25/6/16

பொன்மாலைப் பொழுதுகள் 5


இன்னிக்கு நான் உன் நடனத்தை வீடியோ எடுக்கப் போறேன். அழகாக ஆடணும். கொஞ்சம் பின்னாடி போய் கிராஸ் லைட் இல்லாத ஏரியாவிற்குள் போய் ஆடுகிறாயா?” 

என்ன ரமணன்? . எங்களூர் மயிலிடம் தமிழில் பேச ஆரம்பித்துவிட்டீர்கள்? 
“4 நாளில் நல்லபிரண்டாகிவிட்டது அதற்குத் தமிழ் புரிகிறது 
என்ற என் பதிலைக்கேட்டு நண்பரும் அவர் மனைவியும் அந்தத் தோட்டமே அதிரும்படி சிரித்தார்கள். துபாய் நகரின் பரபரப்பான வீதியிலிருக்கும் பல உயர்ந்த கட்டிடங்களுக்கு நடுவே நிற்கிறது எமிரேட் டவர்ஸ் என்ற இரட்டைப்பிறவி உயர்ந்த கட்டிடங்கள்.
ஜேம்ஸ்பாண்ட் படங்களில் கூட நடித்திருக்கிறதாம், அதில் ஹோட்டல்கள், கார்பேர்ட் அலுவலகங்கள், பேங்க் கிளப்கள் எல்லாம் இருக்கிறது. அந்தக் கட்டிடங்கள் இருக்கும் வளாகம் ஒரு அழகான சோலையாக இருக்கிறது, பச்சை கார்ப்பெட்டாக புல்வெளி. பல வண்ணங்களில் சிரிக்கும் மலர்கள் சில வண்ணத்துப்பூச்சிகள், அடர்ந்து உயர்ந்திருக்கும் மரங்கள் அதன் பின்னே உயர்ந்த கட்டிடங்கள் என அந்த இடமே ரம்மியமாக இருக்கிறது. இந்த இடத்தில் அனுமதிபெற்றவர்கள் காலையில் காலாற நடக்கலாம். நண்பர் வாக்கிங்க்காக முதல் நாள் அழைத்துபோன இந்த இடத்தைப் பார்த்து அசந்து போனேன். அந்தச் சோலையில் மயில்கள். அரை டஜனுக்கும்மேல் ஆடிக்கொண்டிருந்த ஆச்சரியம். மயிலாடும் துபாயை நான் எதிஎபார்க்கவில்லை. இந்த சோலைகளைப் பார்த்து வளரும் இன்றைய தலைமுறையினர் . துபாய் நகரம் பாலைவனத்தின் ஒரு பகுதியாகத்தான் இருந்தது என்று சொன்னால் நம்பமாட்டார்கள். நகரில் பல இடங்களில் பசுமை கொப்பளிக்கிறது. சாலைஒரங்கள், சாலைச் சந்திப்புக்கள், எனப் பல இடங்களில் பசும் புல், மலர் படுக்கைகள். இந்த மண்ணிற்கு தகுந்த விதைகள், செடிகள் அதற்கு சொட்டு நீர் பாயச்சும் டெக்னிக் எல்லாம் இஸ்ரேல் தந்திருக்கும் தொழில்நுட்பம். .


.தினமும் காலையில் வாக்கிங்கில் மயில்களைப் படமெடுத்தேன்.மயில்களை ஆடும் நேரத்தில் படமெடுப்பதின் கஷடம் போட்டோகிராபர்களுக்கு புரியம். . அருகில் போனால் தோகையை மடக்கிக்கொண்டு முறைக்கும். தள்ளிநின்றால் நல்ல படம் கிடைபது கஷ்டம். ஆனால் இங்கே தொடும் தூரத்தில் சமர்த்தாகச் சொன்னபடி கேட்டுக்கொண்டிருக்கிறது. ஸ்டைல் காட்டி சைட் அடிக்கும் பையன்களை கவனிக்காத கல்லூரி பெண்கள் போல அழகாக ஆடிக்கொண்டிருக்கும் இவைகளைகவனிக்காமல் பெண்மயில்கள் சற்று தள்ளி தங்கள் வேலைகளில் பிசியாக இருந்தது. 

