8/11/13

இந்த ஆண்டு கல்கி திபாவளி மலர் எனது 3 கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறது. இது அதில் ஒன்று. 














தமிழால் பெருமை பெற்ற ஜப்பானியர்.

 ஆதித்யா

இந்திய அரசின் உயர்ந்த கெளரவமான பத்ம விருதுகள் குடியரசு தலைவரால்  டில்லி ராஷ்டிரபதி பவனத்தில் மட்டுமே வழங்கப்படும். இது ஒரு சில வெளி நாட்டவருக்கும் வழங்கபட்டிருக்கிறது.   இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது அறிவிக்கபட்ட ஜப்பானியர் ஒருவர்   உடல் நல குறைவினால் விருதுவழங்கும் விழாவில் பங்கேற்க இயலவில்லை.  நம் பிரதமர் மன்மோகன் சிங்  தனது ஜப்பான் பயணத்தின் போது  இந்திய குடியரசு தலைவர் சார்பாக .பத்ம ஸ்ரீ விருதை அவருக்கு வழங்கினார். அவர் திரு. நொபொரு கராஷிமா  (Noboru Karashima). நாட்டின் பிரதமர், குடியரசு தலைவர் சார்பாக வெளிநாட்டில் நேரில் ஒருவருக்கு விருது வழங்குவது இதுதான் முதல் முறை. இத்தகைய விசேஷ கெளரவத்தை பெற்ற  திரு நொபொரு கராஷிமா  ஒரு ஜப்பானிய வரலாற்றாசிரியர்.  எழுத்தாளரும் கூட. தமிழ் நாட்டுக்கு வந்து சென்னை பல்கலைகழகத்தில் தமிழும், கல்வெட்டு ஆராய்சிகலையையும் பயின்று பட்டம் பெற்றவர்.  இலக்கண சுத்தமாக தமிழ் எழுத,படிக்க பேச தெரிந்தவர்.  தென் இந்திய சரித்திரத்தை ஆராய்ந்து பல புத்தகங்களும் கட்டுரைகளும் எழுதியிருப்பவர். தெனிந்திய கல்வெட்டுகளின் ஆராய்ச்சிகளில் வல்லுனராக மதிக்கபடுபவர்.  1964ல் டோக்கியோ பல்கலை கழகத்தில் சேர்ந்த இவர் 1974ல் அதன் தெற்காசிய வரலாற்று துறையின் தலவராக 20 ஆண்டுகள் பணியாற்றியவர்.  இன்றும் டோக்கியோ பல்கலை கழகத்தில் கெளரவ சிறப்பு பேராசரியராக தன் ஆராய்ச்சிபணிகளை தொடர்ந்து கொண்டிருக்கும் இவருக்கு வயது 80. நொபொருகராஷிமா சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கத்தின்(IATR) முன்னாள் தலைவர்,1985ல் தஞ்சாவூரில் 8 வது உலக தமிழ் மாநாட்டை தலைமையேற்று நடத்தியவர். இவரது கல்வி சேவைக்காகவும் தமிழ் பணிக்காவும் பத்மஸ்ரீ வழங்கபட்டிருக்கிறது. அவருடன் உரையாடியபோது..  
பத்மஸ்ரீ  விருது பெற்றதற்காக கல்கியின் வாழ்த்துக்கள். விருதைப் பெற்றபோது  எப்படி உணர்ந்தீர்கள் ?
மிகமிக மகழ்ச்சியடைந்தேன். உடல்நிலை ஒத்துழைக்காததால் டெல்லி போகமுடியவில்லை என்ற வருத்தம் இருந்தது. அதை பாரத பிரதமர் கையால் என் நாட்டிலேயே பெற்றதை மிகப்பெரிய கெளவரமாக, நான் பெற்ற விருதுகளிலேயே  இதை மிக அறிதானதாக  கருதுகிறேன்.  இது தமிழ் மொழியினால் எனக்கு கிடைத்த பெருமை. இந்திய அரசுக்கும், பிரதமருக்கும் நன்றியை  பதிவு செய்ய விரும்புகிறேன்.

சர்வதேச தமிழ் ஆராய்ச்சி கழகத்தின்   துவக்க காலத்திலிருந்தே  உலக தமிழ் மாநாடுகளில் பங்கேற்று  தமிழுக்காக நல்ல பணிகளை செய்துவந்த நீங்கள் ஏன்  கோவையில் 2010ல் நடைபெற்ற செம்மொழி மாநாட்டை புறக்கணித்தீர்கள் ?
புறகணிப்பு என சொல்லப்படுவதை நான் விரும்பவில்லை. உலக தமிழ் மாநாடுகள்  சரியாக திட்டமிடபட்டு ஆராயச்சியாளார்கள் கட்டுரைகள் தயாரிக்க  ஒராண்டாவது கால அவகாசம் அளிக்க பட்டபின்னரே நடத்தபடவேண்டும் என்பது  சர்வதேச தமிழ் ஆராய்ச்சி கழகத்தின் கொள்கை. கோவையில் நடந்த  மாநாடு  மிக அவசரமாக  திட்டமிடபட்டு ஒரு அரசியல் நிகழ்ச்சியாக நடத்தபட்டதில் எனக்கு உடன்பாடில்லை.  அதிக அவகாசம் தர இயலாதற்கு  தேர்தல் ஒரு காரணமாக சொல்லபட்டது. ஒரு சர்வதேச ஆராய்ச்சி நிருவனம் இதெற்கெல்லாம் அப்பாற்பட்டிருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்.  இது பற்றி மிக விளக்கமாக அந்த கால்கட்டத்திலேயே இந்து நாளிதழுக்கு ஒரு பேட்டி அளித்து விளக்கியிருக்கிறேன்.. சர்வதேச தமிழ் ஆராய்ச்சி கழகத்தின்  நிர்வாக குழு உறுப்பினர்களிடையே இது குறித்து கருத்து ஒற்றுமை இல்லாதாதால் நான் தலைவர் பதவியிலிருந்து விலகிவிட்டேன்.  ஆராய்ச்சிகழகத்தின் முக்கிய குறிக்கோளான தமிழ் மொழிக்கு சர்வதேச அந்தஸ்த்து அளிக்கபடவேண்டும்  என்பது   நன்கு  உணரப்பட்ட நிலை  இன்று ஏற்பட்டிருப்பதில் எனக்கு மகிழ்ச்சியே.  இப்போது சர்வ தேச தமிழ் ஆராய்ச்சி கழகம் புதிய தலவர்களின் தலைமையில் புதிய அவதாரம் எடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறது.

இன்றைய இளம் தலைமுறையினர், உங்களைபோல ஒரு மொழியின், அதன் சமூக சார்ந்த சரித்திரத்தை ஆராய்ச்சி செய்வதில் நாட்டம் கொள்கிறார்களா?

 ஆர்வம் குறைந்து வருவது உண்மையாக இருக்கலாம் ஆனால் அறேவே இல்லை என்று சொல்லிவிடமுடியாது. நல்ல ஆசிரியர்களின் பல்கலைகழகங்களின் அரசின் ஆதரவு இல்லாமல் இதைச் செய்யமுடியாது. 1961ல் நான் மெட்ராஸ் யூனிவர்ஸிட்டியில் தொல்லியல் மாணவனாக சேர்ந்த போது நீலகண்ட சாஸ்த்திரி, வெங்கட்டரமணய்யா போன்ற மேதைகள் தங்கள் ஆராய்ச்சிகளையும் தொடர்ந்துகொண்டு எங்களுக்கும் கற்பித்தார்கள். இன்று அத்தகையவர்கள் இல்லை. பல்கலைகழகங்களும் இதை இன்னும் ஒரு  ”பாடமாக” தான் மதிக்க துவங்கிவிட்டார்கள். ஆராய்ச்சியாளர்களை அரசாங்கள் கெளரவித்தால் சமூகத்தில் அவர்களின் மதிப்பு உயரும்.

இப்போது மொழி வளர்ச்சிக்காக பல ஆராய்ச்சி நிறுவனங்கள், தனிபல்கலைகழங்கள் அரசின் உதவியுடன் துவங்க பட்டிருக்கின்றனவே. ?
இருக்கலாம். ஆனால் அவைகளின் விசித்திரமான நிலை எனக்கு ஆச்சரியமளிக்கிறது. பணம் ஒதுக்கி ஒரு ஆராய்ச்சி நிறுவனத்தை உருவாக்கி அதற்கு ஒரு ஐ ஏ ஸ் அதிகாரி நியமிக்க படுகிறார், இந்திய தொல் பொருள் துறையின் தலைவராக நியமிக்க படுபவர்களுக்கு கல்வெட்டுக்களின் மொழியை  படிக்க தெரியாது. அதேபோல் மாநில தொல்பொருள் ஆராய்சி நிறுவனங்களிலும்  தலமை நிர்வாகிகள் அதுபற்றி அறியாமல் இருப்பது துரதிர்ஷ்டமே. கல்வெட்டு எழுத்துகளை ஆராய்ந்து நகல் எடுக்கப்பட்டு அச்சிடப்பட்டிருக்கும்  குறிப்புகளிலிருந்துதான் இன்று பலர் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இது வருத்த்ததிற்குரிய விஷயம். சமீபத்தில் தமிழ் பலகலை கழகம் தொல்பொருள் துறையினருடன் இணைந்து கல்வெட்டுகளின் டிஜிட்டல் பதிவுகளை மைசூர் ”மொழியில் கழகத்தில்” சேமிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த நல்ல பணி எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. வெற்றிகரமாக  தொடர வேண்டும்.

