1/8/19



கருணை

    ஆதித்யா.

 

அந்தக் கம்பீரமான சிவப்புவண்ண சென்னை ஹைகோர்ட்  கட்டிடத்தைப் படங்களிலும், டிவி செய்திகளில் மட்டுமே பார்த்திருந்த சீதா இன்று அதனுள் நுழைவோம் என்று நினைத்துக்கூட பார்த்ததில்லை.  அகன்ற  படிகள் ஏறி  நீதிபதிகளின் பெரிய  படங்கள் மாட்டப்பட்டிருக்கும்  அந்த நீண்ட வராந்தாவைக் கடந்து ஆறாம் எண் அறையின் முன் உடன் வந்த தோழி சரோஜாவுடன் தயங்கி நிற்கும் அவளிடம்  விபரங்கள் கேட்டு அட்மிஷன் பாஸை  பார்த்தபின் பாதுகாவர் அனுமதிக்க, உள்ளே சென்று  உட்கார்கிறார்கள் சீதாவும்  அவள் தோழி சரோஜாவும்.
ஒரு மணி நேர காத்திருப்புக்குப் பின்  பெயர் அழைக்கப்பட்டவுடன்  உள்ளே சென்ற சீதாவிற்கு  . அந்த ஏசியிலும் வேர்த்தது. உயரமான மேஜையில் நீதிபதியையும் சுற்றிலும் சில வக்கில்களும் இருந்த உயர் நீதிமன்ற நீதிபதியின் கோர்ட்டைப் பார்த்ததும் சீதாவிற்குப் படபடப்பு அதிகமாகியிருந்தது, வாய் உலர்ந்திருந்தது. தன்னால் பேச முடியாமல் போய்விடுமோ  என்ற அச்சமும் எழுந்தது.
நீதிபதியைப் பார்த்தவுடன் தன்னிச்சையாகக் கையெடுத்து கும்பிட்டாள்.
உங்கள் மனுவை நீங்களே வாதிடப்போவதாக அனுமதி கேட்டிருக்கிறீர்களே ஏன்?. இதில் உங்களுக்கு எதாவது முன் அனுபவம் உண்டா? அல்லது யாரவது உதவினார்களா?
அனுபவம் எதுவும் இல்லை. சார் ஆனால் நம்பிக்கையிருக்கிறது என்று மெல்லிய குரலில்.  சொன்ன சீதா தொடர்ந்து  வக்கீல் வைத்துப் பேச எனக்கு பண வசதியும் இல்லை. என்றாள். என் தோழி சரோஜா ஒரு சமுக சேவகி அவர்தான் இந்தமாதிரி நாமே நேராகவே கேட்கலாம் என்று சொன்னார்”.
உங்கள் மனுவை இந்த கோர்ட் ஏன் ஏற்க வேண்டும்? என்பதையும் உங்களுக்கு  எதற்கு அனுமதி வேண்டும் என்பதையும் சுருக்கமாகச் சொல்லுங்கள். அது ஏற்கப்பட்டால் உங்கள் மனு விசாரணைக்கு அனுமதிக்கப்படும்.
 என் மகளைக் கருணைக்கொலை செய்ய என்னை நீங்கள்  அனுமதிக்க வேண்டும்என்ற அவளது  தெளிவான  வார்த்தைகளைத் கேட்ட  நீதிபதி திடுக்கிட்டு தலையை உயர்த்தினார். கண்களில் ஆச்சரியம். அந்த ஹாலில் இருந்த பலரது புருவங்கள் உயர்ந்தன. பலர் சீதா பேசப்போவதைக் கூர்ந்து கவனிக்கக் காத்திருந்தனர்.
பல கொலை குற்றவாளிகளுக்கு மரணதண்டனை உள்படப் பல வித தண்டனைகள் வழங்கிய அந்த நீதிபதியின் முன் ஒரு கொலையைச் செய்ய அனுமதி வேண்டி ஒரு வழக்கு.
விபரமாகச்சொல்லுங்கள்
எனக்கு இரண்டு பெண் குழந்தைகள். மூத்தவளுக்கு வயது  ஒன்பதாகிறது பெயர் மகேஸ்வரி. பிறந்த நாளிலிருந்து பல விதமான உடல் உபாதைகளால் அவதிப்படுகிறாள். அவளது முளைக்கு போதிய அளவில் ஆக்கிஸிஜன் செல்லாதால் அவளால்  எல்லோரையும் போல் நடமாட முடியாது. படுக்கையிலிருக்கும் அவளுக்கு உணவு டியூபின் மூலம் செலுத்த வேண்டும் அடிக்கடி வலிப்பு வந்து பலமாகக் கத்துவாள். வேதனையில் அவள் அலறுவது என் வீட்டிலிருப்பவர்களுக்கு மட்டுமில்லை அருகிலிருப்பவர்களுக்கும் அவஸ்த்தையாகயிருக்கிறது. சிலர் போலீஸில் புகார் கூட  செய்துமிருக்கிறார்கள். இந்தக் கோரத்தை என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை..  இவள் நிலை என் அடுத்த 5 வயது குழந்தையைப் பாதித்துவிடும் என பயப்படுகிறேன்.  மாதம் மருந்துச்செலவுக்கு மட்டுமே 10,000 வரை ஆகிறது.  குணமாகும் வாய்ப்பில்லை என்கிறார்கள். இந்த நிலையில் பெண்குழதை வளர்க்க முடியாது. என் வாழ்நாளுக்குப் பின் அவளை யார் கவனிப்பார்கள்? இப்படிப் பட்ட குழந்தைகளுக்கான ஹோம் எதுவுமில்லை என்கிறார்கள்.  அதனால் அவளுக்குக் கொடுக்கும் உணவு, மருந்து, ஊசி,  சத்துணவு அனைத்தையும் நிறுத்தி அவளை மரணமடைச் செய்ய விரும்புகிறேன் அதற்கு  உங்கள் அனுமதி வேண்டும் என் பெட்டிஷனில்  எல்லா விபரங்களையும்  மருத்துவ ரிப்போர்ட்கள் போட்டோக்கள் எல்லாம்  இணைத்திருக்கிறேன்.
சீதா  அழுகையை கட்டுப்படுத்திக்கொண்டு இதைச்சொல்லி முடித்தவுடன் அந்த ஹாலின் அமைதியின் கனம் கூடியது. கேட்ட அனைவருக்கும் ஐயோ என்ற உர்வு எழுந்தது நிஜம்
 உங்கள் கணவர் வந்திருக்கிறாரா?”
இல்லை சார்.  இந்தக்குழந்தையின் நிலை மோசமாகிக்கொண்டே போவதனால் சிலஆண்டுகளுக்கு முன் பிரிந்துவிட்டார். நான் ஒரு வங்கியில் பணி புரிந்து  கொண்டிருந்தேன். இந்தக் குழந்தைக்காக விருப்ப  ஓய்வு பெற்று அந்த பென்ஷனில் குழந்தைகளை வளர்த்து வருகிறேன்
.இந்தப் பதிலை எதிர்பார்க்கவில்லை என்பதை நீதிபதியின் உடல் மொழி சொல்லிற்று.
உங்கள் மனு விசாரணைக்கு ஏற்கப்படுகிறது. ஆனால் சட்டச் சிக்கல் நிறைந்த இதை ஒரு வழக்கறிஞர் மூலம் அணுகுவதுதான்  உங்களுக்கு நல்லது. உங்களுக்கான வழக்கறிஞரை இந்தக் கோர்ட் நியமிக்கும். அவருக்கு நீங்க பீஸ் எதுவும் தர வேண்டாம். அவரே உங்களை விரைவில் தொடர்பு கொள்வார். என்று சொன்ன நீதிபதி அரசின் கருத்துகளை அறிய  அரசுக்கு நோட்டிஸ் அனுப்ப ஆணையிட்டார், வழக்கை இரண்டு வாரம் ஒத்தி வைத்தார்.
கோர்ட்டின் நடை முறைகளை அதிகம் அறியாத  சீதா நீதிபதியைப் பார்த்து உடனே நீங்கள் அனுமதிக்க முடியாதா? எனக்கேட்டார்.
சீதாவைப் பரிதாமாகப் பார்த்த அவர் அதெல்லாம் முடியாது. நிறைய நடைமுறைகள் இருக்கிறது. எல்லாம் உங்கள் வக்கீல் சொல்லுவார் என்று சொல்லி அடுத்த கேஸை அழைக்கச் சொன்னார்.
பரவாயில்லை. நான் எதிர் பார்த்ததைவிட நீ நல்லா தைரியமாகத்தான் பேசினே என்று சொன்ன தோழியிடம் , “சரி சரி சீக்கிரம் போவோம் 3 மணிக்கு  மகேஸ்வரிக்கு  மருந்து கொடுக்கணும்  என்ற சீதாவை ஆழ்ந்து பார்த்தாள் சரோஜா. பத்து நிமிடம் முன் அவளைக் கொலை செய்ய அனுமதிகேட்டவள் இப்போது சரியான நேரத்துக்கு மருந்து கொடுக்கத் துடிக்கிறாள்
&&&
வழக்கறிஞர் தினகரனை சீதாவிற்காக நியமிக்கிறது உயர்நீதிமன்றம். நகரின் சீனியர் வழக்கறிஞரான  அவருக்கு நீதிபதி பதவி வந்த போது நிராகரித்தவர். பெரிய ஜுனியர் பட்டாளம்  சட்டபிரிவுகளை,அதில் ஏற்பட்டிருக்கும் புதிய மாற்றங்களை விரல் நுனியில் வைத்திருப்பவர். அவர் சீதாவுடன் பேசி  பல விபரங்களைச் சேகரிக்கிறார். சில  டாக்டர்களிடமும் பேசுகிறார்.
வழக்கு விசாரணைக்கு வந்த நாளில்  அண்மையில்  சுப்ரீம் போர்ட் வழங்கிய ஒரு  தீர்ப்பில் இம்மாதிரி விஷயங்களில் அந்த நோயாளி விரும்பினால்  கருணைக்கொலையை (passive euthanasia)  அனுமதிக்கலாம். அல்லது  குழந்தையாகியிருந்தால் அவர்களது பெற்றோர்  மருந்து கொடுப்பதை நிறுத்துவதையும், அல்லது அதுபோல் உயிரை மட்டும் தொடர வழங்கப்பட்டிருக்கும் வசதிகளை நிறுத்தவதும் குற்றமில்லை என்று சொல்லியிருப்பதை சுட்டிக்காட்டி, ஒரு தாயின் மனஉளைச்சலையும்  அந்த நோயாளி ஒரு பெண்குழந்தை என்பதையும். அந்தப்பெண்ணால் அந்தக் குடும்பம் சமுகத்தில் சந்திக்கும்  கஷ்டங்களையும் தனக்கே உரிய பாணியில், சட்டம், சமூகம், மருத்துவம்  போன்ற விஷயங்களை உணர்ச்சி வசப்படாமல் தேர்ந்தெடுத்த வார்த்தைகளால்  தன் வாதத்தை முன்வைத்தார்.  
இப்படிச்செய்ய அனுமதிக்க அந்த நோயாளி ஒரு வெஜிடபள் போன்ற நிலையிலிருக்க வேண்டும் என்கிறது சட்டம். அதாவது மூளைச்சாவு அடைந்திருக்க வேண்டும்.  இந்த  கேஸில் அந்தக் குழந்தைக்கு திரவ உணவு வெளியிலிருந்து  செலுத்தப்பட்டாலும் அதை அவர் உடல்  ஏற்கிறது .ஜீரணமாகிறது. சுவாசம் இயல்பாகியிருக்கிறது. சில வார்த்தைகளேனும் பேசமுடிகிறது. அதனால் அந்தக் குழந்தை முளைச்சாவு அடைந்துவிட்டதாகச் சொல்ல முடியாது. அதனால் மனுதாரரின் வேண்டுகோளை அனுமதிக்கக்கூடாது. அப்படிச் செய்தால்   கோர்ட் ஒரு கொலையைச்செய்வதற்கு அனுமதிப்பதற்கான  முன்னூதாரணமாகிவிடும். என்றார் அரசின் வழக்கறிஞர். ஆதாரமாக பல  தீர்ப்புகளைப் பட்டியிலிடுகிறார்.
