18/10/18

இந்தோனிஷியாவை துரத்திய துயரம்


பால்வெண்மைநுரைகளை கரையிட்டஅலைகளை நீட்டும் கருநீலக்கடலும், பஞ்சுப்பொதியாக மேகங்கள் மிதக்கும்  நீலவானமும் பசுஞ்சோலையாக விரிந்து கிடக்கும் மலைகளும் கொண்ட இந்தோனிஷியாவின்  அழகான இயற்கை அண்மையில்  தன் கோரமுகத்தை காட்டி உலகையே நடுங்க வைத்திருக்கிறது.
ஒரே நேரத்தில் சுனாமி, பூகம்பம் ஒரு இடத்தைத் தாக்கினால் என்னவாகும்? என்பதை உலகம்  முதல் முதலாகப் பார்த்து  அதிர்ந்த  காட்சி அது. இயற்கையின் கோரதாண்டவத்தால்  இந்தோனிஷியாவின் நகரங்களான பலு, டோங்காலா, மமுஜூ ஆகிய 3 நகரங்களை சுனாமி விழுங்கி உள்ளது. டோங்காலாவில் இந்த கட்டுரையை எழுதும் வரை  மீட்புக்குழுவினரால் நுழைய முடியாத அளவுக்குச் சேதங்கள் ஏற்பட்டுள்ளதால், அங்குள்ள லட்சக்கணக்கான மக்களின் கதி என்னவென்று தெரியவில்லை
இந்தோனிஷியாவிற்கு  சுனாமி புதிதல்ல, அனேகமாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வந்து விசாரித்துவிட்டுபோகும். பூகம்பமும் புதிதல்ல ஏதாவது ஓரிடத்தில் அவ்வப்போதுவெடிப்பது வாடிக்கை.  ஆனால் இரண்டும் ஒரே நேரத்தில் இந்தத் தீவுகளை தாக்கியிருப்பது, அதுவும் மிகப்பெரிய அளவில் தாக்கியிருப்பது இப்போதுதான் .  
இந்தோனேசியாவின் சுலாவேசி தீவின் மத்தியப் பகுதியில் அண்மையில் ஒரு மாலை பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. பூமியில் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்தப் பூகம்பம், ரிக்டர் அளவுகோலில் 8.5 புள்ளியாகப் பதிவானது. இந்தப் பூகம்பத்தால் பலு, டோங்காலா  நகரங்கள் அதிர்ந்தன. அடுத்த சில நிமிடங்களில் பலு கடற்கரை பகுதியில் சுமார் 18 அடி உயரத்திற்கு அலைகள் எழுந்து சுனாமி பேரலைத் தாக்கியது.
சுனாமியால் கடற்கரையை ஒட்டிய வீடுகள், கட்டிடங்களில் கடல் நீர் புகுந்தது. அங்குள்ள பிரமாண்ட மசூதி சுனாமி அலையில் இடிந்து தரைமட்டமானது. பூகம்பம், சுனாமியால் தகவல் தொடர்பு முழுவதும் துண்டிக்கப்பட்டதால், உடனடியாக தகவல்கள் கிடைக்கவில்லை. இந்நிலையில், . பலு நகரில் 3.5 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். அவர்களில் ஏராளமானோரைக் காணவில்லை. சுனாமியில் அடித்துச் செல்லப்பட்ட பலரின் சடலங்கள் தொடர்ந்து கரை ஒதுங்குவதால், அந்நகரமே பீதியில் ஆழ்ந்துள்ளது. சாலைகளிலும், திறந்தவெளி இடங்களிலும்  சடலங்கள் குவியல் குவியலாக சிதறி கிடக்கின்றன. இடிபாடுகளிலும், சேறு, சகதிகளிலும் குழந்தைகளின் சடலத்துடன் பலர் கதறி அழும் காட்சிகளை பிபிசிடிவியில் பார்த்தவர்கள்  நிச்சியம் பதறியிருப்பார்கள்.
 சுனாமி வந்தவுடன்  உயரமான கட்டிடங்களின்  உச்சிக்குச் சென்றுவிட வேண்டும் என்ற தற்காப்பு முறையறிந்த மக்கள் இவர்கள்.  ஆனால்  மிக உயரமான ராட்சஅலைகள்  பெரிய உயரமான   மால்கள், பெரிய கட்டிடங்கள்  எல்லாவற்றையுமே உருட்டிபோட்டது... பல இடங்களில் சாலைகள் தகர்ந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவால் பல பகுதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மின்சாரம் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் இருளில் தவிக்கின்றனர் பலுநகர விமான நிலையத்தின் ஓடுபாதைகள் சேதமடைந்துள்ளதால். மீட்புப் பணிகளுக்காக சென்ற விமானம் தரையிறங்கமுடியாமல் தவிக்கிறது. 
டோங்காலா நகரில்  சுமார் 3 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். அவர்கள்  அனைவருமே பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த நகரில் ஒரு மசூதியில் தொழுகை நடந்துகொண்டிருந்த நேரத்தில் உள்ளே புகுந்த சுனாமி,அவர்களோடு அந்த மசூதியையும் அழைத்துசென்றுவிட்டது
இந்த நகரில் கடற்கரை அழகானது. அங்கு கடலுக்கு நன்றி சொல்லும்  கடற்கரை திருவிழா  ஆண்டுதோறும் நடக்கும். இப்போது இதை டூரிஸ்ட்களை கவர  ஆர்ப்பாட்டமாக நடத்துகிறார்கள்.  வெளிநாட்டுப்பயணிகள் பலர் பங்குகொண்டிருந்த விழாவிற்கு அழையா விருந்தாளியாக  சுனாமியும் வந்து சேர்ந்து அனைவரையும் விழுங்கி சோகத்தில் விழாவை முடித்துவைத்திருக்கிறது. நிவராணபணிகளுக்கு அமெரிக்க பெரும்ளவில் நிதிமற்றும் இதர உதவிகள் செய்திருக்கின்றன. பல நாடுகள் நிவாரணப்பணி படைகளை அனுப்பிக்கொண்டிருக்கின்றன. அன்னிய உதவிகளை ஏற்பதில்லை என்ற தன் கொள்கைகளை இந்தோனிஷிய அரசு தளர்த்திக்கொண்டிருக்கின்றது

இந்த இந்தோனிஷியாவில்  மட்டும் ஏன் இந்த கோர தாண்டவம்?
“பசிபிக்கின் ‘நெருப்பு வளையம்’ என கூறப்படும் இந்தோனேஷியாவில் தான் உலகிலேயே அதிகளவில் நிலநடுக்கம், சுனாமி போன்ற இயற்கை பேரழிவுகள் நடக்குமிடம். காரணம் இந்த நாடு ஒரு வினோதமான நில அமைப்பைக் கொண்டது.  கடல் சூழ்ந்த தீவுகளின் மேலே  எப்போது வேண்டுமானாலும் நெருப்பைக் கொட்டும் எரிமலைகள் சூழ்ந்த தேசம்.
ஒரு தேசத்தின் பகுதியாக சில தீவுகள் இருக்கும்.  ஆனால் பல தீவுக் கூட்டங்களே ஒரு தேசமாகியிருந்தால்? அது தான் இந்தோனிஷியா. (இந்த இடத்தில் எத்தனைத் தீவுகள் தெரியுமா 13000க்கும் மேற்பட்ட பல சைஸ்களில்  தீவுகள். மலைகளும் காடுகளும் நிறைந்த இந்த தீவுகூட்டத்தில் 6000 தீவுகளில்தான் மனிதர்கள் வாழ்கின்றனர். பல மொழிகள் இனங்கள் கலாச்சாரங்கள்  கொண்ட இந்தத் தீவுகளை இணைத்து உருவானது தான் இந்தத் தேசம் இதில் முக்கியதீவுகள் ஜாவா,சுமத்ரா,போர்னியோ சுலவாசி.
இந்த சுலவாழி தீவின் நகரங்களில் தான் இந்தப் பேரழிவின் உச்சகட்டம்..  இந்தத் தீவுகளில் பல இடங்களில் இருப்பது எரிமலைகள். இருக்கும் 400 எரிமலைகளில் 130 மலைகள “இயங்கும் நிலையிலிருப்பவை”. அதாவது  அது விரும்பும்போது  வெடித்து நெருப்பைக் கொட்டும். அப்படி வெடிக்கும் சில வினாடிகள் முன் பூகம்பம் வரும். இதே கடலிலுள்ள மலைகளில் நிகழ்ந்தால்  விளைவது சுனாமி. 
.பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரே நிலத்தட்டுத்தான் இருந்தது. அதன் மீது தான் பூமி இருந்தது. ஆனால் கண்டங்களாகப் பிரிய, பிரிய, அதன் தட்பவெப்ப, இயற்கை சூழ்நிலைகளுக்கு ஏற்ப, பல்வேறு நிலத்தட்டுக்கள் உருவாகின. இந்தத் தட்டுக்களின்மீதுதான் ஒவ்வொரு கண்டமும் இருக்கின்றன. நிலம், கடல் எல்லாவற்றையும் தாங்கி நிற்பது இந்த நிலத்தட்டுக்கள் தான். இதைத் தான் ‘டெக்டானிக் பிளேட்கள்’ என்கிறார்கள்  புவியியல் நிபுணர்கள்  இந்தத்  தத்துவப்படி  ஆஸ்திரேலியா பகுதியிலிருந்து நகர்ந்த பெருமலைகள் நின்ற இடம் இன்றைய இந்தோனிஷியாவென்றும் அந்த  மலைகள் இந்தப் பகுதி கடலுக்கு அடியிலிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த மலைகளில் எழும் அதிர்வினால், நில நடுக்கத்தால் அதன் மேற்பரப்பான கடலில் அலை பொங்கி  மிகப்பிரம்மாண்டாமாக எழுந்து தரையை தாக்குகிறது.  அது தான் சுனாமி. 
இந்த பூவியல் அமைப்பினால் தான்  இந்தோனிஷியப்பகுதிகளில் மிக அதிக அளவில் பூகம்பமும் சுனாமிகளும் நிகழ்கின்றன.
முன்னதாக அறிய முடியாதா?
ஆழங்காணமுடியாத பிரபஞ்ச ரகசியங்களை அறிய, செவ்வாய் கிரகத்திற்கே பயணம் செய்ய கலத்தை உருவாக்க உதவும் தொழில்நுட்பங்கள் வளர்ந்தவிட்ட இன்றைய சூழலில் இந்தப் பேரழிவின் வருகையை கண்காணிக்க முடியாதா?  முடியும்  முயற்சிக்கொண்டிக்கிறார்கள். ஆனால் இயற்கையின் வலிமைக்கு முன் தோற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் உண்மை.
அமெரிக்காவில் உள்ள ஹவாய் தீவில்தான் முதன் முதலாகப் பசிபிக் பெருங்கடல் பிராந்திய சுனாமி எச்சரிக்கை அமைப்பு நிறுவப்பட்டது. அதற்குக் காரணம் கடந்த நூற்றாண்டில் சுனாமியால் தாக்கப்பட்ட முதல் இடம் ஹவாய். 1946 ஏப்ரல் 1 அன்று ஹவாய் தீவைத் தாக்கிய ராட்சத சுனாமி அலை 159 பேரின் உயிரை விழுங்கி விட்டது. கோடிக்கணக்கான சொத்துகளும் நாசமாயின. அமெரிக்கா 1949 ஆம் ஆண்டில் அங்கு பசிபிக் கடல் சுனாமி எச்சரிக்கை அமைப்பு ஒன்றை நிறுவியது. அப்போது விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளில் 75 சதவீதம் தவறாகவே அமைந்தது. இதனால் பொது மக்கள் மூட்டை முடிச்சுகளை எடுத்துக் கொண்டு இடம் பெயர்வதும் மீண்டும் பழைய இடத்துக்கே திரும்புவதும் சலிப்பை ஏற்படுத்தின. செலவும் ஆனது. அதனால் சுனாமி அலை உருவானால் மட்டும் கடலில் இருந்து தகவல் கொடுக்கக் கருவி வேண்டும் என்பதை உணர்ந்து கண்டுபிடிக்கப்பட்டதுதான் ‘சுனாமி மிதவை கருவி’. 
இது எப்படி வேலை செய்கிறது?
கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டவுடன், சுனாமி அலைகள் கடலில் ஏற்படுகின்றனவா என்பதை அறிய சுனாமி எச்சரிக்கைக் கருவிகளால் மட்டுமே முடியும். அவற்றில் உள்ள நுட்பமான கருவிகள், கடலில் நீர் இயக்கத்தில் ஏதாவது மாற்றம் இருக்கிறதா என்பதைத் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்கும். நிலநடுக்கம் ஏற்பட்ட உடன் கடல் அலைகள் தோன்றினால், அந்த அலைகள் உருவாக்கும் அழுத்த மாறுபாட்டை ஒலி அலைகளாக மாற்றி, அவற்றை சிக்னல்களாக வானில் உள்ள செயற்கைக் கோள்களுக்கு அனுப்பிவைக்கும். அங்கிருந்து தரையில் உள்ள மையங்கள் சிக்னலைப் பெற்றுக் கொள்ளும். அலையின் தன்மையை விஞ்ஞானிகள் அறிந்து அது பாதிப்பை ஏற்படுத்துமானால் எச்சரிக்கைத் தகவல்களை அனுப்புவார்கள். இத்தகவலை சுனாமி உருவான 3 நிமிடத்தில் வெவ்வேறு நாடுகளில் உள்ள அலுவலகங்களுக்குச் சென்றுவிடும். ஆனால், சுனாமி அலைகள் உருவான இடத்துக்கும் கரைப் பகுதிக்கும் உள்ள தூரத்தைப் பொறுத்துத்தான் அலைகளின் தாக்குதல் வேகம் மற்றும் நேரம் அமையும்.
ஆனால் இம்முறையில் தகவல் தரையை எட்டும்முன் சுனாமி அதைத் தொட்டுவிட்டது.  ஆழிபேரலையின் வேகம் சாட்டிலைட் அனுப்பும் சிகனல்களை வேகம் கொண்டது என்பதை நிரூபித்திருக்கிறது.  
அனுபங்கள் தான்  சிறந்த ஆசான். 
இந்த சோக அனுவபத்திலிருந்து ஆராய்ந்து அடுத்த சுனாமியும் நிலநடுக்கமும் எழும் முன்னரே  அந்தப்பகுதி எச்சரிக்கை பெறும் வழி வகைகளை நாசா போன்ற அமைப்புகள் செய்யும் என்று நம்புவோம்

