21/8/18

இது இறைவனின் செயல்



பெயரைக் கேட்டவுடனேயே புண்ணிய, புனித பூமி ஒரு முறையேனும் போய்ப்பார்க்க வேண்டும் என்று  இதுவரை பார்க்காதவர்களுக்கும்,  மீண்டும் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தை பார்த்தவர்களுக்கும்  எழுப்பும் மந்திரச்சொல் காசி.   காசி என்ற சொல்லுக்கு பிரகாசமானது என்று பொருள். வாரணாசி என்பது அறிவிக்கப்பட்ட பெயராகயிருந்தாலும் உலகம் முழுவதும் இந்த நகரம் அறியப்பட்டிருப்பது காசியாகத்தான்.
வேதங்கள் பிறந்த இடமாக நம்பப்படும்  காசி நகரம் நூற்றுக்கணக்கான சக்திவாய்ந்த கோயில்களால் சூழப்பட்டு ஒரு சக்தி வளையமாகத் திகழ்கிறது இந்தக் கோவில்களின் நடுவில் இருப்பது காசி விசுவநாதர் கோவில். மிகப் பழமையான கோயில் பலமுறை படையெடுப்புகளால் தகர்க்கப்பட்டிருக்கிறது. மூன்று முறை முழுவதுமாக இடிக்கப்பட்டு மீண்டும் எழுந்தது இந்தக்கோவில் என்கிறது வரலாறு... .
1779-ம் வருடம், இந்தூர் மகாராணி அகல்யா பாய் ஹோல்கர் இப்போது இருக்கும் காசி விஸ்வநாதர் கோயிலை எழுப்பினார். மகாராணி கட்டிக்கொடுத்த கோவில் பனாரஸை ஆண்ட மன்னர்களின் கட்டுப்பாட்டிலிருந்தது. அவ்வப்போது சிறு மராமத்து பணிகள் நடந்ததே தவிர இந்தக் கோவிலில் கும்பாபிஷேகம் எதுவும் நடைபெற்றதில்லை.

239 வருடங்களுக்குப் பின்னர் , இப்போதுதான் கடந்த ஜூலை மாதம் 5-ம் தேதி காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகம் முதல் முறையாக நடைபெற்றது என்பதை விட ஆச்சரியமான செய்தி அதைச்செய்திருப்பவர் ஒரு தமிழர். காரைக்குடியருகிலிருக்கும் வலையபட்டியைச் சேர்ந்த திரு சுப்பு சுந்தரம்.   மிகக் குறுகிய காலத்தில் திட்டமிட்டபடி பலர் வியக்கும் வண்ணம் அதைச் செய்து முடித்திருக்கிறார்.அவர் சென்னையிலிருக்கும் ஒரு ஏற்றுமதி- இறக்குமதி நிறுவன அதிபர்.  பல நகரத்தார் கோவில்களின் ஆன்மீக பணிகளில் பங்குகொண்டவர். .

