15/1/14

கங்கைக் கரை ரகசியங்கள்





  இன்னும் இருள் பிரியாத,  ஒளி பிறக்காத காலைப்பொழுது. சில்லிடும் காற்று மிதந்துபோகும் மெல்லிய பனிப்புகை. கண்ணெதிரே கடலாக விரிந்திருக்கும் கங்கை. அதன்பிரமாண்டம் நம்மை பிரமிக்கசெய்கிறது. மறுகரையே கண்ணில் தெரியாத அந்த மகாநதி அந்த இருட்டிலும்,நிசபத்திலும் தன் கம்பீரத்தை சொல்லுகிறது.  காசி நகரில் புனித கங்கையின் கரையில் அந்த அதிகாலைப்பொழுதில் ஆதவனின் வருகையின் போது தரிசிக்க காத்திருக்கிறோம். நாட்டின் பல பகுதிகளிலிருந்து வந்திருக்கும் பலர் துறையின் படிக்கட்டுகளில் நடுங்கும் குளிரிலும் ஆதவனை தரிசித்தபின்  முழ்கிகுளிக்க காத்திருக்கின்றனர். மெல்லிய குரல்களில் பலமொழிகளில் பிராத்தனைகள் ஸ்லோகங்கள் கேட்கின்றன.  “கங்கையிரு கரையுடையான் கணக்கிறந்த நாவாயான்" என்று குகனை அறிமுகப்படுத்துவார் கம்பர்.இன்றும் கங்கைக்கரையில் கணக்கில்லாத நாவாய்கள் நிற்கின்றன.  எல்லா குளிக்கும் துறைகளிலும் நீக்கமற நிறைந்திருக்கும் இவைகளின் இடையில் நமக்கோர் இடத்தை கண்டுபிடித்து நிற்கிறோம். ஓடும் கங்கையின் வேகத்தை கால்கள் நமக்கு சொல்லுகிறது. மனம் கங்கையில் இறங்கியிருக்கிறது. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக பிரவாகத்தில் இருக்கும் வாழும் நதியில் இன்று நாமும் இறங்கியிருக்கிறோம் என்ற எண்ணம் மேலோங்குகிறது. நிற்கும் படகுக்காரர்களும் அந்த நேரத்தில் நகராத  படகில் உட்கார்ந்து தியானிக்கவிரும்பும்   வாடிக்கையாளர்களைக் கண்டுபிடிக்க காத்திருக்கிறார்கள் .பளிச்சென்று பெரிய ஆரஞ்சு வண்ணபந்தாக எழுந்து தங்க தாம்பாளமாக விரிந்து  சிலநிமிடங்களில் ஓளியுடன் உயிர்பிறக்கிறது அந்த நதியில். மெள்ள வளரும் காலை ஓளியில் கங்கையின் வண்ணங்கள் மாறுகின்றன.  அழகான ஒவியமாக பரவும் அந்த சூரியயோத காட்சியில் மனதை பறிகொடுத்து நிற்கும்  நாம் அருகிலிருப்பவர்கள் குளிக்க துவங்கியதைப்பார்த்த பின்னர்தான்  நாம் காத்திருந்ததும் அதற்குதானே என்பது உறைத்து. உடனே மூழ்கி எழுகிறோம். தெளிந்தோடிக்கொண்டிருக்கும் கங்கை அன்னையின் அழைப்பு அலைகள். நீண்ட நேரம் நீராடச்சொல்லுகிறது.

.
இரு கைகளால் கங்கயை ஜலத்தை எடுத்து சூரியபகவானுக்கு நதியிலேயே அர்பணம் செய்யும் பலர்,  கூப்பியகைகளை தலைக்குமேல் உயர்த்தி நிஷ்டையில் நிற்பவர்கள், தன் சின்னகுழந்தையை மிக்கவனமாக பிரார்த்தனையோடு குளிப்பாட்டும் அன்னை என அந்த இடமே கங்கயின் நீரைப்போல பக்தியால் நிரம்பியிருக்கிறது.  மெல்லகூட்டம் வரத்துவங்குகிறது. எங்கிருந்தோ ஒலிக்கும் பக்திபாடல்கள் சூழலின் அமைதியைக்கலைக்கிறது படிக்களை கடந்து சாலைக்கு வருகிறோம். காசிநகரம் விழித்துகொள்ள ஆரம்பிக்கிறது. இந்த காசி நகரம் எப்போது உருவானாது? இந்த கேள்விக்கு இன்னும் சரியான விடைகிடைக்கவில்லை.
மனித சமுதாயம் உருவான காலம்தொட்டே உலகில் பல்வேறு நகரங்கள் நாகரீகம் மற்றும் ஆன்மீகத்தின் உச்சியை அடைந்தன.  சில ஆயிரம் வருடங்களுக்கு பிறகு சுவடே இல்லாமல் அழிந்துவிட்டன. கிரேக்க, எகிப்து, ரோமாபுரி நாகரீகங்கள் சில உதாரணங்கள். இவற்றிக்கு எல்லாம் முன்பே கலாச்சாரத்திலும், ஆன்மீகத்திலும் அறிவியலிலும் . தனது மேன்மைக்கு பல இடையூறுகள் வந்தபோதும், ஒவ்வொரு முறையும் சரிவில் இருந்து மீண்டு எழுந்திருப்பது பாரதம்.. இதற்கு ஒரு அடிப்படைக் காரணம் இந்த புண்ணிய பூமியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட பல ஆயிரம் கோயில்களில் சக்தி அதிர்வுகள் இந்த கலாச்சாரத்தின் வேர்களாக இருப்பது. இவற்றில் மிக முக்கியமான ஷேத்திரமாக திகழ்வது காசி. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் காசி நகரம் பன்னிரெண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரே உருவாகியிருக்க கூடும் என்று சொல்கின்றனர்.

காசி என்ற பெயருக்கு பிரகாசமானது என்று பொருள். ஸ்கந்தபுராணத்தில்  பதினைந்தாயிரம் பாடல்கள் பாடப் பெற்றது காசி. நூற்றுக்கணக்கான  சக்திவாய்ந்த கோயில்களால் சூழப்பட்டு ஒரு க்தி வளையமாக திகழ்கிறது  ஆயுர்வேதம் காசியில்தான் எழுதப்பட்டது. யோக அறிவியலின் தந்தையாக போற்றப்படும் பதஞ்சலி முனிவர் இங்குதான் யோக சூத்திரத்தினை இயற்றினார். துளசிதாசரின் ராமசரிதம் மானசம் உருவானதும் இங்குதான்.