23/9/18

அழியும் ஆபத்திலிருக்கும் ஆரண்முளா கண்ணாடிகள்


 




வரலாறு காணாத பெரும் இயற்கை சீற்றத்தின் விபரீத விளைவுகளினால் கேரளத்தில் மிகப்பெருமளவில் பாதிப்புக்குள்ளானது பல நதியோர கிராமங்கள்தான். பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்திருக்கிறார்கள். அரசு மற்றும் பல தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் மெல்ல மீண்டுகொண்டிருக்கின்றனர்.
இப்படிப் பாதிக்கப்பட்ட கிராமங்களில் ஒன்று பம்பா நதிக்கரையிலிருக்கும் அழகான ஆரண்முளா கிராமம். பல கிரமங்களைப் போல வீடுகளையும் உடைமைகளையும் இழந்த இந்தக் கிராம மக்களின் துயரம் மற்றவர்களிடமிருந்து சற்று மாறுபட்டது. இவர்கள் தங்கள் மண்ணை இழந்தற்காகப் பெரிதும் கலங்கியிருக்கிறார்கள். மண் என்றால் அவர்களது நிலமில்லை. அவர்கள் சேமித்த பாதுகாத்து வந்த ஒரு வகை மண்.
அப்படி அந்த மண்ணில் என்ன விசேஷம்? என்பதைத் தெரிந்துகொள்ள இந்தக் கிராமத்தின் சரித்திரத்தையும் அங்கு உருவாகும் ஒரு கைவினைப் பொருளின் முக்கியத்துவத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்.
சபரிமலைக்குப் பயணம் செய்யும் பலரும் முதலில் அதற்கு 75 கீமி முன்னிருக்கும் ஆரண்முளா பார்த்த சாரதியைத்தான் தரிசிப்பார்கள். 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகக் கொண்டப்படும் இந்தக் கோவிலில்தான்.
திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா, சபரிமலை ஐயப்பனுக்குக் காணிக்கையாக வழங்கிய 420 பவுன் எடை கொண்ட தங்க அங்கி பாதுகாக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜையின்போது இங்கிருந்து அது ஊர்வலமாக மலைக்கு எடுத்தச்செல்லப்படும்.
இந்தக் கோவிலின் அருகில் வசிக்கும் இருபத்திரண்டு குடும்பங்களின் கலைஞர்கள் பரம்பரையாகச் செய்து வரும் ஒரு கைவினைப்பொருள் ஆரண்முளா கண்ணாடிகள். கண்ணாடி என்றால் நாம் சதாரணமாகப் பயன்படுத்தும் கண்ணாடிப் பலகைகளில் ஒருபுறம் பாதரசம் பூசப்பட்ட கண்ணாடிகள் இல்லை. இதில் கண்ணாடி என்ற பொருளே இல்லாமல் முழுக்க முழுக்க உலோகத்தால் ஆன கண்ணாடி. இந்தத் தயாரிப்பு முழுவதும் கைவினைக்கலைஞர்களால் எந்த இயந்திர உதவியும் இல்லாமல் தயாரிக்கப்படுகிறது. கேரளத்தின் கதகளி போல இந்தக் கண்ணாடிகள் மிகப்பிரபலமான ஓர் பாரம்பரியச்சின்னம்.
தமிழகத்திற்கு வரும் தலைவர்களுக்கும் வெளிநாட்டுப் பிரமுகர்களுக்கும் நமது கோவில், நடராஜர் உருவங்களை அரசின் சார்பில் பரிசளிப்பதைப் போல, கேரளாவில் அவர்களின் பாரம்பரிய சின்னமான இந்த ஆரண்முளா கண்ணாடியைத்தான் வழங்குவார்கள். யூன்ஸ்கோ பாரம்பரிய கலையைப்போற்றும் கிராமம் என்ற கெளரவத்தையும், இந்தக் கண்ணாடிகளுக்கு உலகளவிலான புவிசார்பு குறியீட்டையும் வழங்கியிருக்கிறது.


காண்பதைப் பல ஆண்டுகளுக்குப் பளிச்சென்று காட்டும் இந்த ஆரண்முளா கண்ணாடி கேரளா மட்டுமில்லாமல் தமிழகத்திலும் பல கோவில்களிலும் ஆராதனைக்குப் பின்னர் தெய்வத்துக்குச்செய்யப்படும் உபசாரங்களில் முக்கிய இடம்பெற்றிருக்கும் ஒரு பொருள்.
இந்தக் கண்ணாடி உருவாக்கப் பயன்படும் உலோகத்தைத் தயாரிக்கும் முறை மிக ரகசியமாகப் பாதுகாக்கப்படுகிறது. வாரிசுகளுக்குமட்டும் சொல்லிக்கொடுக்கப்படும் இந்தப் பாரம்பரிய கலையைத்தொடர விரும்பாத வாரிசுகளுக்கு அந்தக் கிராமத்தில் இடம் இல்லை என்ற அளவில் ரகசியம் காக்கப்படுகிறது.


உலோகத்தைப் பளபளப்பாக்குவது என்பது கடினமான பணியில்லை என்றாலும் பல ஆண்டுகளானாலும் மங்காமல் தெளிவாகத் தெரியுமளவுக்கு எந்த எந்திர உதவியும் இல்லாமல் ஒரு உலோகத்தை உற்பத்தி செய்வதுதான் இந்தத் தொழிலின் சிறப்பு.
இந்தக் கண்ணாடிகள் சிறிய  வட்டவடிவில் வெவ்வேறு அளவுகளில் தயாரிக்கப் படுகிறது. பின்னர் அது ஓர் அழகான யானையின் முகம், சங்கு. மலர். போன்று தயாரிக்கப்பட்டிருக்கும் பல விதமான வெங்கல பிரேம்களில் பதிக்கப்படுகிறது.’ முதலில் கண்ணாடிகளின் அளவுகளுக்கேறப்ப வட்ட வடிவ அச்சு (மோல்ட்) உருவாக்கப்படுகிறது. இது ஒரு குடுவை போன்ற மற்றொரு அச்சினுள் பொருத்தப்படுகிறது. அந்தக் குடுவை அச்சின் மேல் பாகதத்தில் காரீயக் குண்டுகளும் வேறுசில பொருட்களும் இடப்படுகிறது. இந்த வேறு சிலபொருட்கள் என்ன என்பது தான் ரகசியம். இந்த மோல்டு மிக அதிக அளவில் வெப்பம் வெளியாகும் மண் அடுப்புக்களினுள் இடப்பட்டு இரண்டு நாள் முழுவதும் நெருப்பில் இருக்கிறது. இரண்டு நாட்களுக்குள் அந்தக் காரீயமும் பொருட்களும் உருகி உள்ளிருக்கும் வட்டமான கண்ணாடிக்கான வடிவ அச்சில் பரவி ஒர் உலோகத்தகடாகிறது. பின்னர் அச்சு உடைக்கப்பட்டு அந்தத் தகடு வெளியே எடுக்கப்படுகிறது. அந்த உலோகத்தகடு ஒரு சதுர மரக்கட்டையில் ஓட்டப்பட்டு ஒரு வழவழப்பானதேக்குப் பலகையில் தொடர்ந்து கைகளால் ஆறு மணி நேரம் தேய்த்து, தேய்த்து பளபளப்பாக்கப் படுகிறது. இறுதியாகத் தலைமை சிற்பி தன் புருவம் தெளிவாகத்தெரிகிறதா என்று பார்த்தபின் அதைக் கண்ணாடியாக அனுமதிப்பார். இந்தக் கண்ணாடிகள் சதுர மரக்கட்டையிலிருந்து கவனமாகப் பிரிக்கப்பட்டுப் பிரேம்களில் ஓட்டப்படுகிறது. இதற்கான பசைகளையும் இவர்களே தயாரித்துக்கொள்கிறார்கள்.  கோவில்களுக்கு சன்னதியின் முன்னே நிறுத்த பெரிய அளவுகண்ணாடிகளையும் தயாரிக்கிறார்கள். அப்படி 5 அடி உயரத்திற்கு தயாரிக்கப்பட்ட ஒரு கண்ணாடி லண்டன் மீயூசியத்திலிருக்கிறது.














 


ஒவ்வொரு முறையும் தயாரிப்பைத் துவக்கும் முன்னரும் கண்ணாடிகளாக உருவான பின்னரும் பார்த்தசாரதி கோவிலில் பூஜைகள் செய்த பின்னரே விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. உள்நாட்டில் மட்டுமில்லை வெளிநாடுகளிலும் மிகவும் பிரபலமாகியிருக்கும் இந்தக் கண்ணாடிகள் ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. அதற்காக வைத்திருந்தைவகளும் இப்போது அழிந்துவிட்டன. இழப்பு 1.5 கோடி. ஆரண்முளா பாம்புப் படகு போட்டிகளைப்பார்க்க வரும் வெளிநாட்டுப் பயணிகளில் வழக்கமாக இங்கு தேடி வந்து வாங்க வருபவர்களுக்கு ஏமாற்றம் காத்திருக்கிறது.



