பயணங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பயணங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

25/12/18

நீலக்கடலுக்கடியிலும்... வெண்மேகங்களுக்கு மேலும் .


நீலக்கடலுக்கடியில்...
 
சோலார் பேனல் தொப்பிகள் அணிந்திருக்கும் உயர்ந்த தெருவிளக்குகள் அணிவகுத்து நிற்கும்  விசாகபட்டின கடற்கரைச் சாலையில்  செல்லும் நம்மை நிறுத்துவது கடற்கரையிலிருக்கும் அந்தப் பிரம்மாண்டமான கறுப்பு சப் மெரின். ஆம். ஒரு நீர்மூழ்கிக் கப்பல் கரையில் நிற்கிறது. இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் குர்சுரா என்ற நீர்முழ்கிகப்பலை தரையில் நிறுத்தி ஒரு அருங்காட்சியகமாக்கியிருக்கிறார்கள்.



  சதாரணமாக ஒரு நீர் மூழ்கிக் கப்பலை  உள்ளே சென்று பார்க்க முடியாது என்பதால்,1969லிருந்து 2001 வரை  இந்திய கடற்படையில் ஒரு லட்சம் கிமீக்கும் அதிகம் பயணித்து  ஓய்வு பெற்ற இந்த ரஷ்ய நீர்முழ்கிகப்பலை  ஒரு அருங்காட்சியகமாக்கியிருக்கிறார்கள்.
படிகள் ஏறி 300 அடி நீளமுள்ள அந்த நீர் மூழ்கிகப்பலுக்குள் நுழையும் நம்மை வரவேற்று  அந்தக் கப்பலின் கதையை விவரிக்கிறார் ஒரு முன்னாள் கடற்படை வீரர். 1971 பாக்கிஸ்தான் போரில்  அரபிக்கடலில் ரோந்து பணியிலிருந்தபோது அங்கு நுழைய முயன்ற பாக்கிஸ்தான் கப்பல்களை அடையாளம் கண்டுபிடித்து அறிவித்திருக்கிறது.
இரண்டு பேர் மட்டுமே நடக்கக்கூடிய  சிறிய பாதை. இரண்டு பக்கமும் பலவகை குட்டி இயந்திரங்கள், கருவிகள். குழாய்கள், வயர்கள் எல்லாம். சற்று வேகமாகத் திரும்பினால் எதாவது ஒரு கருவியில் முட்டிக்கொண்டுவிடுவோம்.  இந்தக்கப்பலில் 67 கடற்படை வீரர்களும் 8 அதிகாரிகளும் மாதக்கணக்கில் வசித்திருக்கிறார்கள். எந்தக் கருவிகளை இயக்கினால் கப்பல்  எந்த வேகத்தில் எவ்வளவு ஆழம் கடலில்  மூழ்கும், எந்த வேகத்தில் வெளியே வரும் என்பதை விளக்குகிறார்கள். பிரமிப்பாகியிருக்கிறது.  நீண்ட நாட்கள் கடலில் மூழ்கியே யிருக்கும் இந்தக் கப்பலில் குறுகலான இடத்தில் அடுக்குப் படுக்கைகள்.  உணவு வேளையில் அதில் ஒன்று  டைனிங்டேபிளாக மாற்றப்படும். இரண்டே டாய்லெட், இரண்டு வாஷ் பேசின்கள் மட்டுமே.  டெலிபோன்பூத் சைஸில்  ஒரு  சின்ன கிச்சன். இவற்றில் நம் வீரர்கள் எப்படி இயங்கினார்கள் என்பதைப் பார்வையாளர்களுக்குப் புரியவைக்க அந்தந்த இடங்களில்  வீரர்களின் பைபர்  உருவங்களை  அமைத்திருக்கிறார்கள்.  நமது பாதுகாப்புக்காக இந்தக் கடற்படை வீரர்கள் எத்தனைக் கடினமான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை எளிதாக உணரவைக்கும் காட்சிகள்


ஒரே நேரத்தில் கடலுக்கடியிலிருந்து  ஆறு டார்பிடோக்களை  செலுத்தித்  தாக்கும்  வசதி கொண்ட இந்தக் கப்பலில் அது எப்படி இயங்கும் என்பதை விளக்குகிறார்கள். அந்த டார்பிடோக்களில் ஒன்றும் கப்பலுக்கு வெளியே வைக்கப்பட்டிருக்கிறது. 
ஆசியாவிலேயே இப்படி ஒரு  கப்பலையே அருங்காட்சியகமாக்கியிருப்பது  இங்குத்தானாம், எழுந்த எண்ணத்தைச் செயலாக்கியவர் அன்றைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. இதை இப்படி கரையில் இழுத்து  நிறுத்தப் பல பெரிய இயந்திரங்களை  நிறுவி 18 மாதங்கள் உழைத்திருக்கிறார்கள்.  செலவு    14 கோடி ரூபாய்கள். 
மறு முனையிலிருந்து படிகளிலிறங்கி கீழே வரும்போது அந்தக்  கம்பீரமான கப்பலை ப்போலவே  நமது கடற்படையின் கம்பீரமும் நம் மனதில் அழியா காட்சிகளாகத் தங்குகிறது.     
  

வெண் மேகங்களுக்கு மேலே ...
 ஒரு நீர்மூழ்கி கப்பலைப்பார்த்த பிரமிப்புடன் வெளியே வரும் நம்மை ஆச்சரியப்படுத்துவது  சாலையின் ,மறுபக்கத்தில்  நிற்கும் ஒரு போர் விமானம்.  அது  TU142 என்று அழைக்கப்படும் இந்திய விமானப்படையின் விமானம். அதன் பணி கடலுக்கடியில் நகரும் சப்மெரின்களை  ஒலியின் மூலம் கண்காணித்து அறிந்து அதிரடி வேகத்தில் தாக்குவது. ரஷ்யத்தயாரிப்பான  இது இந்திய வான் படையில்  30000 மைல்கள் பறந்து 29 ஆண்டுகளுக்குப்பின் ஓய்வு பெற்றிருக்கிறது.
இதை இங்கு நிறுத்தி ஒரு அருங்காட்சியகமாக்கவேண்டும் என்ற யோசனையும் அன்றைய முதல்வர்  திரு சந்திரபாபுவுடையது தான். கடந்த 2017ஆம் ஆண்டு குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த். திறந்துவைத்திருக்கிறார்.
  ஒரு விமானத்தின் உள் பகுதியைப் போலவே ஒரு காட்சிகூடத்தை அமைத்திருக்கிறார்கள். ஏசி வசதி செய்யப்பட்டிருக்கும் அந்தக்கூடத்தில் விளக்கப் படங்கள், காணொளி காட்சிகள் போர் விமானத்திலிருந்து வீசும் குண்டுகள் பாரசூட், உடைகள்  எல்லாம்  காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். விமானியின் காக்பிட் சீட்டில்  அறையில் நாமே உட்கார்ந்து பார்க்கலாம்.
.  பாரசூட்டுகளை  திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம். அது இங்கு தொட்டுப் பார்க்கும் அளவில் பெரிய கூடாரம்  விரித்துவைக்கப்பட்டிருக்கிறது..விமானம் நீரில் மூழ்கிவிட்டால் அல்லது எங்காவது மோதி தரையிறங்கிவிட்டால் காப்பற்றிக்கொள்ள கருவிகள் அடங்கிய அலமாரி,மருந்துபெட்டகம் இப்படி பல.

விமான விபத்து ஏற்படும் போதெல்லாம் செய்திகளில் அடிபடும் “பிளாக் பாக்ஸ்”  இருக்கிறது. பெயர்தான் கருப்பு பெட்டியே தவிர அது ஒளிரும் ஆரஞ்சு வண்ணத்திலிருக்கிறது. எளிதில் எங்கிருந்தும் அடையாளம் காணமுடியும் என்பதற்கான வண்ணமாம் அது 
பார்ப்பவற்றை எளிதில் புரிந்துகொள்ள நுழைந்தவுடன் ஒரு ஸ்மார்ட் போன் தருகிறார்கள்  அதன் ஹெட்போன்களை  காதில் பொருத்திக்கொண்டு பார்க்கும் படங்களிலிருக்கும் எண்ணைப் போனில் அழுத்தினால்  தெளிவான ஆங்கிலத்தில் அழகான குரலில் விபரம் கேட்கிறது..  சுந்தரத் தெலுங்கும் பேசுகிறது
ஆல்பட்ராஸ்(ALBATROSS) என்பது ஒரு கடல் வாழ்பறவை. மிக அதிக உயரத்தில் மிக வேகமாகப் பறக்கக்கூடிய பறவை. ஒரு நாளைக்கு 1000 கிமீக்கள் கூட பறக்கும் சக்திகொண்டது. அந்த பறவையின் வடிவில்  இந்த விமானம் அமைக்கபட்டிருப்பது என்பதை விளக்க  அதன் வடிவத்தின் நிழல் இந்த விமானம்போல் விழுவதைக்காட்சியாக வைத்திருக்கிறார்கள்.
அந்த விமானம் தன் பணிக்காலத்தில் செய்த சாதனைகளையும் அதைச்செய்த வீரர்களின் படங்களையும் விமான வால் பகுதியைப்போலவே வடிவமைத்து  வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு சல்யூட் செய்துவிட்டு  வெளியே வந்தால் நாம் இத்தனை நேரம் பார்த்து விவரங்கள்  அறிந்த விமானமே நிற்கிறது. அதன் உள்ளே சென்று பார்க்கிறோம். இத்தனை சின்ன  இடத்திலா இவ்வளவு விஷயங்களையும் அடக்கியிருக்கிறார்கள் என்று எழும் ஆச்சரியத்தை அடக்க முடியவில்லை.

விமானத்தைச்  சுற்றி  நடந்து வரும்போது  திறந்திருக்கும் அதன் அடிவயிற்றுப் பகுதியிலிருந்து தான்  எதிரியின் இலக்கைத் தாக்கும் குண்டுகள் பாயும் என்பது புரிகிறது.  வயதானாலும் விமானத்தைப் புத்தம் புதிது போல சீராக்கி பாரமரிக்கிறார்கள். விமானத்தைப்  பல பகுதிகளாகப் பிரித்து இங்குக் கொண்டுவந்து  இணைத்து உருவாக்கியிருக்கிறார்கள். கண்காட்சி அமைக்கச் செலவு 14 கோடி என்கிறது தகவல் பலகை. 
நம் வான்படையின் வலிமையை  நாமும் நமது மாணவர்களும் தெளிவாகப் புரிந்துகொண்டு  பெருமிதம் அடைய இப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியிருப்பதைப் பார்க்கும் போது இது ஒரு  நல்ல முதலீடுதானே  என்று தோன்றிற்று.
ஒரே நாளில் நமது கடற்படை, வான் படையின் வலிமையை,  பெருமைகளை அறிய  ஒரு  வாய்ப்பு கிடைத்த மகிழ்ச்சியுடன் திரும்புகிறோம்.

7/9/18

காவேரியின் சிற்றம்.