கோர்ட்டிலிருந்த சீதாவிற்கு தலை சுற்றியது. என்ன பேசுகிறார் இவர்?. எதோ கோர்ட்டில் கேட்டால் அனுமதி தருவார்கள் என்றார்கள் இப்படியெல்லாம் பேசுவார்களா? என்று எண்ணினாள்.
மதியம் தொடர்ந்த விசாரணையில்  நீதிபதி. இந்த கோர்ட் இந்த விஷயத்தில்  முடிவெடுக்க மேலும் சில விபரங்கள்  தேவைப்படுவதால்  நகரிலுள்ள  சிறந்த மூத்த  குழந்தை நல மருத்துவர்களை இரண்டுபேரையும் ஒரு  மூளைநரம்பியல் நிபுணரையும்   கொண்ட குழுவை நியமிக்கிறது. அந்த குழந்தையை அரசு மருத்தமனையில் சேர்த்து இந்தக் குழு சோதித்துப் பார்த்த பின்னர்  குழந்தையின் உண்மையான உடல் நிலை என்ன என்பதை அறிக்கையாக 4 வாரங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என  கோர்ட் உத்தரவிடுகிறது.  என்றார்.
ஐயோ மறுபடியும் ஆஸ்பத்திரியா?” என  தலையில் அடித்துக்கொண்டாள் சீதா. தானே வரவழைத்துக்கொண்ட  தலைவலி என்று நொந்துகொண்டாள்.  அடுத்த வாரம் கோர்ட்டின் கட்டளையின்படி  அரசு மருத்துவ மனையின் ஆம்புலன்ஸ் வீட்டிற்கு வந்து அழைத்துப் போனது.. புதிய மல்டி ஸ்பெஷாலிட்டி ஸ்பட்லான அது மிக வசதியாகியிருப்பது அவளுக்கு  ஆச்சரியம். ஆனால் கேள்விகள், கேள்விகள் பத்து நாட்கள் டாக்டர்களின் கேள்விகளினால் வெறுத்துப்போனாள் சீதா.
ஒரு வழியாக 12 நாட்கள் கழித்து ஒரு நாள் மாலை  டிஸ்சார்ஜ் செய்தபின் வீட்டிற்கு ஆம்புலனஸில் அனுப்பினார்கள். . ஆம்புலன்ஸ் புறப்படும் போது தூறலாகத்துவங்கிய மழை வீடு சேரும் போது  பெரும் மழையாகக் கொட்ட ஆரம்பித்தது.
இரவு முழுவதும் பெய்த மழை அடுத்த இரண்டு நாளும் தொடர்ந்தது.
ஒரு மாதம் கழித்து ஒரு நாள் வழக்கறிஞர் தினகரனிமிருந்து போன் “ “மேடம் மெடிகல் டீம் ரிபோர்ட்டை கோர்ட்டில் கொடுத்துவிட்டார்கள். நமக்கு சாதகமாகத்தான் இருக்கிறது  என்று நினைக்கிறேன். தீர்ப்பு சொல்லும் நாளைக் குறிப்பிடாமல் ஒத்திவைத்திருக்கிறார்கள். நான் சீக்கிரம் தீர்ப்பு வேண்டும் என்று வேண்டியிருக்கிறேன் அனேகமாக இரண்டு வாரத்தில் வரலாம். நான் சொல்லுகிறேன். முடிந்தால் நீங்கள் அன்று கோர்ட்டுக்கு வரலாம்
எதிர்பாராமல் இந்த விஷயத்தில் வந்து சேர்ந்த அந்த நல்ல மனிதருக்கு மனப்பூர்வமாக தன் நன்றியைச் சொன்னாள் சீதா. . 
பத்து நாட்களுக்கு பின்னர் மீண்டும் மழை. விடாமல் மூன்று நாள் பெய்த பேய் மழை. மின்சாரம் போன், இன்ட்ர்னெட் துமில்லாமல் சென்னை நகரத்தயையே ஸ்தம்பித்த வைத்த மழை. ஏதோ ஓரு ஏரியைத்தவறாக திறந்துவிட்டதனால்  நகரமே வெள்ளக்காடாகியிருந்தது.
அன்று காலை மகேஸ்வரி வலிப்பு அதிகமாகி மிகவும் வேதனையுடன் கத்திக்கொண்டிருந்தாள் ஒரு கட்டத்தில் கட்டிலில் முட்டிக்கொண்டதால் தலையில் காயம்.  சீதா அதைப் பார்ப்பதற்குள் உடல் தூக்கிப்போட்டது. வெளியில் சுழற்றி அடித்த காற்றினால் ஜன்னல் கதவு பாடாலென்று மூடியதில் கட்டிலருகிலிருந்த   சத்துணவு செல்லும் டுயூப் பொருத்தியிருக்கும் ஸ்டாண்ட் சரிந்து விழுந்து அதில் தொங்கிக்கொண்டிருக்கும் பாட்டில் தரையில் மோதி உடைந்து சிதறியது .அதிலிருக்கும் திரவம் சிதறிய கண்ணாடிச் சில்லுகளிடையே  தரையெங்கும் ஓடியது.
ஐய்யோ என்று கதறினாள் சீதா. அது உணவு மட்டுமில்லை..உடல் நிலையைச் சீராக வைக்கவும் உதவும் மருந்தும் கூட. ஜெர்மனியிலிருந்து வரும் அது ஒரேஒரு கடையில்தான் கிடைக்கும். விலை அதிகம். ஒரு பாட்டில் 800  ரூபாய். ஒன்று ஒரு  வாரம் வரும். இப்போது கைவசம் வேறு பாட்டில் இல்லை.
சீதா அழ ஆரம்பித்துவிட்டாள்  இந்த  மருந்து இல்லாவிட்டால்  முளைக்குச் செல்லும் ஆக்ஸிஜன் அளவு இன்னும் குறைந்துவிடும் என்பது அவளுக்குத் தெரியும்.  உடனடியாக அந்த மருந்து பாட்டில் தேவை. பெரும் வெள்ளத்தில்  சிக்கி எல்லோரும் தவித்துக்கொண்டிருந்த  அந்த நேரத்தில் யாருக்கும் சீதாவின் பிரச்னையைக் கேட்க நேரமோ மனமோ இல்லை. போன் இல்லாததால் சரோஜாவைத்தொடர்பு கொள்ள முடியவில்லை. பக்கத்து ஃபிளாட் பாட்டியை  கெஞ்சிக் கேட்டு மகளின் அருகில்  உட்காரவைத்துவிட்டு  சரோஜாவிடம் போய் சொல்லி மருந்துக்கு ஏற்பாடு செய்யத் தீர்மானித்தாள்.
வீட்ற்கு வெளியில் வெள்ளம் ஒட்டிக்கொண்டிருக்கிறது. வாசலிலிருந்த  ஆர்மி போட்டில் ஏற்கனவே பலர். கெஞ்சி அதில் இடம் பிடித்து சற்று மேடான இடத்திற்குப் போனவுடன் நனைந்து கொண்டே  ஒட்டமும் நடையுமாக நடக்க ஆரம்பித்தாள்.நல்ல வேளையாக சரோஜா இருக்கும் பகுதியில் வெள்ளம் இல்லை. விபரங்களைக்கேட்ட  வினாடியில் நீ போய் குழந்தையுடன் இரு. நான் எப்படியாவது மருந்தை வாங்கிக் கொண்டு சேர்க்கிறேன் என்று சொல்லிக்கொண்டே சரோஜா தன் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்தாள். அந்தக்குழந்தைக்கு தேவையான அந்த மருந்தின் அவசியம் அவளுக்குத்தெரியும் பல முறை அதை வாங்கியிருக்கிறாள்.
மழை சற்று குறைந்திருந்தது. வீட்டிற்கு ஒடி வந்த சீதா மகேஸ்வரி தூங்குவதை பார்த்து சற்று நிம்மதி பெருமூச்சுவிட்டு பாட்டிக்கு தாங்கஸ் சொல்லி கட்டில் அருகே அமர்ந்தாள்.
மதியம் இரண்டு மணி வரை சரோஜா வரவில்லை. எங்கே அலைகிறாளோ? என நினைத்துக்கொண்டாள் சீதா. . மழை சுத்தமாக நின்று விட்டது. நாலு நாளைக்குப் பின்  பளிச்சென்று வெயில். ஆனால் காற்று சுழட்டி அடித்துக்கொண்டிருந்தது.
அன்று 3 மணிக்குத் தீர்ப்பு சொல்லப்போகும் விஷயத்தைப் போன்கள் வேலைசெய்யாத  நிலையால் வழக்கறிஞர் தினகரனால்  சீதாவுக்குச் சொல்ல முடியவில்லை.
எங்கெல்லாமோ போராடிக் கடைசியாக ஒரு தனியார் மருத்துவ மனையில் தன் சொந்த செல்வாக்கால் 2 பாட்டில்களை வாங்கிக் கொண்டு சரோஜா சீதாவின் வீட்டுக்கு   வந்து கொண்டிருக்கிறாள்.  கொல்ல அனுமதி கேட்டுப் கோர்ட்டில் போராடும் இவள் இப்படி அந்தக்குழந்தை காப்பாற்றவும் போராடுகிறாளே என்று நினைத்துக்கொண்டே வண்டியின் வேகத்தைக்கூட்டினாள்.
 இது இந்த கோர்ட் சந்திக்கும் மிக முக்கிய வழக்கு. இதுவரை  மரணம் அடையமுடியாமல் தவித்து கொண்டிருக்கும் உடல்நிலையைக் காரணம் காட்டி உறவினர்கள் கருணைக்கொலைக்கு அனுமதிகோரி 15  வழக்குகள் தொடரப்பட்டிருக்கின்றன. எதற்கும் இதுவரை அனுமதி தரப்படவில்லை. சமீபத்தில் உச்சநீதி மன்றம்  அளித்த தீர்ப்புக்கு பின் வந்திருக்கும் முதல் வழக்கு இது என்று தன்னுடைய நீண்ட தீர்ப்பை நிதானமாகப் படிக்கஆரம்பிதிருக்கிறார் நிதிபதி. தினகரன் ஒவ்வொரு வார்த்தைகளையும் கூர்ந்து கவனிக்கிறார். அவருடைய உதவியாளர்கள் நீதிபதி சொல்வதை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். ஹாலில் ஊசி விழுந்தால் ஒசை கேட்கும் அமைதி.
தூங்கிக்கொண்டிருக்கும் மகேஸ்வரியின்  உடல் தூக்கிபோடுகிறது. வலிப்பு வரப்போகிறதோ என்று நினைத்து எழுந்து அருகில் போன சீதாவிற்கு ஈன ஸ்வரத்தில் அம்மா என அவள்  அழைப்பது கேட்டது. அம்மாவைப் பார்த்ததும் உதடுகளில் ஒரு சின்ன முறுவல்.  சில வினாடிகளில்  மெல்ல சீராகியிருந்த மூச்சு பட்டென்று  நின்று விட்டது.
அசைவற்ற அந்த உடலைப் பார்த்து அழக்கூடத் தோன்றாமல் அதிர்ந்து நிற்கிறாள் சீதா,
சரோஜா மருந்துடன் வந்து கொண்டிருக்கிறாள். 
கோர்ட்டில் என்ன தீர்ப்பு வப்போகிறதோ?
ஆனால் கருணையேயில்லாமல் சென்னை நகரை அழித்த பெரும் மழை அவள் மீது கருணை காட்டிவிட்டது.
  