இவர்  காசி விஸ்வநாதர் கோவிலுக்கு அடிக்கடி செல்லும் பக்தர்களில் ஒருவர் இல்லை. காசி நகரில்  பிஸினஸ் எதுவுமில்லை.  பின் ஏன் இவர் இதைச் செய்தார்.?  என்ற நம் கேள்விக்கு ஒரு வார்த்தையில் “தெய்வச்செயல்” என்கிறார்.
“நான் வேறு சில பணிகளுக்காகக் காசி சென்றிருந்தபோது.  காசி விஸ்வநாதர் கோவிலுக்கு அருகிலிருக்கும் அன்னபூரணி கோவிலுக்குச் சென்றிருந்தேன். அது ஆந்திரமக்களால் நிறுவப்பட்டு  மிகவும் பிரபலமாகயிருக்கும் ஒரு கோவில். அந்தக் கோவில் நிர்வாகத்தினர் அதற்கு  3  வெள்ளி கதவுகள்  அமைக்க விரும்பி உதவி கேட்டு என்னை அணுகினர். . நான் சம்மதித்திருந்தேன். ஆனால் கடந்த தீபாவளி சமயத்தில் நான் காசி சென்றபோது   அந்தக் கோவில் நிர்வாகத்தினர் ஒரு உள்ளூர் குடும்பம் அதைச் செய்ய ஏற்றுகொண்டுவிட்டதாகச்,சொல்லி  என் உதவியை வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள். இது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது. கோவில் கையங்கரியத்துக்கு உதவச் சம்மதித்தும் ஏற்க படவில்லையே என்ற எண்ணத்துடன் அருகிலிருக்குக் காசி விஸ்வநாதர் கோவிலில் பிரார்த்தனை செய்து விட்டு பிரஹாரத்தில் சுற்றி வந்து கொண்டிருந்தேன்.
  அந்தச் சமயம் ஒருவர் என்னை அணுகி இந்தக் கோவிலின் ஒரு முக்கிய பணியை  நீங்கள் செய்து கொடுக்க முடியுமா? என்றார்.  முன் பின் தெரியாத அந்த நபர், இன்னும் சொல்லப்போனால் ஏதோ பண உதவி கேட்கப்போகிறவர் என நினைத்து  ஒதுக்கியவரின் இந்த வார்த்தைகள் எனக்கு அதிர்ச்சியாகயிருந்தது.. வாருங்கள் என்று கோவிலின் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றார். அவர் அந்தக் கோவிலின் நிர்வாக அதிகாரி அரசால் நியமிக்கப்பட்ட IAS அதிகாரி என்பது அங்குப் போய் சில நிமிடங்களில் புரிந்தது.. என்ன பணி செய்ய வேண்டும் என்று கூட கேட்காமல் என் உள்மனம் கட்டளையிட்டபடி செய்து கொடுக்கிறேன் என்றேன். எதையும் யோசித்து நிதானமாகப் பேசும் நான்   எப்படி அந்த வார்த்தைகளைச் சொன்னேன் என்பது இன்று  வரை புரியாத ஆச்சரியமான புதிர். 
அவர் கேட்டவிஷயம்  என்னைச் சிலிர்க்க வைத்தது. காசி விஸ்வநாதர் சன்னதி என்பது நான்கு புறமும்  வாயில் கொண்ட ஒரு அறை.. அதன் நடுவில் தரையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பது தான் மூலவர்.. அதற்குத் தான் தினசரி   அபிஷகம், பூஜைகள் எல்லாம். அந்த மண்டபத்தின் மூன்று நுழை வாயில்கள்  வெள்ளி கவசமிட்டவை. வடக்கு புறமிருக்கும் வாசலை வெள்ளிக்கவசமிட்டுக் கொடுக்க முடியுமா? என்பது தான் அவர் கேள்வி
.எங்கோ தமிழ் நாட்டிலிருந்து வந்த என்னை, அதுவும் நான் யார் என்று தெரியாத நிலையில் ஏன் இப்படியொரு கேள்வியைக்கேட்டார்? என்பதையெல்லாம் சிந்திக்காமல் சரி முயற்சிக்கிறேன் என்றேன். வரும் சிவராத்திரிக்குள் முடிக்க வேண்டும் என்றார். அவர், 
மற்ற மூன்று வாசல்களும் 1841ல் போன்ஸ்லே குடும்பத்தினர்  அமைத்துக்கொடுத்திருக்கின்றனர். . இத்தனை நாளும் இந்த வாசலுக்கு கவசமிடவேண்டும் என்று எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.  எனக்குத்தான் அந்த வாய்ப்பைக் காசி விஸ்வநாதர்  தருகிறார் என்று எண்ணினேன்.  காரைக்குடியிலிருந்து நமது வெள்ளி ஆசாரிகளை அழைத்துப் போய் அளவுகள் எடுத்தோம்.  முதலில் எளிதாக முடித்துவிடலாம்  என்று சொன்ன ஆசாரிகள் வேலைத்தொடங்கியவுடன்  அதன் கஷ்டத்தை உணர்ந்தனர். ஒவ்வொரு சதுர அங்குலமும் சலவைக்கல்லில் செய்யப்பட்ட பூ வேலைகளுடன் கூடிய அந்த வாயிலுக்கு வெள்ளிக்கவசமிடுவது அத்தனை சுலபமாகயிருக்கவில்லை. இரவு பகல் எப்போதும் அந்தப்பணியைச் செய்ய  அந்த கர்ப்பகஅறையின் இரண்டு வாசல்களை இணைத்து  மறைத்து  வசதி செய்து கொடுத்தனர். பணி முடியும் வரை வரை நான் அவர்களுடன் அந்த கர்ப்பகிரகத்தில் விஸ்வநாதர் அருகிலேயே அமர்ந்திருந்திருந்தேன். விஐபிகளுக்கு கூட  அதிக பட்சம் 20 நிமிடங்கள்  ஒதுக்கப்படும் அந்த சன்னதியில்  இரவு பகலாக. இருக்கும் பாக்கியம் நான் பெற்றேன்.   தெய்வ அருளால் சிவ ராத்திரிக்குள் அந்தப் பணி முடிந்தது. 
இந்தப் பணியில்  மிகுந்த ஈடுபாட்டுடன் நேரடியாக நானே கவனித்துச்செய்து  கொண்டிருந்த கவனித்த கோவில் பண்டாக்களும் அதிகாரிகளும் மற்றவர்களும் மிகவும் நெருக்கமானார்கள். அன்புடன் பழகினார்கள். பணிமுடிந்தபின்னர் ஒரு நாள் பேசிக்கொண்டிருந்த போது உலகப்புகழ் பெற்ற இந்த கோவிலில் சுத்தம் சரியாக பேணப்படவில்லை.அடிப்படை வசதியான குடிநீர் கூட இல்லை. இதற்கு நீங்கள் ஆவன செய்ய வேண்டும் என்றேன்.  நமது மீனாட்சியம்மன், ஶ்ரீரங்கம் கோவில்களை எப்படி பாரமரிக்கிறோம் என்று சொன்னேன். படங்களைக் காட்டினேன்.  ஆச்சரியபட்டுபோனவர்கள் இதை இங்கு உங்களால் செய்ய முடியுமா? என்றார். 
ஒரு கோவில் என்பது தொடர்ந்து நல்ல நிலையில் பராமரிக்கப் பட வேண்டும். ஒரு முறை செய்துவிட்டு ஆண்டுக்கணக்கில் கவனிக்காமல் விட்டுவிடக்கூடாது என்பதற்காகத் தான்  தமிழகத்தில் கோவில்கள் கும்பாபிஷகம் செய்யப்படுகிறது என்றேன். அது என்ன? என்றுகேட்டவர்களுக்கு நமது கும்பாபிஷகம் பற்றி விளக்கிச்சொன்னேன்.  காசிக்கோவிலுக்கும் அதைச்செய்ய ஆர்வம்  காட்டிய அவர்கள் அரசிடமும் அவர்களது நிர்வாகக் குழுவிடமும் ஒப்புதல் பெற இப்படிச் செய்ய வேண்டிய முறைகள் பற்றிய ஆவணங்கள்  இருக்கிறதா? என்று கேட்டார்கள். பிள்ளையார் பட்டி தலைமை சிவாச்சாரியார் சிவ ஶ்ரீ பிச்சை குருக்கள் சிவன் கோவிலில் எத்தனை வகை எந்த மாதிரி கோவில்களுக்கு எந்த முறையில் கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்ற விபரங்கள் கோவில் ஆகம விதிகளில் சொல்லப்பட்டிருப்பதையும் அது பல நூற்றாண்டுகளாகத் தமிழக கோவில்களில் பின்பற்றபட்டுவருவதையும் ஒரு ஆவணமாக்கிக்கொடுத்தார். அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அனுப்பிவைத்தேன்.