வரும் தலைமுறையில் தமிழ் மொழி படிப்பவர்களும்,எழுதுபவர்களும் குறைந்துவருவதால்   மொழியே அழிந்துவிடும் என்ற அபாயம் இருப்பதாக ஒரு கருத்து நிலவுகிறதே?
அரசாங்களின் அணுகு முறையினால், கல்விமுறைகளினால் தாய்மொழியின் பயன்பாடு குறைந்து வருவது உலகின் பல பழைய மொழிகள் சந்திக்கும் ஒரு பிரச்சினை. ஆசிரியர்களும் குறிப்பாக பெற்றோர்களும் அவசியம் கவனம் செலுத்த வேண்டிய ஒரு விஷயம் இது. ஆனால் பல ஆயிரம் ஆண்டுகள் பயன்பாட்டிலிருக்கும் ஒரு மொழி அழிந்து போய்விடும் என்பதை ஏற்பதிற்கில்லை.  ஒரு நாட்டின் பாரம்பரியங்களும் கலாசாரங்களும் பல தலமுறைகளாக தொடர்வது போல மொழியும் தொடர்ந்து வளர்ந்து செழிக்கும், அதுவும் நிச்சியமாக தமிழ் மொழி நீடித்து நிலைத்து நிற்கும் என நான் நமபுகிறேன்.
நேரம் ஒதுக்கியதற்கு நன்றி
நன்றி  விழா நாள் வாழ்த்துகள்
 








1/11/13

சூதாடுங்கள் சொர்க்கம் போகலாம்

இந்த ஆண்டு கல்கி திபாவளி மலர் எனது 3 கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறது. இது சொர்க்கம் போக வழிகாட்டுகிறது. 


பளிரென்ற மின்விளக்குகளின் வெளிச்சம் பரவியிருக்கும் அந்த பிரமாண்டமான அரங்கத்தில் குறைந்தது ஒரு 500 பேராவது இருப்பார்கள்.காலடியில் மெத்தென்ற கார்ப்பெட்கண்ணில் படும் கலைநயம் ததும்பும் சுவர் அலங்காரங்கள்இதமான எர்கண்டிஷன்சுகமான மெல்லிய இசை என ஒவ்வொரு சதுர அங்குலத்திலும் ஆடம்பரம்.  அரங்கம் முழுவதும் விதவிதமான சூதாட்டமிஷின்கள்பெரிய வட்ட மேஜைகளில்(roulette table) எண்கள் சுழலும் சக்கரத்தின் எதிர்புறம் ஓடிகொண்டிருக்கும் பந்து எந்த எண்ணில்  நிற்கப்போகிறது என்பதைக்காண ஆவலுடன் காத்திருப்பவர்கள்பச்சை வெல்வெட்  பதித்திருக்கும் பெரிய நீண்ட சதுர மேஜைகளைச் சுற்றி கைகளில் சீட்டாட்ட கார்டுகளுடன் கவனமாக ஆடிக்கொண்டிருப்பவர்கள் என நிறையப் பேர்.  இளைஞர்களும் வயதானவர்களும் பரபரப்பாக இயங்கிகொண்டிருகிறார்கள்

அமெரிக்காவிலுள்ள “உலக கேளிக்கைகளின் தலைநகரம்” என வர்ணிக்கபடும் லாஸ்வேகாஸ்  நகரிலுள்ள MGM கிராண்ட் என்ற ஆடம்பர ஹோட்டலின் தரைதளத்திலிருக்கும் காஸினோவிலிருக்கிறோம். இந்த காசஸினோவில் சூதாட்ட களங்களைத்தவிர உலகின் பல நாடுகளின் உணவு வகைகளும் கிடைக்கும் ரெஸ்ட்ரொண்ட்களும் நிறைய. நம்ம ஊர் சமாச்சாரங்கள் கிடைக்குமா என தேடிமெல்ல நடந்துகொண்டிருக்கும் நாம் அந்த காட்சியைக்கண்டு அதிர்ந்து நிற்கிறோம். ஓரு கண்ணாடிக்கூண்டில் நடமாடிக் கொண்டிருக்கும் சிங்கங்கள்! 1.5 அங்குல கனமேயிருக்கும் அந்த கண்ணாடிச்சுவர்களுக்குபின் செயற்கயாக அமைக்கபட்ட பாறைகளுக்கும்,அருவிக்கும்குகைகளுக்கும் இடையே பயிற்சியாளார்களுடன் ஒடி விளயாடிக்கொண்டிருக்கும்  6 பெரிய சிங்ககள்! கண்ணாடிச் சுவர்களின் வெளியேயிருக்கும் ஸ்டீரியோ ஸ்பிக்கரில் அவ்வப்போது அவைகளின் உறுமல் சத்தம். கண்ணாடி சுவற்றில் முகம் பதித்து சிங்கங்களைப் பார்க்கும் குழந்தைகள். அவற்றை அருகில் வந்து பார்க்கும் சிங்கங்கள். இரண்டு கண்ணாடிஅறைகளையும் பாலமாக இணைத்திருக்கும் ஒரு உருளை வடிவ கண்ணாடி பாதையின் வழியாக அனாசியமாக நடந்துபோகும் சிங்கங்களை  அந்த கண்னாடிப்பாலத்தினடியில்  நிற்பவர்கள் அண்ணாந்து  சிங்கங்களின் பாதங்களைப் பார்த்து கொண்டிருப்பவர்கள். நாம் பயத்திலிருந்து விடுபட்டு அருகில்போய் பார்க்க சில நிமிடங்களாகின்றன. ஒரு சூதாட்டவிடுதியில் இவ்வளவு அருகில் சிங்கங்களிருப்படைவிட ஆச்சரியம்அதைப்பற்றி எந்த பயமும் இல்லாமல் கருமமே கண்ணாயிரமாக சூதாடிக்கொண்டிருப்பவர்கள் தான்
இங்கு ஏன் சிங்கங்கள்?
MGM என்பது புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்பட்ட நிறுவனம்.  அவர்களது கம்பெனியின் இலச்சினையாக உறுமும் சிங்கம்  ஒவ்வொரு படத்தின் துவக்கத்திலும் காட்டப்படும். நாளடைவில் MGM என்று சொன்னாலே சிங்கம் என்ற அளவிற்கு அவர்களது அடையாளாமகிவிட்டது. சினிமாத்தொழிலைவிட்டு  வந்து இன்று இப்படி பெரிய ஆடம்பரஹோட்டல்களை நடத்திக்கொண்டிருந்தாலும் சிங்கத்தை விடவில்லை. இங்கு உயிரோடு சிங்கங்களை விளயாடவிட்டு வேடிக்கை காட்டுகிறார்கள்.  இதற்ககாவே  25கீமீ தொலைவில் ஒரு பண்ணையில் 31 சிங்கங்களை வளர்க்கிறார்கள்.அவர்களுக்கு பயிற்சியளித்து ஓவ்வொரு மணி நேரத்திற்கும் சிங்கங்கள் என ஷிப்டில் இங்கு அழைத்துவருகிறார்கள். மிக மிக அருகில் கண்ணாடி வழியே மிருக ராஜனை பார்ப்பது ஒரு வினோத அனுபமாகயிருந்தாலும்இந்த கண்ணாடியை உடைத்து கொண்டு வெளியே வந்தால்... . என்ற எண்ணமே நம்மை நடுங்கச்செய்கிறது.  30 தளங்களும் 6000அறைகளும் கொண்ட அந்த பிரம்மாண்ட ஹோட்டலை விட்டு வெளியே வந்தால் அருகில்  45அடிஉயரத்தில் 50டன் எடையில்  தங்க வண்ணத்தில் ஒரு சிங்க சிலை இது முதலில் நுழைவாயிலில் தான் இருந்ததாம். சூதாடவரும் சீனர்கள். பெங்ஃஷுயி வாஸ்து படி சிங்கத்தைபார்த்துவிட்டு சூதாடினால் தோற்றுவிடுவோம் என்பதால் இந்த காஸினோவை தவிர்க்க ஆரம்பித்ததால்நிர்வாகம் சிலையை மாற்றி பக்கத்தில் வைத்துவிட்டது. வாஸ்துவின் பலன் சூதாடுபவர்களுக்கு எப்படியோ, MGMக்கு கிடைத்த பலன் ஆடிக்கொண்டிருக்கும் கூட்டதைப்பார்தால் தெரிகிறது.