6/6/19

நாடுகளுக்கிடையேயான  நட்பூ


இறைவனின் படைப்பில் மிகவும் அழகானவை என்று போற்றப்படுபவை மலர்கள். சில மலர்களுக்கு மகத்தான மருத்துவ குணங்களுண்டு என்கிறது பண்டைய தமிழ் மருத்துவம்.    மனித மன  உணர்வுகளைப்  பண்படுத்தும்  மலர்களின் ஆற்றல்களைப் பற்றி,  கூறியிருக்கிறார் அரவிந்த அன்னை.  ஆனால் ஒரு மலர் போரில் ஈடுபட்ட இரு நாடுகளுக்கிடையே அமைதியையும் நட்புறவையும் மலரச்செய்திருக்கிறது என்கிறது வரலாறு.அந்த மலர்தான் செரிபிளாசம்
ஏப்ரல் மே மாதங்களில் அமெரிக்காவின் பல பகுதிகளில் பூத்துக்குலுங்கி வசந்தத்தை வரவேற்கும் மலர்  செரிபிளாசம்.  அடர்ந்த மரங்களில் இலையே தெரியாமல் மலர்கள் நிறைந்து அந்த சூழலையே தன் வண்ணத்தால் நிறைக்கும் இந்த  செரிபிளாசம்  அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்ட மலர் இல்லை.  100 ஆண்டுகளுக்கு முன் இறக்குமதி செய்யப்பட்ட ஒரு மலர்.  இன்று  அமெரிக்க நாடு முழுவதும் பரவியிருக்கும் இந்த மலர் மலரப்போகும் நாளை முன்னதாகவே அறி வித்து  அமெரிக்கத் தலைநகரான வாஷிங்டனில்  கோலாகலமாக ஒர் மாத விழாவாகவே கொண்டாடுகிறார்கள்.  இசைக்குழுக்களின் கச்சேரி, நடனம், பார்ட்டிகள், பேஷன் ஷோக்கள் என அமர்களப்படும். உள்ளூர்காரர்களைத்தவிர இதற்காகவே வரும் அண்டை மாநில மக்கள்; ஹோட்டல்களில் டிஸ்கவன்ட் எல்லாம்
அமெரிக்க ஐக்கிய நாடு உருவாகி வளர்ந்து கொண்டிருந்த போது உலகின் மிகச்சிறந்த உணவுப்பயிர்களையும் தாவரங்களையும் அமெரிக்காவிற்கு    கொண்டுவரவேண்டும் என்பதில் முனைப்பாக இருந்த அன்றைய அமெரிக்க அரசு அதற்காகவே  தனித்துறைகளை  உருவாக்கியிருந்தது. அதில் வேளாண்மைத்துறையில் ஒரு பிரிவின்  வேலை  உலகின் நல்ல  உணவுப்பயிர்களைத்தேடி  கண்டுபிடித்து கொண்டுவருவது. 
இயற்கையிலேயே தாவரங்களில் ஆர்வம் கொண்ட  டேவிட் ஃபேர்சைல்ட் (David Fairchild) என்ற இளைஞருக்கு அந்தப்பொறுப்பு தரப்பட்டிருந்தது. இவர்தான் இந்தியாவிலிருந்து மாம்பழம், சீனாவிலிருந்து பீச்,  சிலியிலிருந்து பட்டர் பழம் போன்ற அமெரிக்கா அறிந்திராத  பழவகைகளையும் காய்கறி வகைகளையும் அந்த  நாட்டுக்குக்  கொண்டுவந்தவர்.  அவர் ஒவ்வொரு பயணத்தின் போதும் அந்தந்த  நாடுகளிலிருந்து கொண்டுவரும் மலர்ச்செடிகளை தன் வீட்டுத்தோட்டத்தில்  நட்டுச்  சோதிப்பார். 1902ல்  ஜப்பான் பயணத்தில் இவர் பார்த்தது சக்கூரா  என்ற பூக்களால் நிறைந்த மரங்கள்.  அது பூக்கும் காலத்தை ஜப்பானியர்கள்  அதன் மரத்தடியில்  குடும்பங்களாக  பிக்னிக்  வந்து மகிழ்ச்சியாக கழிப்பதையும் பார்த்த டேவிட் அதை கொண்டுவந்து தன் வீட்டின் முன்  வளர்த்தார். அவரது இளம் மனைவிக்கு இதன் பூக்கள்  மிகவு பிடித்துவிட்டது. அதற்கு “செரிபிளாஸம்” எனப் பெயரிட்டார்.  அந்தப் பூக்கள் பார்ப்பவர்களைக்  கவர்ந்தது. அதற்காகவே அவர் வீட்டுக்கு நிறைய விஸிஸ்டர்கள். பார்ட்டிகள். அந்த மலர்ச்செடிகளை  பெரிய அளவில் அமெரிக்காவிற்கு  இறக்குமதி செய்ய விரும்பினார் டேவிட்.   
அப்போது முன்னாள் அதிபர்களின்  நினைவாலயங்களுடன்  உருவாகிக் கொண்டிருந்த வாஷிங்டன் டிசி   வளாகம் பெரும் பொட்டல் காடாக இருப்பதைக்கண்ட .  அன்றைய அமெரிக்க அதிபர்  ரூஸ்வெல்ட்  (Teddy Roosevelt)  அந்த நினைவு வளாகத்தை அழகான மலர் தோட்டமாக்க  யோசனைகளை  மக்களிடமிருந்து வரவேற்றிருந்தார்.  அவரைத்  தொடர்ந்து 1909ல்  பதவிக்கு வந்த  அதிபர்  ஹாவர்ட் டப்ஃட் ( William Howard Taft)டின்  மனைவி  ஹெலனுக்கு  டேவிடின் வீட்டு செரி மலர் பிடித்துப் போயிற்று. 
அதிபர் இந்த மலர் மரங்களை அந்த வளாகத்தில் நடுவதை ஆதரித்தற்கு  அமெரிக்காவின் முதல் பெண்மணிக்கு பிடித்தது மட்டும் காரணமில்லை.   ஜப்பானுடன் அமெரிக்கா போர் செய்த காலத்தில் அவர் போர் விவகார  செயலராக இருந்தவர் அந்த அதிபர். .  இந்த மரங்களை ஜப்பானிலிருந்து கொண்டுவருவதின் மூலம்  போரினால் எழுந்திருந்த   இரு நாட்டு மக்களிடமிருக்கும் பரஸ்பர வெறுப்பு குறையும் இரு நாடுகளுக்கிடையே  நல்லுறவு தொடங்க நல் வாய்ப்புக்கான ஆயுதமாக இந்த மரங்கள் நடுவதைக் கருதினார்.
ஏற்பாடுகளைச்செய்ய அதிபர்   டேவிட்டுக்கு ஆணையிட்டார். 300 மரங்களின் இறக்குமதிக்காக  ஜப்பானுக்கு ஆர்டர் அனுப்பப்பட்டது.
மகிழ்ந்தது டேவிட் மட்டுமில்லை. ஜப்பானியர்களும்தான். தங்களுடையதை  விடப்பெரிய  நாட்டில் நமது  சக்கூரா மரங்கள் காலத்திற்கும் நமது  கலாச்சார பெருமையைப் பேசப்போகிறது  என மகிழ்ந்தார்கள்.
டோக்கியோ நகர மேயருக்கு  மிகச்சிறந்த சக்கூரா  மரங்களைத் தேர்ந்தெடுத்து அமெரிக்காவிற்கு  அனுப்பும்  பணி  ஒதுக்கப்பட்டது.. ஜப்பானிய அரசு  இதைப்  பெரிய கெளரவமாக கருதியதின் விளைவு   300  மரங்களுக்கும்  பதிலாக 2000  மரங்களைக்  கப்பலேற்றினார்.  அந்த மேயர்.

1909 டிசம்பரில் ஸியாட்டில் துறைமுகம் வந்த அந்த மரங்கள் 13 நாள் ரயில் பயணத்துக்கு பின்  வாஷிங்டன்  வந்து  சேர்ந்தது.  ஒவ்வொரு கட்டத்தையும் மேற்பார்வை செய்து வந்த  டேவிட்டின்  மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. தான் கனவு கண்டதைப்போலவே  இந்த இடம் ஒருநாள் செரிமலர்கள் பூத்துக்குலுங்கி  மலர்க்காடாகும் என்ற  தன் கனவு நனவாகப் போவதை  எண்ணி  மகிழ்ந்தார்..
ஆனால் அது  நீடிக்க வில்லை. வில்லனாக வந்தது அமெரிக்க அரசின் பூச்சியில் துறை. வெளிநாட்டுத் தாவரங்களை அனுமதித்தால் அதன் மூலம் புதுவகையான பூச்சிகள். நுண்கிருமிகள்  அமெரிக்காவிற்குள் வந்து விடும் அவை தாவரங்களுக்கு மட்டுமில்லை மனித உயிர்களுக்கும் ஆபத்து  விளைவிக்கக்கூடியதாக  இருக்கலாம். அதனால் இந்த மரங்களை நடக்கூடாது. என்று பிரச்சனையைக் கிளப்பினார்கள்.

