19/3/14

தெலிங்கானா மலர்ந்தது.


ஆழம்  மார்ச் மாத இதழில் எழுதியது.


New post on ஆழம்

தெலங்கானா மலர்ந்தது

by ரமணன்
இந்திய நாடாளுமன்றம் இதுவரை சந்திக்காத சில அபூர்வமான காட்சிகளுக்குப் பின்னர் ஒரு வழியாகப் 29வது மாநிலமாக தெலங்கானா பிறந்துவிட்டது.  ஐம்பது ஆண்டு கால விவாதங்களுக்கும் போராட்டங்களுக்கும் பிறகு தெலங்கானா பிரச்னை ஒரு முடிவை நோக்கி நகர்ந்திருக்கிறது. துயரங்களையும் கசப்புகளையும் கொண்டு வராத பிரிவினை ஏதேனும் வரலாற்றில் பதிவாகியுள்ளதா என்ன? தெலங்கானாவும் அதற்கு விதிவிலக்கல்ல.
இந்திய அரசியல் களத்தில் இதற்கு முன் பல மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன, புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் தெலங்கானா அவற்றில் இருந்து வேறுபடுகிறது. பதிவாகியுள்ளபடி 904 மரணங்கள் தெலங்கானாவுக்காக நிகழ்ந்துள்ளன. 100 கோடிக்கும் மேல் பொருள் சேதம் ஏற்பட்டுள்ளது. மூன்று புதிய கட்சிகள் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தின. வேறு எந்த மாநிலப் பிரச்னையின்போதும் இவ்வாறு நிகழவில்லை.
ஒரு புதிய மாநிலம் சட்டபூர்வமாக பிறப்பது என்பது  ஒரு சரித்திர நிகழ்வு. ஆனால் தெலங்கானா நாடாளுமன்ற ஜனநாயகத்தில் அழிக்கமுடியாத ஒரு கரும்புள்ளியை ஏற்படுத்தியபிறகே உதயமாகியிருக்கிறது. ஆந்திரப் பிரசேம் மறுச்சீரமைப்பு மசோதா உருவான கதை கிட்டத்தட்ட போர்க்களத்தை நினைவுபடுத்துகிறது. 13 பிப்ரவரி 2013 அன்று தெலங்கானா தொடர்பான மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டபோது இரு அவைகளிலும் கூச்சலும் குழப்பமும் எழுந்தது. ஆந்திரப் பிரிவினையைத் தடுக்க முயன்ற ஒரு காங்கிரஸ் எம்.பி கையோடு கொண்டு வந்திருந்த மிளகு ஸ்ப்ரேயை அடித்தார். சிலரிடம் கத்தி இருந்தது. மசோதாவை வாசிக்கவிடாமல், விவாதங்களை நடத்தவிடாமல் இவர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டங்களும் அமர்க்களங்களும் சபாநாயகர் மீராகுமார் சொன்னதைப் போல் வெட்கித் தலை குனிய வைக்கக்கூடியவை.
ஒரு கோரிக்கையாக இருந்த தெலங்கானா பின்னர் சட்டமாக உருவான தருணங்களில் தொலைக்காட்சி காமிராக்கள் இயங்கவில்லை. இதற்கு தொழில்நுட்ப கோளாறே காரணம் என்று சொல்லப்பட்டாலும் இதனை பலர் ஏற்கத் தயாராக இல்லை. இதற்கிடையில், மிளகு தூவிய விஜயவாடா தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் லகடபதி ராஜகோபால் பின்னர் இடைநீக்கம் செய்யப்பட்டார். தெலங்கானா மசோதாவுக்கு எதிராக சீமாந்திரா உறுப்பினர்கள் நீண்ட காலமாக கட்சி வித்தியாசமின்றி குரல் கொடுத்து வருவதாக இவர் கூறியிருக்கிறார்.
தெலங்கானாவின் மற்றொரு முக்கிய அம்சம் இது. நீண்ட கால போராட்டத்துக்குப் பிறகு தெலங்கானாவை ஆந்திராவில் இருந்து பிரித்தெடுப்பதற்கு காங்கிரஸ் ஒப்புதல் கொடுத்திருந்தாலும் இன்னமும் கட்சிக்கு உள்ளேயே இந்த முடிவுக்கு முழுமையான ஒப்புதல் கிடைக்கவில்லை. உச்சகட்டமாக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆந்திர முதல்வரே இந்த முடிவை எதிர்த்து ராஜிநாமா செய்திருக்கிறார். ஆனால், பிரதான எதிர்க்கட்சியான பாஜக இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. விசித்திரம்தான், இல்லையா?
காலச்சுவடுகள்
மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படும்போதே தெலங்கானா தனி மாநில கோரிக்கை உயிர் பெற்றுவிட்டது. 1946 தொடங்கி 1951 வரை ஹைதராபாத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவுடன்  நடைபெற்ற விவசாயிகள் எழுச்சி இந்தியாவின் பார்வையை தெலங்கானாவை நோக்கி திருப்பியது. மத்திய அரசாங்கம் ராணுவத்தை அனுப்பி இந்த எழுச்சியை அடக்கியது. தெலுங்கு மொழி ஆந்திர மக்களை ஒன்றிணைக்கும், பிரிவினை கோஷத்தைக் காலப்போக்கில் அடக்கிவிடும் என்று பலர் நினைத்தாலும் அன்றைய பிரதமர் நேரு தெலங்கானாவின் இயல்பை நன்றாகவே அறிந்திருந்தார். விவாகரத்து உரிமை பெற்ற திருமணம் என்றே ஆந்திராவுடனான தெலங்கானாவின் இணைப்பை 1956ல் அவர் வர்ணித்தார்.
இருந்தும் அடுத்தடுத்து அமைந்த அரசாங்கங்கள் தெலங்கானா கோரிக்கையைப் புறந்தள்ளி அதனை ஒரு பிரிவினைவாதக் கோஷமாகவே கண்டனர். 2004ல் வலுவான அரசியல் பிரச்னையாக தெலங்கானா எழுந்தபோது, காங்கிரஸ் தனித் தெலங்கானா தருவதாக தேர்தல் பிரசாரத்தில் வாக்களித்தது. ஆனால் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்ததும் வசதியாக இந்த வாக்குறுதியை மறந்துவிட்டது. அல்லது, வெறுமனே காலம் தாழ்த்திவிட்டது.
இனியும் அது சாத்தியமில்லை என்னும் விதமாக ஆந்திராவில் தெலங்கானாவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பெரும் போராட்ட அலைகளும் ஆர்ப்பாட்டங்களும் எழுந்தபோது முடிவு எடுத்தே தீரவேண்டிய கட்டாயத்துக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டது. வேறு வழியின்றி, தனித்தெலங்கானாவை காங்கிரஸ் ஆதரிக்கவேண்டி வந்தது.  ஜூலை 2013ல் காங்கிரஸ் பிரிவினைக்கு ஆதரவாக முடிவெடுத்தது. அக்டோபர் 2013ல் மந்திரிசபை கூட்டத்தில் இது முடிவாக, டிசம்பரில் வரைவு மசோதா தயாரானது. கூடவே புதிய பிரச்னையும் தொடங்கியது.
ஆந்திர முதல்வர் ராஜசேகர் ரெட்டியின் மரணத்துக்குப் பின்னர் அவரது மகன் ஜெகன் விரும்பியபடி அவரை முதல்வராக்காமல் கிரண்குமார் ரெட்டியைத் தேர்ந்தெடுத்து முதல்வராக்கினார் சோனியா காந்தி. தெலங்கானா பிரிந்தால் காங்கிரஸ் செல்வாக்கு பறிபோகும் என்று கருதிய கிரண்குமார் ரெட்டி காங்கிரஸ் மேலிடம் சொல்வதைக் கேட்க மறுத்தார். அதனால் மத்திய அரசின் வரைவு மசோதாவை மாநிலத்தின் சட்டசபையில் நிறைவேற்றாமல் திருப்பியனுப்பினார்.
அவரைப் பதவி நீக்கம் செய்து மற்றொரு முதல்வரை நியமித்து அவர்மூலம் மசோதாவை நிறைவேற்ற மத்திய காங்கிரஸ் தலைமையால் முடியவில்லை. கட்சிக்குள் பிளவைத் தவிர்க்கவே பொறுமை காத்தோம் என்று பேட்டியளித்தார் ப. சிதம்பரம். ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் பொறுக்கமுடியாமல் போகவே, பிளவு பயத்தையும் மீறி மசோதாவில் உறுதியாக நிற்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. மசோதாவை நேரடியாக நாடாளுமன்றத்துக்குக் கொண்டுவந்தது.
காரணங்கள், கணக்குகள்
ஏன் இந்த அவசரம்? ஒன்றுதான். வாக்கு வங்கி அரசியல். மசோதாவைக் கொண்டுவராமல் முன்னர் நாள்களைக் கடத்தியதற்கும், தாமதமாகக் கொண்டுவந்ததற்கும், ஆதரித்தற்கும், எதிர்த்ததற்கும், பின்னர் வலுவாக ஆதரித்ததற்கும்கூட வாக்கு வங்கிதான் காரணம். எதை எப்போது செய்தால் ஆதரவு கிடைக்கும், எதைச் செய்தால் கிடைக்காது என்னும் கணக்குதான் இங்கே காங்கிரஸுக்கு முக்கியம்.
