20/6/16

பொன்மாலைப் பொழுதுகள் 4




உலகிலேயே மிக உயரமான இடத்தில் நின்று கொண்டிருக்கிறோம். தடித்த கண்ணாடிச்சுவர்களுக்கு வெளியே கீழே நீண்டமரவட்டைகளாக நெளியும் மெட்ரோ ரயில்களும், எறும்புகளாக ஊரும் வாகனங்களும்  அடையாளமே தெரியாத மொட்டை மாடிகளும்,அருகில் ஓரளவு அடையாளம் தெரியும் கட்டிடங்களும் நாம் இருக்கும் உயரத்தை நமக்குச் சொல்லுகிறது. அந்த வட்ட வடிவ தளத்தின் நடுவில் . அந்தக் கட்டிடத்தின் மாதிரிகளை, படங்களைப் பல ஸைஸ்களில் நினைவுச்சின்னங்களை விற்கும் பெரிய கடை. நம்மைப் போல் அதைக் கடந்து செல்லும் பலர். அமைதியாக நடக்கும் பல வெளிநாட்டவர்கள். சற்றே தூக்கலாகக் கேட்கும் தென்னிந்திய மொழிகள்

துபாய் நகரின் நடுவில் 828 மீட்டர் உயரத்தில் 163 தளங்களுடன் இருக்கும் புர்ஜ் காலிபா தான் உலகின் உயரமான கட்டிடம். அதன் 124 தளத்திலிருக்கிறோம். டெலிஸ்கோப் பைனாகுலர் எல்லாம் ரிட்ய்ர்ட் ஆகிவிட்டது. அழகாக  மானிட்டரில் தொலைவில் இருப்பதைப்  அருகில் பார்க்கும் வசதி.
உலகின் பெரிய மால்களில் ஒன்றாக வர்ணிக்கப் படும் துபாய் மால் இந்தக் கட்டிடத்தின் மூன்றுதளங்களில். ஆண்டுக்கு 18 லட்சம் சுற்றுலா பயணிகள் வரும் இடம். ஜெட்வேகத்தில் நேரடியாக இந்த மேல்தளத்துக்கு வர லிப்ட். அழகான ஆப்ரேட்டர். ஏறியவுடன் கட்டிடத்தின் பெருமையை, கின்னஸ் சாதனைகளைச் சொல்லும் படம் ஆரம்பிக்கிறது, சில நிமிடங்களில் 124 வதி மாடி. கதவுதிறக்கும்போது படம் முடிகிறது. தளத்தின் பெயர் AT THE TOP. ஆனால் இதற்கும் மேலே மாடிகள் இருக்கின்றன. இந்தத் தளத்துக்கு வர 200 திராஹம் கட்டணம்.சாதாரண நேரங்களில் 125 தான் சூரிய அஸ்தமனம் பார்க்கப் பிரைம் டைம் கட்டணம் 200 திரஹாம் சூரியனைப்பார்க்க டிக்கெட் கொடுத்துக் காசு வாங்கும் புத்திசாலிகள். கீழ்த்தளத்தில் பார்த்துவிட்டு மேலே போய்ச் சூரியன் மறைவதற்குள் இரண்டாம் முறையாகவும் பார்க்கலாம். எங்கள் லிப்ட் அவ்வளவு வேகம் என்ற டிக்கெட்டில் குறிப்பு வேறு
இந்தத் தளத்திலிருந்து இன்றைய மாலைப்பொழுதில் சூரிய அஸ்தமனத்தை பார்க்கக் காத்திருக்கிறோம். இன்று சூரிய பகவான் நிறைய நேரம் நம்மைப் பார்க்க விரும்பினாரோ என்னவோ அவர் அறிவிக்கப்பட்ட நேரத்தில் மறையவில்லை. உட்கார வசதிகள் இல்லதால் ஏற்கனவே உட்கார்ந்திருக்கும் சிலரைப் பார்த்து நாமும் தைரியமாகத் தரையில் உட்காருகிறோம். படமெடுக்கக் காத்திருக்கிறோம்.
அந்த உயர்ந்த கட்டிடத்தின் வெளியே தொங்குவது போலவும், கண்ணாடிச்சுவர்கள்மீது நடப்பது போலவும் விளிம்புகளில் நிற்பதுபோலவும் படங்கள் எடுத்துக்கொள்ள விரும்புபவர்களை ஒரு  சாம்பல் வண்ண பின்னணியில் படமெடுக்கிறார் ஒரு சீன பெண் போட்டாகிராபர். படத்தில் இருப்பவர்களின் போஸ் இயற்கையாக இருக்க ஆலோசனை சொல்லும் பெண் அஸிட்டெண்ட் நடித்துக்காட்டுகிறார். சிலசமயம் பயத்தால் கத்தும் உணர்வைக் காட்ட கத்தியே காட்டுகிறார். மனிதர்கள் ஆர்வமாக நடிக்கின்றனர்.. மனிதர்களுக்குத் தான் சாகச நடிப்பில் எவ்வளவு ஆர்வம்.! எடுத்தபடம் வைஃபையில் கிழ்தளத்திற்கு போய்ப் படம் போட்டோஷாப்பில் ஆபத்தான படமாக அமைக்கப்பட்டு இவர்கள் கீழே போகும்போது தயாராகவிருக்கும்.
 இலவசமாகக் கிடைக்கும் இந்த நடிப்பு காட்சிகளையும் சத்தங்களையும், இடையிடையே வெளியில் சூரியனையும் நாம் கவனித்துக் கொண்டிருக்கிறோம்.
சட்டென்று அந்த இடம் பரபரப்பாகிறது. பறந்து கிடக்கும் பாலைவனப்பகுதிகளுக்கும் அசையாத கடலுக்கும் பின்னே பெரிய மஞ்சள் பந்தாக இருக்கும் சூரியன் நிமிடங்களில் நிறம் மாறிச் சரசரவென இறங்குவது தெரிகிறது. அந்த இடம் அமைதியாகிறது. உயரமான இடத்திலிருந்து பார்ப்பதால் சூரியன் மறையும் வேகத்தைப் பார்க்கமுடிகிறது. தரைத்தளத்திலிருந்து பார்த்தால் இந்த வேகத்தை உணர முடியாது. ஒரே நேரத்தில் பல கேமிராக்கள் இயங்குகின்றன.