சில நாட்களில் காசி விஸ்வநாதஎ கோவில் தமிழக தொழிலதிபர் சங்கர சுப்புவால் தமிழகக்கோவில்கள் முறைப்படி  கும்பாபிஷேகம் செய்யப்படவிருக்கிறது என்ற செய்தி உள்ளூர் தினசரிகளில் வந்திருப்பதாக நண்பர் போன் செய்தார். “மறுநாளே அரசிடமிருந்து  கும்பாபிஷகப் பணிகளைச்  செய்யும் பொறுப்பை  எனக்கு வழங்கி  கடிதம் வந்தது.  எல்லாமே கனவைப்போல இருந்தது எனக்கு” என்கிறார்.  பலமுறை காசி காரைக்குடி சென்னை என்ற தொடர்ந்த முக்கோணப் பயணங்களின் போது இந்தப் பணிக்கு   அவசியமானவற்றை சென்னையிலிருந்து  செய்தவர் இவரது மனைவி  திருமதி அன்னபூரணி. 
ஒரு வட நாட்டுக் கோவிலில் அதுவும் காசி போன்ற பண்டாக்கள் ஆதிக்கம் செலுத்தும் கோவிலில் அவர்களுக்குப் புதிதாக இருக்கும் விஷயங்களை எப்படி இவர் அவர்களை ஏற்க வைத்திருக்கிறார்  என்பதை அறிய ஆச்சரியமாகயிருக்கிறது.  கும்பாபிஷேகத்துக்காகத்  தமிழகத்திலிருந்து 50க்கு மேற்பட்ட சிவாச்சாரியார்களை  அழைத்துப்போயிருந்தாலும் 10 ஹோம குண்டங்களுடன்  யாகசாலை அமைப்பதிலிருந்து  முதல் குடமுழுக்கு தீர்த்தம் விடுவது வரை அனைத்துப் பணிகளிலும் அவர்களை முன்னிலைப்படுத்தியிருக்கிறார்.   கும்பாபிஷேகத்திற்காக யாக சாலையில் பூஜிக்க கங்கையிலிருந்து  கலசங்களில் நீர் கொண்டுவருவதிலிருந்து ஹோமங்களில் முதல் அக்னியிடுவது வரை  காசி கோவில் பண்டாக்கள் தான் துவக்கியிருக்கிறார்கள். பின்  நம்மவர்கள் தொடர்ந்திருக்கிறார்கள். இந்தச்செயல்கள்  அவர்களுக்கு நமது கோவிலுக்குத்தான்  நம் மூலமே இவர்கள் செய்கிறார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. ஒத்துழைத்திருக்கிறார்கள்..
இவர்களைபோலவே அந்தக் கோவிலின் நேர்மையான அதிகாரி ,விஷால் சிங்  மற்றும்  மாநில அளவில் கோவில்களின் தலமைப்பொறுப்பிலிருந்த கமிஷனர் தீபக் அகர்வாலும்  செய்த உதவிகளும் அளித்த ஆதரவும் மறக்க முடியாத ஒன்று என்கிறார் இவர் 
யாக சாலை அமைப்பு,  ஹோம குண்டங்கள், தினசரி  பூஜைகள் எல்லாம்  உள்ளூர் மக்களின் ஆர்வத்தை மேலும்  அதிகமாக்கி    பணிகளை எளிதாக்கியிருக்கிறது.. மாயவரத்திலிருந்து யாக சாலை அமைக்க வந்தவர்கள் கேட்ட பெரிய இடத்தைக் கோவிலுக்குள் ஒதுக்க முடியவில்லை.   கோவில் வாயில் எதிரே பல ஆண்டுகளாகக் கொட்டி கிடந்த மண்ணும் குப்பையும் ஒரே இரவில் எடுக்கப்பட்டு  சுத்தம் செய்யப்பட்ட இடத்தில் யாகசாலை அமைக்கப்பட்டது.  இது  இந்தப்பணியில் உள்ளூர் நிர்வாகத்தின் ஆர்வத்துக்குச் சாட்சி.  மேலும்   அந்த இடத்தில் அழகாக நிமாணிக்க பட்ட யாகசாலை குண்டங்கள் அப்படியே இருக்க வேண்டும் எனப் பக்தர்கள் விரும்பியதால் அந்த இடத்தில் அது இன்னும் தொடர்கிறது. கோவிலுக்கு வரும் பக்கதர்கள் அதையும்  வணங்குகிறார்கள் கலச தீர்த்தம் கங்கையிலிருந்து  தமிழ் நாட்டுமேளதாளங்களுடன்  கொண்டு வரப்பட்டபோது மலர் தூவி மக்கள் வரவேற்றிருக்கிறார்கள்.. 
பிரச்சனைகள் எழாமல் இல்லை.  காசி விஸ்வநாதர் கோவிலின் பாதுகாப்பு  துணை ராணுவத்தினர் வசம் இருக்கிறது. கோவிலின் கோபுரம் முழுவதும் ஒரு டன்  தங்கத்தாலானது என்பதால் மட்டுமில்லை மிக அருகிலேயே மசூதியும் இருப்பதால் செக்யூரிட்டி கெடுபிடிகள் எப்போதுமே அதிகம். கும்பாபிஷகத்துக்காக எல்லா ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருந்த  போது கோபுரகலசத்துக்கு  அருகில் செல்ல படிகள் அமைக்க சாரங்கள் அமைக்க  முயன்ற போது அனுமதி.  மறுக்கப்பட்டிருக்கிறது. மேலே போய் ஏன் தண்ணீர் விடவேண்டும்? கிழேயிருந்து  ஒரு ஹோஸ் பைப்மூலம் பீச்சலாமே என்ற யோசனை வேறு.. சொல்லியிருக்கிறாகள் பாதுகாப்பு அதிகாரிகள். கலங்கிப்போனார் சுப்பு சுந்தரம்.. அதிகாரியிடம் விவாதம்   செய்து காரியம் கெட்டுவிடாமல் அவரிடம் மென்மையாக எடுத்துச் சொல்லியிருக்கிறார். நீண்ட உரையாடலுக்குப்  பின்னர் அனுமதிக்கப்பட்டது.
 ஆனால் விதிக்கப்பட்ட நிபந்தனை  சாரத்தின் எந்தக் கம்பமும் கோபுரத்தின் மீது படக்கூடாது.  அந்த அளவு நேர்த்தியாக சாரம் கட்டுபவரை இந்தக் காசியில் எப்படித் தேடிக்கண்டுபிடிப்பது? என்ற குழம்பிய நிலையில் இருந்தவரிடம் வந்து பேசிய ஒருவர்  “கவலை வேண்டாம்  பாதுகாப்பு அதிகாரிகள் சொல்லுவது போல் நான் செய்துகொடுக்கிறேன்” என்ற சொன்ன போது அது காசி விஸ்வநாதரின் வார்த்தைகளாகத்தான் என் காதில் கேட்டது. என்கிறார் சுப்பு சுந்தரம்.   பின்னால் கோவில் அதிகாரிகள் மூலம் அறிந்த செய்தி அவர் நகரத்தின் மிகப்பெரிய காண்டிராக்டர் தற்செயலாகக் கோவிலுக்கு வந்தவர் பாதுகாப்பு அதிகாரியின் உடையாடலைக் கேட்டு உதவமுன் வந்தவர் என்பது. இரண்டே நாளில் மிக அழகாகக் கோபுரத்தின் எந்தப்பகுதி மீதும் படாமல்,  வசதியாக ஏறிச்செல்ல அகலமான படிகளுடன்  சாரம் அமைக்கபட்டுவிட்டது.
பாதுகாப்பு காரணங்களால் குறிப்பிட்ட சிலருக்கே அனுமதி அளிக்கப்பட்ட அந்த கும்பாபிஷம் முடிந்தவுடன் மக்கள் அன்று இரவு முழுவதும் அனுமதிக்கப்பட்டனர்.  இந்த கும்பாபிஷகத்துக்காக பக்தர்களிடம் நன்கொடை பெறப்படவில்லை. யாகசாலைக்குப் பார்க்கவந்த பத்தர்கள் லட்சகணக்கில்வழங்க முன்வந்த போதும் ஏற்க வில்லை. பெரும் பகுதியை சுப்பு சுந்தரம் ஏற்றிருக்கிறார்.  தமிழக தொழில்நிறுவனங்கள் கேசிபி, முருகப்பா குழுமம் ஈரோடு சிவகுமார் குடும்பத்தினர்   சலவைக்கல் தளமிடுவது,  யாக சாலை அமைப்பு,  சுகாதார வசதிகள் போன்றவகைகளில் உதவியிருக்கிறார்கள்.