இப்படி அவசரக்கோலத்தில் தெலங்கானா பிரச்னையைத் ‘தீர்த்து வைத்ததில்’ யாருக்கு என்ன லாபம்?
சற்று ஆழ்ந்து ஆராய்ந்தால், நமது அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றுமே இந்த விளையாட்டில் கணக்குப் போட்டு ஈடுபட்டிருப்பதைப் புரிந்துகொள்ளலாம்.
காங்கிரஸ் கட்சி பலமாக இருக்கும் பெரிய மாநிலம் ஆந்திரா. ஆனால் தெலங்கானாவுக்கு எதிரானவர்களும் ஆதரவாளர்களும் அதில் கிட்டத்தட்ட சரிசமமாகப் பிரிந்து கிடக்கிறார்கள்.  மொத்தமுள்ள 42 எம்.பி சீட்டுகளில் 31 காங்கிரஸ் வசமிருக்கிறது. அதில் 17 தெலங்கானா பகுதியிலும் 19 சீமாந்திராவிலும் இருக்கிறது. ஆக எப்படி முடிவெடுத்தாலும் ஒரு பகுதியை இழக்க நேரிடும்.
காங்கிரஸ் வேறு கணக்கு போட்டது. தெலங்கானாவை அறிவித்தால் அதற்காகப் போராடும் சந்திரசேகர் ராவ் தனது கட்சியை காங்கிரஸுடன் இணைத்துவிடுவதாக முன்பு கூறியிருந்தார். காங்கிரசுக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பு அலை கிளம்பியிருக்கும் இந்த நேரத்தில் ஆந்திராவை முற்றிலும் இழந்துவிடுவோம் என்னும் அச்சத்தில் சந்திரசேகர் ராவின் டிஎஸ்ஆர் கட்சியின் (தெலங்கானா ராஷ்டிர சமிதி) ஆதரவுடன் 17 எம்.பி சீட்டுகளைத் தக்கவைத்துக்கொள்ள கணக்குப்போட்டது காங்கிரஸ். தெலங்கானா எதிர்ப்பு சீட்டுகளை இழக்க நேரிட்டாலும் இதை வைத்து சரிகட்டிவிடலாம் அல்லவா? சந்திரசேகர் ராவுக்கு ஆதரவு அளித்து அவரை முதல்வராக்கிவிட்டு பின்னர் காங்கிரஸ் கட்சியுடன் அவரது கட்சியை இணைத்துவிடலாம் அல்லவா?
காங்கிரஸ் எதைச் செய்தாலும் எதிர்க்கும் பாஜக ஏன் தெலங்கானா மசோதாவை ஆதரித்தது? அவர்கள் போட்ட கணக்கு இது. காங்கிரஸ் தெலங்கானா மசோதாவைக் கொண்டுவராமல் காலம் தாழ்த்தும் என்று நினைத்து வந்த பாஜக, தெலங்கானாவை எதிர்க்கும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியின் ஆதரவைப் பெற முயற்சி செய்தது. சந்திரபாபு நாயுடு நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசவும் செய்தார். தெலங்கானாவில் பெரும் வியாபார,தொழில் முதலீடுகள் செய்துள்ள சீமாந்திரா பகுதியினரின் ஆதரவு அவருக்குக் கிடைக்க சந்திரபாபு உதவுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்று தெரிந்ததும் அவர்களைக் கடந்துசெல்லவும் முடிவெடுக்கப்பட்டது. பாஜக கூட்டணி பற்றி சந்திரபாபு நாயுடுவின் சமீபத்திய கருத்து இது. ‘தெலங்கானா விவகாரத்தில் பாஜக சரியான வாதங்களை முன்வைக்கவில்லை, இருப்பினும் கூட்டணி விவகாரங்களை உணர்ச்சிவசப்பட்டு முடிவு செய்து விட முடியாது.‘
காங்கிரஸின் கணக்கு வேறு மாதிரி திரும்பவே பாஜக விழித்துக்கொண்டது. காங்கிரஸ் முன்வைக்கும் தெலங்கானா மசோதாவை ஆதரிக்க மறுத்தால் அதையே காரணமாகச் சுட்டிக்காட்டி பழி போடப்படும் என்று பாஜக அஞ்சியது. தெலங்கானாவை ஆதரிக்க காங்கிரஸையும் சேர்த்து ஆதரிக்க முடிவு செய்தது. நாங்கள் ஆரம்பம் முதலே, அதாவது ஜன் சங் காலம் முதலே தெலங்கானா தனியாக இருப்பதையே விரும்பினோம் என்று தங்கள் ஆதரவுக்கு நியாயமும் கற்பித்தனர். மற்றொரு பக்கம் காங்கிரஸையும் தாக்கியது. காங்கிரஸ் இரட்டை வேடம் போடுவதாகவும் தேர்தல் ஆதாயம் தேடுவதாகவும் குற்றம் சுமத்தியது. எங்கள் தயவு இல்லாவிட்டால் மசோதா நிறைவேறியிருக்காது என்றும் சொல்லிக்கொண்டது.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸின் தலைவர் ஜெகனின் கணக்கு வேறு மாதிரியானது. என்னதான் ஒருங்கிணைந்த ஆந்திராவுக்காகப் போராடினாலும் உண்ணாவிரதம் இருந்தாலும் பிரிவினை தவிர்க்கமுடியாதது என்பது அவருக்குத் தெரியும். அவருடைய இலக்கு ஹைதராபாத் சட்டமன்ற முதல்வர் நாற்காலி. தெலங்கானா பிரிந்தாலும் சீமாந்திராவின் முதல்வராகும் வாய்ப்பை நழுவவிடக்கூடாது என்பது அவர் விருப்பம். இதற்கிடையில், தெலங்கானா மசோதாவை எதிர்த்து  உச்ச நீதிமன்றத்தை அணுக முடிவெடுத்துள்ளனர்.
மற்றொரு பக்கம், ரெட்டி பிரிவினர்களின் ஆதிக்கத்தில் இருந்து காங்கிரஸ் நழுவிக்கொண்டிருக்கிறது.
காங்கிரஸிலிருந்து பிரிந்துவரும் கிரண்குமார் ரெட்டி, தெலுங்கு தேசத்துடன் அணி சேர்ந்து தேர்தலைச் சந்தித்து வெல்ல முயற்சி செய்து வருகிறது.
இப்படி எல்லோரும் அவரவருக்குத் தோதான கணக்குகள் நிறைவேற காத்திருக்கிறார்கள். நம்முடைய அணுகுமுறையே சரியானது என்று ஒவ்வொருவரும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். கணக்கு யார் போட்டாலும், அதைச் சரிபார்த்து மதிப்பெண் போடப்போகிறவர்கள் மக்கள்தான்.
இனி என்ன?
  • அதிகாரபூர்வமாக ஆந்திரப் பிரவினை ஏப்ரல்&மே மக்களவைத் தேர்தல் முடிந்தபிறகே நடைபெறும். சரியான தேதியை மத்திய அரசு குறிக்கவேண்டும்.
  • மக்களவைத் தேர்தலும் ஆந்திர சட்டமன்றத் தேர்தலும் முன்பு நிகழ்ந்ததைப் போலவே நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம்.
  • கிரண்குமார் ரெட்டியின் ராஜிநாமா ஏற்கப்பட்டு விட்டது என்றாலும் புதிய அரசு அமையும்வரை பொறுப்பில் நீடிக்குமாறு அவர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். ஆனால் தற்போதைய நிலவரப்படி, ஆந்திராவில் ஆளுநர் ஆட்சியே அமல்படுத்தப்படும் என்று தெரிகிறது.
  • தெலங்கானா சாத்தியமானதைத் தொடர்ந்து நாட்டில் பிற மாநிலக் கோரிக்கைகள் வலுவடையும் என்னும் எதிர்பார்ப்பும் பரவலாக முன்வைக்கப்படுகிறது. 
  •  தெலங்கானா ஒரு பார்வை
  • பரப்பளவு 1.14 லட்சம் சதுர கிலோ மீட்டர்.
  • மக்கள் தொகை 3.5 கோடி (ஹைதராபாத் சேர்த்து).
  • மாவட்டங்கள் : அடிலாபாத், நிஜாமாபாத், கரிம்நகர், மேடக், வாரங்கல், ரங்காரெட்டி, கம்மம், நலகோண்டா, மஹபுக்நகர், ஹைதராபாத்.
  • தெலுங்கு, உருது ஆகியவை முக்கிய மொழிகள். சில பகுதிகளில் மராத்தியும் கன்னடாவும் பேசப்படுகின்றன.
  • இரும்பு, கரி உள்ளிட்ட இயற்கை வளங்கள் உள்ளன. மத்திய அரசும் ஆந்திர அரசும் இணைந்து நடத்தும் சிங்கரேனி கொலைரீஸ் இப்பகுதியிலுள்ள முக்கியப் பெரிய நிறுவனமாகும்.
  • புதிய மாநிலத்தின் முக்கியப் பிரச்னையாக மின்சாரம் இருக்கப்போகிறது என்கிறார்கள்.
  • கோதாவரி, கிருஷ்ணா இரண்டும் முக்கிய ஆறுகள். எண்ணற்ற பல ஏரிகளும் உள்ளன.
  • நக்ஸல் நடவடிக்கைகளின் களமாக இருந்த பகுதி.
ரமணன் | March 19, 2014 at 11:21 am | URL: http://wp.me/p2eZn6-ZX
Comment    See all comments
Unsubscribe to no longer receive posts from ஆழம்.
Change your email settings at Manage Subscriptions.
Trouble clicking? Copy and paste this URL into your browser:
http://www.aazham.in/?p=3841


