17/1/15

மனதில் நிற்கும் மகிழ்வான தருணங்கள்




எழுதுபவனின் வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்று அவனது புத்தகம் சிறப்பாக வெளியிடப்படுவது, அவனது எழுத்துக்காக கெளரவிக்கபடுவது,  எனக்கு அத்தகைய தருணம் 12/1/15 அன்று வாய்த்தது. அதிலும் மாலனுடன் சேர்ந்து அந்த கெளரவத்தை பெற்றது மிக சந்தோஷமாக இருந்தது. இருவரும் சேர்ந்து எழுத ஆரம்பித்தது 1975ல் மணியனின் இதயம் பேசுகிறது இதழில். பின் மாலன் எழுத்தையே வாழ்க்கையாக்கி கொண்டார். நான் வாழ்க்கையின் நடுவே அவ்வப்போது எழுதிக்கொண்டிருந்தேன். இப்போது சற்று அதிகமாக எழுதுகிறேன். ஆனால் இருவரும் ஒரே மேடையில் கெளரவிக்க பட்டது இதுதான் முதல் முறை.. தங்கள் பிளைகள் எழுதுவதில் பெருமை கொண்ட எங்கள் பெற்றோர்கள் சொர்க்கத்திலிருந்து பார்த்து சந்தோஷபட்டிருக்கும் இந்த காட்சிகளை காண அருமை மனைவியும் அன்பு மகனும் நேரில் பங்கேற்றது மகிழ்ச்சியின் கனத்தை கூட்டிற்று.






தமிழகத்தின் சிறு கிராமம் ஒன்றில் பிறந்த பால. பாலச்சந்திரன் இன்று உலகம் அறிந்த ஒரு மேனேஜ்மெண்ட் குரு.சிகாகோவில் வசிக்கிறார்.  கிரேட் லேக்ஸ் எனற மேலாண்மைக் கல்லூரியை நிறுவி 10 ஆண்டுகளில் அதைமுதல் 10 நிறுவனங்களுக்கள் நிலைநிறுத்தியிருப்பவ்ர்.  சவாலான, சாதனையான அவரது வாழ்க்கைக் கதையை நான் புதிய தலைமுறையில் தொடராக வெற்றி வெளியே இல்லைஎன எழுதியிருந்தேன்.  அடுத்த வாரம் அது புத்தகமாக வெளிவருகிறது.
அதன் ஆங்கில மொழிபெயர்ப்பான “DARE TO DREAM” மும்பை தாஜ் ஹோட்டலில் இந்திய கார்ப்ரேட்டின் முன்னணித் தலைவர்கள் கேக்கி டாடிசேத் (Mr.Keki Dadiseth) (இந்துஸ்தான் லீவர் தலைவர்,  ஆதி காத்திரஜ், ஜெரிராவ் (சிட்டி வாங்கியின் முன்னாள்தலைவர் விருந்தினர்களாக பங்கேற்ற விழாவில் வெளியிடப்பட்டது.உடல் நல குறைவால் ரத்தன் டாட்டா பங்கேற்கவில்லை.  மும்பயின் பல கார்ப்பெரேட்களின் ”தலை”கள் பங்கேற்ற இந்த விழாவில் ஜெரிராவ் புத்தகத்தைவெளியிட்டு பேசினார். அழகான ஆங்கில உரை.  அவருக்கு தமிழும் நன்றாக தெரிந்திருப்பது  ஒர். ஆச்சரியம் குறளை மேற்கோள் காட்டி, ஆங்காங்கே புத்தக பக்கங்களைசுட்டிகாட்டி பேசினார். பேராசிரியர் பாலாவின் வாழ்க்கை சாதனை தமிழ்நாட்டுக்கு பெருமை என்றார்.
ஆங்கில புத்தகங்களின் வீச்சு அதிகம் என்பதை அறிந்திருந்தாலும் அன்று மும்பைவிழாவில் அதை உணர முடிந்தது. மொழிபெயர்ப்பினால் என் எழுத்து புதிய திசையில பயணிக்க துவங்கியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.  


11/1/15

இருளில் நிசப்தத்தை படிப்பவர்


நண்பர் மணிகண்டனின் வலைப்பூவிலிருந்து 





JAN 11, 2015
அடேயப்பா



 நேற்று காலையில் பதற்றமாகத்தான் இருந்தது. இயல்பான பதற்றம்தான். வழக்கமாக புத்தக வெளியீட்டுக்கு முன்பாக இருக்கும். ஆனால் பதிப்பாளரும், வேடியப்பனும் உற்சாகமாகத்தான் இருந்தார்கள். கொஞ்ச நேரம்தான். கண்காட்சிக்குள் நுழைந்ததும் இயல்பாகிவிட்டேன். 

