4/1/18

குடகு மலைக் காற்றினிலே 4


மலைச்சரிவில் ஒரு காபி தோட்டத்துக்கு நடுவே அமைக்கப்படிருக்கும் பாதையின் வழியே 1 கீமி நடக்க வேண்டும். பாதுகாப்பான பாதையில் நாம் போய்க்கொண்டிருந்தாலும் இருபுறமும் உயர்ந்த மரங்களூம் பசுமையான செடிகளும், இருப்பது ஒரு காடு எனபதைச்சொல்லுகிறது. காபி பழங்கள் பழுக்கத்தொடங்கி விட்டதால் ஒரு வினோதமான மணம். தாக்குகிறது. சற்று அருகில் நீர் வீழ்ச்சியின் சத்தம், நம்மை ஈர்க்கிறது. நெருங்கியபோது ஒரு அழகான அருவி. பளிரென்ற வெள்ளியாக நீர் பாய்ந்து விழுகிறது. சுற்றிலும் அருவியின் நடுவிலும் பசுமை. படர்ந்திருக்கிறது. பார்க்க ரம்மியமாக இருக்கிறது. பருவ மழை தொடங்கிவிட்டதால் பாறைகள் முழுவதையும் மறைத்து நீர் தாரையாகக் கொட்டிக்கொண்டிருக்கிறது. இதமான வானிலையும் இயற்கை சூழலும் நேரத்தை மறக்கச்செய்கிறது. நெருங்கும்போது சாரல் நீர்முத்துக்களைத் நம் மீது தூவுகிறது. எவருக்கும் குளிக்க அனுமதியில்லை


.
நல்ல வேளை இல்லாவிட்டால் நமது குற்றாலம் போல் அடுத்தவர் பூசிய எண்ணையை நாம் இலவசமாக வாங்கி வர வேண்டியிருக்கும். தமிழகத்தில் மட்டும் தான் இப்படி அருவிகளில் குளிக்க முடியும் என நினைக்கிறேன். இந்தியாவின் பல பகுதிகளிலும் உலகின் சில நாடுகளிலும் அருவி என்பது பார்த்து ரசிக்க மட்டும்தான்.
இந்த அருவி கூட அரைநிமிட நிற்குமோ என்னவோ, ஆனால் செல்பி பிரியர்கள் கூட்டம் அலை அலையாக அதன் முன் வந்துகொண்டேயிருக்கிறது. அருவி 70 அல்லது 80 அடி உயரமிருக்கும். பக்கவாட்டில், பாதுகாப்பான தொலைவிலிருந்து பார்க்க வசதி செய்திருக்கிறார்கள். நேரடியாகப்பார்க்கும் ஒரு வசதியுடன் இருந்த தொங்கு பாலம் மிகவும் வீக் ஆகிவிட்டதால் மூடப்பட்டு இப்போது அதுவும் ஒரு காட்சிப்பொருளாக நிற்கிறது,

இதி அபி ஃபால்ஸ் என அழைக்கிறார்கள். யார் இந்த அபி எனத் தெரியவில்லை. மெடிக்கேரியிலிருந்து 8 கீமி தொலைவில் இருக்கிறது. குறுகிய பாதை என்பதால் கார்களுக்கு மட்டுமே அனுமதி. பஸ்ஸில் வருபவர்கள் 1 கீமி நடக்க வேண்டும் பல ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயேர் ஒருவரிடமிருந்து இந்த இடத்தை விலைக்கு வாங்கிய உள்ளுர்காரர் காபி தோட்டத்துக்காகச் சீரமைத்த போது “கண்டுபிடிக்கபட்டதாம்” இந்த அருவி. இப்போது அவரிடமிருந்து வன வாரியம் இடத்தைப்பெற்று இதை நிர்வகிக்கிறது. இந்த அருவி, காவிரியின் ஒரு சின்ன உப நதியிலிருந்து இங்கு விழுந்து கிழே மீண்டும் காவிரியில் இணைகிறது. என்றார்கள்.


நாம் அடுத்தப் போக வேண்டிய யானை கேம்ப்க்கு செல்லுமிடத்திலிருக்கும் கடைசி போட் 12 மணிக்கு என டிரைவர் நினைவு படுத்துகிறார். அருகில் இருப்பதால் நாளை மாலை நேரத்தில் மீண்டும் ஒரு முறை பார்க்க வருகிறோம் என்று அருவியிடம் சொல்லிவிட்டு கிளம்புகிறோம்.
மெடிக்கேரியிலிருந்து 37 km தொலைவில் இருக்கிறது துபாரே(Dubarae) யானை முகாம். வனத்துறையினர் இங்கு யானைகளை வளர்க்கிறார்கள். காடுக:ளில் மரங்களைத் தூக்கை வரபழக்கப்படுத்தவும், மைசூர் தசரா ஊர்வலத்துக்குச் செல்லவும்பயிற்சி கொடுப்பதற்காக ஏற்படுத்தப் பட்ட கேம்ப் இது. இப்போது காடுகளில் யானைகளை வேலி வாங்குவது தடை செய்யப்ட்டுவிட்டதாலும்,  மைசூர் தசரா முன் போல ஆடம்பரமாகக் கொண்டாடப்படுவதில்லையாதலாலும் யானைகளை என்ன செய்வது தெரியாமல் வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள். கர்நாடக அர்சுக்கு நிஜமாகவே இவை ஒயிட் எலிபென்ட்கள் தான். இப்பபோது மனிதர்களுடன் பழகச்சொல்லிக் கொடுக்கிறார்கள்,. பழக்கபடுத்த பட்ட யானைகளையும் குட்டிகளையும் கோவில்களுக்கி விற்பனை செய்கிறார்கள். முன்னாள் முதலமைச்சர் ஜெயலிதா குருவயூர் கோவிலுக்குக் கொடுத்த யானை கூட இங்கிருந்து தான் என்பது தானாகக் காதில் விழுந்த தகவல்.

    






காவிரி இரு பிரிவாகப் பிரிந்து ஓடும் இடத்தில் நடுவில் இருக்கும் ஒரு தீவு மாதிரியான இடத்திலிருப்பதால் படகில் போக வேண்டும். தூரம் அதிகம் இல்லை ஒடும் காவிரிநதிக்கிடையில் மரங்களும் பசுமை திட்டுக்களும் இனிய காட்சியாக இருக்கிறது, படகு சேருமிடத்தில் கேம்ப்பில் இருக்கும் யானைகள் குளிக்க வருகின்றன. ஒவ்வொரு யானைக்கும் 3 பேர் டீம். அவர்கள் மஹாரஜாக்கள் போல அதன் மீது உட்கார்ந்து வருகிறார்கள். நீரில் அவர்கள் சொல்வது போல எல்லாம் திரும்பிக் காட்டி தேய்த்துவிடும் சுகத்தை அனுபவித்து குளிக்கிறது யானைகள். பலர் பார்க்கிறார்களே என்ற வெட்கமே தும் இல்லாமல் சந்தோஷமாகக் குளிக்கின்றன. நாம் அருகில் சென்று பார்க்கலாம் பாகன் அனுமத்திதால் யானைக்குத் தேய்த்துக்கூட விடலாம். ஒவ்வொரு யானைக்கும், நீ குளித்தது போதும் என்று அதன் பாகன் சொன்னதும் எழுந்து நடக்க ஆரம்பிக்கிறது. நான் நிறைய படங்கள் எடுத்துக்கொண்டிருந்ததால் சந்தோஷமோ அல்லது கோபமோ தெரியவில்லை அருகிலிருந்த என மனைவிமீது துதிக்கையிலிருந்த நீரைப் பீச்சி குளிபாட்டி விட்டது. ஒரு யானை. நீங்கள் மிகவும் லக்கி என்றார்கள் அங்குள்ளவர்கள். கேமிரா தப்பியது தான் லக்கி என நான் நினைத்துக்கொண்டேன்

குளித்தபின் இந்த யானைகள் சென்று நிற்கும் இடத்திலிருக்கும் 3 அடி உயர சுவர்தான் அவைகளுக்கும் நமக்கும் இருக்கும் ”அரண்” சில இடங்களில் அவைகல் அரை வினாடியில் தூக்கி ஏறியக்கூடிய மரக் கம்புகள் தான் வேலி. யானைகளின் அருகில் தந்தங்களை தொட்டுபார்க்கலாம். ஒரு ஒற்றை கொம்பனை மிகஅருகில் பார்த்தோம். வயதாகிவிட்டதால் அதற்குப் பார்வை மங்கி வருவதாக அதன் காப்பாளர் சொன்னார். யானைகளுக்குக் கேட்ராக்ட் ஆப்ரேஷன் செய்வார்களா? யானை டாக்டர் எழுதியிருக்கும் ஜெயமோகனிடம் கேட்க வேண்டும்.
12 மணிக்கு மேல் அங்கு பொதுமக்களுக்கு அனுமதியில்லை. சாப்பாட்டுக்குபின் யானைகள் காட்டுக்குள் போய்விடுமாம். இனி நாளைகாலைதான். மழையிருந்தால் குளியல் கிடையாது. அந்தக் காட்டுக்குள் ஒரு ஃபாரஸ்ட் லாட்ஜ் இருப்பதாகவும் வெளிநாட்டு பயணிகளூம், ஆராய்ச்சியாளர்களூம் தங்குகிறார்கள் என்று ஒரு வெளிநாட்டு தம்பதியுடன் வந்திருந்த கைடு சொன்னார். அவர்களை லாட்ஜுக்கு யானைமீது அழைத்துச் செல்வார்களாம்
.
திரும்பும்போது நதியில் நிறைய ராப்ட் போட்களை- பலூன்போல் காற்றடைத்து செல்லும் படகுகள்- பார்த்தோம். காவேரி சீறிப்பாயும் காலத்தில் இதில் பயணத்து அருகிலிருக்கு இடத்துக்கு நீரோட்டத்துடன் செல்வார்களாம். இந்தத் திரில் பயணத்துக்குக் கட்டணம். கைடு உண்டாம். அங்கிருந்து நதியை எதிர்த்து வரமுடியாத்தால் படகுகளும், பயணிகளும் லாரியில் இங்கு திரும்புவார்களாம் அடுத்தமுறை திட்டமிட்டு வந்து இதைச் செய்து பார்க்க வேண்டும்.

30/12/17

கண்ணுறாங்காக் காவல் வெளீயீடு திருச்சி 24/12/2017


 தமிழ் படைப்பிலக்கியவாதிகளில் மொழிபெயர்ப்பாளனுக்கு பொதுவெளியில் அங்கீகாரம் கிடைப்பது என்பது அரிதான விஷயமாகயிருக்கும் இன்றைய காலகட்டத்தில் திரு ப. சிதம்பரம் அவர்களின் ஆங்கிலப் புத்தகங்களைத் தமிழாக்கம் செய்த எழுத்தாளர்களை அவரது “எழுத்து” இயக்கம் சார்பில் அண்மையில் திருச்சியில் நடைபெற்ற விழா மேடையில் அவரே கெளரவித்தது தமிழ் மொழிபெயர்ப்பாளர்களுக்குக் கிடைத்த கெளரவம்.