ஒவ்வொரு கண்ணாடியின் தயாரிப்பின் ஒவ்வொரு கட்டத்திலும் கைவினைக்கலைஞர்களின் கடினமான, கவனமான உழைப்பு நிறைந்திருக்கும் இந்த ஆரண்முளா கண்ணாடி தயாரிக்கும் கிராமத்தினர் இந்த வெள்ளத்தில் ஒரே நாளில் அவர்களது இரண்டு மாத உழைப்பான 6000 கண்ணாடிகளை இழந்துவிட்டார்கள். “ வீட்டில் புகுந்த வெள்ளம் கண்ணாடிகளை அள்ளிக்கொண்டு போனது, மீட்க நீந்திப்போராடினேன் முடியவில்லை என்கிறார். தலைமை விஸ்வகர்மாவின் பேரன்.
இந்த ஆரண்முளா கலைஞர்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் தொடர்பு இருப்பதாக வழங்கி வரும் ஒரு செவி வழிச் செய்தியை அறிந்தபோது ஆச்சரியமாகியிருந்தது. இங்கிருக்கும் பார்த்தசாரதி கோவிலை நிர்மாணிக்கும் பணிக்கு வந்த பல தொழிளாளார்களில் தமிழ்நாட்டின் சங்கரன் கோவிலைச் சேர்ந்த சிலரும் வந்திருக்கிறார்கள். மன்னர் கோவில் பணிகளைப்பர்வையிட வந்தபோது வேலை செய்யாமல் இருந்த அவர்கள்மீது கடும் கோபம் கொண்டு பணியிலிருந்து அவர்களை நீக்கிவிட்டார். மன்னரைச் சமாதானப்படுத்தி மீண்டும் வேலையைப்பெற அவர்கள் அதுவரை யாரும் செய்யாத ஒரு பொருளை உருவாக்கிக் காட்ட தீர்மானித்தனர். அதன் விளைவாக ஒரு பளபளப்பான உலோகதகட்டை உருவாக்கி அதில் மன்னருக்கு ஒருகீரிடம் தயாரித்துக்கொடுத்தனர். அதைக்கண்டு வியந்த மன்னர் அதில் முகம் பார்க்கும் கண்ணாடிகள் தயாரித்துக் கோவிலுக்குக் கொடுக்கச் சொன்னார். அதன் விளைவாக எழுந்தது இந்தத் ஆரண்முளா கண்ணாடித் தொழில். அந்தத் தமிழர்களின் பரம்பரையினர் தான் இந்த விஸ்வகர்மாக்கள்.



தயாரிக்கப்பட்ட கண்ணாடிகள் வெள்ளத்தில் போனதைவிட இவர்கள் அதிகம் வருந்தி அழுவது தாங்கள் சேமித்த மண் கரைந்திவிட்டதற்காகத் தான். அடுப்புகளையும், அச்சுக்களையும் உருவாக்க இவர்கள் பயன் படுத்தும் மண்கலவை விசேஷமானது. நதிக்கரையின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் எடுக்கப்படும் அந்த மண் பல முறை சலிக்கப்பட்டு அதனுடன் சில பொருட்கள் சேர்க்கப்பட்டுச் சேமிக்கப்படும். அந்தச் சேமிப்பு பல ஆண்டுகள் உழைப்பில்  உருவானது. அதிலிருந்து தேவையானபோது மட்டும் மண் எடுத்து அச்சுச் செய்துகொள்வார்கள். அந்த மண் குவியல் தான் இப்போது ஆற்று வெள்ளத்தில் அழிந்துவிட்டது. மழையில்லாத நாட்களில் தேர்ந்தெடுத்துச் சேமிக்கப்பட்ட அந்த விசேஷ கலவை மண்ணை மீண்டும் உருவாக்க ஒராண்டாகும் என்கிறார்கள். அதோடு காரீயகுண்டுகளுடன் கலக்கத் தயாரித்து வைத்திருந்த விசேஷ கலவைப் பொருளும் அழிந்துவிட்டது.


காலத்தால் அழியாத கண்ணாடிகளைப் படைக்கும் இந்தக் கிராம மக்களின் தொழில் அழிந்திருக்கிறது, ஆனால் அவர்கள் “எங்கள் பரம்பரைக்கு வாழ்வளித்த எங்கள் தெய்வம் பார்த்தசாரதிப் பெருமாள் இதிலிருந்தும் மீண்டுவர உதவுவார்” என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.

7/9/18

காவேரியின் சிற்றம்.



நேற்றைக்கு (02/9/18) ஶ்ரீரங்க விஜயம். . காவேரியில் வெள்ளம் 80 சதவீதத்துக்குமேல் வடிந்திருக்கிறது. இனி அவசியமில்லை என்றாலும் கொள்ளிடத்தில் உடைந்த மதகு பாலத்தின் பகுதியில் மணல் மூட்டைகள் போட்டு அடைக்கும் வேலைத் தொடர்கிறது. எதிர்காலத்தேவையை எண்ணி எடுத்த வேலையை முடிக்கவேண்டும் எனச்செய்கிறார்களோ அல்லது . காவிரியிடமிருந்து அளவுக்கு அதிகமாக எடுத்த மணலைக் கொஞ்சமாவது திருப்பித் தந்து மன்னிக்க வேண்டுகிறார்களோ என்ற எண்ணம் எழுந்தது.
இந்தப் பாலத்திற்கு ஒரு சுவையான வரலாறு உண்டு, அது குறித்து அண்மையில் புதிய தலைமுறையில் எழுதியது இது

அண்மையில் காவிரியில் வெள்ளம் பெருகி நீர் கொள்ளிடத்தின் வழியே கடலில் சேருவதைப் பற்றிய செய்திகளும் அதன் உச்ச கட்டமாக முக்கொம்பு மேலணையில் மதகுகள் உடைந்தனால் நீர்ப் பெருக்கு அதிகரித்த செய்திகள் வந்தன, இந்த முக்கொம்பு கதவணை ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. தென்னிந்திய நீர்ப்பாசன தந்தையென அழைக்கப்படும் பிரிட்டிஷ் ராணுவ பொறியாளர் சர்.ஆர்தர் காட்டன் இந்த அணையைக் கட்டினார். அவரைப் பெருமைப்படுத்தும் வகையில், ஆர்தர்காட்டனுக்கு முக்கொம்பில் சிலை வைக்கப்பட்டுள்ளது. காவிரி கரூர் மாவட்டம் கொடுமுடியில் அகண்ட காவிரியாக மாறுகிறது. அகண்ட காவிரியிலிருந்து தண்ணீரைத் தடுத்து பாசனத்துக்காகத் திருப்பிவிடத் திருச்சி மாவட்டம் முக்கொம்பில் கதவணை கட்டப்பட்டது. 
சர் ஆர்தர் காட்டன் இந்த அணையைக் கட்டியதின் பின்னே ஒரு சுவையான வரலாறு இருக்கிறது. அவர், கல்லணையைக் கட்டிய சோழ மன்னர் கரிகாற்சோழனின் கல்லணை கட்டுமானத்தை ஆராய்ந்து வியந்து அதே முறையைப் பின்பற்றித்தான் இதைக் கட்டியிருக்கிறார். (அதை அவரே தன் புத்தகத்தில் விரிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்). 
காவிரி ஆறு கொள்ளிடத்தில் இரண்டாகப் பிரிகிறது. ஒன்று காவிரி, மற்றொன்று கொள்ளிடம்.. இந்த இரண்டு ஆறுகளுக்குமிடையே திருவரங்கத்தீவு இருக்கிறது. அத்தீவின் மேல் முனையில் அதாவது கொள்ளிடம் பிரியும் இடத்தில், கொள்ளிடத்தின் நிலமட்டம் காவிரியின் நிலமட்டத்தைவிட 6 அடி உயரமாக இருக்கிறது. ஆகவே வெள்ளம் வரும்பொழுது மட்டுமே கொள்ளிடத்தில் நீர் செல்லும். பிற காலங்களில் காவிரியில் மட்டுமே நீர் போகும். 
ஆனால் இத்தீவின் கீழ்முனையில் கொள்ளிடத்தின் நிலமட்டம் காவிரியின் நிலமட்டத்திற்குச் சமமாக உள்ளது.மேலும் கொள்ளிடத்தின் நிலமட்டச் சரிவு அதிகமாக உள்ளது. இவற்றின் காரணமாகத் திருவரங்கத்தீவின் கீழ்முனையில், வெள்ளம் வராத சாதாரணக் காலங்களில் கூட அடிக்கடி உடைப்பு ஏற்பட்டுக் காவிரியில் வரும் நீரும் கூடக் கொள்ளிடத்திற்கே வந்துவிடும். 
இதனால் காவிரியின் கீழ் உள்ள அனைத்து விளைநிலங்களிலும் அடிக்கடி நீர் இல்லாது போய்ப் பாசனம் செய்யமுடியாத நிலை ஏற்பட்டது.(இன்று பேசப்படும் கடைமடைப்பிரச்னை) இதனைத் தடுக்கக் கருதிய சோழ மன்னன் கரிகாலன், திருவரங்கத்தீவின் கீழ் முனையில் அடிக்கடி உடைப்பு ஏற்படும் பகுதியில் பெரும் பாறைகளால்ஆன கட்டுமானத்தைக் கட்டி காவிரியின் கரையைப் பலப்படுத்தி உடைப்பை நிரந்தரமாகத் தடுத்து நிறுத்தினான். அதன்மூலம் திருவரங்கத்தீவின் மேல்முனையில் காவிரிக்குப் பிரியும் நீர் வீணாகாது, எல்லாக் காலங்களிலும் பாசனத்துக்குக் கிடைக்க வழிவகை செய்யப்பட்டது. 
இந்த கட்டுமானம் தான் கரிகாலன் கட்டிய கல்லணை எனப் போற்றப்படுகிறது. ஆனால்கரிகாலன் காவிரிக்குக் குறுக்கே அணையைக் கட்டவில்லை, அவன் காவிரிக்குக் கல்லால் ஆன ஒரு கரைதான் அமைத்தான் என்பதே உண்மை. கல்லால் ஆன கட்டுமானத்தைக் கட்டி நீரைத்திருப்பி விடுவதை அணைக்கட்டு அல்லது கற்சிறை எனப் பழந்தமிழர்கள் குறிப்பிட்டனர். எனவே கரிகாலன் கட்டியது ஒரு கற்சிறை தான் இன்றைய மொழியில் சொல்லுவதானால் check dam. இந்த அணையில் கையாளபட்ட தொழிநுட்பத்தின் அடிப்படையில் தான் ஆர்தர் காட்டன் மேல்ணையை எழுப்பினார். அப்படி என்ன தொழில்நுட்பம் என்கிறீர்களா? :: 
ஆழங்காண முடியாத மணற்பாங்கான ஆற்றுப்படுகையில் மிகப்பெரிய பாறைகள் போடப்பட்டது. பாறைகளுக்கு அடியில் உள்ள மணல், ஆற்று நீரில் அரித்துச்செல்லப்பட்டதால் பாறைகள் மெதுவாக மணலுக்குள் இறங்கின. அவற்றின் மேல் களிமண் பூசப்பட்டு, அப்பாறைகளின் மேல் மீண்டும் பெரிய பாறைகள் வைக்கப்பட்டன. அதனால் கீழுள்ள பாறைகள் மேலும் ஆழத்திற்குள் புதைந்தன. பின் மீண்டும் களிமண் பூசப்பட்டு, பாறைகள் வைக்கப்பட்டன. கீழுள்ள பாறைகள் மேலும் புதைந்தன. கீழுள்ள பாறைகள் புதையப்புதையத் தொடர்ந்து பாறைகள் வைக்கப்பட்டன. இறுதியில் கீழுள்ள பாறைகள் கடினத் தளத்தை அடைந்தவுடன், பாறைகள் இறங்குவது நின்று போனது. இவ்வாறு ஒன்றின்மேல் ஒன்றாக வைக்கப்பட்ட பெரும்பாறைகளும், அவற்றுக்கிடையேயான களிமண் பூச்சுகளும் இணைந்தே கல்லணை என்ற மகத்தான நீர் சிறை (அணை) உருவாகியது இந்த தொழில் நுட்பத்தைப் பயன் படுத்திதான் மேலணையைக் கட்டியிருக்கிறார் ஆர்த காட்டன்.