கிருஷ்ண ஜயந்தியன்று கண்ணன் பிறந்த நேரத்தில் சூதாடினால் நிறையஜெயிக்கலாம் எனற எண்ணம் நம் குஜராத்தியர்களிடம் வேகமாக பரவிவருகிறது. இந்த ஆண்டு அதற்காவே ஏற்படுத்தபட்ட பேக்கேஜ் குருப் டூர்களில் நுற்றுகணக்கானோர் லாஸ்வேகாஸ் நகருக்கு பயணித்திருக்கிறார்கள்.
இந்குள்ள ஹோட்டல்கள் ஒவ்வொன்றும்  ஒவ்வொரு நாட்டின் ஸ்டைலில் அமைத்திருக்கிறார்கள். பிரமிட் வடிவ நுழைவாயில் உள்ள ஹோட்டலிண் உள்ளே அறைகள்அரங்கங்களின் அமைப்புகள் உள் அலங்காரங்கள்  முழுவதும் எகிப்திய கலாசார பாணியில்.இதைப்போல வெனிஸ் ஹோட்டலில் அறைகளுக்குப்போக படகுகள். ஸீஸர் என பெயரிடப்பட்டிருக்கும் ஹோட்டலின் நுழைவாயிலில் மன்னர் சீஸரின் சிலை.கிரேக்க பாணி  கோட்டை வடிவில் ஹோட்டலின்  அமைப்பு. ஒரு ஹோட்டலில் ஓசையுடன் அலை எழும்புமும் கடலையும்வெண்மணல் பீச்சையும் கூட நிறுவியிருக்கிறார்கள் “நியுயார்க் நியுயார்க்” என்ற ஹோட்டலின் முகப்பில்நியுயார்க் நகரில் இருக்கும் லிபர்டி சிலைபாலங்கள்எம்ப்யர்ஸ்டேட் கட்டிடம் என குட்டி நியூயார்க்கே நிற்கிறது. பாரிஸீன் ஈஃபில் டவரையே நிறுவி அதன் மாடியில் ஓரு ஹோட்டல். ஆடம்பர ஹோட்டல்கள்  எல்லாவற்றிலும் முதல் தளம்  முழுவதும் காஸினோநைட்கிளப்உணவு விடுதிகள் என நிறைந்திருக்கிறது. ஓவ்வொன்றிலும் MGMலிருக்கும் கண்ணாடி சிங்கங்களின் கூண்டுகளைப் போலபெரிய டால்பின்மீன்கள் காட்சிசர்க்கஸ்பாலே நடனம்  மாஜிக் என எதாவது ஒரு பிரமிக்கவைக்கும் காட்சி. சில வற்றிருக்கு கட்டணம். பல இலவசம். இந்த ஹோட்டல்களை இணைத்து ஒடிக்கொண்டிருக்கும் ஒரு மோனோ ரயில். காசினோக்களுக்கு,  மாறி,மாறிப்போய் நாள்முழுவதும் சூதாடிக்கொண்டிருக்கிறார்கள் சூதாடும் கிளப்புகளில் முன்போல  பணத்திற்கு பதில் டோக்கன் என்ற  சிஸ்டம் கிடையாது. முதலில் கட்டிய பணத்திற்கு அல்லது பாங்க்கிலிருந்து மாற்றிய பணத்திற்கு  கிரிடிட் கார்டு போல ஒரு பிளாஸ்டிக் கார்டு தருகிறார்கள். அதை மிஷினில் சொருகிவிட்டு ஆடவேண்டும்.,தோற்றால் கார்டிலிள்ள பணம் குறையும் வெற்றி பெற்றால் நிறையும் . கணக்கை அருகிலுள்ள சின்னத் திரை காட்டுகிறது. சிலர் ஜாக்கிரதையாக கார்டை சங்கலியுடன் இடுப்பில் இணைத்திருக்கிகிறார்கள்.
ஹோட்டல்களின் முகப்பில் மட்டுமில்லமல் ஓவ்வொரு விஷயத்திலும் அந்த ஹோட்டலின் தீமை(theme) கவனத்துடன் நினைவூட்டுகிறார்கள். நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலின் பெயர் “எக்ஸ்காலிபர்”  (Excalibur)              (12 நூற்றாண்டின் மன்னர் ஆர்தரின் புகழ்பெற்ற போர் வாளின் பெயர்) ஹோட்டல் கோட்டை வடிவில். அறைகளின் உள் அலங்காரங்கள் ஒரு அரண்மணையைப்போல். அரண்மணை சேவர் உடையில் பணியாளார்கள்.வெளியே சென்று திரும்பிய நம்மை “மன்னர் ஆர்தர் தங்கள் அறையை சுத்தம் செய்ய இயலாதற்காக மன்னிப்பை கோருகிறார். படுக்கையில் நீங்கள் சில பொருட்களை வைத்திருந்தால் இயலவில்லை.   வந்ததும் தொடர்பு கொள்ளவும். காத்திருக்கிறோம்”’ என்ற  படுக்கையிலிருக்கும் குறிப்பு நம்மை  வரவேற்கிறது. உலகிலேயே அதிக ஹோட்டல் களிருக்கும் நகரம் இது தான் என்பதும் மொத்த  ஹோட்டல் அறைகள்1,40,000 என்ற தகவல் நம்மைப் பிரமிக்கச்செய்கிறது. கடந்த ஆண்டின் பொருளாதார விழ்ச்சியில் சரிந்த பிஸினசை  “3 நாள் வாடகையில் நாள் தங்குங்கள்” என அதிரடி தள்ளுபடிகள் அறிவித்து சமாளித்துகொண்டிருக்கிறார்கள்..
(100-ஹோட்டல்களுக்குமேல் அமைந்திருக்கும் “ஸ்ட்ரிப்” என அழைக்கப்படும் அந்த பெரிய வீதியில்  மாலை நேரத்தில் நடந்துகொண்டிருக்கிறோம். ‘லால் வேகாஸ் வெல்கம்ஸ் யூ’ (ப1)என்ற அந்த போர்டை எல்லோரும் படமெடுத்துக்கொண்டிருக்கிறார்கள். லாரிஓட்டுனர்களுக்கும்,தொழிலாளர்களுக்கமாக.தோன்றியமதுக்கடைகளும்,சூதாட்டகிளப்புகளுமாகயிருந்த இடம் லாஸ்வேகாஸ் என்ற பெயரில் 1931ல்  நகரமாக பிறந்த போது இந்த இடத்தில்  எழுந்த இந்த போர்டு இன்றும் அதே இடத்தில்  அதே வார்த்தைகளுடன் புதுபிக்கபட்டுக்கொண்டிருக்கிறது என்று அறிகிறோம். அந்த பகுதியில் பல சர்ச்கள். அதன் முன்னால்  லைசன்ஸ்டுன் ஒரு மணி நேரத்தில் திருமணம் செய்துவிக்கபடும் என கட்டண விவரத்துடன் போர்ட்கள். காரைவிட்டு இறங்காமலே கல்யானம் செய்துகொள்ள டிரைவின் சர்ச் கூட இருக்கிறது. ஆச்சரியபட்டு உள்ளே போய் விசாரித்தால்  ”சும்மா தேனிநிலவு தம்பதிகளின் ஜாலிக்காக” என்கிறார்கள். சர்ச் பெயரில் கூடவா பிஸினஸ்? என தோன்றிற்று.
மெல்ல இரவு பரவுகிறது. சட்டென்று வீதி முழுவதும்  வர்ண ஜாலமாக ஒளிவெள்ளம்நகரும் பிரமாண்ட  நியான் விளம்பரங்கள் தொலைவில் சரவிளக்கில் மின்னும் பாரீஸின் ஈபில் டவர்அருகில் மெல்லிய பச்சை விளக்கில் லிபர்டி சிலை தெரு முழுவதும் தொடர்ந்து ஒலிக்கும் இசை,இவற்றையெல்லாம் ரசிப்பதற்காகவே நடக்கும் மக்களுடன் நாம்.. ஒரு புதிய உலகத்திலிருகிறோம்
வீதியின் முனையில் ஒரு பிரமாண்ட ஹோட்டலின் முன் இசை மேதை பித்தாவோனின் இசைக்கு எற்ப நடனமாடும்மிகப்பெரிய  நீருற்று.  சுற்றும் இருள் சூழ்ந்த சூழலலில் பிரகாசமான ஒளிவெள்ளத்தில் இசைக்கேற்ப வளைந்து நெளிந்து உயர்ந்து தாழ்ந்துபக்கவாட்டில் ஆடி,ஓடி குருப் நடன கலஞர்களைப் போல பலவாக  அணிவகுத்து  ஆடி  இறுதியில் இசை ஓங்கி ஒலிக்கும்போது  உயரமான ஒற்றை நீருற்றாக  அந்த ஹோட்டல் கட்டிட உயரத்திற்கு உயரும் அந்தவினாடியில் ஹோட்டல் முகப்பு முழுவதும் பளிரென்று  விளக்குகள் முழித்துக்கொண்டவுடன் சட்டென்று ஓய்கிறது அந்த நடனம்ஒலிக்கிது கரகோஷம். ஒரு அரங்கத்தில் ஆடி முடித்த நடன கலைஞர்களை கெளரவிப்பது போல சூழ்ந்திருக்கும் அத்துனைபேரையும் கைதட்டவைக்கிறது..அந்த காட்சி. பலர் நகர மனமில்லாமல் துவங்கப்போகும் அடுத்த காட்சிக்காக காத்திருக்கிறார்கள்நள்ளிரவை நெருங்கிக்கொண்டிருக்கும் அந்த நேரத்தில் வீசும் மெல்லிய காற்றின் இதத்தோடு நடந்து அறைக்குத்திரும்பிக்கொண்டிருக்கிறோம். பெரியசத்தத்துடன்பொங்கிவழியும்எரிமலை,மிதக்கும்கப்பலில்சுட்டுக்கொள்ளும் கடற்கொள்ளைக்காரர்கள்வேகமாக சுழலும் முன் சக்கரத்துடன் நிற்கும் பிரமாண்டமான மோட்டர் சைக்கிள் என அட்டகாசமான முகப்பு காட்சிகளுடன் நியான் விளக்களில் வினோதமான பெயர்களில் நம்மை அழைக்கும் பார்கள். “எங்கள் காஸினோவில் விளயாடிவிட்டு எங்களது 44 வது மாடிக்கு வாருங்கள் வானில் தெரியும் நட்சத்திரங்களையும்,கிழே தெரியும் நீருற்று நடனத்தையும் சேர்ந்து பார்த்துகொண்டே,  உணவு அருந்தும்போது சொர்கத்தை உணர்வீர்கள்” (ப 28)என்ற வாசகம் கண்ணில் படுகிறது. சூதாட்டம்,மதுக்கடை,இரவுவிடுதி போன்ற பாவசெயல்களால் நிரம்பி வழியும் இந்த பாவ நகரில்(SIN CITY) சொர்க்கத்தை உணரச்செய்யும் இவர்களது புத்துசாலித்தானமான மார்க்கெட்டிங் டெக்னிக்கை  வியந்துகொண்டே அறைக்கு திரும்புகிறோம்.
-படங்கள் குகன், ரமணன் 
கட்டுரைக்கான படங்கள்  இந்த ஷோவில் 





















