்திரத்தை சிறப்பாகச் செய்யவைப்பது என்பது இயக்குநருக்கு சவாலான விஷயம். அதில் வெற்றி கண்டிருக்கிறார் இதன் இயக்குநரும் குழுவின் தலைவியுமான திருமதி கெளரி ராம்நாரயண் 
கொப்பளிக்கும் கோபத்துடன் தந்தையை நிந்திக்கும் துரோணரின் மகன் அஸ்வத்தாமன் தந்தை அர்ஜுனனுக்கு சொல்லிக்கொடுத்த  ஒரு வித்தையை தனக்கு சொல்லிக்கொடுக்க வில்லை எனத் தாயுடன் வாதாடும் போதும்,  தந்தையுடன் மோதும்போதும். இறுதியில் போர்க்களத்தில் தன் மரணச்செய்தி கேட்டவுடன் அது தவறென அறியாமலே  அவர் உயிர்துறக்க நேரிட்டபோது அவரின் அன்பையும் பாசத்தையும் புரிந்து கொண்டு தாயிடம் கதுறும்போதும் அந்தக் கலைஞர் அந்தப் பாத்திரமாகவேவாழ்ந்து காட்டிவிட்டார்.  நடித்துக்கொண்டிருப்பது ஒரு பெண் (திருமதி அகிலா) என்பதையே மறந்துவிடுகிறோம். அந்த அளவுக்கு உடல் மொழி, உணர்வுகளின் வெளிப்பாடு, கம்பீரமான ஆண்மை தொனிக்கும் குரல் அசத்திவிட்டார் இந்தப் பெண்.
“என்ன மனிதன் நீ?. சபையில் திரபெளதியின் ஆடையினை களைந்து அவமானப்படுத்தப்படும்போது உன் மாணவர்களைக் கண்டிக்காமல் இருந்த நீ ஒரு பிரமாணனா? ஆச்சாரியானா? என கணவரைத் தன் வார்த்தைகளால் கடுமையாக சுடும் தரோணாச்சாரியாரின் மனைவி கிருபி தன் குரலாலும் நடிப்பாலும் “ஆமாம் இவர் சொல்வது சரிதானே? எனப்  பார்வையாளர்களையும் உணரச்செய்கிறார். அந்த அளவிற்குக் கோபத்தை  கொட்டி நடித்திருப்பவர் திருமதி சுனந்தா ரகுநாதன்.
 நாடகத்தின்  வசனங்கள் எளிய ஆனால் அழுத்தமான வார்த்தைகள். கோபத்தில் திரபெளதியை நீங்கள்  இப்படிப் பார்க்கத்தானே  ஆசைப்பட்டீர்கள்? என தன புடவையின் மேலாக்கை நீக்கதுவங்குகிறார்.கிருபி.   துடித்துபோவது துரோணர் மட்டுமில்லை. பார்த்துக்கொண்டிருக்கும் நாமும் தான்.  இம்மாதிரி ஒரு காட்சியை மேடையில் துளிகூட கண்ணியம் குறையாமல் காட்டியிருப்பதில் காட்சியமைப்பில் இயக்கனருக்குள்ள ஆழ்ந்த அனுபவம் பளிச்சிடுகிறது. 
ஒரு நாடகத்தின் காட்சிகளுக்கு உயிருட்டுவது இசையும் ஒளியும் தான். .  இந்தக் குழு அதை நன்கு  உணர்ந்து அதற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது.  நாடகம் முழுவதற்கும் தவில் கஞ்சிரா ஓசை தான் பின்னணி இசை. ஒரே ஒருஇடத்தில் கிதார். மட்டும். இசை காட்சிகளுடன் இணைந்திருப்பது போல ஒளியமைப்பும்..
கருப்பு பின்னணித்திரையில் விளக்குகளின் ஒளியை மாற்றிமைப்பதின் மூலமே இரவு, பகல், புலரும் பொழுது, குடிசை, காடு என களத்தை எளிதில் புரிய வைக்கிறார் ஒளி அமைப்பாளர். அதே போல் நடிகர்களின் மீது  அவசியமில்லாத போது அதிக  அளவில் ஒளி பாயாமலிருக்கிறது. இதைச்செய்திருப்பது சென்னை ஆர்ட் தியட்டர் என்ற நிறுவனத்தின் சார்ல்ஸ் என்ற இளைஞர். ஒளியமைப்பின் தொழில் நுட்பம் மட்டுமில்லாமல் நாடகத்தின் காட்சிகளை நன்கு புரிந்துகொண்டிருக்கும் இவர் பாராட்டப்படவேண்டியவர்.

இரண்டாம் நாள் நிகழ்ந்தது ஒரு சமூக நாடகம்  ஓவியனாக வாழ்க்கைத்துவக்கி தோற்று கவிஞனான  அருண்கொலட்கர்  (Kolatkar ))   என்ற மராட்டிய கவிஞன்  ஆங்கிலத்திலும், மாராட்டியிலும் பல கவிதைகள் எழுதியிருப்பவர். இன்றைய இளம் கவிஞர்களுக்கு ஆதர்சம்.  காமன்வெல்த் எழுத்தாளர்கள் பரிசு, சாகித்திய அகதமி விருது போன்ற பல விருதுகள் பெற்ற இந்த கவிஞன் தனிமையை ரசிப்பவன், மாற்றியோசிப்பவன். அவரை  ஒரு தமிழ் நாட்டு பெண்பத்திரிகையாளார்  அவர் வசிக்கும் மும்பையின் காலா கோடா பகுதியில் அவர்  வழக்கமாக அதிக நேரம் செலவிடும் ஒரு சாலையோர ஹோட்டலில் பேட்டிக்காகச் சந்திக்கிறார். பக்தி, கடவுள்,ஆங்கில கவிதைகள்,போலிவிமர்சர்கள், இலக்கியம் போன்ற பல தளங்களில் உரையாடுகிறார்கள்  இது தான் கதை. இந்தக் குழு முதன்முதலில் போட்ட நாடகமான இதைப் பல இடங்களில் நடத்தியிருக்கிறார்கள். அதை மீண்டும் இப்போது நடத்தினார்கள்.