இந்தத் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு சர் ஆர்தர் காட்டன் அவர்கள் 1874ம் ஆண்டுக் கோதாவரியின் குறுக்கே தௌலீஸ்வரம் என்ற அணைக்கட்டைக் கட்டினார். அது கோதாவரிச் சமவெளியை வளப்படுத்தி அனைவரின் பாராட்டையும் பெற்றது. நமது முல்லைப்பெரியார் அணைகட்டிய பென்னிகுக்கை நாம் கொண்டாவது போல் இவரை ஆந்திரமக்கள் கொண்டாடுகிறார்கள். தனக்குக் கிடைத்த பாராட்டுக்குக் காரணமான பழந்தமிழ் பொறியாளர்கள் குறித்து, அவர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கும் வாசகங்கள் இது. 
“ஆழங்கான முடியாத மணற்பாங்கான ஆற்றுப்படுகையில் எப்படி அடித்தளம் அமைப்பது என்ற தொழில்நுட்பத்தை இவர்களிடமிருந்து (தமிழர்களிடமிருந்து) தான் தெரிந்து கொண்டோம். எங்களால் செய்து முடிக்கப்பட்ட ஆற்றுப்பாசனத் திட்டங்கள் தான் உலகின் பொறியியல் பணிகளில் முதன்முதலான மிகப்பெரியஅளவில் செலவழிக்கப் பட்ட நிதிசம்பந்தமான வெற்றிப் பணிகளாகும். இவ்வெற்றிக்கான ஒரே காரணம் யாதெனில் நாங்கள் இம்மக்களிடம் கற்றுக்கொண்ட அடித்தளம் அமைப்பது குறித்த பாடங்களே ஆகும். இம்முறையைக் கொண்டு ஆற்றுப்பாலங்கள், அணைக்கட்டுக்கள் போன்ற பல பாசனப் பொறியியல் கட்டுமானங்களை எளிதாகக் கட்டி முடித்தோம் (இவர் ஆந்திராவி. அதற்காக அவர்களுக்கு நாங்கள் நன்றி செலுத்தக் கடமைப் பட்டுள்ளோம்.” இந்த புத்தகம் 1874ல் எழுதப்பட்டது.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் 180 ஆண்டுகளுக்கு முன் எழுப்ப்ப் பட்ட மேலணை இன்று வெள்ளத்துக்குப் பலியாகிவிட்டது. . ஆனால் அதற்கு முன்னர் பல நூற்றாண்டுகளுக்கு முன் கரிகாலன் எழுப்பிய, பல வெள்ளங்களைப் பார்த்த தடுப்பணை அசையாமல் இந்த வெள்ளத்தையும் பார்த்த சாட்சியாக நின்று கொண்டிருக்கிறது.



comments from face book 



Comments
Panneerselvam Natarajan
Panneerselvam Natarajan அருமையான தகவல்
1
Manage
LikeShow more reactions · Reply · 3d
N.Rathna Vel
N.Rathna Vel இதில் ஆச்சரியம் என்னவென்றால் 180 ஆண்டுகளுக்கு முன் எழுப்ப்ப் பட்ட மேலணை இன்று வெள்ளத்துக்குப் பலியாகிவிட்டது. . ஆனால் அதற்கு முன்னர் பல நூற்றாண்டுகளுக்கு முன் கரிகாலன் எழுப்பிய, பல வெள்ளங்களைப் பார்த்த தடுப்பணை அசையாமல் இந்த வெள்ளத்தையும் பார்த்த சாட்சியாக நின்று கொண்டிருக்கிறது. - முக்கொம்பு உடைப்பு பற்றி அருமையான தகவல்கள் அடங்கிய பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு Ramanan Vsv
1


Ramanan Vsv replied · 1 Reply
Shahjahan R
Shahjahan R அட்டகாசமான கட்டுரை.
2

Shahjahan R
Shahjahan R பிரிட்டிஷ் அரசின் விமர்சனங்களையும் மீறி ஆந்திரத்தில் அணைகள் கட்டி, வேளாண்மைக்கு வழி செய்தவர் ஆர்தர் காட்டன். நாடெங்கும் பஞ்சத்தைப் போக்கும் வகையில் இந்திய நதிகளை இணைக்கும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று சொன்னவரும் அவர்தான். ஆந்திரத்தை நெற்களஞ்சியமா…See More
8

Ramanan Vsv
Ramanan Vsv சக்கரகாலன் நூல் ஆசிரியர் ஷாஜஹான் .
6

Vijay S Krishnan
Vijay S Krishnan பொதுப் பணித் துறை 
என்ன அருமையான துறை
1
Manage

Vidya Subramaniam அருமை சார்

Artist ArjunKalai
Artist ArjunKalai மனல் கொள்ளையால் சரிந்தது கொள்ளிடம் பாலம். மற்றும் அனை.

Maragatha Mani படிக்க படிக்க ஆச்சரியமும் கர்வமும் மேலோங்குகிறது. நம் முன்னோர் பொறியியல் துறை அறிவு ஆங்கிலேயர்கள் பிரமிப்புடன் ஏற்றுக்கொண்டார்கள். நாம் மாற்றான் பெருமை பேசி பொறியாளர் துறையை இன்று கேலி கூத்தாகி கொண்டிருக்கிறோம்.

Sridhar Sivaraman Perhaps Karikalan expected Manal kollai and did a better job and Sir Arthur Cotton did not anticipate????
1
M3d

Ramanan Vsv replied · 1 Reply
Moorthy Athiyanan
Moorthy Athiyanan தண்ணீர் தண்ணீர் .....உண்மையான சேவை மனம் இனிமேல் வருமா சார்.....மிகவும் சிறப்பு சார்.

Vadakovay Varatha Rajan வழமைபோல் புதிய தகவல் .பாராட்டுக்கள்

Suresh Kumar S படிக்கும்போது சுவை சேதமாகாத அளவில் வெள்ளமாய்ப் பாய்ந்த தகவல்கள். அருமை, சார். இந்திய மக்களின் நலனில் அக்கறை கொண்ட காட்டன் போன்றோரும் இருந்திருக்கின்றனர்.

Muthuswamy Krishnamurthy
Muthuswamy Krishnamurthy Very informative.நயமான தமிழ் நடை.
Manage

Ramanan Vsv replied · 1 Reply
Ranganathan Ganesh
Ranganathan Ganesh காவேரியில் வெள்ளம் 80 சதவீதத்துக்குமேல் வடிந்திருக்கிறது.// அப்போ இன்னும் சில தினங்களில் வறட்சி ன்னு சொல்லுங்க!

Mohan Aru அற்புதமான கட்டுரை.
1

Vmapathy Dayanandhan Fantastic information.Thank u sir. Our TN Minister says something which unbelievable and unrealistic.
1

Vijayakumar Somasundaram அஹா.... அற்புதம்.

Nac Ramani Nacramani அருமையிலு ம் அருமையான தகவல்களை அள்ளி வழங்கி இருக்கிறீர்கள் , சார் . மிக்க நன்றி !!!
Manage
LikeShow more reactions · Reply · 3d
Manthiramoorthi Alagu
Manthiramoorthi Alagu அருமையான செய்தி.

Suresh Srinivasan அருமையான பதிவு...தகவல்களுக்கு நன்றி...
Manage
LikeShow more reactions · Reply · 3d
Mohan
Mohan எனக்கு கொள்ளிடத்தின் அக்கரையில் உள்ள உத்தமர்கோவில் தான் இருந்து வளர்ந்த ஊர்.
அந்த இடிந்த பாலம்
எங்களுக்கு எங்கள்…See More


Ramanan Vsv replied · 1 Reply
Sankara Narayanan Iyer
Sankara Narayanan Iyer Wow ! Super Write-up
1

Sita Thaniga
Sita Thaniga அருமையான பதிவு ஐயா மிக்க நன்றி

Balrajerode Balraj
Balrajerode Balraj புதிய தகவல் நன்றி ஐயா

Rajendran S K அருமையான பதிவு. நன்றி.

Easwar Ramanathan அருமையான பதிவு..

Seralathan Manickam நல்ல பதிவு

Raman V Very Informative. Excellent.
Manage
L
Vipranarayanan Tirumalai அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய செய்தி அழகாக தெரிவித்து இருக்கிறீர்கள்

Velayutham Muthukrishnan அருமையான பதிவு..! கரிகால் சோழ மன்னன் கட்டிய கல்லணையை மனதிற்கொண்டு முக்கொம்பு அணையையும் ஆந்திராவில் கோதாவரியின் குறுக்கேயும் அணையைக் கட்டி அனைவரின் பாராட்டுதல்களைப் பெற்றிருக்கிறார் ஆர்தர் காட்டன். தற்கால கரிகாலர்கள் காவிரி நீர் வீணாக கடலில் கலப்பதை வேடிக்கை பார்த்துகொண்டிருக்கிறார்கள். அந்தோ பரிதாபம்.
1

21/8/18

இது இறைவனின் செயல்



பெயரைக் கேட்டவுடனேயே புண்ணிய, புனித பூமி ஒரு முறையேனும் போய்ப்பார்க்க வேண்டும் என்று  இதுவரை பார்க்காதவர்களுக்கும்,  மீண்டும் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தை பார்த்தவர்களுக்கும்  எழுப்பும் மந்திரச்சொல் காசி.   காசி என்ற சொல்லுக்கு பிரகாசமானது என்று பொருள். வாரணாசி என்பது அறிவிக்கப்பட்ட பெயராகயிருந்தாலும் உலகம் முழுவதும் இந்த நகரம் அறியப்பட்டிருப்பது காசியாகத்தான்.
வேதங்கள் பிறந்த இடமாக நம்பப்படும்  காசி நகரம் நூற்றுக்கணக்கான சக்திவாய்ந்த கோயில்களால் சூழப்பட்டு ஒரு சக்தி வளையமாகத் திகழ்கிறது இந்தக் கோவில்களின் நடுவில் இருப்பது காசி விசுவநாதர் கோவில். மிகப் பழமையான கோயில் பலமுறை படையெடுப்புகளால் தகர்க்கப்பட்டிருக்கிறது. மூன்று முறை முழுவதுமாக இடிக்கப்பட்டு மீண்டும் எழுந்தது இந்தக்கோவில் என்கிறது வரலாறு... .
1779-ம் வருடம், இந்தூர் மகாராணி அகல்யா பாய் ஹோல்கர் இப்போது இருக்கும் காசி விஸ்வநாதர் கோயிலை எழுப்பினார். மகாராணி கட்டிக்கொடுத்த கோவில் பனாரஸை ஆண்ட மன்னர்களின் கட்டுப்பாட்டிலிருந்தது. அவ்வப்போது சிறு மராமத்து பணிகள் நடந்ததே தவிர இந்தக் கோவிலில் கும்பாபிஷேகம் எதுவும் நடைபெற்றதில்லை.

239 வருடங்களுக்குப் பின்னர் , இப்போதுதான் கடந்த ஜூலை மாதம் 5-ம் தேதி காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகம் முதல் முறையாக நடைபெற்றது என்பதை விட ஆச்சரியமான செய்தி அதைச்செய்திருப்பவர் ஒரு தமிழர். காரைக்குடியருகிலிருக்கும் வலையபட்டியைச் சேர்ந்த திரு சுப்பு சுந்தரம்.   மிகக் குறுகிய காலத்தில் திட்டமிட்டபடி பலர் வியக்கும் வண்ணம் அதைச் செய்து முடித்திருக்கிறார்.அவர் சென்னையிலிருக்கும் ஒரு ஏற்றுமதி- இறக்குமதி நிறுவன அதிபர்.  பல நகரத்தார் கோவில்களின் ஆன்மீக பணிகளில் பங்குகொண்டவர். .

