4/7/15

கிரிஸ்- திவாலாகும் தேசம்



நிதி மேலாண்மையைச் சரியாக நிர்வகிக்காததால் கடன் சுமையால் தனிமனிதர்கள், வியாபார நிறுவனங்கள்ஏன்? பெரிய கார்பெரேட் நிறுவனங்கள் கூடத் திவாலாகும் நிலைக்குத் தள்ளப்படுவதுண்டுரு தேசத்திற்கே அப்படி நேருமா?- நேர்ந்திருக்கிறது கீரிஸ் நாட்டுக்கு.
பால்கன் தீபகற்பத்தின் தெற்குமுனையில் ஆசிய, ஐரோப்பா மற்றும் ஆப்ரிக்காவின் குறுக்கு பாதையில் அமைந்துள்ள குட்டி தேசம் கீரிஸ். மக்கள் தொகையே1.30 கோடிதான் மன்னராட்சியிலிருந்த கீரிஸ் 1970ல்தான்   மக்களாட்சிக்கு மாறியது.
கடந்த வாரம் நாட்டின் பிரதமர் அலெக்சிஸ் சிப்ரஸ் ஒரு நாள் இரவு டிவியில் தோன்றி நாளை காலை முதல் நாட்டின் எல்லா வங்கிகளும் பங்கு சந்தையும் மூடப்படும். ஏடிஎம் மில்லிருந்து நாள் ஒன்றுக்கு 60 யூரோ மட்டுமே எடுக்க முடியும்என அதிரடியாக அறிவித்துவிட்டார். மாத முதல் வாரத்தில் பென்ஷன்பணம், சம்பளப் பணம் எடுக்கமுடியாத நிலை.ஏடிம்களில் நீள் வரிசை. வங்கிகள் இயங்காதால், வணிக உலகம் திணறுகிறது. தேசம் அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறது.

ஏன் இந்த நெருக்கடி?
கீரிஸின்  முந்தைய கரன்சி டிராஷ்மா.  கடின முயற்சிகளுக்குப் பின்னர்1981லைரோப்பிய கூட்டமைப்பில் இணைந்த நாடு.இது. 2002 முதல் யூரோ கரன்சிக்கு மாறியது. அங்கே ஆரம்பித்தது சிக்கல். வளர்ச்சியில்லாத பொருளாதார நிலையைச் சமாளிக்க அதுவரை டிராஷ்மா பணநோட்டுகளை  அதிகளவில் அச்சிட்டு வெளியிட்டு வந்த நிலையைத் தொடரமுடியவில்லை. கடன் சுமையும், பணவீக்கமும் அதிகரித்துக்கொண்டே போயின. மிகச்சிறிய நாடாக இருந்தாலும் கூட்டமைப்பின் உறுப்பினர் என்ற முறையில் பன்னாட்டு நிதியம்,ஐரோப்பிய மத்திய வங்கி ஐரோப்பிய ஆணையம் கீரிசுக்கு உதவிக்கரம் நீட்டின.
சிக்கன நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் 2010லிருந்து 2012 வரை  மூன்று தவணைகளில்970 கோடி யூரோ கடனாகத் தந்தது. ஆனால் கீரிஸ் தனது பொருளாதாரச் சீர்திருத்தங்களில் தோல்வியைச் சந்தித்ததுஇந்தக் கடனில் ஒரு தவணையான 160 கோடியூரோவைச் செலுத்த வேண்டிய நாளான ஜுன் 30ல் செலுத்தவில்லைஇதனால் எழுந்த நிலைதான் தேசம் திவாலாகும் மோசமான நிலை. திலிருந்து கிரிஸை காப்பற்ற இன்னும் 2400கோடி யூரோவைக் கடனாக இந்த நிறுவனங்கள் தர ஒரு திட்டத்தைத் தயாரித்தனர்.
ஆனால், அதற்குப் பல நிபந்தனைகளைக் கிரீசுக்கு ஐரோப்பியயூனியன் நாடுகள் விதித்துள்ளன. குறிப்பாக, கிரீஸ் அரசு கடும்சிக்கன நடவடிக்கையாக, மானியக் குறைப்பு, ஓய்வூதிய வயதை அதிகப் படுத்தி, பலனைக் குறைக்க வேண்டும், வரி, மின் கட்டணத்தை அதிகப்படுத்த வேண்டும், பட்ஜெட் தொகையைக் குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. ஏற்கனவே கடந்த 5 ஆண்டுகளாகப் பெரும் நிதி நெருக்கடியில் கிரீஸ் சிக்கித் தவித்து அரசு சிக்கன நடவடிக்கைகளை கடை பிடித்து வருகிறது. இந்நிலையில், மேற்கொண்டு சிக்கன நடவடிக்கையை அதிகப் படுத்தினால், மக்களிடையே பெருங்குழப்பத்தை ஏற்படுத்தும் என அஞ்சும் கீரிஸ் ஆட்சியாளர்கள்  வாங்கிய கடனை முழுவதுமாக ரத்து செய்துவிட்டுப் புதிய கடன்களை வழங்குமாறு கேட்கிறது 10 சுற்று  பேச்சு வார்த்தை நடந்தும் எந்த முன்னேற்றமும் இல்லை.

அரசியல்

கீரிஸில் இப்போது ஆட்சியில் இருப்பதில் பெரும்பான்மையானவர்கள் இடதுசாரியினர். பெரும் போராட்டங்களுக்குப் பின் ஆட்சிக்கு வந்தவர்கள். இப்போது  மக்களிடையே ஏகாதிபத்திய நாடுகளின் நிபந்தனைகளுக்கு  நாம் அடிமையாகிவிடக்கூடாது என்ற குரல் வலுத்துக்கொண்டிருக்கும் நேரத்தில் கடும் நிபந்தனைகளுடன் உதவியை ஏற்பதா வேண்டாமா என்பதை மக்கள் மன்றத்திற்கு கொண்டு போகிறார். பிரதமர்., ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் நாடுகள் அளிக்கும் அவசரக் கால நிதி உதவியை ஏற்பதா என்பது குறித்து முடிவு செய்ய ஜூலை 5-ம் தேதி நாடாளு மன்றத்தைக் கூட்டி விவாதித்துப் பின்பு, 6-ம் தேதி பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று  நாட்டின் பிரதமர்  அறிவித்துள்ளார்.
  
விளைவுகள்
இந்த நெருக்கடியினால் கிரீஸ் நாடு திவாலாகும் நிலைக்குத் தள்ளப் பட்டு, வலுகட்டாயமாக ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறும் நிலைமைக்கு ஆளாகியுள்ளது. உடனடி விளைவாக ஐரோப்பிய பொருளாதாரம், பாதிக்கப்பட்டது,ஐரோப்பிய பங்கு சந்தை சற்று குலுங்கி முதலீட்டாளர்களுக்கு நட்டத்தை ஏற்படுத்திய பின்  நின்றது.
இந்தப் பிரச்சனையில்  ஒரு வேளை கிரீஸ் ஐரோப்பிய கூட்டணியிலிருந்து வெளியேறினால், அது ஐரோப்பிய கூட்டமைப்புக்குப் பெரும் பலவீனமாக அமையும். மேலும், இதே நிதி நெருக்கடியில் இருக்கும் இத்தாலி, போர்ச் சுக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளும் வெளியேறினால் ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பை மேலும் பலவீனமடையச் செய்யும் என ஐரோப்பிய  கூட்டமைப்பின் தலமை கணிக்கிறது. இதனால்எப்படியாவதுசமாளித்துவிட வேண்டுமென்று  அந்த நாடுகள் விரும்புகின்றன. இதைப் புரிந்துகொண்டுவிட்டதால் தான் கீரிஸ் இந்த அளவுக்குத் துணிந்து சவால் விடுகிறது என்றும் சில பிரிட்டிஷ் பத்திரிகைகள் எழுதுகின்றன.
இந்தியா பாதிக்கப்படுமா?
சில அன்னிய முதலீட்டு நிறுவனங்களின் தலைமையகங்கள் கீரிஸில் இருந்தாலும் அவை அமெரிக்க வங்கிகளின் மூலமாக இயங்குவதால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. இரண்டு வாரங்களுக்கு முன்னரே ரிசர்வ் வங்கியின் கவர்னர் ராஜன் லண்டனின் பேசும்போது கீரிஸில் பிரச்னை எழுந்தால் அது இந்தியாவைப் பாதிக்காது என அறிவித்திருக்கிறார். நமது அதிகமான  அன்னியச் செலவாணி கையிருப்பும், நிர்வாகத் திறனும் அவரது பேச்சில் எதிரொலித்தது.

