29/12/14

அறியாத அழகிய முகங்கள்




கேரள மாநிலத்தின் மலை மாவட்டமான இடுக்கியின் காட்டுப்பகுதியில் இருக்கிறது எடுமலைக்குடி. முதுவர்கள் என்ற பழங்குடியினரின் 25 குடும்பங்கள் மட்டும்  வசிக்கும் ஒரு சின்னஞ்சிறு கிராமம்.  இங்கே போக மூணாறிலிருந்து 18 கீமீ நடக்க வேண்டும். வேறு வசதிகள் கிடையாது.
ஒரு குடிசையின் வாசலில்  ”அக்‌ஷரா ஆர்ட்ஸ் அண்ட் போர்ட்ஸ், லைப்ரரி  எடுமலைக்குடி “ என்று பேப்பரில் எழுதி பின்செய்யப்பட்ட  வெள்ளைப்பேப்பர்.  அந்த குடிசையில்  வசிப்பவர் பி.வி. சின்னதம்பி வயது 73.  அந்தகுக்கிராமத்தில் இருக்கும் ஒரே சாலையில் டீக்கடை வைத்திருகிறார்.  அதோடு அவர் செய்து கொண்டிருக்கும் மற்றொரு வேலையை  நம்மை ஆச்சரியப்பட  வைக்கிறது. அவர் ஒரு நூலகம் நடத்துகிறார்.  அது மட்டுமில்லை, கிராமத்தின் விளையாட்டுகளை நடத்தும் கிளப்பையும் நிறுவி நிர்வகிக்கிறார்.
 நீண்ட ட்ரெக்கிங்க்கு பின் அந்த  கடைக்குப் போன நாம் . லைப்ரரி எங்கே எனக் கேட்டால் குடிசையின் உள்ளே அழைத்துச் சென்று அரிசி கொண்டுவரப்படும் இரண்டு கோணிப்பைகளை எடுத்துவந்து அதிலிருக்கும் புத்தகங்களை அந்த சாக்குகளை விரித்து அதன்மேலேயே பரப்புகிறார். தினசரி நூலகம் இயங்கும் நேரத்தில் இப்படி தான் வைப்பாராம் மொத்தம் 160 புத்தகங்கள்,   வைக்கம் மகமூது பஷீர், எம். டி வாசுதேநாயர், கமலாதாஸ், தோப்பில் காந்தியின் வாழ்க்கை, என்ற அந்தப் புத்தகங்களின் தலைப்பு  நம்மை அசர வைக்கிறது.
.நூலகத்திற்கு ஒருமுறை கட்டணம் 25 ரூபாய். மாத சந்தா 2ரூபாய். எவ்வளவு நாள் வேண்டுமானலும் படிக்கலாம்.  அங்கத்தினர்களுக்கு பால் இல்லாத டீ இலவசம்.  யார் இதை பயன் படுத்துகிறார்கள்? பொருளாதார நிர்பத்தங்களினால் பள்ளிப்படிப்பைக் கூட படிக்க முடியாத எல்லா பழங்குடி மக்களைப் போல தானே இவர்களும் என்ற எண்ணத்தில் எழுந்த நம் கேள்விக்கு பதிலாக அவரது நூலக நோட்டைக் காட்டுகிறார் சின்ன தம்பி.  நூலகத்தின் புத்தகங்கள் வழங்கபட்டிருக்கும்  தேதி, உருப்பினர் பெயர் புத்தக தலைப்பு என தெளிவாக எழுதப்பட்டிருக்கும் அது கடந்த ஆண்டு  37 புத்தகங்கள் வழங்கப்படிருப்பதைச் சொல்லுகிறது.  மொத்த புத்தகங்களில் 25% புத்தகங்கள் வழங்கபட்டிருக்கிறது. இது நகரங்களிலுள்ள பெரிய நூலகங்களில் கூடஇத்தனை% வழங்கப்படுவதில்லை..  அந்த 25 குடும்பத்திலிருப்பவர்கள் தான் படித்திருக்கிறார்கள். அந்த நோட்டில் நம்மை சந்தோஷப்படுத்தும் மற்றொரு ஆச்சரியம் மலையாளத்தில் மொழிபெயர்க்க பட்ட சிலப்பதிகாரம் இரண்டு முறை வழங்கபட்டிருக்கிறது. தமிழின் பெருமைமிக்க காவியம் இந்த  மலைக்கிராமத்தில் படிக்கப் பட்டிருக்கிறது.
உடன் வந்த நண்பர்கள் புத்தகங்களை அலசிகொண்டிருந்ததில் பார்த்தது  கையெழுத்து பக்கங்களூடன்   ஒரு பைண்ட் செய்யபட்ட நோட் புத்தகம். அது சின்ன தம்பியின் சுய சரிதை.“ எழுதிக்கொண்டிருக்கிறேன் இன்னும் முடிக்க வில்லை முடித்தபின் உருப்பினர்களுக்கு வழங்குவேன்” என்று அமைதியாக சொல்லுகிறார்.
 இந்த செய்தியைக்கட்டுரையை படங்களுடன்  www.ruralindiaonline.org.  என்ற தளத்தில் பதிவு செய்திருப்பவர்  பத்திரிகையாளர் திரு சாய் நாத்.