28/10/13

இந்த ஆண்டு கல்கி திபாவளி மலர் எனது 3 கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறது. இது சினிமா100 க்கான சிறப்பு கட்டுரை 

கனவுலகத்தின் நவீன பிரம்மாக்கள்







நவீனமாகிறது  நமது கனவு தொழிற்சாலை

நூறாண்டு பாரம்பரியம் கொண்ட தமிழ் சினிமாவின் பரிமாண வளர்ச்சியில் வெவ்வேறு கட்டங்களில் அது ஸ்டுயோ முதலாளிகள், தயாரிப்பாளர்கள்,  டிரிஸ்டிபியூட்டர்கள்,  கதாநாயகர்கள், டைரக்டர்கள் போன்றவர்களால் ஆளப்பட்டுவந்தது.  இன்று தமிழ் சினிமாவின் அத்தனை பகுதிகளையும் ஆளுவது டெக்னாலாஜி.  நம்ப முடியாத அளவிற்கு  சினிமாவின் பல முகங்களை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள் நம் திரையுலகத்தின் நவீன பிரம்மாக்கள். மாற்றங்கள் ஒன்றே மாறாதது என்பது உண்மையானாலும்  நவீன தொழில்நுட்பங்களுடன் மிக வேகமாக நிகழும் மாற்றங்கள் நம்மை பிரமிக்க செய்கிறது.கடந்த ஆண்டு தயாரான படங்கள் 197. அதை இப்போதே கடந்தவிட்ட நிலையில் இந்த ஆண்டு 250 படங்கள் வரும் என்பது எதிர்பார்ப்பு. தமிழ் திரையுலகம் பல ஆண்டுகள் அனுபவம் நிறைந்த ஜாம்பவான்களிடமிருந்து நழுவி புலிபாய்ச்சலில் மாற்றியோசிக்கும் இளைஞர்களின் கைகளுக்கு போய்க்கொண்டிருப்பதற்கு இந்த நவீன தொழில் நுட்பமும் ஒரு  முக்கிய காரணம்.
கம்யூட்டர்கள் கதை சொல்லுகின்றன.
திரைக்கதை எழுதுவதிலிருந்து தியட்டர்களில் படம் காட்டப்படுவதுவரை அனைத்திலும் டிஜிட்டல் டெக்னாலஜி புகுந்து விளையாடுகிறது. சினிமா தயாரிப்பின் முதல் கட்டம் திரைக்கதை எழுதுவது. கதாசிரியர், அல்லது திரைக்கதை எழுதுபவர் இதற்காக பலநாட்கள் உழைப்பவர். ஒரு வெள்ளைபேப்பர் நீள் வசத்தில் இரண்டாக மடித்து பிரிக்கபட்டு அதில் ஒரு புறம் காட்சிகளின் இடம்,அமைப்பு, பாத்திரங்கள், அவர்களின் இடம் உடை,காலம் போன்றவைகளும்  எதிர்புறம்   அந்த காட்சி வசனங்களுடனும் விவரிக்கபடும். இது போல ஒவ்வொரு காட்சிகளும் எழுதப்படும். இன்று இதை எளிதாக, விரைவாக கம்யூட்டர்களில் செய்கிறார்கள். திரைக்கதை எழுதுவதெற்கென்றே தனி சாப்ட்வேர்கள் வந்துவிட்டன. தற்போது மார்க்கெட்டில் 27 வகையான சாப்ட்வேர்கள் கிடைக்கின்றன.  இவற்றில் சில இலவசம். இதை முதலில் தமிழ் சினிமாவிற்கு கொண்டுவந்தவர் கமல்ஹாசன். அவரது விருமாண்டி படம் தயாரிப்பில் இதை பயன்படுத்த துவங்கினார்.  படம் சம்பந்தபட்டவர்களிடம் பேசும்போது தன் லேப்டாப்பிலிருந்து  மூவி மேஜிக்  என்ற சாப்ட்வேர் மூலம் அமைக்கபட்ட திரைகாட்சிகளின் மூலம்  விபரங்களை காட்டினார். தொடர்ந்து மணிரத்தினம்  பைனல் டிராப்ட் என்ற சாப்ட்வேரை பயன்படுத்த துவங்கினார். ஆனால் இவைகளில் எல்லாம் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதமுடியும்.. தமிழ் மொழியில் நேரடியாகவோ அல்லது தமிழ்வடிவ எழுத்துகளை பயன்படுத்தவோ முடியாதவை.  இம்மாதிரியான சாப்ட்வேர்களில் சில ஒப்பன் சோர்ஸ் என்ற முறையில் இலவசமாகக் கிடைப்பவை. அவற்றில் ஒன்று செல்டெக்ஸ்(celtx)  டாலர் தேசம் போன்ற பல புத்தகங்களை எழுதியவரும் டிவி சீரியல்களுக்கு திரைக்கதை எழுதுபவருமான    திரு    பா.ராகவன்


 இந்த சாப்ட்வேரின் மொழியை கற்றுகொண்டு அதை அக்குவேறாக பிரித்து ஆராய்ந்து தமிழில் எழுதும் வசதியையும் அமைத்தார். தனது தொடர்ந்த ஆராய்ச்சிகளினால் அதை மேலும் செம்மைபடுத்தியிருக்கிருக்கும். இந்த எழுத்தாளர் மென்பொருள் வல்லுனர் இல்லை. ஆர்வத்தால்.பல இரவுகள் முழித்து மாற்றியமைத்த இந்த இலவச மென்பொருள்,  இன்று  தமிழ் திரையுலகில் பலரால் பயன்படுத்த படுகிறது. ”கம்யூட்டரின் உதவி இல்லாமல் இனி திரைக்கதை எழுத முடியாது என்ற நிலை ஏற்பட்டுகொண்டிருக்கிறது. ஒவ்வொரு முறையும் காட்சிஅமைப்பு விபரங்களை திரும்ப திரும்ப எழுதவேண்டியதில்லை, அது விரல்நுனியிலிருந்து விரியும் என்பது மட்டும் இல்லை. பல்வேறு விஷயங்களுக்கும் உதவுகிறது. ஒரு நடிகர் எத்தனை காட்சிகளில் எவ்வளவு நேரம் தேவைப்படுவார். அவரது காஸ்ட்டியூம், மேக் அப் எந்தவிதமாக செட் அமைக்கபடவேண்டும் அதில் எவ்வளவு காட்சிகள் எடுக்க படவேண்டும், எந்த மாதிரி லைட்கள் எப்போதெல்லாம் தேவை போன்ற பலவிஷயங்களை முதலிலியே தீர்மானிக்க முடியும்.சினிமா தயாரிப்பில் 60க்கும்மேற்பட்ட பிரிவினருக்கு உதவும்.  இதனால் தயாரிப்பு நேரம்,செலவுகளை சரியாக திட்டமிடவும் உதவுகிறது.” என்கிறார் ராகவன். இவர் இன்று ஒரே நேரத்தில் இதன் உதவியால் 5 டிவி சீரியல்களுக்கு திரைக்கதையும் வசனங்களும் எழுதிக்கொண்டிருக்கிறார்.  திரைக்கதை எழுதுவதில் மட்டுமில்லை  கதை  காட்சி அமைப்பு பற்றிய விவாதங்களில் கூட இன்று கம்யூட்டர்கள் நுழைந்திருக்கிறது. உதவி டைரக்டர்கள்,அசோசியட்களுடன் இரவு நேரங்களில்  இண்டர்னெட் வீடியோ சாட்டில் விவாதிக்கிறார் ஒரு டைரக்டர். காதாசிரியர்களை,கத்தைகதையாக பேப்பர்களுடனும் கிளிப்போர்டுடனும்  செட்களில் பார்த்த காட்சி மாறி இன்று லாப்டாப்புடனும்,டேப்லட்களுடனும்  ஐ பேட்களுடனும் பரபரப்பாக இயங்கும் இளைஞர்களை பார்க்க முடிகிறது.