மக்களின் தீர்ப்புக்காகக் கழுத்தை  நெருக்கும் கடனலிருக்கும் கிரிஸ் நாடு மட்டுமில்லை கடன்கொடுத்த நாடுகளும் பதற்றத்துடன் காத்திருக்கின்றன.
.
கல்கி 12/7/15ல் எழுதியது.

30/6/15

ஒபமா நல்லவரா? கெட்டவரா?


அமெரிக்காவில் கடந்த 1980ல் 2 லட்சம் இந்தியர் வேலைப் பார்த்தனர். இப்போது இந்தியாவில் இருந்து சென்று அங்கு வேலைப் பார்ப்போர் எண்ணிக்கை 20 லட்சமாக அதிகரித்து இருக்கிறது. அமெரிக்காவுக்கு வேலை நிமித்தமாகச் செல்வோருக்கு எச்1பி என்ற விசா வழங்கப்படுகிறது.. அவர்கள் பணியாற்றும் நிறுவனங்களே இந்த விசாவுக்காக விண்ணப்பிக்கும். அமெரிக்காவில் சாப்ட்வேர் பணிக்கு ஆள் தேவைப்படும் நிறுவனங்களில் இந்த ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் அமர்த்தப்படுவர். இப்படிப் பணியமர்த்தப்படுவோர் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தவண்ணம் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக எச்1பி விசா எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து வரும் நிலையில், இந்த விசா மூலம் வரவழைக்கப்பட்டு அமெரிக்காவில் பணியமர்த்தப்படும் இந்தியர்களால் அமெரிக்கக் கம்பெனிகளுக்கு நல்ல லாபம் . இவர்களை அனுப்பும் டிசிஎஸ் உட்பட நிறுவனங்களுக்கும் லாபம். ஆனால், அமெரிக்காவில் இப்படி எச்1பி விசா மூலம், உள்ளூர் நிறுவனங்களில் பணியமர்த்தப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த அமெரிக்கர்களுக்கு வேலைப் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.. அமெரிக்கர்களை நியமித்தால் அதிகச் சம்பளம் தர வேண்டும் என்பதால் அமெரிக்கக் கம்பெனிகள்,  இப்படி வெளிநாடுகளில் இருந்து ஊழியர்களை இறக்குமதி செய்கின்றன. இந்த விவகாரம் இப்போது பரபரப்பான பிரச்சினையாகியிருக்கிறது. . தெற்கு கலிபோர்னியாவில் உள்ள எடிசன் எலக்ட்ரிக் கம்பெனி,டிஸ்னி வேர்ல்ட் போன்ற நிறுவனங்களில் சமீபத்தில் சில நூறு அமெரிக்க ஊழியர்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குப் பதில் இந்தியர்களை நியமித்தது தான் இது பெரியஅளவில் வெடிக்க எழுந்த முதல் புள்ளி 
வெளிநாட்டினருக்கு வேலைப் அளித்து மண்ணின் மைந்தர்களுக்கு வேலை தரவில்லை என்பது எதிர்காலத்தில் பெரும் பிரச்னையை ஏற்படுத்தி விடும். இப்போதே கட்டுப்படுத்தி விடுவது நல்லது என்று அமெரிக்காவில் வேலையின்மைக்கு எதிராகவும், மண்ணின் மைந்தர்களுக்கு ஆதரவாகவும் போராடும் அமைப்புகள், குடியேற்றத்துறை அமைச்சகத்துக்கு மனுக்களை அனுப்பியிருக்கின்றன.. 

இந்திய நிறுவனங்கள் தங்களது எ 1 விசா பெறும் உரிமைகளைத் தவறாகப் பயன் படுத்தி இந்தியாவிலிருந்து கொண்டுவரும் நபர்களை வேறு நிறுவனங்களில் வேலைசெய்ய அனுமதிக்கின்றனர் என்பது இப்போது எழுந்திருக்கும் குற்றச் சாட்டு டிசிஎஸ், இன்போசிஸ் உட்பட முக்கியநிறுவனங்களூம் இதைச்செய்கின்றன என்று சொல்லுகிறது அமெரிக்கக் குடியேற்றத் துறை. விசாரணை துவங்கியிருக்கிறது. இதனால் முன்னணி நிறுவனங்களில் சார்பில் அமெரிக்கா சென்று பணியாற்றும் ஊழியர்களின் வேலைக்குச் சிக்கல் ஏற்படலாம்; அவர்களின் எச்1பி விசா ரத்து செய்யப்படலாம் வருங்காலத்திலும் இந்த நிறுவனங்கள் அனுப்பும் ஊழியர்களுக்கு எச்1பி விசா கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம் என்ற அச்சம் எழுந்திருக்கிறது கடந்த ஆண்டே இதுபோல் பிரச்சனை எழுந்து 13 நிறுவனங்களுக்குத் தடை விதிக்கப் பட்டது. 
அதிபர் ஒபாமாவின் நிர்வாகத்தின் இந்த அதிரடி இந்திய நிறுவனங்களால் ஒரு கெட்ட செய்தியாகப் பார்க்கப்பட்டு ஆடிப்போயிருக்கும் நேரத்தில் மற்றொரு ‘நல்ல’ செய்தியை அறிவித்து இந்தியர்களை ஆச்சரியப் படுத்தியிருக்கிறது ஒபாமா நிர்வாகம். 
அமெரிக்காவில் மேற்படிப்பு படித்து முடித்ததும், இந்திய மாணவர்களுக்கு உடனே வேலைப் கிடைக்கும். சூப்பர் சலுகை திட்டம் அது. 
அமெரிக்காவில் படிக்கச் செல்லும் இந்திய மாணவர்களுக்கு அளிக்கப்படும் விசா எப்1. இதைப் பெற்று அவர்கள் பட்ட, மேற்படிப்பை முடிக்கலாம். ஆனால் படிப்பு முடித்தபின் வேலைப் செய்ய முடியாது.. இந்தப் புதிய முறைப்படி, 6 ஆண்டு தங்கிக் கொள்ளலாம் வேலைகளில் பயிற்சி பெறலாம்.. அதற்காக அவர்களுக்கு விசா தரப்படும் இந்த ஆண்டுப் படிப்பை முடிக்கும் மாணவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் 

வெளிநாட்டு மாணவர்களுக்கு அளிக்கப்படும் இந்த விசா சலுகையை எதிர்க்கிறார்கள் திரு சக் கிராஸ்லி போன்ற எம்பிக்கள், . இந்தத் திட்டத்தின் மூலம் எச்1 விசா அளிக்கப்படும் வெளிநாட்டு மாணவர்கள், அமெரிக்காவிலேயே தங்கிவிடுவார்கள் இது அமெரிக்க மாணவர்களுக்கு ஆபத்து’ என்பது அந்த எம்பிக்களின் பார்வை. 

