நிகழ்வுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நிகழ்வுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

12/2/18

நல்ல புத்தகங்களும் நான்கு நண்பர்களும்.



“இப்போது சரியாக 6.மணி 30 நிமிடங்கள்” என்ற வார்த்தைகளூடன் வாசகர்களை வரவேற்கிறார் திரு ரவிதமிழ்வாணன். நிகழ்ச்சி நிரலில்

அட்டவணைபிட்டபடி வினாடி தவறாமல் நிகழ்ச்சிகளை நடத்தி சரியாக 8                   
மணிக்கு நன்றி அறிவிப்போடு முடிகிறது புத்தக நண்பர்கள் என்ற அமைப்பின் மாதந்திர கூட்டம். ஓவ்வொரு மாதமும் மாதத்தின் கடைசி செவ்வாய்க்கிழமை மாலை ஒரு தமிழ் புத்தகம் அறிமுகம் செய்யப்படுகிறது
.
கூட்டத்தின் துவக்கத்தில் ஒலிக்குப்போகும் இறைவணக்கப்பாடல் எத்தனை நிமிடம், எத்தனை வினாடிகள் என்பதைக்கூட அறிவிக்கிறார்கள். ஒவ்வொரு கூட்டத்திலும் ஒரு எழுத்தாளார்/ அல்லது பத்திரிகையாளர்பற்றி நினைவேந்தலாக ஒரு சிறு குறிப்பைச்சொல்லுகிறார்கள். பின்னர் அன்றைய ஆய்வாளாரின் அறிமுகத்துக்குபின் அவர் பேச அழைக்கபடுகிறார்
.
(TAG)(டேக் மையத்தின் தலைவரான தொழிலதிபர் திரு ஆர். டி சாரி. விளம்பரத்துரை வல்லுனர் திரு ஆர். வி ராஜன், மூத்தபத்திரிகையாளார் ‘சாருகேசி” புத்தக பதிப்பாளார் திரு ரவி தமிழ்வாணன் ஆகிய நால்வர் இணைந்து உருவாக்கியது தான் இந்தப் புத்தக நண்பர்கள் அமைப்பு திரு ஆர். டி சாரியின் குடும்ப அறக்கட்டளை இதற்குத் துணை நிற்கிறது   
 இந்த அமைப்பு 2014 பிப்ரவரியிலிருந்து மாதந்தோறும் ஒரு கூட்டத்தை நடத்துகிறது. தேர்ந்த்தெடுக்கபட்ட ஒரு புத்தகம் அதில் திறனாய்வு செய்யபட்டு அறிமுகப்படுத்தப்படுகிறது. புத்தக அறிமுகம் அலங்கார வார்த்தகளில் அறிமுகமாகவும் இல்லாமல் மிகக்கடுமையான விமர்சனங்களும் இல்லாமல் நேர்மையான திறனாய்வாகயிருக்கிறது. புத்தகத்தைபோலவே திறனாய்வாளரும் இந்த நண்பர்கள் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். . சில ஆய்வுகள் பல்கலைகழக ஆய்வுகளைப் போல மிகச்சிறப்பாகயிருக்கிறது. புத்தக ஆசிரியர்களூடையதைப்போலவே அவர்களது உழைப்பையும் உணரமுடிகிறது.

அறிமுகத்துக்குப் பின் புத்தக ஆசிரியர் பேச அழைக்கப்படுகிறார். நூலாசிரியரின் உரைக்குப் பின் கூட்டத்தில் பார்வையாளரின் கேள்விகளுக்குப் பதில் அவர் பதிலளிக்கிறார். இந்தக் கேள்விகள் பார்வையாளர்களிடமிருந்து எழுத்துவடிவில் பெறப்பட்டு அதை நெறியாளர் ரவி தமிழ்வாணன் மேடையில் அவர்கள் சார்பில்  கேட்கிறார். பார்வையாளார்கள் நேரடியாகக் கேட்க    அனுமதியில்லை.

இதுவரை 43 கூட்டங்களை நடத்தியிருக்கும் இந்த அமைப்பில் ஆய்வு செய்யப்பட்டிருக்கும் புத்தங்களின் பட்டியல் மிக நீண்டது. அசோகமித்திரனின் புத்தகத்துடன் துவங்கிய முதல் கூட்டம் இந்திரா பார்த்தசாரதி போன்ற உலகம் அறிந்த ஆசிரியர்களிலிருந்து, புதிதாக எழுதத்துவங்கியிருக்கும் எழுத்தாளார் வரை பலரின் படைப்பை அறிமுகம் செய்திருக்கிறது.

சிறந்த புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கும்  பல அமைப்புகளை நமக்குத்தெரியும். இந்தப் புத்தக நண்பர்கள் அமைப்பு ஆண்டின் 12 மாதங்களில் செய்யப்பட்ட திறானாய்வுகளில் சிறந்ததைத் தேர்நெடுத்து திறானாய்வு செய்தவருக்குப் பணப்பரிசு வழங்குகிறார்கள். 2016ம் ஆண்டுக்கான சிறந்த திறானாய்வுக்கு  ரூ 25000 பரிசு அளிக்கபட்டிருக்கிறது. இதைத்தவிர தமிழின் சிறந்த படைப்பாளிகளுக்கு வாழ்நாள் சாதனை விருதுகள் வழங்கிக் கெளரவித்திருக்கிறார்கள்.

ஆய்வுக்குப் புத்தகங்களை எப்படி தேர்ந்தெடுக்கிறார்கள்? வாசிப்பதை நேசிக்கும் நால்வரும் வாசித்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள். நண்பர்கள் பரிந்துரை செய்பவற்றையும்  வாசித்துத் தேர்ந்தெடுக்கிறார்கள் நூலாசிரியர், ஆய்வாளார்கள் தொடர்பு கொள்வதை திரு சாருகேசி கவனிக்கிறார்.

“குறைந்தது 100 பார்வையாளர்களையாவது ஒவ்வொரு மாதமும்  வரவேற்க வேண்டும் என்பது. எங்கள் இலக்கு. இந்த ஆண்டு எல்லா மாதங்களிலும் அந்த எண்ணிக்கையைக் கடந்து பார்வையாளார்கள் வந்திருப்பது மகிழ்ச்சியான விஷயம்” என்கிறார் அமைப்பாளர் திரு ரவி தமிழ்வாணன். “அதைவிட தொடர்ந்து வரும் பார்வையாளார்கள் நல்ல நண்பர்களாகியிருப்பதும் கூட்டங்கள் ஒரு குடும்பநிகழ்ச்சி போன்ற உணர்வை ஏற்படுத்தியிருப்பதும்தான்  மிக மகிழ்ச்சித்தரக்கூடிய விஷயமாகயிருக்கிறது என்கிறார் இவர்.