 காசி நகரமே ஒரு யந்திர வடிவில் அமைந்திருக்கிறது. இந்த வடிவில்
நானூற்றி அறுவத்தெட்டு முக்கிய கோவில்கள் உள்ளன. காசி விஸ்வநாதர் கோயிலை மையமாக கொண்டு இக்கோயில்கள் ஐந்து அடுக்குப் பாதைகளில் அமைந்திருக்கின்றன. காசி காண்ட புராணத்தில் காசி நகரமே சிவனுடைய திரிசூலத்தின் மீது இருப்பதாக சொல்லப்பட்டு இருக்கிறது. திரிசூலத்தின் மூன்று முனைகளை போல், காசியின் சக்தி வடிவத்திற்கும் மூன்று கோயில்கள் மையமாக இருக்கின்றன. இவை வடக்கில் ஆம்கார் ஈஸ்வரர், மையத்தில் விஸ்வநாதர் மற்றும் தெற்கில் கேதார் ஈஸ்வரர். இந்த ஒவ்வொரு கோயிலும் தனியாகவும், ஒன்று சேர்ந்தும் தங்களுடைய சக்தி பிரவாகத்தை வெளிப்படுத்துகின்றன  இந்த  பயணத்தில் இந்த கோவில்களில் நல்ல தரிசனம் கிடைக்கவேண்டும் என்று எண்ணியபடியே சாலையில் நடக்கிறோம். கங்கைநதியின் படித்துறைகளுக்கு வரும் நகரின் அந்த சாலைகளில் எந்த வாகனங்களுக்கு அனுமதியில்லாதால் சாலை முழுவதும் மக்கள். வேகமாக நதியையை நோக்கி நடந்துகொண்டிருக்கிறார்கள். பலமாநில முகங்கள், மொழிகள். குறிபிட்ட இடம் வரை நடந்தபின்னர் சைக்கிள் ரிக்‌ஷாவில் நாம் தங்கியிருக்குமிடத்திற்கு திரும்புகிறோம். காசியில் தினசரி வரும் டூரிஸ்ட்களின் எண்ணிக்கைவிட அதிக அளவில் இருப்பது சைக்கிள் ரிக்‌ஷாக்கள்.பல இடங்களில் இவர்கள் வாகனத்திற்கு மட்டுமே அனுமதி என்பதால் சைக்கிள் ரிக்‌ஷாவில் ஏறாமல் நீங்கள் காசியில் எதையும் பார்க்கமுடியாது. கட்டணபேரம் சண்டை சத்தம் எதுவும் கிடையாது. தமிழ்நாட்டுகார்களுக்கு அநியாயத்துக்கு குறைந்த கட்டணமாக இருக்கிறதே என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் அளவில்தான் கேட்கிறார்கள்.:. நீங்கள் அதிகம் கொடுக்க விரும்பினாலும் பலர் ஏற்க மறுக்கிறார்கள். ஏற்றுகொள்பவர்கள் மிகுந்த பணிவுடன் பலமுறை நன்றி சொல்லுகிறார்கள். ஹோட்டலுக்கு வந்த பின்னர் நம்மோடு இந்த பயணத்தில் பங்கு  கொள்ள வந்துசேர்ந்திருக்கும் புதிய நண்பர்களை சந்திக்கிறோம்.
ஈஷா அமைப்பு கடந்த சில ஆண்டுகளாக புனித பயணங்கள் (Sacred walks) என்ற திட்டத்தில் அதன் உறுப்பினர்களை இந்த தேசத்தின்  மிகபுனிதமான இடங்களான கைலாஷ். காசி, ரிஷிகேஷ், பத்ரிநாத் போன்ற இடங்களுக்கு அழைத்து செல்கின்றனர்.ஏதோ மத நமபிக்கைகளின் அடிப்படையில் வெறும்சடங்குகள், சம்பிராத்யங்களை மட்டுமே நோக்கமாய் கொள்ளாமல் அந்த இடத்தின் பெருமை, சக்தி அதை முழுமையாக உணர பயிற்சி போன்ற விஷயஙகளுக்கு சத்குருவின் வழிகாட்டுதலுடன் இந்த  புனித பயணங்கள் நடத்படுகின்றன. இந்த ஆண்டு  200க்கும்மேற்பட்டவர்களுடன் கங்கையின் கரையில் காசிக்கும் தொடர்ந்து அங்கிருந்து புத்தரின் தேசத்திற்கும்  பயணம் செய்தகுழுவுடன் இணைந்து நாமும் இந்த புனித  பயணத்தில் பங்குகொள்ள போகிறோம்.
பேராசியர்கள், டாக்டர்கள், முன்னாள் அரசு அதிகாரிகள், நிர்வாகிகள் வாழ்க்கையை துவக்கியிருக்கும் இளைஞர்கள், வெளிநாட்டில் படிப்பைதொடர போகும் மாணவர்கள், வயதான பெற்றோர்களை அழைத்துவந்திருக்கும் இல்லத்தரசிகள் வெளிநாட்டவர்கள், என பலதரப்பட்டவர்கள் நிறைந்த பெரிய குழு அது. அனைவரும் ஒரே இடத்திற்கு அழைக்கபட்டு இந்த பயணத்தில் பங்கேற்பவர்களுக்காக சத்குரு பேசிய விடியோ காட்டபடுகிறது.  பின் குழுதலைவர் ஸ்வாமி பிரோபோதா பயணத்தில் குறிப்பாக காசியில் செய்யவேண்டியது கூடாது பற்றி விளக்குகிறார்.  அன்றிரவு 2.30 மணிக்கு எல்லோரும்  காசிவிஸ்வநாதர் கோவிலுக்கு போகப்போவதையும் அதற்காக எல்லோரும் இரவு 1.30க்கு பஸ்சில் இருக்கவேண்டும் என்பதையும் அவர் அறிவிக்கிறார்.  இரவு 1.30க்காக? ஏன் அந்த நேரம்? என அந்த கூட்டத்திலிருந்த  எவரும் கேட்கவில்லை. ஒரு சின்ன முணுமுணுப்புகூட இல்லை. காரணம் அவர்கள் ஈஷாவில் பயிற்சிபெற்றவர்கள். நேரதிட்டமிடலின் அவசியத்தையும் சத்குரு தீர்மானித்திருக்கும் நேரத்தின் அருமையையும் உணர்ந்தவர்கள். அன்றிரவு 1.30க்கு  5 பஸ்களிலும் அனைவரும் அவரவர் இடத்தில் இருந்தனர். ஒரு பஸ்சின் டிரைவர் மட்டும் வராததால் காத்திருக்கிறோம்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------

சத்குரு, வாழ்க்கையில் ஒரு முறையாவது  காசிக்கு போகவேண்டும் என சொல்லுகிறீர்கள். எதற்காக அங்கு  போகவேண்டும் ?

ல காலமாக என்னை அறிந்திருப்பவர்கள் சத்குரு ஏன் காசி யாத்திரை செய்யச் செல்கிறார்? வயதாக ஆக அவர் சற்றே மென்மையானவராக ஆகி வருகிறாரோ,” என்று யோசிக்கத் துவங்கி விட்டனர். சரி, எதற்காக இந்த காசி யாத்திரை?
இந்த படைப்பை அடிப்படையாக இரண்டு விதங்களில் பார்க்கிறார்கள். ஒரு விதம் எங்கோ ஒர் இடத்தில் கடவுள் இருப்பதாகவும், அவருக்கு வேலை ஒன்றும் இல்லாத பட்சத்தில் அவர் இந்த படைத்தலை செய்கிறார் என்பது. இது ஒருவிதமான நம்பிக்கை முறை. இதை இன்னொரு விதத்தில் சொல்ல வேண்டுமென்றால், கடவுள் என்று மக்கள் எதை அழைக்கிறார்களோ அது இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி. அவர் படைத்தலுடன் தொடர்பில் இல்லை, படைத்தல் என்பது அவர் வீசி எறியும் ஒரு சமாச்சாரம்.
படைத்தலை மற்றொரு விதத்தில் பார்ப்பதை – “காஸ்மோஜெனிக்என்று சொல்லலாம். காஸ்மோஜெனிக்” (Cosmogenic) என்னும் வார்த்தை இரண்டு வார்த்தைகளில் (Cosmo+Genic) இருந்து தோன்றியுள்ளது. கிரேக்க மொழியில் காஸ்மாஸ்என்றால் ஒரு திட்டத்தின்படி உருவாக்கப்பட்டதுஎன்று பொருள். அதாவது எதேச்சையாக நிகழவில்லை. இது யாரோ ஒருவர் வாயிலிருந்தோ அல்லது கையிலிருந்தோ வந்து விழவில்லை. மாறாக விழிப்புணர்வுடன் உருவாக்கப்பட்டது. கொஞ்சம் கவனம் செலுத்தும் யாரொருவருக்கும் இந்த படைப்பு ஏனோ தானோவென்று நிகழவில்லை என்பது தெளிவாகத் தெரியும்.
இந்த பிரபஞ்சத்தை தனக்குள்ளேயே உருமலர்ச்சியும் எல்லையில்லாமல் விரிவடையும் சாத்தியமும் கொண்டதாக பார்த்த யோகிகள், அதே இயல்பை தங்களுக்கும் உரித்தாக்கிக் கொள்ளத் தூண்டப்பட்டனர். பல அற்புதமான முயற்சிகள் இந்த தேசத்தின் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உலகின் வேறு சில பகுதிகளிலும் இம்முயற்சி நடந்துள்ளது.கிரேக்க நாட்டில் டெல்ஃபி நகரில் காசியை போன்ற சிறு பிரதிபலிப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
அடிப்படையாக இது எதைக் குறிக்கிறது என்றால், இங்குள்ள படைத்தல் ஒவ்வொன்றுமே, ஏதோ ஒரு விதத்தில், இந்த பிரபஞ்சத்தின் சிறு நகல் என்பதைத்தான். இது மனித உடலுக்கும் பொருந்தும். படைப்பில் உள்ள ஒவ்வொன்றுமே அளப்பரிய சாத்தியம் உடைய இந்த பிரபஞ்சத்தின் சிறிய நகல்தான். இந்த அடிப்படையில் பல விஷயங்கள் செய்யப்பட்டுள்ளன.
காசியில், ஒரு நகரின் தோற்றத்தில் ஒரு குறிபிட்ட வகையான இயந்திரம் ஒன்றை உருவாக்கியுள்ளார்கள். காசியை போன்ற ஒரு நகரத்தை உருவாக்குவது மதிமயக்கமுறச் செய்யும் அசாத்திய கனவு. இதனை அவர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்த்தினர். மனித உடலில் 72,000 நாடிகள் இருப்பதைப் போல காசியிலும் அப்போது 72,000 கோயில்கள் இருந்தன. இந்த முழு செயல்முறையுமே அகண்ட அண்டத்தின் உடலுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதற்காக பிரம்மாண்டமான மனித உடல் போன்ற ஒரு அமைப்பை உருவாக்குவதாக இருந்திருக்கிறது. இதனால் தான், “நீங்கள் காசிக்கு போனால் போதும், எல்லாம் முடிந்துவிட்டது,” என்னும் நம்பிக்கை உருவானது. நீங்கள் காசியை விட்டு வெளியே வரவே விருப்பப்பட மாட்டீர்கள், ஏனென்றால் நீங்கள் அண்டத்தின் உயிராற்றலுடன் தொடர்பில் இருக்கும்போது, வேறெங்கு செல்ல விருப்பப்படுவீர்கள்?