15/3/14

கங்கைக் கரை ரகசியங்கள் 10



புத்தகயாவில் போதிமரத்தினடியில்  மெய்ஞானம் பெற்ற புத்தர், கடல் அலைகளைப்போல விழுந்து, எழுந்து. மீண்டும் விழுவது போன்றது தான்  மனித உயிர்களின் பிறப்பும் இறப்பும். இதனால் வாழும்போது மனிதன் செய்ய வேண்டியவைகளை அவன் சரியாக புரிந்துகொண்டால் வாழ்க்கை இனியதாக அமையும் என்று தான் தெளிவாக புரிந்து கொண்டிருந்ததை மக்களுக்கு, குறிப்பாக எளிய மக்களுக்கு சொல்ல,   சீடர்களை உருவாக்க சாரநாத் சென்று ஒரு ”பள்ளி”யை நிறுவுகிறார். அது மிகப்பெரிய பள்ளியாகி அதிலிருந்து  சீடர்கள் நாடெங்கும், நாட்டுக்கு வெளியேயும் பயணிக்கிறார்கள். இதுபோல பள்ளிகளையும் நிறுவுகிறார்கள்,  பின்னாளில் இதனுடன் புத்தரின் உருவத்துடன் கோவில்களைம் ஏற்படுத்துகிறார்கள்.  அவைகள் விஹார்கள் என அழைக்கப்பட்டது.
மிக அதிக அளவில் இத்தகைய விஹார்கள் இருந்ததால் தான் அந்தப் பகுதியே அப்பெயரால் அழைக்கபட்டு பின்னாளில் ”பீஹார்” ஆகியிருக்கிறது என்று ஒரு ஆசிரியர் எழுதியிருக்கிறார்.. இப்போது நாம் புத்த தேசமான பிஹாரில் புத்தகயாவிலிருந்து சென்றுகொண்டிருப்பது “ராஜ்கீர்”  என்ற இடத்திற்கு. கயாவிலிருந்து  80 கீமி தூரத்திலிருக்கும் இது  ஏழு சிறிய மலைகள் சூழந்த  கிராமம். மிகமிகப்பழமையான கிராமம்.  நாளந்தா மாவட்டத்திலிருக்கிறது. முதல் நூற்றாண்டின் கால  சாட்சியங்கள் கிடைக்கப்பட்டிருக்கும் இடம். இது மகத மன்னர்களின் தலைநகராக 4 ஆம் நூற்றாண்டுவரை இருந்திற்கிறது.. கிபி  5 நூற்றாண்டில் தான் மன்னர் அஜாதசத்ரு தலைநகரை பாடாலிபுத்திரத்திற்கு மாற்றியிருக்கிறார் என்கிறது வரலாறு. அப்போது இந்த இடம் “ராஜகிருஹம்” என அழைக்கப்பட்டிருக்கிறது  ஜிவகன் செட்டி என்பவர் அன்பளித்த மாமரதோப்பில் தன்பணிகளை துவக்கினார் என்கிறது இங்குள்ள குறிப்பு. பாலிமொழியின்  ஆங்கில மொழிபெயர்ப்பு செட்டி என்று சொல்லுகிறது. செட்டியாராக இருப்போரோ?. என்ற எண்ணம் எழுகிறது.