வளாகத்தின் உள்ளே நடக்கும் சாலைகள் பளிச்சென்று எப்போதும் சுத்தமாக இருக்கிறது. ஹார்ன் கேட்டால் பதறிபறக்காமல் சற்று ஒதுங்கி வழி விட்டு மறுபடியும் சாலையில் வந்து ஆடுகிறது. துபாயில் பொதுஇடங்களில் குப்பை போட்டால் பைன் என்று அந்த மரங்களுக்குக்கூட தெரியுமோ எனத் தோன்றியது.
நகரின் பெரிய சாலைகளைக் கடக்க தனிப் பாதை-பாலங்கள் கிடையாது. அருகிலுள்ள மெட்ரோ நிலையங்களிலிருந்து வெளியே வரும் பாலங்களைத்தான் பயன்படுத்தவேண்டும். காலை 6 மணிக்கு அதன் சுத்தமும் ஏசியின் இதமும் நடக்கும் தொலைவை மறக்கச்செய்கிறது. 
நகரிலுள்ள மால்களில் எல்லாவற்றிலும் ஆடம்பரமான விலையுர்ந்த பொருட்களை விற்க தனிப் பகுதியிருக்கிறது.. ஆனால் பணக்காரர்கள் மட்டுமில்லை சும்மா பார்க்க வந்தவர்களும் மற்ற கடைகளில் எதையாவது வாங்கிக்கொண்டே இருக்கிறார்கள். விலைகள் மலிவு என்று சொல்ல முடியாது. ஆனால் சேல் என்பது நிஜமான சேலாக இருக்கிறது. உள்ளுர்கார்கள் உதவினால் புத்திசாலித்தனமாக ஷாப்பிங் செய்யலாம். மால்களில் என்னை கவர்ந்தவிஷயம். அதன் ஒவ்வொரு மாலின் மாறுபட்ட டிசைன்களும் உட்புற அலங்காரங்களும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பகலிலேயே மின்சார விளக்குகளின் வெள்ளத்தில் மிதக்கும் ஒரு மாலில் மேலிருந்து சூரிய ஒளி உள்ளே அழகாக விழும் அமைப்பு. ஒரிடத்தில் பல வண்ணக்குடைகளைக்கொண்டே திறந்த வெளியை நிரப்யியிருக்கிறார்கள்.
மால்களின் உள்ளே நம் நேரத்தையும் பணத்தையும் சாப்பிடப் பல விஷயங்கள். எமிரேட்டிஸ் ஏர்லயனின் புதிய விமானமான ஏர் பஸ்ஸின்(380) விமானியின் அறையில் உட்கார்ந்து பார்க்கலாம். பனிச்சறுக்கில் விளையாடலாம். எல்லாவற்றிருக்கும். கட்டணங்கள் உள்ளூர் வாழ்க்கைத்தரத்திற்கே கூட அதிகம் தான். 