திருப்பதியிலிருந்து மகேஷ் தனது நண்பரின் உதவியோடு வந்திருந்தார். வழக்கமாக புத்தக வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொள்பவர்களுக்கு எழுத்தாளர்கள் சார்பில் ஏதாவது நினைவுப்பொருளை வழங்குவார்கள். அதைப் பற்றி நான் நினைக்கவே இல்லை. ஆனால் மகேஷ் எனக்கு வழங்கினார். அதன்பிறகுதான் எனக்கு உறைத்தது. போக்குவரத்துச் செலவையாவது வாங்கிக் கொள்ளுங்கள் என்றால் அதையும் மறுத்துவிட்டார். பார்வை இல்லையென்றாலும் எப்படி நிசப்தத்தை வாசிக்கிறார் என்பதையெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். நெகிழ்ந்து கொண்டிருந்தேன். அவர் கொடுத்துச் சென்ற ஏழெட்டு திருப்பதி லட்டுகளை கண்காட்சியில் எதிர்பட்டவர்களுக்கெல்லாம் கொடுத்துக் கொண்டிருந்தோம். ஒரு அழைப்புக்காக இவ்வளவு மெனக்கெட்டிருக்கிறார்.

அதே போலத்தான் திருமதி மீரா ரமணன் தம்பதியினரும். ரமணன் அவர்கள் தனது கைக்காசைக் கொடுத்துவிட்டுச் சென்றார். ட்ரஸ்ட்டுக்காக வைத்துக் கொள்ளுங்கள்என்றார். அறக்கட்டளைக்காக கையில் பணம் வாங்குவதில்லை. அது ஒரு எழுதப்படாத விதி. கையில் வாங்குவதையோ அல்லது பெர்சனல் வங்கிக் கணக்கு எண்ணைக் கொடுப்பதையோ முழுமையாகத் தவிர்த்துவிடுவதுதான் நல்லது. வாங்கத் துவங்கினால் அது தேவையற்ற பேச்சுகளுக்கு இடமளித்துவிடும். அதனால் அந்தத் தொகையை பதிப்பாளரிடம் கொடுத்து அதை ராயல்டியுடன் சேர்த்துத் தரச் சொல்லிவிட்டார்கள். ராயல்டி தொகை அரசுப்பள்ளியில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவிக்கு வழங்கப்படும் என்பதால் இந்த ஏற்பாடு.

இளவரசன் பத்துப் பிரதிகளை வாங்கி தனது நண்பர்களுக்கு விநியோகிப்பதாகச் சொன்னார். புகழேந்தி ஐந்து பிரதிகள் வாங்கிக் கொண்டு அவரும் அதையேதான் சொன்னார். இன்னும் நிறையப்பேர்கள். அத்தனை பேரையும் நினைவு படுத்த முடியுமா என்று தெரியவில்லை.

மாலை ஏழு மணிக்குள் டிஸ்கவரி அரங்கில் கொண்டு வந்து வைத்திருந்த நூறு பிரதிகளும் தீர்ந்துவிட்டன. பதிப்பாளரும், விற்பனையாளரும் இது ஆச்சரியம் என்றார்கள். எனக்கே ஆச்சரியம்தான். இவ்வளவு பேர் நம்புகிறார்கள். தாங்கிப் பிடிக்கிறார்கள். ஏற்கனவே
 ஆன்லைன் ஆர்டர்கள் கிட்டத்தட்ட நூறை நெருங்கியிருக்கும் போலிருக்கிறது. ஆக, பதிப்பாளர் தப்பித்துவிடுவார் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. இதுதான் அவசியம். நம்மை நம்பி முதலீடு செய்கிறார்கள். அவர்கள் சிக்கிக் கொள்ளக் கூடாது என்றுதான் பதற்றமாக இருந்தேன். 
  
 அதெல்லாம் ஒரு பக்கம். 

புத்தகம் அச்சிடுவதும் அதை விற்பனை செய்வதும் கூட பெரிய விஷயமாகத் தெரியவில்லை. பதிப்பாளரிலிருந்து, விற்பனையாளர், வாசித்துவிட்டு நமக்காக மெனக்கெடுபவர்கள் என இப்படியான மனிதர்கள் உடன் நிற்கிறார்கள் அல்லவா? அதுதான் உச்சபட்ச சந்தோஷம். அதற்காக மட்டுமே இன்னும் எவ்வளவு வேண்டுமானாலும் உழைக்கலாம். சிரமப்படலாம்.