இந்த இடத்தில்  இருக்கும் மலைக்குகைகளில் புத்தர் தவம் இருந்திருக்கிறார். அடர்ந்த மாமரங்களின் காடாக இருந்த பகுதியில் வாழந்திருக்கிறார். அருகிலுள்ள மலைஉச்சியில் துறவிகளுக்காக ஒரு மாநாட்டை நடத்தியிருக்கிறார்.  இங்கிருந்து நிகழத்த பட்ட உரைகளில் புதிய போதனைகளை அறிவித்திருக்கிறார். இவைகளினால் இந்த இடம் புத்தமதத்தினருக்கு மிக புனிதமான இடம். அந்த குகைகளையும் அதில் சிதலமாகியிருக்கும் புத்தர் உருவங்களையும் பார்க்கலாம். மகத மன்னர் பிம்பிசாரன் இந்த இடத்தில்தான் புத்தமதத்தில் இணைந்திருகிறார். அவருடன் அவரது நாட்டு மக்களும் மதம் மாறியிருக்கிறார்கள். புத்த மதத்தினருக்கு மட்டுமில்லை சமணர்களுக்கும் இது முக்கியமான இடம். இந்த காட்டு பகுதிகளில் 14 ஆண்டு வாழ்ந்த மாஹாவீர்ர்  இந்த ராஜ்கீரில் ஒரு மலையில் சில ஆண்டுகள் தங்கியிருக்கிறார். இப்போது அங்கு ஒரு ஜெயின் கோவில் இருக்கிறது, இது ஒரு இந்துக்கள் இன்றும் வழிபடும் தலமாகவும் இருக்கிறது. ஒரு மலையில் பாறைகளுக்கிடையில் பிரம்மதீர்த்தம் என்ற  வற்றாத  சுடு நீர்ச்சுனை இருக்கிறது. அருகில் ஒரு சிறிய சிவன், காளி கோவில்கள்
 புத்தர் மாநாடு நடத்திய மலைஉச்சியில்  இப்போது   வெள்ளை சலவைகற்களால்  எழுப்பபட்ட  ஒரு ஸ்தூபி பளீரென்று நிற்கிறது. பல கீமி க்களுக்கு   தெரிகிறது.  இந்த பிரமாண்ட ஸ்தூபியின் பெயர் ”விஜய சாந்த ஸ்தூபி.” இரண்டாம் உலகப்போர் முடிந்தவுடன் உலகில் அமைதி நிலவ ஜப்பானிய புத்தமதசொசையிட்டியினர் உலகில்  80 இடங்களில் இத்தகைய ஸ்தூபிகளை நிறுவியிருக்கின்றனர்.  அதில் ஒன்று இது. அசோகரும் மற்ற மன்னர்களும் எப்படி புத்தர் சம்பந்த பட்ட இடங்களில் ஸ்தூபிகள் எழுப்பினார்களோ அதைப்போல இந்த  சொஸையிட்டினர் இப்போது செய்து கொண்டிருக்கிறார்கள். இதை அவர்கள் ’பகோடா’ என அழைக்கின்றனர்.
இதைப்பார்க்க மலைமேல் போக பாதை படிக்கட்டுகள் இருக்கின்றன. துறவிகள் அதில் தான் போகிறார்கள்.
நம்மாதிரி ஆட்களுக்கு ஒரு சேர் லிப்ட் இருக்கிறது. ஒருவர் அமரக்கூடிய அந்த  தொங்கும் ஒற்றைச்சேர்கள்  இணைக்கப்பட்ட   ரோப் கார் மாதிரியான ஒரு அமைப்பு.  மெதுவாக நிற்காமல்  சுற்றி கொண்டே இருக்கிறது. . ஏறும் இடத்திற்கு அது வரும்போது அதில் சட்டென்று உட்கார்ந்துகொள்ளூங்கள். பயப்படாதீர்கள்  நாங்கள் உதவுவோம் என்றார்கள்., நகர்ந்துகொண்டிருந்த அதற்குள் நம்மை அவசரஅவசரமாக தள்ளித் திணித்த போதுதான் இது தான் அவர்கள்  சொன்ன உதவி என்பது என்று தெரிந்தது. நகர ஆரம்பித்தபின்தான் நமது சேருக்கு மற்ற எல்லாவற்றுக்குள்ளும் இருக்கும் பாதுகாப்பு கம்பியை மாட்டிகொள்ளும் வளையம்  இல்லை என தெரிந்தது.  அந்த கம்பியையும் , உயிரையும் கையில் பிடித்துகொண்டு புத்தரை வேண்டிக்கொண்டு மேலே போகிறாம்.
 மிகபிரம்மாண்டமாக இருக்கும் அந்த ஸ்தூபியின். வட்ட வடிவ அடுக்குகள் மேல்  ஒரு டோம் ஆகவும் அதன் மேல் கூர்மையான விதானமும் அதன் உச்சியில் தங்கத்தில் ஜொலிக்கும் புத்த முத்திரையும். பார்த்து பிரமித்துப்போகிறாம். முழுவதும் வெண்சலவைக்கலால் இருக்கும் அதனை சுற்றி வந்து அதன் வாயிலை தேடுகிறோம். எதுமில்லை. அப்போது இது பகோடா என்று சொன்னது நினைவு வருகிறது. அவைகள் உள்ளே நுழையும்படி அமைக்கபட்டுவதில்லை. ஒரு நினைவுச்சின்னம் மட்டுமே. மேலே நான்கு திசைகளைப்பார்த்து நான்கு வெவ்வேறு வடிவில் புத்தர் சிலைகள். அவை தங்கத்தினாலனது என்பதை அறிந்தபோது ஆச்சரியம்.  அவைகள் பிறப்பு, ஞானோதயம்,போதனை, இறப்பு என்ற புத்தரின் வாழ்க்கையை குறிக்கிறதாம். அருகில் ஒரு பிரமாண்டமான மணி அலங்காரமான வளைவிலிருந்து தொங்கிறது  எழுத்துக்கள் பாலிமொழியில்


வட்ட வடிவிலிருக்கும் அதன் பாதையில் நம் குழுவினர் அமர்ந்து தியானிக்கின்றனர். ஒரு முறை சுற்றி வெளியே வந்த பின், புத்த விஹாரங்களையும், ஸ்தூபிகளையும் வலது புறத்திலிருந்துதான் வலம் வரவேண்டும் என்று சொல்லபட்டது நினைவிற்கு வந்ததால் மீண்டும் ஒரு முறை சரியாக சுற்றி வருகிறோம்.
அங்கிருந்து பார்க்கும்போது 7 மலைகளும் தெரிகிறது. ஸ்தூபிக்கு வெளியே அருகில் ஜப்பானியர்கள் அமைத்திருக்கும் கோவில்.  அதில் மிக ஆடம்பர பின்னணியில் புத்தர். அதுவும் தங்கச்சிலை என்கிறார்கள். எளிமையைப் போதித்த புத்தர் எல்லா இடங்களிலும் தங்கமாகத்தான் மின்னுவார் போலிருக்கிறது என எண்ணிக்கொள்கிறோம். கோவிலின் உள்ளே ஒரு மெகா ஸைசில் மத்தளம் தொங்குகிறது.