இவர்  காசி விஸ்வநாதர் கோவிலுக்கு அடிக்கடி செல்லும் பக்தர்களில் ஒருவர் இல்லை. காசி நகரில்  பிஸினஸ் எதுவுமில்லை.  பின் ஏன் இவர் இதைச் செய்தார்.?  என்ற நம் கேள்விக்கு ஒரு வார்த்தையில் “தெய்வச்செயல்” என்கிறார்.
“நான் வேறு சில பணிகளுக்காகக் காசி சென்றிருந்தபோது.  காசி விஸ்வநாதர் கோவிலுக்கு அருகிலிருக்கும் அன்னபூரணி கோவிலுக்குச் சென்றிருந்தேன். அது ஆந்திரமக்களால் நிறுவப்பட்டு  மிகவும் பிரபலமாகயிருக்கும் ஒரு கோவில். அந்தக் கோவில் நிர்வாகத்தினர் அதற்கு  3  வெள்ளி கதவுகள்  அமைக்க விரும்பி உதவி கேட்டு என்னை அணுகினர். . நான் சம்மதித்திருந்தேன். ஆனால் கடந்த தீபாவளி சமயத்தில் நான் காசி சென்றபோது   அந்தக் கோவில் நிர்வாகத்தினர் ஒரு உள்ளூர் குடும்பம் அதைச் செய்ய ஏற்றுகொண்டுவிட்டதாகச்,சொல்லி  என் உதவியை வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள். இது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது. கோவில் கையங்கரியத்துக்கு உதவச் சம்மதித்தும் ஏற்க படவில்லையே என்ற எண்ணத்துடன் அருகிலிருக்குக் காசி விஸ்வநாதர் கோவிலில் பிரார்த்தனை செய்து விட்டு பிரஹாரத்தில் சுற்றி வந்து கொண்டிருந்தேன்.
  அந்தச் சமயம் ஒருவர் என்னை அணுகி இந்தக் கோவிலின் ஒரு முக்கிய பணியை  நீங்கள் செய்து கொடுக்க முடியுமா? என்றார்.  முன் பின் தெரியாத அந்த நபர், இன்னும் சொல்லப்போனால் ஏதோ பண உதவி கேட்கப்போகிறவர் என நினைத்து  ஒதுக்கியவரின் இந்த வார்த்தைகள் எனக்கு அதிர்ச்சியாகயிருந்தது.. வாருங்கள் என்று கோவிலின் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றார். அவர் அந்தக் கோவிலின் நிர்வாக அதிகாரி அரசால் நியமிக்கப்பட்ட IAS அதிகாரி என்பது அங்குப் போய் சில நிமிடங்களில் புரிந்தது.. என்ன பணி செய்ய வேண்டும் என்று கூட கேட்காமல் என் உள்மனம் கட்டளையிட்டபடி செய்து கொடுக்கிறேன் என்றேன். எதையும் யோசித்து நிதானமாகப் பேசும் நான்   எப்படி அந்த வார்த்தைகளைச் சொன்னேன் என்பது இன்று  வரை புரியாத ஆச்சரியமான புதிர். 
அவர் கேட்டவிஷயம்  என்னைச் சிலிர்க்க வைத்தது. காசி விஸ்வநாதர் சன்னதி என்பது நான்கு புறமும்  வாயில் கொண்ட ஒரு அறை.. அதன் நடுவில் தரையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பது தான் மூலவர்.. அதற்குத் தான் தினசரி   அபிஷகம், பூஜைகள் எல்லாம். அந்த மண்டபத்தின் மூன்று நுழை வாயில்கள்  வெள்ளி கவசமிட்டவை. வடக்கு புறமிருக்கும் வாசலை வெள்ளிக்கவசமிட்டுக் கொடுக்க முடியுமா? என்பது தான் அவர் கேள்வி
.எங்கோ தமிழ் நாட்டிலிருந்து வந்த என்னை, அதுவும் நான் யார் என்று தெரியாத நிலையில் ஏன் இப்படியொரு கேள்வியைக்கேட்டார்? என்பதையெல்லாம் சிந்திக்காமல் சரி முயற்சிக்கிறேன் என்றேன். வரும் சிவராத்திரிக்குள் முடிக்க வேண்டும் என்றார். அவர், 
மற்ற மூன்று வாசல்களும் 1841ல் போன்ஸ்லே குடும்பத்தினர்  அமைத்துக்கொடுத்திருக்கின்றனர். . இத்தனை நாளும் இந்த வாசலுக்கு கவசமிடவேண்டும் என்று எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.  எனக்குத்தான் அந்த வாய்ப்பைக் காசி விஸ்வநாதர்  தருகிறார் என்று எண்ணினேன்.  காரைக்குடியிலிருந்து நமது வெள்ளி ஆசாரிகளை அழைத்துப் போய் அளவுகள் எடுத்தோம்.  முதலில் எளிதாக முடித்துவிடலாம்  என்று சொன்ன ஆசாரிகள் வேலைத்தொடங்கியவுடன்  அதன் கஷ்டத்தை உணர்ந்தனர். ஒவ்வொரு சதுர அங்குலமும் சலவைக்கல்லில் செய்யப்பட்ட பூ வேலைகளுடன் கூடிய அந்த வாயிலுக்கு வெள்ளிக்கவசமிடுவது அத்தனை சுலபமாகயிருக்கவில்லை. இரவு பகல் எப்போதும் அந்தப்பணியைச் செய்ய  அந்த கர்ப்பகஅறையின் இரண்டு வாசல்களை இணைத்து  மறைத்து  வசதி செய்து கொடுத்தனர். பணி முடியும் வரை வரை நான் அவர்களுடன் அந்த கர்ப்பகிரகத்தில் விஸ்வநாதர் அருகிலேயே அமர்ந்திருந்திருந்தேன். விஐபிகளுக்கு கூட  அதிக பட்சம் 20 நிமிடங்கள்  ஒதுக்கப்படும் அந்த சன்னதியில்  இரவு பகலாக. இருக்கும் பாக்கியம் நான் பெற்றேன்.   தெய்வ அருளால் சிவ ராத்திரிக்குள் அந்தப் பணி முடிந்தது. 
இந்தப் பணியில்  மிகுந்த ஈடுபாட்டுடன் நேரடியாக நானே கவனித்துச்செய்து  கொண்டிருந்த கவனித்த கோவில் பண்டாக்களும் அதிகாரிகளும் மற்றவர்களும் மிகவும் நெருக்கமானார்கள். அன்புடன் பழகினார்கள். பணிமுடிந்தபின்னர் ஒரு நாள் பேசிக்கொண்டிருந்த போது உலகப்புகழ் பெற்ற இந்த கோவிலில் சுத்தம் சரியாக பேணப்படவில்லை.அடிப்படை வசதியான குடிநீர் கூட இல்லை. இதற்கு நீங்கள் ஆவன செய்ய வேண்டும் என்றேன்.  நமது மீனாட்சியம்மன், ஶ்ரீரங்கம் கோவில்களை எப்படி பாரமரிக்கிறோம் என்று சொன்னேன். படங்களைக் காட்டினேன்.  ஆச்சரியபட்டுபோனவர்கள் இதை இங்கு உங்களால் செய்ய முடியுமா? என்றார். 
ஒரு கோவில் என்பது தொடர்ந்து நல்ல நிலையில் பராமரிக்கப் பட வேண்டும். ஒரு முறை செய்துவிட்டு ஆண்டுக்கணக்கில் கவனிக்காமல் விட்டுவிடக்கூடாது என்பதற்காகத் தான்  தமிழகத்தில் கோவில்கள் கும்பாபிஷகம் செய்யப்படுகிறது என்றேன். அது என்ன? என்றுகேட்டவர்களுக்கு நமது கும்பாபிஷகம் பற்றி விளக்கிச்சொன்னேன்.  காசிக்கோவிலுக்கும் அதைச்செய்ய ஆர்வம்  காட்டிய அவர்கள் அரசிடமும் அவர்களது நிர்வாகக் குழுவிடமும் ஒப்புதல் பெற இப்படிச் செய்ய வேண்டிய முறைகள் பற்றிய ஆவணங்கள்  இருக்கிறதா? என்று கேட்டார்கள். பிள்ளையார் பட்டி தலைமை சிவாச்சாரியார் சிவ ஶ்ரீ பிச்சை குருக்கள் சிவன் கோவிலில் எத்தனை வகை எந்த மாதிரி கோவில்களுக்கு எந்த முறையில் கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்ற விபரங்கள் கோவில் ஆகம விதிகளில் சொல்லப்பட்டிருப்பதையும் அது பல நூற்றாண்டுகளாகத் தமிழக கோவில்களில் பின்பற்றபட்டுவருவதையும் ஒரு ஆவணமாக்கிக்கொடுத்தார். அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அனுப்பிவைத்தேன்.
சில நாட்களில் காசி விஸ்வநாதஎ கோவில் தமிழக தொழிலதிபர் சங்கர சுப்புவால் தமிழகக்கோவில்கள் முறைப்படி  கும்பாபிஷேகம் செய்யப்படவிருக்கிறது என்ற செய்தி உள்ளூர் தினசரிகளில் வந்திருப்பதாக நண்பர் போன் செய்தார். “மறுநாளே அரசிடமிருந்து  கும்பாபிஷகப் பணிகளைச்  செய்யும் பொறுப்பை  எனக்கு வழங்கி  கடிதம் வந்தது.  எல்லாமே கனவைப்போல இருந்தது எனக்கு” என்கிறார்.  பலமுறை காசி காரைக்குடி சென்னை என்ற தொடர்ந்த முக்கோணப் பயணங்களின் போது இந்தப் பணிக்கு   அவசியமானவற்றை சென்னையிலிருந்து  செய்தவர் இவரது மனைவி  திருமதி அன்னபூரணி. 
ஒரு வட நாட்டுக் கோவிலில் அதுவும் காசி போன்ற பண்டாக்கள் ஆதிக்கம் செலுத்தும் கோவிலில் அவர்களுக்குப் புதிதாக இருக்கும் விஷயங்களை எப்படி இவர் அவர்களை ஏற்க வைத்திருக்கிறார்  என்பதை அறிய ஆச்சரியமாகயிருக்கிறது.  கும்பாபிஷேகத்துக்காகத்  தமிழகத்திலிருந்து 50க்கு மேற்பட்ட சிவாச்சாரியார்களை  அழைத்துப்போயிருந்தாலும் 10 ஹோம குண்டங்களுடன்  யாகசாலை அமைப்பதிலிருந்து  முதல் குடமுழுக்கு தீர்த்தம் விடுவது வரை அனைத்துப் பணிகளிலும் அவர்களை முன்னிலைப்படுத்தியிருக்கிறார்.   கும்பாபிஷேகத்திற்காக யாக சாலையில் பூஜிக்க கங்கையிலிருந்து  கலசங்களில் நீர் கொண்டுவருவதிலிருந்து ஹோமங்களில் முதல் அக்னியிடுவது வரை  காசி கோவில் பண்டாக்கள் தான் துவக்கியிருக்கிறார்கள். பின்  நம்மவர்கள் தொடர்ந்திருக்கிறார்கள். இந்தச்செயல்கள்  அவர்களுக்கு நமது கோவிலுக்குத்தான்  நம் மூலமே இவர்கள் செய்கிறார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. ஒத்துழைத்திருக்கிறார்கள்..
இவர்களைபோலவே அந்தக் கோவிலின் நேர்மையான அதிகாரி ,விஷால் சிங்  மற்றும்  மாநில அளவில் கோவில்களின் தலமைப்பொறுப்பிலிருந்த கமிஷனர் தீபக் அகர்வாலும்  செய்த உதவிகளும் அளித்த ஆதரவும் மறக்க முடியாத ஒன்று என்கிறார் இவர் 
யாக சாலை அமைப்பு,  ஹோம குண்டங்கள், தினசரி  பூஜைகள் எல்லாம்  உள்ளூர் மக்களின் ஆர்வத்தை மேலும்  அதிகமாக்கி    பணிகளை எளிதாக்கியிருக்கிறது.. மாயவரத்திலிருந்து யாக சாலை அமைக்க வந்தவர்கள் கேட்ட பெரிய இடத்தைக் கோவிலுக்குள் ஒதுக்க முடியவில்லை.   கோவில் வாயில் எதிரே பல ஆண்டுகளாகக் கொட்டி கிடந்த மண்ணும் குப்பையும் ஒரே இரவில் எடுக்கப்பட்டு  சுத்தம் செய்யப்பட்ட இடத்தில் யாகசாலை அமைக்கப்பட்டது.  இது  இந்தப்பணியில் உள்ளூர் நிர்வாகத்தின் ஆர்வத்துக்குச் சாட்சி.  மேலும்   அந்த இடத்தில் அழகாக நிமாணிக்க பட்ட யாகசாலை குண்டங்கள் அப்படியே இருக்க வேண்டும் எனப் பக்தர்கள் விரும்பியதால் அந்த இடத்தில் அது இன்னும் தொடர்கிறது. கோவிலுக்கு வரும் பக்கதர்கள் அதையும்  வணங்குகிறார்கள் கலச தீர்த்தம் கங்கையிலிருந்து  தமிழ் நாட்டுமேளதாளங்களுடன்  கொண்டு வரப்பட்டபோது மலர் தூவி மக்கள் வரவேற்றிருக்கிறார்கள்.. 
பிரச்சனைகள் எழாமல் இல்லை.  காசி விஸ்வநாதர் கோவிலின் பாதுகாப்பு  துணை ராணுவத்தினர் வசம் இருக்கிறது. கோவிலின் கோபுரம் முழுவதும் ஒரு டன்  தங்கத்தாலானது என்பதால் மட்டுமில்லை மிக அருகிலேயே மசூதியும் இருப்பதால் செக்யூரிட்டி கெடுபிடிகள் எப்போதுமே அதிகம். கும்பாபிஷகத்துக்காக எல்லா ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருந்த  போது கோபுரகலசத்துக்கு  அருகில் செல்ல படிகள் அமைக்க சாரங்கள் அமைக்க  முயன்ற போது அனுமதி.  மறுக்கப்பட்டிருக்கிறது. மேலே போய் ஏன் தண்ணீர் விடவேண்டும்? கிழேயிருந்து  ஒரு ஹோஸ் பைப்மூலம் பீச்சலாமே என்ற யோசனை வேறு.. சொல்லியிருக்கிறாகள் பாதுகாப்பு அதிகாரிகள். கலங்கிப்போனார் சுப்பு சுந்தரம்.. அதிகாரியிடம் விவாதம்   செய்து காரியம் கெட்டுவிடாமல் அவரிடம் மென்மையாக எடுத்துச் சொல்லியிருக்கிறார். நீண்ட உரையாடலுக்குப்  பின்னர் அனுமதிக்கப்பட்டது.
 ஆனால் விதிக்கப்பட்ட நிபந்தனை  சாரத்தின் எந்தக் கம்பமும் கோபுரத்தின் மீது படக்கூடாது.  அந்த அளவு நேர்த்தியாக சாரம் கட்டுபவரை இந்தக் காசியில் எப்படித் தேடிக்கண்டுபிடிப்பது? என்ற குழம்பிய நிலையில் இருந்தவரிடம் வந்து பேசிய ஒருவர்  “கவலை வேண்டாம்  பாதுகாப்பு அதிகாரிகள் சொல்லுவது போல் நான் செய்துகொடுக்கிறேன்” என்ற சொன்ன போது அது காசி விஸ்வநாதரின் வார்த்தைகளாகத்தான் என் காதில் கேட்டது. என்கிறார் சுப்பு சுந்தரம்.   பின்னால் கோவில் அதிகாரிகள் மூலம் அறிந்த செய்தி அவர் நகரத்தின் மிகப்பெரிய காண்டிராக்டர் தற்செயலாகக் கோவிலுக்கு வந்தவர் பாதுகாப்பு அதிகாரியின் உடையாடலைக் கேட்டு உதவமுன் வந்தவர் என்பது. இரண்டே நாளில் மிக அழகாகக் கோபுரத்தின் எந்தப்பகுதி மீதும் படாமல்,  வசதியாக ஏறிச்செல்ல அகலமான படிகளுடன்  சாரம் அமைக்கபட்டுவிட்டது.
பாதுகாப்பு காரணங்களால் குறிப்பிட்ட சிலருக்கே அனுமதி அளிக்கப்பட்ட அந்த கும்பாபிஷம் முடிந்தவுடன் மக்கள் அன்று இரவு முழுவதும் அனுமதிக்கப்பட்டனர்.  இந்த கும்பாபிஷகத்துக்காக பக்தர்களிடம் நன்கொடை பெறப்படவில்லை. யாகசாலைக்குப் பார்க்கவந்த பத்தர்கள் லட்சகணக்கில்வழங்க முன்வந்த போதும் ஏற்க வில்லை. பெரும் பகுதியை சுப்பு சுந்தரம் ஏற்றிருக்கிறார்.  தமிழக தொழில்நிறுவனங்கள் கேசிபி, முருகப்பா குழுமம் ஈரோடு சிவகுமார் குடும்பத்தினர்   சலவைக்கல் தளமிடுவது,  யாக சாலை அமைப்பு,  சுகாதார வசதிகள் போன்றவகைகளில் உதவியிருக்கிறார்கள்.