இந்தியாவிலும் உலகின் பல இடங்களிலும் சூரிய அஸ்தமனங்களை கண்டிருந்தபோதிலும். சூரியன் நமது காலடிக்கும் கீழே நழுவிப்போவதுபோலத் தோன்றும் இந்தக் காட்சி மாறுதலானது.


கூராகச் சீவிவைத்த தடித்த பென்சிலைச் சுற்றி வெவ்வேறு உயரங்களில் வட்ட நாணயங்கள் அடிக்கவைக்கப்பட்டிருப்பதைப் போல  இருக்கும் இந்தக் கட்டிடம். இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய கட்டிடகலை சாதனை. பார்க்க அரைவட்டங்களாகத் தோன்றினாலும், அருகில் பார்க்கும்போது அவை செவ்வக பட்டகங்களாக இணைக்கப்பட்டிருப்பது தெரிகிறது. பாலைவனப்பகுதியான துபாயில் காற்று மிக அதி வேகத்தில் வீசும். அந்த உயரத்தில் இதன் மீது மோதும் காற்றின் அழுத்தத்தையும் வேகத்தையும் குறைக்க இந்தப் பட்டகங்கள். அதில் மோதும் காற்றை திசை திரும்பச் செய்திறது. அதனால் கட்டிடம் எப்போதும் பாதுகாப்பாக இருக்கும்.