மாலை வரை வீட்டிலிருந்து ஒரு அழைப்பும் இல்லை. கிளம்பும் போதே பார்க்கர் பேனா ஒன்றை வாங்கிக் கொடுத்து சட்டைப்பையில் வைத்துக் கொள்ளச் சொல்லியிருந்தாள். இதெல்லாம் ஓவரா இல்லையா?’ என்றேன்.
 எந்த ஃபோட்டோவிலும் அந்தப் பேனா இல்லாமல் நீங்க இருக்கக் கூடாதுஎன்று உத்தரவிட்டிருந்தாள். யாருக்குமே பயப்படவில்லையென்றாலும் அவளுக்கு பயப்படுகிறேன். பயப்பட்டுத்தானே ஆக வேண்டும்? 

மாலையில்தான் அழைத்துக் கேட்டாள் புத்தகக் கண்காட்சியில் உங்களை மதிச்சாங்களா?’என்று. என்ன பதில் சொன்னாலும் ம்க்கும்என்ற பதில்தான் வரும் என்று தெரியும். பதில் சொன்னேன். நினைத்த பதிலேதான் வந்தது.

இன்றும் புத்தகக் கண்காட்சியில் சுற்ற வேண்டும். நேற்றே பட்டியல் தயாரித்துவிட்டேன். இன்று வாங்கி விடலாம். வழக்கமாக கையில் பணத்தோடுதான் வருவேன். இந்த மாதம் புது நிறுவனத்திற்கு மாறியதால் சம்பளம் வரவில்லை. தம்பியிடமிருந்து மூன்றாயிரம் ரூபாய் வாங்கி வந்து எண்ணி எண்ணி செலவு செய்து கொண்டிருந்தேன். அந்தக் கடவுளுக்கே பரிதாபமாக இருந்திருக்கும் போலிருக்கிறது. பழைய நிறுவனத்தில் இறுதிக் கணக்காக ஒரு தொகையைப் போட்டிருக்கிறார்கள். எஸ்.எம்.எஸ் வந்ததும் இரண்டு சிறகுகள் முளைத்ததை அருகிலிருந்தால் நீங்கள் பார்த்திருக்கலாம். இன்று தூள் கிளப்பிவிடலாம். கடவுளுக்கும் நன்றி.

எல்லாத் திசைகளிலிருந்தும் கிடைக்கும் இந்த அன்பும் பிரியமும் எனது உழைப்புக்கும் திறமைக்கும் மீறியது என்று நினைக்கிறேன். உண்மையாகவே மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன். ஒவ்வொருவருக்கும் மனப்பூர்வமான நன்றி.

DARE TO DREAM



 தமிழகத்தின் சிறு கிராமம் ஒன்றில் பிறந்த  பால. பாலச்சந்திரன் இன்று உலகம் அறிந்த  மேனேஜ்மெண்ட் குரு. அவரது வாழ்க்கை கதையை நான் புதிய தலைமுறையில் தொடராக ”வெற்றி வெளியே இல்லை” என எழுதியிருந்தேன். அது புத்தக வடிவில் இம்மாதம் 23ம் தேதி வெளியாகிறது.  அதற்கு முன் அதன் ஆங்கிலபதிப்பு நாளை12/1/15ல் மும்பையில் வெளியாகிறது. இந்திய கார்ப்ரேட்டின் முன்னணித்  தலைவர்கள் ரத்தன் டாட்டா, ஆதி காத்திரஜ், தீபக்  ப்ரேக்  விழாவில் பங்கேற்கிறார்கள்.(விபரங்கள் அழைப்பில்)
விழா விபரங்களும் படங்களும் அடுத்த பதிவில்


8/1/15

டிராகன் பறக்க ஆரம்பித்துவிட்டது



பழமை,வறுமை, குழப்பம், பெரிய மக்கள் தொகை, முதலாளித்துவத்தை எதிர்க்கும் கம்னியூசம் எல்லாம் இருந்தும்  பிரம்மாண்ட வளர்ச்சியை சீனா அடைந்திருப்பதின் ரகசியம் என்ன?
தொடர்ந்த வளர்ச்சி என்ற தொலைநோக்குடன் இயங்கும் சீரிய தலமையா?
ஜனநாயகத்தை பலிகொடுத்து அடைந்து கொண்டிருக்கும் செயற்கையான வளர்ச்சியா?
இந்தியா இது போன்ற வளர்ச்சியை திட்டமிட்டு அடையமுடியுமா?
இத்தனை வேகத்தில் பறக்கும் டிராகன் உலகின் முதலிடத்துக்குச் சென்றாலும் அந்த இடத்தில் நிலைக்குமா? 
அந்த இடத்தில் தன்னை உறுதியாக தக்க வைத்துக்கொள்ளுமா?
இந்த அடுக்கடுக்கான கேள்விகளை ஆராய்கிறது இந்த புத்தகம். 