நேற்றைக்கு (02/9/18) ஶ்ரீரங்க விஜயம். . காவேரியில் வெள்ளம் 80 சதவீதத்துக்குமேல் வடிந்திருக்கிறது. இனி அவசியமில்லை என்றாலும் கொள்ளிடத்தில் உடைந்த மதகு பாலத்தின் பகுதியில் மணல் மூட்டைகள் போட்டு அடைக்கும் வேலைத் தொடர்கிறது. எதிர்காலத்தேவையை எண்ணி எடுத்த வேலையை முடிக்கவேண்டும் எனச்செய்கிறார்களோ அல்லது . காவிரியிடமிருந்து அளவுக்கு அதிகமாக எடுத்த மணலைக் கொஞ்சமாவது திருப்பித் தந்து மன்னிக்க வேண்டுகிறார்களோ என்ற எண்ணம் எழுந்தது.
இந்தப் பாலத்திற்கு ஒரு சுவையான வரலாறு உண்டு, அது குறித்து அண்மையில் புதிய தலைமுறையில் எழுதியது இது

அண்மையில் காவிரியில் வெள்ளம் பெருகி நீர் கொள்ளிடத்தின் வழியே கடலில் சேருவதைப் பற்றிய செய்திகளும் அதன் உச்ச கட்டமாக முக்கொம்பு மேலணையில் மதகுகள் உடைந்தனால் நீர்ப் பெருக்கு அதிகரித்த செய்திகள் வந்தன, இந்த முக்கொம்பு கதவணை ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. தென்னிந்திய நீர்ப்பாசன தந்தையென அழைக்கப்படும் பிரிட்டிஷ் ராணுவ பொறியாளர் சர்.ஆர்தர் காட்டன் இந்த அணையைக் கட்டினார். அவரைப் பெருமைப்படுத்தும் வகையில், ஆர்தர்காட்டனுக்கு முக்கொம்பில் சிலை வைக்கப்பட்டுள்ளது. காவிரி கரூர் மாவட்டம் கொடுமுடியில் அகண்ட காவிரியாக மாறுகிறது. அகண்ட காவிரியிலிருந்து தண்ணீரைத் தடுத்து பாசனத்துக்காகத் திருப்பிவிடத் திருச்சி மாவட்டம் முக்கொம்பில் கதவணை கட்டப்பட்டது. 
சர் ஆர்தர் காட்டன் இந்த அணையைக் கட்டியதின் பின்னே ஒரு சுவையான வரலாறு இருக்கிறது. அவர், கல்லணையைக் கட்டிய சோழ மன்னர் கரிகாற்சோழனின் கல்லணை கட்டுமானத்தை ஆராய்ந்து வியந்து அதே முறையைப் பின்பற்றித்தான் இதைக் கட்டியிருக்கிறார். (அதை அவரே தன் புத்தகத்தில் விரிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்). 
காவிரி ஆறு கொள்ளிடத்தில் இரண்டாகப் பிரிகிறது. ஒன்று காவிரி, மற்றொன்று கொள்ளிடம்.. இந்த இரண்டு ஆறுகளுக்குமிடையே திருவரங்கத்தீவு இருக்கிறது. அத்தீவின் மேல் முனையில் அதாவது கொள்ளிடம் பிரியும் இடத்தில், கொள்ளிடத்தின் நிலமட்டம் காவிரியின் நிலமட்டத்தைவிட 6 அடி உயரமாக இருக்கிறது. ஆகவே வெள்ளம் வரும்பொழுது மட்டுமே கொள்ளிடத்தில் நீர் செல்லும். பிற காலங்களில் காவிரியில் மட்டுமே நீர் போகும். 
ஆனால் இத்தீவின் கீழ்முனையில் கொள்ளிடத்தின் நிலமட்டம் காவிரியின் நிலமட்டத்திற்குச் சமமாக உள்ளது.மேலும் கொள்ளிடத்தின் நிலமட்டச் சரிவு அதிகமாக உள்ளது. இவற்றின் காரணமாகத் திருவரங்கத்தீவின் கீழ்முனையில், வெள்ளம் வராத சாதாரணக் காலங்களில் கூட அடிக்கடி உடைப்பு ஏற்பட்டுக் காவிரியில் வரும் நீரும் கூடக் கொள்ளிடத்திற்கே வந்துவிடும். 
இதனால் காவிரியின் கீழ் உள்ள அனைத்து விளைநிலங்களிலும் அடிக்கடி நீர் இல்லாது போய்ப் பாசனம் செய்யமுடியாத நிலை ஏற்பட்டது.(இன்று பேசப்படும் கடைமடைப்பிரச்னை) இதனைத் தடுக்கக் கருதிய சோழ மன்னன் கரிகாலன், திருவரங்கத்தீவின் கீழ் முனையில் அடிக்கடி உடைப்பு ஏற்படும் பகுதியில் பெரும் பாறைகளால்ஆன கட்டுமானத்தைக் கட்டி காவிரியின் கரையைப் பலப்படுத்தி உடைப்பை நிரந்தரமாகத் தடுத்து நிறுத்தினான். அதன்மூலம் திருவரங்கத்தீவின் மேல்முனையில் காவிரிக்குப் பிரியும் நீர் வீணாகாது, எல்லாக் காலங்களிலும் பாசனத்துக்குக் கிடைக்க வழிவகை செய்யப்பட்டது. 
இந்த கட்டுமானம் தான் கரிகாலன் கட்டிய கல்லணை எனப் போற்றப்படுகிறது. ஆனால்கரிகாலன் காவிரிக்குக் குறுக்கே அணையைக் கட்டவில்லை, அவன் காவிரிக்குக் கல்லால் ஆன ஒரு கரைதான் அமைத்தான் என்பதே உண்மை. கல்லால் ஆன கட்டுமானத்தைக் கட்டி நீரைத்திருப்பி விடுவதை அணைக்கட்டு அல்லது கற்சிறை எனப் பழந்தமிழர்கள் குறிப்பிட்டனர். எனவே கரிகாலன் கட்டியது ஒரு கற்சிறை தான் இன்றைய மொழியில் சொல்லுவதானால் check dam. இந்த அணையில் கையாளபட்ட தொழிநுட்பத்தின் அடிப்படையில் தான் ஆர்தர் காட்டன் மேல்ணையை எழுப்பினார். அப்படி என்ன தொழில்நுட்பம் என்கிறீர்களா? :: 
ஆழங்காண முடியாத மணற்பாங்கான ஆற்றுப்படுகையில் மிகப்பெரிய பாறைகள் போடப்பட்டது. பாறைகளுக்கு அடியில் உள்ள மணல், ஆற்று நீரில் அரித்துச்செல்லப்பட்டதால் பாறைகள் மெதுவாக மணலுக்குள் இறங்கின. அவற்றின் மேல் களிமண் பூசப்பட்டு, அப்பாறைகளின் மேல் மீண்டும் பெரிய பாறைகள் வைக்கப்பட்டன. அதனால் கீழுள்ள பாறைகள் மேலும் ஆழத்திற்குள் புதைந்தன. பின் மீண்டும் களிமண் பூசப்பட்டு, பாறைகள் வைக்கப்பட்டன. கீழுள்ள பாறைகள் மேலும் புதைந்தன. கீழுள்ள பாறைகள் புதையப்புதையத் தொடர்ந்து பாறைகள் வைக்கப்பட்டன. இறுதியில் கீழுள்ள பாறைகள் கடினத் தளத்தை அடைந்தவுடன், பாறைகள் இறங்குவது நின்று போனது. இவ்வாறு ஒன்றின்மேல் ஒன்றாக வைக்கப்பட்ட பெரும்பாறைகளும், அவற்றுக்கிடையேயான களிமண் பூச்சுகளும் இணைந்தே கல்லணை என்ற மகத்தான நீர் சிறை (அணை) உருவாகியது இந்த தொழில் நுட்பத்தைப் பயன் படுத்திதான் மேலணையைக் கட்டியிருக்கிறார் ஆர்த காட்டன்.

இந்தத் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு சர் ஆர்தர் காட்டன் அவர்கள் 1874ம் ஆண்டுக் கோதாவரியின் குறுக்கே தௌலீஸ்வரம் என்ற அணைக்கட்டைக் கட்டினார். அது கோதாவரிச் சமவெளியை வளப்படுத்தி அனைவரின் பாராட்டையும் பெற்றது. நமது முல்லைப்பெரியார் அணைகட்டிய பென்னிகுக்கை நாம் கொண்டாவது போல் இவரை ஆந்திரமக்கள் கொண்டாடுகிறார்கள். தனக்குக் கிடைத்த பாராட்டுக்குக் காரணமான பழந்தமிழ் பொறியாளர்கள் குறித்து, அவர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கும் வாசகங்கள் இது. 
“ஆழங்கான முடியாத மணற்பாங்கான ஆற்றுப்படுகையில் எப்படி அடித்தளம் அமைப்பது என்ற தொழில்நுட்பத்தை இவர்களிடமிருந்து (தமிழர்களிடமிருந்து) தான் தெரிந்து கொண்டோம். எங்களால் செய்து முடிக்கப்பட்ட ஆற்றுப்பாசனத் திட்டங்கள் தான் உலகின் பொறியியல் பணிகளில் முதன்முதலான மிகப்பெரியஅளவில் செலவழிக்கப் பட்ட நிதிசம்பந்தமான வெற்றிப் பணிகளாகும். இவ்வெற்றிக்கான ஒரே காரணம் யாதெனில் நாங்கள் இம்மக்களிடம் கற்றுக்கொண்ட அடித்தளம் அமைப்பது குறித்த பாடங்களே ஆகும். இம்முறையைக் கொண்டு ஆற்றுப்பாலங்கள், அணைக்கட்டுக்கள் போன்ற பல பாசனப் பொறியியல் கட்டுமானங்களை எளிதாகக் கட்டி முடித்தோம் (இவர் ஆந்திராவி. அதற்காக அவர்களுக்கு நாங்கள் நன்றி செலுத்தக் கடமைப் பட்டுள்ளோம்.” இந்த புத்தகம் 1874ல் எழுதப்பட்டது.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் 180 ஆண்டுகளுக்கு முன் எழுப்ப்ப் பட்ட மேலணை இன்று வெள்ளத்துக்குப் பலியாகிவிட்டது. . ஆனால் அதற்கு முன்னர் பல நூற்றாண்டுகளுக்கு முன் கரிகாலன் எழுப்பிய, பல வெள்ளங்களைப் பார்த்த தடுப்பணை அசையாமல் இந்த வெள்ளத்தையும் பார்த்த சாட்சியாக நின்று கொண்டிருக்கிறது.



comments from face book 



Comments
Panneerselvam Natarajan
Panneerselvam Natarajan அருமையான தகவல்
1
Manage
LikeShow more reactions · Reply · 3d
N.Rathna Vel
N.Rathna Vel இதில் ஆச்சரியம் என்னவென்றால் 180 ஆண்டுகளுக்கு முன் எழுப்ப்ப் பட்ட மேலணை இன்று வெள்ளத்துக்குப் பலியாகிவிட்டது. . ஆனால் அதற்கு முன்னர் பல நூற்றாண்டுகளுக்கு முன் கரிகாலன் எழுப்பிய, பல வெள்ளங்களைப் பார்த்த தடுப்பணை அசையாமல் இந்த வெள்ளத்தையும் பார்த்த சாட்சியாக நின்று கொண்டிருக்கிறது. - முக்கொம்பு உடைப்பு பற்றி அருமையான தகவல்கள் அடங்கிய பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு Ramanan Vsv
1


Ramanan Vsv replied · 1 Reply
Shahjahan R
Shahjahan R அட்டகாசமான கட்டுரை.
2

Shahjahan R
Shahjahan R பிரிட்டிஷ் அரசின் விமர்சனங்களையும் மீறி ஆந்திரத்தில் அணைகள் கட்டி, வேளாண்மைக்கு வழி செய்தவர் ஆர்தர் காட்டன். நாடெங்கும் பஞ்சத்தைப் போக்கும் வகையில் இந்திய நதிகளை இணைக்கும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று சொன்னவரும் அவர்தான். ஆந்திரத்தை நெற்களஞ்சியமா…See More
8

Ramanan Vsv
Ramanan Vsv சக்கரகாலன் நூல் ஆசிரியர் ஷாஜஹான் .
6

Vijay S Krishnan
Vijay S Krishnan பொதுப் பணித் துறை 
என்ன அருமையான துறை
1
Manage

Vidya Subramaniam அருமை சார்

Artist ArjunKalai
Artist ArjunKalai மனல் கொள்ளையால் சரிந்தது கொள்ளிடம் பாலம். மற்றும் அனை.

Maragatha Mani படிக்க படிக்க ஆச்சரியமும் கர்வமும் மேலோங்குகிறது. நம் முன்னோர் பொறியியல் துறை அறிவு ஆங்கிலேயர்கள் பிரமிப்புடன் ஏற்றுக்கொண்டார்கள். நாம் மாற்றான் பெருமை பேசி பொறியாளர் துறையை இன்று கேலி கூத்தாகி கொண்டிருக்கிறோம்.