உலகின் சிறந்த புத்தக கடைகளில் ஒன்று kinokuniya book world ஜப்பானிய நிறவனமாக இது உலகின் பல முக்கிய நகரங்களில் இருக்கும் புத்தககடல். (ஜப்பானில் மட்டும் 60 கடைகள்) துபாய் மாலில் 68000 சதுர அடியில் (நம் புத்தக் கண்காட்சி சைஸ்). 5 லட்சம் புத்தகங்கள் ஆயிரக்கணக்கான பத்திரிகைகள். சும்மா பார்க்கவே ஒரு நாளாகும். உட்கார்ந்து படிக்க வசதி உதவ கைட்கள். தேவையான புத்தகம் எங்கேயிருக்கிறது என்று நீங்களே தேட கம்யூட்டர்கள். என பல வசதிகள்.
துபாய் உருவான கதையைச்சொல்லும் Christopher Davidson, என்ற ஆசிரியர் எழுதிய Dubai: The Vulnerability of Success புத்தகத்தைத் தேடிக்கொண்டிருந்தேன். கைட் அருகில் வந்து மேனேஜர் என்னைப்பார்க்க விரும்புவதாகச் சொன்னார். எதற்கு என்ற ஆச்சரியத்துடன் அவரைச் சந்தித்தேன்.
முதல் கேள்வி நீங்கள் டூரிஸ்ட்டா?
நீங்கள் தேடும் புத்தகத்தில் இருக்கும் சில வரிகள் இந்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் இருப்பதால் இங்கு தடை செய்யப்பட்ட புத்தகம்”. தேடாதீர்கள். இந்த தடை உள்ளுர்கரார்களுக்கு தெரியும். நீங்கள் வெளிநாட்டில் வாங்கிக்கொள்ளுங்களேன் என்றார். அவ்வளவு பெரிய புத்தக கடையை அனுமதித்திருக்கும் அரசு எப்படி அதை கண்காணிக்கிறது என்ற ஆச்சரியம் என்னைத் தாக்கியது. மிகுந்த நட்புடன் பேசிக்கொண்டிருந்த அந்த லெபனான் நாட்டுக்காரர்இன்று இங்கு வெளியான மன்னர் புத்தகங்களைப் பாருங்களேன்எனக் காட்டினார். நாட்டின் மன்னர் எழுதிய புத்தகம் அங்கு அன்றுதான் வெளியிடப்பட்டிருக்கிறது. மலையாள மொழி பதிப்புடன். விழா, கூட்டம் எதுவும் கிடையாது. கடையில் முன்னால் தனி மேசையில் வைத்திருக்கிறார்கள். அவ்வளவு தான் வெளியீடு. நம் வெளியீட்டு விழாக்கள் கண்ணில் மின்னி மறைந்தது. விற்கும் இந்திய புத்தகங்கள் பற்றி கேட்டேன். கலாமின் வாழ்க்கை வரலாறு புத்தகங்கள் தொடர்ந்து நல்ல விற்பனையில் இருப்பதாகச் சொன்னார். சந்தோஷமாக இருந்தது. நல்ல ஆங்கில இதழ்கள் வெளியான அடுத்த மாதம் பாதி விலைக்குக் கிடைக்கிறது. அதற்காகவே காத்திருந்து வாங்குகிறார்களாம். இந்தப் பயணத்தில் மிக மகிழ்ச்சியாகக் கழித்த நேரங்களில் இந்தப் புத்தக உலகமும் ஒன்று.



