12/7/17

கடவுளை வீட்டிற்கு கொண்டு வருவோம்







சர்வ தேச சிலைகடத்தல் மன்னன் கபூர் கைது. பல கோடிகள் மதிப்புள்ள  பழமையான சிலைகள் கைப்பற்றப்பட்டன. தங்கள் நாட்டுக்குக் கடத்தப்பட்டு வந்த 1000 ஆண்டு பழமையான நடராஜர் சிலையை ஆஸ்திரேலியா பிரதமர் நமது பிரதமரிடம் கொடுத்தார் போன்ற  தலைப்புச்செய்திகளை அவ்வப்போது பார்க்கிறோம். 
அபின் கஞ்சா போன்ற போதைப்பொருட்களை கடத்துவதைவிட சிலைகடத்தல் மிகப்பெரிய லாபத்தைக் கொடுக்கும் பிஸினஸ் என்பதால் உலகின் பல இடங்களில் கபூர்கள் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு இந்தியா ஒரு முக்கிய டார்க்கெட். தமிழக காவல் துறையில் இதற்காக உயர் அதிகாரியின் தலைமையில் சிலைகடத்தல் தடுப்பு பிரிவு ஒன்று கடந்த சில ஆண்டுகளாக இயங்கிவருகிறது. 
ஆனால்  தன்னாலார்வர்கள் குழு ஒன்று மிகத்தீவிரமாக இந்த விஷயத்தில் பணியாற்றி அரசுக்கு உதவுகிறார்கள் என்பது பலர் அறியாத  விஷயம்.


திரு விஜய்குமார் சென்னையைசேர்ந்தவர்.  தற்போது சிங்கப்பூரில் காஸ்ட் அக்கடெண்ட் ஆகப் பணியாற்றிக்கொண்டிருப்பவர். இவரது  இணைய தளம் இந்தியா பிரைட் பிராஜெக்ட்.(INDIA PRIDE PROJECT) 2013லிருந்து  இயங்கும் அந்தத் தளத்தில்  இந்தியாவில் காணாமல் போன கடவுள் உருவங்களின் படங்களை வெளியிட்டு விபரங்களைப் பதிவு செய்து வருகிறார். “நம் கடவுள்களை திருப்பிவீட்டிற்கு கொண்டுவருவோம்”  என்ற திட்டத்தை அறிவித்திருக்கிறார்கள்.  இதன்படி   ஏதாவது பெரிய மியூசியங்களில் அல்லது ஆர்ட் டீலர் என்று அழைக்கப்படும் விற்பனையாளர்களின் கேட்லாக்களில் தெய்வச்சிலைகள்  இருந்தால் இவருக்குத் தெரியப்படுத்த வேண்டும். அதை இவர்களின் குழு ஆராய்ந்து சம்பந்தபட்டவர்களைத்தொடர்பு கொண்டு மீட்கும் முயற்சியில் இறங்குகிறார்கள். இதைத்தவிர நேரடியாகவும் இவர்கள் களத்தில் மிகச் சிறப்பான பணியைச் செய்கிறார்கள். பல மியூசியங்களிலிருக்கும் சிலைகளை ஆராய்ந்து அது எங்கிருந்து வந்திருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்கிறார்கள்:. இதற்காக இவர்கள் ஜேம்ஸ்பாண்ட் பாணியில் ரகசிய அதிரடி வேலைகளையும் செய்கிறார்கள். சம்மந்தப்பட்ட இடங்களில் தொடர்புகளை உருவாக்கிக்கொள்வது அவசியமான ஆவணங்களின் நகல்களைப்பெறுவது போன்ற பணிகள்.  இவருடைய குழுவில் சரித்தஆராய்ச்சியாளார். சிலையின் வயதைக்கணக்கிடுபவர். சந்தை விலை எவ்வளவு என மதிப்பிடுபவர்,   போன்ற எக்ஸ்பர்ட்களும்.  இருக்கின்றனர்.  அனைவரும் தன்னார்வலர்கள். 
 தமிழக போலிஸ் இதுவரை மீட்ட சிவபுரம் நடராஜர்  (11 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்ட 10ம் நூற்றாண்டு சிலை), தஞ்சை பிகதீஸ்வரர் கோவிலிருந்து காணாமல் போன  ஐம்பொன் கணேசா, போன்றவற்றை  மீட்க இவர்கள் தந்த முக்கிய ரகசிய தகவல்கள், ஆவணங்கள் தான் உதவியிருக்கின்றன. இதுவரை 60 சிலைகளை மீட்க உதவியிருக்கிறார்கள். பிரமிக்கத்தக்க இந்தப் பணியைச் செய்யும் இவர்கள் மீடியா வெளிச்சத்தைத் தவிர்க்கிறார்கள். விளம்பரத்தை விரும்பவதில்லை. அவர்களின் இணைய தளத்தில் கூட இந்த அணியினரின் படங்கள் இல்லை. அமெரிக்கர்- தென்கிழக்கு ஆசியாவில் நமக்காக பணிசெய்பவர்.  இந்தியர்- தொன்கலை நிபுணர் அமெரிக்காவில் நம் பணி செய்பவர் என்ற ரீதியில்தான் தளத்தில்  நிழல் முகங்களுடன் விபரங்கள் இருக்கின்றன.பாதுகாப்பும் ஒரு காரணமாக இருக்கலாம்.
இவர்கள் தமிழகக் கோவில் சிலைகளை மட்டுமில்லாமல் மத்தியபிரதேசத்திலிருந்து கடத்தப்பட்ட இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த செம்பழுப்பு  சலுவைக்கல்லில் உருவான யஷ்ணியின் சிலையை மீட்கவும் உதவியிருக்கிறார்கள்.

 இவர்களது வெற்றிப் பட்டியலில் கடைசியாக இணைந்திருப்பது  1000 ஆண்டு பழமையான நரசிம்ஹி என்ற காளியின் உருவம். இது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மியூசியத்தில் இருந்தது. அதற்கு அவர்கள்  இட்டிருந்த பெயர் பெண் புலி.   இது பல ஆண்டுகளுக்கு முன் விருத்தாசலம் கோவிலிலிருந்து திருடப்பட்டிருக்கிறது.
 

எப்படி இவர்கள் இதைச்செய்கிறார்கள்.? ஒரு மியூசியத்தில் அல்லது விற்பனையாளர்களின் கேட்லாக்கில் இருக்கும் ஒரு சிலையை தங்களிடமுள்ள படங்களுடன் ஆராய்கிறார்கள். உருவம் ஒத்திருந்தால் மேலும் ஆராய்ச்சியில் இறங்குகிறார்கள். அந்தக் கோவிலில் இந்தச் சிலை திருடப்பட்டிருப்பது புகார் செய்யப்பட்டிருக்கிறதா?  போன்ற விபரங்களுடன் வல்லுநர் அறிக்கைகளுடன் சரித்திர சான்றுகளுடன் மியூசியம் அதிகாரிகளை அணுகி முதலில் அது திருடப்பட்டது என்பதை நிலை நிறுத்துகிறார்கள்.  பின்னர்  இந்திய அரசு, தமிழக அரசின் போலீசுக்கு விபரங்கள் தந்து விசாரணையைத்துவக்க வைக்கிறார்கள். வழக்கும் பதிவு செய்ய உதவுகிறார்கள். இதில் பல பிரச்சனைகளையும் சந்திக்கிறார்கள்.

  2013ல் முதலில் எங்கள் குழு கண்டுபிடித்தது  ஆஸ்திரேலியா மியூசியத்திலிருக்கும் விருத்தாசலம் கோவிலின் அர்த்தநாரிஸ்வரர் சிலை. காணாமல் போய் 12 ஆண்டுகளாக அதற்காக எந்தப் புகாரும் கொடுக்கப்பட்டிருக்கவில்லை. ஒரு சிலை திருடப்பட்டிருக்கிறது என்பதற்கு அடிப்படை ஆதாரம் அதைக் காணோம் என்று போலிஸில் செய்யபட்டிருக்கும் புகார். அதுவே இதற்கு இல்லை. 
 இதனால் தான் நாங்கள் கோவிலின் அரிய சிலைகள் பட்டியலிடப்பட்டு டிஜிட்டல் ஆவணமாக்கி ஆன் லையன்ல் தேடும் வசதியோடு இருக்க வேண்டும் எனச் சொல்லுகிறோம்.  நாங்கள் அதை முயற்சித்துக்கொண்டிருக்கிறோம் என்கிறார்  விஜய் குமார்
இவர்களும் தமிழக போலீஸும் சந்திக்கும் மற்றொரு சவால்  தமிழகத்திலிருக்கும் 4500 கோவில்களில் இருக்கும் பல சிலைகளின், சிற்பங்களின் புகைப்படங்களோ விபரங்களோ கிடையாது. காணாமல் போனால் அடையாளம் சொல்லக்கூட முடியாது. இவர்கள் முயற்சியில் 900 ஆண்டு பழமையான நடராஜர் சிலையும், ஒரு 1000 ஆண்டு பழமையான சம்பந்தர் சிலையியும் வெளிநாட்டு மியூசியத்தில் இருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.  அவை தமிழ் நாட்டிலிருந்துகடத்தப்பட்ட தொன்ம சிலை  என்று நம்புகிறார்கள். ஆனால் அவை எந்தக் கோவிலுடையது என்பது தெரியாதால் அதை மீட்கும் முயற்சியைத்  துவக்க  முடியவில்லை.
 எப்படி? ஏன்? இந்த ஆர்வம் இவருக்கு.  “கல்லில் கவிதை” என்ற இவரது  வலைப்பூவில் தமிழக கோவில்களின் அழகான சிற்பங்களைப் பற்றி  தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி வந்த இவர். அதற்கான தகவல்களை சேகரிக்கும்போது சிலைகளின் திருட்டு மற்றும் கடத்தல் பற்றி அறிந்திருக்கிறார். “ஆர்வம் அதிகரித்ததினாலும் , என் மாதிரி எண்ணங்கொண்ட நண்பர்களின் இணைந்ததாலும்  தான்   இந்த இணைய தளம்” என்கிறார்.  இந்தத் தளம் இயங்குவதற்கு முன்னால் சிலைதிருட்டு/கடத்தல் என்பது மிகப்பெரிய அளவில் அரசால் கண்காணிக்கப்படவில்லை. அவ்வப்போது சில சிலைகள் மீட்கப் பட்டாலும் அது தொடர்பாக வழக்குகள் போடப்பட்டதில்லை சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்க பட்டதுமில்லை.  இதனால் தான் நியூயார்க் மெட்ரோபோலிஸ் மியூசியத்துக்கு  கடத்தல் மன்னன் கபூர் தன் மகளின் பிறந்த நாள் பரிசாக ஒரு சந்தரதுர்கா சிலையை அன்பளிப்பாக வழங்க முடிந்திருக்கிறது என்கிறார். சுபாஷ் கபூர் இப்போது புழல் சிறையில் இருக்கிறார். அவர்மீது  3 சிலைகளைக் கடத்திய வழக்கு இருக்கிறது.  ஆனால் அவரது நியூயார்க் கோடவுனில் இருப்பது 26000 சிலைகள் 
ஒவ்வொரு 10 ஆண்டுகளிலும் நமது 10,000 சிலைகள் திருடப்படுகின்றன. இதுவரை நாம் 70000 சிலைகளை இழுந்திருப்போம். அதில்  முனைந்தால் நிச்சியமாக 10000 சிலைகளை மீட்க முடியும். ஏனென்றால் அதில் 4000க்கும்மேல் மியூசியங்களில் இருக்கிறது. இப்போது 60 சிலைகள் வரை  எங்களால் அடையாளம் காணப்பட்டிருக்கிறது. அவற்றைக் கொண்டுவரமுடியும் . திருட்டு என ஆதாரங்களுடன் நிரூபிக்கப் பட்டால் மியூசியங்கள் தந்துவிடுவார்கள்  அதனால் தான் எங்களுடன் ஒத்துழைக்க ஆர்வலர்களை அழைக்கிறோம்.
என்ன செய்ய வேண்டும்?  எப்படிச் செய்ய வேண்டும்.? 
மீயூசியங்களில் அல்லது எங்காவது நீங்கள் பார்க்கும் இடங்களில் சிலைபற்றிய சந்தேகம் வந்தால் அதன்படத்தை பேஸ்புக்கில் போடுங்கள். எங்கள் தளத்துக்கு அனுப்புங்கள். . உள்ளூர் அரிய சிலைகளின் படங்களையும் விபரங்களையும் போடுங்கள்.  மற்றவற்றை நாங்கள் செய்வோம் என்கிறார்.

எளிதாகத்தானே இருக்கிறது செய்வோமே?  

7/7/17

தெரியுமா? தென்கொரியர்களின் மொழி -தமிழ்!



அந்தப் பொன்மாலைப் பொழுதில் மஹாபலிபுர கடற்கரையில் மெல்ல மறையும் சூரியனை ரசித்துக்கொண்டே நடந்து கொண்டிருக்கின்றனர் ஒரு கொரிய நாட்டுத் தம்பதியினர்.. கணவர் சில நாட்களுக்கு முன் சென்னை அலுவலகத்தில் பதவி ஏற்றிருக்கும் அதிகாரி. பின்னாலிருந்து  " அப்பா" என்று குரல் கேட்கவும் ஆச்சரியத்துடன் திரும்பிப்பார்க்கிறார். ஆச்சரியத்துக்குக் காரணம் அவர் மகனும் மகளும்  முன்னால் சென்றுகொண்டிருக்கிறார்கள்.  நம் மொழியில் யார் நம்மை அழைக்கிறார்கள்? என்று திரும்பிப்பார்த்த அவர் பார்த்தது ஒரு தமிழ் குடும்பத்தை.   தன் மொழியில் அப்பா என்றால் தந்தை என்பது போல தமிழிலும் தந்தைக்கு அப்பா தான் என்பதை அறிந்து ஆச்சரியப் பட்டுப் போகிறார் அந்ததென் கொரிய நாட்டுக்காரர். 
அவர் திரு குயூங்குசூ கிம் (KYUNGSOO KIM)  தென் கொரியாவின் தூதர்.