ஒபாமவின் முந்திய ஆட்சி காலத்திலும், இரண்டாம் முறை அதிபர் பதவி ஏற்றபின்னரும், அமெரிக்கஇந்தியர்கள் பலர் உயர் பதவியில் நியமிக்கப் பட்டிருக்கின்றனர். எச்1பி விசாவில் பணி செய்யும் வெளிநாட்டவர், தன் மனைவியை அழைத்து வரலாம்; அது மட்டுமின்றி, அவர்கள் அமெரிக்காவில் பணியும் செய்யலாம் என்றும் சலுகையும் அளித்தார். 
ஏன் ஓபமா இப்படி வாரி வழங்குகிறார்? 

ஒபாமா, இந்தியர்கள் மட்டுமல்ல, வெளிநாட்டவர்களின் திறமைக்கு அதிகம் மதிப்பு தருபவர். இந்திய மாணவர்களிடம் உள்ள கணித, அறிவியல், தொழில்நுட்ப அறிவைப் போல அமெரிக்க மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று முன்பே ஒருமுறை அவர்களுக்கு அறிவுரை கூறியிருந்தார். 

அமெரிக்காவில் மேற்படிப்பில் முக்கியமானது ‘ஸ்டெம்’ என்று செல்லமாக அழைக்கப்படும் படிப்புகள் தான். STEM என்பது முதலெழுத்தில் துவங்கும் சயின்ஸ், டெக்னாலஜி, இன்ஜினியரிங், கணிதம். இந்தப் படிப்புகளில் படித்து மேற்படிப்பு முடித்த அமெரிக்க மாணவர்கள் குறைந்து வருகின்றனர். இதில் திறமையான மாணவர்கள் இந்தியா, சீனாவைச் சேர்ந்தவர்கள் தான். அவர்களை இப்படி ஈர்ப்பதன் மூலம் வருங்காலத்தில் அமெரிக்கா பெரும் பயன்பெறும் என்ற தொலை நோக்கு என்கிறார்கள் கல்வி, சமூக ஆய்வாளார்கள் 
நாம் வல்லரசாவதைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம். ஒபமா.அமெரிக்கா தனது வல்லரசு நிலையை இழந்துவிடக்கூடாது என்பதற்கான தேவையானதைச் செய்யத் துவங்கி விட்டரோ ?.