எனது இந்த புதிய புத்தகத்தை கிழக்கு வெளியிட்டிருக்கிறது பக் 104 
விலை 90.ரு. புத்தக கண்காட்சியில் கிடைக்கும் ஆன்லையனிலும் வாங்கலாம்

3/1/15

புத்தாண்டின் முதல் நாள் காலையில்


புத்தாண்டின் முதல் நாள் காலையில் முதலில் படித்த பதிவு இது. நண்பர் சரவணின் விமர்சனம். ஒரு அருமையான பதிவாக கருதுகிறேன். எழுதியிருப்பதை சொல்லிவிட்டு விடுபட்டிருப்பதை அவர் பார்வையில் பேசியிருக்கிறார். எழுதுபவனின் சந்தோஷங்களிள் ஒன்று அதைப்பற்றி மற்றவர்கள் பேசுவது. இந்த புத்தாண்டுதினத்தில் அந்த சந்தோஷத்தை கொடுத்த நண்பர் சரவணுக்கு நன்றி.





பூ.கொ. சரவணன்
நேருவின் ஆட்சி- பதியம் போட்ட 18 ஆண்டுகள் புத்தகத்தைப் புத்தாண்டின் முதல் புத்தகமாக வாசித்து முடித்தேன். நேருவின் வாழ்க்கையைப் பற்றிப் பேசுகையில் தேச விடுதலைக்குப் பாடுபட்ட காலத்தைப் பதிவு செய்துவிட்டு, சீனா,காஷ்மீர் சிக்கல்கள் ஆகியவற்றில் நேரு சொதப்பினார் என்று சொல்வதோடு நேருவின் ஆட்சிக்காலத்துக்கு முற்றும் போட்டு முடித்துவிடுவதே பெரும்பாலும் நடக்கிறது. நேருவின் இந்தப் பதினெட்டு ஆண்டுகால ஆட்சி பற்றித் தனியான புத்தகங்கள் வந்ததில்லை என்கிற பெரிய குறையை ஆசிரியர் தீர்க்க முயன்றிருக்கிறார். நூலின் உள்ளடக்கம் பற்றிப் பேசிவிட்டு பின்னர் விமர்சனங்களுக்குள் செல்கிறேன் :
தனியாக முஸ்லீம்களுக்கு ஒரு தேசம் என்று சொல்லி வெறுப்பை விதைத்து அறுவடை செய்த ஜின்னாவுக்கே நாட்டின் பிரதமர் பதவியைக் கொடுத்து சிக்கலைத் தீர்க்கலாம் என்று காந்தி சொன்ன பொழுது அதை நேரு ஏற்க மறுத்தார். கிருபாளினி, படேல் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி நேருவை தலைமைப் பொறுப்புக்குக் கொண்டு வருவதைக் காந்தி உறுதி செய்திருந்தாலும் எல்லாச் சமயத்திலும் அவர் சொல்வதே தான் கேட்க வேண்டிய அவசியமில்லை என்பதை நேரு செய்து காண்பித்தார். இந்திய விடுதலையைப் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் சர்ச்சில் முதலிய பலபேர் எதிர்க்க உப்பு சத்தியாகிரகத்தின் பொழுது இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த இர்வின் உணர்ச்சியும், உண்மையும் கலந்த ஒரு உரையை நிகழ்த்தி நாடாளுமன்ற அனுமதி பெற்று தனியான தேசமாக இந்தியா உருவாவதை சாதித்தார்.
பிரிவினைக்குப் பிறகு தேசம் உருவாகிறது. நேரு விடுதலை நாளுக்குத் தயாராக வேண்டும். தேச விடுதலைக்கு முக்கியக் காரணமான காந்தி மதத்தின் பெயரால் வெட்டிக்கொண்டிருந்த மக்களிடையே அமைதியை கொண்டுவர போயிருந்தார். லாகூரில் இந்துக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்கிற தகவல் வந்து சேர்ந்து கண்ணீர்விட்டு அழுத நேரு எப்படி மக்கள் முன் உரையாற்றப் போகிறோம் என்று உள்ளுக்குள் கலங்கிக்கொண்டு இருந்தார். எந்தத் தயாரிப்பும் இல்லாமல், வெறுப்பை விடுத்து சகோதரர்களாக இணைந்து புதுத் தேசம் படைப்போம் என்பதை ‘விதியோடு சந்திப்புக்கு ஒரு ஒப்பந்தம்’ உரையில் நேரு தேச மக்களின் மனதில் விதைத்தார். மவுண்ட்பேட்டனிடம் நேரு கொடுத்த அமைச்சரவை பட்டியல் என்று பெயரிடப்பட்ட உறைக்குள் வெறும் வெள்ளைத்தாள் தான் இருந்ததாம்.
