20/6/16

பொன்மாலைப் பொழுதுகள் 4




உலகிலேயே மிக உயரமான இடத்தில் நின்று கொண்டிருக்கிறோம். தடித்த கண்ணாடிச்சுவர்களுக்கு வெளியே கீழே நீண்டமரவட்டைகளாக நெளியும் மெட்ரோ ரயில்களும், எறும்புகளாக ஊரும் வாகனங்களும்  அடையாளமே தெரியாத மொட்டை மாடிகளும்,அருகில் ஓரளவு அடையாளம் தெரியும் கட்டிடங்களும் நாம் இருக்கும் உயரத்தை நமக்குச் சொல்லுகிறது. அந்த வட்ட வடிவ தளத்தின் நடுவில் . அந்தக் கட்டிடத்தின் மாதிரிகளை, படங்களைப் பல ஸைஸ்களில் நினைவுச்சின்னங்களை விற்கும் பெரிய கடை. நம்மைப் போல் அதைக் கடந்து செல்லும் பலர். அமைதியாக நடக்கும் பல வெளிநாட்டவர்கள். சற்றே தூக்கலாகக் கேட்கும் தென்னிந்திய மொழிகள்

துபாய் நகரின் நடுவில் 828 மீட்டர் உயரத்தில் 163 தளங்களுடன் இருக்கும் புர்ஜ் காலிபா தான் உலகின் உயரமான கட்டிடம். அதன் 124 தளத்திலிருக்கிறோம். டெலிஸ்கோப் பைனாகுலர் எல்லாம் ரிட்ய்ர்ட் ஆகிவிட்டது. அழகாக  மானிட்டரில் தொலைவில் இருப்பதைப்  அருகில் பார்க்கும் வசதி.
உலகின் பெரிய மால்களில் ஒன்றாக வர்ணிக்கப் படும் துபாய் மால் இந்தக் கட்டிடத்தின் மூன்றுதளங்களில். ஆண்டுக்கு 18 லட்சம் சுற்றுலா பயணிகள் வரும் இடம். ஜெட்வேகத்தில் நேரடியாக இந்த மேல்தளத்துக்கு வர லிப்ட். அழகான ஆப்ரேட்டர். ஏறியவுடன் கட்டிடத்தின் பெருமையை, கின்னஸ் சாதனைகளைச் சொல்லும் படம் ஆரம்பிக்கிறது, சில நிமிடங்களில் 124 வதி மாடி. கதவுதிறக்கும்போது படம் முடிகிறது. தளத்தின் பெயர் AT THE TOP. ஆனால் இதற்கும் மேலே மாடிகள் இருக்கின்றன. இந்தத் தளத்துக்கு வர 200 திராஹம் கட்டணம்.சாதாரண நேரங்களில் 125 தான் சூரிய அஸ்தமனம் பார்க்கப் பிரைம் டைம் கட்டணம் 200 திரஹாம் சூரியனைப்பார்க்க டிக்கெட் கொடுத்துக் காசு வாங்கும் புத்திசாலிகள். கீழ்த்தளத்தில் பார்த்துவிட்டு மேலே போய்ச் சூரியன் மறைவதற்குள் இரண்டாம் முறையாகவும் பார்க்கலாம். எங்கள் லிப்ட் அவ்வளவு வேகம் என்ற டிக்கெட்டில் குறிப்பு வேறு
இந்தத் தளத்திலிருந்து இன்றைய மாலைப்பொழுதில் சூரிய அஸ்தமனத்தை பார்க்கக் காத்திருக்கிறோம். இன்று சூரிய பகவான் நிறைய நேரம் நம்மைப் பார்க்க விரும்பினாரோ என்னவோ அவர் அறிவிக்கப்பட்ட நேரத்தில் மறையவில்லை. உட்கார வசதிகள் இல்லதால் ஏற்கனவே உட்கார்ந்திருக்கும் சிலரைப் பார்த்து நாமும் தைரியமாகத் தரையில் உட்காருகிறோம். படமெடுக்கக் காத்திருக்கிறோம்.
அந்த உயர்ந்த கட்டிடத்தின் வெளியே தொங்குவது போலவும், கண்ணாடிச்சுவர்கள்மீது நடப்பது போலவும் விளிம்புகளில் நிற்பதுபோலவும் படங்கள் எடுத்துக்கொள்ள விரும்புபவர்களை ஒரு  சாம்பல் வண்ண பின்னணியில் படமெடுக்கிறார் ஒரு சீன பெண் போட்டாகிராபர். படத்தில் இருப்பவர்களின் போஸ் இயற்கையாக இருக்க ஆலோசனை சொல்லும் பெண் அஸிட்டெண்ட் நடித்துக்காட்டுகிறார். சிலசமயம் பயத்தால் கத்தும் உணர்வைக் காட்ட கத்தியே காட்டுகிறார். மனிதர்கள் ஆர்வமாக நடிக்கின்றனர்.. மனிதர்களுக்குத் தான் சாகச நடிப்பில் எவ்வளவு ஆர்வம்.! எடுத்தபடம் வைஃபையில் கிழ்தளத்திற்கு போய்ப் படம் போட்டோஷாப்பில் ஆபத்தான படமாக அமைக்கப்பட்டு இவர்கள் கீழே போகும்போது தயாராகவிருக்கும்.
 இலவசமாகக் கிடைக்கும் இந்த நடிப்பு காட்சிகளையும் சத்தங்களையும், இடையிடையே வெளியில் சூரியனையும் நாம் கவனித்துக் கொண்டிருக்கிறோம்.
சட்டென்று அந்த இடம் பரபரப்பாகிறது. பறந்து கிடக்கும் பாலைவனப்பகுதிகளுக்கும் அசையாத கடலுக்கும் பின்னே பெரிய மஞ்சள் பந்தாக இருக்கும் சூரியன் நிமிடங்களில் நிறம் மாறிச் சரசரவென இறங்குவது தெரிகிறது. அந்த இடம் அமைதியாகிறது. உயரமான இடத்திலிருந்து பார்ப்பதால் சூரியன் மறையும் வேகத்தைப் பார்க்கமுடிகிறது. தரைத்தளத்திலிருந்து பார்த்தால் இந்த வேகத்தை உணர முடியாது. ஒரே நேரத்தில் பல கேமிராக்கள் இயங்குகின்றன.

இந்தியாவிலும் உலகின் பல இடங்களிலும் சூரிய அஸ்தமனங்களை கண்டிருந்தபோதிலும். சூரியன் நமது காலடிக்கும் கீழே நழுவிப்போவதுபோலத் தோன்றும் இந்தக் காட்சி மாறுதலானது.


கூராகச் சீவிவைத்த தடித்த பென்சிலைச் சுற்றி வெவ்வேறு உயரங்களில் வட்ட நாணயங்கள் அடிக்கவைக்கப்பட்டிருப்பதைப் போல  இருக்கும் இந்தக் கட்டிடம். இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய கட்டிடகலை சாதனை. பார்க்க அரைவட்டங்களாகத் தோன்றினாலும், அருகில் பார்க்கும்போது அவை செவ்வக பட்டகங்களாக இணைக்கப்பட்டிருப்பது தெரிகிறது. பாலைவனப்பகுதியான துபாயில் காற்று மிக அதி வேகத்தில் வீசும். அந்த உயரத்தில் இதன் மீது மோதும் காற்றின் அழுத்தத்தையும் வேகத்தையும் குறைக்க இந்தப் பட்டகங்கள். அதில் மோதும் காற்றை திசை திரும்பச் செய்திறது. அதனால் கட்டிடம் எப்போதும் பாதுகாப்பாக இருக்கும்.

அரபுநாடுகள் வெறும் எண்ணைவளம் மட்டும் கொண்ட பாலைவனம் என்பதை மாற்றி மிக நவீனமான இடமாக அத்தனை வசதிகளும் கொண்ட சர்வதேசசுற்றுலா தலமாக, அன்னிய முதலீடுகளை வரவேற்பதற்க ஒரு நகரை உருவாக்க மன்னர் கண்ட கனவினால், 2000களில் துபாயில்  பல உயர்மாடிகட்டிடங்கள் உலகதரத்தில் எழுந்தன. நகரம் நவீனமயமாயிற்று. அப்போது எழுந்த அலையின் உச்சக்கட்டம்தான் இந்தக் கட்டிடம். அமெரிக்க நிறுவனங்கள் வடிவமைத்து ஜெர்மானிய நிறுவனங்கள் கட்டியவை. முதலில் துபாய் டவர் என்றுதான் பெயரிடப்பட்டிருந்தது. 5 வருடங்களில் கட்டிமுடிக்கப்படுவதற்குள் அரபு நாடுகளின் பொருளாதாரம் சரிந்து, கட்டிடத்தை எழுப்பிய துபாய் வேர்ல்ட் நிறுவனம் 80 பில்லியின் டாலர் கடனில் மூழ்கியதும், அந்த நிறுவனத்தையும், துபாய் பொருளாதாரத்தையும் காப்பாற்றச் சவுதி மன்னர் உதவியதும் -ஒரு புத்தகம் எழுதுவதற்கான விஷயங்கள். உதவிய மன்னரைக் கௌரவிக்கும் விதமாக கட்டிடத்திற்கு அவர் பெயரிடப்பட்டது(Khalifa bin Zayed Al Nahyan)
இந்த 160 மாடிகட்டிடத்தில் அலுவலகங்கள், மட்டுமில்லை ஆடம்பர ஹோட்டல்கள், பிளாட்களும்(flats) இருக்கின்றன. 19ம் மாடியிலிருந்து108 வரை 900 வீடுகள். மிகப் பணக்கார குடும்பங்கள் வசிக்கின்றன. ஷில்பா செட்டியின் கணவருக்கு ஒரு தளமே இருக்கிறதாம். பல பணக்கார இந்தியர்களுக்கும் வீடு இருக்கிறதாம். சட்டைப்பித்தானிலிருந்து சகலத்தையும் மிக மிக அதிகவிலையில் விற்கும் ஆர்மானி என்ற நிறுவனத்தின் ஆடம்பர ஹோட்டலும் இருக்கிறது டின்னரின் விலை சென்னை -துபாய் விமான கட்டணம்!