அருகிலுள்ள மற்றொரு மலைஉச்சியில்,  புத்தர் அருளுரை  வழங்கிய இடத்தில் ஒரு குழு பிராத்தனை செய்து கொண்டிருக்கிறது.
இந்த கோவிலையும் ஸ்தூபியையும் அன்றைய குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணன் திறந்து வைத்திருக்கிறார். அவர் கையெழுத்தில் ஜப்பானியர்களின் முயற்சியை பாராட்டி எழுதியிருப்பதைப் பார்க்கிறோம்.
கோவில் முகப்பு, போகும் பாதை, பெயர்கள், மைல்கல்  பாத்ரூம் இருக்குமிடம் வரை (நல்ல வேளையாக உருவம் வரைந்திருந்தது.) அனைத்து அறிவிப்புகளும் ஜப்பானிய அல்லது பாலிமொழியில். இருக்கிறது.


கிழே வர சேர்லிப்டில் பாதுகாப்பான சேரை கண்டுபித்து அதனுள் தாவி
ஏறி தரையிறங்குகிறோம். இந்த இடத்திலிருந்து புத்தர் ஒரு நாள் இரவு  எங்கும் நிற்காமல்  நடந்து ஒரு இடத்துக்கு போயிருக்கிறார்.  அந்த இடத்திற்கு தான் இப்போது நாம் பயணித்தை தொடர்கிறோம். அது எந்த இடம்? ஒருவாரம் பொறுங்களேன்.
-----------------------------------------------------------------------------------
சத்குரு பதில்கள்
நீங்கள் “ அனைத்துக்கும் ஆசைப்படு என்கிறீர்கள் புத்தர்  ஆசை தான் துன்பத்திற்கு காரணம் என்று சொல்லியிருக்கிறாரே ?
 உங்களுக்கு உயிர்வாழ ஆசையிருக்கிறதா? உங்கள் குடும்பம் நன்றாக வாழவேண்டும் என்ற ஆசையிருக்கிறதா?  இல்லாமல் இருக்கமுடியாது. உலகில் மனிதனுக்கு  எதன்மீதும் ஆசையில்லாவிட்டால்  அது எப்படி இயங்கும்? புத்தரின் ஆசை என்னவென்று நீங்கள் நினைத்து பார்த்துண்டா?  தான் பெற்ற மெய்ஞானத்தை எல்லோருக்கும் போதிக்க வேண்டும் என்ற ஆசையினால் தானே கிராமம் கிராமாக 40 வருட காலம் அலைந்தார். அதனால் அவர் ஆசை என்று எதனைச்சொல்லியிருப்பார்- என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அவர் குறிப்பிட்டது தனிமனிதனின் மண். பொருள் போன்ற சுயநல ஆசைகளை.  அது பேராசையாக மாறும். எது பேராசை என்பதற்கு அளவுகோல் கிடையாது. எது கிடைத்தாலும் அதைவிட மேலானதுக்கு மனம் ஏங்கும். அதனால் மனித உயிருக்கும் உடமைக்கும் சேதம் நிகழும். அதைத் தவிற்க சொன்ன வார்த்தைகளாக இருக்கலாம்.  நான் சொல்லுவது அதுதானே. அனைத்துக்கும் என்று நான் சொல்லுவதை தாங்கள் விரும்பும் பொன் பொருள்,மண்  போன்றவைகளுக்கு மட்டும் என புரிந்துகொண்டால் அது தவறு. நான்  சொல்லும் அனைத்தும் என்ன என்பதை புரிந்து கொள்ளவேண்டும். இந்த உலகம் உங்களுடையதா? இந்தபிரபஞ்சத்தின் சக்திகளில் உங்களுக்கு பங்கு உண்டா. ஆம் என்றால் அவைகளை அடைய, அனைத்துக்கும், சகலமும் இந்த கல் செடி கொடி எல்லாம் நன்றாக இருக்கவேண்டும். அதனால் என் வாழ்க்கை அடுத்தவருக்கு இடையூறு இல்லாதிருக்க வேண்டும் என்று அனைத்துக்கும் ஆசைப்பட சொல்லுகிறேன்.  நகை, கார் போன்ற பொருளாசையை மட்டுமில்லை. கூர்ந்து கவனித்தால் புத்தனும் இதைத்தான் சொல்லியிருப்பது புரியும். வெறும் வார்த்தைகளை மட்டும் தெரிந்து கொள்ளாமல்  அது தரும் பொருளை சரியாக புரிந்துகொள்ளுங்கள். அப்படி புரிந்து கொள்ளவேண்டும் என்றும் ஆசைப்படுங்கள்
கல்கி 23/03/14








8/3/14

கங்கை கரை ரகசியங்கள் 9 ....



ஞானத்தை தேடி அலைந்து சாரநாத்திலிருந்து கயா வந்து 7 வாரம் தவமிருந்து மெய்ஞானத்தை கண்ட புத்தருக்கு இங்கு  எழுப்பட்டிருக்கும்  இந்த கோவிலின் வரலாறு ஆச்சரியமானது. புத்தர் ஞானோதயம் பெற்ற இந்த இடத்தில் மன்னர் அசோகர் 200 ஆண்டுகளுக்குபின்னர்  இந்த கோவிலை எழுப்பியிருக்கிறார். தொடர்ந்து வந்த குஷானர்,

கோவில் ஒரு பெரிய வளாகத்தின் நடுவிலிருக்கிறது. ஒரு நீள்சதுரத்தின் மேல் எழுப்பட்ட  நான்குபுறமும் பட்டையான கட்டமைப்பின் மீது கூர்மையான விதானத்துடன் கோபுரம். 150 அடி உயரமிருக்கும்.  வளாகம் முழுவதும் பெரிதும் சிறிதுமாக பல ஸ்தூபிக்கள்.  நுழையுமிடத்திலிருந்து

  படிகளில் இறங்கி  நடக்கவேண்டும்  கடந்த வருடம் ஜுலை மாதம் இங்கு ஒரு வெடி குண்டு தகர்ப்பு முயற்சி நடைபெற்றது. மிக அதிர்ஷ்ட வசமாக முக்கிய இடங்களில் வெடிகள் வெடிக்காததால் கோவில் தப்பியது இரண்டு புத்த பிட்சுக்களுக்கு படுகாயம். இந்த அழகான அமைதியான இடத்தில் வெடிவைக்க  எப்படித்தான் மனம் வந்ததோ.? இந்த நிகழ்ச்சியினால் செக்யூரிட்டி கெடுபிடிகள் மிக அதிகம். கோவில் பணியிலிருக்கும் பிட்சுக்களுக்கும் கூட சோதனை.                      
    