944902215

21/6/15

கங்கை கரை ரகசியங்கள் .... 4



பகல் முழுவதும்  பல இந்திய மொழிகளாலும், சைக்கிள் ரிக்‌ஷாவின் மணிஓசைகளினாலும் நிறைந்திருந்த அந்த காசி நகர வீதிகள்  மெளனமாக இருக்கும்  இருண்ட காலைப்பொழுது. மணி 3. பஸ்கள் நிறுத்த பட்டிருக்கும் இடத்திலிருந்து முன்னால் தலைவர் வண்ண கொடியுடன் வழிநடத்த நம் குழு கால பைரவர் கோவிலுக்கு நடக்க துவங்கியது.
விஸ்வநாதர்  கோவிலுக்கு செல்லும் அதே பாதையில்  நுழைந்து மற்றொரு சந்தின் வழியே போகவேண்டும். காசியில் எந்த கோவிலாக இருந்தாலும் அது ஒரு மிக குறுகிய சந்தில் தான் இருக்கிறது.  தெரு விளக்குகள் இல்லாத அந்த இருட்டில்
ஏற்கனவே நடந்த அனுபவம் கைகொடுக்க மிக கவனமாக ”கோமாதா”க்களை கடந்து கோவிலை அடைகிறோம். போகும் வழியில் இருக்கும் சாட்சி விநாயகரை முதல் நாள் தரிசிக்காமல் வந்ததை நினைவூட்டி  நிறுத்தினார் குழுவில் இருந்த ஒரு டாக்டர். காசிக்கு வரும் அவரிடம் நம் பெயர், தந்தையின் பெயர், மகனின்
பெயரை சொல்லி வேண்டுமாம். அப்பா பெயர் அவர் இங்கு வந்திருக்கிறா என்று சரி பார்பதற்கும், மகன் பெயர் பின்னாளில் நம் மகன் வந்து நம் பெயரை சொல்லும்போது வினாயகர் சரி பார்ப்பதற்குமாம். கால பைரவர் கோவிலின் முகப்பு கதவுகள் மூடப்படுவதேயில்லையாம். கோவிலில் நம் குழுவினரை தவிர வேறு  எவரும் இல்லை.   ”நல்ல வேளை பகல் நேரங்களில்  கோவில் முழுவதும் நிறைந்திருக்கும் பண்டாக்களும்.பூசாரிகளும் இல்லை.  அவர்கள் கையிலிருக்கும் மயிற்பீலிகட்டுகளினால் நம் முதுகில் அடித்து !  ஆசிர்வாதம் செய்து  பணம் கேட்பார்கள் தராவிட்டால் பாக்கெட்டிலிருந்தே எடுத்து கொள்வார்கள்” என்றார். முன்னால் இந்த கோவிலுக்கு வந்திருக்கும் நண்பர்.  கோவில் முழுவதும் ஒரு இடம் பாக்கியில்லாமல் அழுத்தமான சிவப்பு வண்ண ஆயில் பெயிண்ட் பூசபட்டிருக்கிறது.
சன்னதி திறக்க காத்திருக்கிறோம். மிக சின்ன கோவில். பிகாரத்தில் பாதி கயிறு ரட்சைகாப்புகள் விற்பனைசெய்யும் கடைகளால் நிறைந்திருக்கிறது.. காலியாக இருப்பதால்வசதியாக அதில் நின்று கொண்டிருக்கிறோம். தலமை அர்ச்சகர், விஸ்வநாதர் கோவிலுக்கு சென்று  விஸ்வநாதரின் அனுமதி வாங்கியபின்தான் இங்கு வந்து பூஜைகள் செய்வாரம். அவர் வருவதற்குள்  யார் இந்த கால பைரவர் அவருக்கு ஏன் இங்கே கோவில்? என்ற புராணக்கதையை தெரிந்து கொள்வோம்.
ஒரு முறை இந்த மூவுலகத்தையும் படைத்த பிரம்ம தேவருக்கும், அதை பாதுகாத்து பராமரிக்கிற விஷ்ணு பகவானுக்கும் இடையில் ஒரு வாக்குவாதம் எழுந்தது இரண்டு பேருக்குள்ள யாரு பெரியவர் என்பதுதான் வாக்குவாதம். பல நாட்கள் நடந்த இந்த வாக்குவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக சிவன் ஒரு பெரிய ஒளிப்பிழம்பா அடியும், முடியும் தெரியாத அளவுக்கு தன் சுயரூபத்தை வெளிப்படுத்தினார். அப்பவும் வாக்குவாதத்தை விட முடியாத பிரம்மன் அன்னப்பறவையா உருவம் எடுத்து இந்த ஒளிப்பிழம்போட ஆரம்பத்தை கண்டுப்பிடிக்க கிளம்பினார். மகாவிஷ்ணுவோ வராக உருவம் எடுத்து இந்த ஒளியோட அடியை கண்டுபிடிக்க போயிட்டார். பல யுகங்களாக தேடிக்கிட்டே இருந்தாங்க. விஷ்ணு சிவனின் அடியை காண முடியாமல் தன் தேடலை கைவிட்டு, சிவனின் முன்பு வந்து வணங்கி நின்றார். பிரம்மனோ தன் தோல்வியை ஒத்துக்க மனமில்லாமல் சிவனின் தலையில் இருந்து விழுந்த தாழம்பூவை சாட்சியா வைச்சு தான் ஒளிப்பிழம்போட ஆரம்பத்தை பார்த்து விட்டதாக சொன்னார்.
 இப்படி பொய் சொன்ன காரணத்திற்காக இதனை தண்டிக்கும்விதமாக அந்த ஒளிப் பிழம்பிலிருந்து மிகுந்த தீவிரமும், பயங்கரத் தோற்றமும் கொண்ட காலபைரவர் வெளிப்பட்டார். வந்த வேகத்தில் பிரம்மனின் ஐந்தாவது தலையை கொய்தார். ஒரு பிரமாணராகிய பிரம்மனை கொன்றதால் கால பைரவர் ‘பிரம்மகத்யா’ என்ற பாவத்திற்கு உள்ளானார். இதனால், பிரம்மனின் தலை காலபைரவர் கையில் ஒட்டிக் கொண்டது. இதிலிருந்து விடுபடுவதற்காக கால பைரவர் கபால விரதம் பூண்டு, பிரபஞ்சம் முழுவதும் மண்டையோட்டில் பிக்ஷ்ஷை எடுத்து சுற்றித் திரிந்தார். இதனைக் கண்ட மஹாவிஷ்ணு பைரவரிடம், எங்கே சிவபெருமான் தன்னுடைய சுயரூபமான ஒளிப் பிழம்பை வெளிகாட்டினாரோ, அங்கே செல்லும்படி சொன்னார். பைரவர் காசியில் கால் வைத்தவுடன் கையில் ஒட்டிக் கொண்டிருந்த கபாலம் கீழே விழுந்தது. இந்த இடத்தில் தான் கால பைரவர் கோயிலும், கபால மோட்சனத் தீர்த்தக் குளமும் தற்போது அமைந்துள்ளது. தன்னை நாடி வரும் பக்தர்களின் பாவங்களை களைந்து அருள்பாலிக்கிறார்.. தன் தவத்தால் காலத்தை வென்று அதை நிறுத்தும் சக்தி பெற்றிருக்கும் இந்த  தெய்வத்தை வழிபட்டால்  நம்முடைய வாழ்நாள் காலம் முழுவதும் மரணபயம் தாக்காமல் 9 விதமான அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