Sridhar Sivaraman Perhaps Karikalan expected Manal kollai and did a better job and Sir Arthur Cotton did not anticipate????
1
M3d

Ramanan Vsv replied · 1 Reply
Moorthy Athiyanan
Moorthy Athiyanan தண்ணீர் தண்ணீர் .....உண்மையான சேவை மனம் இனிமேல் வருமா சார்.....மிகவும் சிறப்பு சார்.

Vadakovay Varatha Rajan வழமைபோல் புதிய தகவல் .பாராட்டுக்கள்

Suresh Kumar S படிக்கும்போது சுவை சேதமாகாத அளவில் வெள்ளமாய்ப் பாய்ந்த தகவல்கள். அருமை, சார். இந்திய மக்களின் நலனில் அக்கறை கொண்ட காட்டன் போன்றோரும் இருந்திருக்கின்றனர்.

Muthuswamy Krishnamurthy
Muthuswamy Krishnamurthy Very informative.நயமான தமிழ் நடை.
Manage

Ramanan Vsv replied · 1 Reply
Ranganathan Ganesh
Ranganathan Ganesh காவேரியில் வெள்ளம் 80 சதவீதத்துக்குமேல் வடிந்திருக்கிறது.// அப்போ இன்னும் சில தினங்களில் வறட்சி ன்னு சொல்லுங்க!

Mohan Aru அற்புதமான கட்டுரை.
1

Vmapathy Dayanandhan Fantastic information.Thank u sir. Our TN Minister says something which unbelievable and unrealistic.
1

Vijayakumar Somasundaram அஹா.... அற்புதம்.

Nac Ramani Nacramani அருமையிலு ம் அருமையான தகவல்களை அள்ளி வழங்கி இருக்கிறீர்கள் , சார் . மிக்க நன்றி !!!
Manage
LikeShow more reactions · Reply · 3d
Manthiramoorthi Alagu
Manthiramoorthi Alagu அருமையான செய்தி.

Suresh Srinivasan அருமையான பதிவு...தகவல்களுக்கு நன்றி...
Manage
LikeShow more reactions · Reply · 3d
Mohan
Mohan எனக்கு கொள்ளிடத்தின் அக்கரையில் உள்ள உத்தமர்கோவில் தான் இருந்து வளர்ந்த ஊர்.
அந்த இடிந்த பாலம்
எங்களுக்கு எங்கள்…See More


Ramanan Vsv replied · 1 Reply
Sankara Narayanan Iyer
Sankara Narayanan Iyer Wow ! Super Write-up
1

Sita Thaniga
Sita Thaniga அருமையான பதிவு ஐயா மிக்க நன்றி

Balrajerode Balraj
Balrajerode Balraj புதிய தகவல் நன்றி ஐயா

Rajendran S K அருமையான பதிவு. நன்றி.

Easwar Ramanathan அருமையான பதிவு..

Seralathan Manickam நல்ல பதிவு

Raman V Very Informative. Excellent.
Manage
L
Vipranarayanan Tirumalai அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய செய்தி அழகாக தெரிவித்து இருக்கிறீர்கள்

Velayutham Muthukrishnan அருமையான பதிவு..! கரிகால் சோழ மன்னன் கட்டிய கல்லணையை மனதிற்கொண்டு முக்கொம்பு அணையையும் ஆந்திராவில் கோதாவரியின் குறுக்கேயும் அணையைக் கட்டி அனைவரின் பாராட்டுதல்களைப் பெற்றிருக்கிறார் ஆர்தர் காட்டன். தற்கால கரிகாலர்கள் காவிரி நீர் வீணாக கடலில் கலப்பதை வேடிக்கை பார்த்துகொண்டிருக்கிறார்கள். அந்தோ பரிதாபம்.
1

21/8/18

இது இறைவனின் செயல்



பெயரைக் கேட்டவுடனேயே புண்ணிய, புனித பூமி ஒரு முறையேனும் போய்ப்பார்க்க வேண்டும் என்று  இதுவரை பார்க்காதவர்களுக்கும்,  மீண்டும் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தை பார்த்தவர்களுக்கும்  எழுப்பும் மந்திரச்சொல் காசி.   காசி என்ற சொல்லுக்கு பிரகாசமானது என்று பொருள். வாரணாசி என்பது அறிவிக்கப்பட்ட பெயராகயிருந்தாலும் உலகம் முழுவதும் இந்த நகரம் அறியப்பட்டிருப்பது காசியாகத்தான்.
வேதங்கள் பிறந்த இடமாக நம்பப்படும்  காசி நகரம் நூற்றுக்கணக்கான சக்திவாய்ந்த கோயில்களால் சூழப்பட்டு ஒரு சக்தி வளையமாகத் திகழ்கிறது இந்தக் கோவில்களின் நடுவில் இருப்பது காசி விசுவநாதர் கோவில். மிகப் பழமையான கோயில் பலமுறை படையெடுப்புகளால் தகர்க்கப்பட்டிருக்கிறது. மூன்று முறை முழுவதுமாக இடிக்கப்பட்டு மீண்டும் எழுந்தது இந்தக்கோவில் என்கிறது வரலாறு... .
1779-ம் வருடம், இந்தூர் மகாராணி அகல்யா பாய் ஹோல்கர் இப்போது இருக்கும் காசி விஸ்வநாதர் கோயிலை எழுப்பினார். மகாராணி கட்டிக்கொடுத்த கோவில் பனாரஸை ஆண்ட மன்னர்களின் கட்டுப்பாட்டிலிருந்தது. அவ்வப்போது சிறு மராமத்து பணிகள் நடந்ததே தவிர இந்தக் கோவிலில் கும்பாபிஷேகம் எதுவும் நடைபெற்றதில்லை.

239 வருடங்களுக்குப் பின்னர் , இப்போதுதான் கடந்த ஜூலை மாதம் 5-ம் தேதி காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகம் முதல் முறையாக நடைபெற்றது என்பதை விட ஆச்சரியமான செய்தி அதைச்செய்திருப்பவர் ஒரு தமிழர். காரைக்குடியருகிலிருக்கும் வலையபட்டியைச் சேர்ந்த திரு சுப்பு சுந்தரம்.   மிகக் குறுகிய காலத்தில் திட்டமிட்டபடி பலர் வியக்கும் வண்ணம் அதைச் செய்து முடித்திருக்கிறார்.அவர் சென்னையிலிருக்கும் ஒரு ஏற்றுமதி- இறக்குமதி நிறுவன அதிபர்.  பல நகரத்தார் கோவில்களின் ஆன்மீக பணிகளில் பங்குகொண்டவர். .