 கலந்து கொள்ளும் பார்வையாளர்களுக்கு ஓவ்வொரு கூட்டத்தின் துவக்கத்திலும் இனிப்புடன் கூடிய இனிய சிற்றுண்டியும் வழங்கிறார்கள் ஆம்! வயிற்றுக்கு நல்லுணவுவிட்ட பின்னர்தான் இலக்கியத்திற்கு செவி சாய்க்க அழைக்கிறார்கள


30/12/17

கண்ணுறாங்காக் காவல் வெளீயீடு திருச்சி 24/12/2017


 தமிழ் படைப்பிலக்கியவாதிகளில் மொழிபெயர்ப்பாளனுக்கு பொதுவெளியில் அங்கீகாரம் கிடைப்பது என்பது அரிதான விஷயமாகயிருக்கும் இன்றைய காலகட்டத்தில் திரு ப. சிதம்பரம் அவர்களின் ஆங்கிலப் புத்தகங்களைத் தமிழாக்கம் செய்த எழுத்தாளர்களை அவரது “எழுத்து” இயக்கம் சார்பில் அண்மையில் திருச்சியில் நடைபெற்ற விழா மேடையில் அவரே கெளரவித்தது தமிழ் மொழிபெயர்ப்பாளர்களுக்குக் கிடைத்த கெளரவம்.

.நான் பல ஆண்டுகளாகக் கண்டுபிரமித்துப் போயிருக்கும் ஆளுமைகளில் முக்கியமானவர் திரு. ப சிதம்பரம். அவரது உரைகளில் ஆங்கிலத்திலும் சரி தமிழிலும் சரி அது பாராளுமன்றத்தின் விவாதங்களாகயிருக்கட்டும், இலக்கிய சிந்தனை, அல்லது கம்பன் கழக விழாவாக இருக்கட்டும். தங்கு தடையின்றி அழகான, தேர்ந்தெடுத்த சொற்களில் தனது ஆழமான அழுத்ததமான கருத்தைத் தெளிவான குரலில் சொல்லுவார்.அவரது ஆங்கில நூலைத் தமிழாக்கம் செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தவுடன் மிக மகிழ்ந்து போனேன். காரணம் அவரது ஆங்கிலத்தைபோலவே அரசியல் பார்வைவைகளையும் ரசித்துக்கொண்டிருப்பவன் நான். (சில சமயங்களில் ஏற்காவிட்டாலும் கூட).அரசியல், சட்டம், பொருளாதாரம் நன்கு அறிந்த திரு சிதம்பரம் அவர்களின் ஆங்கிலம் எளிதானது. ஆனால் சொல்லும் கருத்தின் வலிமையை, ஆளுமையை வெளிப்படுத்த அவர் பயன் படுத்தியிருக்கும் சில ஆங்கிலச்சொற்களை எளிதில் தமிழ்படுத்த முடியாது.
ஒவ்வொரு மொழியிலும் ஒரு குறிபிட்ட வார்த்தை பல அர்த்தங்களைக் கொண்டிருக்கும். அதை மொழிமாற்றம் செய்வது சவாலான சிக்கலான ஒரு பணி ஒரு சிறிய தவறு கூட வீபரீத விபத்தாக மாறிவிடக்கூடிய ஆபத்துண்டு . இதுபற்றி நானும் என்னுடன் அவருடைய மற்றொரு புத்தகத்தை இதே சமயத்தில் மொழியாக்கம் செய்த நண்பர் வெங்கிடேஷும் அடிக்கடி விவாதித்திருக்கிறோம்இந்தப்பணியை அவர் எனக்குத் தரும் முன், அவரே தேர்ந்தெடுத்த இரண்டு அத்தியாங்களை மொழியாக்கம் செய்து அனுப்பச்சொன்னார். அது ரோஹித் சக்ரவர்த்தி வெமூலா, என்ற தலித் இளைஞன் தற்கொலை தொடர்பாக எழுந்த பிரச்னை. உணர்ச்சியின் கொந்தளிப்பாகக் கடுமையான ஆங்கில வார்த்தைகளில் அரசைச் சாடிய கட்டுரை.
என்னுடைய மொழியறிவு, மொழிசார் பண்பாடுகுறித்த புரிதல், படைப்பின் தொனி, படைப்பு மொழியின் சிக்கல் போன்றவற்றில் என் உள் வாங்கும் திறனுக்கான சோதனை அது எனப் புரிந்துகொண்டேன். கஷ்டமான கணக்கைக்கொடுத்து மாணவனைச் சோதிக்கும் ஒர் ஆசிரியரை அதில் நான் பார்த்தேன்.சவாலான அந்தக் கட்டுரயை படைப்பின் தொனி மாறாமல், தமிழ் மொழியின் மரபுகளுக்கேற்ப மொழியாக்கம் செய்து அனுப்பினேன். தலைப்பையும் தமிழ் மரபிற்கேற்ப மாற்றியிருந்தேன். விமானப் பயணம் ஒன்றில் அதைப்படித்துவிட்டு நன்றாக வந்திருக்கிறது பணியைத்தொடருங்கள் என்று செய்தி அனுப்பினார். இது அவரது தமிழ் மொழி ஆளூமையையும் ஒரு படைப்பாளியின் உழைப்பை பாராட்டும் பண்பையும் காட்டுகிறது.


மூல நூலின் ஆசிரியர் தமிழ் அறிந்தவர் மட்டுமில்லை, எழுத்தாளரும் கூட என்பதினால் பணி இன்னும் சவாலானது என்பதை உணர்ந்து செய்த 6 மாத உழைப்பு அரங்கத்தில் அங்கீகரிக்கபட்டதில் மகிழ்ச்சி
புத்தக வெளியீட்டில் விழாவில் பங்கேற்ற கனையாழி ஆசிரியர் முனைவர் ராஜேந்திரன், திருவைரமுத்து. திரு ப.சிதம்பரம் அனைவரும் மொழிபெயர்ப்பைப் மிகப் பாராட்டினார்கள். திரு ப. சிதம்பரம் சொன்னதை எங்களால் வாழ்க்கையில் மறக்கமுடியாதது. “நானே தமிழில் எழுதியிருந்தால் இத்தனை அழகாகச் செய்திருக்க மாட்டேன்”
இந்தப் மொழியாக்கப் பணியில் நான் பார்த்து வியந்த விஷயம் அவர் பல இடங்களில் பிரச்சனைகளை ஆக்பூர்வமான விமர்சனத்துடன் குறிப்பிட்ட தீர்வும் சொல்லுகிறார். ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம்பற்றிய கட்டுரையில் திரு. சிதம்பரம். ஐக்கிய முன்னணி அரசில் கருத்து ஒற்றுமை யில்லாததால் தன்னால் அந்தச் சட்டத்தில் திருத்தங்கள் செய்ய முடியவில்லை என்பதை நேர்மையாக ஒப்புகொள்கிறார். இதன் மூலம் அவர் எந்த அரசியல் ஆதாயத்தையும் அடைந்துவிடவில்லை. அரசியல் வாதிகளின் நேர்மையைப் பற்றி விமர்சிக்கப்படும் இன்றைய கால கட்டத்தில் இவரது துணிவு நம்மை ஆச்சரியப்படுத்துகிறது துணிவு என்பது முன்னெடுப்பது மட்டுமில்லை. முடியாதவற்றின் பொறுப்பை ஏற்பதும் தான் என்பதைப் புரிய வைக்கிறார்.
இந்த விழாவிற்கு முக்கிய காரணம் இந்தப் புத்தகத்தை அழகாக வடிவமைத்து வெளியிட்டிருக்கும் பதிப்பாளர் திரு சொக்கலிங்கம். அவர் எங்களைப் போன்ற எழுத்தாளர்களின் எழுத்தை மட்டுமின்றி அவர்களது உணர்வுகளையும் பெரிதும் மதிப்பவர். அவரது கவிதா வாயிலாக எனது இந்த எழுத்துக்கள் வெளியானதைப் பெருமையாகக் கருதுகிறேன்.புத்தகம் இப்போது கவிதாவிலும், கண்காட்சியிலும் கிடைக்கும்