சிவப்பு வண்ண பஞ்சகச்சவேஷ்ட்டி மஞ்சள் துண்டு சந்தனகோபியில் பளிரென்ற பெரிய குங்குமப்பொட்டு சகிதமாக மோட்டர்சைக்கிளிலிருந்து  இறங்கினார் தலமை அர்ச்சகர். நேரடியாக சன்னதிக்குள் சென்று பூஜைகளை துவக்கினார். நாம் சன்னதி அருகிலிருந்தாலும்  மெல்லிய குரலில் சொல்லுவதால் மந்திரங்கள் கேட்கவில்லை. பைரவி காயத்திரி என்ற அந்த மந்திரங்களை தகுந்த முறையில் உபதேசம் பெற்றவர்கள் மட்டுமே சொல்லமுடியும் என்பதை தெரிந்து கொள்கிறோம். மணிகளின் ஒலி முழங்க  ஆர்த்தியுடன் பூஜை முடிகிறது.
சுயம்புவாக எழுந்திருக்கும் மூர்த்தி சிறியதாக இருக்கிறது.  பெரிய கண்களும் மீசையும் கொண்ட முகம். வெள்ளிகவசம் சாத்தியிருக்கிறது. பார்க்க சற்று பயமாகத்தான் இருக்கிறது.  பூஜை முடிந்தபின்னர் சன்னதியின் பக்க வாயில்வழியே உள்ளே சென்று மூர்த்திக்கு பால் அபிஷேகம் செய்யலாம். கறுப்பு ரட்சை கயிற்றை பூஜித்து வாங்கிக்கொள்ளலாம்.  சன்னதிக்குள் இருக்கும்போது சக்தி அலைகளின் அதிர்வுகளை உணரமுடிகிறது. தியானம் செய்ய தூண்டும் அதிர்வுகள். முழுபயிற்சிகளையும் முடிக்காதாவர்கள் அங்கு தியானம் செய்யவதை தவிர்க்கும்படி சொல்லபட்டிருந்தது. கூட்டம் நெருக்கடிகள் இல்லாதால் மீண்டும் ஒரு முறை தரிசித்து  திரும்புகிறோம்.  இந்த காலபைரவர் காசிநகர காவல் தெய்வமும் கூட.. இவரின் கீழ் காசியின் 8 திக்குகளிலும் பைரவர் சன்னதிகள் இருக்கின்றன. அனைத்திலும் ஒரே நேரத்தில் இந்த அதிகாலை பூஜைகள் நடைபெறுகின்றன.  ஈசன் ஸத்யோகம்,வாமதேவம்,அகோரம்,தத்புருஷம், ஈசானம்  என்று ஐந்து முகங்களில் தன் அருளை வழங்கியிருக்கிறார் அதில் ஒன்று இந்த சிவாம்சமான பைரவமூர்த்தி  என்றும் சொல்லபடுகிறது.  வெளியில் வந்து வெளிச்சம் மெல்ல வரத் துவங்கியிருக்கும்  அந்த பொழுதில் நம் செருப்பை தேடி கண்டுபிடித்து நடக்க துவங்குகிறோம். 
ஒரு கிலோ மீட்டர் தொலைவில்  மற்றொரு சந்தின் மத்தியில் காசி
விசாலாட்சி கோவில்.  கோபுர முகப்பும், அதிலிருக்கும் உருவங்களும் அதன் வண்ணங்களும்  அது தமிழக கோவில் என்பதை அடையாளம் காட்டுகிறது. 1908ல் புதிபிக்கபட்டதைச் சொல்லும் கல்வெட்டு. வாசல் நிலையில் கஜலெட்சுமி. சிறியகோவில்தான் ஆனால் பளிச்சென்று விளக்குகளின் வெளிச்சம் நிறைந்திருக்கிறது. பலநூறு ஆண்டுகளாக இருக்கும் இந்த கோவிலை நிர்வகிப்பவர்கள் தமிழக நகரத்தார் சமூகத்தினர். மிக சக்திவாய்ந்த இந்த சக்திபீடத்தை தரிசிக்க காசி விஸ்வநாதரை தரிசித்தபின் வருகிறார்கள்.  தொடர்ந்து பூஜைகள் நடப்பதால் எப்போதும் கூட்டம்.
அர்ச்சகர்கள் உள்ளூர்கார்கள். தமிழ் பேசினால் புரிந்து கொள்கிறார்கள். அலங்காரம் நம்மூர் பாணியில் செய்யபடுகிறது. குங்கும அர்ச்சனையும் செய்கிறார்கள். அம்மனுக்கு புடவை/சிவப்பு வளையல் சாற்றி பெற்றுகொள்கிறார்கள். நகரத்தார் சமூகத்தினர் குழுவாக வந்து பிராத்திக்கிறார்கள். ஆண்டுதோறும் வரும் குழுக்களும் உண்டு. கோவிலின்
உள்ளே 100 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு திருப்பணியின் விபரங்களை  அன்றைய பாணி தமிழ் எழுத்துகள் சொல்லுகிறது.  நகரத்தார் அறக்கட்டளை இந்த கோவிலை நிர்வகிப்பது மட்டுமில்லை விஸ்வநாதர் கோவிலுக்கும் தினசரி  அபிஷேகத்திற்கு 30 லிட்டர் பால் தருகிறார்கள். இதை தமிழக மங்கல வாத்தியமான நாதஸ்வரம், மேளம்  ஒலிக்க கோவிலுக்குக்கு
எடுத்துச்செல்லுகிறார்கள். 1500 கீமிக்கள் கடந்து இருக்கும் ஒரு தெய்வ சன்னதிக்கு தினசரி அபிஷேக பால் வழங்குவது தமிழர்கள்.   பலநூறு ஆண்டுகளாக காசிக்கும் கங்கைக்கும் தமிழ்நாட்டுக்கும்  தொடரும் இந்த பந்தம் நம்மை சிந்திக்கவைக்கிறது. 



