13/10/13

ரோபோக்கள் புத்திசாலிகள்

நிஜமாகவே  ஒரு சிட்டியை சிருஷ்டிக்கிறார் இவர் 

எந்திரன் படத்தில் வந்த “சிட்டி”யை நினைவிருக்கிறதா?  எழுத்தாளார் சுஜாதாவின் கற்பனையில் பிறந்த, இயக்குனர் சங்கரின் கைவண்ணத்தில் எழுந்த அந்த சிந்திக்கும் எந்திரனை நிஜமாகவே உருவாக்கியிருக்கிறார்  ஒரு விஞ்ஞானி.   திரு. ஜெகன் நாதன் சாரங்கபாணி.  தமிழ் நாட்டுகாரர். அமெரிக்க மிஸ்சோரி பல்கலை கழகத்தில்  நீண்ட நாட்களாக ஆராய்ச்சி பணியிலிருப்பவர்.  ரோபோட்க்களை வடிவமைப்பதிலும், அதை மேம்படுத்துவதிலும் உலகின் பல இடங்களில் ஆராய்ச்சிகள் நடைபெற்றுகொண்டிருந்தாலும்  முன்னணியில் இருப்பது இவருடையது தான்.  சொன்னதை செய்வது ரோபோட். சொல்லாமலேயே மனிதனை போல  பணியிலிருக்கும்  போதே தன்னிச்சையாக சிந்தித்து  ரோபோக்களை செயல்பட வைக்க முடியமா? என்பது தான் இவரது  ஆராய்ச்சி.  நீண்ட கால தொடர் முயற்சிகளுக்கு பின்னர் இவரது தலமையில் குழுவினர் உருவாக்கியிருப்பது ரோபோக்களுக்கான மூளை.. மனித மூளையில் இருக்கும் கட்டுபாட்டுகேந்திரத்தைபோல வடிவமைக்கப்பட்ட ஒரு குட்டி கம்யூட்டர்முளை பொருத்த பட்ட  ரோபோட் மனிதனைபோலவே சிந்தித்து, தேவையானதை புரிந்து  கொண்டு வேலைகளை செய்யும். இவரது  தலமையில் இயங்கும் ஒரு 14 ரோபோடிக்ஸ் விஞ்ஞானிகளின் குழு இதை சாதித்திருக்கிறது. இந்த வகை ரோபோட்க்களுக்கு  செய்ய வேண்டிய பணிகளையும் இலக்குகளையும் சொல்லிவிட்டால் அதைபுரிந்து  கொண்டு தேவையானதை செய்துகொள்ளும். ஒரு பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும்    பத்து புல்டோசர்களை   கட்டளைகளின் படி இயக்கி கட்டுபடுத்துகின்ற தலைவன் ரோபோட் அவைகளில் ஒன்று சரியாக இயங்கவில்லை என்றால்  உடனே அதை பழுது பார்க்கும் பணியிலும் ஈடுபடும். அல்லது மாற்று ஏற்பாடுகளுக்கு கட்டளைகள் கொடுக்கும். தலமைரோட்டுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் உடனே அடுத்த ரோபோ தலமைப்பொறுப்பை ஏற்கும்.  

இதன் இந்த அலசும், சிந்திக்கும் திறனைகள படிப்படியாக உயர்த்துவதற்கான ஆராய்சிகளை தொடர்ந்து கொண்டிருக்கும்  ஜகன்நாதன் வரும்காலங்களில் ரோபோட்டால் மனிதனைப்போல சிரிக்க முடியும், கோப பட முடியும்,செயற்கையாக அமைக்கபட்ட பைபர் முகத்தில்  உணர்வுகளைகூட காட்ட முடியும் என்கிறார். சொல்லாதைவைகளையும் புரிந்து கொண்டு செயலாற்றும் ரோபோட்களை உருவாக்குவதுதான் எங்கள் ஆராய்ச்சியின் இலக்கு என்று சொல்லும் ஜெகன்நாதன் சாரங்கபாணி அமெரிக்கா வாழ் தமிழர். படிப்பில் புலி. பள்ளிக்காலத்திலிருந்தே எல்லா  வகுப்புகளிலும் முதல் மாணவர். தொடர்ந்து மெடல்களும் பரிசுகளும் பெற்ற இவர் சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் 3  தங்க மெடல்களூடன்  பி.ஈ படிப்பு முடித்த பின் அமெரிக்காவிற்கு படிக்க சென்றார்.  அங்கும் படிப்பில் பல வெற்றிசாதனைகளை படைத்தவர். முதல் டாக்டரேட் பெற்றவுடேனேயே முழுநேர ஆராய்ச்சி பணிகளை விரும்பி ஏற்ற இவர்  கம்ப்யூட்டர் சயின்சை தொடர்ந்து ரோபோட்டிக்ஸ்ஸில் ஆர்வம் அதிகமாகி புதிய படைப்புகளை உருவாக்கி  அதற்கான காப்புரிமைகள் பெற ஆரம்பித்தார்.
இப்படி இதுவரை பெற்றிருப்பது 20 உரிமைகள். போயிங் போன்ற பல பெரிய நிறுவனங்களிலும், அமெரிக்க ராணுவ துறையில் அவைகள் பயன்படுத்தபடுகின்றன. 109 ஆராய்சிகட்டுரைகளயும், பல புத்தகங்களையும் எழுதியிருக்கிறார்.  அமெரிக்க பல்கலைகழங்களில் ஆராய்ச்சி பணிகளை தொடரும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தேவையான நிதி ஆதாரத்தை அதன் துறை தலைவர்களுக்குதான் அரசாங்கமும், தனியார் நிறுவனங்களும் வழங்கும்.  அந்த வகையில் இவர் பொறுப்பிலிருக்கும் நிதி 13 மில்லியன் டாலர்கள். இவரிடம் ஆராய்ச்சி மாணவராக இருப்பதே மிகப் பெரிய கெளவரமாக கருதப்படுவதால் உலகின் பலநாடுகளின் ஆராய்ச்சி மாணவர்கள் சேர காத்திருக்கின்றனர்.  இந்த துறையில் சாதிக்க இன்னும் பல வாய்ப்புகள் இருக்கின்றன வாருங்கள் என ஆர்வமுள்ளவர்களை அழைக்கிறார்.


சிந்திக்கும், சிரிக்கும், கோப்படும் ரோபோட்க்கள் காதலிக்குமா?  ”நாங்கள் படைக்கும் ரோபோக்கள் புத்திசாலிகள்” என்கிறார் ஜகன்நாதன்.


கல்கி 30/10/13

5/10/13

ஒபாமாவின் அதிரடியினால் ஆடிப்போன அமெரிக்கா !

அமெரிக்க அதிபர் ஒபமா அறிவித்திருக்கும்ஷட்-ட்வுன்”  மூலம் 8 லட்சம் பேர் ஒரேநாளில் வேலையிழந்திருக்கின்றனர்  அமெரிக்கபொருளாதாரம் ஆடிப்போயிருக்கிறது ஏன்?
 --ஒரு அலசல்

உலக பொருளாதாரத்தையே மாற்றியமைக்ககூடிய சர்வ வல்லமை வாய்ந்த அமெரிக்க நாட்டின் அரசாங்கம் ஒரே இரவில் செயலிழந்து நிற்கிறது. வழக்கம் போல் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வந்த பலர்  வேலை போன செய்தியை காலையில் டிவியில் பார்த்து அதிர்ச்சியில் உறைந்தனர்., காரணம்.  அதிபர் ஒபாமாவினால் வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட்டிற்கு அமெரிக்க பாராளுமன்றத்தின் ஒப்புதலை பெறமுடியவில்லை.



 அரசின் கஜானாவிலிருந்து அரசாங்கத்தினால் பணம் எடுக்க முடியாத நிலையில் அரசின் பலதுறைகள்  இழுத்து  மூடபட்டு    8 லட்சம் நேரடிஊழியர்களுக்கும் 10 லட்சம் பகுதிநேர ஊழியர்களுக்கும் அடுத்த 6 மாதம் வரை சம்பளம் இல்லாத விடுமுறை அறிவிக்கபட்டிருக்கிறது. முதியோர் பென்ஷன்கள் நிறுத்திவைக்கபட்டிருக்கிறது.

ஏன் பட்ஜெட் நிறைவேறவில்லை?                    