கல்கி 18/01/14


I

13/1/14

ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த அபூர்வராகம்


11-1-14


இன்று கீரின் ஏக்கர்ஸ் கிளப் பில் சக்தி பாடினார். ஒரே வார்த்தை அற்புதம். 1 மணி நேரத்திற்கும் மேல் நடந்த  அருமையான கச்சேரி. தமிழ் பாடல்,கன்னட கீர்த்தனை என எல்லாமே சூப்பர்.  ஆங்கில ஒப்ரா (OPERA) பாடலைப் பாடி அதை ஒரு கர்நாடக ராகத்துடன் தமிழ்பாடலாக பாடி முடித்தார்.  . இந்த பெண்ணிடம் நிறைய விஷயமிருக்கிறது. AR ரஹ்மான்  கேட்கவேண்டும்.  கச்சேரியின் கடைசியில்  
முத்தைத் தரு பக்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண
முக்திக்குஒரு வித்து குருபர என ஓதும்

என்ற அருணகிரிநாதரின் திருப்புகழலிலிருந்து பாடியது தான் ஹைலைட். தமிழ்பாடகர்களே பல்லை உடைக்கும் இந்த பதிகத்தை பாடத்தயங்கும் ஒரு  பாடல் இது. இதை இந்த ஆஸ்திரேலிய பெண் அனாயசயமாக பாடியது ஆச்சரியமான விஷயம் 


12/1/14

உலகளவில் தமிழ் -புதிய பார்வை

இந்தியா உள்ளிட்ட 12 நாடுகளிலிருந்து 35 எழுத்தாளர்கள், அறிஞர்கள் பங்கேற்கும் தாயகம் கடந்த தமிழ் என்ற அனைத்துலக மாநாடு கோவையில் ஜனவரி 20,21,22 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. மாநாட்டின் அமைப்புக்குழு தலைவராக எழுத்தாளர் மாலன் உள்ளார். அவரிடம் பேசியதிலிருந்து
இந்த மாநாடு எதற்காக?
தமிழ் என்பது இன்று உலகம் முழுவதும் பரவிப் படர்ந்துள்ள மொழி. தமிழ் என்று பேசும் தருணங்களில் எல்லாம் பெரும்பாலும் நாம் அதன் இலக்கியத்தை குறித்துப் பேசுகிறோம். ஆனால் மொழி என்பது இலக்கியம் மாத்திரம் அல்ல. தமிழர்களின் பாரம்பரியத் தாயகங்களான தமிழகத்திலும்   இலங்கையிலும், அந்தத் தாயகங்களுக்கு அப்பாலும் தமிழ் மொழியை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சென்று அது தளராமல் தாங்கி நிற்பது இலக்கியம், ஊடகம், கல்வி, தொழில்நுட்பம் ஆகிய நான்கு தூண்களே. இந்தத் துறைகளில் கணிசமான பங்களித்தவர்கள் கூடிக் கருத்துக்கள் பரிமாறிக் கொள்கிறோம். இந்தத் துறைகளில் முன்னேறிச் செல்ல இந்தக் கருத்துப் பரிமாற்றங்கள் பயனளிக்கும் என எண்ணுகிறோம். ஒரு வேளை இதன் காரணமாக இந்தத் துறைகளிடையேஓர் கூட்டாற்றால் (synergy) ஏற்படவும் கூடும் என்றும் நம்புகிறோம்

இந்த மாநாட்டில் நீங்கள் எப்படி ஈடுபட்டுள்ளீர்கள்?
ஒரு தமிழ் எழுத்தாளன் என்ற முறையில் பத்துப் பனிரெண்டு ஆண்டுகளாக தமிழிலக்கியம் என்பது தமிழ்நாட்டில் எழுதப்படும் இலக்கியம் மாத்திரமல்ல என்ற கருத்தைத் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகிறேன். இந்தக் கருத்தை வலுப்படுத்தும் நோக்கில்  திசைகள் என்ற மின்னிதழை ஆசிரியராகவும் பதிப்பாளராகவுமிருந்து வெளியிட்டுள்ளேன். யூனிகோடில் அமைந்த முதல் தமிழ் மின்னிதழ் அது. 2004ல் அயலகத்தில் எழுதப்படும் இலக்கியங்கள் குறித்து சிங்கப்பூர் தேசியப் பலகலைக் கழகத்தில் உரை நிகழ்த்தியிருக்கிறேன். 2011ம் ஆண்டு சிங்கப்பூர் எழுத்தாளர் கழகம், தேசிய கலைமன்றம் இவற்றின் ஆதரவில் நடத்தப்பெற்ற உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் முக்கியப் பங்காற்றியுள்ளேன். இந்த மாநாட்டின் அமைப்புக் குழு தலைவராக உள்ளேன். அயலகத்தில் உள்ள கட்டுரை வாசிப்போரைத் தேர்ந்தெடுப்பது,  கட்டுரை பெறுவது, மாநாட்டின் நிகழ்ச்சி நிரலை வடிவமைப்பது, கட்டுரைகளுக்கு நூல் வடிவம் அளிப்பது ஆகியவை என் பணிகளாக அமைந்தன

இந்த மாநாட்டினால் என்ன பயன்?
தமிழ் மக்கள் தமிழ் மொழி, இலக்கியம், கல்வி ஆகியவை குறித்த ஓர் புதிய பார்வையும் பெருமிதமும் பெறுவார்கள். மாநாட்டுக் கட்டுரைகள் நூலாக வெளியாகின்றன. அவை ஆய்வு மாணவர்களுக்கும், முதுநிலை மாணவர்களுக்கும் பயனளிக்கும்.

சந்திப்பு 

ஆதித்யா

(கல்கி19/01/14)

10/1/14

கலக்குகிறார் கலாவதி

”அப்பா ! இன்று எதலெல்லாம்  விற்கலாம் , புதிதாக எதை வாங்கலாம் என லிஸ்ட் எழுதி வைத்திருக்கிறேன். மார்கெட் ஒப்பன் ஆனதும் உடனே செய்து விடுங்கள். நான் குறித்திற்கும் விலைக்கு மேல் போனால் வாங்கவேண்டாம். எனக்கு இன்று டெஸ்ட் இருக்கிறது வரட்டுமா? “ என்று சொல்லி விட்டு ஸ்கூலுக்கு போகிறார்    9ம் வகுப்பு படிக்கும் கலாவதி. அவரின் தந்தை திரு பாண்டியன் அவர்சொன்னது போல  செய்துவைக்கிறார்.  மாலையில் பள்ளியில் இருந்து திரும்பிய பின் செய்த  டீலிங்களை தனது கம்ப்யூட்ரில் பதிந்து கொள்ளுகிறார். அடுத்த  இரண்டு மணிநேரம் அன்று நாள்முழுவதும்  நடந்த டிரேடிங் பேட்டர்னை அலசுகிறார். தன் கையில் இருக்கும் ஷேர்களில்  விற்க வேண்டியவைகளையும் புதிதாக வாங்க வேண்டியவைகளையும் பட்டியில் இடுகிறார். பின்னர் ஸ்கூல் பாடங்களை முடித்துவிட்டு டிவி பார்க்கிறார். இதுவரை  ஷேர் மார்கெட்டில்  குறைவாக இழந்து நிறைய சம்பாதித்திருக்கிறார். இந்த வயதில் இந்தியாவில் இதை செய்தவர் இவர் மட்டுமே


 எப்படி எங்கே இதையெல்லாம் கற்றார்?  என்று ஆச்சரியபடுத்தும்  இந்த
பெண்ணின் குடும்பத்தில் யாரும் ஷேர் பிஸினஸில் ஈடுபட்டிருப்பவர்கள் இல்லை. தந்தை பாண்டியன்   நிறுவனங்களுக்கு தரசான்றிதழ்  பெற, தர நிர்ணயம் உறுதி செய்யும் நிருவனத்தை நிர்வகிப்பவர். தாய் இல்லத்தரசி.
”அப்பா வீட்டில் கம்பெனிகள் பிராண்டுகள் எல்லாம் பற்றி பேசுவார். அதில் ஷேர்களில் முதலீடு அதன் மூலம் கம்பெனியின் லாபம் நமக்கு வரும் என்பது எனக்கு இண்ட்ரஸ்ட் ஆன விஷயமாகயிருந்தது. அதை பற்றி அவரிடம் நிறைய கேள்விகள் கேட்டு தொந்தரவு செய்துகொண்டிருந்தேன். நிறைய சொன்ன அவர் கேப்பிட்டல் மார்கெட் பத்திரிகையை படிக்க வாங்கி தந்தார். முதலில் புரியாத விஷயங்களை திரும்ப திரும்ப படித்து புரிந்து கொண்டேன். நெட்டில்  மணி கண்ட்ரோல் என்ற தளத்தில் நிறைய படித்து தெரிந்து கொண்டேன். போனவருடம் 8ம் கிளாஸில் இருக்கும் போது முதல் ஷேரை வாங்கினேன். இப்போது  நான் நிறைய வாங்கி விற்கிறேன். என்கிறார் கலாவதி.
 ”ஹர்ஷெத் மேத்தா காலத்தில் ஷேர்மார்கெட்டில் மூதலீடு செய்து கையை சுட்டுகொண்டவன் நான். பெரிய நஷ்டத்தை சந்தித்த பின்  நமக்கு இதெல்லாம் சரிஇல்லை என ஒதுங்கியவன் நான்.  இந்த பெண்ணின் ஆர்வமும் சாமர்த்தியமும் எனக்கே ஆச்சரியமாகயிருக்கிறது என்கிறார் தந்தை பாண்டியன். சிறு பெண்ணாக இருப்பதால் அவர் பெயரில்  வங்கியில் டி மாட் (ஷேர் மார்க்கெட் மூதலிட்டு இது அவசியம்) கணக்கு துவங்க முடியாதாலால் என் பெயரில் கணக்கை  துவங்கி அவர் அதை கையாளுகிறார். இந்த பெண்ணுக்காக நான் டிமேட் கணக்கு பற்றி முதலில்  தெரிந்துகொண்டேன்.  எல்லா முடிவுகளும் அவருடையதுதான்.  டிரெண்ட் அனலைஸ் என்பது ஒரு நிறுவனஷேர் கடந்த  வாரம், கடந்த மாதம், கடந்த ஆண்டு எப்படியிருந்தது என்பதின் அடிப்படையில் இன்றைய நிலையையும் அடுத்து எந்த கட்டத்தில் விலைஉயரும் அல்லது குறையும் என்பதை கணிப்பது. அதை இவர் மிக பிரமாதமாக செய்கிறார். ஒரு சில கம்பெனிகளின் கிராப் களின் மூலம் நமக்கு டெமோவே காட்டுகிறார். எல்லா வல்லுனர்களின் கருத்தையும் அப்படியே ஏற்க கூடாது. சிலர் சொல்லுவதை மாற்றி விற்க சொன்னால் வாங்க  வேண்டும் என அவர்களின் பட்டியலும் வைத்திருக்கிறார்.
உன்னுடைய கணிப்புகளை யாருக்காவது டிப்ஸ் கொடுத்திருக்கிறயா? என கேட்டால் என் பள்ளியில் ஸ்டாக் மார்கெட் பற்றி ஒரு முறை பேசினேன். யாருக்கும் புரியவில்லை. என் குளோஸ் பிரண்ட்ஸ்க்கு நான் டிரேடிங் செய்வது தெரியும் ஆனால் என்ன என்பது விபரமாக தெரியாது என்று சொல்லும் கலாவதிக்கு கணக்கு பாடத்தில்  அவ்வளவு இஷ்டமில்லை  இங்கிலீஷ், சயின்ஸ்தான் பிடித்திருக்கிறது.   சராசரி 75% மார்க்குகள் வாங்கும் இந்த மாணவிக்கு பிடித்த மற்றவிஷயங்கள் பாடுவது,
சினிமாபார்ப்பது. இந்த உலக சாம்பியன் போட்டிக்கு பின் செஸ்.
படிப்பை முடித்தபின் என்னவாக எண்ணம்.?  “ தெரியவில்லை அங்கிள்! நிச்சியமாக டாக்டர், எஞ்சினியர் ஆக மாட்டேன். ஷேர் புரோக்கராகவும் மாட்டேன்.  மார்கெட் அனலிஸ் செய்வது பிடித்திருக்கிறது அதில் ரிசர்ச் செய்ய முடியுமா என்பதை அப்பாதான் சொல்ல வேண்டும். என்கிறார்.
கலாவதி ஒர் அதிர்ஷ்டகாரபெண். ஷேர்மார்கெட்டில் லாபம் சம்பாதிப்பதினால் மட்டுமில்லை. எல்கேஜி படிக்கும் எதிர்காலத்தில் என்னவாக வேண்டும் என திட்டமிட்டு அதை குழந்தைகள் மீது திணிக்கும் பெற்றோர்களிடையே  தங்கள் மகள் விரும்புவதை செய்ய அனுமதித்து  அதை ஊக்கபடுத்தும் பெற்றோர்களை அடைந்திருப்பதிலும்தான்.