திரும்பும்போது வேறு பாதை ஓர் நீண்ட நடைபாதைக்கு பின் தான் லிப்ட். அந்தச் சுவரெங்கும் கட்டிடம் வளர்ந்த கதை படங்களுடன். ஆர்வமும் பொறுமையும் இருந்தால் நிறையத் தெரிந்து கொள்ளலாம். ஆயிரக்கணக்கான மனிதர்களின் உழைப்பின் சின்னம் இது என்ற எண்ணத்தோடு, இதுகுறித்து படித்த மனித உரிமை மீறல் விஷயங்களும் மனதில் எழுந்தது.

வெளியே வரும்போது ஒரு தளத்திலிருந்து அந்த மாலில் உள்ள the fall சிற்பத்தை அவசியம் பாருங்கள் என்றார்கள் நண்பர்கள். விழும் அருவியில் மேலிருந்து பாயும் மனிதர்களாக தெரிந்த அதில் எனக்கு ஒரு நயமும் புரியவில்லை. அருவியில் எவரும் அப்படி தலைகீழாக பாய்ந்து குளிக்க முடியாது. சிற்பத்தில் என்ன தாத்பரியமோ புரியவில்லை. இந்திரன் போன்றவர்களைத்தான் கேட்க வேண்டும்
.
எப்போதும் மின்விளக்குகளின் ஒளியில் மூழ்கி இருப்பதனால் மாலின் உள்ளே இருக்கும்போது  பகலா இரவா எனத்தெரிவதில்லை. வெளியே இருள் பரவிக்கொண்டிருந்தது.


மியூசிகல் பவுண்டன் மறக்காமல் பாருங்கள் என்று சொன்னது நினைவுக்கு வந்தது. அதற்கு எந்த கேட்? என்றுவிசாரிக்க திரும்பியபோது நான் இங்கே தானே நிற்கிறேன் எனச்சொல்லுவது போல ஒரு உயரமான நீருற்று நம்மைப் பார்த்துச் சிரிக்கிறது. மிக உயரமானது. 100 அடிக்கும் மேல் இருக்கும். இரவு துவங்கியதும். இந்த பௌண்டன் ஒளிவெள்ளத்தில் இசைக்கேற்ப நடனம் ஆடுகிறது. இது ஒன்று மட்டுமில்ல பாரதிராஜா படத்தில் வரும் தேவதைகள் மாதிரி கூட்டமாக ஆங்காங்கே பல திட்டுமென எழுந்து ஆடுகிறது. வண்ணங்கள் மாறும்போது வட்டங்களாகவும் வளைவுகளாகவும் மாறி மாறி உயர்ந்தும் தாழ்ந்தும் ஆடுகிறது., சட்டென்று  ஒரே ஒரு ஊற்று மாத்திரம் பின்னணியிலிருக்கும் கட்டிடத்தின்  பாதி உயரத்துக்கு பீச்சிய்டிக்கிறது, அது அடங்கியவுடன் பரவும் நெருப்பு மஞ்சள் வண்ணத்தில் அந்தத் தடாகத்தில் 5 வட்டங்கள் எழுகின்றன. அது அணைந்து அலைகளாகின்றன. இருளும் ஒளியும், இசையும் நீரும் சேர்ந்து செய்யும் இந்த ரகளை  உண்மையிலேயே வர்ணஜாலங்கள் தான் நீருக்குள்ளிருக்கும் , மிகச் சக்திவாய்ந்த  விளக்குகளும் எங்கோ ஒளிந்திருக்கும்  பல புரெஜக்டர்களும் இந்த ஜாலத்தை நிகழ்த்துகின்றன. அரபிய. ஹிந்தி, ஆங்கில இசையில் மாறி மாறி நிகழ்ச்சிகள் இரவுவரை நீண்டுகொண்டிருக்கிறது தமிழ் பாட்டு இல்லை. ஓருவேளை நம் குத்துபாட்டு கேட்டால் இன்னும் துள்ளிகுதித்து  ஆடுமோ என்னவோ?

ஒவ்வொருமுறையும் பௌண்டன் ஓய்ந்து இருள் சூழ்ந்த அடுத்த வினாடி பின்னால் நிற்கும் புஜ் கலிபா கோபுரத்தின் வெளிசுவற்றின் மீது ஓளி விளையாடுகிறது. வாரியிறைத்த வண்ணபூக்களாக, புள்ளிக் கோலங்களாக, வண்ணகட்டங்களாக, ஒளிஊசிகளாக, நட்சதிரமழையாக, மாறி மாறி ஜொலிக்கும் வண்ணவிளக்குகளின் ஜாலம். அசத்துகிறது. அந்தக் கட்டிடத்தில் எத்தனைப் பிஞ்சு பல்புகள்ஒளிந்திருக்க்கும்   ஒரு லட்சம்? இல்லை அதற்கும் அதிகமாகவா? தெரியவில்லை. இந்த ஒளி, நீர் விளையாட்டுகளுக்குப் பின்னே மிகச்சவாலான கணினி சூத்திரங்கள் இருக்கிறது எழுதிய புண்ணியவான்களுக்கு (நிச்சியம் இந்தியர்கள் இருப்பார்கள்). சலாம்
குளிராத மெல்லிய இதமான காற்று வீசத் துவங்கி நடக்க அழைக்கிறது. தொலைவில் வெளிர்நீல நிறத்தில் புஜ் கலீபா



உலகின் உயரமாகயிருக்கும்  கட்டிடத்தை விடப் பெரிதாக, உலகிலிருக்கு பெரிய  மியூசிகல் பெளண்டனைவிடப் பெரிதாக இப்படி எல்லாவற்றிலும் -பெரிதினும் பெரிது கேட்டு- கனவுகண்டு அதை நனவாக்கிய மன்னரின் துணிவும், தன்னம்பிக்கையும் தான் இந்த கோபுரத்தைவிடப் பெரிது எனத் தோன்றிற்று

11/6/16

பொன்மாலைப் பொழுதுகள் 3



பயணங்கள்


பஹரையினிலிருந்து ஒரு மணிநேர விமான பயணத்தில் துபாய்.ஆனால் இரண்டிற்கும் நேரவித்தியாசம் 1 மணி நேரம். அதனால் வாழ்க்கையில் வாழாமலேயே கரைந்த ஒருமணிநேரத்தைக் கடிகாரத்தில் மாற்றிக்கொள்ள வேண்டும் இம்மாதிரிப் பயணங்களில் போனாசாகக் கிடைத்த மணி நேரங்களையும் காணாமல் போன நேரங்களையும் ஒரு நாள் கணக்கிட்டுப் பார்க்க வேண்டும் என நினைத்துக்கொண்டேன்.

துபாய் விமான நிலையம் மிகக்க.....ப் பெரிது. லிப்ட்கள் தானியங்கும் ரயிலில் என்மாறி மாறிப் பயணித்தாலும் நடந்த நேரம் இரண்டுநாள் வாக்கிங்கை ஒரேடியாகச் செய்த உணர்வைத்தந்தது. எமிரேட் மிகப்பெரிய விமான நிறுவனமாக வளர்ந்து வருவதால் முழு விமான நிலையத்தையும் அவர்களே ஆக்ரமிப்பு செய்திருக்கிறார்கள், அதனால் மற்றவிமானங்களுக்கு இதற்கும் பெரிதாக இன்னொன்று கட்டிக்கொண்டிருக்கிறார்களாம்.

விமானநிலையத்திலிருந்து வீட்டிற்குசெல்லுமநேரத்திற்குள் இருக்கபோகும் சில நாட்களில் பார்க்கவேண்டியவை, வேண்டாதவைகளையும் பட்டியலிட்டார்கள் நண்பர் மணியும் அவரது மனைவி ஷோபாவும். 20 ஆண்டுகளுக்கு மேலாக அங்கு வசிக்கும் இந்தத் தம்பதியினர் இன்று பல நிறுவனங்களின் நிர்வாக ஆலோசகர்கள். நேரத்தின் அருமையை நன்கு தெரிந்தவர்கள். அவர்கள் வீடு சென்னை அண்ணாசாலை மாதிரியான ஒரு பரபரப்பான சாலையில், அடுத்தடுத்து நிற்கும் உயரமானபலமாடி கட்டிட அண்ணன்களுக்கிடையே நிற்கும் குட்டித் தம்பிகளில் ஒன்றின் 10 வது மாடி.

பால்கனியிலிருந்து பார்த்தால் பளிச்சென்ற ஒளியில் குளித்துக்கொண்டிருக்கும் உயர்ந்த கட்டிடங்களும் அதன் நீண்ட நிழலும் அதனிடையே ஓளியும் மாறிமாறி விழுந்திருக்கும் அந்தப் படுசுத்தமான சாலையில் இருபுறமும் விரைந்து கொண்டிருக்கும் வாகனங்கள். ஹரன் ஒலிகேட்காத, யாரும் குறுக்கே பாயாத சாலை. துபாய்காரர்களைப்பார்த்து கொஞ்சம் பொறாமையாகத்தான் இருக்கிறது.