9/10/17

அழைப்பு


காந்தி ஸ்டடி சர்க்கிள் அமைப்பு வாரந்தோறும் புதன் கிழமையன்று வாசகர் வட்டம் நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். திரு. சரவணன்.திரு மோகன், திரு நித்தியானந்தம் போன்ற நண்பர்கள் மிகவும் ஆர்வத்துடன், தவறாது நடத்துகிறார்கள். இந்த வாரம் அண்மையில் வெளியான எனது நேதாஜி மர்ம மரணம் – ரகசிய ஆவணங்கள் சொல்லும் கதை" அறிமுகம் செய்யப்படுகிறது

. வாய்ப்புள்ளவர்கள் வாருங்களேன் சந்திக்கலாம்.

 சந்திக்கலாம்.

24/9/17

புத்தக் வெளியீடு



எனது புத்தக வெளியிட்டு விழாவை நண்பர் விஜயன் காணிளியாக்கி யூ டுயூபில் வெளியிட்டிருக்கிறார்.  இங்கே அதப் பார்க்கலாம். 













15/10/16

கவிதா--- 40






கடந்த மாதம் 24/09/16 அன்று கவித பதிப்பகம் அவர்களது 40 வது ஆண்டுவிழாவை வெகுவிமரிசையாகக் கொண்டாடினார்கள். ஒரு பதிப்பகத்தின் விழா போல் இல்லாமல்  செட்டிநாட்டு வீட்டு திருமணம் போல  சுவையான விருந்துடனும் நடைபெற்றது... இந்த ஆண்டு இதுவரை அவர்கள் பதிப்பித்த 105 புத்தகங்களையும் அன்று வெளியிட்டார்கள். எனது காற்றினிலே வரும் கீதம் புத்தகத்தை சிறப்பு வெளீயிடாக,  குன்றக்குடி அடிகளார், திரு ப. சிதம்பரம் முன்னிலையில்  நல்லி குப்புசாமி வெளியிட திருமதி கெளரி ராம்நாரயாண் பெற்றுக்கொண்டார். எழுத்தாளர்களும்,கவிஞர்களும் பேசிய அந்த நீண்ட விழாவில் இந்த புத்தகவெளியீடுதான் ஹைலைட்..ஒரு எழுத்தாளானாக என் வாழ்வில் மறக்கமுடியாத நிகழ்வு.  அந்த விழாவின் வீடியோவிலிருந்து  எனது புத்தக அறிமுக உரையையும், திருமதி கெளரி அவர்களின் புத்தக விமர்சன உரையையும் இங்கே பார்க்கலாம்


11/1/15

DARE TO DREAM



 தமிழகத்தின் சிறு கிராமம் ஒன்றில் பிறந்த  பால. பாலச்சந்திரன் இன்று உலகம் அறிந்த  மேனேஜ்மெண்ட் குரு. அவரது வாழ்க்கை கதையை நான் புதிய தலைமுறையில் தொடராக ”வெற்றி வெளியே இல்லை” என எழுதியிருந்தேன். அது புத்தக வடிவில் இம்மாதம் 23ம் தேதி வெளியாகிறது.  அதற்கு முன் அதன் ஆங்கிலபதிப்பு நாளை12/1/15ல் மும்பையில் வெளியாகிறது. இந்திய கார்ப்ரேட்டின் முன்னணித்  தலைவர்கள் ரத்தன் டாட்டா, ஆதி காத்திரஜ், தீபக்  ப்ரேக்  விழாவில் பங்கேற்கிறார்கள்.(விபரங்கள் அழைப்பில்)
விழா விபரங்களும் படங்களும் அடுத்த பதிவில்


24/8/13

நிழலின் இசையை ரசித்த மரங்கள்.



”நிழல்”இயற்கையின் கொடையான மரங்களின்,தாவரங்களின், சிறப்புகளை மக்களுக்கு எடுத்து சொல்லி அவைகளை சேசிக்க சொல்லிகொடுக்கும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம். மரங்கள் அடர்ந்த வனப்பகுதிக்கு விரும்பும் ஆர்வலர்களை அழைத்து சென்று அவைகளை அறிமுகபடுத்தும் “டீரி வாக்” (Tree walk) நடைப்பயணங்களை அவ்வப்போது நடத்துபவர்கள். இந்த ஆண்டு சென்னைநகரின் பிறந்த நாள் விழாவின் ஒரு பகுதியாக இவர்கள் அழைத்து சென்ற இடம் கலாஷேத்திரா.