5/1/14

ஒரே இரவில் 85000 ரூபாய் !

மனதில் பதிந்த பதிவுகள்

 


இ.ரா மணிகண்டன் என்பவரின் வலைப்பூ(BLOG)  ”நிசப்தம்” பார்த்தது, படித்தது,.கேட்டது,ஆபிஸ்,  அடுத்தவீட்டுகாரன்,  சினிமா, புத்தகம், வம்பு அரசியல், பயணங்கள்  என்று எதைப்பற்றியாவது   படிக்க ஆர்வம் மூட்டும் வகையில் தினமும் எழுதி தள்ளிக்கொண்டிருப்பவர். கொங்குநாட்டு வாழக்கைமுறை, சாப்ட்வேர்துறை ஆகியவைகளின்  தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கும். சிறந்த வலைப்புக்கான சுஜாதா விருதை 2013ம் ஆண்டில் பெற்ற இவர் தளத்தில் தன் படத்தை கூட போட்டுகொள்ளாத எளிய மனிதர். பங்களூரில் வசிக்கிறார்.
பாலாஜி சென்னை எஸ் ஆர் எம் கல்லூரியில் முழுஸ்காலர்ஷிப்பில் ரோப்டிக்ஸில் ஏம் டெக் படிக்கும் ஒரு மாணவர்.  மிக எளிய குடும்ப பின்னணியுள்ள இவருக்கு  ரோபோவின் மீது வெறும் ஆர்வம் மட்டுமில்லை. வெறி, காதல் என்று என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். வெறும் ஆர்வத்தோடு நின்றுவிடாமல் தனது ஆர்வத்தை செயலாக்கிக் கொண்டிருக்கிறார். இதுவரைக்கும் ஏகப்பட்ட ரோபோக்களை சுயமாக வடிவமைத்திருக்கிறார். இவரது லிஸ்ட்டில் பறக்கும் ரோபோட், விவசாய ரோபோட் என்று பலவகைகள் அடங்கும்.
இவருக்கு ஜப்பானில் நடைபெறும் ஒரு சர்வதேச ரோபோட்டிக்ஸ் கருத்தரங்கிறகுற்கு அழைப்பு வந்திருக்கிறது. ஆனால் போவதற்கு முயற்சி எடுக்க கூட  முடியவில்லை காரணம் டிக்கெட்டுகான பணம். தன்னுடைய பிளாக்கில் மணிகண்டன் இதை எழுதி உதவி செய்யமுடியுமா? என கேட்டிருந்தார். முதல் நாள் இரவில் எழுதிய பதிவிற்கு மறுநாள் மாலைக்குள் வந்த பணம்  85000 ரூபாய்கள்.! அமெரிக்காவிலிருந்து 50000, கத்தாரிலிருந்து 30000 என்று சிலமணிநேரங்களில் பணம் வங்கி கணக்கில் சேர்ந்தது.. இவர்களில் யாரையுமே இதுவரை மணிகண்டன் நேரில் பார்த்ததில்லை என்பது  ஒரு முக்கியமான விஷயம்.


 இதற்காக தன் நன்றியை  சொல்லும் மணிகண்டன் “இத்தனை பெரிய தொகையை ஒரே இரவில் புரட்டிவிட முடியும் என்று கனவில் கூட நினைத்ததில்லை. நேற்று இந்தப் பதிவை எழுதும் போது கூட பத்தாயிரம் ரூபாய் புரட்டினாலே பெரிய விஷயம் என்றுதான் தோன்றியது. ஆனால் நல்ல காரியத்திற்காகச் செய்யும் போது எல்லாமே சரியாக நடக்கின்றன. கடவுள் மீது எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. இந்த மாதிரியான கணங்களில் நம்பிக்கையை இன்னும் சற்று உறுதிப்படுத்திக் கொள்கிறேன்என்று தன் பதிவில் எழுதுகிறார்.  உதவிக்கு நன்றி சொல்லும் பாலாஜி இனி யாரும் பணம் அனுப்ப வேண்டாம்ன்னு சொல்லிடுங்க சார்.இப்போதைக்கு இந்தப் பணம் போதும் சார். என்னை மாதிரி வேற யாராச்சும் வந்தாங்கன்னா அவங்களுக்கு தேவைப்படும்ல. அப்போ தந்துடச் சொல்லுங்கஎன்று மணிகண்டனுக்கு சொல்லியிருக்கிறார்.
சமூக வலைத்தளங்கள் தவறாக பயன்படுத்தபடும் அவலம், ஆபத்துகள் பற்றி மட்டுமே அதிகம் பேசப்படுகின்ற நேரத்தில் இம்மாதிரி மாறுதலான செய்திகள் ஆறுதலாக இருக்கிறது.  சமூக பொறுப்புடன், மனித நேயத்தோடு எழுதும் பதிவர்களும், அதை மதிக்கும் வலைப்பூ வாசகர்களும்  உலகில் எங்கோ ஒரு மூலையிலும் இருக்கிறார்கள் என்பது சந்தோஷத்தை தருகிறது.
ஆதித்யா (ரமணன்)

மணிகண்டனின் நிசப்தம் லிங்க்





3/1/14

மசாலா தோசையிலிருந்து மெல்போர்னுக்கு .

சென்னை  அடையார் பார்க் ஹோட்டல் டவரின் ஆறாவது மாடியில் நண்பருடன் கிளப் லெளன்ஞ்சில் பிரேக்பாஸ்ட். தவிர்க்க முயற்சித்து இயலாது போன ஒரு பிரேக்பாஸ்ட். கண்ணாடிகளின்வெளியே ஆச்சரியபடுத்திக்கொண்டிருக்கும் சென்னையின் பசுமை. நகரிலேயே காஸ்டிலியான. ஊத்தப்பம் சாப்பிட்டுகொண்டிருக்கிறோம். (நமக்கு பிடித்தது (தெரிந்தது?) வேறு எதுமில்லை) பக்கத்து டேபிளில் ஆரஞ்ச் கலர் ஜிப்பாவில் தங்க பிரேம் கண்ணாடியில் ஒருவர்.  யாருடனோ  போனில் யாழ் தமிழில் சென்னை திருவையாறு பற்றி கதைத்துக்கொண்டிருந்தார். பொதுவாக இம்மாதிரி ஹோட்டல்களில் பக்கத்து மேஜைக்கார்களுடன் பேசவே மாட்டார்கள் அதிக பட்சம் ஒரு செயற்கையான ஹலோ, மாறாக இந்த மனிதர் தான் சாப்பிட்ட மசாலா தோசையின் ருசி அற்புதம் என பேச தொடங்கினார். மசாலா தோசையிலிருந்து பேச்சு மெல்ல  மெல்போர்னுக்கு போனது. காரணம் அங்கு வசிப்பவர் அவர். சென்னை மீயூசிக் சீசனுக்கு  குடும்பத்துடன் வந்திருப்பதாகவும்,   கேட்கவேண்டிய கச்சேரிகளை  தேர்ந்தெடுத்து கேட்பதாகவும் சொன்னார். இம்மாதிரி இப்போது நிறைய NRI க்கள் வருவதால் அது எனக்கு பெரிய விஷயமாக தோன்றவில்லை.  ஆனால் தொடர்ந்து சொன்னது தான் என்னை கவர்ந்த விஷயம். இது தன் மகளுக்காக என்றும் அவர் 4 வயதிலிருந்து மெல்போர்னிலேயே கர்நாடக இசை கற்றுவருகிறார் என்றும்  ஆண்டு தோறும் இங்கு வந்து தன் மியூசிக்கை இம்ரூவ் செய்து கொள்கிறார் என்றும் சொன்னார். தன் மனைவி ஒரு கீரிஸ் தேச பெண் என்றார்.  அப்பா இலங்கை அம்மா கீரிஸ், பெண் கர்நாடக இசை கற்று கொண்டுவருகிறது என்பதை கேட்டதும்  என் பத்திரிகைகாரன் புத்தி முழித்துகொண்டது. அவர்களை சந்திக்க வேண்டுமே என்றேன்.
இரண்டு நாட்களுக்கு பின்  அந்த குடும்பத்தினரை சந்திதேன்.   ஒரு மயிலாப்பூர் பெண்ணைபோல பட்டுபுடவையில் வந்து ஆச்சரியபடுத்தியவர்  ஷக்தி  அவர் மகள் ! சென்னையில் இருக்கும்போது  இதுதான் டிரஸாம்.



