3/9/16

இரும்பு பட்டாம்பூச்சி

இந்த மாத மங்கையர் மலரில் எழுதியிருப்பது  


 இரும்பு பட்டாம்பூச்சி 
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில், முதல்வர் திரு இபோபி சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. வடகிழக்கு மாநிலங்களில், சீனாவின் தூண்டுதலுடன், அவ்வப்போது, போராட்டங்கள் வெடித்து வந்ததால், பாதுகாப்பு பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இதற்காக, ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் அமல்படுத்தப்பட்டது. மணிப்பூர் உள்ளிட்ட 7 வடகிழக்கு மாநிலங்களில் அண்டை நாட்டவரின் ஊடுருவலைத் தடுக்கும் வகையில் அங்கு 1958-ஆம் ஆண்டு ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. இதனால் இந்த மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் முழுக்க முழுக்க பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டனர்.இந்தச் சட்டத்தின் மூலம் சந்தேகிக்கப்படும் நபரின் வீட்டுக்குள் நீதிமன்ற அனுமதி இல்லாமல் பாதுகாப்பு படையினர் சோதனையில் ஈடுபட முடியும். மேலும் சந்தேகப்படும் நபர்களை யும் கைது செய்ய முடியும். அவர்கள் நீதிமன்றத்துக்குச் செல்ல முடியாது. 
பாதுகாப்புப் படையினருக்கு கூடுதல் அதிகாரங்களை இச்சட்டம் வழங்குவதால் மனித உரிமைகள் அதிக அளவில் மீறப்படுவதாக அவ்வப்போது குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், கடந்த 2000-ஆம் ஆண்டு மணிப்பூரில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த 10 பேரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர். ஆனால், இதுதொடர்பாக பாதுகாப்புப்படையினர் முறையாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
இந்தச் சம்பவமே சமூக ஆர்வலரான இரோம் ஷர்மிளாவை போராட்டத்தில் இறங்கத் தூண்டியது. இதன் தொடர்ச்சியாக, மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி இரோம் ஷர்மிளா உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். ஆனால், அவரது கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்காததால் தனது காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என இரோம்ஷர்மிளா அறிவித்தார்.மணிப்பூர் மாநில உரிமைகளை மீட்கக் கோரி பொதுமக்களுடன் இணைந்து பல்வேறுகட்ட போராட்டங்களில் அவர் ஈடுபட்டார்.
இந்த ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை எதிர்த்து, 16 ஆண்டுக்காலம், இரோம் ஷர்மிளா உண்ணாவிரதம் இருந்தார். உணவு, தண்ணீர் குடிக்க மறுத்து வரும் அவரை, தற்கொலைக்கு முயன்றதாக அரசு கைது செய்தது. 2006ம் ஆண்டு, டில்லியில் உண்ணாவிரதம் இருந்தபோது, அவர் கைது செய்யப்பட்டார்; பின், விடுவிக்கப்பட்டார். எனினும், மணிப்பூர் திரும்பிய அவர், மீண்டும் கைதானார். உணவருந்தாததால் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் மீது தற்கொலைமுயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. எனினும், தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்த ஷர்மிளா, உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடவில்லை. 
 இம்பாலில் உள்ள, ஜவகர்லால் நேரு மருத்துவமனையில், வலுக்கட்டாயமாக அவருக்கு மூச்சு குழாய் வழியாக உணவு செலுத்தப்பட்டுவந்தது. . தொடர்ந்து, 16 ஆண்டுகளாகப் போராடி வரும்  இரும்பு பெண் என  வர்ணிக்கப்பட்ட அவர்  சிலவாரங்களுக்கு முன் இம்பால் நீதிமன்றத்தில் ஆஜரானபோது  “:ஆயுதப் படை சிறப்பு அதிகார சட்டத்தை, உண்ணாவிரதத்தால் மட்டுமே, முடிவுக்குக் கொண்டு வந்து விட முடியாது. எனவே, ஆகஸ்ட் 9ம் தேதியுடன், உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்கிறேன் என நீதிபதியிடம் தெரிவித்தார்.  
.உண்ணாவிரதப் போராட்டம் இருந்த வரை அவருக்கு இருந்த ஆதரவு அத்தனையும் அவரது அறிவிப்பு வந்தது  முதல் எதிர்ப்பாகிப் போனது. அவர் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுவதற்கு  மணிப்பூர் தனிநாடு கோரும் தீவிரவாத அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இரோம் உண்ணாவிரதத்தைக் கைவிடுவதாக அறிவித்த அதே நேரத்திலேயே அவருக்கு எதிரான போராட்டங்களும் வெடித்தன. 
தன்னுடைய  உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினார் இரோம் ஷர்மிளா. ஆனால் தாய், சகோதரர்கள் உட்பட உறவினர்கள் யாரும் அவரை வீட்டில் தங்க அனுமதிக்கவில்லை. இதற்குத் தீவிரவாதிகள் வந்து தாக்குதல் நடத்துவார்களோ என்ற அச்சமும் காரணமாக இருக்கலாம்.  இரோம் ஷர்மிளா சென்ற இடமெங்கும் எதிர்ப்பு போராட்டங்கள்தான் நடந்தன... பின்னர் காவல்துறை அவரை மருத்துவர் தியாம் சுரேஷ் என்பவர் வீட்டுக்கு அழைத்துச் செல்ல முயன்றனர். ஆனால் அங்கும் போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் வேறுவழியின்றி இரோம் ஷர்மிளா காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் ஒருவழியாக அவர் இதுவரை சிறைவாசம் அனுபவித்த 'மருத்துவமனை'யில் தங்க வைப்பது என  முடிவு செய்யப்பட்டது. இதனால் மீண்டும் மருத்துவமனைக்கே அவர் திரும்ப நேரிட்டதுதான் சோகம்!
மறுநாள்  பத்திரிகையாளர் கூட்டத்தில் “எனது உண்ணாவிரதத்தால் மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் ரத்து செய்யப்படும் என்ற நம்பிக்கை பொய்த்துவிட்டது. எனவே அரசியலில் இணைந்து அதன்மூலமாக எனது போராட்டத்தை தொடருவேன். வரும் 2017 சட்டப்பேரவைத் தேர்தலில் குரால் தொகுதியில் இருந்து சுயேச்சையாக போட்டியிடுவேன். இதில் வெற்றி பெற்று முதல்வரானால் அமலில் உள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை நிச்சயம் ரத்து செய்வேன்’’ என்று இரோம் ஷர்மிளா அறிவித்திருக்கிறார்..
எந்த  ஒரு அரசியல்கட்சியின் பின்னணியும் இல்லாமல் ஒரு மிக நீண்ட போரட்டத்தை நடத்திய இந்த இரும்பு பெண் அரசியலுக்கு வரப் போவதை நமது  அரசியல் வாதிகள் எப்படிப் பார்க்கிறார்கள்?



 திருமதி ஜோதிமணி (தேசிய காங்கிரஸ்)
நான் பெரிதும் மதிக்கும் ஓர் ஆளுமை இரோம் ஷர்மிளா. வன்முறைகள் அதிகரித்துக்கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்திலும் தன்னுடைய கோரிக்கையை வலியுறுத்தி அண்ணல் காட்டிய சத்தியாகிரஹ வழியில் 16 ஆண்டுகள் உண்ணாவிரதமிருந்து போராடியவர். தனது இளமையையே பலி கொடுத்த அவரது தியாகம் போற்றுதலுக்குரியது. அவர் அரசியலுக்கு வருவது என்பதை என் போன்ற பெண் அரசியல்வாதிகள் பெருமையாகப் பார்க்கும் விஷயம். அவருடைய சமூகப் பார்வையும் போராட்ட குணமும், துணிவும் அரசியலில் ஈடுபடுவோருக்கான தகுதிகள்