இந்த மாலில் ஒரு மிகப்பெரிய மீன்கள் காட்சியகம் இருக்கிறது. அந்த இடத்தின் வெளிச்சுவரே -40 அடி உயரம் 60 அடி நீளத்தில் ஒரு மீன் தொட்டியின் கண்ணாடிச்சுவராக இருப்பதால் அதில் தெரியும் பலவித மீன்கள் நெளிந்து வளைந்து ஆடி நம்மை அழைக்கின்றது. உள்ளே ராட்சத சைஸ் கண்ணாடி குழாய்கள் வழியே நடக்கும் போது அவைகள் நம்மைசுற்றி வந்து நம்மைப் பார்த்து கண்ணாடிச் சுவர்களின் வழியே ஹலோ செல்லுகிறது. எப்போதும் நீரில் வாழும் இனம் நம்முடன் அருகில் அதன் சூழலிலேயே நீந்திக்கொண்டிருப்பதை இருப்பதைப்பார்த்தவண்ணம். நடந்ததும் வெளியே அந்தக் கண்ணாடி சுவரின் அருகில் அமர்ந்து சாப்பிட்டதும் வினோதமான அனுபவம்.

பளிச்சென்று இரண்டுவரிகவிதைகள். பொன்மொழி, ஜோக்குகள்(சில கடி), சொந்த அனுபவங்கள், சூழ்நிலைகளில் கற்றது, சும்மாத்தோன்றியது என்று தன் செல்பி படங்களுடன் முகநூலைத் தினசரி கலக்கிக்கொண்டிருக்கும் சுமிதா ரமேஷ். (அவர் பதிவு போடவில்லை என்றால் FB லீவு என்று எடுத்துக்கொள்ளலாம்) குடும்பத்தினரை அன்று மாலை சந்திக்க திட்டம், அவர்கள் வசிப்பது 40 கீமீயிலுள்ள அடுத்த தேசமான ஷார்ஜாவின்
எல்லையில். .நண்பர் ரமேஷின் பணியிடம் துபாய். ரமேஷ் அவர்களைச் சென்னையில் சந்தித்திருக்கிறேன். நண்பர் சுதாங்கனுக்கு நெருக்கமானவர். தங்கியிருந்த இடத்திற்கு வந்து என்னையும் மனைவியையும் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். நண்பர் ரமேஷ். “டிராபிக் அதிகம் இல்லை என்றால் 25 நிமிடம்என சொல்லி கூட்டிப்போனார். அவரின் பேச்சு சுவாரசியத்தில் முக்கால் மணீயானது தெரியவில்லை. எங்களைச் சந்தித்த திருமதி சுமித்திராவின் சந்தோஷம், அவர் கண்களில் தெரிந்தது. நீண்ட நாள் தெரிந்த நண்பர்களின் உணர்வை ஏற்படுத்தினர் அந்தத் தம்பதியினரும் அவர்களுது குழந்தைகளும். .சுமித்திரா தமிழ் குஷி காம் என்ற இணைய வானொலியில் தமிழ் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குபவர். ஒவ்வொரு செவ்வாயும் முகநூல் நண்பர்களின் விருப்பத்தின் வரிசையில் பாடல்களை ஒலிபரப்புகிறார். இதைத்தவிர இவருக்குப் பல முகங்கள். தன் வீட்டு பால்கனியில் வந்து முட்டையிட்டிருந்த ஒரு புறாவைப்பற்றி இவர் பத்திரிகையில் எழுதியதில் ஒரு சிறுகதையின் சாயலைப்பார்த்தேன். இப்போது சுஜாதாவின் பாணியில் இவர் எழுதிய ஒரு கதை வெளிவந்திருக்கிறது. இனி நிறைய எழுதுவார் என நம்புகிறேன். எல்லாவற்றிருக்குமேல் இவரது காரியங்கள் யாவிலும் கைகொடுக்கும் அன்பான கணவரைப் பெற்ற அதிர்ஷடசாலியான பெண்மணி..
அழகான குடும்பம். மகன் ஹரிஷ் முதல் பார்வையிலேயே எங்களைக் கவர்ந்தவர். இந்தியாவிலிருக்கும் NIT க்கான நுழைவுத்தேர்வில் எல்லாப்பாடங்களிலும் 100/100 வாங்கியிருக்கிறார். அட்மிஷன் நிச்சியம் என்றாலும் துளி அலட்டல் இல்லை. என்ன படிக்க வேண்டும்? எங்குப் போகவேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார். நிச்சியமாக இந்த இளைஞன் உயரங்களைத்தொட்டுப் பெற்றோருக்கு பெருமை சேர்ப்பார். மகள் ஶ்ரீநிதி மிகச் சிறிய பெண். பாடப்பிடித்திருக்கிறது. நல்ல குரல்வளம். அம்மாவின் சிறப்பான கவனத்தில் உருவாகிக்கொண்டிருக்கிறார். அவரைபோலவே வருவார் என நம்பிக்கை அளிக்கும் அழகான பெண்குழந்தை. அவர்கள் உபசரிப்பைப்போலவே உணவும் அருமையாக இருந்தது. பேச்சு தொடர்ந்து 

இரவு நீண்டு கொண்டிருந்ததால் துபாய் திரும்பினோம். சொன்னபடி ரமேஷ் 25 நிமிடத்தில் துபாய்.. அந்த நேரத்திலும் சுமிதா எங்களுடன் பயணித்துத் தங்கியிருக்கும் இடம் வரை வந்துவிடையளித்தது நினைவில் என்றும் நிற்கும் நெகிழ்ச்சியான நேரம். 
நாளை வாக்கிங்கில் எல்லா மயில்களையும் சேர்த்து ஒரு குருப் போட்டோ எடுக்கமுடியுமா? என நினைத்துக் கொண்டே தூங்கப் போனேன்.