காசி விஸ்வநாதர் சன்னதியருகே இருக்கும் அன்னபூரணியின் கோவிலின் நுழை வாயிலிலிருக்கும்  ஒரு கல்வெட்டு  100  ஆண்டுகளுக்கு முன்னர் நகரத்தார் தினசரி அன்னதானம் வழங்க நிறுவிய ஒரு  அறக்கட்டளையின் விபரத்தைசொல்லுகிறது.  அந்த நகரத்தார் பாரம்பரியத்தை இந்த நூற்றாண்டில் தொடரும் வாய்ப்புப் பெற்ற சுப்பு சுந்தரம் தம்பதியினருக்கு நம் வாழ்த்தைச்சொன்னபோது. பணிவுடன்  “இந்தப்பெரிய செயல் எங்களுடையதில்லை ஒவ்வொரு கட்டத்திலும் உதவிசெய்து கருவியான  எங்கள் மூலம் ஈசன் செய்த செயல்தான் இது” என்கிறார்கள்  சுப்பு சுந்தரம், அன்னபூரணி தம்பதியினர்.


9/8/18

தேடல்

தேடல் 

“எமோஷனல் ஆகாமல் அழுவதை நிறுத்திவிட்டுத் தெளிவாகச்சொல்லுங்கள். நீங்கள் சொல்வதை வைத்துத்தான் நாங்கள் உதவ முடியும்”

உதவிப் போலீஸ் கமிஷனர் இந்துமதியின் கம்பீரமான உருவத்துக்கும் விறைப்பான அந்த யூனிபார்முக்கும் சம்பந்தமே இல்லாமலிருந்தது அந்த மென்மையான குரல். அந்தக் குரலில் தெரிந்த கனிவு நம்பிக்கையத்தரத் தன்னைச் சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு பேச ஆரம்பித்தார்  சுமிதா,

“தினமும் போல இன்றைக்கும் டிரைவர் அடையாரிலிருக்கிற ஸ்கூலுக்கு குழந்தையை அழைத்துவரக் காரை எடுத்துக்கொண்டு 2 மணிக்குப் போனார். ஆனால் வழக்கமாகக் குழந்தை வெயிட் பண்ணும் இடத்தில் இல்லாதால் கொஞ்ச நேரம் காத்திருந்து பார்த்திருக்கிறார். வராததால் ஸ்கூல் உள்ளே கிளாஸ் ரூமில் போய்ப் பார்த்திருக்கிறார். அங்கு கிளின் பண்ணிக்கொண்டிருந்த ஆயா எல்லாப்புள்ளைங்களும் அரை மணி முன்னதாகவே போய்விட்டதாகச்சொல்லியிருக்கிறார். அருகில் எங்கும் குழந்தை இல்லாதால் அப்பாவிற்குப் போன் செய்திருக்கிறார். நானும் அப்பாவும் உடனே ஸ்கூலுக்கு பதறி அடித்துக்கொண்டு போனோம். அதற்குள் ஸ்கூலில் எல்லோரும் போய்விட்டார்கள் எச் எம் ஊரில் இல்லை. இருக்கும் இரண்டு டீச்சர்களூம் பதட்டத்தில் இருந்தார்கள். அப்பா எல்லா கிளாஸ் ரூம்களையும் திறந்து பார்க்கச்சொன்னார். நாங்கள் பார்த்துவிட்டோம் என்று சொன்னவர்களிடம் தான் பார்க்கணும் என்று சொல்லிச் சத்தம் போட்டார். குழந்தைய எங்கும்  காணலே.
 “மேடம் எப்படியாவது கண்டுபிடிச்சுக்கொடுங்க மேடம் என்று முடிப்பதற்குள் சுமிதாவிற்கு அழகை பீரீட்டது
.“கவலைப்படாதீர்கள் சுமிதா வீ வில் டூ தெ பெஸ்ட்,  ஐ ஆம் ஆல்சோ ஏ மதர்” என்று சொல்லிக்கொண்டே அந்த ஐபிஎஸ் அதிகாரி தன் முன்னிருந்த கம்யூட்டரில் ஏதோ டைப்பண்ணி கொண்டிருந்த படியே
“சார் உங்க பெயர் என்ன சொன்னீங்க?
“கோபாலன்.- மேடம்” என்று சொன்ன அவரின் தலை வழுக்கையால் அகலமாகத் தெரியும் நெற்றியில் ஒற்றைச் சிவப்பு கீற்று நாமம். பளிச்சென்று இருந்த முகத்தில் கவலையின் தீவிரம் தெரிந்தது. 
 “உங்களுக்குத் தொழில் ரீதியாக ஏதாவது போட்டியாளர்கள் பிரச்சனை? எதிரிகள்? யாராவது?” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே “அதெல்லாம் கிடையாது மேடம். நான் என் தொழிலில் மட்டுமில்லை என்னை அறிந்தவர்களுக்கெல்லாம் பிரண்ட்தான்,  40 வருஷமா எழுத்தாளர்களுடைய புத்தகங்களைப் பதிப்பிக்கும் கம்பெனி என்னுடையது. பிஸினஸில் எந்தப் பிரச்சனையும் கிடையாது”
உங்க டிரைவர் எப்படி?
“ரொம்ப நல்லவன் எங்களிடம் எழு வருடமாக இருக்கிறார். இந்தக் குழந்தையிடம் தனிப்பாசம்”
“குழந்தையை யாராவது கடத்தியிருப்பாங்களா மேடம்?”
என்று பதறிய சுமிதாவிடம். “ரூல் அவுட் பண்ண எல்லா ஆங்கிளிலும் தான் பார்க்க வேண்டும்... ம்ம் பார்க்கலாம் அமைதியாக இருங்கள்” என்ற உதவிக்கமிஷனர் இன்ட்ர்காமில் யாரையோ அழைத்தார்.
வினாடிகளில் உள்ளே நழைந்த அந்த யூனிபாரம் அணியாத அதிகாரி எஸ் மேடம் என சல்யூட் செய்தார்
“ஶ்ரீதர் இவங்களோடு போய் வீட்டில் இருங்க. செல்போன்,லேன்ட் லைன் எல்லாவற்றையும் டிராக்கிங்லே போடுங்க, அப்டேட் கொடுங்க  என் பெர்சன்ல் லயனுக்கு வாங்க. வயர்லெஸ் வேண்டாம்
.
“நீங்க வீட்டில் போய் இருங்க இவர் கூட இருப்பார் அவர் சொல்லுவதை கவனமாக ஃபலோபண்ணுங்க. யாரிடமும் எதுவும் பேச வேண்டாம் மீடியாக்காரங்க கிட்ட எதுவும் பேசாசாதீங்க.. ஸ்கூலிருந்து எதாவது சொன்னா எங்கிட்ட அவங்களை பேசச்சொல்லுங்கள்”. எனப் பட படவெனக் கட்டளை மாதிரி சொல்லிக்கொண்டே போனார். உதவிக் கமிஷனர் இந்துமதி.
“உங்கள் டிரைவர் வந்திருக்கிறாரா? அவர் இங்கேயே இருக்கட்டும். நீங்கள் வீட்டில் இருங்கள் எதாவது போன் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்று ஶ்ரீதர் சொல்லுவார்”.
குழந்தைபேர் என்ன சொன்னீங்க? ம்ம்.. பிரியா இல்லே 5 வயசு. ஒ.கே அவங்க படம் இருக்கா? சுமிதா உடனே தன் செல்போனிலிருந்த கடந்த வாரம் ஸ்கூல் பங்ஷன் டான்ஸில் எடுத்த படத்தைக் காட்டினார்.” இது வேண்டாம் நார்மல் படம் முகம் தெளிவாக இருக்கும் படம் கொடுங்க”
பரவென்று போனில் தேடி ஒரு படத்தைக்காட்டியவுடன். ஓகே இதை எனக்குப் போனில் அனுப்புங்க என்ற சொல்லிவிட்டு அலறிக்கொண்டிருந்த வயர்லெஸ் போனை எடுத்துப் பேச ஆரம்பித்தார்.
தாங்கள் கிளம்ப வேண்டும் என்பதை உணர்ந்த அப்பாவும் பெண்ணும் எழுந்தனர்
“மேடம் எப்படியாவது...” என்று மறுபடியும் அழத்துத்வங்கிய சுமிதாவைப்பார்த்தவுடன், வயர்லெஸ்போனில் “ஜஸ்ட் மினிட்” என்று சொல்லிவிட்டு அவர் தோளைத்தட்டி “அண்டர்ஸ்டான்ட். வீ ஹவ் டு வெயிட்.. பீ போல்ட் அன்ட் கோஆப்ரேட்”, என்று சொன்னார் இந்துமதி.
“மேடம் ஒரு விஷயம் இங்கே வர முன்னாடி கிளாஸ் மதர்ஸ் வாட்ஸ் குருப்பில் பிரியா வீட்டுக்கு வரவில்லை என்று போட்டிருக்கிறேன்.”
ஓ குட். அவர்கள் யாரவது மெஸெஜ் அனுப்பினா பாருங்க. ஆனா போனில் பேச வேண்டாம்
அவர்கள் வெளியேபோனதும். உள்ளே நுழைந்த நபரிடம்
“ஷாஜஹான் டிடெட்யல்ஸ் எல்லாம்  கேட்டிங்கிங்க இல்லே?”. என்றார். இந்துமதியிடம் புகார் கொடுக்கவருபவர்கள் பேசுவது பக்கத்து அறையிலிருக்கும் அதிகாரிகளுக்கு ஸ்பீக்கரில் கேட்கும் வசதி செய்யப்பட்டிருக்கிறது.. விஷயங்களை மறுபடி சொல்லும் நேரத்தைத் தவிர்க்கவும், அதேநேரத்தில் விபரங்களைக் கேட்டுக்கொண்டிருக்கும்போதே  அவர்கள் பார்வையில் அதை அலசவும் இந்துமதி செய்திருக்கும் ஏற்பாடு.இது.

