12/12/17

குடகு மலைக் காற்றினிலே 1



10/12/2017


பொன்படு நெடுவரைபயணம் எப்படியிருந்தது ? என்றார் நண்பர். விழித்தேன்.

 அதான் சார் கூர்க் (coorg) டிரிப் என்றார். புறநானூறு பாடலில் அப்படித்தான் அந்த இடம் சொல்லப்பட்டிருக்கிறது. பொன்போலத்தோன்றும் மலை என்று அர்த்தம் அங்கு மழைபொழிந்தால் காவிரியில் வெள்ளம் வரும். அதானால் தான் காவிரியாற்றுக்கு பொன்னி என்றும் எனப்பெயர் என்றார். மனுஷர் சங்க இலக்கியங்களைத் தினசரி படிப்பவர்,  அதை அக்குவேறு ஆணி வேறாக அலசுபவர்

அட! நாம் போன இடம் தமிழிலக்கியத்தில் பேசபட்ட இடமா? என்று ஆச்சரியத்துடன் பயணம் பற்றிப் பேசினேன். HOME STAY பற்றிக்கேட்டுக்கொண்டிருந்தார்.( நல்ல வேளையாக இதுவும் சங்க காலத்திலேயே இருந்தது என்று சொல்ல வில்லை.)

கர்நாடகத்தில் கூர்க் ஒரு மிகச்சிறிய மாவட்டம். 3 தாலுக்காக்கள்தான். மக்கள் தொகை 30000க்கும் கீழ்.மக்கள் வாழும் பகுதிகளைவிட மலைப்பகுதிகள்தான் அதிக. . 1000 மீட்டர் உயரத்திலிருக்கும் மடிக்கேரி நகர தான் மாவட்ட தலைநகரம் மைசூரிலிருந்து 120 கீமி. மலைப்பாதை வழியெங்கும் காபிதோட்டங்களும் அதன் அருகே நிற்கும் ஒக் மரங்களைத் தழுவிக்கொண்டிருக்கும் மிளகுக்கொடிகளையும் பார்த்தபோது





 
பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா நின்றன் பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா என்று சொன்ன பாரதி நினைவிற்கு வந்தான்

இங்கு நல்ல ஹோட்டல்கள் இருந்தாலும் ஹோம் ஸ்டே என்பது மிகப் பாப்புலாரன ஒரு விஷயம். விருந்தோம்பலுக்குப் பெயர்போன குடகு மக்களிடம் தங்கள் வீட்டில் எல்லா வசதிகளுடனும் இருக்கும் ஒரு பகுதியை  தங்கள் நகருக்கு வரும் பயணிகளுக்கு  ஒதுக்கி அவர்களைக் கவனித்துக்கொள்ளும் வழக்கமிருந்திருக்கிறது.. இலவசமாகக் இப்படி கொடுக்கும் பழக்கம். நாளடைவில்  மெல்ல ஒரு பிஸினஸாக டெவலப்பாகியிருக்கிறது, இன்று அந்தச் சின்ன ஊரில் 1500க்கும் மேல் இப்படி ஹோம் ஸ்டே வீடுகள். இதற்கு நகரசபையில் லைஸ்ஸென்ஸ் வாங்க வேண்டும், ஒவ்வொரு விருந்தினருக்கும் வரி செலுத்த வேண்டும்(நம் பில்லில் வருகிறது). (லைசென்ஸ் இல்லாமல் நடத்துபவர்களும் நிறைய இருக்கிறார்கள்) இந்தப் பிஸினஸ் இன்ட்ர்நெட்டின் புண்ணியத்தில் கடந்த சில ஆண்டுகளில் பல மடங்கு வளர்ந்திருக்கிறது
.
டூரிஸ்ட்களுக்கு உதவும் பிசினஸ் ஆகிவிட்டதால், make my trip.com. Mytravel போன்ற நம் நாட்டு நிறுவனங்கள் இறங்கிவிட்ட இந்தப் பிஸினஸில் இப்போது airbnb போன்ற சரவதேச நிறுவனங்கள்  இறங்கி விட்டன.(அயர்லாந்திலிருந்து உலகளவில் பல நகரங்களில் இந்த வசதியைத் தருபவர்கள்)

இவர்கள் இப்படி ஹோம் ஸ்டே வசதி தருபவர்களைப் பற்றி அழகான படங்களூடன் தங்கள் தளத்தில் விளம்பரப்படுத்துகிறார்கள். பல நிறுவனங்கள் வசதிகளை நேரில் பார்த்து உறுதி செய்துகொள்வதாலும், சில கண்டிப்பான நிபந்தனைகள் வைத்திருப்பதாலும் நம்பி புக்  பண்ணலாம்..
 இந்த நிறுவனங்கள் ஹோம் ஸ்டே தருபவர்களுக்கு டூரிஸ்ட்களிடமிருந்து ஆர்டர் வாங்கிக்கொடுத்து தங்கள் கமிஷனைப்பெற்றுக்கொள்கிறார்கள். ஆனால் அவர்களிடம் நீங்கள் பணம் செலுத்தி புக் செய்யும் வரை host என்று சொல்லப்படும் அந்த வீட்டின் உரிமையாளாரை நீங்கள்  தொடர்பு கொள்ள முடியாது. (நேரடியாகப் பிஸினஸ்பேசிவிடுவதைத் தவிர்க்க)

ஒரு சின்ன இரண்டு பெட் ரூம் ஃபிளாட் +கிச்சன்(கியாஸ். பாத்திரங்களுடன்) வசதியிலிருந்து காபி எஸ்டேட்க்குள்ளிருக்கும் பெரிய பங்களாவரை கிடைக்கிறது. சின்ன காபி எஸ்டேட் வைத்திருப்பவர்கள் நகரிலிருக்கும் தங்கள் வீட்டைப் பெரிதாகக் கட்டி இப்படி கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். வாடகை ஒரு நாளுக்கு 2000(4 பேர்)லிருந்து 25000 வரை இருக்கிறது. உணவு (ஸ்பெஷல் கூர்க் உணவுகள்) தயாரித்துத் தருவார்கள் அதற்குத் தனிக்கட்டணம், ஆனால் ஹோட்டல்களை விடக் குறைவு.
நாங்கள் நகருக்கு அருகில் அதே நேரத்தில் இயற்கைச் சூழலுடனும் இருக்கும் மலைச்சரிவிலிருக்கும் ஒரு வீட்டைப் படத்தைப் பார்த்துத்தேர்ந்தெடுத்திருந்தாலும் நேரில் எப்படியிருக்குமோ என்றுதானிருந்தது. நகரை நெருங்கும்போது எங்கள் ஹோஸ்ட் திருமதி நீத்து விடம் பேசி பாதைகேட்டபோது தெளிவாகச்சொல்லிக்கொண்டே வந்தார். அழகான வீட்டைப் பார்த்ததும் சந்தோஷமாக யிருந்தது. ஆனால் வீட்டை அடைந்த பின் தான் தெரிந்தவிஷயம் அவர் பெங்களூரிலிருந்து பேசிக்கொண்டிருக்கிறார் என்பது.


நான் ஒரு அவசர வேலையாகப் பங்களுர் வர வேண்டியதாகிவிட்டது. உங்களைக் கவனித்துக்கொள்ள என் பெற்றோர்கள் அங்கு வந்திருக்கிறார்கள் (நகரில் வேறு பகுதியில் இருப்பவர்கள்) என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே வெல்கம் டூ கூர்க் எனக் காபியுடன்       (அருமையான காபி  ) வரவேற்றார் நீத்துவின் தந்தை பொன்னப்பா (78வயது). ந்த அளவுக்கு இதைப் பிஸினஸாக மட்டுமில்லாமல் குடும்பமே சந்தோஷமாகசெய்கிறார்கள். என்று புரிந்தது.
 நகருக்குள் நீங்கள் நுழையும் போதே நான் வீட்டில் இல்லை எனறு சொன்னால் நீங்கள் வருந்தக்கூடும் என்பதால் நான் முதலில் அதைச் சொல்லவில்லை. என் பெற்றோர்கள் உங்களுக்காக மத்தியானத்திலிருந்தே காத்திருக்கிறார்கள் நான் நாளை மாலை வந்துவிடுவேன் என்று நீத்து சொன்ன அந்த வினாடியே அந்த வீட்டை மட்டுமில்லை அந்தக் குடும்பத்தையே எங்களுக்குப் பிடித்துப் போய்விட்டது. மறு நாள் வந்தவுடன் எங்களுக்காக பிரேக்பாஸ்ட் தயாரித்துக் கொண்டுவந்தவருடன்  நிறையப் பேச முடிந்தது. ஹோம் ஸ்டே பிஸினஸ் நன்றாக் இருப்பதாகச்சொன்னார்.. டிசமபரில் இவரது மட்டுமில்லை அனேகமாக எல்லாவீடுகளுமே புக்காகி விட்டது என்றார். ஒவ்வொரு ஆண்டும் டூரிஸ்ட் எண்ணிக்கை உயர்கிறது என்கிறார்.


மெடிகல் டிரான்ஸ்கிரிப்பிஷன், கணவரின் எஸ்டேட்நிர்வாகத்தில் உதவி, இந்த ஹோம் ஸ்டே எல்லாவற்றையும் அழகாகக் கவனிக்கும் இந்தச் "சுப்பர் மாம்" மின்  இரண்டு மகன்கள் கல்லூரியில்.
குடகுப் பெண்கள் மிக ஸ்மார்ட் ஆனவர்கள் என்று நண்பர்கள் சொன்னதுண்டு. இன்று அதை நேரிடையாகப் பார்க்க முடிந்தது.

 அன்று மாலையில் அவர் பார்க்கச்சொல்லியிருந்த அழகான இடத்துக்கு இப்போது  போய்க்கொண்டிருக்கிறோம் .