22/6/16

வெற்றிப் பயணமா? வெறும் பேச்சா?





பதவியேற்றதிலிருந்து பறந்துகொண்டேயிருக்கிறார். பார்லிமெண்டில் நாற்காலியில் உட்கார்ந்தால் கூட சீட் பெல்ட்டைத் தேடுகிறார் என்று சமுக ஊடகங்களில் கிண்டல் அடிக்கப் படும் மோடியின் வெளிநாட்டுப்பயணங்களில் லேட்டஸ்ட் “5 நாடுகளின் பயணம். அதிலும் குறிப்பாக அமெரிக்கப் பயணம். இது மிகவும் வெற்றிகரமான பயணம், NSG அமைப்பில் இந்தியா இணைந்து அணு உலகிற்குள் அடி எடுத்துவைக்கப் போகிறது என்று ஊடகங்கள் வர்ணிக்கின்றன. இது எந்த அளவுக்கு உண்மை என்பதைப் பார்க்கும் முன் அது என்ன என்.எஸ் ஜி? அதில் இந்தியா இடம்பெற வேண்டியது அவசியமா?? என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
அணு எரிபொருள் வினியோக கூட்டமைப்பான NSG(nuclear supply group)யில் இப்போது உறுப்பினராக 48 நாடுகள். அணுசக்தி தொடர்பான வர்த்தகங்களைத் தொழில்நுட்பங்களை இவை தங்களுக்குள்ளாகவே பரிமாறிக்கொள்கின்றன. வளர்ர்சியடைந்த நாடுகளூம், வல்லரசுகளும் உறுப்பினராக இருக்கும் இதில் இந்தியா உறுப்பினராக அனுமதிக்கப்படவில்லை. அதற்குக் காரணம் நாம் அணு ஆயுத பரவல் தடுப்பு சட்டம் என்று உலகின் பல நாடுகள் ஒப்புக்கொண்ட விதிகளை நாம் ஏற்கவில்லை. இதில் கையெழுத்திடாதால் இந்தியாவை என்.எஸ்ஜியில் சேர்க்கக் கூடாது என்ற தடுத்தவர் அன்றைய அமெரிக்க அதிபர் புஷ். அவரைத்தொடர்ந்து வந்த அமெரிக்க அதிபர்களும் இதே நிலையைத்தான் தொடர்ந்தார்கள். இந்திரா காலத்திலிருந்தே இந்தியாவும் தன் நிலையில் அணுஆயுத பரவல் சட்டத்தை ஏற்கமாட்டோம் என்பதில் பிடிவாதமாக இருந்தது. தனித்து இருந்தோமா, தனிமைப்படுத்தப்பட்டோமா என்பது வேறு விவாதம்.
இப்போது காலம் கனிந்திருக்கிறது, காட்சிகள் மாறப் போகிறது. என்.பி.டியில் கையெழுத்திடாமலேயே என்.எஸ்.ஜியில் அமெரிக்கா, மெக்சிகோ நாடுகளின் ஆதரவோடு இந்தியா உறுப்பினராகப் போகிறது. இதற்கான அறிவிப்புக்கள் வெளியாகியிருப்பது தான் இந்தப் பயணத்தின் வெற்றி. ஆனால் இந்த நிலைக்கான முழுப்பெருமையையும் மோடி எடுத்துக்கொள்ள முடியாது. என்றாவது ஒரு நாள் இந்த நிலைவரும் என்று நம்பி பிடிவாதமாக இருந்த இந்திரா, நரசிம்மராவ், மன்மோகன் போன்ற முந்தைய பிரதமர்களுக்கும் பங்கு இருக்கிறது, ரிலே ரேசில் கடைசியாக ஓடி வெற்றி கோட்டைத் தொடும் வீரன் கைதட்டல் பெறுவதுபோல நிகழ்ந்திருக்கும் விஷயம் இது.
