7/7/17

தெரியுமா? தென்கொரியர்களின் மொழி -தமிழ்!



அந்தப் பொன்மாலைப் பொழுதில் மஹாபலிபுர கடற்கரையில் மெல்ல மறையும் சூரியனை ரசித்துக்கொண்டே நடந்து கொண்டிருக்கின்றனர் ஒரு கொரிய நாட்டுத் தம்பதியினர்.. கணவர் சில நாட்களுக்கு முன் சென்னை அலுவலகத்தில் பதவி ஏற்றிருக்கும் அதிகாரி. பின்னாலிருந்து  " அப்பா" என்று குரல் கேட்கவும் ஆச்சரியத்துடன் திரும்பிப்பார்க்கிறார். ஆச்சரியத்துக்குக் காரணம் அவர் மகனும் மகளும்  முன்னால் சென்றுகொண்டிருக்கிறார்கள்.  நம் மொழியில் யார் நம்மை அழைக்கிறார்கள்? என்று திரும்பிப்பார்த்த அவர் பார்த்தது ஒரு தமிழ் குடும்பத்தை.   தன் மொழியில் அப்பா என்றால் தந்தை என்பது போல தமிழிலும் தந்தைக்கு அப்பா தான் என்பதை அறிந்து ஆச்சரியப் பட்டுப் போகிறார் அந்ததென் கொரிய நாட்டுக்காரர். 
அவர் திரு குயூங்குசூ கிம் (KYUNGSOO KIM)  தென் கொரியாவின் தூதர்.