அமெரிக்க அரசின் தலைமைச்செயலர், செரி மலரினால்  அயல்நாட்டுடன் நல்லுறவு, அமெரிக்க இயற்கை வளத்துக்கு ஆபத்து இதில் எதைத் தவிர்ப்பது  எனத்தீர்மானிக்க முடியாமல் தவித்தார். அதிபரின் கட்டளைக்காக காத்திருந்தனர். அதிபர் இறக்குமதி செய்யபட்டிருக்கும் மரங்களைத் தீவிர பரிசோதனை செய்து அறிக்கை கேட்டார்.  வல்லுநர்களின் அறிக்கை மரங்களில் பூச்சிகளும் நுண்ணுயிர்  உருவாதற்கான  அணுக்களும் இருப்தாகச் சொல்லியது.. 
அதிபர் உடனடியாக அந்த  மரங்களை எரிக்க ஆணையிட்டார்.
  
இதற்கிடையில் முன்னதாக தீர்மானிக்கப்பட்டபடி  முதல் மரத்தை நடும் விழாவிற்காக  டோக்கியோ மேயர்  தன் குழுவுடன்  வாஷிங்டன்  வந்துசேர்ந்துவிட்டார். அவரை வரவேற்கும் பொறுப்பை ஏற்றிருந்த டேவிட்டுக்கு தர்ம சங்கடமாகிவிட்டது. முதல் மரம் நடும் விழாவிற்கு  தன் மனைவியுடன் வந்திருப்பவரிடம் மரங்கள்  எரிக்கப்படப்  போவதைச்சொல்லி. தன் அரசின் சார்பாக மன்னிப்பைக் கேட்க வேண்டிய அவல நிலை.  
ஆனால் அவருக்கு காத்திருந்தது ஆச்சரியம். உருவத்தில் அமெரிக்கர்களை விட சிறியவர்களாக இருந்த ஜப்பானியரின் உண்மையான உயரம் அந்த  மேயரின்  வார்த்தைகளில் தெரிந்தது.
 “நாங்கள் தவறு செய்து விட்டோம்  மரங்களில் இப்படிப் பட்ட ஆபத்து இருப்பதை நாங்கள் உணர்ந்து அனுப்பும் முன் சரி செய்து பாதுகாத்திருக்க வேண்டும். நல்லவேளை உங்கள் அதிபர் எரிக்க  உத்திரவிட்டிருக்கிறார். நடப்பட்டிருந்தால் காலம் முழுவதும் அமெரிக்கா விற்கு  கிருமிகளையும் பூச்சிகளையும் அனுப்பிய பழிச்சொல்லுக்கு  ஜப்பான் ஆளாகியிருக்கும்”.

மறுநாள் மேயரின்  மனைவி அதிபரின் மனைவியைச் சந்தித்து ஜப்பானின்  தவற்றுக்கு மன்னிப்பு கேட்டார்.. விரைவில் வேறு மரங்கள் அனுப்புவதாகவும் அதை ஏற்க வேண்டும் என்றும் வேண்டினார்.
.
மேயர் ஊர் திரும்பியவுடன் ஜப்பானின் அனைத்து தாவர  வல்லுநர்களும்  டோக்கியோவிற்கு அழைக்கப்பட்டனர். அவர்கள் மேற்பார்வையில் பூச்சிகள் இல்லாத, நன்கு மருந்திட்டுப் பராமரிக்கப்பட்ட   உடனடியாக பூக்கக்கூடிய 3020 மரங்கள் தயார் செய்யப்பட்டு கப்பலில்  அடுத்த ஆண்டே  ஜப்பானிய மக்களின் பரிசாக அமெரிக்க மக்களுக்கு அனுப்பப்பட்டது

1912ல் அமெரிக்க அதிபரின் மனைவியும் அமெரிக்க முதல் பெண்மணியுமான  திருமதி  ஹெலன் முதல் செரிமரத்தை நட, ஜப்பானியத் தூதுவரின் மனைவி இரண்டாவது மரத்தை நட்டார். தொடர்ந்து  பொட்டாமாக் நதிக்கரை முழுவதும் மரங்கள் நடப்பட்டன. அடுத்த ஆண்டே பூக்க ஆரம்பித்த அவைகள் இப்போது அந்த வளாகம் முழுவதும்  ஆண்டுதோறும்  தங்கள் மகிழ்ச்சியை மலர்களாக்கிக்  காட்டிக்கொண்டிருக்கிறது.   



28/4/19






























எழுத்தாளரும், மூத்த பத்திரிகையாளரும், வரலாற்று ஆய்வாளருமான எஸ்.முத்தையா அண்மையில் அவரது 89ஆம் வயதில் காலமானார்  


சென்னையின்  காதலர்




ஹிந்து நாளிதழலில்  ஒவ்வொரு திங்கட்கிழமையும் வெளிவரும் ஒரு தொடர் பகுதி  “மெட்ராஸ் மிஸ்லேனி”. சென்னை நகரின் மிகப் பழைமையான  கட்டிடங்கள்,  நிகழ்வுகள், மனிதர்கள் புத்தகங்கள் போன்ற பாரம்பரியச் சின்னங்களைப்பற்றிய  சுவராஸ்யமான கட்டுரைகளை நகைச்சுவையோடும் அரிய புகைப்படங்களுடனும் எழுதிவந்தவர் திரு. எஸ் முத்தையா. 1999 ஆம் ஆண்டு துவக்கிய இந்தச்  செய்திகட்டுரைகளின் தொடர்  அண்மைக்காலம் வரை  தொடர்ந்தது   ஒருவாரம் கூட இடைவெளியில்லாமல் 20 ஆண்டுகளுக்குமேலாகத்  தொடர்ந்து ஒரேவிஷயத்தை பற்றித் தனிப்பகுதி எழுதிக்கொண்டிருந்த பத்திரிகையாளர் உலகிலேயே இவராகத்தான் இருக்க முடியும்.


இவரது கட்டுரைகள் தொகுக்கப்பட்டு  “பீப்பிள்-பிளேஸஸ்-பாட்பூரி என்ற பெயரில்  புத்தகமாகவே வெளிவந்திருக்கிறது.  சில ஆண்டுகளுக்கு முன்.. மேற்கு வங்க முன்னாள் கவர்னர் திரு கோபாலகிருஷ்ண காந்தி  இந்தப்புத்தகத்தை வெளியிட்டபோது   “வாரம் தோறும் தொடர்ந்து எழுதும் சில பத்திரிகையாளர்கள் தினசரியில் இடத்தை நிரப்ப உதவுவார்கள். சில பத்திரிகையாளர்கள் தங்கள்  எழுதும் பகுதியினால் தினசரிக்குப் பெருமை சேர்ப்பார்கள். முத்தையா இரண்டாவது ரகம். சென்னையின் பெருமைமிக்க பழைய கட்டிடங்களின் மீது முத்தையா கொண்டிருக்கும் அலாதி காதலினால், அவர் தொடர்ந்து அதுபற்றி எழுதி வந்ததால்தான் பல கட்டிடங்கள் இடிக்கப்படாமல் காப்பற்றப்பட்டிருக்கின்றன. அதற்குச் சென்னை நகரம் அவருக்கு  நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறது” “. என்றார்



திரு முத்தையாவின் கட்டுரைகள் வெளியான உடனேயே  அது தொடர்பான பிறசெய்திகள், சமந்தபட்டவர்களின் வாரிசுகள் இப்போது இருக்குமிடம், எழுதியதிலிருக்கும் தவறு, புதிய தகவல்கள் பற்றி வாசகர்களிடமிருந்து  வெளிநாட்டு வாசகர்களிடமிருந்தும்  வாரந்தவறாமல் வரும்   தகவல்களையும் வெளியிடுவதற்காகவே “தபால்காரர் கதவைத் தட்டியபோது” என்று தன் பத்தியில் ஒரு  பகுதியைச் சேர்த்தார். இப்படி தான்   எழுதிய   விஷயத்தையே முழுமையாக்கியதனால் இவரின் இந்தப் பகுதி ஹிந்து நாளிதழில் வாசகர்களிடையே  பெறும் வரவேற்பை  பெற்றிருந்தது.  


“நீண்ட ஆராய்ச்சிகளுக்குப்பின்னர்,  ஆனால் அந்த ஆராயச்சிகளின் வாசனை சிறிதுமில்லாமல், சிக்கனமானவார்த்தைகளில், அழகான ஆங்கிலத்தில் சுவராஸ்யமான  கட்டுரைகளை ஒவ்வொரு வாரமும் சரியான நேரத்திற்கு அனுப்பிவைப்பவர் முத்தையா”  என்கிறார் ஹிந்து பதிப்புகளின் குழும தலைவர்   திரு என்.  ராம்.


 அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிக்கொண்டிருந்த  இந்த எழுத்தாளாரின் ஆய்வுகளினால் தான் சென்னை நகரம் பிறந்த தினம் கண்டுபிடிக்கப்பட்டு  இப்போது அந்த நாள் மெட்ராஸ்டே  என்று ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதத்தில்  பெரும்   விழாவாக   கொண்டாடப்படுகிறது.  ஒரு நாள் விழாவாகத் துவங்கிய இது இப்போது பல வடிவங்களில் நகரின் பலபகுதிகளில் மாதம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. 


செட்டிநாட்டின் பள்ளத்தூர் கிராமத்தில் பிறந்த முத்தையா மிகச் சிறுவயதிலியே இலங்கை சென்று அங்கு வளர்ந்தவர். அங்கு பத்திரிகையாளராக வாழ்க்கையை துவக்கி டைம்ஸ் ஆப் சிலோன் என்ற நாளிதழில் முதல் நிலை ஆசிரியராகத் தன் 38 வயதில் உயந்தவர். பத்திரிகையின் நிர்வாக ஆசிரியராக ஒரு சிங்களரே இருக்க முடியும் என்பது விதி என்பதால்  இவரை ஆசிரியராக்குமுன்  இவருக்குக் கெளரவக் குடிமகன் உரிமைக்குச் சிபார்சு செய்யபட்டிருந்தது. ஆனால் அப்போது நிகழ்ந்த ஆட்சி மாற்றத்தால் அது கிடைக்கவில்லை. வாழ்நாள் முழுவதும் இரண்டாம் நிலை ஆசிரியராக இருக்க விரும்பாத முத்தையா மனம் வெறுத்து போய்ச் சென்னை திரும்பிப்  பிரபல ஆங்கிலப் பத்திரிகைகளில்  வேலைக்காக முயற்சித்துகொண்டிருந்தார். கிடைத்தது டி டி கே குழுமத்தின் மேப்புகள் அச்சிடும் புதிய நிறுவனத்தின் பொறுப்பு. அதன் ஒரு பதிப்பாகச்  சென்னையைப் பற்றிய புத்தகம் தயாரிக்கத் துவங்கியதில் ஏற்பட்ட ஆர்வத்தில்  இவருக்கு இந்த நகரத்தின் மீது பிறந்த காதல் வாழ்நாள் முழுவதும்  தொடர்ந்தது.  