இசையையும் நடனத்தையும் மரபு வழுவாத பாரம்பரியத்துடன் கற்பிக்க திருமதி ருக்மணி அருண்டேல் உருவாக்கிய கலாஷேத்திரத்தாவில் நுண்கலைகளுடன் மரங்களையும் செடிகளையும் நேசித்து வளர்த்தார். அவைகள் இன்று அழகான ஒரு காடாகவும்,பூஞ்சோலையாகவும் மலர்ந்திருக்கிறது. மாணவர்களைத் தவிர மற்றவர்களுக்கு அனுமதி இல்லாத இந்த அழகான அமைதி சொர்க்கத்திற்கு சிறப்பு அனுமதியுடன் இசைக்கலைஞர் செளமியாவுடன் அங்குள்ள மரங்களை சந்திக்க. அழைத்து போனார்கள் நிழல் அமைப்பினர். இந்த பயணத்தில் ஒவ்வொரு மரத்தின் கீழும் அதன் அருமை பெருமைகளை அதன் மருத்துவ குணங்களை, இயற்கையை காக்க அவைகள் செய்யும் பணிகளை,நமது வழி பாடுகளில் அவற்றிற்கு இருக்கும் முக்கியத்துவம பற்றி எல்லாம் சொல்லபட்டபின்னர் செளமியா அந்த மரம் குறித்த, அல்லது அதன் பெயர் இடம் பெற்ற பாடல்களின் சில வரிகளை பாடிகாட்டினார். ஒவ்வொரு மரத்திற்கும் அது அந்த பாடலில் இடம் பெற்றிருப்பதற்கான சிறப்பான காரணம், அந்த பாடலை எழுதியவர் ராகம் எல்லாவற்றையும் பிரமாதமாக விளக்கி சொல்லிவிட்டு பாடலை பாடினார். சிறிய தம்பூராவை ஒருகையில் வைத்து மீட்டியவண்ணம் பாடலின் சிலவரிகளை பாடினார். ”மைக் வேண்டாம்அமைதியாக கவனமாக இருந்தால்கேட்கும்” என்று சொல்லி  சிலப்பதிகாரம், தியாகையர், தீட்சதர்பாடல்கள்,தேவாரம், திருவாசம் என  பலவற்றிலிருந்து  தேர்ந்தெடுக்கபட்ட வரிகளை அந்தந்த மரத்தின் கீழ் பாடினார்.  முழுவதும் பாடமாட்டாரா? என எண்ணவைத்த 
செளமியா  டாக்டர் பட்டம் பெற்றிருப்பது இசையிலா?  பாட்டினி பாடத்திலா? என ஆச்சரியப்படும் அளவிற்கு இதற்காக ஹோம் ஒர்க் செய்திருந்தார்.. தன்கைப்பட எழுதிய பேப்பரிலிருந்து பார்த்து பாடும் செளமியா ஐ பேடில் பாடலைத்தேடி கண்டுபிடித்து பாடும் அடுத்த தலைமுறைகலைஞர்களான சீடர்களையும் உடன் அழைத்து ஊக்கபடுத்தியது   ஒரு மகிழ்ச்சியான காட்சி.
வம்சம்தழைக்க உதவும் மருத்துவ சக்தி வாய்ந்ததால்தான் கல்யாணமுருங்கை திருமணங்களில் மூஹூர்த்தகால் மரங்களாக நடப்படுகிறது, மலர்ந்து உதிர்ந்த மகிழம்பூக்கள் சருகானாலும் மணம் பரப்புவதை நிறுத்துவதில்லை. ஆலமரத்தின் விழுதில் ஊஞ்சல் கட்டி ஆடினால் அதற்கு மிகவும்வலிக்கும். மரங்களில் வண்ணவிளக்குகள் போட்டால் அதிலிருக்கும் பறவைகள் அன்று தங்கஇடமில்லமல் தவிக்கும் போன்ற பல செய்திகளை செளமியாவின் இசையுடன் நமக்கு சொன்னவர்கள் நிழல் உறுப்பினர்களான திரு பாபுவும், திருமதி லதா நாதனும்.
கலாஷேத்திராவில் ஒரு மரத்தில் வண்ணத்து பூச்சிகள் தேனடையில் தேனிக்கள் இருப்பது போல மொய்த்துகொண்டிருந்தன. அது ”டீரி ஆப் லைப்” என்றும் தென் அமெரிக்க காடுகளில் காணப்படும்வகை என்றும் சொன்னார்கள். ஒரே மரத்தில் இத்தனை வண்ணத்துபூச்சிகளை பார்த்ததைவிட ஆச்சரியம் அவை அனைத்தும் பறக்காமல் அங்ககேயே இருந்தது தான். ஒரு வேளை அவைகளும் செளமியாவின் பாடல்களினால் மெய்மறந்து பறக்க மறந்துவிட்டனவோ ?
கல்கி 01/09/13

19/8/13

பென்ஸ் காரின் விலையில் ஒரு எருமை

ஆதித்தியா
அரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் உள்ள சின்சுவாஸ் கிராமத்தை சேர்ந்த விவசாயி கபூர்சிங். இவர் ஒரு பெண் எருமையை  லட்சுமி என பெயரிட்டு அன்புடன்  வளர்த்து பராமரித்து வந்தார். அரியானா மாநிலத்தின் முர்ரா எருமை மாடுகள்  உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்றது. அவை நாளொன்றுக்கு 32 கிலோ அளவிற்கு கூட பால் கறக்கும்   அந்த இனத்தை சேர்ந்த லட்சுமி நாள்  ஒன்றுக்கு சராசரியாக 22.5 லிட்டர் முதல் 28 லிட்டர் வரை பால் கறக்கிறது..


லட்சுமி பல கால் நடை கண்காட்சிகளில் கலந்து கொண்டு பல லட்சம் மதிப்புள்ள பரிசுகளை பெற்றுள்ளது. சமீபத்தில் முக்ஸ்டார் என்ற இடத்தில் நடந்த கண்காட்சியில் ”அழகி போட்டி” அதிக அளவு பால் வழங்கும் எருமை” போன்ற  பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று ரூ.3 லட்சம் பரிசை வென்றதினால் இந்த கருப்பு அழகி  மாநிலம் முழுவதும் பாப்புலர்..

 பலர் விலைக்கு கேட்டும் தர மறுத்துகொண்டிருந்தார் அதன் உரிமையாளர். . கடந்த மாதம் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த விவசாயி ராஜீவ் சார்பாஞ்ச் என்பவர்   மிக அதிக விலையாக லட்சுமிக்கு 19 லட்சம் தருவதாக கேட்டபோது அவரை தவிர்ப்பதற்காக  விலை 25 லட்சம் என்று சொல்லியிருக்கிறார்.  ராஜீவ் அதை தர சம்மதித்து உரிமையாளர் கபூர் சிங்கை ஆச்சரியபடுத்தினார்,   இவ்வளவு பெரும் பணத்தை தனக்கு அளித்த அருமை லட்சுமியை ஒரு பிரிவுபசார விழா நடத்தி மரியாதையோடு அனுப்ப விரும்பினார் கபூர் சிங்.விழாவிற்கு நாள் குறிக்க பட்டது. அன்று லஷ்மிக்கு விசேஷமாக தயாரிக்கப்பட்ட ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி நகைகளை அணிவித்து  அலங்கரித்தார். 

 
அதை தனது கிராமத்தை சுற்றி ஊர்வலமாக அழைத்து சென்றார். மேலும்  அரியானா மாநிலத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள், அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் என 2 ஆயிரம் பேரை அழைத்து அவர்களுக்கு தடபுடலாக விருந்து அதற்கு மட்டும் ரூ.2 லட்சம் செலவு செய்திருக்கிறார்.   அருகிலுள்ள கிராம மக்களும் பங்கு கொண்ட  அந்த விழாவில் அரசு அதிகாரிகளும் கலந்துகொண்டிருக்கிறார்கள். மாநில கால்நடைத்துறையின் மூத்த அதிகாரி இம்மாதிரி நிகழ்ச்சிகள் மேலும் பல விவசாயிகள் இத்கைய மாடுகளை வாங்கி பால் உற்பத்தியை பெருக்க தூண்டும்  என்று சொல்லுகிறார். நிகழச்சியை பிபிசி டிவி கவர் செய்திருக்கிறது.
இதை கடந்த 2 ஆண்டுக்கு முன்பு கபூர்சிங் இதை வாங்கிய விலை 2 லட்சம்.  தற்போது இது 3-வது தடவை கர்ப்பமாக உள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் கன்று ஈனும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 ஆந்திராவிலிருந்து அரியான  வந்து  ஒரு பென்ஸ்காரின் விலையில் ஏன் இப்படி இந்த  எருமை மாட்டை வாங்குகிறார் ?  2014 ஜனவரியில் ஆந்திர அரசு நடத்தவிற்கும் கால்நடை கண்காட்சியில்  தேர்ந்தெடுக்கபடும்  சிறாந்த எருமைக்கு கிடைக்க போகும் பரிசு   ஒரு கிலோ தங்கமாம்.



ஆதித்தியா

8/8/13

“கீதையின் மீது ஆணையாக…..”