6/12/17

உலக இசைநகரங்களில் நம்ம சென்னை


இந்த ஆண்டு இசை விழா துவங்கும் முன்னரே வந்த ஒரு மகிழ்ச்சியான செய்தி ஜக்கிய நாடுகள் சபையின் ஒர் அங்கமான யூனஸ்கோ சென்னையை உலகின் பாராம்பரிய இசை நகரங்களில் ஒன்றாக அறிவித்திருக்கிறது என்பது... (மகிழ்ச்சியில்லாத செய்தி T.N கிருஷ்ணாவின் பேச்சு என்பது வேறுவிஷயம்)
யூனஸ்கோவின் படைப்பாக்க நகரங்களின்(creative cities) பட்டியலிற்காக இந்த ஆண்டு இந்தியாவின் வாரணாசி, சென்னை, ஜெய்ப்பூர் ஆகிய 3 நகரங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறது. இதில் சென்னையும் வாரணாசியும் இசைக்காகவும் ஜெய்ப்பூர் கைவினை மற்றும் நாட்டுப்புறகலைகளுக்காகவும் தேர்ந்த்டுக்கப்பட்டிருக்கின்றன.
2004ஆம் ஆண்டு முதல் உலகாளாவிய நிலையில் தனிதன்மையுடன் பாரம்பரியத்தன்மைகளயும், பண்பாட்டுச்சிறப்புகளையும் கலைமரபுகளையும் கொண்டுள்ள நகரங்களைப் பட்டியலிட்டு யூனஸ்கோ அறிவித்துக்கொண்டிருக்கிறது. இத்தாலி, ஸ்வீடன், மெக்ஸிகோ நியுஸிலாந்து, போர்ச்சுகல், கஜகஸ்தான் போன்ற நாடுகளைச்சேர்ந்த சில நகரங்களே ”இசைக்கலைக்காக”. இடம் பெற்றிருக்கும் இந்தப் பட்டியலில் இப்போது. இடம் பெற்றிருப்பது “நம்மசென்னை”.
இந்த நெட் ஒர்க்கில் இணைவது மூலம் உலகின் மற்ற இசைநகரின் கலைஞர்கள் இங்கு வரவும், நமது கலைர்கள் அங்குப் பயணிக்கவும் வாய்ப்புகள் அதிகம் ஏற்படும்.
யூனஸ்கோ சென்னையை இன்று ஒரு இசை நகரமாக அறிவித்துக் கெளரவித்திருப்பது பெருமையளிக்கும் செய்தியானலும், சென்னை நகரின் இசைப்பாரம்பரியம் 90 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து வளர்ந்துகொண்டிருக்கிறது.
1927ல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சென்னயில் நடந்த அகில இந்திய இசை மாநாட்டின் பரிந்துரையில் எழுந்த மியூசிக் அகடமி இன்றும் தொடர்கிறது. ஆண்டுதோறும் 100க்கும் மேற்பட்ட சபாக்களில் 500க்கும் மேற்பட்ட கலைஞர்களைக்கொண்டு நடைபெறும் இசைவிழாக்கள் இன்று உலகம் முழுவதும் பேசப்படுகிறது. 90 ஆண்டுகளாக தொடர்ந்து இப்படி இசைவிழாக்களை அதுவும் தனியார் உதவியுடன் நடத்திக்கொண்டிருக்கும் ஒரே நகரம் சென்னை. இசை விழாக்கள் மட்டுமின்றி நல்ல இசையின் வடிவங்களை நமக்கு அளித்தவர்களைத் தெய்வமாகப் போற்றி ஆண்டுதோறும் ஆராதிப்பதும் உலகில், தமிழகத்தில் மட்டுமே
.
இசையை மட்டுமில்லாமல் நடனம், மற்றும் அது சார்ந்த கலைகளை வளர்க்க பல ஆண்டுகளுக்கு முன்னரே 100 ஏக்கர் பரப்பில் ருக்மணி அருண்டேல் அவர்களால் சென்னையில் துவக்கபட்ட கலாஷேத்திரா என்ற கலைக்கூடம் இன்று உலகப்புகழ் பெற்ற அமைப்பு. இசையை முறையாக இளநிலைப்படிப்பிலிருந்து ஆராய்ச்சிப் படிப்புவரை கற்கும் வசதியை முதன் முதலில் அளித்த்து சென்னைப் பல்கலைகழகம் தான். 2013ல் இசையை உள்ளடக்கிய இசைமற்றும் நுண்கலைகளுக்காகத் தனிப் பல்கலைகழமே துவக்கப்பட்டது சென்னையில் தான்.
சென்னை கார்ப்ரேஷன் இந்தியாவின் மிகப்பழமையான கார்ப்பரேஷன். 1688ல் அதற்கான சார்ட்டர்(பிரிட்டிஷ் அரசின் அனுமதி) வந்தபோது அதைப் பராம்பரிய இசைக்கலைஞர்களும், நடனக்கலைஞர்களும் தங்கள் திறன்களை வெளிப்படுத்திக் கோலாகலமான ஊர்வலமாகச் சென்னை செயின்ட் ஜார்ஸ் கோட்டைக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள். அந்த அளவு இசைக்கலை பெருமைப் படுத்தபட்ட நகரம் சென்னை.
கர்நாடக இசை மட்டும் சென்னையின் அடையாளமில்லை. வெஸ்ட்டர்ன் கிளாஸிக்கல் மியூஸிக் என அறியப்படும் மேற்கத்திய சங்கித்தைப் போற்ற மெட்ராஸ் மியூஸிகல் அசோசியஷன் பல ஆண்டுகளுக்கு முன்னரே சென்னையில் துவங்கியிருக்கிறது. மேற்கத்திய இசையில் பயன்படுத்தப்பட்டுவந்த வயலினை கர்நாடக இசைக்கேற்ப மாற்றி வடிவமைத்ததில் இவர்களின் பணி முக்கியமானது.
இசைக்கச்சேரிகள் என்றால் தெலுங்கு அல்லது சமஸ்கிருத கீர்த்தனைகள் என்ற நிலையை மாற்றிப் பாரம்பரிய தமிழசைக்கு தனி அந்தஸ்துப் பெற ராஜாஜி, டிகேசி, கல்கி போன்றவர்கள் போராடி வெற்றிகண்டதின் விளைவாகத்தான் இன்று ஆண்டுதோறும் சென்னையில் தமிழிசைவிழாக்கள் நடைபெறுகின்றன.
இசைவிழாக்கள் பெரிய அரங்குகளில் மட்டுமில்லாமல் நகரின் பல இடங்களில் சிறிய அளவு ரசிகர்களுடனும் வளர்ந்துகொண்டிருக்கிறது. அண்மையில் நகரின் ஒரு பரபரப்பான மெட்ரோ ஸ்டேஷனின் அமைதியான பகுதியிலேயே, அண்மையில் ஒரு இசைக்கச்சேரி நடந்தது
.
இந்துஸ்தானி, கஜல், ராக், மேற்கத்திய கிளாஸிகல். தமிழ் திரையிசை, இந்தி திரையிசை வெளிநாட்டுகுழுவினரின் இசை என்று எல்லா வடிவ இசை நிகழ்ச்சிகளுக்கும் சென்னையின் அரங்கங்கள் நிரம்பி வழிகின்றன. அந்த அளவு இசை என்பது நகரோடு ஒன்றிப்போன சென்னை நகரத்துக்கு யூனஸ்கோ தந்திருக்கும் கெளரவம் தாமதமானலும் தகுதியானதுதானே?. மகிழ்ச்சியோடு ஏற்போம்.

11/11/17

நேதாஜி





.......நேதாஜி புத்தகத்திற்கு நல்ல வரவேற்பு  இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. செப் 22ல் வெளியான புத்தகம்  இதுவரை  சென்னயின் இரு பெரிய புத்தக நண்பர்கள் குழுவில்  ஆய்வுடன் அறிமுகப்படுத்தபடிருக்கிறது. 3  பத்திரிகைகள் விமர்சனம் எழுதியிருக்கின்றன. 
ஒரு எழுத்தாளினின் சந்தோஷமான கணங்களில் ஒன்று அவன் எழுத்தும் உழைப்பும் ஒரு வாசகனால் உணரப் பட்டு அவனால் மனப்பூர்வமாக பாரட்டப்படும் போது,  பேஸ் புக்கில் ஒரு நண்பர் எழுதியிருப்பது இது.
. மிக்க நன்றி Mr Murali Seetharaman..


........  எனக்கு வசதி இருந்தால் Ramanan Vsv யின் ஒவ்வொரு விரலுக்கும் ஒரு வைர மோதிரம் இழைத்துப் போடுவேன்: அப்படி உழைத்திருக்கிறார் மனிதர்! தகவல், தகவல், தகவல்... அப்படி ஒரு உழைப்பு அவருடைய "நேதாஜி - மர்ம மரணம்" புத்தகத்தில்!
ஒரு சாம்பிள்: "இந்தோ ஜெர்மனி சொஸைட்டி என்ற பெயரில் ஜெர்மனியில் வாழும் இந்தியர்களும், இந்திய சுதந்திரத்துக்கு ஆதரவு தரும் ஜெர்மானியர்களும் இணைந்திருந்தனர். 1942 செப்டம்பர் 11- இந்த அமைப்பின் ஆண்டு விழா ஹாம்பர்க் நகரில் நடைபெற்றது. ஜெர்மன் தேசிய கீதம் வாசித்து முடிந்ததும் மற்றொரு கீதம் வாசிக்கப்பட்டது. புன்னகையுடன் இது சுதந்திர இந்தியாவின் தேசியகீதம் என்று சுபாஷ் அறிமுகப்படுத்தினார். நமது தேசிய கீதமாக இன்று ஒலிக்கும் "ஜன கண மன" முதலில் பியானோ இசையில் ஒலித்தது ஜெர்மனியில்தான்!
1911 Dec 27 கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் பாடப்பட்ட தாகூரின் பாடல் சுபாஷை மிகவும் கவர்ந்தது. அதை இந்திய தேசிய கீதமாக அறிவிக்கத் தீர்மானித்தார் சுபாஷ். ஆனால் அதன் இசை வடிவம் எவரிடமும் இல்லை. சுபாஷ் தன் கல்கத்தா நண்பர்களைளத் தொடர்பு கொள்ள அதன் இசை நொட்டேஷனை அம்பிக் மஜூம்தார் என்பவர் எழுதி அனுப்பினார். அதுதான் முதன் முதலில் பியானோவில் வாசிக்கப்பட்டது.
இந்த ஒலிநாடா சிங்கப்பூரில் வாழ்ந்த தமிழ் INA வீரர்களால் பாதுகாக்கப் பட்டது. 1950 ல் ஐ நா சபையில் ஒலித்த இந்த ஒலிநாடா, இப்போது அகில இந்திய வானொலிக் காப்பகத்தில் உள்ளது!"
தகவல் களஞ்சியம்! ரமணனின் அயரா உழைப்பு! நேதாஜி பற்றி அவ்வளவு தகவல்கள்! வாய்ப்பு இருப்போர் வாங்கிப் படியுங்கள்! (கிழக்கு பதிப்பகம் -விலை ரூ150/-)

8/11/17

எழுத்து மேலாண்மையின் அடையாளம் இவர்


 அஞ்சலி 



ஒரு இலக்கிய கூட்டத்தில் பேசும்போது "நல்ல படைப்புகளைப் படைக்க ஒரு எழுத்தாளன் பள்ளியிலோ கல்லூரியிலோ போய்ப் படித்திருக்க வேண்டிய அவசியமில்லை, தன்னை, தான் வாழும் சூழலையும் சமுத்த்தையும் கூர்ந்து கவனித்து அதைத் துணிவுடன் சொல்லும் திறன் இருந்தால் போதும்" என்றார் திரு ஜெயகாந்தன்.
இதை அப்படியே செய்து காட்டியவர் தி மேலாண்மைப்பொன்னுசாமி. விருதுநகர் மாவட்டம் மேலாண்மறைநாடு என்ற கிராமத்தில் பொன்னுசாமி. ஏழைக் குடும்பத்தில் பிறந்த பொன்னுசாமி வறுமையின் காரணமாக 5-ம் வகுப்புக்கு மேல் படிக்க முடியவில்லை.
இவருக்கு 10 வயதானபோது தந்தை இறந்துவிட்டார். அப்போதே குடும்பப் பொறுப்பு முழுவதையும் ஏற்றுக்கொண்டார். தந்தைக்கு உதவ ஒரு மளிகைகடையில் வேலி செய்தவர் பின்னாளில் தானே கிராமத்தில் ஒரு சிறிய கடையைத்துவக்கினார்.. அந்தச் சிறிய மளிகைக் கடையை நடத்துவதே இன்றளவும் இவரது பிரதான தொழிலாக இருந்தது கடையின் முதலாளியாக இருந்தாலும். இட து சாரி கொள்கைகளினால் ஈர்க்கபட்டவர்.
5-ம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாவிட்டாலும் நூல்களை வாசிப்பதை இவர் நிறுத்தவில்லை. குறிப்பாக இலக்கிய நூல்களை அதிகம் படித்தார். இடதுசாரி இலக்கிய அமைப்புகளுடன் ஏற்பட்ட தொடர்பால் கவரப்பட்டு எழுத்துவங்கினார். அதனாலோ என்னவோ இவரது படைப்புகளில் பலவற்றில் இடது சாரி சிந்தனைகளின் தாக்கம் அதிகம் இருக்கும்
கரிசல் பூமி தந்த சிறந்த எழுத்தாளர்களில் இவரும் ஒருவர். கரிசல் பூமி மக்களின் வாழ்க்கையை எதார்த்தமாகவும், உயிரோட்டமாகவும் எழுதுவதில் தலை சிறந்தவர். சிறுகதை செம்மல் என அழைக்கப்படும் பொன்னுச்சாமி பல விருதுகளைத் தனது படைப்புகளுக்காகப்பெற்றவர். இவரது மின்சரப் பூ என்ற சிறுகதை தொகுப்புக்கு 2008 ஆம் ஆண்டுக்கான கேந்திரிய சாஹித்திய அகதமி விருதும் பரிசும் பெற்றது.

உழைப்பவர்களுக்காக ஒரு உறுதியான அமைப்பு இருக்க வேண்டும் என்ற சித்தாந்தைச் சொல்லும் மார்க்ஸிஸ்ட் கனம்னியூஸ்ட் கட்சியில் முற்போக்கு எழுத்தாளர்களுக்கென்றும் ஒரு சங்கம் அவசியம் எனக் கருதி அதை  நிறுவியவர்களில் இவரும் ஒருவர். இறுதி நாள்வரை அதன் செயலாளாரக இருந்தவர்.
மேலாண்மை பொன்னுச்சாமி இதுவரை 24 சிறுகதைத் தொகுப்பு, 6 நாவல்கள், 6 குறு நாவல்கள், ஒரு கட்டுரைத் தொகுப்பை எழுதியுள்ளார். இவரது முதல் படைப்பைத் தொடர்ந்து பல நல்ல கதைகள் கல்கியில் வெளியானவை.