அமெரிக்க நாடளுமன்றத்தில் இரண்டுசபைகள். ஓன்று நமது மக்களவைக்கு நிகரான பிரதிநிதிகளின் சபை. இதில் குடியரசு கட்சிதான் மெஜாரிட்டி. மற்றொன்று நமது மேலவைக்கு நிகரான செனட், இதில் ஒபாமாவின் கட்சியான ஜனநாயக கட்சிக்குதான் மெஜாரிட்டி.  கடந்த அதிபர் தேதலில் ஒபாமா முன்வைத்த ஒரு விஷயம். நமது அரசு காப்பீட்டு வசதி.போல  ”ஒபாமா ஹெல்த்கேர்” என்ற சாமானியனுக்கு மருத்துவ இன்ஷ்யூரன்ஸ் திட்டம்.  மருத்துவ செலவு மிகமிக அதிகமாகயிருக்கும் அமெரிக்காவில் இந்த இன்ஷ்யூரன்ஸ் அரசு, தனியார்பணியிலிருப்பவர்கள் மற்றும்  வேலையில்லாத, எளிய மக்களுக்கு உதவப்போகும் என்பதினால்  மக்களிடம் ஆதரவு இருந்தது ஒமாபா வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம்.   ஆனால்  வரி பணத்தை வரியே செலுத்தாதவர்களுக்கு சமூகநலதிட்டங்கள் என்ற பெயரில் செலவழிப்பதை  குடியரசு கட்சி எதிர்த்தது. அதிபர் தேர்தலில் அதன் கட்சி வேட்பாளார்  வெற்றிபெறாதாதால் இந்த திட்ட்த்திற்கு தங்கள் எதிர்ப்பை காட்ட ஒரு  சந்தர்ப்பதிற்காக காத்திருந்தது. அதனால் பட்ஜெட்டை நிறைவேற்றாமல் இழு பறி செய்தது கொண்டிருந்தது.
நிதிமசோதா நிறைவேறவேண்டுமானால் ”ஒபாமாகேர்” திட்டத்தில் திருத்தங்கள் அல்லது ஒராண்டு தள்ளிவைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை  எதிர்கட்சியான குடியரசு கட்சி கொண்டுவந்து தன் மெஜாரிட்டி பலத்தால் நிறைவேற்றியும் விட்டது.
 ஆனால்   ஆளும் கட்சியான ஜனநாயக கட்சி தாங்கல் மெஜாரிட்டியாக உள்ள செனட் சபையில் இந்த தீர்மானத்தை தோற்கடித்தது..  நிதியாண்டின் கடைசி நாளான செப் 30ல். வருடாந்திர பட்ஜெட் நிறைவேறாவிட்டால், குறுகிய கால அவசர செலவிற்காக அரசுக்கு நிதிதர நாடாளுமன்றம் அனுமதி தரவேண்டும். தங்கள் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டதில் கடுப்பாகிபோன குடியரசு கட்சி இந்த தீர்மானத்தை கொண்டுவரவேண்டுமானால் காப்பீட்டு திட்ட செலவை  குறையுங்கள்  அல்லது ஒராண்டு தள்ளிப்போடுங்கள் என மிரட்டியது   ஒபாமா பணிய மறுத்து நீங்கள் ஒத்துழைக்காவிட்டால் பிரச்சனையை மக்களிடம் கொண்டுபோவேன் என பதிலுக்கு மிரட்டினார்.
  . செப் 30ம் தேதி நள்ளிரவு 12 மணிவரை நீடித்த இந்த போராட்டம் முடிவுக்கு வருவதற்குள் நிதியாண்டு முடிவுக்குவந்துவிட்டது. ஆளும் கட்சி காலியான கஜானாவுடன் ஆட்சியை தொடரவேண்டிய நிர்பந்தம். அதன் விளைவுதான் இந்த ஷட்-டவுன்”அறிவிப்பு. சுருக்கமாக சொன்னால் இரண்டுகட்சிகளும் தங்கள் கொள்கையை விட்டுகொடுக்க மறுத்த அகம்பாவத்தின் விளைவு இது.

 மக்கள் வேலையிழப்பு ஏன்?

அமெரிக்க நாடாளமன்ற நடைமுறைப்படி பட்ஜெட் நிறைவேறாதுபோனால் உடனே அரசு ராஜினாமா செய்யவேண்டியதில்லை. 6 மாதத்திற்குள் எப்படியாவது சமாளித்து பட்ஜெட்டை நிறைவேற்றவேண்டும், அதுவரை செலவினங்களை குறைக்கவேண்டும். எளிதான வழி அரசு பணியாளார்களுக்கு சம்பளமில்லாத விடுமுறை. அதைத்தான் இப்போது ஒபாமாவின் அரசு செய்திருக்கிறது. தொழிற்சங்கங்கள் கொதித்து எழதோ?  அமெரிக்க அரசுபணியில் இருப்பவர்கள் அரசாங்கம் பொருளாதார, மற்றும் போர் நெருக்கடிகளை சந்திக்க நேர்ந்தால் இம்மாதிரியான நிர்பந்தளை ஏற்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் தான் பணியமர்த்தபடுகிறார்கள்.  இம்மாதிரி நெருக்கடிகளில் அரசாங்கபணிகளை அவசியமானவை, அவசியமில்லாதவை என வகைப்படுத்தி அதை அறிவித்துவிடுவார்கள். நள்ளிரவுக்கு பின் எடுக்கபட்ட பல அதிரடி முடிவுகள் அதிகாலையில் அமுல்படுத்தபட்டன,  பல அரசு அலுவலகங்கள்,தேசியபூங்காக்கள்,மியூசியங்கள்,  நியூயாரக் சுதந்திர தேவி சிலை, வாஷிங்டனிலுள்ள ஸ்மித்ஸன்யன் மீயூசியம், நினைவு சின்னங்கள் எல்லாம் மூடபட்டன.




இவைகள் ஈட்டும் வருவாயை விட இதன் நிர்வாக செலவு அதிகமாம்.  நாஸாவில் மட்டும் 97 % (18000க்கும்மேல்) பணியாளர்களுக்கு லீவு. வருமானவரி துறையில் பணீயாளர்கள்  இல்லாததினால் வரி வருமானம் குறையும். அமெரிக்க பொருளாதாரம் பாதிக்கப்படும்,பங்குசந்தை தடுமாறும். அதன் தாக்கம் மற்றநாடுகளின் பங்கு சந்தைகளில் எதிரொலிக்கும்.

இது புதிதில்லை

அமெரிக்க அரசியலில்  இப்படி அரசை முடக்குவது என்பது இதற்கு முன்பே 17 முறை நிகழந்திருக்கிறது. ரீகன், புஷ், கார்ட்டர் காலங்களிலும் ” அரசு மூடல்” நடந்திருக்கிறது. ஆனால் அவையெல்லாம் சில நாட்களிலேயே சரியான விஷயம், 17 ஆண்டுகளுக்கு பின் அமெரிக்கா சந்திக்கும் இந்த அதிர்ச்சி சில வாரங்களாவது நீடிக்கும் என்பது வல்லுனர்களின் மதிப்பிடு. அதுவரை அமெரிக்க பொருளாதாரம் இழக்கபோவது வாரத்துக்கு நூறுகோடி டாலர்கள்!

 அரசியல் நாடகமா?

அடுத்த சில மாதங்களில் பிரநிதிகள் சபை தேர்தல் வருகிறது. அதிலும் தன் கட்சி மெஜாரிட்டியை பிடிக்க,  இம்மாதிரி ஒரு சூழ்நிலைக்கு பொறுப்பில்லாத, மக்கள் நலம் விரும்பாத குடியரசு கட்சிதான் காரணம் என்பதை மக்கள் உணர்ந்து அவர்கள் மீது வெறுப்பு அதிகரித்து அவர்களுக்கு ஓட்டு அளிக்கமாட்டார்கள் என்பதற்காக  ஒபமா நடத்தும் அரசியல் நாடகம் இது. இந்த நாடகத்தில்  அரசு ஊழியர்களை பகடைக்காயாக்கிவிட்டார். ஒபாமா கேர் திட்டத்தை எதிர்க்கபோய் எதிர்பாராதவிதமாக குடியரசு கட்சி சிக்கிகொண்டு திண்டாடுகிறது என்றும் சில அமெரிக்க தினசரிகள் எழுதிகின்றன.

இந்தியா பாதிக்கபடுமா?

இந்திய சாப்ட்வேர் நிறுவனங்கள் அமெரிக்க பெடரல் அரசின் பணிகளை அதிகம் செய்வதில்லை. அதனால் அவர்களுக்கு பாதிப்பு இல்லை. ஆனால் நிலமை நிடித்தால் அரசாங்க பணிகளை செய்யும் நிறுவனங்களுக்கு உதவும் இந்திய நிறுவனங்கள் பாதிக்கபடும். என்கிறார். சோம் மிட்டல் இவர்  இந்திய கம்ப்யூட்டர் தொழில் கூட்மைப்பின் தலைவர். அமெரிக்க ஆஸ்பத்திரிகளுக்கு அதிகம் மருந்து ஏற்றுமதி செய்வது நாம் தான். பல மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் இதனால்  மிக பாதிப்புக்குள்ளாகும்..  
எப்போது நிலமை சரியாகும்?
இரண்டு கட்சிகளும் கூடிப் பேசி நிலைமை சரி செய்து பட்ஜெட்  நிறைவேற்றவேண்டும். அதற்கு எவ்வளவு நாளாகும்? என்பது எளிதில் பதில் சொல்லமுடியாத ஒரு கேள்வி. ஆனால் 1996ல் கிளிண்ட்னை  மண்டியிட குடியரசுகட்சி இதே முறையை கையாண்டதில் மக்கள் வெறுப்புற்று கிளிண்டனை ஆதரித்தார்கள். அதேபோல் பல முனைகளில் தோல்வியை சந்தித்து மக்களின் செல்வாக்கை இழந்துவரும் ஒபாமா விற்கு அதை மீட்க குடியரசு கட்சியின் இந்த பிடிவாதம் உதவபோகிறா?  உலகம் பார்த்துகொண்டிருக்கிறது.
கல்கி 13/10/13