இவர்  காசி விஸ்வநாதர் கோவிலுக்கு அடிக்கடி செல்லும் பக்தர்களில் ஒருவர் இல்லை. காசி நகரில்  பிஸினஸ் எதுவுமில்லை.  பின் ஏன் இவர் இதைச் செய்தார்.?  என்ற நம் கேள்விக்கு ஒரு வார்த்தையில் “தெய்வச்செயல்” என்கிறார்.
“நான் வேறு சில பணிகளுக்காகக் காசி சென்றிருந்தபோது.  காசி விஸ்வநாதர் கோவிலுக்கு அருகிலிருக்கும் அன்னபூரணி கோவிலுக்குச் சென்றிருந்தேன். அது ஆந்திரமக்களால் நிறுவப்பட்டு  மிகவும் பிரபலமாகயிருக்கும் ஒரு கோவில். அந்தக் கோவில் நிர்வாகத்தினர் அதற்கு  3  வெள்ளி கதவுகள்  அமைக்க விரும்பி உதவி கேட்டு என்னை அணுகினர். . நான் சம்மதித்திருந்தேன். ஆனால் கடந்த தீபாவளி சமயத்தில் நான் காசி சென்றபோது   அந்தக் கோவில் நிர்வாகத்தினர் ஒரு உள்ளூர் குடும்பம் அதைச் செய்ய ஏற்றுகொண்டுவிட்டதாகச்,சொல்லி  என் உதவியை வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள். இது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது. கோவில் கையங்கரியத்துக்கு உதவச் சம்மதித்தும் ஏற்க படவில்லையே என்ற எண்ணத்துடன் அருகிலிருக்குக் காசி விஸ்வநாதர் கோவிலில் பிரார்த்தனை செய்து விட்டு பிரஹாரத்தில் சுற்றி வந்து கொண்டிருந்தேன்.
  அந்தச் சமயம் ஒருவர் என்னை அணுகி இந்தக் கோவிலின் ஒரு முக்கிய பணியை  நீங்கள் செய்து கொடுக்க முடியுமா? என்றார்.  முன் பின் தெரியாத அந்த நபர், இன்னும் சொல்லப்போனால் ஏதோ பண உதவி கேட்கப்போகிறவர் என நினைத்து  ஒதுக்கியவரின் இந்த வார்த்தைகள் எனக்கு அதிர்ச்சியாகயிருந்தது.. வாருங்கள் என்று கோவிலின் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றார். அவர் அந்தக் கோவிலின் நிர்வாக அதிகாரி அரசால் நியமிக்கப்பட்ட IAS அதிகாரி என்பது அங்குப் போய் சில நிமிடங்களில் புரிந்தது.. என்ன பணி செய்ய வேண்டும் என்று கூட கேட்காமல் என் உள்மனம் கட்டளையிட்டபடி செய்து கொடுக்கிறேன் என்றேன். எதையும் யோசித்து நிதானமாகப் பேசும் நான்   எப்படி அந்த வார்த்தைகளைச் சொன்னேன் என்பது இன்று  வரை புரியாத ஆச்சரியமான புதிர். 
அவர் கேட்டவிஷயம்  என்னைச் சிலிர்க்க வைத்தது. காசி விஸ்வநாதர் சன்னதி என்பது நான்கு புறமும்  வாயில் கொண்ட ஒரு அறை.. அதன் நடுவில் தரையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பது தான் மூலவர்.. அதற்குத் தான் தினசரி   அபிஷகம், பூஜைகள் எல்லாம். அந்த மண்டபத்தின் மூன்று நுழை வாயில்கள்  வெள்ளி கவசமிட்டவை. வடக்கு புறமிருக்கும் வாசலை வெள்ளிக்கவசமிட்டுக் கொடுக்க முடியுமா? என்பது தான் அவர் கேள்வி
.எங்கோ தமிழ் நாட்டிலிருந்து வந்த என்னை, அதுவும் நான் யார் என்று தெரியாத நிலையில் ஏன் இப்படியொரு கேள்வியைக்கேட்டார்? என்பதையெல்லாம் சிந்திக்காமல் சரி முயற்சிக்கிறேன் என்றேன். வரும் சிவராத்திரிக்குள் முடிக்க வேண்டும் என்றார். அவர், 
மற்ற மூன்று வாசல்களும் 1841ல் போன்ஸ்லே குடும்பத்தினர்  அமைத்துக்கொடுத்திருக்கின்றனர். . இத்தனை நாளும் இந்த வாசலுக்கு கவசமிடவேண்டும் என்று எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.  எனக்குத்தான் அந்த வாய்ப்பைக் காசி விஸ்வநாதர்  தருகிறார் என்று எண்ணினேன்.  காரைக்குடியிலிருந்து நமது வெள்ளி ஆசாரிகளை அழைத்துப் போய் அளவுகள் எடுத்தோம்.  முதலில் எளிதாக முடித்துவிடலாம்  என்று சொன்ன ஆசாரிகள் வேலைத்தொடங்கியவுடன்  அதன் கஷ்டத்தை உணர்ந்தனர். ஒவ்வொரு சதுர அங்குலமும் சலவைக்கல்லில் செய்யப்பட்ட பூ வேலைகளுடன் கூடிய அந்த வாயிலுக்கு வெள்ளிக்கவசமிடுவது அத்தனை சுலபமாகயிருக்கவில்லை. இரவு பகல் எப்போதும் அந்தப்பணியைச் செய்ய  அந்த கர்ப்பகஅறையின் இரண்டு வாசல்களை இணைத்து  மறைத்து  வசதி செய்து கொடுத்தனர். பணி முடியும் வரை வரை நான் அவர்களுடன் அந்த கர்ப்பகிரகத்தில் விஸ்வநாதர் அருகிலேயே அமர்ந்திருந்திருந்தேன். விஐபிகளுக்கு கூட  அதிக பட்சம் 20 நிமிடங்கள்  ஒதுக்கப்படும் அந்த சன்னதியில்  இரவு பகலாக. இருக்கும் பாக்கியம் நான் பெற்றேன்.   தெய்வ அருளால் சிவ ராத்திரிக்குள் அந்தப் பணி முடிந்தது. 
இந்தப் பணியில்  மிகுந்த ஈடுபாட்டுடன் நேரடியாக நானே கவனித்துச்செய்து  கொண்டிருந்த கவனித்த கோவில் பண்டாக்களும் அதிகாரிகளும் மற்றவர்களும் மிகவும் நெருக்கமானார்கள். அன்புடன் பழகினார்கள். பணிமுடிந்தபின்னர் ஒரு நாள் பேசிக்கொண்டிருந்த போது உலகப்புகழ் பெற்ற இந்த கோவிலில் சுத்தம் சரியாக பேணப்படவில்லை.அடிப்படை வசதியான குடிநீர் கூட இல்லை. இதற்கு நீங்கள் ஆவன செய்ய வேண்டும் என்றேன்.  நமது மீனாட்சியம்மன், ஶ்ரீரங்கம் கோவில்களை எப்படி பாரமரிக்கிறோம் என்று சொன்னேன். படங்களைக் காட்டினேன்.  ஆச்சரியபட்டுபோனவர்கள் இதை இங்கு உங்களால் செய்ய முடியுமா? என்றார். 
ஒரு கோவில் என்பது தொடர்ந்து நல்ல நிலையில் பராமரிக்கப் பட வேண்டும். ஒரு முறை செய்துவிட்டு ஆண்டுக்கணக்கில் கவனிக்காமல் விட்டுவிடக்கூடாது என்பதற்காகத் தான்  தமிழகத்தில் கோவில்கள் கும்பாபிஷகம் செய்யப்படுகிறது என்றேன். அது என்ன? என்றுகேட்டவர்களுக்கு நமது கும்பாபிஷகம் பற்றி விளக்கிச்சொன்னேன்.  காசிக்கோவிலுக்கும் அதைச்செய்ய ஆர்வம்  காட்டிய அவர்கள் அரசிடமும் அவர்களது நிர்வாகக் குழுவிடமும் ஒப்புதல் பெற இப்படிச் செய்ய வேண்டிய முறைகள் பற்றிய ஆவணங்கள்  இருக்கிறதா? என்று கேட்டார்கள். பிள்ளையார் பட்டி தலைமை சிவாச்சாரியார் சிவ ஶ்ரீ பிச்சை குருக்கள் சிவன் கோவிலில் எத்தனை வகை எந்த மாதிரி கோவில்களுக்கு எந்த முறையில் கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்ற விபரங்கள் கோவில் ஆகம விதிகளில் சொல்லப்பட்டிருப்பதையும் அது பல நூற்றாண்டுகளாகத் தமிழக கோவில்களில் பின்பற்றபட்டுவருவதையும் ஒரு ஆவணமாக்கிக்கொடுத்தார். அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அனுப்பிவைத்தேன்.
சில நாட்களில் காசி விஸ்வநாதஎ கோவில் தமிழக தொழிலதிபர் சங்கர சுப்புவால் தமிழகக்கோவில்கள் முறைப்படி  கும்பாபிஷேகம் செய்யப்படவிருக்கிறது என்ற செய்தி உள்ளூர் தினசரிகளில் வந்திருப்பதாக நண்பர் போன் செய்தார். “மறுநாளே அரசிடமிருந்து  கும்பாபிஷகப் பணிகளைச்  செய்யும் பொறுப்பை  எனக்கு வழங்கி  கடிதம் வந்தது.  எல்லாமே கனவைப்போல இருந்தது எனக்கு” என்கிறார்.  பலமுறை காசி காரைக்குடி சென்னை என்ற தொடர்ந்த முக்கோணப் பயணங்களின் போது இந்தப் பணிக்கு   அவசியமானவற்றை சென்னையிலிருந்து  செய்தவர் இவரது மனைவி  திருமதி அன்னபூரணி. 
ஒரு வட நாட்டுக் கோவிலில் அதுவும் காசி போன்ற பண்டாக்கள் ஆதிக்கம் செலுத்தும் கோவிலில் அவர்களுக்குப் புதிதாக இருக்கும் விஷயங்களை எப்படி இவர் அவர்களை ஏற்க வைத்திருக்கிறார்  என்பதை அறிய ஆச்சரியமாகயிருக்கிறது.  கும்பாபிஷேகத்துக்காகத்  தமிழகத்திலிருந்து 50க்கு மேற்பட்ட சிவாச்சாரியார்களை  அழைத்துப்போயிருந்தாலும் 10 ஹோம குண்டங்களுடன்  யாகசாலை அமைப்பதிலிருந்து  முதல் குடமுழுக்கு தீர்த்தம் விடுவது வரை அனைத்துப் பணிகளிலும் அவர்களை முன்னிலைப்படுத்தியிருக்கிறார்.   கும்பாபிஷேகத்திற்காக யாக சாலையில் பூஜிக்க கங்கையிலிருந்து  கலசங்களில் நீர் கொண்டுவருவதிலிருந்து ஹோமங்களில் முதல் அக்னியிடுவது வரை  காசி கோவில் பண்டாக்கள் தான் துவக்கியிருக்கிறார்கள். பின்  நம்மவர்கள் தொடர்ந்திருக்கிறார்கள். இந்தச்செயல்கள்  அவர்களுக்கு நமது கோவிலுக்குத்தான்  நம் மூலமே இவர்கள் செய்கிறார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. ஒத்துழைத்திருக்கிறார்கள்..
இவர்களைபோலவே அந்தக் கோவிலின் நேர்மையான அதிகாரி ,விஷால் சிங்  மற்றும்  மாநில அளவில் கோவில்களின் தலமைப்பொறுப்பிலிருந்த கமிஷனர் தீபக் அகர்வாலும்  செய்த உதவிகளும் அளித்த ஆதரவும் மறக்க முடியாத ஒன்று என்கிறார் இவர் 
யாக சாலை அமைப்பு,  ஹோம குண்டங்கள், தினசரி  பூஜைகள் எல்லாம்  உள்ளூர் மக்களின் ஆர்வத்தை மேலும்  அதிகமாக்கி    பணிகளை எளிதாக்கியிருக்கிறது.. மாயவரத்திலிருந்து யாக சாலை அமைக்க வந்தவர்கள் கேட்ட பெரிய இடத்தைக் கோவிலுக்குள் ஒதுக்க முடியவில்லை.   கோவில் வாயில் எதிரே பல ஆண்டுகளாகக் கொட்டி கிடந்த மண்ணும் குப்பையும் ஒரே இரவில் எடுக்கப்பட்டு  சுத்தம் செய்யப்பட்ட இடத்தில் யாகசாலை அமைக்கப்பட்டது.  இது  இந்தப்பணியில் உள்ளூர் நிர்வாகத்தின் ஆர்வத்துக்குச் சாட்சி.  மேலும்   அந்த இடத்தில் அழகாக நிமாணிக்க பட்ட யாகசாலை குண்டங்கள் அப்படியே இருக்க வேண்டும் எனப் பக்தர்கள் விரும்பியதால் அந்த இடத்தில் அது இன்னும் தொடர்கிறது. கோவிலுக்கு வரும் பக்கதர்கள் அதையும்  வணங்குகிறார்கள் கலச தீர்த்தம் கங்கையிலிருந்து  தமிழ் நாட்டுமேளதாளங்களுடன்  கொண்டு வரப்பட்டபோது மலர் தூவி மக்கள் வரவேற்றிருக்கிறார்கள்.. 
பிரச்சனைகள் எழாமல் இல்லை.  காசி விஸ்வநாதர் கோவிலின் பாதுகாப்பு  துணை ராணுவத்தினர் வசம் இருக்கிறது. கோவிலின் கோபுரம் முழுவதும் ஒரு டன்  தங்கத்தாலானது என்பதால் மட்டுமில்லை மிக அருகிலேயே மசூதியும் இருப்பதால் செக்யூரிட்டி கெடுபிடிகள் எப்போதுமே அதிகம். கும்பாபிஷகத்துக்காக எல்லா ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருந்த  போது கோபுரகலசத்துக்கு  அருகில் செல்ல படிகள் அமைக்க சாரங்கள் அமைக்க  முயன்ற போது அனுமதி.  மறுக்கப்பட்டிருக்கிறது. மேலே போய் ஏன் தண்ணீர் விடவேண்டும்? கிழேயிருந்து  ஒரு ஹோஸ் பைப்மூலம் பீச்சலாமே என்ற யோசனை வேறு.. சொல்லியிருக்கிறாகள் பாதுகாப்பு அதிகாரிகள். கலங்கிப்போனார் சுப்பு சுந்தரம்.. அதிகாரியிடம் விவாதம்   செய்து காரியம் கெட்டுவிடாமல் அவரிடம் மென்மையாக எடுத்துச் சொல்லியிருக்கிறார். நீண்ட உரையாடலுக்குப்  பின்னர் அனுமதிக்கப்பட்டது.
 ஆனால் விதிக்கப்பட்ட நிபந்தனை  சாரத்தின் எந்தக் கம்பமும் கோபுரத்தின் மீது படக்கூடாது.  அந்த அளவு நேர்த்தியாக சாரம் கட்டுபவரை இந்தக் காசியில் எப்படித் தேடிக்கண்டுபிடிப்பது? என்ற குழம்பிய நிலையில் இருந்தவரிடம் வந்து பேசிய ஒருவர்  “கவலை வேண்டாம்  பாதுகாப்பு அதிகாரிகள் சொல்லுவது போல் நான் செய்துகொடுக்கிறேன்” என்ற சொன்ன போது அது காசி விஸ்வநாதரின் வார்த்தைகளாகத்தான் என் காதில் கேட்டது. என்கிறார் சுப்பு சுந்தரம்.   பின்னால் கோவில் அதிகாரிகள் மூலம் அறிந்த செய்தி அவர் நகரத்தின் மிகப்பெரிய காண்டிராக்டர் தற்செயலாகக் கோவிலுக்கு வந்தவர் பாதுகாப்பு அதிகாரியின் உடையாடலைக் கேட்டு உதவமுன் வந்தவர் என்பது. இரண்டே நாளில் மிக அழகாகக் கோபுரத்தின் எந்தப்பகுதி மீதும் படாமல்,  வசதியாக ஏறிச்செல்ல அகலமான படிகளுடன்  சாரம் அமைக்கபட்டுவிட்டது.
பாதுகாப்பு காரணங்களால் குறிப்பிட்ட சிலருக்கே அனுமதி அளிக்கப்பட்ட அந்த கும்பாபிஷம் முடிந்தவுடன் மக்கள் அன்று இரவு முழுவதும் அனுமதிக்கப்பட்டனர்.  இந்த கும்பாபிஷகத்துக்காக பக்தர்களிடம் நன்கொடை பெறப்படவில்லை. யாகசாலைக்குப் பார்க்கவந்த பத்தர்கள் லட்சகணக்கில்வழங்க முன்வந்த போதும் ஏற்க வில்லை. பெரும் பகுதியை சுப்பு சுந்தரம் ஏற்றிருக்கிறார்.  தமிழக தொழில்நிறுவனங்கள் கேசிபி, முருகப்பா குழுமம் ஈரோடு சிவகுமார் குடும்பத்தினர்   சலவைக்கல் தளமிடுவது,  யாக சாலை அமைப்பு,  சுகாதார வசதிகள் போன்றவகைகளில் உதவியிருக்கிறார்கள்.