--------------------------------------------------------------------------------------------------
சத்குருவின் பதில்கள்
“‘காலபைரவர்’ இந்த பெயரைக் கேட்டாலே பயமாக இருக்கு   காசியில் அந்த அமானுஷ்ய சக்தி நிறைந்த சன்னதிக்கு ஏன் போக சொல்லுகிறீர்கள்?



பயம் என்று எதைச்சொலுகிறீர்கள்? காலம் என்றாலே மரணம் என நாம் எண்ணிக்கொள்வதினால்தானே? மரண பயங்களை தாண்டி நிற்பவன் கால பைரவன். நம் வாழ்க்கை என்பது என்ன?  சக்தியும் காலமும் இணைந்தது. சக்தி என்பது நமக்கு வேண்டியதை நாமே தீர்மானித்துகொள்வது. அது உடல் சக்தியானலும் சரி. ஆன்மிக சக்தியானலும் சரி. ஆனால் காலம் எவராலும் கட்டுபடுத்த முடியாத ஒன்று. அதனால் தான் மரணம்டைந்தவரை நாம் காலமானவர் என்று சொல்லுகிறோம். ஒரு வினாடி யோசியுங்கள். காலம் நின்றுபோனால் என்னவாகும்? பிறப்பு,இறப்பு, பூமியின் சுழற்சி இயற்கையின் மாற்றம் எதுவுமே இருக்காது இல்லையா? பயம் என்பதே இருக்காது. அந்த நிலையில் இருக்கும் ஒரு சக்தி தான் கால பைரவர். அவர் சிவனா? என்று கேட்டீர்கள்/ சிவா என்பதின் உண்மையான பொருள்  முழுமையான ஒரு வெறுமை- ஒன்றுமே இல்லாத ஒரு நிலை. பூமி, பிரபஞ்சம் காலம் எல்லாவற்றையும் கடந்த நிலை அந்த நிலையில் இருக்கும் சக்தி உடல் தாண்டி போன உயிர்களுக்கு  வேறு ஒரு உடலை தேடாமல் நிலைகொள்ளச் செய்யும் ஆற்றல் கொண்டது.  நம் காலம் முடியும் போது இந்த சக்தியை உணர்ந்து இதை அடைய   உயிர் உள்ள போதே ”காலபைவர கர்மா சாதனா” செய்ய வேண்டும். ஆனால் அதற்கு மிகக்கடினமான, அதி தீவிரமான பயிற்சிகள் வேண்டும். அதைச்சொல்லி கொடுக்க மிக குறைந்த அளவில்தான் இருக்கிறார்கள். ஒரு கைவிரல் எண்ணிக்கைகள் கூட இல்லை.  மேலும் அவைகளை எல்லோராலும் செய்ய முடியாது. அதனால் தான்.  அந்த சக்திகள் இருக்கும் காலபைரவனை தரிசிக்க சொல்லுகிறேன். போவதற்கு எந்த பயமும் தயக்கமும் வேண்டாம்.  நீங்கள் அங்கு போய் எதுவும் வேண்டிக்கொள்ள வேண்டாம். தியானம் செய்ய வேண்டாம். அந்த அதிர்வுகளை உணருங்கள் அதுவேபோதும்




17/6/15

நொந்து நூலாகிப் போன மேகி நூடுல்ஸ்

இரண்டே நிமிடங்களில் தயாரிக்கக்கூடிய சத்தான உணவாக நம்பபட்டு லட்சக்கணக்கான இந்தியக் குடும்பங்களால் வாங்கப்பட்டுவந்த மேகியின் ரூ 3000கோடி மார்க்கெட் இரண்டே நாளில் சரிந்தது. அதைத் தயாரிக்கும் நெஸ்லே நிறுவனத்தின் ஷேர்கள் வரலாறு காணாத வீட்சியைச் சந்தித்தது. எத்தனை கோடி ரூபாய்கள் செலவழித்தாலும் ஏற்படுத்த முடியாத உணவு பாதுகாப்பு விழிப்புணர்வை நெஸ்லேயின் இந்த மேகி இரண்டே நாளில்.ஏற்படுத்திவிட்டது. அலுவலகங்கள், குடும்பங்கள், பள்ளிகள் என எல்லா இடங்களிலும் அச்சத்துடன் இதுகுறித்து விவாதங்கள் நடைபெறுகின்றன.
என்ன நடந்தது?
இந்தப் பிரச்சனையின் துவக்கப்புள்ளி கடந்த ஆண்டு(2014) மார்ச் மாதத்தில் துவங்கியது உத்திரப்பிரதேச மாநிலத்தில் பாரப்பங்கி என்ற மாவட்ட தலைநகரில் இருக்கும் வி. கே பாண்டே என்ற உணவு பாதுகாப்பு மற்றும் நிவாக அதிகாரி திடுமென ஒரு நாள் கடைகளில் இருந்து மேகி பாக்கெட்களைச் சாம்பிளாக எடுத்து கோரக்பூரில் இருக்கும் பரிசோதனை சாலைக்கு அனுப்பினார். அந்தச் சோதனையின் ரிப்போர்ட் அவருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. காரணம், மேகி நூடுல்ஸ் பாதுகாப்பாற்றது. அதில் சோடியம் குளுட்டாமெட்(SGM) என்ற சுவை கூட்டும் ரசாயனம் அளவுக்கு அதிகமாக இருப்பதாகச் சொல்லப்பட்டிருந்தது.
 இந்த இந்த ரசாயனம் குழந்தைகளின் நரம்பு மண்டலத்தின் இயல்பான வளர்ச்சியைப் பாதித்து, மூளைச் செயல்பாட்டை மந்தமடையச் செய்யக்கூடியது. உடல் பருமன், மனஅழுத்தம் ஏற்படுத்தக் கூடியது. அதிகக் கொழுப்புச்சத்துக் கொண்ட இந்த வகை உணவுகள்குழந்தைகளுக்குக் கற்றல் குறைபாடு, மறதி, விழிப்புநிலை குறைபாடு, புலன் உணர்வு செயல்பாட்டில் மந்தம் ஆகியவற்றையும் ஏற்படுத்துகின்றன என்று பல்வேறு அறிவியல் ஆய்வுகள் தெரிவித்திருக்கின்றன.
உடனடியாக நெஸ்லே நிறுவனத்துக்கு நோட்டிஸ் அனுப்பினார். மிகச் சக்திவாய்ந்த அந்தச் சர்வ தேச நிறுவனம் உடனடியாகப் பதில் அனுப்பாதால் வழக்குப் போடப்போகிறோம் என ஒரு நோட்டிஸ் அனுப்பினார். அதிர்ந்து போன நிறுவனம் சோதனை சரியில்லை என்றும் கல்கத்தாவிலுள்ள பெரிய சோதனைக்கூடத்துக்குத் தங்கள் செலவில் கட்டணம் செலுத்தி அனுப்ப கோரியது. கல்கத்தா சோதனையில் நிறுவனத்துக்குப் பேரிடி காந்திருந்தது. அந்தச் சோதனையின்போது எம்.எஸ்ஜி மட்டுமல்லாமல் வேறு சில காரீயம் போன்ற அபாயகரமான பொருட்களும் இருப்பதாக அது சுட்டிக் காட்டியதால் மேகி சிக்கல் மேலும் சிடுக்கானது.
 இந்த அதிகாரி பாண்டே, இதற்கு முன்பு வட இந்தியாவைக் கலங்கடித்த பிரிட்டானியா கேக், வாஹித் பிரியாணி ஆகியவற்றுக்கு எதிராகவும் வழக்குப் போட்டு திணறடித்தவர். இவர் போட்ட வழக்கால், தனது விளம்பரத்தில் இது அசைவ கேக் என்று குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய நிலைக்குப் பிரிட்டானியா தள்ளப்பட்டது. முன்பு இந்த வாசகத்தை அது கண்ணுக்குத் தெரியாத பிரவுன் நிறத்தில் போட்டு வந்தது. ஆனால் பாண்டே நடத்திய சட்ட போரட்டத்தால் சிவப்பு நிறத்தில் போட ஆரம்பித்தது. இதே போல வாஹித் பிரியாணி என்று வடஇந்தியாவில் பிரபலமாக இருக்கும் பிரியாணி தயாரிப்பு நிறுவனத்தின் மேலும் அதில் சேர்க்க படும் நிறம் குறித்து வழக்குதொடர்ந்திருக்கிறார்.
ல்கத்தா சோதனைச்சாலையின் அறிக்கையின் அடிப்படையில் உ.பி மாநில அரசு நெஸ்லே மீது வழக்குத் தொடர்ந்தது. நீதிபதி நிறுவனத்தின் மீது மட்டுமில்லாமல் மிகப்பெரிய அளவில் மேகிக்காக டிவி பத்திரிகை விளம்பரங்களில் பங்கேற்ற அமிதாப், மாதுரி தீட்சித, பிரித்துஜிந்தா ஆகியோர் மீதும் FIR போட ஆணயிட்டது. வழக்குப் போடப்பட்டிருப்பது உ.பி மாநிலத்தில் என்றாலும் செய்தீயாக பரவிய வேகத்தில் 2 நாட்களில் பல மாநிலங்கள் விற்பனைக்குத் தடை விதித்தன. சில விதிக்கவில்லை. என்ற நிலையில்திரடியாக மத்திய அரசின் உணவுத்துறை நாடு முழுவதற்கும் இதன் விற்பனைக்குத் தடைவிதித்துவிட்டது.