26/9/13

செவ்வாயில் ஒரு சின்ன வீடு


”உங்கள் ஊரில் வீட்டுமனைகளின் விலை ஏறிவிட்தா?  வாங்க முடியாமல் போய்விட்டதே என வருந்துகிறீர்களா? கவலையை விடுங்கள்  செவ்வாய் கிரகத்தில் ஒரு 10 ஏக்கர் வாங்கிப்போடுங்கள். ஒரு ஏக்கர் 69 டாலர்கள் தான் இன்றே  பதிவு செய்யுங்கள்”  என்று அமெரிக்காவின் பல  பத்திரிகைகளிலும், இணைய தளங்களிலும் விளம்பரங்கள் வர ஆரம்பித்திருக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாகவே இத்தகைய விளம்பரங்கள் பற்றி பேசபட்டாலும் இப்போது அமெரிக்கா தனது செவ்வாய் கிரக பயண ஆராய்ச்சியில் வெற்றி பெற்று ”க்யூராஸிட்டி” கலத்தை அங்கு வெற்றிகரமாக தரையிறக்கியபின்னர் இந்த  மாதிரி விளம்பரங்கள் அதிகரித்துவிட்டன.
வேற்று கிரகங்களின் நிலம் யாருக்கு சொந்தம்? முயற்சி செய்து முதலில் இறங்கிய நாட்டிற்கா? அல்லது ஆராயச்சி செய்து கொண்டிருந்த அத்தனை நாடுகளுக்குமா?  1967 லியே ஐக்கிய நாடுகள் சபை இதற்காக ஒருஒப்பந்தத்தை தயாரித்திருக்கிறது. 102 நாடுகள் கையெழுத்திடிருக்கும் இந்த சாஸனத்தின் படி வேற்று கிரகங்களின் நிலங்கள் உலக மனித குலத்திற்கே சொந்தம் எந்த ஒரு தனி நாடும் அது அந்த கிரக ஆராயச்சியில் வெற்றிகண்டு முன்னணியில் இருந்தாலும் கூட உரிமை கொண்டாட முடியாது. அப்படியானால் எப்படி இவர்கள் விற்கிறார்கள்?  இந்த வியாபாரத்தை அட்டகாசமான விளமபரங்களுடன் செய்யும்  பை மார்ஸ். காம்(buy mars.com) இந்த ஒப்பந்தம் நாடுகளை தான் கட்டுபடுத்தும், எங்களைபோன்ற நிறுவனங்களை இல்லை என்கிறது. இது தான் எங்கள் தொழில் என்று அமெரிக்க சட்டங்களின் பதிவு செய்திருக்கிறோம். இதுவரை எவரும் எங்களை தடுக்க வில்லை என்று சொல்லிக்கொள்கிறது. இவர்கள்  செவ்வாய் கிரகத்தில் ஒரு ஏக்கர் நிலத்தை விற்று அதை   இந்த மாதிரி விற்பனைகளை பதிவு செய்வதற்காகவே நிறுவியிருக்கும் இன்னொரு நிறுவனத்தில் பதிவு செய்து பத்திரத்தை பிரேம் போட்டு  தருகிறார்கள்  ஸ்டாண்டர்ட், பிரிமியம், டிலெக்ஸ் என்று பேக்கேஜ் கள் வேறு.



ஏற்கனவே இது மாதிரி நிலவில் நிலம் விற்று கொண்டிருந்தவர்கள் இப்போது மீண்டும் மார்கெட்டில் குதித்திருக்கிறார்கள். போலி கம்பெனிகளிடம் ஏமாந்துவிடாதீர்கள் என்று அறிவிப்புகள் வேறு.  இவைகள் சட்டபூர்வமானதில்லை என தெரிந்தும் எப்படியும் எதாவது பலன் பின்னால் இருக்கும் என நம்பும் பல அமெரிக்கர்கள் பணம் கட்டிகொண்டிருக்கிறார்கள்.
இந்த விளம்பரங்களை தொடர்ந்து எழுந்திருக்கும் இன்னொரு பிசினஸ் அலை செவ்வாய்கிரகத்திற்கு பயணம். இன்னும்  அங்கு மனிதனை அனுப்புவதில் முதல் நிலையை கூட எட்டாத இந்த கட்டத்திலேயே  முன் பதிவுகளை துவக்கியிருக்கிறது ஒரு டென்மார்க் நாட்டு  நிறுவனம்  பயணமே இரண்டாண்டு காலம் இருக்கும் இந்த பயணத்தில் முதலில் 4 பேர் அனுப்படுவார்களாம். தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் நான்குபேர் அணிகளாக (இரண்டு பெண் இரண்டு ஆண்) அனுப்புவார்களாம். அங்குபோய் இவர்கள் ஒரு புது உலகத்தை உருவாக்குவார்களாம். அங்கேயே வாழப்போவதால் ஒரு வழி டிக்கெட் தான் வழங்கபோகிறார்களாம். முதல் பயணம் 2023ல் இருக்கும் அதற்கு இப்போதே  முன்பதிவு அடுத்த சில ஆண்டுகளில் தேர்வு செய்யபோகிறார்களாம். இந்த கதைகளை கேட்டு புக் செய்திருப்பவர்களில் இந்தியர்களும் இருக்கிறார்கள்.  நமது ஐஎஸ்ஆர்வோ வின் செவ்வாய் ஆராய்ச்சிகளும் அறிவிப்புகளும் ஒரு காரணம்.
கண்ணில் தெரியும் எவருக்கோ சொந்தமான நிலத்தை மற்றொருவருக்கு விற்கும் நம்மூர் கில்லாடிகளைப்போல கண்ணுக்கே தெரியாத வெற்றுகிரகத்தின் நிலத்தை விற்று கொண்டிருக்கிறார்கள் இந்த சூப்பர் கில்லாடிகள். விரைவில் இவர்களின் எஜெண்ட்கள்  உங்கள் ஊரில் கடைபோட்டாலும் ஆச்சரியமில்லை. ஜாக்கிரதையாக இருங்கள்

ஆதித்தியா (ரமணன்)
கல்கி8/9/13

22/9/13

ஓபாமா நன்றி சொன்னார் இவருக்கு !

 

 113 வயதாகும் கார்னகில் மெலன் யூனிவர்ஸிட்டி  அமெரிக்காவின் மிகப்பெரிய பலகலைகழகங்களில் ஒன்று. பென்ஸில்வேனியா மாநிலத்தின் பிட்ஸ்பர்க் நகரில் 140 ஏக்கரில் 5 கீமி சுற்றளவில் விரிந்திருக்கும் இந்த  புகழ் பெற்ற பல்கலைகழகம் இன்று உலகின் பல நாடுகளிலும் கிளைகளுடன் இயங்குகிறது. இதன் முன்னாள் மாணவர்களில் பலர் முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள். ஆண்டுக்கு 1000கோடி ரூபாய்களுக்குமேல் மானியங்களுக்காக செலவிடும் இந்த பல்கலை கழகத்தின் தலைவராக  சமீபத்தில் பொறுப்பேற்றிருப்பவர்  ஒரு இந்தியர். திரு. சுப்பரமணியம் சுரேஷ். நம் ஊர்காரர். சென்னையில் வளர்ந்து படித்தவர் 1977ல் சென்னை ஐஐடியில் கெமிகல் எஞ்ஞினியரிங் முடித்து மேற்படிப்புகாக, பயணத்திற்கா கடன் வாங்கி கையில் 100 டாலர்களுடன் அமெரிக்கா வந்தவர், படிப்படியாக வளர்ந்து பல உயரங்களை தொட்டு இன்று உலகம் முழுவதும் சுபா சுரேஷ் என்ற புகழ்பெற்ற விஞ்ஞானியாக அறியப்பட்டிருப்பவர். 1881ல் தனது முதல் டாக்ரேட்டை எம் ஐ டி யில் பெற்ற சுரேஷ் அங்கேயே ஆசிரியராகும் வாய்ப்பையும்பெற்றார், ஆசிரியப்பணியுடன்  ஆராய்ச்சி பணியையும் அங்கு தொடர்ந்த இவர் இதுவரை  250 கட்டுரைகளையும், 6 புத்தகங்களையும் எழுதியிருக்கிறார். 22 புதிய கண்டுபிடிப்புகளுக்கு காப்பு உரிமை பெற்றிருக்கிறார்.  பொறியியல், ரசாயனம், மருத்துவம், உயிரியல் என பலவேறுபட்ட துறைகளில் தன் ஆராய்ச்சியை செய்து வந்த இவர் எம் ஐடி பல்கலைகழகத்தில் 5 வெவ்வேறு துறைகளின் தலைவராக பணியாற்றியிருக்கிறார், பெருமையான இந்த விஷயத்தை  செய்திருக்கும் முதல் ஆசிய இனத்தவர் இவரே.  உலகின் பல நாடுகளின் ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டிருக்கும்,  100 விஞ்ஞானிகளுக்கு மேல் பணியாற்றும் இவரது ஆராயச்சி குழுவில் சேருவது விஞ்ஞானிகளிடையே  ஒரு பெருமைக்குரிய விஷயமாக கருதப்படுகிறது. உலகின் பல பல்கலைகழகங்களின் கெளரவ பேராசியராக இருக்கும் சுரேஷ் பெற்ற விருதுகள் பல. இந்திய அரசு பத்மஸ்ரீ வழங்கியிருக்கிறது.
அமெரிக்காவில் நேஷனல் ஸயின்ஸ் பௌண்டேஷன்(NATIONAL SECIENCE FOUNDATION) என்பது விஞ்ஞான ஆராய்ச்சிகளையும், புதிய கனடுபிடிப்புகளையும் செய்ய இளைஞர்களை ஊக்குவித்து நிதி உதவும் ஒரு அமைப்பு, கடந்த ஆண்டு இந்த அமைப்பு 3 லட்சம் இளம் ஆராய்ச்சியாளர்களுக்கும் 1500க்கு மேற்பட்ட நிறுவனங்களுக்கும்  நிதி உதவி செய்திருக்கிறது. இதன் ஆண்டு பட்ஜெட் 7 பில்லியன் டாலர்கள் (ஒரு பில்லியன் 100கோடி) எம் ஐ டியில் பணியைலிருந்த சுரேஷை அதிபர் ஒபாமா இதன் தலைவராக 2010ல் நியமித்தார். அங்கு பல புதிய ஆராய்ச்சிகளுகளுக்கு வழிவகுத்த சுரேஷை கார்னகில் மெலன்  பல்கலை கழகம் தலமை ஏற்க அழைத்தது. ஆராய்சிப்பணிகளையும் ஆசிரிய பணிகளையும் விரும்பிய சுரேஷ் அதைஏற்பதற்காக NSF தலைவர் பொறுப்பிலிருந்து விலகிய போது  அதிபர் ஒபாமா  “சுபா சுரேஷ் இந்த பெளண்டேஷனுக்கு தலமையேற்று வழி நடத்தியது நம் அதிர்ஷ்டம்.  அவர் தன் சீரிய பொறியியல், ஆராய்ச்சி,நிர்வாக திறன்கள் மூலம்  நாட்டின் விஞ்ஞான வளர்ச்சியில் தன்னை அர்பணித்துகொண்டவர். விஞ்ஞான தொழில்நுட்பத்தின் பயன்களை பல ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் குறிப்பாக பெண்களும் சிறுபான்மையினரும் பெறச்செய்தவர். அவரது சேவைக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.” என்று அறிக்கை வெளியிட்டார்.  அரசின் நியமனங்களிலிருந்து விலகுபவர்களை பாராட்டி வெள்ளை மாளிகையிலிருந்து இத்தகைய அறிவிப்புகள் வருவது அபூர்வம்.