சமஸ்தானங்களை இந்தியாவோடு இணைக்கும் பணியில் படேல், மேனன் ஆகியோர் ஈடுபட்ட பொழுது நேரு உறுதுணையாக இருந்தாலும் சமயங்களில் முரண்டும் பிடித்திருக்கிறார். இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த நிஜாம் ஆண்டுகொண்டிருந்த ஹைதரபாத்தை உடனே தாக்குவது இந்திய முஸ்லீம்களை அச்சத்துக்கு உள்ளாக்கும் என்று அமைதி காத்த நேருவை மீறி அங்கே ரஸாக்கர்களின் அட்டூழியத்தை ஒழிக்கப் போலீஸ் நடவடிக்கை தேவை என்று படேல் வாதிட்ட பொழுது ‘நீங்கள் மதவாதி!’ என்று சொல்லிவிட்டு நேரு வெளியேறினார். பின்னர் ராஜாஜி கிறிஸ்துவக் கன்னியாஸ்திரிகள் வன்புணர்வுக்கு ரஸாக்கர்களால் உள்ளாக்கப்பட்டு இருப்பதாக அயல்நாட்டு தூதுவர் அனுப்பிய கடிதத்தைக் காண்பித்ததும் நிலைமையின் வீரியம் உணர்ந்து நேர்ந்த அவலங்களால் ஏற்பட்ட கண்ணீரை அடக்க முடியாமல் போலீஸ் நடவடிக்கைக்கு அனுமதி தந்தார் நேரு. இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்த ஜூனாகாத்தை ஜின்னா தந்திரமாகப் பெற்ற பின்னர் அதை இந்தியாவோடு இணைத்த பின்பு அங்கே வாக்கெடுப்பு நடத்தி இணைத்துச் சிக்கல்களை நேரு தவிர்த்தார்.
காஷ்மீருக்குள் பாகிஸ்தான் பகுதி பதான்கள் நுழைந்த நிலையில் இந்தியாவின் உதவியை ஹரிசிங் கேட்டதும் ராணுவத்தை நேரு அனுப்பி வைக்கலாமா வேண்டாமா என்று நீண்ட நெடிய கூட்டத்தை நடத்தி, போரைத் தவிர்க்கலாம், ரஷ்ய உதவி, ஆப்ரிக்க மாதிரிகள் என்று ஓயாமல் பேசிக்கொண்டே இருந்தார். ராய்புச்சர் என்கிற ஆங்கில அரசை சேர்ந்த ராணுவத் தளபதி பதவியை ராஜினாமா செய்துவிடுவேன் என்று மிரட்டுவதும் நடந்தது. படேல் தீர்க்கமாகக் காஷ்மீர் நோக்கி ராணுவம் செல்லும் என்று சொன்னதோடு, ராய் புச்சர் பதவி விலகிக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டார். காஷ்மீர் இந்தியா, பாகிஸ்தான் இரண்டு பிரதேசங்களுக்கு இடையே பிரிந்திருக்க வேண்டும் என்பதையே பிரிட்டன் விரும்பியிருக்கிறது. அடித்துக்கொண்டு கிடப்பார்கள் என்பது ஒருபுறம், காஷ்மீர் முழுமையாக இந்தியாவுக்குக் கிடைத்துவிட்டால் பாகிஸ்தானை அது விழுங்கிவிடும் என்றும் அஞ்சியிருக்கிறார்கள். காஷ்மீர் சிக்கலை ஐ.நா. சபைக்குக் கொண்டு சென்று உள்நாட்டு சிக்கலாக முடிந்திருக்க வேண்டிய அதைச் சர்வதேச சிக்கலாக நேரு மாற்றினார் என்பதோடு, வாக்கெடுப்புக்கு அவர் ஒத்துக்கொண்டார். பாகிஸ்தான் முழுமையாக விலகிய பிறகே வாக்கெடுப்பு என்பதைப் பாகிஸ்தான் கேட்கத்தயாராக இல்லை என்பதால் முதல் போர் முடியாத போராக இருக்கிறது.