.நான் பல ஆண்டுகளாகக் கண்டுபிரமித்துப் போயிருக்கும் ஆளுமைகளில் முக்கியமானவர் திரு. ப சிதம்பரம். அவரது உரைகளில் ஆங்கிலத்திலும் சரி தமிழிலும் சரி அது பாராளுமன்றத்தின் விவாதங்களாகயிருக்கட்டும், இலக்கிய சிந்தனை, அல்லது கம்பன் கழக விழாவாக இருக்கட்டும். தங்கு தடையின்றி அழகான, தேர்ந்தெடுத்த சொற்களில் தனது ஆழமான அழுத்ததமான கருத்தைத் தெளிவான குரலில் சொல்லுவார்.அவரது ஆங்கில நூலைத் தமிழாக்கம் செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தவுடன் மிக மகிழ்ந்து போனேன். காரணம் அவரது ஆங்கிலத்தைபோலவே அரசியல் பார்வைவைகளையும் ரசித்துக்கொண்டிருப்பவன் நான். (சில சமயங்களில் ஏற்காவிட்டாலும் கூட).அரசியல், சட்டம், பொருளாதாரம் நன்கு அறிந்த திரு சிதம்பரம் அவர்களின் ஆங்கிலம் எளிதானது. ஆனால் சொல்லும் கருத்தின் வலிமையை, ஆளுமையை வெளிப்படுத்த அவர் பயன் படுத்தியிருக்கும் சில ஆங்கிலச்சொற்களை எளிதில் தமிழ்படுத்த முடியாது.
ஒவ்வொரு மொழியிலும் ஒரு குறிபிட்ட வார்த்தை பல அர்த்தங்களைக் கொண்டிருக்கும். அதை மொழிமாற்றம் செய்வது சவாலான சிக்கலான ஒரு பணி ஒரு சிறிய தவறு கூட வீபரீத விபத்தாக மாறிவிடக்கூடிய ஆபத்துண்டு . இதுபற்றி நானும் என்னுடன் அவருடைய மற்றொரு புத்தகத்தை இதே சமயத்தில் மொழியாக்கம் செய்த நண்பர் வெங்கிடேஷும் அடிக்கடி விவாதித்திருக்கிறோம்இந்தப்பணியை அவர் எனக்குத் தரும் முன், அவரே தேர்ந்தெடுத்த இரண்டு அத்தியாங்களை மொழியாக்கம் செய்து அனுப்பச்சொன்னார். அது ரோஹித் சக்ரவர்த்தி வெமூலா, என்ற தலித் இளைஞன் தற்கொலை தொடர்பாக எழுந்த பிரச்னை. உணர்ச்சியின் கொந்தளிப்பாகக் கடுமையான ஆங்கில வார்த்தைகளில் அரசைச் சாடிய கட்டுரை.
என்னுடைய மொழியறிவு, மொழிசார் பண்பாடுகுறித்த புரிதல், படைப்பின் தொனி, படைப்பு மொழியின் சிக்கல் போன்றவற்றில் என் உள் வாங்கும் திறனுக்கான சோதனை அது எனப் புரிந்துகொண்டேன். கஷ்டமான கணக்கைக்கொடுத்து மாணவனைச் சோதிக்கும் ஒர் ஆசிரியரை அதில் நான் பார்த்தேன்.சவாலான அந்தக் கட்டுரயை படைப்பின் தொனி மாறாமல், தமிழ் மொழியின் மரபுகளுக்கேற்ப மொழியாக்கம் செய்து அனுப்பினேன். தலைப்பையும் தமிழ் மரபிற்கேற்ப மாற்றியிருந்தேன். விமானப் பயணம் ஒன்றில் அதைப்படித்துவிட்டு நன்றாக வந்திருக்கிறது பணியைத்தொடருங்கள் என்று செய்தி அனுப்பினார். இது அவரது தமிழ் மொழி ஆளூமையையும் ஒரு படைப்பாளியின் உழைப்பை பாராட்டும் பண்பையும் காட்டுகிறது.


மூல நூலின் ஆசிரியர் தமிழ் அறிந்தவர் மட்டுமில்லை, எழுத்தாளரும் கூட என்பதினால் பணி இன்னும் சவாலானது என்பதை உணர்ந்து செய்த 6 மாத உழைப்பு அரங்கத்தில் அங்கீகரிக்கபட்டதில் மகிழ்ச்சி
புத்தக வெளியீட்டில் விழாவில் பங்கேற்ற கனையாழி ஆசிரியர் முனைவர் ராஜேந்திரன், திருவைரமுத்து. திரு ப.சிதம்பரம் அனைவரும் மொழிபெயர்ப்பைப் மிகப் பாராட்டினார்கள். திரு ப. சிதம்பரம் சொன்னதை எங்களால் வாழ்க்கையில் மறக்கமுடியாதது. “நானே தமிழில் எழுதியிருந்தால் இத்தனை அழகாகச் செய்திருக்க மாட்டேன்”
இந்தப் மொழியாக்கப் பணியில் நான் பார்த்து வியந்த விஷயம் அவர் பல இடங்களில் பிரச்சனைகளை ஆக்பூர்வமான விமர்சனத்துடன் குறிப்பிட்ட தீர்வும் சொல்லுகிறார். ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம்பற்றிய கட்டுரையில் திரு. சிதம்பரம். ஐக்கிய முன்னணி அரசில் கருத்து ஒற்றுமை யில்லாததால் தன்னால் அந்தச் சட்டத்தில் திருத்தங்கள் செய்ய முடியவில்லை என்பதை நேர்மையாக ஒப்புகொள்கிறார். இதன் மூலம் அவர் எந்த அரசியல் ஆதாயத்தையும் அடைந்துவிடவில்லை. அரசியல் வாதிகளின் நேர்மையைப் பற்றி விமர்சிக்கப்படும் இன்றைய கால கட்டத்தில் இவரது துணிவு நம்மை ஆச்சரியப்படுத்துகிறது துணிவு என்பது முன்னெடுப்பது மட்டுமில்லை. முடியாதவற்றின் பொறுப்பை ஏற்பதும் தான் என்பதைப் புரிய வைக்கிறார்.
இந்த விழாவிற்கு முக்கிய காரணம் இந்தப் புத்தகத்தை அழகாக வடிவமைத்து வெளியிட்டிருக்கும் பதிப்பாளர் திரு சொக்கலிங்கம். அவர் எங்களைப் போன்ற எழுத்தாளர்களின் எழுத்தை மட்டுமின்றி அவர்களது உணர்வுகளையும் பெரிதும் மதிப்பவர். அவரது கவிதா வாயிலாக எனது இந்த எழுத்துக்கள் வெளியானதைப் பெருமையாகக் கருதுகிறேன்.புத்தகம் இப்போது கவிதாவிலும், கண்காட்சியிலும் கிடைக்கும்

22/12/17

குடகு மலைக் காற்றினிலே 3


காலையில் துயிலெழுப்பியது  தொலைவில் கேட்ட ஒரு  தெளிவில்லாத பாட்டு. “குடகு மலை காற்றில் வரும் பாட்டு கேக்குதா”  என்ற பாடல் நினைவில் வர பால்கனிக்கு வந்து  எதிரில் தெரியும் பனி விலகிக்கொண்டிருக்கும்   மலைச்சரிவைப் பார்த்துக்கொண்டிருந்தபோது நெருங்கி வந்து கொண்டிருந்த அந்தப்  பாட்டு ஒரு கன்னடப் பாடல் எனப்புரிந்தது. அவ்வப்போது நின்று நின்று கேட்டது.  சிறிய அந்த மலைச் சாலையில் ஊர்ந்து வரும் டிராக்டர். அதன் என்ஞின்  மீது ஒரு ஸ்பீக்கர். அது குப்பை சேகரிக்கும் வண்டி. நம் நகரை சுத்தமாக வைத்துக்கொள்வோம் என்ற பாடல் அதன் வருகையின் அடையாளம். விசில், மணி எல்லாம் கிடையாது,  டிராக்டரைப்போலவே அந்த டிரைவரும் உதவியாளரும் பளிச்சென்றிருக்கிறார்கள்.பாடல் நின்றவுடன் அருகிலிருந்த விட்டினர் நிறைய குழந்தைகள் “ குட் மார்னிங் சொல்லி    தங்கள் குப்பை கூடைகளைத் தருகிறார்கள். சேகரித்தப் பின்னர்  பாடல் ஒலிக்க வண்டி பயணத்தைத் தொடர்கிறது. நகரிலுள்ள CLEAN GREEN  என்ற அமைப்பை கடந்த4 ஆண்டுகளாக இதைச்செய்து வருகிறதாம். நகரின் பல இடங்களில் இந்த பெயரில்  குப்பைகளை சேகரிக்கும் பைகள் தொங்குகின்றன. நகரில் பிளாஸ்டிக் கவர்களுக்குத் தடை..

 திட்டமிட்டபடி  காபி தோட்டத்தை கண்ன்டுபிடித்துப்  போகும் வழியில் பார்த்த மாறுதலான  drink and drive என்ற போர்ட்  நிறுத்தியது.  சுய உதவிக்குழு  நடத்தும் ஒரு சின்ன காபிஸ்டால், .வரவேற்ற பெண்மணி அப்போதுதான் அரைத்த காபிபொடியிலிருந்து தயாரித்த கொடுத்த அருமையான காபியை விட ஆச்சரியம் அவர் சொன்ன செய்திகள்..   அந்த கடை யிருக்கும் இடத்தின் பின்னே இருக்கும் சின்ன காபி தோட்டம் அவர் குடும்பத்தினுடையது.  அதில் பணி செய்யும்   தொழிலாளிப் பெண்களுக்கு   உதவ அவர்களுடனும்  தன் நண்பர்களுடன்  இந்த சுய உதவிக்குழுவைத்  துவக்கியதாகவும் குழுவின் திட்டப்படி வாரத்தில் 2 நாள் இங்கு விற்பனையைக்கவனிப்பதாகவும் சொன்னார். ஸ்டேட் பேங்க் கடன் வழங்கியிருக்கிறது. காபி போர்ட் வறுத்து அரைக்கும் இயந்திரத்தை  இலவசமாக வழங்கியிருக்கிறது. என்றார். இந்த குழுவின் சிறப்பானபணிகளுக்காக பரிசுகள் வாங்கியிருப்பதைச் சொல்லும் படங்களை பெருமை பொங்க காட்டினார்