சென்னைத்திரும்பியதும். தன் அலுவலகம் மூலம் கொரிய, தமிழ் மொழிகளுக்கிடையே உள்ள ஒற்றுமைகளைப் பற்றி அறிந்து, ஆச்சரியபட்டு அது குறித்த தகவல்களைசேகரிக்கிறார்.  இரு  மொழிகளுக்கு இடையே உள்ள ஒற்றுமைகள் குறித்து தமிழ் நாட்டில்  பல ஆய்வுகள் செய்யப்பட்டிருப்பதையும் அறிந்து வியக்கிறார்.  இதில் தன் பங்காக எதாவது செய்ய வேன்டும் என்று கருதி தமிழை முறையாக கற்றுக்கொள்ளத் துவங்குகிறார்.
 சென்னையில் இன்று 4000க்கு மேற்பட்ட கொரியர்கள் வசிக்கிறார்கள். ஹூண்டாய், ஹூன் போன்ற பல நிறுவனங்களில் பணிபுரிபவர்களுடன் அவர்களது குடும்பங்கள்.
கொரிய மொழியில் பல தமிழ் வார்த்தைகள் இருப்பதையும், அது தமிழில் பேகசப்படுவது போலவே உச்சரிக்கப்படுவதை முதலில்  சொன்னவர்கள் பிரெஞ்ச் பாதிரியார்கள். இரண்டு நாடுகளிலும் பணிபுரிந்த பாதிரியார்கள் கண்டுபிடித்த விஷயம் இது. அன்று முதல் ஆய்வுகள் தொடர்ந்துகொண்டிருக்கிறது.  ஹவாய் பல்கலைக்கழகத்தின்  “கொரிய மொழி மையம்” இதுகுறித்து பெரிய அளவில் ஆய்வுகள் நடத்தி கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறது. இவர்கள் ஆய்வின் படி  கிட்டத்தட்ட  கொரிய மொழியில்  4000 தமிழ் வார்த்தைகள் இருக்கின்றன.  பல வார்த்தைகளின் பொருளும் அதேதான் மட்டுமில்லை ஒலிக்கும் பாணியும் உச்சரிப்பும் கூட தமிழ் போலவே இருப்பது தான் ஆச்சரியம்.
இரு நாடுகளுக்குமிடையே உள்ள உறவு முதல் நூற்றாண்டில் துவங்கியிருக்கிறது. சூரோ என்ற அரசன் கார்க் என்ற பகுதியை ஆண்டுவந்தார்.கார்க் என்ற சொல்லுக்கு  பண்டைய தமிழில் மீன் என்று பொருள். அந்த மன்னரின் கொடியில்  மீன் சின்னம். இருக்கிறது.  அவரும் அன்றைய பாண்டிய(வேளநாடு) மன்னர் ஆயியும் நல்ல நண்பர்கள்.  அவர்குடும்பத்தைச்சேர்ந்த ஒரு தமிழ் பெண்ணை  கார்க் நாட்டின் இளவரசர்      திருமணம் செய்துகொண்டதால்,  வணிகம்,  அரசுப்பணிகளில், படைகளில் நிர்வாகத்தில் தமிழர்கள் இணைந்திருக்கிறார்கள்.  பின்னாளில் சூரிரத்னா என்ற   அந்தப் பெண்  நாட்டின் அரசியாகியிருக்கிறார்.
 இன்றும் அவரது  சமாதி கிம்ஹே என்ற கொரிய நகரில் இந்த விபரங்கள் பதிக்கப்பட்ட கற்பலகையுடன் இருக்கிறது.    கொரியா நாட்டில் சொல்லா என்பது ஒரு மாவட்டத்தின் பெயர் இது சோழ என்ற  சொல்லின் திரிந்த வடிவம் என்று கருதப்படுகிறது. இது போன்ற பல விஷயங்களை ஆய்ந்து நிறைய எழுதியிருக்கிறார்கள் என். கண்ணன், ஒரிஸாபாலு,  நாகராஜன் போன்ற  வரலாற்று ஆய்வாளர்கள்.
"மொழி மட்டுமில்லை கலாச்சாரத்திலும் நிறைய ஒற்றுமைகள். கொரிய குழந்தை முதலில்; அறிந்து கொள்ளும் வார்த்தைகள் அப்பா, அம்மா தான். என்பது மட்டுமில்லை. குழந்தையைத் தொட்டிலில் இடுவது, வாசலில் மாவிலைத் தோரணங்கள் கட்டுவது, போன்ற பல விஷயங்களில் தமிழ் நாட்டைப் பார்க்கிறேன். தென்கொரியாவில் மாங்காய் கிடையாது. அதனால் மிளகாய் தோரணம் கட்டுகிறார்கள்.  குழந்தைக்குத் திருஷ்டி கூடாது என்ற பழக்கமும் இருக்கிறது".  என்கிறார்  கொரிய தூதர் குயூங்குசூ கிம்  . இவர்  தமிழ் நாட்டில் ஆர்வத்துடன் பல விஷயங்களைக் கூர்ந்து கவனித்து தனது கட்டுரைகளில் எழுதுகிறார்.. அவர் சொல்லும் பல விஷயங்களில் ஒன்று தமிழக கிராமங்களில் இருப்பது போலத்தான் கொரிய கிராமங்களில் குடிசைகள் அமைக்கப்படுகின்றன. உரலுக்கும்  உலக்கைக்கும்  அதேபெயர்கள், அதே பயன்கள் என்பது தான்.  இப்போது தமிழ் கற்றுவரும் இவர்  தமிழ் இலக்கணம் எழுவாய்- செயப்படுபொருள்- வினைச்சொல் அடிப்படையில் தான் கொரிய மொழியின் இலக்கணமும் இருக்கிறது  என்கிறார்.  கொரியர்களும் தமிழர்களைப்போல் அத்தை, மாமன், தாய்மாமன் உறவு முறைகளும் அதில் திருமணமும் செய்துகொள்கிறார்கள்.( சண்டைகள் வருவதும்  உண்டாம். )
தென்கொரியாவைச்சேர்ந்த ஒரு எண்ணை நிறுவனத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றும் திரு நாராயணன் கண்ணன் 10 ஆண்டுகளாக அங்கு வசிப்பவர்.  அங்கு ஒரு அறக்கட்டளையை நிறுவி இரு மொழிக்கும் உள்ள தொடர்பு பற்றி ஆராயந்துவருகிறார். பல ஆண்டுகாலம் சீன மொழியைப் பயன்படுத்திய கொரியநட்டினர் 10ஆம் நூற்றாண்டில் ஹங்குல் என்ற மொழியை தாய் மொழியாக ஏற்றனர். இது தமிழ்மொழியின் சாயலில் இருக்கிறது. இந்த ஹங்குல் மொழியை ஏற்றபின்னர்தான் கொரியமக்களின் பொருளாதாரம் வேகமெடுத்திருக்கிறது. இன்று கொரியாவில் 99%மக்கள் கல்வியறிவு பெற்றிருக்கிறார்கள். மொழியை முன்னிறுத்தியே  எந்த ஒரு நாடும் முன்னேறும் என்பதற்கு  இது சான்று என்கிறார். இவர் செம்மொழி மாநாட்டில் பங்கேற்று இது குறித்த தனது கட்டுரையை வாசித்தவர்.
கொரிய மொழியில் பல வார்த்தைகள் தமிழ் சாயலில் இருக்கிறது. உரத்துக்கு- உரம், கண்ணுக்கு -நுகண், பல்லுக்கு =இப்பல் புல்லுக்கு =புல் எனப் பல வார்த்தைகளில் அதே பொருளில் இருப்பதை விட ஆச்சரியம் அவர்கள் தூரி, தூரி, சாஞ்சுக்கோ, கொஞ்சு ஜம்ஜம், அபூபா, ஜோ ஜோ  என  சிறு குழந்தைகளைக் கொஞ்சுவதில் கூடத் தமிழ் கொஞ்சுகிறது. மொழி, கலாச்சாரம் போல சில உணவு வகைகளையும் தோசை, கொழுக்கட்டை  சுண்டல்  ஊறுகாய் போன்றவற்றிலும்  தமிழ்நாடு இருக்கிறது.