காந்தியின் படுகொலைக்குப் பின்னர்ப் படேல், நேரு இணைந்து ஆர்.எஸ்.எஸ். அமைப்புத் தடை செய்யப்படுவதை உறுதி செய்ததன் மூலம் இந்தியா இந்து பாகிஸ்தான் ஆவதை தடுத்தார்கள். விடுதலைக்குப் பின்னர் ஜனநாயக ரீதியிலேயே தேர்தல் நடக்கவேண்டும் என்று சொல்லி கம்யூனிஸ்ட் பாணியிலான அரசையோ, ராணுவ அரசையோ, சர்வாதிகார போக்கையோ நேரு முன்னெடுக்காமல் உலகின் மிகப்பெரிய தேர்தலை நடத்தி சாதித்தார்.
இந்துப் பெண்களுக்கு ஜீவனாம்சம், விவாகரத்து பெற உரிமை, சொத்துரிமை ஆகியவற்றை வழங்கும் இந்து பொதுச்சட்டங்களை நேரு நிறைவேற்ற முயன்ற பொழுது இந்து மதத்தின் காவலர்களாகச் சொல்லிக்கொள்ளும் ஜனசங்கம், ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் அதை எதிர்த்தன. ஆனால், அவற்றை நிறைவேற்றி சீர்திருத்தங்களுக்குச் சட்டரீதியான முகம் கொடுத்தார் நேரு.
மொழிவாரியாக மாநிலங்களைப் பிரிவினை ஏற்படுத்திய ரணத்தால் முதலில் மறுத்த நேரு அதற்குப் பரவலான ஆதரவு இருந்ததால் அப்படியே அமைக்க ஜனநாயகரீதியில் ஒத்துக்கொண்டார். ‘நியாயமான முறையில் நியாயமான தேசத்தைக் கட்டமைத்தேன்.’ என்று நேரு சொன்னது பெரும்பாலும் உண்மையே. பழங்குடியினர், பட்டியல் ஜாதியினர் ஆகியோருக்கு உதவிகள் தேவை என்கிற எண்ணம் கொண்டிருந்தவர் நேரு. அதேசமயம் அவர்களுக்கு இட ஒதுக்கீடு தருவதைக்கூட அவர் விரும்பவில்லை. திறன் குறையும் என்று அவர் கருதினார். எனினும், அவர்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டை நீக்க அவர் முயற்சிக்கவில்லை. அதேசமயம் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்கிற பரிந்துரையை அதைப் பற்றி ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவின் தலைவரே நிராகரித்ததால் கிடப்பில் போட்டார்கள்,
முழுமையாகச் சோஷலிசம் என்று பாயாமல் நேரு ஜனநாயக சோசலிசத்தை முன்னெடுத்தார் என்பதே உண்மை. அவரின் ஆரம்பகால வேகத்தைப் பார்த்துக் கம்யூனிஸ்ட்களே அஞ்சினாலும் அவர் அத்தனை வேகமாகச் சோசியலிசம் நோக்கிப் பயணப்படவில்லை என்பதே உண்மை. கல்வி, நிலப்பங்கீடு ஆகியவற்றில் மகத்தான சீர்திருத்தங்கள், தொழிலாளர்கள் மீது காவல்துறை பாயத்தடை என்று இயங்கிய நம்பூதிரிபாட் அரசை கலைக்கச் சொல்லி உத்தரவிட்ட நேருவின் செயல் அவரின் ஜனநாயகப்பண்பில் கரும்புள்ளியாக விழுந்தது.
சீனச்சிக்கலில் கிருஷ்ணமேனனை நம்பிக்கொண்டு என்ன நடக்கிறது என்றே கவலைப்படாமல் நேரு இருந்தார். சீனா பல்வேறு பகுதிகளில் நுழைந்து கையகப்படுத்தி இருந்த பொழுது சீனப்படைகளைத் தூக்கி எறிவேன் என்று நாடாளுமன்றத்தில் சவால் விட்டுக்கொண்டிருக்கிற அளவுக்கு அறியாமை கொண்டிருந்தார் அவர். கவுல், முல்லிக் முதலிய திறனற்ற தளபதிகள் ஜீப் ஊழலில் சிக்கிய கிருஷ்ணமேனனின் தயவில் களத்தில் நின்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் உயிரழக்க