காசி விஸ்வநாதர் சன்னதியருகே இருக்கும் அன்னபூரணியின் கோவிலின் நுழை வாயிலிலிருக்கும்  ஒரு கல்வெட்டு  100  ஆண்டுகளுக்கு முன்னர் நகரத்தார் தினசரி அன்னதானம் வழங்க நிறுவிய ஒரு  அறக்கட்டளையின் விபரத்தைசொல்லுகிறது.  அந்த நகரத்தார் பாரம்பரியத்தை இந்த நூற்றாண்டில் தொடரும் வாய்ப்புப் பெற்ற சுப்பு சுந்தரம் தம்பதியினருக்கு நம் வாழ்த்தைச்சொன்னபோது. பணிவுடன்  “இந்தப்பெரிய செயல் எங்களுடையதில்லை ஒவ்வொரு கட்டத்திலும் உதவிசெய்து கருவியான  எங்கள் மூலம் ஈசன் செய்த செயல்தான் இது” என்கிறார்கள்  சுப்பு சுந்தரம், அன்னபூரணி தம்பதியினர்.


9/8/18

தேடல்

தேடல் 

“எமோஷனல் ஆகாமல் அழுவதை நிறுத்திவிட்டுத் தெளிவாகச்சொல்லுங்கள். நீங்கள் சொல்வதை வைத்துத்தான் நாங்கள் உதவ முடியும்”

உதவிப் போலீஸ் கமிஷனர் இந்துமதியின் கம்பீரமான உருவத்துக்கும் விறைப்பான அந்த யூனிபார்முக்கும் சம்பந்தமே இல்லாமலிருந்தது அந்த மென்மையான குரல். அந்தக் குரலில் தெரிந்த கனிவு நம்பிக்கையத்தரத் தன்னைச் சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு பேச ஆரம்பித்தார்  சுமிதா,