பத்திரிகைகளுக்குக் கதைகள் அனுப்பும்போது கடித உறைகளின் மீது அவரது சுய விலாசம்” மேலாணமை பொன்னுச்சாமி மேலாண்மறைநாடு என்று மட்டுமே குறிப்பிட்டிருப்பார். வீட்டு இலக்கம் தெருவின் பெயர் மவட்டம் பின் கோட் எதுவுமிருக்காது.ஒரு ஊரின் அடையாளாமாக ஒரு எழுத்தாளன் வாழ்வதென்பது எலோருக்கும் வாய்க்காது என்கிறார் எழுத்தாளார் பா. ராகவன்.
66 வயதில் உடல் நலக்குறைவால் பாதிக்கபட்டு இறைவனடி சேர்ந்த மேலாண்மை போன்னுச்சாமியின் இழப்பு எழுதுலகின் பேரிழப்பு 
 ( கல்கி12/11/17ல் எழுதியது) 










15/10/17

ஆச்சாரியன் நிர்வகித்த அரங்னின் ஆலயம்


இருள் பிரிந்து பொழுது புலர்ந்து, மெல்லிய வெளிச்சம். பரவிக்கொண்டிருக்கிறது. முதல் நாள் பெய்த மழையினால் வீசும் குளிர்ந்த காற்றும் இதமாக இருக்கிறது. ஶ்ரீரங்கத்தின் அமைதியான அந்த வீதியில் கம்பிரமான ராஜ கோபுரத்தின்*1 நுழை வாயிலைக் கடந்து நடந்து கொண்டிருக்கிறோம். தெற்கு உத்தரவீதியில் பளிச்சென்ற விளக்கில் மின்னும் ஶ்ரீ ரெங்கா என்று மூன்று முறை எழுதபட்டிருக்கும் வார்த்தைகளை நம்மையறியமலே படிக்கும்போதே அரங்கனின் திருநாமத்தைச் சொல்லித்தான் அந்தச் சிறிய கோபுர வாயில்*2 நுழைய வேண்டும் என்ற நியமத்தைச் செய்கிறோம். அரங்கனின். விஸ்வரூப தரிசனம் காணச்சென்று கொண்டிருக்கிறோம்
6மணி. தரிசனத்தை தவறவிட்டுவிடக் கூடாது என்ற அவசரத்தில் ரெங்க விலாச மண்டபத்தைக் கடந்து செல்லும்போது பிரமாண்டமாக நிற்கும் கருடாழ்வருக்கு ஒரு ஹலோ சொல்லிவிட்டு சந்நதி மண்டபத்தை அடைகிறோம். தங்ககவசமிடப்படிருக்கும் நுழைவாயிலின் வெள்ளிக்கதவுகள் திறந்திருக்கிறது ஆனால் ஒரு பட்டுத் திரையால் சன்னதி மூடப்பட்டிருக்கிறது.
அந்த நுழை வாயிலுக்கு எதிரே மேனியில் பளிச்சிடும் திருமண்களுடன் ஒருவர் வீணை வாசித்துக்கொண்டே மெல்லிய குரலில் பாடிக்கொண்டிருக்கிறார். அருகில் உட்காரந்த பின்னர்தான் அது அரங்கனுக்கான, தொண்டரடிப்பொடிஆழ்வார்அருளிய திருப்பள்ளியெழுச்சியெனப் புரிகிறது. இனியமையான குரல் வீணையெழுப்பும் நாதத்துடன் இழைந்து கேட்கிறது. திருப்பள்ளியெழுச்சி முடிந்தபின்னரும் காலைநேர ராகமான பூபாளத்தில் வேறுசில பாடல்களும் பாடுகிறார். அருகில்நிற்கும் மற்ற விரல்களை மடக்கி ஆள்காட்டி விரலை மட்டும் உயர்த்தி நிற்கும் பிரம்மாண்டமான விஜயன், ஜெயன் வெண்கல சிலைகளையும் அவற்றிக்கு பட்டு உடுத்தியிருக்கும் நேர்த்தியையும் பாடல்களையும் ரசித்துக்கொண்டிருக்கிறோம். வந்திருக்கும் பக்தர்களை ஒழுங்குபடுத்தும் கோவில் ஊழியர் உரத்தகுரலில் கட்டளையிட்டுக்கொண்டிருக்கிறார்.

அரசியல்வாதி என்ற அடையாளங்களைச்சொல்லும் உடையில் வந்த ஒருவரும் அவரது குடுமபத்தினரும் வீணை வாசிப்பவருக்கு மிக அருகிலேய அமர்ந்து ஏதோ பேசிக்கொண்டிருக்கிறார்கள். இவ்வளவு இடையூறுகளுக்கும் இடையே அந்த மனிதர் ஆத்மார்த்தமாக வீணைவாசித்த வண்ணம் பாடிக்கொண்டே இருப்பதை ஆச்சரியமாகப் பார்க்கிறோம்.
திடுமென நகரா ஓசை கேட்கிறது. அந்த இடத்தில் பரபரப்பு தொற்றிக்கொள்கிறது.வாத்தியங்கள் முழங்கப்பவனியாகவந்த சிவிகையென அழைக்கபடும் பல்லக்கு நுழைகிறது. சிவப்பு தலைப்பாகை அணிந்து வெள்ளித்தடியேந்திய ஒருவர் கட்டியம் கூறிக்கொண்டே வருகிறார். பல்லக்கின் உள்ளே சிறிய உருவில் அரங்கன். இரவு தயார் சன்னதிக்கு சென்றவர் அவரிடத்துக்கு திரும்புகிறார் என்கிறார்கள். சில நிமிடங்களில் மீண்டும் வாத்திய முழக்கம். யானை, காரம்பசு, வெள்ளைக்குதிரை*2a பவனியாக வந்து கொண்டிருக்கிறது. முதலில் யானை படிகள் ஏறி நாம் அமர்ந்திருக்கும் மண்டபத்திற்குள் வருகிறது. அந்தப் படிகள் மிக அகலமாக இருப்பதின் காரணம் புரிகிறது. பின்னர் பசு. தொடர்ந்து குதிரை வருகிறது. யானை ஆண்டாள் மூலஸ்தானத்தை நோக்கியும், பசு பின்புறம் திரும்பியும் தயாராக நிற்கிறது. அருகில் வெண்குதிரை. ராமானுஜன். நிற்கிறார்கள். அரங்கன் கண்முழிக்கும்போது முதன் முதலில் இந்த மங்களங்களில் தான் முழிக்கப்போகிறார். மணியோசனையுடன் திரைவிலகும்போது யானை மூன்று முறை பிளறுகிறது. “ரெங்கா” எனச்சொல்லுவது போலக் கேட்கிறது. மீண்டும் திரையிடுகிறார்கள். வாத்திய முழக்கங்களுடன் யானை ஆண்டாளும், அவரது நண்பர்களும் திரும்பியபின் திரை திறக்கப்பட்டு நாம் அனுமதிக்கப்படுகிறோம்.
கர்ப்பகிரஹத்தில் அனந்த சயனத்தில் அரங்கன். அவர் முன்னே நல்ல உயரத்தில் உற்சவர். ஆண்டுக்கு ஒருமுறை நிகழும் தைலக்காப்பு என்ற நடைமுறையினால் அரங்கனின் மேனி முழுவதும் காப்பிடபப்ட்டிருப்பதால் முகத்தை மட்டுமே அன்று தரிசிக்க முடிந்தது. எப்போதும் சர்வ அலங்கார ஆபரணங்களுடன் இருக்கும் உற்சவர் மிகச் சிம்பிளாகப் பளிரென்று இருந்ததால், சங்கு சக்கரம் ஏந்திய நான்கு கைகளையும் பார்க்க முடிகிறது. இந்த ஒரு சமயத்தில் மட்டும் தான் இந்தக் காட்சி கிடைக்கும் என்றார்கள். இந்த விஸ்வரூப தரிசனம் குறைவான நேரம் என்பதால் குறைந்தஅளவுஎண்ணிகையிலேயேபக்தர்கள்அனுமதிக்கபடுகிறார்கள்.
அவர்கள்தரிசித்தபின்னர்அரங்கனின் ஆராதனைகளுக்காகச்சன்னதி மூடப்படுகிறது. நாம்தயாரை தரிசிக்க வெளியேறுகிறோம்
.
அந்தக் காலைநேரத்தில் பளிசென்ற மஞ்சள் பட்டாடையில் வெறும் மல்லிகை மாலைகள் மட்டுமணிந்து அதிக ஆபரணங்கள் இல்லாமலேயே ஜொலித்துக்கொண்டிருந்தார் தாயார். இங்கு மூலவராக இரண்டு தயார்கள். ஆதியில் பிரதிஷட்டை செய்யபட்ட உருவத்தை அன்னியர் படையெடுப்பிலிருந்து காப்பாற்ற வேறு இடத்தில் பத்திரப்படுத்தபட்டிருக்கிறது. மீண்டும் கோவிலை நிர்மாணிக்கும்போது அது கிடைக்காதால், புதிதாக ஒன்று நிறுவபட்டிருக்கிறது. பின்னாளில் ஆதி உருவம் கிடைத்தவுடன் அதையும் இதே சன்னதியில் நிறுவிப் பூஜிக்கிறார்கள். அதனால் இரண்டு மூலவர்கள்.
தயாரை தரிசித்து வெளிய வரும்போது எதிரே கவிச்சக்ரவர்த்தி கம்பன், பார் போற்றும் தன் காவியத்தை அரேங்கிற்றிய மண்டபம். அரங்கனின் சன்னதியில் வீணை வாசித்தவரை அங்குச் சந்திக்கிறோம். “திருப்பள்ளியெழுச்சி பாடுவது என்பது ராமனுஜர் ஏற்படுத்திய வழிபாடு முறை. பரம்பரையாக எங்கள் குடும்பம செய்துவரும் பணி இது. நான் 45 வது பரம்பரை” என்கிறார் திரு சீனிவாசன்*2c இவர் ஒரு ஆடிட்டர். இது தெய்வகட்டளையாகத் தன் குடும்பத்தினர் மட்டுமே செய்யக்கூடிய பணி என்பதில் பெருமையடையும் இவரது தந்தை வீணை ரெங்கராஜனுடனும் தன் மகன்களுடனும் ஒரே நேரத்தில் சன்னதியில் வாசிக்கக் கிடைத்த வாய்ப்பை வாழ்க்கையில் பெற்ற பெரும் பாக்கியமாகக்கருதுகிறார்
. திருப்பள்ளியெழுச்சியைத்தொடர்ந்து நீங்கள் பாடிய பாட்டுக்களை நீங்களே தேர்ந்தெடுப்பீர்களா? என்ற நாம் கேட்டபோது, “திருப்பள்ளியெழுச்சிபாட என்ன பாடல்? அதற்கு என்ன ராகம்? என்பதை நாதமுனிகள் வகைப்படுத்தியிருக்கிறார். அதை மாற்றமுடியாது- கூடாது. மற்ற பாடல்களைத் தேர்ந்தெடுத்து பாடும் உரிமை எங்களுக்கு உண்டு. மழை பொய்த்துவிட்டதால், அமிர்தவர்ஷ்ணி ராகப் பாடல் இன்று பாடினேன் என்கிறார்.

அலகில்லா விளையாட்டுடையார் அவர் என்று சொன்ன கம்பனின் பாதம் பட்ட அந்த மண்டபத்தில் அமர்ந்து ஆயிரம் ஆண்டுகளாகத்தொடர்ந்து பாடப்பெற்றுவரும் பாடலைப்பாடும் பரம்பரையின் இந்தத் தலைமுறையைச் சந்திக்க நமக்குக் கிடைத்த வாய்ப்பை எண்ணி மகிழ்கிறோம்.