ஆனால் அவர் இந்த முடிவை அறிவித்தவுடன் அங்குள்ள போராளிகள் வரவேற்காமல் எதிர்ப்பு தெரிவித்திருப்பது எனக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் தந்த விஷயம். இது இம்மாதிரி போராட்டங்களை மேற்கொள்பவர்களின் மன உறுதியை குலையச் செய்யும் கவலையளிக்கும் விஷயம். தன் குறிக்கோளை நோக்கிச் செல்ல அவர் வேறுபாதையைத் தேர்ந்தெடுக்க முயலுவதைத் தவறு என்று சொல்லுவது எந்தவகையிலும் நியாயமாகாது. அதேபோல் அவர் தன் திருமணம் பற்றி அறிவித்திருப்பதும் எதிர்மறையாக விமர்சிக்கப்பட்டிருப்பது மிகவும் துரதிரஷட்டமானது. திருமணம் செய்தபெண் அரசியலுக்கு வரக் கூடாது என்று .பேசப்படுவது பெரும் துயரமான அதிர்ச்சி
வடகிழக்கு மாநிலங்களின் எங்கள் கட்சி பொறுப்பாளராக நான் இருந்திருக்கிறேன். அதனால் அங்குள்ள பிரச்சனைகளின் முழுத்தீவீரமும் அறிந்திருக்கிறேன். சுயேட்சையாக வெற்றி பெற்று முதல்வராக முடிந்தால் கூட அவரால் மட்டும் இந்தச் சட்டத்தை நீக்கிவிட முடியாது. அது முழுக்க முழுக்க மத்திய அரசின் கையில் இருக்கிறது. இப்போது மணிப்பூரில் இருக்கும் காங்கிரஸ் அரசும் இந்தச் சட்டத்தை நீடிக்க விரும்பவில்லை. ஆனால் நாட்டின் பாதுகாப்பை கருதி எல்லைப்பகுதியில் இப்படியொரு சட்டதேவையை ராணுவ அமைச்சகமும் உள்துறை அமைச்சகமும் உணர்ந்ததனால் அங்கு இது இருப்பதைத் தவிர்க்க முடியவில்லை. ஆனால் அது அத்துமீறி மக்களுக்கும் குறிப்பாகப் பெண்களும் பெருமளவில் பாதிக்கப்படும்போது அதுகுறித்து பெரிய அளவில் விவாதம் செய்யப்படவேண்டிய விஷயம் என்பதை ஏற்கிறேன்
--------
திரு அருணன். (இந்திய மார்க்ஸிஸ்ட் கட்சி)


   16 ஆண்டுகள் இப்படி உலகில் யாருமே செய்யத்துணியாத ஒரு உண்ணாநிலையை நிகழ்த்தித் தன் நோக்கத்தை உலகமறியச் செய்த இந்தப் பெண்மணியின் மகத்தான தியாகத்தை ஒரு அரசியல் வாதி என்ற முறையில் நான்  போற்றி பாராட்டுகிறேன். 28 வயதில் துவங்கி 44 வயது வரை இப்படித் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தவரை உலகம் இதுவரை சந்தித்தில்லை என் கார்டியன் பத்திரிகை எழுதியிருக்கிறது. இவர் செய்துவந்தது ஒரு தியாக வேள்வி. அதன் மூலம் தன் இலக்கை அடைவதில் வெற்றிபெற முடியவில்லை என்ற நிதர்சனத்தை உணர்ந்து தானே அதைக் கைவிடவும், ஆனாலும் தொடர்ந்து தன் லட்சியத்துக்காக வேறு வழியில் போராட துணிந்திருப்பது மிகவும் பாராட்டத்தக்கது.

7 சகோதரிகள் என்றழைக்கப்படும் இந்த மலைப்பகுதிகளில் அமுலாக்கியிருக்கும் வலிமைவாய்ந்த இந்தச் சட்டத்தின் மூலம் அந்தப் பகுதி மக்களுக்கு இந்திய ராணுவம் அளித்த வலி, வேதனை இந்த நாட்டில் பலருக்குத்தெரியாது. அன்னிய ஊடூஉருவலையும், தீவிரவாதிகளையும் தடுக்க உதவும் இந்த சட்டத்தைத் துஷ்பிரோயகம் செய்து அங்குள்ள மக்கள் குறிப்பாகப் பெண்கள் பாலியில் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்கள். இதைக்கண்டு கொதித்தெழுந்த இரோம் ஷர்மிளா   தன் போராட்டத்தைத் துவங்கினார். ஒரு கட்டத்தில் மக்கள் ஆதரவு திரண்டு பெண்கள் நிர்வாணமாக நின்று சாலைமறியல் செய்தார்கள். எந்த அளவு அவர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் இதைச் செய்திருப்பார்கள்?. அவர்களின் இந்த நிலையை, ராணுவத்தின் அத்துமீறலை நாட்டுமக்களின், உலகின் கவனத்துக்கு கொண்டுவந்தது இவரின் போராட்டம் தான். இன்று அவர்  உண்ணாவிரதத்தைக் கைவிட்டதை அங்குள்ள சிலர் எதிர்ப்பதாகச் செய்திகள் வருகின்றன. இது எந்தவகையிலும் நியாமில்லை. கொள்கைக்காக 16 ஆண்டுகள் போராடிய ஒரு போராளியை யாரும் வாழ்நாள் முழுவதும் தொடரும் படி நிர்ப்பந்திக்க முடியாது. அது தவறு.

இரோம் ஷர்மிளா  அரசியலில் களம் இறங்குவேன் என்ற அறிவிப்பு வரவேற்கப்படவேண்டிய ஒன்று. இம்மாதிரி தீவிர கொள்கைப்பிடிப்பு இருப்பவர்கள் இந்திய அரசியலுக்கு வரவேண்டியது இன்றைய சூழலுக்கு மிக அவசியம். ஆனால் சுயேட்சையாக நின்று முதல்வராகி சட்டத்தை நீக்குவேன் என்பதுதான்  சற்று புதிராக இருக்கிறது. மணிப்பூர் 60 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே கொண்ட சிறிய மாநிலம். அதில் 31 பேர் சுயேட்சை வேட்பாளராக வெற்றி பெற்றால் தான் இது முடியும். மிகச்சவாலான இது இன்றைய பெரும்பான்மை கட்சி ஜனநாயகத்தில் இந்தக் கனவு சாத்தியப்படும் என்று தோன்றவில்லை. சிலநாட்கள் முன் அவர் ஒரு புதிய கட்சி துவக்கி களம் காணுவார் என்ற செய்திகள் வந்தனஒருக்கால் அப்படி நிகழ்ந்தால் இவரது கனவு நனவாகும் வாய்ப்புகள் அதிகம்
-------
திருமதி வாசுகி ( தலைவி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்)


இதுநாள்  வரை ஒரே ஒரு கோரிக்கையை முன்வைத்து  தனிநபர்  சத்தியாகிரஹ போராட்டத்திற்குக் கிடைத்த மக்கள் ஆதரவை  உணர்ந்த அவர் தன் போராட்டவடிவை மாற்றி   அரசியல் தளத்திற்கு வர முடிவுசெய்திருப்பது  மிகவும்  வரவேற்கத்தக்க விஷயம்.
சுயேட்சை வேட்பாளராக  மக்கள் ஆதரவுடன் தேர்தலில் அவர் பெரிய வெற்றி பெறலாம். ஜெயிக்கும்கட்சி  அல்லது அணி அவரை அமைச்சராகக் கூட அறிவிக்கலாம். ஆனால் அவருடைய இலக்கை அடைய  அரசியலில் அவர் எடுக்கப்போகும் நிலைப்பாடு மிக முக்கியம். அவர் இத்தனை நாள் போராடிய. விஷயத்தை ஆதரிக்காத கட்சிகளுடன் இணைந்தாலோ அல்லது சுயேட்சையாக இருந்து அவர்களின் ஆதரவைப்பெற்றாலோ  இதுநாள் வரை அவர் போராடியது அர்த்தமில்லாமல் போய்விடும்,

மணிப்பூரைப் போன்ற சுழலில் இருக்கும் திரிபுராவிலும் இந்தச் சட்டம் இருக்கிறது. அங்கு இருக்கும் இடதுமுன்னணி கூட்டணி ஆட்சி அதை அவசியமான எல்லைப்பகுதிகளில் மட்டும் தேவையான அளவில் செயல்படுத்துகிறது. அதைப்போல ஒரு நிலை மணிப்பூரில் ஏற்பட இடது சாரிகளுடன் இணைந்து தோள்கொடுப்பதுதான் அவர் எடுக்க வேண்டிய அரசியல் நிலைப்பாடு என் நான் நினைக்கிறேன். இது பலவகையில் பலன் தரக்கூடிய முடிவாக இருக்கும் .
  மங்கையர் மலர்  அக் 16






