கங்கைக்கரை ரக்சியங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கங்கைக்கரை ரக்சியங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

21/6/15

கங்கை கரை ரகசியங்கள் .... 4



பகல் முழுவதும்  பல இந்திய மொழிகளாலும், சைக்கிள் ரிக்‌ஷாவின் மணிஓசைகளினாலும் நிறைந்திருந்த அந்த காசி நகர வீதிகள்  மெளனமாக இருக்கும்  இருண்ட காலைப்பொழுது. மணி 3. பஸ்கள் நிறுத்த பட்டிருக்கும் இடத்திலிருந்து முன்னால் தலைவர் வண்ண கொடியுடன் வழிநடத்த நம் குழு கால பைரவர் கோவிலுக்கு நடக்க துவங்கியது.
விஸ்வநாதர்  கோவிலுக்கு செல்லும் அதே பாதையில்  நுழைந்து மற்றொரு சந்தின் வழியே போகவேண்டும். காசியில் எந்த கோவிலாக இருந்தாலும் அது ஒரு மிக குறுகிய சந்தில் தான் இருக்கிறது.  தெரு விளக்குகள் இல்லாத அந்த இருட்டில்
ஏற்கனவே நடந்த அனுபவம் கைகொடுக்க மிக கவனமாக ”கோமாதா”க்களை கடந்து கோவிலை அடைகிறோம். போகும் வழியில் இருக்கும் சாட்சி விநாயகரை முதல் நாள் தரிசிக்காமல் வந்ததை நினைவூட்டி  நிறுத்தினார் குழுவில் இருந்த ஒரு டாக்டர். காசிக்கு வரும் அவரிடம் நம் பெயர், தந்தையின் பெயர், மகனின்
பெயரை சொல்லி வேண்டுமாம். அப்பா பெயர் அவர் இங்கு வந்திருக்கிறா என்று சரி பார்பதற்கும், மகன் பெயர் பின்னாளில் நம் மகன் வந்து நம் பெயரை சொல்லும்போது வினாயகர் சரி பார்ப்பதற்குமாம். கால பைரவர் கோவிலின் முகப்பு கதவுகள் மூடப்படுவதேயில்லையாம். கோவிலில் நம் குழுவினரை தவிர வேறு  எவரும் இல்லை.   ”நல்ல வேளை பகல் நேரங்களில்  கோவில் முழுவதும் நிறைந்திருக்கும் பண்டாக்களும்.பூசாரிகளும் இல்லை.  அவர்கள் கையிலிருக்கும் மயிற்பீலிகட்டுகளினால் நம் முதுகில் அடித்து !  ஆசிர்வாதம் செய்து  பணம் கேட்பார்கள் தராவிட்டால் பாக்கெட்டிலிருந்தே எடுத்து கொள்வார்கள்” என்றார். முன்னால் இந்த கோவிலுக்கு வந்திருக்கும் நண்பர்.  கோவில் முழுவதும் ஒரு இடம் பாக்கியில்லாமல் அழுத்தமான சிவப்பு வண்ண ஆயில் பெயிண்ட் பூசபட்டிருக்கிறது.
சன்னதி திறக்க காத்திருக்கிறோம். மிக சின்ன கோவில். பிகாரத்தில் பாதி கயிறு ரட்சைகாப்புகள் விற்பனைசெய்யும் கடைகளால் நிறைந்திருக்கிறது.. காலியாக இருப்பதால்வசதியாக அதில் நின்று கொண்டிருக்கிறோம். தலமை அர்ச்சகர், விஸ்வநாதர் கோவிலுக்கு சென்று  விஸ்வநாதரின் அனுமதி வாங்கியபின்தான் இங்கு வந்து பூஜைகள் செய்வாரம். அவர் வருவதற்குள்  யார் இந்த கால பைரவர் அவருக்கு ஏன் இங்கே கோவில்? என்ற புராணக்கதையை தெரிந்து கொள்வோம்.