கோவில் வளாகம் படு சுத்தமாகயிருக்கிறது.  அணிஅணியாக புத்த துறவிகள். காவியாடைகளில் தான் எத்தனை வண்ணங்கள். மஞ்சள், இளம்சிவப்பு, கடும் சிவப்பு தவிட்டின் வண்ணம் என பலவகைகள். அணியும் பாணி ஒன்றாக இருந்தாலும் வண்ணங்கள் வேறு. ஒரு துறவியுடன் பேசியதில் அறிந்தது அது அவர்கள் உட்பிரிவுகளை குறிக்கிறதாம்  கடும்சிவப்பு மகாயான பிரிவினராம்,மஞ்சள் தேரவாதிகள் சற்றே மங்கிய சிவப்பு அணிந்திருப்பவர்கள் வஜ்ராயனம் என்று சொல்லிகொண்டே போனார். இங்கு புத்த பிக்குகளுடன் பேசும் முன் பேசலாமா? என கேட்டுகொள்ளவேண்டும். ஏனெனில் அவர் மெளனத்தில் இருக்கலாம் அல்லது ஆங்கிலம் பேசாதவராக இருக்கலாம். உட்கார்ந்திருப்பவர் அருகில் ஏதாவது மலர் இருந்தால் அவர் தொடர்ந்த தவத்திலிருப்பவர் ,

இப்படி வரும் பிக்குகளும் உடன் வருபவர்களும் ஆங்காங்கே அணியாக உட்கார்ந்து மெல்லிய குரலில் ஜபித்து கொண்டிருக்கிறார்கள். பாலிமொழியை எல்லோரும் அறிந்திருக்கிறார்கள். சிலர் சீன மொழியில் எழுதபட்ட புத்தங்களைலிருந்து வாசிக்கிறார்கள்.  வளாகத்தில் பல இடங்கள் புனிதமாக்கருதபடுகிறது.  கோவிலின் பின் சுவருக்கு அருகில் போதிமரம். புத்தர் அமர்ந்த இடத்தில்  வஜ்ராசனம் என்று சொல்லபடும் சிறிய பீடம். மலர்களினாலும் பட்டுதுணியினாலும் அலங்கரித்திருகிறார்கள். மரத்தை சுற்றி கல் பலகைகளினால் வேலி.மரத்தை தொடமுடியாது.  நல்லவேளை  இல்லாவிட்டால் போதிமரம்  இங்கில்லாமல் பலர் வீட்டிற்கு ஞானம் வழங்க போயிருக்கும் 


தியானம் செய்ய தூண்டும் அந்தச்சுழலில் நாமும் அமர்கிறோம்.  நம்மைப்போல உடன்வந்த நண்பர்களும். அமர்கிறார்கள்.  மூடிய கண்களின் முன்னே புத்தர் வருகிறார். ஒருமணிநேரம் போனதை உணரமுடியவில்லை. வாழ்க்கையில் மிகப்பயனுள்ளதாக செலவிட்ட நேரம்.
இந்த கோவிலின் விதானத்தின் கூர்மையாகயிருக்கும் பகுதியை தங்க மயமாக்க போகிறார்கள். தாய்லாந்து அரசி 
நன்கொடையாக 300 கிலோ தங்கம் தந்திருக்கிறார்கள். பாதுகாப்பு காரணங்களால் முதலில் ஏற்பதற்கு தயங்கிய முதல்வர் நித்திஷ் குமார்  பின்னர் மத்திய அரசுடன் மிக உயர்ந்த மட்டத்தில் பேச்சுகள் நடத்தியபின் ஒப்புக்கொண்டிருக்கிறார்,  ஒரு நாள் மிக ரகசியமாக 24 கமோண்டோக்களின் பாதுகாப்புடன் விமானத்தில் 13 பெட்டிகளில்  வந்திறங்கிய தங்ககட்டிகள் இப்போதும் அவர்கள் பாதுகாப்பில் தான் இருக்கிறது. 500 பக்தர்களின் சிறப்பு பூஜையுடன் துவக்கி 40 கலைஞர்கள் இரவுபகலாக தங்க்க்கூரை வேலைகள்
செய்து கொண்டிருக்கிறார்கள். அவ்வப்போது ஒரு தாய்லாந்து அமைச்சர் வந்து பார்வையிடுகிறார். . நீங்கள் அடுத்த முறை வரும்போது தங்கமயமாக மின்னும்  கோபுரத்தைப் பார்க்கலாம். கோவில் வளாகத்தின் உள்ளே  பல இடங்களில் சிலபுத்த பிக்குகள் தொடர்ந்து சாஷ்ட்டாங்கமாக நமஸ்காரம் செய்து கொண்டே இருக்கிறார்கள். உடலின் எட்டு அங்கங்களும் தரையில் படும் அந்த நமஸ்காரங்களை செய்ய ஊஞ்சல் பலகை போல வழவழப்பான நீண்ட பலகை,  உள்ளங்கை  உரசி புண்ணாகமலிருக்க கையில் கோர்த்து கொண்டிருக்கும் சிறியகுஷன், முழங்கால் அடிபடாமலிருக்க சின்ன மெத்தை இப்படி ஏற்பாடுகள். நிறுத்தாமல் செய்கிறார்களே எவ்வளவு  நமஸ்காரம்? என கேட்ட போது அருகிருந்த  ஒரு பிக்கு சொன்னது ஒரு லட்சம் !


. நமக்கு சரியாக கேட்கவில்லையோ என மீண்டும் கேட்டபோது  துறவியின் அடுத்த நிலைக்கு போக இது அவசியம் எனவும் ஒரு  நாள் 1000 அல்லது 500 வீதம் பல நாட்கள் செய்வார்கள் எனவும் சொன்னார். நாம் கேட்கும் முன்னரே  அவர் கையிலிருக்கும்  விரலால் அமுக்கினால் நகரும் எண்ணை காட்டும் ஒரு சிறிய  கவண்ட்டரை காட்டி இங்குள்ள தலமை துறவியிடம் பதிவுசெய்வோம் என்றார்.  நமது மதங்களில்தான் எத்தனைவித பிரார்த்தனைகள், நியமனங்கள்? என எண்ணிக்கொள்கிறோம்.   இந்த கோவில் வளாகத்தில்  போதி மரத்தடியில்  புத்தர்  ஞானம் பெற்றபின்னர் 7 இடங்களில் ஒவ்வொரு வாரம்  தவமிருந்து அருள் பெற்றிருக்கிறார். ஒரிடத்தில் ஒருவாரம் கண் இமைக்காமல் எதிரே இருக்கு ஆலமரத்தையே நோக்கியிருக்கிறார். ஒரு இடத்தில் 7 நாட்களும் ஒரே இடத்தில்  முன்னும் பின்னுமாக நடந்திருக்கிறார்.. மற்றொரு இடத்தில் அசையாமல் நின்றிருக்கிறார். ஒரிடத்தில் இவர் அமர்ந்து தியானம் செய்துகொண்டிருந்தபோது கடும்மழையும் புயலும் தாக்கியிருக்கிறது அப்போது ஒரு நாகம் அவரை நனையாமல் காத்து நின்றிருக்கிறது. அந்த இடங்களெல்லாம்  புத்தமத்ததினருக்கு புனிதமான இடங்கள்.