30/8/16

அமெரிக்காவிலிருந்து குஜராத்திற்கு படம் எடுக்க வந்த மைதிலி




அமெரிக்காவிலிருந்து  குஜராத்திற்கு  படம் எடுக்க வந்த மைதிலி


2010ஆம் ஆண்டு தெஹல்கா இதழில் பணியாற்றிய பத்திரிகையாளரான ரானா அயூப் ஒரு துணிச்சலான பத்திரிகைபுலானய்வு பணியை தன் உயிரைப் பயணம் வைத்து மேற்கொண்டபெண்மணி.  2002 ஆம் ஆண்டு நடந்த குஜராத் படுகொலைகள், பின்னர் அதைத்தொடர்ந்து நடைபெற்ற போலி என்கவுண்டர்கள் குறித்து  அந்தக் காலகட்டத்தில்(2001-2010)  குஜராத் மாநிலத்தில் காவல்துறை மற்றும் உள்துறை அதிகாரிகளாகப் பணியாற்றியவர்கள் மனம் திறந்து பேசியதை ஒரு ஸ்டிங் ஆப்ரேஷன் மூலமாக ரகசியமாகப் பதிவு செய்தவர்.ஒரு சமூக படுகொலை நடைபெற அரசு இயதிரம் பயன்படுத்தப்பட்டதையும், முக்கிய அதிகாரிகள் அதற்கு மௌன சாட்சியாகவும் இருந்தை அவர்கள் வாக்குமூலமாகவே வெளிக்கொண்டுவந்திருப்பவர்.இவரது புலனாய்வு கட்டுரைகள் அம்பலப் படுத்திய தகவல்களினால்தான் 2010ஆம் ஆண்டு அமித்ஷா சிறைக்குச் சென்றார். தொடர்ந்து அவர் செய்த பணியில் தொகுத்த தகவல்களை  அரசியல் காரணங்களால் அவரது தெல்ஹா நிறுவனம் அவரது பதிவுகளை புத்தகமாக்க மறுத்துவிட்ட நிலையில் குஜராத் கோப்புகள்-(GUJARAT FILES)  என்ற பெயரில் தானே சொந்தமாக புத்தகமாகப் பதிப்பித்துள்ளார். நூல் தமிழில் மொழிபெயர்க்கப் பட்டு வெளியாகியிருக்கிறது. சமீபத்தில் அதன் வெளியீட்டு விழாவிற்காகச் சென்னை வந்திருந்தார். திருமதி ரான அயூப்
புத்தகத்திற்கு வரவேற்பு எப்படி இருக்கிறது.?
 5 லட்சம் வங்கியில் என்பெயரில்  கடன் வாங்கிப் பதிப்பித்த புத்தகத்தின் அறிமுக விழாவிற்கு டெல்லியில்  பல பத்திரிகைகள் உள்பட 400 பேர் வந்திருந்தனர். ஆனால் மறுநாள் தினசரிகளில் ஒருவரி செய்திகூட இல்லை. இப்போது சமூக வலைத்தளங்களில் புத்தகம் அதிகம்  பேசப்படுவதால் மெல்லச் சூடுபிடிக்கிறது. தமிழ் மொழிபெயர்ப்புக்குப் பலர் முன்பதிவு செய்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது.


எப்படி இந்த ஆப்ரேஷனைச் செய்தீர்கள்?
2002ல் மிகவும் கொடூரமான முறையில் நடைபெற்ற அரசியல் படுகொலைகள் காரணமாக ரத்த ஆறு ஓடிய சமயத்தில் பணியிலிருந்த பல நேர்மையான அதிகாரிகள் இந்த அக்கிரமங்களிலிருந்து ஒதுங்கியிருந்தது எனக்குத் தெரியும். தெல்ஹாவின் பத்திரிகையாளரான எனக்கு அவர்கள் ஏதேனும் ஒரு விதத்தில் உதவ முடியும் என்று அவர்கள் வீட்டு கதவைதட்டியபோதெல்லாம் அவை மூடப்பட்டன. உண்மையைக் கண்டறிய பத்திரிகையாளர் கடைப்பிடிக்கும் கடைசி வழி மாறுவேடம் அணிவது. நான் ஒரு பெண்,அதுவும் ஒரு  முஸ்லீம் பெண் என்பது நான் செய்யப் போகும் பணிக்கு  உதவாது என்பதால் ரானா அய்யுப் கான்பூரில் இருந்து வந்த மைதிலி தியாகி என்ற ஒரு காய்ஸ்தா(இந்துபிராமண) பெண்ணாக மாறவேண்டியிருந்தது. மேலும் நான் அமெரிக்கத் திரைப்பபடகல்லூரி ஒன்றின் மாணவி என்றும், குஜராத்தின் வளர்ச்சி மாடல் குறித்தும். உலகம் முழுவதும் வசிக்கும் இந்தியர்கள் மத்தியில் வளர்ந்துவரும் நரேந்திரமோடியின் செல்வாக்கு குறித்தும் ஒரு திரைப்படம் தயாரிப்பதற்காக வந்திருப்பதாகவும் சொல்லி பலரைச் சந்தித்தேன்.  என் உடை, பாவனை மொழி எல்லாவற்றையும் மாற்றிக்கொள்ள வேண்டியிருந்தது. குர்த்தாபட்டனில் பொருத்திய ரகசிய கேமிரா  கையில் அதை இயக்கும் வாட்ச், டைரியின் அட்டையில் இன்னொரு கேமிரா  எனப் பல ரகசிய ஏற்பாடுகளுடன் செய்ய வேண்டியிருந்தது..நம்பகத்தனமை அதிகரிக்க நிஜமாகவே மைக் என்ற ஒரு பிரெஞ்ச் மாணவனை உதவியாளானாகச் சேர்த்துக்கொண்டு எல்லா இடங்களுக்கும் போனேன்
பல முன்னாள் போலீஸ்  சீனியர் அதிகாரிகளை, உளவுத்துறை அதிகாரிகளைக்கூடச் சந்தித்து  சந்தித்திருக்கிறீர்கள். அவர்களுக்குச் சந்தேகம் வரவில்லியா?
நான்முதல் சந்திப்பிலேயே எல்லாம் பேசுவதில்லை. என்மீது நம்பிக்கை வந்து அவர்கள் என் படத்திற்கு உதவ முன்வரும்போதுதான் தொடரும் சந்திப்புகளில் தேவையான கேள்விகளை எழுப்புவேன். சிலமுறை மயிரிழையில் தெய்வாதீனமாக மாட்டாமல் தப்பியிருக்கிறேன். சந்தேகமும் வந்திருக்கிறது. நான் தங்கியிருந்த அறை நான் இல்லாதபோது ஒரு சோதனையிடப்பட்டிருந்தது.. ஆனால்  பாதுகாப்புடன் என் லேப்டாப்பிலிருந்து எல்லாவற்றிலும் நான் ஒரு   இந்து, அமெரிக்க பல்கலைக்கழக மாணவியின் அடையாளங்கள் மட்டுமே அறையிலிருக்கும்படி பார்த்துக்கொண்டிருந்தேன்

 இப்படி துணிச்சலான வேலைகளைசெய்தது உங்கள் குடும்பத்துக்கு தெரியுமா?
நன்றாக. முந்திய மணிப்பூர் பணியினால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த என்னிடம்  என் அம்மா தான் செர்ராபுதின்  கொலைச் செய்தியைக் காண்பித்து இதைப்பற்றி எழுதேன் என்று சொன்னார். நான் இந்தப் பணியிலிருந்தபோது மனம் தளரும்போதெல்லாம் அம்மாவிடம் போனில்பேசுவேன். அண்ணன். அப்பா எல்லோருக்கும் தெரியும்.
 இந்த ஆப்ரேஷனில் மோடியைச் சந்தித்திருக்கிறீர்களா?
ஆம் ஒரு முறை.  அவர் முதல்வராக இருந்தபோது கேமிரா, மைக் சகிதம் அவர் இல்லத்தில் சந்தித்திருக்கிறேன்..மெட்டல் டிடக்கரில் மாட்டிக்கொண்டால் அடுத்த நிமிடம் கைது என்ற பயத்துடன் தான் சென்றேன். ஒபாமா பற்றி நிறையப் பேசினார்.  மேஜையில் அவர் புத்தகங்கள்
என படத்துக்கு உதவ  அவர் பயணப் படங்கள் ஆடியோ டேப்கள் கொடுக்க அவர் உதவியாளர்களிடம் சொன்னார். கலவரம், படுகொலைகள் பற்றி அடுத்தடுத்த சந்திப்பில் பேச திட்டமிட்டிருந்தேன். அதற்குள் வேறு பல மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன.
உங்கள் புத்தகத்தில் சம்பந்தப்பட்டவர்களின் பெயர்கள்,  வகித்தபதவிகள் விபரங்களுடன் உரையாடல்களை வெளியிட்டிருக்கிறீர்கள். புத்தகம் வெளிவந்து  பார்த்தபின் யாராவது பேசினார்களா?
இதுவரை இல்லை, இனி நிகழலாம். உண்மைதகவல்தானே எனக் கண்டுகொள்ளாமலும் இருக்கலாம். ஆனால் இதுவரை இதில் பேசயிருப்பவர்கள் எவரும் சொன்னதை மறுக்கவில்லை.