60 களின் இறுதியில் அண்ணாமலை பல்கலை கழகத்தில் படித்து மேற்படிப்புகாக டெக்ஸாஸ் பல்கலைகழகத்திற்கு வந்தவர் சொக்கலிஙம் கண்ணப்பன்.நாட்டரசன் கோட்டைகாரர். மேற்படிப்பு  முடித்தபின் அதே மாநிலத்தில் வேலைகிடைத்து பல நிருவனங்களில் பணியாற்றி  இன்று ஒரு பன்னாட்டு பொறியில் நிறுவனத்தில் டிசைன் வல்லூனராக பெரிய பதவியில் இருக்கும் இவர் ” “ஸாம்”“ எனறு மாநில முழுவதும்  பாபுலராக அறிய பட்ட  ஒரு பொறியாளார்.
பல பெரிய நிறுவனங்களுக்கும், நாஸா போன்ற அரசு அமைப்புகளுக்கும் ஆலோசனை வழங்கிவருபவர். உயர் அழுத்ததிலும் பாதுகாப்பாக இயங்க கூடிய குழாய்களை அமைப்பதில் வல்லூரான, அத்துறையில் இவர் எழுதியிருக்கும் புத்தகங்கள் பல்கலை கழங்களில் பாடபுத்தகமாகியிருக்கிறது. செயல்பாட்டுக்காக ஒரு மென்பொருளையும் வடிவமைத்திருக்கிறார்.
டெக்ஸாஸ் அமெரிக்காவின் மிகப்பெரிய மாநிலம்.  இங்கு பொறியாளார்களாக பணிபுரிய  தகுதி தேர்வு எழுதி லைஸ்சன்ஸ் வாங்க வேண்டும்.இப்போது இதுபோல் அனுமதி பெற்ரிருப்பவர்கள் 57 ஆயிரம்பேர். இந்த தேர்வுகளையும், அனுமதி வழங்குவதையும் செய்வது மாநில அரசின்  (டெக்ஸாஸ் பிரொபஷனல் என்ஞ்னியரிங் போர்ட் (TexasProfessional Engineers Board)  அரசு அமைப்பான இதன் நிர்வாக குழுவின் உறுப்பினாராக சொக்கலிங்கம் கண்ணப்பன் கடந்த ஆண்டு  நியமிக்கபட்டிருக்கிறார். அமெரிக்க பொறியாளார்களிடையே மிக கெளரமான பதவி இது. மாநில கவர்னர் இவருக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். பொதுவாக இத்தகைய நிகழச்சியில் பைபிளில்மீது கைவைத்தோ அல்லது  நெஞ்சில் கை வைத்தோ தான் பிராமணம் எடுப்பது வழக்கம். மாறாக தன் மனைவி திருமதி மீனாட்சி பகவத் கீதையை நீட்ட அதில் கைவைத்த பின்னர்   கவர்னர்  எட் எமெட் சொன்னதை திருப்பிச்சொல்லி பிரமாணம் எடுத்தார் இவர். இந்திய துணை தூதர், ஜெர்மானிய துணை தூதர், நகர மேயர், நாஸா உயர் அதிகரிகள் பங்கு கொண்ட  இந்த விழாவில் கீதைபற்றி அறியாதவருக்கும் அது பற்றி சொல்லபட்டது. விரைவில் இந்த அமைப்பின் தேசீய குழுவிற்கு செயலாளாராகவிருக்கிறார்.

தன் துறையில் விற்பன்னராகயிருக்கும், ஸாம்  பல இந்திய, தமிழ் அமைப்புகளின் பொறுப்பிலிருந்து அவை வளர உதவியிருக்கிறார். ஹூஸ்டனிலுள்ள  மிகப்பெரிய மீனாட்சி கோவிலை நிறுவியவர்களில் இவரும் ஒருவர்.  அமெரிக்க நகரங்களில் இந்தியர்கள் கோவில்களையோ கலாசாரமையங்களையையோ நிறுவ விரும்புபவர்களுக்கு உதவும் வகையில் ஒரு புத்தகமும் எழுதியிருக்கிறார். இன்று அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் மூன்றாம் தலைமுறையை தொட்டுக்கொண்டிருக்கும் நிலையில் அங்கு வாழம் இந்துகளின் இறுதிசடங்குகள் செய்ய உதவும் குறிப்பேடும் தயாரித்திருக்கிறார்.

தன் தொடர்புகளால் பெரிய அளவில் நிதி திரட்டுவதில்  மன்னரான இவர்  தமிழ் அமைப்புகளுக்கு மட்டுமில்லாமல்  அமெரிக்காவை காத்தீரினா புயல் தாக்கியபோது  நிவாராண திரட்டிகொடுத்து உதவி தாய்நாட்டைப்போல,  வாழும் நாட்டையும் நேசிப்பவர்.



3/8/13

மொட்டை “ பாஸ்”

ஆதித்தியா
 அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ்புஷ் இப்போது  டெக்ஸாஸ் மாநிலத்தில் ஹூயூஸ்டன் நகருக்கு அருகே வசிக்கிறார்.   முன்னாள் அதிபர்களுக்கான உரிமைகளில் ஒன்று  முழுநேர செக்யூரிட்டி.. அதற்காக ஒரு சிறிய ரகசிய உளவுப் படைப்பிரிவு இயங்குகிறது, அந்த குழுவில் ஒருவரின் மகன் பாட்ரிக்.   வயது இரண்டு. சமீபத்தில் அந்த குழந்தை லுக்கேமியா என்ற ரத்த புற்றுநோயால் தாக்கபட்டிருப்பது கண்டறியபட்டது.  அதன் சிகிச்சையின் தீவிரத்தால் அந்த குழந்தையின் தலை முடி முழுவதும்  கொட்டி மொட்டையாகியிருக்கிறது. அந்த குழந்தைக்கு அது வினோதமாக தெரியக்கூடாது என்பதற்காக  ஒரே காலனியில் வசிக்கும் பாட்ரிக்கின் தந்தை ஜோனின் குழுவினர் அனைவரும் மொட்டை அடித்துகொண்டனர். அந்த குழந்தையின் மருத்துவ செலவிற்கு நிதிதிரட்ட பாட்ரிக் பிரண்ட்ஸ் என்ற பெயரில் ஒரு  வெப் சைட்டையும் துவக்கி நன்கொடைகள் கேட்டிருக்கின்றனர்.
திடுமென ஒருநாள் தன் அத்தனை பாதுகாவலர்களும் மொட்டைதலையர்களாக இருந்ததைப்பார்த்து விசாரித்து விஷயம் அறிந்த புஷ் உடனே பெரிய அளவில் நிதிஉதவி செய்தததோடு அந்த குழுவில் தானும் இருப்பதை அறிவிக்கும் வகையில்  மொட்டை அடித்து கொண்டார்.  அவர்களோடு  ஒரு குருப் போட்டோ எடுத்து அதை அவர்களின் வெப் ஸைட்டில் வெளியிடச்செய்தார்.
நன்கொடை வசூலிப்பதற்காக நகரில் ஒரு மோட்டார் சைக்கிள் பந்தையத்தைதானே முன்னின்று நடத்தியிருக்கிறார். அதோடு நிற்காமல் அந்த சிறுவனோடு ஒரு படம் எடுத்துகொண்டார் அதை திருமதி புஷ் தேசிய நாளிதழ்களுக்கு அனுப்பி அந்த சிறுவனின் மருத்துவ செலவிற்கு உதவ வேண்டியிருக்கிறார்.