“மேடம் இவங்க பெரிய பப்ளிஷர்ஸ் மேடம். ஜெயகாந்தன் போன்ற பெரிய ஆளுங்கள் புத்தகமெல்லாம் போட்டிருக்காங்க. நம்ப பழைய டிஜிபி அம்மா புத்தகங்கள் கூட போட்டிருக்காங்க.பெரிய வசதியானவங்க. இப்ப பக்தி புத்தகம் நிறைய போடறாங்க.

“ஓ அப்படியா? வந்த காரைப்பார்த்தாலே புரியது ஐ அம் சஸ்பெட்டிங் கிட்நாப்பிங் ஃபொர் கெயின்.. உங்க டீமை இறக்குங்க. டிரைவரைத் தரோவா விசாரிங்க. அவன் வழியா யாராவது ஆப்ரேட் பண்ணற பாசிபிளிட்டி இருக்கிற ஆங்கிளையும் பாருங்க.. ஸ்கூல் ஸ்டாப்,, அப்ப ஸ்கூலுக்கு வந்த கார்களின் வேன்களின் டிரைவரைங்க எல்லாரையும் டிரேஸ் பண்ணுங்க கியூக், கியூக்” என்று சொன்னவடனேயே
“யெஸ் மேடம். நீங்க பேசிட்டிருக்கும்போதே டீமை ரெடிபண்ணிட்டேன். குழந்தையின் படத்தைக் கன்ட்ரோலுக்கு அனுப்பிடேறேன். மீடியா உள்ளே நுழையாம லாக் பண்ணிடலாம்” என்றார் ஷா என்று பலரால் அழைக்கப்படும் ஷாஜஹான்.. கிரைம் இன்டலிஜென்ஸில் அவரது 20 ஆண்டு அனுபவம். மிடுக்குடன் பேசியது
.
****
“குழந்தை 3 மணி அளவில் காணாமப்போயிருக்கு, நார்மலா இந்த மாதிரி கேஸ்கள்ல 3 அல்லது 4 மணி நேரம் கழித்துத்தான் அவங்க பேசுவாங்க. இப்ப மணி 6 ஆகுது. எப்ப வேணா கால் வரலாம்.நீங்க இரண்டுபேரும் தெரிந்தவங்க போன் வந்தாலும் கூட எடுக்கக் கூடாது. எதாவது புது நம்பர் வந்தா எனக்குச் சிக்னல் கொடுங்க நான் சொன்னப்புறம் எடுங்க. நிதானமா பேசுங்க. நான் எழுதிக் காண்பிக்கிறமாதிரி பேசுங்க போதும். கன்ட்ரோல் ரிக்கார்ட் பண்ணிக்கொண்டே போன் வரும்  இடத்தை டிரேஸ்பண்ணுவாங்க. அதுக்கான டைம் கிடைக்கிறவரை நீங்க பேசிக்கிட்டே இருக்கணும். புரியிதுங்களா? “
“மேடம் வேண்டாம்- போன் வந்தா நீங்க பேசுங்க சார்”.
என்று சொன்ன ஶ்ரீதரிடம் “கிட்நாப்பாகத்தான் இருக்குமுன்னு முடிவுசெஞ்சுட்டிங்களா?” என்றார் கோபாலன்
இல்லை அந்த ஆங்கிளீலிலும் பார்க்கிறோம். நார்மல் போலீஸ் செர்ச்சும் ஆரம்பிச்சிட்டாங்க
அந்த ஏர்கண்டிஷன் அறையில் மேஜை மீது இருக்கும் இரண்டு செல் போன்களையும் பார்த்தபடியே மூன்று பேரும் உட்கார்ந்திருக்கின்றனர். கோபாலன் சஸ்ரநாமம் சொல்லஆரம்பித்திருந்தார். சுமிதா அழுகையை அடக்கமுடியாமல் தவிக்கிறார். ஶ்ரீதர் தன் போனில் ஏதோ படித்துக்கொண்டிருக்கிறார்.’
***   
“ரகு எங்கேயிருக்கீங்க? எவ்வளவு நேரமா டிரைப் பண்றேன் தெரியுமா? சீக்கிரம் வீட்டுக்கு வாங்க. சம் ஸ்டேரெஞ் திங்கஸ் ஆர் ஹாப்பனிங்” என்று லதா தன் கணவரைப் போனில் அழைத்தார்.
“ஐ ஆம் ஆன் மை வே” வீட்டில் என்ன ஆச்சரியம்?. குழாயில் தண்ணி வந்துவிட்டதா? என்று சிரித்த கணவனிடம். 
“ரகு நோ ஜோக்ஸ் பிளிஸ் பீ சீரியஸ். சீக்கிரம் வாங்க பயமாகயிருக்கு” என்று பதறுகிறார்.     ரகு எப்போதுமே ஜோவியலாகப் பேசும் மனிதர். தினமும் பேஸ்புக்கில் எழுதுபவர். அதை வியாசம் என்று சொல்லுவார்,
“ஓகே.. ஒகே 5 நிமிஷ ட்ரைவில் தான் இருக்கேன். வரேன்”
.
ரகுநாதன் லதா இருவரும் ஆடிட்டர்கள். ரகு மேனேஜ்மென்ட் கன்ஸ்ல்டண்ட் லதா இன்கம் டாக்ஸ் விவகாரங்களில் எக்ஸ்பர்ட். நாள் முழுவதும் பிசி. அண்ணா நகரில் தனி வீடு, ஆளுக்கு ஒரு பெரிய கார் வாங்குமளவுக்கு வருமானம்.
“என்ன விஷயம்? ஏன் மிரண்டமாதிரி இருக்கே? என்று கேட்டபடியே உள்ளே நுழைந்த ரகுநாதன் சோபாவில் தூங்கிக்கொண்டிருந்த அழகான குழந்தையைப் பார்த்து ஹய் இந்தக் குழந்தை யாரு?”

சாயங்காலம் சாந்தி வேலைக்கு வரும்போது “அம்மா நம்ம காரிலே இந்தக் குழந்தை அழுதுகொண்டிருந்தது”ன்னு சொல்லி உள்ளே தூக்கிக்கொண்டுவந்தாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை, யார் என்ன என்று எதுவும் தெரியல்ல. உள்ளே வந்ததும் “நீங்க அம்மா பிரண்டா? என்று மடியில் உட்கார்ந்து கொண்டுவிட்டது”. ரொம்ப நாள் தெரிந்தமாதிரி ஒட்டிகொண்டுவிட்டது
.
நம்ம வித்தியாவை  20 வருடத்துக்கு முன்னால் குழந்தையாக பார்த்த ஞாபகம் வந்தது. . ஏதாவது சாப்பிடிறியான்னு கேட்டேன் சாக்லேட் காம்பளான் என்றது.  அது நம்மகிட்ட இல்ல.. அதனால் சாந்தியை வாங்கிக் கொண்டு வரச்சொல்லிப் போட்டுக்கொடுத்தேன். மெள்ளக் குடித்துவிட்டு என்னவோ பேசிக்கொண்டேயிருந்தது. இப்பத்தான் தூங்கறது. இன்னும் மழலையே போகல்ல பேசறது புரியவே இல்லை. ஆனா நன்னா பேசுறது. யாருடைய குழந்தையோ?. பேர் ஒரு சமயம் தேவி என்கிறது ஒருசமயம் பிரியா என்கிறது. வேறு எதெல்லாமோ சொல்லுகிறது எனக்குப் புரியவில்லை.
“அதைவிட நான் பயந்து போன விஷயம் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருத்தன் நம்ப வீட்டு வாசலையே பார்த்துக்கொண்டிருந்தான். நான் கேட்டுக்குப் போனவுடன் போய்விட்டான். கொஞ்ச நேரம் முன்னால் மறுபடியும் வந்தான் நான் ஜன்னல் இடுக்காலே பார்த்தேன் கொஞ்ச நாழியிலே போயிட்டான். அவன் கொண்டுவந்து விட்டிருப்பானோன்னு பயமா இருக்கு”,
என்று ஒரே மூச்சில் சொன்ன லதாவிடம் “கூல். காரிலிருந்து இந்தக் குழந்தையை சாந்தி தூக்கியதை நீ பார்த்தையா?”