 இந்தஆப்ரேஷனின் திருப்புமுனை என எதைச் சொல்வீர்கள்?
  பாதுகாப்பற்ற நீண்ட பயணத்தின் முடிவில்-  அனைத்தும் வெளிப்படும் நிலையில், முதல்வர் மோடி மீண்டும் அழைப்பார் என்ற நிலையில், என் டெல்லி அலுவலகம் என்னைத் திரும்ப அழைத்தது.  தலைமை ஆசிரியர்கள் “ மோடி பிரதமராகப் போகிறார். மிக வலுவான பிரதமராக இருப்பார்.  அவர் மீது கைவைத்தால் நாம் அனைவரும் தீர்த்துக் கட்டப்பட்டுவிடுவோம். பங்காரு லஷ்மணன் விஷயத்தில் நம் அலுவலகத்தை மூட வைத்தவர்கள் அவர்கள்.”  அதனால்  புலனாய்வை பிரசுரிக்க வேண்டாம் என முடிவெடுத்திருக்கிறோம் என்றனர்..
அதிகாரத்திலிருப்பவர்கள்  பேச்சைக்கேட்டு என் கடின உழைப்பில் பிறந்த  உண்மைக் கதை வெளிவராமலே கொல்லப்படும்போது என்னால் தாங்கிக் கொள்ள முடியவே இல்லை.
ஒரு நல்ல  புலனாய்வு இதழியலாளர் தான் உருவாக்கிடும் கதைகளிலிருந்து தன்னைக் கத்தரித்துக் கொண்டு நடைமுறையில் இயல்பாக இருக்கவேண்டும் என ஆசிரியர் சொன்னார். என்னால் அப்படியிருக்க முடியவில்லை.
இன்று அமித்ஷா. மோடி போன்றவர்கள் அதிகாரத்தில் இருக்கும் சமயத்தில் இந்தப் புத்தகத்தை வெளியிட்டிருக்கிறீர்கள். . உங்களுக்கு  அச்சமாக இல்லையா?
உண்மைச்சொன்னதற்காக சில சமயம் பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும். இன்று தேசத்துரோகம் என  எதையும் சொல்லிவிடலாம் என்ற நிலை எழுந்திருக்கிறது. . அந்த சட்டத்தின் கீழ் நான் கைது செய்யப்பட்ட செய்தி வந்தால் ஆச்சரியப்படாதீர்கள்.
                                             
4/09/16 கல்கியில் எழுதியது 

12/8/16

நெருப்பில் பிறந்த அழகி


கல்கி பவளவிழா மலரில் வெளியாகியிருக்கும் எனது பயணக் கட்டுரை





 
எங்கும் எரிந்த பிழம்புகளின் தழும்புகள். புகையின் கறைகளோடு நிற்கும் இடிந்த சுவர்கள். சாம்பல் குவியல்கள். நதிக்கரையிலிருந்த அந்த வணிக நகரம் முழுவதுமே எரிந்து நாசமாகியிருக்கிறது. தப்பித்து ஓடியவர்கள் மெல்லத் திரும்பித் தங்கள் உடமைகளை தேடிக்கொண்டிருக்கின்றனர். நகரின் நிர்வாகக் குழு நகரை மீண்டும் எழுப்பும் திட்டங்களை விவாதிக்க பாதிஎரிந்த நகர சபை கட்டிடத்தில் கூடியிருக்கிறார்கள்.
எதையும் சிறிய அளவில் திட்டமிடாதீர்கள்....அவற்றில் மனித மனங்களின் ஆற்றலைத் தூண்டும் எந்த மந்திர சக்தியும் இல்லை. மிகப் பிரம்மாண்டமான பெரிய திட்டங்கள் - உயர்ந்த இலக்குகள், - கடின உழைப்பு எனத் திட்டமிடுங்கள். அப்போதுதான் நமது நகரை உலகின் சிறந்த நகரங்களில் ஒன்றாக உருவாக்க முடியும்” 
இந்த அழிவில் கற்ற பாடங்களினால் ஒரு அழகான வலிமையான நகரை உருவாக்கத் திட்டமிடுவோம், புகழ்பெற்ற இந்த “make no little plans” வார்த்தைகளைச் “சொன்னவர். டேனியல் ஹட்ஸ்ன் பர்ன்பாம் என்ற நகர நிர்மாண கலைஞர். 1871ல் எரிந்து அழிந்துமீண்டு பினிக்ஸாக எழுந்த நகரம் தான் அமெரிக்காவில் உள்ள சிக்காகோ. இன்று அமெரிக்காவின் இரண்டாவது பெரிய நகரம்.

நிமிர்ந்து பார்த்துப் பார்த்தே கழுத்து வலிக்கும் அளவிற்கு வானளாவ உயர்ந்து நிற்கும் பலமாடி கண்ணாடி கட்டிடங்கள் -பளீரென பல மைல்களுக்குக் கடற்கரைபோல் விரிந்து நிற்கும் வெண்மணற்பரப்பானஏரிக்கரை- பசுஞ்சோலைகளாகப் பரவிக்கிடக்கும் பெரிய பூங்காக்கள் -நகரின் நடுவே நேர்த்தியான பராமரிப்புடன் அழகாக ஓடும் சிக்ககோ நதி- அதன் மீது பல இடங்களில் கம்பீரமாக நிற்கும் பாலங்கள்- இவற்றையெல்லாம் இன்றைய சிக்காகோ நகரில் பார்க்கும்போது 100 ஆண்டுகளுக்கு முன் திட்டமிட்ட டேனியல் ஹட்சனின் தொலைநோக்கு பார்வையும், தொடர்ந்து வந்தவர்களின் அற்புதமான நிர்மாண ஆற்றலும் நம்மைப் பிரமிப்பில் ஆழ்த்துகிறது.
கடந்த ஆண்டு வந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 40 கோடியையும் தாண்டிவிட்டது. இதில் அமெரிக்க உள் நாட்டுப் பயணிகளும் அடக்கம். நகரின் பாரம்பரியமும், பிரம்மாண்டமும் மட்டும் சுற்றாலா பயணிகளைக் கவர காரணமில்லை. சுற்றுலாத்துறையின் சிறப்பான சேவையும், நகரை நேசிக்கும் உள்ளுர் வாசிகளும் ஒரு முக்கிய காரணம். நிரந்தர உழியர்கள் தவிர நூற்றுக்கணக்கில் தன்னார்வ தொண்டர்கள் உதவுகிறார்கள்.

விடுமுறைக்காலங்களில் நகருக்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு முக்கிய இடங்களைப்பார்க்கப் பஸ் இலவசம். மூன்று வெவ்வேறு பாதைகளில் தொடர்ந்து சுற்றி சுற்றி ஓடிக்கொண்டே இருக்கும் இவற்றை டிராலி (படம்) என அழைக்கிறார்கள். செல்லும் பாதையை எளிதில் அடையாளம் கண்டுகொள்ள வெவ்வேறு வண்ணங்கள். அவை நிற்கும் இடங்களிலும் அதே வண்ணத்தில் போர்டுகள். பஸ்ஸில் டிரைவர், கண்டெக்டர், கைட் எல்லாம் ஒருவரே. கழுத்தில் தொங்கும் மைக்கில் பேசியபடியே ஒட்டுகிறார்.  தன் பணியை நேசிக்க தெரிந்தவர்களைத் தேர்ந்தெடுத்திற்கிறார்கள்! கதை சொல்லுகிறார். குழந்தைகளுடன் பாடுகிறார்.