காசி விஸ்வநாதர் சன்னதியருகே இருக்கும் அன்னபூரணியின் கோவிலின் நுழை வாயிலிலிருக்கும்  ஒரு கல்வெட்டு  100  ஆண்டுகளுக்கு முன்னர் நகரத்தார் தினசரி அன்னதானம் வழங்க நிறுவிய ஒரு  அறக்கட்டளையின் விபரத்தைசொல்லுகிறது.  அந்த நகரத்தார் பாரம்பரியத்தை இந்த நூற்றாண்டில் தொடரும் வாய்ப்புப் பெற்ற சுப்பு சுந்தரம் தம்பதியினருக்கு நம் வாழ்த்தைச்சொன்னபோது. பணிவுடன்  “இந்தப்பெரிய செயல் எங்களுடையதில்லை ஒவ்வொரு கட்டத்திலும் உதவிசெய்து கருவியான  எங்கள் மூலம் ஈசன் செய்த செயல்தான் இது” என்கிறார்கள்  சுப்பு சுந்தரம், அன்னபூரணி தம்பதியினர்.


2/9/17

100 வருடங்களாகத் தினமும் போட்டோ!





மெல்ல நம்மைத்தொட்டுச்செல்லும் இனிய தென்றலின் இதத்தில் வழியெங்கும் புன்னகைக்கும் பூக்களைப் பார்த்தவண்ணம் நடக்க பாதைகள். பசுமையாகப் பரந்திருக்கும் மலைசிகரங்களை தொட்டு மிதந்து கொண்டிருக்கும் வெண்பனிமேகங்கள். அமைதியாகயிருக்கும் அழகான ஏரி. வெள்ளிக்கம்பிகளாக அவ்வபோது பாய்ந்து கொண்டிருக்கும் மழைச்சாரல் என இயற்கை தந்த “கொடையாக” நாம் அறிந்திருக்கும் கொடைக்கானல் தான், கடந்த நூற்றாண்டில் விண்வெளி இயற்பியலில்(ஆஸ்ட்ரோபிஸிக்ஸிக்கில்) ஒரு மிக முக்கிய கண்டுபிடிப்பு நிகழ்ந்த இடம் என்பதும், அந்த வான் மண்டல கண்காணிப்பு தொலை நோக்கு நிலையம் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாகத் தினசரி சூரியனின் நிலையைப் போட்டோ எடுத்துக்கொண்டிருக்கிறது என்பதும் பலருக்குத் தெரியாத செய்தி
.
நாள்தோறும் ஆதவன் ஒய்வு இல்லாமல் தன் பணியைச்செய்வதைப் போல நிறுவப்பட்ட நாளிலிருந்து சூரியனை தினமும் படமெடுத்துகொண்டிருக்கும் இந்த வான் மண்டல கண்காணிப்பு மையத் (0bservatory).திற்கு வயது 118. உலகில் நிறுவப்பட்டஇடங்களிலேயே நிலைத்து தொடர்ந்து 100 ஆண்டுகளுக்குமேல் தங்கள் பணியைத் தொடர்ந்து கொண்டிருக்கும் 3 மையங்களில் இது முதன்மையானாது. 1899ம்ஆண்டு சூரிய மண்டலத்தை ஆரயாய நிறுவப்பட்ட இந்த நிலயத்திலிருந்தது தினசரி சூரியனை படமெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஆம்! 100ஆண்டுகளாக தினசரி சூரியனை படமெடுத்து பதிவுசெய்துகொண்டிருக்கிறார்கள். உலகெங்குமிருக்கும் பல வான் மண்டல ஆராய்ச்சியாளார்கள் அதைப் பயன் படுத்திக்கொண்டிருக்கிறார்கள்
“ஓரு பேரிடரினால் சில நன்மைகளும் உண்டாகும்” என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப 1890-95 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகக் கொடிய பஞ்சத்தின் பின் விளவுகளில் ஓன்று தான் இந்திய வான் ஆராய்சி மையங்கள். கிழக்கிந்திய கம்பெனி தன் சாம்ராஜ்யத்தின் எல்லைகளை விஸ்தரித்துகொண்டிருந்த அந்தக் கால கட்டத்தில், எற்பட்ட மிக மோசமான பஞ்சத்திற்கு காரணம் தொடர்ந்து மழைபொய்த்ததும், அந்த நிலையை முன்கூட்டிய அறிய வாய்ப்பில்லாது போனதுதான் என்று உணர்ந்த நிர்வாகம் வானிலை ஆராய்சி நிலையங்களைத் துவக்கியது.


ஜான் எலியட் என்ற அதிகாரி கண்டுபிடித்த “தூசி மறைக்காமல் வானம் தெளிவாகத் தெரியக்கூடிய இடமான பழனி மலைத்தொடரின் இந்தப் பகுதி” தேர்ந்தெடுக்கபடுகிறது. பின்னாளில் இது சென்னை நுங்கம்பாக்கத்துக்கு மாற்றப்பட்டபின் இது சூரியனை ஆராயும் நிலையமாக மாற்றபட்டிருக்கிறது.


“இந்தக் கட்டிடத்தில் ஜனவரி 9ம் நாள் 1909 ஜான் எவர்ஷெட் சூரியனிலிருக்கும் கரும்புள்ளிகள் ஒரு குறிப்பிட்ட சுழற்சிமுறையில் உருமாறுவதை கண்டுபிடித்தார்” என்ற பதிவுக்கல் வரவேற்கும் அந்தச் சிறிய கூடத்திலிருக்கும் டெலிஸ்கோப் மூலம் தான் சூரியனின் படம் தினசரி பதிவு செய்யப்படுகிறது.
சூரியனில் உள்ள கரும்புள்ளிகள் 11ஆண்டுகளுக்கு ஒருமுறை உருமாறிக் கொள்வதும் அதன் விளைவாக நிகழும் மாற்றங்கள் தான் பருவ நிலை மாறக்காரணம் என்ற இவரது கண்டுபிடிப்பு “எவர்ஷெட் எபஃக்ட்’ என்ற அழைக்கப்படுகிறது. இன்றும் தொடர்ந்துகொண்டிருக்கும் பல ஆராய்ச்சிகளுக்கு இது தான் அடிப்படை.

வட்டவடிவ கட்டிடத்திற்கு கோளவடிவ ஹெல்மெட் போட்டதைப் போன்ற அமைப்பு. அந்தக் கோள வடிவ மேற்கூரையை நகரும் கதவுகளுடன் கோள வடிவத்தில் (2300ரிவிட்கள்!) அமைக்கவேண்டியிருந்த அந்தப் பணிக்கு உள்ளுரில் திறமையான தொழிலாளிகள் இல்லாதால் தானே தினந்தோறும் உழைத்து அமைக்கிறார் இதன் முதல் அதிகாரியான மைக் ஸ்மித்.


சுழுலும் சக்கர கைப்பிடிகளினால் எளிதாக இயக்கித் திறக்ககூடிய இந்தக் கதவுகள் இன்றும் இயங்குகிறது. சூரியன் நகரும் பாதையை நோக்கி மட்டும் திறக்கப்படும் இதன் கதவுகளின் வழியே டெலிஸ்கோப் சூரியனைபார்க்கிறது. 1901ல் நிறுவப்பட்ட 6” டெலிஸ்கோப் சிறந்த பாரமரிப்பினால் இன்றும் பணி செய்வதை விட ஆச்சரியம் அதன் மூலம் எடுக்கபட்ட அத்தனை படங்களும் பாதுகாக்கப்பட்டிருக்கிறது என்பது தான்
1999ம் ஆண்டு இதன் நூற்றாண்டுவிழா கொண்டாடப்பட்டபொழுது உலகெங்குமிருந்து 50 ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்று தங்கள் படைப்புகளைப் பதிவு செய்திருக்கிறார்கள்.



எப்படி படமெடுக்கிறார்கள்?. சூரியனை கேமிரா வழியாகக் கூட நேரடியாகப் பார்க்கமுடியாது. அதற்காக ஒரு மூன்று அடுக்கு அமைப்பு. மேல் மாடியில் சூரியனைப்பார்க்கும் டெலிஸ்கோப் தான் பார்ப்பதை ஒரு வட்டகண்ணாடியில் பிரதிபலிக்கிறது. அங்கிருந்து அது 45 டிகிரி கோணத்தில் இரண்டாவது மாடியிலிருக்கும் மற்றொரு கண்ணாடியில் தெரிகிறது.  அது மீண்டும் தரையின் கிழே பூமிக்கடியிலிருக்கும் மற்றொரு கண்ணாடியில் பட்டு அதன் முன்னே 60 அடி தொலைவில் இருக்கும் ஒரு வெண்திரையில் பிரதிபலிக்கிறது. அதை அதன் முன் நீண்ட பாதையில் நகரும்படி அமைக்கப்பட்டிருக்கும் கேமிரா படம்பிடித்துக்கொண்டே இருக்கிறது. ஒரு வினாடி கூடத் தவறாமல் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக இப்படி படம் எடுத்துக்கொண்டே இருக்கிறது. கிராப் பேப்பர்களில் கோடுகளாகப் பதிவு செய்து கோண்டிருந்த இது இப்போது டிஜிட்டலாக்கபட்டு கம்யூட்டரில் பதிவு செய்யப்படுகிறது. 150 மில்லியன் கீமிக்கு அப்பால் இருக்கும்(ஒரு மில்லியன் 10 லட்சம்) சூரியனின் முழூ உருவத்தைக் கைக்கெட்டும் தூரத்தில் கண் கூசாமல் பார்க்கிறோம்

.
இப்படி சூரியனைத் தொடர்ந்து கண்காணிக்கும் மையம் உலகிலேயே இது ஒன்று தான் என்று சொல்லி நம்மை ஆச்சரியப்படுத்துகிறார் இந்த மைய இயக்குனர் திரு செல்வேந்திரன். விண்வெளியியலில் சிறப்புப் பட்டங்கள் பெற்றிருக்கும் இவர் இந்தத்துறையில் நீண்ட அனுபவம் கொண்டவர். மிக அழகாக நமக்கு எளிதில் புரியும்படி விளக்குகிறார். பென்சிலில் இடப்பட்ட புள்ளிபோல வெண்திறையில் நமக்குத் தெரியும் இந்தக் கருப்பு புள்ளிகள் தான் பிளாக் ஸ்பாட் எனப்படும் கரும்புள்ளிகள். ஒவ்வொன்றும் பூமியைவிடப் பெரிது என்கிறார்.
வளாகத்திலிருக்கும் கட்டிடங்களில் ஒரு சிறு நூலகமும், அருங்காட்சியகமும் இருக்கிறது மிகுந்த கஷ்டங்களுக்கிடையே காடாக இருந்த இடத்தில் நிலையம் உருவாக்கப்பட்டிருக்கிறது போன்ற பல தகவல்கள், ஓரு சுவையான நாவலைப் போல எழுதப்பட்ட பல குறிப்புகள்அடங்கிய புத்தகங்கள், 1000க்குக் மேற்பட்ட புத்தகங்கள் இருப்பதால் போதிய இடமில்லாதால் மேற்கூரை வரை அடுக்கியிருக்கிறார்கள் தேவயையானபோது பெரிய ஏணிகள் மூலம் எடுப்பார்களாம்

பல அரிய படங்கள் கருவிகளின் மாதிரிகள், படங்கள் கொண்ட அந்த அருங்காட்சியகத்தில் மனமும் நேரமும் இருந்தால் நாள் கணக்கில் செலவழிக்கலாம்.


எல்லோருக்கும் டெலிஸ்கோப் இருக்கும் கட்டிடத்திற்குள் அனுமதி இல்லை என்பதால் அது எப்படி செயல் படுகிறது என்பதை இந்த அருங்காட்சியகத்தில் அதன் சிறிய மாதிரியை அமைத்து ஒரு சிறிய டெலிஸ்கோப் வழியாகச் சூரியனின் பிம்பத்தைக் காட்டி அருமையாக விளக்குகிறார்கள் திரு செல்வேந்தரனின் உதவியாளர்கள்.