 4 வயதில் கர்நாடக வாய்ப்பாட்டு, 5 வயதில் வயலின் 6 வயதில் பியானோவுடன் வெஸ்டர்ன் மீயூஸிக் 7 வயதில்.பரதம், விணை என்று சகலுமும் ஆஸ்திரேலியாவிலேயே கற்க ஆரம்பித்து தொடர்ந்து எல்லாவற்றிலும் டிப்பளமோ வாங்கியதை மிக பணிவுடன் சொல்லி பிரமிக்க வைத்தார். ஷக்தி. வீட்டில் அம்மாவுடன் லத்தின் அப்பாவுடன் இங்கிலீஷ் என்று பேசுவதால் தமிழ் பேச தெரியாது. என்று சொன்னவர் என்னுடன் பிரிட்டிஷ் ஆக்ஸஸெண்ட் ஆங்கிலத்தில் தான் பேசிக்கொண்டிருந்தார்.  எனக்கு பாடிக்காட்ட விரும்பியபோது. (நாம் ஓளெரங்க சீப் என்று அவருக்கு தெரியாது) சட்டென்று  ஹைஹீல் செருப்பை கழட்டிவிட்டு தரையில் உட்கார்ந்து ”குறை ஓன்றும் இல்லை” பாடினார். அவரது குரு  எங்கு பாடினாலும் தரையில் உட்கார்ந்துதான்  பாட வேண்டும் எனறு சொல்லியிருக்கிறாம். நல்ல குரல்வளம்,ராகம் எல்லாம்  கண்ணைமூடி கேட்டால் ஷக்தி தமிழ் தெரியாத ஆஸ்திரேலிய பெண் என்று யாரும் நம்ப மாட்டார்கள். அவ்வளவு அழகாக பாடுகிறார்.  சங்கீதத்தின் எல்லைகளை தொட முயலும் இந்த அழகான பெண்  ஸ்கூல்படிப்பு முடித்து மெடிசன் படிக்க கல்லூரியில் சேர்ந்திருக்கிறார். 10 வருடம் பரதம் கற்று கடந்த வருடம் அரேங்கேற்றம் செய்திருக்கிறார். படிப்பிலும் டாப். ஆஸ்திரேலியா மேக்ஸ் ஒலிம்ப்யார்ட் போட்டிகளில் முதல் 15% இடம் பெருமளவுக்கு கணக்கு தெரிந்திருக்கிறது.  டாக்டருக்கு படித்தாலும் கர்நாடக சங்கீதத்தை தொடர்வேன் Music is my life என்று சொல்லி  என்னை பிரமிக்கவைத்த  இந்த புத்திசாலிப்பெண்ணை பற்றி விரைவில் கல்கியில் எழதவிருக்கிறேன்.  இந்த வார இறுதியில் எங்கள் கீரின் ஏக்கர் கிளப்பிற்கு வந்து பாடும்படி  அழைத்திருக்கிறேன்.

நல்ல பயணங்களைப்போலவே, எதிர்பாராமல் ஆச்சரியப்படுத்தும் சந்திப்புகளும் அவ்வப்போது எனக்கு வாய்க்கிறது. 2013 ஆண்டின் இறுதிநளில்  கிடைத்த இதுவும் அத்தகைய ஓன்று இது

ஹேப்பி நீயூ இயர். 

1/1/14

சத்குருவுடன் ஒரு நாள்

சத்குருவுடன் ஒரு நாள்



கோவைக்கு அருகில் வெள்ளியங்கிரி மலைச்சாரலின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையம். நடுவில் தூண்கள் எதுவுமில்லாது  நவீனமாக எழுப்பட்டிருக்கும் பிரமாண்டமான ஆதியோகி ஆலயம் என அழைக்கப்படும் தியான மண்டபம்..ராணுவ ஒழுங்கில் அமர்ந்திருப்பவர்களின் முன்னே விளக்கொளியில் சத்குரு. அவரின் கட்டளைகளுக்கு ஏற்ப யோக பயிற்சிகளை செய்கின்றனர். இடையிடையே சில நேரங்களில் சீடர்களுடன் உரையாடும் ஜென் ஞானியைபோலவும், சில நேரங்களில் வேறுஒருகாலத்தின் கதையை திறம்பட சொல்லும் கதை சொல்லியாகவும், சில சமயங்களில் பிரபஞ்சத்தின் கடினமான விஷயங்களை விளக்கும் ஞானிபோலவும் பேசிகொண்டிருக்கிறார். கன்னட வாசனையில் தமிழ். கம்பிரமான ஆனால் கனிவான குரல், ஈஷாவின் ”சத்குருவுடன் ஒரு நாள்”- நிகழச்சிக்கு பின்னர்  அவர் கல்கிக்காக அளித்த  Exclusive பேட்டி

யோகா, பிராணாயமம்  போன்றவைகள் ஒரு குருவின் மூலம் ஒவ்வொருக்கும் தனித்தனியாக சொல்லிகொடுக்க வேண்டிய ஒர் பயிற்சி. அதை இப்படி பிரமாண்ட கூட்டங்களில் சொல்லிக்கொடுப்பது எந்த அளவிற்கு கற்றுகொள்பவர்களுக்கு பலன் அளிக்கும்?. தவறாக கற்று கொள்ளகூடிய வாய்ப்பும் இருக்கிறதே?
ஈஷா அமைப்பு கடந்த 30  ஆண்டுகளாக யோகா பயிற்சிகளை கற்பித்து வருகிறது. அதை சரியான முறையில் சொல்லிக்கொடுக்க  ஆசிரியர்களுக்கு நாங்கள் ஆண்டுகணக்கில் பயிற்சி அளித்திருக்கிறோம். கற்பிப்பதில் தவறுகள் நேர்ந்துவிடாத வண்ணம் நிறைய ”டெம்பிளேட்”களை உருவாக்கியிருக்கிறோம்.  ஆனாலும் நீங்கள் கேட்பது புரிகிறது. இம்மாதிரி மாஸ் புரோகிராம்களில் நான் கற்பிப்பது யோகாவின் ஒரு அங்கமான    –”உப-யோகா- இதில் சில எளிய பயிற்சிகளை கற்று அதன் பலனை உணர்பவர்கள், அடுத்த கட்டத்தில் தொடர வேண்டும் என்பதுதான் நோக்கம். 1000 இல்லை 15000 பேராக இருந்தாலும்  எண்ணத்தை ஒருமுகபடுத்தி கண்களைமூடி நான் சொல்லுவதை கேட்கும்போது  சாதகர்கள் நான் தனியாக அவருக்கு சொல்லிகொடுப்பதை போல உணர்ந்தை பலர் சொல்லி கேட்டிருக்கிறேன். மேலும் ஒரே இடத்தில் பலர் பயிற்சி செய்ய முயற்சிக்கும் போது அந்த இடத்தில் ஏற்படும் சக்தி அதிர்வலைகள்  கற்கும் திறனைப் பெருக்குகிறது.

  ஒரு ஆன்மீக குருவாக இருந்துகொண்டு எப்படி ஈஷா வின் அத்தனை பகுதிகளையும் நேரடியாக  நிர்வகிக்கிறீர்கள்?
ஆன்மீகம்  என்பது தவறாக புரிந்து கொள்ளபட்டிருக்கிறது. ஒரு ஆன்மீக வாதியை தங்கள்  இறைவழிபாட்டுக்கான கருவியாக பலர் எண்ணுகிறார்கள்.  சமூகத்தில் ஒர் ஆன்மீக வாதிக்கான பொறுப்பு மிகஅதிகம். தான் சார்ந்துள்ள சமூகத்திற்கு ஆன்மிகம் என கருதப்படும் நல்ல நெறிகளைபோதித்து அதேநேரத்தில் அந்த கால கட்டத்திற்கு அவசியமான சமூக மேம்பாட்டிற்கான பலவிஷயங்களையும் முன்னெடுத்து செய்யமுயற்சிகவேண்டும் அதைத்தான் ஈஷா மூலமாக நாங்கள் முயற்சிக்கிறோம். ஒரே நேரத்தில் பல விஷயங்களை செய்வது ஒரு பெரிய விஷயமில்லை. அவைகளோடு ஆன்மீக, யோக பயிற்சிகளை விடாமல் செய்யவதுதான் முக்கியம். எங்கள் பிரம்மச்சாரிகளையும், தொண்டர்களையும் அதற்கு தயார் செய்திருக்கிறோம்.