நகரின் பெரும்பாலான சாலைகள், சோப்பு போட்டுக் கழுவிய வீட்டுத்தரையைப் போலப் படு சுத்தமாக இருக்கிறது. சாலைகள் மட்டுமில்லை, சுரங்கப்பாதைகள் பஸ் ஸ்டாப்களின் கண்ணாடிச் சுவர்கள் கூடப் பளீரென இருக்கிறது. சாலைகளின் நடுவில் பகுப்பு சுவர்களாக, தெரு விளக்குகளில் தொங்கும் கூடையாக, அரசு கட்டிடஜன்னல்களின் வெளி அலங்காரமாக எங்குப் பார்த்தாலும் நம்பைப்பார்த்துச் சிரிக்கும் வண்ண வண்ண மலர்கள். நகரில் போஸ்டர், பேனர்களுக்கு எங்கும் அனுமதியில்லை. பொது நிகழ்ச்சிகளின் விளம்பரங்களை நகர நிர்வாகமே அதற்காக நிறுவி யிருக்கும் அழகான கண்ணாடிப்பலகைகளில் மட்டும் செய்கிறது.விளம்பரங்கள் கலையுணர்ச்சியுடன்உருவாக்கபட்டிருக்கின்றன(6). செய்திதாட்கள் கடையில் விற்கப்படுவதில்லை காசு போட்டால் திறக்கக்கூடிய கண்ணாடி அலமாரிக்குள் அடுக்கபட்டிருப்பவைகளிலிருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். அருகிலேயே ரூபாய் நோட்டுக்கு சில்லறை தரும் இயந்திரம். பூட்டப்படாத அலமாரிகளில் இலவச இதழ்கள்.

நகரின் நடுவே சிக்காகோ நதி அமைதியாக அழகழான பெரிய சிறிய படகுகளுடன் ஓடிக்கொண்டிருக்கிறது..நதிக்கரையிலிருந்து சில நூறு அடிகளில் பலமான அஸ்திவாரங்களில் நெருக்கமாக எழும்பியிருக்கும் பல அடுக்கு மாடிகட்டிடங்கள். இந்த நதியின் கரையில் தரைதளத்திற்கும் கீழே பாதாளத்தில் நான்கு அடுக்குடனும் மேலே 14 மாடிகளுடனும் நகரின், முக்கிய ரயில் நிலையமான யூனியன் ஸ்டேஷன்(9) பரபரப்புடன் இயங்கிக்கொண்டிருப்பதைப் பார்க்கும் போது நதியின் பக்க சுவர்களை எவ்வளவு கவனமாகத் திட்டமிட்டு உருவாக்கியிருக்க வேண்டும்? என்ற வியப்பு தோன்றுகிறது. நதியின் நடுவே நகரவீதிகளையிணைக்கும் 52 பாலங்கள். அவைகளி¢ல் 38 நமது பாம்பன் பாலத்தைப் போலப் பெரிய படகுகள் வரும்போது திறந்து வழிவிடக்கூடியது. அவை மூடிச் சாலையாக யிருக்கும் இரும்பு பாலத்தில் பஸ்கள் போகும்போது அருகில் நாம் போகும் நடைபாதை கூட அதிர்கிறது. ஆனால் உள்ளுர் வாசிகள் இந்தப் பாலங்களில் மட்டுமில்லை, நகரின் பாதி சாலைகள் ஒருவழிப்பாதையாக இருப்பதால், எல்லாயிடங்களிலும் மிக வேகமாகத்தான் கார் ஓட்டுகிறார்கள்.

முழுவதும் மரக்கட்டங்களினால் உருவாக்கப்பட்டிருந்த நகரம் எரிந்துபோனதால் புதிய சிக்காகோ நகரம் ஸ்டில் சிமிண்ட் பயன் படுத்தி நிர்மாணிக்கப்பட்டது. உலகின் முதல் அடுக்குமாடி கட்டிடம் 1885ல் (10மாடிகள் !) எழுந்தது இங்குதான். தொடர்ந்த சில ஆண்டுகளில் பல பிரம்மாண்ட கட்டடங்கள் எழுந்தன. இதனால் நவீன கட்டிடகலையின் பிறப்பிடமாக சிக்ககோ கருதப்படுகிறது. நகரம் இன்று நூற்றுக்கணக்கான ---- அடுக்குமாடிக்கட்டிடங்களால் நிரம்பி வழிந்தாலும், இந்தக் கான்கீரிட் காட்டின் நடுவே ஆங்காங்கே அழகான ஆரஞ்சு வண்ண மலர்களாக பாதுகாக்கப்பட்ட பாரம்பரியம் மிக்க பழைய கட்டிடங்கள்.அவற்றின் முன்னே சரித்திரம் சொல்லும் சிலைகள். அப்படியொரு கட்டிடம் தான் ஆர்ட் இன்ஸ்ட்டியூட் ஆப்
சிக்காகோ.பெரிய இரண்டு சிங்கங்கள் கம்பீரமாக நிற்கும் இந்த ஓவிய கூடத்தைப் பார்க்க வேண்டும் என்பது உலகில் உள்ள ஒவ்வொரு ஓவியனின் கனவாகியிருக்கும்.. 1879ல் துவங்கிய இதில் உலகின் பல அரிய ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.  இந்த கண்காட்சியில் எரியும் சிகாகோவின் படத்தைப் பார்த்தபின் அந்த விபத்தின் விபரீதம் புரிந்தது.
இது தான்  இளம்துறவி விவேகானந்தர் சொற்பொழிவாற்றிய இடம் என்பதால் அதைப் பற்றி விசாரித்தேன். அதிகம் பேர் அறிந்திராத இந்த விஷயத்தைக் கேட்டதும் அந்த காலரியில் பகுதி நேரத் தொண்டராக பணியாற்றி வரும் ஒரு 82 வயது மாது-முன்னாள் பள்ளி ஆசிரியை திருமதி AlienEva இன்ஸ்ட்ட்யூட் அலுவகத்தில் தேடி1893ல் அந்தக் கட்டிடத்தின் வரைபடத்துடன் அன்று விவேகானந்தர் பேசிய இடம் இன்று புதிப்பிக்கபட்டு ஃல்லர்டன் அரங்கமாக வடிவெடுத்திருப்பதையும், அவர் பேசிய இடம் தான் இன்றைய பேச்சாளர்கள் நிற்கும் மேடை என்பதையும் சொல்லும் குறிப்பையும் தந்தார். அந்த அரங்கத்தின் பக்க சுவரில் இதைச்சொல்லும் பட்டயம் பதிக்கப்பட்டிருக்கிறது.
தேடிப்போன அந்த அரங்கம் பூட்டப்பட்டிருந்ததால் மீண்டும் தொடர்புகொண்டவுடன் திறந்து காட்ட ஏற்பாடு செய்தார். 120 ஆண்டுகளுக்கு முன் விவேகானந்தர் பேசிய இடத்தில் இன்று நிற்கிறோம் என்ற எண்ணம் எழுந்த அந்தக்கணம் உடலில் சிலிர்ப்பை எழுப்பியது நிஜம்.
அருகிலிருக்கும் தெருவிற்கு அவர் பெயர் சூட்டியிருக்கிறார்கள் 


கான்கீர்ட் கட்டிடங்கள் மட்டுமில்லை. பல விஷயங்களில் “முதல்” என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது இந்த நகரம். உலகின் முதல் தொழிளார் போராட்டம், உலகத்தொழிலாளிகளே ஒன்று படுங்கள் என்ற கோஷம் பிறந்ததும் இங்குதான். இன்று உலகின் பல நகரங்களில் ஒட்டும் மெட்ரோ பிறந்ததும் இங்கேதான்.

வாகனங்கள் செல்லும் குறுகிய சாலைகளில் இரும்புத்தூண்களை எழுப்பி அதன்மீது ஒடிய ரயில் இன்றும் ஓடுகிறது. லூப் என அழைக்கப்படும் அது. பயணம் செய்யும்போது. உயரமான பல மாடிக் கட்டிடங்களின் ஜன்னல்களின்  தொட்டுவிடும் தூரத்தில் இருப்பது ஒரு வினோதமான அனுபவம்
.

சிக்காகோவின் கட்டிடகலையின் அழகைக் காட்டுவதற்காகவே ஓர் படகுப் பயணத்தை நடத்துகிறார்கள் “சிக்ககோ ஆர்கிடெக்டெக்ரல் பவுண்டேஷன்” சங்கத்தினர். “சிக்காகோ'ஸ் பர்ஸ்ட் லேடி” என அழைக்கப்படும் அந்தச் சொகுசு கப்பலின் கூரையில்லாத மேல் தளத்தில் எல்லாப் பக்கங்களிலும் திரும்பும் வசதிகொண்ட நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறோம். படகின் மோட்டார் ஓசை அடங்கி நிதானமாகப் பயணிக்கிறது. மெல்லிய இசையுடன் வர்ணனை.