'83.3 கோடி மக்களும், 780 வழக்கு மொழிகளும், பல்வகைக் கலாசாரங்களும், பல்வேறு தரப்பட்ட தொழில்களும் நிறைந்த  நம் நாட்டில்  கிராமங்களில் இது போல செய்திக்கதைகள் கொட்டி கிடக்கின்றன, அந்த  முகங்களை மீடியாக்கள்  நல்ல முறையில் காட்டவில்லை. அவைகளைப் பதிவு செய்ய வில்லை என்று சொல்லும் இவர்  இந்து நாளிதழின் கிராம புற செய்திகளை வெளியிடும் இணைப்புக்கு ஆசிரியாராக இருந்தவர்.  இவர்  எழுதிய பெரும்பாலான கட்டுரைகள் ஏழைகளையும் விவசாயிகளையும் கிராமப்புறப் பெண்களையும் மையப்படுத்தியே அமைந்திருந்தன. இந்தியாவின் இருள் படர்ந்த பகுதிகளில் களஆய்வு நடத்தி பல்வேறு பின்னணியைச் சேர்ந்த மக்களுடன் உரையாடி அவர்களுடைய வாழ்வையும் போராட்டத்தையும் நேரடியாகப் பதிவு செய்தவர் சாய்நாத். Everyone Loves a Good Drought என்ற இவரது புத்தகம் 43 பதிப்பு களைக் கண்ட புகழ்பெற்ற புத்தகம். 2007ல் மகசஸே(Magasaysay) விருது பெற்ற இந்த மூத்த பத்திரிகையாளர் இப்போது இந்திய கிராமங்களின் பல் வேறு முகங்களை, கலாசாரங்களை, மொழிகளை, இசைகளை, மக்கள்முகங்கங்களை டிஜிட்டலாக ஆவணப்படுத்தும் முயற்சியில் ஒரு இனைய தளத்தை துவக்கியிருக்கிறார்.  பாரி (PEOPLE ARCHIVE OF RURAL INDIA)PARI என்ற இந்த தளம் வெறும் செய்தி தளமாக இல்லாமல் இந்தியாவின் கிராமங்களைப்பற்றிய ஒரு ஆவண தொகுப்பாக இருக்க திட்டமிட்டு ஒராண்டு உழைப்புக்கு பின்னர்  அறிமுகபடுத்தியிருக்கிறார்,ஆடியோ, வீடியோ, போட்டோக்கள் கட்டுரைகள் மூலம் ஏழை கிராம மக்களின் அன்றாட வாழக்கை முறைகளை பதிவு செய்து ஆவணப்படுத்த லாபநோக்கற்ற நோக்கத்துடன்  துவக்க பட்டிருக்கும்  இந்த  ”கிராம வீக்கிபீடியாவிற்கு”   படைப்புகளை யார் வேண்டுமானாலும் அனுப்பிவைக்கலாம். தகுந்தவை தேர்ந்தெடுக்கப்பட்டு இணைக்கப்படும்.  பலர் செல்போனில் எடுத்த படத்தை கூட அனுப்பியிருக்கிறார்கள். . இந்தியாவின் பெரும்பகுதி கிராமப்புறமாக இருந்தபோதும் நாம் வாசிக்கும் செய்தித்தாள்களும் பத்திரிகைகளும்  அவைகளின் செய்திகளுக்கு எந்த முக்கியத்துவமும் கொடுப்பதில்லை என்பதால் இந்த முயற்சி என்கிறார் சாய்நாத்.
 முகங்கள், நாங்கள் செய்வது, நாங்கள் தயாரிப்பது  பிரச்ச்னைகள் என பல பகுதிகளை தளத்தின் முகப்பிலேயே படமாக அறிமுகபடுத்தியிருக்கிறார்கள். அதை கிளிக்கினால் அந்த பகுதிக்கு நம்மை அழைத்துசெல்லும்படி தளம் நேர்த்தியாக அமைக்க பட்டிருக்கிறது. சூனாமியின் சீரழிவால் பெற்றோரை இழந்த மீனவகிராமச் சிறுவன் ஒருவன்  கலா ஷேத்திராவில் நடனம் பயின்று கலைஞரனது போன்ற  பல தகவல்களின்  சுரங்கங்களாக இருக்கின்றன.
 ஒரு வீடியோப்படத்தில்  ஒரு மலைக் கிராமப் பள்ளியில் குழந்தைகள் ”ஐ லவ் பொட்டட்டோ- யூ லவ் பொட்டட்டோ” என்ற ஆங்கில பாடலை சேர்திசையாக பாடுகிறார்கள் 1 முதல் 4 வகுப்புக்கள் இருக்கும் அந்த பள்ளிக்கு ஒரே ஒரு டிச்சர்தான்.  சுற்றுவட்டாரத்தில் எங்கும்  விளம்பர போர்ட்கள் அறிவிப்புகள் எதிலும் ஆங்கிலம் இல்லை. குழந்தைகளைக்  கேட்டால் அவர்கள் விருப்ப பாடம் ஆங்கிலம் என்கிறார்கள். அந்த நல்ல டீச்சர் சொல்லிகொடுத்த ஆங்கில பாட்டு. இந்த பொட்டட்டோ பாட்டு. அந்த பகுதியில் உருளை கிழங்கு விளைவது இல்லை  என்கிறதகவலைச்சொல்லுகிறது இந்த வீடியோவில் வரும் வார்த்தைகள். இப்படி ஓவ்வொரு பகுதியிலும் சுவையான தகவல்கள்  