கார்னகில் பலகலைகழகத்தில் இவரையும் குடும்பத்தினரையும் வரவேற்றதையே ஒரு அழகிய  நிகழ்ச்சியாக நிகழ்த்தினார்கள். அந்த பல்கலைகழக பராம்பரியத்தின் படி ஸ்காட்டிஷ் பைப் இசைக்கருவி வாசித்தபடி குழுவினர்  முன்னே வர குடும்பத்தினர்  மேடைக்கு  அழைக்கபட்டனர், மாணவர்கள் தயாரித்திருந்த ரோபோ கைகுலுக்கியது, 


உலகின் பல பகுதியிலிருக்கும் பல்கலை மாணவர்களும் ஆசிரியர்களும்  வாழ்த்து கூறியது விழாவில் நேரலையாக   ஒளிபரப்பட்டது.  ”இவர்களின் அனைத்து உதவிகளுக்கு நன்றி என சொல்லி தனது மனைவி மேரியையும் பெண்கள் மீரா, நீனாவையும் அறிமுகபடுத்தினார் சுரேஷ். கார்னகிலில் என்ன புதிதாக செய்ய போகிறீர்கள்? என்ற பலரின் கேள்விக்கு இவரின் பதில் 
“முதலில் சில காலம், மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் சொல்வதை கவனமாக கேட்கபோகிறேன்”

16/9/13

உப்பிற்கு உயிரிட்டவர்.




அயோடின் என்பது ஒரு முக்கிய நுண் உயிர்சத்து. குழந்தைகளின் சீரான வளர்ச்சிக்கு அதுவும் முளைவளர்ச்சிக்கு உதவும் நுண் உயிர்சத்து. 80களில் இந்த ஊட்ட சத்தின் குறைபாட்டினால் உலகெங்கும் எண்ணற்ற குழந்தைகள் பாதிக்கப்பட்டிருப்பது உணரபட்டது. இன்று அயோடின் உயிர்சத்தின் அவசியத்தை புரியவைத்து அதை   உலகின் பலநாடுகளில் எல்லோருக்கும்  எளிதில் கிடைக்கச் செய்தவர்களில் முக்கியமானவர் -ஒரு இந்தியர்.- ஒரு ”நம்ப தமிழன்”, . திரு.ஜி,கே வெங்கடேஷ் மன்னார்.
இன்று உலகெங்கும் மிகவும் பிரபலமாக அறியபட்டிருக்கும் ”அயோடினஸைட் சால்ட்” என்ற  உயிர்சத்து சேர்க்கப்பட்ட உப்பை அறிமுகபடுத்தியவர் இவர்தான்.  மிக மலிவான, தினமும் உணவில் பயன்படுத்தபடும் உப்பில் இந்த  நுண்உயிர்சத்தை சேர்ப்பதின் மூலம் எளிதாக விரைவாக மக்களை அடையும் என்பதினால் அதற்கான முயற்சிகள் எடுத்து மிக கடினமான அந்த தயாரிப்புமுறைகளை தன் ஆராய்ச்சிகள் மூலம் எளிதாக்கியவர் இவர். இன்று இந்த வகை உப்பை பயன் படுத்தியதின் மூலம் உலகம் முழுவதும் 2000 கோடி குழந்தைகள் நுண் உயிர் சத்து குறைபாட்டின் விளைவுகளில் இருந்து காப்பாற்றபட்டிருக்கின்றனர். இவரின்தயாரிப்பு முறைப்படி நுண் உயிர் செறிவுட்டபட்டிருக்கும் உப்பில் ,  இயற்கையான  ருசி, மணம், நிறம், எதுவும் மாறுவதில்லை. இன்னும் சொல்லப்போனால்  செரிவுட்டம் நிகழந்திருப்பதையே சொன்னால் தான் புரிந்து கொள்ள முடியும்.
ஜி. கே வெங்கடேஷ் மன்னார் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். சென்னை ஐஐடியில்  கெமிகல் எஞ்னியரிங் படித்த பின் அமெரிக்க பல்கலைகழகத்தில் மேற்படிப்பை தொடர்ந்தவர்.  1970 களில் இந்தியா திரும்பி தன்னுடைய குடும்பத்தொழிலான உப்பு உற்பத்தியை நவினமாக்கி டேபிள் சால்ட் தயாரிப்பு முறையை மலிவு விலையில் அறிமுகபடுத்தினார்., அந்த தயாரிப்பு முறையை பல  உப்பு தயாரிக்கும் நிறுவனங்களும் பின்பற்ற உதவினார். 70களின் இறுதியில் உப்பை எப்படி ஒரு உயிர்சத்துள்ள பொருளாக்கி அதை எளிதில் எல்லோருக்கும் கிடைக்க செய்வது என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது ஐக்கிய நாட்டு சபையின் ஒரு அங்கமான யூனிஸீப்(UNICEF)  உலகின் சில நிருவனங்களுடன் இணைந்து இதை செய்ய முற்சிப்பதை அறிந்து அவர்களுடன் இணைந்து தன் முயற்சியை தொடர்ந்தார். சில ஆண்டுகளிலேயே  இத்தகைய முயற்சிகளிலீடுபட்டிருக்கும்  பல சர்வ தேச நிறுவனங்களின் ஆலோசகரானார். 1993ல் யூனிஸஃப்பின் குழு தலைவர்களில் ஒருவராகி 40க்கும் மேற்பட்ட நாடுகளில்  உப்பில் நுண்ணுயிர் சத்து சேர்க்கபடவேண்டிய அவசியத்தை வலியுறுத்தி அரசு அதிகாரிகளுக்கும், தொண்டுநிறுவனங்களுக்கும் பயிற்சி அளித்தார்.இதன் விளைவாகத்தான் இன்று பலநாடுகளில் உப்பு தயாரிப்பு முறைகளில் அயோடின்சேர்ப்பது கட்டாயமாகபட்டிருக்கிறது.  கனடா நாட்டின் அழைப்பின் பேரில் அங்கு சென்ற இவர் இப்போது அங்கு தனது சொந்த ஆராயச்சி நிறுவனத்தை  துவக்கி தன் பணியை தொடர்ந்து கொண்டிருக்கின்றார்.  இவரது நிறுவனம் இன்று  உலகின் 11 நாடுகளில் பல ஆலோசகர்களுடன் இயங்குகிறது, வருடந்திர பட்ஜெட்400 லட்சம் டாலர்கள்.  இன்னும் பல நாடுகளில் குறிப்பாக தென் ஆப்பிரிக்க நாடுகளில் இதன் அவசியம் உணரப்படவில்லை அங்குள்ள அரசுகளின் உதவியுடன் செய்ய ஆரமபித்திருக்கிறோம் என்று சொல்லும் இவர் குழந்தைகளுக்கு எளிய முறையில் நுண்ணுயிர்சத்து கிடைக்க செய்ய வேண்டியதும்  அது எளிதில் மக்களுக்கு கிடைக்க கூடிய வகையில் மிகமலிவான விலையில் இருக்க வேண்டியதும் அரசாங்களின் கடமையாக இருக்க வேண்டும் என்கிறார்.பங்களாதேஷைவிட  சில ஆப்பிரிக்க நாடுகளைவிட, இந்தியாவில் அதிலும் தென்னிந்தியாவில்தான் ஊட்டசத்து குறைபாடு உள்ளவர்கள் அதிகம் என்கிறார்,
  தனது நிறுவனத்தின் அடுத்த கட்டபணியாக இவர் தேர்ந்தெடுத்திருப்பது குழந்தைகளுக்கு பள்ளியிலேயே வைட்டமின் ஏ மாத்திரைகள், வயிற்றுபோக்கை நிறுத்த துத்தநாகசத்து(ZINC TABLETS) மாத்திரைகள் வழங்குவது. இந்தியாவில் மத்திய பிரதேச மாநிலத்தில் துவக்கபட்டிருக்கிறது.