அரபுநாடுகள் வெறும் எண்ணைவளம் மட்டும் கொண்ட பாலைவனம் என்பதை மாற்றி மிக நவீனமான இடமாக அத்தனை வசதிகளும் கொண்ட சர்வதேசசுற்றுலா தலமாக, அன்னிய முதலீடுகளை வரவேற்பதற்க ஒரு நகரை உருவாக்க மன்னர் கண்ட கனவினால், 2000களில் துபாயில்  பல உயர்மாடிகட்டிடங்கள் உலகதரத்தில் எழுந்தன. நகரம் நவீனமயமாயிற்று. அப்போது எழுந்த அலையின் உச்சக்கட்டம்தான் இந்தக் கட்டிடம். அமெரிக்க நிறுவனங்கள் வடிவமைத்து ஜெர்மானிய நிறுவனங்கள் கட்டியவை. முதலில் துபாய் டவர் என்றுதான் பெயரிடப்பட்டிருந்தது. 5 வருடங்களில் கட்டிமுடிக்கப்படுவதற்குள் அரபு நாடுகளின் பொருளாதாரம் சரிந்து, கட்டிடத்தை எழுப்பிய துபாய் வேர்ல்ட் நிறுவனம் 80 பில்லியின் டாலர் கடனில் மூழ்கியதும், அந்த நிறுவனத்தையும், துபாய் பொருளாதாரத்தையும் காப்பாற்றச் சவுதி மன்னர் உதவியதும் -ஒரு புத்தகம் எழுதுவதற்கான விஷயங்கள். உதவிய மன்னரைக் கௌரவிக்கும் விதமாக கட்டிடத்திற்கு அவர் பெயரிடப்பட்டது(Khalifa bin Zayed Al Nahyan)
இந்த 160 மாடிகட்டிடத்தில் அலுவலகங்கள், மட்டுமில்லை ஆடம்பர ஹோட்டல்கள், பிளாட்களும்(flats) இருக்கின்றன. 19ம் மாடியிலிருந்து108 வரை 900 வீடுகள். மிகப் பணக்கார குடும்பங்கள் வசிக்கின்றன. ஷில்பா செட்டியின் கணவருக்கு ஒரு தளமே இருக்கிறதாம். பல பணக்கார இந்தியர்களுக்கும் வீடு இருக்கிறதாம். சட்டைப்பித்தானிலிருந்து சகலத்தையும் மிக மிக அதிகவிலையில் விற்கும் ஆர்மானி என்ற நிறுவனத்தின் ஆடம்பர ஹோட்டலும் இருக்கிறது டின்னரின் விலை சென்னை -துபாய் விமான கட்டணம்!

திரும்பும்போது வேறு பாதை ஓர் நீண்ட நடைபாதைக்கு பின் தான் லிப்ட். அந்தச் சுவரெங்கும் கட்டிடம் வளர்ந்த கதை படங்களுடன். ஆர்வமும் பொறுமையும் இருந்தால் நிறையத் தெரிந்து கொள்ளலாம். ஆயிரக்கணக்கான மனிதர்களின் உழைப்பின் சின்னம் இது என்ற எண்ணத்தோடு, இதுகுறித்து படித்த மனித உரிமை மீறல் விஷயங்களும் மனதில் எழுந்தது.

வெளியே வரும்போது ஒரு தளத்திலிருந்து அந்த மாலில் உள்ள the fall சிற்பத்தை அவசியம் பாருங்கள் என்றார்கள் நண்பர்கள். விழும் அருவியில் மேலிருந்து பாயும் மனிதர்களாக தெரிந்த அதில் எனக்கு ஒரு நயமும் புரியவில்லை. அருவியில் எவரும் அப்படி தலைகீழாக பாய்ந்து குளிக்க முடியாது. சிற்பத்தில் என்ன தாத்பரியமோ புரியவில்லை. இந்திரன் போன்றவர்களைத்தான் கேட்க வேண்டும்
.
எப்போதும் மின்விளக்குகளின் ஒளியில் மூழ்கி இருப்பதனால் மாலின் உள்ளே இருக்கும்போது  பகலா இரவா எனத்தெரிவதில்லை. வெளியே இருள் பரவிக்கொண்டிருந்தது.