 உங்கள் கூட்டங்களிலும் சரி தனி சந்திப்புகளிலும் சரி ஆன்மீகம் மட்டுமில்லாமல் விஞ்ஞானம், மருத்துவம், மேனஜ்மெண்ட். என்று   எதைப்பற்றிக்கேட்டாலும் எப்படி உங்களால்  உடனடியாக பதில் சொல்ல முடிகிறது.?
 நான் எதைப்பற்றியும் சொந்தமாக சிந்திப்பதில்லை. எதை பற்றியமுடிவுகளும் என் சிந்தனையில் இல்லை.  என் தலை காலியாக இருக்கிறது. எனக்கு சொந்தமான ஒரு மூளையில்லை என்று சொன்னால் சிரிப்பீர்கள். ஆனால் அதுதான் உண்மை. எனக்கு தேவையானது நான் சொல்லவேண்டியது  எல்லாம் பிரபஞ்ச மூளையிலிருந்து வருகிறது, சில என்னுள் பதிவாகிறது. பல பதிவாதில்லை. எனக்கு தெரிந்த விஷயங்கள் எல்லாமே ஒரு கணத்தில் நிகழந்தவை. எனக்கு எதுவுமே தெரியாது. ஆனால்  அதே நேரம் நீங்கள் கேட்கும் எல்லாமே  எனக்கு தெரியும். நீங்கள் மனித வாழ்க்கை தொடர்பாக, அதன் உள்நிலை தொடர்பாக என்ன கேட்டாலும் எந்தவித தயக்கமுமின்றி தெளிவாக பதில் தருவது போல நீயூக்லீயர் பிசிக்ஸ் பற்றி கேட்டாலும் தருவேன். நான் என்குருவை சிலவினாடிகள் மட்டுமே சந்தித்தேன். அவர் என்னை கையால் தொடவில்லை, கையிலிருந்த ஊன்றுகோலால் தொட்டார். பத்துபிறவிகள் படித்தாலும் தெரிந்து கொள்ளமுடியாத விஷயங்கள் அந்த ஒருவினாடியில்  எனக்கு வழங்கபட்டன,. அவைகளை அறிந்துகொள்ளும் தொழில் நுட்புமும் எனக்கு தரப்பட்டது. அது வழங்கப்பட்டபோது,ஒரு சக்திநிலையாக வழங்கபட்டது. அது நினைவாற்றல்லாக அல்லது தர்க்க அறிவிவாக வழங்கபடவில்லை. அதனால் தான் அவைகளை நான் அவசியமில்லாதபோது சிந்திப்பதில்லை.. எனக்கென்று எந்த சிந்தனைகளோ அதுபற்றிய முடிவுகளோ என்னிடம் இல்லை.
உங்களால் முந்தியபிறவிகளை உணரமுடியும் என சொல்லுகிறீர்கள். கடந்த பிறவிகளில் உங்களுடன் தொடர்பு கொண்டவர்களை இந்த பிறவியில் உங்களால்  அடையாளம் காணமுடியுமா?
கடந்த 370 ஆண்டுகளுக்கு முன் என்னுடன் தொடர்பு கொண்டர்வர்களில் சிலர் இங்கே இருக்கிறார்கள்,  ஆனால் அதை ஆராய்வதும் அவர்கள் அந்த பிறவியில் செய்தது பற்றி ஆராய்வதும் இப்போது அவசியமில்லாதது.                                                                          
                                                                          

நீண்ட கால தவத்திற்குபின்  உங்கள் குருவின் கட்டளயையான தியானலிங்கத்தை நிறுவி அதற்கு சக்தியூட்டி அர்பணித்தபோது, இது வழிபடும் கோவில் இல்லை. எந்த பூஜையோ சடங்குகளோ கிடையாது  என அறிவித்திருக்கிறீர்கள். இப்போது லிங்க பைரவி என்ற தேவியின் கோவிலை நிறுவி எல்லா சடங்குகளையும் செய்கிறீர்கள் ஏன் இப்படி  ஒரு நேர்மாறான நிலை?
தியான லிங்கமும் கோவிலாகத்தான் உணரபடுகிறது. அங்கு எழும் சக்தி வலிமை மிகுந்ததாக இருப்பதால் ஒரு வார்த்தைமந்திரம் உச்சரிக்கமுடியாது, பூஜைகள் எதுவும் செய்ய முடியாது. ஆனால் அந்த வலிமை மிகுந்த சக்தியை தங்களுடைய மந்திர தந்திர சக்திகளை பெருக்கி கொள்ள  சிலர் முயற்சிப்பதை உணர்ந்தேன். அதை தடுக்க ஒரு பாதுகாப்பு சக்தி அவசியமாயிற்று. அந்த அவசியம் லிங்கபைரவி கோவிலாக உருவெடுத்தது. நீங்கள் நினப்பது போல இது நேர்மாறான நிலையில்லை. ஒன்றுக்குஒன்று உதவும் நிலை.  ஒரு குடும்பம்  கணவன் மற்றும் மனைவி சேர்ந்தது. இதை நேர்மாறான நிலை என்பீர்களா?  அதுபோலதான் இதுவும். தியான லிங்கத்தை எழுப்பும் போதே  இப்படி ஒரு சக்தி ஸ்தல்ம் உருவாக்கும் எண்ணமிருந்தது. அவசியம் வரும்போது செய்யலாம் என தீர்மானித்திருந்தேன், இப்போது அவசியம் எழுந்திருப்பதினால்  உருவாகியிருக்கிறது. சடங்குகள் பற்றி கேட்டீர்கள். நமது வழிபாட்டுமுறைகளில் சடங்குகள் என்பதின் மூலம் எளிதாக பலரை, பலதரபட்ட மக்களை  ஒரு சக்தியைநோக்கி ஒருமுகபடுத்தமுடியும். சடங்குகள் தவறில்லை. ஆனால் அந்த சடங்குகள் மூலம் மக்கள் ஏமாற்றபடுவதும் சுரண்டபடுவதும் தான் தவறு. இப்போதுஇந்த கோவிலில் அத்தகைய சடங்குகளை செய்பவர்கள் உலகத்தையே நீங்கள் கொடுத்தால் கூட தவறான காரியங்களை செய்யமாட்டார்கள். அவர்களை பற்றி நான் பெருமைபடுகிறேன்/
ஏன் இந்த கோவிலில் தேவியை அர்ச்சிக்கும், பூஜிக்கும் உரிமை பெண்களுக்கு மட்டுமே வழங்கபட்டிருக்கிறது.?
பெண்களுக்கு இந்த உரிமை நீண்ட நெடுங்காலத்திற்கு முன்னரே இருக்கிறது. நடுவில் இது தடுக்க பட்டிருந்தது.   இங்கு அந்த பணியை செய்பவர்கள் அர்ச்சகர்கள் இல்லை. அவர்கள்  ”கடவுளின் சக்தி”வாய்ந்த மனிதர்கள். முன் காலங்களிலிருந்த அத்தகைய மனிதர்கள் இப்போது இல்லை. அதனால்தான் இந்த முறை. இவர்கள் பெருகி மனிதர்களுடன்  சமூகத்தில் உறவாடும்போது  உலகில் நல்ல அதிர்வுகளும் அதன் பயனாக் நல்வாழ்க்கையும்  எளிதாக ஏற்படும்

உங்கள் கோவில்கள், தியான ஹால்கள் என எல்லா இடங்களிலும் அதிகம் மாக பாம்புகளின் வடிவங்களும் படங்களும் காணப்படுகிறது, ஏன் பாம்புகளின் மீது இப்படி ஒரு அப்ஸஷன்?
அப்ஸ்ஸஷன் ? (பலமாக சிரிக்கிறார்) பாம்புகளும் பசுக்கள் போல புனிதமானவை. என்பதை பலர் புரிந்துகொள்ளவில்லை. பாம்பு என்பது குண்டலினி ஆற்றலின் ஒரு குறீயிடு. நகர்கிறபோதும் அசைவற்று இருக்கும் போதும்  குண்டலினி ஆற்றலும் பாம்பும் ஒன்றுபோல இருக்கின்றன. உயிர்களினுடைய பரிமாண வளர்ச்சியில் பாம்பு என்பது மிக முக்கியமான அம்சம்.. அதனால் தான் பாம்பை கொல்ல கூடாது என்று நம் பாரம்பரியம் சொல்லுகிறது. என்னைப் பொருத்தவரையில் என்னைசுற்றி பாம்புகள் இருந்து கொண்டேதான் இருக்கிறது. கிருத்தவ மதத்தில் பாம்பு சாத்தானின் தூதுவனாக  சொல்லபட்டு ஒரு எதிர்புணர்ச்சியை வளர்த்துவிட்டார்கள்.   இந்த பூமியில் உயிர்கள் என்பவை கடவுளின்  படைப்பு  என்பதை நீங்கள் ஏற்பீர்கள் என்றால் அதற்காக ஏவாளை தூண்டிய பாம்பை கடவுளின் தூதர் என்றுதானே சொல்ல வேண்டும்.? எப்படி சாத்தானாவார்?  ஆதிகாலங்களிலிருந்தே பாம்புகள் நமது கோவில்களில் வழிபடபட்டு வந்தவை.   குண்டலி சக்தியின் உயர்ந்த நிலையில் அதை தன்உச்சியில் நிலைநிறுத்தபட்டிருப்பதின் அறிகுறியாகத்தான் ஆதியோகி அதை தன் தலையருகில் இடம்கொடுத்திருப்பதாக சித்தரிக்கப்படுகிறது. ஒரு பயப்படும் ஜந்துவாக பார்க்காமல் அதன் சக்தியை உணரச்செய்ய எற்பட்டிருக்கும் ஒரு முயற்சிதான்  இது.
ஈஷா உறுப்பினர்களை “புனித பயணங்கள்” அழைத்து செல்லுகிறீர்கள். இதன் நோக்கம் என்ன?
ஆன்மீக விஷயங்களில் கவனம் செலுத்துபவர்கள் எல்லோருக்கும்  இந்த பழம்பெரும் நாட்டின் புனிதம், சில இடங்களின் வலிமை புரிவதில்லை. அதற்காக இந்த நாட்டின் சக்தி நிறைந்த பிரதேசங்களுக்கு பயணம் செய்வதை ஒரு அனுபவமாக கொடுக்க தீர்மானித்தோம். முதலில் கைலாஷ்  என்று துவங்கி, இமயமலைபகுதி, என தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக காசிக்கு பயணங்கள் செய்கிறோம். இது ஒரு சுற்றுலா இல்லை. உடலை,வறுத்திக்கொண்டு செய்யும் பக்தி பயணமும் இல்லை. அந்த இடத்திற்கு சென்று அங்குள்ள சக்திகளை அதன் அதிர்வுகளை உணரசெய்ய ஒரு வாய்ப்பு. எங்கள் எதிர்பார்ப்புகளையல்லாம் தாண்டி அதிக அளவில் ஆர்வம் காட்டுகிறார்கள். நிர்வகிப்பதிலுள்ள சிரமங்களினால் எல்லா விண்ணப்பங்களையும் ஏற்க இயலாது போகிறது.