கனடா நாட்டின்  உயரிய விருதான ”ஆர்டர் ஆப் கனடா” என்ற விருது இந்த ஆண்டு இவருக்கு உலகில் ஊட்ட சத்து குறைபாடுகளை ஒழிக்க செய்யும் சிறந்த பணிக்காக வழங்கபடுகிறது.  சில வெளிநாட்டவரே ஆர்டர் ஆப் கனடா கெளரவத்தை பெற்றவர்கள்.
உப்பிட்டவரை உள்ள்ளவும் நினைக்க சொல்வது தமிழர் பண்பாடு. உப்பை நுண் உயிர் சத்துடன் உலகெங்கும் வழங்க வழி செய்த இந்தமனிதரை உப்பு உள்ளவரை உலகம் மறக்காது.
கல்கி13/9/13


12/9/13

கடைசிக்கோடு பற்றி



Rajana
17:42 (14 hours ago)


எனது கருதுக்ககளை பதிவு செய்ய கடைசிக்கோடு இடுகையை தேடியபோது கிடைக்கவில்லை.
எனவே  இங்கு  பதிவு செய்கிறேன் :





புத்தகத்தை முழுமையாக வாசித்தபின் :

பத்திக்குபத்தி  பொக்கிஷங்களை (புதிய விஷயங்களை) கோர்வையாக  அமைத்தவிதம்  பாராட்டுக்குரியது.
லாம்டனின் அர்ப்பணிப்பும் உழைப்பும்  வெளியுலகத்துக்கு அதிகம் தெரியாதது வருந்தத்தக்க விஷயம், அவருக்கு சரியான ( இறுதி மரியாதையை ) கல்லறை கூட அமைக்கதது எவரஸ்ட் செய்த மிகப்பெரும் தவறு , அது அவரின் ஆணவத்தின் வெளிப்பாடு
“கம்ப்யூட்டர் “ ராதா நாத் சிக்தார் பற்றி படிக்கும்போது, நமது சித்தர்கள்  (போதையனார் போன்றோர்) மற்றும் அறிவியலாளர்கள், எவ்வாறு  கணித  சாஸ்திரத்தில் வல்லுனர்களாக இருந்தார்கள் என்பதை நாம் அறிவோம்.

நான் எப்போதோ இணையத்தில் படித்து இது. ஒரு தாத்தா தன பெயர்த்திக்கு சொல்லிக்கொடுப்பதாக அமையப்பட்டிருக்கிறது :
--------------
கணித தேர்விற்காக பிதாகரஸ் தேற்றத்தை பெயர்த்தி மனப்பாடம் செய்து கொண்டிருந்த போது அதைக் கேட்டபடியே உள்ள வந்து கொண்டிருந்த பாட்டனார், "என்னம்மா பிதாகரஸ் தேற்றத்தை மனப்பாடம் செய்கிறாயா?" என்றார்.

"
ஆமாம் தாத்தா. ரொம்ப கடினமா இருக்குஇதை எப்படித்தான் கண்டுபிடிச்சாங்களோ!" என்றாள்.
தாத்தா: "இந்த தேற்றம் கி.மு 500ல் பிதாகரஸ் என்ற கணித அறிஞர் தொகுத்தார்அதனால் "பிதாகரஸ் தேற்றம்" என்று பெயர் வந்தது. ஆனால் அதுக்கும் முந்தியே நம்ம தமிழ் அறிவியலாளர்கள் அதை பாட்டாவே சொல்லிருக்காங்க தெரியுமா"
பெயர்தி: "சும்மா பொய் சொல்லாதீங்க தாத்தா"
தாத்தா: "சொல்றேன் கேள்,
இன்றைக்கு நாம் அனைவரும் சொல்லிக்கொண்டிருக்கின்ற பிதாகரஸ் கோட்பாடு (Pythagoras Theorem) என்ற கணித முறையைபிதாகரஸ் என்பவர் கண்டறிவதற்கு முன்னரே,போதையனார் என்னும் புலவர் தனது செய்யுளிலே சொல்லியிருக்கிறார்.
"ஓடும் நீளம் தனை ஒரேஎட்டுக்
கூறு ஆக்கி கூறிலே ஒன்றைத்
தள்ளி குன்றத்தில் பாதியாய்ச் சேர்த்தால்
வருவது கர்ணம் தானே"
போதையனார்
விளக்கம்:
இவற்றின் பொருள் செங்கோண முக்கோணத்தின்நீளத்தில் (அடிப்பாகம்) பங்கில் ஒன்றைக் கழித்துவிட்டு உயரத்தில் பாதியை எடுத்து கூட்டினால் வரும் நீள அளவே கர்ணம் என்பதாகும். இவ்வளவு எளிமையாக கர்ணத்தின் நீளம் காணும் வாய்ப்பட்டை விட்டுவிட்டு வர்க்கமூலம்பெருக்கல் என பிதார்கரஸ் தியரம் சொல்லிவருவதை நாம் பயன்படுத்துகிறோம் இன்று.
இக்கணித முறையைக் கொண்டுதான்அக்காலத்தில் குன்றுகளின் உயரம் மற்றும் உயரமான இடத்தை அடைய நாம் நடந்து செல்லவேண்டிய தூரம் போன்றவைகள் கணக்கிடப்பட்டுள்ளன.
போதையனார் கோட்பாட்டின் சிறப்பம்சம் என்னவென்றால்வர்க்கமூலம் அதாவது Square rootஇல்லாமலேயேநம்மால் இந்த கணிதமுறையை பயன்படுத்த முடியும்.
தமிழன் ஒரு வேலை கற்றலையும் / கல்வியையும் பொதுவுடமையாகஉலகறியச் செய்து இருந்தால் .... அவர்கள் தரணி எங்கும் அறியப்பட்டு இருப்பார்கள்." என்றார்.
பெயர்த்தி: "தாத்தா இது ரொம்ப எளிதாக இருக்குஇதை படிச்சாலே நான் எளிதாக தேர்வில் எழுதி முழு மதிப்பெண்ணும் வாங்கிடுவேன். ரொம்ப நன்றி தாத்தா" என்றாள்.
நாமும் நம்மிடையே உள்ள சிறப்புகளைஎடுத்துரைத்தால் இன்றைய மாணவர்களும் எளிதில் தேர்ச்சி பெறுவார்கள் என்பது திண்ணம்.