ஆலயத்தின்பிரகாரங்களைச்சுற்றி வரலாமெனப்புறப்படுகிறோம். இந்தக் கோவில் மிகப்பெரிது.156 ஏக்கர் பரப்பில் செவ்வக வடிவில் அமைந்த இதில் 7 பிரகாரங்கள். ஒவ்வொன்றிலும் சில சன்னதிகள் மொத்தம் 54 சன்னதிகள் இருக்கின்றன. அனைத்தையும் ஒரு நாளில் தரிசனம் செய்ய முடியாது. இயன்றவற்றை பார்க்கலாமென வலது புறமிருக்கும் சக்கரத்தாழ்வார்சன்னதியிலிருந்து துவங்கலாமென நடக்கத் துவங்குகிறோம்.
போகும் வழியில் நம்மை நிறுத்துவது அருகிலிருக்கும் 5 பிரமாண்டமான தானியகளஞ்சியங்கள்*3ஆலயத்துநிலங்களில்விளையும்தானியங்களையும், காணிக்கையாகச்செலுத்தபடும் தானியங்களையும் சேமிக்கஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நிர்மாணிக்கபட்டிருந்த*2b இவற்றை இப்போது புதுபித்திருக்கிறார்கள்*3
. 20 அடி விட்டமும் 30 அடி உயரமும் கொண்ட இந்தக் கிடங்குகளில் மூன்று தளங்கள் மரப்பலகைகளால் அமைக்கபட்டிருக்கின்றன. மொத்தமாக 1500 டன் தானியங்களைச் சேமிக்க முடியும் என்பதைக்கேட்டு ஆச்சரியப்படும் நாம் கடந்த சில ஆண்டுகளாக விளைச்சல் இல்லாதாதால் இப்போது காலியாகதான் இருக்கிறது என்பதைக் கேட்டு வருந்துகிறோம். தானியங்களை நீண்ட நாள் சேமிப்பது என்பது மிகப்பெரிய சவால்.தட்பவெப்ப நிலைமாற்றங்களால் அவை வீணாகும் வாய்ப்பு அதிகம். அதனால் பசுஞ்சாணி, வைக்கோல்.கருப்பட்டி, பதனீர் பதப்பட்ட களிமண், ஒருவகை இலை போன்றவற்றை கலந்து அரைத்த கலவையால் இதன் சுவர்களை உருவாக்கியிருக்கிறான் அன்றை தமிழன். . அந்தக் கலவையின் ரகசியங்களைக் கண்டுபிடித்து அதை இயந்திரங்களின் மூலம் தயாரித்து சிதைந்து கிடந்த இந்தக் களஞ்சியங்களை இப்போது புதுபித்திருக்கிறார்கள். எல்லாம் இந்த ஆலய நிர்வாக அதிகாரியின் ஆர்வத்தினாலதான் என்கிறார் இதன் பொருப்பாளார்.
அந்த நீண்ட பிரகாரத்தின் மறுமுனையில் 1000 கால் மண்டபத்தை அடையும்போது ஏதோ மாறுதலை உணர்கிறோம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நாம் இந்த இடத்தை இப்படி பார்த்த ஞாபகம் இல்லையே? என்ற எண்ணம் தாக்குகிறது. காரணம் அந்த அழகான யானையின் சிற்பம்.*3a/4 வாலை முறுக்கி உயர்த்திக்கொண்டு மிக வேகமாக ஒடும் அதன் பின்னே அதை விரட்டும் பாகன். 12 அடி உயரமிருக்கும்.*3ato4b
“நீங்கள் மட்டுமில்லை. நான் இந்த ஊரிலேயே பிறந்து 40 ஆண்டுகளாக வாழ்ந்தவன். நானே இதைக் கடந்த சில மாதங்களாகத்தான் பார்க்கிறேன். இந்த யானையின் உயரத்துக்கு 12 அடிக்கு மண்மேடிட்டு அதனுள் புதைந்து போயிருந்திருக்கிறது. அந்த மேட்டில் புதர் மண்டிக்கிடந்ததால் யாரும் வரக்கூடமாட்டார்கள். அதனால் இப்படியொரு சிலை இருப்பதே யாருக்கும் தெரியாது. நல்ல வேளையாக இப்போது இருக்கும் நிர்வாகம் கண்டுபிடித்துச் செம்மைப்படுத்தியிருக்கிறார்கள்” என்றார் திரு ராமன்.*4a
வினோமான பச்சைவண்ணஜாடமுடி ஹேர்ஸ்டைலுடன் அருகிலிருந்த இருந்தஒருஜெர்மானியப்பெண்ணும்*6நமக்குச்சொல்லபட்ட விபரங்களைக்கேட்டு ஆச்சரியபட்டு போனார். ஒரு டிவி சானலில் பணிபுரியும் லில்லியும் அவரது அம்மா இல்காவும் கோவில்களைப்பார்க்க இந்தியா வந்திருக்கிறார்களாம்.*5&7 இத்தனை நாள் மண்ணில் புதைந்திருந்த அந்த மண்டபத்தின் பக்க சுவர் மலர்ந்த தாமரை இதழ்களின் மேல் நிற்பது போல அமைக்கபட்டிருக்கிறது அதன் மீது அழகிய சிற்பங்கள்.

அதைக்கடந்து வந்ததும் நம்மை நிறுத்துகிறது வெள்ளை வண்ணத்தில் நிற்கும் ஒரு பிரமாண்டமான கோபுரம். இதற்கு இனிமேல் வர்ணம் பூசு வார்களா? எனக் கேட்ட நமக்கு “இல்லை இது தான் பல ஆண்டுகளாக அதன் வண்ணம்” என்று சொன்னார் தினசரி இரு முறை இந்தக் கோவிலுக்கு வரும் திரு. ரெங்கராஜன்.7a திருச்சி BHELலிலிருந்து ஒய்வு பெற்ற இந்த அதிகாரி கோவிலின் அத்தனை விபரங்களையும் விரல்நுனியில வைத்திருக்கிறார். “இந்தக் கோபுரம் ஒரு தியாகத்தின் சின்னம். மூஸ்லீம் மன்னர்கள் படையெடுத்து இந்தக் கோவிலைச் சூறாடியபோது கோவிலின் நகைகளை ரகசியமாகப் பாதுகாத்த அமுதனார் என்பவரை அவை இருக்குமிடம் கேட்டுச்சித்தரவதை செய்துகொண்டிருந்தான் படைத்தளபதி. தளபதியின் கவனத்தை தன் அழகால் திருப்பிய ஒரு தேவதாசி தனக்கு நகைகள் இருக்குமிடம் தெரியும் எனச்சொல்லி இந்தக் கோபுரத்தின் உச்சிக்கு அழைத்துசென்று அங்கிருந்து அவனைத் தள்ளிவிட்டுவிட்டு தானும் குதித்து இறந்துவிட்டார். அவர் பெயர் வெள்ளையம்மாள். அவர் நினைவாக இந்தக் கோபுரத்துக்கு வெள்ளை தவிர வேறு வண்ணம் பூசுவதில்லை”. என்றார். அரங்கனின் நகைகளைக் காத்த அந்த ஆடலழகிக்கு ஒரு கோபுரத்தையே நினைவுச்சின்னமாக்கியிருக்கிறார்கள். என்று எண்ணிக்கொள்கிறோம்.
“இதைக் கவனித்தீர்களா? என அருகிலிருக்கும் சேஷ ராய மண்டப சிலைகளைக் காட்டுகிறார் திரு. ரெங்கராஜன்*7a. வரிசையாக நிற்கும் எட்டுத்தூண்கள். ஒவ்வொன்றும் ஒரே கல்லில் வடிக்கபட்டவை. முன்னெங்கால்களைத்தூக்கிப் பாயும் குதிரைகள்மீது போர்வீரர்கள். தங்களை தாக்க வரும் மிருகங்களுடனும் மனிதர்களுடன் போரிடும் காட்சிகள். குதிரைமீதிருக்கும் சேணத்தின் மெல்லிய சங்கிலியிலிருந்து, பாய்ந்த வேல் மிருகத்தின் வயிற்றை கிழித்து வெளியே வரும் வரை நுணுக்கமாகச் செதுக்கப்பட்டிருக்கிறது.*9to13 நாளெல்லாம் பார்த்துப் பார்த்து ரசிக்கலாம். அத்தனை தத்ரூபம். பொதுவாகக் கோபுரங்களின் அருகில் இப்படி பெரிய மண்டபங்கள் காணப்படுவதில்லையே- இங்கு எப்படி? எனக் கேட்கும் நமக்கு “இது கிருஷ்ண தேவராயர் பரம்பரையில் வந்த சேஷராயர் ராஜகோபுரத்தின் முதல் நிலையாக அமைக்க வடித்திருக்கிறார்கள். பிரித்துக் கோபுரத்தின் மீது நிறுத்துமுன் சரிபார்த்த அசெம்பளி மாடல் இது. மொட்டைக்கோபுர முதல் மாடத்தின் அளவுகளும் இதன் அடிப்பகுதி அளவுகளும் கச்சிதமாகப் பொருந்துகின்றன. தொடர்ந்த போர்களினால் கோபுரம் மொட்டைக்கோபுரமாக நின்றதைப் போல இது இங்கேயிருந்துவிட்டது “என்கிறார் அவர்
.
அடுத்து நாம் நிற்பது திராவிட தமிழ் வேதமான திவ்ய பிரபந்தத்தை, மக்களின் மனதில் ஆழ பதியச் செய்து, மதத்தில் பல புரட்சிகளைச் செய்த, ராமானுஜரின் சன்னதியில்.*13ato16. ராமனுஜர் என்பது ஒரு பெயர்மட்டுமில்லை. அந்தசொல்லே இரு இயக்கம் என்று சொல்லுமளவுக்கு வைணவத்தை வளர்த்த ராமனுஜருக்கும் இந்தக்கோவிலுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இராமானுசர் சிறந்த வேதாந்தி மட்டும் அல்ல; பெரிய நிர்வாகியும் கூட. திருவரங்கம் கோயிலின் நிர்வாகத்தை ஏற்று அதை முற்றிலும் சீர்படுத்தி அன்றாடம் நடக்கவேண்டிய ஒழுங்கு முறைகளை உருவாக்கியவர். கோயிலொழுகு என்று அவர் வாய்மொழியாகச் சொன்னவை, சுவடிகளில் பதியபட்டு இன்று புத்தகங்களாகவே வெளியாகியிருக்கிறது. இதில் சொல்லப்பட்டிருக்கும் விதிமுறைகளின் படிதான் அனைத்து வைஷணவ கோவில்களும் இயங்குகின்றன
.
“பல வருடங்களுக்கு முன் வைணவ மரபில், துறவிகளை எரிக்கும் வழக்கம் கிடையாது. மாறாக அவர்களைத் திருப்பள்ளிப் படுத்துவார்கள் (புதைத்தல்). இராமானுசரின் பூதவுடலை ஸ்ரீரங்கம் கோவில் வளாகத்தில் (முன்னாள் வசந்த மண்டபம் என்றழைக்கப்பட்ட இடத்தில்) திருப்பள்ளிப்படுத்தி அதன் மேல் எழுப்பப்பட்டது தான் தற்போதைய உடையவர் சன்னிதி. இதிலிருப்பது அவரது உடல் என நம்பப்படுகிறது.அதனால் தினசரி அபிஷேகங்கள் கிடையாது ஆண்டுக்கு ஒரு முறை பச்சைகற்புரம் குங்கமப்பூ அரைத்த கலவை பூசப்படுகிறது. அந்தச் சமயத்தில் அதைசெய்துகொடுக்க இங்கு பக்தரகள் வந்து உதவுவார்கள் என்று சொல்லும் பூஜா பரிசாகர் அரவிந்தன்*14 அதற்கான அம்மிகள் இருக்கும் அறையைக் காட்டுகிறர்.*15,15a இவர் அரங்கனின் பல்லக்கை சுமக்கும் தனிஉரிமைபெற்ற ஶ்ரீபாதம் தாங்கிகள் என்ற 16 குடும்பங்களின் ஒன்றின் பரம்பரையில் வந்தவர். *14 சன்னதியை சுற்றியிருக்கும் சிறிய பிரகாரத்தில் இராமனுஜரின் வாழ்க்கை கதையைச் சொல்லும் 108 தஞ்சாவூர் படங்கள். ஒவ்வொன்றும் பேசுகிறது. அருகில் புதர்மண்டிக்கிடந்த இடம் இன்று நந்தவனமாக மாறியிருக்கிறது.
அரங்கனின் ஆலயத்தைக் காத்த ஆச்சாரியனின் சன்னதிக்கு*16 அவரது 1000மாவது ஆண்டில் வந்ததை எண்ணி மகிழ்கிறோம். “பல ஆயிரம் ஆண்டுகளுக்குமுன்னரே சமூக நீதிகாத்த அந்த வேதாந்தி தமிழுக்கு காட்டிய மரியாதை மிக அதிகம். சன்னதியில் ஆராதனை முடிந்தவுடன் நாங்கள் மணிஅடித்தவுடன் வெளியே சமஸ்கிருதத்தில் சொல்லப்படும் வேதகோஷங்கள் நிறுத்தப்பட்டுவிடும். ஆனால் தமிழில் பிரபந்தம் சொல்லபட்டால் நிறுத்தப்படாது அது முடியும் வரை சன்னதி திறக்கப்படாது இந்த முறையைக் கொண்டுவந்தவர் இராமானுஜர். கோவில் பணிகளைப் பிரித்துப் பலருக்கு பகுந்தளித்ததைபோலக் கெளரவங்களை தரவும் ஒழுங்கு செய்திருக்கிறார். விழாநாட்களில் அர்ச்சகரான எனக்குப் பரிவட்டம் கட்டி கோவில் மரியாதைசெய்வதைப் போல மேளவாத்திய கலைஞரும் ஒரு நாள் கெளரவிக்கப்படுவார். இது மட்டுமில்லை நிர்வாகத்தில் இன்று கடைப்பிடிக்கும் பல விஷயங்களை அவர் அன்றே நிர்ணயத்திருக்கிறார். உதாரணமாகக் கோபுரத்தின் மீது தீப்பந்தம் வைத்துத் திரும்பும் தொழிலாளிக்குத்தான் அர்ச்சகர் முதல் சடாரி சாத்துவார். இது அந்தத் தொழிலாளி பத்திரமாகத் திரும்பியதை உறுதிசெய்து கொள்வதற்கும் தான் என்கிறார் சுந்தர் பட்டர்.*17a