 ஒரே வலைத்தளத்தில்  இந்திய கிராமங்களின்  அனைத்து முகங்களையும்  ஒன்றுதிரட்டி ஆவணப்படுத்த  பாரியின் மூலம் முயற்சிக்கிறார் சாய் நாத்.   நீங்கள் உங்கள் கிராமப்புற செய்திகளையும் படங்களையும் அனுப்பலாமே.
கல்கி 3/1/15


4/12/14

திருப்பதியில் மொட்டை போட்டுக்கொண்டால் – தேசத்துக்கு டாலரில் வருமானம்

 

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்றவாறு தலைமுடிகளை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். ஒருநாளைக்கு 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் பக்தர்களும், வார விடுமுறை மற்றும் முக்கிய உற்சவங்களின்போது 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்களின் தலைமுடியை காணிக்கை செலுத்தி வருகின்றனர். இப்படி கழிக்க பட்ட முடிகளை என்ன செய்கிறார்கள்?  சில ஆண்டுகளுக்கு முன் உள்ளூர் காண்டிராக்டர்கள் மூலம்  அப்புறப்டுத்திக் கொண்டிருந்தார்கள். அவர்கள் ஏற்றுமதியாளர்களுக்கு அதை நல்ல விலையில் விற்கிறார்கள்  என்பதை அறிந்தபின்னர்  திருப்பதி தேவஸ்தானமே  அதை ஏலத்தில் ஏற்றுமதியாளர்களுக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் விற்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஏலம் இ ஆக்‌ஷன் என்று சொல்லப்படும் ஆன் லயன் முறையில் நடக்கிறது. கடந்த ஆண்டு இம்மாதிரி ஏலத்தில் கிடைத்த பணம், 200கோடி..2011ல் இப்படி ஏலமுறை துவங்கியதிலிருந்து இதுவரை விற்கபட்டிருப்பது 1178 டன் முடி, கிடைத்த பணம்  618 கோடிகள்,

ஏலத்தை நடத்துவது திருப்பதி தேவஸ்தானமும், மெட்டிரியல் ஸ்கிராப் டிரெடிங்கார்ப்ரேஷன் என்ற அரசு நிறுவனமும். விலை சர்வ தேச மார்க்கெட் நிலவரத்தின் படி முடிவு செய்கிறார்கள், விற்பனைக்கு தயாராக இருக்கும் முடிகளின் நீளம் கனம் போன்றவிபரங்கள் அதற்கான வெப்சைட்டீல் படங்களுடன் விவரிக்க படுகிறது. நேரில் வந்து தொட்டுபார்த்து வாங்க விரும்புஅவர்களுக்கு சாம்பிளும் காட்ட படுகிறது.
திருப்பதியில்  600 முடிதிருத்தும் பணியாளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் பெண் பக்கதர்களின் வசதிக்காக 50 பெண்பணியாளர்கள். காணிக்கை செலுத்துமிடத்திலிருந்து  சேகரிக்க பட்ட முடிகள், அவற்றின் நீளத்திற்கேற்ப   9 வகைகளாக தரம் பிரிக்கபட்டுகிறது. காயவைக்கப்பட்ட பின் அவைகள் ரசயானங்களின் மூலம் சுத்த படுத்த பட்டு நீண்ட நாள் நிலைக்க பதப்படுத்தபட்டு,  முடிகளின் நீளங்கள் தரங்களுக்கேற்ப ஒரே அளவாக்க படுகிறது.. இவைகள் ஒரு குறிபிட்ட அளவு சேரும் வரை எர்கண்டிஷன் கோடவுண்களில் விசேஷமாக அமைக்கப்பட்ட பிளாஸ்டிக் தொட்டிகளில் வைத்து பாதுகாக்க படுகிறது.