கையில் மோட்டார்  பொம்மைகளுடன் யார் மடியில் இருக்கிறோம் என்பது கூட புரியாமல் உட்கார்ந்திருக்கும் அந்த மொட்டை சிறுவனும் மொட்டைதலையுடன்  முன்னாள் அதிபர் புஷ்ஷும் இருக்கும் அந்த படம் பலரை பாட்ரிக் நண்பர்கள் குழுவிற்கு நன்கொடை அனுப்ப செய்திருக்கிறது.
அதிபர் புஷ்ஷுக்கு இபோது வயது 89, பெர்க்கின்ஸ் நோய் தாக்கியிருப்பதால் சக்ர நாற்காலியிலிருக்கிறார்.

கல்கி11/08/13

26/7/13

நம்ம ஆளுங்க கலக்கறாங்க !

 

ஓபாமாவை கவர்ந்த ஸ்ரீகாந்த்



 !

அமெரிக்கவாழ் இந்தியர்களின் இரண்டாவது, மூன்றாவது தலைமுறையினர் இப்போது மெல்ல அமெரிக்க  சமூக,அரசியல், கலாசார வாழ்க்கையில் நன்கு பின்னி பிணைந்து கலக்கி கொண்டிருக்கிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன் வந்து வாழ்க்கையை துவக்கியவர்களில் பலர் அவர்களின் துறைகளில் உயர்ந்து  தங்கள் அடையாளங்களை பதித்துகொண்டிருக்கிறார்கள். அமெரிக்க இந்தியர்களாக அறியப்படும் இவர்கள்  பெரிய கார்ப்ரேட்களில், அரசியல் கட்சி,  பொறுப்புகளில், மாநில அரசுகளின் உயர்ந்த பதவிகளில், மாநில கவர்னராக கூட இருக்கிறார்கள். இந்த வரிசையில் சமீபத்தில் இடம்பெற்றிருப்பவர் ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசன்.அமெரிக்காவின் இரண்டாவது பெரியஉயர் நீதிமன்ற நீதிபதியாக அதிபர் ஒபாமாவால் நியமிக்கபட்டிருக்கிறார். அமெரிக்க நீதிமன்ற முறை நம்முடையதிலிருந்து சற்று மாறுபட்டது.. தேசம் 13 நீதி மண்டலங்கள் அதன் கீழ் பல நீதி மாவட்டங்கள்.என பிரிக்கபட்டிருகின்றன.. இங்குள்ள வழக்குகளை மேல்முறையீடு செய்ய 13 அப்பீல் கோர்ட்டுகள். அமெரிக்க உச்சநீதிமன்றம் ஒர் ஆண்டுக்கு 100 வழக்குகளுக்கு மேல் எடுத்துகொள்வதில்லை என்பதால் இந்த அப்பீல் கோர்ட்டுகள் நமது உயர்நீதி மன்றங்களைவிட வலிமையானது. மாநில. பெடரல் சட்டபிரச்சனைகளைகூடவிசாரிக்கிறது.அத்தகைய கோர்ட்களில் அமெரிக்காவின் இரண்டாவது பெரிய கோர்ட். வாஷிங்டனிலிருக்கிறது.  அதில் தான் ஸ்ரீகாந்த் ஸ்ரீனிவாசன். நீதிபதியாக நியமிக்கபட்டிருக்கிறார். மாவட்ட நீதிமன்றங்கள் இரண்டில்  இந்தியர்கள் நீதிபதிகளாக இருந்தாலும் ஒரு உயர் நீதி மன்றத்தின் நீதிபதியாக அமெரிக்க அதிபரால் நியமிக்க படும் முதல் இந்தியர் மற்றும் ஆசியரும் இவரே.

At a reception in honor of Sri Srinivasan, the first South Asian American judge in the US Court of Appeals for the DC Circuit, at the Embassy Residence, are seen (from left to right): Sri Srinivasan; Mrs. Saroja Srinivasan; Indian Ambassador Mrs. Nirupama Rao; and Srinija Srinivasan. Photo credit: Embassy of India, Washington


சண்டிகரில் பிறந்த ஸ்ரீகாந்த்தின் தந்தை ஸ்ரீனிவாசனும் அம்மாவும்   படிக்க அமெரிக்கா சென்னறவர்கள். பின்னால இருவருக்கும் கன்ஸாஸ் பலகலகழகத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததாதால் அங்கேயே தங்கிவிட்டனர். அதனால் உயர்நிலைப் பள்ளிபடிப்பை அமெரிக்காவில் தொடர்ந்து அங்கேயே வளர்ந்தவர். பள்ளியிலும் கல்லூரியிலும் பேஸ்கட்பால் வீரர். இவருடைய லாரன்ஸ் பள்ளி டிம் மேட்கள் இன்று தேசிய சாம்பியன்கள். இன்றும் வாரம் ஒருமுறை பேஸ்பால்  விளையாடுகிறார்.புகழ் பெற்ற ஸ்டன்ஃபோர்ட் பல்கலைகழத்தில் எம்பிஏ வும் சட்டமும் படித்தவர்  சட்டம் முதுகலைப் படிப்பில் சிறப்பு தேர்ச்சி பெற்றவர். சில காலம் ஹார்வர்ட் பல்கலகழகத்தில் ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார்.
இவரது ஓரே சகோதரி ஸ்ரீநிஜா யாஹூ நிறுவனம் துவங்கபாடபோது சேர்ந்த முதல் ஐவரில் ஒருவர். 15 ஆண்டுகள் அதனுடன் வளர்ந்து பல உயரங்களைத் தொட்ட பின் இப்போது தனி நிறுவனம் துவக்கியிருக்கிறார். நாட்டின் சிறநத அறிஞர்களை... தேர்ந்தெடுக்கும் வெள்ளை மாளிகையின் குழுவில் ஒருவராக நியமித்திருக்கிறார்


அமெரிக்கஅரசுக்காகவும்  அதற்குஎதிராக தனியார் நிறுவனங்களுக்காகவும் \ வாதாடியவர் ஸ்ரீநிவாஸ் அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் 20 வழக்குகளூக்கு மேல் வென்று புகழ் பெற்றவர்எதிர்கட்சியை சேர்ந்த அதிபர் புஷ் அவர் காலத்தில் அரசின் உதவி ஸொலிட்டராக அமர்த்தபட்டஒருவரை. ஒபாமா நீதிபதியாக அறிவித்தபோது அவரது கட்சியில் சின்ன சலசலப்பு.நான் ஒரு வழக்கறிஞரென்ற முறையில். ஸ்ரீகாந்த்தின் திறமமையை  நன்கு அறிவேன். அவரைப்போன்ற திறமைசாலிகள் அமெரிக்க நீதித்துறையில் இருப்பது நாட்டுக்கு கெளரவம்  என சொல்லியிருக்கிறார். 43 வயதாகும் ஸ்ரீகாந்த்துக்கு இது ஆயூட்கால பதவி. எட்டே நீதிபதிகள் கொண்ட அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் வருங்காலத்தில் அமரக்கூடிய வாய்ப்பும் இருக்கிறது.
“ஸ்ரீ“ என நண்பர்களால் அழைக்கபடும் ஸ்ரீகாந்த் சட்டபடிப்பு முடிந்தபின் அமெரிக்க முறைப்படி ஒரு வழக்கறிஞர்கள் நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்றி அந்த நிறுவனத்தின் பங்குதாரராகவும் பினஅதன் தலைவருமாக வளர்ந்தவர்