துபாயிலிருந்து 150 கீமி தொலைவிலிருக்கிறது அபுதாபி. இது தான் ஐக்கிய அரபு தேசங்களின் தலைநகர். மன்னரின் அதிகாரபூவர்மான அரண்மனை இங்குதான் இருக்கிறது ஒன்றை மணிநேரம் பளபளப்பான சாலையில் வழுக்கிக்கொண்டிருந்த கார, மெல்லிய செம்பழுப்பு நிறத்தில் கம்பீரமாக நிற்கும் ஒரு மசூதியின் முன்னே நின்றது. நான்கு உயர்ந்த கோபுரங்கள் சிறிதும் பெரிதுமாகக் கவிழ்ந்த கிண்ணங்களாக மாடங்கள். கட்டிட முகப்பு சாலைக்கு இணையாக இல்லாமல் சற்று சாய்ந்த கோணத்தில் இருக்கிறதோ என்று எண்ணவைக்கும் தோற்றம்.

இது ஷேக் சைது்கிராண்ட் மாஸ்க் என்று அழைக்கப்படும் உலகின் அழகான மசூதி. பார்த்துப் பார்த்துக் கட்டினோம் என்கிறார்களே அதுபோல் நாட்டின் மன்னரால் பார்த்துப் பார்த்து 7 ஆண்டுகளாகக் கட்டப்பட்ட இது, லாஹுர், கசாபிளாங்க்கா, மெக்கா போன்ற புகழ் பெற்ற மசூதிகளில் சிறப்பானவையாகக் கருதப்படும் குவி மாடங்கள், வளைவுகள், கதவுகள் சரளங்கள் போன்ற எல்லாஅழகான விஷயங்களையும் இங்கே ஒருங்கிணைத்து ஒவ்வாரு செண்டிமீட்டரிலும் கலை நுணுக்கங்கள் மிளிர எழுப்பப்பட்டிருக்கிறது. முகலாய, முரிய, அரேபிய கட்டிடகலைகளின் சங்கமம் இது. கிராண்ட் என்பதை விடச் சரியான வார்த்தையில் இதனை அழைக்க முடியாது. எல்லாமே கிராண்ட் தான்.


பிரராத்தனைக் காலங்கள் தவிர மற்ற நேரங்களில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவது மட்டுமில்லாமல் அவர்களைக் குழுக்களாக அழைத்துசென்று இதன் பெருமைகளை விளக்கிச்சொல்ல ஒரு கடும் வருகிறார். மெல்லிய குரலில் அவர் சொல்லுவதைத் தெளிவாகக் கேட்க நமக்கு இயர்போன்கள்.

பெண்கள் எந்த மதத்தினராக இருந்தவரானாலும் பர்தா அணியாமல் உள்ளே போக முடியாது. இதற்காக அவர்களே நன்கு சலவை செய்யப் பட்ட புர்காகள் தருகிறார்கள். ஆண்கள் கால்முழுவதும் மூடிய உடை அணிந்திற்க வேண்டும் முக்காபேண்ட் டவுசர் பாண்டிகளுக்கும் பா்மூடாக்காதலர்களுக்கும் அனுமதியில்லை.
மசூதியின் தரைப்பகுதிக்கு கீழே கைகால்களைச் சுத்தப்படுத்திக்கொள்ள குளிரட்டபட்ட அறைகள். குழாய்களுக்கு முன்னால் வசதியாக உட்கார மேடைகள். ஒரே நேரத்தில் பலர் இருந்தாலும் அந்தப் பகுதி அமைதியாகவும் சுத்தமாகவும் இருக்கிறது.

நான்குபுறமுமநீண்ட தாழ்வாரங்கள் கொண்ட இதன் தொழுகை மாடத்தின் முன்னுள்ள மிகப்பெரிய திறந்த வெளிமுற்றம் நம்மை அசத்துகிறது. வெண்சலவைக்கல்லில் மிகநுணுக்கமாகச் செதுக்கிப் பதிக்கப்பட்டிருக்கும் வண்ணபூக்கள் கொட்டிகிடக்கின்றன. .மிதிபட்டுகசங்கி விடுமோ எனக் கால் கூசுகிறது பிராத்தனை நாட்களில் 40000 பேர் மண்டியிட்டுத் தொழலாம் என்றால் அந்த இடத்தின் பிரமாண்டத்தை கற்பனை செய்து பாருங்கள்
.
நீண்ட தாழ்வாரங்கள் வழியே பளபளக்கும் இளம்பச்சைவண்ண தூண்களைத் தொட்டும், அதன் மீது இருக்கும் தங்க வண்ண ஈச்ச இலைகளைப் பார்த்தவண்ணம் பிராதான வழிபாட்டு மண்டபத்திற்குள் நுழைகிறோம். நம்மைக் கண்டவுடன் தானே திறக்கும் கதவுகள் கண்கள் கூசாத பிரகாச ஒளி, எங்கிருக்கிறது என்று தெரியாத ஏசித் தரும் இதமான குளிர், காலடியில் மெத்தென்ற கார்பெட். நுழைந்ததும் நம் பார்வையைத் தாக்கி நிறுத்துவது.நுழைவாயிலில் தொங்கும் மிகப்பெரிய வண்ண சரவிளக்கு. பெரிய அளவிலிருக்கும் அந்தத் தொங்கும் விளக்கைப் பார்க்க நிற்கும் நம்மிடம் உள்ளே வாருங்கள் இதற்கு அண்ணன்களெல்லாம் இருக்கிறார்கள். என்று அழைக்கிறார் நம் கட்.
உள்ளே 1500 பேர் பிரார்த்தனை செய்யக்கூடிய மண்டபம். அருகே பெண்களுக்கான தனிப்பகுதி. அங்கு இதுபோல் 6 சர விளக்குகள் நடுவே மிகப்பிரமாண்டமான தொங்கும்ஒரு சரவிளக்கு,15 மீட்டர் நீளத்தில் 10 மீட்டர் அகலத்தில் விலையுர்ந்த ஸ்ர்ஸ்வாக்கி ஸ்படிக கற்களுடன் மின்னொளியில் ஜொலிக்கிறது ஜெர்மன் தயாரிப்பான பொன்வண்ணத்திலிருக்கும் அதன் கிரிஸ்டல்கள் வானவில் வண்ணங்கள் மட்டுமில்லை வண்ணகலவைகளினால் எத்தனை உருவாக்க முடியுமோ அத்தனையும் அதில் தெரிகிறது. பார்க்கப் பிரமிப்புட்டுகிறது.
அந்தத் தொழுகைத்தலத்தின் 60000 சதுர அடித் தளம் முழுவதையும் கார்பெட் மறைத்திருக்கிறது. பக்க சலவைகற்சுவர்களில் இருக்கும் பிரமாண்டமான பூக்களின் டிசையினிலேயே இருக்கிறது அந்தக் கார்பெட். முழுவதும் ஒரே கார்பெட் என்றார்கள். எப்படி இருக்க முடியும்? என நாம் நினைப்பதுபுரிந்தது போலத் தரையின் அளவிற்கேற்ப ஈரானில் புகழ்பெற்ற டிசைனாரால் பல பகுதிகளாக நெய்யப்பட்டு இங்கு வந்து இணைக்கபட்டது என்றார் கட். எந்த இடங்களில் இணைக்கப்பட்டிருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க முயற்சித்து பலர் தோற்றச் சவால். 37 டன் எடையிள்ள இது இதற்காகவே மாற்றியமைக்கப் பட்ட விமானத்தில் இங்கு வந்திருக்கிறது. பல லட்சக்கணக்கான முடிச்சகளுடன் கைகளினால் தயாரிக்கப்பட்டிருக்கும் இதைத்தயாரிக்க 3 வருடமாகியிருக்கிறது. எத்தனைப் பிஞ்சு விரல்களுக்கும் அவர்களின் அம்மாக்களுக்கும் எவ்வளவு நாட்கள் வலித்ததோ?

கிழக்கு நோக்கியிருக்கும் பளிங்குச்சுவற்றில் அல்லாவின் 99 திருநாமம் .காலியோகிராபி எனப்படும் ஓவிய எழுத்துக்களில் உள்ள பல வகை ஓவிய எழுத்துக்களாலும் எழுதப்பட்டிருக்கிறது. அவை மின்னொளியாக மிளிர்கிறது. இந்த இடம் மிகச்சரியாக மெக்காவை நோக்கி நேர் கோட்டிலிருப்பதாகச் சொல்லிக் கூகுள் சாட்லைட்மேப்பிலும் காட்டினார். அப்போதுதான் நுழைவாயில் சாலையிலிருந்து சற்று சாய்வான கோணத்தில் இருந்ததின் அர்த்தம் புரிந்தது.

தொடர்ந்து பல ஆன்டுகளாகப் பலர் பிரார்த்திப்பதினால் அந்த இடத்தில் அதிர்வுகளை என்னால் உணர முடிந்தது. எந்த வழிபாட்டுதலத்துக்குச் சென்றாலும் அங்கு நம் கடவுளை மனதில் எண்ணிப் பிராத்திப்பது என் வழக்கம். அதேபோல் இங்கும் சில நிமிடங்கள் பிரார்த்தனையில் செலவழித்தேன்
30 ஏக்கர் பரப்பில் 38 நாடுகளிலிருந்து3000 மேற்பட்டவர்களின் 11 வருட உழைப்பில் 500 மில்லியன் டாலர் செலவில் (ஒரு மில்லியன் 10 லட்சம்) உருவான இந்தத் தொழுகைத் தலம் மன்னர் ஷேக் ஸய்த் தின் கனவு (Sheikh Zayed ). உலகிலிருக்கும் மிகசிறந்தவைகளினால் ஒற்றுமைக்கு உதாரணமாக இதைத் தன் நாட்டில் உருவாக்க விரும்பினார். ஆனால் பணிகள் முடிந்த நிலையில் ஆலயத்தைப் பார்க்க அவர் இல்லை. அவருடைய நினைவு இல்லமும் அருகிலேயே இருக்கிறது.