 நல்ல கருப்புகலரிலிருக்கும்  31 அங்குல நீளத்திற்கு மேலிருக்கும் முடிகள்தான் முதல் தரம். அதற்கு சர்வ தேசமார்க்கெட்டில் பெயர் கறுப்பு தங்கம். விலை. கிலோ  ரூபாய் 25000க்கும் மேல். அதைதொடர்ந்து மற்ற ரகங்கள்.  கிலோ ரூபாய் 5000த்திலிருந்து 18000 வரை.   வெள்ளை முடிக்கும்  நல்ல விலை. சிறுசிறு துண்டுகளாகி தூளாகிப் போனதைக் கூட வாங்க ஆட்கள் இருக்கிறார்கள். அதற்கும் விலை நிர்ணயம் செய்திருக்கிறார்கள். ஆண்டுக்கு மூன்றுதரம் ஏலம் விடப்படுகிறது. குறிப்பிட்ட விலைக்கு போகவில்லை என்றால் அடுத்த ஏலத்துக்காக காத்திருக்கிறார்கள்.
வெளிநாட்டில் வாங்கி என்ன செய்கிறார்கள்.?
இந்த தலைமுடிகள் அனைத்தையும் பிரிட்டன், அமெரிக்கா, கனடா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த பேஷன் டெக்னாலாஜி மற்றும் மருந்து நிறுவனங்கள்  ஆண்டுதோறும் அதிகளவில் வாங்குகின்
றன. ஐரோப்பாவிலும், சில ஆசிய நாடுகளிலும் பேஷன் டிசைனகர்களுக்காக இங்கிருப்போர் வாங்குகிறார்கள். நல்ல தரமான விக் கள் தயாரிக்க மட்டுமில்லாமல், ஜரிகைகள் போல ஆடைவடிவமைப்பில், செருப்பு, கைப்பைகள், கோட்டுக்களில் இதை பயன் படுத்துகிறார்கள்.  சில ஹாலிவுட் நடிகைகள் இந்திய முடிகளில் தயாரிக்க பட்ட விக் களைமட்டுமே அணிவார்கள். மத்தியதர நீளத்தில் இருக்கும் முடிகளை  சீனாவாங்குகிறது. அவர்கள் வண்ணம் தோய்த்து விக் காளாக்கி அமெரிக்க ஆப்பிரிக்க நாடுகளில் விற்கிறார்கள். சிறிய முடிகளில் பிரஷ்கள் செய்து விற்கிறார்கள். அவர்கள் நாட்டில் இப்படி ஒரே இடத்திலிருந்து பெருமளவு கிடைக்காததும் ஒரு காரணம். இந்த ஆண்டு 200கோடிகள் வியாபாரம் ஆகும் என எதிர்பார்த்து துவங்கிய ஏலத்தில் 64 கோடிகள் மட்டுமே வியாபாரம் ஆயிற்று. காரணம் ஐரோப்பாவில் ஹேர்ஸ்டைல் பேஷன் மாறியிருக்கிறதாம்.  ஐரோப்பிய பேஷன் மார்கெட்டின்   தேவை திருப்பதியிலிருக்கும்  முடிகளின் விலையையும் விற்பனையையும்  தீர்மானிக்கிறது. ”இது ஒன்றும் புதிதில்லை. அடுத்த சீசனில் சரியாகும்” எனகிறார். கோவிலின் நிர்வாக அதிகாரி திரு எம் ஜி கோபாலன்.
அடுத்த முறை திருப்பதியில் முடி காணிக்கை செலுத்தும் போது உங்கள் பிராத்தனை நிறைவேறுவதுடன்  தேசத்துக்கு அன்னிய செலவாணியும் சேருகிறது என்பதையும் நினைத்து சந்தோஷப்படுங்கள்





15/11/14

ஒரு உடைந்த சுவரும் இணைந்த தேசங்களும்


வரையறுக்கபட்ட எல்லைகளை  நிர்ணயக்க நிறுவப்பட்ட சுவர்கள் பாதுகாப்பின் அடையாளம். என்பதை சரித்திரம் நமக்கு சொல்லுகிறது. ஆனால்  உடைக்க பட்ட ஒரு சுவற்றின் வெள்ளி விழாவை ஜெர்மனி  இந்த ஆண்டு  அரசு விழாவாக கொண்டாடுகிறது
இரண்டாம் உலகபோர் முடிந்தபின் வெற்றிபெற்ற நாடுகள் ஜெர்மனியை பங்குபோட்டுபிரித்துகொண்டன. ஒரு பகுதி கம்னியூச சித்தாந்தத்தை நிலைநிறுத்திய ரஷ்யாவும் மற்றொன்று நேசநாடுகள் என்று தங்களை அழைத்துகொண்ட அமெரிக்கா, இங்கிலாந்து பிரான்ஸ் எடுத்துகொண்டன.  இந்தபகுதி மேற்குஜெர்மனி,என்றும் சோவியத்தின் கட்டுபாட்டிலிருந்த பகுதி கிழக்கு ஜெர்மனி என்றும் அழைக்கபட்டுவந்தது. ஒரே நாட்டு மக்கள் பிரிக்கபட்டனர். என்பது மட்டுமில்லை, தலைநகரான பெர்லின் நகரத்தையும் பிரித்துகொண்டார்கள். பங்காளிகளின் சண்டையில் தேசமும், நகரமும் நான்கு துண்டுகளாகின. நேச நாடுகள் ஒவ்வொன்றும்  ஒவ்வொரு பகுதியை சொந்தம் கொண்டாடி தங்களது ராணுவத்தை செக்போஸ்ட்களில் நிறுத்தியிருந்தன.  கம்யூனிச கட்டுபாட்டில் இருந்த  ஜெர்மனியார்கள்,  சுதந்திர காற்றை சுவாசிக்க மறுபக்கத்துக்கு  நகர துவங்கினார்கள் ஒரே ஆண்டில் 35 லட்சம்பேர் கட்டுபாடுகளை மீறி தப்பித்துவிட்டார்கள்  ராணுவ கெடுபிடிகளினால் இவர்களை நிறுத்த முடியவிலை. அதன் விளைவாக   அரணாக ஒரு சுவரை எழுப்பியது சோவியத் ரஷ்யா.   பெரிலின் சுவர் என அறியபட்ட இதற்கு கிழக்கு ஜெர்மனி நிர்வாகம் இட்டிருந்த பெயர் பாசிசஸ்ட்களிடமிருந்து மக்களை காக்கும்  ”பாதுகாப்பு அரண்”. . மேற்குஜெர்மனி அரசு  அழைத்த பெயர் ”அவமானத்தின் சின்னம்”