ஒரு முறை இந்த மூவுலகத்தையும் படைத்த பிரம்ம தேவருக்கும், அதை பாதுகாத்து பராமரிக்கிற விஷ்ணு பகவானுக்கும் இடையில் ஒரு வாக்குவாதம் எழுந்தது இரண்டு பேருக்குள்ள யாரு பெரியவர் என்பதுதான் வாக்குவாதம். பல நாட்கள் நடந்த இந்த வாக்குவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக சிவன் ஒரு பெரிய ஒளிப்பிழம்பா அடியும், முடியும் தெரியாத அளவுக்கு தன் சுயரூபத்தை வெளிப்படுத்தினார். அப்பவும் வாக்குவாதத்தை விட முடியாத பிரம்மன் அன்னப்பறவையா உருவம் எடுத்து இந்த ஒளிப்பிழம்போட ஆரம்பத்தை கண்டுப்பிடிக்க கிளம்பினார். மகாவிஷ்ணுவோ வராக உருவம் எடுத்து இந்த ஒளியோட அடியை கண்டுபிடிக்க போயிட்டார். பல யுகங்களாக தேடிக்கிட்டே இருந்தாங்க. விஷ்ணு சிவனின் அடியை காண முடியாமல் தன் தேடலை கைவிட்டு, சிவனின் முன்பு வந்து வணங்கி நின்றார். பிரம்மனோ தன் தோல்வியை ஒத்துக்க மனமில்லாமல் சிவனின் தலையில் இருந்து விழுந்த தாழம்பூவை சாட்சியா வைச்சு தான் ஒளிப்பிழம்போட ஆரம்பத்தை பார்த்து விட்டதாக சொன்னார்.
 இப்படி பொய் சொன்ன காரணத்திற்காக இதனை தண்டிக்கும்விதமாக அந்த ஒளிப் பிழம்பிலிருந்து மிகுந்த தீவிரமும், பயங்கரத் தோற்றமும் கொண்ட காலபைரவர் வெளிப்பட்டார். வந்த வேகத்தில் பிரம்மனின் ஐந்தாவது தலையை கொய்தார். ஒரு பிரமாணராகிய பிரம்மனை கொன்றதால் கால பைரவர் ‘பிரம்மகத்யா’ என்ற பாவத்திற்கு உள்ளானார். இதனால், பிரம்மனின் தலை காலபைரவர் கையில் ஒட்டிக் கொண்டது. இதிலிருந்து விடுபடுவதற்காக கால பைரவர் கபால விரதம் பூண்டு, பிரபஞ்சம் முழுவதும் மண்டையோட்டில் பிக்ஷ்ஷை எடுத்து சுற்றித் திரிந்தார். இதனைக் கண்ட மஹாவிஷ்ணு பைரவரிடம், எங்கே சிவபெருமான் தன்னுடைய சுயரூபமான ஒளிப் பிழம்பை வெளிகாட்டினாரோ, அங்கே செல்லும்படி சொன்னார். பைரவர் காசியில் கால் வைத்தவுடன் கையில் ஒட்டிக் கொண்டிருந்த கபாலம் கீழே விழுந்தது. இந்த இடத்தில் தான் கால பைரவர் கோயிலும், கபால மோட்சனத் தீர்த்தக் குளமும் தற்போது அமைந்துள்ளது. தன்னை நாடி வரும் பக்தர்களின் பாவங்களை களைந்து அருள்பாலிக்கிறார்.. தன் தவத்தால் காலத்தை வென்று அதை நிறுத்தும் சக்தி பெற்றிருக்கும் இந்த  தெய்வத்தை வழிபட்டால்  நம்முடைய வாழ்நாள் காலம் முழுவதும் மரணபயம் தாக்காமல் 9 விதமான அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
சிவப்பு வண்ண பஞ்சகச்சவேஷ்ட்டி மஞ்சள் துண்டு சந்தனகோபியில் பளிரென்ற பெரிய குங்குமப்பொட்டு சகிதமாக மோட்டர்சைக்கிளிலிருந்து  இறங்கினார் தலமை அர்ச்சகர். நேரடியாக சன்னதிக்குள் சென்று பூஜைகளை துவக்கினார். நாம் சன்னதி அருகிலிருந்தாலும்  மெல்லிய குரலில் சொல்லுவதால் மந்திரங்கள் கேட்கவில்லை. பைரவி காயத்திரி என்ற அந்த மந்திரங்களை தகுந்த முறையில் உபதேசம் பெற்றவர்கள் மட்டுமே சொல்லமுடியும் என்பதை தெரிந்து கொள்கிறோம். மணிகளின் ஒலி முழங்க  ஆர்த்தியுடன் பூஜை முடிகிறது.