மியூசிகல் பவுண்டன் மறக்காமல் பாருங்கள் என்று சொன்னது நினைவுக்கு வந்தது. அதற்கு எந்த கேட்? என்றுவிசாரிக்க திரும்பியபோது நான் இங்கே தானே நிற்கிறேன் எனச்சொல்லுவது போல ஒரு உயரமான நீருற்று நம்மைப் பார்த்துச் சிரிக்கிறது. மிக உயரமானது. 100 அடிக்கும் மேல் இருக்கும். இரவு துவங்கியதும். இந்த பௌண்டன் ஒளிவெள்ளத்தில் இசைக்கேற்ப நடனம் ஆடுகிறது. இது ஒன்று மட்டுமில்ல பாரதிராஜா படத்தில் வரும் தேவதைகள் மாதிரி கூட்டமாக ஆங்காங்கே பல திட்டுமென எழுந்து ஆடுகிறது. வண்ணங்கள் மாறும்போது வட்டங்களாகவும் வளைவுகளாகவும் மாறி மாறி உயர்ந்தும் தாழ்ந்தும் ஆடுகிறது., சட்டென்று  ஒரே ஒரு ஊற்று மாத்திரம் பின்னணியிலிருக்கும் கட்டிடத்தின்  பாதி உயரத்துக்கு பீச்சிய்டிக்கிறது, அது அடங்கியவுடன் பரவும் நெருப்பு மஞ்சள் வண்ணத்தில் அந்தத் தடாகத்தில் 5 வட்டங்கள் எழுகின்றன. அது அணைந்து அலைகளாகின்றன. இருளும் ஒளியும், இசையும் நீரும் சேர்ந்து செய்யும் இந்த ரகளை  உண்மையிலேயே வர்ணஜாலங்கள் தான் நீருக்குள்ளிருக்கும் , மிகச் சக்திவாய்ந்த  விளக்குகளும் எங்கோ ஒளிந்திருக்கும்  பல புரெஜக்டர்களும் இந்த ஜாலத்தை நிகழ்த்துகின்றன. அரபிய. ஹிந்தி, ஆங்கில இசையில் மாறி மாறி நிகழ்ச்சிகள் இரவுவரை நீண்டுகொண்டிருக்கிறது தமிழ் பாட்டு இல்லை. ஓருவேளை நம் குத்துபாட்டு கேட்டால் இன்னும் துள்ளிகுதித்து  ஆடுமோ என்னவோ?

ஒவ்வொருமுறையும் பௌண்டன் ஓய்ந்து இருள் சூழ்ந்த அடுத்த வினாடி பின்னால் நிற்கும் புஜ் கலிபா கோபுரத்தின் வெளிசுவற்றின் மீது ஓளி விளையாடுகிறது. வாரியிறைத்த வண்ணபூக்களாக, புள்ளிக் கோலங்களாக, வண்ணகட்டங்களாக, ஒளிஊசிகளாக, நட்சதிரமழையாக, மாறி மாறி ஜொலிக்கும் வண்ணவிளக்குகளின் ஜாலம். அசத்துகிறது. அந்தக் கட்டிடத்தில் எத்தனைப் பிஞ்சு பல்புகள்ஒளிந்திருக்க்கும்   ஒரு லட்சம்? இல்லை அதற்கும் அதிகமாகவா? தெரியவில்லை. இந்த ஒளி, நீர் விளையாட்டுகளுக்குப் பின்னே மிகச்சவாலான கணினி சூத்திரங்கள் இருக்கிறது எழுதிய புண்ணியவான்களுக்கு (நிச்சியம் இந்தியர்கள் இருப்பார்கள்). சலாம்
குளிராத மெல்லிய இதமான காற்று வீசத் துவங்கி நடக்க அழைக்கிறது. தொலைவில் வெளிர்நீல நிறத்தில் புஜ் கலீபா



உலகின் உயரமாகயிருக்கும்  கட்டிடத்தை விடப் பெரிதாக, உலகிலிருக்கு பெரிய  மியூசிகல் பெளண்டனைவிடப் பெரிதாக இப்படி எல்லாவற்றிலும் -பெரிதினும் பெரிது கேட்டு- கனவுகண்டு அதை நனவாக்கிய மன்னரின் துணிவும், தன்னம்பிக்கையும் தான் இந்த கோபுரத்தைவிடப் பெரிது எனத் தோன்றிற்று