1961ஆம் ஆண்டு ஒரு ஆகஸ்ட் மாத நள்ளிரவில் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் ரஷ்யா தங்கள் எல்லையாக அறவிக்கபட்டிருந்த பகுதியில் கம்பி முள் வேலிகளை அமைத்து, அடுத்த சில நாட்களிலேயே வலுவான கான்கீர்ட் சுவற்றை எழுப்பினார்கள். இந்த சுவர் ரஷ்ய எல்லைக்கோடு முழுவதிலும் எழுப்பட்டது.  நாட்டின் எல்லையின் ஒருமுனையில்  துவங்கிய சுவர்  பெர்லின் நகரின் நடுவே, வீதிகள்  வீடுகள், பள்ளிகள்  அலுவலகங்கள்  எல்லாவற்றையும் மட்டும் வெட்டிப் பிரிக்கவில்லை  உறவுகளையும் நட்புகளையும் குடும்பங்களையும் பிரித்தது.  நகரின் மறுபகுதியில் வசித்த பெற்றோர், ஒரே இரவில் மகனுக்கு  எட்டிகூட பார்க்கமுடியாத அன்னிய நாட்டினராகி போயினர்..  பெர்லின் நகரின்  அழகான தூண்களுடன் நிற்கும் பிரம்மாண்டமான வாயில் பிராண்டன்பர்க் கேட். அதன் முன்னும் சுவர் எழுந்தது. 