“தினமும் போல இன்றைக்கும் டிரைவர் அடையாரிலிருக்கிற ஸ்கூலுக்கு குழந்தையை அழைத்துவரக் காரை எடுத்துக்கொண்டு 2 மணிக்குப் போனார். ஆனால் வழக்கமாகக் குழந்தை வெயிட் பண்ணும் இடத்தில் இல்லாதால் கொஞ்ச நேரம் காத்திருந்து பார்த்திருக்கிறார். வராததால் ஸ்கூல் உள்ளே கிளாஸ் ரூமில் போய்ப் பார்த்திருக்கிறார். அங்கு கிளின் பண்ணிக்கொண்டிருந்த ஆயா எல்லாப்புள்ளைங்களும் அரை மணி முன்னதாகவே போய்விட்டதாகச்சொல்லியிருக்கிறார். அருகில் எங்கும் குழந்தை இல்லாதால் அப்பாவிற்குப் போன் செய்திருக்கிறார். நானும் அப்பாவும் உடனே ஸ்கூலுக்கு பதறி அடித்துக்கொண்டு போனோம். அதற்குள் ஸ்கூலில் எல்லோரும் போய்விட்டார்கள் எச் எம் ஊரில் இல்லை. இருக்கும் இரண்டு டீச்சர்களூம் பதட்டத்தில் இருந்தார்கள். அப்பா எல்லா கிளாஸ் ரூம்களையும் திறந்து பார்க்கச்சொன்னார். நாங்கள் பார்த்துவிட்டோம் என்று சொன்னவர்களிடம் தான் பார்க்கணும் என்று சொல்லிச் சத்தம் போட்டார். குழந்தைய எங்கும்  காணலே.
 “மேடம் எப்படியாவது கண்டுபிடிச்சுக்கொடுங்க மேடம் என்று முடிப்பதற்குள் சுமிதாவிற்கு அழகை பீரீட்டது
.“கவலைப்படாதீர்கள் சுமிதா வீ வில் டூ தெ பெஸ்ட்,  ஐ ஆம் ஆல்சோ ஏ மதர்” என்று சொல்லிக்கொண்டே அந்த ஐபிஎஸ் அதிகாரி தன் முன்னிருந்த கம்யூட்டரில் ஏதோ டைப்பண்ணி கொண்டிருந்த படியே
“சார் உங்க பெயர் என்ன சொன்னீங்க?
“கோபாலன்.- மேடம்” என்று சொன்ன அவரின் தலை வழுக்கையால் அகலமாகத் தெரியும் நெற்றியில் ஒற்றைச் சிவப்பு கீற்று நாமம். பளிச்சென்று இருந்த முகத்தில் கவலையின் தீவிரம் தெரிந்தது. 
 “உங்களுக்குத் தொழில் ரீதியாக ஏதாவது போட்டியாளர்கள் பிரச்சனை? எதிரிகள்? யாராவது?” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே “அதெல்லாம் கிடையாது மேடம். நான் என் தொழிலில் மட்டுமில்லை என்னை அறிந்தவர்களுக்கெல்லாம் பிரண்ட்தான்,  40 வருஷமா எழுத்தாளர்களுடைய புத்தகங்களைப் பதிப்பிக்கும் கம்பெனி என்னுடையது. பிஸினஸில் எந்தப் பிரச்சனையும் கிடையாது”
உங்க டிரைவர் எப்படி?
“ரொம்ப நல்லவன் எங்களிடம் எழு வருடமாக இருக்கிறார். இந்தக் குழந்தையிடம் தனிப்பாசம்”
“குழந்தையை யாராவது கடத்தியிருப்பாங்களா மேடம்?”
என்று பதறிய சுமிதாவிடம். “ரூல் அவுட் பண்ண எல்லா ஆங்கிளிலும் தான் பார்க்க வேண்டும்... ம்ம் பார்க்கலாம் அமைதியாக இருங்கள்” என்ற உதவிக்கமிஷனர் இன்ட்ர்காமில் யாரையோ அழைத்தார்.
வினாடிகளில் உள்ளே நழைந்த அந்த யூனிபாரம் அணியாத அதிகாரி எஸ் மேடம் என சல்யூட் செய்தார்
“ஶ்ரீதர் இவங்களோடு போய் வீட்டில் இருங்க. செல்போன்,லேன்ட் லைன் எல்லாவற்றையும் டிராக்கிங்லே போடுங்க, அப்டேட் கொடுங்க  என் பெர்சன்ல் லயனுக்கு வாங்க. வயர்லெஸ் வேண்டாம்
.
“நீங்க வீட்டில் போய் இருங்க இவர் கூட இருப்பார் அவர் சொல்லுவதை கவனமாக ஃபலோபண்ணுங்க. யாரிடமும் எதுவும் பேச வேண்டாம் மீடியாக்காரங்க கிட்ட எதுவும் பேசாசாதீங்க.. ஸ்கூலிருந்து எதாவது சொன்னா எங்கிட்ட அவங்களை பேசச்சொல்லுங்கள்”. எனப் பட படவெனக் கட்டளை மாதிரி சொல்லிக்கொண்டே போனார். உதவிக் கமிஷனர் இந்துமதி.
“உங்கள் டிரைவர் வந்திருக்கிறாரா? அவர் இங்கேயே இருக்கட்டும். நீங்கள் வீட்டில் இருங்கள் எதாவது போன் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்று ஶ்ரீதர் சொல்லுவார்”.
குழந்தைபேர் என்ன சொன்னீங்க? ம்ம்.. பிரியா இல்லே 5 வயசு. ஒ.கே அவங்க படம் இருக்கா? சுமிதா உடனே தன் செல்போனிலிருந்த கடந்த வாரம் ஸ்கூல் பங்ஷன் டான்ஸில் எடுத்த படத்தைக் காட்டினார்.” இது வேண்டாம் நார்மல் படம் முகம் தெளிவாக இருக்கும் படம் கொடுங்க”
பரவென்று போனில் தேடி ஒரு படத்தைக்காட்டியவுடன். ஓகே இதை எனக்குப் போனில் அனுப்புங்க என்ற சொல்லிவிட்டு அலறிக்கொண்டிருந்த வயர்லெஸ் போனை எடுத்துப் பேச ஆரம்பித்தார்.
தாங்கள் கிளம்ப வேண்டும் என்பதை உணர்ந்த அப்பாவும் பெண்ணும் எழுந்தனர்
“மேடம் எப்படியாவது...” என்று மறுபடியும் அழத்துத்வங்கிய சுமிதாவைப்பார்த்தவுடன், வயர்லெஸ்போனில் “ஜஸ்ட் மினிட்” என்று சொல்லிவிட்டு அவர் தோளைத்தட்டி “அண்டர்ஸ்டான்ட். வீ ஹவ் டு வெயிட்.. பீ போல்ட் அன்ட் கோஆப்ரேட்”, என்று சொன்னார் இந்துமதி.
“மேடம் ஒரு விஷயம் இங்கே வர முன்னாடி கிளாஸ் மதர்ஸ் வாட்ஸ் குருப்பில் பிரியா வீட்டுக்கு வரவில்லை என்று போட்டிருக்கிறேன்.”
ஓ குட். அவர்கள் யாரவது மெஸெஜ் அனுப்பினா பாருங்க. ஆனா போனில் பேச வேண்டாம்
அவர்கள் வெளியேபோனதும். உள்ளே நுழைந்த நபரிடம்
“ஷாஜஹான் டிடெட்யல்ஸ் எல்லாம்  கேட்டிங்கிங்க இல்லே?”. என்றார். இந்துமதியிடம் புகார் கொடுக்கவருபவர்கள் பேசுவது பக்கத்து அறையிலிருக்கும் அதிகாரிகளுக்கு ஸ்பீக்கரில் கேட்கும் வசதி செய்யப்பட்டிருக்கிறது.. விஷயங்களை மறுபடி சொல்லும் நேரத்தைத் தவிர்க்கவும், அதேநேரத்தில் விபரங்களைக் கேட்டுக்கொண்டிருக்கும்போதே  அவர்கள் பார்வையில் அதை அலசவும் இந்துமதி செய்திருக்கும் ஏற்பாடு.இது.

“மேடம் இவங்க பெரிய பப்ளிஷர்ஸ் மேடம். ஜெயகாந்தன் போன்ற பெரிய ஆளுங்கள் புத்தகமெல்லாம் போட்டிருக்காங்க. நம்ப பழைய டிஜிபி அம்மா புத்தகங்கள் கூட போட்டிருக்காங்க.பெரிய வசதியானவங்க. இப்ப பக்தி புத்தகம் நிறைய போடறாங்க.