சென்னைத்திரும்பியதும். தன் அலுவலகம் மூலம் கொரிய, தமிழ் மொழிகளுக்கிடையே உள்ள ஒற்றுமைகளைப் பற்றி அறிந்து, ஆச்சரியபட்டு அது குறித்த தகவல்களைசேகரிக்கிறார்.  இரு  மொழிகளுக்கு இடையே உள்ள ஒற்றுமைகள் குறித்து தமிழ் நாட்டில்  பல ஆய்வுகள் செய்யப்பட்டிருப்பதையும் அறிந்து வியக்கிறார்.  இதில் தன் பங்காக எதாவது செய்ய வேன்டும் என்று கருதி தமிழை முறையாக கற்றுக்கொள்ளத் துவங்குகிறார்.
 சென்னையில் இன்று 4000க்கு மேற்பட்ட கொரியர்கள் வசிக்கிறார்கள். ஹூண்டாய், ஹூன் போன்ற பல நிறுவனங்களில் பணிபுரிபவர்களுடன் அவர்களது குடும்பங்கள்.
கொரிய மொழியில் பல தமிழ் வார்த்தைகள் இருப்பதையும், அது தமிழில் பேகசப்படுவது போலவே உச்சரிக்கப்படுவதை முதலில்  சொன்னவர்கள் பிரெஞ்ச் பாதிரியார்கள். இரண்டு நாடுகளிலும் பணிபுரிந்த பாதிரியார்கள் கண்டுபிடித்த விஷயம் இது. அன்று முதல் ஆய்வுகள் தொடர்ந்துகொண்டிருக்கிறது.  ஹவாய் பல்கலைக்கழகத்தின்  “கொரிய மொழி மையம்” இதுகுறித்து பெரிய அளவில் ஆய்வுகள் நடத்தி கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறது. இவர்கள் ஆய்வின் படி  கிட்டத்தட்ட  கொரிய மொழியில்  4000 தமிழ் வார்த்தைகள் இருக்கின்றன.  பல வார்த்தைகளின் பொருளும் அதேதான் மட்டுமில்லை ஒலிக்கும் பாணியும் உச்சரிப்பும் கூட தமிழ் போலவே இருப்பது தான் ஆச்சரியம்.
இரு நாடுகளுக்குமிடையே உள்ள உறவு முதல் நூற்றாண்டில் துவங்கியிருக்கிறது. சூரோ என்ற அரசன் கார்க் என்ற பகுதியை ஆண்டுவந்தார்.கார்க் என்ற சொல்லுக்கு  பண்டைய தமிழில் மீன் என்று பொருள். அந்த மன்னரின் கொடியில்  மீன் சின்னம். இருக்கிறது.  அவரும் அன்றைய பாண்டிய(வேளநாடு) மன்னர் ஆயியும் நல்ல நண்பர்கள்.  அவர்குடும்பத்தைச்சேர்ந்த ஒரு தமிழ் பெண்ணை  கார்க் நாட்டின் இளவரசர்      திருமணம் செய்துகொண்டதால்,  வணிகம்,  அரசுப்பணிகளில், படைகளில் நிர்வாகத்தில் தமிழர்கள் இணைந்திருக்கிறார்கள்.  பின்னாளில் சூரிரத்னா என்ற   அந்தப் பெண்  நாட்டின் அரசியாகியிருக்கிறார்.
 இன்றும் அவரது  சமாதி கிம்ஹே என்ற கொரிய நகரில் இந்த விபரங்கள் பதிக்கப்பட்ட கற்பலகையுடன் இருக்கிறது.    கொரியா நாட்டில் சொல்லா என்பது ஒரு மாவட்டத்தின் பெயர் இது சோழ என்ற  சொல்லின் திரிந்த வடிவம் என்று கருதப்படுகிறது. இது போன்ற பல விஷயங்களை ஆய்ந்து நிறைய எழுதியிருக்கிறார்கள் என். கண்ணன், ஒரிஸாபாலு,  நாகராஜன் போன்ற  வரலாற்று ஆய்வாளர்கள்.
"மொழி மட்டுமில்லை கலாச்சாரத்திலும் நிறைய ஒற்றுமைகள். கொரிய குழந்தை முதலில்; அறிந்து கொள்ளும் வார்த்தைகள் அப்பா, அம்மா தான். என்பது மட்டுமில்லை. குழந்தையைத் தொட்டிலில் இடுவது, வாசலில் மாவிலைத் தோரணங்கள் கட்டுவது, போன்ற பல விஷயங்களில் தமிழ் நாட்டைப் பார்க்கிறேன். தென்கொரியாவில் மாங்காய் கிடையாது. அதனால் மிளகாய் தோரணம் கட்டுகிறார்கள்.  குழந்தைக்குத் திருஷ்டி கூடாது என்ற பழக்கமும் இருக்கிறது".  என்கிறார்  கொரிய தூதர் குயூங்குசூ கிம்  . இவர்  தமிழ் நாட்டில் ஆர்வத்துடன் பல விஷயங்களைக் கூர்ந்து கவனித்து தனது கட்டுரைகளில் எழுதுகிறார்.. அவர் சொல்லும் பல விஷயங்களில் ஒன்று தமிழக கிராமங்களில் இருப்பது போலத்தான் கொரிய கிராமங்களில் குடிசைகள் அமைக்கப்படுகின்றன. உரலுக்கும்  உலக்கைக்கும்  அதேபெயர்கள், அதே பயன்கள் என்பது தான்.  இப்போது தமிழ் கற்றுவரும் இவர்  தமிழ் இலக்கணம் எழுவாய்- செயப்படுபொருள்- வினைச்சொல் அடிப்படையில் தான் கொரிய மொழியின் இலக்கணமும் இருக்கிறது  என்கிறார்.  கொரியர்களும் தமிழர்களைப்போல் அத்தை, மாமன், தாய்மாமன் உறவு முறைகளும் அதில் திருமணமும் செய்துகொள்கிறார்கள்.( சண்டைகள் வருவதும்  உண்டாம். )
தென்கொரியாவைச்சேர்ந்த ஒரு எண்ணை நிறுவனத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றும் திரு நாராயணன் கண்ணன் 10 ஆண்டுகளாக அங்கு வசிப்பவர்.  அங்கு ஒரு அறக்கட்டளையை நிறுவி இரு மொழிக்கும் உள்ள தொடர்பு பற்றி ஆராயந்துவருகிறார். பல ஆண்டுகாலம் சீன மொழியைப் பயன்படுத்திய கொரியநட்டினர் 10ஆம் நூற்றாண்டில் ஹங்குல் என்ற மொழியை தாய் மொழியாக ஏற்றனர். இது தமிழ்மொழியின் சாயலில் இருக்கிறது. இந்த ஹங்குல் மொழியை ஏற்றபின்னர்தான் கொரியமக்களின் பொருளாதாரம் வேகமெடுத்திருக்கிறது. இன்று கொரியாவில் 99%மக்கள் கல்வியறிவு பெற்றிருக்கிறார்கள். மொழியை முன்னிறுத்தியே  எந்த ஒரு நாடும் முன்னேறும் என்பதற்கு  இது சான்று என்கிறார். இவர் செம்மொழி மாநாட்டில் பங்கேற்று இது குறித்த தனது கட்டுரையை வாசித்தவர்.
கொரிய மொழியில் பல வார்த்தைகள் தமிழ் சாயலில் இருக்கிறது. உரத்துக்கு- உரம், கண்ணுக்கு -நுகண், பல்லுக்கு =இப்பல் புல்லுக்கு =புல் எனப் பல வார்த்தைகளில் அதே பொருளில் இருப்பதை விட ஆச்சரியம் அவர்கள் தூரி, தூரி, சாஞ்சுக்கோ, கொஞ்சு ஜம்ஜம், அபூபா, ஜோ ஜோ  என  சிறு குழந்தைகளைக் கொஞ்சுவதில் கூடத் தமிழ் கொஞ்சுகிறது. மொழி, கலாச்சாரம் போல சில உணவு வகைகளையும் தோசை, கொழுக்கட்டை  சுண்டல்  ஊறுகாய் போன்றவற்றிலும்  தமிழ்நாடு இருக்கிறது.

 
மொழி, உணவு மட்டுமில்லை .நட்பு பாராட்டுவதிலும்  தமிழர்களைப் போலத்தான் என்கிறார் திருமதி மீரா.
ஒரு பெரிய கார் தயாரிக்கும் நிறுவனத்தின் உயர் அதிகாரி யெங் மின் ஓ வின் குடும்பம் அண்மையில் சென்னைக்கு வந்தது.  அவரது மனைவி காங் மின் (KANG MIN)   ஆங்கிலம் அதிகம் அறியாத குடும்பத்த லைவி.  உள்ளூர் மொழியும் தெரியாத புதிய சுழலில் மிரண்டு, கலங்கிய அவருக்குப்   பக்கத்து பிளாட்டில் வசிக்கும் இவர் “ நான் உன் தாய் மாதிரி பயப்படாதே எல்லா உதவியும் செய்வேன்” என்று  ஆறுதலாக ஆங்கிலத்தில்  சொன்னதில் அவருக்குப் புரிந்த  வார்த்தைகளில் ஒன்று  “மதர்”   ஒ! நீங்கள் எனக்கு  “அம்மா” என்று சொல்லி சந்தோஷமானார். அன்றிலிருந்து அந்தப்பெண்மணியை அவர் இந்திய அம்மா என்றுதான் அழைக்கிறார். மெல்ல  தமிழும் ஆங்கிலமும் கற்றுவருகிறார். குழந்தைகளுக்குச் சென்னையும் உணவும்  ரஹ்மானின் இசையும் மிகவும் பிடித்துவிட்டது.

5000 கீமிக்கு அப்பால் சீனாவைத்தாண்டியிருக்கும்  கொரியாவில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே  தமிழ் மொழியும் கலசாரமும் வேறுயூன்றியிருப்பதில் நம்மைப்போலவே கொரியர் பெருமையும் சந்தோஷமும் அடைகிறார்கள்.  ஆனால் எங்கள் தொப்புள் கொடி உறவு முப்பாட்டன் வாழ்ந்த நிலம் என்றெல்லாம் அரசியல் செய்ய முடியாது. புதிய அரசியல் கட்சிகளுக்கு தென்கொரியாவில் அனுமதியில்லை.
கல்கி 9/07/17

4/7/17

இரண்டு நாடகங்கள்

சென்னை அலையன்ஸ் பிரான்சிஸ் அரங்கம். அமைதியாகியிருக்கும்  பார்வையாளர்கள்.   ஆங்கில நாடகம் ஒன்றின்  துவக்கத்துக்காக காத்திருக்கிறோம்.  மேடையில் இருள் கவிகிறது. நிழலுருவாக பாத்திரங்கள்.  மெல்லத்துவங்கி அதிகரிக்கும் தவிலின் ஓசை அதிகரிக்கும் போது ஒளியுடன் முதல் காட்சி விரிகிறது. தன்னை மதித்து கெளரவத்துடன் நடத்தாமல் தன் நண்பர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்  “உன் கணவர்” எனத் தாயிடம் சீறும் மகன். தந்தையின் பெருமையகளைச் சொல்லி அவனைச் சமாதானப்படுத்தும் தாய் என்று துவங்கும் அந்தக் காட்சி இன்று பல குடும்பங்களில் நிகழும் ஒரு காட்சி போலிருந்தாலும் - நாடகம் மஹாபாரத்திலிருந்து  ஒரு கதை.