 நாட்டின் எல்லைகோட்டில் 156 கீமிக்கு 13 அடி உயரத்தில் எழுப்பபட்ட அந்த சுவர், பெர்லின் நகரின் வழியே மட்டும் 27 கீமிக்கு சென்றது. அதன் அருகில் நூறு மீட்டர் இடைவெளியில். மற்றுமோர் சுவர். இடைவெளியில் பல இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் தப்ப முயற்சித்தவர்கள் சுடபட்டார்கள்.. பலர் இப்படி இறந்துவிழுந்ததால் அந்த சுவரின் இடைவெளிப்பகுதி   ”மரணபடுகுழி” என அழைக்கபட்டது. இரவுபகலாக காவல். இரவெல்லாம் சுழலும் பெரிய ஒளிவிளக்கு. ஆனாலும் நம்பிக்கையை கைவிடாது சுரங்க வழி, சிறிய விமானம், பலூன்கள் போன்றவைகளில் தப்பிக்க முயன்று தோற்றவர்களின் சோக்கதைகள் ஏராளம்.
 குடும்பத்தினருடன் இணைய, நல்ல வேலைதேடி சுதந்திரமாக வாழ என  இந்த சுவர் எழுப்பும் போது தப்பிக்க முயன்றவர்கள 5000பேர்.  இறந்தவர்கள் 200க்கும் மேல். பலர் சரணடைந்து கைதியாக வாழ்ந்தார்கள்.  இந்த அவலம் 28 ஆண்டுகள். தொடர்ந்தது, சுவரின் மறுபக்கம்  நமக்கு மறுக்கபட்ட சொர்க்கம் என கிழக்கு பகுதி மக்கள் ஏங்கிகொண்டும், நம்முடைய நாட்டை அநியாமாக பிரித்துவிட்டார்கள் அரக்கர்கள் என மேற்குபகுதி மக்கள் பொருமிக்கொண்டுமிருந்தார்கள். 
1980களின் இறுதியில்  சோவியத் யூனியனில் எழுந்த சுதந்திர சூறவளி,, அன்றைய அமெரிக்க பிரதமர் ரீகனின் வெளிப்படையான மேற்கு ஜெர்மனியின் நிலைக்கு ஆதரவு,  உச்சகட்டத்தை அடைந்திருந்த மக்களின் கோபம் எல்லாம் சேர்ந்து கனிந்து கொண்டிருந்தது. , புரட்சி வெடித்துவிடுமோ என்ற நிலையில் கிழக்கு ஜெர்மனி நிர்வாகம்  எல்லைகளை கடக்க மக்களுக்கு தடையில்லை என 1989 நவம்பர் 9ம் தேதி அறிவித்தது.  அறிவிப்பை ரேடியோவில் கேட்ட  அந்த சந்தோஷமான கணத்தில்  மக்கள் செய்ய ஆரம்பித்த காரியம்  அவமான சின்னமான அந்த சுவரை இடித்தது தான். பெரிய இயந்திரங்களை வைத்து அரசாங்க அலுவலர்கள் செய்ய வேண்டிய பணியை அதற்காக காத்திராமல். வீட்டிலிருந்து சுத்தியல் கடப்பாரை எல்லாம்  கொண்டுவந்து இடிக்க ஆரமபித்துவிட்டார்கள். ஆளுக்கு ஒரு சின்ன பகுதியை வீட்டிற்கு கொண்டுபோய்விட்டார்கள்.  இன்றும் பல ஜெர்மானியர்களின் வீட்டில் ”இது பெர்லின் சுவற்றில் நான் உடைத்ததாக்கும்” என  காட்ட ஷோகேஸ்களில் வைத்திருக்கிறார்கள்.
 .
 அந்த நாளைத்தான் 25 ஆண்டுகள் கழித்து  வெள்ளிவிழாவாக கொண்டாடுகிறார்கள்.  மக்கள் உடைத்ததுபோக  பெர்லின் நகரில் ஒருபகுதியில் இருந்த சுவரையும் ஒரு கண்காணிப்பு கோபுரத்தையும் நினைவுச்சின்னமாக அறிவித்து பாதுகாக்கிறார்கள்.  அங்கு நாட்டின் அதிபர் திருமதி ஏஞ்சலா மெர்கலும் அவரது அமைச்சர்களும் வெள்ளை ரோஜா மலர் அஞ்சலி செலுத்தினார்கள். நகரின் பெருமையான பிராண்டன்பர்க் கேட் என்ற நுழைவாயிலின் முன்னே  ஒளிவெள்ளத்தில்  ஆராவார விழா..  ஆயிரகணக்கான மக்கள். ஒவ்வொரு குடும்பத்திலும் இந்த சுவரினால் ஒரு கண்ணீர்கதை இருக்கும்.  நகர் முழுவதும் இடிக்கபட்ட சுவரின் பகுதிகளில்  நிறுத்தபட்டிருந்த ஸ்டீல் குழாயிலிருந்து ஒளியூட்டபட்ட வெள்ளை ஹீலியம் பலூன்கள் ஒவ்வொன்றாக மக்களின் கரகோஷத்துடன் வானில் பறக்க விடப்பட்டது. விழாவில் முன்னாள் ரஷ்ய அதிபர் கோர்ப்சேவ் பங்க்கேற்றார்.
நாட்டின் அதிபர் ஏஞ்சலா மெர்கல்  பேசும்போது சொன்னது.” இந்த இடிந்த சுவர் சொல்லும் உண்மை - மனிதர்களின் கனவுகள் ஒரு நாள் பலிக்கும்” இவர் தன் இளமைகாலத்தை கிழக்கு ஜெர்மனியில் கழித்தவர்,
அதிகாரத்தை காட்ட அரசினால் எழுப்பட்ட  சுவர் ஒன்று, மக்களிடம். எழுந்த சுதந்திர தாகத்தால் மக்களாலேயே இடிக்கபட்டது
இன்று வலிமையான பெர்லின்  சுவர் இல்லை. ஆனால் அதைவிட மிக வலிமையான ஒருங்கிணைந்த ஜெர்மனி உருவாகியிருக்கிறது. 
23/11/14 கல்கியிலிருந்து 
  



13/11/14

நேருவின் ஆட்சி

நாளை அமரர் நேருவின் 125 பிறந்த நாளை ஆளுவோரும், ஆண்டவர்களும் தனித்தனியாக கொண்டாடுகிறார்கள். அந்த நாளில் என்னுடைய ” நேருவின் ஆட்சி -பதியம் போட்ட 18 ஆண்டுகள்” என்ற புத்தகத்தத்தை ஸிக்ஸ்த் சென்ஸ் பதிப்பகம் வெளியிடுகிறது. மற்ற விபரங்களை அவர்கள் விரைவில் அறிவிப்பார்கள். 