“ஓ அப்படியா? வந்த காரைப்பார்த்தாலே புரியது ஐ அம் சஸ்பெட்டிங் கிட்நாப்பிங் ஃபொர் கெயின்.. உங்க டீமை இறக்குங்க. டிரைவரைத் தரோவா விசாரிங்க. அவன் வழியா யாராவது ஆப்ரேட் பண்ணற பாசிபிளிட்டி இருக்கிற ஆங்கிளையும் பாருங்க.. ஸ்கூல் ஸ்டாப்,, அப்ப ஸ்கூலுக்கு வந்த கார்களின் வேன்களின் டிரைவரைங்க எல்லாரையும் டிரேஸ் பண்ணுங்க கியூக், கியூக்” என்று சொன்னவடனேயே
“யெஸ் மேடம். நீங்க பேசிட்டிருக்கும்போதே டீமை ரெடிபண்ணிட்டேன். குழந்தையின் படத்தைக் கன்ட்ரோலுக்கு அனுப்பிடேறேன். மீடியா உள்ளே நுழையாம லாக் பண்ணிடலாம்” என்றார் ஷா என்று பலரால் அழைக்கப்படும் ஷாஜஹான்.. கிரைம் இன்டலிஜென்ஸில் அவரது 20 ஆண்டு அனுபவம். மிடுக்குடன் பேசியது
.
****
“குழந்தை 3 மணி அளவில் காணாமப்போயிருக்கு, நார்மலா இந்த மாதிரி கேஸ்கள்ல 3 அல்லது 4 மணி நேரம் கழித்துத்தான் அவங்க பேசுவாங்க. இப்ப மணி 6 ஆகுது. எப்ப வேணா கால் வரலாம்.நீங்க இரண்டுபேரும் தெரிந்தவங்க போன் வந்தாலும் கூட எடுக்கக் கூடாது. எதாவது புது நம்பர் வந்தா எனக்குச் சிக்னல் கொடுங்க நான் சொன்னப்புறம் எடுங்க. நிதானமா பேசுங்க. நான் எழுதிக் காண்பிக்கிறமாதிரி பேசுங்க போதும். கன்ட்ரோல் ரிக்கார்ட் பண்ணிக்கொண்டே போன் வரும்  இடத்தை டிரேஸ்பண்ணுவாங்க. அதுக்கான டைம் கிடைக்கிறவரை நீங்க பேசிக்கிட்டே இருக்கணும். புரியிதுங்களா? “
“மேடம் வேண்டாம்- போன் வந்தா நீங்க பேசுங்க சார்”.
என்று சொன்ன ஶ்ரீதரிடம் “கிட்நாப்பாகத்தான் இருக்குமுன்னு முடிவுசெஞ்சுட்டிங்களா?” என்றார் கோபாலன்
இல்லை அந்த ஆங்கிளீலிலும் பார்க்கிறோம். நார்மல் போலீஸ் செர்ச்சும் ஆரம்பிச்சிட்டாங்க
அந்த ஏர்கண்டிஷன் அறையில் மேஜை மீது இருக்கும் இரண்டு செல் போன்களையும் பார்த்தபடியே மூன்று பேரும் உட்கார்ந்திருக்கின்றனர். கோபாலன் சஸ்ரநாமம் சொல்லஆரம்பித்திருந்தார். சுமிதா அழுகையை அடக்கமுடியாமல் தவிக்கிறார். ஶ்ரீதர் தன் போனில் ஏதோ படித்துக்கொண்டிருக்கிறார்.’
***   
“ரகு எங்கேயிருக்கீங்க? எவ்வளவு நேரமா டிரைப் பண்றேன் தெரியுமா? சீக்கிரம் வீட்டுக்கு வாங்க. சம் ஸ்டேரெஞ் திங்கஸ் ஆர் ஹாப்பனிங்” என்று லதா தன் கணவரைப் போனில் அழைத்தார்.
“ஐ ஆம் ஆன் மை வே” வீட்டில் என்ன ஆச்சரியம்?. குழாயில் தண்ணி வந்துவிட்டதா? என்று சிரித்த கணவனிடம். 
“ரகு நோ ஜோக்ஸ் பிளிஸ் பீ சீரியஸ். சீக்கிரம் வாங்க பயமாகயிருக்கு” என்று பதறுகிறார்.     ரகு எப்போதுமே ஜோவியலாகப் பேசும் மனிதர். தினமும் பேஸ்புக்கில் எழுதுபவர். அதை வியாசம் என்று சொல்லுவார்,
“ஓகே.. ஒகே 5 நிமிஷ ட்ரைவில் தான் இருக்கேன். வரேன்”
.
ரகுநாதன் லதா இருவரும் ஆடிட்டர்கள். ரகு மேனேஜ்மென்ட் கன்ஸ்ல்டண்ட் லதா இன்கம் டாக்ஸ் விவகாரங்களில் எக்ஸ்பர்ட். நாள் முழுவதும் பிசி. அண்ணா நகரில் தனி வீடு, ஆளுக்கு ஒரு பெரிய கார் வாங்குமளவுக்கு வருமானம்.
“என்ன விஷயம்? ஏன் மிரண்டமாதிரி இருக்கே? என்று கேட்டபடியே உள்ளே நுழைந்த ரகுநாதன் சோபாவில் தூங்கிக்கொண்டிருந்த அழகான குழந்தையைப் பார்த்து ஹய் இந்தக் குழந்தை யாரு?”

சாயங்காலம் சாந்தி வேலைக்கு வரும்போது “அம்மா நம்ம காரிலே இந்தக் குழந்தை அழுதுகொண்டிருந்தது”ன்னு சொல்லி உள்ளே தூக்கிக்கொண்டுவந்தாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை, யார் என்ன என்று எதுவும் தெரியல்ல. உள்ளே வந்ததும் “நீங்க அம்மா பிரண்டா? என்று மடியில் உட்கார்ந்து கொண்டுவிட்டது”. ரொம்ப நாள் தெரிந்தமாதிரி ஒட்டிகொண்டுவிட்டது
.
நம்ம வித்தியாவை  20 வருடத்துக்கு முன்னால் குழந்தையாக பார்த்த ஞாபகம் வந்தது. . ஏதாவது சாப்பிடிறியான்னு கேட்டேன் சாக்லேட் காம்பளான் என்றது.  அது நம்மகிட்ட இல்ல.. அதனால் சாந்தியை வாங்கிக் கொண்டு வரச்சொல்லிப் போட்டுக்கொடுத்தேன். மெள்ளக் குடித்துவிட்டு என்னவோ பேசிக்கொண்டேயிருந்தது. இப்பத்தான் தூங்கறது. இன்னும் மழலையே போகல்ல பேசறது புரியவே இல்லை. ஆனா நன்னா பேசுறது. யாருடைய குழந்தையோ?. பேர் ஒரு சமயம் தேவி என்கிறது ஒருசமயம் பிரியா என்கிறது. வேறு எதெல்லாமோ சொல்லுகிறது எனக்குப் புரியவில்லை.
“அதைவிட நான் பயந்து போன விஷயம் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருத்தன் நம்ப வீட்டு வாசலையே பார்த்துக்கொண்டிருந்தான். நான் கேட்டுக்குப் போனவுடன் போய்விட்டான். கொஞ்ச நேரம் முன்னால் மறுபடியும் வந்தான் நான் ஜன்னல் இடுக்காலே பார்த்தேன் கொஞ்ச நாழியிலே போயிட்டான். அவன் கொண்டுவந்து விட்டிருப்பானோன்னு பயமா இருக்கு”,
என்று ஒரே மூச்சில் சொன்ன லதாவிடம் “கூல். காரிலிருந்து இந்தக் குழந்தையை சாந்தி தூக்கியதை நீ பார்த்தையா?”