சென்னை SIET கல்லூரியில் 50 ஆண்டுகளுக்கு முன் ஒரே வகுப்பில் படித்தவர்கள் தங்கள் நீண்டகால நட்பைக் கொண்டாட கொடைக்கானல் வந்த குழு ஒன்று கேட்ட கேள்விகளினால் நாம் பல விஷயங்களைப் புரிந்து கொள்கிறோம். அவர்கள் கணிதத்துடன் வானியல் படித்தார்களாம். ஆர்வத்துக்கு வயது இல்லை என்பது புரிகிறது

.

வானியல் வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வு நடந்த இடம், 100 வருடங்களுக்கும் மேலாக ஆதவனை அலுக்காமல் பார்த்து உலகின் வானவியல் வித்தகர்களுக்குத் தொடர்ந்து புதிய செய்திகளை வழங்கிக்கொண்டிருக்கும் ஒரே இடத்தை நாம் பார்த்தோம் என்ற பெருமிதத்தோடு வெளியே வருகிறோம்.

 


18/1/17

மேகங்கள் வாழும் சொர்க்கம் 3

அந்தப் பெரிய அறையின் ஒவ்வொரு சதுர அங்குலத்திலும் ராணுவத்தின் மிடுக்கு தெரிகிறது.. கண்ணாடிப்பேழையினுள்ளே கலைப் பொருட்கள், விருது கேடயங்கள் கோப்பைகள் எல்லாம் மின்னுகிறது. பக்கச்சுவர்களில் X குறிகளாக நிற்கும் ஈட்டிகள். அழகான ஆயில் பெயிண்ட்டிங்கள். அந்த ரெஜிமென்ட்டின் உயர் அதிகாரி எனது சகோதரர் (கஸின் பிரதர்) எங்களுக்கு ஒரு இரவு விருந்து அளிக்க அவருடைய மெஸ்ஸுக்கு அழைத்துப் போனார். மெஸ் என்றால் மைலாப்பூர் மாமி மெஸ் மாதிரி சாப்பாடு மட்டும் இல்லை. ராணுவத்தில் அதிகாரிகளின் மெஸ் என்பது பணக்கார கிளப் மாதிரி, பார், ,சாப்பாடு, சினிமாஹால், பில்லியர்ஸ் மேஜை லைப்பரரி எல்லாம் இருக்கும். மிக நேர்த்தியாக பாரமரிக்கபடும் இடம். நுழைவாயிலில் அந்த ரெஜிமென்ட்டின் சின்னமான காண்டாமிருகம் வரவேற்கிறது. இங்கு காண்டாமிருகத்துக்கு நிறைய மரியாதை. அதிகாரிகள் தொப்பி, அவர்களின் ஜீப், கார் வரை எல்லாவற்றிலும் காபி கப்பில் கூட இருக்கிறார். சார் என்று அழைக்காததான குறை.
உடன் உணவருந்த அன்று இரண்டு இளம் அதிகாரிகளும் அழைக்கப்பட்டிருந்தனர். சாப்பிடும் போது அந்த அதிகாரிகள் அளவாகச் சாப்பிட்டது போலவே அளவாகவே பேசினார்கள். நாம் அல்லது அதிகாரி பேசும் போதும் “ஸ்ஸார்” என்கிறார்கள். “எஸ்” என்பதின் ஆர்மி பாஷை அது. டின்னர் முடிந்து சகோதரர் எனக்கு வேலையிருக்கிறது. நீங்கள் பேசிக்கொண்டிருங்கள் என்று கிளம்பியபின் இந்த இளைஞர்கள் சட்டென்று வேறு சானல் மாற்றிய டிவி மாதிரி இயல்பாகப் பேசினார்கள்.. .அதிகாரிகளுடன் இருக்கும்போது அவர்களின் எல்லா அசைவுகளும் கவனிக்கப்பட்டு அவர்களின் பழகும் திறன் மதிப்பிடப்பட்டுக்கொண்டேயிருக்குமாம். . 
அன்று இந்த அதிகாரிகள் என்னைப் பல விஷயங்களில் ஆச்சரியப்படுத்தினார்கள். முதலில் கேப்டன் நேகா. இந்தப்பெண் இரண்டு முறை நேஷனல் ஜூடோ தேசிய சாம்பினானவர். இப்போது மூன்றாம் முறைக்கு தயாரித்துக் கொண்டிருக்கிறார். கம்ப்யூட்டர் சயின்ஸ் பி.ஈ. காம்ப்பெஸ்ஸில் சூப்பர் புத்திசாலிகளை தேர்ந்த்டுக்கும் ஐபிஎம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டு நல்ல சம்பளத்தில் வேலை பார்த்தவர். ஏன் ராணுவம்? குடும்பத்தில் யாராவது ராணுவ அதிகாரியா:? என்று கேட்டபோது நான் ஜூடோவில் பலமெடல்கள் பெற்றவள். மேஜையில் உட்கார்ந்து வேலை செய்வதில் ஒரு திரில்லும் இல்லை. சம்பளம் ஒரு விஷயமில்லை. அட்வெண்ட்சராக இருக்கும் ஒரு வேலையைத் தேடினேன். ராணுவத்தின் அதிகாரியாகத் தேர்வானேன், என்றார்.
அடுத்த ஆண்டு மீண்டும் சாம்பியனானால் அடுத்த பிரமோஷன் கிடைக்குமா? . அதெல்லாம் சோல்ஜர்களுக்கு மடும்தானாம் அதிகாரிகளுக்கு கிடையாதாம். ஒரு சாதனைச் செய்த சந்தோஷம் தான் என்று சொன்ன அவர் குடும்பத்தைப் பற்றிச் சொன்னபோது அசந்து போனேன். தந்தை கர்நடாகவில் ஒரு பெரிய கட்சியின் மாநிலத் தலைவர். தாய் முன்னாள் அமைச்சர். அரசியல் வாதிகளின் பிள்ளைகளை தனியார் மருத்துவக் கல்லூரியில் படித்த டாக்டர்களாகவோ, பெரிய நிறுவன அதிகாரிகளாகவோ இல்லாவிட்டால் வளரும் அரசியல் வாரிசாகவோ பார்த்திருந்த எனக்கு இந்தத் தகவல் “அரசியல் வாதிகளிலும் சில மாறுபட்டவர்கள் இருக்கிறார்கள். தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் சுதந்திரத்தை அவர்களுக்கு அளிக்கும் நல்ல பெற்றோர்களும் இருக்கிறார்கள்- என்பதைச் சொன்னது. 
அடுத்தவர் லெப்டினட் சதிஷ். வசதியான விவசாயக் குடுமப்பபின்னணி. ராணுவப்பணி என் பள்ளிக்கால கனவு. என்றார். சைனிக்பள்யில் படித்து டேராடூனில் பயிற்சிபெற்றவர். பி.ஈ சிவில் முதல் வகுப்பு பட்டதாரி. மாநில அளவிலான கிரிகெட் வீரர். ரஞ்சித் கோப்பைக்காக ஆடியிருக்கிறார். ரயில்வேயில் விளையாட்டுவிரர்களுக்கான கோட்டாவில் வேலைகிடைத்தும் மறுத்துவிட்டு காக்கிக்குள் புகுந்திருக்கிறார். ஆங்கில இலக்கியமும் இசையும் பிடிக்குமாம். ஒரு பாட்டுப்பாடுங்களேன் என்று கேட்டேன். விதிகளின் படி மெஸ்ஸில் பாடக்கூடாதாம். (இன்னும் என்னென்வெல்லாம் விதிகளோ ? ) இவர்களின் போட்டோக்களை சுவடுகளில் போட விதிகள் என்ன சொல்லுகிறது? என தெரியாதால் காண்டாமிருகம், மற்றும் மெஸ்ஸின் டைனிங் ஹால் படங்கள் மட்டும் இணைப்பில் 
நுழைவாயிலின் மேலே Rogues Gallery” என்ற போர்டுக்கு கீழே வரிசையாக பதக்கங்களுடன் அதிகாரிகளின் படங்கள். சரியாகத்தான் படிக்கிறேனா? என்று பார்த்தேன் Rogues தான். கேட்டபோது அது சும்மா ஃபன் சார், உங்கள் பேங்க்கில் திறமையான ஜிஎம்களை கில்லாடிகள் என்று சொல்வதைப் போல என்றார்கள். இது பல விஷயங்களுக்கு தனிப்பார்வை கொண்ட தனி உலகம் போலிருக்கிறது.

இந்த இளைஞர்களைப் பார்க்கும் போது இந்திய ராணுவம் புத்திசாலி,இளைஞர்களையும் ஈர்த்துக்கொண்டிருக்கிறது, மெல்ல அவர்களின் கைகளுக்குப் போய்க் கொண்டிருக்கிறது என்று தோன்றிற்று. இருந்தாலும் நம் அரசும் சமூகமும் இவர்களுக்கும், ராணுவத்தினருக்கும் உரிய கெளரவத்தை முழு அளவில் அளிக்கிறதா? என்ற கேள்வியும் மனதில் எழுந்தது.

12/8/16

நெருப்பில் பிறந்த அழகி


கல்கி பவளவிழா மலரில் வெளியாகியிருக்கும் எனது பயணக் கட்டுரை





 
எங்கும் எரிந்த பிழம்புகளின் தழும்புகள். புகையின் கறைகளோடு நிற்கும் இடிந்த சுவர்கள். சாம்பல் குவியல்கள். நதிக்கரையிலிருந்த அந்த வணிக நகரம் முழுவதுமே எரிந்து நாசமாகியிருக்கிறது. தப்பித்து ஓடியவர்கள் மெல்லத் திரும்பித் தங்கள் உடமைகளை தேடிக்கொண்டிருக்கின்றனர். நகரின் நிர்வாகக் குழு நகரை மீண்டும் எழுப்பும் திட்டங்களை விவாதிக்க பாதிஎரிந்த நகர சபை கட்டிடத்தில் கூடியிருக்கிறார்கள்.
எதையும் சிறிய அளவில் திட்டமிடாதீர்கள்....அவற்றில் மனித மனங்களின் ஆற்றலைத் தூண்டும் எந்த மந்திர சக்தியும் இல்லை. மிகப் பிரம்மாண்டமான பெரிய திட்டங்கள் - உயர்ந்த இலக்குகள், - கடின உழைப்பு எனத் திட்டமிடுங்கள். அப்போதுதான் நமது நகரை உலகின் சிறந்த நகரங்களில் ஒன்றாக உருவாக்க முடியும்” 
இந்த அழிவில் கற்ற பாடங்களினால் ஒரு அழகான வலிமையான நகரை உருவாக்கத் திட்டமிடுவோம், புகழ்பெற்ற இந்த “make no little plans” வார்த்தைகளைச் “சொன்னவர். டேனியல் ஹட்ஸ்ன் பர்ன்பாம் என்ற நகர நிர்மாண கலைஞர். 1871ல் எரிந்து அழிந்துமீண்டு பினிக்ஸாக எழுந்த நகரம் தான் அமெரிக்காவில் உள்ள சிக்காகோ. இன்று அமெரிக்காவின் இரண்டாவது பெரிய நகரம்.