10/9/13

உலகிலேயே அதிகமான சம்பளம் வாங்கும் அம்மா

  கோக்கோலா விற்கு போட்டியாக பானம் தயாரித்து விற்கும் கம்பெனியாக துவங்கி இன்று அதனுடன் பலவித ஸ்நாக்களையும், உணவு பொருட்களையும் உலகில் 200 நாடுகளில் தயாரித்து, விற்று தன் வணிக சாம்ராஜ்யத்தின் எல்லைகளை விரித்து வளர்ந்து கொண்டிருக்கும் நிறுவனம் பெப்ஸி கோ.  உணவுப் பொருள் வணிக நிறுவனங்களின் பட்டியலில் உலகளவில் இரண்டாம் இடம். கடந்த ஆண்டின்  பிஸினஸ் 66000 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (ஒருபில்லியன்= 100கோடிகள்) மொத்த பணியாளர்கள்   2 லட்சத்துக்கும்மேல். இதன் தலைவரும் முதன்மை செயல் அதிகாரியாகவும் இருப்பவர் ஒரு இந்தியப் பெண். பெயர் இந்திரா நூயி.  அவர்  ஒரு தமிழ்ப் பெண். என்பதால் நாம் சற்று அதிகமாகவே பெருமைபட்டுக்கொள்ளலாம். உலகிலேயே அதிக சம்பளம் பெறும் பெண் தலைமைஅதிகாரியும் இவரே
.
 சென்னை தியாகராயநகர் வாசியான கிருஷ்ணமூர்த்தி தம்பதியரின் மகளான இந்திரா அங்குள்ள ஹோலிஏஞ்சல் பள்ளியிலும், பின் கிருத்துவகல்லூரியிலும் படித்தவர். கணிதம், பெளதிகம்  பட்டம் பெற்றபின்  கல்கத்தா ஐஐஏம்பில் எம்பிஏ படித்தவர். இந்தியாவில் தன் தொழில் வாழ்க்கையை  ஒரு பெரிய நிறுவனத்தில் மேனேஜராக துவங்கியவர். 1978ல் அமெரிக்க யேல் பலகலைகழகத்தில் மேனெஜ்மெண்ட் படிக்கும் வாய்ப்புகிடைத்ததினால் அமரிக்கா சென்றார். படிக்கும்போதே பாஸ்டன் கன்ஸ்லட்டென்ஸி என்ற நிறுவனம் வேலைக்கழைத்தது.  அதன் பின் பல அமெரிக்க முன்னணி கார்ப்பேர்ட்களில் உயர் பதவி.. 1994ல் பெப்ஸி நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்த இவர் 7 ஆண்டுகளில் அதன் தலைமை  நிதி அலுவலாரக உயர்ந்தார்.,.  அந்த பதவியில்  இவர் இருந்த போது கம்பெனியின்  வருமானம் 72% அதிகமானது. லாபம் இருமடங்காகியது.  கார்ப்ரேட் உலகம் இவரை கவனிக்க ஆரம்பித்தது. போட்டி நிறுவனம் உள்பட பல நிறுவனங்களிடமிருந்து அழைப்புகள்.  ஆனால் இந்திரா பெப்ஸியை உலக முன்னணி நிருவனங்களில்  ஒன்றாக்குவதில் உறுதியாக இருந்தார். அதேப்போல் அதை சாதித்தும் காட்டினார். பெப்ஸியின் நிர்வாக குழு ஒருமனதாக  இவரை 2006ல் பெப்ஸிகோவின் தலைவராக நியமித்தது. முதல் முறையாக ஒரு பெண்,  அதுவும் அமெரிக்கர் அல்லாத ஒருவர் அந்த பதவியில் நியமிக்கபட்ட சரித்திர சம்பவம் அது.  சம்பளம் ஆண்டுக்கு 17 மில்லியன் டாலர்கள் (ஒரு மில்லியன் = 10 லட்சம்)   இவர் தலைமையில் இப்போது பெப்ஸிகோ இன்னும் வலுவாகிகொண்டிருக்கிறது. இந்த சாதனைகள் எல்லாம்  இவரால் எப்படி முடிகிறது?
 ”உலகம்முழுவதிருக்கும் என் டீமுடன் தொடர்ந்து தொடர்பிலிருக்கிறேன். வெற்றியின் பெரும்பங்கு அவர்களுடையது.  எந்த விஷயத்தையும் பெப்ஸி நிர்வாகிகள்  மாறுபட்ட கோணங்களில் பார்க்க பழக்கபடுத்தபட்டிருக்கிறார்கள்  என்று சொல்லும் இவர் ஒருநாளில் 20 மணிநேரம் வேலை செய்கிறார். மாதத்தில் இரண்டுவாரம் உலகின் ஏதாவது ஒரு நாட்டில் பயணம் செய்துகொண்டிருக்கிறார்.   வெறும் கோலா பான விற்பனையைமட்டுமே எப்போதும்  செய்து கொண்டிருக்கு முடியாது என்பதனால்   சிப்ஸ் போன்ற பலவகை உணவுபொருட்களை விற்கும் ஆலோசனைகளை நிர்வாகத்திற்கு வழங்கியதும் , அதற்காக  உலகின் பலபகுதிகளில் இருந்த அத்தகைய கம்பெனிகளை பெப்ஸி நிருவனத்துடன் இணைத்ததும் தான் இவரது சாதனைகளில் மிகப்பெரியது.,
கணவர் ராஜ் நூயி (Raj K. Nooyi) மைசூரில் படித்தபின் அமெரிக்காவில் எஞ்னியரிங்கும், எம்பிஏ யும் படித்தவர். பல நிறுவனங்களில் உயர்பதவி வகித்தவர். இப்போது  தனது நிர்வாக ஆலோசகனை நிறுவனத்தின் தலைவராகயிருக்கிறார். இரண்டு பெண்கள். இந்திய இசையை விரும்பும் இந்திரா தமிழில் பேசுவதையும், எழுதுவதையும் இன்னும் மறக்கவில்லை. தன்   அலுவலக அறையில் சிறிய வினாயகர் சிலை வைத்திருக்கிறார்.


 இந்திரா நூயிக்கு  பல அமெரிக்க பல்கலகழகங்கள் கெளரவ டாக்டர் பட்டங்கள் வழங்கியிருக்கிறது. நம் நாட்டின் பத்மபூஷன் விருது பெற்றவர்,  ஆனால் இவர் பெரிதும் மதிப்பது அமெரிக்காவின் ”சிறந்த அம்மா” (Best moms)க்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டதைத்தான். எவ்வளவு பிஸியாக இருந்தாலும்,தனது மகள்களின் படிப்பிலும் வளர்ச்சியிலும் மிகுந்த கவனம் செலுத்தியவர் இவர். இன்று அவர்கள் அம்மா படித்த யெல் பல்கலைகழகத்தில் பிஸினஸ் மேனெஜ்மெண்ட்படிக்கிறார்கள்.




30/8/13

இன்னும் ஒரு ராமனுஜம்


உலகின்மிகச் சிறந்த கணித மேதைகளின் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் ஒருவர் அக்‌ஷய் வெங்கடேஷ். இவரது பெற்றோர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள். தந்தையின் ஊர் கும்பகோணம், தாய் தஞ்சையை சேர்ந்தவர். புதுடெல்லியில் 1981ல் பிறந்த அக்‌ஷ்ய் ஆரம்ப கல்வியை அங்கே   துவங்கி தந்தையின் பணிமாற்றத்தால் ஆஸ்திரேலியாவில் பெர்த் நகரில் தொடர்ந்தவர். அந்த சிறுவனுக்கு புதிய இடம், புதிய மொழி எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. பள்ளியில் எல்லா வகுப்புகளிலும் முதல்..  ஆஸ்திரேலிய பள்ளிகளில் இம்மாதிரி திறமையான மாணவர்களை “கிஃபட்டட் சில்ரன்” என்று அடையாளம் காணப்பட்டு விசேஷ பயிற்சிகள்  தந்து ஊக்குவிப்பார்கள்.  அக்‌ஷ்ய்யின் பள்ளியில் அந்த வாய்ப்பின் மூலம் பயிற்சி பெற்று  சர்வதேச ”பிஸிக்ஸ் ஒலிம்பியார்ட்”டில் பங்கு பெற்று பதக்கம் பெற்றார் அப்போது அவருக்கு வயது 11. ஓலிம்பியார்ட் என்பதுஉலகளவில்  ஒரு பாடத்தில் மிகச் சிறந்த மாணவனை தேர்ந்தெடுக்கும் கடினமான போட்டி. முதலில் மாவட்ட அளவில், பின்அவர்களிலிருந்து மாநில அளவில் தேர்ந்தெடுக்கபட்டு அவர்களில் சிறந்தவர்கள் இறுதியில் தேசத்தின் சார்பாக சர்வதேச  அளவில் பங்குகொள்ளும் போட்டி.  இதில் 1993ஆம் ஆண்டு மூன்றாம் இடம் பெற்ற  அக்‌ஷ்ய் அடுத்த ஆண்டு பிஸிக்ஸில் முதலிடத்திற்காக போட்டியிடுவதற்கு பதிலாக கணித ஒலிம்ப்யார்ட்டில் பங்கேற்க விருப்பம் தெரிவித்தார். பள்ளி ஆசிரியர்களும் ஊக்குவித்து உதவி செய்ய 1994ஆம் ஆண்டு சர்வதேச கணித ஒலிம்ப்பியார்ட்டில் தங்கபதக்கம் வாங்கினார். தொடர்ந்து அடுத்த அடுத்த ஆண்டுகளில் இப்படி ஒலிம்யார்ட் பதக்கங்கள்  அதுவும் வெவ்வேறு பாடங்களில் வாங்கியது இதுவரை யாரும் இல்லை. இந்த அங்கீகாரங்களின்மூலம் பள்ளியில் கிடைத்த பிரோமோஷன்களினால் பள்ளி இறுதியாண்டை 13 வயதிலேயே முடித்து விசேஷ அனுமதிகள் மூலம் 14 வயதில்  கல்லூரியில் கால்வைத்தவர் இவர்.  ஆஸ்திரேலிய பலகலைகழகத்தில் இந்த வயதில்  எவரும் இந்த சாதனையை செய்த்தில்லை. நாலு ஆண்டு கணித ஹானர்ஸ் படிப்பை இரண்டே ஆண்டில் முடித்து  17 வது வயதில் அந்த பல்கலைகழகத்தின் முதன்மை மாணவராகவும் முதல் இளம்வயது ஹானர்ஸ் பட்டதாரியாகவும்  வெளிவந்தார். இந்த காலகட்டத்தில் இவர் எழுதிய ஆராய்ச்சிகட்டுரைகளுக்கு பல பரிசுகளும் ஸ்காலர்ஷிப்புகளும் கிடைத்தது மட்டுமில்லாமல்   வெளிநாட்டு, உள்நாட்டு பலகலை கழகங்கள் ஆராய்ச்சி படிப்பை தொடர இவரை அழைத்தது. ஆனால் அக்‌ஷய்  அமெரிக்காவில் பிரின்ஸ்டன் பல்கலைகழகத்தில்  தான் குருவாக மதிக்கும் கணித மேதை திரு பீட்டர் ஸ்நாரக் என்பவரின் கீழ் பணிபுரிந்து ஆராய்ச்சி செய்யவே விரும்பினார்.  2002ல் தனது 21ஆவது வயதில்  பிஹெச் டி பட்டம் பெற்ற இவரது ஆராய்ச்சி கட்டுரைகளை கவனித்த MIT என்று உலகம் முழுவது அறியபட்டிருக்கும் புகழ் பெற்ற ’மாஸாசுஸுஸ்ட் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலாஜி’ பேராசிரியர் பணி தந்து அழைத்தது. மிகப்பெரிய கவுரமான இதை ஏற்று  தன் ஆசிரிய பணியையும் ஆராய்ச்சிபணியையும் தொடர்ந்தார். ஆண்டுதோறும்  உலகின் பல பல்கலைகழகங்களிலிருந்தும், ஆராய்ச்சி மையங்களிலிருந்தும் விருதுகளும், பரிசுகளும் குவிகிறது. கணித துறையை சார்ந்தவர்கள் பல ஆண்டுகளாக செய்யப்படாத பல ஆராய்ச்சிகள் இவரால் குறுகிய காலத்தில் செய்து முடிக்கபட்டிருப்பதாக புகழாராம் சூட்டுகின்றனர்
.
தஞ்சை சாஸ்த்ரா பல்கலைகழகம் 2008 ஆண்டு  சாஸ்த்ரா-ராமானுஜம் பரிசையும் பரிசுபணமாக 10,000 அமெரிக்க டாலர்களையும் மேதை ராமானுஜத்தின் ஊரான கும்பகோணத்தில் நடத்திய ஒரு சர்வ தேச கணித கருத்தரங்கில் இவருக்கு வழங்கியது.  இந்த பரிசுக்கு இவரை தேர்ந்தெடுத்தது,ஐந்து பெரிய அமெரிக்க பல்கலைகழகங்களின் மூத்த பேராசிரியர்கள்.