. தூரோணாச்சாரியாரை  ஒரு ஆசானாக,  போர்முறைகளை நன்கறிந்தபடைத்தலைவனாக நாம் அறிந்திருக்கிறோம். அந்த துரோணரின்  குடும்பத்தில்  அவருக்கும், அவரது மகன், மனைவிக்கிடையே நடந்த உணர்ச்சி கொந்தளிப்பு போராட்டங்களின் இறுதியில்   ஒவ்வொருவரும் உணரும் உணமையைச்சொல்லுவது தான் ‘WHEN THINGS FALL APART’ என்ற ஆங்கில நாடகம்.
JUST US  சென்னையில் இயங்கும் ஒரு பல்கலை குழு.  இயல் இசை நாடகம் என இயங்கிக்கொண்டிருக்கும் இந்தக் குழுவின் ஆங்கில நாடகங்கள் இந்திய இதிகாசங்களின் பாத்திரங்களின் உளவியலை ஆழ்ந்து நோக்கும் பார்வையிலிருக்கும்.  பல இந்திய நகரங்களிலும் வெளிநாடுகளிலும் நிகழ்ச்சிகளை நிகழ்த்தியிருக்கும் இந்தக் குழுவினர் தங்களது 10ஆம் ஆண்டுவிழாவை  “JUSTFEST” என்று இரு நாள் விழாவாகக் கொண்டனார்கள். அதன் முதல் நாளில் அரங்கேறியது தான் இந்த நாடகம்.
ஒரு நாடகத்தின் வெற்றியின் பெரும்பங்கு அதன் முக்கிய நடிகர்களின்  திறமையில்தானிருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் நாலே காதா பாத்திரங்கள் கொண்ட ஒரு நாடகத்தில்  எந்த ஒரு கலைஞரும் அடுத்தவரை மிஞ்சிவிடாமல்  கன கச்சிதமான நடிப்பால்  அவர்களுடைய  பாத்திரத்தை சிறப்பாகச் செய்யவைப்பது என்பது இயக்குநருக்கு சவாலான விஷயம். அதில் வெற்றி கண்டிருக்கிறார் இதன் இயக்குநரும் குழுவின் தலைவியுமான திருமதி கெளரி ராம்நாரயண் 
கொப்பளிக்கும் கோபத்துடன் தந்தையை நிந்திக்கும் துரோணரின் மகன் அஸ்வத்தாமன் தந்தை அர்ஜுனனுக்கு சொல்லிக்கொடுத்த  ஒரு வித்தையை தனக்கு சொல்லிக்கொடுக்க வில்லை எனத் தாயுடன் வாதாடும் போதும்,  தந்தையுடன் மோதும்போதும். இறுதியில் போர்க்களத்தில் தன் மரணச்செய்தி கேட்டவுடன் அது தவறென அறியாமலே  அவர் உயிர்துறக்க நேரிட்டபோது அவரின் அன்பையும் பாசத்தையும் புரிந்து கொண்டு தாயிடம் கதுறும்போதும் அந்தக் கலைஞர் அந்தப் பாத்திரமாகவேவாழ்ந்து காட்டிவிட்டார்.  நடித்துக்கொண்டிருப்பது ஒரு பெண் (திருமதி அகிலா) என்பதையே மறந்துவிடுகிறோம். அந்த அளவுக்கு உடல் மொழி, உணர்வுகளின் வெளிப்பாடு, கம்பீரமான ஆண்மை தொனிக்கும் குரல் அசத்திவிட்டார் இந்தப் பெண்.
“என்ன மனிதன் நீ?. சபையில் திரபெளதியின் ஆடையினை களைந்து அவமானப்படுத்தப்படும்போது உன் மாணவர்களைக் கண்டிக்காமல் இருந்த நீ ஒரு பிரமாணனா? ஆச்சாரியானா? என கணவரைத் தன் வார்த்தைகளால் கடுமையாக சுடும் தரோணாச்சாரியாரின் மனைவி கிருபி தன் குரலாலும் நடிப்பாலும் “ஆமாம் இவர் சொல்வது சரிதானே? எனப்  பார்வையாளர்களையும் உணரச்செய்கிறார். அந்த அளவிற்குக் கோபத்தை  கொட்டி நடித்திருப்பவர் திருமதி சுனந்தா ரகுநாதன்.
 நாடகத்தின்  வசனங்கள் எளிய ஆனால் அழுத்தமான வார்த்தைகள். கோபத்தில் திரபெளதியை நீங்கள்  இப்படிப் பார்க்கத்தானே  ஆசைப்பட்டீர்கள்? என தன புடவையின் மேலாக்கை நீக்கதுவங்குகிறார்.கிருபி.   துடித்துபோவது துரோணர் மட்டுமில்லை. பார்த்துக்கொண்டிருக்கும் நாமும் தான்.  இம்மாதிரி ஒரு காட்சியை மேடையில் துளிகூட கண்ணியம் குறையாமல் காட்டியிருப்பதில் காட்சியமைப்பில் இயக்கனருக்குள்ள ஆழ்ந்த அனுபவம் பளிச்சிடுகிறது. 
ஒரு நாடகத்தின் காட்சிகளுக்கு உயிருட்டுவது இசையும் ஒளியும் தான். .  இந்தக் குழு அதை நன்கு  உணர்ந்து அதற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது.  நாடகம் முழுவதற்கும் தவில் கஞ்சிரா ஓசை தான் பின்னணி இசை. ஒரே ஒருஇடத்தில் கிதார். மட்டும். இசை காட்சிகளுடன் இணைந்திருப்பது போல ஒளியமைப்பும்..
கருப்பு பின்னணித்திரையில் விளக்குகளின் ஒளியை மாற்றிமைப்பதின் மூலமே இரவு, பகல், புலரும் பொழுது, குடிசை, காடு என களத்தை எளிதில் புரிய வைக்கிறார் ஒளி அமைப்பாளர். அதே போல் நடிகர்களின் மீது  அவசியமில்லாத போது அதிக  அளவில் ஒளி பாயாமலிருக்கிறது. இதைச்செய்திருப்பது சென்னை ஆர்ட் தியட்டர் என்ற நிறுவனத்தின் சார்ல்ஸ் என்ற இளைஞர். ஒளியமைப்பின் தொழில் நுட்பம் மட்டுமில்லாமல் நாடகத்தின் காட்சிகளை நன்கு புரிந்துகொண்டிருக்கும் இவர் பாராட்டப்படவேண்டியவர்.

இரண்டாம் நாள் நிகழ்ந்தது ஒரு சமூக நாடகம்  ஓவியனாக வாழ்க்கைத்துவக்கி தோற்று கவிஞனான  அருண்கொலட்கர்  (Kolatkar ))   என்ற மராட்டிய கவிஞன்  ஆங்கிலத்திலும், மாராட்டியிலும் பல கவிதைகள் எழுதியிருப்பவர். இன்றைய இளம் கவிஞர்களுக்கு ஆதர்சம்.  காமன்வெல்த் எழுத்தாளர்கள் பரிசு, சாகித்திய அகதமி விருது போன்ற பல விருதுகள் பெற்ற இந்த கவிஞன் தனிமையை ரசிப்பவன், மாற்றியோசிப்பவன். அவரை  ஒரு தமிழ் நாட்டு பெண்பத்திரிகையாளார்  அவர் வசிக்கும் மும்பையின் காலா கோடா பகுதியில் அவர்  வழக்கமாக அதிக நேரம் செலவிடும் ஒரு சாலையோர ஹோட்டலில் பேட்டிக்காகச் சந்திக்கிறார். பக்தி, கடவுள்,ஆங்கில கவிதைகள்,போலிவிமர்சர்கள், இலக்கியம் போன்ற பல தளங்களில் உரையாடுகிறார்கள்  இது தான் கதை. இந்தக் குழு முதன்முதலில் போட்ட நாடகமான இதைப் பல இடங்களில் நடத்தியிருக்கிறார்கள். அதை மீண்டும் இப்போது நடத்தினார்கள்.

இரண்டுபேரின்  உரையாடலை அதுவும் ஒரு பத்திரிகையாளரும் கவிஞரும் உரையாடும் உலர்ந்த விஷயங்களை   ஒரு நாடகமாக்க முடியுமா?   இயக்குநர் கெளரி ராம் நாராயணன் முடியும்  என்பதை மட்டுமில்லை அதை ஒரு இசை நாடகமாகமே செய்ய முடியும் என நீருபிக்கிறார்.. 

வாழ்ந்து மறைந்த ஒரு கவிஞனின் வாழ்க்கையில் நிகழந்ததாக செய்யபட்டிருக்கும் கற்பனை கதை என்பதை முதல் காட்சியில்  செய்தித் தாளில் படிக்கும் மரணச் செய்தியைக் கொண்டே புரியவைக்கிறார்கள் .
இந்த உலகில் எதுவுமே துச்சம் என அகம்பாவத்துடன் தன் சிந்தனைகளை வெளிப்படுத்தும் கவிஞன், தந்து பேட்டி சிறப்பாக வரவேண்டுமே என்று துடிப்பில் இருக்கும் பத்திரிகையாளர் என இருவருமே  இயல்பாக நடிக்கிறார்கள். கூர்மையான வசனங்கள், தெளிவான உச்சரிப்பு எளிமையான அதே நேரத்தில்  களனை சிறப்பாக சொல்லும் காட்சிமைப்பு எல்லாமே அருமை.
  உரையாடல்களுக்கு நடுவே பாத்திரங்கள் சொல்லும் விபரங்கள்  இசை சித்தரமாக விரிகின்றன. ஆடல் பாடலுடன் காட்சிகள் நகர்கின்றன.  ஒருவீதியோர ரெஸ்டோரண்ட்., சின்ன பள்ளிக்கூடம் மிரட்டும் ஆசிரியை  இட்லி விற்கும் மராட்டிய பெண்கள்  டீ விற்கும் தமிழ்ப்  பெண் என்று பாத்திரங்கள்  இசை, நடன வடிவில் வந்த போகின்றனர்.  இசை என்றால் எல்லாவிதமான இசையும் வருகிறது.. கர்நாடக,மராத்தி அபங், ஜாஸ், பாப் எல்லாம் வெவ்வேறு பாடல்களில்  இடையிடையே  கவிஞர், பத்திரிகையாளர் உரையாடலும் மிக சீரியசான விஷயங்களில் தொடர்கிறது., பாடல்களில் கவஞரின் கவிதைகள் பயன்படுத்தபட்டிருக்கிறது.  இறுதியில்  ஒரு புலரும் காலையில் தன் வீட்டின் முன் பகுதியை பெருக்கிக்கொண்டிருக்கும் பின்னணியில் மும்மை ஏழ்மைப்பகுதியைப் பற்றிய ஒரு  கவிதையை கவிஞரே சொல்லுவது போல முடிகிறது. 
இந்த நாடகத்தின் பின்னணி இசையில் வாத்தியங்கள் எதுவும் கிடையாது. இனிய குரலில்சுத்தமான சுருதியில்  காட்சிகளுக்கேற்ப பாடல்களைப் பாடுகிறார்.  ஒரு காட்சியில் பின்னணியாக பல்வேறு ராகங்களில் சரளிவரிசையின் சா. மா. பா மட்டும் ஒலிக்கிறது. அபங், கர்நாடக இசை, இந்துஸ்தானி, வெஸ்டர்ன்  அவ்வளவையும் ஒரே பாடகி எந்த வித பக்க வாத்தியமும் இல்லாமல் பிரமாதமாக பாடுகிறார். பாடகி சவீதா நரசிம்மன். இவரது   பாடல்கள் இல்லாமலிருந்தால் இந்த நாடகம் போரான உரையாடலாகியிருக்கும்.  பின்னணி பாடும் பாடகியும் மேடையிலேயே இருக்கிறார். ஒரு பாத்திரமாகவும் வருகிறார்.

ஆங்கிலநாடகங்கள்  நடத்தும் குழுவாக இருந்தாலும் தமிழ்  நாடக உலகிற்கு பெரும்பங்களிப்புச் செய்திருக்கும் ந.முத்துசாமி அவர்களை முதல் நாள் நாடகத்துக்கு முன்னும்  திரு இந்திராபார்த்தசாரதி அவர்களை இரண்டாம் நாள் நாடகத்தின் போதும்  கௌரவித்தது மகிழ்ச்சியான ஒரு விஷயம்.
திரு இந்திரா பாரத்த சாரதி அரங்கத்துக்கு வர முடியாததால் அவர் இல்லத்திற்கே குழு சென்று கௌரவித்த காட்சியை  திரையில் காட்டினார்கள் . 

மொத்தத்தில் “ஜஸ்ட்” திருவிழா இல்லை பெஸ்ட் திருவிழா
(கல்கி 9/7/17)



21/6/17

அமெரிக்க அதிபரின் அடுத்த அதிரடி.. !