உங்களது வலது புறம் தெரிவது 1925ல் “நாட்ர்டாம் சர்ச் பாணியில் நிறுவப்பட்ட டிரிபியூன் டவர்ஸ். சிக்ககோ டிரிபியூன் செய்தித்தாளின் அலுவலகம். உலகின் அழகான கட்டிடத்திற்கான வடிவத்திற்கு போட்டிநடத்தி தேர்ந்தெடுத்த வடிவம். இந்தக் கட்டிடத்தின் உட்புற சுவரில் தாஜ்மஹல், (!) சீன நெடுஞ்சுவர் போன்ற உலகின் பல பிரபலமான கட்டிடங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட கற்கள் பதிக்பட்டிருக்கின்றன -இடது புறம் நீங்கள் பார்ப்பது அவர்களின் புதிய 64 மாடி கட்டிடம். .” இப்படி 45 நிமிட பயணத்தை நேரம் போவது தெரியாமல் சுவாரஸ்யமாக்குகிறார்கள்.
புகழ் பெற்ற உலகின் உயர்ந்த 110 மாடிக்கட்டிடமான ஸீயர்ஸ் கட்டிடத்தின் அருகில் நெருங்கியதும் படகிலிருந்து இறங்கி கட்டிடத்தின் உள்ளே சென்று மேலேயிருந்து பார்த்துவிட்டு பயணத்தைத் தொடர அழைக்கிறார்கள்

கட்டிடத்தின் மேல் மாடியிலிருக்கும் தொலைநோக்கியில் 4 அண்டைமாநிலங்கள் தெளிவாகதெரிகிறது. பார்ப்பது கடல் இல்லை பெரிய ஏரி என்பதையும். 5 ஏரிகள் சுழந்திருக்கும் காட்சியை அந்த உயரத்தில் ஏரிகளின் நீரின் வண்ண வேறுபாடுகளுடன் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது.

ஸியர்ஸ் போலவே மற்றொரு மிக உயரமான கட்டிடம் ஜான் ஹான்காக் டவர்.(15) ஜான் ஹான்காக் அமெரிக்க சுதந்திர பிரகடனத்தில் கையெழுத்திட்டவர்களில் ஒருவர். அமெரிக்காவின் முதல் இன்ஷுரன்ஸ் கம்பெனியைத் தனது பெயராலே நிறுவியவர். 46000டன் ஸ்டீலில் எழும்பியிருக்கும் இந்த 1500 அடி உயர,100மாடி கட்டிடத்தில்தான் உலகின் அதி வேகமான லிப்ட்..2 நிமிடத்தில் 94வது மாடி வந்துவிட்டது.அங்கேயிருந்து பார்க்கும்பொழுது மிச்சிகன்ஏரியின் படகுகள் எறும்புகளாகத் தெரிகிறது. இதன் 44வது மாடிக்குமேல் குடியிருப்புகள். வசிப்பவர்களின், ஜன்னலுக்கு கீழே மேகம் மிதந்து செல்வதால், வெளியில் கிளம்பும்போது கீழே செயூரிட்டிக்கு போன் செய்து தெருவில் மழையா வெயிலா என்பதைத் தெரிந்துகொள்கிறார்கள். 
படகில் போகும்போது சுட்டு நிறுத்திவைத்த சோளக்கதிர் கொண்டைகளின் முத்துக்கள் போல வட்ட வட்ட பால்கனிகளுடன் இரண்டு கட்டிடங்கள். முதல் 10 தளத்தில் கார்கள் நிறுத்தப்பட்டிருந்த விசாரித்தில் கட்டிடத்தின் பெயர் மெரீனா. 40 ஆண்டுகள் ஆகிவிட்டதால் விரைவில் இடித்துவிட்டு வேறு கட்டுவார்களாம்.
பழைய பல மாடிக்கட்டிடங்களைத்தான் இடிக்கத் திட்டமிடுகிறார்களே தவிர நகரின் பாரம்பரியத்தை பறைசாற்றும் கட்டிடங்களை
இளம்ஆரஞ்சுவண்ணமிட்டு அருமையாகப் பராமரிக்கிறார்கள். அவற்றில் ஒன்று சிக்காகோ மத்திய நூலகம். அலங்கார வளைவுகளில் தொங்கும் அழகிய லாந்தர் விளக்குகள் தங்க (ஜொலிக்கிறது) வண்ண கதவுகள் (19,20) என முன் புறமும், பளபளக்கும் கண்ணாடி சுவர்களுடன் பல மாடிகட்டிடமாக பின் பகுதியுமாக நிற்கும், இங்கே உலகின் பல மொழிகளில் புத்தகங்களிருக்கிறது. தமிழில் திருக்குறளும் பைபிளும்.. அரசின் முலமாகவோ அல்லது தூதரகத்தின் முலமாகவோ அனுப்பினால் தான் புதிய புத்தகங்களைப்பெற்றுக் கொள்வார்களாம்.நூலகத்தின் உச்சி மாடத்தின் முனையில் ஆந்தை சிற்பம். ஆந்தை அறிவு ஜிவிகளின் அடையாளமாம்.!

.
நகரின் நடுவே தியட்டர் டிஸ்டிரிக்ட் என்ற பகுதியில் நிறைய அரங்கங்கள். இந்தப் பகுதியில் உருவான முதல் தியட்டர். “தி சிக்காகோ தியட்டர் “. பாலிஷ் பளபளக்கும் மரக் கைப்பிடிகளுடன் வளைந்து செல்லும், கார்பெட் பதித்த அகலமான மாடிப் படிகள். சுவரெங்கும் கலைநயம் மிளிரும் ஓவியங்கள் நடுவில் தொங்கும் பெரிய சர விளக்கு.தங்கமாக மின்னும் கைப்பிடிகளுடன் வெல்வெட் நாற்காலிகள், பொன் வண்ணத்தில் ஓவியங்கள் (தேரில் சூரிய பகவான் ! ) சரவிளக்குகள் அலங்கரிக்கும் ஆடம்பரமான மேடையென ஒரு கிரேக்க அரண்மனைப் போல இருக்கும் இது ஒரு சினிமா, நாடகம்,இசை நிகழ்ச்சிகள் நடைபெறும் அரங்கம். 1921ல் துவங்கிய இது காலத்தின் தேவைக்கேற்ப செய்யப்பட்ட மாற்றங்களுடன் தொடர்ந்து இயங்கிவருகிறது. . 3600 பேர் அமரக்கூடிய இந்த அரங்கத்தின் கடைசிக்காலரி 6 வது மாடியில்.

.1985ல் நஷ்டமதிகரித்ததனால் தியட்டர் மூடப்பட்டு விற்கபட்டுவிட்டது. மற்றொரு அடுக்குமாடி கட்டிடம் எழ வசதியாக இடிக்கப்படத் தயாரானது. வெகுண்டு எழுந்த கலை ஆர்வலர்கள் நீதி மன்றத்தில் போராடி காப்பாற்றியிருக்கிறார்கள். பராம்பரிய கட்டிடங்களைப் பாதுகாக்க சட்ட பிறக்க இந்த நிகழ்ச்சியும் ஒரு காரணமாகிறது. புதிபிக்கபட்டிருக்கும் இன்றைக்கு மிக அதி தொழில் நுட்ப வசதியுடன் இயங்குகிறது.


.சர்ச்சைகளை, சரித்திரங்களை உருவாக்கும் சிக்ககோ நகரின் சிற்பங்களில் இன்று, உலகம் முழுவதும் சிற்பகலைஞர்களால் பேசப்படுவது மில்லியனம் பார்க்கில் பிரமாண்டமாக நிற்கும் “க்ளவுட் கேட்” (cloud gate) என்ற படைப்புதான். 2004 ஆண்டு நகரின் நூற்றாண்டு விழாவின் நினைவாக ஒரு பெரிய சதுக்கத்தை உருவாக்கியிருக்கிறார்கள். கிரேக்க பாணி நுழை வாயிலுடன் ஒரு பூங்கா, பரந்த புல்வெளி அதன்பின்னே ஒரு ரோஜாத் தோட்டம் என விரியும் இந்த வாளாகத்தின் ஒரு பகுதியில் பிரம்மாண்டமாக நிற்கிறது இந்தப் படைப்பு.