“இல்லை அவள் உள்ளே கொண்டுவந்தப்புறம் தான் சொன்னாள். வழக்கம் போல கார் கதவைப் பூட்டாமல் வந்து விட்டேன் போலிருக்கிறது.
“அப்போ அந்த மோட்டார் சைக்கிள் ஆள் இருந்தானா?
“நான் பார்க்கல ரகு”
இது சீரியஸ் மேட்டர் போலீஸ்ல ரிப்போர்ட் பண்ணி குழந்தையை ஹேண்ட் ஒவர் பண்ணனும்.  இந்த ராத்திரி நேரத்தில் லோகல் ஸ்டேஷனில் குழந்தையை விடுவது சேப் இல்லை யாரவது ஹைர் அப்பிடம் பேசிவிட்டு காலைவரை வைத்திருப்பது தான் பெட்டர் என்று சொல்லியபடியே ரகு தன் போன் காண்டாக்ட்டில் ஒரு நம்பரைத் தேட ஆரம்பித்தார்,

சட்டென்று முழித்துக்கொண்ட குழந்தை ரகுவைப்பார்த்து “ஹலோ அங்கிள்” என்றது. சற்றே திடுக்கிட்ட ரகு ஹலோ என்றார். மிகசுவாதீனமாக அவர் மடியில் உட்கார்ந்து கொண்ட அந்தக் குழந்தை அப்பா எப்ப வருவாங்க? என்றது.

சீக்கிரமா என்று சொல்லியபடி அந்தக் குழந்தையிடம் பேசத்துவங்கினார். ரகு. “நீ எந்தக்கிளாஸ்? உஷா மிஸ்தானே உங்க மிஸ்?
“நோ அவங்க ராதிகாவோட மிஸ். எங்க மிஸ் ..” என்று புரிந்துகொள்ள முடியாத ஒரு பெயரை மழலையில் சொல்லியது. இதில் நடுவில் இங்கிலிஷ் வேற.
“வந்ததிலிருந்து நான் கேட்டுப்பார்த்திட்டேன் ஸ்கூல் பேர் டிச்சர் பேர் அப்பா பேர் எதுவும். அது சொல்லறது நமக்குப் புரியல்ல. ஆனா சமத்துக்குழந்தை. புது இடங்கிற பயமே இல்லாமல் பேசுகிறது”. என்றார் லதா
“இன்னும் கொஞ்சம் ட்ரைப்பணலாம். கண்டுபிடிச்சிடலாம். பொறுமையாக இரு”. என்று சொன்ன மேனேஞ்மெண்ட் குருவான ரகுவிற்கு இது ஒரு புதுமாதிரியான சாலென்ஞ்.
.
 ரகு போனில் கூப்பிட்ட போலீஸ் நண்பர் ஒரு அவரசகூட்டத்திலிருப்பதாகவும் முடிந்தவுடன் கூப்பிடுவதாகவும் எஸ்மெஸ் அனுப்பியிருந்தார். நகருக்கு நாளைப் பிரதமர் வரப்போவதும் அதற்கான செக்யூரிட்டிகளுக்கு நண்பர் தான் பொறுப்பு என்பதும் அப்போது தான் ரகுவிற்கு நினைவுக்கு வந்தது
டிவியில நீயூஸ் பார்க்க ஆரம்பித்த ரகுவின் மடியில் உட்கார்ந்து கொண்ட குழந்தை “டாம் அன்ட் ஜெரி போடுங்க அங்கிள்” என்றது.
“நீயூஸ்பார்த்துட்டு பார்க்கலாமா?
“ஓகே” என்றது குழந்தை. தந்திச் சேனலில் 9 மணிச்செய்தியில் சென்னைப் புத்தக கண்காட்சியில்   முதல் நாள் மாலை   விருதுகள் அளிக்கப்பட்ட விழா. ஓடிக்கொண்டிருந்தது. இந்த ஆண்டின் சிறந்த பதிப்பாளர் விருது என அறிவிக்கப்பட்டபோது அந்த நடிகரிடம் ஷில்ட் வாங்கியவரைப் பார்த்ததும் குழந்தை “ஹை தாத்தா” என கத்தியது. உடனே ரகுவும், லதாவும் குழந்தையிடம் பேச ஆரம்பித்தனர்.

**லேண்ட் லயன் மூன்று முறை மணியடித்து முடிந்தவுடன் தன் கையிலிருந்த கருவியில் ஒரு பட்டனை அமுக்கி அலர்ட் என்ற சொன்ன ஶ்ரீதர் சில வினாடிகளில் எடுத்துப் பேசுங்க  என்றார்.
சற்றே தயங்கியபடி போனை எடுத்தார் கோபாலன்
“மிஸ்டர் கோபாலனிருக்கிறாரா?”
“நீங்க யார் பேசுறிங்க?”
அண்ணா நகரிலிருந்து பேசறேன், கோபாலனிடம் முக்கியமான ஒரு விஷயம் அவசரமாகப் பேசணும்.
ஶ்ரீதர் கையை உயர்த்திக் காட்டியவுடன்.
“சொல்லுங்க நான்தான் கோபாலன் என்ன விஷயம்.?.”