நூடுல்ஸ் என்ற தீடிர் உணவு உலகப்போருக்குப் பின் எழுந்த உணவுபற்றா குறையைச் சமாளிக்க மோமோஃபுக்கு அன்டொ (momofuku Ando) என்ற ஜப்பானியரால் கண்டுபிடிக்கப் பட்டது. பின்னாளில் அமெரிக்கர்கள் அதன் தயாரிப்பு முறையில் மாறுதல்களைச் செய்து மாரக்கெட்டுக்குக் கொண்டுவந்தார்கள். சதாரண மாவில்பிழியபட்ட இழைகளின் மீது 176 டிகிரி சூடான காற்றை 30 நிமிடம் செலுத்தி அதன் ஈரப்பதத்தை நீக்கிவிட்டால் பின் அதை எப்போது வேண்டுமானுலும் சூடான நீரில் இட்டுப் பயன்படுத்தலாம் என்பதே அது. இதன் உரிமைகளைப் நெஸ்லே என்ற ஸ்விஸ் நாட்டு நிறுவனம்  பெற்று உலகெங்கும் பல நாடுகளில் தயாரித்து விற்பனை செய்கிறார்கள்.. இன்று உலக உணவாக அறியப்பட்டிருக்கும் இதைக் கடந்த ஆண்டு சாப்பிட்டவர்களின் எண்ணிக்கை 10200 கோடிக்குமேல். இது 1983ல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப் பட்டபோது பள்ளிகளில் இலவசமாகவும், மிக்குறைந்தவிலையிலும் கொடுக்கப்பட்டது. இன்று உலகளவில் சாப்பிடுவோரில் இந்தியா 4 வது இடத்திலிருக்கிறது( ஆண்டுக்கு(54 கோடி பாக்கெட்கள்விற்பனை) இந்தியாவில் இப்போது மேகியை பயன்படுத்தியவர்கள் இரண்டாம் தலைமுறையினர்.
புரியாத கேள்விகள்
அதரடியாக வெடித்திருக்கும் இந்தப் பிரச்சனை அடுக்கடுக்கான பல கேள்விகளை எழுப்புகிறது. எப்படி இத்தனை நாள் இது அனுமதிக்கப்பட்டது? எந்த மத்திய மாநில அரசுகளின் உணவு தரகட்டுபாட்டு நிறுவனங்களுமே  இதை ஏன் சோதனையிடவில்லை.? 30 ஆண்டுகளுக்கு மேல் விற்கபட்டுகொண்டிருக்கும் ஒரு சர்வ தேச நிறுவனத்தின் தயாரிப்பில் காரீயம் போன்ற ஆபத்தான பொருட்களைக் கலக்கப்படுவதை அனுமதிருப்பார்களா? லெட்(lead) கலந்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. (இதை ஈயம் சிலபத்திரிகைகள் எழுதுகின்றன.) உண்மையில் ஈயம் வேறு, காரீயம் (Lead) வேறு, அலுமினியம் வேறு. ஈயம் என்பது Tin ஆகும். ஈயம் உடலுக்குக் கெடுதல் செய்யக்கூடியது அல்ல. Lead அதாவது காரீயம் விளைவுகளை ஏற்படுத்தகூடியது. . காரீயம் நுண்ணியத் துகள் வடிவில் காற்றில் கலந்து சுவாசிக்கும் போது உடலுக்குள் சென்றாலும் சரி, தண்ணீர் அல்லது உணவில் கலந்து உடலுக்குள் சென்றாலும் சரி உடலின் பல உறுப்புகள் பாதிக்கப்படும் காரீயம் குறிப்பாகக் குழந்தைகளுக்கு மிகவும் கெடுதல் விளைவிக்கும். மூளை வளர்ச்சி , உடல் வளர்ச்சி பாதிக்கப்படும். என்கிறார்கள் வல்லுநர்கள் .அப்படியானல் இத்தனைநாள் இதை உண்டவர்கள் பக்க விளைவுகளினால் பாதிக்கப் பட்டிருக்கவேண்டுமே.? போன்ற பல கேள்விகளை எழுந்திருக்கிறது.. சோதனைகளின் முடிவு வந்தால் தான் இவற்றுக்கு எல்லாம் விடைகிடைக்கும்.
கலப்படம் மேகியில் இருக்க வாய்ப்புக் குறைவு. சுவைக்காக அதனுடன் தரப்படும் மசாலாவில் இருக்கும் சோடியம் குளுட்டாமெட்(எஸ் ஜி எம்) என்ற உப்பான அஜினோமோட்டாவில்தான் இருக்கிறது. இது பலநாடுகளில் தடை செய்யப்பட்ட ஒரு பொருள். இந்தச் சுவைகூட்டி பேக் செய்துவரும் சாஷே கவர்களிலும் இருக்கலாம் என்பது சிலரின் கருத்து.
எங்கள் நிறுவனம் தரத்திற்கு உலகளவில் நற்பெயர் பெற்ற நிறுவனம் நாங்கள் இந்த மசாலாவை இந்திய பொருட்களைக் கொண்டுதான் தயாரிக்கிறோம். அதில் சேர்க்கப்படும் வெங்காயம் , மஞ்சள் போன்றவை விளையும் மண் காரீய தாது நிரம்பியவையாகவிருக்கலாம் என்கிறது நெஸ்லே.
தயாரிப்பில் பயன்படுத்தும் பொருட்களின் தரத்திற்கும் அவர்கள்தானே பொறுப்பு. இது தப்பிக்க முயற்சிக்கும் தந்திரம் எனச் சீறுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
இந்தச் சிக்கலில் நாம் புரிந்துகொள்ளும் சில விஷயங்கள்.
1) இம்மாதிரி விஷயங்களைத் தடுப்பதற்கு ஒருங்கிணைந்த கடுமையான சட்டங்கள் இல்லை .மத்திய அரசிலிருந்து நகராட்சி வரை ஒவ்வொரு அதிகார அமைப்பும் வெவ்வேறான அதிகாரங்களைப் பெற்றுள்ளன. அகில இந்திய அளவில் நாடு முழுவதுக்குமான சோதனை, தடைகளுகு சட்டம் இல்லை. ஆகவே தான் ஒவ்வொரு மாநிலமும் நூடுல்ஸை சோதிக்கத் தனித்தனியே நடவடிக்கை எடுக்கிறது.
2) பிரபலங்கள் விளம்பரங்களில் நடிப்பது அவர்கள் விளம்பரப்படுத்தும் பொருட்களின் தரம் குறித்து பேசுவது அதற்கு உத்தரவாதம் அளிப்பது போல் ஆகாதா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.. ஆம் என்றால் பத்திரிகைகளில் வருகின்ற விளம்பரங்களில் இடம் பெறுகின்ற பொருட்களுக்கு அந்தப் பத்திரிகை உத்தரவாதம் அளிப்பதாகக் கருதப்படும் நிலையும் எழும்.
இந்த மோசமான விளவில் ஏற்பட்டிருக்கும் ஒரு நன்மை மக்களிடம் ரெடிமேட் உணவு வகைகள் பற்றி எழுந்திருக்கும் விழுப்புணர்ச்சி.   பாக்கெட்களில் விற்கப்படும் எல்லாவித உணவுவகைகளை ஆய்வுசெய்ய ஆணையிடவும், தடைசெய்யவும் ,நமது பாரம்பரிய உணவுவகைகளை ஊக்குவிக்கவும் அரசுக்குக் கிடைத்திருக்கும் அருமையான தருணம். இது
தவறவிடாமல் மக்களின் உடல் நலம் கருதி அதை உடனே செய்வார்களா?
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
பள்ளிக்காலங்களில் நானும் என் அண்ணனும் ஸ்கூலிலிருந்துவந்தவுடன் மேகி சாப்பிட்டவர்கள். அப்போது இதுபோல் மசாலாக்கள் வராது. வீட்டில் தயாரிக்கப் படும் சைட் டிஷ் தான். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே மேகியுடன் வரும் டேஸ்ட் மேக்கர்களில் கெமிகல்கள் இருப்பதைப் பற்றிய செய்திகளைப் பார்ப்பதால். என் குழந்தைகளுக்கு நான் மேகி தினசரி கொடுப்பதில்லை. நண்பர்கள், டிவி விளமபரங்களினால் ஈர்க்கப்பட்டு அவர்கள் கேட்டாலும் ஒரு சில நாட்களில் மட்டும் தருவதுண்டு. நான் மட்டுமில்லை என்போன்ற பல தாய்மார்களும் அப்படித்தான். செய்கிறார்கள். ஆனால் 9 வயதுக்கு மேல் பள்ளி செல்லும் குழந்தைகள் பள்ளி கேண்டினிலேயே வாங்கிச் சாப்பிடுவதைப் பெற்றோர்களினால் கட்டுப்படுத்தமுடியாது. மலிவான விலையில் கிடைக்கும் அதன் ருசிக்கு அடிமையாகி விடுகிறார்கள். அதனால் இந்தத் தடையை வரவேற்கிறேன்.
பழக்கத்திலிருந்து மாற இது ஒரு வாய்ப்பு. நல்ல தரமான அரிசியில் தயாரிக்கப்பட்ட நூடுல்கள் மற்றும் நிறையச் சிறுதானிய வகைகள் பல வடிவங்களில் கிடைக்கிறது, அதனுடன் காய்கறிகள் சேர்த்துக் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். 2 நிமிடத்தயரிப்பு என்பது பெரிய விஷயமிலை. தன் குழந்தைகளுக்குத் தரமானதைத் தர எந்த அம்மாவும் நேரத்தை ஒரு பெரிய விஷயமாகக் கருத மாட்டார்கள்.
(திருமதி சுபா குகன் -குடும்பத் தலைவி) 
அஜினோ மோட்டோ என்பது ஒரு வகை உப்பு. மிக மலிவானது. சீன உணவுவகைகளில் நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்படுத்தபட்டுவருகிறது. ஆனால் அவர்கள் 20 பேருக்கான உணவில் ஒரு சிட்டிகை என்ற மிகமிகக் குறைந்த அளவிலேயே பயன்படுத்துவார்கள். காலப்போக்கில் உலகெங்கும் பரவிய இதை மசாலாக்களில் பயன்படுத்தினால் அதன் மற்ற இடுபொருட்களின் அளவு குறைகிறது என்பதை உணர்ந்தவுடன் லாபநோக்கில் அதிக அளவில் சேர்க்க ஆரம்பித்துவிட்டார்கள். நீண்ட நாட்களுக்குப் பின்னர் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் இதை இந்தியாவில் தடை செய்ய முயன்று தோற்றுவிட்டார்கள். இது மேகியில் மட்டுமில்லை. எல்லா ரெடிமேட் உணவுகளிலும், நாம் ஹோட்டலில் விரும்பி சாப்பிடும் எல்லா உணவிலும் இருக்கிறது. அது அஜினோ மோட்டோவா அல்லது அந்தவகையில் வேறு பொருளா என்பதையும் அது எந்த அளவில் இருக்கிறது என்பதையும் எளிதில் கண்டுபிடிக்க முடியாது. தேசிய அளவில் அதிநுட்ப வசதிகளுடன் பரிசோதனைச் சாலைகளும், தடைசெய்யச் சட்டங்களும் இல்லாததுதான் நம் துரதிர்ஷ்டம்
(திருமதி ஸ்மித்தா குட்டையா -உணவுக் கலை வல்லுநர்)