முழுவதும் பளபளக்கும் ஸ்டியன்லெஸ்ஸ்டிலால் ஆன இந்த படைப்புக்கு சிற்பி தந்த பெயர் “மேகங்களின் நூழை வாயில்”. ஆனால் ஒரு இது ஒரு பீன்ஸ் விதையைப்போலிருப்பதால் மக்கள் செல்லமாக பீன்ஸ் என்றே அழைக்கிறார்கள். 39 அடி உயரமும் 110 டன் எடையும் கொண்ட இதை வடிவமைத்தவர் அனிஷ் கபூர் என்ற இந்தியஓவிய சிற்ப கலைஞர்.. லண்டனில் வாழும் இந்த ஒவியரின் படைப்புகள் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் பிரபலமானவை. இந்து மதகோட்பாடுகளை தனது ஒவியங்களின் மூலமாக திணிக்க முயல்பவர் என்ற சர்சையிலும் சிக்கியவர் என்பதால் இந்தபடைப்பும் விமர்சனங்களுக்குத் தப்பவில்லை. நகரும் மேகங்களின் பின்னணியில் அருகில் உள்ள வானாளாவிய கட்டிடங்கள் தங்களை அழகு பார்த்துக்கொண்டிருக்கும் இந்த பளபளக்கும் ராட்சதபடைப்புக்கு முன் நாம் நிற்கும்போது இந்த பெரிய உலகத்தின் முன் நாம் எத்தனை சிறியவர்கள் என்ற எண்ணம் எழுகிறது.
மிகப் பிரம்மாண்டமான இதன் வழியே எளிதில் 50பேர் நுழைந்து வெளிவரலாம். அப்படி நுழையும்போது நமது உருவத்தையே தலைகிழாக தொங்குவதைப் போல் பார்ப்பது ஒரு வினோதமான அனுபவம்
.
அதே வாளாகத்தில் ஒரு 60 அடி உயர சுவற்றில், சுவர்முழுவதும் நிறைந்த ஒரு முகம் 5 நிடத்திற்கு ஒரு முறை மாறிக் கொண்டேயிருக்கிறது.ஓவ்வொரு முறையும் அந்த உருவத்தின் வாயிலிருந்து நீர் கொட்டுகிறது.ஏதோ விளம்பரம் என்று நினைக்கத் தோன்றும் இதுவும் டிஜிட்டல் சிற்பகலையின் ஒரு வகையாக கருதப்படும் டிஜிட்டல் நீருற்று சிற்பம். பல மில்லியன் டாலர் செலவில் உருவாக்கபட்டிருக்கிறது. படங்கள் மாறிக்கொண்டேயிருக்கிறது. கண்களைச்சிமிட்டிய சில வினாடிகளில் வாயிலிருந்து நீர் கொட்டுகிறது. தோன்றும் முகங்கள் அனைத்தும் சிக்காகோ வாசிகள். அவர்கள் அறியாமல் எடுக்கப்பட்ட படங்கள்.இன்று தங்கள் முகம் வருமோ என்ற எதிர்பார்ப்புடன் உள்ளூர் வாசிகளும், நீரில் நனைந்து விளையாடக் குழந்தைகளும், ஒரு பெரிய படம் பலதுளி டிஜிட்டல் பட சதுரங்களாக படைக்கப்பட்டு இணைக்கபட்டிருக்கும். இதில் அடுத்த படம் மாறும் செய்நேர்த்தியை காண மக்கள் காத்திருக்கின்றனர். சிலைகள் சிற்பங்கள் என்றால் அசையாது நிற்கும் அழகான படைப்புகளையே பார்த்துப் பார்த்து பழகிவிட்ட நமக்கு இவைகளையெல்லாம் சிற்பங்கள் என ஏற்று கொள்ள சற்று கஷ்டமாகத்தானிருக்கிறது.

டேனியல் ஹட்ஸ்ன் கனவு கண்டதைப்போலச் சிக்காகோவில் எல்லாமே பிரம்மாண்டமாகத்தான்உருவாகி உலகின் முக்கிய நகரமாகி, விட்டது.இன்று இன்னமும் பிரம்மாண்டமாகிக்கொண்டே போகிறது. ஓவ்வொரு ஆண்டும் நகரம் உருமாறிக் கொண்டே யிருக்கிறது.

சிக்காகோவைப்பற்றிப் பல ஆண்டுகளுக்கு முன் மார்க் ட்வைன் சொன்னவை இது:

அவள் எப்போதுமே அழகாக, புதுமையாகயிருப்பவள்.

நீங்கள் கடந்த முறை பார்த்ததைப் போல
அடுத்தமுறை இருக்கமாட்டாள்
இன்னும் அழகாகியிருப்பாள். .

எவ்வளவு உண்மையான வாசகங்கள்?

26/7/16

நாலு நூற்றாண்டுகளாக நடக்கும் நாடகங்கள்



உலகம் போற்றும் நாடகஆசிரியர் ஷேக்ஸ்பியரின் 400வது நினைவு நாள் கடந்த மாதம் இங்கிலாந்தில் தேசிய விழாவாக நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. ஷேக்ஸ்பியர் பிறந்த கிராமத்தில் அந்த விழாக்கள் துவங்கியது. அதைப் பார்ப்பதற்காகவே அங்குச் சென்ற திருமதி சந்திரா திலீப் தனது அனுபவங்களைப் வாசகர்களிடம் பகிர்ந்து கொள்கிறார்.

சிறுவயதில், பள்ளிக்காலத்திலிருந்தே நான் ஷேக்ஸ்பியரின் நாடகங்களை படித்துப் பிரமித்தவள் நான். தொடர்ந்து கல்லூரி, வங்கி வேலை என்று வாழ்க்கை தொடர்ந்த போதும் ஷேக்ஸ்பியரின் எழுத்துகளைத் தேடி தேடிப் படித்தேன். அவர் பிறந்த வீட்டையும் வாழ்ந்த ஊரையும் பார்க்க வேண்டும் என்பது என் கனவுகளில் ஒன்று. சில முறை வெளிநாடுகள் சென்றிருந்தாலும் இந்த வாய்ப்பு கிட்டவில்லை. ஷேக்ஸ்பியரின் 400 வது நினைவுநாளை இந்கிலாந்தில் மிகப் பெரிய அளவில் கொண்டாடப் போகிறார்கள் என அறிந்ததும் அதைப் பார்க்க, அதில் கலந்துகொள்ள, ஆவல் கொண்டு என் விருப்பத்தை என் கணவர் திலீப்பிடம் தெரிவித்தபோது, அவரும் உடன் வரச் சம்மதித்தது ஆச்சரியம். காரணம் அவருக்கும் ஆங்கில இலக்கியத்தில் மிகவிருப்பம் என்றாலும் என்னளவு ஷேக்ஸ்பியரின் பயங்கர ரசிகரில்லை.
ஸ்டார்ட்போர்ட் அப் ஆன் ஆவோன்(Stratford-upon-Avon) என்பது இங்கிலாந்தில். லண்டனிலிருந்து 163 கிமீ தூர ரயில் பயணத்தில் இருக்கும். ஒரு சின்ன கிராமம். ஸ்டார்ட்போர்ட் பெயரில் வேறு நகரங்கள் இருந்ததால் ஆவோன் நதிக்கரையிலிருக்கும் என்ற அடைமொழியுடன் அழைக்கப்படும் இது இன்றும் போன நூற்றாண்டின் சாயல் மாறாமல் மிக அழகாக இருக்கிறது.

இது தான் ஷேக்ஸ்பியர் பிறந்து வளர்ந்து வாழ்ந்த(1564-1616) கிராமம். இங்குள்ள அரங்கத்தில் தான் அவரது நாடகம் முதலில் அரங்கேயிருக்கிறது. இங்கு ஆண்டுதோறும் அவரது பிறந்த நாளையொட்டி (ஏப்23)வரும் வார இறுதியில் இசை நாடக நிகழ்ச்சிகளை விழாவாகக் கொண்டாடுவார்கள். 25000 பேர் மட்டுமே மக்கள்தொகை கொண்ட இந்தக் கிராமத்துக்கு ஆண்டுக்கு 5 லட்சம் சுற்றாலா பயணிகள் வருகிறார்கள்.
இந்த வருடம் அவரது 400 வது நினைவு நாளை மிகப்பெரிய அளவில் இங்கிலாந்து நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டது. அதன் முக்கிய நிகழ்ச்சிகள் இந்த இடத்திலிருந்து துவங்கியது. இதற்காகத் தனி இணைய தளம், கமிட்டிகள், அரசாங்க அறிவிப்புகள் என ஆறு மாதமாக அமர்க்களப்படுத்திக் கொண்டிருந்தார்கள். அங்கு இரண்டுநாள் தங்கி நடைபெறும் நாடக/ இசை விழாக்களில் பங்குபெறக் கட்டணம், ஹோட்டல் எல்லாவற்றிருக்கும் முன்பதிவு செய்து உதவப் பல டிராவல் கம்பெனிகள் அறிவித்துக் கொண்டிருந்தன.