“சார் உங்க பேத்தி பிரியாவைத்தேடறீங்களா? எங்க கிட்ட பத்திரமா இருக்கா”.. . முடிப்பதற்குள் போனை ஶ்ரீதர்  வாங்கி தொடர்ந்து பேசுகிறார்.
சில நிமிடங்களில் ‘ பேபி பிரியா டிரேஸ்ட் .அன்ட் ஸேப்’ என்ற செய்தி உதவிக்கமிஷனருக்கும் கன்ட்ரோல் ரூமுக்குச் பறக்கிறது
5 நிமிடத்தில் அண்ணா நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர். ரகுவின் வீட்டு வாசலில். அவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே உதவிகமிஷனர் இந்துமதியின் பரிவாரத்தின் ஜீப், கார்கள். பின்னாலேயே சுமிதாவின் கார். அந்தச் சின்னத் தெரு போலீஸ் கார்களால் நிறைகிறது. தூங்கப்போய்விட்ட அந்த அமைதியான தெரு பரபரப்பாகிறது
.
தாத்தாவைப் பார்த்தது ஓடிவந்தபிரியாவை வாரித்தூக்கிக்கொண்டார். கோபாலன்
எப்படிம்மா கண்ணு இங்கே வந்தே?
“நான் வரலைத் தாத்தா இந்த ஆன்ட்டிதான்” .என்று தன் மொழியில் எதோ சொல்ல “இல்லை குழந்தை தெரியாமல் சொல்லுகிறது” என்று லதா ஆரம்பித்தபோது இந்துமதி கையை உயர்த்தி “குழந்தை பேசட்டும்” என்றார். அவரது கண்களில் தெரிந்த ‘கவனியுங்கள்’ என்ற கட்டளைக் கவனித்த போலீஸ் குழு அலர்ட்டாக அந்தக் குழந்தை சொல்வதைக் கவனிக்கத்தொடங்கியது
“ஸ்கூல டிரைவர் சோமு அங்களை கார்கிட்ட காணும் தாத்தா சரி வருவார்ன்னு நினைச்சு . நான் உள்ளே ஏறி வாட்டர் குடிச்சுட்டு படுத்துண்டேன் தாத்தா. அப்பறம் இந்த ஆண்ட்டி இல்ல,- அம்மா பிரண்டு. ரொம்ப நல்ல ஆண்ட்டி. 2 கிட்கேட் சாக்லேட், காம்ப்ளான் எல்லாம் கொடுத்தாங்க.. அங்கிள் தான் உன் மாதிரியே டாம் அன்ட் ஜெரி போடாம நியூஸே பார்க்கிறார் “, என்றது

உள்ளே நுழையும் போதே கவனித்த ஒரு விஷயம் மின்னலடிக்க இந்துமதி குழந்தையை வாசலுக்கு அழைத்து இதில் எந்தக் காரில் நீ படுத்துண்டே சொல்லு? என்று கேட்டார்
ஒரே மாடல், ஒரே மாதிரியான பளீர் வெள்ளைகலரில் இருந்த இரண்டு ஆடி கார்களையும் பார்த்து முழித்த பிரியா பிங்கி பாங்கிபோட்டு ஒரு காரைக் காண்பித்து ஒடிச்சென்று பூட்டாமல் இருந்த அதன் பின்கதவைத் திறந்து. காண்பித்தது.
ஒரே மாதிரியாகியிருந்ததால் தெரியாமல் அவர்கள் கார் மாதிரியே இருந்த மற்றொரு காரில் ஏறி தூங்கிவிட்ட குழந்தைத்தான் இவ்வளவு நேரம்  தேடிக் கொண்டிருக்கிறோம் என்று வினாடியில் புரிந்துவிட்டது அந்த ஐபிஎஸ் முளைக்கு.
மத்தியானம் அடையாரிலிருக்கும் அந்தப் பள்ளிக்கு எதிரிலிருக்கும் கிளையண்ட்டைப் பார்க்கப்போனதும், காரை பள்ளிகேட்டின் அருகில் நிறுத்தியதும் லதாவுக்கு நினைவுக்கு வந்தது. வழக்கம்போல காரி லிருந்து சாவியை எடுத்தபின் பட்டனை அழுத்தி காரைப் பூட்ட மறந்திருக்கிறேன்.. திரும்பும் போது பின்சீட்டில் ஒரு குழந்தை இருந்ததைக் கவனிக்காமல் வீட்டுக்கு  ஒட்டிவந்திருக்கிறோம் என உரைத்தது ஆடிட்டர் லதாவிற்கு.

உள்ளே ரகு, லதாவின் அழகான பூஜைரூமில் 6 அடியில் தஞ்சாவூர்படமாக நிற்கும் பட்டாபிஷக ராமர் முன்னால் என் குழந்தையை இந்த நல்ல மனுஷாள் வழியாகக் காப்பாத்திட்டே பெருமாளே“ என்று சாஷ்டாங்கமாக விழுந்துகொண்டிருந்தார் கோபாலன்.
இரவு 10 மணிக்கும் புளு ஜீன்ஸ்,  வொயிட் டாப்ஸில் பிரஷ்ஷாக இருந்த இந்துமதி இந்தக் கேஸ் முடிந்தது என்று சொல்லும் உடல்மொழியுடன் நடந்து கொண்டே “ஶ்ரீதர் அந்த மர்டர் அக்யூஸ்ட் ஏதாவது பேசறானா?” என்று கேட்டபடியே  அவர் காருக்கு வேகமாக நடந்துகொண்டிருந்தார்.  அவர் பின்னே ஒடிவந்து “ தாங்கஸ் மேடம் நாளை ஆபிஸில் வந்து பார்க்கிறேன்” என்று சொல்லுகிறார் சுமிதா..
“யூ ஆர் வெல்கம்” என்ற அரைப்புன்னகையுடன் காரில் ஏறுகிறார் இந்துமதி
“நீங்க பெருமாள் ஆசியோடு நன்னா ஷேமமா இருக்கணும்” என்று சொல்லிக்கொண்டே தன் காரின் முன் சீட்டிலிருந்து இன்றைக்கு சயாங்காலம்தான் பைன்டிங் முடிந்து வந்தது. உங்களுக்குத்தான் முதல்காப்பி” என்று ஒரு புத்தகத்தை ரகுவிடம் கொடுக்கிறார் கோபாலன்.. 
அதன் நீலக்கலர் அட்டையில்   ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் என்பதைப்பார்த்து கண்ணில் ஒத்திக்கொள்கிறார் லதா..
“இந்த டிரைவருக்கு  எத்தனைத் தரம் சொல்லியிருக்கிறேன். கார் பக்கத்திலேயே எப்பவும் இருக்கணும்ன்னு. சே அவனாலே எவ்வளவு பிராபளம் டென்ஷன்” எனச் சொல்லிக்கொண்டே காரை ஸ்டார்ட் செய்கிறார் கோபாலன்

எல்லா கார்களும் போனபின் சட்டென்று வெறுமையானது வீடு. நாளை பேஸ்புக்கில் இதை ஒரு வியாசமாக எழுதலாமா? என நினைத்துக்கொண்டே வீட்டின் உள்ளே நுழைகிறார் ரகுநாதன்.

ஆதித்யா (ரமணன்)

 ரமணன்
1A NATURA HARAMONY
12 SRINIVASAPURAM MAIN RD
THIRUVANMIYUR CHENNAI 60041
     944902215