காபி தோட்டத்தின் நுனியில் அங்கு விளைந்து காய்ந்த  புதிதாக அரைத்து தயாரித்த காபி  20 ரூபாய். 
“குழந்தைகள் வளர்ந்து வெளிநாட்டில் இருக்கிறார்கள். நானும் கணவரும் மட்டும் இந்த காபிதோட்ட்த்தைப்பார்த்துகொண்டிருக்கிறோம் நிறைய நேரமிருப்பதால் இந்தப் பணியையும் செய்கிறேன். எங்கள் காபியை வாங்கிம்காபி டே போன்றவர்கள் ஒரு கப் 150க்கு விற்கும்போது நாங்கள் ஏன் செய்யக்கூடாது எனத்தோன்றிற்று. மேலும்  உங்களைப்போன்றவர்களை  அடிக்கடி சந்திப்பதும் மகிழ்ச்சியாகயிருக்கிறது” என்கிறார். இவரும் பல கூர்க் குடும்ப்ப்  பெண்களைப்போல் வீட்டிலேயே ஒயின் தயாரிக்கும்  home made wineல்  எக்ஸ்பர்ட்டாம்.  இங்கு கிடைக்கும் பல வகைப் பழங்களை ஜூஸ் எடுத்து 45 நாள் திறக்காமல் வைத்திருந்தால் அது சற்று புளித்து இயற்கையாகவே உருவாகும் 2% ஆல்காலாகிறது. அதை ஹோம் மேட் ஒயின் என்கிறார்கள்.  ருசித்துப்பார்க்கச் சொன்னார். ஒயின்  என்ற பேரே நமக்கு  அலர்ஜி என்பது அவருக்குத் தெரியாது. பார்ட்டிகளில் பெண்களூம் குழந்தைகளூம் அருந்துவார்களாம். 
ஒருகிலோ உள்நாட்டில் 8000த்துக்கும் வெளிநாட்டில் 22000 ரூபாய்க்கு விற்பதாகச் சொல்லப்படும் காபி தோட்டத்தைப் பார்க்க விரும்பி போய்க்கொண்டிருப்பதை கேட்டவுடன் அவர். கட்கடவெனச் சிரித்தார்.  அது ஒருவிசேஷ பயிர் இல்லை சார். அந்த இடத்திலிருக்கும் ஒரு வகைப் பூனைகள் காபிபழத்தின் சதையை சாப்பிட்டு  கொட்டைக:ளை துப்பிவிடுகிறது. அதைப் பொறுக்கி  அது எதோ மிக சுவையானதாக இருப்பதாக சொல்லி லண்டனிலிருக்கும் ஒரு கம்பெனி மார்க்கெட் செய்கிறது. நல்ல விலை கொடுப்பதாகச் சொல்லுகிறார்கள் எனக்கு நம்பிக்கையில்லை. விலை அதிகமில்லாவிட்டாலும் எங்கள் காபிபயிர்களை நாங்கள் குழந்தைகளைப் போல பார்த்துகொள்கிறோம். அதையே நீங்கள் வாங்கலாம் என்றார். . 
நாம் பார்க்கவிரும்பும் காபி தோட்டத்தைப் பற்றி இந்த த்தகவலைக் கேட்டதும் சே என்றாகிவிட்டது. 
ஒரு ஏலக்காய் எஸ்டேட்டை பார்த்தால் என்ன என்று தோன்றியது. குடகு மலைப்பகுதியில் தான் ஆராய்ச்சி மையம் இருப்பது நினைவுக்கு வந்த்து. அதை விசாரித்து போகமுடிவு செய்தோம். மத்திய அரசு ஆராய்ச்சி நிலையங்கள் என்றால் இஸ்ரோ ரேஞ்சுக்கு  பாதுகாப்பு பந்தா இருக்குமென்ற எண்ணத்துடன் போனவர்களுக்கு அங்கு ஆச்சரியம் காத்திருந்த்து. நிலை இயக்குனர் DR.AnkeGowda  நம் ஆர்வத்தைப் பாராட்டி வரவேற்றார். மனுஷர் பயிர் ஆராய்ச்சியில் 2 டாக்டர் பட்டம் வாங்கியவர். புதிய கண்டுபிடிப்புக்ளூக்காக விருதுகள் பெற்றவர்.  இந்த மையம் இபோது வெறும் ஏலக்காய் மட்டுமில்லாமல் பலவிதமான  ஸ்பைஸ்களையும் பற்றி ஆராயும் அகில இந்திய நிறுவனம்.. இங்கு  6 இளம் வேளான் விஞ்ஞானிகள் தங்கள் டாக்டர்பட்டத்திற்கு பின் ஆராய்சியைச் செய்கிறார்கள் அன்புடன் தோட்டம் முழுவதும் பார்க்க நமக்கு  விளக்கிசொல்ல ஒரு உதவி ஆராய்ச்சியாளாரையே அனுப்பினார்
.   ஏலக்காய் செடி மஞ்சள் செடி போலிருக்கிறது. அதன் வேரிலிருந்து சரம் சரமாகத் தொங்குகிறது இந்த காய்.. அதில் நன்கு விளைந்ததை மட்டுமே பறிக்க வேண்டும். கவனமாகப் பறிக்காவிட்டால் விணாகிவிடும் என்பதால் எக்ஸ்பர்ட் பெண்கள் மட்டுமே இந்த வேலைக்கு.. கூலி மிக அதிகமாம்.. ஏலக்காய் விலை அதிகமாக இருக்க  இதுவும் ஒரு காரணம் என்கிறார்கள். நம் பாயஸத்தில் மணக்கும் இது காயாக இருக்கும் போது வாசனையே இல்லாதது ஒரு ஆச்சரியம். பறித்தவைகளை நிழலில் உலர்த்தி பின் 59 டிகிரியில் அவனில் பிஸ்கட்  செய்வது போல டிரேயில் இட்டு சூடுகிறார்க்ள். பின்னர் மீண்டும் நிழல் குளியல். அபோது தான் அதற்கு நாம் பார்க்கும் நிறமும் மணமும் வருகிறது. இந்த சென்டரில் ஏலக்காய் மட்டுமில்லாமல் பலவகைத் திரவியப்பயிர்களையும்  ஆராய்கிறார்கள்.-. கொடியில் விளைவதால்  மிளகை ஏணிவைத்துத்தான் பறிக்க வேண்டியிருப்பதால் அதை குத்துச்செடியாக்க முற்சிக்கிறார்கள். இப்படி பல ஆராய்ச்சிகள். . விவசாயதிலும் தாவரங்களிலும்  ஆர்வமுள்ளவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய இடம் இது.
 
மாலையில் நகரில் பவனி வந்தபோது  கவனித்த ஒரு விஷயம். இங்கு பல ஏற்றுமதி நிறுவனங்கள்   கடைகள் வைத்திருக்கிறார்கள். ஏலக்காய் போன்ற விலையுர்ந்த பொருட்களை நிறைய ஸ்டாக். அதையும் அழகாக டிஸ்ப்பிளேயில் வைத்திருக்கிறார்கள். சணல் சாக்குகள் கிடையாது டிரான்ஸ்ப்ரண்ட் பிளாஸ்டிக்க சாக்குகள். மட்ஜ்ஹிப்பு கோடிகளில். 100கிராம் கூட அதிலிருந்து  எடுத்து  தருகிறார்கள்  காபி, தேன், மிளகு ஜாதிக்காய்,  அத்திபழம்(அனுமார் வடை மாலை மாதிரி கோர்க்கபட்டிருக்கிறது)  எல்லாம் கிடைக்கிறது. 

எல்லோரும் ஒரே மாதிரி எங்கள் காபிதான் கூர்க்கிலேயே பெஸ்ட் என்றார்கள். நாளை நீத்துவிடம்  ஏது நிஜமாகவே பெஸ்ட் என்ற கேட்டபின் வாங்கலாம் என எண்ணிக்கொண்டே வீடு திரும்பினோம். 



19/12/17

குடகு மலைக் காற்றினிலே ... 2



மடிக்கேரி ஒரு சிறிய மலை நகரம். நகரில் பல முக்கிய இடங்களில் கம்பீரமாக நிற்கும் ராணுவ அதிகாரிகளின் சிலைகள். டூரிஸ்ட் கூட்டம் இவைகளை கடந்து நகரின் கோடியில் ஒரு பெரிய பார்க். அதிலிருந்து மேற்கு மலைத்தொடரின்பசுமைச் சரிவுகளையும் சிகரங்கங்களையும் பார்க்க அந்தப் பார்க்கின் விளிம்பில் வசதி செய்திருக்கிறார்கள். ஒரு மலைச்சரிவை காலரியாக மாற்றி அதன் முன் ஒர் அரைவட்டவடிவ தளமுமாக அழகான amphitheatre அரங்கமாக வடிவமைத்திருக்கிறார்கள். விழா நாட்களில் இசை நடன நிகழ்ச்சிகள் நடைபெறுமாம்




இந்த இடத்திலிருந்து பார்த்தால் மாலையில் சன் செட் அழகாக இருக்கும் என்பதால் அதற்காகக் காத்திருக்கும் கூட்டம் காலரியை ஆக்ரமிதிருக்கிறது. உனண்மை தான்
ஆதவன் அணுவணுவாகக் கண்ணிலிருந்து மறையும் காட்சி அற்புதமாகத்தான் இருக்கிறது.  வாணத்தையே ஜொலிக்கும் தங்கத்தகடுகளாக்கியபின் .சட்டென்று பிங்க் கலந்த ஆரஞ்ச் வண்ணப் பந்தாக மாறி மெல்லிய நீலத்துடன் மாறிச் சட்டென்று மலைகளுக்குப் பின்னால் காணமல் போகும் அந்தக் காட்சியை எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத ஒன்று மனத்ஜில் நிற்கும் ஓவியம்.  அஸ்தமனம் முடிந்தவுடனும்  எடுத்தவைகளுடன் திருப்தி அடையாமல் இன்னும் சில செல்பிகள் எடுத்துக்கொண்டு  திரைப்படம் முடிந்தவுடன் தியட்டர்காலியாவதைப் போல அரங்கம் காலியாகிறது. தினசரி வாக்கிங் வரும் உள்ளுர் மக்கள் சிலருடன் நாமும் உட்கார்ந்திருக்கிறோம். குளிர் மெல்ல தாக்க ஆரம்பித்தாலும் இதமாக்யிருக்கிறது.  தொலைவில் வளைந்த மலைச்சாலைகளில் செல்லும் வாகனங்களின் விளக்குகள் நகரும்  நட்சந்திரங்களகத் தெரிவதை ரசித்துக்கொண்டிருக்கிறோம்.
 இந்த இடத்திலிருந்து தான் குடகு மன்னர் தன் குடும்பத்துடனும் பரிவாரத்துடனும்  அமர்ந்து மாலைவேளைகளை இசை நடன நிகழ்ச்சிகளுடன் ரசிப்பாராம். அதனால் இந்த இடத்தை ராஜா சீட் என்று அழைக்கிறார்கள். அதை நினைவு கூறும் வகையில் ஒரு மண்டபமும் நிறுவியிருகிறார்கள். அதைப்பார்த்ததும் குடகு மன்னர்களைப்பற்றிக் காலையில் மீயூசியத்தில் பார்த்தறிந்த செய்திகள் மீண்டும்   மனதில் எழுந்தன.

மன்னர்கள் வாழ்ந்த  அரண்மனை இபோது அரசு அலுவலகங்களாகமாறி ப்பாழாகிக் கொண்டிருக்கிறது .அதிலிருந்த பொருட்களையும் படங்களையும் கொண்டு அருகில் ஒரு மியூசியம் அமைத்திருக்கிறார்கள். பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில்இந்தச் சின்னஞ்சிறு குடகு தனி மலைநாடகவே 1600களிலிருந்து மன்னர் ஆட்சியிலிருந்திருக்கிறது. அண்டைநாடான மைசூர் அரசர்களால் வெல்லப்பட்டு அவர்களின் ஆட்சியின் கிழ் வந்திருக்கிறது. . பிரிட்டிஷ் ஈஸ்ட் இந்தியா கம்பெனியின் ஆட்சியில் தனி நாடகாவும் அரசபரம்பரம்பரையாகவும்  மீண்டும் அங்கீகாரம் பெற்றிருக்கிறது. ஆனால் தொடர்ந்து வந்த அரச பரமப்ரையினர் பிரிட்டிஷ் கம்பெனியின் மேலாதிக்கத்தை விரும்பாமல் புரட்சி செய்ததால் ஒரு போரைச் சந்தித்திருக்கிறார்கள். கோட்டைகள், மதில் சுவர்கள் எதுவும் இல்லாத போதும் நான்கு புறமும் காடுகளாகச் சூழபபட்ட இந்தக் குட்டி மலைநாட்டைபிரிட்டிஷார் எளிதில் நெருங்க முடியவில்லை. ஒரு போருக்குப் பின்னர் சரணடைந்த மன்னரைக் கைது செய்து வேலூரில் சிறை வைத்திருக்கிறார்கள். சிறையில் மன்னர் தான் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாகும், பதிலுக்குத் தன் ஒரே மகளை லண்டனில் படிக்க வைக்க விரும்புதால் அதற்கு உதவி செய்யவும் கேட்டிருக்கிறார். சம்மதித்த ஆங்கிலேயே அரசு அவரையும் மகளையும் லண்டன் அனுப்பினார்கள். ஆனால் அங்கு இளவரசி படிப்பைத்தொடர கிருத்துவ மதத்திற்கு மாற நேர்ந்திருக்கிறது. ராணி விக்டோரியாவால் முன்பொழியப்பட்டு இளவரசி மதம் மாறியிருக்கிறார். சில நாட்களுக்குப் பின்னர் ஒரு ஆங்கிலேயரை மணந்திருக்கிறார். இங்கிலாந்திலேயே இறந்த மன்னரின் கல்லறை அங்கிருக்கிறது மடிகேரியில் இருக்கும்  மறைந்த மன்னர்களின் சமாதி வளாகம் மிகப்பெரியதாகயிருக்கிறது. வாசலில் துவாரபாலகர்கள் உருவங்கள் ஆச்சரியப்படுத்துகிறார்கள்.  இவர்கள் எப்படி அங்கு வந்தார்கள் எனத் தெரியவில்லை
 ஆனால் இங்கிலாந்தில் படித்த மன்னரின் மகள்  பின்னாளில் என்னவானார்? அவரது வாரிசுகள் எங்கே என்பது தெரியவில்லை.


மியூசியத்தில் பளிச்சென்று வீபூதி பட்டையுடன் இருக்கும் அந்த அழகான இளவரசியின் படத்தைப் பார்த்தபோது இளவரசியாக இருந்தபோதிலும் படிப்புக்காக மதம் மாறிய செய்தி மனதை  உறுத்தியது உண்மை.  இந்த மத மாற்றத்தைப் படிப்பின் மீதிருந்த ஆர்வம் என எடுத்துக்கொள்வதா? அல்லது அதிகாரத்துக்கு அடிபணிந்த அடிமைத்தனமாக எடுத்துக்கொள்வதா? என்று சிந்திக்கொண்டிருந்தேன்.