தற்போது அமெரிக்க ஸ்டான்போர்ட் பல்கலை கழகத்தில் 32 வயதிலேயே மூத்தபேராசியாரக அங்கீகரிக்க பட்டு தன் ஆராய்சியை தொடரும் அகஷ்ய் இந்தியா வருவரா? ”2015 வரை என் பயணங்கள் முடிவு செய்யபட்டுவிட்டன,அதன்பின் பல்கலைகழகங்கள் அழைத்தால் வருவேன்” என்கிறார்.


24/8/13

நிழலின் இசையை ரசித்த மரங்கள்.



”நிழல்”இயற்கையின் கொடையான மரங்களின்,தாவரங்களின், சிறப்புகளை மக்களுக்கு எடுத்து சொல்லி அவைகளை சேசிக்க சொல்லிகொடுக்கும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம். மரங்கள் அடர்ந்த வனப்பகுதிக்கு விரும்பும் ஆர்வலர்களை அழைத்து சென்று அவைகளை அறிமுகபடுத்தும் “டீரி வாக்” (Tree walk) நடைப்பயணங்களை அவ்வப்போது நடத்துபவர்கள். இந்த ஆண்டு சென்னைநகரின் பிறந்த நாள் விழாவின் ஒரு பகுதியாக இவர்கள் அழைத்து சென்ற இடம் கலாஷேத்திரா.


இசையையும் நடனத்தையும் மரபு வழுவாத பாரம்பரியத்துடன் கற்பிக்க திருமதி ருக்மணி அருண்டேல் உருவாக்கிய கலாஷேத்திரத்தாவில் நுண்கலைகளுடன் மரங்களையும் செடிகளையும் நேசித்து வளர்த்தார். அவைகள் இன்று அழகான ஒரு காடாகவும்,பூஞ்சோலையாகவும் மலர்ந்திருக்கிறது. மாணவர்களைத் தவிர மற்றவர்களுக்கு அனுமதி இல்லாத இந்த அழகான அமைதி சொர்க்கத்திற்கு சிறப்பு அனுமதியுடன் இசைக்கலைஞர் செளமியாவுடன் அங்குள்ள மரங்களை சந்திக்க. அழைத்து போனார்கள் நிழல் அமைப்பினர். இந்த பயணத்தில் ஒவ்வொரு மரத்தின் கீழும் அதன் அருமை பெருமைகளை அதன் மருத்துவ குணங்களை, இயற்கையை காக்க அவைகள் செய்யும் பணிகளை,நமது வழி பாடுகளில் அவற்றிற்கு இருக்கும் முக்கியத்துவம பற்றி எல்லாம் சொல்லபட்டபின்னர் செளமியா அந்த மரம் குறித்த, அல்லது அதன் பெயர் இடம் பெற்ற பாடல்களின் சில வரிகளை பாடிகாட்டினார். ஒவ்வொரு மரத்திற்கும் அது அந்த பாடலில் இடம் பெற்றிருப்பதற்கான சிறப்பான காரணம், அந்த பாடலை எழுதியவர் ராகம் எல்லாவற்றையும் பிரமாதமாக விளக்கி சொல்லிவிட்டு பாடலை பாடினார். சிறிய தம்பூராவை ஒருகையில் வைத்து மீட்டியவண்ணம் பாடலின் சிலவரிகளை பாடினார். ”மைக் வேண்டாம்அமைதியாக கவனமாக இருந்தால்கேட்கும்” என்று சொல்லி  சிலப்பதிகாரம், தியாகையர், தீட்சதர்பாடல்கள்,தேவாரம், திருவாசம் என  பலவற்றிலிருந்து  தேர்ந்தெடுக்கபட்ட வரிகளை அந்தந்த மரத்தின் கீழ் பாடினார்.  முழுவதும் பாடமாட்டாரா? என எண்ணவைத்த 
செளமியா  டாக்டர் பட்டம் பெற்றிருப்பது இசையிலா?  பாட்டினி பாடத்திலா? என ஆச்சரியப்படும் அளவிற்கு இதற்காக ஹோம் ஒர்க் செய்திருந்தார்.. தன்கைப்பட எழுதிய பேப்பரிலிருந்து பார்த்து பாடும் செளமியா ஐ பேடில் பாடலைத்தேடி கண்டுபிடித்து பாடும் அடுத்த தலைமுறைகலைஞர்களான சீடர்களையும் உடன் அழைத்து ஊக்கபடுத்தியது   ஒரு மகிழ்ச்சியான காட்சி.
வம்சம்தழைக்க உதவும் மருத்துவ சக்தி வாய்ந்ததால்தான் கல்யாணமுருங்கை திருமணங்களில் மூஹூர்த்தகால் மரங்களாக நடப்படுகிறது, மலர்ந்து உதிர்ந்த மகிழம்பூக்கள் சருகானாலும் மணம் பரப்புவதை நிறுத்துவதில்லை. ஆலமரத்தின் விழுதில் ஊஞ்சல் கட்டி ஆடினால் அதற்கு மிகவும்வலிக்கும். மரங்களில் வண்ணவிளக்குகள் போட்டால் அதிலிருக்கும் பறவைகள் அன்று தங்கஇடமில்லமல் தவிக்கும் போன்ற பல செய்திகளை செளமியாவின் இசையுடன் நமக்கு சொன்னவர்கள் நிழல் உறுப்பினர்களான திரு பாபுவும், திருமதி லதா நாதனும்.
கலாஷேத்திராவில் ஒரு மரத்தில் வண்ணத்து பூச்சிகள் தேனடையில் தேனிக்கள் இருப்பது போல மொய்த்துகொண்டிருந்தன. அது ”டீரி ஆப் லைப்” என்றும் தென் அமெரிக்க காடுகளில் காணப்படும்வகை என்றும் சொன்னார்கள். ஒரே மரத்தில் இத்தனை வண்ணத்துபூச்சிகளை பார்த்ததைவிட ஆச்சரியம் அவை அனைத்தும் பறக்காமல் அங்ககேயே இருந்தது தான். ஒரு வேளை அவைகளும் செளமியாவின் பாடல்களினால் மெய்மறந்து பறக்க மறந்துவிட்டனவோ ?
கல்கி 01/09/13

19/8/13

பென்ஸ் காரின் விலையில் ஒரு எருமை

ஆதித்தியா
அரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் உள்ள சின்சுவாஸ் கிராமத்தை சேர்ந்த விவசாயி கபூர்சிங். இவர் ஒரு பெண் எருமையை  லட்சுமி என பெயரிட்டு அன்புடன்  வளர்த்து பராமரித்து வந்தார். அரியானா மாநிலத்தின் முர்ரா எருமை மாடுகள்  உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்றது. அவை நாளொன்றுக்கு 32 கிலோ அளவிற்கு கூட பால் கறக்கும்   அந்த இனத்தை சேர்ந்த லட்சுமி நாள்  ஒன்றுக்கு சராசரியாக 22.5 லிட்டர் முதல் 28 லிட்டர் வரை பால் கறக்கிறது..


லட்சுமி பல கால் நடை கண்காட்சிகளில் கலந்து கொண்டு பல லட்சம் மதிப்புள்ள பரிசுகளை பெற்றுள்ளது. சமீபத்தில் முக்ஸ்டார் என்ற இடத்தில் நடந்த கண்காட்சியில் ”அழகி போட்டி” அதிக அளவு பால் வழங்கும் எருமை” போன்ற  பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று ரூ.3 லட்சம் பரிசை வென்றதினால் இந்த கருப்பு அழகி  மாநிலம் முழுவதும் பாப்புலர்..