சுயம்புவாக எழுந்திருக்கும் மூர்த்தி சிறியதாக இருக்கிறது.  பெரிய கண்களும் மீசையும் கொண்ட முகம். வெள்ளிகவசம் சாத்தியிருக்கிறது. பார்க்க சற்று பயமாகத்தான் இருக்கிறது.  பூஜை முடிந்தபின்னர் சன்னதியின் பக்க வாயில்வழியே உள்ளே சென்று மூர்த்திக்கு பால் அபிஷேகம் செய்யலாம். கறுப்பு ரட்சை கயிற்றை பூஜித்து வாங்கிக்கொள்ளலாம்.  சன்னதிக்குள் இருக்கும்போது சக்தி அலைகளின் அதிர்வுகளை உணரமுடிகிறது. தியானம் செய்ய தூண்டும் அதிர்வுகள். முழுபயிற்சிகளையும் முடிக்காதாவர்கள் அங்கு தியானம் செய்யவதை தவிர்க்கும்படி சொல்லபட்டிருந்தது. கூட்டம் நெருக்கடிகள் இல்லாதால் மீண்டும் ஒரு முறை தரிசித்து  திரும்புகிறோம்.  இந்த காலபைரவர் காசிநகர காவல் தெய்வமும் கூட.. இவரின் கீழ் காசியின் 8 திக்குகளிலும் பைரவர் சன்னதிகள் இருக்கின்றன. அனைத்திலும் ஒரே நேரத்தில் இந்த அதிகாலை பூஜைகள் நடைபெறுகின்றன.  ஈசன் ஸத்யோகம்,வாமதேவம்,அகோரம்,தத்புருஷம், ஈசானம்  என்று ஐந்து முகங்களில் தன் அருளை வழங்கியிருக்கிறார் அதில் ஒன்று இந்த சிவாம்சமான பைரவமூர்த்தி  என்றும் சொல்லபடுகிறது.  வெளியில் வந்து வெளிச்சம் மெல்ல வரத் துவங்கியிருக்கும்  அந்த பொழுதில் நம் செருப்பை தேடி கண்டுபிடித்து நடக்க துவங்குகிறோம். 
ஒரு கிலோ மீட்டர் தொலைவில்  மற்றொரு சந்தின் மத்தியில் காசி
விசாலாட்சி கோவில்.  கோபுர முகப்பும், அதிலிருக்கும் உருவங்களும் அதன் வண்ணங்களும்  அது தமிழக கோவில் என்பதை அடையாளம் காட்டுகிறது. 1908ல் புதிபிக்கபட்டதைச் சொல்லும் கல்வெட்டு. வாசல் நிலையில் கஜலெட்சுமி. சிறியகோவில்தான் ஆனால் பளிச்சென்று விளக்குகளின் வெளிச்சம் நிறைந்திருக்கிறது. பலநூறு ஆண்டுகளாக இருக்கும் இந்த கோவிலை நிர்வகிப்பவர்கள் தமிழக நகரத்தார் சமூகத்தினர். மிக சக்திவாய்ந்த இந்த சக்திபீடத்தை தரிசிக்க காசி விஸ்வநாதரை தரிசித்தபின் வருகிறார்கள்.  தொடர்ந்து பூஜைகள் நடப்பதால் எப்போதும் கூட்டம்.
அர்ச்சகர்கள் உள்ளூர்கார்கள். தமிழ் பேசினால் புரிந்து கொள்கிறார்கள். அலங்காரம் நம்மூர் பாணியில் செய்யபடுகிறது. குங்கும அர்ச்சனையும் செய்கிறார்கள். அம்மனுக்கு புடவை/சிவப்பு வளையல் சாற்றி பெற்றுகொள்கிறார்கள். நகரத்தார் சமூகத்தினர் குழுவாக வந்து பிராத்திக்கிறார்கள். ஆண்டுதோறும் வரும் குழுக்களும் உண்டு. கோவிலின்
உள்ளே 100 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு திருப்பணியின் விபரங்களை  அன்றைய பாணி தமிழ் எழுத்துகள் சொல்லுகிறது.  நகரத்தார் அறக்கட்டளை இந்த கோவிலை நிர்வகிப்பது மட்டுமில்லை விஸ்வநாதர் கோவிலுக்கும் தினசரி  அபிஷேகத்திற்கு 30 லிட்டர் பால் தருகிறார்கள். இதை தமிழக மங்கல வாத்தியமான நாதஸ்வரம், மேளம்  ஒலிக்க கோவிலுக்குக்கு
எடுத்துச்செல்லுகிறார்கள். 1500 கீமிக்கள் கடந்து இருக்கும் ஒரு தெய்வ சன்னதிக்கு தினசரி அபிஷேக பால் வழங்குவது தமிழர்கள்.   பலநூறு ஆண்டுகளாக காசிக்கும் கங்கைக்கும் தமிழ்நாட்டுக்கும்  தொடரும் இந்த பந்தம் நம்மை சிந்திக்கவைக்கிறது. 