“இல்லை அவள் உள்ளே கொண்டுவந்தப்புறம் தான் சொன்னாள். வழக்கம் போல கார் கதவைப் பூட்டாமல் வந்து விட்டேன் போலிருக்கிறது.
“அப்போ அந்த மோட்டார் சைக்கிள் ஆள் இருந்தானா?
“நான் பார்க்கல ரகு”
இது சீரியஸ் மேட்டர் போலீஸ்ல ரிப்போர்ட் பண்ணி குழந்தையை ஹேண்ட் ஒவர் பண்ணனும்.  இந்த ராத்திரி நேரத்தில் லோகல் ஸ்டேஷனில் குழந்தையை விடுவது சேப் இல்லை யாரவது ஹைர் அப்பிடம் பேசிவிட்டு காலைவரை வைத்திருப்பது தான் பெட்டர் என்று சொல்லியபடியே ரகு தன் போன் காண்டாக்ட்டில் ஒரு நம்பரைத் தேட ஆரம்பித்தார்,

சட்டென்று முழித்துக்கொண்ட குழந்தை ரகுவைப்பார்த்து “ஹலோ அங்கிள்” என்றது. சற்றே திடுக்கிட்ட ரகு ஹலோ என்றார். மிகசுவாதீனமாக அவர் மடியில் உட்கார்ந்து கொண்ட அந்தக் குழந்தை அப்பா எப்ப வருவாங்க? என்றது.

சீக்கிரமா என்று சொல்லியபடி அந்தக் குழந்தையிடம் பேசத்துவங்கினார். ரகு. “நீ எந்தக்கிளாஸ்? உஷா மிஸ்தானே உங்க மிஸ்?
“நோ அவங்க ராதிகாவோட மிஸ். எங்க மிஸ் ..” என்று புரிந்துகொள்ள முடியாத ஒரு பெயரை மழலையில் சொல்லியது. இதில் நடுவில் இங்கிலிஷ் வேற.
“வந்ததிலிருந்து நான் கேட்டுப்பார்த்திட்டேன் ஸ்கூல் பேர் டிச்சர் பேர் அப்பா பேர் எதுவும். அது சொல்லறது நமக்குப் புரியல்ல. ஆனா சமத்துக்குழந்தை. புது இடங்கிற பயமே இல்லாமல் பேசுகிறது”. என்றார் லதா
“இன்னும் கொஞ்சம் ட்ரைப்பணலாம். கண்டுபிடிச்சிடலாம். பொறுமையாக இரு”. என்று சொன்ன மேனேஞ்மெண்ட் குருவான ரகுவிற்கு இது ஒரு புதுமாதிரியான சாலென்ஞ்.
.
 ரகு போனில் கூப்பிட்ட போலீஸ் நண்பர் ஒரு அவரசகூட்டத்திலிருப்பதாகவும் முடிந்தவுடன் கூப்பிடுவதாகவும் எஸ்மெஸ் அனுப்பியிருந்தார். நகருக்கு நாளைப் பிரதமர் வரப்போவதும் அதற்கான செக்யூரிட்டிகளுக்கு நண்பர் தான் பொறுப்பு என்பதும் அப்போது தான் ரகுவிற்கு நினைவுக்கு வந்தது
டிவியில நீயூஸ் பார்க்க ஆரம்பித்த ரகுவின் மடியில் உட்கார்ந்து கொண்ட குழந்தை “டாம் அன்ட் ஜெரி போடுங்க அங்கிள்” என்றது.
“நீயூஸ்பார்த்துட்டு பார்க்கலாமா?
“ஓகே” என்றது குழந்தை. தந்திச் சேனலில் 9 மணிச்செய்தியில் சென்னைப் புத்தக கண்காட்சியில்   முதல் நாள் மாலை   விருதுகள் அளிக்கப்பட்ட விழா. ஓடிக்கொண்டிருந்தது. இந்த ஆண்டின் சிறந்த பதிப்பாளர் விருது என அறிவிக்கப்பட்டபோது அந்த நடிகரிடம் ஷில்ட் வாங்கியவரைப் பார்த்ததும் குழந்தை “ஹை தாத்தா” என கத்தியது. உடனே ரகுவும், லதாவும் குழந்தையிடம் பேச ஆரம்பித்தனர்.

**லேண்ட் லயன் மூன்று முறை மணியடித்து முடிந்தவுடன் தன் கையிலிருந்த கருவியில் ஒரு பட்டனை அமுக்கி அலர்ட் என்ற சொன்ன ஶ்ரீதர் சில வினாடிகளில் எடுத்துப் பேசுங்க  என்றார்.
சற்றே தயங்கியபடி போனை எடுத்தார் கோபாலன்
“மிஸ்டர் கோபாலனிருக்கிறாரா?”
“நீங்க யார் பேசுறிங்க?”
அண்ணா நகரிலிருந்து பேசறேன், கோபாலனிடம் முக்கியமான ஒரு விஷயம் அவசரமாகப் பேசணும்.
ஶ்ரீதர் கையை உயர்த்திக் காட்டியவுடன்.
“சொல்லுங்க நான்தான் கோபாலன் என்ன விஷயம்.?.”

“சார் உங்க பேத்தி பிரியாவைத்தேடறீங்களா? எங்க கிட்ட பத்திரமா இருக்கா”.. . முடிப்பதற்குள் போனை ஶ்ரீதர்  வாங்கி தொடர்ந்து பேசுகிறார்.
சில நிமிடங்களில் ‘ பேபி பிரியா டிரேஸ்ட் .அன்ட் ஸேப்’ என்ற செய்தி உதவிக்கமிஷனருக்கும் கன்ட்ரோல் ரூமுக்குச் பறக்கிறது
5 நிமிடத்தில் அண்ணா நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர். ரகுவின் வீட்டு வாசலில். அவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே உதவிகமிஷனர் இந்துமதியின் பரிவாரத்தின் ஜீப், கார்கள். பின்னாலேயே சுமிதாவின் கார். அந்தச் சின்னத் தெரு போலீஸ் கார்களால் நிறைகிறது. தூங்கப்போய்விட்ட அந்த அமைதியான தெரு பரபரப்பாகிறது
.
தாத்தாவைப் பார்த்தது ஓடிவந்தபிரியாவை வாரித்தூக்கிக்கொண்டார். கோபாலன்
எப்படிம்மா கண்ணு இங்கே வந்தே?
“நான் வரலைத் தாத்தா இந்த ஆன்ட்டிதான்” .என்று தன் மொழியில் எதோ சொல்ல “இல்லை குழந்தை தெரியாமல் சொல்லுகிறது” என்று லதா ஆரம்பித்தபோது இந்துமதி கையை உயர்த்தி “குழந்தை பேசட்டும்” என்றார். அவரது கண்களில் தெரிந்த ‘கவனியுங்கள்’ என்ற கட்டளைக் கவனித்த போலீஸ் குழு அலர்ட்டாக அந்தக் குழந்தை சொல்வதைக் கவனிக்கத்தொடங்கியது
“ஸ்கூல டிரைவர் சோமு அங்களை கார்கிட்ட காணும் தாத்தா சரி வருவார்ன்னு நினைச்சு . நான் உள்ளே ஏறி வாட்டர் குடிச்சுட்டு படுத்துண்டேன் தாத்தா. அப்பறம் இந்த ஆண்ட்டி இல்ல,- அம்மா பிரண்டு. ரொம்ப நல்ல ஆண்ட்டி. 2 கிட்கேட் சாக்லேட், காம்ப்ளான் எல்லாம் கொடுத்தாங்க.. அங்கிள் தான் உன் மாதிரியே டாம் அன்ட் ஜெரி போடாம நியூஸே பார்க்கிறார் “, என்றது

உள்ளே நுழையும் போதே கவனித்த ஒரு விஷயம் மின்னலடிக்க இந்துமதி குழந்தையை வாசலுக்கு அழைத்து இதில் எந்தக் காரில் நீ படுத்துண்டே சொல்லு? என்று கேட்டார்
ஒரே மாடல், ஒரே மாதிரியான பளீர் வெள்ளைகலரில் இருந்த இரண்டு ஆடி கார்களையும் பார்த்து முழித்த பிரியா பிங்கி பாங்கிபோட்டு ஒரு காரைக் காண்பித்து ஒடிச்சென்று பூட்டாமல் இருந்த அதன் பின்கதவைத் திறந்து. காண்பித்தது.
ஒரே மாதிரியாகியிருந்ததால் தெரியாமல் அவர்கள் கார் மாதிரியே இருந்த மற்றொரு காரில் ஏறி தூங்கிவிட்ட குழந்தைத்தான் இவ்வளவு நேரம்  தேடிக் கொண்டிருக்கிறோம் என்று வினாடியில் புரிந்துவிட்டது அந்த ஐபிஎஸ் முளைக்கு.
மத்தியானம் அடையாரிலிருக்கும் அந்தப் பள்ளிக்கு எதிரிலிருக்கும் கிளையண்ட்டைப் பார்க்கப்போனதும், காரை பள்ளிகேட்டின் அருகில் நிறுத்தியதும் லதாவுக்கு நினைவுக்கு வந்தது. வழக்கம்போல காரி லிருந்து சாவியை எடுத்தபின் பட்டனை அழுத்தி காரைப் பூட்ட மறந்திருக்கிறேன்.. திரும்பும் போது பின்சீட்டில் ஒரு குழந்தை இருந்ததைக் கவனிக்காமல் வீட்டுக்கு  ஒட்டிவந்திருக்கிறோம் என உரைத்தது ஆடிட்டர் லதாவிற்கு.

உள்ளே ரகு, லதாவின் அழகான பூஜைரூமில் 6 அடியில் தஞ்சாவூர்படமாக நிற்கும் பட்டாபிஷக ராமர் முன்னால் என் குழந்தையை இந்த நல்ல மனுஷாள் வழியாகக் காப்பாத்திட்டே பெருமாளே“ என்று சாஷ்டாங்கமாக விழுந்துகொண்டிருந்தார் கோபாலன்.
இரவு 10 மணிக்கும் புளு ஜீன்ஸ்,  வொயிட் டாப்ஸில் பிரஷ்ஷாக இருந்த இந்துமதி இந்தக் கேஸ் முடிந்தது என்று சொல்லும் உடல்மொழியுடன் நடந்து கொண்டே “ஶ்ரீதர் அந்த மர்டர் அக்யூஸ்ட் ஏதாவது பேசறானா?” என்று கேட்டபடியே  அவர் காருக்கு வேகமாக நடந்துகொண்டிருந்தார்.  அவர் பின்னே ஒடிவந்து “ தாங்கஸ் மேடம் நாளை ஆபிஸில் வந்து பார்க்கிறேன்” என்று சொல்லுகிறார் சுமிதா..
“யூ ஆர் வெல்கம்” என்ற அரைப்புன்னகையுடன் காரில் ஏறுகிறார் இந்துமதி
“நீங்க பெருமாள் ஆசியோடு நன்னா ஷேமமா இருக்கணும்” என்று சொல்லிக்கொண்டே தன் காரின் முன் சீட்டிலிருந்து இன்றைக்கு சயாங்காலம்தான் பைன்டிங் முடிந்து வந்தது. உங்களுக்குத்தான் முதல்காப்பி” என்று ஒரு புத்தகத்தை ரகுவிடம் கொடுக்கிறார் கோபாலன்.. 
அதன் நீலக்கலர் அட்டையில்   ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் என்பதைப்பார்த்து கண்ணில் ஒத்திக்கொள்கிறார் லதா..
“இந்த டிரைவருக்கு  எத்தனைத் தரம் சொல்லியிருக்கிறேன். கார் பக்கத்திலேயே எப்பவும் இருக்கணும்ன்னு. சே அவனாலே எவ்வளவு பிராபளம் டென்ஷன்” எனச் சொல்லிக்கொண்டே காரை ஸ்டார்ட் செய்கிறார் கோபாலன்

எல்லா கார்களும் போனபின் சட்டென்று வெறுமையானது வீடு. நாளை பேஸ்புக்கில் இதை ஒரு வியாசமாக எழுதலாமா? என நினைத்துக்கொண்டே வீட்டின் உள்ளே நுழைகிறார் ரகுநாதன்.

ஆதித்யா (ரமணன்)

 ரமணன்
1A NATURA HARAMONY
12 SRINIVASAPURAM MAIN RD
THIRUVANMIYUR CHENNAI 60041
     944902215