நாம் சந்தித்த பலரும் பாராட்டிப் பேசும், கோவிலின் நிர்வாக அதிகாரியைச் சந்திக்க விரும்புகிறோம். உண்டியலிகளிலிருந்து கொட்டும் பணமழையை பிரித்துக் கணக்கிடுவதில் ஈடுபட்டிருக்கும் சமுக சேவர்களின் பணியின்*17 மேற்பார்வையில் இருந்த அவர் “இது முடிந்தபின் பேசுவோமே?” என்கிறார். கோவிலின் இணை ஆணையர் திரு பொன் ஜெயராமன்
.
கோவிலின் நுழைவாயில் எளிதாகத் திறக்கக் கூடிய நவீன அமைப்பில் தசாவதார சிற்பங்களுடனிருக்கும் புது மெருகு கலையாத பிரமாண்டமான தேக்கு கதவுகளைப் பார்த்தவண்ணம் அமர்ந்திருக்கிறோம். எண்ணங்கள் சிறகடிக்கின்றன.*18
இந்தக் கோவில்தான் எத்தனை சரித்திர சம்பவங்களுக்குச் சான்றாக நின்றிருக்கிறது-? சோழ, பாண்டிய சாளுக்கிய, நாயக்க என்று எத்தனை அரசு குலங்களையும் படையெடுப்புகளையும், வாரிசு சண்டைகளையும் போர்களையும் கொள்ளைகளையும் சந்தித்திருக்கிறது? அரங்கனை காப்பாற்ற எடுத்தச்சென்ற பயணத்தின் அஞ்சாத வாசத்திற்குபின் அவரது மீள் குடியேற்றமும், கோயிலொழுகு-, கம்பனின் காவியம், அருணாசலகவியின் ராமநாடகம் பிறந்த இடம் - எனக் காலப்பெட்டகமாகயிருக்கும் இந்தக் கோவில் சவாலை வெல்லும் சாதனையாளர்களை அடையாளம் காட்டிக்கொண்டேதானிருக்கிறது.
பல நூறண்டுகளாக மொட்டையாக நின்ற கோபுர அடிப்பகுதியின்மேல் தனது 85வது வயதில் பல போரட்டங்களுக்கிடையே 13 தளங்களுடன் ராஜகோபுரமாக எழுப்பிய சாதனையைச் சில ஆண்டுகளுக்கு முன் நமக்குக் காட்டியவர் ஜீயர் ஶ்ரீமத் அழகிய சிங்கர்.
ஆணையரிடமிருந்து அழைப்பு வருகிறது. “எப்படி இதைச்சாதித்தீர்கள்? என்ற நம் கேள்விக்கு “எல்லாம் அரங்கனின் ஆசி” என்ற அவரின் ஒற்றை வரி பதிலில் திருப்தியடையாமல் நாம் எழுப்பிய பல கேள்விகளுக்கு மிகப்பொறுமையாகப் பதில் சொன்னார். திரு ஜெயராமன். “இந்தக் கோவிலின் அறங்காவலர் குழுத் தலைவர் திரு வேணு சீனிவாசன்*20. அவர் பொறுப்பேற்றபின் தான் இந்தப் பணிகள் தொடங்கபட்டன. முதலில் கோவிலைச் சுத்தம் செய்து சீராக்குவது தான் திட்டம். ஆனால் சில மண்டபங்களில் ஆகமவிதிகளின் படி தூண்களின் உயரத்துக்கும் விதானத்துக்கு ஏற்பத்தரைத்தளங்கள் இல்லையென உணர்ந்தபோதுதான் கிழ்பாகங்கள் புதையுண்டு போயிருக்குமோ? எனச் சந்தேகம் எழுந்தது. தொல்பொருள் ஆய்வாளார்களின் உதவியோடு பணியைத்துவக்கினோம். பல இடங்களில் 10 அடிக்கும் மேல் மண்மேடிட்டிருப்பது தெரிந்தது. அதை அப்புறப்படுத்தவது என்பது சவால். எங்கே என்ன இருக்கிறது என்றே தெரியாத நிலையில் சிற்பங்கள் பாழாகிவிடாமல் அதைச் கவனமாகச் செய்ய வேண்டியிருந்தது. அகற்றபட்ட மண் 60 டன்களுக்கும் மேல். கோவிலின் பூஜைபணிகள் பாதிக்கமல் பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் சிறிய லாரிகளில் இரவு நேரங்களில் அகற்றினோம். சில பிரச்சனைகளும் எழுந்தன” என்கிறார்**19.

இந்தக்கோவிலின் நிர்வாகம் ஒரு வினோதமான கட்டமைப்பில் இருக்கிறது. அறநிலைத்துறை வசம் கோவில் இருந்தாலும் ஆகம விஷயங்கள் பல பரம்பரையாகத் தொடரும் குடுமபத்தினரிடமே இருக்கிறது. ஸ்தலத்தார் என்றழைக்கப்படும் அவர்கள் “காலங்காலமாக இருப்பதை எல்லாம் ஏன் மாற்றுகிறீர்கள்?” என இந்த மாறுதல்களை எதிர்த்திருக்கிறார்கள். வழக்குகள் போட்டிருக்கிறார்கள். “அசைக்கவே முடியாமல் துருப்பிடித்த கீல்களுடன் இருந்த கதவுகளை மாற்றியபோது பாரம்பரிய கதவுகளை விற்றுவிட்டோம் எனப் புகார் செய்தார்கள். அவர்களில் பலர் இன்றைய நிலையைப் பார்த்தபின் பாராட்டுகிறார்கள். இன்னும் சில தீவிர பழமை வாதிகள் தொடர்கிறார்கள் வழக்குகளும் இருக்கின்றன. அவற்றை அரங்கன் பார்த்துக்கொள்வான்” என்கிறார்

இந்தப் பிராஜக்கெட்டை செய்தது தொழிலதிபர்*20 திரு வேணு சீனுவாசனின் நிறுவனங்கள். அதன் அதிகாரிகளும்.பொறியிலாளர்களும் இரவு பகலாகப் பணிசெய்தார்கள். பலகட்டங்களில் அவரே பார்வையிட்டார். பல கோடிகள் செலவான இந்தத் திட்டத்தில் பெரும்பகுதி அவருடைய நன்கொடை என்கிறார்.திரு ஜெயராமன். தென்மாவட்டத்தைச்சேர்ந்த இவர் சட்டம்படித்தபின் தமிழக அரசுப்பணியில் தணிக்கைத்துறையில் சேர்ந்தவர். தான் அறநிலைததுறைக்கு மாறியபோது ஒரு கோவிலில் இத்தனை விஷயங்கள் இருப்பது தனக்கு தெரியாது என்கிறார். “செய்யும் தொழிலே தெய்வம்” என்கிறார் பட்டுக்கோட்டையார். இவர் தெய்வங்களைக் காக்கும் தொழிலைத் திறனுடனும் செய்நேர்த்தியுடனும் செய்கிறார்.
இந்த மனிதர் அறநிலைத்துறையில் மாநில அளவில் உயர் பதவிபெற்றால் தமிழக கோவில்களுக்கும் பக்தர்களுக்கும் நல்லது என்ற எண்ணம் எழுகிறது
.
ஓளி மங்கிய மாலை இரவாக மலர்கிறது. விடைபெற்றுக் கிளம்புகிறோம். ‘ஒரு மனிதன் செய்யும் பெரிய சாதனைகளுக்குக் காரணமாக இருப்பது அவனுக்குள் இருக்கும் தெய்வ சக்திதான்’ என்கிறது உபநிஷத்.
அத்தகைய மனிதர்களான திரு வேணு சீனிவாசன், ஜெயராமன் போன்றவர்களை இந்தக்கோவில் பெற்றிருப்பது அரங்கனின் திருவுள்ளம்.

கல்கி திபாவளி மலரில்(2017) எழுதியது

9/10/17

அழைப்பு


காந்தி ஸ்டடி சர்க்கிள் அமைப்பு வாரந்தோறும் புதன் கிழமையன்று வாசகர் வட்டம் நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். திரு. சரவணன்.திரு மோகன், திரு நித்தியானந்தம் போன்ற நண்பர்கள் மிகவும் ஆர்வத்துடன், தவறாது நடத்துகிறார்கள். இந்த வாரம் அண்மையில் வெளியான எனது நேதாஜி மர்ம மரணம் – ரகசிய ஆவணங்கள் சொல்லும் கதை" அறிமுகம் செய்யப்படுகிறது

. வாய்ப்புள்ளவர்கள் வாருங்களேன் சந்திக்கலாம்.

 சந்திக்கலாம்.