11/6/16

பொன்மாலைப் பொழுதுகள் 3



பயணங்கள்


பஹரையினிலிருந்து ஒரு மணிநேர விமான பயணத்தில் துபாய்.ஆனால் இரண்டிற்கும் நேரவித்தியாசம் 1 மணி நேரம். அதனால் வாழ்க்கையில் வாழாமலேயே கரைந்த ஒருமணிநேரத்தைக் கடிகாரத்தில் மாற்றிக்கொள்ள வேண்டும் இம்மாதிரிப் பயணங்களில் போனாசாகக் கிடைத்த மணி நேரங்களையும் காணாமல் போன நேரங்களையும் ஒரு நாள் கணக்கிட்டுப் பார்க்க வேண்டும் என நினைத்துக்கொண்டேன்.

துபாய் விமான நிலையம் மிகக்க.....ப் பெரிது. லிப்ட்கள் தானியங்கும் ரயிலில் என்மாறி மாறிப் பயணித்தாலும் நடந்த நேரம் இரண்டுநாள் வாக்கிங்கை ஒரேடியாகச் செய்த உணர்வைத்தந்தது. எமிரேட் மிகப்பெரிய விமான நிறுவனமாக வளர்ந்து வருவதால் முழு விமான நிலையத்தையும் அவர்களே ஆக்ரமிப்பு செய்திருக்கிறார்கள், அதனால் மற்றவிமானங்களுக்கு இதற்கும் பெரிதாக இன்னொன்று கட்டிக்கொண்டிருக்கிறார்களாம்.

விமானநிலையத்திலிருந்து வீட்டிற்குசெல்லுமநேரத்திற்குள் இருக்கபோகும் சில நாட்களில் பார்க்கவேண்டியவை, வேண்டாதவைகளையும் பட்டியலிட்டார்கள் நண்பர் மணியும் அவரது மனைவி ஷோபாவும். 20 ஆண்டுகளுக்கு மேலாக அங்கு வசிக்கும் இந்தத் தம்பதியினர் இன்று பல நிறுவனங்களின் நிர்வாக ஆலோசகர்கள். நேரத்தின் அருமையை நன்கு தெரிந்தவர்கள். அவர்கள் வீடு சென்னை அண்ணாசாலை மாதிரியான ஒரு பரபரப்பான சாலையில், அடுத்தடுத்து நிற்கும் உயரமானபலமாடி கட்டிட அண்ணன்களுக்கிடையே நிற்கும் குட்டித் தம்பிகளில் ஒன்றின் 10 வது மாடி.

பால்கனியிலிருந்து பார்த்தால் பளிச்சென்ற ஒளியில் குளித்துக்கொண்டிருக்கும் உயர்ந்த கட்டிடங்களும் அதன் நீண்ட நிழலும் அதனிடையே ஓளியும் மாறிமாறி விழுந்திருக்கும் அந்தப் படுசுத்தமான சாலையில் இருபுறமும் விரைந்து கொண்டிருக்கும் வாகனங்கள். ஹரன் ஒலிகேட்காத, யாரும் குறுக்கே பாயாத சாலை. துபாய்காரர்களைப்பார்த்து கொஞ்சம் பொறாமையாகத்தான் இருக்கிறது.

துபாயிலிருந்து 150 கீமி தொலைவிலிருக்கிறது அபுதாபி. இது தான் ஐக்கிய அரபு தேசங்களின் தலைநகர். மன்னரின் அதிகாரபூவர்மான அரண்மனை இங்குதான் இருக்கிறது ஒன்றை மணிநேரம் பளபளப்பான சாலையில் வழுக்கிக்கொண்டிருந்த கார, மெல்லிய செம்பழுப்பு நிறத்தில் கம்பீரமாக நிற்கும் ஒரு மசூதியின் முன்னே நின்றது. நான்கு உயர்ந்த கோபுரங்கள் சிறிதும் பெரிதுமாகக் கவிழ்ந்த கிண்ணங்களாக மாடங்கள். கட்டிட முகப்பு சாலைக்கு இணையாக இல்லாமல் சற்று சாய்ந்த கோணத்தில் இருக்கிறதோ என்று எண்ணவைக்கும் தோற்றம்.