குடகு மன்னர்கள் மிகப்பெரிய சிவ பக்கதர்கள். கனவில் வந்து சொன்னதற்காகவே மன்னர் கட்டியிருப்பதாக வரலாறு சொல்லும் ஒம்காரஸ்வர் கோவில் நகரின் நடுவில் இன்றும் இருக்கிறது. கோபுரங்கள் எதுமில்லாத கேரளபாணிக் கோவில். அர்ச்சகர் பிங்க் வேஷ்டியில் இருக்கிறார். வரும் பக்தர்களுடன் பேசுவதில்லை. அவர் சொல்லும் பூஜை மந்திரங்கள் என்ன பொழியென்றும் புரியவில்லை. கோவில் மிகச்சுத்தமாகயிருக்கிறது.  பிறந்து சில மாதங்களே ஆன சின்னக்குழந்தைகளைக் கொண்டுவந்து சன்னதியின் முன் கிடத்துகிறார்கள்
பிரிட்டிஷாரால் தனி நாடாக அங்கிகரிக்கப்பட்டிருந்ததால், சுதந்திர இந்தியாவிலும் முதலில்  இது தனி மாநிலமாகவே இருந்திருக்கிறது. ஆம் ஸ்டேட் ஆப் கூர்க்.! 1956ல் மொழி வாரியாக மாநிலங்கள் உருவானபோது இது மைசூர் ராஜயத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது அந்த இணைப்பின்போது  முன்னாளில் போரில் வென்று  மைசூர் எங்களை ஆட்சி செய்தபோது கொடுமைப்படுத்தியவர்கள். அதனால் அவர்கள் வேண்டாம் எங்களை மெட்ராஸ் ராஜதானியுடன் சேர்த்துவிடுங்கள் என்று போராடியவர்களும் இருந்திருக்கிறார்கள் என்பது நான் அறிந்த ஒரு புதிய செய்தி.
பிரிட்டிஷாரை துணிவுடன் ஈஸ்ட் இந்திய கம்பெனிகாலத்திலேயே எதிர்த்த பாரம்பரியத்தாலோ  இந்திய ராணுவ அதிகாரிகளில் பலர் இந்தப் பகுதியிலிருந்து தான் வந்திருக்கிறார்கள். கரியப்பாவைத்தொடர்ந்து பெல்லியப்பா, பொன்னப்பா போன்று பல அப்பாக்கள் இங்கிருந்து வந்த ராணுவ அதிகாரிகள். இன்றும் இது தொடர்வது பெருமைக்குரியவிஷயம்.

உலகிலேயே மிக விலையுர்ந்த காபி இங்குதான் விளைகிறது என்று கேள்விபட்டிருந்த்தால் அதைப் பார்க்க விரும்பி விபரங்கள் சேகரித்துக் கொண்டிருந்தேன். லண்டனிலிருந்து ஒரு நண்பர் கொடுத்திருக்கும் அறிமுகத்துடன் நாளைக் காலை அந்த இடத்துக்குப்  போகலாம் என்று எண்ணித் திரும்பினோம்
“வெளியிலேயே சாப்பிட்டுவிட்டீர்களா? அல்லது ஏதாவது தயாரிக்கவா? என நீத்து கேட்டபோது உண்மையிலேயே இது ஹோம் ஸ்டே தான் என்பது புரிந்தது

12/12/17

குடகு மலைக் காற்றினிலே 1



10/12/2017


பொன்படு நெடுவரைபயணம் எப்படியிருந்தது ? என்றார் நண்பர். விழித்தேன்.

 அதான் சார் கூர்க் (coorg) டிரிப் என்றார். புறநானூறு பாடலில் அப்படித்தான் அந்த இடம் சொல்லப்பட்டிருக்கிறது. பொன்போலத்தோன்றும் மலை என்று அர்த்தம் அங்கு மழைபொழிந்தால் காவிரியில் வெள்ளம் வரும். அதானால் தான் காவிரியாற்றுக்கு பொன்னி என்றும் எனப்பெயர் என்றார். மனுஷர் சங்க இலக்கியங்களைத் தினசரி படிப்பவர்,  அதை அக்குவேறு ஆணி வேறாக அலசுபவர்

அட! நாம் போன இடம் தமிழிலக்கியத்தில் பேசபட்ட இடமா? என்று ஆச்சரியத்துடன் பயணம் பற்றிப் பேசினேன். HOME STAY பற்றிக்கேட்டுக்கொண்டிருந்தார்.( நல்ல வேளையாக இதுவும் சங்க காலத்திலேயே இருந்தது என்று சொல்ல வில்லை.)

கர்நாடகத்தில் கூர்க் ஒரு மிகச்சிறிய மாவட்டம். 3 தாலுக்காக்கள்தான். மக்கள் தொகை 30000க்கும் கீழ்.மக்கள் வாழும் பகுதிகளைவிட மலைப்பகுதிகள்தான் அதிக. . 1000 மீட்டர் உயரத்திலிருக்கும் மடிக்கேரி நகர தான் மாவட்ட தலைநகரம் மைசூரிலிருந்து 120 கீமி. மலைப்பாதை வழியெங்கும் காபிதோட்டங்களும் அதன் அருகே நிற்கும் ஒக் மரங்களைத் தழுவிக்கொண்டிருக்கும் மிளகுக்கொடிகளையும் பார்த்தபோது





 
பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா நின்றன் பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா என்று சொன்ன பாரதி நினைவிற்கு வந்தான்

இங்கு நல்ல ஹோட்டல்கள் இருந்தாலும் ஹோம் ஸ்டே என்பது மிகப் பாப்புலாரன ஒரு விஷயம். விருந்தோம்பலுக்குப் பெயர்போன குடகு மக்களிடம் தங்கள் வீட்டில் எல்லா வசதிகளுடனும் இருக்கும் ஒரு பகுதியை  தங்கள் நகருக்கு வரும் பயணிகளுக்கு  ஒதுக்கி அவர்களைக் கவனித்துக்கொள்ளும் வழக்கமிருந்திருக்கிறது.. இலவசமாகக் இப்படி கொடுக்கும் பழக்கம். நாளடைவில்  மெல்ல ஒரு பிஸினஸாக டெவலப்பாகியிருக்கிறது, இன்று அந்தச் சின்ன ஊரில் 1500க்கும் மேல் இப்படி ஹோம் ஸ்டே வீடுகள். இதற்கு நகரசபையில் லைஸ்ஸென்ஸ் வாங்க வேண்டும், ஒவ்வொரு விருந்தினருக்கும் வரி செலுத்த வேண்டும்(நம் பில்லில் வருகிறது). (லைசென்ஸ் இல்லாமல் நடத்துபவர்களும் நிறைய இருக்கிறார்கள்) இந்தப் பிஸினஸ் இன்ட்ர்நெட்டின் புண்ணியத்தில் கடந்த சில ஆண்டுகளில் பல மடங்கு வளர்ந்திருக்கிறது
.
டூரிஸ்ட்களுக்கு உதவும் பிசினஸ் ஆகிவிட்டதால், make my trip.com. Mytravel போன்ற நம் நாட்டு நிறுவனங்கள் இறங்கிவிட்ட இந்தப் பிஸினஸில் இப்போது airbnb போன்ற சரவதேச நிறுவனங்கள்  இறங்கி விட்டன.(அயர்லாந்திலிருந்து உலகளவில் பல நகரங்களில் இந்த வசதியைத் தருபவர்கள்)

இவர்கள் இப்படி ஹோம் ஸ்டே வசதி தருபவர்களைப் பற்றி அழகான படங்களூடன் தங்கள் தளத்தில் விளம்பரப்படுத்துகிறார்கள். பல நிறுவனங்கள் வசதிகளை நேரில் பார்த்து உறுதி செய்துகொள்வதாலும், சில கண்டிப்பான நிபந்தனைகள் வைத்திருப்பதாலும் நம்பி புக்  பண்ணலாம்..
 இந்த நிறுவனங்கள் ஹோம் ஸ்டே தருபவர்களுக்கு டூரிஸ்ட்களிடமிருந்து ஆர்டர் வாங்கிக்கொடுத்து தங்கள் கமிஷனைப்பெற்றுக்கொள்கிறார்கள். ஆனால் அவர்களிடம் நீங்கள் பணம் செலுத்தி புக் செய்யும் வரை host என்று சொல்லப்படும் அந்த வீட்டின் உரிமையாளாரை நீங்கள்  தொடர்பு கொள்ள முடியாது. (நேரடியாகப் பிஸினஸ்பேசிவிடுவதைத் தவிர்க்க)

ஒரு சின்ன இரண்டு பெட் ரூம் ஃபிளாட் +கிச்சன்(கியாஸ். பாத்திரங்களுடன்) வசதியிலிருந்து காபி எஸ்டேட்க்குள்ளிருக்கும் பெரிய பங்களாவரை கிடைக்கிறது. சின்ன காபி எஸ்டேட் வைத்திருப்பவர்கள் நகரிலிருக்கும் தங்கள் வீட்டைப் பெரிதாகக் கட்டி இப்படி கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். வாடகை ஒரு நாளுக்கு 2000(4 பேர்)லிருந்து 25000 வரை இருக்கிறது. உணவு (ஸ்பெஷல் கூர்க் உணவுகள்) தயாரித்துத் தருவார்கள் அதற்குத் தனிக்கட்டணம், ஆனால் ஹோட்டல்களை விடக் குறைவு.
நாங்கள் நகருக்கு அருகில் அதே நேரத்தில் இயற்கைச் சூழலுடனும் இருக்கும் மலைச்சரிவிலிருக்கும் ஒரு வீட்டைப் படத்தைப் பார்த்துத்தேர்ந்தெடுத்திருந்தாலும் நேரில் எப்படியிருக்குமோ என்றுதானிருந்தது. நகரை நெருங்கும்போது எங்கள் ஹோஸ்ட் திருமதி நீத்து விடம் பேசி பாதைகேட்டபோது தெளிவாகச்சொல்லிக்கொண்டே வந்தார். அழகான வீட்டைப் பார்த்ததும் சந்தோஷமாக யிருந்தது. ஆனால் வீட்டை அடைந்த பின் தான் தெரிந்தவிஷயம் அவர் பெங்களூரிலிருந்து பேசிக்கொண்டிருக்கிறார் என்பது.


நான் ஒரு அவசர வேலையாகப் பங்களுர் வர வேண்டியதாகிவிட்டது. உங்களைக் கவனித்துக்கொள்ள என் பெற்றோர்கள் அங்கு வந்திருக்கிறார்கள் (நகரில் வேறு பகுதியில் இருப்பவர்கள்) என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே வெல்கம் டூ கூர்க் எனக் காபியுடன்       (அருமையான காபி  ) வரவேற்றார் நீத்துவின் தந்தை பொன்னப்பா (78வயது). ந்த அளவுக்கு இதைப் பிஸினஸாக மட்டுமில்லாமல் குடும்பமே சந்தோஷமாகசெய்கிறார்கள். என்று புரிந்தது.
 நகருக்குள் நீங்கள் நுழையும் போதே நான் வீட்டில் இல்லை எனறு சொன்னால் நீங்கள் வருந்தக்கூடும் என்பதால் நான் முதலில் அதைச் சொல்லவில்லை. என் பெற்றோர்கள் உங்களுக்காக மத்தியானத்திலிருந்தே காத்திருக்கிறார்கள் நான் நாளை மாலை வந்துவிடுவேன் என்று நீத்து சொன்ன அந்த வினாடியே அந்த வீட்டை மட்டுமில்லை அந்தக் குடும்பத்தையே எங்களுக்குப் பிடித்துப் போய்விட்டது. மறு நாள் வந்தவுடன் எங்களுக்காக பிரேக்பாஸ்ட் தயாரித்துக் கொண்டுவந்தவருடன்  நிறையப் பேச முடிந்தது. ஹோம் ஸ்டே பிஸினஸ் நன்றாக் இருப்பதாகச்சொன்னார்.. டிசமபரில் இவரது மட்டுமில்லை அனேகமாக எல்லாவீடுகளுமே புக்காகி விட்டது என்றார். ஒவ்வொரு ஆண்டும் டூரிஸ்ட் எண்ணிக்கை உயர்கிறது என்கிறார்.


மெடிகல் டிரான்ஸ்கிரிப்பிஷன், கணவரின் எஸ்டேட்நிர்வாகத்தில் உதவி, இந்த ஹோம் ஸ்டே எல்லாவற்றையும் அழகாகக் கவனிக்கும் இந்தச் "சுப்பர் மாம்" மின்  இரண்டு மகன்கள் கல்லூரியில்.
குடகுப் பெண்கள் மிக ஸ்மார்ட் ஆனவர்கள் என்று நண்பர்கள் சொன்னதுண்டு. இன்று அதை நேரிடையாகப் பார்க்க முடிந்தது.