8/10/17

சிலைகள் எழுப்பியிருக்கும் பிரச்சனை

       
 
அமெரிக்காவில் வெர்ஜினியா மாநிலத்திலிருக்கும் ஒரு நகரம் சார்லொட்டஸ்வில் (Charlottesvulle). அமைதியான இந்த நகரில் எழுந்த ஒரு போராட்டம், இன்று அமெரிக்காவின் சிலநகரங்களில் இனவெறிப்போராட்டமாகப் பரவிக்கொண்டிருக்கிறது. நகரப் பார்க்கில் இருக்கும் ராபர்ட் இ-லீ என்பவரின் சிலையினால் எழுந்தது பிரச்னை.
அமெரிக்கா ஒரு ஐக்கியநாடாக, பிறந்தவுடன் சில மாநிலங்களை இணைக்க ஒரு நீண்ட உள்நாட்டுபோரை சந்தித்ததைச் சரித்திரம். சொல்லுகிறது 1861 முதல் 1865 வரை நடைபெற்ற இந்த உள்நாட்டுப் போருக்கான காரணங்களில் ஒன்று. .அடிமைகளின் விடுதலை. முறையை ஒழிப்பதை முன்னிறுத்தி ஆபிரகாம் லிங்கன் அந்த   தலைமையில் ஒரு படையும், அடிமைகளை விடுதலை செய்யக் கூடாது என்பதை முன்னிறுத்தி ஜெபர்சன் டேவிஸ் தலைமையில் மற்றொரு படையும் போரில் ஈடுபட்இதிஸீல் ஜெபர்சன் டேவிஸ் அணியியை ஜெனரல் ராபர்ட் இ-லீ வழிநடத்தினார்.
இந்தப் போரில் ஆபிரகாம் ஆபிரஹாம் லிங்கள் வெற்றி பெற்றாலும் அவரை எதிர்த்துப் போராடிய மாநிலங்களில் ஆட்சி செய்யதவர்களின் சிலைகளும் பெயர்களைத்தாங்கிய பொதுக் கட்டிடங்களும் தொடர்ந்து கொண்டிருந்தன. காலப் போக்கில் மக்கள் அவைகளை தங்கள் மாநிலத்தின் சரித்திர அடையாளாங்களாக ஏற்றுகொண்டார்கள்.
வெர்ஜினியா மாகாணம் சார்லோட்டஸ்வில் நகரில்  இந்த ஜெனரல் ராபர்ட் இ-லீ-யின் சிலை உள்ளது. அந்தச் சிலையை அகற்ற நகர நிர்வாகம் முடிவு செய்தது. சொல்லப்பட்ட காரணம் இம்மாதிரி சிலைகள் அமெரிக்காவில் வெள்ளையினத்தவரின்களின் ஆதிக்கத்தைக் காட்டும் அடையாளம். என்பது. முடிவு செய்து ஒராண்டாகியும் சிலை அகற்றபடாதால், அதைச்செய்வதற்கு இயந்திரங்களுடன் ஒரு தன்னார்வ குழு பார்க்கில் குழுமிவிட்டது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு குழு சார்லோட்டஸ்வில் நகரில் பேரணி நடத்தினர். அதேநேரம் இன ஒற்றுமையை வலியுறுத்தும் ஒரு  குழுவினரும் அதே பகுதியில் கூடினர்.
 இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் பெரிய கலவரமாக வெடித்தது அதில் நகரின் முக்கிய மனித உரிமை ஆர்வலர் ஒருவர் இறந்துவிட்டார். இது தேசிய சின்னமாக அறிவிக்கபட்ட  பல சின்னங்களில்  இந்தச் சிலையும் ஒன்று. அகற்ற நகரகவுன்சிலுக்கு அதிகாரமில்லை என்று போடப்பட்ட வழக்கில் நீதிபதி, அகற்ற தடையுத்தரவு பிறபித்து சில நகரங்களில் நடந்திருப்பதைப் போல சிலைஉடைக்கபட்டுவிடக்கூடாது என்பதற்காக சிலையை கருப்பு துணியால் மூடி பாதுகாக்க  உத்திரவிட்டிருக்கிறார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மெரிலாண்ட், ஃபளோரிடா வடக்கு காரோலினா போன்ற மாநிலங்களில் உள்ள சில பெரிய நகர கவுன்சில்கள் இம்மாதிரி இருக்கும் சிலைகளை அகற்ற தீர்மானங்கள் போட்டு இரவோடு இரவாக அகற்றவும் செய்துவிட்டார்கள். துர்ஹாம் என்ற நகரில் போராட்டக்கார்களே சிலையைப் பீடத்திலிருந்து கழட்டி கயற்றில் கட்டி கிரேன் மூலம் பகலில் மக்கள் கைதட்டலுடன் அகற்றியிருக்கிறார்கள். சில இடங்களில் சிலைகள் கறுப்பு துணிகளால் மூடப்பட்டன. சில சிலைகள் மரப்பெட்டிகளால் மறைக்கபட்டன.
நகர பார்க்குகளை நிர்வகிக்கும் உரிமை நகர கவுன்சில்களுக்கு இருந்தாலும் இப்படி சிலைகளைச் சின்னங்களையும் அகற்றும் உரிமைகளை ரத்து செய்திருப்பதாகச் சில மாநில அரசுகள் அறிவித்திருக்கின்றன.  இந்த முடிவை எதிர்த்து வழக்குகளும் போடபட்டிருக்கின்றன
இம்மாதிரி நாட்டின் ஒற்றுமையைக் குலைக்கும் இனவெறிச் செயல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஸ்டன் நகரில் பல்லாயிரக் கணக்கானோர் கலந்து கொண்ட பிரம்மாண்ட பேரணி ஒன்றும் அண்மையில் நடைபெற்றது
இந்த எதிர்ப்பும் போராட்டமும் ஒரே இரவில் எழுந்தவை இல்லை. 2015ல் கொலைவெறி பிடித்த வெள்ளை இன அமெரிக்கர், ஒருவர் பல கறுப்பினத்தவரை சுட்டுக்கொன்றதில்  எழுந்த கோபம் அடங்காமல் மெல்ல கனிந்து கொண்டிருந்தது. “கருப்பு இனத்தவரின் உயிர்களும் முக்கியமானது(Black lives matter movement) என்று ஒரு இயக்கம் எழுந்த்து. அது தான் இதைச்செய்து கொன்டிருக்கிறது
.
அமெரிக்காவின் பல நகர கவுன்சிகளில் கறுப்பினத்தவர் பெருமளவில் இடம் பெற்றிருப்பதால் இதைச் செய்யத் துவங்கியிருக்கிறார்கள். சிலைகளை அகற்றுவது ஒரு அடையாளமே தவிர பிரச்னையின் ஆழம் பெரிது.
இந்த ஆண்டு பிப்ரவரியில் யேல் பல்கலைகழகம் இந்தப் பிர்ச்னையை சந்தித்தது. அந்தப் பலகலைகழகத்திலிருக்கும் பல கல்லூரிகளில் ஓன்று கால்ஹென் காலேஜ்(CALHOUN COLLEGE) செல்வந்தரான அவரது நன்கொடையினால் உருவாக்கப்பட்ட இந்தக் கல்லூரிக்கு அவரது பெயரிடப்பட்டு அதன் முகப்பில் அவர் சிலையும் நிறுவப்பட்டு பலகாலமாக இருந்து வருகிறது. திரு கால்ஹென் கறுப்பின அடிமை முறையை ஆதரித்தவர், அதனால் அந்தப் பெயரை மாற்றிச் சிலையை அப்புறபடுத்துங்கள் என மாணவர்கள் போராட்டம் செய்தனர். முதலில் வெகுகடுமையாக எதிர்த்த பல்கலை கழக நிர்வாகம் நீண்ட போரட்டங்களுக்கு பின்னர் தன் முடிவை மாற்றிக்கொண்டு கல்லூரியின் பெயரை  இப்போது மாற்றியிருக்கிறது. இதுபோல பல பல்கலைகழங்களில் இப்படி நனகொடை கொடுத்தவர்களின் பெயர்களும், சிலைகளும் இருப்பதால் இம் மாதிரிப் போராட்டங்கள் அங்கும் தொடரலாம் என்ற அச்சம் எழுந்திருக்கிறது.
இதுவரை 60க்குமேல் சிலைகளும் அடையாளங்களும் அகற்றப்பட்டிருக்கின்றன, . நமது உள்நட்டுப் போரும் அடிமைமுறை ஒழிப்பும் நாட்டின் சரித்திரம். அதில் பங்குபெற்றவர்களும் அமெரிக்கர்கள் தான். 20ம் நூற்றாண்டில் நிறுவபட்ட சிலைகளை இப்போது அகற்ற போராடுவது அநாகரிகம். சரித்திரத்தை நாம் ஏன் மறைக்க வேண்டும்? என இருநிற இனத்தவரும் இணைந்த குழு ஒன்றும் குரல் எழுப்ப்யிருக்கிறது
.
இந்த இனமோதலை அமெரிக்க அதிபர் டிரம்ப் சரியான விதத்தில் கையாளவில்ல என அனைத்து தரப்பினரும் விமர்சிக்கின்றனர். பிர்ச்சனை தீவிரமாக இருந்தபோது “இன்று ராப்ர்ட்- இ லீ நாளை ஜார்ஜ் வாஷிங்டனா? பின்னர் ஜெபர்ஸ்னா? அவர்களும் அடிமைகளை வைத்திருந்தவர்கள் தானே?” என்ற அவரது பேச்சு அமெரிக்க வெள்ளையினத்தவரின் ஆணவ வெளிபாடாகப் புரிந்துகொள்ளபட்டது. வழக்கம் போலப் பின்னால் அவர் தெரிவித்த குழப்பான விளக்கங்கள் எடுபடவில்லை.
உலக சரித்திரத்தை உற்று நோக்கினால்  பெரிய போராடங்களுக்கும் புரட்சிக்கும்  பின்னால் ஒரு தனி மனிதனின் செயல் தீப்பொறியாகத் துவங்கியிருக்கும். ஒரு கோபக்காரின் துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களுக்கு விலையாக் இந்தப் போராட்டம் எழுந்திருக்கிறது.
இது வலுக்குமா? சரியான நடவடிக்கைகள்மூலம் டிரம்ப் பின் நிர்வாகம் வலுவிழக்கச்செய்யுமா?
 உலகம் பார்த்துக்கொண்டிருக்கிறது


 

24/9/17

புத்தக் வெளியீடு



எனது புத்தக வெளியிட்டு விழாவை நண்பர் விஜயன் காணிளியாக்கி யூ டுயூபில் வெளியிட்டிருக்கிறார்.  இங்கே அதப் பார்க்கலாம். 













18/9/17

பெட்ரோல் விலை ஏன் உயர்ந்துகொண்டே போகிறது?
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த 2014ம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஒரு பேரல் 109.05 டாலராக இருந்தது. கடந்த ஜனவரி மாதத்தில் இது வெறும் 28.12 டாலராக சரிந்தது. அதன்பிறகு தற்போது ஒரு பேரல் கடந்தமாத  நிழைவு வரி 

13/9/17

விற்கப் படும் வீரப்பதக்கங்கள்



தலை நகரில் குடியரசு தின அணிவகுப்புக்கு முன்னர் குடியரசுத் தலைவர் இந்திய ராணுவத்தின் உயரிய கெளரவமான பரம வீர் சக்ரா. வீர்சக்ரா போன்ற பதக்கங்களை வழங்கும்போது, அவற்றை அதிகாரிகள் பெருமிதத்தோடு பெறும் கம்பீரமான காட்சிகளைப் பார்த்திருக்கிறோம். இந்த உயரிய விருது பதக்கங்களைத்தவிர 10 விதமான பதக்கங்களை நமது ராணுவ அதிகாரிகளுக்கும் வீரர்களுக்கும் வழங்குகிறது இந்திய அரசு என்ற செய்தியை நம்மில் பலர் அறிந்திருக்கக்கூடும்.

ஆனால் அதிர்ச்சியான செய்தி இந்தப் பதக்கங்கள் கடைகளில் விற்கப்படுகிறது என்பதுதான். செகந்திரா பாத் நகரில் லால் பஸார் என்ற பகுதியில் மிலிட்டிரி லேன் என்றழைக்கப்படும் ஒரு சிறிய சந்திலிருக்கும் கடைகளில் இந்திய ராணுவம் தரும் எந்தமெடலும் விலைக்குக் கிடைக்கிறது. மெடல்கள் மட்டுமில்லை ராணுவ அதிகாரிகள் தோள்பட்டையில் அணியும் அந்தஸ்த்தை குறிக்கும் ஸடார்கள், பட்டைகள் எல்லாமே கிடைக்கிறது. 2500 ரூபாய்களில் ஒரு ராணுவ அதிகாரி தன் வீர தீரச் செயல்களுக்காகப் பெறும் அத்தனை மெடல்களுடன் அதிகாரி அணியும் யூனிபார்மே கிடைக்கிறது.