மீண்டும் அந்த அழகிய நீண்ட தாழ்வாரத்தை கடந்து வெளியே வருகிறோம். மாலை மயங்கி இரவை வரவேற்றுக் கொண்டிருக்கிறது. பரந்த தொழுகை முற்றம் நிலா முற்றமாக மாறியிருக்கிறது. அப்படியொரு ஒளி அமைப்பு. முழு கட்டிடமுமே நீலப் பின்னணியில் பொன்வண்ணத்தில் மயக்குகிறது. நீண்ட தாழ்வாரங்களுக்கு அருகிலிருக்கும் நீர்த்தொட்டிகளில் அசையாமல் மிதப்பதைப் பார்த்து மெய்மறந்துபோகிறோம்.

கட்டிடத்தின் மின்னொளி அமைப்பகள் நிலவின் ஒளிக்கேற்ப மாறும்படி அமைக்கப்பட்டிருப்பதால் ஒவொரு நாளும் அதேற்கு ஏற்ற அளவான வெளிச்சத்துடன் அழகாகத் தோன்றுமாம்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் நமது பிரதமர் இங்கு வந்திருக்கிறார். பார்வையாளர் புத்தகத்தில் அவர் எழுதியிருப்பது இது,

"பிரம்மாண்டமான இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மசூதியைப் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். இதனுடைய அழகிலும், பிரம்மாண்டத்திலும் மெய்மறந்துவிட்டேன். மனித ஒற்றுமைக்கான சின்னமாகத் திகழ்ந்து வரும் இந்த மசூதி உலகின் கலைத்திறன்களை ஒன்றிணைத்துவிட்டது. இந்த மசூதி நிச்சயமாக ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான சின்னமாகப் போற்றப்படும்

ஒளிவெள்ளத்தில் அழகான ஒவியமாகத்தெரிந்த அந்த அழகான கலைச்சின்னம் மெல்ல பார்வையிலிருந்து மறைந்துகொண்டிருக்கிறது. துபாய் திரும்பிக்கொண்டிருக்கிறோம்.

ஒரு இறைவழிபாட்டுத் தலத்துக்கு இத்தனை ஆடம்பரம் அவசியமா? எனத் தோன்றியது. உடனேயே பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுந்த நமது பல கோவில்களும், உலகில் பல தேவாலயங்களும், விஹார்களும். அடுத்துவரும் பலதலைமுறைகள் இறைவழிபாட்டைத் தொடர வேண்டும் என்ற நோக்கத்தில்தானே அன்று சிறப்பாக இருந்தவிஷயங்களைக்்கொண்டு பிரமாண்டமாக எழுப்பியிருக்கிறார்கள். அதே போல்தான் இந்த மன்னரும் செய்திருக்கிறார். என்ற எண்ண அலை எழந்து அதை அழித்தது.


இறைவன் மிகப் பெரியவன்

1/6/16

பயணம் பொன்மாலைப்பொழுதுகள் 2





சின்னஞ்சிறிய பஹரைன் நகரில் பாதிக்கும்மேல் பெரிய சாலைகள். பல இடங்களில் 6 வழிப்பாதைகள். எதிர்புறம் இருக்கும் ஒரு மாலுக்குள் நுழைய ஊரில் பாதியைப் பிரதட்சணம் செய்ய வேண்டும். சாலைகளை இணைக்கும் சந்திப்பு வட்டங்கள் எல்லாம் பசுமையாக ஆனால் காலியாகத்தான் இருக்கிறது. எதிலும் சிலைகள் இல்லை. (மன்னராட்சியின் கீழ் இருந்தாலும் எந்த இடத்திலும் மன்னர்களின் சிலையில்லை. சில உயரமான கட்டிடங்களின் முகப்பில் மிகப்பெரிய அளவில் ஃபிளெக்ஸில் அச்சிடப்பட்ட தற்போதைய மன்னரின் படங்களைப் பார்க்க முடிகிறது.) இப்படி அடிக்கடி செய்து கொண்டிருந்த பிரதட்சணங்களில் ஒரு சந்திப்பு வட்டத்தில் மட்டும் தத்ரூபமான இரண்டு ஓட்டகங்களின் சிலைகள் பார்த்தேன். “இங்கு நிஜமான ஒட்டகங்கள் இருக்கின்றனவா? பார்க்கமுடியுமா? என்று நகர்வலத்துக்குக் கூட்டிவந்த நண்பரைக்கேட்டேன்.