 அன்று மாலையில் அவர் பார்க்கச்சொல்லியிருந்த அழகான இடத்துக்கு இப்போது  போய்க்கொண்டிருக்கிறோம் .

6/12/17

உலக இசைநகரங்களில் நம்ம சென்னை


இந்த ஆண்டு இசை விழா துவங்கும் முன்னரே வந்த ஒரு மகிழ்ச்சியான செய்தி ஜக்கிய நாடுகள் சபையின் ஒர் அங்கமான யூனஸ்கோ சென்னையை உலகின் பாராம்பரிய இசை நகரங்களில் ஒன்றாக அறிவித்திருக்கிறது என்பது... (மகிழ்ச்சியில்லாத செய்தி T.N கிருஷ்ணாவின் பேச்சு என்பது வேறுவிஷயம்)
யூனஸ்கோவின் படைப்பாக்க நகரங்களின்(creative cities) பட்டியலிற்காக இந்த ஆண்டு இந்தியாவின் வாரணாசி, சென்னை, ஜெய்ப்பூர் ஆகிய 3 நகரங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறது. இதில் சென்னையும் வாரணாசியும் இசைக்காகவும் ஜெய்ப்பூர் கைவினை மற்றும் நாட்டுப்புறகலைகளுக்காகவும் தேர்ந்த்டுக்கப்பட்டிருக்கின்றன.
2004ஆம் ஆண்டு முதல் உலகாளாவிய நிலையில் தனிதன்மையுடன் பாரம்பரியத்தன்மைகளயும், பண்பாட்டுச்சிறப்புகளையும் கலைமரபுகளையும் கொண்டுள்ள நகரங்களைப் பட்டியலிட்டு யூனஸ்கோ அறிவித்துக்கொண்டிருக்கிறது. இத்தாலி, ஸ்வீடன், மெக்ஸிகோ நியுஸிலாந்து, போர்ச்சுகல், கஜகஸ்தான் போன்ற நாடுகளைச்சேர்ந்த சில நகரங்களே ”இசைக்கலைக்காக”. இடம் பெற்றிருக்கும் இந்தப் பட்டியலில் இப்போது. இடம் பெற்றிருப்பது “நம்மசென்னை”.
இந்த நெட் ஒர்க்கில் இணைவது மூலம் உலகின் மற்ற இசைநகரின் கலைஞர்கள் இங்கு வரவும், நமது கலைர்கள் அங்குப் பயணிக்கவும் வாய்ப்புகள் அதிகம் ஏற்படும்.
யூனஸ்கோ சென்னையை இன்று ஒரு இசை நகரமாக அறிவித்துக் கெளரவித்திருப்பது பெருமையளிக்கும் செய்தியானலும், சென்னை நகரின் இசைப்பாரம்பரியம் 90 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து வளர்ந்துகொண்டிருக்கிறது.
1927ல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சென்னயில் நடந்த அகில இந்திய இசை மாநாட்டின் பரிந்துரையில் எழுந்த மியூசிக் அகடமி இன்றும் தொடர்கிறது. ஆண்டுதோறும் 100க்கும் மேற்பட்ட சபாக்களில் 500க்கும் மேற்பட்ட கலைஞர்களைக்கொண்டு நடைபெறும் இசைவிழாக்கள் இன்று உலகம் முழுவதும் பேசப்படுகிறது. 90 ஆண்டுகளாக தொடர்ந்து இப்படி இசைவிழாக்களை அதுவும் தனியார் உதவியுடன் நடத்திக்கொண்டிருக்கும் ஒரே நகரம் சென்னை. இசை விழாக்கள் மட்டுமின்றி நல்ல இசையின் வடிவங்களை நமக்கு அளித்தவர்களைத் தெய்வமாகப் போற்றி ஆண்டுதோறும் ஆராதிப்பதும் உலகில், தமிழகத்தில் மட்டுமே
.
இசையை மட்டுமில்லாமல் நடனம், மற்றும் அது சார்ந்த கலைகளை வளர்க்க பல ஆண்டுகளுக்கு முன்னரே 100 ஏக்கர் பரப்பில் ருக்மணி அருண்டேல் அவர்களால் சென்னையில் துவக்கபட்ட கலாஷேத்திரா என்ற கலைக்கூடம் இன்று உலகப்புகழ் பெற்ற அமைப்பு. இசையை முறையாக இளநிலைப்படிப்பிலிருந்து ஆராய்ச்சிப் படிப்புவரை கற்கும் வசதியை முதன் முதலில் அளித்த்து சென்னைப் பல்கலைகழகம் தான். 2013ல் இசையை உள்ளடக்கிய இசைமற்றும் நுண்கலைகளுக்காகத் தனிப் பல்கலைகழமே துவக்கப்பட்டது சென்னையில் தான்.
சென்னை கார்ப்ரேஷன் இந்தியாவின் மிகப்பழமையான கார்ப்பரேஷன். 1688ல் அதற்கான சார்ட்டர்(பிரிட்டிஷ் அரசின் அனுமதி) வந்தபோது அதைப் பராம்பரிய இசைக்கலைஞர்களும், நடனக்கலைஞர்களும் தங்கள் திறன்களை வெளிப்படுத்திக் கோலாகலமான ஊர்வலமாகச் சென்னை செயின்ட் ஜார்ஸ் கோட்டைக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள். அந்த அளவு இசைக்கலை பெருமைப் படுத்தபட்ட நகரம் சென்னை.
கர்நாடக இசை மட்டும் சென்னையின் அடையாளமில்லை. வெஸ்ட்டர்ன் கிளாஸிக்கல் மியூஸிக் என அறியப்படும் மேற்கத்திய சங்கித்தைப் போற்ற மெட்ராஸ் மியூஸிகல் அசோசியஷன் பல ஆண்டுகளுக்கு முன்னரே சென்னையில் துவங்கியிருக்கிறது. மேற்கத்திய இசையில் பயன்படுத்தப்பட்டுவந்த வயலினை கர்நாடக இசைக்கேற்ப மாற்றி வடிவமைத்ததில் இவர்களின் பணி முக்கியமானது.
இசைக்கச்சேரிகள் என்றால் தெலுங்கு அல்லது சமஸ்கிருத கீர்த்தனைகள் என்ற நிலையை மாற்றிப் பாரம்பரிய தமிழசைக்கு தனி அந்தஸ்துப் பெற ராஜாஜி, டிகேசி, கல்கி போன்றவர்கள் போராடி வெற்றிகண்டதின் விளைவாகத்தான் இன்று ஆண்டுதோறும் சென்னையில் தமிழிசைவிழாக்கள் நடைபெறுகின்றன.
இசைவிழாக்கள் பெரிய அரங்குகளில் மட்டுமில்லாமல் நகரின் பல இடங்களில் சிறிய அளவு ரசிகர்களுடனும் வளர்ந்துகொண்டிருக்கிறது. அண்மையில் நகரின் ஒரு பரபரப்பான மெட்ரோ ஸ்டேஷனின் அமைதியான பகுதியிலேயே, அண்மையில் ஒரு இசைக்கச்சேரி நடந்தது
.
இந்துஸ்தானி, கஜல், ராக், மேற்கத்திய கிளாஸிகல். தமிழ் திரையிசை, இந்தி திரையிசை வெளிநாட்டுகுழுவினரின் இசை என்று எல்லா வடிவ இசை நிகழ்ச்சிகளுக்கும் சென்னையின் அரங்கங்கள் நிரம்பி வழிகின்றன. அந்த அளவு இசை என்பது நகரோடு ஒன்றிப்போன சென்னை நகரத்துக்கு யூனஸ்கோ தந்திருக்கும் கெளரவம் தாமதமானலும் தகுதியானதுதானே?. மகிழ்ச்சியோடு ஏற்போம்.

11/11/17

நேதாஜி





.......நேதாஜி புத்தகத்திற்கு நல்ல வரவேற்பு  இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. செப் 22ல் வெளியான புத்தகம்  இதுவரை  சென்னயின் இரு பெரிய புத்தக நண்பர்கள் குழுவில்  ஆய்வுடன் அறிமுகப்படுத்தபடிருக்கிறது. 3  பத்திரிகைகள் விமர்சனம் எழுதியிருக்கின்றன. 
ஒரு எழுத்தாளினின் சந்தோஷமான கணங்களில் ஒன்று அவன் எழுத்தும் உழைப்பும் ஒரு வாசகனால் உணரப் பட்டு அவனால் மனப்பூர்வமாக பாரட்டப்படும் போது,  பேஸ் புக்கில் ஒரு நண்பர் எழுதியிருப்பது இது.
. மிக்க நன்றி Mr Murali Seetharaman..


........  எனக்கு வசதி இருந்தால் Ramanan Vsv யின் ஒவ்வொரு விரலுக்கும் ஒரு வைர மோதிரம் இழைத்துப் போடுவேன்: அப்படி உழைத்திருக்கிறார் மனிதர்! தகவல், தகவல், தகவல்... அப்படி ஒரு உழைப்பு அவருடைய "நேதாஜி - மர்ம மரணம்" புத்தகத்தில்!
ஒரு சாம்பிள்: "இந்தோ ஜெர்மனி சொஸைட்டி என்ற பெயரில் ஜெர்மனியில் வாழும் இந்தியர்களும், இந்திய சுதந்திரத்துக்கு ஆதரவு தரும் ஜெர்மானியர்களும் இணைந்திருந்தனர். 1942 செப்டம்பர் 11- இந்த அமைப்பின் ஆண்டு விழா ஹாம்பர்க் நகரில் நடைபெற்றது. ஜெர்மன் தேசிய கீதம் வாசித்து முடிந்ததும் மற்றொரு கீதம் வாசிக்கப்பட்டது. புன்னகையுடன் இது சுதந்திர இந்தியாவின் தேசியகீதம் என்று சுபாஷ் அறிமுகப்படுத்தினார். நமது தேசிய கீதமாக இன்று ஒலிக்கும் "ஜன கண மன" முதலில் பியானோ இசையில் ஒலித்தது ஜெர்மனியில்தான்!
1911 Dec 27 கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் பாடப்பட்ட தாகூரின் பாடல் சுபாஷை மிகவும் கவர்ந்தது. அதை இந்திய தேசிய கீதமாக அறிவிக்கத் தீர்மானித்தார் சுபாஷ். ஆனால் அதன் இசை வடிவம் எவரிடமும் இல்லை. சுபாஷ் தன் கல்கத்தா நண்பர்களைளத் தொடர்பு கொள்ள அதன் இசை நொட்டேஷனை அம்பிக் மஜூம்தார் என்பவர் எழுதி அனுப்பினார். அதுதான் முதன் முதலில் பியானோவில் வாசிக்கப்பட்டது.
இந்த ஒலிநாடா சிங்கப்பூரில் வாழ்ந்த தமிழ் INA வீரர்களால் பாதுகாக்கப் பட்டது. 1950 ல் ஐ நா சபையில் ஒலித்த இந்த ஒலிநாடா, இப்போது அகில இந்திய வானொலிக் காப்பகத்தில் உள்ளது!"
தகவல் களஞ்சியம்! ரமணனின் அயரா உழைப்பு! நேதாஜி பற்றி அவ்வளவு தகவல்கள்! வாய்ப்பு இருப்போர் வாங்கிப் படியுங்கள்! (கிழக்கு பதிப்பகம் -விலை ரூ150/-)