13/7/13

மோடியின் எதிர்கால கனவுகளும், என்கவுண்ட்டர்களும்


அதிகாரபூர்வமாக அறிவிக்கபடாவிட்டாலும் பிஜேபியின் பிரதமர் வேட்பாளாரக அறியபட்டிருக்கும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு  கட்சியில் முறைத்து கொள்ளும் மூத்த தலைவர்கள், உதறிவிட்டுபோகும் கூட்டணிகட்சிகள் போன்ற பிரச்சனைகளுடன் இப்போது சேர்ந்திருக்கும் புதிய தலைவலி 9 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு என்கவுண்ட்டர்.
2004ஆம் ஆண்டு ஜூன் 15ந் தேதி அகமதாபாத்-காந்திநகர் நெடுஞ்சாலையில் நடந்த இந்த என்கவுண்ட்டர் சம்பவம் குஜராத்தை மட்டுமல்ல, இந்தியா முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.  இளம்பெண் இஷ்ரத் ஜகானுடன் பிரனேஷ் பிள்ளை என்கிற ஜாவத் குலாம் ஷேக், அம்ஜத் அலி ரோனா, ஜீஷன் ஜோகர் ஆகிய நான்கு முஸ்லிம்கள் என்கவுண்ட்டர் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை உண்டாக்கியது.இதில் இஷ்ரத் ஜகான் 19 வயது கல்லூரி மாணவி. பீகாரை சேர்ந்தவர்.இவர் மும்பையில் உள்ள குருஞானக் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்தார் இவருக்கு தீவிரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்பு என்றும், குஜராத் முதல்வரான நரேந்திர மோடியைக் கொலை செய்யத் திட்டமிட்ட லஷ்கர்-இ-தொய்பாவின் இளைஞர்கள் மூவருடன் இஷ்ரத் இணைந்து செயல்பட்டார் என்றும் இவர்கள் தங்கள் இயக்கத்திற்கான செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தபோது போலீசாரால் என்கவுண்ட்டர் செய்யப்பட்டனர் என்றும் குஜராத் காவல்துறை தெரிவித்தது. இந்த என்கவுண்ட்டரை நடத்தியது டி.ஐஜி வன்சார என்பவர், இவர் பல என்கவுண்ட்டர்களை நடத்தியிருக்கும் ஒரு என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட். கொல்லபட்ட நால்வரும் ல்ஷ்கர்-இ-தொய்பா அமைப்பினர் என்றும் முதல்வரை கொல்ல சதி செய்தற்கான ஆதாரங்களும் இருப்பதாக சொல்லியிருந்தார். ஆனால், இஷரத் ஜகான் குடும்பத்தினரும், பிர்னேஷ் பிள்ளையின் தந்தையும் இது என்கவுண்ட்டரே அல்ல. திட்டமிட்ட படுகொலைஎன்றனர். மனித உரிமை அமைப்பினரும் குஜராத் எதிர்க்கட்சியினரும்,பத்திரிகைகளும் இதே குற்றச்சாட்டை எழுப்பின.
 5 ஆண்டுகால விசாரணைக்குப் பிறகு 2009ல், “இஷ்ரத் ஜகான் உள்ளிட்ட நால்வரும் என்கவுண்ட்டரில் கொல்லப்படவில்லை. போலீஸ் திட்டமிட்டு செயல்பட்டுள்ளதுன்றார் அகமதாபாத் மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்டிரேட். அவர் தனது நீண்ட 243 பக்க அறிக்கையில்  பதவி உயர்வுக்கும், மெடல்களுக்கும், பாதுகாப்பாற்ற நிலையிலிருக்கும் முதல் அமைச்சரை காப்பாற்றியதைபோல நல்ல பெயரை வாங்கவும் இந்த படுகொலையை போலீஸ் அதிகாரிகள் செய்திருக்கிறார்கள் என்று  தீர்ப்பளித்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத குஜராத் அரசு  தீர்ப்பை எதிர்த்து  உயர்நீதிமன்றத்தில்.  அப்பீல் செய்தது. கொலை, திட்டத்தை நிறைவேற்ற வந்திருக்கும் தீவீரவாதிகளைப்பற்றிய  தகவலை தந்தது மத்திய உளவுத்துறையினர்தான். என்றும் அதை போலீஸ் செயலாக்கியிருக்கிறது.  என்றும் மனுவில் சொல்ல பட்டது.
உண்மை நிலையை அறிய உயர் நீதிமன்றம் ஒரு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது..  குழுவும் விசாரணை தொடர்ந்தது. குஜராத் உயர்நீதிமன்றத்தில், 2011ஆம் ஆண்டு சிறப்பு புலனாய்வுக் குழு தாக்கல் செய்த மனுவில், “இது முறைப்படி நடந்த என்கவுண்ட்டரே அல்ல. என்கவுண்ட்டர் நடந்ததாகச் சொல்லப்படும் தேதிக்கு முன்பாகவே இஷ்ரத் ஜகான் உள்பட நால்வரும் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்என்று தெரிவித்தது. அதாவது, நால்வரும் போலீசாரால் ஏற்கனவே பிடிக்கப்பட்டு, போலீசின் கஸ்டடியிலேயே கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கை.இதனை ஏற்றுக்கொண்ட குஜராத் ஐகோர்ட்டு இந்த போலி என்கவுண்ட்டர் பற்றி உரிய விசாரணை நடத்த சி.பி.ஐ. போலீசாருக்கு உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கு விசாரணை தகவல்களை கோர்ட்டுக்கு அவ்வப்போது தெரிவிக்க வேண்டும் என்று கூறியதோடு சி.பி.ஐ. விசாரணையையும் கோர்ட்டு நேரடியாக கண்காணித்து வந்தது.  கடந்த மார்ச் மாதம் வழக்கு விசாரணையில்  எந்த முன்னேற்றமும் இல்லாதை கண்டித்து  இரண்டு வாரத்திற்குள் குற்றபத்திரிகை தாக்கல்செய்யபடவேண்டும் என  சிபிஐக்கு கட்டளையிட்டது. இந்த  நால்வர் கொலை செய்யப்பட்ட என்கவுண்ட்டரிலும் சம்பந்தபட்டிருந்த டிஐஜி வன்சாரா சிறையிலிருக்கிறார். காரணம் 2005ஆம் ஆண்டு ஷொராபுதீன் ஷேக் என்பவர் லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடையவர் என்றும், அவரும் மோடியை கொல்லத் திட்டமிட்டார் என்று என்கவுண்ட்டர்பாணியில் குஜராத் போலீஸ்  தீர்த்துக் கட்டியிருந்தது. இந்த என்கவுண்ட்டரை முன்னின்று நடத்தியவரும் டி.