இன்றைய இளைஞர்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட ஆன்மீகத்தில் நாட்டம் அதிகம் இருப்பதை போல தோன்றுகிறது. இது உண்மையானால் ஏன்?
ஆன்மீகம் மட்டுமில்லை இன்றைய இளைஞர்கள் எல்லாவற்றிலும் ஆர்வமும் ஒரு அவசரமும் காட்டுகிறார்கள். இது ஒரு நல்ல டிரண்டாக இருந்தாலும் அவர்களை நெறிபடுத்தி சரியான பாதையை காட்ட வே ஈஷா முயற்சிக்கிறது. அதற்காக தான் நாங்கள் அர்பணிப்புமிகுந்த ஆசிரியர்களை மிகுந்த கவனத்துடன்  உருவாக்குகிறோம்.
ஆன்மீக வகுப்புகளை தாண்டி சமூக அக்கறையுடன் பலவிஷயங்களை செய்து கொண்டிருக்கிறீர்கள் உங்கள்  இறுதி குறிக்கோள் தான் என்ன?
 ஈஷா குறிக்கோள்களுக்கு இறுதி என ஒரு வடிவம் கொடுத்துகொள்வதில்லை. எது எப்போது அவசியமோ அதை செய்து கொண்டிருக்கிறோம். இப்போது ஒரு லீடர்ஷிப் அகடெமி துவக்குவது பற்றி திட்டமிட்டுகொண்டிருக்கிறோம். நாட்டிலுள்ள பல மேனேஜ்மெண்ட் ஸ்கூல்கள் போல இல்லை இது. இப்போது சிறு நகரங்களிலும் கிராமங்களிலும் பஞ்சாய்த்துகள் உதவிகுழுக்கள் போன்றவைகளில் தலமை வாய்ப்பு  எளியவர்களுக்கும் சாமன்யர்களுக்கும் உருவாக்க பட்டிருக்கிறது. இவர்களுக்கு அதை திறம்பட செய்ய கற்பிக்க பட வேண்டும். அதற்கான முறையான பயிற்சிகூடங்களை அமைக்க விரும்புகிறோம். அடுத்தபடியாக இன்று இந்திய  இளைஞர்கள் வேலைகிடைக்கும் ஒரே காரணத்தினால் ஐடி துறையில் தான் ஆர்வமாகயிருக்கிறார்கள். சயின்ஸ், கணிதம் படிக்க முன் வருவதில்லை. இந்த நிலை நீடித்தால் அடுத்த 15 ஆண்டுகளில் நமக்கு பேஸிக் சயின்ஸ்  பற்றிய அறிவு இல்லாது ஒரு தலைமுறை உருவாகிவிடும். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு டெக்னாலாஜி மட்டும் போதாது ”சயிண்டிபிக் டெம்பர்” அவசியமாக வேண்டும் இதை வளர்க்க குழந்தைகளையும், இளைஞர்களையும் ஈர்க்கும் வகையில் மையங்கள் நிறுவ விரும்புகிறோம். பிராஜ்கெட் ரிபோர்ட்டும் புளுப்ரிண்ட்டும் ரெடியாகயிருக்கிறது. இதற்கு அரசு உதவியுடன் ஸ்பான்ஸ்ர்களை அணுக முயற்சித்துகொண்டிருக்கிறோம்.
ஈஷாவின் எல்லா முயற்சிகளைப்போல இதுவும் வெற்றிபெற கல்கி வாசகர்களின் சார்பில் வாழ்த்துக்கள்

ரொம்ப சந்தோஷம்

சந்திப்பும் படங்களும்

ரமணன்
கல்கி 29/12/13




17/12/13

குதிரை சொல்லும் கதை


இந்த ஆண்டு அமுத சுரபி தீபாவளி மலர் வெளியிட்டிருக்கும் எனது கட்டுரை 



சென்னை தீவுதிடலின் எதிரில் கடலை பார்த்து   சற்றே கழுத்தை  சாய்த்து கம்பீரமாக  தன்மீது வாளூடன்  அமர்ந்திருக்கும் ஒரு வீரனுடன்  கடந்த 175 ஆண்டுகளாக  நிற்கிறது. கிரேக்க பாணியில் வடிவமைக்கபட்ட அந்த குதிரை சிலை.  உலகில்  குதிரை மீது மனிதர் அமர்ந்த நிலையில் இருக்கும் சிலைகள்  ஐந்து இடங்களில் மட்டுமே இருக்கிறது. மன்னர்களுக்கு மட்டுமே அளிக்கபட்ட இந்த கெளரவம்  இந்தியாவில் ஒரு ஆங்கில கவர்னருக்கு அளிக்கபட்டிருக்கிறது,  அவர் தாமஸ் மன்றோ. இந்தியாவில் ஒரு சிப்பாயாக வாழ்க்கையைத் தொடங்கி, 12 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றிய பிறகு, நிர்வாகப் பணிக்கு மாற்றம் செய்யப்பட்டவர் தாமஸ் மன்றோ.  தனது கடின உழைப்பால் முன்னேறி ஆளுனராக உயர்ந்தவர்.  1820 முதல் 1827 வரை சென்னை மாநில கவர்னாராகயிருந்தவர். தனது நேர்மையான நிர்வாகத்தால் மக்கள் மனதில் இடம் பெற்றிருந்த ஒரு சில ஆங்கிலேய அதிகாரிகளில் இவரும் ஒருவர் . இன்றுள்ள தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களின் பெரும்பான்மையான பகுதியும் திருப்பத்தூர் பகுதியும் ஒன்றாக  பாராமகால் என்று அறிய பட்டபகுதியில் ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக, கலைக்டராக இருந்தவர். மாவட்டம் முழுவதும் குதிரையில் அலைந்து திரிந்து விவசாயிகளின் உண்மை நிலைமையை நேரடியாக அறிந்துகொண்ட மன்றோ. விவசாயிகளின் வரிச்சுமையை மாற்றி அமைக்க முற்பட்டவர்.தன் பதவிகாலம் முடிந்ததும் இங்கிலாந்து செல்லும் முன் தன்பணியாற்றிய கடப்பா பகுதியில் பயணம் செய்தபோது  1827ல் இறந்துபோனார். இவர்அந்த பகுதியிலிருக்கும் ராகவேந்திரர் சமாதியில் வழிபட்டபோது அவர் இவருக்கு காட்சி கொடுத்தாதாக அரசு குறிப்புகளில் பதிவாகியிருக்கிறது. இப்போதும், கடப்பாவில் உள்ள ஒரு அனுமார் கோயிலில் ராமர் சீதை படங்களுடன் தாமஸ் மன்றோவின் படமும் இருக்கிறது. அங்கே, தினமும் நடக்கும் பூஜையில் மன்றோ படத்துக்கும் தீபாராதனை காட்டப்படுகிறது.
மக்களின் நன்மதிப்பை பெற்றிருந்த இந்த அதிகாரிக்கு  மக்களிடம் நன்கொடை பெற்று ஒரு சிலை வைக்கமுடிவு செய்யபட்டவுடன்  இங்கிலாந்தின் எஃப் சான்ட்ரீ என்ற புகழ்பெற்ற சிற்பி நியமிக்கபடுகிறார். மாடலுக்கான அரபிகுதிரையை  4ம் ஜார்ஜ்  மன்னரின் லாயத்திலிருந்து தேர்ந்தெடுத்து பணியை  செய்யத அந்த கலைஞன் சந்தித்த அடுத்த சவால் மன்றோவின் முழு உருவபடம் எதுமில்லாததினால்  கிடைத்த மார்பளவு படத்திலிருந்து  உருவாக்கவேண்டியிருந்தது
இந்த 6 டன் எடையுள்ள சிலை முதலில் பிளாஸ்ட் ஆப் பாரிஸ்ஸில் வடிவமைக்கபட்டு பின்னர் வெண்கலத்தில் வார்க்கபட்டிருக்கிறது. குதிரை, வால்பகுதி,  மன்றோவின்உருவம், வாள்இருக்கும்பகுதி என 5 தனிதனிப்பகுதிகளாக  கப்பலில் கொண்டுவரபட்டு  இங்கு இணைக்கபட்டிருக்கிறது.  அன்று சென்னையில் பெரிய அளவில் துறைமுகமேஇல்லாத  நிலையில் கப்பலிலிருந்து சிறுபடகுகளில் பகுதிகளாக கரைக்கு கொண்டுவந்திருக்கிறார்கள். இந்த 15 அடி சிலையை மேலும் கம்பீரமாக்க 25 அடியில் ஒரு பீடம் உள்ளூர் கலைஞர்களின் உதவியுடன்  செய்திருக்கிறது ஆங்கிலேய நிறுவனம்.