8/11/17

எழுத்து மேலாண்மையின் அடையாளம் இவர்


 அஞ்சலி 



ஒரு இலக்கிய கூட்டத்தில் பேசும்போது "நல்ல படைப்புகளைப் படைக்க ஒரு எழுத்தாளன் பள்ளியிலோ கல்லூரியிலோ போய்ப் படித்திருக்க வேண்டிய அவசியமில்லை, தன்னை, தான் வாழும் சூழலையும் சமுத்த்தையும் கூர்ந்து கவனித்து அதைத் துணிவுடன் சொல்லும் திறன் இருந்தால் போதும்" என்றார் திரு ஜெயகாந்தன்.
இதை அப்படியே செய்து காட்டியவர் தி மேலாண்மைப்பொன்னுசாமி. விருதுநகர் மாவட்டம் மேலாண்மறைநாடு என்ற கிராமத்தில் பொன்னுசாமி. ஏழைக் குடும்பத்தில் பிறந்த பொன்னுசாமி வறுமையின் காரணமாக 5-ம் வகுப்புக்கு மேல் படிக்க முடியவில்லை.
இவருக்கு 10 வயதானபோது தந்தை இறந்துவிட்டார். அப்போதே குடும்பப் பொறுப்பு முழுவதையும் ஏற்றுக்கொண்டார். தந்தைக்கு உதவ ஒரு மளிகைகடையில் வேலி செய்தவர் பின்னாளில் தானே கிராமத்தில் ஒரு சிறிய கடையைத்துவக்கினார்.. அந்தச் சிறிய மளிகைக் கடையை நடத்துவதே இன்றளவும் இவரது பிரதான தொழிலாக இருந்தது கடையின் முதலாளியாக இருந்தாலும். இட து சாரி கொள்கைகளினால் ஈர்க்கபட்டவர்.
5-ம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாவிட்டாலும் நூல்களை வாசிப்பதை இவர் நிறுத்தவில்லை. குறிப்பாக இலக்கிய நூல்களை அதிகம் படித்தார். இடதுசாரி இலக்கிய அமைப்புகளுடன் ஏற்பட்ட தொடர்பால் கவரப்பட்டு எழுத்துவங்கினார். அதனாலோ என்னவோ இவரது படைப்புகளில் பலவற்றில் இடது சாரி சிந்தனைகளின் தாக்கம் அதிகம் இருக்கும்
கரிசல் பூமி தந்த சிறந்த எழுத்தாளர்களில் இவரும் ஒருவர். கரிசல் பூமி மக்களின் வாழ்க்கையை எதார்த்தமாகவும், உயிரோட்டமாகவும் எழுதுவதில் தலை சிறந்தவர். சிறுகதை செம்மல் என அழைக்கப்படும் பொன்னுச்சாமி பல விருதுகளைத் தனது படைப்புகளுக்காகப்பெற்றவர். இவரது மின்சரப் பூ என்ற சிறுகதை தொகுப்புக்கு 2008 ஆம் ஆண்டுக்கான கேந்திரிய சாஹித்திய அகதமி விருதும் பரிசும் பெற்றது.

உழைப்பவர்களுக்காக ஒரு உறுதியான அமைப்பு இருக்க வேண்டும் என்ற சித்தாந்தைச் சொல்லும் மார்க்ஸிஸ்ட் கனம்னியூஸ்ட் கட்சியில் முற்போக்கு எழுத்தாளர்களுக்கென்றும் ஒரு சங்கம் அவசியம் எனக் கருதி அதை  நிறுவியவர்களில் இவரும் ஒருவர். இறுதி நாள்வரை அதன் செயலாளாரக இருந்தவர்.
மேலாண்மை பொன்னுச்சாமி இதுவரை 24 சிறுகதைத் தொகுப்பு, 6 நாவல்கள், 6 குறு நாவல்கள், ஒரு கட்டுரைத் தொகுப்பை எழுதியுள்ளார். இவரது முதல் படைப்பைத் தொடர்ந்து பல நல்ல கதைகள் கல்கியில் வெளியானவை.

பத்திரிகைகளுக்குக் கதைகள் அனுப்பும்போது கடித உறைகளின் மீது அவரது சுய விலாசம்” மேலாணமை பொன்னுச்சாமி மேலாண்மறைநாடு என்று மட்டுமே குறிப்பிட்டிருப்பார். வீட்டு இலக்கம் தெருவின் பெயர் மவட்டம் பின் கோட் எதுவுமிருக்காது.ஒரு ஊரின் அடையாளாமாக ஒரு எழுத்தாளன் வாழ்வதென்பது எலோருக்கும் வாய்க்காது என்கிறார் எழுத்தாளார் பா. ராகவன்.
66 வயதில் உடல் நலக்குறைவால் பாதிக்கபட்டு இறைவனடி சேர்ந்த மேலாண்மை போன்னுச்சாமியின் இழப்பு எழுதுலகின் பேரிழப்பு 
 ( கல்கி12/11/17ல் எழுதியது) 










15/10/17

ஆச்சாரியன் நிர்வகித்த அரங்னின் ஆலயம்


இருள் பிரிந்து பொழுது புலர்ந்து, மெல்லிய வெளிச்சம். பரவிக்கொண்டிருக்கிறது. முதல் நாள் பெய்த மழையினால் வீசும் குளிர்ந்த காற்றும் இதமாக இருக்கிறது. ஶ்ரீரங்கத்தின் அமைதியான அந்த வீதியில் கம்பிரமான ராஜ கோபுரத்தின்*1 நுழை வாயிலைக் கடந்து நடந்து கொண்டிருக்கிறோம். தெற்கு உத்தரவீதியில் பளிச்சென்ற விளக்கில் மின்னும் ஶ்ரீ ரெங்கா என்று மூன்று முறை எழுதபட்டிருக்கும் வார்த்தைகளை நம்மையறியமலே படிக்கும்போதே அரங்கனின் திருநாமத்தைச் சொல்லித்தான் அந்தச் சிறிய கோபுர வாயில்*2 நுழைய வேண்டும் என்ற நியமத்தைச் செய்கிறோம். அரங்கனின். விஸ்வரூப தரிசனம் காணச்சென்று கொண்டிருக்கிறோம்
6மணி. தரிசனத்தை தவறவிட்டுவிடக் கூடாது என்ற அவசரத்தில் ரெங்க விலாச மண்டபத்தைக் கடந்து செல்லும்போது பிரமாண்டமாக நிற்கும் கருடாழ்வருக்கு ஒரு ஹலோ சொல்லிவிட்டு சந்நதி மண்டபத்தை அடைகிறோம். தங்ககவசமிடப்படிருக்கும் நுழைவாயிலின் வெள்ளிக்கதவுகள் திறந்திருக்கிறது ஆனால் ஒரு பட்டுத் திரையால் சன்னதி மூடப்பட்டிருக்கிறது.
அந்த நுழை வாயிலுக்கு எதிரே மேனியில் பளிச்சிடும் திருமண்களுடன் ஒருவர் வீணை வாசித்துக்கொண்டே மெல்லிய குரலில் பாடிக்கொண்டிருக்கிறார். அருகில் உட்காரந்த பின்னர்தான் அது அரங்கனுக்கான, தொண்டரடிப்பொடிஆழ்வார்அருளிய திருப்பள்ளியெழுச்சியெனப் புரிகிறது. இனியமையான குரல் வீணையெழுப்பும் நாதத்துடன் இழைந்து கேட்கிறது. திருப்பள்ளியெழுச்சி முடிந்தபின்னரும் காலைநேர ராகமான பூபாளத்தில் வேறுசில பாடல்களும் பாடுகிறார். அருகில்நிற்கும் மற்ற விரல்களை மடக்கி ஆள்காட்டி விரலை மட்டும் உயர்த்தி நிற்கும் பிரம்மாண்டமான விஜயன், ஜெயன் வெண்கல சிலைகளையும் அவற்றிக்கு பட்டு உடுத்தியிருக்கும் நேர்த்தியையும் பாடல்களையும் ரசித்துக்கொண்டிருக்கிறோம். வந்திருக்கும் பக்தர்களை ஒழுங்குபடுத்தும் கோவில் ஊழியர் உரத்தகுரலில் கட்டளையிட்டுக்கொண்டிருக்கிறார்.

அரசியல்வாதி என்ற அடையாளங்களைச்சொல்லும் உடையில் வந்த ஒருவரும் அவரது குடுமபத்தினரும் வீணை வாசிப்பவருக்கு மிக அருகிலேய அமர்ந்து ஏதோ பேசிக்கொண்டிருக்கிறார்கள். இவ்வளவு இடையூறுகளுக்கும் இடையே அந்த மனிதர் ஆத்மார்த்தமாக வீணைவாசித்த வண்ணம் பாடிக்கொண்டே இருப்பதை ஆச்சரியமாகப் பார்க்கிறோம்.
திடுமென நகரா ஓசை கேட்கிறது. அந்த இடத்தில் பரபரப்பு தொற்றிக்கொள்கிறது.வாத்தியங்கள் முழங்கப்பவனியாகவந்த சிவிகையென அழைக்கபடும் பல்லக்கு நுழைகிறது. சிவப்பு தலைப்பாகை அணிந்து வெள்ளித்தடியேந்திய ஒருவர் கட்டியம் கூறிக்கொண்டே வருகிறார். பல்லக்கின் உள்ளே சிறிய உருவில் அரங்கன். இரவு தயார் சன்னதிக்கு சென்றவர் அவரிடத்துக்கு திரும்புகிறார் என்கிறார்கள். சில நிமிடங்களில் மீண்டும் வாத்திய முழக்கம். யானை, காரம்பசு, வெள்ளைக்குதிரை*2a பவனியாக வந்து கொண்டிருக்கிறது. முதலில் யானை படிகள் ஏறி நாம் அமர்ந்திருக்கும் மண்டபத்திற்குள் வருகிறது. அந்தப் படிகள் மிக அகலமாக இருப்பதின் காரணம் புரிகிறது. பின்னர் பசு. தொடர்ந்து குதிரை வருகிறது. யானை ஆண்டாள் மூலஸ்தானத்தை நோக்கியும், பசு பின்புறம் திரும்பியும் தயாராக நிற்கிறது. அருகில் வெண்குதிரை. ராமானுஜன். நிற்கிறார்கள். அரங்கன் கண்முழிக்கும்போது முதன் முதலில் இந்த மங்களங்களில் தான் முழிக்கப்போகிறார். மணியோசனையுடன் திரைவிலகும்போது யானை மூன்று முறை பிளறுகிறது. “ரெங்கா” எனச்சொல்லுவது போலக் கேட்கிறது. மீண்டும் திரையிடுகிறார்கள். வாத்திய முழக்கங்களுடன் யானை ஆண்டாளும், அவரது நண்பர்களும் திரும்பியபின் திரை திறக்கப்பட்டு நாம் அனுமதிக்கப்படுகிறோம்.
கர்ப்பகிரஹத்தில் அனந்த சயனத்தில் அரங்கன். அவர் முன்னே நல்ல உயரத்தில் உற்சவர். ஆண்டுக்கு ஒருமுறை நிகழும் தைலக்காப்பு என்ற நடைமுறையினால் அரங்கனின் மேனி முழுவதும் காப்பிடபப்ட்டிருப்பதால் முகத்தை மட்டுமே அன்று தரிசிக்க முடிந்தது. எப்போதும் சர்வ அலங்கார ஆபரணங்களுடன் இருக்கும் உற்சவர் மிகச் சிம்பிளாகப் பளிரென்று இருந்ததால், சங்கு சக்கரம் ஏந்திய நான்கு கைகளையும் பார்க்க முடிகிறது. இந்த ஒரு சமயத்தில் மட்டும் தான் இந்தக் காட்சி கிடைக்கும் என்றார்கள். இந்த விஸ்வரூப தரிசனம் குறைவான நேரம் என்பதால் குறைந்தஅளவுஎண்ணிகையிலேயேபக்தர்கள்அனுமதிக்கபடுகிறார்கள்.
அவர்கள்தரிசித்தபின்னர்அரங்கனின் ஆராதனைகளுக்காகச்சன்னதி மூடப்படுகிறது. நாம்தயாரை தரிசிக்க வெளியேறுகிறோம்
.
அந்தக் காலைநேரத்தில் பளிசென்ற மஞ்சள் பட்டாடையில் வெறும் மல்லிகை மாலைகள் மட்டுமணிந்து அதிக ஆபரணங்கள் இல்லாமலேயே ஜொலித்துக்கொண்டிருந்தார் தாயார். இங்கு மூலவராக இரண்டு தயார்கள். ஆதியில் பிரதிஷட்டை செய்யபட்ட உருவத்தை அன்னியர் படையெடுப்பிலிருந்து காப்பாற்ற வேறு இடத்தில் பத்திரப்படுத்தபட்டிருக்கிறது. மீண்டும் கோவிலை நிர்மாணிக்கும்போது அது கிடைக்காதால், புதிதாக ஒன்று நிறுவபட்டிருக்கிறது. பின்னாளில் ஆதி உருவம் கிடைத்தவுடன் அதையும் இதே சன்னதியில் நிறுவிப் பூஜிக்கிறார்கள். அதனால் இரண்டு மூலவர்கள்.
தயாரை தரிசித்து வெளிய வரும்போது எதிரே கவிச்சக்ரவர்த்தி கம்பன், பார் போற்றும் தன் காவியத்தை அரேங்கிற்றிய மண்டபம். அரங்கனின் சன்னதியில் வீணை வாசித்தவரை அங்குச் சந்திக்கிறோம். “திருப்பள்ளியெழுச்சி பாடுவது என்பது ராமனுஜர் ஏற்படுத்திய வழிபாடு முறை. பரம்பரையாக எங்கள் குடும்பம செய்துவரும் பணி இது. நான் 45 வது பரம்பரை” என்கிறார் திரு சீனிவாசன்*2c இவர் ஒரு ஆடிட்டர். இது தெய்வகட்டளையாகத் தன் குடும்பத்தினர் மட்டுமே செய்யக்கூடிய பணி என்பதில் பெருமையடையும் இவரது தந்தை வீணை ரெங்கராஜனுடனும் தன் மகன்களுடனும் ஒரே நேரத்தில் சன்னதியில் வாசிக்கக் கிடைத்த வாய்ப்பை வாழ்க்கையில் பெற்ற பெரும் பாக்கியமாகக்கருதுகிறார்
. திருப்பள்ளியெழுச்சியைத்தொடர்ந்து நீங்கள் பாடிய பாட்டுக்களை நீங்களே தேர்ந்தெடுப்பீர்களா? என்ற நாம் கேட்டபோது, “திருப்பள்ளியெழுச்சிபாட என்ன பாடல்? அதற்கு என்ன ராகம்? என்பதை நாதமுனிகள் வகைப்படுத்தியிருக்கிறார். அதை மாற்றமுடியாது- கூடாது. மற்ற பாடல்களைத் தேர்ந்தெடுத்து பாடும் உரிமை எங்களுக்கு உண்டு. மழை பொய்த்துவிட்டதால், அமிர்தவர்ஷ்ணி ராகப் பாடல் இன்று பாடினேன் என்கிறார்.