சென்னைக்கு அடுத்து இவர் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த விஷயம் செட்டிநாட்டு கலாசாரம். அங்குள்ள கட்டிடங்களின் வரலாறு குறித்தும் புத்தகங்கள் எழுதியிருக்கிறார். திரு முத்தையாவின்    பாரம்பரியச் சின்னங்களின் பாதுகாப்பு பணிக்காக  இங்கிலாந்து  அரசு  அரசியின்  MBE  விருது அளித்துக் கெளரவித்திருக்கிறது.


“தொடர்ந்து  வேலைகள் செய்து கொண்டிருப்பதால்  வாழ்க்கை இனிமையாக இருக்கிறது” என்று சொல்லிக்கொண்டிருந்த இந்த எழுத்தாளர் இன்றைய  ஈமெயில், வாட்ஸப் யுகத்திலும் தன் கட்டுரைகளைத் தானே டைப்ரைட்டரில் , டைப் செய்துதான் அனுப்புவார். சரளமாக தமிழ் பேசிய     இவருக்குத் தமிழ் எழுதத்தெரியாது என்பது ஒர் ஆச்சரியம்.


மதுரையைப் போல்,தஞ்சையைப் போல் இல்லை என்றாலும் இந்தச் சென்னைக்கும் ஒரு வரலாறு உண்டு என்பதைத் தனது எழுத்துகள் மூலம் அடையாளம்  காட்டிய இவரும் இன்று   சென்னை வரலாற்றின்  ஒரு  அழியாத அடையாளமாகியிருக்கிறார். 
(கல்கி 5/5/19)












13/4/19



 இந்த வார கல்கி என் சிறுகதையொன்றை வெளியிட்டு கௌரவித்திருக்கிறது. ஆசிரிய குழுவிற்கும் ஓவியர் தமிழுக்கும் நன்றி. இந்தக்கதையிலும் பாத்திரங்களுக்கு முக நூல் நண்பர்கள் பெயர்கள். அதைக்கடன் கொடுத்த நண்பர்களுக்கும் நன்றி. படித்துவிட்டுச் சொல்லுங்கள்



அப்பா 

 
“சாதாரணக் காய்ச்சல் மாதிரிதான் இருக்கிறது. கவலைப்படாதே. ஒரு மணி கழித்து இன்னொருதரம் நெற்றியில் ஒடிகொலோன் போடு. ஈவினிங் டாக்டர்கிட்டே காட்டு.  ” என்று சொல்லிவிட்டு எதிரிலிருக்கும் தன் ஃபிளாட்டின்னுள் நுழைந்தாள் சுபஶ்ரீ. எதிர் பிளாட்டிலிருக்கும் லஷ்மிஶ்ரீராமின் குழந்தைக்குக் காய்ச்சல். அதைப் போய்ப் பார்த்துவிட்டுத் தன் வீட்டினுள் நுழைந்த சுபஶ்ரீ ஹாலில் உட்கார்ந்திருந்த அப்பாவைக்காணாததால் அவரைக் கூப்பிட்டுக்கொண்டே ஒவ்வொரு அறையாகப் பார்த்தாள். பாத்ரூம் கதவுகளும் திறந்தே இருந்தன. அப்பா அப்பா எனக் கூப்பிட்ட படி பால்கனி வராண்டா எல்லாம் தேடினாள் சுபஶ்ரீக்கு ஷாக் அடித்தது போல் பகிரென்றது. அப்பவை எங்கும் காணோம்.
 படபட வென 4 மாடிகளின் படிகளையும் நிமிடத்தில் கடந்து கீழே செக்யூரிட்டியிடம் அப்பா வந்தாரா? எனக் கேட்டபோது “தெரியலையே அம்மா நான் இப்பத்தான் டூயூட்டிக்கு வந்தேன்” என்ற அவன் பதிலைக்கேட்டவுடன் பதைபதைப்பு இன்னும் அதிகமாயிற்று. எங்கே போய்விட்டார் இவர்? என்று இரண்டு நுழைவாயிலிருக்கும் அந்தப் பெரிய அபார்ட்மென்ட் வளாகத்தின் மெயின் கேட்டில் இருக்கும் செக்யூரிட்டி ஆபிஸில் அப்பாவைப் பார்த்தீர்களா? எனக் கேட்டபோது தமிழ் தெரியாத அந்த மணீப்பூர் பையன் எந்த அக்கறையும் இல்லாமல் நஹி என்றபோது சுபஶ்ரீவின் பதட்டம் அழுகையாகத் தொடங்கியது.

சென்னை திருவான்மியூரிலிருக்கும் அந்தப் பெரிய கேட்டட் கம்யூனிட்டி 8 பிளாக்குகளைக் கொண்டது. மொத்தம் 120 ஃபிளாட்டுகள். முன்பு ஒரு முறை வேறு ஒரு பிளாக்கின் ரிசப்ஷனில் உட்கார்ந்திருந்ததால்,  இப்போது  ஒடி ஒடி எல்லாப் பிளாக்கின் தரைதளத்திலும் தேடிப் பார்த்தபின் அப்பா அந்த வளாகத்தில் எங்கேயும் இல்லை என்பதை உணர்ந்த சுபஶ்ரீக்குக் கோபமும் அழுகையும் பீரிட்டுக்கொண்டு வந்தது. மெல்ல பிளாட்டுக்குத்திரும்பி கணவர் மோஹனுக்குப் போன் செய்தாள்
அடக்கமுடியாத அழுகைக்கும் விம்மல்களுக்குமிடையே “ ஜீ அப்பாவைக் காணோம். ஒரு 5 நிமிஷம் லஷ்மியோட குழந்தையைப் பார்க்கப் போயிருந்தேன், கதவைப் பூட்டாமல் போயிருந்தேன். திரும்பி வருவதற்கு இறங்கிபோய்விட்டார் போலிருக்கிறது

“பிளாட்டில் நல்லாப் பார்த்தாயா?”

“ம்ம். மெயின்கேட்டை விட்டு வெளியே போயிருப்பார் போலிருக்கிறது” என்றாள் விசும்புலடன்.

“சரி நான் இன்னும் ஒரு மணியில் வந்துவிடுவேன். அழாமல் இரு”. பயப்படாதே. காம்பெளக்ஸ் ஆபிஸில் சொல்லு. செக்ரட்டரியிடம் நானும் பேசுகிறேன்”.
மோகன் ஒரு பெரிய சாப்ட்வேர் நிறுவனத்தில் இயக்குநர்.  மாதத்தில் 20 நாள் வெளிநாட்டில். அதிர்ஷ்ட வசமாக இன்று சென்னையில் இருக்கிறான்.
சுபஶ்ரீ தலையில் அடித்துக்கொண்டு அழ ஆரம்பித்து விட்டாள். எத்தனை பத்திரமாக இத்தனை நாள் பார்த்துக்கொண்டேன். ஒரு நாள் ஒரே ஒரு  ஒரு 5 நிமிஷத்தில் இப்படிப் பண்ணிட்டியே அப்பா எனப் புலம்ப ஆரம்பித்துவிட்டாள்.
அவளது கவலைக்கு நியாயம் இருக்கிறது. அவளது அப்பா நாகராஜன் ஓய்வு பெற்ற கணிதப்பேராசிரியர். வயது 70. கடந்த 5 வருடமாக அல்சமையர் என்ற மறதி நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர், மீக நீளமான கணித பாடங்களைக்கூட ஒரு குறிப்பும் இல்லாமல் நினைவிலிருந்தே  போர்ட் முழுவதும் எழுதும் அவருக்கு  கடந்த ஒருவருடமாக அவர் பெயரையே மறந்துவிடுமளவுக்கு மோசமாகியிருக்கிறது. . அதனால் எப்போதும் வீட்டிலேயே அவருடனேயே இருந்து கவனித்துக்கொண்டு இருக்கும் அன்பு மகள் சுபஶ்ரீ. அவரை வீட்டினுள் விட்டு கதவைப் பூட்டிக்கொண்டு வெளியே போவதை விரும்பாததால் கடந்த 3 வருடங்களில் அவள் வெளியே எங்குமே, கோவிலுக்குக்கூட செல்வதில்லை. என்றாவது அப்படிப் போகவேண்டிய சூழலில் வீட்டிலிருந்து மாமனாரைப் பார்த்துக் கொள்வார், மாப்பிள்ளை ரூபத்தில் வந்த மகனான மோகன். அவ்வளவு அக்கறையாகப் பார்த்துக்கொள்வார். குழந்தைகள் வளர்ந்து வெளிநாட்டுக்குப் படிக்கப் போன நிலையில் தன் சுதந்திரங்கள் அனைத்தையும் தியாகம் செய்து அப்பாவிற்காக வாழும் சுபஶ்ரீக்கு இன்று அப்பா காணாமல் போயிருப்பார் என்ற எண்ணத்தையே தாங்கமுடியவில்லை.
.
அவர் ரூமில் மறுபடியும் போய்ப் பார்க்கிறாள். எல்லாம் வைத்த இடத்தில் தான் இருக்கிறது. காலையில் ஆபிஸ் போகும் முன் மோகன் அவருக்கு ஷேவ் செய்து குளிப்பாட்டி ஷர்ட் மாட்டி விட்டதும், தான் இட்லி கொடுத்ததும். நினைவிற்கு வந்தது.. பல சமயங்களில் சுபஶ்ரீயின் பெயரையே மறந்துவிடும் அவரை எங்கும் தனியே விடுவதில்லை. முன்பு உடன் அழைத்துப் போன சில உறவினர் வீட்டு விசேஷங்களில் இவரது நிலையைப்பார்த்துத் துக்கம் கேட்பதைப் போல விசாரிக்க ஆரம்பித்ததால் சுபஶ்ரீ இப்போது அவரையும் எங்கும் அழைத்துச்செல்வதில்லை. தானும் போவதில்லை..
அவர் தனியாக எங்கும் செல்ல வாய்ப்பில்லை என்றாலும்  எமர்ஜென்சிக்கு இருக்கட்டும் என்று மோகன் அவர் பெயர், தன் பெயர், வீட்டுவிலாசம், போன்நம்பர் எழுதப்பட்ட விஸிடிங்கார்ட் சைசில் ஒரு
சின்ன அட்டையைத் தினமும் அவரது சட்டைப்பையில் வைப்பது வழக்கம், அன்று வைக்க மறந்த அந்தக் கார்ட் டேபிளின் மேலேயே இருந்ததைச் சுபஶ்ரீ கவனிக்க வில்லை.
.
“எனக்கு டிபன் கொடும்மா” என்ற அப்பாவிடம் “அப்பா நீங்கள் சாப்பிட்டாச்சு” என்று சொல்லி ஹிந்து பேப்பரைக்கொடுத்த விட்டு லஷ்மி வீட்டுக்குப் போன அந்த நிமிஷத்தை நினைத்து வருந்தினாள் சுபஶ்ரீ, பூட்டிக்கொண்டு போய்த் தொலைந்திருக்கலாமென நினைத்துப் பொருமினாள்.
போனில் அந்தக் காம்பெளக்ஸின் அசோசியேஷன் செகரட்டரி நாராயணன்.  அழைத்தார். எப்போதும் அசோசியேஷனுக்காக எதாவது செய்து கொண்டேயிருக்கும் நல்ல மனிதர். நிறையத் தொடர்புகள் உடையவர்.
“சுபஶ்ரீ, கவலைப்படாதீர்கள். மோகன் போன் செய்தார், நான் நம்ப ரெஸிடென்ட்ஸ் வாட்ஸப் குருப்பிலும், குருப் மெயிலிலும் போட்டிருக்கேன். சாயங்காலம் வரை பார்த்துவிட்டுப் போலீஸுக்குப் போகலாம்னு நினைக்கிறேன். சரஸ்வதியை உங்களோடு இருக்கச்சொல்லியிருக்கிறேன்” என்றார். சரஸ்வதி. அவருடைய அனைத்துக்காரியங்களிலும் கைகொடுக்கும் அவரது மனைவி
.
“தாங்க்ஸ் சார்”
.
செய்தி பரவி அந்தக் காம்ப்ளெக்ஸ்சிலிருக்கும் பலர் போனில் விசாரிக்க ஆரம்பித்தனர். உதவி செய்பவர்களைவிடச் செய்தியைச் சுபஶ்ரீ யிடமிருந்து அறிய ஆவல் காட்டியவர்களே அதிகம். ஒரு கட்டத்தில் வெறுத்துபோய்க் மோகனுக்கு டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்பி விட்டுப் போனை மியூட் செய்து விட்டாள்.
அப்பா எங்கே போனாரோ? எதாவது சாப்பிட்டாரோ? ஷுகர் அதிகமாயிருக்குமோ? என நினைக்க நினைக்க வரும் அழுகையைக் கட்டுப்படுத்தமுடியவில்லை. நேரம் ஒடிக்கொண்டிருந்தது. பசித்தது ஆனால் சாப்பிடத் தோன்ற வில்லை.