இது ஷேக் சைது்கிராண்ட் மாஸ்க் என்று அழைக்கப்படும் உலகின் அழகான மசூதி. பார்த்துப் பார்த்துக் கட்டினோம் என்கிறார்களே அதுபோல் நாட்டின் மன்னரால் பார்த்துப் பார்த்து 7 ஆண்டுகளாகக் கட்டப்பட்ட இது, லாஹுர், கசாபிளாங்க்கா, மெக்கா போன்ற புகழ் பெற்ற மசூதிகளில் சிறப்பானவையாகக் கருதப்படும் குவி மாடங்கள், வளைவுகள், கதவுகள் சரளங்கள் போன்ற எல்லாஅழகான விஷயங்களையும் இங்கே ஒருங்கிணைத்து ஒவ்வாரு செண்டிமீட்டரிலும் கலை நுணுக்கங்கள் மிளிர எழுப்பப்பட்டிருக்கிறது. முகலாய, முரிய, அரேபிய கட்டிடகலைகளின் சங்கமம் இது. கிராண்ட் என்பதை விடச் சரியான வார்த்தையில் இதனை அழைக்க முடியாது. எல்லாமே கிராண்ட் தான்.


பிரராத்தனைக் காலங்கள் தவிர மற்ற நேரங்களில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவது மட்டுமில்லாமல் அவர்களைக் குழுக்களாக அழைத்துசென்று இதன் பெருமைகளை விளக்கிச்சொல்ல ஒரு கடும் வருகிறார். மெல்லிய குரலில் அவர் சொல்லுவதைத் தெளிவாகக் கேட்க நமக்கு இயர்போன்கள்.

பெண்கள் எந்த மதத்தினராக இருந்தவரானாலும் பர்தா அணியாமல் உள்ளே போக முடியாது. இதற்காக அவர்களே நன்கு சலவை செய்யப் பட்ட புர்காகள் தருகிறார்கள். ஆண்கள் கால்முழுவதும் மூடிய உடை அணிந்திற்க வேண்டும் முக்காபேண்ட் டவுசர் பாண்டிகளுக்கும் பா்மூடாக்காதலர்களுக்கும் அனுமதியில்லை.
மசூதியின் தரைப்பகுதிக்கு கீழே கைகால்களைச் சுத்தப்படுத்திக்கொள்ள குளிரட்டபட்ட அறைகள். குழாய்களுக்கு முன்னால் வசதியாக உட்கார மேடைகள். ஒரே நேரத்தில் பலர் இருந்தாலும் அந்தப் பகுதி அமைதியாகவும் சுத்தமாகவும் இருக்கிறது.