இந்தச் சின்ன நகரத்தில் ஷேக்ஸ்பியரின் வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட விஷயங்கள் அனைத்தும் இருக்கின்றன. அவர் பிறந்த விடு, படித்த கிங் எட்வர்ட் பள்ளி, அவர் மனைவியின் குடும்ப வீடு, மகள் வசித்த வீடு, அவரது பெற்றோர்கள் வீடு அவர் வாங்கி வாழ்ந்து பின் இறந்த வீடு முதல் நாடகம் அரங்கேறிய தியட்டர், அவருக்கு ஞானஸ்தானம் செய்விக்கப் பட்ட சர்ச், அதில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட பகுதி இப்படி எல்லாம்,

அவரும் ஒரு பங்குதாராரக இருந்து இங்குத் துவக்கிய ராயல் ஷேக்ஸ்பியர் தியட்டர் என்ற நாடக அரங்கம் கடந்த சில ஆண்டுகளில்;புதுப்பிக்கப்பட்டு அதிநவீனமாக இருக்கிறது.
இந்த இடங்களுக்குக் குழுக்களாக அழைத்துச்சென்று கைடு விளக்குகிறார். மறு நாள் 400வது நினைவுநாள் விழாவிற்கான எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அந்த நகரம் அமைதியாக இருந்தது ஆச்சரியமாக இருந்தது.
38 நாடகங்களும், 154 14 வரிப் பாடல்களும், இரண்டு நீண்ட கவிதைகளும் எழுதியிருக்கும் ஷேக்ஸ்பியரின் படைப்புகளின் கையெழுத்துப் பிரதிகளோ. அவரைப் பற்றி அவர் எழுதிய குறிப்புகளோ எதுவுமே இன்று இல்லை. அவருடைய போட்டோ கூடக் கடையாது. அவர் புத்தகத்தின் முதல் பதிப்பில் இருக்கும் ஒரு கோட்டுஒவியத்தின் அடிப்படையில்தான் பின்னாளில் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டிருக்கின்றன.

அவர் மறைந்த 7 ஆண்டுகளுக்குப் பின் அவரது நண்பர்கள் ஜானும் ஹென்றியும் 1623ல் வெளியிட்ட “முதல் பக்கம் என்ற தொகுப்பின் முலம்தான் ஷேக்ஸ்பியரை எழுத்துவடிவில் இந்த உலகம் அறிந்துகொண்டது. . இந்தப் புத்தகத்தைக் கண்ணாடிப்பேழையில் அவர் வாழ்ந்த வீட்டில் காட்சிக்கு வைத்திருந்தார்கள்.

இன்று ஷேக்ஸ்பியரைப் பற்றி நாம் அறியும் பலவிஷயங்கள் நீண்ட ஆராய்சிகளுக்கும் அலசலுகளுக்கும் பின்னர் கிடைத்தவை., இதைச்செய்தவர்கள் இங்குள்ள ஷேக்ஸ்பியர் சொஸைட்டி. இன்னும் ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள். இன்று ஆராய்ச்சி நிலையமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கும் இதில் பலர் ஷேக்ஸ்பியர் எழுதியவற்றை ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள்
.
முதல் நாள் இந்த இடங்களைப் பார்த்தபின் முன்னணி நடிகர்கள் நடிக்கும் நாடகங்களில் ஒன்றைத்தேர்ந்தெடுத்துப் பார்த்தோம். மறுநாள் காலையில் நகர மேயர் ஆட்சிமன்ற குழுவினருடன் முன்னணியில் செல்ல, பள்ளி மாணவர்கள் சீருடையில் அணிவகுக்க, நகர இசைக்குழுவின் இசையில் “ஷேக்ஸ்பியர் வாக் என்ற நடைப்பயணம். அந்தக் கிராமத்தின் குறுகிய வளைந்த தெருக்களில் சென்றது. அவர் இந்த வீதிகளிலேதானே நடந்திருப்பார், இந்தப்பள்ளியில்தானே படித்திருப்பார், இந்த வீட்டில்தானே மனைவியைச்சந்திருப்பார், என்ற எண்ணஓட்டங்களுடன், எங்களைப்போலக் கடல்கடந்து வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள், இங்கிலாந்தின் பல பகுதிகளிலிருந்து வந்தவர்கள். பக்கத்து ஊர்கார்கள் எனப் பலர் அதில் இணைந்தனர்
.
தெருமுனைகளில் உள்ளூர் இசைக்குழுவினரின் வரவேற்பு, ஷேக்ஸ்பியரின் பாத்திரங்களின் வேடமணிந்து உற்சாகமூட்டம் நண்பர்கள் என விழாக்கோலம். ஆங்காங்கே பள்ளிகளிலும் பொது மண்டபங்களிலும் நாடகங்கள். பெரிய மேடை செட்டுக்கள் எல்லாம் கிடையாது. தரைதளத்தில் தொட்டுவிடும் தூரத்தில் நடிகர்கள் சற்று தள்ளி இசைக்கலைஞர்கள்.

விழாவின் இறுதியில் பவனியின் பங்கு பெற்றோரும் அதைப், பார்த்துக்கொண்டிருந்தோரும், இந்த விழாவிற்காகத் தயாரிக்கப்பட்டிருந்த ஷேக்ஸ்பியரின் முகம் பதிக்கப்பட்ட ஒரு முகமூடியை அணிந்து கொண்டு அந்த மேதைக்கு 3 முறை வாழ்த்தொலி எழுப்பினார்கள். மிக அற்புதமாக உணர்ந்த நிமிடங்கள் அவை.

பவனியின் இறுதியில் ஷேக்ஸ்பியரின் உடல் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் ஹோலி டிரினிடி சர்ச். இங்கு அவருக்கும் அவரது மனை.விக்கும் அருகருகே சமாதிகள். அவைகள் மீது எங்களுக்கு முன் வந்தவர்கள் வைத்திருந்த அழகான மலர்கொத்து. கல்லறை வாசகம் லத்தீன் மொழியில் எழுதப்பட்டிருக்கிறது. அதன் அருகே

இந்த தூசிபடிந்த இடத்தில் தோண்டும் அன்பான நண்பரே
யேசுபெருமான் மன்னிப்பாராக
கல்பலகைகளை விட்டுவைப்பவர்களை வாழ்த்துகிறேன்
என் எலும்புகளை எடுப்பவர்களை சபிக்கிறேன்.”
.
 என்று சொல்லும் ஆங்கில மொழிபெயர்ப்பு. அந்த காலகட்டத்தில் கல்லறைகளிலிருந்து எலும்புகள் திருடப்படுவது வழக்கமாம். அத்னால் இந்த வாசகங்கள் என்றார் கைடு.
அன்றைய விழாவிற்கு இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்ஸும் அவரது மனைவி கேமிலாவும் வந்திருந்தனர். இளவரசர் சார்லஸ் போட்டோக்களில் பார்ப்பதைவிட சற்று வயதான ஆனால் கம்பீரமான தோற்றத்தில் இருக்கிறார். .அன்று அரச தம்பதியினர் ராயல்ஷேக்ஸ்பியர் தியட்டரில் ஒரு நாடகமும் பார்த்தனர்.
ஆண்டுதோறும் நமக்கும், இந்த உலகிற்கும் வயது அதிகமாகிக்கொண்டிருக்கிறது. ஆனால் சில விஷயங்கள் எப்போதுமே அழியாத இளமையுடன் இருக்கின்றன. அதில் ஷேக்ஸ்பியரின் நாடகங்களும் ஒன்று.


சந்திப்பு     ரமணன்


 மங்கையர் மலர் ஜுலை இதழிலிருந்து