எலக்டிரானிக் திரை இசை

ஒரு திரைபடத்தின் வெற்றிக்கு அதன் பாடல்களும் ஒரு முக்கிய காரணம். பல ஆண்டுகளுக்கு முன் எம் எஸ் விஸ்வநாதன் ”எங்கே நிம்மதி” என்ற பாடலுக்கு  நூற்றுக்கும் மேற்பட்ட வாத்தியங்களை பயன்படுத்தினார். அந்த பாடலுக்காக பலநாட்கள் பயற்சி, பலமுறை ரீடேக் எல்லாம். ஆனால் இன்று திரைப்பட ஸ்டூடியாக்களில்  ரிகார்டிங் தியட்டர்களில் லைவ் ரிகார்டிங் என்பதே குறைந்து விட்டது. ஏ ஆர் ரஹ்மான் போட்ட பிள்ளையார் சுழியை தொடர்ந்து இன்று அனேகமாக எல்லா பெரிய இசைஅமைப்பாளார்களும்  சொந்த  நவீன ரிகார்டிங் தியட்டர்கள் வைத்திருக்கிறார்கள்.  சில ஆண்டுகளுக்கு முன்  உடன் பாடவேண்டியவருக்குபதிலாக வேறு குரலை  டிராக்கில் பதிவு செய்து அதை பின்னர் மாற்றிக் கொள்வது புதிய தொழில் நுட்பமாக அறியபட்டது. இன்று 60 டிராக்கள் வரை வசதிகள் இருப்பதால் பாடுபவருக்கே தன் பாடல் எப்படி  வரும் என்பது சிடி உருவாகும் வரை தெரியாது. தனியாக பதிவு செய்யபட்ட பின்னணி இசையுடன் சில இசைக்கருவிகளின் இசை,இடையே வரும் ஒலிகள்  எல்லாம் கம்யூட்டகளின் உதவியுடன் மிக்ஸ் செய்யபடுகிறது. இதை கையாளும்போது தன் இசைஞானத்தை சரியான இடத்தில் அதி நவீன டெக்னாலஜியுடன் இணைத்து பயன்படுத்துவதினால் ஏ.ஆர் ரெஹ்மான் உலக சினிமாவையே தன் வசப்படுத்துகிறார். இன்று பல இசை  அமைப்பாளர்கள் இவரைப் பின்பற்றி தங்கள் தியட்டர்களை  நவீன ரெக்கர்டிங் டெக்கானலிஜிகளுடன் புதுபிக்கிறார்கள்.  டிஜிட்டல் தொழில்நுட்பம் இசையிலும் செயல்பட ஆரம்பித்ததின் பலன், யுவன் சங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ், அனிருத், விஜய் ஆண்டனி, கே எனப் பல இளைஞர்கள் அடுத்தடுத்து தமிழ் திரையிசை உலகில் நுழைந்திருக்கிறார்கள். இன்று தமிழ் இசையமைப்பாளர்களின் சராசரி வயது 25 என்பது ஆச்சரியமான உண்மை.

ஒப்பற்ற ஒலிப்பதிவு  

 இசையை அடுத்து இன்று ஒரு படத்தின் வெற்றியை நிர்ணையக்கும் பல விஷயங்களில் ஒன்று ஒலிப்பதிவு. “இப்போது ஸ்டீரியோ ஒலிப்பதிவிலிருந்து வெகுதூரம் வந்து விட்டோம். அதுவும் 2000 ஆம் ஆண்டு டிஜிட்டல் வந்ததிலிருந்து தொடர்ந்து மாற்றங்கள்.  ஒன்றை நன்றாக கற்றுகொள்வதற்கு புதிதாக ஒரு டெக்னலாஜி வந்துவிடுகிறது. ஒலிப்பதிவு செய்யபட்ட டேப்பக்ளுடன் போராடி அனலாக் முறையில் ரிகார்டிங் செய்ததெல்லாம் மலையேறி போய்விட்டது. இன்று தமிழ் சினிமாவில் இதுவரை பயன்படுத்தபட்டு வந்த 5.1 மிக்ஸ்ர்கள் மாறி ”டோல்பிஅட்மோஸ்,7.1,” அரோ 3 டி11.2 போன்ற நவீன முறைகளில் ஒலிப்பதிவுகள் செய்யபடுகிறது, இவைகள் ஹாலிவுட்டில் பயனபடுத்தப்படுபவை என்கிறார் திருமதி கீதா


 இவர் 350 திரைப்பாடங்களுக்கு மேல் ஒலிப்பதிவு செய்தவர். டோல்பி அட்மோஸ் என்ற  அதிநவீன ஒலிப்பதிவு முறையை  இந்தியாவில். முதலில் பயன்படுதியவர். சிவாஜி, ஷோலே போன்ற படங்கள் 3D யில் மறுபிறவி எடுக்கும்போது 3டி ஒலிப்பதிவை அமைத்தவர். டெக்னாலாஜி மட்டுமில்லை,டைரக்டர்களூம் நிறைய மாறியிருக்கிறார்கள். தங்களுக்கு தேவையானதை தெளிவாக சொல்லுகிறார்கள். வெங்கட்பிரபு தன் கோவா படத்தில் ஒலியும் படத்தின் காலத்தை சொல்ல வேண்டும் என்றார். அதனால் முதலில் வரும் 40 நிமிட கிராமகாட்சிகளில் பழையபாணிஸ்டிரியோ ஒலியும் பின்னர் கோவா காட்சிகளில் 5.1 முறையையும் பயன்படுத்தினேன்.  ஆனால் இந்த துல்லிய ஒலிவேறுபாட்டை சரியாக எல்லா தியட்டரிலும் கேட்கமுடியாததால். முதல் 40 நிமிடம் ஒலிப்பதிவு சரியில்லை என்றும் நகர் புறங்களிலிருந்து விமர்சனம் எழுந்தது.டெக்னாலிஜியினால் இம்மாதிரி பிரச்சனைகளும் வருவதுண்டு.  என்கிறார், ஒலிப்பதிவு மேதை ஸ்ரீதரிடம் பயிற்சி பெற்ற  இந்த இந்தியாவின் முதல் பெண் டிஜிடல் சவுண்ட் டிசைனர்..
பிலிமே இல்லாத சினிமா.
திரைப்பட தயாரிப்பில் மிக முக்கிய செலவு ரா ஸ்டாக் என்று சொல்லப்படும் பிலிமாக்கானது. இன்றைய டிஜிட்டல்யுகத்தில் பிலிம் என்பதே கிடையாது. படங்கள் டிஜிட்டலில் எடுக்கபடுகிறது.  துவக்கத்தில் சிலபகுதி டிஜிட்டல் சிலபகுதி பிலிம் என்று எடுத்து  இணைத்துகொண்டிருந்தார்கள். இன்று முழுப்படமுமே டிஜிட்டல் முறையில் தான் எடுக்க்படுகிறது. முழுவதும் டிஜிட்டலில் எடுக்கபட்ட  முதல் தமிழ்படம் பிஸி ஸ்ரீராமின் வானம் வசப்படுமும் கமலின் மும்பாய் எக்ஸ்பிரஸும்.. டிஜிட்டலில் படமெடுப்பது  இன்றைய தயாரிபாளர்களுக்கு வரப்பிரசாதம். ஒரு 3 மணி நேர படமெடுக்க 18000 அடி பிலிம் தேவை., பிலிமுக்காக பலகோடிகள் செலவாகும் இதை டிஜிட்லில் எடுத்தால் 10 லட்சம் தான் ஆகும் பிலிமுக்கு ஆகும் செலவு இல்லாதது மட்டுமில்லை. பிரிண்ட்களுக்காக செலவழிக்கவும் வேண்டாம். வேறு பல வதிகளும் இருக்கின்றன.