அலகில்லா விளையாட்டுடையார் அவர் என்று சொன்ன கம்பனின் பாதம் பட்ட அந்த மண்டபத்தில் அமர்ந்து ஆயிரம் ஆண்டுகளாகத்தொடர்ந்து பாடப்பெற்றுவரும் பாடலைப்பாடும் பரம்பரையின் இந்தத் தலைமுறையைச் சந்திக்க நமக்குக் கிடைத்த வாய்ப்பை எண்ணி மகிழ்கிறோம்.

ஆலயத்தின்பிரகாரங்களைச்சுற்றி வரலாமெனப்புறப்படுகிறோம். இந்தக் கோவில் மிகப்பெரிது.156 ஏக்கர் பரப்பில் செவ்வக வடிவில் அமைந்த இதில் 7 பிரகாரங்கள். ஒவ்வொன்றிலும் சில சன்னதிகள் மொத்தம் 54 சன்னதிகள் இருக்கின்றன. அனைத்தையும் ஒரு நாளில் தரிசனம் செய்ய முடியாது. இயன்றவற்றை பார்க்கலாமென வலது புறமிருக்கும் சக்கரத்தாழ்வார்சன்னதியிலிருந்து துவங்கலாமென நடக்கத் துவங்குகிறோம்.
போகும் வழியில் நம்மை நிறுத்துவது அருகிலிருக்கும் 5 பிரமாண்டமான தானியகளஞ்சியங்கள்*3ஆலயத்துநிலங்களில்விளையும்தானியங்களையும், காணிக்கையாகச்செலுத்தபடும் தானியங்களையும் சேமிக்கஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நிர்மாணிக்கபட்டிருந்த*2b இவற்றை இப்போது புதுபித்திருக்கிறார்கள்*3
. 20 அடி விட்டமும் 30 அடி உயரமும் கொண்ட இந்தக் கிடங்குகளில் மூன்று தளங்கள் மரப்பலகைகளால் அமைக்கபட்டிருக்கின்றன. மொத்தமாக 1500 டன் தானியங்களைச் சேமிக்க முடியும் என்பதைக்கேட்டு ஆச்சரியப்படும் நாம் கடந்த சில ஆண்டுகளாக விளைச்சல் இல்லாதாதால் இப்போது காலியாகதான் இருக்கிறது என்பதைக் கேட்டு வருந்துகிறோம். தானியங்களை நீண்ட நாள் சேமிப்பது என்பது மிகப்பெரிய சவால்.தட்பவெப்ப நிலைமாற்றங்களால் அவை வீணாகும் வாய்ப்பு அதிகம். அதனால் பசுஞ்சாணி, வைக்கோல்.கருப்பட்டி, பதனீர் பதப்பட்ட களிமண், ஒருவகை இலை போன்றவற்றை கலந்து அரைத்த கலவையால் இதன் சுவர்களை உருவாக்கியிருக்கிறான் அன்றை தமிழன். . அந்தக் கலவையின் ரகசியங்களைக் கண்டுபிடித்து அதை இயந்திரங்களின் மூலம் தயாரித்து சிதைந்து கிடந்த இந்தக் களஞ்சியங்களை இப்போது புதுபித்திருக்கிறார்கள். எல்லாம் இந்த ஆலய நிர்வாக அதிகாரியின் ஆர்வத்தினாலதான் என்கிறார் இதன் பொருப்பாளார்.
அந்த நீண்ட பிரகாரத்தின் மறுமுனையில் 1000 கால் மண்டபத்தை அடையும்போது ஏதோ மாறுதலை உணர்கிறோம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நாம் இந்த இடத்தை இப்படி பார்த்த ஞாபகம் இல்லையே? என்ற எண்ணம் தாக்குகிறது. காரணம் அந்த அழகான யானையின் சிற்பம்.*3a/4 வாலை முறுக்கி உயர்த்திக்கொண்டு மிக வேகமாக ஒடும் அதன் பின்னே அதை விரட்டும் பாகன். 12 அடி உயரமிருக்கும்.*3ato4b
“நீங்கள் மட்டுமில்லை. நான் இந்த ஊரிலேயே பிறந்து 40 ஆண்டுகளாக வாழ்ந்தவன். நானே இதைக் கடந்த சில மாதங்களாகத்தான் பார்க்கிறேன். இந்த யானையின் உயரத்துக்கு 12 அடிக்கு மண்மேடிட்டு அதனுள் புதைந்து போயிருந்திருக்கிறது. அந்த மேட்டில் புதர் மண்டிக்கிடந்ததால் யாரும் வரக்கூடமாட்டார்கள். அதனால் இப்படியொரு சிலை இருப்பதே யாருக்கும் தெரியாது. நல்ல வேளையாக இப்போது இருக்கும் நிர்வாகம் கண்டுபிடித்துச் செம்மைப்படுத்தியிருக்கிறார்கள்” என்றார் திரு ராமன்.*4a
வினோமான பச்சைவண்ணஜாடமுடி ஹேர்ஸ்டைலுடன் அருகிலிருந்த இருந்தஒருஜெர்மானியப்பெண்ணும்*6நமக்குச்சொல்லபட்ட விபரங்களைக்கேட்டு ஆச்சரியபட்டு போனார். ஒரு டிவி சானலில் பணிபுரியும் லில்லியும் அவரது அம்மா இல்காவும் கோவில்களைப்பார்க்க இந்தியா வந்திருக்கிறார்களாம்.*5&7 இத்தனை நாள் மண்ணில் புதைந்திருந்த அந்த மண்டபத்தின் பக்க சுவர் மலர்ந்த தாமரை இதழ்களின் மேல் நிற்பது போல அமைக்கபட்டிருக்கிறது அதன் மீது அழகிய சிற்பங்கள்.

அதைக்கடந்து வந்ததும் நம்மை நிறுத்துகிறது வெள்ளை வண்ணத்தில் நிற்கும் ஒரு பிரமாண்டமான கோபுரம். இதற்கு இனிமேல் வர்ணம் பூசு வார்களா? எனக் கேட்ட நமக்கு “இல்லை இது தான் பல ஆண்டுகளாக அதன் வண்ணம்” என்று சொன்னார் தினசரி இரு முறை இந்தக் கோவிலுக்கு வரும் திரு. ரெங்கராஜன்.7a திருச்சி BHELலிலிருந்து ஒய்வு பெற்ற இந்த அதிகாரி கோவிலின் அத்தனை விபரங்களையும் விரல்நுனியில வைத்திருக்கிறார். “இந்தக் கோபுரம் ஒரு தியாகத்தின் சின்னம். மூஸ்லீம் மன்னர்கள் படையெடுத்து இந்தக் கோவிலைச் சூறாடியபோது கோவிலின் நகைகளை ரகசியமாகப் பாதுகாத்த அமுதனார் என்பவரை அவை இருக்குமிடம் கேட்டுச்சித்தரவதை செய்துகொண்டிருந்தான் படைத்தளபதி. தளபதியின் கவனத்தை தன் அழகால் திருப்பிய ஒரு தேவதாசி தனக்கு நகைகள் இருக்குமிடம் தெரியும் எனச்சொல்லி இந்தக் கோபுரத்தின் உச்சிக்கு அழைத்துசென்று அங்கிருந்து அவனைத் தள்ளிவிட்டுவிட்டு தானும் குதித்து இறந்துவிட்டார். அவர் பெயர் வெள்ளையம்மாள். அவர் நினைவாக இந்தக் கோபுரத்துக்கு வெள்ளை தவிர வேறு வண்ணம் பூசுவதில்லை”. என்றார். அரங்கனின் நகைகளைக் காத்த அந்த ஆடலழகிக்கு ஒரு கோபுரத்தையே நினைவுச்சின்னமாக்கியிருக்கிறார்கள். என்று எண்ணிக்கொள்கிறோம்.
“இதைக் கவனித்தீர்களா? என அருகிலிருக்கும் சேஷ ராய மண்டப சிலைகளைக் காட்டுகிறார் திரு. ரெங்கராஜன்*7a. வரிசையாக நிற்கும் எட்டுத்தூண்கள். ஒவ்வொன்றும் ஒரே கல்லில் வடிக்கபட்டவை. முன்னெங்கால்களைத்தூக்கிப் பாயும் குதிரைகள்மீது போர்வீரர்கள். தங்களை தாக்க வரும் மிருகங்களுடனும் மனிதர்களுடன் போரிடும் காட்சிகள். குதிரைமீதிருக்கும் சேணத்தின் மெல்லிய சங்கிலியிலிருந்து, பாய்ந்த வேல் மிருகத்தின் வயிற்றை கிழித்து வெளியே வரும் வரை நுணுக்கமாகச் செதுக்கப்பட்டிருக்கிறது.*9to13 நாளெல்லாம் பார்த்துப் பார்த்து ரசிக்கலாம். அத்தனை தத்ரூபம். பொதுவாகக் கோபுரங்களின் அருகில் இப்படி பெரிய மண்டபங்கள் காணப்படுவதில்லையே- இங்கு எப்படி? எனக் கேட்கும் நமக்கு “இது கிருஷ்ண தேவராயர் பரம்பரையில் வந்த சேஷராயர் ராஜகோபுரத்தின் முதல் நிலையாக அமைக்க வடித்திருக்கிறார்கள். பிரித்துக் கோபுரத்தின் மீது நிறுத்துமுன் சரிபார்த்த அசெம்பளி மாடல் இது. மொட்டைக்கோபுர முதல் மாடத்தின் அளவுகளும் இதன் அடிப்பகுதி அளவுகளும் கச்சிதமாகப் பொருந்துகின்றன. தொடர்ந்த போர்களினால் கோபுரம் மொட்டைக்கோபுரமாக நின்றதைப் போல இது இங்கேயிருந்துவிட்டது “என்கிறார் அவர்
.
அடுத்து நாம் நிற்பது திராவிட தமிழ் வேதமான திவ்ய பிரபந்தத்தை, மக்களின் மனதில் ஆழ பதியச் செய்து, மதத்தில் பல புரட்சிகளைச் செய்த, ராமானுஜரின் சன்னதியில்.*13ato16. ராமனுஜர் என்பது ஒரு பெயர்மட்டுமில்லை. அந்தசொல்லே இரு இயக்கம் என்று சொல்லுமளவுக்கு வைணவத்தை வளர்த்த ராமனுஜருக்கும் இந்தக்கோவிலுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இராமானுசர் சிறந்த வேதாந்தி மட்டும் அல்ல; பெரிய நிர்வாகியும் கூட. திருவரங்கம் கோயிலின் நிர்வாகத்தை ஏற்று அதை முற்றிலும் சீர்படுத்தி அன்றாடம் நடக்கவேண்டிய ஒழுங்கு முறைகளை உருவாக்கியவர். கோயிலொழுகு என்று அவர் வாய்மொழியாகச் சொன்னவை, சுவடிகளில் பதியபட்டு இன்று புத்தகங்களாகவே வெளியாகியிருக்கிறது. இதில் சொல்லப்பட்டிருக்கும் விதிமுறைகளின் படிதான் அனைத்து வைஷணவ கோவில்களும் இயங்குகின்றன
.
“பல வருடங்களுக்கு முன் வைணவ மரபில், துறவிகளை எரிக்கும் வழக்கம் கிடையாது. மாறாக அவர்களைத் திருப்பள்ளிப் படுத்துவார்கள் (புதைத்தல்). இராமானுசரின் பூதவுடலை ஸ்ரீரங்கம் கோவில் வளாகத்தில் (முன்னாள் வசந்த மண்டபம் என்றழைக்கப்பட்ட இடத்தில்) திருப்பள்ளிப்படுத்தி அதன் மேல் எழுப்பப்பட்டது தான் தற்போதைய உடையவர் சன்னிதி. இதிலிருப்பது அவரது உடல் என நம்பப்படுகிறது.அதனால் தினசரி அபிஷேகங்கள் கிடையாது ஆண்டுக்கு ஒரு முறை பச்சைகற்புரம் குங்கமப்பூ அரைத்த கலவை பூசப்படுகிறது. அந்தச் சமயத்தில் அதைசெய்துகொடுக்க இங்கு பக்தரகள் வந்து உதவுவார்கள் என்று சொல்லும் பூஜா பரிசாகர் அரவிந்தன்*14 அதற்கான அம்மிகள் இருக்கும் அறையைக் காட்டுகிறர்.*15,15a இவர் அரங்கனின் பல்லக்கை சுமக்கும் தனிஉரிமைபெற்ற ஶ்ரீபாதம் தாங்கிகள் என்ற 16 குடும்பங்களின் ஒன்றின் பரம்பரையில் வந்தவர். *14 சன்னதியை சுற்றியிருக்கும் சிறிய பிரகாரத்தில் இராமனுஜரின் வாழ்க்கை கதையைச் சொல்லும் 108 தஞ்சாவூர் படங்கள். ஒவ்வொன்றும் பேசுகிறது. அருகில் புதர்மண்டிக்கிடந்த இடம் இன்று நந்தவனமாக மாறியிருக்கிறது.
அரங்கனின் ஆலயத்தைக் காத்த ஆச்சாரியனின் சன்னதிக்கு*16 அவரது 1000மாவது ஆண்டில் வந்ததை எண்ணி மகிழ்கிறோம். “பல ஆயிரம் ஆண்டுகளுக்குமுன்னரே சமூக நீதிகாத்த அந்த வேதாந்தி தமிழுக்கு காட்டிய மரியாதை மிக அதிகம். சன்னதியில் ஆராதனை முடிந்தவுடன் நாங்கள் மணிஅடித்தவுடன் வெளியே சமஸ்கிருதத்தில் சொல்லப்படும் வேதகோஷங்கள் நிறுத்தப்பட்டுவிடும். ஆனால் தமிழில் பிரபந்தம் சொல்லபட்டால் நிறுத்தப்படாது அது முடியும் வரை சன்னதி திறக்கப்படாது இந்த முறையைக் கொண்டுவந்தவர் இராமானுஜர். கோவில் பணிகளைப் பிரித்துப் பலருக்கு பகுந்தளித்ததைபோலக் கெளரவங்களை தரவும் ஒழுங்கு செய்திருக்கிறார். விழாநாட்களில் அர்ச்சகரான எனக்குப் பரிவட்டம் கட்டி கோவில் மரியாதைசெய்வதைப் போல மேளவாத்திய கலைஞரும் ஒரு நாள் கெளரவிக்கப்படுவார். இது மட்டுமில்லை நிர்வாகத்தில் இன்று கடைப்பிடிக்கும் பல விஷயங்களை அவர் அன்றே நிர்ணயத்திருக்கிறார். உதாரணமாகக் கோபுரத்தின் மீது தீப்பந்தம் வைத்துத் திரும்பும் தொழிலாளிக்குத்தான் அர்ச்சகர் முதல் சடாரி சாத்துவார். இது அந்தத் தொழிலாளி பத்திரமாகத் திரும்பியதை உறுதிசெய்து கொள்வதற்கும் தான் என்கிறார் சுந்தர் பட்டர்.*17a