நான்குபுறமுமநீண்ட தாழ்வாரங்கள் கொண்ட இதன் தொழுகை மாடத்தின் முன்னுள்ள மிகப்பெரிய திறந்த வெளிமுற்றம் நம்மை அசத்துகிறது. வெண்சலவைக்கல்லில் மிகநுணுக்கமாகச் செதுக்கிப் பதிக்கப்பட்டிருக்கும் வண்ணபூக்கள் கொட்டிகிடக்கின்றன. .மிதிபட்டுகசங்கி விடுமோ எனக் கால் கூசுகிறது பிராத்தனை நாட்களில் 40000 பேர் மண்டியிட்டுத் தொழலாம் என்றால் அந்த இடத்தின் பிரமாண்டத்தை கற்பனை செய்து பாருங்கள்
.
நீண்ட தாழ்வாரங்கள் வழியே பளபளக்கும் இளம்பச்சைவண்ண தூண்களைத் தொட்டும், அதன் மீது இருக்கும் தங்க வண்ண ஈச்ச இலைகளைப் பார்த்தவண்ணம் பிராதான வழிபாட்டு மண்டபத்திற்குள் நுழைகிறோம். நம்மைக் கண்டவுடன் தானே திறக்கும் கதவுகள் கண்கள் கூசாத பிரகாச ஒளி, எங்கிருக்கிறது என்று தெரியாத ஏசித் தரும் இதமான குளிர், காலடியில் மெத்தென்ற கார்பெட். நுழைந்ததும் நம் பார்வையைத் தாக்கி நிறுத்துவது.நுழைவாயிலில் தொங்கும் மிகப்பெரிய வண்ண சரவிளக்கு. பெரிய அளவிலிருக்கும் அந்தத் தொங்கும் விளக்கைப் பார்க்க நிற்கும் நம்மிடம் உள்ளே வாருங்கள் இதற்கு அண்ணன்களெல்லாம் இருக்கிறார்கள். என்று அழைக்கிறார் நம் கட்.
உள்ளே 1500 பேர் பிரார்த்தனை செய்யக்கூடிய மண்டபம். அருகே பெண்களுக்கான தனிப்பகுதி. அங்கு இதுபோல் 6 சர விளக்குகள் நடுவே மிகப்பிரமாண்டமான தொங்கும்ஒரு சரவிளக்கு,15 மீட்டர் நீளத்தில் 10 மீட்டர் அகலத்தில் விலையுர்ந்த ஸ்ர்ஸ்வாக்கி ஸ்படிக கற்களுடன் மின்னொளியில் ஜொலிக்கிறது ஜெர்மன் தயாரிப்பான பொன்வண்ணத்திலிருக்கும் அதன் கிரிஸ்டல்கள் வானவில் வண்ணங்கள் மட்டுமில்லை வண்ணகலவைகளினால் எத்தனை உருவாக்க முடியுமோ அத்தனையும் அதில் தெரிகிறது. பார்க்கப் பிரமிப்புட்டுகிறது.
அந்தத் தொழுகைத்தலத்தின் 60000 சதுர அடித் தளம் முழுவதையும் கார்பெட் மறைத்திருக்கிறது. பக்க சலவைகற்சுவர்களில் இருக்கும் பிரமாண்டமான பூக்களின் டிசையினிலேயே இருக்கிறது அந்தக் கார்பெட். முழுவதும் ஒரே கார்பெட் என்றார்கள். எப்படி இருக்க முடியும்? என நாம் நினைப்பதுபுரிந்தது போலத் தரையின் அளவிற்கேற்ப ஈரானில் புகழ்பெற்ற டிசைனாரால் பல பகுதிகளாக நெய்யப்பட்டு இங்கு வந்து இணைக்கபட்டது என்றார் கட். எந்த இடங்களில் இணைக்கப்பட்டிருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க முயற்சித்து பலர் தோற்றச் சவால். 37 டன் எடையிள்ள இது இதற்காகவே மாற்றியமைக்கப் பட்ட விமானத்தில் இங்கு வந்திருக்கிறது. பல லட்சக்கணக்கான முடிச்சகளுடன் கைகளினால் தயாரிக்கப்பட்டிருக்கும் இதைத்தயாரிக்க 3 வருடமாகியிருக்கிறது. எத்தனைப் பிஞ்சு விரல்களுக்கும் அவர்களின் அம்மாக்களுக்கும் எவ்வளவு நாட்கள் வலித்ததோ?

கிழக்கு நோக்கியிருக்கும் பளிங்குச்சுவற்றில் அல்லாவின் 99 திருநாமம் .காலியோகிராபி எனப்படும் ஓவிய எழுத்துக்களில் உள்ள பல வகை ஓவிய எழுத்துக்களாலும் எழுதப்பட்டிருக்கிறது. அவை மின்னொளியாக மிளிர்கிறது. இந்த இடம் மிகச்சரியாக மெக்காவை நோக்கி நேர் கோட்டிலிருப்பதாகச் சொல்லிக் கூகுள் சாட்லைட்மேப்பிலும் காட்டினார். அப்போதுதான் நுழைவாயில் சாலையிலிருந்து சற்று சாய்வான கோணத்தில் இருந்ததின் அர்த்தம் புரிந்தது.

