24/4/11


அமைதியின் ஓசை கேட்கிறது இங்கே ......
திருவண்ணாமலையிலிருந்து பங்களூரு செல்லும்  பரப்பான  சாலையிலிருக்கும் அந்த இடத்தில் நுழைந்தவுடனேயே   அமைதியும்  பசுமை சூழலும் நிறைந்த ஒரு அழகான கிரமத்திற்குள் வந்து விட்டதைப்போல உணர்கிறோம்.  வாயிலில் நிழல் பரப்பி  நிற்கும் அந்த வயதான வேப்ப மரம் பல ஆண்டுகளாக அந்த ஆஸ்ரமத்திற்கு வந்தவர்களை வரவேற்றது போல நம்மையும் பார்த்து மெல்ல தன்  இலைகளை அசைக்கிறது. ஒருபுறம் அலுவலகங்களும், புத்தகசாலையும் மறுபுறம் உயர்ந்த தென்னைகளுடன் பசுஞ்சோலையாக பரந்து கிடக்கும் தோட்டம்.கீரிச்சீடும் பறவைகள், மற்ற இடங்களில் அபூர்வமாகவே காணப்படும் வெள்ளை மயில்கள்.  இடையிலிருக்கும் அநத அகன்ற பாதையை கடந்து கோவிலாகாவே நிறுவபட்டிருக்கும் ரமண மகரிஷிகள் வாழும் சமாதியை தரிசிக்க  செல்கிறோம்  இடது புறமுள்ள  அந்த ரமணர் சன்னதியின் வாயிலுக்கு  நுழையும்  முன் அந்த காட்சி  நம்மை மெய்மறந்து நிற்க செய்கிறது.
பவித்தரமாக போற்றி பாதுகாக்கபடும் ஆஸ்ரமத்தின் பழைய கட்டிடங்களுக்கும் தென்னங்கீற்றும் வைக்கோலும் மேற்கூரையாக பரப்பிய எளிமையான விருந்தினர் விடுதிக்கும் இடையே பளீரென்று தெரியும் திருவண்ணாமலயின் தரிசனம்.  அந்த தெய்வ மலை  நம்மை கூப்பிட்டு நிற்க வைத்து ஆசிர்வாதம் செய்வதைப்போல ஒரு சிலிர்ப்பு. ரமணர்  சிலகாலம் வாழ்ந்த விருபாட்ச குகை இருந்த அந்த புனித மலையையின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் இந்த ஆஸ்ரமத்திற்கு வரும் பக்கதர்களுக்கு இந்த தரிசனம் ஒரு பாக்கியம்.
கண்ணை உறுத்தாத வண்ணத்தில் சலவைக்கல்தரையிடப்பட்டிருக்கும் அந்த நீண்ட  ஹாலின் மறு முனையில் மகரதபச்சை வண்ணத்தில்  வெள்ளைபூக்களுடன் கம்பீரமாக நிற்கும் மண்டபம். நடுவில் மீளாத்தூக்கத்திலாழ்ந்த ரமணரின் பூத உடல் அன்னை பூமிக்கு சமரிபிக்கபட்ட இடத்தில் எழுப்பட்ட மேடை. தாமரைஇதழ்களின்  நடுவில் லிங்கம்.  பூஜிக்கபடும் அதை சுற்றி வந்து வழிபாடு செய்பவர்களுக்கு ஏற்ப வசதி. அந்த பாதையில்  ஒளியுட்டபட்ட ரமணரின்  வண்ணப் படஙகள்.  அமைதி ஆக்ரமித்திருக்கும் அந்த பெரிய மண்டபத்தில்  ஆங்காங்கே   கண்மூடி பிரார்த்தனையில்   பக்தர்கள்.பல வெளிநாட்டினர்.