இப்படி இந்தியாவிடம் தீடிரென்று அமெரிக்கா கரிசனம் காட்டுவதற்குக் காரணம் மோடியின் கோரிக்கையும் பயணமும் மட்டுமில்லை. சும்மா ஆடாத சோழியனின் குடுமி போல அமெரிக்கா எதையும் பலன் இல்லாமல் செய்யாது.
சீனா என்.எஸ்ஜியில் இந்தியா இடம் பெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. உலக போலீஸாக தன்னை கருதிக்கொள்ளும் அமெரிக்கா, தென் பசிபிக் கடல் பிரதேசத்தில் இந்தியாவுடன் இணைந்து கூட்டாகப் பாதுகாப்பு பணிகளைச் செய்யது சீனாவிற்கு செக் வைக்க விரும்புகிறது.. இதற்காகத் தரவேண்டிய விலையாக இந்த விஷயத்தில் இந்தியாவிற்கு ஆதரவுநிலையை எடுத்திருக்கிறது.
அதைவிட முக்கியமான விஷயம் சர்வ தேச சந்தையில் டாலரின் மதிப்பு சரிந்து யூரோ எழுச்சி பெற்று கொண்டிருக்கிறது. பொருளாதாரம் விழுந்துகொண்டிருக்கிறது என்ற இன்றைய நிலையில் அமரிக்காவிற்கு அதன் வெளிநாட்டு வாணிகத்தைப் பெருக்க வேண்டிய கட்டாயம் எழுந்திருக்கிறது. அமெரிக்காவின் ஏற்றுமதியில் முக்கிய இடம் மற்ற நாடுகளின் ராணுவத்திற்கான ஆயுதம் மற்றும் தளவாடங்கள்தான். 60 சதவீத ஆயுதங்களை இறக்குமதி செய்யும் இந்தியாவில். ஆட்சிக்குவந்தவுடனேயே இந்திய ராணுவம் நவீனப்படுத்தப்படும் என்ற மோடியின் அறிவிப்பினால் முழித்துக்கொண்டது அமெரிக்கா.
தொடர்ந்து ராணுவ அமைச்சராகப் பொறுப்பேற்ற மனோகர் பரேக்கர் முந்தைய ஆட்சியில் செய்யப்பட்ட ஆயூத சப்ளை காண்டிராக்ட்களை நிறுத்திவைத்தார். அமெரிக்கா. இந்த வாய்ப்பை தவறவிடக் கூடாது எனத் திட்டமிடத்தொடங்கியது. அதற்காக இந்தியாவை எதையாவது செய்து தஜா செய்ய வேண்டிய நிலைக்கு வந்தது. மேலும் இந்தியாவின் மின் உற்பத்தியில் அணு உலைகள் முக்கிய இடத்தைப்பிடிக்கபோவது திட்டங்களில் வெளியாகியிருப்பதால் அணுசக்தி துறைக்கு உதவக்கூடிய கட்டுமானம் மற்றும் இதர தொழில் நுட்பத் துறைகளில் அமெரிக்க நிறுவனங்கள் நீண்ட கால முதலீடு செய்யும் வாய்ப்புகளையும் உணர்ந்திருக்கிறது. அணு உலைகளுக்கான மூலப்பொருள் தராளாமாகக் கிடைக்காவிட்டால் இந்த வாய்ப்பு அவைகளைத் இப்போது இந்தியாவிற்குத் தந்து கொண்டிருக்கும் வேறு நாடுகளுக்குப் போய்விடும்.