சினிமாவை எடுக்கும்போதே பார்க்கலாம்

எடுத்துகொண்டிருக்கும் காட்சியை எடுக்கும்போதே மானிட்டர் என்ற சின்ன டிவி திரையில் பார்க்க முடியும்  அவசியமானால் காட்சிகளை மாற்றி அமைத்துகொள்ள முடியும். பிலிமாக இருந்த காலத்தில் எடுத்ததை  லாபிற்கு அனுப்பி பிரிண்ட் எடுத்து ரஷ் போட்டு பார்க்க எவ்வளவு வேகமாக செய்தாலும் இரண்டு நாள் ஆகும்.  இதனால் நிறைய நேரம் மிச்சமாகிறது. காட்சிகளை கச்சதிமாக திட்டமிட்டபடி  அதிக ரீஷூட் இல்லாமல் எடுக்கமுடிகிறது.  என்கிறார்கள் டைரக்டர்கள்.
. டிஜிட்டல் சினிமாவில் மிகப்பெரிய பங்கு இப்போது  ஒளிப்பாதிவாளர்கள் பயன்படுத்தபடும் நவீன கமிராகளுக்கு இருக்கிறது என்கிறார். ஒளிப்பதிவாளார் திருவிஜய் ஆர்ம்ஸ்டிராங்.


 ரெட்ஒன் என்ற கமிராவின் பலவகைகளிலிருந்து  லேட்டஸ்டாக அறிமுகபடுத்தபட்ட எபிக் கேமிராக்கள்வரை தமிழ் படங்களில் பயன்படுத்தபடுகிறது.  ஆரம்பத்தில் டிஜிட்டல் கேமிராக்கள்  மீது பல அவநம்பிக்கைகள் இருந்தன. பிலிமுக்கு மாற்றாக இருக்குமா? தரம் இருக்குமா? என்ற கேள்விகள் எழுப்பட்டன. டிஜிட்டல் தொழில் நுட்பம் தமிழ் சினிமாவில் தனி இடத்தை பெற்றுவிட்டது என்பதற்கு  வழக்கு எண், அட்டகத்தி,பீட்சா, போன்ற சிறிய பட்ஜெட் படங்கள் மட்டுமில்லாமல் பில்லா-2 மாற்றான், துப்பாக்கி, விஸ்வரூபம் போன்ற மெகா பட்ஜெட் படங்களிலும் டிஜிட்டல் கேமிராக்கள் பயனபடுத்தபட்டிருப்பதை சுட்டி காட்டுகிறார். நொடிக்கு 200பிரேம்கள்,குறைந்தவெளிச்சத்தில் படம் சிறிய இடங்களில் கூட கேமிராவை வைப்பது போன்ற பல வசதிகள் இருப்பதால் இனி டிஜிட்டல் கேமிராக்களை பயன்படுத்தாமல் படங்கள் உருவாகாது என்கிறார் விஜய் ஆர்மஸ்டிராங். இவர் பத்திரிகை புகைப்படக்காராக  துவங்கி திரைப்பட ஓளிப்பதிவளாராக உயர்ந்திருப்பவர்.  டிஜிட்டல் கேமிராக்களை ஆராய்ந்து விபரங்களை விரல் நுனியில் வைத்திருப்பவர். புதிய ஓளிப்பதிவாளார்களின் உதவிக்காக தன் ஓளியுலகம் வலைபக்கத்தில்  எழுதிவருவர்.

கத்திரி பயன்படுத்தாத எடிட்டிங்.

இதைபோலவே எடிட்டிங் துறையிலும் டிஜிட்டிலினால் மிகப்பெரிய மாற்றம். பிலிம் சுருள்களை வெட்டி ஒட்டி நீளத்தை குறைப்பதெல்லாம் இல்லை. வெட்டபடவேண்டிய காட்சிகள் மாற்றவேண்டிய காட்சிகள் என பட்டியலிடபட்டு ஒரே நேரத்தில் கம்யூட்டரின் மூலம் இணைக்கபடுகிறது, இதிலும் பல நவின கருவிகள் பயனபடுத்தபடுகிறது. எடுத்த காட்சிகளில் வண்ணம் சேர்க்க, மெருகுட்ட டிஜிடல் டெக்னாலஜி உதவுகிறது. விருமாண்டி படத்தில்   இரவின் நிலவொளியில் கமலும் நாயகியும் ஒரு மொப்பட்டில் பயணம் செய்யும் பாடல் காட்சி பகலில் படமாக்கபட்ட ஒன்று. அதை இரவாக  நாம்பார்த்தது கம்யூட்டரின் உபயம்.

பிரமிக்கவைக்கும் மாஜிக்குகள்

டிஜிட்டல் டெக்னளாஜி எழுப்பியிருக்கும் இன்னொரு அலை படங்களின் காட்சிகளில் ஆச்சரியங்களை காட்டுவது. டிரிக்‌ஷாட் என்று சொல்லபட்ட தந்திரகாட்சிகள் கம்யூட்டர் கிராபிக்ஸ் என்று அறிமுகமாகி இன்று விஷுவல் எபெக்ட் ஆக  வளர்ந்திருக்கிறது. சிறிதும்பெரிதுமாக பல VFX ஸ்டுடியாக்கள் இயங்குகின்றன. ஸ்டூயோக்கள் மட்டுமில்லை திறமையான தொழிநுட்ப கலைஞர்களும் பெருகிவருகின்றனர். தமிழின் முதல் 3 டி படமான அம்புலியில் பணியாற்ற வந்த ஒரு ஹாலிவுட் டெக்னிஷியன்  இங்குள்ள  தொழிநுட்ப கலைஞர்கள் ஹாலிவுட்கார்ர்களுக்கு  இணையாக பணியாற்றுவதாக சொல்லி பாராட்டினார்.  ஹாலிவுட்டுக்கும் கோலிவுட்டுக்கும் இடையேயான இடைவெளி சுருங்கிவிட்டது.  இன்று பல ஹாலிவுட் படங்களுக்கு VFX பணிகள் சென்னையிலும் பங்களுருவிலும் நடைபெறுகிறது. VFX டெக்னாலாஜியை  சரியாக பயன்படுத்தினால் பெரிய ஹீரோக்கள் இல்லாமலே ஒரு சூப்பர் சக்ஸ்ஸ் படத்தை கொடுக்க முடியும் என நிருபித்தது “ஈ’  படம்.  அதன் தயாரிப்பில் முக்கிய பங்கு வகித்தவர் 10 ஆண்டுகளுக்கும்               மேல் இந்த துறையில் அனுபவம் மிகுந்த  திரு கமலகண்ணன்.
ஹாலிவுட் திரைப்படங்களில் வெற்றிபெற்ற படங்களில், பத்தில் ஒன்பது படங்கள் விஷுவல் எபெக்ட்டை பயன்படுத்தியதாகவே இருக்கும். ரஷ்யாவில் கடந்த ஆறு ஏழு ஆண்டுகளாக இந்த நிலைமை உள்ளது. ஈரானிய படங்களில் இந்த தொழில்நுட்பத்திற்கு பெரிய வேலை இல்லை. இந்திய திரைப்பட உலகைப் பொறுத்தவரை ஒரு படத்தில் அனைத்து அம்சங்களையும் சேர்க்கவேண்டிய நிலை உள்ளது. வெறும் நகைச்சுவை, வெறும் ஆக்ஷன் என்ற வகைகளில் இங்கே முழுமையாக வரவில்லை. கதையில் விஷுவல் எபெக்ட்ஸை சேர்க்கும் நிலைதான் இருந்திருக்கிறது. விஷுவல் எபெக்ட்ஸை அடிப்படையாக வைத்தே கதை சொல்லும் படங்கள் இங்கு அதிகம் வரவில்லை. அப்படி பெரிய அளவில் வந்த படமாக தெலுங்கில் மஹதீராவைச் சொல்லலாம். தசாவதாரம் படத்தையும் குறிப்பிடவேண்டும். இப்போது இந்தியாவில் விஷுவல் எபெக்ட்ஸை அடிப்படையாகக் கொண்டே திரைக்கதையை சிந்திக்கலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.  என்கிறார். வரப்போகும் கோச்சடையான் இன்னும் லேட்ஸ்டான டெக்னலாஜியான  மோஷன் கேப்சர் என்னும் தொழில்நுட்பத்தைப் பயன் படுத்தி வரப்போகிறது.  ஒரு நடிகரின் நடை உடை பாவனைகளை கணிப்பொறியில் உருவாக்கி ஒரு பொம்மை மேல் செலுத்தி அதை அசையவைக்கும் இந்த டெக்னலாஜியில்  நடிகரின் குணபாவம் அந்த பொம்மைக்கு மாறும். நான் இதை எளிதாகச் சொல்கிறேன். நிறைய சிக்கல் உள்ள தொழில்நுட்பம் இது”   என்று சொல்லும் கமலகண்ணன் வரும் காலங்களில் காலத்தின் கட்டாயத்தால் தமிழ் படத்தில் தொழில்நுட்பங்களின் பயன்பாடு அதிகரிக்கும் என்கிறார்.
பரிட்சை எழுதிய மாணவன் ரிஸல்ட்க்காக காத்திருப்போல் தயாரிப்பாளார்களும், படம் எப்படியிருக்கிறது என்பதை முதல்நாளே பார்க்கத்துடிக்கும் ரசிகனும் எதிர்நோக்கியிருக்கும் திரையிடல் தான் சினிமா தயாரிப்பின் இறுதி கட்டம். திரையரங்குகளில், ‘பொட்டிக்காகக் காத்திருந்த காலம் எல்லாம் காலாவதியாகிவிட்டன..இபோது  இந்த  ரீல் என்ற ஃபிலிம் சுருளே கிடையாது. திரைப்படம் டிஜிட்டல் ஆகிவிட்டதால் சேட்டிலைட் மூலமாகவும், கியூப் என்ற ஹார்டு டிஸ்க் மூலமாகவும் திரையிடும் நவீன புரஜெக்டர்கள், சிறுநகரங்களில் இருக்கும் அரங்குகளுக்குக்கூட வந்துவிட்டன.  தயாரிப்பளார்கள் தரும் பாஸ்வேர்ட்களை பயன்படுதினால் தான் படத்தைபுரஜக்டர்களில் காட்டமுடியும். அதுவும் ஒப்பந்த காலத்திற்கு பின்னர் தெரியாது. அவசியமானால் பணம்கட்டி அல்லது புதிய ஒப்பந்தம் போடவேண்டும். தயாரிப்பாளர்களுக்கு தெரியாமல் சில காட்சிகள் ஓட்டுவது என்பதெல்லாம் இனி முடியாது. ஓடிய காட்சிகளின் விபரங்கள் தினசரி கம்ப்யூட்டர் பதிவு செய்து கொள்ளும்.
பலநகர்புறங்களிலும், சிறுநகரங்களிலும் பல தியட்டர்கள் மூடபட்டதிற்கு டிஜிட்டல் டெக்னலாஜியும் ஒரு காரணம். வளர்ந்துவரும் தொழில் நுட்ப சவால்களை சமாளிக்க புதிய டிஜிடல் ப்ரொஜக்டர், ஒலி அமைப்புகளில் முதலீடுசெய்ய  முடியாமல் ரியல் எஸ்டேட் பக்கம் போய்விட்டார்கள் சிறு தியட்டர்காரகள். பல திரைகள் கொண்ட மல்டிபிளக்ஸ் கலாசாரம் உருவெடுத்து நாடுமுழுவதும் பிரமாண்டமாக வளர்ந்துகொண்டிருக்கிறது.  இன்று இந்தியாவில் 1400 மல்டிபிளக்ஸ் இருக்கிறது. தமிழகத்தில் 50.   நல்ல ரம்மியமான சூழலில், சுத்தமான டாய்லெட் வதிகளுடன் இருக்கும் இந்த வகை தியட்டர்களுக்கு  சினிமா ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு இருக்கிறது  என்கிறார். திருமதிஅர்ச்சனா கல்பாத்தி.