நாம் சந்தித்த பலரும் பாராட்டிப் பேசும், கோவிலின் நிர்வாக அதிகாரியைச் சந்திக்க விரும்புகிறோம். உண்டியலிகளிலிருந்து கொட்டும் பணமழையை பிரித்துக் கணக்கிடுவதில் ஈடுபட்டிருக்கும் சமுக சேவர்களின் பணியின்*17 மேற்பார்வையில் இருந்த அவர் “இது முடிந்தபின் பேசுவோமே?” என்கிறார். கோவிலின் இணை ஆணையர் திரு பொன் ஜெயராமன்
.
கோவிலின் நுழைவாயில் எளிதாகத் திறக்கக் கூடிய நவீன அமைப்பில் தசாவதார சிற்பங்களுடனிருக்கும் புது மெருகு கலையாத பிரமாண்டமான தேக்கு கதவுகளைப் பார்த்தவண்ணம் அமர்ந்திருக்கிறோம். எண்ணங்கள் சிறகடிக்கின்றன.*18
இந்தக் கோவில்தான் எத்தனை சரித்திர சம்பவங்களுக்குச் சான்றாக நின்றிருக்கிறது-? சோழ, பாண்டிய சாளுக்கிய, நாயக்க என்று எத்தனை அரசு குலங்களையும் படையெடுப்புகளையும், வாரிசு சண்டைகளையும் போர்களையும் கொள்ளைகளையும் சந்தித்திருக்கிறது? அரங்கனை காப்பாற்ற எடுத்தச்சென்ற பயணத்தின் அஞ்சாத வாசத்திற்குபின் அவரது மீள் குடியேற்றமும், கோயிலொழுகு-, கம்பனின் காவியம், அருணாசலகவியின் ராமநாடகம் பிறந்த இடம் - எனக் காலப்பெட்டகமாகயிருக்கும் இந்தக் கோவில் சவாலை வெல்லும் சாதனையாளர்களை அடையாளம் காட்டிக்கொண்டேதானிருக்கிறது.
பல நூறண்டுகளாக மொட்டையாக நின்ற கோபுர அடிப்பகுதியின்மேல் தனது 85வது வயதில் பல போரட்டங்களுக்கிடையே 13 தளங்களுடன் ராஜகோபுரமாக எழுப்பிய சாதனையைச் சில ஆண்டுகளுக்கு முன் நமக்குக் காட்டியவர் ஜீயர் ஶ்ரீமத் அழகிய சிங்கர்.
ஆணையரிடமிருந்து அழைப்பு வருகிறது. “எப்படி இதைச்சாதித்தீர்கள்? என்ற நம் கேள்விக்கு “எல்லாம் அரங்கனின் ஆசி” என்ற அவரின் ஒற்றை வரி பதிலில் திருப்தியடையாமல் நாம் எழுப்பிய பல கேள்விகளுக்கு மிகப்பொறுமையாகப் பதில் சொன்னார். திரு ஜெயராமன். “இந்தக் கோவிலின் அறங்காவலர் குழுத் தலைவர் திரு வேணு சீனிவாசன்*20. அவர் பொறுப்பேற்றபின் தான் இந்தப் பணிகள் தொடங்கபட்டன. முதலில் கோவிலைச் சுத்தம் செய்து சீராக்குவது தான் திட்டம். ஆனால் சில மண்டபங்களில் ஆகமவிதிகளின் படி தூண்களின் உயரத்துக்கும் விதானத்துக்கு ஏற்பத்தரைத்தளங்கள் இல்லையென உணர்ந்தபோதுதான் கிழ்பாகங்கள் புதையுண்டு போயிருக்குமோ? எனச் சந்தேகம் எழுந்தது. தொல்பொருள் ஆய்வாளார்களின் உதவியோடு பணியைத்துவக்கினோம். பல இடங்களில் 10 அடிக்கும் மேல் மண்மேடிட்டிருப்பது தெரிந்தது. அதை அப்புறப்படுத்தவது என்பது சவால். எங்கே என்ன இருக்கிறது என்றே தெரியாத நிலையில் சிற்பங்கள் பாழாகிவிடாமல் அதைச் கவனமாகச் செய்ய வேண்டியிருந்தது. அகற்றபட்ட மண் 60 டன்களுக்கும் மேல். கோவிலின் பூஜைபணிகள் பாதிக்கமல் பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் சிறிய லாரிகளில் இரவு நேரங்களில் அகற்றினோம். சில பிரச்சனைகளும் எழுந்தன” என்கிறார்**19.

இந்தக்கோவிலின் நிர்வாகம் ஒரு வினோதமான கட்டமைப்பில் இருக்கிறது. அறநிலைத்துறை வசம் கோவில் இருந்தாலும் ஆகம விஷயங்கள் பல பரம்பரையாகத் தொடரும் குடுமபத்தினரிடமே இருக்கிறது. ஸ்தலத்தார் என்றழைக்கப்படும் அவர்கள் “காலங்காலமாக இருப்பதை எல்லாம் ஏன் மாற்றுகிறீர்கள்?” என இந்த மாறுதல்களை எதிர்த்திருக்கிறார்கள். வழக்குகள் போட்டிருக்கிறார்கள். “அசைக்கவே முடியாமல் துருப்பிடித்த கீல்களுடன் இருந்த கதவுகளை மாற்றியபோது பாரம்பரிய கதவுகளை விற்றுவிட்டோம் எனப் புகார் செய்தார்கள். அவர்களில் பலர் இன்றைய நிலையைப் பார்த்தபின் பாராட்டுகிறார்கள். இன்னும் சில தீவிர பழமை வாதிகள் தொடர்கிறார்கள் வழக்குகளும் இருக்கின்றன. அவற்றை அரங்கன் பார்த்துக்கொள்வான்” என்கிறார்

இந்தப் பிராஜக்கெட்டை செய்தது தொழிலதிபர்*20 திரு வேணு சீனுவாசனின் நிறுவனங்கள். அதன் அதிகாரிகளும்.பொறியிலாளர்களும் இரவு பகலாகப் பணிசெய்தார்கள். பலகட்டங்களில் அவரே பார்வையிட்டார். பல கோடிகள் செலவான இந்தத் திட்டத்தில் பெரும்பகுதி அவருடைய நன்கொடை என்கிறார்.திரு ஜெயராமன். தென்மாவட்டத்தைச்சேர்ந்த இவர் சட்டம்படித்தபின் தமிழக அரசுப்பணியில் தணிக்கைத்துறையில் சேர்ந்தவர். தான் அறநிலைததுறைக்கு மாறியபோது ஒரு கோவிலில் இத்தனை விஷயங்கள் இருப்பது தனக்கு தெரியாது என்கிறார். “செய்யும் தொழிலே தெய்வம்” என்கிறார் பட்டுக்கோட்டையார். இவர் தெய்வங்களைக் காக்கும் தொழிலைத் திறனுடனும் செய்நேர்த்தியுடனும் செய்கிறார்.
இந்த மனிதர் அறநிலைத்துறையில் மாநில அளவில் உயர் பதவிபெற்றால் தமிழக கோவில்களுக்கும் பக்தர்களுக்கும் நல்லது என்ற எண்ணம் எழுகிறது
.
ஓளி மங்கிய மாலை இரவாக மலர்கிறது. விடைபெற்றுக் கிளம்புகிறோம். ‘ஒரு மனிதன் செய்யும் பெரிய சாதனைகளுக்குக் காரணமாக இருப்பது அவனுக்குள் இருக்கும் தெய்வ சக்திதான்’ என்கிறது உபநிஷத்.
அத்தகைய மனிதர்களான திரு வேணு சீனிவாசன், ஜெயராமன் போன்றவர்களை இந்தக்கோவில் பெற்றிருப்பது அரங்கனின் திருவுள்ளம்.

கல்கி திபாவளி மலரில்(2017) எழுதியது