இந்த அமைப்பில் சேருவதனால் இந்தியாவிற்கு என்ன பயன்?
அணுசக்தி ஆராய்ச்சிக்கு முக்கிய தேவை யுரேனியம். இது இந்தியாவில் மிகக் குறைவாகவே கிடைப்பதால், நாம் இறக்குமதியைச் சார்ந்திருக்கிறோம். இந்த என்.எஸ்ஜி அமைப்பைபில் இடம் பிடித்துவிட்டால் நமக்குத் தாராளமாக யுரேனியம் கிடைக்கும். அணுஆயுதம் அல்லாத, மின் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு பொதுப் பயன்பாட்டு திட்டங்களுக்கு மூலப்பொருட்களையும், தொழில் நுட்பத்தையும் பெற இந்த அமைப்பில் உடனடியாக உறுப்பினராவது அவசியம் என்ற நிலைப்பாட்டை, வளர்ச்சியை நோக்கி வேகமாக முன்னேற்ற விரும்பும் மோடியின் அரசு எடுத்திருக்கிறது அணுதொடர்பான நமது ஆராய்ச்சிகள் இனி புலிப் பாய்ச்சலில் இருக்கும். ஏவுகணை தொழில் நுட்பத்தில், அக்னி, பிரமோஸ் பிருத்வி போன்ற உலகத்தரம் வாய்ந்த ஏவுகளைகளை செலுத்தி உலக அரங்கில் நம் திறனைக் காட்டியிருக்கும் நாம் அந்த டெக்னலாஜிகளை உறுப்பு நாடுகளுடன் வணிக ரீதியாக விற்பனை செய்ய முடியும்.

இந்தப் பயணத்தின் உடன் விளைவாக 6 புதிய அணுமின்நிலையங்களை இந்திய அணுமின்கழகமும் அமெரிக்காவின் வெஸ்டிங் ஹவுஸ் நிறுவனமும் அமைக்கப் போகின்றன. இதன் மூலம் உடனடியாக, அமெரிக்காவும், கட்டமைப்பு பணிகளில் ஈடுபடப்போகும் அதானி, ரிலெயன்ஸ் நிறுவனங்கள்தான் என்ற குரல் எழு ஆரம்பித்திருக்கிறது. நாட்டின் பல பகுதிகளில் அணு உலைகளின் ஆபத்துகுறித்து குரல்கள் வலுத்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இந்தப் பயணம் உண்மையிலேயே வெற்றிதானா என்பதைக் காலம் தான் தீர்மானிக்கப் போகிறது.

பாக்ஸ் 1 சில் வரவேண்டியது

Nuclear Non-Proliferation treaty எனப்படுகிற (NPT)) அணுஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில்கைய்ழுத்து இடும் நாடுகள் எவ்வித நிபந்தனையுமின்றி தங்கள் அணு ஆயுத தயாரிப்பு வசதிகளைச் சர்வ தேச அணுசக்தி ஏஜின்சியின் சோதனைக்கு அனுமதிக்க வேண்டும். அணு ஆயுத உற்பத்தியையும் அடையோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்.
வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா,சீனா, பிரான்ஸ் பிரிட்டன் போன்ற நாடுகள் அணு ஆயுதங்களைத் தயாரித்து அடுக்கி வைத்துக்கொண்டு வளரும் நாடுகளைத் தடுப்பது நியாமில்லை என்று இந்தியா இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட  மறுத்து  கொண்டிருக்கிறது.

பாக்ஸ் 2ல் வரவேண்டியது
1968 என் பி டியி கையெழுத்திடமாட்டோம் என அறிவிக்கப்பட்டது
1974-முதல் அணுகுண்டு சோதனை
1998-இரண்டாவது முறையாக அணுகுண்டு சோதனைகள் (5 முறை நடந்தது)
2006-அமெரிக்க செனட் இந்திய அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு சட்டத்தை நிறைவேற்றியது
2007= இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் 123 கையெழுத்தானது
2016 -என்.எஸ்.ஜியில் இந்தியா இணைய அமெரிக்கா ஆதரவை அறிவித்தது.

(கல்கி 23/06/16 இதழலில் இருந்து)





/