காலிங் பெல் ஒலிக்கத் திறந்தபோது பில்டிங் வாசலில் இருக்கும் ஆட்டோ ஸ்டாண்டின் டிரைவர் விஸ்வா என்ற விஸ்வநாதன்
“எப்பலிருந்து அப்பாவைக் காணோம் அம்மா? தனியாவிடவே மாட்டீங்களே? சுபஶ்ரீவின் கணவர் மோகன் இல்லாதபோது அப்பாவைச் செக்கப்அப்புக்கு கூட்டிப்போவது அவருடைய ஆட்டோவில் தான். அப்பாவின் நிலை தெரிந்த ஆட்டோக்காரர் அவர்.  மற்ற ஆட்டோகாரர்களின் பிரச்சனைகளைத் தவிர்க்க சுபஶ்ரீ எப்போதும் விஸ்வாவின் ஆட்டோவில் மட்டும் தான் போவது வழக்கம். அப்பாவுடன் போகும்போது அக்கறையாகப் பிளாக்கின் வாசல்வரை வந்து இறக்கி விடும் நல்ல மனிதன். இதற்கு முன்னல் கால்டிரைவராக இருந்ததால் மோகன் இல்லாத சில சமயங்களில் அவர்கள் காரையும்  கூட ஓட்டியிருக்கிறார் விஸ்வா.
அதற்குள் செய்தி பிளாட்டிலிருந்து எப்படித் தெருவில் பரவியிருக்கிறது? என்று நினைத்த சுபஶ்ரீக்கு இன்டர்னெட்ட்டை விட வேகமானது  பிளாட் வாச்மென்களின் நெட் ஒர்க் என்பது தெரியாது
.
“அவர் போட்டோ ஒண்ணு கொடுங்க நம்ம சைடிலியும் டிரை பண்ணுவோம். என்று விஸ்வா கேட்டபோது எதற்கு?, என்ன பண்ணப்போகிறான்? என்றெல்லாம் கேட்க தோன்றாமல் மேஜையில் போட்டோபிரேமிலிருந்த அப்பாவின் படத்தை எடுத்துக்கொடுத்த  சுபஶ்ரீயிடம் “கவலைப் படாட்தீங்கம்மா கண்டுபிடிச்சிரலாம். என்று சொல்லிவிட்டு விஸ்வா இறங்கிப்போனதும், மோகனிடம் ஒரு வார்த்தைச் சொல்லிவிட்டு போட்டோவைக்  கொடுத்திருக்கலாமோ? என்ற எண்ணம் எழுந்தபோது. விஸ்வா நல்லவன் தான் பரவாயில்லையெனச் சமாதானப்படுத்திக்கொண்டாள்.
.

சொன்னபடி விரைவாக வீட்டுக்கு வந்த மோகனுடன் வந்தவர் செகரட்டரி நாராயணன். “ஒரு கம்ளையென்ட் டிராப்ட் பண்ணியிருக்கேம்மா பார்த்துட்டுச் சொன்னால் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய்க் கொடுக்கலாம்”
எப்படியிருப்பார்?, என்னகலர் சட்டை? வேஷ்டியின் கரைகலர் என்ன மாதிரி கண்ணடி பிரேம்? இங்கீஷ் தெரியுமா? போன்ற பல கேள்விகளுக்குப் பின் புகார் மனுவை வாங்கிக்கொண்டார். அந்த இன்ஸ்பெக்டர். தினமும் பார்க்கும் அப்பாவிடம் இந்த விஷயங்களையெல்லாம் கூர்ந்த கவனிக்காத சுபஶ்ரீ நினைவிலிருந்து சொல்லிய பதிலைக்கேட்ட அவர் வயதானவர்களை அதுவும் இந்த நோய் இருப்பவர்களை எப்படிக் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கிளாஸ் எடுக்க ஆரம்பித்தவுடன் சுபஶ்ரீக்கு வந்த அழுகையை அடக்க முடியவில்லை
.
“நீ வீட்டிற்குப் போ, நாங்கள் நாளைப்பேப்பரில் விளம்பரம் கொடுக்க ஏற்பாடு செய்துவிட்டு வருகிறோம் என்ற புறப்பட்டனர் மோஹனும் நாராயணனும்.
வீட்டிற்கு வந்த சுபஶ்ரீ செய்வதறியாமல் பூஜை அறையில் அமர்ந்து பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தாள். மாலை மறைந்து இரவு பரவிக்கொண்டிருந்தது. மோகன் பேப்பர் விளம்பரத்துக்கு ஏற்பாடு செய்தபின்   போலீஸில் சில நண்பர்களைப்பார்த்துப் பேசிவிட்டுத் திரும்பும்போது இரவாகிவிட்டது. மறுநாள் காலை அவன் ஒரு முக்கிய ஒப்பந்தத்தைக் கையெழுத்திட மும்பையில் இருக்க வேண்டும் காலையில் முதல் பிளைட்டில் மும்பாய் சென்று இரவு திரும்பத் திட்டமிட்டிருந்தான். இப்போது அதை நினைத்துக் குழம்பிக்கொண்டிருந்தான்.  மோகனின் முகத்தைப்பார்த்தே அவன் மனதைப் புரிந்துகொள்ளும் சுபஶ்ரீ, என்னவென்று விசாரித்தபோது விபரம் சொன்ன அவனிடம் “சரி போய்ட்டுவா, இரவு திரும்பிவிடு.  மறுநாள் முதல் ஆபிஸ் போகாமலிருக்க ஏற்பாடு செய்துவிடு” என்று சொன்னாள். ஒரே ஒரு நாள் மீட்டிங்க்காக லண்டன், பாஸ்டன், போனால் கூட உடனே ஊர்திரும்பிவிடுவது அவன் வாடிக்கை. 

இரவு முழுவதும் இருவரும் தூங்கவில்லை. அந்த அழுத்தமான அமைதி ஆயிரம் கவலைக்களைச்சொன்னது
.
மறுநாள் அதிகாலையில் மோகன் விமானநிலையத்துக்குப் புறப்பட ஓலா டாக்ஸியில் ஏறும் சமயத்தில் போன். அழைத்தவர் அடுத்தப் பிளாக்கிலிருக்கும் நண்பர் டாக்டர் பாஸ்கர். அவர் வாட்ஸப் குருப்பில் செய்தி அறிந்திருந்தார்.

“மோகன் ஹிந்து பார்த்தேன். தமிழ்பேப்பரில் கொடுக்கவில்லையா? அது அவசியம். இந்த உதவிகளைச் செய்பவர்களில் பலர் அந்தப் பேப்பர்களைத்தான் பார்ப்பார்கள். செகரட்டரி நாராயணனிடம் சொன்னால் நியூஸாகவே போட ஏற்பாடு செய்வாரே””

ஓ! எனக்குத் தோன்றவில்லை சார். இப்போதே செய்கிறேன் தாங்க்ஸ் என்ற மோகன் உடனே செல்லில் நாரயணனின் நம்பரைக் கூப்பிட்டபடியே காரில் ஏறினான்
.
அழுகை சற்று அடங்கி அமைதியாகிவிட்ட சுபஶ்ரீ குளித்தபின் இன்று நாள் நாள் முழுவதும் பட்டினியுடன் பாபா சிலை முன் உட்கார்ந்து. பிரார்த்திக்கத் தீர்மானித்து அமர்ந்து விட்டாள். அடிக்கடி அழைத்த போன், அவ்வப்போது கூப்பிட்ட காலிங் பெல் எதிலும் கவனம் இல்லை. மூடிய கண்களுடன் முழுக்கவனமும் பிரார்த்தனையில்.

மத்தியானம் மூன்று மணியளவில் விட்டுவிட்டு பல தடவை அடித்த நீண்ட காலிங்பெல்லின் தொல்லை தாங்காமல் கதவை முழவதுதுமாகத் திறப்பதற்குள்ளாகவே வெளியிலிருந்த விஸ்வா “அப்பா பத்திரமாக இருக்கார் அம்மா தகவல் சொல்லத்தான் நான் போன் செய்து கொண்டேயிருக்கிறேன் நீங்க எடுக்கல. ஈஸிஆர் ரோட்டில் பாண்டிச்சேரி போகிறவழியில் ஒரு கிராமத்துக்கு போகும் மெயின் ரோட்டில்  இருக்காராம். இதைப்பருங்கள் என்ற காண்பித்த செல்போன் போட்டோவில்  ஏதோ ஒரு கடையில் உட்கார்ந்திருக்கும் அப்பா.
அழுகை, சந்தோஷம், ஆச்சரியம் எல்லாம் ஒரே சமயத்தில் தாக்க சுபஶ்ரீக்குப் பேச்சே வரவில்லை. ஓடிப்போய்ப் பூஜை அறையில் பாபா சிலை முன் விழுந்து நமஸ்கரித்துத் தாங்க்யூ பாபா தாங்க்யூ என அரற்றினாள்.
உடனே வாசலுக்கு ஒடி வந்து அங்கே எப்படிப் போனார்?ஏன் போனார்? உங்களுக்கு யார் சொன்னாங்க? என எல்லாக்கேள்விகளையும் ஒரேடியாக விஸ்வாவிடம் அள்ளி வீசினாள்
.”முதல்ல சாருக்கு போன் போடுங்க.”