1999 கார்கில் போர் ஆப்ரேஷன் விஜய் யில் பங்குபெற்றதற்கான மெடல் 40ரூபாய், சியாச்சின் பனிச்சிகரங்களின் பணியிலிருந்ததற்காகத் தரப்படும் உச் துங்கட்டா மெடல் 40 ரூபாய், மிகச்சிறந்த பணிக்கான மெடல் ரு 180 என விலைபட்டியலைப் பார்த்துசொல்லுகிறார்கள். மெடல்கள் ஷோ கேஸ்களில் காட்சிக்கு வைக்கபடவில்லையே தவிர, மருந்துக்கடை களிலிருப்பது போல அட்டைப்பெட்டிகளில் போட்டுப் பெயர் எழுதி அடுக்கி வைத்திருக்கிறார்கள். உங்களுக்கு எந்த மெடல் வேண்டும்? எனக் கேட்டுத் தருகிறார்கள். மெடல்கள் கோர்க்கபட்டிருக்கும் ரிப்பன்களின் கலரும் டிசைனும் அது எந்த வகை மெடலை சேர்ந்தது என்பதைச்சொல்லும். எல்லா நேரங்களிம் மெடல் அணிய முடியாதாகையால் இந்த ரிப்பன் வண்ணங்களை ஒரு குறிப்பிட்ட அளவில் பேட்ஜ்களாக அணிவார்கள். இதை அதிகாரிகள் யூனிபார்ம் அணியாத போதும் அணிந்துகொள்வார்கள். அந்த மாதிரி பேட்ஜ்களூம் கிடைக்கிறது.
யார் இதை வாங்குகிறார்கள்? என்ற கேள்விக்கு—“நமது வீரர்கள் தான்” என்று வந்த பதில் நமது அதிர்ச்சியை அதிகபடுத்துகிறது. விருது பெற்ற வீரர்கள் அதை ஏன் இவர்களிடம் வாங்குகிறார்கள்?,

ராணுவத்தில் ஆண்டுதோறும் சிறந்த சேவைக்காக, திறமையான பணிக்காக என பல மெடல்கள் அறிவிக்கபட்டாலும், அந்தக் கடிதமும், சிலசமயம் அதற்கான பணப்பரிசும் அந்த வீரர்களுக்கு அனுப்பபடும். ஆனால் மெடல்கள் அவர்களுக்கு அளிக்கத் தாமதம் ஆகும். சில சமயங்களில் ஆண்டுகள் கூட ஆகிவிடுமாம். 10  ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கபட்ட மெடல்கள் இன்னும் கொடுக்கபடவில்லையாம்.  
 இந்த மெடல்களில் ராணூவத்தினரின் பெயரோ அலலது நம்பரோ பொறிக்க பட்டிருக்காது. பணப்பரிசை விட மெடல் அணிந்துகொள்வதை பெரிய  கெளவரமாகக் கருதுவதால் வீரர்கள் இந்த மாதிரிகடைகளில் கிடைக்கும் டூப்பிளிகேட்களை வாங்கி அணிந்து கொள்கிறார்கள். 
இதை டூப்பிளீகேட் எனச்சொல்லக் கூடாதாம். இவற்றிற்கு “டெயிலர் காப்பி” என்று பெயர் என்ற கடைக்காரர்களிடம் இதற்கு அவர்களுக்குரிய அனுமதி வழங்கப்பட்டிருக்கிறதா என்று கேட்டால் மழுப்புகிறார்கள். ஒரு கடைக்காரர் யூனிபாரம் தைத்து விற்க அனுமதியிருக்கிறது. மெடல்களும் யூனிபார்மின் ஒரு பகுதிதானே என்றார். வாங்குபவர்கள் ராணுத்தினரா? என்று கூடக் கேட்பதில்லை
.
ஒரு கடையில் சில ஓரிஜனல் மெடல்களையும் விற்கிறார்கள். பஞ்சாப் மாநில போலீஸின் விருதான ஸ்பெஷல் டுயூடி மெடலை அதனுடைய பெட்டியுடன் காட்டினார்கள்.
 சரியான போர்டு கூட இல்லாத கடைகளில் இப்படி விற்கிறார்களேயென ஒரு முன்னாள் ராணுவ அதிகாரியிடம் கேட்டபோது, “நமது மெடல்களை தயாரிப்பது அரசின் மின்ட் தான். அவர்களால் ஒரே நேரத்தில் பல மெடல்களை உரிய நேரத்தில் தயாரித்துக்கொடுக்க முடியவில்லை. அதனால் அந்த மெடல்களை தயாரிக்கும் மோல்ட்களை தயாரித்து இப்படி மெடல்களைச் செய்யும் ஒரு நிறுவனம் பஞ்சாபில் துவங்கியது. இவைகள் மிகவும் மலிவான உலோகங்களில்  கனம் இல்லாமல் செய்யப்பட்டிருக்கும். ராணுவத்தினருக்கு அது ஒரிஜினல் இல்லை என்பது எளிதாகத் தெரிந்துவிடும்.
இப்போது பெரிய பிஸினஸ் ஆகி விட்டது. சில சமயம் அரசின் முடிவுகளும் காரணம். இந்திய சுதந்திரத்தின் 50 வது ஆண்டுவிழா நினைவாக இந்திய ராணுவத்திலிருக்கும் அனைவருக்கும்  மெடல் என்று அறிவிக்கபட்டது. அதை எல்லோருக்கும் வினியோகிக்க 5 ஆண்டுகள் ஆனது. அதற்குள் சிலர் ஓய்வே பெற்றுவிட்டார்கள்.பலருக்கு போயே சேரவில்லை. இது போலச் சில குழப்பங்கள் என்ற அவர். இந்த ஒரிஜினல் மெடல்களை நீங்கள் ஆன்லைனிலேயே கூட வாங்கலாம்” என்றார்
.
ஆச்சரியப்பட்டு இணையத்தில் தேடியபோது  இந்திய சுதந்திர 50ஆம் ஆண்டு மெடல்  360 ருபாய்க்கும் மற்றொரு நிறுவனத்தில் அதைவிட 10 ரூபாய் குறைவாகவும் கிடைக்கிறது. இதைத்தேடும்போது பார்த்த  மற்றோரு விஷயம் இ பே என்ற ஆன்லைன் நிறுவனம் இந்திய ராணுவ  மெடல்களை ஏலத்தில் விற்கிறது. ஒன்பது வெவ்வேறு மெடல்கள் அடங்கிய ஒரு மெடல் பார் ரூ 3500 என்று ஒரு நிறுவனம் விலை சொல்லுகிறது.
 அதிகாரிகளின்பெயர்களுடனும் நம்பர்களுடனும் உள்ள ஒரிஜினல் மெடல்களுக்கு அமெரிக்க டாலரில் விலைபட்டியலிட்டிருக்கும் இ பே அவற்றை இந்தியாவிற்கு அனுப்ப முடியாது என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறது
.
“பெயர் பொறிக்கப்பட்டிருக்கும் மெடல்களை எந்த ராணுவ வீரனும் விற்க மாட்டான். அவன் உயிரைவிடவும் நேசிக்கும் விஷயம் அது. சில சமயங்களில் மரணத்துக்குப் பின் புதைக்கும்போது கூட அதை அணிந்த நிலையில் தான் புதைப்பார்கள். இப்படி விற்பனைக்குக்  கிடைப்பது திருடப்பட்டது அல்லது வீரர் இறந்த பின் எவரும் உரிமை கோராத தாக இருக்கும் என்கிறார். ஒரு மூத்த முன்னாள் ராணுவ வீரர்.

ராணுவத்தினருக்கு வெற்றி பதக்கங்கள் என்பது அவர்களின் சாதனைகளைப் பார்ப்பவருக்குச் சொல்லும் அடையாளம். சியாச்சின் பள்ளதாக்குகளின் பனிப்புயல்களிலும், இமயப்பகுதி எல்லைகளிலும் பலவிதமான இடையூறுகளுக்குமிடையில் தங்கள் சிறப்பான பணிக்காகப் பெறும் விருதுகளூம் பதக்கங்களும் அவர்களை உடனே அடைவதில்லை என்பது மிக வருத்ததுக்குரிய விஷயம்.
 எவ்வளவோ விஷயங்களை மாற்றத்துடிக்கும் இந்த அரசு இதையும் கவனிக்குமா?










2/9/17

100 வருடங்களாகத் தினமும் போட்டோ!





மெல்ல நம்மைத்தொட்டுச்செல்லும் இனிய தென்றலின் இதத்தில் வழியெங்கும் புன்னகைக்கும் பூக்களைப் பார்த்தவண்ணம் நடக்க பாதைகள். பசுமையாகப் பரந்திருக்கும் மலைசிகரங்களை தொட்டு மிதந்து கொண்டிருக்கும் வெண்பனிமேகங்கள். அமைதியாகயிருக்கும் அழகான ஏரி. வெள்ளிக்கம்பிகளாக அவ்வபோது பாய்ந்து கொண்டிருக்கும் மழைச்சாரல் என இயற்கை தந்த “கொடையாக” நாம் அறிந்திருக்கும் கொடைக்கானல் தான், கடந்த நூற்றாண்டில் விண்வெளி இயற்பியலில்(ஆஸ்ட்ரோபிஸிக்ஸிக்கில்) ஒரு மிக முக்கிய கண்டுபிடிப்பு நிகழ்ந்த இடம் என்பதும், அந்த வான் மண்டல கண்காணிப்பு தொலை நோக்கு நிலையம் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாகத் தினசரி சூரியனின் நிலையைப் போட்டோ எடுத்துக்கொண்டிருக்கிறது என்பதும் பலருக்குத் தெரியாத செய்தி
.
நாள்தோறும் ஆதவன் ஒய்வு இல்லாமல் தன் பணியைச்செய்வதைப் போல நிறுவப்பட்ட நாளிலிருந்து சூரியனை தினமும் படமெடுத்துகொண்டிருக்கும் இந்த வான் மண்டல கண்காணிப்பு மையத் (0bservatory).திற்கு வயது 118. உலகில் நிறுவப்பட்டஇடங்களிலேயே நிலைத்து தொடர்ந்து 100 ஆண்டுகளுக்குமேல் தங்கள் பணியைத் தொடர்ந்து கொண்டிருக்கும் 3 மையங்களில் இது முதன்மையானாது. 1899ம்ஆண்டு சூரிய மண்டலத்தை ஆரயாய நிறுவப்பட்ட இந்த நிலயத்திலிருந்தது தினசரி சூரியனை படமெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஆம்! 100ஆண்டுகளாக தினசரி சூரியனை படமெடுத்து பதிவுசெய்துகொண்டிருக்கிறார்கள். உலகெங்குமிருக்கும் பல வான் மண்டல ஆராய்ச்சியாளார்கள் அதைப் பயன் படுத்திக்கொண்டிருக்கிறார்கள்
“ஓரு பேரிடரினால் சில நன்மைகளும் உண்டாகும்” என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப 1890-95 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகக் கொடிய பஞ்சத்தின் பின் விளவுகளில் ஓன்று தான் இந்திய வான் ஆராய்சி மையங்கள். கிழக்கிந்திய கம்பெனி தன் சாம்ராஜ்யத்தின் எல்லைகளை விஸ்தரித்துகொண்டிருந்த அந்தக் கால கட்டத்தில், எற்பட்ட மிக மோசமான பஞ்சத்திற்கு காரணம் தொடர்ந்து மழைபொய்த்ததும், அந்த நிலையை முன்கூட்டிய அறிய வாய்ப்பில்லாது போனதுதான் என்று உணர்ந்த நிர்வாகம் வானிலை ஆராய்சி நிலையங்களைத் துவக்கியது.


ஜான் எலியட் என்ற அதிகாரி கண்டுபிடித்த “தூசி மறைக்காமல் வானம் தெளிவாகத் தெரியக்கூடிய இடமான பழனி மலைத்தொடரின் இந்தப் பகுதி” தேர்ந்தெடுக்கபடுகிறது. பின்னாளில் இது சென்னை நுங்கம்பாக்கத்துக்கு மாற்றப்பட்டபின் இது சூரியனை ஆராயும் நிலையமாக மாற்றபட்டிருக்கிறது.


“இந்தக் கட்டிடத்தில் ஜனவரி 9ம் நாள் 1909 ஜான் எவர்ஷெட் சூரியனிலிருக்கும் கரும்புள்ளிகள் ஒரு குறிப்பிட்ட சுழற்சிமுறையில் உருமாறுவதை கண்டுபிடித்தார்” என்ற பதிவுக்கல் வரவேற்கும் அந்தச் சிறிய கூடத்திலிருக்கும் டெலிஸ்கோப் மூலம் தான் சூரியனின் படம் தினசரி பதிவு செய்யப்படுகிறது.
சூரியனில் உள்ள கரும்புள்ளிகள் 11ஆண்டுகளுக்கு ஒருமுறை உருமாறிக் கொள்வதும் அதன் விளைவாக நிகழும் மாற்றங்கள் தான் பருவ நிலை மாறக்காரணம் என்ற இவரது கண்டுபிடிப்பு “எவர்ஷெட் எபஃக்ட்’ என்ற அழைக்கப்படுகிறது. இன்றும் தொடர்ந்துகொண்டிருக்கும் பல ஆராய்ச்சிகளுக்கு இது தான் அடிப்படை.