மேகி சிக்கல் வெடித்ததிலிருந்து டீவிட்டர்லும் முகநூலிலும் பரவிய கிண்டல்கள்
  •    மேகி சாப்பிடுவது உடலுக்குக் கேடு என்ற வரிகளுடன் சென்சார் தீபீகாவின் விளம்பரத்தை அனுமதிக்கலாம்
  •     என் ஆபிசில் ஒருவர்மேகி சாப்பிடுகிறார். அவர் தற்கொலை முயற்சியில் இருக்கிறார் எனப் போலீசுக்கு போன் செய்ய வேண்டுமா?
  •    சீனாவிலிருந்து வரப்போகிற ஒரு புதுமேகிக்காக மாரக்கெட்டை ரெடி பண்ணுகிறார்கள். இது பிரதமர் மோடியின் சீன பயணத்தின் விளைவாக இருக்குமோ?
  •      கமல்ஹாசன் பஞ்சதந்திரம் படத்திலே சொன்னார் .மேகியின் பழக்கம் வேண்டாம் நல்லதில்லை. என்று

  • Pitchumani Sudhangan கட்டுரை படித்தேன் மூன்று பக்கங்களில் அருமையான பயனுள்ள கட்டுரை
  • Sumitha Ramesh எக்ஸ்லண்ட் ஆர்ட்டிகிள்..முழுமையான அலசல் ! 
    ஏன்..எதற்கு..என்ன ஆகிடும் எனும் பல கேள்விகளுக்கான பதில்..அருமை..
  • Rohini Krishna நல்ல கட்டுரை! பலதரப்பட்ட கருத்துக்களை நடுநிலைமையுடன் அலசியுள்ளீர்கள்...
    Like · Reply · 1 · June 15 at 3:01pm
  • Aswath Mohan · Friends with Rohini Krishna
    RK! Enna aaalaye kaanum?
    Like · Reply · 1 · June 15 at 9:02pm

28/5/15

கறுப்புப் பணம்

Ramanan Vsv
May 26 at 10:19am ·
கறுப்புப் பணம்
மதிப்புரை.காம் எனது “ கறுப்பு பணம்” புத்தகத்திருக்கு வெளியிட்டிருக்கும் விமர்சனம் இது

கறுப்புப் பணம், ரமணன், கிழக்கு பதிப்பகம், ரூ 80
கறுப்புப் பணம் புத்தகத்தின் அட்டையில் புத்தகத்தின் பெயரை பெரிய எழுத்தில் சிவப்பில் வடிவமைத்துள்ளனர். கறுப்புப் பணம் என்பது பழைய சொற்றொடர். அதனை மாற்றி சிவப்புப் பணம் என்றே இனி சொல்லலாம்.
இந்தியாவின் கோடிகணக்கான கறுப்புப் பணம் சுவிட்ஸர்லாந்து வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்று நாள்தோறும் செய்திகள் வருகிறன. அதனை மீட்டு வருவோம், ஒவ்வொரு இந்தியனுக்கும் சுமார் இருபது லட்சம் கிடைக்கும் என்று சொல்லியே ஆட்சியைப் பிடித்தார்கள். இன்றும் அதே நிலையில்தான் இந்த நாடு உள்ளது.
கறுப்புப்பணம் என்றால், ப்ளாக் ஜோக்காக சொல்லவேண்டும் என்றால், கறுப்புப்பணம் கடவுளைப்போல.
கடவுளை யாரும் கண்ணால் கண்டதில்லை. அதே போல் கறுப்புப் பணத்தையும் யாரும் கண்ணால் கண்டதில்லை.. எல்லாரும் கடவுளை பற்றியும் பேசுவார்கள். கறுப்பு பணத்தைப் பற்றியும் பேசுவார்கள்.
கறுப்புப் பணத்துக்கு அனைவரும் ஒரு காரணம் என்று இந்த நூலின் ஆசிரியர் ரமணன் ஓர் அதிர்ச்சி அளிக்கிறார். அது எப்படி? வரி கட்டப்படாத எந்த ஒரு பணமும் கறுப்புப் பணமே.
நீங்கள் ஒரு உணவகம் செல்கிறீர்கள்.. அங்கு பணிபுரியும் சர்வருக்கு டிப்ஸ் அளித்தால், அது அவன் கணக்கில் கறுப்புப் பணம். இது போல. கோவில் அர்ச்சகர் தட்டில் சேரும் தட்சணையும், உண்டியல் குலுக்கி சேரும் நிதியும்கூட.
எந்த ஒரு பணத்துக்கும் முறையான கணக்கு இருக்க வேண்டும்.. அதற்கு வரி கட்டப்பட வேண்டும்.. இல்லையேல் அது கறுப்புப் பணம்தான்.
கறுப்புப் பணம் என்றால் என்ன, அது எப்படி உருவாகிறது, எப்படி பதுக்கி வைக்கப்படுகிறது, இதில் சுவிஸ் வங்கியின் முக்கியத்துவம் என்ன, சுவிட்ஸர்லாந்து தவிர மற்ற எந்த நாடுகள் கறுப்புப் பணம் பதுக்க வழி செய்கிறது எனப் பல விவரங்களை புட்டு புட்டு வைக்கிறார் நூலாசிரியர்.
ஒரு இரண்டாயிரத்தி நானூறு சதுர அடி உள்ள ஓர் அலுவலகத்திலிருந்து இந்தியாவிற்கு எவ்வளவு அந்நிய முதலீடு வர முடியும்? யோசித்து பாருங்கள். இந்தியாவிற்கு வரும் அந்நிய முதலீட்டில் 7௦% மொரீஷியஸ் நாட்டிலிருந்து வருகிறது. ஒரே முகவரியில் சுமார் 2௦௦ அலுவலகங்கள் பதியப்பட்டுள்ளன. இவை அனைத்தும் லெட்டர்பேட் கம்பனிகள்.
எதற்கும் நிஜமான முகம் கிடையாது.. இந்தியாவில் உள்ளது போல KYCஐ (ஒரு வாடிக்கையாளர் பற்றிய முழு விவரங்கள்) இந்த நாட்டு வங்கிகள் வைத்திருப்பதில்லை. அதனால் இந்த கறுப்புப் பணத்தை மீட்க நினைத்தாலும் முடிவதில்லை.
ஆளும் கட்சி எதிர்க் கட்சி என பல தரப்பிலும் குற்றவாளிகள் உள்ளார்கள். வேண்டாதவர்கள் தவிர அனைவரையும் காப்பற்றும் மிக பெரிய பொறுப்பு நிதி அமைச்சருக்கு உள்ளது.
முன்னாள் நிதி அமைச்சர் பிரணாப்முகர்ஜி, நாடாளுமன்றத்தில் சுவிஸ் வங்கி பட்டியலை வெளியிட்டால் அவர்கள் பணத்தை எடுத்து வேறு நாட்டுக்கு கொண்டுசென்று விடுவார்கள், அதனை மீட்கவே முடியாது என்றார். அப்போது பாஜக கட்சியினர் அதைக் கடுமையாக எதிர்த்தார்கள். அவரிடம் தகுந்த விளக்கம் கேட்டார்கள். வெளிநடப்பு செய்தார்கள்.
ஆட்சி மாறியது.. ஆனால் காட்சி மாறவில்லை. இப்போது அதையே காங்கிரஸ்காரர்கள் செய்கிறார்கள். கறுப்புப் பணத்தை மீட்க இன்னும் எவ்வளவு காலம் எடுக்கும் என்று தெரியவில்லை.
ரமணன் மிகுந்த நம்பிக்கை உள்ளவர். ஊழலை ஒழிக்க நினைக்கும் சக இந்தியர்களுக்கு இந்த புத்தகத்தை சமர்பித்துள்ளார். அந்த நம்பிக்கை நிஜமாகி விட்டால் இந்தியாவிற்குப் பொற்காலம்தான்.
-முருகதாஸ்
புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-93-8414-907-9.html
போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 94459 01234
Share this:
Ramanan Vsv's photo.
Like · Comment · Share
Kavingar Nepolian, Srichandar Krishna Rao, குமார் லலித்குமார் and 10 others like this.
2 shares

Valiyur Subramanian I like the review
Like · Reply · May 26 at 1:05pm

Ramakrishnan Narayanan Will it become a BLACK MONEY even if the total of such unaccounted money is less than the exempted limit. If so, the amounts paid to veg vendors, servants, dhobi, ironman and so on will also come under the category. Let us be reasonable.
Like · Reply · May 26 at 3:27pm

Suprajaa Sridaran ரமணின் கருப்பு பணம்
Like · Reply · May 26 at 5:56pm

Anbu Jaya வாழ்த்துகள்
Like · Reply · May 26 at 6:25pm
Ramanan Vsv

Write a comment...