  இவர் சென்னையில் இரண்டு பெரிய மல்டிபிளக்ஸ் தியட்டர்களை நிறுவி நடத்துபவர். தமிழ் நாட்டில்   வரும் 5 ஆண்டுகளில் மல்டிபிளக்ஸ்தியட்டர்கள் மூலம்  100 திரைகளை உருவாக்க திட்டமிட்டிருப்பவர்.. ”ஒரே புரெஜக்கடர் ரூமிலிருந்து பல தியட்டர்களுக்கு படம் காட்டும் வசதியிருப்பதால் நிர்வாக செலவு குறைவதோடு கண்கணிப்பதும் எளிது” என்று சொல்லும் இவர்  இம்மாதிரி ஆடம்பர தியட்டர்களில் கட்டணம் அதிகம் என்பதை ஏற்கவில்லை. சதாரண தியட்டர்களை போல மல்டிபிளக்ஸில் முதல் நாள் அதிக கட்டணம் கிடையாது, ஆன்லைன் டிக்கட் முறை பாப்புலாரக இருப்பதால் பிளாக் மார்கெட் டிக்கெட், நீண்டகீயூ என்பதும் கிடையாது  என்கிறார். மாநில முழுவதும் பல திரைகளில் ஒரே படம் திரையிடப்படுவதால் முதல் வார கலெக்‌ஷனே  முன்காலங்களில் 100 நாள் ஓடிய கலெக்‌ஷன்களை விட அதிகம் என்கிறார் திருமதி அர்ச்சனா.   அமெரிக்காவில் ஆர்ட்பிஷியல் இண்ட்லிஜென்ஸும், நிர்வாக இயலும் படித்திருக்கும் இவர் இந்தியாவில் பல மல்டிபிளக்ஸ்களை உருவாக்கி நிர்வகிக்கும் முதல் பெண் நிர்வாகி..

எதிர்காலம் எங்கள் கையில்,

டிஜிட்டல்சினிமா இளைஞர்களை ஈர்க்கிறது. டிவி சானல்கள்குறும்படங்களை மதிக்கின்றன. அதனால்  ஆர்வம் மிக்க நன்கு படித்த இளைஞர்கள் துணிவுடன் தங்கள் தயாரிப்பை யூடியூபில் விசிட்டிங் கார்டுகளாக்கி தடம் பதிக்க துவங்கியிருக்கிறார்கள். டிஜிட்டல் தொழில்நுட்பத்தினால் சினிமாவை மாற்றமுடியும். ஆனால் கோடிகளை கொட்டி அதிநவீனமாக தயாரிக்கபட்டிருந்தாலும் கதையும் நடிப்பும் கவரவில்லை என்றால் ஒரே வார்த்தையில் விமர்சிக்கும் ரசிகனின் மனதை மட்டும் மாற்றமுடியாது. .

25/10/13

ரஜனியை அமெரிக்காவிற்கு அழைத்த அமெரிக்க அமைச்சர்


அமெரிக்காவில் மெரிலாண்ட் மாநிலம் தலைநகர் வாஷிங்டன் அருகில் இருக்கும் ஒரு சின்ன செல்வாக்குள்ள பணக்கார மாநிலம் அந்த மாநிலத்தில் ”செகரிட்டரி ஆப் ஸ்டேட்” என்ற அரசின் உயர்ந்த பதவிவகிக்கும் நடராஜன் ஒரு  இந்தியர். தமிழர். நம் மாநில காபினெட் அமைச்சருக்கு நிகரான இந்த பதவியில்  ஒரு அமெரிக்க மாநிலத்தின் கவர்னரால்  நியமிக்கபட்டிருக்கும் முதல் இந்தியரும் இவரே.  .

அமெரிக்காவில்  மாநிலங்கள்  நாட்டின் வெளியுறவு கொள்கைகளுக்கேற்ப  தங்கள் மாநில வெளியுறவுதுறையை அமைத்துகொள்ளும். மெரிலாண்டில் அயல் நாடுகளுடன் நல்லுறவை வளர்ப்பது,  தொழில் வளர்ச்சிக்கு அவர்கள் மூலம் உதவுவது, தொழில் நுட்ப பறிமாற்றம், அன்னிய முதலீடுகள செய்வது, , பெறுவது போன்ற விஷயஙகளை கவனிக்கும் துறையை கவனிப்பவர் இவர். இந்தியா உள்பட 10 நாடுகளை கவனிக்கும் இவர்  மாநில கவர்னர் இந்த நாடுகளுக்கு பயணம் செய்யும் முன்னதாக  சென்று முன் ஆயுத்த பணிகளையும் செய்பவர்.
பல புலம்பெயர்ந்த இந்தியர்களைபோல சவாலாக துவங்கி உழைப்பை மட்டுமே நம்பி உயர்ந்தவர் இவர்.     சென்னை பல்கலைகழகத்தில் பயோ டெக்கில் பிஹெச்டி முடித்த பின் 1989ல் அமெரிக்கா வந்து. மிக்சிக்கன் ஸ்டேட் யூனிவர்சிட்டியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக விஞ்ஞானியாக பணியாற்றிய பின் இளம் வயது கனவான பிஸினஸ் செய்ய தன்னை தயார்செய்துகொள்ள ஏம்பிஏ படித்தவர். . துவக்கிய தொழிலில் கிடைத்தது தோல்விகள் உட்பட பல அனுபவங்கள். பின்னர், பல பெரிய நிறுவனங்களுக்கு ஆலோசகராகவும், தலைவராகவும் இருந்த  இவருக்கு நிறைய தொழில் அதிபர்களின் அறிமுகங்களும். ஆசிய பசிபிக் நாடுகளின் சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவராகும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது.  இதிலும் இந்தியா ரவுண்ட்டேபிள், மேரிலாண்ட் சேம்பர்ஸ் போன்றவைகளிலும் நிறைய ஈடுபாட்டுடன் செயலாற்றி வந்த நேரத்தில் அந்த மாநில  கவர்னர் தேர்தல் வந்தது. அதற்கு போட்டியிட்ட மார்ட்டின் ஒமேலாவுக்காக(Martin o’malley) ஆதரவு திரட்டியிருக்கிறார். ஏற்கனவே ஒபாமாவின் மாநில தேர்தல் குழுவில் பணியாற்றிய  இவரது அனுபவம்  கவர்னர் ஒமேலாவின் வெற்றிக்கும் உதவியிருக்கிறது.
அமெரிக்க அரசியலில் . மக்களால் தேர்ந்தெடுக்க படும் அமெரிக்க அதிபரும்,மாநில கவர்னர்களும்  நிர்வாகத்தை செம்மையாக நடத்த தகுதியுள்ள ஒழுக்கமான, மக்களுடன் அதிகம் தொடர்புள்ள திறமையானவர்களை தேர்ந்தெடுத்து தங்களுக்கு உதவ அமைச்சர்களாக நியமித்துகொள்வார்கள். தேர்ந்தெடுக்கபட்ட கவர்னர்  கடந்த ஆண்டு ராஜனை வெளியுறவு  துறைக்கு இணைச்செயலாளாராக நியமித்திருக்கிறார்.
மெரிலாண்டிலுள்  பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க ஆலோசனைகள் வழங்கி அதுகுறித்து இந்திய தொழில் முனைவோரிடமும் நம் மாநில அரசுகளுடனும் தொடர்ந்து தொடர்பிலிருக்கும் இவர் மெரிலாண்ண்டில் பல விதமான தொழில்களுக்கு வாய்ப்பிருப்பதாகவும் ,விரும்புவோருக்கு உதவ காத்திருப்பதாகவும் சொல்லுகிறார்.