முக்கியக் காரணமானார்கள். தலாய்லாமாவை இந்தியாவுக்குள் அனுமதித்த நேரு சீனாவின் திபெத் ஆக்கிரமிப்பை ஏற்றுக்கொண்டாலும் அவர்களின் நம்பிக்கையை அவர் பெறவே இல்லை என்பதைச் சீனப் போர் நிரூபித்தது. போரில் இந்தியா சிக்குண்டு திணறிய பொழுது அமெரிக்காவே பேருதவி செய்தது. ஆயுதங்கள் தந்ததோடு நில்லாமல், விமானப்படையை அனுப்புவதாகவும் அது பயமுறுத்தியதும் சீனா போரை முடித்துக்கொள்ளக் காரணம்.
அணிசேராக்கொள்கையை உருவாக்கி சுதந்திரமான அயலுறவுக்கொள்கையை நேரு சாதித்தார். இந்தியை தென்னகத்தின் மீது திணிக்கிற வேலையை அவர் செய்யவில்லை. நீங்கள் விரும்பும் வரை ஆங்கிலமே இணை மொழியாகத் தொடரும் என்று அவர் உறுதியளித்தார். சீனப்போர் தோல்விக்குப் பின்னர்த் தான் பெருந்தோல்வி அடைந்த கே ப்ளான் வந்தது. இடதுகையில் பக்கவாதம், சீராகச் செயல்படாத சிறுநீரகம் இவற்றோடும் இந்திய மக்களுக்காக உழைத்த ஆளுமையாக நேரு திகழ்ந்தார். 150 பக்கங்களில் இத்தனை பெரிய வாழ்க்கையை அடக்கியதற்கு ஆசிரியருக்கு பூங்கொத்து. மேலும் பல இடங்களில் பின்புலத்தைத் தொட்டுவிட்டே நேரு கால அரசியலுக்கு வந்து அசத்துகிறார். நேரு பற்றி தமிழில் வந்த புத்தகங்களிலேயே ( மொழிபெயர்ப்பான இந்தியா காந்திக்குப் பிறகை தவிர்த்து ) சிறந்த புத்தகம் இதுவே.
சிக்ஸ்த்சென்ஸ் வெளியீடு
ஆசிரியர் : ரமணன்
பக்கங்கள் :152
விலை : 115
புத்தகத்தை வாங்க http://www.wecanshopping.com
---------------------------------------------------------------------------------------------------
இனி விமர்சனங்கள் :
படேல் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தடை செய்தார் என்று எழுதுகிற பகுதியில் நேரு எப்படி ஆர்.எஸ்.எஸ். அமைப்பை எப்பொழுதும் சந்தேகத்தோடு பார்த்தார், அது சார்ந்து அவருக்கும் படேலுக்கும் இருந்த கருத்துப் பேதங்களைப் பதிவு செய்யவில்லை ஆசிரியர். படேல் மட்டுமே ஆர்.எஸ்.எஸ். தடைக்கு முழுக்காரணம் என்பது போன்ற பிம்பம் எழுகிறது. சுயராஜ்யம் எனது பிறப்புரிமை என்ற திலகர் பெண்ணின் மணவயதை ஏற்றியதை ஆதரிக்க மறுத்தது ஆச்சரியமே என்று எழுதுகிற ஆசிரியருக்கு திலகர் பசுவதைக்கு ஆதரவாகத் தீவிரமாக இயங்கியதும், அவரின் கணபதி, சிவாஜி விழாக்கள் மதரீதியாக மாறி இந்து-முஸ்லீம் கலவரங்களுக்கு வழிவகுத்தது தெரிந்திருக்கும். மத ரீதியாகப் பழமைவாதியாகவே அவர் இருந்தார் என்கிற பொழுது எப்படி இப்படி ஆச்சரியப்பட்டார் என்று தெரியவில்லை.