வட்டவடிவ கட்டிடத்திற்கு கோளவடிவ ஹெல்மெட் போட்டதைப் போன்ற அமைப்பு. அந்தக் கோள வடிவ மேற்கூரையை நகரும் கதவுகளுடன் கோள வடிவத்தில் (2300ரிவிட்கள்!) அமைக்கவேண்டியிருந்த அந்தப் பணிக்கு உள்ளுரில் திறமையான தொழிலாளிகள் இல்லாதால் தானே தினந்தோறும் உழைத்து அமைக்கிறார் இதன் முதல் அதிகாரியான மைக் ஸ்மித்.


சுழுலும் சக்கர கைப்பிடிகளினால் எளிதாக இயக்கித் திறக்ககூடிய இந்தக் கதவுகள் இன்றும் இயங்குகிறது. சூரியன் நகரும் பாதையை நோக்கி மட்டும் திறக்கப்படும் இதன் கதவுகளின் வழியே டெலிஸ்கோப் சூரியனைபார்க்கிறது. 1901ல் நிறுவப்பட்ட 6” டெலிஸ்கோப் சிறந்த பாரமரிப்பினால் இன்றும் பணி செய்வதை விட ஆச்சரியம் அதன் மூலம் எடுக்கபட்ட அத்தனை படங்களும் பாதுகாக்கப்பட்டிருக்கிறது என்பது தான்
1999ம் ஆண்டு இதன் நூற்றாண்டுவிழா கொண்டாடப்பட்டபொழுது உலகெங்குமிருந்து 50 ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்று தங்கள் படைப்புகளைப் பதிவு செய்திருக்கிறார்கள்.



எப்படி படமெடுக்கிறார்கள்?. சூரியனை கேமிரா வழியாகக் கூட நேரடியாகப் பார்க்கமுடியாது. அதற்காக ஒரு மூன்று அடுக்கு அமைப்பு. மேல் மாடியில் சூரியனைப்பார்க்கும் டெலிஸ்கோப் தான் பார்ப்பதை ஒரு வட்டகண்ணாடியில் பிரதிபலிக்கிறது. அங்கிருந்து அது 45 டிகிரி கோணத்தில் இரண்டாவது மாடியிலிருக்கும் மற்றொரு கண்ணாடியில் தெரிகிறது.  அது மீண்டும் தரையின் கிழே பூமிக்கடியிலிருக்கும் மற்றொரு கண்ணாடியில் பட்டு அதன் முன்னே 60 அடி தொலைவில் இருக்கும் ஒரு வெண்திரையில் பிரதிபலிக்கிறது. அதை அதன் முன் நீண்ட பாதையில் நகரும்படி அமைக்கப்பட்டிருக்கும் கேமிரா படம்பிடித்துக்கொண்டே இருக்கிறது. ஒரு வினாடி கூடத் தவறாமல் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக இப்படி படம் எடுத்துக்கொண்டே இருக்கிறது. கிராப் பேப்பர்களில் கோடுகளாகப் பதிவு செய்து கோண்டிருந்த இது இப்போது டிஜிட்டலாக்கபட்டு கம்யூட்டரில் பதிவு செய்யப்படுகிறது. 150 மில்லியன் கீமிக்கு அப்பால் இருக்கும்(ஒரு மில்லியன் 10 லட்சம்) சூரியனின் முழூ உருவத்தைக் கைக்கெட்டும் தூரத்தில் கண் கூசாமல் பார்க்கிறோம்

.
இப்படி சூரியனைத் தொடர்ந்து கண்காணிக்கும் மையம் உலகிலேயே இது ஒன்று தான் என்று சொல்லி நம்மை ஆச்சரியப்படுத்துகிறார் இந்த மைய இயக்குனர் திரு செல்வேந்திரன். விண்வெளியியலில் சிறப்புப் பட்டங்கள் பெற்றிருக்கும் இவர் இந்தத்துறையில் நீண்ட அனுபவம் கொண்டவர். மிக அழகாக நமக்கு எளிதில் புரியும்படி விளக்குகிறார். பென்சிலில் இடப்பட்ட புள்ளிபோல வெண்திறையில் நமக்குத் தெரியும் இந்தக் கருப்பு புள்ளிகள் தான் பிளாக் ஸ்பாட் எனப்படும் கரும்புள்ளிகள். ஒவ்வொன்றும் பூமியைவிடப் பெரிது என்கிறார்.
வளாகத்திலிருக்கும் கட்டிடங்களில் ஒரு சிறு நூலகமும், அருங்காட்சியகமும் இருக்கிறது மிகுந்த கஷ்டங்களுக்கிடையே காடாக இருந்த இடத்தில் நிலையம் உருவாக்கப்பட்டிருக்கிறது போன்ற பல தகவல்கள், ஓரு சுவையான நாவலைப் போல எழுதப்பட்ட பல குறிப்புகள்அடங்கிய புத்தகங்கள், 1000க்குக் மேற்பட்ட புத்தகங்கள் இருப்பதால் போதிய இடமில்லாதால் மேற்கூரை வரை அடுக்கியிருக்கிறார்கள் தேவயையானபோது பெரிய ஏணிகள் மூலம் எடுப்பார்களாம்

பல அரிய படங்கள் கருவிகளின் மாதிரிகள், படங்கள் கொண்ட அந்த அருங்காட்சியகத்தில் மனமும் நேரமும் இருந்தால் நாள் கணக்கில் செலவழிக்கலாம்.


எல்லோருக்கும் டெலிஸ்கோப் இருக்கும் கட்டிடத்திற்குள் அனுமதி இல்லை என்பதால் அது எப்படி செயல் படுகிறது என்பதை இந்த அருங்காட்சியகத்தில் அதன் சிறிய மாதிரியை அமைத்து ஒரு சிறிய டெலிஸ்கோப் வழியாகச் சூரியனின் பிம்பத்தைக் காட்டி அருமையாக விளக்குகிறார்கள் திரு செல்வேந்தரனின் உதவியாளர்கள்.

சென்னை SIET கல்லூரியில் 50 ஆண்டுகளுக்கு முன் ஒரே வகுப்பில் படித்தவர்கள் தங்கள் நீண்டகால நட்பைக் கொண்டாட கொடைக்கானல் வந்த குழு ஒன்று கேட்ட கேள்விகளினால் நாம் பல விஷயங்களைப் புரிந்து கொள்கிறோம். அவர்கள் கணிதத்துடன் வானியல் படித்தார்களாம். ஆர்வத்துக்கு வயது இல்லை என்பது புரிகிறது

.

வானியல் வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வு நடந்த இடம், 100 வருடங்களுக்கும் மேலாக ஆதவனை அலுக்காமல் பார்த்து உலகின் வானவியல் வித்தகர்களுக்குத் தொடர்ந்து புதிய செய்திகளை வழங்கிக்கொண்டிருக்கும் ஒரே இடத்தை நாம் பார்த்தோம் என்ற பெருமிதத்தோடு வெளியே வருகிறோம்.

 


24/8/17

“நீங்களும் ஜெயிக்கலாம்”-- மின் புத்தகம்

எனது “நீங்களும் ஜெயிக்கலாம்” புத்தகத்தை Free tamilbooks com மின்னூலாக வெளியிட்டிருக்கிறார்கள்.
 நண்பர் திரு. அன்வருக்கும் திரு, ஶ்ரீநினிவாசனுக்கும் நன்றி. இரண்டு நாட்களில் தரவிறப்பட்டிருக்கும் எண்ணிக்கை 1000 நெருங்குகிறது என்ற விஷயம் மகிழ்ச்சியாகயிருக்கிறது. நீங்களும் இந்த சுட்டியின் மூலம் தரவிறக்கி படித்துப் பாருங்களேன். உங்கள் கணணி, போன்களுக்கு ஏற்ப தரவிறக்கம் வடிவமைக்கப் பட்டிருக்கிறது.

http://freetamilebooks.com/ebooks/neengalum-jeyikkalam/



புத்தகத்தின் பின் அட்டையிலிருந்து...
சிறிய அளவில் ஒரு தொழிலையோ, வியாபாரத்தையோ துவக்கி வெற்றிபெற வேண்டும் என்பது உங்கள் கனவா?
ஆனால் கூடவே என்னால் இது முடியுமா? என்ற கேள்வியும் எழுகிறதா?
வெற்றி பெற்றவர்களுக்கு தெரிந்த அந்தச் சூத்திரத்தை யாராவது நமக்குச் சொல்லுவார்களா?
அப்படியே அதைத் தெரிந்துகொண்டாலும் அது எனக்கு பயன் தருமா?
போன்ற தொடர் கேள்விகளால் தயங்கி நிற்கிறீர்களா?
உங்கள் தயக்கங்களை தகர்த்தெறியும் இந்தப் புத்தகம் ஒரு தொழிலை துவக்க விரும்புவர்களுக்கு இருக்கவேண்டிய அடிப்படைத் தகுதிகள், அதை வளர்த்தெடுக்க வேண்டிய தகுதிகள், அதை வளர்த்தெடுக்க வேண்டிய முறைகள் போன்றவற்றோடு ஒரு தொழிலை துவக்கி அதை வளர்க்க இருக்கும் வாய்ப்புகள், அதனைப் பயன் படுத்திக்கொள்ளும் வழிகள், முயன்று வெற்றி பெற்றவர்கள், அப்படி முடியாமற் போனவர்கள் கையாண்ட வழிமுறைகள் ஆகியவற்றை ஆராய்ந்து நீங்களும் ஜெயிக்க வழிகளைச் சொல்லுகிறது.
சுருக்கமாகச் சொன்னால் இந்தப் புத்தகம் வெற்றியின் கையேடு. 
பக்கங்களைப் புரட்டப் புரட்ட உங்கள் அரண்மனையின் வாசல்கள் திறப்பதை நீங்கள் உணரமுடியும் !

4/8/17

ஜெயமோகனின் வலைப்பூவில் கடைசிக்கோடு



......ஒரு வாசகனாக கையில் கிடைக்கும் எதையும் வாசித்து தள்ளும் பலபட்டறை நான். ஆனால் ரசிகனாக ஆகசிறந்தவற்றை மட்டுமே நண்பர்களுக்கு பரிந்துரைப்பேன். இந்த கடைசி கோடு தான் எடுத்துக்கொண்ட கருப்பொருள் அடிப்படையில் [இந்திய வரைபடம் உருவான வரலாறு] தனித்துவமான ஒன்று. இந்த எல்லையில் இதுதான் தமிழில் முதல் நூல். தீவிர தளத்தில் வேறு நூல்களும் ,மொழிபெயர்ப்புகளும் வரும் வரையில் இந்த எல்லையில் இதுவே ஒரே நூல்.................

கடலூர் சீனு 

திரு ஜெயமோகன் அவர்களின் வலைப்பூவில் அவர் எழுதும் கட்டுரைகள்,வெண்முரசு ( மஹா பாரதம்) தவிர அவருக்கு எழுதும் முக்கிய நண்பர்களின் கடிதங்களையும் வெளியிகிறார். சில கடிதங்கள் கட்டுரையாகவே அமைந்து எதிர்வினைகளையும் எழுப்பும். கடந்த வாரம் திரு கடலூர் சீனு என்னுடைய புத்தகமான கடைசிக்கோடு பற்றி ஒரு நிண்ட விமர்சனத்தையே  ஜெயமோகனுக்கே கடிதமாக எழதியிருக்கிறார். அதற்கு வந்த எதிர்வினகளுக்கும் பதில் தந்திருக்கிறார். திரு கடலூர் சீனுவுக்கும், ஜெயமோகனுக்கும் நன்றி
  அதை இந்த சுட்டியில்  பார்க்கலாம்.
 படித்து பாருங்களேன்