அந்த இடங்களில் சிறிய மேடைகள். வருகிறவர்கள் அதில் அமர்ந்து தியானிக்கிறார்கள்  ஒவ்வொருநாள் தவத்திலும் அவரது உடலில் ஒருவண்ணம் ஓளிர்ந்திருக்கிறது..அந்த வண்ணங்கள் தான் புத்தமதத்தின் கொடியாகியிருக்கிறது. இன்று உலகம் முழுவதும் புத்த கோவில்களில் பறக்கிறது.

வளாகத்தை சுற்றிப் பார்த்தபின்னர் சன்னதிக்குள் நுழைகிறோம். கோவிலின் கம்பீரத்துக்கு சன்னதி மிகச் சிறியது.  பத்தடி உயரமிருக்கும்  பொன்வண்ண சிலை. அவர் ஞானம்பெற்ற நிலையை காட்டும் உட்கார்ந்த நிலையில் சிலை. சிவப்பு அங்கி சாத்தியிருந்தார்கள்.அமைதியாக சற்று நேரம் அமர்ந்திருக்கிறோம். மண்டியிட்டு அமரவேண்டும் என  மெல்ல காதில் யாரோ கிசுகிசுக்கிறார்கள்:. மெல்லிய மந்திரங்களின் ஒலியில்  சந்தன மணம் நாசியை தொட. எழ மனமில்லாமல் மெய்மறந்து கண்மூடி இருக்கிறோம். சற்றே சத்தமாக ஒலிக்கும் தமிழ் குரல்கள் நம்மை தாக்க, எழுந்திருக்கிறோம்.

கோவிலை விட்டு வெளியே வரும்போது “என்னுடைய போதனைகள் கோட்பாடுகள் அல்ல நான் சொல்வதையும் கேள்விகள் கேட்டு ஆராயுங்கள்”
”எவரும் பிறப்பால் உயர்ந்தவர்கள் இல்லை. தன் செயலால் மட்டுமே உயர்ந்தவன் என்ற நிலையை அடைய முடியும்” போன்ற புத்தரின் வாசகங்கள் கண்ணில் படுகிறது.  தான் பெற்ற ஞானத்தை தனக்கு மட்டும் பயன்படுத்திக்கொள்லாமல்  எல்லோரும் அதை அடையும்வழியை சொன்ன இந்த மனிதன் தான் உலகின் முதல் பொதுவுடமைப் புரட்சியாளன் என்று தோன்றிற்று.


சத்குருவின் பதில்கள் 


ஞானோதயம் என்பது என்ன? புத்தரைபோல எவரும் அதை அடையமுடியுமா?
 உங்களிடம் செல்போன் இருக்கிறதா?  காமிரா இருக்கிறதா? இன்றைக்குதான் எல்லாம் ஒன்றாக இருக்கிறதே.  அதிலிருக்கும் அத்தனை வசதிகளையும் உங்களுக்கு பயன்படுத்த தெரியுமா? நீஙகள் எந்த கருவியை பயன்படுத்துபவராக இருந்தாலும் அதைப்பற்றி முழுமையாக தெரிந்திருக்கும் பட்சத்தில் அதனை நீங்கள் திறம்பட கையாள  இயலும். அதனைப்பற்றி அதிகமாக தெரிந்துகொள்ளும் பட்சத்தில் உங்களால் அந்த கருவியை வைத்துக்கொண்டு என்ன செய்ய இயலுமோ அது பல மடங்கு மேம்படும். நாம் கையாளும் ஒவ்வொருபொருளுக்கும்  இது பொருந்துவது போல நம் மனத்தின் முழு சக்தியை முழுமையாக ஆழமாக புரிந்துகொள்ளும்போது அதை நீங்கள் கையாளும் விதமும் பன்மடங்கு மேம்படும்.. ஞானோதயம் என்றால் தன்னை முழுமையாக உணர்தல். இந்த நிலையை அடைந்தவர்கள் நிறைய விஷயங்களை எளிதில் செய்ய முடியும்.. உடலின் செயல்களை கட்டுபடுத்தமுடியும். இருந்த இடத்திலிருந்தே கண்மூடிய தூங்கும் என்ற நிலையில் இருந்தாலும்  செய்யவிரும்பியதை செய்ய முடியும். இந்த சக்திகளை பெற்றிருந்த புத்தர் அதனை  தன் நலத்திற்கு பயன்படுத்திகொள்ளமல் கண்டூணர்ந்தவகைகளை மற்றவர்களுக்கு போதிக்க துவங்கினார். ஞானோதயம் என்பது ஏதோ இமயமலைகுகைக்களும் காட்டுபகுதிகளில் கடும்தவம் செய்தால் தான் கிடைக்கும் என்பதில்லை. அப்படியும் நிகழந்திருக்கிறது. நிகழ்ந்துகொண்டுமிருக்கிறது.  ஞானோதயம் அடைய எவரும் முறையான பயிற்சிகளுடன் முயற்சிக்கலாம்.  முதலில் உங்களால் உங்களை உணர  முடியுமா என சோதித்துக்கொள்ள வேண்டும்.
(கல்கி 16/03/14)


படங்கள் ரமணன்

  


5/3/14

கடைசிக்கோடு பற்றி....



சென்ற வார ஒரு முற்பகலில் ஒரு போன்.  "நான் மிஸஸ் மாலதி  பார்த்தசாரதி" என்ற  றிமுகத்துடன் பேசியவர்  என்னுடைய  கடைசிக்கோடு புத்தகத்தை பற்றி ஒரு நண்பர் மூலம் அறிந்து படித்ததாகவும், மிக  நல்ல புத்தகம், மிக நன்றாக, சுவையாக விஷயம் சொல்லபட்டிருக்கிறது என்று
 மிகவும் பராட்டினார். அவர் மட்டுமின்றி, விஞ்ஞானியாகயிருந்து ஒய்வு பெற்றிருந்தாலும் பேராசியராக பணியாற்றும் அவரது கணவரும், அவரது மற்ற குடும்பத்தினரும்  வாசிப்பதை நேசிப்பவர்கள் என்றும் தொடர்ந்து புத்தகங்கள் படித்துகொண்டிருப்பவர்கள் எனவும் சொன்னார். வெளியிட்டிருக்கும் கவிதா பதிப்பகத்தை தொடர்பு கொண்டுஎன் நம்பரை வாங்கி பேசிய இவர்  சொன்ன விஷயம் சிந்திக்க வைக்கிறது., தானும் தன் வெளிநாட்டிலிருந்தாலும் தங்கள் வாரிசுகளூம் தமிழ் படிப்பைதைப் போல, தன் பேரக்குழந்தைகள்  தமிழே தெரியாத காரணத்தால் இதுபோன்றவைகளை படிக்க முடியவில்லை.  நீங்கள் ஏன் இதைபோன்றவைகளை  அவர்கள் நலனுக்காக ஆங்கிலத்திலும் எழுதக்கூடாது ?
எதையும் எளிய தமிழில் சொல்ல முடியும் என்ற நம்பும் எனக்கு  நமது அடுத்த தலைமுறைக்கு சொல்லவேண்டியதை தமிழில் மட்டும்  சொன்னால் போய்ச்சேராதோ? என்ற என்ணத்தை இது எழுப்பியிருக்கிறது. ஒரு தலைமுறையே தமிழ் படிக்க முடியாத கல்விசூழல் ஏற்பட்டதற்கு யார் காரணம் என்று இப்போது  ஆராய்வதில் பயன் இல்லை. எளிதாக ஆங்கிலம் மூலம் தமிழை  விஞ்ஞான முறைப்படி சொல்லிக்கொடுக்கும் வழிவகைகளை கண்டுபிடிக்க வேண்டிய கட்டயாத்தில் இருக்கிறோம்.  இதை எப்படி,செய்யலாம்? என்பதற்கான ஆலோசனைகளை பட்டியலிட்டுகொண்டிருக்கிறேன். உங்கள் யோசனைகளையும் எழுதுங்களேன்.
மூத்த எழுத்தாளார் சுப்ர. பாலன்  கடைசிக்கோடு புத்தகத்திற்கு கல்கியில் எழுதிய விமர்சனம் இது


பொறாமைப்படவைக்கும் ஒரு புத்தகம்!