10/11/14

உதைத் திருவிழா

கிரிக்கெட் விளையாட்டுக்கும், அதன் வீர்ர்களுக்கும் கிடைக்கும் புகழும் பணமும் மற்ற விளையாட்டுகளுக்கு கிடைப்பது இல்லை. அதற்கான முயற்சிகளும் எடுப்பதில்லை. என்பது கடந்த சில ஆண்டுகளாக நாம் கேட்கும்  குரல். இப்போது நமது புட்பால் வீர்ர்களுக்கும் அத்தகைய வாய்ப்புகள்  உருவாகியிருக்கிறது.  கிரிக்கெட் இன்று ஒரு பணம்காய்க்கும் மரமாக வளர முக்கிய காரணம் ஐபிஎல்.  ஒரு  விளையாட்டை எப்படி வெற்றிகரமான பிஸினஸாக செய்யலாம் என்பதை செய்து  செய்துகாட்டியவர்கள் இவர்கள்.
இப்போது அதைப்போல கால்பந்தாட்டத்தையும் செய்ய, சில ஆரம்ப பிரச்னைகள், சண்டைகளுக்கு பின்னர்  ஐபிலை போல  இந்தியன் சூப்பர்லீக் உருவானது.(ஐஎஸ்எல்) இதை நிர்வகிக்க ஒரு கம்பெனியின் பாணியில் அமைக்கபட்டிருக்கும் புட்பால் ஸ்போர்ட்ஸ் டெவல்ப்மெண்ட். டின்  தலைவர் திருமதி நீதா அம்பானி. அடுத்த 15 ஆண்டுகளுக்கு  இந்த நிறுவனம் நடத்தும் அத்தனை மேட்ச்களின், விளம்பரம், டிவிஓளிபரப்பு, போன்ற சகல் உரிமைகளையும்  700கோடி களுக்கு வாங்கியிருக்கிறது ரிலெயன்ஸ் நிறுவனம்.

இந்த ஐஎஸ் எல்லின் நோக்கம்   புதிய லீக் டீம்களை அமைத்து,  அந்தடீம்கள்  உலக புகழ்பெற்ற ஆட்டகார்களை  ஏலத்தில் எடுத்து  அவைகளுடன் நம் வீர்ர்களும் இணைந்து விளையாடும் மேட்ச்களினால் இந்திய கால்பந்துவிளையாட்டின் தரத்தை உலக தரத்துக்கு உயர்த்தும் என்று அறிவிக்கபட்டிருக்கிறது. அறிவிக்கபடாவிட்டாலும் புரிந்து கொள்ளவேண்டிய விஷயம் இதில் இருக்கும்  ’பணம்’. விளையாட்டுவீர்ர்கள், லீக்கின் உரிமையாளர்கள், விளையாட்டு நடக்கும் நகரிலுள்ள கால்பந்து சங்கங்கள், உலகெங்கும்  டிவியில்  மாட்சுகளை ஒளிபரப்ப உரிமை பெற்றிருக்கும் நிறுவனங்கள் அனைவருக்கும் பெரும் அளவில் பணம் கொட்டப்போகிறது.
அதில் எட்டு நகர அணிகளுக்கான உரிமை ஏலத்தின் மூலம் முடிவு செய்யபட்டது. . கிரிக்கெட் பிரபலங்களும்,சினிமா நடிகர்களும்,  அணிகளை வாங்கியுள்ளனர். சில அணிகளில் உள்ளூர் நிறுவனக்களுடன் வெளிநாட்டு கால்பந்து லீக்களும் பங்குதாரர்களாகயிருக்கின்றனர். மிக்குறுகிய காலத்தில் இந்த ஏல அறிவிப்பின், முடிவுகளின் மூலம் ஐஎஸ்எல் மிக பணக்கார நிறுவனமாகியது.
சச்சின் டெண்டூல்கர் கொச்சி அணியையும் சவுரவ் கங்கூலி கொல்கத்தா அணியையும் வேறு சிலருடன் இணைந்து வாங்கியுள்ளனர். சென்னை அணியின் உரிமையாளர்கள் இந்தி நடிகர் அபிஷேக் பச்சன், கிரிக்கெட் கேப்டன் டோனி கெளஹாத்தி அணியை ஜான் ஆப்பிரஹாம்,ரந்தீர்கபூர், ஹிர்திக் ரோஷன்  இணைந்து ஏலத்தில் எடுத்திருக்கிறார்கள்