“மன்னரின் அரண்மனை வளாகத்திலிருக்கிறது என்று தெரியும் ஆனால் நான் பார்த்ததில்லை. அனுமதி பெற வேண்டியிருக்கும். முயற்சிப்போம். எனது கெஸ்ட்களிலேயே ஒட்டகத்தைத் தேடிப்பார்க்க விரும்பியவர் நீங்கள் மட்டும்தான்” என்றார். அதைக் கேட்டுக்கொண்டிருந்த அவருடைய டிரைவர் “எனக்கு அந்தச் சீப் செக்யூரிட்டியை தெரியும். பாஸ்எதுவும் இல்லாமல் நான் ஒட்டகப்பண்ணைக்குச் சாரை கூட்டிப் போகிறேன்” என்றார். அதிகாரத்தின் அருகில் இருப்பவர்களுக்கு எப்போதுமே சலுகைகள் என்பதற்கு இந்தத் தேசமும் விலக்கு இல்லை போலிருக்கிறது என நினைத்துக்கொண்டேன். இங்கு 25 வருடத்திற்கு மேல் டிரைவர் பணி செய்து கொண்டிருக்கும் அவருக்கு அரேபிய நண்பர்கள் அதிகம். 
ஒரு கோட்டையினுடையதைப் போலப் பெரிய நுழை வாயில். பலத்த செக்யூரிட்டி. கடற்கரையின் அருகே மன்னர் வாழும் மிகப்பெரிய அரண்மனை வளாகத்தின் ஒரு பகுதி இந்த ஒட்டகப் பண்ணை. நமது பஸ் நிலையங்களில் பஸ் நிற்கக் கட்டப்பட்டிருப்பதைப் போல உயரமான மண்டபங்கள். சில கான்கீர்ட் மேல்தளத்துடனும், சில மேற்கூரையே இல்லாமலும் சில மெல்லிய பிளாஸ்ட்டிக் வலைக் கூரைகளுடன் செயற்கை மழைபெய்யும் வசதிகளுடன் வரிசைகட்டி நிற்கிறது. அவற்றின் உள்ளேயும் வெளியேயும் ஒட்டகங்கள். இந்த வாரம் பிறந்த குட்டியிலிருந்து அதன் அப்பா, தாத்தா பெரிய தாத்தா பாட்டியென எல்லாச் சைஸ்களிலும் வயசுகளிலும். 
மொத்தம் எவ்வளவு இருக்கும்? சரியாகச் சொல்லத்தெரியாத அந்தத்தொழிலாளி 400க்கும் மேல்- நீங்கள் டாக்டரிடம் கேளுங்கள் என்கிறார். 
அந்தக் குட்டியைத் தொட்டுப்பார்க்கலாமா? படம் எடுக்கலாமா? 
“தொடலாம். ஆனால் சில சமயம் பொறுப்பு இல்லாமல் கடிக்கும்.” 
அன்றுதான் ஒட்டக குட்டி கடிக்கும், அதுவும் பொறுப்பு இல்லாமல் கடிக்கும் எனத் தெரிந்து கொண்டேன்
.அது பார்த்து மிரளும் டெலிபோட்டோ லென்ஸை நான் பொறுப்பாய் கழட்டிவைத்துவிட்டதனால் என்னுடன் நட்புடன் தான் இருந்தது. வளாகம் மிகப்பெரிது. இந்த ஒட்டகங்களில் சிலவற்றை அன்றைய அட்டவணைப் படி வாட்டர் கன்களை வைத்துக் குளிப்பாட்டுகிறார்கள். டாக்டர்கள்குழு செக் அப்செய்கிறார்கள். விசேஷமாகத் தயாரிக்கப்பட்ட உயரமான லாரிகளிலிருந்து உணவு கொடுக்கிறார்கள். எலக்டிரிக் டிரிம்மர்களில் அழகாக்கிவிடுகிறார்கள். இதைச்செய்ய ஒரு தனிப் பார்லர் மண்டபம்! ஒரு குட்டி படையே பணி செய்துகொண்டிருக்கிறது. 
எதற்கு இவ்வளவு ஒட்டகங்கள்? (பலகாலங்களாக இவை சுமைதூக்கிகளாக இருந்தன. இப்போது இவைகளே லாரிகளில்தான் பயணிக்கின்றன.) கேட்டதற்குச் சரியான விடை கிடைக்கவில்லை. உணவுக்கு ஓரளவு என்றும் பக்கத்து அரபு நாடுகளில் நடக்கும் ரேஸ்களில் பங்கேற்க, பல நாட்டு ராணுவங்களுக்கு விற்க எனப் பலவிதமான பதில்கள். ஒருபதில்- இதையும் டாக்டரிடம் கேளுங்கள். 
ஒட்டகங்களும் ஈச்சை மரமும் இங்கு பாரம்பரிய மதிப்பு மிக்க செல்வங்கள்.கார் ஓட்டும்போது விபத்தினால் ஒர் ஒட்டகமோ ஈச்சை மரமோ சேதமானால் பெரிய அளவில் அபராதம் தவிர. அந்த இடத்தில் வேறு அதே வயதுள்ள புதிய மரம் நடும் செலவையும் தர வேண்டும் என்பது தண்டனையாம். ஒர் உள்ளூர் நண்பர் இதைச் சொன்னபோது வலிமையான ஒட்டகம் உதைத்தால் நம் கார் அல்லவா சேதமாகும்? என்று நினைத்துக்கொண்டேன். அவரிடம் கேட்கவில்லை. 
ஒட்டகங்கள் உட்கார்ந்த நிலையில் தூங்கும் எனத்தெரியும். நல்ல ஷவர்பாத் எடுத்த நன்றாகச் சாப்பிட்டபின் நான்கு கால்களையும் நீட்டித் தூங்கிக்கொண்டிருந்த ஒட்டகங்களையும் பார்க்க முடிந்தது, ஒட்டகம் எப்படிக் கத்தும் என்பதைக் கேட்க விரும்பிய என்னை, ஒரு குட்டி கூடக் கத்தாமல் அன்று ஏமாற்றி விட்டது. மாலையில் நண்பர்கள் சந்திப்பு டின்னர் எனத் திட்டமிட்டிருந்ததால் கத்தும்வரை காத்திருக்கமுடியவில்லை. முதலில் பார்த்த ராஜாவீட்டு ஒட்டக குட்டியைத் தேடிப்போய் ஒரு பை சொல்லிவிட்டுத் திரும்பினோம் 
இம்முறை பயணங்களில் புதிய நண்பர்களைச் சந்திக்க பழக வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த மார்க்க்கு ஒரு தாங்கஸ் சொல்லியே ஆகணும். நம்மில் பலர் அடிக்கடி முகநூலில் சந்திக்கும் ஶ்ரீதரின் குடும்பத்தினரை நேரில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஓவியர்களும், சிற்பிகளும் மிகச் சீரியஸான, மூடியான மனிதர்கள், குறைவாகவே பேசுபவர்கள் என்று நான் நினைப்பதுண்டு. மாறாக இந்த ஓவியர் ஶ்ரீதர் சந்தோஷமாக நிறையப் பேசுகிறார். அவருக்கு நிறைய நண்பர்கள். நிறைய என்றால் அந்த “ய” வைப்பலமுறை போட வேண்டும். அவ்வளவு நண்பர்கள். அவர் ஒரு CA ஓரு மிகப்பெரிய விற்பனை நிறுவனத்தின் குழுமத்தின் GM. ஆனால் அது சற்றும் தொனிக்காதவகையில் பழுகுகிறார். திருமதி ஶ்ரீதர். கணனி பொறியாளர். உள்ளூர் கல்லூரி ஒன்றில் ஆசிரியாராகப் பணி. நட்பு பாராட்டுவதில் கணவரைத் தோற்கடிக்கிறார். செயற்கையான ஹலோவாக இல்லாமல் உள்ளன்போடு பேசுகிறார். அவர் எங்களுக்காகக் கொடுத்த விசேஷ ஸ்வீட்டின் ரெசிப்பை கேட்டுவாங்கிவந்த என் மனைவி அந்தக் கருப்பு அரிசியைத்தேடிக்கொண்டிருக்கிறார். 
பஹைரினில் 400க்குமேற்பட்ட CAகள் இருக்கிறார்கள். பலர் இந்தியர்கள், அதில் தமிழர்களுக்கு நல்ல மதிப்பு என்கிறார் ஶ்ரீதர். 20, 30 ஆண்டுகளுக்கு முன் வந்த CAகள் விதைத்த நம்பிக்கை விதைகள் இன்று விருட்சமாகியிருக்கிறது என்கிறார். என்னுள் -நம்ப தமிழன்- என்ற கர்வம் சற்று தலைதூக்கப்பார்த்தது. 
ஶ்ரீதர் அவருடைய CA வட்டத்தில் மட்டுமில்லாமல் பக்தி, இலக்கியம், ஓவியம் எனப் பல சர்க்யூட்டில் பிசியாக இருப்பவர். பஹரினிலிருக்கும் பக்தி குரூப்கள் பற்றித் தனி அத்தியாமே எழுதலாம். அவ்வளவு விஷயங்கள். நான் சந்தித்த அன்று ஒரு நண்பர் வீட்டில் திருச்சி சமயபுரம் மாரியம்மன் மலர் சொறிதல் விழாவிற்காக விமானத்தில் பெருமளவில் மலர்கள் வந்து சிறப்பாகக் கொண்டாடியதை திரு ஶ்ரீதர் சொன்னார். ஆண்டுத் தோறும் புத்தாண்டுவிழாவிற்கு விநாயகர் சிலையை ஏதாவது ஒரேமாதிரியான பொருட்களைகொண்டு புதிய பாணியில் வடிவமைத்துக் கொடுக்கும் பணியை இந்தத் தம்பதியினர் சந்தோஷமாகச் செய்துகொண்டிருக்கின்றனர் காபி குடிக்கும் பேப்பர் டம்பளர்களினால்/ பிஸ்கட்களினால் மட்டுமே விநாயகரை செய்யமுடியுமா? ஶ்ரீதர் செய்திருக்கிறார். (படம் அவர் ஆல்பத்திலிருந்து சுட்டது)
மோடியை இவருக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்பது அவரை வரைந்து தள்ளியிருப்பதிலிருந்து தெரிகிறது. சும்மா சொல்லக் கூடாது, தினமும் டிரிம் செய்துகொள்ளும் மோடியின் தாடிகூட அதே அளவில் படத்தில் இருக்கிறது. தன் படங்களை ஒரு அறையில் கேலரியாகவே வைத்திருக்கும் திரு ஶ்ரீதரின் வீட்டில் என்னைக் கவர்ந்தது அவர் மகன்களின் பரிசுகளின் கேலரிதான். அப்பப்பா.. நெருக்கியடித்துக்கொண்டிருக்கும் எத்தனை கப்புகள், மெடல்கள், ஷீல்ட்கள்! அவற்றை கண்ணாடிச்சிறையில் அடைக்காமல் தொட்டு எடுத்துப்பார்க்கும்படி வைத்திருக்கிறார்கள். மின்னும் தங்க பளபளப்பு திருமதி ஶ்ரீதரின் கவனமான பராமரிப்பைச் சொல்லுகிறது. தன் மகன்களைச் சான்றோர்கள் எனப் பலமுறை கேட்ட தாய், தந்தை இவர்கள். அப்பாவைப் போல இரண்டு மகன்களும் CA யாக ஆகிக்கொண்டிருக்கிறார்கள். 
நீண்ட நாள் பழகியவர்கள் என்ற உணர்வை, நல்ல நட்பாகத்தொடரும் என்ற நம்பிக்கையை முதல் சந்திப்பிலேயே ஏற்படுத்தியவர்கள் இந்தத் தம்பதியினர். 
இந்த சந்திப்புக்கு பின் மற்றொரு நண்பர், 20+ ஆண்டுகள் பஹரைனில் வாழ்ந்து தமிழகம் திரும்பும் வெங்கட் தம்பதியினருக்காக ஏற்பாடு செய்யபட்டிருந்த ஒரு டின்னருக்கு போனோம். இது பேங்க்கர்களின் சர்கிள். இதில் ஒரு விளையாட்டு என்னை கவர்ந்தது. அந்த தம்பதியினரைப்பற்றி வந்திருக்கும் நண்பர்கள் 4 வரி எழுதிக்கொடுக்க வேண்டும் ஆனால் அதில் எழுதியவரின் பெயர் இருக்ககூடாது. அதுபடிக்கப்பட்டவுடன் அந்த வார்த்தைகளிலிருந்து எழுதிய நண்பர் யார் என்பதை அந்த தம்பதியினர் சொல்ல வேண்டும். கவுண்ட்டவுனுக்குள் சரியாக சொல்லமுடியாது போனால் நண்பர் அந்த தம்பதியினருக்கு ஒரு விசேஷ பரிசு கொடுக்க வேண்டும்(அப்போது அவர்கள் எழுதியதை சரியாக நினைவில் வைத்துகொள்வார்களாம்) வெங்கட் தம்பதியினர் எல்லாப் பெயர்களையும் சரியாகச் சொல்லி கலக்கினார்கள்.
நம்மைப்பற்றிய பிம்பம் நம் நண்பர்களிடையே எப்படி இருக்கிறது, அதை எந்த அளவுக்கு நாம் புரிந்துகொண்டிருக்கிறோம் என்பதை பரிசோதித்துக்கொள்ளும் ஒரு விஷயமாக நான் இதைப் பார்த்தேன். 
முகநூலில் செலவழித்த நேரங்களினால்
நான் கற்றதும், பெற்ற நட்புகளும் இனிதாக இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.




செவ்வாய் கிரகத்திற்குச் செல்லப்போகும் முதல் பெண்.

செவ்வாய் கிரகத்திற்குச் செல்லப்போகும் முதல் பெண்.


மெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் லாஸேஞ்சல்நகருக்கு அருகிலிருக்கும்  பாஸடினா(Pasadena) பகுதியிலிருக்கிறது நாஸா (NASA)வின்  செவ்வாய் கிரக ஆராய்ச்சி நிலையம். 80களின் இறுதியிலிருந்தே தனது ஆய்வுகளை செய்து கொண்டிருக்குக்கும் இந்த நிறுவனம்   பூமியிலிருந்து 57 கோடி கீமீ தொலைவிலிருக்கும் செவ்வாய் கிரகத்தில் உயிரினம் வாழ தேவையான ஆக்ஸிஜன்.தண்ணீர் இருக்கிறதா என்பதை அறிந்தபின்னர்  அங்கு முதலில் மனிதனை அனுப்பும் மிகப்பெரிய கனவு திட்டத்துடன் இயங்குகிறது .  இப்போது 14000க்கு மேற்பட்டவர்கள் பணியாற்றும் இந்த நிலையத்தில் இதற்காக தொடர்ந்து முயற்சிகள், பரிசோதனைகள் செய்யபட்டுவருகிறது. , முதல் கட்டமாக செவ்வாய் கிரகத்தின் அருகில்  சென்று சுற்றி வந்து தகவல்கள் பெற  விண்வெளிகலங்கள் அனுப்பட்டன. அதன் மூலம் கிடைத்த அடிப்படை தகவல்களின் அடிப்படையில் நேரிடியாக செவ்வாய் கிரகத்தில் ஒரு விண்கலத்தை இறக்கி சோதனைகள் செய்ய முடிவு செய்து அதற்காகவே உருவாக்கபட்டது கியூரியாஸிட்டி”“ எனற விண்கலம்.   அதுவெற்றிகரமாக தரையிறங்கி செய்திகளை அனுப்பிகொண்டிருக்கிறது.  இதன் அடுத்த கட்டமாக அடுத்த 15 ஆண்டுகளுக்குள் மனிதனை அனுப்பும் திட்டங்களை தயாரித்துகொண்டிருக்கிறது.
அலீஸா கார்சன் என்ற  13 வயது பெண், ஏழாம் வகுப்பு மாணவி இப்போதே அந்த பயணத்துக்கான  பல தகுதிகளையும் பெற்று தன்னை தயாரித்துகொண்டிருக்கிறார்..  நாசா இந்த பெண்ணுக்கு நிறைய முன்னுரிமைகளை அளித்து ஊக்குவிக்கிறது. அனேகமாக செவ்வாயில் காலடி வைக்கபோகும் முதல் மனித இனம் இந்த பெண்ணாக இருக்கலாம் என அமெரிக்க பத்திரிகைகள் எழுதுகின்றன.  மத்திய அமெரிக்காவின்  லூயிசினா(Louisiana) மாநிலத்தில் வசிக்கிறார். அவரை போனில் தொடர்பு கொண்டபோது அவரது தந்தையுடனும் பேசும் வாய்ப்பும்கிடைத்தது. அலீஸா  புதியதலைமுறைக்காக  போனில் அளித்த  எக்ஸ்கூளிஸிவ் பேட்டி


ஒரு பள்ளிகுழந்தையின் சந்தோஷத்தோடு ஆனால் மிக தெளிவான ஆங்கிலத்தில்   ”என் உச்சரிப்பை புரிந்துகொள்வதில் கஷ்டம் ஏதுமில்லையே?”  என கேட்டு  பேசுகிறார். இந்தியாவைப்பற்றி அறிந்திருக்கிறார்.

செவ்வாய் கிரகத்தின் மீது உங்களுக்கு என் ஆர்வம் ஏற்பட்டது?
நான் 3 அல்லது 4 வயது குழந்தையாக இருந்தபோது, செவ்வாய் கிரகத்திற்கு போகும்மனிதர்கள் பற்றி ஒரு படம் பார்த்தேன். அப்பாவிடம் இதுவரை யாராவது இப்படி போயிருக்கிறார்களா? என்று கேட்டேன். அவர்  இதுவரை யாரும் போகவில்லை என்றும் அந்த கிரகத்தைபற்றியும் நிறைய சொல்லிகொடுத்தார். ஒரு மேப் கூட கொடுத்தார்.  தொடர்ந்து அதை பார்ர்துகொண்டே இருப்பேன்.  நிறைய படித்துதெரிந்து கொண்டேன். பள்ளியில் சேரும்போதே நான் விண்வெளி பயணியாகி செவ்வாய் கிரகத்திற்கு போக முடிவு செய்துவிட்டேன்.  தொடர்ந்து எல்லோரிடமும் செவ்வாய் கிரகத்தைப்பற்றி கேட்டுகொண்டே இருப்பேன் பள்ளியில் என் எல்லா பிராஜக்கெட்டும் செவ்வாய் கிரகம் பற்றிதான்.
உங்களுக்கு நாசாவில் பயிற்சி கொடுத்திருக்கிறார்களாமே?
நாஸாவில் ”பாஸ்போர்ட்” என்று ஒரு திட்டமிருக்கிறது. இது பள்ளி மாணவர்களுக்கானது. அமெரிக்காவில் நாஸா 14 இடங்களில் தகவல் மையங்களை அமைத்திருக்கிறது.  ஒவ்வொன்றும்  அவர்களின் ஒரு திட்டம் பற்றியது. அதில் படங்கள் சார்ட்கள் புத்தகங்கள் ஸ்லைடு காட்சிகள் எல்லாம் இருக்கும். அதை நன்கு பார்த்த பின் விரும்பினால் ஒரு பரீட்சை எழுதலாம். அப்படி எழுதி தேர்ந்தால்  பாஸ்போர்ட் மாதிரி  ஒரு புத்தகத்தில்  சீல் இட்டு கொடுப்பார்கள். நான் அந்த 14 நிலையங்களுக்கும் சென்று பரீட்சைகள் எழுதி என் பாஸ்போர்ட்டில் அந்த ஸீல்களை பெற்றேன்.  எல்லாபரிட்சைகளிலும் முதல் மார்க் வாங்கியிருகிறேன். இதை முதலில் செய்திருக்கும் ஒரே அமெரிக்க மாணவி நான் தான்
 இதனால் நாஸாவில் விஞ்ஞானிகளுக்கு மட்டுமே அனுமதியுள்ள இடத்திலிருந்து ஏவுகணைகள் ஏவப்படுவதை பார்க்க என்னை அனுமதிப்பார்கள்  ஏரோநாட்டிக்ஸ் முடித்தவர்களுக்கு நடத்தும் ஒரு பயிற்சி முகாமுக்கு என்னையும் அழைத்தார்கள். அதில் அவர்களோடு நானும்பயிற்சியை முடித்திருக்கிறேன் அந்த பரீட்சையையும் எழுதினேன்.,. அந்த பயிற்சியின்  ஒரு பகுதியாக சிறுவிமானம் ஓட்ட கற்று கொடுப்பார்கள். எனக்கு கார் டிரைவிங் லைசென்ஸே இல்லாதால், முதலில்  அதை வாங்கிகொண்டு மீண்டும் பயிற்சிக்கு வா என்று சொல்லியிருக்கிறார்கள்.  ஸ்டூடண்ட் கார் டிரைவிங் லைசன்ஸ் வாங்க நான் அடுத்த பெர்த்டே வரை காத்திருக்கவேண்டும்.
பள்ளி படிப்பையும் இவைகளையும் எப்படி செய்யமுடிகிறது?
 பள்ளியில் பாடங்கள் எனக்கு கஷ்டமாக இருப்பதில்லை. நல்ல கிரேடுகளை வாங்குகிறேன்.  நேரத்தை சமாளிப்பது தான் சவால்.சிலசமயம் மிக கஷ்டமாக இருக்கும். ஆனால் அப்பா நேரத்தை எப்படி செலவழிக்க வேண்டும் என சொல்லிகொடுத்திருக்கிறார். எதை முதலில் எதை பின்னால் செய்யவேண்டும் என்று எனக்கு 5ஆம் வகுப்பில் படிக்கும்போதே சொல்லி கொடுத்துவிட்டார்.   பள்ளிகூடத்தில் என் ஆசிரியர்களுக்கும் பிரண்ட்ஸ்களுக்கு என்னைப்பற்றி ரொம்ப பெருமை அதுவும் ஒரு வசதியாக இருக்கிறது.
வானியல்,ராக்கெட்சயின்ஸ் தவிர வேறு எதில் ஆர்வம்.?
பள்ளியில் புட்பால் ஆடுவேன், இபோது கூட  உங்கள் போனுக்கு முன்னால் ஒரு மாட்ச் ஆடிவிட்டுதான் வந்தேன். பியோனோ வாசிக்க கற்றிருக்கிறேன்.  டான்ஸும் தெரியும். எங்கள் பள்ளி ரோபோடிக்ஸ் பிரிவு ஒரு ரோபோவை உருவாக்குகிறது.  அந்த டீமில் நான் இருக்கிறேன் நான் ஒரு கேர்ல் ஸ்கெளட். நிறைய பேட்ஜ் வாங்கியிருக்கிறேன் பெர்ஸி ஜாக்ஸன் புத்தகங்கள் படிப்பேன்.
நீங்கள் மற்ற பள்ளிகளில் சிறு குழந்தைகளுக்காக பேசுகிறீர்களாமே? அது எதைப்பற்றி?
பள்ளிகளுக்கு போய் பேசுவதில்லை. ஸ்கைப்பில் அவர்களிடம் பேசுவேன். இதுவரை  நடந்த நாஸாவின் விண்வெளிபயணங்களைப்பற்றி சொல்வேன். கேள்விகள் கேட்பார்கள் பதில் சொல்லுவேன். தெரியாததை அப்பாவிடம் கேட்டு பின்னாளில் சொல்லுவேன். முக்கியமாக உங்களுக்கு பிடித்த பாடத்தை கண்டுபிடித்து படிக்கவும் என்ன நீங்கள் என்ன ஆகவேண்டும் என்பதை நீங்களேதான் தீர்மானிக்க வேண்டும். மற்றவர்கள் இல்லை என்று சொல்லுவேன். இரண்டு பள்ளிகளில் நான் பேசியது பிடித்திருந்ததால்.  மற்ற பள்ளிகள் இப்போது அழைக்கிறார்கள். எனக்கு பரிட்சைகள் இருக்கும்நாட்களில் நான் இதைச்செய்வதில்லை.
 செவ்வாய் கிரகம் போகவேண்டும் என்ற உங்கள் லட்சியம் நிறைவேறினால் அதன் பின் என்ன செய்வீர்கள்? ஒருவேலை போக முடியாமல் போனால் என்ன செய்யபோகிறீர்கள்?
அந்த லட்சியத்தை அடைய நான் இன்னும் நிறைய செய்யவேண்டும். முதலில் 17 வயது ஆனபின் பைலட் லைசன்ஸ், ஸ்கை டைவிங் லைசன்ஸ் எல்லாம் நல்ல கிரேடில் வாங்கவேண்டும் இங்கிலாந்திலிருக்கும்  கேம்பிர்ட்ஜ்ஜின் இண்டர்நேஷனல் ஸ்பேஸ் பல்கலைகழகத்தில் போஸ்ட்கிராஜ்வேட் படிப்பேன் பின்னர் அமெரிக்காவின் MIT யில் (மாசாசூஸ்ட் இன்ஸ்டீயூட் ஆப் டெக்னாலாஜி) டாக்ட்ரேட் வாங்க வேண்டும். இடையில் நாசா நடத்தும்  முகாம்களிலும், பரிட்சைகளிலும்  பங்கு கொண்டு தேர்வாவேன்.
ஒருவேளை நீங்கள் கேட்பதுபோல செவ்வாய் போகும் வாய்ப்பு நழுவினால்…  நாஸாவின் செவ்வாய் திட்டத்தில் மிஷின் கண்ட்ரோலில் ஒரு எஞ்னியாராக இருப்பேன். செவ்வாய் கிரகம் என் வாழ்க்கையோடு இணைந்து போன விஷயமாக செய்துகொள்வேன்.
 உங்கள் பெற்றோர்கள், நண்பர்கள் பற்றி சொல்லுங்கள்.