அருகில்  பகவான் ரமணர் தன் தயாருக்கு எழுப்பிய ஆலயம்.ஆகமவிதிகளின் படி எழுந்திருக்கும் அந்த ஆலயத்தின் பளீச்சென்ற தூய்மை  அதை பேணுகிறவர்களின் நேசத்தைப் பேசுகிறது. ஆலயத்தின் முகப்பில் பகவான் வாழ்ந்த காலத்தில் வந்தவ்ர்களை சந்தித்த கூடம்.  நடுவே அவர்  அங்கு அமர்ந்திருந்த  நிலையில் எடுத்த படம். அருகில் தியானம் செய்யும் நிலையில் சிலையாக ரமணர், அந்த கண்களில் தெரியும் தீட்சண்யம் நம்மை தாக்குகிறது.  தொடர்ந்து பலர் வந்து தரிசித்து கொண்டிருப்பதினால் அங்கே  எழும்   ஒசைகளினாலும் அசைவுகளினாலும் சற்றும் பாதிக்படாமல் தியானத்திலிருக்கும் சிலர். மெல்ல கோவிலின் வெளிச்சுற்று பாதையில்  நடந்து வரும் நம்  க்ண்ணில் படும் பெரிய மலர்தோட்ட்த்தின் நடுவே அந்த குளமும் அதன அசையாத  நீரில் பிரதிபலிக்கும் அண்ணாமலையின் தோற்றமும் நம்மை வேறு உலகத்திற்கு அழைத்துச் செல்லுகிறது. பாதை இட்டு செல்லுமிடம் முகப்பில் ஓட்டு கூரையிட்ட  தாழ்வாரத்தினுடனிருக்கும் தியான அறை.  பகவான் வாழ்ந்த காலத்தில் பல நாட்கள் பல மணி நேரங்கள் தியான செய்த பழைய அறை.  சிறிய சதுர கறுப்பு கடப்பா கற்கள் பதிக்கபட்ட அந்த தரை அப்போதுதான் கழுவிவிட்ட்துபோல சில்லென்றிடுக்கிறது. அறையின் ஒரு மூலயில் கால்நீட்டி அவர் அமர்ந்திருந்த அதே சோபாவில் இன்று அந்த நிலையில் பகவானின்  பெரிய படம். நம்முடன் பேசுவதுபோலிருக்கிறது. வெளிச்சம் சற்று குறைவாகயிருக்கும் அந்த அறையில் தியானம் செய்யும் பலர். சிலையாக சமைந்திருக்கும் வெளிநாட்டு பெண்மணி. எவரையும் தியானம் செய்ய தூண்டும் அந்த சூழ்நிலையில் நாமும் சிறிது நேரம் முயற்சிக்கிறோம்.  நம் சுவாசத்தின் மெல்லிய  ஒலி கேட்குமளவிற்கு அமைதி. ஆழ்ந்த மெளனத்திற்கு அழைத்துபோகும் அந்த சீரான ஓசை அந்த நேரத்தில் அந்த இட்த்தில்  எற்படுத்திய  நிச்சலனத்தையும் நிம்மதியையும் உணர்ந்தால் தான் புரிந்த கொள்ளமுடியும்.
தியான அறைக்கு வெளியே சிறிய தோட்டத்தில் ஆடாமல் மெல்ல நடைபழகிக்கொண்டிருக்கும் மயில்கள். தோகைவிரித்து அது ஆடாதா என் காத்திருக்கும் சிலர். மரங்களில் மெள்ள பேசும் கிளிகளை துரத்தும் குரங்குகள். தோட்ட்தின் ஒரு பகுதியில், நம்  புருவத்தை உயர்த்தசெய்யும் சில விலங்குகளின் சமாதிகள்.   பசு லஷ்மி, நாய் ஜாக்ஸன் என்று பகவான் ரமணர் வாழ்ந்த காலததில் அவருடனே சுற்றிகொண்டிருந்த இவர்கள்  அண்ணாமலையில்  வாழும் சித்தர்கள் என ரமணரால் அடையாளம் கண்டுகொள்ளபட்டதால் இந்த கெளரவம் பெற்றிருப்பதை அறிகிறோம்.