அக்டோபர் முதல் டிசம்பர் வரை 8 இந்திய நகரங்களில் நடக்கும் 61 மேட்ச்களில் உலக கோப்பை கலபந்து விளையாட்டில் பங்கேற்க தகுதி பெற்ற  49 வீர்ர்கள் இந்த தொடரில் பங்கேற்கிறார்கள். விளையாட்டு தொடரை 10 நாடுகளில் ஸ்டார் நேரிடையாக ஒளிபரப்புகிறது.
 ஒவ்வொரு டீமிலும்  22 ஆட்டகார்கள். இவர்களில்; 7 வெளிநாட்டு வீர்ர்கள், 14 இந்திய வீர்ரகள். ஒரு சர்வதேச புகழ்பெற்ற அடையாள” ஆட்டவீர்ர், இவர்கள்  டீம்களால் மிக அதிக பணம் கொடுத்து ஏலத்தில்  எடுக்கபட்டவர்கள். வெளிநாட்டு ஆட்டகார்களில்  மிக அதிகமாக ஏடுக்கபட்ட ஏலம்   750,000 டாலர்கள்(4,5 கோடி) இந்திய விளையாட்டு வீர்ர்களில் அதிகம் பெற்றது 85 லட்சம்
வண்ணமையமான தொடக்க விழாவுடன் அமர்க்களமாக தொடங்கிய நாளில் நடந்த முதல் போட்டியே  ரசிகர்களை மகிழ்ச்சியைலாழ்த்தியது. “ இந்திய கால்பந்து வரலாற்றில் இது மிகப்பெரிய தருணம். இந்த தொடரால் இந்தியாவில் மிகப்பெரிய கால் பந்து புரட்சி ஏற்படும் என நம்புகிறேன். இதில் எனக்கும் பங்கு இருக்கிறது  என்பதில் பெருமை அடைகிறேன். ஓட்டு மொத்த தேசமும் இந்த தொடரை ஆதரிக்க வேண்டும் என்றார் அந்த விழாவில் பங்கேற்ற சச்சின் தண்டுல்கர். இந்த அணிகளில் ஒன்றைத்தவிர, மற்ற அனைத்துக்கும் வெளிநாட்டு வீர்ர்கள் தான் கேப்டன் மற்றும்  கோச். இவர்கள் வழிகாட்டுதலில் நம் வீர்ர்கள் உலகதரத்துக்கு உயர்வர்கள்.  உலக கோப்பை மேட்சகளில்  டிவியில் நாம் பார்த்த பிரபலங்கள் நமது நகரங்களில் விளையாடுகிறார்கள்  என்பதால் கால்பந்து ரசிகர்களிடையே ஆர்வம் அதிகமாகியிருக்கிறது.  இந்த தொடரில்  சமீபத்தில்  சென்னையில் கோவா அணிக்கும்  சென்னை அணிக்கும்  நேரு ஸ்டேடியத்தில் நடந்த போட்டியின் போது  10,000 பேர் பார்க்க கூடிய ஸ்டேடியம் நிரம்பி வழிந்தது. சென்னை கால்பந்து ரசிகர்களின் ஆர்வத்தையும் பக்தியையும் அன்று பார்க்க முடிந்தது. இந்த தொடரில் முதல்கோல் அடித்த பெருமையை பெற்றவர் இந்திய வீர்ர் ப்ல்வந்து சிங். தொடர்ந்து  சென்னை அணிக்காக ஆடிய  பிரேசில் ஆட்டகாரர் எலோனோ புளூமர் பிரமாதமாக ஆடினார். 42 வது நிமிடத்தில்  கிடைத்த ஃபிரி கிக் வாய்ப்பில் அவர் அடித்த கோலினால் தான் சென்னை அணி அன்று வென்றது.  பரபரப்பான அந்த வினாடிகளுக்கு பின்னர் ஸ்டேடியத்தில்  எழுந்த  ஆரவாரத்தில் , கேட்ட  ”சூப்பர் கோல் மச்சி” என்ற கமெண்ட் புரிண்டிருக்காவிட்டாலும் அந்த வெளிநாட்டு வீர்ருக்கு சென்னை ரசிகரிகளின் சந்தோஷம் புரிந்திருக்கும்
இந்த தொடர் இந்திய கால்பந்தாட்த்தின் தரத்தை  உயர்த்தை நல்ல வாய்ப்பு, நம் வீர்ர்கள் புதிய டெக்கினிக்களையும் வெளிநாட்டு விளையாட்டுவீர்ர்களின் அணுகுமுறைகளையும் அறிந்து கொள்ள அருமையான் வாய்ப்பு என சொல்லபடுகிறது.
பிரபலங்களைக் கொண்டு வருவதால் மட்டுமே கால்பந்து விளையாட்டு இந்தியாவில் பெரும் வெற்றி அடையும் எனக் கூற முடியாது என்கிறார் இந்திய அணிக்காக எட்டு ஆண்டுகள் விளையாடியுள்ள சபீர் பாஷா. இவர் சென்னை மேட்சுக்கு சர்வதேச மைபின் பார்வையாளாரக வந்திருந்தார்.
ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்காவிலுள்ள நாடுகளின் கால்பந்து சங்கங்களில் எட்டு வயது முதல் சிறுவர்களை தேர்ந்த்டுத்து தொடர்ந்து பயிற்சி அளித்து சிறந்த வீர்ர்களாக உருவாக்குகிறார்கள்.  அதை நாம் செய்ய வேண்டும்  இந்த டீம் கள் அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட வேண்டும். என்கிறார் இவர்.

ஐஎஸ்ஸின் நோக்கம் வெறும் மேட்ச்கள் நடத்துவதுமட்டுமில்லை. ஒவ்வொரு டீமும் அவர்கள் பகுதியில் அகடமிகளை நிறுவி  முறையாக கால்பந்தாட்டாத்தை கற்பித்து வீர்ர்களை உருவாக்குவதும் ஒரு   லட்சியம்  என்று அறிவித்திருக்கிறார் அதன் தலைவர் நீனா அம்பானி.
அறிவிப்பும், ஆரம்பமும் அமர்க்களமாக இருக்கிறது. செய்வார்களா? அல்லது ஐபிஎல் யைப்போல விளம்பரமும், வியாபாரமாக ஆகபோகிறதா? \ஆட்டகார்களின் ஆட்டத்தைமட்டுமில்லை, ஆட்டுவிப்போரின் ஆட்டத்ஹையும் -காண இந்திய கால்பந்து ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்