இவர் தன் சமீப பயணத்தில் சந்தித்தது  ரஜினிகாந்த்தை.. மாநிலமக்கள் சார்பில் கவர்னர் அளித்த வாழ்த்து மடலையும் தங்கள் மாநிலத்திற்கு வருகை தர அழைப்பும். அளித்த  ராஜனிடம்  ரஜினி சொன்னது” ஒரு தமிழன் அமெரிக்காவில் மந்திரியாகயிருப்பது தமிழ் நாட்டுக்கு பெருமையான விஷயம்”
 புதுகோட்டை மாவட்டத்திலுள்ள முத்துகாடு  என்ற சின்னஞ்சிறிய கிராமத்தில் மின்சார வசதி  இல்லாத காலத்தில் கஷ்டங்களுடன் படித்து வளர்ந்த ராஜன் தான் அந்த கிராமத்தின் முதல் பட்டதாரி, இந்தியா வரும்போது  தவறாமல் தன் கிராமத்திற்கு வரும் ராஜன் தான் படித்த பள்ளியில் தேசத் தலைவர்கள் படங்களுக்கிடையே  முன்னாள் மாணவர் என்று என் படமும் மாட்டபட்டிருப்பது  அமெரிக்க அரசில் அமைச்சராக இருப்பதை விட பெருமையான விஷயமாக நினைக்கிறேன்.” என்கிறார்.
கல்கி 03/11/13
              

13/10/13

ரோபோக்கள் புத்திசாலிகள்

நிஜமாகவே  ஒரு சிட்டியை சிருஷ்டிக்கிறார் இவர் 

எந்திரன் படத்தில் வந்த “சிட்டி”யை நினைவிருக்கிறதா?  எழுத்தாளார் சுஜாதாவின் கற்பனையில் பிறந்த, இயக்குனர் சங்கரின் கைவண்ணத்தில் எழுந்த அந்த சிந்திக்கும் எந்திரனை நிஜமாகவே உருவாக்கியிருக்கிறார்  ஒரு விஞ்ஞானி.   திரு. ஜெகன் நாதன் சாரங்கபாணி.  தமிழ் நாட்டுகாரர். அமெரிக்க மிஸ்சோரி பல்கலை கழகத்தில்  நீண்ட நாட்களாக ஆராய்ச்சி பணியிலிருப்பவர்.  ரோபோட்க்களை வடிவமைப்பதிலும், அதை மேம்படுத்துவதிலும் உலகின் பல இடங்களில் ஆராய்ச்சிகள் நடைபெற்றுகொண்டிருந்தாலும்  முன்னணியில் இருப்பது இவருடையது தான்.  சொன்னதை செய்வது ரோபோட். சொல்லாமலேயே மனிதனை போல  பணியிலிருக்கும்  போதே தன்னிச்சையாக சிந்தித்து  ரோபோக்களை செயல்பட வைக்க முடியமா? என்பது தான் இவரது  ஆராய்ச்சி.  நீண்ட கால தொடர் முயற்சிகளுக்கு பின்னர் இவரது தலமையில் குழுவினர் உருவாக்கியிருப்பது ரோபோக்களுக்கான மூளை.. மனித மூளையில் இருக்கும் கட்டுபாட்டுகேந்திரத்தைபோல வடிவமைக்கப்பட்ட ஒரு குட்டி கம்யூட்டர்முளை பொருத்த பட்ட  ரோபோட் மனிதனைபோலவே சிந்தித்து, தேவையானதை புரிந்து  கொண்டு வேலைகளை செய்யும். இவரது  தலமையில் இயங்கும் ஒரு 14 ரோபோடிக்ஸ் விஞ்ஞானிகளின் குழு இதை சாதித்திருக்கிறது. இந்த வகை ரோபோட்க்களுக்கு  செய்ய வேண்டிய பணிகளையும் இலக்குகளையும் சொல்லிவிட்டால் அதைபுரிந்து  கொண்டு தேவையானதை செய்துகொள்ளும். ஒரு பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும்    பத்து புல்டோசர்களை   கட்டளைகளின் படி இயக்கி கட்டுபடுத்துகின்ற தலைவன் ரோபோட் அவைகளில் ஒன்று சரியாக இயங்கவில்லை என்றால்  உடனே அதை பழுது பார்க்கும் பணியிலும் ஈடுபடும். அல்லது மாற்று ஏற்பாடுகளுக்கு கட்டளைகள் கொடுக்கும். தலமைரோட்டுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் உடனே அடுத்த ரோபோ தலமைப்பொறுப்பை ஏற்கும்.  

இதன் இந்த அலசும், சிந்திக்கும் திறனைகள படிப்படியாக உயர்த்துவதற்கான ஆராய்சிகளை தொடர்ந்து கொண்டிருக்கும்  ஜகன்நாதன் வரும்காலங்களில் ரோபோட்டால் மனிதனைப்போல சிரிக்க முடியும், கோப பட முடியும்,செயற்கையாக அமைக்கபட்ட பைபர் முகத்தில்  உணர்வுகளைகூட காட்ட முடியும் என்கிறார். சொல்லாதைவைகளையும் புரிந்து கொண்டு செயலாற்றும் ரோபோட்களை உருவாக்குவதுதான் எங்கள் ஆராய்ச்சியின் இலக்கு என்று சொல்லும் ஜெகன்நாதன் சாரங்கபாணி அமெரிக்கா வாழ் தமிழர். படிப்பில் புலி. பள்ளிக்காலத்திலிருந்தே எல்லா  வகுப்புகளிலும் முதல் மாணவர். தொடர்ந்து மெடல்களும் பரிசுகளும் பெற்ற இவர் சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் 3  தங்க மெடல்களூடன்  பி.ஈ படிப்பு முடித்த பின் அமெரிக்காவிற்கு படிக்க சென்றார்.  அங்கும் படிப்பில் பல வெற்றிசாதனைகளை படைத்தவர். முதல் டாக்டரேட் பெற்றவுடேனேயே முழுநேர ஆராய்ச்சி பணிகளை விரும்பி ஏற்ற இவர்  கம்ப்யூட்டர் சயின்சை தொடர்ந்து ரோபோட்டிக்ஸ்ஸில் ஆர்வம் அதிகமாகி புதிய படைப்புகளை உருவாக்கி  அதற்கான காப்புரிமைகள் பெற ஆரம்பித்தார்.
இப்படி இதுவரை பெற்றிருப்பது 20 உரிமைகள். போயிங் போன்ற பல பெரிய நிறுவனங்களிலும், அமெரிக்க ராணுவ துறையில் அவைகள் பயன்படுத்தபடுகின்றன. 109 ஆராய்சிகட்டுரைகளயும், பல புத்தகங்களையும் எழுதியிருக்கிறார்.  அமெரிக்க பல்கலைகழங்களில் ஆராய்ச்சி பணிகளை தொடரும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தேவையான நிதி ஆதாரத்தை அதன் துறை தலைவர்களுக்குதான் அரசாங்கமும், தனியார் நிறுவனங்களும் வழங்கும்.  அந்த வகையில் இவர் பொறுப்பிலிருக்கும் நிதி 13 மில்லியன் டாலர்கள். இவரிடம் ஆராய்ச்சி மாணவராக இருப்பதே மிகப் பெரிய கெளவரமாக கருதப்படுவதால் உலகின் பலநாடுகளின் ஆராய்ச்சி மாணவர்கள் சேர காத்திருக்கின்றனர்.  இந்த துறையில் சாதிக்க இன்னும் பல வாய்ப்புகள் இருக்கின்றன வாருங்கள் என ஆர்வமுள்ளவர்களை அழைக்கிறார்.


சிந்திக்கும், சிரிக்கும், கோப்படும் ரோபோட்க்கள் காதலிக்குமா?  ”நாங்கள் படைக்கும் ரோபோக்கள் புத்திசாலிகள்” என்கிறார் ஜகன்நாதன்.


கல்கி 30/10/13