 
மொழி, உணவு மட்டுமில்லை .நட்பு பாராட்டுவதிலும்  தமிழர்களைப் போலத்தான் என்கிறார் திருமதி மீரா.
ஒரு பெரிய கார் தயாரிக்கும் நிறுவனத்தின் உயர் அதிகாரி யெங் மின் ஓ வின் குடும்பம் அண்மையில் சென்னைக்கு வந்தது.  அவரது மனைவி காங் மின் (KANG MIN)   ஆங்கிலம் அதிகம் அறியாத குடும்பத்த லைவி.  உள்ளூர் மொழியும் தெரியாத புதிய சுழலில் மிரண்டு, கலங்கிய அவருக்குப்   பக்கத்து பிளாட்டில் வசிக்கும் இவர் “ நான் உன் தாய் மாதிரி பயப்படாதே எல்லா உதவியும் செய்வேன்” என்று  ஆறுதலாக ஆங்கிலத்தில்  சொன்னதில் அவருக்குப் புரிந்த  வார்த்தைகளில் ஒன்று  “மதர்”   ஒ! நீங்கள் எனக்கு  “அம்மா” என்று சொல்லி சந்தோஷமானார். அன்றிலிருந்து அந்தப்பெண்மணியை அவர் இந்திய அம்மா என்றுதான் அழைக்கிறார். மெல்ல  தமிழும் ஆங்கிலமும் கற்றுவருகிறார். குழந்தைகளுக்குச் சென்னையும் உணவும்  ரஹ்மானின் இசையும் மிகவும் பிடித்துவிட்டது.

5000 கீமிக்கு அப்பால் சீனாவைத்தாண்டியிருக்கும்  கொரியாவில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே  தமிழ் மொழியும் கலசாரமும் வேறுயூன்றியிருப்பதில் நம்மைப்போலவே கொரியர் பெருமையும் சந்தோஷமும் அடைகிறார்கள்.  ஆனால் எங்கள் தொப்புள் கொடி உறவு முப்பாட்டன் வாழ்ந்த நிலம் என்றெல்லாம் அரசியல் செய்ய முடியாது. புதிய அரசியல் கட்சிகளுக்கு தென்கொரியாவில் அனுமதியில்லை.
கல்கி 9/07/17

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்