நிமிர்ந்து பார்த்துப் பார்த்தே கழுத்து வலிக்கும் அளவிற்கு வானளாவ உயர்ந்து நிற்கும் பலமாடி கண்ணாடி கட்டிடங்கள் -பளீரென பல மைல்களுக்குக் கடற்கரைபோல் விரிந்து நிற்கும் வெண்மணற்பரப்பானஏரிக்கரை- பசுஞ்சோலைகளாகப் பரவிக்கிடக்கும் பெரிய பூங்காக்கள் -நகரின் நடுவே நேர்த்தியான பராமரிப்புடன் அழகாக ஓடும் சிக்ககோ நதி- அதன் மீது பல இடங்களில் கம்பீரமாக நிற்கும் பாலங்கள்- இவற்றையெல்லாம் இன்றைய சிக்காகோ நகரில் பார்க்கும்போது 100 ஆண்டுகளுக்கு முன் திட்டமிட்ட டேனியல் ஹட்சனின் தொலைநோக்கு பார்வையும், தொடர்ந்து வந்தவர்களின் அற்புதமான நிர்மாண ஆற்றலும் நம்மைப் பிரமிப்பில் ஆழ்த்துகிறது.
கடந்த ஆண்டு வந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 40 கோடியையும் தாண்டிவிட்டது. இதில் அமெரிக்க உள் நாட்டுப் பயணிகளும் அடக்கம். நகரின் பாரம்பரியமும், பிரம்மாண்டமும் மட்டும் சுற்றாலா பயணிகளைக் கவர காரணமில்லை. சுற்றுலாத்துறையின் சிறப்பான சேவையும், நகரை நேசிக்கும் உள்ளுர் வாசிகளும் ஒரு முக்கிய காரணம். நிரந்தர உழியர்கள் தவிர நூற்றுக்கணக்கில் தன்னார்வ தொண்டர்கள் உதவுகிறார்கள்.

விடுமுறைக்காலங்களில் நகருக்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு முக்கிய இடங்களைப்பார்க்கப் பஸ் இலவசம். மூன்று வெவ்வேறு பாதைகளில் தொடர்ந்து சுற்றி சுற்றி ஓடிக்கொண்டே இருக்கும் இவற்றை டிராலி (படம்) என அழைக்கிறார்கள். செல்லும் பாதையை எளிதில் அடையாளம் கண்டுகொள்ள வெவ்வேறு வண்ணங்கள். அவை நிற்கும் இடங்களிலும் அதே வண்ணத்தில் போர்டுகள். பஸ்ஸில் டிரைவர், கண்டெக்டர், கைட் எல்லாம் ஒருவரே. கழுத்தில் தொங்கும் மைக்கில் பேசியபடியே ஒட்டுகிறார்.  தன் பணியை நேசிக்க தெரிந்தவர்களைத் தேர்ந்தெடுத்திற்கிறார்கள்! கதை சொல்லுகிறார். குழந்தைகளுடன் பாடுகிறார்.

நகரின் பெரும்பாலான சாலைகள், சோப்பு போட்டுக் கழுவிய வீட்டுத்தரையைப் போலப் படு சுத்தமாக இருக்கிறது. சாலைகள் மட்டுமில்லை, சுரங்கப்பாதைகள் பஸ் ஸ்டாப்களின் கண்ணாடிச் சுவர்கள் கூடப் பளீரென இருக்கிறது. சாலைகளின் நடுவில் பகுப்பு சுவர்களாக, தெரு விளக்குகளில் தொங்கும் கூடையாக, அரசு கட்டிடஜன்னல்களின் வெளி அலங்காரமாக எங்குப் பார்த்தாலும் நம்பைப்பார்த்துச் சிரிக்கும் வண்ண வண்ண மலர்கள். நகரில் போஸ்டர், பேனர்களுக்கு எங்கும் அனுமதியில்லை. பொது நிகழ்ச்சிகளின் விளம்பரங்களை நகர நிர்வாகமே அதற்காக நிறுவி யிருக்கும் அழகான கண்ணாடிப்பலகைகளில் மட்டும் செய்கிறது.விளம்பரங்கள் கலையுணர்ச்சியுடன்உருவாக்கபட்டிருக்கின்றன(6). செய்திதாட்கள் கடையில் விற்கப்படுவதில்லை காசு போட்டால் திறக்கக்கூடிய கண்ணாடி அலமாரிக்குள் அடுக்கபட்டிருப்பவைகளிலிருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். அருகிலேயே ரூபாய் நோட்டுக்கு சில்லறை தரும் இயந்திரம். பூட்டப்படாத அலமாரிகளில் இலவச இதழ்கள்.

நகரின் நடுவே சிக்காகோ நதி அமைதியாக அழகழான பெரிய சிறிய படகுகளுடன் ஓடிக்கொண்டிருக்கிறது..நதிக்கரையிலிருந்து சில நூறு அடிகளில் பலமான அஸ்திவாரங்களில் நெருக்கமாக எழும்பியிருக்கும் பல அடுக்கு மாடிகட்டிடங்கள். இந்த நதியின் கரையில் தரைதளத்திற்கும் கீழே பாதாளத்தில் நான்கு அடுக்குடனும் மேலே 14 மாடிகளுடனும் நகரின், முக்கிய ரயில் நிலையமான யூனியன் ஸ்டேஷன்(9) பரபரப்புடன் இயங்கிக்கொண்டிருப்பதைப் பார்க்கும் போது நதியின் பக்க சுவர்களை எவ்வளவு கவனமாகத் திட்டமிட்டு உருவாக்கியிருக்க வேண்டும்? என்ற வியப்பு தோன்றுகிறது. நதியின் நடுவே நகரவீதிகளையிணைக்கும் 52 பாலங்கள். அவைகளி¢ல் 38 நமது பாம்பன் பாலத்தைப் போலப் பெரிய படகுகள் வரும்போது திறந்து வழிவிடக்கூடியது. அவை மூடிச் சாலையாக யிருக்கும் இரும்பு பாலத்தில் பஸ்கள் போகும்போது அருகில் நாம் போகும் நடைபாதை கூட அதிர்கிறது. ஆனால் உள்ளுர் வாசிகள் இந்தப் பாலங்களில் மட்டுமில்லை, நகரின் பாதி சாலைகள் ஒருவழிப்பாதையாக இருப்பதால், எல்லாயிடங்களிலும் மிக வேகமாகத்தான் கார் ஓட்டுகிறார்கள்.

முழுவதும் மரக்கட்டங்களினால் உருவாக்கப்பட்டிருந்த நகரம் எரிந்துபோனதால் புதிய சிக்காகோ நகரம் ஸ்டில் சிமிண்ட் பயன் படுத்தி நிர்மாணிக்கப்பட்டது. உலகின் முதல் அடுக்குமாடி கட்டிடம் 1885ல் (10மாடிகள் !) எழுந்தது இங்குதான். தொடர்ந்த சில ஆண்டுகளில் பல பிரம்மாண்ட கட்டடங்கள் எழுந்தன. இதனால் நவீன கட்டிடகலையின் பிறப்பிடமாக சிக்ககோ கருதப்படுகிறது. நகரம் இன்று நூற்றுக்கணக்கான ---- அடுக்குமாடிக்கட்டிடங்களால் நிரம்பி வழிந்தாலும், இந்தக் கான்கீரிட் காட்டின் நடுவே ஆங்காங்கே அழகான ஆரஞ்சு வண்ண மலர்களாக பாதுகாக்கப்பட்ட பாரம்பரியம் மிக்க பழைய கட்டிடங்கள்.அவற்றின் முன்னே சரித்திரம் சொல்லும் சிலைகள். அப்படியொரு கட்டிடம் தான் ஆர்ட் இன்ஸ்ட்டியூட் ஆப்
சிக்காகோ.பெரிய இரண்டு சிங்கங்கள் கம்பீரமாக நிற்கும் இந்த ஓவிய கூடத்தைப் பார்க்க வேண்டும் என்பது உலகில் உள்ள ஒவ்வொரு ஓவியனின் கனவாகியிருக்கும்.. 1879ல் துவங்கிய இதில் உலகின் பல அரிய ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.  இந்த கண்காட்சியில் எரியும் சிகாகோவின் படத்தைப் பார்த்தபின் அந்த விபத்தின் விபரீதம் புரிந்தது.
இது தான்  இளம்துறவி விவேகானந்தர் சொற்பொழிவாற்றிய இடம் என்பதால் அதைப் பற்றி விசாரித்தேன். அதிகம் பேர் அறிந்திராத இந்த விஷயத்தைக் கேட்டதும் அந்த காலரியில் பகுதி நேரத் தொண்டராக பணியாற்றி வரும் ஒரு 82 வயது மாது-முன்னாள் பள்ளி ஆசிரியை திருமதி AlienEva இன்ஸ்ட்ட்யூட் அலுவகத்தில் தேடி1893ல் அந்தக் கட்டிடத்தின் வரைபடத்துடன் அன்று விவேகானந்தர் பேசிய இடம் இன்று புதிப்பிக்கபட்டு ஃல்லர்டன் அரங்கமாக வடிவெடுத்திருப்பதையும், அவர் பேசிய இடம் தான் இன்றைய பேச்சாளர்கள் நிற்கும் மேடை என்பதையும் சொல்லும் குறிப்பையும் தந்தார். அந்த அரங்கத்தின் பக்க சுவரில் இதைச்சொல்லும் பட்டயம் பதிக்கப்பட்டிருக்கிறது.
தேடிப்போன அந்த அரங்கம் பூட்டப்பட்டிருந்ததால் மீண்டும் தொடர்புகொண்டவுடன் திறந்து காட்ட ஏற்பாடு செய்தார். 120 ஆண்டுகளுக்கு முன் விவேகானந்தர் பேசிய இடத்தில் இன்று நிற்கிறோம் என்ற எண்ணம் எழுந்த அந்தக்கணம் உடலில் சிலிர்ப்பை எழுப்பியது நிஜம்.
அருகிலிருக்கும் தெருவிற்கு அவர் பெயர் சூட்டியிருக்கிறார்கள் 


கான்கீர்ட் கட்டிடங்கள் மட்டுமில்லை. பல விஷயங்களில் “முதல்” என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது இந்த நகரம். உலகின் முதல் தொழிளார் போராட்டம், உலகத்தொழிலாளிகளே ஒன்று படுங்கள் என்ற கோஷம் பிறந்ததும் இங்குதான். இன்று உலகின் பல நகரங்களில் ஒட்டும் மெட்ரோ பிறந்ததும் இங்கேதான்.

வாகனங்கள் செல்லும் குறுகிய சாலைகளில் இரும்புத்தூண்களை எழுப்பி அதன்மீது ஒடிய ரயில் இன்றும் ஓடுகிறது. லூப் என அழைக்கப்படும் அது. பயணம் செய்யும்போது. உயரமான பல மாடிக் கட்டிடங்களின் ஜன்னல்களின்  தொட்டுவிடும் தூரத்தில் இருப்பது ஒரு வினோதமான அனுபவம்
.

சிக்காகோவின் கட்டிடகலையின் அழகைக் காட்டுவதற்காகவே ஓர் படகுப் பயணத்தை நடத்துகிறார்கள் “சிக்ககோ ஆர்கிடெக்டெக்ரல் பவுண்டேஷன்” சங்கத்தினர். “சிக்காகோ'ஸ் பர்ஸ்ட் லேடி” என அழைக்கப்படும் அந்தச் சொகுசு கப்பலின் கூரையில்லாத மேல் தளத்தில் எல்லாப் பக்கங்களிலும் திரும்பும் வசதிகொண்ட நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறோம். படகின் மோட்டார் ஓசை அடங்கி நிதானமாகப் பயணிக்கிறது. மெல்லிய இசையுடன் வர்ணனை.