தொடர்ந்து பல ஆன்டுகளாகப் பலர் பிரார்த்திப்பதினால் அந்த இடத்தில் அதிர்வுகளை என்னால் உணர முடிந்தது. எந்த வழிபாட்டுதலத்துக்குச் சென்றாலும் அங்கு நம் கடவுளை மனதில் எண்ணிப் பிராத்திப்பது என் வழக்கம். அதேபோல் இங்கும் சில நிமிடங்கள் பிரார்த்தனையில் செலவழித்தேன்
30 ஏக்கர் பரப்பில் 38 நாடுகளிலிருந்து3000 மேற்பட்டவர்களின் 11 வருட உழைப்பில் 500 மில்லியன் டாலர் செலவில் (ஒரு மில்லியன் 10 லட்சம்) உருவான இந்தத் தொழுகைத் தலம் மன்னர் ஷேக் ஸய்த் தின் கனவு (Sheikh Zayed ). உலகிலிருக்கும் மிகசிறந்தவைகளினால் ஒற்றுமைக்கு உதாரணமாக இதைத் தன் நாட்டில் உருவாக்க விரும்பினார். ஆனால் பணிகள் முடிந்த நிலையில் ஆலயத்தைப் பார்க்க அவர் இல்லை. அவருடைய நினைவு இல்லமும் அருகிலேயே இருக்கிறது.

மீண்டும் அந்த அழகிய நீண்ட தாழ்வாரத்தை கடந்து வெளியே வருகிறோம். மாலை மயங்கி இரவை வரவேற்றுக் கொண்டிருக்கிறது. பரந்த தொழுகை முற்றம் நிலா முற்றமாக மாறியிருக்கிறது. அப்படியொரு ஒளி அமைப்பு. முழு கட்டிடமுமே நீலப் பின்னணியில் பொன்வண்ணத்தில் மயக்குகிறது. நீண்ட தாழ்வாரங்களுக்கு அருகிலிருக்கும் நீர்த்தொட்டிகளில் அசையாமல் மிதப்பதைப் பார்த்து மெய்மறந்துபோகிறோம்.

கட்டிடத்தின் மின்னொளி அமைப்பகள் நிலவின் ஒளிக்கேற்ப மாறும்படி அமைக்கப்பட்டிருப்பதால் ஒவொரு நாளும் அதேற்கு ஏற்ற அளவான வெளிச்சத்துடன் அழகாகத் தோன்றுமாம்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் நமது பிரதமர் இங்கு வந்திருக்கிறார். பார்வையாளர் புத்தகத்தில் அவர் எழுதியிருப்பது இது,

"பிரம்மாண்டமான இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மசூதியைப் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். இதனுடைய அழகிலும், பிரம்மாண்டத்திலும் மெய்மறந்துவிட்டேன். மனித ஒற்றுமைக்கான சின்னமாகத் திகழ்ந்து வரும் இந்த மசூதி உலகின் கலைத்திறன்களை ஒன்றிணைத்துவிட்டது. இந்த மசூதி நிச்சயமாக ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான சின்னமாகப் போற்றப்படும்

ஒளிவெள்ளத்தில் அழகான ஒவியமாகத்தெரிந்த அந்த அழகான கலைச்சின்னம் மெல்ல பார்வையிலிருந்து மறைந்துகொண்டிருக்கிறது. துபாய் திரும்பிக்கொண்டிருக்கிறோம்.

ஒரு இறைவழிபாட்டுத் தலத்துக்கு இத்தனை ஆடம்பரம் அவசியமா? எனத் தோன்றியது. உடனேயே பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுந்த நமது பல கோவில்களும், உலகில் பல தேவாலயங்களும், விஹார்களும். அடுத்துவரும் பலதலைமுறைகள் இறைவழிபாட்டைத் தொடர வேண்டும் என்ற நோக்கத்தில்தானே அன்று சிறப்பாக இருந்தவிஷயங்களைக்்கொண்டு பிரமாண்டமாக எழுப்பியிருக்கிறார்கள். அதே போல்தான் இந்த மன்னரும் செய்திருக்கிறார். என்ற எண்ண அலை எழந்து அதை அழித்தது.


இறைவன் மிகப் பெரியவன்