ஷேக் அப்துல்லா பகுதியில் ஒரு வரலாற்றுப் பார்வைக்குப் பதிலாக ஆசிரியரின் சொந்தப் பார்வையே மிகுந்துள்ளது வருத்தமான ஒன்று. ஷேக் அப்துல்லாவை துரோகி என்று சொல்கிற அளவுக்கு ஆசிரியர் சென்றுவிட்டார். அந்த வாதத்துக்குள் போக விரும்பாவிட்டாலும் ஜனசங்கம் காஷ்மீரில் செய்த குழப்பங்கள் அப்துல்லாவை தனிக் காஷ்மீர் என்பதை நோக்கி தீவிரமாகத் தள்ளியது என்பதையும் சமநிலையோடு ஆசிரியர் பதிவு செய்திருக்க வேண்டும். ஐந்தில் நான்கு பேர் இஸ்லாமியர்கள் என்பதையும், அவர்கள் நிலை ஹரிசிங் காலத்தில் மோசம் என்பதையும் பதிந்துவிட்டு ஷேக் அப்துல்லா கொண்டுவந்த நில சீர்திருத்தங்கள் காஷ்மீரை முஸ்லீம் தேசமாக மாற்றியது என்பது சாய்வான வாதம் இல்லையா ? ஷேக் அப்துல்லா மதச்சார்பின்மையைத் தூக்கிப் பிடித்துக் கலவரங்கள் என்பதை மத ரீதியாக நடக்காமல் தடுக்கிற முக்கியமான சக்தியாக அவர் காலத்தில் இருந்தார். தேர்தலில் தொகுதிகளை விரும்பியபடி வரைந்து கொண்டார் அவர் என்று எழுதும் ஆசிரியர் ஜனசங்கம் ஜெயித்திருக்குமே என்கிற ஆதங்கத்தோடு எழுதியதாகப் படுகிறது. பல தொகுதிகளில் எதிர் வேட்பாளர்கள் நிற்பதை தேர்தல் மனுக்களை நிராகரித்துத் தவிர்த்ததில் நேருவுக்குப் பங்கில்லை என்று மறுத்துவிட முடியாது. ஷேக் அப்துல்லா பக்கம் பட்ட பார்வை ஷ்யாம் பிராசத் முகர்ஜி பக்கமும் சென்றிருக்கலாம். நூலின் கனத்தை அசைக்கிறது இப்பகுதி.
அதே போலச் சீனாப் பக்கம் நேரு சாதகமாக இருந்தார் என்று எழுத வந்ததற்குக் கொரியப் போரில் அவர் செய்த விமர்சனத்தை எடுத்துக்காட்டாகக் காட்டியதற்குப் பதிலாக ஐ.நா. சபையில் நிரந்தர உறுப்பு நாடாகச் சீனாவை ஆக்கச்சொல்லி கேட்டதையோ வேறு எதையோ குறிப்பிட்டு இருக்கலாம். இந்தியா கொரியப்போரில் இடதுசாரி அரசுகள் மற்றும் அமெரிக்கா முதலிய நாடுகளின் விமர்சனங்களை ஒருங்கே பெறுகிற அளவுக்கு நடுநிலையோடு செயல்பட்டது என்பது பலரின் பார்வை.
இட ஒதுக்கீட்டை நேரு விரும்பவில்லை என்பதை மட்டும் பதியும் ஆசிரியர், இட ஒதுக்கீடு தேவையே இல்லை என்று சொல்ல வந்து அதற்குத் தற்கால மருத்துவ மதிப்பெண்கள் எடுத்துக்காட்டைத் தருகிறார். நேரு காலத்தில் எவ்வளவு மதிப்பெண்கள் தேவைப்பட்டது என்று சொல்லித்தானே இடஒதுக்கீட்டுக்கான தேவையைப் பற்றிய வாதத்தை முன்வைப்பது சரியாக இருக்க முடியும்? நேரு கால வரலாற்றை எழுதுகிறோம் என்பதை அங்கே மறந்துவிட்டார் ஆசிரியர்.
சோஷலிசம் பற்றிய பக்கங்களில் நேரு அவ்வளவாகத் தீவிரமாகச் செயல்படுத்தாத நில சீர்திருத்தங்கள் பற்றியும், ஆரம்பக்கல்விக்கு அளிக்கப்படாத முன்னுரிமை பற்றியும் பேசவில்லை. அவர் காலத்தில் எழுந்த வளர்ச்சித் திட்டங்கள் பற்றியும் இன்னமும் ஆழமாகப் பேசியிருக்க முயன்றிருக்கலாம். குறைந்தபட்சம் அவற்றைப் பற்றிக் குறிப்பிடவாவது செய்திருக்கலாம்.
  • Shah Jahan //எழுதுபவனின் சந்தோஷங்களிள் ஒன்று அதைப்பற்றி மற்றவர்கள் பேசுவது.//சரியாகச் சொன்னீர்கள்.
  • Vedha Gopalan # எழுதுபவனின் சந்தோஷங்களிள் ஒன்று அதைப்பற்றி மற்றவர்கள் பேசுவது #

    Very correct.! அனுபவப்பூர்வமாக உண்ர்ந்திருக்கிறேன்! ஆனால் இதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டது இன்னும் பெரிய சந்தோஷம் அளிக்கிறது