உங்களது வலது புறம் தெரிவது 1925ல் “நாட்ர்டாம் சர்ச் பாணியில் நிறுவப்பட்ட டிரிபியூன் டவர்ஸ். சிக்ககோ டிரிபியூன் செய்தித்தாளின் அலுவலகம். உலகின் அழகான கட்டிடத்திற்கான வடிவத்திற்கு போட்டிநடத்தி தேர்ந்தெடுத்த வடிவம். இந்தக் கட்டிடத்தின் உட்புற சுவரில் தாஜ்மஹல், (!) சீன நெடுஞ்சுவர் போன்ற உலகின் பல பிரபலமான கட்டிடங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட கற்கள் பதிக்பட்டிருக்கின்றன -இடது புறம் நீங்கள் பார்ப்பது அவர்களின் புதிய 64 மாடி கட்டிடம். .” இப்படி 45 நிமிட பயணத்தை நேரம் போவது தெரியாமல் சுவாரஸ்யமாக்குகிறார்கள்.
புகழ் பெற்ற உலகின் உயர்ந்த 110 மாடிக்கட்டிடமான ஸீயர்ஸ் கட்டிடத்தின் அருகில் நெருங்கியதும் படகிலிருந்து இறங்கி கட்டிடத்தின் உள்ளே சென்று மேலேயிருந்து பார்த்துவிட்டு பயணத்தைத் தொடர அழைக்கிறார்கள்

கட்டிடத்தின் மேல் மாடியிலிருக்கும் தொலைநோக்கியில் 4 அண்டைமாநிலங்கள் தெளிவாகதெரிகிறது. பார்ப்பது கடல் இல்லை பெரிய ஏரி என்பதையும். 5 ஏரிகள் சுழந்திருக்கும் காட்சியை அந்த உயரத்தில் ஏரிகளின் நீரின் வண்ண வேறுபாடுகளுடன் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது.

ஸியர்ஸ் போலவே மற்றொரு மிக உயரமான கட்டிடம் ஜான் ஹான்காக் டவர்.(15) ஜான் ஹான்காக் அமெரிக்க சுதந்திர பிரகடனத்தில் கையெழுத்திட்டவர்களில் ஒருவர். அமெரிக்காவின் முதல் இன்ஷுரன்ஸ் கம்பெனியைத் தனது பெயராலே நிறுவியவர். 46000டன் ஸ்டீலில் எழும்பியிருக்கும் இந்த 1500 அடி உயர,100மாடி கட்டிடத்தில்தான் உலகின் அதி வேகமான லிப்ட்..2 நிமிடத்தில் 94வது மாடி வந்துவிட்டது.அங்கேயிருந்து பார்க்கும்பொழுது மிச்சிகன்ஏரியின் படகுகள் எறும்புகளாகத் தெரிகிறது. இதன் 44வது மாடிக்குமேல் குடியிருப்புகள். வசிப்பவர்களின், ஜன்னலுக்கு கீழே மேகம் மிதந்து செல்வதால், வெளியில் கிளம்பும்போது கீழே செயூரிட்டிக்கு போன் செய்து தெருவில் மழையா வெயிலா என்பதைத் தெரிந்துகொள்கிறார்கள். 
படகில் போகும்போது சுட்டு நிறுத்திவைத்த சோளக்கதிர் கொண்டைகளின் முத்துக்கள் போல வட்ட வட்ட பால்கனிகளுடன் இரண்டு கட்டிடங்கள். முதல் 10 தளத்தில் கார்கள் நிறுத்தப்பட்டிருந்த விசாரித்தில் கட்டிடத்தின் பெயர் மெரீனா. 40 ஆண்டுகள் ஆகிவிட்டதால் விரைவில் இடித்துவிட்டு வேறு கட்டுவார்களாம்.
பழைய பல மாடிக்கட்டிடங்களைத்தான் இடிக்கத் திட்டமிடுகிறார்களே தவிர நகரின் பாரம்பரியத்தை பறைசாற்றும் கட்டிடங்களை
இளம்ஆரஞ்சுவண்ணமிட்டு அருமையாகப் பராமரிக்கிறார்கள். அவற்றில் ஒன்று சிக்காகோ மத்திய நூலகம். அலங்கார வளைவுகளில் தொங்கும் அழகிய லாந்தர் விளக்குகள் தங்க (ஜொலிக்கிறது) வண்ண கதவுகள் (19,20) என முன் புறமும், பளபளக்கும் கண்ணாடி சுவர்களுடன் பல மாடிகட்டிடமாக பின் பகுதியுமாக நிற்கும், இங்கே உலகின் பல மொழிகளில் புத்தகங்களிருக்கிறது. தமிழில் திருக்குறளும் பைபிளும்.. அரசின் முலமாகவோ அல்லது தூதரகத்தின் முலமாகவோ அனுப்பினால் தான் புதிய புத்தகங்களைப்பெற்றுக் கொள்வார்களாம்.நூலகத்தின் உச்சி மாடத்தின் முனையில் ஆந்தை சிற்பம். ஆந்தை அறிவு ஜிவிகளின் அடையாளமாம்.!

.
நகரின் நடுவே தியட்டர் டிஸ்டிரிக்ட் என்ற பகுதியில் நிறைய அரங்கங்கள். இந்தப் பகுதியில் உருவான முதல் தியட்டர். “தி சிக்காகோ தியட்டர் “. பாலிஷ் பளபளக்கும் மரக் கைப்பிடிகளுடன் வளைந்து செல்லும், கார்பெட் பதித்த அகலமான மாடிப் படிகள். சுவரெங்கும் கலைநயம் மிளிரும் ஓவியங்கள் நடுவில் தொங்கும் பெரிய சர விளக்கு.தங்கமாக மின்னும் கைப்பிடிகளுடன் வெல்வெட் நாற்காலிகள், பொன் வண்ணத்தில் ஓவியங்கள் (தேரில் சூரிய பகவான் ! ) சரவிளக்குகள் அலங்கரிக்கும் ஆடம்பரமான மேடையென ஒரு கிரேக்க அரண்மனைப் போல இருக்கும் இது ஒரு சினிமா, நாடகம்,இசை நிகழ்ச்சிகள் நடைபெறும் அரங்கம். 1921ல் துவங்கிய இது காலத்தின் தேவைக்கேற்ப செய்யப்பட்ட மாற்றங்களுடன் தொடர்ந்து இயங்கிவருகிறது. . 3600 பேர் அமரக்கூடிய இந்த அரங்கத்தின் கடைசிக்காலரி 6 வது மாடியில்.

.1985ல் நஷ்டமதிகரித்ததனால் தியட்டர் மூடப்பட்டு விற்கபட்டுவிட்டது. மற்றொரு அடுக்குமாடி கட்டிடம் எழ வசதியாக இடிக்கப்படத் தயாரானது. வெகுண்டு எழுந்த கலை ஆர்வலர்கள் நீதி மன்றத்தில் போராடி காப்பாற்றியிருக்கிறார்கள். பராம்பரிய கட்டிடங்களைப் பாதுகாக்க சட்ட பிறக்க இந்த நிகழ்ச்சியும் ஒரு காரணமாகிறது. புதிபிக்கபட்டிருக்கும் இன்றைக்கு மிக அதி தொழில் நுட்ப வசதியுடன் இயங்குகிறது.


.சர்ச்சைகளை, சரித்திரங்களை உருவாக்கும் சிக்ககோ நகரின் சிற்பங்களில் இன்று, உலகம் முழுவதும் சிற்பகலைஞர்களால் பேசப்படுவது மில்லியனம் பார்க்கில் பிரமாண்டமாக நிற்கும் “க்ளவுட் கேட்” (cloud gate) என்ற படைப்புதான். 2004 ஆண்டு நகரின் நூற்றாண்டு விழாவின் நினைவாக ஒரு பெரிய சதுக்கத்தை உருவாக்கியிருக்கிறார்கள். கிரேக்க பாணி நுழை வாயிலுடன் ஒரு பூங்கா, பரந்த புல்வெளி அதன்பின்னே ஒரு ரோஜாத் தோட்டம் என விரியும் இந்த வாளாகத்தின் ஒரு பகுதியில் பிரம்மாண்டமாக நிற்கிறது இந்தப் படைப்பு.

முழுவதும் பளபளக்கும் ஸ்டியன்லெஸ்ஸ்டிலால் ஆன இந்த படைப்புக்கு சிற்பி தந்த பெயர் “மேகங்களின் நூழை வாயில்”. ஆனால் ஒரு இது ஒரு பீன்ஸ் விதையைப்போலிருப்பதால் மக்கள் செல்லமாக பீன்ஸ் என்றே அழைக்கிறார்கள். 39 அடி உயரமும் 110 டன் எடையும் கொண்ட இதை வடிவமைத்தவர் அனிஷ் கபூர் என்ற இந்தியஓவிய சிற்ப கலைஞர்.. லண்டனில் வாழும் இந்த ஒவியரின் படைப்புகள் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் பிரபலமானவை. இந்து மதகோட்பாடுகளை தனது ஒவியங்களின் மூலமாக திணிக்க முயல்பவர் என்ற சர்சையிலும் சிக்கியவர் என்பதால் இந்தபடைப்பும் விமர்சனங்களுக்குத் தப்பவில்லை. நகரும் மேகங்களின் பின்னணியில் அருகில் உள்ள வானாளாவிய கட்டிடங்கள் தங்களை அழகு பார்த்துக்கொண்டிருக்கும் இந்த பளபளக்கும் ராட்சதபடைப்புக்கு முன் நாம் நிற்கும்போது இந்த பெரிய உலகத்தின் முன் நாம் எத்தனை சிறியவர்கள் என்ற எண்ணம் எழுகிறது.
மிகப் பிரம்மாண்டமான இதன் வழியே எளிதில் 50பேர் நுழைந்து வெளிவரலாம். அப்படி நுழையும்போது நமது உருவத்தையே தலைகிழாக தொங்குவதைப் போல் பார்ப்பது ஒரு வினோதமான அனுபவம்
.
அதே வாளாகத்தில் ஒரு 60 அடி உயர சுவற்றில், சுவர்முழுவதும் நிறைந்த ஒரு முகம் 5 நிடத்திற்கு ஒரு முறை மாறிக் கொண்டேயிருக்கிறது.ஓவ்வொரு முறையும் அந்த உருவத்தின் வாயிலிருந்து நீர் கொட்டுகிறது.ஏதோ விளம்பரம் என்று நினைக்கத் தோன்றும் இதுவும் டிஜிட்டல் சிற்பகலையின் ஒரு வகையாக கருதப்படும் டிஜிட்டல் நீருற்று சிற்பம். பல மில்லியன் டாலர் செலவில் உருவாக்கபட்டிருக்கிறது. படங்கள் மாறிக்கொண்டேயிருக்கிறது. கண்களைச்சிமிட்டிய சில வினாடிகளில் வாயிலிருந்து நீர் கொட்டுகிறது. தோன்றும் முகங்கள் அனைத்தும் சிக்காகோ வாசிகள். அவர்கள் அறியாமல் எடுக்கப்பட்ட படங்கள்.இன்று தங்கள் முகம் வருமோ என்ற எதிர்பார்ப்புடன் உள்ளூர் வாசிகளும், நீரில் நனைந்து விளையாடக் குழந்தைகளும், ஒரு பெரிய படம் பலதுளி டிஜிட்டல் பட சதுரங்களாக படைக்கப்பட்டு இணைக்கபட்டிருக்கும். இதில் அடுத்த படம் மாறும் செய்நேர்த்தியை காண மக்கள் காத்திருக்கின்றனர். சிலைகள் சிற்பங்கள் என்றால் அசையாது நிற்கும் அழகான படைப்புகளையே பார்த்துப் பார்த்து பழகிவிட்ட நமக்கு இவைகளையெல்லாம் சிற்பங்கள் என ஏற்று கொள்ள சற்று கஷ்டமாகத்தானிருக்கிறது.

டேனியல் ஹட்ஸ்ன் கனவு கண்டதைப்போலச் சிக்காகோவில் எல்லாமே பிரம்மாண்டமாகத்தான்உருவாகி உலகின் முக்கிய நகரமாகி, விட்டது.இன்று இன்னமும் பிரம்மாண்டமாகிக்கொண்டே போகிறது. ஓவ்வொரு ஆண்டும் நகரம் உருமாறிக் கொண்டே யிருக்கிறது.

சிக்காகோவைப்பற்றிப் பல ஆண்டுகளுக்கு முன் மார்க் ட்வைன் சொன்னவை இது:

அவள் எப்போதுமே அழகாக, புதுமையாகயிருப்பவள்.

நீங்கள் கடந்த முறை பார்த்ததைப் போல
அடுத்தமுறை இருக்கமாட்டாள்
இன்னும் அழகாகியிருப்பாள். .

எவ்வளவு உண்மையான வாசகங்கள்?