                              சுப்ர. பாலன்



       நில அளவைத்துறை  என்கிறார்கள் இன்றைக்கு. சங்கிலி பிடித்து நூறு நூறு அடியாக இந்த தேசம் முழுவதையும் அளந்து வரைபடமாகத் தயாரித்தவர்கள் அந்த சர்வேத்துறையில் பிள்ளையார்சுழியிட்ட இரண்டு வௌ;ளைக்கார அதிகாரிகள். 1802 ஆம் ஆண்டில் சென்னை நகரத்து மெரீனாக் கடற்கரையில் கேப்டன் வில்லியம் லாம்ப்டன் என்பவர் முதல் அளவைக் கோட்டை வரைந்து தொடங்கிய இந்தப் பணியை, டேராடூனில் கடைசிக்கோட்டை வரைந்து முடித்துவைத்தவர் மூன்றாவது சர்வேயர் ஜெனரலாகப் பணியாற்றிய கர்னல் ஜார்ஜ் எவரெஸ்ட்.  இடைப்பட்ட காலம் அறுபது ஆண்டுகள்!

        இந்தப் பணியின்போதுதான் அதுவரை பெயர் சொல்லிக் குறிப்பிடாமலிருந்த இமாலயத்தின் மணிமுடியான ஒரு மலைச்சிகரத்தையும் கண்டு அதன் உயரத்தை 29002 அடி என்று கணக்கிட்டார்கள். ஜார்ஜ் எவரெஸ்ட் காலமானபிறகு இந்தப் பணியில் அடியெடுத்துக் கொடுத்த அந்த உயர் அதிகாரியின் பெயரையே அந்தச் சிகரத்துக்துச் சூட்டித் தங்கள் நன்றியைப் பதிவுசெய்திருக்கிறார்கள். நல்ல காலம்! முன்பே கண்டுபிடித்துஎவரெஸ்ட்என்று அதற்குப் பொருத்தமாக நாமகரணம் செய்துவிட்டார்கள்.

        முதலில் அளந்த தொலைவு மெரீனா கடற்கih அருகே இருந்த சிறு குன்றில் தொடங்கி  பறங்கிமலை வரையிலான ஏழரை மைல் (12 கி.மீ). இந்தத் தொலைவை அளந்து பதிவுசெய்ய 57 நாட்களாகியிருக்கின்றன. நரற்பது சிறிய இரும்புச்சங்கிலிகள் கொண்ட 100 அடி நீள அளவுசங்கிலியை 400 முறைகள் பயன்படுத்தவேண்டியிருந்ததாம்.


        புகழ்பெற்ற தஞ்சை பிரகதீசுவரர் கோயில் கோபுரத்தின் வட்டக்கல்லில் ஏறி நின்று பல டன் எடைகொண்ட கருவியை வைத்து அளவிட வேண்டிய அவசியம் ஏற்பட்டது லாம்ப்டனுக்கு. வழக்கம்போல் ஆலய சம்பிரதாயத்தடைகள். எப்படியோ சமாளித்து வேலையைத் தொடங்கியபோது அறுபது அடி உயரத்திலிருந்து அந்தக் கருவி கீழே விழுந்து உடைந்தது. அப்போது அந்தப் பொறுப்புள்ள அதிகாரி கர்னல் லாம்ப்டன்                                                   …2…

தம்முடைய மேலதிகாரிகளுக்கு அனுப்பிய அறிக்கை பொதுப்பணியில்  இன்றைக்குப் பொறுப்பைத் தட்டிக்கழிக்க முயலும் பலருக்கும் பாடமாக அமையவேண்டிய ஒன்று.

      ‘…நடந்த தவறுக்கு நான் பொறுப்பேற்கிறேன்.  அதன் விலையான 650 பவுண்டை என் செலவாக ஏற்கிறேன்..எனது சம்பளத்தில் பிடித்தம் செய்துகொள்ளுங்கள்..’ இந்த விலை மதிக்கமுடியாத கர்னலின் குறிப்பு இன்றைக்கு டேராடூனிலுள்ள அருங்காட்சியகத்தில், அந்த உடைந்து பழுதான தியோடலைட் கருவியோடு வைத்துப் பாதுகாக்கப்படுகிறதாம்.

      பல்சக்கரங்கள் உடைந்து பழுதான அந்தக் கருவியின் பாகங்களை உள்ளுர் ஆட்களை வைத்தே புதிதாக உருவாக்குகிறார். திருச்சி அருகே உள்ள தங்கம்பட்டி கிராமத்தின் தொழிலாளர்களை வைத்து அந்த வேலையைச் செய்துமுடித்தாராம். அந்த கிராமம்தான் பின்நாளில்கோல்டன் ராக்என்று பெயர் மாறியது. இடிந்துவிழுந்த கோபுரப்பகுதியை எடுத்துக்கட்டியபோது அதில் அந்த வௌ;ளைக்காரர் உருவத்தையும் வடித்து வைத்திருக்கிறார்கள். தஞ்சை கோபுரத்தில் இடம்பிடித்துள்ள வௌ;ளைக்காரர் உருவம் இந்த கர்னல் லாம்ப்டனுடையதுதான் என்றுகூட ஒரு குறிப்பு உள்ளது என்கிறார் இந்த அருமையான நூலை எழுதியுள்ள ரமணன்.

      இந்த நூலை எழுதுவதற்குச் செலவிட்ட உழைப்பில் ஒரு நாவல் எழுதிவிடலாம். அது பெயரையும் பொருளையும்கூடக் கொண்டுவந்துகொடுக்கும். ஆனால் புதுமையை விரும்புகிற ரமணனின் மனம் அதைச் செய்யாது  என்று மாலன் முன்னுரையில் பாராட்டுகிறார். சத்தியமான வார்த்தைகள். இப்படி ஓர் அருமையான பாடுபொருளை எடுத்துக்கொண்டு அருமையான பயனுள்ள நூலைத் தமிழில் தருவதற்கு ரமணன்தானே முன்வந்திருக்கிறார்!



கடைசிக்கோடு..இந்தியாவின் வரைபடம் பிறந்த கதைரமணன்-

கவிதா வெளியீடு, 8, மாசிலாமணி தெரு,சென்னை 600 017 தொ.பே. 044 - 2436 4243… ரூ.80-



                       ..        - சுப்ர. பாலன்