நான் குடும்பத்தின் ஒரே பெண்.  அன்பான தந்தையால் வளர்க்கபடுகிறேன். என் விருப்பங்களை கனவுகளை பெரிதும் மதித்து அதை அடைய உதவி செய்யும் அன்பான மனிதர் அவர்.  என் கனவுகளுக்கு உதவுவதை தன் லட்சியமாக கொண்டிருப்பவர்.சொந்தமாக டிவி சானல் வைத்திருக்கிறார் எனக்கு அதில் ஆர்வம் இல்லை. . நண்பர்கள் பற்றி கேட்கிறீர்கள்…ம்ம் பள்ளீயில் நிறைய, முகாம்களுக்கு போனதால் நாசாவில் சிலர், ஆனால் பெஸ்ட் பிரண்ட் என் வகுப்பு தோழி மேகி தான்.  இப்போது உங்களுடன் பேசுவதை ரிகார்ட் செய்துகொண்டிருகிறேன். இரவில் அவளுக்கு போட்டுகாட்டுவேன்.
இந்தியாவின் மங்கள்யாண் திட்டம் பற்றி தெரியுமா?
ஓ தெரியுமே!. அதுபற்றி பள்ளியில் ஒரு பேப்பர் தயாரித்து படித்திருக்கிறேன், உங்களுக்கு அனுப்புகிறேன்.
பேட்டி அளித்ததற்கு நன்றி அலீஸா. உங்கள் கனவுகள் வெற்றியாக  எங்களுடைய வாழ்த்துக்கள்
நன்றி சார். பேட்டி வெளியான உங்கள் பத்திரிகையை அனுப்புவீர்கள்தானே?
நிச்சியமாக.
நன்றி சார்.

(புதிய தலைமுறை இதழ் )

22/5/16

பயணம் - பொன்மாலைப்பொழுதுகள் 1



இன்று மாலை எங்களுர் ஹார்பருக்கு கூட்டிப் போகிறேன். உங்களுக்கு நிச்சியம் பிடிக்கும், ரெடியாக இருங்கள் என்று சொல்லிவிட்டு ஆபிஸுக்கு கிளம்பினார் நண்பர். நமக்குத் தெரிந்து சின்ன, சின்னக் குட்டி திட்டுகள் இணைந்த சின்னத் தீவு பஹ்ரைன். அதிலிருப்பது ஒரு குட்டி மீன் பிடி துறைமுகம்தான் அதில் சிறிய பயணிகள் படகுகள் கூட வர முடியாது. அப்படியிருக்கும்போது ஹார்பர் என்கிறாரரே?. என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
மாலையில் ஹாரன் ஒலியே கேட்காத அழகான அமைதியான சாலையில் அரைமணி நேர டிரைவ்க்கு பின் “இதுதான் நீங்கள் பார்க்கப் போகும் ஹார்பர்” என்று இரண்டு ராட்சத ஸைஸ் பூட்ஸ்களை எதிரும் புதிருமாக நிறுத்திவைத்திருப்பதைப் போல இரண்டு கட்டிடங்கள் முன்னால் நிறுத்தினார். அந்த 53 மாடி கட்டிடத்தின் பெயர் Bharin Financial Harbour உலகின் பல முக்கிய வங்கிகளின் அலுவலகங்கள் அந்தக் கட்டிடத்திலிருக்கின்றன. பல இரவு பகலாக வேலை செய்கின்றன.

இன்றைக்கு 300க்கும் மேற்பட்ட வெளிநாட்டு வங்கிகள் இயங்கும் இந்த வாமன தேசத்தில் இன்னும் அவர்கள் வருகை தொடர்ந்தவண்ணமிருக்கிறது.
அவர்களின் வசதிக்காகவே நகரின் நடுவே.நவீன வசதிகளுடன் அலுவலகம் சிறப்பான தொலைதொடர்பு வசதிகள் கொண்ட இந்தப் பிரமாண்ட 53 மாடி ஹார்பரை கட்டியிருக்கிறார்கள்.

.தொழில்வளம் எதுவுமில்லாத வெறும் ஈச்சை மர காடுகளாயிருக்கும் இந்தச் சின்னஞ்சிறு பாலைவனத்தீவில் இவ்வளவு வங்கிகள் என்னசெய்கின்றன?

உலக “ஆப் ஷோர் பேங்கிங்”(off shore banking) என்ற பேங்க்கிங் தொழிலின் முக்கிய கேந்திரம் இதுதான், , மற்றொரு நாட்டில் நல்ல வருமானம் தரும் தொழில்களில் முதலீடு செய்ய விரும்பும் நிறுவனங்களுக்கு, அதை அவர்கள் நாட்டிலிருந்து செய்யாமல் வேறு நாட்டிலிருந்து செய்ய உதவது இந்த வங்கிகளின் பணி. எளிதாகச் சொல்லவேண்டுமானால், ஒரு ஜப்பானிய நிறுவனம் மெக்கிஸிக்கோவில் அதிக லாபம் ஈட்டும் தொழிலில் முதலீடு செய்ய இங்குள்ள ஸ்விடன் நாட்டு வங்கிக்கிளை கடன் கொடுத்து உதவும்.
இதற்க்காக பல நாடுகளின் தொழில்களின் வளர்ச்சியை  பொருளாதாரத்தை கண்கொத்தி பாம்பாகக் கண்காணித்து தங்கள் வாடிக்கையாளர்களை செல்வந்தர்களாக்கிகொண்டிருக்கிரார்கள் இந்த வங்கியாளார்கள். ஒரே இரவில் கோடிகளை ஈட்டவும், இழக்கவும் செய்கிறார்கள். வருமானத்திற்கு வரி எதுவும் கிடையாது.லாபத்தை உலகின் எந்த மூலைக்கு மாற்றத் தடையேதுமில்லை. பல வங்கிகளில் இந்தியர்கள்.  அதில் கணிசமான அளவில் தமிழர்கள் பணியிலிருக்கிறார்கள். பெரிய பதவிகளில் இருக்கிறார்கள்
அழைத்தப் போன நண்பர் பஹ்ரைனின் மிகப்பெரிய வங்கியில் உயர் அதிகாரியாக இருப்பதால் அந்தக் கட்டிடத்திலிருக்கும் பல வங்கிகளுக்குள் எளிதாகச் சென்று அவர்கள் பணிகளைப் பார்க்கமுடிந்தது. புலிப்பாய்ச்சலில் வளர்ந்து கொண்டிருக்கும் இன்டர்நேஷனல் வங்கிபணிகளின் புதிய முகங்களைக் காணும் வாய்ப்பு கிடைத்தது.