“கார் சாவியைக் கொடுங்க அம்மா உடனே கிளம்பிப்போனா இரண்டு அவர்லே அழைச்சிட்டு வந்திடலாம். கார்லே போகும்போது விபரம் பேசிக்கலாம். சுபஶ்ரீயை விட அதிக உணர்ச்சி வசப்பட்டிருந்த விஸ்வா அவசரப்படுத்தினான்.
“ஒரு நிமிஷம்” என்று சொன்ன சுபஶ்ரீ அந்த அவசரத்திலும் அப்பாவிற்குச் சாப்பிட ஸ்நாக்ஸும் பிளாஸ்க்கில் பாலும் எடுத்துக்கொண்டாள். சென்னை பாண்டிச்சேரி கடற்கரைச் சாலையில மோஹனின் புதுக் கார் 100கீமியில் பறக்கிறது.
கவனமாக ஓட்டிய விஸ்வா “நம்ம அடையாறு ஸ்டாண்டில் இருக்கும் சங்கரோட மச்சான் மகளுக்குக் கல்யாணமுன்ட்டு அவங்க குடும்பத்தோடு அவனோட ஆட்டோவிலேயே கிராமத்துக்குப் போயிட்டிருக்கும்போது வழியில் டீ சாப்பிட இறங்கிய ஒரு கடையில் இருந்த பெரியவரைப்  பார்த்தப்ப சந்தேகம் வந்திருக்கு. . நம்ம தான் நோட்டிஸ் போட்டிருக்கமே, அதனால் கடையிலே விசாரிக்கிறான்.   அவர்  எதோ ஒரு  பஸ்ஸிருந்து இறங்கி வந்து  வழிகேட்டு  விபரம் எதுவும் சரியாகச் சொல்லமுடியாமல்  நேத்து ராத்திரி முழுவதும் அங்கேயே இருந்திருகிறார்ன்னு   அந்தக் கடையாளுங்க. சொல்லியிருக்கங்க.
உடனே எனக்குப் போன் போட்டான் சங்கர். நான் அவரைப் படமெடுத்து வாட்சப்பில் உடனே அனுப்பச் சொன்னேன்.  எக்மோரில் சவாரியிலிருந்த நான் படத்தைப் பார்த்தவுடன் டக்கன்னு  அப்பான்னு தெரிஞ்சிடிச்சி. உடனே  அந்தக் கடைக்காரரிடமே நேரடியாகப் பேசி நாம வரும் வரை அவரைப் பத்திரமாகப் பார்த்துக்கச் சொல்லிட்டேன் நாம இப்போ அங்கே தான் போறோம்
.என்ன நோட்டிஸ்? எனக்குழம்பிய சுபஶ்ரீக்கு முதல் நாள் தான் செய்திருந்த ஏற்பாட்டைப் பற்றிச் சொன்னான்
விஸ்வா அந்தப்பகுதி ஆட்டோ ஓட்டுநர் தொழிசங்க தலைவன் என்பதோ சுற்று வட்டாரத்தில் அந்தச் சங்க உறுப்பினர்கள் 1000க்கும் மேல் என்பதோ. போட்டோ கிடைத்த ஒரு மணி நேரத்தில் படத்துடன் “காணவில்லை பார்த்தவர்கள் இந்த ஆட்டோ டிரைவரிடமோ அல்லது இந்த எண்ணிலோ தொடர்பு கொள்ளுங்கள்” என்று படம் அச்சிடப்பட்ட சின்ன நோட்டிஸ் அனைத்து ஆட்டோக்களின் பின்னாலும் ஒட்டப்பட்டு நகர் முழுவதும் பறந்து கொண்டிருந்தது சுபஶ்ரீவுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை
 விஸ்வாவின் வார்த்தகளைக்கேட்க கேட்க, கேட்க பிரமிப்பு அடங்கவில்லை. அவளுக்குக் கார் ஒட்டுவது விஸ்வாகத் தெரியவில்ல, அவன் உருவில் வந்த பாபாவாகத்தான் தெரிந்தது. கண்களில் நீர் வழிய தாங்கஸ் விஸ்வா என்று சொல்லிக்கோண்டே மும்பையிலிருக்கும் மோகனுக்கு வாட்ஸப்பில் விவரமாகச் செய்தி அனுப்பினாள்
மெயின் ரோட்டில் ஒரு பஸ்ஸ்டாப்பின் அருகில் அருகே இருக்கும் அந்த டீக்கடையின் முன்னே கார் நின்றவுடன் “அப்பா என்று சுபஶ்ரீ போட்ட கூச்சலையும் ஒடிப் போய் அவரைக் கட்டிக்கொண்டதையும் பார்த்த அந்தக் கடையிலிருப்பவர்கள் அதிர்ந்து போனார்கள்

.அவர் சுபஶ்ரீயிடம் கேட்ட கேள்வி
என்னை இங்கே தனியா வீட்டுட்டு நீ எங்கே போயிட்ட?





21/3/19

பேசும் கட்டிடமும் பேசாத படங்களும்.....



 

ஒரு பெரிய அரங்கத்தில் அழகாக வரிசையாகப் பலவிதமான படங்களுடன் நடைபெறும் புகைப்பட கண்காட்சிகளை  நாம் பார்த்திருக்கிறோம்.  ஆனால் ஒரேசமயத்தில்  நகரின் பல இடங்களிலுள்ள பாரம்பரிய கட்டிடங்களில் பிரமாண்ட அரங்கங்களில் வெவ்வேறு தலைப்புகளில் இந்தியாவின், உலகின்  பிரபல புகைப்பட கலைஞர்களின் படைப்புகளைக் காட்சிக்கு வைக்கப்பட்டால் எப்படியிருக்கும்?





அதைத்தான் செய்திருக்கிறார்கள் சென்னை போட்டோ பைனியல் (Chennai Photo biennial)  என்ற அமைப்பினர்.  2016 ஆண்டு ஆண்டு முதல் காட்சியை நடத்திய இவர்கள்  இப்போது இரண்டாவது காட்சியை மிகப்பெரிய அளவில்  நடத்துகிறார்கள். சென்னையின் கலைக்கல்லூரி,  அருங்காட்சியகம்,பல்கலைக்கழக வளாகம்,  எழும்பூர் ரயில்  நிலையம் போன்ற  12 இடங்களில் 20க்கும் மேற்பட்ட புகைப்பட கலைஞர்களின் படைப்புகளைக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
       
 ஒவ்வொரு இடத்திலும் சில கலைஞர்களின் படைப்புகளை வெறும் படக்காட்சிகளாக வைக்காமல் ஒரு தலைப்பின் கீழ் பெரிய அளவுகளில் அமைத்திருக்கிறார்கள். ஒரு மாதம் நடைபெறப்போகும் இந்த கண்காட்சிகளில் தினசரி பேச்சரங்கம், பயிலரங்கம், குறும்படங்கள்  என்று கலக்கிக்கொண்டிருக்கிறார்கள். விளம்பரங்களையும் ,அறிவிப்புகளையும்  செய்வதில் கூட அடேஎன்று திரும்பிப்பார்க்கவைக்கிறார்கள்.

சென்னை மெரினா கடற்கரையில் பலகலைக்கழக வளாகத்திலிருக்கும் செனட் ஹவுஸ்  என்ற பாரம்பரிய கட்டிடமும் இந்த கண்காட்சி நடைபெறும் பாரம்பரிய கட்டிடங்களில் ஒன்று. புகைப்பட காட்சியைப் பார்க்கப் போன நாம் அந்த கட்டிட அழகில் பிரமித்து நிற்கிறோம். 140 வருடங்களுக்கு முன் எப்பட்ட அந்த கட்டிடத்தின்  ஒவ்வொரு அங்குலத்திலும் கலை நயம் மிளிர்கிறது. 19 நூற்றாண்டில் இந்தியாவின் பல பகுதிகளில் கட்டப்பட்ட இந்தோ சாராசெனிக்  (Indo-Saracenic)    பாணி அரசு கட்டிடங்களில் ஒன்றான இதன் கம்பீரமும், அழகும் அசத்துகிறது.     கட்டிடத்துக்கான வடிவமைப்பை வரவேற்று அரசின் வெளியிட்ட போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த வடிவமைப்பை அனுப்பியவர்  ராபர்ட் ஸிஷோம்(Robert Chisholm)  என்றும் ஆன்கிலேயர் எனப்தும்  அப்போது அவருக்கு வயது 21தான் என்ற செய்தி கட்டிடத்தின்மீது நமக்கு எழுந்திருக்கும் பிரமிப்பை அதிகமாக்குகிறது. பட்டமளிப்பு விழாக்களுக்காக நிறுவப்பட்டு  பராமரிப்பு இல்லாமல் பல்கலைக்கழகத்தின்  ஒரு கோடோவுனாக பயன் படுத்தப்பட்ட இந்த கட்டிடம் பல ஆண்டுகளாகப் பூட்டியே கிடந்தது. (உள்ளே கொஸ்டின் பேப்பர்கள் இருக்கும் என்ற கிசுகிசு வேறு) அண்மையில் சீரமைக்க பட்டதாகச் செய்திகள் வந்த போதிலும் பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்றது அறிவிப்பு.  இந்த கண்காட்சி நடத்துபவர்களின் புண்ணியத்தில்  கண்காட்சியுடன் ஒரு கலையம்சம் மிகுந்த ஒரு  கட்டிடத்தைப் பார்க்க முடிந்தது.




150 அடி நீளத்தில் 60 அடி அகலத்தில் 50 அடி உயரமும் உள்ள தரைதளத்தில்  நுழைந்தவுடன் வாவ்! எனச்சொல்லவைக்கிறதும் சுற்றுச் சுவர்களில் அமைக்கப்பட்டிருக்கும் வட்டமான வண்ண பூக்கண்ணாடிகள். பிரமாண்டமான கண்ணாடிக்கதவுகளுடனிருக்கும் வாயில்கள்.  அதன் வழியே தெரியும் பசுமை , பெரிய, வண்ண  மலர்கள் நிறைந்த மேற்கூரை.
 
 இரண்டு வாயில்களுக்கிடையே இருக்கும் ஓவியங்கள்,  சின்ன், சின்ன தேக்கு மரப்பாளாங்களாலான தரை,  கருங்காலி மரத்தாலான பூ வேலைகள் நிறைந்த மேடையின் முகப்பு. என அசத்துகிறது. திறந்திருக்கும் கதவுகளின் மேல்பகுதி கண்ணாடி சரளங்களின் வழியே நுழைந்து பரந்து விழும்  உறுத்தாத வெளிச்சம்  உள்ளே  வந்த நம்மைத்தொட்டுச் செல்லும் கடற்காற்று  நம்மை வேறு உலகத்தில் நிறுத்துகிறது.