அதிரடி அறிவிப்பு மன்னராகவே ஆகிவிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அண்மையில்  வெள்ளைமாளிகையில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில், “அமெரிக்கர்களின் நலனைக் கருத்திற்கொண்டும், மூடப்பட்ட தொழிற்சாலைகளையும், வேலைவாய்ப்பை மீண்டும் உருவாக்கும் வகையில் “பாரிஸ் காலநிலை உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா வெளியேறுகிறது” என்று திடுக்கிடும் முடிவை  அறிவித்திருக்கிறார். 
அமெரிக்க அதிபராகக் கடந்த ஜனவரி மாதம் டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து அந்நாட்டு மக்களுடனும், சர்வதேச நாடுகளுடனும் மோதல் போக்கையே காட்டி வருகிறார். குறிப்பாக அறிவியல்ரீதியாக நடைமுறைப்படுத்த இயலாததாகக் கூறப்படும் அமெரிக்கா - மெக்ஸிகோ எல்லைச்சுவர் விவகாரம், முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்கள் மீதான பயணத்தடை, ஒபாமாகேர் என்னும் சுகாதாரக் காப்பீட்டுத் திட்ட ஒழிப்பு, ஊடகங்கள் மீதான பாகுபாடு மற்றும் நீதித்துறையின் மீது வெறுப்புணர்வு,  போன்ற அறிவிப்புகளின் பட்டியலில் லேட்டஸ்ட் இது. 
 அதிவேகமாக மோசமடைந்துவரும் புவியின் காலநிலை மாற்றத்தைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்காக உலகின் 195 நாடுகள் இணைந்து உருவாக்கிய பாரிஸ் காலநிலை உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாகச்சொல்லும்,  உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும்  இந்த அறிவிப்பில் அவர் இந்தியாவைக் குறிப்பாக  தாக்கியிருக்கிறார்.
அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் கோபத்தைப் புரிந்துகொள்ள பாரிஸ் காலநிலை உடன்படிக்கை என்ன என்பதைப் புரிந்து கொள்ளுவது அவசியமாகிறது. 
நமது பூமியினுடைய மேற்பரப்பின் சராசரி வெப்பநிலை 14 டிகிரி செல்சியஸ் ஆகும். ஆனால், அது மேலும் ஒரு டிகிரி செல்சியஸ் அதிகரித்ததன் விளைவாக வெப்பநிலை அதிகரித்தல், பனிப்பாறைகள் உருகுதல், கடல் நீர்மட்டம் உயருதல், பேய் - மழை, கடும் வறட்சி, நோய்கள் போன்றவை பல வகையில் அதிகரித்து நம்மை அச்சுறுத்திக்கொண்டிருக்கின்றன. தொடரும் பாதிப்புகளைத் தவிர்க்கும் பொருட்டு ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை பணித்திட்டப் பேரவையானது
(United Nations Framework Convention on Climate Change – UNFCCC) கடந்த 1992-ம் உருவாக்கப்பட்டது. இது, தொடர்ந்து 23 ஆண்டுகள் ஆம் 23 ஆண்டுகள் !  உலக நாடுகளுடன்  பல நகரங்களில் பேச்சு வார்த்தைகள் நடத்திவந்தது.  ஒரு நாட்டின் கருத்தை சில அல்லது பல நாடுகள் ஏற்காமல் தொடர்ந்து  அடுத்தடுத்த மாநாட்டிற்கு ஒத்திவைக்கப்பட்ட விஷயம் இந்த  காலநிலை உடன் படிக்கை.     2015ல் பாரிஸில்  7 நாட்களுக்குத் திட்டமிட்டு 11 நாட்களாக  நீடித்து நடந்த பேச்சுவார்த்தைக்குப்  பிறகு, 2015 டிசம்பரில் பாரீஸில் நடந்த காலநிலை மாநாட்டில்  வரலாற்றுச் சிறப்புமிக்க “பாரிஸ் உடன்படிக்கை” உருவானது.  அது உலகின் 195 நாடுகளினால் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இதில் இந்தியாவின் பங்களிப்பு கணிசமானது. வளரும் நாடுகளின் சார்பாக வாதிட்ட இந்தியா வளர்ந்த நாடுகள் எப்படிச் சூழலை மாசு படுத்தியிபின் வளரும் நாடுகளின் மீது  கட்டுப்பாட்டை கொண்டுவருகிறது என்பதையும். இதைச் செயலாக்க வளரும் நாடுகளுக்குக் கொடுக்க  வளர்ந்த நாடுகள் பெரிய அளவில் நிதியுதவி அளிக்க வேண்டும் என்றும் வாதாடி வென்றது. 
குறிப்பாகப்  வாயுக்களை அதிக அளவில் வெளியிடும் அமெரிக்கா போன்ற நாடுகளானது, இந்தியா, பிரேசில் போன்ற வளரும் நாடுகளுக்குத் தேவையான நிதியுதவியை அளிக்கவேண்டும்  என்பது இந்த  உடன் படிக்கையின்  முக்கிய அம்சம். 
இந்த உடன்படிக்கையின்படி, பூமியின் மேற்பரப்பின் சராசரி வெப்பநிலையை 16 டிகிரி செல்சியஸைத் தாண்டவிடாமல் தடுக்கும் வகையில், அதற்கு முக்கியக் காரணமான  வாயுக்களை வெளியிடும் அளவைக் குறைக்க உலக நாடுகள் முடிவு செய்திருந்தன.  இதன் படி புவி வெப்பமயமாவதை 2 டிகிரி செல்சியஸ் குறைக்க வேண்டுமென்று பாரிஸ் பருவநிலை மாற்ற மாநாட்டில் வரைவு ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டது.
  .இதன்படி, புவி வெப்பமயமாவதைத் தடுக்க 2020-ஆம் ஆண்டு முதல் வளரும் நாடுகளுக்கு ரூ.6,70,000 கோடி ஆண்டுதோறும் வழங்கப்படும்.. வரைவு ஒப்பந்தத்தில் சொல்லியிருந்த படி புவி வெப்பமயமாவதை 2 டிகிரி செல்சியஸாகக் குறைக்க வேண்டுமென்பதை ஏற்றால்  இந்தியா, சீனா போன்ற வளரும் நாடுகளில் நிலக்கரி போன்ற எரிபொருளைப் பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்படும்.எனவே, வளரும் நாடுகளான இந்தியாவும், சீனாவும் இந்த அளவைக் குறைக்க வற்புறுத்தின.  இறுதியில் அதை 1,5 டிகிரி செல்சியஸ் ஆக குறைக்க ஒப்புக்கொண்டன. 

அந்த. மாநாட்டில் எட்டப்பட்டுள்ள உடன்பாட்டை இந்தியா உள்பட 195 நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன. “இந்த உடன்பாடு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது” என்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா பாராட்டி. “அனைவரும் ஒன்றானால் என்ன நடக்கும் என்பதை நாம் உலகிற்குக் காட்டியுள்ளோம்” என்று பெருமையுடன் அறிவித்தார்.  தொடர்ந்து நாடுகள். அதிகாரப்பூர்வமாக உடன்பாட்டில் கையெழுத்திட்டன.  
இந்த ஒப்பந்தத்திலிருந்தான் விலகுவதாக இப்போது  அறிவித்திருக்கிறார் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.  இந்தத் தீர்மானத்தினால் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு குறையும் என்பது அவரது கணிப்பு.  மேலும் பாரீஸ் காலநிலை உடன்படிக்கையின் காரணமாக அமெரிக்கா புதிய அனல்மின் நிலையங்களைத் திறப்பது தடுக்கப்படுவதாகவும் ஆனால் அதே நேரத்தில் இந்தியா ஒவ்வொரு வருடமும் பல பில்லியன் டாலர்களை நிதியை வளர்ந்த நாடுகளிடமிருந்து பெற்று,  2020-ம் ஆண்டுக்குள் இந்தியா தனது அனல்மின் நிலையங்களை இருமடங்காக்கிக் கொண்டுவிடும் என்பது தான் அவரின் கோபத்துக்கு காரணம்  இப்படி இந்தியாவின் மீது இருக்கும் வெறுப்பும், அதற்கு பணம் கொடுக்க வேண்டியிருக்கிறதே என்ற நிலையும்  இந்த அதிரடி அறிவிப்புக்கு ஒரு காரணம். .
வளர்ந்த நாடுகள் செலுத்தப்போகும் பணம் அவர்கள் சுற்று சூழலின் வெப்பளவை இதுநாள் வரை தொடர்ந்து அதிகரித்தற்காக  தரும் ஈடுதான் என்ற புரிதல் அவருக்கு இல்லை எனச்சொல்லிவிட முடியாது.. அதிபர் தேர்தலுக்கு பல நாள் முன்னரே அவர் தனது டிவிட்டரில் பாரிஸ் மாநாட்டைக் கடுமையாக சாடியிருக்கிறார்.  தேர்தல் அறிக்கையிலும் சொல்லியிருந்தார். ஆனால்   அவருடைய தேர்தல் அறிக்கையை  பலர் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை. 
இந்த அறிவிப்பைப் பல உலக நாடுகளின் தலைவர்கள் மட்டுமில்லை அமெரிக்காவின்  கூகுள்.  மைக்ரோசாப்ட் போன்ற பெரும் தொழில் நிறுவனங்களின் தலைவர்களும்  கண்டனம் செய்திருக்கின்றனர்.  அவரது கட்சியின் அறிவு ஜீவிகளும் எதிர்க்கிறார்கள். 
 ஐக்கிய நாடுகளின் ஆதரவுடன் எழும் இந்த மாதிரி உடன்படிக்கைகளிலிருந்து  கையெழுத்திட்ட நாடுகள் வெளியேற விரும்பினால் அதற்கான விதிமுறைகளையும் அதில்  சேர்க்கப்பட்டிருக்கும். அதன் படி இந்த உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா வெளியேற வேண்டுமானால் அதற்கான ஒராண்டு நோட்டிஸையே 2019 நவம்பரில் தான் கொடுக்க முடியும். அதற்கு ஒராண்டுக்குபின்னர் அதாவது 2020 நவம்பருக்குப் பின்னர்தான் வெளியேற முடியும். டிரம்பின் பதவிக்காலம் 2020 நவம்பர் 4 வரைதான்.
இது அவருக்குத் தெரியாதா?  இதுமட்டுமில்லை. தெரிந்த விஷயங்களையும் தெரியாத மாதிரி அறிவிப்பது தான் அதிரடி அரசியல் என்பதும் அதிபருக்குத் தெரியும். 

9/6/17

டிரம்ப் தான் பிரச்சனையா?



 கடந்த சில வாரங்களாகத் தலைப்பு செய்தியாக அடிபட்டுக்கொண்டிருக்கும் இதைப் பற்றி ஓர் அலசல்
அமெரிக்காவில் அமெரிக்கர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு என்ற கோஷத்துடன் தேர்தலில்  வென்ற, அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அரசு பதவியேற்ற பின், அங்கு பணியாற்றும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும், 'எச் - 1 பி' விசாக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.                     
மேலும், 'வெளிநாடுகளைச் சேர்ந்த கம்ப்யூட்டர் புரோகிராமர்களை, எச் - 1 பி விசா மூலம் அமெரிக்காவுக்கு வரவழைத்துப் பணியமர்த்தும் போது, அவர்களுக்குக் கூடுதல் சம்பளம் தர வேண்டும்' எனவும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதனால், அமெரிக்காவில் செயல்பட்டு வரும், இந்திய, ஐ.டி., நிறுவனங்கள், இந்தியாவில் இருந்து ஊழியர்களைப் பணியமர்த்துவதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதையடுத்து, கூடுதல் சம்பளம் மற்றும் விசா கெடுபிடி காரண மாக, பணியில் இருக்கும் ஊழியர்களை ஆட் குறைப்பு செய்ய, ஐ.டி., நிறுவனங்கள் முடிவு செய்துஉள்ளன.
இன்போசிஸ், டெக் மகேந்திரா உட்பட, ஏழு முக்கிய, ஐ.டி., நிறுவனங்கள், இந்த ஆண்டில், இன்போசிஸ், டெக் மகேந்திரா உட்பட, ஏழு முக்கிய, ஐ.டி., நிறுவனங்கள், இந்த ஆண்டில், 56 ஆயிரம் ஊழியர்களை, ஆட்குறைப்பு செய்ய திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகி யுள்ளது.
இது எந்தளவுக்கு உண்மை? என்பதை ஆராய்ந்ததில் தெரிந்த விஷயங்கள்
இந்திய - ஐ.டி., நிறுவனங்கள், ஆட்குறைப்பு நடவடிக்கையை, அமெரிக்க தேர்தலுக்கு முன்னரே துவங்கிவிட்டன. அமெரிக்க அதிபரின் அறிவிப்பால்  அது தலைப்பு செய்தியாகியிருக்கிறது.

கடந்த பிப்ரவரி மாதம் நாஸ்காம் இந்தியா தலைமைப்பண்பு மாநாட்டில், ஐடி துறைப் பணியாளர்கள் சந்திக்கவிருக்கும் சவால்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதில், அடுத்த மூன்றாண்டுகளில் ஐடி துறையில் பணியாற்றும் பலரும் தேவையற்றவர்களாகிவிடுவார்கள். நவீனத் தொழில்நுட்ப மாற்றங்களால், 50-60 சதவிகிதம் வரையிலான பணியாளர்களைத் தக்கவைப்பதில் நிறுவனங்கள் கடும் சவால்களைச் சந்திக்க நேரிடும். புதிதாகக் கற்றுக்கொள்வதில் உள்ள சிரமங்களால், 35 வயதுக்கு மேற்பட்டோர் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. மேலும், இனி வரும் காலங்களில் வேலை இழக்கும் ஐடி நிறுவன ஊழியர்களுக்கு வேறு வேலை கிடைப்பதிலும் பல சிரமங்கள் உள்ளன’ எனக் குறிப்பிட்டு, மெக்கின்ஸி நிறுவனம் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.
 ஓராண்டுக்கும் மேலாக, தகவல் தொழில் நுட்பம் சார்ந்த புதிய வாய்ப்புகள், வெளிநாடு களைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு அதிக அளவில் கிடைத்து வருகின்றன. வெளிநாட்டு நிறுவனங்களுடன் போட்டி போட்டு, புதிய தொழில் வாய்ப்புகளை பெறும் நிலையில், இந்திய - ஐ.டி., நிறுவனங்கள் இல்லை.
சர்வதேச போட்டி, தொழில் மந்தநிலை போன்ற காரணங்களால், இந்திய, ஐ.டி., துறை, கடுமை யான நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. பல் வேறு வாய்ப்புகளும், வெளிநாட்டு நிறுவனங்களுக்குச் செல்கின்றன. இந்நிலையில்,அமெரிக்காவில், அதிபர் டொனால்டு டிரம்ப் அரசு, எச் - 1 பி விசாவுக்கு விதித்து வரும் கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக, ஊழியர்களுக்கான செலவு அதிகரித்து வருகிறது; செலவைக் கணிசமாக குறைக்க வேண்டிய கட்டாயத்தில்  இருக்கும் நிறுவனங்கள் இதைப் பயன்படுத்திக்கொண்டு ஊழியர் களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நடவடிக் கையில், இந்திய - ஐ.டி., நிறுவனங்கள் இறங்கி யுள்ளது., எனவே, திறன் குறைந்த மற்றும் மிக அதிக சம்பளம் பெறும் ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இந்திய - ஐ.டி., துறை.     நாஸ்காம்  மதிப்பீட்டின் படி, இந்த ஆண்டில், 56 ஆயிரம் ஊழியர்கள் வரை, ஆட்குறைப்பு செய்யப்பட வாய்ப்புள்ளது

ஆட்குறைப்பு காரணம் இது மட்டுமில்லை. நாம் சர்வதேச தேவைகளுக்கெற்ற்ப அப்டேட் ஆக வில்லை என்பது தான்  உண்மை என்கிறார். வா. மணிகண்டன். இவர் பல பயிற்சிகள் பெற்ற பென்பொறியாளர். பங்களூருவில் பணியிலிருக்கிறார்.
“கடந்த ஏழெட்டு ஆண்டுகளில் தகவல் தொழில்நுட்பத்துறை வெகு வேகமாக புதிய பரப்புகளை அடைந்திருக்கிறது. ஆராய்ச்சிக் கட்டுரைகளில் மட்டுமே மொட்டுகளாக இருந்த சொற்கள் எல்லாம் இன்றைக்கு பூத்துக் காயாகி கனியாகி நிற்கின்றன. இந்தத் துறையின் வேகம் அலாதியானது. ஆனால் நாம்தான் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக எதைக் கற்றுக் கொண்டிருந்தோமோ அதையே கற்றுக் கொண்டிருக்கிறோம். இந்திய வேலைச் சந்தையில் தகவல் தொழில்நுட்பத்துறையின் புதிய பிரிவுகளுக்கு ஆட்கள் இல்லை என்று பேசத் தொடங்கியிருக்கிறார்கள். வேலையில் இருப்பவர்களும் சரி, மாணவர்களும் சரி புதிய பிரிவுகளைப் பற்றி தெளிவான புரிதல்களை உருவாக்கிக் கொள்ள வேண்டிய அவசியம் உண்டாகியிருக்கிறது.