.இந்த சிலையை படைத்த சிற்பியிடம் ஏறி அமர்வதற்கு சேணத்திலிருந்து 

 தொங்கும் கால்வைக்கும் வளையங்கள் இல்லையே என அவரது சிறுவயது

 மகன் கேட்டதால் தற்கொலை செய்துகொண்டுவிட்டாதாக  சொல்லப்படுவது

 ஒரு வளமான கற்பனை கதை என்கிறார் வி. ஸ்ரீராம். இவர் சென்னை நகரின்

பாரம்பரியத்தை பற்றி ஆராயந்து கட்டுரைகள் எழுதியிருப்பவர். படைத்த

 சிற்பி சான்ட்ரீ பல ஆண்டுகளுக்கு பின்னர் இதய நோயால் இறந்ததற்கான

குறிப்புகள் இருக்கின்றன என்கிறார் இவர். செம்மொழி மாநாட்டிற்கு முன்

  ஆங்கிலேயர்களின் பெயரில் இருந்த தெருக்களை மாற்றியபோது இந்த

சிலையையும் எடுக்க தீர்மானித்திருந்த அரசின் முடிவு எதனாலோ

 கைவிடபட்டது


 40 ஆண்டுகாலம் உதவிகலைக்டெர் முதல் கவர்னர் வரை நேர்மையாக ஊழல்புரியாத அதிகாரியாக பணியாற்றிய தாம்ஸ் மன்றோ அன்றைய ஆட்சியில் துளிர்விட  துவங்கிய லஞ்சம் பற்றி 1795ல்  எழுதிய குறிப்பு இது

  இந்தியாவின் வறுமைக்கு முக்கியக் காரணம், அரசு இயந்திரத்தின் நிர்வாகக் குளறுபடிகளே. ஒரு மாவட்ட ஆட்சித் தலைவரே முறைகேடான செயல்களுக்கு துணை நின்றால், அவரால் எப்படி ஒரு நேர்மையான நிர்வாகத்தை நடத்த முடியும் "கலெக்டர்கள் தாங்கள் பதவிக்கு வந்து சில ஆண்டுகளிலேயே சொத்துகளைக் குவித்துவிடுகிறார்கள். வருவாய்க்கு மேல் டாம்பீகமாகச் செலவு செய்கிறார்கள். நாட்டைச் சுரண்டும் கலெக்டர் (அன்றைக்கு அமைச்சர்கள் கிடையாது; கலெக்டர்கள்தான் ஆட்சியாளர்கள்) நாடு  எப்படி முன்னேறும்?

 மூதறிஞர் ராஜாஜி பதவிஏற்கும் முன் தன்னை சந்திக்கவரும் இளம்

அதிகாரிகளுக்கு  நிர்வாகத்தில் மன்றோவின் அணுகுமுறை பற்றி படிக்க

 சொல்லுவாராம்.

பொதுவாழ்வில் தூய்மைக்கும்  நிர்வாகத்தில் நேர்மைக்கும்   குரல் கொடுத்த

முதல் மனிதன்  இவர் என அறியும்போது மக்கள் வரிப் பணத்தில் இல்லாமல்

 நன்கொடைகள் மூலம் எழுப்பபட்ட இந்த சிலை இன்னும்  கம்பீரமாக

தெரிகிறது.



11/12/13

111213


11, 12,13
 இந்த தேதியை இன்னும் 100 ஆண்டுகள் கழித்துதான் எழுத முடியும்.

இந்த முறை என்ன செய்ய போகீறீர்கள்?  I am waiting to see your new document, முடிவு பண்ணிட்டீங்களா?   கல்வெட்டு ஐடியா என்ன வாயிற்று? இப்படி பல கேள்விகள் ,மெயில்கள்


கடந்த ஆண்டுகளில் இப்படி பட்ட வினோதமான டேட்களை பதிவு செய்ய வங்கி வாழ்க்கையில் உருவாக்கிய முக்கிய ஆவணங்கள், முக்கிய அறிவிப்புகள், போன்றவகைகளை  மறக்காத நணபர்கள் கேட்டுகொண்டே இருந்தார்கள். புதிதாக ஏதுவும் தோன்றவில்லை.

சுவடுகளை  இந்த தேதியில் என்  பேஸ்புக்கில் இணைத்துவிடலாமா அல்லது ஒரு இனைப்பை  கொடுக்கலாமா? என யோசிக்கிறேன்.  விரைவில் விபரம் அறிவிப்பேன்
131211

10/12/13

சபாஷ் சுஜாதா !

இதாண்டா போலீஸ் 


பரபரப்பான மும்பாய் நகரின் சயான் பகுதியின் முக்கிய வீதி.   முந்திய கார்களின் பம்பரை தொட்டு முண்டிக்கொண்டிருக்கும் நெருக்கமான  டிராபிக். வேகமாக வந்து கொண்டிருக்கும் ஒரு கார்  வேகம் தணிந்து மெதுவாக ஒதுங்கி   நிற்கிறது, பின்னல் வரும் வாகனங்களுக்கு இடைஞ்சலாக நிற்கும்  அந்த காரைக்கண்டு  எரிச்சல் அடைந்த  போக்குவரத்து போலீஸ்கார்   நெருங்கி பார்த்ததும் அதிர்ச்சியடைகிறார். காரை ஓட்டி வந்தவர்  ஸ்டியரிங்கில் சாய்ந்து கிடக்கிறார். உடல் முழுவதும் வேர்வையினால் நனைந்திருக்கிறது. மனிதருக்கு மாரடைப்பு என்பதை புரிந்து கொள்கிறார். உடனே அருகில் இருக்கும் சிக்கனிலில் பணியிலிருக்கும்தன்  இன்ஸ்பெக்டர் சுஜாதாவிற்கு தனது வாக்கி டாக்கி மூலம் தகவல் தருகிறார்.கான்ஸ்டபிள்  குமார்தத் அடுத்த நிமிடம் அங்கு வந்த சுஜாதா, கன்ட்ரோல் ரூமுக்கு சொல்லி, லீலாவதி ஆஸ்பத்திரி வரையில் சாலையில் போக்குவரத்தை ஓரமாக தள்ளுமாறும் சிக்னல்களை பச்சையில் நிறுத்தி வைக்குமாறும் வேகமாக உத்தரவுகள் பிறப்பிக்கிறார்.. சாலையில் சென்றுகொண்டிருந்த ஒரு காரை நிறுத்தி, ஆஸ்பத்திரி வரை அந்த காரை ஓட்டி வருமாறு  அதன் டிரைவரை கேட்டுக் கொள்கிறார்.  அந்த காரில் வந்த மாரடைப்பால் தாக்கபட்டிருப்பவரை   பத்திரமாக  அணைத்து பிடித்து,  அவர் மார்பை மசாஜ் செய்தபடி வருமாறு கான்ஸ்டபிளுக்கு கட்டளையிடுகிறார்.

  தனது போலிஸ்ரோந்து காரை  முன்னால் வேகமாக  செலுத்தி வழி ஏற்படுத்திய படி 12 நிமிடங்களில் ஆஸ்பத்திரியை அடைகிறார். போகும்போதே இவர் கண்ட்ரோல் மூலம் சொன்ன தகவலினால் தயாராகயிருந்த டாக்டர்கள் சிகிச்சையை துவக்குகின்றனர்..  காரில் இருந்தவரின்  பிஸினஸ் கார்டை பார்த்து அவர் வீட்டிற்கு தகவல் கொடுத்திருந்தனால் அவரின் மனைவியும் ஆஸ்பத்திரிக்கு விரைந்து கொண்டிருந்தார்.  
அந்த மனிதர் உயிர் பிழைத்து கொண்டார்.
அவர் இந்திய முன்னாள் கிரிகெட் வீர்ர் வினோத் காம்ப்ளி.
அடாவடி, அத்துமீறல், அற்பமான கையேந்தல், அதிகாரத்துக்கு அடிபணிதல்,பிரச்சனைகள் வரும்போது மேல் அதிகாரிகள் சொன்னால் மட்டுமே செயல் படுவது என்ற போலீஸ் அதிகாரிகளிடையே,  மாறுபட்டு சமயோசிதமாக மின்னல் வேகத்தில் இயங்கிய பெண்போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜாதா. இவருக்கு ஒரு சபாஷ் சொன்னால என்ன?
 இவரைபோல  எல்லா போலீஸ் அதிகாரிகள் இருந்தால் இந்தியா எப்படி இருக்கும்? 

ரமணன்