அந்த அரங்கம் முழுவதையும்  புகைப்படங்களால் நிரப்பாமல். நடுவில் மட்டும்,  கடல் அலைகளைக் காட்டும் பிரமாண்டமான படச்சுவர்களுடன்,  ஒரு அறையை  ஒரு ஆணிகூட அடிக்காமல் உருவாக்கியிருக்கிறார்கள்.  வெளியே போகும் பாதையைச் சற்று யோசித்து  கண்டுபிடிக்கவேண்டிய புதிரின்(maze)   பாணியில்அமைந்திருக்கும் அந்த படக்காட்சியில் பெரிய அளவில் சென்னை மீனவர்களின் வாழ்க்கைப் படங்கள். கட்டுமரங்களின்  வண்ணமயமான முகப்புகள்,  நீண்டு தொங்கும் மீன்பிடி வலைகள். மணலில் கிடக்கும் ஒற்றை சங்கு,   வண்ணக் கோலமிடப்பட்ட மீனவர்களின் வீடுகளின் முகப்பு என வண்ணமயமாக இருக்கிறது. இந்த அழகான காட்சிகள் நம் கண்ணில் மட்டும் ஏன் படவில்லை? என்ற எண்ணமும் எழுகிறது. இந்தப்படங்கள்  ஜெர்மனி,  பங்களாதேஷ்  பாக்கிஸ்தான் மற்றும் இந்தியப் புகைப்பட கலைஞர்களின் படைப்புகளின் தொகுப்பு. இவர்கள் அனைவரையுமே  சென்னை மெரினா கடற்கரையின் மீனவர்கள் ஈர்த்திருக்கிறார்கள்.



இதனருகில்  மிக விலையுயர்ந்த. அரிய    புத்தகங்களையும்  நன்கு அமர்ந்து படிக்கும் வசதியுடன்  வைத்திருக்கிறார்கள். புகைப்படக்கலையை  நேசிப்பவர்களுக்கு இந்தப் புத்தகங்கள்  பொக்கிஷம் .நாள்முழுவதும் உட்கார்ந்து  பார்க்கலாம், படிக்கலாம்.    .புத்தகங்கள் பாழாகிவிடக்கூடாது என்று புரட்டிப்பார்க்கக் கையுறை அணியச்சொல்லிக் கொடுக்கிறார்கள்.



அரங்கத்தின் இறுதியில் அரைவட்ட மேடை அதன் மேல்முகப்பின்  அழகிய மரவேலைப்பாடு  நம்மை நிறுத்துகிறது. வந்திருப்பது  புகைப்பட கண்காட்சிக்கு என்பது  நினைவுக்கு வரவே அங்கு  பிரம்மாண்டமாக நிற்கும் ஒரு பாரசீக கம்பளத்தின்  படத்தைப் பார்க்கிறோம்.

 அருகிலிருக்கும் குறிப்பு நம்மை அதிர வைக்கிறது.  கம்பளத்தின் வடிவத்திலிருந்தாலும் அது பல ஆயிரக்கணக்கான சின்னசின்ன  அரைஅங்குல சதுர படங்களால் நிரம்பியிருக்கும் ஒரு கலவைப்படம்.(கொலாஜ்) அந்த சதுரங்களிலிருப்பவை  பலவகைகளில் வதைக்கபட்ட மிருகங்கள்.  கம்பளத்தில் தெரியும் பல வித சிவப்பு  வண்ணம் அவற்றின் ரத்தத்தின் குறியீடு என்கிறது அந்த குறிப்பு.  படங்களை அருகில் சென்று  உற்றுப் பார்த்தால் பயங்கரம் புரிகிறது. (பெரிதாக்கப்பட்ட படத்தைப் பாருங்கள்)  இந்த படங்களை  எடுத்தவர் ரஷித் ராண என்ற பாகிஸ்தானியக் கலைஞர்.




அங்கு  நீண்ட நாள் வாழ்ந்த வவ்வால்களின் வாசனை இன்னமும் நிறைந்திருக்கும் வளைந்த மாடிப்படிகளின் வழியே மேற்தளத்தை அடைகிறோம். அங்கும் பிரம்மாண்டமான கண்ணாடி சரளங்களின் வழியே இதமான வெளிச்சமும் சுகமான கடல் காற்றும். அந்தத் தளம் முழுவதும்  நீண்டிருக்கும் ஒரு  மேஜையில் இந்து நாளிதழின் போட்டோ   காப்பகத்தினரின்  தேர்ந்தெடுக்கபட்ட படங்களின்  தொகுப்பு.  வெறும்  படங்களாகயில்லாமல் சிறிய அளவில் கடவுட்கள் போலச் செய்து நிறுத்தியிருக்கிறார்கள். பலவித அரசியல், சமூக நிகழ்வுகளின்  சாட்சிகளாகியிருக்கும்   இந்த படங்களை ஒன்றுக்கொன்று தொடர்பு இருப்பதுபோல அமைத்திருப்பதில் வடிவமைத்தவரின் சாதுரியம்  தெரிகிறது.  உதாரணமாகத் தேர்தல் நேரத்தில்  நிறுத்தப்பட்டிருந்த  ராஜிவ் காந்தியின்  கட்வுட்டின் படத்தை தொடர்ந்து  அவர் எப்படி விழுந்து இறந்திருப்பார்  என தடயவியல்  நிபுணர்  விழுந்து காட்டி விளக்கும் படம். இப்படி  அடுத்தடுத்து சுவாரஸ்யம் தரும் வகையில் படங்களை ஒரு மெல்லிய  இழையில் கோர்த்திருக்கிறார்கள். . பிரமாண்டமாக நிறுவப்பட்டு சுழல்காற்றில் விழுந்தவிட்ட  ஜெயலலிதாவின் கட்வுட்டை உடனடியாக  சரியாக்கப் போராடும் தொழிலாளர்களின் பணியைச்சொல்லும்  படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது நமக்குத்    திறந்திருக்கும் ஜன்னல் வழியே  எதிரே கடற்கரையில்  ஜெயலலிதா  அமைத்த புரட்சித்தலைவரின்  நினைவிடமும் (பறக்கும் குதிரை)  தற்செயலாக கண்ணில் படுகிறது.




மீண்டும் கீழிறங்கி அரங்கத்தின் மறு முனையிலிருக்கும் மாடிக்குச்செல்கிறோம். நுழைவாயிலின் முகப்பின் கூரையிலிருந்து  இரண்டு புறமும் அழகாக விரிந்து வழியும்,   பூ வேலைப்பாடுகளுடான  படிகள். நுழைவு தளத்தில்  அறைக்காகப் பகுக்கப்பட்டிருக்கும்  மரதடுப்புகளில்  கூட கலைநயம்.  . கட்டபட்டகாலத்தில் வரும் விருந்தினர்கள்  தங்கள் மழைக்கோட்டுகளை, குடைகளை வைக்கத்  தகுந்த வகையில் வரிசையான  அமைக்கப்பட்ட உயரமான அலமாரிகளாலனது  அந்த மரச்சுவர்கள்.
  

இந்த கண்காட்சியில் படங்கள் மட்டுமில்லாமல் அவற்றைக் காட்சிப்படுத்தியிருக்கும் முறையும் நம்மைக் கவர்கிறது.  எட்டு செங்கற்களால்  அடுக்கப்பட்ட  சிறு மேடைகள். அதன்மீது துணியில் பரப்பப்பட்டிருக்கும் வெண் மணலில் விரிந்து கிடக்கும் புத்தகத்தைப் போல நிற்கும் புத்தகம் படிக்க உதவும்  ஸ்டாண்டுகள் அந்த அறையில் அணிவகுத்து நிற்கின்றன.  ஏதோ மதப் பிரார்த்தனைக்கூடம்  போலத்தோன்றினாலும் .  ஒவ்வொரு ஸ்டாண்டிலும் படங்கள் அருகிலேயே  குறிப்புகள்.  படங்களும் அந்தக்  குறிப்புகளும் நம் மென் உணர்வுகளைக் கடுமையாகத் தாக்குகிறது. அனைத்தும் காஷ்மீரத்தின் நிகழ்கால காட்சிகள்.  கோரமான வன்முறை  காட்சிகளாகயில்லாமல்  ஓவ்வொவ்வொன்றும் அந்த மக்களின் மனநிலைகளைப். . வன்முறைகளால்  வாழ்வையிழந்த அந்த மக்களின் சோக முகங்களை   பேசுகிறது.

   என் கணவரும் மகனும் பயங்கரவாதிகள் என தவறாக அடையாளம் காணப்பட்டு சுட்டுக்கொல்லப் பட்டவர்கள் .இங்குதான்  புதைக்கப் பட்டிருக்கின்றனர். இப்போது எனக்கு  அந்த பயங்கரவாதிகளோ அரசாங்கமோ ஆதரவளிக்கவில்லை.  வாழ்நாளை எண்ணிக் கொண்டிருக்கிறேன். என்ற குறிப்பின் அருகே சமாதிகளின் அருகில் ஒரு பெண்ணின் படம்.


காஷ்மீரில் எல்லோரும் ஒருவருக்கு ஒருவர் எதிரானவர்கள்.  புரட்சிகாரர்கள் ராணுவத்தை எதிர்க்கிறார்கள். ராணுத்தினர்  புரட்சிக்காரர்கள் என சந்தேகிப்பவர்களை எதிர்க்கிறார்கள். இவர்கள் சண்டையில்  சதாரண  மனிதர்கள் சிக்கி அழிகிறார்கள். உடைமைகளை இழக்கிறார்கள்

 .  குறிப்புக்கு எதிரில் வெடிகுண்டுகளுக்குப் பலியான  கடையின்  முன் அழுது நிற்கும்   அதன் பெண் உரிமையாளர் படம்.  "தூப்பாக்கிகள் நீளும் போது உரையாடல்கள் நின்றுவிடும்" என்று அப்பகுதிக்குப் பெயரிட்டிருக்கிறார்கள். காஷ்மீரின் அண்மைக்கால கோரம் நினைவைவிட்டு அகலாத இன்றைய நிலையில் இந்தப் படங்களைப்பார்த்த கனத்த மனத்தோடு, வெளியே வருகிறோம்.


 
அந்த  தாழ்வாரத்தின்  கம்பீரமாகக் கலைநயத்துடன் உயரமாக நிற்கும்   அந்த தாழ்வாரத்தின் தூண்களும், பூக்கோலமிட்ட அந்தச் செம்பழுப்பு கட்டிடத்தின் முன் கோபுரங்களும் நீண்டகாலத்துக்குப் பிற்கு மனிதர்களைக் கண்ட மகிழ்ச்சியில் நெகிழ்ந்து நிற்பது போலிருந்தது..