இன்றைக்கு மென்பொருள் துறையில் வேலையில் இருக்கிறவர்களின் பெரிய பிரச்சினை தம்மை ஒரு மென்பொருளோடு பிணைத்துக் கொள்வதுதான். ஆரக்கிளிலில் வேலை செய்தால் அதை மட்டுமே தெரிந்து வைத்துக் கொண்டால் போதும் என்கிற மனநிலை பலருக்கும் இருக்கிறது. மென்பொருள்களைத் தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம்தான் என்றாலும் அது மட்டுமே போதுமானது இல்லை. இன்றைக்கு ஆரக்கிள் இருக்கிறது. நாளைக்கு டேரக்கிள் என்று புதியதாக ஏதேனும் வரக் கூடும். எந்தவொரு மென்பொருளையுமே பத்து நாட்கள் மண்டையை உடைத்தால் கற்றுக் கொள்ள முடியும். அது பெரிய காரியமே இல்லை. அப்படியென்றால் எது பெரிய காரியம்? நம்முடைய துறை சார்ந்த அறிவை வளர்த்துக் கொள்வது. இன்றைக்கு தொலைத் தொடர்புத்துறைக்கான ப்ராஜக்ட் ஒன்றை .net ஐ வைத்துச் செய்து கொடுத்தால் .netஇல் பிஸ்தாவாக இருப்பதைவிடவும் தொலைத்தொடர்புத் துறையில் பிஸ்தாவாக இருப்பதுதான் பெரிய காரியம். உற்பத்தி (manufacturing), ஊர்தி (automobile) என எந்தத் துறையில் வேலை செய்கிறோமோ அதைக் கற்று வைத்துக் கொள்ள வேண்டும். domain knowledge என்பார்கள். அக்குவேறு ஆணி வேறாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்படியொரு அறிவை வளர்த்துக் கொண்டவர்கள் என்னதான் மென்பொருள் மாறினாலும் சமாளித்துவிடலாம்.

புதிதாக என்ன களம் உருவானாலும் அதை நம் துறையில் எப்படிப் பயன்படுத்த முடியும் என்று தெரிந்து வைத்திருக்கிற ஆட்களுக்கு அவசியம் இருந்து கொண்டேயிருக்கும். அப்படிப் பட்டவர்களுக்கு ஆயிரம் வாய்ப்புகளா என்று கேட்டால், ஆம், ஆயிரம் வாய்ப்புகள்தான். என்கிறார்.
கிபி 2000 ஆம் ஆண்டுவாக்கில் சி, சி++, ஜாவா அதன் பிறகு .net என்று படித்துக்
கொண்டிருந்தோம். இன்றைக்கும் கிட்டத்தட்ட அதே நிலைமையில்தான் இருக்கிறோம். கல்லூரிகளில் இத்தகைய பாடங்களைத்தான் சொல்லித் தருகிறார்கள். Cloud, IoT, Business Intelligence மாதிரியான புதிய களங்களைக் கல்லூரிகள் சொல்லித் தருவதில்லை. சுடச்சுட வளர்ந்து வரும் பிரிவுகளைப் பற்றிக் கற்றுத் தருகிற பயிற்சி நிறுவனங்களும் வெகு குறைவு.  என்கிறார் திரு  குஹன் ரமணன். இவர் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளை  உலகளவில் மேற்கொள்ளும் ஒரு நிறுவனத்தின் இயக்குநர்.
 எனவே பிரச்சினைகளுக்கு டிரம்ப் மட்டுமே காரணம் இல்லை நிலவும்  டிரெண்டும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்




31/5/17

யார் நமது அடுத்த ஜனாதிபதி ?


இரு அணிகளின் இணைப்பு  நிகழாதிருப்பதைக் கண்டு  ஒபிஎஸ் கலங்கியிருப்பதற்கும், இபிஎஸ் கவலைப்படாதிருப்பதற்கும்  திமுகவின் செயல் தலைவர் திரு ஸ்டாலின் கலைஞரின் வைரவிழாவினை அகில இந்திய  கட்சி தலைவர்களின் பங்கேற்புடன் பிரம்மாண்டமாக கொண்டாடத் திட்டமிட்டிருப்பதற்கும் ஒரே  காரணம் 

இந்தியாவின் 14வது ஜனாதிபதி யார்? என்ற கேள்விதான்.  
திரு பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் 2017 ஜூலை 25ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே அதற்கு முன் புதிய ஜனாதிபதியைத் தேர்வு செய்ய வேண்டும். தேர்தல் நடைமுறைகளை ஜூனில் தொடங்க வேண்டும். 
வெற்றிக்குதேவையானஓட்டுகள்
ஜனாதிபதி தேர்தல் நடந்தால் இந்தியாவில் உள்ள 4120 எம்எல்ஏக்கள் மற்றும் 776 எம்பிக்கள் வாக்களிப்பார்கள். எம்எல்ஏக்களின் ஒட்டுமொத்த வாக்குமதிப்பு 5,49,474. எம்பிக்களின் வாக்கு மதிப்பு 5,49,408. ஒட்டுமொத்தமாக எம்பி, எம்எல்ஏக்கள் என 4896 பேர் வாக்களிப்பார்கள். அவர்களின் வாக்குமதிப்பு 10,98,882. இதில் பாதிக்கும் மேல் அதாவது 5,49,442 வாக்கு பெறும் வேட்பாளர் வெற்றி பெறுவார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த 5 மாநில தேர்தல்  முடிவுகளில் உபியை பா.ஜனதா ஒட்டுமொத்தமாக அள்ளிக்கொண்ட பின்னர்  அதன்  ஜனாதிபதி தேர்தல் வாக்கு வலிமை அதிகரித்துவிட்டது  

தற்போதுள்ள நிலையில் பா.ஜனதா கூட்டணி பலம் மக்களவையில் 2,37,888ஓட்டுகளும், ராஜ்யசபையில் 49,560 ஓட்டுகளும், மாநில சட்டப்பேரவையில் 2,39,923 ஓட்டுகளும் உள்ளன. மொத்தம் பா.ஜனதா அணிக்கு தற்போது 5,27,371 ஓட்டுகள் உள்ளன. காங்கிரஸ் மற்றும் பிறகட்சிகளுக்கு 5,68,148 ஓட்டுகள் உள்ளன. எனவே வித்தியாசம் 40,777 ஓட்டுகள் தான்.
இந்த  40777 ஒட்டுக்களை எப்படியாவது சேகரித்து தங்கள் வலுவைக் காட்ட  பா.ஜனதா களம் இறங்கியுள்ளது. அதன் முதல் குறி அதிமுக. காரணம் ஜனாதிபதி தேர்தலில் அதிமுகவின் இரு அணிகளுக்கும் 134 எம்எல்ஏக்கள் உள்ளனர். மேலும் 50 எம்பிக்கள் உள்ளனர். இவர்களின் ஒட்டுமொத்த ஓட்டு மதிப்பு 58,984. இந்த ஓட்டுக்கள் முழுமையாகவோ அல்லது கணிசமாகவோ கிடைத்தால்தான்  பா. ஜா காவின் வேட்பாளரின் வெற்றியை உறுதி செய்யமுடியும் 

ஜெயலிதா இருந்திருந்தால் இந்த நிலையையே காட்டி பாஜாகாவையே மிரட்டியிருப்பார். ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்வதைக்கூட கையில் எடுத்திருப்பார்.. ஆனால் மாறாக  இன்று  தற்போதைய சூழலில் அதிமுக  இரு அணிகளுமே  பா.ஜனதாவைப் போட்டி போட்டுகொண்டு ஆதரிக்கும் என்ற நிலை உருவாகிவிட்டது. ஜெயலலிதா மறைவுக்குப் பின் தமிழகத்தில் அதிமுக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பல அமைச்சர்கள் முறைகேட்டில் சிக்கிய புகார்கள் வருகின்றன. இதனால் உருவாகியிருக்கும்  ஒரு நிலையற்ற தன்மையை தங்களுக்க சாதகமாக பயன்படுத்தக் காய் நகர்த்தத் துவங்கியிருக்கிறது பாஜக . தங்கள் பதவியையும், அரசையும் காப்பாற்ற ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதாவை  ஆதரிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு அதிமுக எம்எல்ஏக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

காங்கிரஸின் கணிப்பு  
தொடர்ந்து தோல்விகளை சந்தித்துக்கொண்டிருக்கும் காங்கிரஸ்  2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் எதிர்க்கட்சிகளை ஒட்டுமொத்தமாக ஒரே அணியில் திரட்ட வேண்டிய கட்டாயத்திலிருக்கிறது. இந்த  ஜனாதிபதி தேர்தலை அதற்கு முன்னோட்டமாகப் பயன்படுத்த காங்கிரஸ் விரும்புகிறது. . உடல் நலிவுற்ற நிலையிலும் இந்தப் பணிகளில் சோனியாகாந்தி அதிக ஆர்வம் காட்டி வருகிறார். முதல்கட்டமாக ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத்யாதவ், பீகார் முதல்வர் நிதீஷ்குமார் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து பா.ஜனதாவுக்கு எதிரான அத்தனை எதிர்க்கட்சிகளையும் குறிப்பாக உபியில் எதிரும் புதிருமாக திகழும் முலாயம், மாயாவதி, மேற்குவங்கத்தில் மம்தா மற்றும் கம்யூனிஸ்ட் ஆகியோருடனும் கூட பேச்சுவார்த்தை நடத்தி முடித்து விட்டார்.  தொடர்ந்து திமுக வின் ஆதரவைகேட்ட நிலையில் எழுந்த எண்ணம் தான்  ஜூன் 3ல் கருணாநிதி பிறந்ததினம் மற்றும் சட்டமன்ற வைரவிழாவை முன்னிட்டு சென்னையில் அனைத்து எதிர்க்கட்சிகளையும் பங்கேற்கச்செய்யும் வகையில் தங்கள் பலத்தைக் காட்ட ஒரு மெகா ஷோ..   அது ஜனாதிபதி தேர்தலுக்கு மிகப்பெரிய முன்னோட்டமாக அமையும் வகையில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
ஜனாதிபதி வேட்பாளராக எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து ஆலோசனைகள்முடிந்துவிட்டது. .. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, மகாத்மா காந்தியின் பேரன் கோபால் காந்தி, முன்னாள் சபாநாயகர் மீராகுமார் மற்றும் ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத்யாதவ் இவர்களில் ஒருவர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம்.
 இந்த முயற்சியில் . காங்கிரஸ் வெற்றி பெற்றால் , அது பா.ஜனதாவுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் ஒரு பெரிய அணியை உருவாக்கி விடும். அது 2019 நாடாளுமன்ற தேர்தலில் ஆபத்தாகக் கூட முடியலாம்  என்பதைக் கணித்த பாஜக  மிக வேகமாக வேலைசெய்ய ஆரம்பித்துவிட்டது.  மத்திய அரசின் அமைச்சர்கள் மாநிலங்களுக்கு அடிக்கடி பறக்கிறார்கள். அறிக்கை மழை கொட்டுகிறது
.தெலங்கானா மாநில நலனுக்காக பா.ஜனதா வேட்பாளரை ஆதரிக்கத் தயார் என்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் அறிவித்து விட்டார்.  வருமானவரி வழக்கில் சிக்கியிருக்கும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியும் பா.ஜனதா ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து விட்டார்.  வரும் வாரங்களில்  மேலும் சில கட்சிகள்   பா.ஜனதாவின் மறைமுக விளையாட்டில் சிக்கிவிடும் தற்போதைய சூழலில் பா.ஜனதா வேட்பாளர் வெற்றி பெற 20 ஆயிரம் ஓட்டுகள் மட்டுமே தேவை.

யார் நமது  அடுத்த ஜனாதிபதி ?


இதனால் இந்த ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் அவர் வெற்றி பெறக்கூடிய வாய்ப்புதான் பிகாசமாகயிருக்கிறது.   அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, சுமித்ரா மகாஜன், சுஷ்மா சுவராஜ், திரளெபதி மர்மு, மோகன்பகவத் பெயர்கள் அடிபட்டன. பகவத் மறுத்திருக்கிறார். அத்வானி மீது பாபர் மசூதி வழக்கு மறுபிறப்பெடுத்திருக்கிறது.   ஓடிசா மாநில பழங்குடி இனத் தலைவரும் தற்போதைய ஜார்கண்ட் கவர்னருமான திருமதி திரளெபதி மர்மு    இந்த அதிகாரமிக்க ஆசனத்தை அலங்கரிக்கலாம்.