கடந்த 10 ஆண்டுகளில் இந்த வங்கித்தொழில் பஹ்ரைன் நாட்டின் முகத்தையே மாற்றியிருக்கிறது. பிரமாண்டமான பல மாடிகட்டிடங்கள், அகன்ற சாலைகள் என வளர்ந்து கொண்டிருக்கிறது. நகரின் புதிய அடையாளமாகச் சில ஆண்டுகளுக்கு முன் எழுந்திருப்பது 240மீட்டர் உயரத்தில் வேர்ல்ட் டிரேட் செண்ட்டர்.(world trade center) இரட்டைக் கோபுரம். தொலைவிலிருந்து பார்க்கும்போது சாய்த்து நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் படகைப் போல இருக்கும் இதை அருகில் பார்க்கும்போது தான் அது ஒரு படகில் விரித்துக் கட்டப்பட்டிருக்கும் இரண்டு பாய்மரங்கள் என்ற வடிவம் புரிகிறது. 50 மாடிகளுடன் அமைக்கப் பட்டிருக்கும் இந்த இரண்டு கட்டிடத்திற்கு இடையில் பெரிய சுழலும் காற்றாடிகளை நிறுவி மின் சக்தி பெற ஒரு காற்றாலையை நிறுவியிருக்கிறார்கள்.(wind mills) எப்போழுதும் சுழன்று கொண்டிருக்கும் இதன் மூலம் பெறும் மின் சக்தி இந்தக் கட்டிடம் முழுவதுற்கும் போதுமானதாக இருக்கிறதாம். புத்திசாலி பணக்காரர்கள்.
.
.கட்டிடத்தில் பல பன்னாட்டு நிறுவனங்களின் அலுவலகங்கள். வங்கிகள். கோபுரத்தின் மேலேயிருந்து பார்க்கும்போது தேசம் முழுவதுமே தெரிகிறது. ஆம். இந்த நகரம்மட்டும் தான் தேசம். கீழ்த்தளத்தில் மிகப்பெரிய ஷாப்பிங் மால் நிறைய சர்வதேச பிராண்டுகளின் கடைகள். இங்குமட்டுமில்லை நகரின் அத்தனை பெரிய கட்டிடங்களிலும் கீழ்த் தளம் மால் தான். எல்லா மால்களிலும் பிராத்தனைக்கு  வசதியாகத் தனி இடம்.
இவற்றைத்தவிர பல லட்சம் மீட்டர் பரப்பளவில் பல மாடிகட்டிடங்களில் பல தனி மால்கள்.உலகின் எந்த முன்னணி பிராண்டும் தங்கள் படைப்பை முதலில் அறிமுகப்படுத்துமிடம் துபாய், மற்றும் பஹரைனின் மால்களிலிருக்கும் கடைகளில்தான். சில மிகப் பிரமாண்டமானவை. ஒரு மாலில் 5000 கார்களை நிறுத்த அடுக்கமாடி பார்க்கிங் நிறுவியிருக்கிறார்கள்.
சரி கடைகளில் யார் வாங்குகிறார்கள்? எந்த வித வரியும் இல்லாமல் சர்வதேச விலையைவிட மலிவாகக் கிடைப்பதால் உள்ளூர்கார்களைத்தவிர அண்டை நாடுகளிலிருந்து விடுமுறைகளில் வந்து வாங்கித்தள்ளுகிரார்கள். இதற்கு வசதியாகியிருப்பது பஹரைன் மன்னர் பெயரில் அமைக்கப்பட்டிருக்கும் கடல் வழி சாலை தான். குறிப்பிட்ட இடங்களில் மட்டும் கீழே படகுகள் கடந்து போக உயர்ந்தநிலையில் பாலமாக அமைக்கப்பட்டிருக்கும் கடல்வழி சாலையில் பலநாட்களில் நெருக்கடியாகிவிடுமளவிற்குப் போக்குவரத்து. அண்டை நாடுகளுக்குப் போக விஸா அவசியமானாலும் இங்கிருந்து தினசரி சவுதி அரேபியாவின் நகரங்களுக்கு போய்த் தினசரி வேலை செய்து திரும்புவர்களுமிருக்கிறார்கள்.
அனேகமாக எல்லா மால்களிலும் அல்லது அதன் அருகில் சினிமா தியட்டர்கள். 200 சீட்டுக்களுடன் 10 அல்லது தியட்டர் கும்பல். நிறைய வசதிகளுடன் அழகாக அமைத்திருக்கிறார்கள், தமிழ். மலையாளம், ஹிந்தி, பஞ்சாபி எனப் பல இந்திய மொழிகளில் புதுப்படங்கள் ரிலீசாகின்றன. இங்கு வியாழன் சில நிறுவனங்களுக்கு விடுமுறை என்பதால் புதுப்படங்கள் அன்றே ரீலீஸ் ஆகிறது. அதாவது தமிழ்நாட்டில் படம் வருமுன்னரே இங்கு பார்க்கிறார்கள். தமிழ் நாட்டில் படம் ரீலிஸாவதற்கு முன்னரே வியாழக்கிழமை இரவே முகநூலில் போஸ்மார்டம் ரிப்போர்ட் வந்துவிடும் ரகசியம் புரிந்தது. நான் போனபோது ஒரு லெபனான் படத்திற்கு நல்ல கூட்டம். புதுத் தமிழ் படம் தெறி காத்தாடிக்கொண்டிருந்தது.

ஒரே ஒரு நகரமாகவிருக்கும் இந்தத் தேசத்தை இப்போது நிறைய வசதிகளுடன் ஒரு சுற்றுலா மையமாகக்க துவங்கியிருக்கிறார்கள். உலகின் சிறந்த ஹோட்டல்கள் இங்கு வந்திருக்கின்றன. ஒரு ஹோட்டல் அருகிலிருக்கும் அமைதியான கடலை அலையடிக்கும், கடலாக, இயந்திரங்களின் உதவியால் உருவாக்கியிருக்கிறார்கள். அருகில் உள்ள குட்டி தீவுகளை ரிஸார்ட்டாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். ஃபார்முலா ஒன் என்ற சர்வதேச கார் ரேஸ்களை நடத்த மிக அதிக செலவில் டிராக்களை அமைத்து உலகம் முழுவதுமிருக்கும் கார் ரேஸ்பிரியர்களை ஈர்க்கிறார்கள்

பஹரைன் நகர் உருவாகும்போது நிறுவப்பட்ட “பாபல் பஹரைன்” என்ற நுழைவாயில் முகப்பை மாற்றாமல் போற்றி பாதுகாக்கும் பகுதியில்தான் நகரின்பிரதான கடை வீதிகள். நிறையக் குறுகிய தெருக்கள் நிறைய இந்திய முகங்கள். வீதியோர கடைகள். சன்னமான குரலில் சரளமான மலையாளம். நடிகர் மோகன்லால், மம்முட்டி படங்களுடன் முடிதிருத்துமிடத்திலிருந்து, குருவாயரப்பன் சன்னதியுடன் கோவிலாக மாற்றப்பட்டிருக்கும் 2 பெட்ரூம் பிளாட் வரை எங்கும் நிறைந்த கேரள வாசனை. காய்கறி மார்கெட்டைப்போலத் தங்க நகைகளுக்குத் தனியாக 300 கடைகளுடன் கோல்ட் சிட்டி. என்ற மார்க்கெட்.

அணிவகுத்து நிற்கும் சோல்ஜர்கள் போல நகரெங்கும் ஒரே மாதிரியான ஈச்சை மரங்களாக இருப்பதைப்பார்த்து, இங்கு வேறு மரங்களைப் பார்க்க முடியாதா? என்ற கேட்டவுடன் நண்பர் உங்களுக்கு ஒரு அதிசய மரத்தைக் காட்டுகிறேன் என அழைத்துப் போனார்
.
நகரின் வெளியே 10 மைல் தொலைவில் பார்த்த ஒரு மரம் உண்மையிலேயே ஆச்சரியமான விஷயம். சுற்றுவட்டாரத்தில் 20 மைலுக்கு எந்த நீர்வளம் இல்லாத அந்த மணல் பாலைவனத்தில் 400 ஆண்டுகளுக்கும் மேலாக உயிர் வாழும் ஒரு மரம். எங்கிருந்து தனக்கு வேண்டிய நீரை எடுத்துக்கொள்கிறது என்ற ஆச்சரியத்தைத் தரும் மரம். இந்த மரத்தின் அடிப் பாகம் ஆலமரம்போலவும் இலைகள் புளிய மர இலைகளைபோலவும் தன் கிளைகளைச் சிறு மாமரம்போல தாழ்வாகப் பரப்பி ஆராய்ச்சியாளர்களுக்கு சவால் விட்டுக்கொண்டு நிற்கிறது. மிக அரிதான தாவரமாக அறிவிக்கப்பட்டு வாழும் மரமாக (tree of life) பாதுகாக்கப்படுகிறது. வழிபாட்டுக்கு உரியதாக மதிக்கப்படும் இதில் சிலர் தங்கள் பெயரைச் செதுக்கியிருக்கிறார்கள். அவை தமிழ் எழுத்துகளாக இருந்தது நெஞ்சில் வலியை உண்டாக்கியது. மரம் வேலியால் சிறைப்படுத்த பட்டிருப்பதின் காரணமும் புரிந்தது,
.
இப்போது இங்கே கோடைக்காலம் துவங்க ஆரம்பித்திருப்பதால் நல்ல வெளிச்சத்துடன் இருந்த நீண்ட மாலை மெல்ல இரவாக கரைந்து கொன்டிருக்கிறது. நகருக்கு திரும்பிக்கொண்டிருக்கிறோம் இந்த வாழும் மரம்  எண்ணங்களை ஆக்ரமித்துக் கொண்டிருக்கிறது.  
 “இறைவன் படைப்பில் புரிந்துகொள்ளமுடியாத சில ஆச்சரியங்கள் தான் -அவன்மீது கொண்டுள்ள நம்பிக்கையை அதிகரிக்கச்செய்கிறது.” என்ற இஸ்ரேலிய பழமொழி நினைவிற்கு வந்ததது.

9/5/16

விருது

சென்னை ஸ்டெல்லாமாரீஸ் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் பேரா. முனைவர் உலகநாயகி பழனி அவர்களின் உறவுச்சுரங்கம் அமைப்பும் பாரதிய வித்தியா பவனும் இணைந்து திருமதி சிவசங்கரியின் படைப்புகள்பற்றிய ஒரு தொடர் நிகழ்ச்சியை மாதந்தோறும் நடத்துகிறார்கள். அதில் இம்மாதம் என்னைப் பேச அழைத்து விருது கொடுத்துக் கெளரவித்தார்கள்.தனது நீண்ட இலக்கிய பயணத்தில் திருமதிசிவசங்கரி  98 இலக்கியவாதிகள், 6 அரசியல் தலைவர்கள், இரண்டுபிரதமர்கள், குடியரசுத்தலைவர், திரைகலைஞர்கள், சதாரண மனிதர்கள் எனப் பலரை சந்தித்து பேட்டிகளாகவும் கட்டுரைகளாகவும் பதிவு செய்திருக்கிறார்.

அந்தச்சந்திப்புகளில்  வேறுபட்டசில  ஆளுமைகள்குறித்த          அவரதுபார்வைகளைப் பற்றிப் பேசினேன். அழைப்பை ஏற்று பல நண்பர்கள் வந்திருந்ததும். அரங்கம் (பெரிய அரங்கம்) நிறைந்திருந்தையும் விட அதிக மகிழ்ச்சி தந்த விஷயம். தேர்தல் அனல் அதிகமாகிக் கொண்டிருந்த அந்த நேரத்திலும்  திரு. இல. கணேசன் வாக்களித்தபடி விழாவிற்கு தலமையேற்று உரைநிகழ்த்தியது தான்
.
சில அரசியல்வாதிகள் அளித்த வாக்கைக் காப்பாற்றவும் செய்கிறார்கள்