ஐ.ஜி வன்சராதான். ஷொராபுதீன் என்கவுண்ட்டர் நடந்த இரண்டாவது நாளில் அவரது மனைவி கவுசர்பீ, டி.ஐ.ஜி.வன்சராவின் சொந்த கிராமத்திற்கு அருகே கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார் .இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்குட்பட்டு, சுப்ரீம் கோர்ட் வரை சென்றது. அப்போது, கவுசர்பீ கொலைதான் செய்யப்பட்டார் என்பதை குஜராத் அரசின் வழக்கறிஞரே சுப்ரீம் கோர்ட்டில் ஒப்புக்கொண்டார். ஷொராபுதீன் என்கவுண்ட்டரும் போலியானதே என்பது தெரிய வந்தது. இதனால் இந்த வழக்கில் டி.ஐ.ஜி வன்சரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரிடம்  கோர்ட் அனுமதியுடன் ஜெயிலில் விசாரணை நடத்தியபின் சிபிஐ குற்றபத்திரிகையை தாக்கல் செய்திருக்கிறது. சாம்பல் தாடியும் கறுப்பு தாடியும் இந்த என்கவுண்ட்டருக்குஒப்புதல் கொடுத்த பிறகுதான் எங்கள் பிடியில் இருந்த அந்த 4 பேரையும் தீர்த்துக் கட்டினோம்என்று சிபிஐயிடம் சொல்லியிருக்கிறார் டி.ஐ.ஜி. வன்சரா. என்பது சிபிஐ தரப்பிலிருந்து கசியும் செய்தி.  இந்த அடையாளாங்கள்  குஜராத் முதல்வரையும், உள் துறை அமைச்சராகயிருந்த அமித் ஷாவையும் குறிப்பிடுகிறது அத்துடன், இந்த என்கவுண்ட்டர் படுகொலைக்கு முன்பாக இரண்டு முறை அமித் ஷாவிடம் வன்சரா பேசியிருப்பதாகவும் சி.பி.ஐ. தெரிவிக்கிறது.பதிவு செய்யபட்டிருக்கும் இந்த வாக்குமூலம் கோர்ட்டில் உறுதி செய்யபட்டால் மோடிக்கும், அமித்ஷாவிற்கும் பிரச்சனை ஏற்படும்.
 ஆனால் பல போலீஸ் அதிகாரிகளை குற்றபத்திரிகையில் பட்டியிலிட்டிருக்கும் சிபிஐ அமைச்சர்களை சேர்க்கவில்லை. தொடர்ந்து சமர்பிக்கபடும் கூடுதல் குற்றபத்திரிகைகளில் அமித் ஷாவின் பெயர் சேர்க்கபடும் வாய்ப்பு இருக்கிறது. இது மோடிக்கு அரசியல் ரீதியாக மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்.
மேலும் குற்றபத்திரிகையில் சிபிஐ வெடிகுண்டாக  ஒரு  டேப்பை இணைத்திருக்கிறது, அதில் மாநில கல்வி, சட்ட, உள்துறை அமைச்சர், முதல்வரின் செயலாளர் பங்குபெற்ற ஒரு கூட்டத்தில் அதில் குஜராத் அட்வகேட் ஜெனரல் திரிவேதி   “சிறப்பு புலனாய்வுக் குழு தன்னுடைய அறிக்கையில், இஷ்ரத் ஜகான் கொல்லப்பட்டது போலி என்கவுண்ட்டரில்தான் என்று சொன்னால், நாம் அரசுக்கோ அதிகாரிக்கோ எந்த சிக்கலும் இல்லாமல் முறியடிக்கவேண்டும் அதுதான் முக்கியம்என்று சொல்லியிருக்கிறார். . தடய அறிவியல் துறையால் பரிசோதிக்கபட்டிருக்கும் இந்த டேப்பை ரகசியமாக பதிவு செய்தவர் அந்த கூட்டத்தில் பங்குகொண்ட ஒரு போலீஸ் அதிகாரி.
மற்றொரு அதிர்ச்சியான தகவல் மத்திய உளவுத்துறையினர் இதில் சம்பந்தபட்டிருப்பது. ஐபி  என்பது மத்திய உள்துறைஅமைச்சகத்தின் ஒரு அமைப்பு. இவர்களுக்கு சட்டரீதியான எந்த அங்கீகாரமும் கிடையாது. ஆனால் மிக வலிமையான அமைப்பு. ஒவ்வொரு மாநிலத்திலும்   மத்திய அரசின் மூத்த போலீஸ் அதிகாரியின் கீழ் ஒரு சின்னபிரிவு இயங்கும். மாநில போலீஸுக்கு முக்கிய ரகசியங்களையும்   அவர்களைப்பற்றி மத்திய அரசுக்கு தகவல்களையும்  தருவது இவர்கள் பணியில் ஒன்று. குஜராத்தில் அப்படி இருந்த மூத்த ஐபி அதிகாரி ராஜேந்திர குமார். இவர் மோடியுடன் மிக நெருக்கமாகயிருந்த அதிகாரி. இவர் தந்த தவறான தகவலினால்தான் இந்த என்கவுண்ட்டர் என்பதை இப்போது சிபிஐ கண்டுபிடித்திருக்கிறது. இவரை கைது செய்து விசாரிக்க வேண்டும் என சிபிஐ முயற்சிக்கிறது. அதற்கான அனுமதியை அரசிடம் கோரியிருக்கிறது.  இப்படி மத்திய உளவுதுறையின் மீது வழக்கபோட முயற்சிப்பது இதுதான் முதல் முறை.  எந்த சட்டபிரிவின் கீழும் வராத அந்த அமைப்பின் மீதுவழக்குபோடமுடியுமா என்பதே சந்தேகத்திற்கு உரிய கேள்வியாகயிருந்தாலும், அரசு இயந்திரத்தின் இரு அமைப்புகள் இப்படி மோதிக்கொள்ள மத்திய அரசு அனுமதிக்குமா? என்பது தான் இப்போது எழும் முதல் கேள்வி.   உளவுத்துறையின் கண்ணியத்தை காப்பாற்ற மேல் நடவடிக்கைகள்  எதுவும் எடுக்காமல் விடப்பட்டால்  பலன் பெறப்போவது மோடிதான். என்பதை உணர்ந்திற்கும் காங்கிரஸ் அரசு இதை எப்படி கையாளாளப்போகிறது என்பதை சிபிஐ, ஐபி இரண்டு அமைப்புகளின் அதிகாரிகளும்  கூர்ந்து கவனித்துகொண்டிருக்கின்றனர்.
சிபிஐக்கு வெற்றி வாய்ப்புள்ள, குஜராத் அரசுக்கு எதிரான  இந்த போலிஎன்கவுண்ட்டர் வழக்கு மோடியின் பிரதமர் கனவு பலிப்பதை பாதிக்குமா?
நிச்சியமாக இல்லை என்று சொல்லமுடியாவிட்டாலும் இமேஜ் சரிகிறது என்பது நிஜம்.   அவர் இமேஜை பாதிக்கும் விஷயங்களாக பட்டியலிடபட்டிருக்கும், கேப்டலிஸ்ட்,தீவிரமதவாதி,சிறுபான்மையினருக்கு எதிரானவர், போன்றவகைளோடு   போலீஸையும் உளவுத்துறையையும் சுயநலத்திற்காக கையாளுபவர் என்ற லேபிலும் சேர்வதை தவிர்க்கமுடியாது

-ஆதித்யா 
கல்கி  21/07/13 இதழலில்