23/5/17

இன்றைய உலகம் சந்திக்கும் இணையப் போர்


அண்மையில் ஒரே நாளில் 150 நாடுகளில்பல்கலைகழகங்கள்,மருத்துவ மனைகள்  தொழிற்சாலைகளின் 200000 கணினிகள்  ஒரு ரான்ஸ்ம்வேர்  வைரஸால் தாக்கப்பட்டு உலகமே அதிர்ச்சியில் உறைந்தது. பல கணணிகள் செயல் இழந்தன. சில பூட்டப்பட்டன, சிலவற்றில் இருந்தது அத்தனையும் அழிக்கப்பட்டிருந்தன  அமெரிக்காவின் மிகப்பெரிய நிறுவனமான ஃபெட் எகஸ்பிரஸ்,  ஸ்பெயினின் மொபையல் நிறுவனங்கள், இங்கிலாந்தின் மருத்துவமனை  நெட் ஒர்க் ஜெர்மனியின் ரெயில்வே நெட் ஒர்க், பிரான்ஸின் ரென்னால்ட் கார் நிறுவனம் ரஷ்ய உள்துறை அமைச்சகம் ஜப்பானில் பல தனியார் கணணிகள் சினாவில் 40,000 நிறுவனங்கள் எல்லாம் ஒரே நேரத்தில் இந்த ரான்சம் வேரால் தாக்கப்பட்டிருக்கிறது. கணனி பிறந்த போதே இம்மாதிரி ஆபத்துகளும் பிறந்துவிட்டன, ஆனால்  . உலக வரலாற்றில் மிகப்பெரிய ரான்சம்வேர் தாக்குதல் என்று  “எஃப் செக்யூர்”  என்ற உலகின் முன்னணி கணணி  பாதுகாப்பு நிறுவனம் இதைக் குறிப்பிடுகின்றது. 
மால்வேர், ஸ்பைவேர் கேள்விப்பட்டிருக்கிறோம். அதென்ன ரான்சம்வேர்? கணினிகளில் நுழைந்த சில விநாடிகளிலே ஒட்டுமொத்த கணினியையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விடுகின்ற இந்த மால்வேரின் பெயர் ரான்சம்வேர்  
. நிஜ உலகில் கடத்தல்காரர்கள் யாரையாவது பிடித்து வைத்துக்கொண்டு பணம் தந்தால்தான் விடுவிக்க முடியும் என மிரட்டுவது போல, இணைய உலகில் ஹேக்கர்கள் என்பவர்கள், பயனாளிகளின் கணினி உள்ளிட்ட சாதனங்கள் அல்லது அவற்றில் உள்ள முக்கியமான கோப்புகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு, அதை விடுவிக்கப் பணம் தர வேண்டும் என மிரட்ட இதைப் பயன்படுத்துவதால் இந்தப்பெயர். . 
நிஜ உலகக் கடத்தலுக்கும், இந்த வகைக் கடத்தலுக்கும் என்ன வேறுபாடு என்றால் இதில் விஷமிகள் எதையும் கடத்திச்செல்வதில்லை. மாறாகப் பயனாளிகளின் கணினிக்குள் அத்துமீறி நுழைந்து அதைப் பயன்படுத்த முடியாமல் செய்து விடுகின்றனர்.
இது புதிய மோசடி அல்ல. ஆனால் சமீப காலத்தில் இதன் தீவிரம் அதிகமாகிப் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகியிருக்கிறது ரான்சம்வேரில் பல வகைகள் இருக்கின்றன. கணினிக்குள் நுழைந்து அதைப் பயன்படுத்த முடியாமல் பூட்டுப்போட்டு விட்டுப் பணம் கேட்டு மிரட்டுவது ஒரு ரகம். இன்னொரு ரகம், முக்கியமான கோப்புகளை ‘என்கிரிப்ட்' செய்து விட்டு அதை விடுவிக்கப் பணம் கேட்டு மிரட்டுவது. கணினி என்றில்லை, ஸ்மார்ட்போன் உள்ளிட்ட சாதனங்களையும் இப்படிக் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு  ஹேக்கர்ஸ் மிரட்டிப் பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். பெரிய வர்த்தக நிறுவனங்களே இவ்வாறு குறி வைக்கப்படுகின்றன.  என்றாலும் தனிமனிதர்களும் தப்பவில்லை.  இந்த ரான்சம்வேர் தாக்கிய கணினியில் ,  ‘பிட்காயின்’ என்கிற டிஜிட்டல் கரன்சி வடிவத்தில் குறிப்பிட்ட $300 (ரூ.19200) அக்கவுன்ட்டில் பணம் செலுத்தினால் மட்டுமே மேற்கொண்டு இயக்கமுடியும். இல்லையெனில், தகவல்கள் அழிக்கப்படும் என மிரட்டும் வகையிலான அறிவிப்பு 28 மொழிகளில்  வருகிறது. ஏன் இந்த பிட்காயின் என்றால் இதில் அனுப்புபவர்களை எளிதில் அடையாளம் காணமுடியாது. வேறு வழியில்லாமல் இதை ஏற்றுகொண்டுவர்கள் பலர். இப்போது  இது அசுர வடிவம் எடுத்திருக்கிறது 
இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் இந்த வகைத் தாக்குதல்கள் மூன்று மடங்கு அதிகரித்திருப்பதாக ஒரு அறிக்கை தெரிவிக்கிறது. 
இதுமாதிரி ஏதோ ஒன்று வரப்போகிறது என்று சில வாரங்களுக்குமுன் செய்தி கசிந்தது.. ஆனால் இந்த விஸ்வரூபத்தை எவரும் எதிர்பார்க்கவில்லை. பல நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா அதிகம் பாதிக்கப் படவில்லை(இந்தக் கட்டுரை எழுதும் வரை) சில பெரிய மென்பொருள் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன ஆனால் அது அவர்கள் தொழில் ரகசியங்களையும் வியாபாரத்தையும் பாதிக்கும் என்பதால்  அறிவிக்கவில்லை என்றும் சொல்லுகிறார்கள். வங்கிகளுக்கு பாதிப்பில்லை  என்று இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் அறிவித்திருக்கிறார்கள்.
யார் இதைச் செய்திருக்கிறார்கள்?
“ ரஷ்ய அரசின் உள்துறை” என்கிறது அமெரிக்கா. “எதுவானாலும் எங்களைக் குற்றம் சொல்லுவதே இவர்களுக்கு  வேலயையாய் போச்சு  செய்திருப்பது அவர்களுடைய  உளவுத்துறைதான்” என்று அறிவித்திருக்கிறார் ரஷ்ய அதிபர் புட்டின். 
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை (என்.எஸ்.ஏ.) விண்டோஸ் கணனிகளுக்குள் நுழைய, உருவாக்கிய,இணையவழி தாக்குதல் ‘டூல்’களை (கருவிகளை) கொண்டு இது நடந்திருக்கிறது. பாதுகாப்புத்துறை. அசட்டையாக இருந்ததால், அது  திருடப்பட்டு எதிரிகளின் கைகளுக்கு போய், இப்படியான தாக்குதல் சாத்தியமாகியுள்ளது என தனது டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார் எட்வர்ட் ஸ்னோடன்   இவர்  அமெரிக்காவின்  சூப்பர் கில்லாடி  ஹேக்கர். 
பெரிய நிறுவனங்களும், மருத்துமனை, அரசு அலுவலகங்கள் தாக்கப்பட்டிருப்பதால் இது வெறும் பணம்  பிடுங்கும் சமாசாரம் இல்லை. “எங்களால் உங்கள் கணினிகளை உடைக்க முடியும் என்று காட்டும் செயல். அது தீவிரவாதிகளா? அல்லது  அடுத்தவர் துன்பத்தைக் கண்டு சந்தோஷிக்கும் கொடூரமான ஒரு குழு வா?” என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று நியூயார்க் டைம்ஸ் எழுதியிருக்கிறது. 
பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பே இல்லையா ?
ஹேக்கர்களுக்கு இணையாக அதைச் சமாளிக்கும்  வித்தைகளைத் தெரிந்தவர்களும் நிறைந்தது இணைய உலகம். தாக்குதல் நிகழ்ந்த சில மணி நேரங்களிலேயே  ஐரோப்பிய காவல்துறையான “யூரோபோல்” ஒரு அறிவிப்பை வெளியிட்டது. “ நோ-மோர் ரான்சம்” என்ற தளத்தை  உருவாக்கி உடனடியாக தொடர்புகொள்ளுங்கள்  பூட்டப்பட்ட உங்கள் கம்யூட்டரை திறக்கும் சாவியை நாங்கள் தருகிறோம். என்று அறிவித்திருக்கிறது. நெதர்லாந்து காவல்துறை மற்றும் இன்டெல் செக்யூரிட்டி மற்றும் காஸ்பெர்ஸ்கி லேப் ஆகியவையும் இதில் இணைந்துள்ளன.தாக்குதலுக்கு இலக்கானவர்களுக்குத் தேவையான உதவியை இந்தத் தளம் அளிக்கிறது. ரான்சம்வேர் தாக்குதல் தொடர்பான தகவல்கள் இந்தத் தளத்தில் தொடர்ந்து ‘அப்டேட்' செய்யப்பட்டு வருகிறது 
 எது எப்படியோ? உலகின் எந்த கணணிக்குள் நுழையும் ஒரு சக்தி பிறந்திருக்கிறது என்பதும்   அது சிலரின் இன்று  விரல் நுனியில் இருக்கிறது என்பது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.  அது தேவதைகளின்  விரலா, அல்லது அசுரர்களுடையதா என்பது நாம் கணணியைத் திறக்கும் நேரத்தில் நமது அதிர்ஷ்டத்தைப் பொருத்த விஷயம்   


 இம்மாதிரி தாக்குதலிலிருந்து காத்துக்கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்?

1. கணினியின் இயங்கு தளமான (ஆபரேடிங் சிஸ்டம்) விண்டோஸ் பழைய வெர்சனாக இருந்தால் அதை தற்போது உள்ள புதிய வெர்சனுக்கு (விண்டோஸ் 10) ஏற்றது போல அப்டேட் செய்து கொள்ள வேண்டும். 
2. ஒருவேளை நீங்கள் பழைய ஆபரேடிங் சிஸ்டமை (விண்டோஸ் XP, 7, விஸ்டா) பயன்படுத்தி வந்தால், தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனம் அதற்கான அவசர பாதுகாப்பு இணைப்பை உருவாக்கியுள்ளது. அதை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
3. கணினியில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள ஆண்டி வைரஸ் உள்ளிட்ட முக்கிய சாப்ட்வேர்களை தற்போது வரை சரியான அப்டேட்களை செய்து கொள்ள வேண்டும்.
4. கணினியில் இணைய வசதிகளை கொண்டிருக்கும் பட்சத்தில் முக்கியமாக பயர்வால் (firewall) வசதியை கண்டிப்பாக ஆக்டிவ் செய்ய வேண்டும். ஆக்டிவாக இருந்தாலும் இணைய வழி ஊடுருவலை தடுக்கும் வகையில் பயர்வால் அமைப்புகளை (setting) மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்.
5. சர்வரில் இருந்து தகவல்களை அனுப்பும் அமைப்பை தற்காலிகமாக செயலிழக்கச் செய்யுமாறு மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
6. கணினியில் உள்ள தேவையான தகவல்களை பேக்அப் (Backup) செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் தகவல்களின் இழப்பைத் தடுக்கலாம்.
7. முன் அறிமுகம் இல்லாத நபர்களிடமிருந்து வரும் இ-மெயில் தகவல்களை திறந்து வாசிக்க முயற்சிக்க வேண்டாம். விளம்பரம் உள்ளிட்ட தேவையற்ற இ-மெயில்களிடமிருந்து விலகியிருப்பது நல்லது.
8 ஈ மெயில்களில் எதேனும் இணையதளத்தின் லிங்க் கொடுக்கபடிருந்தால் அதை மெயிலில் இருந்து கிளிக் செய்து திறக்க வேண்டாம். அவசியமானால் அந்தத் தளத்தை நேரடியாகத் திறக்கலாம். ஆபத்தானதால் உங்கள் கணனி எச்சரிக்கும் 
 தினசரி கணினியை  ஆப்  செய்தபின்

1. கணினியின் சர்வர் மற்றும் நெட்வொர்க் ஸ்விட்சுகளின் இணைப்பைத் துண்டிக்க வேண்டும்.
2. வை-பை இணைப்பு, லேன் (LAN) இணைப்பு, ரூட்டர்கள் ஆகியவற்றைத் துண்டித்து ஆப் செய்து வைக்க வேண்டும்.
3. ஸ்மார்ட் டி.வி, டேப்லட், மொபைல் போன்கள் ஆகியவற்றையும் ஆப் செய்து வைக்க வேண்டும்.
4. கணினி, மொபைல் ஆகியவற்றில் ப்ளூ டூத், ஹாட்ஸ்பாட் ஆகியவற்றை ஆன் செய்ய வேண்டாம்.
 எல்லா வற்றிற்கும் மேலாக இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க சிறிது நாட்களுக்கு இணைய இணைப்பை பயன்படுத்தாமல் இருக்கலாம்.
V,Ramanan
13-03-2017


11/5/17

அடுத்த கோஹினூர் வைரம்உங்களுக்குக் கிடைக்குமா?


இந்திய அரசியல் வரலாற்றில் சகா வரம்பெற்ற சில செய்திகள் உண்டு. அதில் ஒன்று கோஹினுர் வைரம். 



இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள கோல்கொண்டா சுரங்கத்தில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட 105 காரட் மதிப்பு கொண்ட வைரம் தான் தற்போது வரை உலகின் மிகப் பெரிய வைரமாகக் கருதப்படுகிறது. இதனை கோஹினூர் வைரம் என்று வர்ணிக்கின்றனர். இந்தியாவுக்கு சொந்தமான இந்த வைரம் பல நூற்றாண்டுகளாக பலரிடம் கைமாறி இறுதியாக 1850-ல் பிரிட்டன் மகாராணி விக்டோரியாவிடம் சென்று சேர்ந்தது.
அப்போது முதல் இந்த வைரம் பிரிட்டன் மன்னர் பரம்பரையின் சொத்தாக மாறியுள்ளது. தற்போது மகாராணியின் மகுடத்தில் இந்த வைரம் பதிக்கப்பட்டிருக்கிறது., ஆண்டு தோறும் லண்டனில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படுகிறது

.
105 காரட், 21 கிராம் எடையும் உள்ள இந்த  வைரத்தின் மதிப்பு  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கபடவில்லை. ஆனால் இது பதிக்கப்பட்டிருக்கும் கீரிடத்தின் மதிப்பை  இங்கிலாந்து அரசு அறிவித்திருப்பதால் அதிலிருந்து இதன் மதிப்பை ஒரு பில்லியன் டாலர்(6700 கோடிகள்) என மதிப்பிடுகிறார்கள்  
 பாகிஸ்தான், வங்கதேசம் உள்பட கோஹினூர் வைரத்தைப் பல நாடுகள் சொந்தம் கொண்டாடி வருகின்றன. அந்த வைரம் இந்தியாவின் இறையாண்மையைப் பிரதிபலிக்கும் வைரம். அது இந்தியாவில் தான் இருக்க வேண்டும் பிறப்பிடத்துக்கே மத்திய அந்த  அரசு கோஹினூர் வைரத்தை மீட்டுக் கொண்டுவர உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் “ஆல் இந்தியா ஹியூமன் ரைட்ஸ் அண்ட் சோஷியல் ஜஸ்டிஸ் பிரன்ட்” என்ற அமைப்பு பொதுநல மனு தாக்கல் செய்யதது. நீண்ட நாட்களுக்குப்பின் இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹார் தலைமையிலான அமர்வு, "வெளிநாட்டு அரசாங்கத்துக்கு நாம் எவ்வித உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. இத்தகைய மனுக்கள் அவசியமற்றது"  என்று தீர்ப்பளித்திருக்கிறார். 
இந்த வைரம் இனி இந்தியாவிற்குத் திரும்பவாய்ப்பில்லை என்ற நிலை எழுந்திருக்கும்  நேரத்தில்,  வெளியாகியிருக்கும் ஒரு செய்தி இந்த வைரம் கிடைத்த இடத்தில் வைரம் தேடும் வேட்டை இந்த  ஆண்டு திவிரமாகத் துவங்கியிருக்கிறது. 
விஜயவாடாவில் இருந்து சுமார் 100 கி.மீ. தொலைவில் உள்ளது கொல்லூர் கிராமம் இதுகிருஷ்ணா ஆற்றின் மீது  டாக்டர் KL ராவ் சாகர் நீர்ப்பாசன திட்டத்தினால் உருவான ஒரு அணையினால் முழ்கிய 2.லட்சம் சதுர கிலோமீட்டரில் மூழ்கிய   கிராமங்களில் ஒன்று. .  
இந்தக் கிராமமும் அதன் பகுதிகளும்  பல நூற்றாண்டுகளாக வைர சுரங்கமாக இருந்திருக்கிறது, குதுப் ஷாஹி வம்சத்தின் கீழ் அதன் தலைநகரமான கோல்கொண்டா வர்த்தகத்தின் ஒரு உலகளாவிய மையமாக இருந்திருக்கிறது மில்லியன் கணக்கான வைரங்கள் பல காரட்களில் 15லிருந்து 19 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையிலான காலத்தில்  கொல்லூர் நகரத்தில் இருந்து வெட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.
கோஹினூர் 16 ஆம் நூற்றாண்டின் போது வெட்டப்பட்டது மற்றும் கோல்கொண்டாவில் விற்பனை செய்யப்பட்டது. கொல்லூர்-பாரிடலா பகுதிகளைச் சுற்றியுள்ள சுரங்கங்கள் 1830 ஆம் ஆண்டு வரை செயல்பட்டன, ஆனால் அவை படிப்படியாக கைவிடப்பட்டன. 1990 களில் மாவோயிஸ்டுகள் இப்பிராந்தியத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தபோது, ஏறக்குறைய 1,000 ஏக்கர் நிலப்பரப்பை ஏழைகளுக்கு  வழங்கினார்கள்.  பின்னர் 2004 ஆம் ஆண்டில்,  கிருஷ்ணாவின் தண்ணீரைத் தடுத்து  ஒரு பாசன நீர் திட்டத்தை ராஜசேகர ரெட்டி அரசாங்கம்  துவக்கியதின் விளைவாக கொல்லூர் உட்பட எல்லாக் கிராமங்களும் 50 அடி நீரில் முழ்கி கிடக்கிறது. அந்த கிராங்களில் வசித்தவர்களுக்கு மாற்று இருப்பிடங்கள், நிலங்கள் வழங்கப்பட்ட போதிலும் இந்த ஏரிக்கரை ஓரத்திற்கு  ஒவ்வொரு  கோடைக்காலத்திலும்  அந்த மக்கள் வருகிறார்கள்.  அவர்கள் மட்டுமில்லை ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்கள், பெரிய வைர வியாபாரிகள் என்றும் பலரும் வருகிறார்கள்.
 எதற்குத்  தெரியுமா? அந்த ஆற்றின்  நீர் வற்றி கரைப்பகுதிகளிலிருக்கும் பாறைகளில் இடுக்குகளில் கிடைக்கும் அபூர்வ கற்களுக்காக. சுரங்கங்கள் அழிந்து பல காலங்கள் ஆனாலும் இன்னும்  வைரக்கற்கள் இருக்கின்றன என அவர்கள் நம்புகின்றனர். அவ்வப்போது  தொடர்ந்து கிடைக்கும் சில விலை மதிப்புள்ள கற்கள் இந்த நம்பிக்கையை  வலுவடையச்செய்கிறது.  
 இந்த பகுதியில் வாழும்  விவசாயக்கூலிகள், ஆடுமாடு மேய்ப்போருக்கு  இங்கு வைரக்கற்கள் தேடுவது ஒரு பார்ட் டைம் பிசினஸ். நீர்த்தேக்கத்தில் நீர் குறைய ஆரம்பிக்கும் போது ஒவ்வொரு ஆண்டும் இவர்கள் பிஸியாகி விடுவார்கள். கற்களை தேடிஎடுத்து சேமித்துக்கொள்வார்கள்.  பின்னர் வியாபாரிகளிடம் காட்டி விற்று விடுகிறார்கள். இதற்காகவே  இப்போது இங்கு  வெளி மாநிலங்களிருந்து வியாபாரிகள் வந்து அருகிலிருக்கும் குண்டூர், விஜயவாடா போன்ற இடங்களில்   தங்கி நேரடியாக  கூலிக்கு இவர்களை அமர்த்தி கற்களை சேகரிக்கிறார்கள். கற்கள் கிடைத்தவுடன் அவர்களுக்கு செல்போன் மூலம் தெரிவிக்கிறார்கள்.   நாள் கூலியைத்தவிர கொண்டுவரும் கற்களை ஆராய்ந்து அதற்கேற்ப நல்ல   விலையும்  தருகிறார்கள் என்கிறார் உள்ளூர் வங்கி மேலாளர் ஒருவர். 
ஒரு கல்லை எப்படி மதிப்பிடுகிறார்கள்? இதற்கான   நவீன எலக்டிரானிக் கருவிகளை இங்கு வரும்  வியாபாரிகள் கொண்டுவருகிறார்கள்.  முதல் சோதனையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கற்கள் அதில் தீவிரமாகச் சோதிக்கப்பட்டு  கிராம கமிட்டி தலைவர்,  தேடி  எடுத்தவர்கள்  முன்னிலையில் விலை நிர்ணயக்கபடுகிறது  

பிரச்சனைகள் இல்லாமல் இல்லை. சில ஆண்டுகளுக்கு முன் ஆடுமேய்க்கும் ஒரு சிறுமிக்கு கிடைத்த கல்லின் மதிப்பு 7 லட்சம்  என்றவுடன் அத்தனை கிராமங்களும் மகிழ்ச்சியடைந்தன. ஆனால் அந்தச் சிறுமியின் உயிருக்கே பாதுகாப்பில்லை என்ற  நிலை எழுந்தது, கடைசியில் போலீஸார் தலையிட்டினால் அந்த பெண்ணுக்கிடைத்தது 30, 000 ரூ  தான் என்கிறார்   இதில் ஈடுபட்டிருக்கும் ஒரு வியாபாரி. இந்த நிலையினால் இப்போது கிராம மக்கள் கூலிக்கு வைரங்களைத் தேடுவதையே விரும்புகிறார்கள் தனியாகப் போய் தேடபவர்களும் இருக்கிறார்கள் .  
 அரசின் அனுதி வேண்டாமா?  எந்த ஒரு நீர்ப் பாசன திட்டப்பகுதியின் நிலப்பரப்பும்  அரசுக்குச்சொந்தமானது. அதில் இப்படிப் போய்த் தேடுவது சட்டப்படி குற்றம்.  ஆனால் 40 ஆண்டுகளாக நடைபெறும் இந்த வைரத்தேடல் அரசால் அதிகம் கண்டுகொள்ளப்படவில்லை என்பதால்  ஆர்வத்துடன்  வருபவர்கள்  ஆண்டுதோறும் அதிகரிக்கிறார்கள்  முதல் முறையாக வருபவர்களுக்கு  பணம் வாங்கிக்கொண்டு வழிகாட்டியாக உதவ, உள்ளூர் இளைஞர்கள் காத்திருக்கின்றனர்.  
நீங்களும் போய் முயற்சிக்கலாம்.   அடுத்த கோஹினூர் கிடைக்கும் அதிர்ஷடசாலி   ஒரு வேளை நீங்களாக   இருக்கலாமே

4/5/17

600 புன்னகை மன்னர்கள்




கவர்ச்சியில்லாத உடலமைப்பு, பொருந்தாத உடைகள், நைந்து போனகாலணிகள்,  பழைய தொப்பி, வளைந்த   ஒரு பிரம்புக்கைத்தடி கோணல் நடையுடனான நடிகர் என்று சொல்லி முடிக்கும்முன்னரே நம் மனதில் நிற்கும் உருவம் சார்லி சாப்ளின். திரைப்படங்கள் பேச ஆரம்பிக்கும் முன்னரே அதில் நடித்த இவரது நடிப்புப் பேசப்பட்டது.  நான்கு தலைமுறைகளுக்கு அறிமுகமாகியிருக்கும் இந்தக் கலைஞரின் 128 வது பிறந்த நாள் அண்மையில்  மிகப் புதுமையான முறையில் ஜெனிவாவில் கொண்டாடப்பட்டது. 
அந்த விழாவிற்கு வந்த  662 பேர்களும், பெண்கள், குழந்தைகள் உள்பட அனைவரும்  சார்லி சாப்பிளினின் டிரேட் மார்க் உடையான  ஹிட்லர் மீசை,கருப்பு கோட்டு, தொப்பி, பிரம்பு உடன் வந்திருந்தார்கள்.  இந்த 128 வது பிறந்த நாள் மட்டும் அப்படி என்ன விசேஷம் என்கிறீர்களா?  இருக்கிறது

.
சுவிட்ஸ்ர்லாந்தில் ஜெனிவா நகருக்கு அருகிலிருக்கும் ஒரு அழகான ஏரிக்கரையிலிருக்கும்  வீட்டில் தான் சார்லி சாப்ளின் வாழ்க்கையின் கடைசி 25 ஆண்டுகள் வாழ்ந்தார்.  ஏழ்மைநிலையிலிருந்து மிகுந்த கஷ்டங்களுக்கிடையே கலைஞனாக, படத்தயாரிப்பாளாரக, இசை அமைப்பாளராக  வளர்ந்து உலகையே திரும்பிபார்க்கவைத்த சார்லி சாப்ளினுக்கு அமெரிக்கா சென்று அங்கு வாழ ஆசை. ஆனால் 1950 களில் ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் நிகழ்ந்து  கொண்டிருந்த பனிப்போரினால், கம்னியூஸ்ட்களாக இருப்பார்கள் எனச் சந்தேகப்படுபவர்களுக்கு விசாக்கள் மறுக்கப்பட்டது. சார்லி இடதுசாரி சிந்தனை கொண்டவர் எனக் கருதப்பட்டதால் அவருக்கும் விசா மறுக்கப்பட்டது. அதனால் அமெரிக்காவிற்கு எக்காலத்திலும் வரமாட்டேன் எனச் சபதம் செய்த சாப்பிளின் ஐரோப்பாவில் சுவிஸ்ஸர்லாந்தில் 14 ஏக்கர் பரப்பில் அழகான தோட்டத்துடன் கூடிய  ஒரு அரண்மனை வாங்கி வசித்துவந்தார். 
அந்த இடம் அவருடைய மறைவுக்குப் பின் இப்போது  சாரலியின் கருவூலமாக்கப் பட்டிருக்கிறது .  ஒற்றுமையில்லாத சார்லியின் வாரிசுகளுமிடருந்து (அவருக்கு 11 குழந்தைகள்) நீண்ட நாள் போராட்டத்திற்கு பின் பெறப்பட்ட அந்த அரண்மனையை பெரும் செலவில் புதுப்பித்து  சார்லி சாப்ளின் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் சேகரித்து ஒரு கருவூலமாக உருவாக்கியிருக்கிறார்கள் சார்லியின்  ரசிகர்கள் கொண்ட ஒரு குழு. 
அவர் நடித்த முதல் படத்திலிருந்து கடைசிப்படம் வரை  உள்ள ஸ்டில்கள், சில செட்டுகள், அவரது அறை படித்த புத்தகங்கள், சந்திப்புகளின் படங்கள் விருதுகள், அவரைக் கவர்ந்தவர்களின் தத்ரூப மெழுகுச்சிலை  எனப் பலவிஷயங்களால் நிரம்பியிருக்கிறது அந்த இல்லம். அவரைக் கவர்ந்தவர்களின் உருவங்களில் சர்ச்சிலுக்கு அருகில் காந்தி.  சார்லி சாப்பிளினுக்கு 8 நாடுகளில் நிறுவப்பட்டிருக்கும்  சிலைகளின் படங்களும் இங்கே காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது . ஆண்டுக்கு 5 லட்சம் சுற்றுலாப்பயணிகளை கவர்கிறது இந்த இடம்.