 பலர் விலைக்கு கேட்டும் தர மறுத்துகொண்டிருந்தார் அதன் உரிமையாளர். . கடந்த மாதம் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த விவசாயி ராஜீவ் சார்பாஞ்ச் என்பவர்   மிக அதிக விலையாக லட்சுமிக்கு 19 லட்சம் தருவதாக கேட்டபோது அவரை தவிர்ப்பதற்காக  விலை 25 லட்சம் என்று சொல்லியிருக்கிறார்.  ராஜீவ் அதை தர சம்மதித்து உரிமையாளர் கபூர் சிங்கை ஆச்சரியபடுத்தினார்,   இவ்வளவு பெரும் பணத்தை தனக்கு அளித்த அருமை லட்சுமியை ஒரு பிரிவுபசார விழா நடத்தி மரியாதையோடு அனுப்ப விரும்பினார் கபூர் சிங்.விழாவிற்கு நாள் குறிக்க பட்டது. அன்று லஷ்மிக்கு விசேஷமாக தயாரிக்கப்பட்ட ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி நகைகளை அணிவித்து  அலங்கரித்தார். 

 
அதை தனது கிராமத்தை சுற்றி ஊர்வலமாக அழைத்து சென்றார். மேலும்  அரியானா மாநிலத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள், அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் என 2 ஆயிரம் பேரை அழைத்து அவர்களுக்கு தடபுடலாக விருந்து அதற்கு மட்டும் ரூ.2 லட்சம் செலவு செய்திருக்கிறார்.   அருகிலுள்ள கிராம மக்களும் பங்கு கொண்ட  அந்த விழாவில் அரசு அதிகாரிகளும் கலந்துகொண்டிருக்கிறார்கள். மாநில கால்நடைத்துறையின் மூத்த அதிகாரி இம்மாதிரி நிகழ்ச்சிகள் மேலும் பல விவசாயிகள் இத்கைய மாடுகளை வாங்கி பால் உற்பத்தியை பெருக்க தூண்டும்  என்று சொல்லுகிறார். நிகழச்சியை பிபிசி டிவி கவர் செய்திருக்கிறது.
இதை கடந்த 2 ஆண்டுக்கு முன்பு கபூர்சிங் இதை வாங்கிய விலை 2 லட்சம்.  தற்போது இது 3-வது தடவை கர்ப்பமாக உள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் கன்று ஈனும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 ஆந்திராவிலிருந்து அரியான  வந்து  ஒரு பென்ஸ்காரின் விலையில் ஏன் இப்படி இந்த  எருமை மாட்டை வாங்குகிறார் ?  2014 ஜனவரியில் ஆந்திர அரசு நடத்தவிற்கும் கால்நடை கண்காட்சியில்  தேர்ந்தெடுக்கபடும்  சிறாந்த எருமைக்கு கிடைக்க போகும் பரிசு   ஒரு கிலோ தங்கமாம்.



ஆதித்தியா

12/8/13

"பேசும்” பொன்னியின் செல்வன்


 ஒரு நல்ல புத்தகத்தை வாசிப்பது என்பது ஒரு சுகமான அனுபவம், அதைவிட சுகமானது அதை யாராவது உணர்ச்சி பொங்க படிக்க, ரசித்து கேட்பது.  கல்கியின் அமர காவியமான பொன்னியின் செல்வனின் அத்தனை கதாபாத்திரங்களும் அவர் எழுதிய வார்த்தைகளை அப்படியே பேசுகின்றன. கதாசிரியரின் வர்ணனைகள் சொல்ல படும்போது அந்த காட்சிகள் கண்முன்னே விரிகிறது ஸ்ரீகாந்த் சீனிவாசா  தயாரித்திருக்கும் ஆடியோ புத்தகத்தில்.  கடந்த சில ஆண்டுகளாக ஆங்கில புத்தகங்களைபோலநல்ல தமிழ் புத்தகங்களும் ஆடியோ புத்தகமாக  சி. டி வடிவில் வெளிவருகின்றன. ஆனால் ஸ்ரீகாந்த் தயாரிப்பு இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்யக்கூடிய ஆடியோ புக் வகையைசேர்ந்தது.  
ஸ்ரீகாந்த் அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில் சான்பிரான்ஸிஸ் நகரில் கடந்த 20 ஆண்டுகளாக வசிப்பவர். மென்பொருள் நிறுவனத்தில் அதிகாரியாக பணி. பாரதியின் கவிதைகள் நாடகம், தமிழசை போன்ற பலவற்றில் ஆர்வம்கொண்டவர். பாரதி தமிழ் மன்ற தலைவர்.  ”ஸ்ரீ” என்று  பாப்புலராக அறியபட்டிருக்கும் இவரது முகம் மட்டுமில்லை குரலும் அங்கிருக்கும் தமிழர்கள் அனைவருக்கும் பரிச்சியமானது., காரணம்.  நகரிலுள்ள ஸ்டான்போர்ட் பல்கலை கழகம் நடத்தும் பண்பலை ரேடியோ நிலையத்தின் தமிழ் சேவைக்காக ஒவ்வொரு புதன் கிழமையும் 3 மணி நிகழ்ச்சியை தயாரித்து, தொகுத்துவழங்குபவர் இவர்தான். அதில் பாடல். நேர்காணல். நாடகம், தமிழகத்திலிருந்துவரும் பிரமுகர்களின் பேட்டி எல்லாம் உண்டு. கடந்த 11 ஆண்டுகளாக இதை செய்து வருகிறார்.
ஆடியோ புத்தக ஐடியா எப்படி வந்தது? வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் அடுத்த தலைமுறை தமிழை முறையாக கற்பதில்லை. பல குடும்பங்களில்  நன்றாக புரிந்தாலும் கூட தமிழில் பேசுவது கூட குறைந்து வருகிறது.. அவர்களை கவர, படிக்க முடியாத நிலையில் இருக்கும் முதியோரின் வசதிக்காக இதைச்செய்தால் என்ன என்ற எண்ணம் எழுந்தது. தமிழ் மேடை நாடகங்களில் நடித்த அனுபவம், ஆர்வம் நம்பிக்கையை தந்தது. என்று சொல்லுகிறார். ஆடியோ புத்தகம் எனறால் செய்தி வாசிப்பது போலிருக்கும் என்ற  எண்ணத்தை மாற்றுகிறது இவரது படைப்பு.. நாவலின் நடையில், காட்சி விவரிப்புக்கு ஒரு குரலையும், கதாபாத்திரங்கள் பேசுவதற்கு பல வகையான குரல்களையும் பயன்படுத்தி. கல்கியின், "பொன்னியின் செல்வன்' நூலில் வரும், பெண்பாத்திரங்கள் உள்பட  40க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களை, இவர் மட்டுமே பேசி அசத்தியுள்ளார். பேசியிருப்பவர் ஒரே நபர் என்பது சொன்னால் தான் தெரியும் அந்த அளவிற்கு பாத்திரங்களுக்கேற்ற கச்சிதமான குரல் மாடுலேஷன்.   நாவல் முழுவதும் பாத்திரங்கள் தொடர்ந்து அதே குரலில் பேசுகிறார்கள்.   75 மணி நேரம் ஓடும் இந்த ஆடியோ புத்தகம் 5 பகுதிகளானது.  இதைப்போல பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம்  ஆடியோ புத்தகங்களையும் தயாரித்து இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்.. நிறைய மனழுத்தம் கொடுக்ககூடிய பரப்பரபான பணியுடனும் பயணங்களுக்குமிடையே  ஸ்ரீகாந்த்தால் இதை எப்படி செய்ய முடிந்த்தது? ஆர்வம், சாதிக்கவேண்டும் என்றவெறி, அன்பு மனைவி ஜானகியின் ஒத்துழைப்பு என்கிறார், வீட்டிலேயே ஒரு சின்ன ஆடியோ ஸ்டுடியோ அமைத்துகொண்டு இரண்டு வருடங்கள் நீண்ட இரவுகளிலும்,அத்தனை விடுமுறைநாட்களிலும் உழைத்திருக்கிறார்.



   ஐ போன், ஐபேட், டேபிளட் என எதில் வேண்டுமானாலும் டவுன்லோட் செய்து கொள்ளகூடிய வசதியுள்ளது.. கட்டணம்? மிக மிக குறைவு, 120 ரூபாய் ஆன்லைனைல் செலுத்தினால்  போதும் ஒரு புத்தகத்தை டௌன்லோட் செய்துகொள்ளாலாம். (www.tamilaudiobooks.com)விற்பனை எப்படியிருக்கிறது? உலகின் பல மூலைகளிலிருக்கும் தமிழர்கள்  வாங்குகிறார்கள். விற்பனையைவிட  “என் தந்தைக்கு அவரது இளமை காலத்தை திருப்பி கொடுத்திருக்கிறீர்கள்”  ஆடியோ புத்தகத்தை கேட்ட  என் அம்மா அழுதுவிட்டார்” போன்ற  வார்த்தைகள் தான் மிகுந்த சந்தோஷத்தை தருகிறது என்கிறார். “ஸ்ரீ” இவரது அடுத்த பிராஜெக்ட் தமிழ் தாத்தாவின் “ என் சரித்திரம்”
கல்கியின் அமர காவியங்களுக்கு தனது குரலால் உயிருட்டி உலகமெங்கும் ஒலிக்க செய்திருக்கும் இந்த மனிதரின்  பணி மகத்தானது.

-ஆதித்தியா (ரமணன்)