இரண்டுபேரின்  உரையாடலை அதுவும் ஒரு பத்திரிகையாளரும் கவிஞரும் உரையாடும் உலர்ந்த விஷயங்களை   ஒரு நாடகமாக்க முடியுமா?   இயக்குநர் கெளரி ராம் நாராயணன் முடியும்  என்பதை மட்டுமில்லை அதை ஒரு இசை நாடகமாகமே செய்ய முடியும் என நீருபிக்கிறார்.. 

வாழ்ந்து மறைந்த ஒரு கவிஞனின் வாழ்க்கையில் நிகழந்ததாக செய்யபட்டிருக்கும் கற்பனை கதை என்பதை முதல் காட்சியில்  செய்தித் தாளில் படிக்கும் மரணச் செய்தியைக் கொண்டே புரியவைக்கிறார்கள் .
இந்த உலகில் எதுவுமே துச்சம் என அகம்பாவத்துடன் தன் சிந்தனைகளை வெளிப்படுத்தும் கவிஞன், தந்து பேட்டி சிறப்பாக வரவேண்டுமே என்று துடிப்பில் இருக்கும் பத்திரிகையாளர் என இருவருமே  இயல்பாக நடிக்கிறார்கள். கூர்மையான வசனங்கள், தெளிவான உச்சரிப்பு எளிமையான அதே நேரத்தில்  களனை சிறப்பாக சொல்லும் காட்சிமைப்பு எல்லாமே அருமை.
  உரையாடல்களுக்கு நடுவே பாத்திரங்கள் சொல்லும் விபரங்கள்  இசை சித்தரமாக விரிகின்றன. ஆடல் பாடலுடன் காட்சிகள் நகர்கின்றன.  ஒருவீதியோர ரெஸ்டோரண்ட்., சின்ன பள்ளிக்கூடம் மிரட்டும் ஆசிரியை  இட்லி விற்கும் மராட்டிய பெண்கள்  டீ விற்கும் தமிழ்ப்  பெண் என்று பாத்திரங்கள்  இசை, நடன வடிவில் வந்த போகின்றனர்.  இசை என்றால் எல்லாவிதமான இசையும் வருகிறது.. கர்நாடக,மராத்தி அபங், ஜாஸ், பாப் எல்லாம் வெவ்வேறு பாடல்களில்  இடையிடையே  கவிஞர், பத்திரிகையாளர் உரையாடலும் மிக சீரியசான விஷயங்களில் தொடர்கிறது., பாடல்களில் கவஞரின் கவிதைகள் பயன்படுத்தபட்டிருக்கிறது.  இறுதியில்  ஒரு புலரும் காலையில் தன் வீட்டின் முன் பகுதியை பெருக்கிக்கொண்டிருக்கும் பின்னணியில் மும்மை ஏழ்மைப்பகுதியைப் பற்றிய ஒரு  கவிதையை கவிஞரே சொல்லுவது போல முடிகிறது. 
இந்த நாடகத்தின் பின்னணி இசையில் வாத்தியங்கள் எதுவும் கிடையாது. இனிய குரலில்சுத்தமான சுருதியில்  காட்சிகளுக்கேற்ப பாடல்களைப் பாடுகிறார்.  ஒரு காட்சியில் பின்னணியாக பல்வேறு ராகங்களில் சரளிவரிசையின் சா. மா. பா மட்டும் ஒலிக்கிறது. அபங், கர்நாடக இசை, இந்துஸ்தானி, வெஸ்டர்ன்  அவ்வளவையும் ஒரே பாடகி எந்த வித பக்க வாத்தியமும் இல்லாமல் பிரமாதமாக பாடுகிறார். பாடகி சவீதா நரசிம்மன். இவரது   பாடல்கள் இல்லாமலிருந்தால் இந்த நாடகம் போரான உரையாடலாகியிருக்கும்.  பின்னணி பாடும் பாடகியும் மேடையிலேயே இருக்கிறார். ஒரு பாத்திரமாகவும் வருகிறார்.

ஆங்கிலநாடகங்கள்  நடத்தும் குழுவாக இருந்தாலும் தமிழ்  நாடக உலகிற்கு பெரும்பங்களிப்புச் செய்திருக்கும் ந.முத்துசாமி அவர்களை முதல் நாள் நாடகத்துக்கு முன்னும்  திரு இந்திராபார்த்தசாரதி அவர்களை இரண்டாம் நாள் நாடகத்தின் போதும்  கௌரவித்தது மகிழ்ச்சியான ஒரு விஷயம்.
திரு இந்திரா பாரத்த சாரதி அரங்கத்துக்கு வர முடியாததால் அவர் இல்லத்திற்கே குழு சென்று கௌரவித்த காட்சியை  திரையில் காட்டினார்கள் . 

மொத்தத்தில் “ஜஸ்ட்” திருவிழா இல்லை பெஸ்ட் திருவிழா
(கல்கி 9/7/17)