கடந்த ஆண்டு திறந்து வைக்கப்பட்ட இதை உருவாக்கப் பிடித்த காலம் 10 ஆண்டுகள். காட்சிக்காகப் படங்கள் சேர்ப்பது மட்டுமில்லாமல் சில அரசாங்கங்கள் உள்பட சமந்தப்பட்டவர்களிடம், ,  காட்சிப் பொருட்களை பயன்படுத்திக்கொள்ளும் உரிமைகளைப் பெற்றிருக்கிறார்கள். ‘செட்’களை அந்தக் கலைஞர்களைக்கொண்டே உருவாக்கியிருக்கிறார்கள். உள்ளே இருக்கும் அரங்கத்தில் பிலிம் சுருளை ஓட விட்டு பழைய ப்ரொஜ்க்டரில்  சார்லியின் பேசாத படங்களை ஓட்டிக் காட்டுகிறார்கள். இத்தனை ஏற்பாடுகளையும் செய்ய வேண்டியிருந்ததானால் தான்  10 ஆண்டுகள்
 .இந்த மியூசியம்தான் அவர்களது  முதலாமாண்டு விழாவைக்கொண்டா  சார்லியின் ரசிகர்களுக்கு “அவரைப்போல உடையணிந்து வாருங்கள்” என விடுத்த அழைப்பின் விளைவுதான் 600க்கும் மேற்பட்ட சாப்ளின்கள். 
அவர்களைத்தவிர  குழந்தைகளும் குடும்பத்தினரும் சார்லின் சாப்ளினின் உடையில் வருவார்கள் என்பது நாங்களே எதிர்பார்க்காத ஒன்று என்கிறார்.   திருமதி பிலிப்பி மெய்லன் என்ற கட்டிட கலைஞர். இவர்தான்  இந்த குருவூலத்தை உருவாக்கிய குழுவின் தலைவர்.

வந்தவர்கள் அனைவரும் ஒரு நட்சத்திர வடிவில் நின்று சார்லிக்கு பிடித்த  ஒரு பாடலைப் பாடினார்கள்

மிக அழகான சூழலில் ஏரிக்கரையிலிருக்கும் இந்த பூங்காவில்   சார்லி சாப்பிளினுக்கு ஒரு சிலையும் இருக்கிறது. உலகில் சொந்த நாட்டில் சிலை நிறுவப்பட்டிருக்கும் ஒரே காமெடியன்  சார்லி சாப்ளின் எனச்சொல்லுகிறது அதன் கீழ் உள்ளக் குறிப்பு. 

அவர்களுக்குத்தெரியாதது 
நாம் கலைவாணருக்கு சிலை நிறுவி கௌரவித்திருக்கும் விஷயம்




(கல்கி 7/4/2017)

21/4/17

ஹலோ ஸ்மார்ட் இந்தியா


மாரத்தான் தெரியும். வாக்கத்தான் கூட தெரியும். அதென்ன ஹாக்கத்தான்?

கணினித்துறையினர் பலர் ஒன்றாகக்கூடி தங்களுடைய புதிய யோசனைகளை- “பெட்டிக்கு வெளியே” என்று சொல்லுவார்களே அந்த அவுட் ஆப் பாக்ஸ் திங்கிங்கில் உதித்த புதிய எண்ணங்களை ஒரு திட்ட அறிக்கையாக சமர்ப்பித்து அதை விளக்குவார்கள். நீதிபதிகளாக இருக்கும் வல்லுநர் குழு தேர்ந்தெடுக்கும் சிறந்த திட்டங்களுக்கு பரிசுகளும் பெரிய நிறுவனங்கள் அந்த யோசனையை நல்லவிலை கொடுத்து வாங்கும் வாய்ப்பு எல்லாம் கிடைக்கும்.
“ ஹாக்” என்றால்கணினி மென்பொருள் திருட்டு என்ற அர்த்தத்தில் மட்டுமே பரவலாக அறியப்பட்ட இந்த வார்த்தையின் சரியான அர்த்தம் ஒரு கணினி யின் மென்பொருள் திட்டத்தை “அலசி ஆராய்வது” என்பது. அதில் பலர் பங்கேற்று குறிபிட்ட நேரத்துக்குள் தாங்கள்: யோசனைகளைச்சொல்லும் போட்டியானதால் அதை மாராத்தானுடன் இணைத்து “ஹாக்கத்தன்” எனப் பெயரிட்டார்கள். 1990ல் மிக சாதாரணமாக ஒரு நகர அளவில் துவங்கிய இது 2010லிருந்து உலகின் பல நாடுகளில், சில சமயம் யாஹு போன்ற பெரிய நிறுவனங்களுன் நடத்த ஆரம்பித்தன. இப்போது உலகின் பல நாடுகளில் இது நடக்கிறது. ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் நடைபெறும் இதில் முக்கியமான விஷயம் தன்னைப்போல சிந்திக்கும் பல இளைஞர்களைச் சந்திக்கும் வாய்ப்புதான். செலவுகள் பங்கேற்பவர்களுடையது. என்பதால் சாதாரண தங்குமிடம், (சிலசமயங்களில் டென்ட் தான்) எளிமையான உணவு போன்றவற்றுடன் ஓய்வு நேரங்களில் இளைஞர் பட்டாளம் பாட்டு, ஆட்டங்களுடன் கலக்கிக்கொண்டிருப்பார்கள்

பிரதமர் மோடி அறிவித்த டிஜிட்டல் இந்தியாவின் ஒரு பகுதியான ஸ்மாட் இந்தியாவின் ஒரு பகுதியாக இந்தியாவில் “ஹாக்கதான் 2017” ஒரு சில மாற்றங்களுடன். அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் இதை அரசின் நிறுவனங்கள் முன்னெடுக்கும். போட்டிகளை விதிகளுடன் நடத்த மனிதவள அமைச்சகத்தின் மேற்பார்வையில் இயங்கும் ஒரு குழு நடத்தி அரசே பரிகளையும் அளிக்கும். நாட்டிலுள்ள அனைத்து பொறியில் கல்லூரியிலிருக்கும் கணினி பிரிவு மாணவர்களின் குழு அந்தக் கல்லூரியின் சார்பாகப் பங்குகொள்ளலாம்.. ஒரு குழுவில் ஆறு பேர் இருக்கலாம்.அதில் கட்டாயமாக ஒரு மாணவி இருக்கவேண்டும். குழுவைக் கல்லூரியின் பேராசியர் ஒருவர் தலைவராக இருந்து வழிநடத்த வேண்டும். ஒருகல்லூரி 3 குழுக்கள் வரை அனுப்பலாம். கணனிப்பாடத்தை எடுத்துப் படிக்காத ஆனால் ஆர்வமுள்ள மாணவர்களும் அந்தக் குழுவில் இருக்கலாம் போன்ற நிபந்தனைகளுடன் திட்டம் அறிவிக்கபட்டது. உலகில் இதுவரை இந்த ஹாக்கத்தான் அரசின் ஆதரவுடன் நடந்ததில்லை

இந்திய விண்வெளி நிறுவனத்தின் ஆராய்ச்சி பிரிவிடம் இதை நடத்தும் பொறுப்பு ஒப்படைக்கப் பட்டது. அவர்கள் செய்த முதல் காரியம் அரசுத்துறைகளிடம் உங்கள் துறையில் சமூகம் சார்ந்த புதிய கண்டுபிடிப்பாக அல்லது இருப்பதில் எதை விரிவாக்கம் செய்ய வேண்டும்? என்று கருதுகிறீர்கள் என்பதைத் தெரிவிக்கக்கோரினார்கள் . 29 அமைச்சகங்களிலிருந்து வந்து சேர்ந்த பல யோசனைகளில் 598 பிரச்சனைகளை அடையாளம் கண்டு அதை ஒரு போட்டியாக ஹாக்கத்தான் 2017க்காக அறிவித்தார்கள்.
முதலாண்டு என்பதால் ஓரளவுதான் பங்கேற்பு இருக்கும் என எதிர்பார்த்த ஐஎஸ் ஆர்வோ போட்டிக்கு பதிசெய்தவர்களின் எண்ணிக்கைக் கண்டு மிரண்டுவிட்டது. ஆன்லனையில் பதிவு என்பதால் கடைசிநிமிடம் வரை விண்ணப்பங்கள் குவிந்தன. 42000 மாணவர்கள் பங்கேற்கும் 7531 குழுக்கள் விண்ணப்பித்திருந்தன. அவற்றில் 10000 மாணவர்கள் அடங்கிய 1266 குழுக்கள் மட்டும் போட்டிக்கு தேர்ந்த்டுக்கப்பட்டன. இந்தக்குழுக்கள் நாட்டின் 26 மையங்களில் ஒரே நாளில் ஒரே நேரத்தில் தங்கள் திட்டங்களை வல்லுநர்களுக்கு விளக்கினர். 5 நிமிடம் தான் நேரம் அதில் 3 நிமிட விளக்கஉரைக்கு 2 நிமிடம் கேள்வி பதிலுக்கு என ஒட்டம் நடந்து முடிந்தது. இதில் தேர்வு பெற்றவர்கள் இறுதிச்சுற்று ஹாக்கதானில் பங்குகொண்டார்கள்
இந்த ஆண்டு ஹாக்த்தானை நடத்திய மையங்களில் ஒன்றான அகமதாபாத் மையம் ஹாக்கதான் 2017 இறுதிச்சுற்றை நடத்தியது. 50 குழுக்கள் பங்கேற்றன. போட்டிக்காக அறிவிக்கப்பட்ட 35 பிரச்சனைகளில் ஒன்றுக்கு இவர்கள் தங்கள் கண்டுபிடிப்பான தீர்வுகளை விளக்கினார்கள். தொடர்ந்து 36 மணி நேரம் மாணவர் குழுக்கள் விரைவாக தங்கள் எண்ணங்களை கொட்டிக்கொண்டிருந்தார்கள். நிபுணர்கள் குழு திக்குமுக்காடிபோனது. இறுதியில் டென்ஷனில் நகம் கடித்துக்கொண்டிருந்த போட்டியாளர்களிடம் முதல்பரிசான ஒரு லட்சதைப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது தமிழகத்தைச்சேர்ந்த காஞ்சிபுரத்திலிருக்கும் ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியின் டீம். சரி - இரண்டாவது இடம் யாருக்கு? எனக் காத்திருந்போது ஒலித்த அறிவிப்பு மதுரை தியாகராயர் கல்லூரி
கர்நாடக மாநிலத்தின் கல்லூரிக்கு மூன்றாம் இடமும் டில்லி, மும்பய் கல்லூரிகளுக்கு ஆறுதல் பரிசுகளும் அறிவிக்கப் பட்டன. ஐஎஸ் ஆர்வோ தலைவர் பரிசுகளை வழங்கினார்.

இந்த இறுதிச்சுற்றின் முடிவில் போட்டியாளர்களுடன் விடியோ கான்பரன்ஸில் பிரதமர் உரையாற்றினார். இறுதிச்சுற்றுக்கு வராதவர்களும் போட்டிகள் நடந்த மையங்களிடமிருந்து அவருடன் உரையாடினார்கள்.
“உங்களைக் கண்டு நான் பெருமிதம் கொள்ளுகிறேன்” என்று இரவு 8 மணிக்குத் துவங்கிய பிரதமரின் உரையாடல் முடிந்தபோது இரவு மணி 11.
பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு கிராமப்புற சேவை கட்டாயமாக்கப்படவேண்டும், கிராமப்புற இளம்பெண்களுக்கு அரசே நாப்கின்கள் வழங்க வேண்டும் என்பதிலிருந்து அதிநவீன 3டி பிரின்டிங், இயந்திரங்களின் புத்திசாலித்தனம் வரை மாணவர்கள் சொல்லும் சிலயோசனைகளை பிரதமர் பாராட்டுகிறார். சிலவற்றிற்கு கேள்விகள் கேட்கிறார். இறுதியாக

“இன்று அரசாங்கம் அடையாளம் கண்ட பல பிரச்சனைகளுக்கு தீர்வுகளை முன் வைத்திருக்கிறீர்கள். அரசாங்க பிரச்சனைகளுக்கு முடிவு சொல்ல வேண்டியது அரசாங்கம் மட்டும் தான் என்ற மாயை உடைத்து எங்களாலும் முடியும் எனச் சொல்லியிருக்கிறீர்கள்” என்று போட்டியாளர்களைப் பாராடினார்.

‘மாராத்தான் ஓட்டங்களின் வெற்றி என்பது பரிசுபெற்ற சிலரால் நிர்ணயிக்கப்படுவதில்லை. பங்குகொண்டவர்கள் அனைவரும் தான் இந்தப் போட்டிகளை வெற்றியாக்குகிறார்கள்’ என்ற வாசகங்கள் பாரிஸ் நகரில் இருக்கும் சர்வதேச மாராத்தன் பவுண்டேஷனின் முகப்பில் பொறிக்கப்பட்டிருக்கிறது.
இந்த இந்திய ஹாக்கதான் 2017க்கு அது மிகவும் பொருந்தும்.
நாடு முழுவதிலிருந்தும் 42000 ஸ்மார்ட்டான மாணவர்கள் தங்கள் எண்ணங்களை ஓட விட்டிருக்கிறார்களே .