அருகில்   “போஜனசாலை.  என நீல எனாமல்போர்டில்  பதிபிக்கபட்டிருக்கும்  வார்த்தைகள் அவை தமிழ் வார்த்தைகளாக கருதபட்ட காலத்தில் எழுந்த கட்டிடம் அது எனபதைச் சொல்லுகிறது. பரந்து விரிந்திருக்கும் அந்த கல் கட்டிட கூடத்தில்  சுவர் முழுவதும் படங்கள். அதில் ரமணர் வாழ்ந்த காலத்திலிருந்த அரசியல் பிரமுகர்களை  அரசர்களை காணமுடிகிறது. கூட்த்தின் நடுவில் பகவான் சாப்பிடும் நிலையில் ஒரு படம்.  தரையில் அமர்ந்து  தையல் இலையில் பரிமாறப்படும்  எளிமையான, சுவையான சாப்பாட்டை பிரசாதமாக எற்கிறோம்.
காலை 5.30 மணியிலிருந்து இரவு 8 மணி வரை திட்டமிட்ட அட்டவணைப்படி நிகழ்சிகள் நடைபெரும் இந்த ஆசரமத்தின் விதிகள் எவருக்காகவும் தளர்த்தபடுவதில்லை. அரசியலில் சிக்கலான நேரத்தில்  இந்திரா காந்தி  இங்கு வந்திருக்கிறார்.  வருகையைத்தெரிவித்து வரும் அன்பர்களுக்கு அருகிலுள்ள வசதியான கெஸ்ட் ஹவுஸ்களில் தங்கும் வசதியும் ஆஸ்ரமத்தில் உணவும் அளிக்கபடுகிறது. கட்டணமாக எதுவும் வசூலிப்பதில்லை. கொடுக்கும் நன்கொடைகள் மற்றுமே எற்றுகொள்ளபடுகிறது.   “ நாங்களாக யாரிடமும் ஆஸ்ரமத்திற்கு நன்கொடைகள் வேண்டுவதில்லை. சில நாட்கள் லட்சகணக்கில் பணம், எதுவுமே இல்லாத சில நாட்கள்  என  இருந்தாலும் பகவானின் அருளினால் இடைவிடாது  ஆஸ்ரமத்தின்  பணிகள் சீராக  இயஙகுகிறதுஎனகிறார் இதன் தலைவர். திரு, வி.எஸ் ரமணன்.  இவர் பொதுத்துறையில் உயர்ந்த பதவியிலிருந்து ஓய்வு பெற்றவர். ஐரோப்பா,கனாடா,ஆஸ்திரேலியா என பல நாடுகளில் அன்பர்களால் வழிபாடுமையஙகள் நிறுவப்பட்டிருக்கும் இந்த ஆஸ்ரமத்திற்கு. அமெரிகாவில் மட்டும் 20க்குமேல் மையங்கள்.  நவீன தொழில் நுட்பத்துடன் ஜெர்மனி நாட்டு ஆஸ்ரம அன்பர்கள் இங்கு நிறுவியிருக்கும் ஆவண காப்பகம்,அவற்றை இணயத்தில் இ லைப்ரரியில் பார்க்க வசதி, தமிழ்,ஆங்கில,  ஐரோப்பியமொழிகளில் புத்தகங்கள் நிறைந்த நூலகம், புத்தகங்கள் சிடிக்கள் டிவிடிகள் தயாரிக்கும் வசதியுடன்  பதிப்பகம், விற்பனை நிலையம் எல்லாம் எந்த விளம்பர சத்தமும் இல்லாமல், வெளியே ஒரு போர்டு கூட இல்லாமல் அமைதியாக இயங்குகிறது. பயணம் செய்யும் பல இடங்களில் நாம் தங்குவது உண்டு.  அவற்றில் சில இடங்கள் நம் மனதில் தங்கிவிடும்.  திருவண்ணாமலை ரமணாஸ்ரம். அதில் ஒன்று.



கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்