--------------------------------------------------------------------------------------------------
சத்குருவின் பதில்கள்
“‘காலபைரவர்’ இந்த பெயரைக் கேட்டாலே பயமாக இருக்கு   காசியில் அந்த அமானுஷ்ய சக்தி நிறைந்த சன்னதிக்கு ஏன் போக சொல்லுகிறீர்கள்?



பயம் என்று எதைச்சொலுகிறீர்கள்? காலம் என்றாலே மரணம் என நாம் எண்ணிக்கொள்வதினால்தானே? மரண பயங்களை தாண்டி நிற்பவன் கால பைரவன். நம் வாழ்க்கை என்பது என்ன?  சக்தியும் காலமும் இணைந்தது. சக்தி என்பது நமக்கு வேண்டியதை நாமே தீர்மானித்துகொள்வது. அது உடல் சக்தியானலும் சரி. ஆன்மிக சக்தியானலும் சரி. ஆனால் காலம் எவராலும் கட்டுபடுத்த முடியாத ஒன்று. அதனால் தான் மரணம்டைந்தவரை நாம் காலமானவர் என்று சொல்லுகிறோம். ஒரு வினாடி யோசியுங்கள். காலம் நின்றுபோனால் என்னவாகும்? பிறப்பு,இறப்பு, பூமியின் சுழற்சி இயற்கையின் மாற்றம் எதுவுமே இருக்காது இல்லையா? பயம் என்பதே இருக்காது. அந்த நிலையில் இருக்கும் ஒரு சக்தி தான் கால பைரவர். அவர் சிவனா? என்று கேட்டீர்கள்/ சிவா என்பதின் உண்மையான பொருள்  முழுமையான ஒரு வெறுமை- ஒன்றுமே இல்லாத ஒரு நிலை. பூமி, பிரபஞ்சம் காலம் எல்லாவற்றையும் கடந்த நிலை அந்த நிலையில் இருக்கும் சக்தி உடல் தாண்டி போன உயிர்களுக்கு  வேறு ஒரு உடலை தேடாமல் நிலைகொள்ளச் செய்யும் ஆற்றல் கொண்டது.  நம் காலம் முடியும் போது இந்த சக்தியை உணர்ந்து இதை அடைய   உயிர் உள்ள போதே ”காலபைவர கர்மா சாதனா” செய்ய வேண்டும். ஆனால் அதற்கு மிகக்கடினமான, அதி தீவிரமான பயிற்சிகள் வேண்டும். அதைச்சொல்லி கொடுக்க மிக குறைந்த அளவில்தான் இருக்கிறார்கள். ஒரு கைவிரல் எண்ணிக்கைகள் கூட இல்லை.  மேலும் அவைகளை எல்லோராலும் செய்ய முடியாது. அதனால் தான்.  அந்த சக்திகள் இருக்கும் காலபைரவனை தரிசிக்க சொல்லுகிறேன். போவதற்கு எந்த பயமும் தயக்கமும் வேண்டாம்.  நீங்கள் அங்கு போய் எதுவும் வேண்டிக்கொள்ள வேண்டாம். தியானம் செய்ய வேண்டாம். அந்த அதிர்வுகளை உணருங்கள் அதுவேபோதும்




31/8/14

கங்கை கரை ரகசியங்கள் ....7



இன்று காசியாக அறியபட்டிருக்கும் இந்த பழமையான நகரின் பெயர் வாரணாஸீ. இப்படித்தான் இதிகாசங்களிலும் முகம்மதியர் படையெடுப்புகளின் போதும் இந்த பெயரால் தான்  அழைக்கபட்டிருக்கிறது. இங்கு பேசப்பட்ட மொழிகளில் ஒன்று பாலி மொழி. அதில்  ”பருணாசி” என்று சொல்லபட்டு வந்த இது ஆங்கிலேயர் ஆட்சியில் பனாரஸ் ஆகியிருக்கிறது.  ஆன்மிகத்தை தாண்டி  ஆங்கிலேயர்கள் இதை கைவினைக்கலைஞர்களின் நகரமாக பார்த்து அதை ஊக்குவித்திருக்கிறார்கள். அவர்களினால் தான் இங்கிருந்த  மிக நுண்ணிய வேலைப்படுகளிடுன் கூடிய பட்டுநெசவு தொழில் இங்கிலாந்து வழியாக உலகை எட்டியிருக்கிறது. 
குறைந்த விலையில் நல்ல பனாரஸ் சாரி வாங்கவேண்டும்  என்று குழுவிலிருந்த பலர் புறபட்டபோது, நாம்  இந்த சேலைகள் தயாரகுமிடத்தை பார்க்க வேண்டும் என்று  விரும்பி விசாரித்து கொண்டிருந்தோம்.  நம்முடன் இணைந்தவர்கள் குழுவிலிருந்த இரண்டு வெளிநாட்டினர்.  ”அதற்கு நீங்கள் பாலத்தை தாண்டி கங்கையின் மறு கரையிலிருக்கும் ராம்நகருக்கு  போகவேண்டும்” என்றார்கள். 14 கீமி தூரத்தில் 6 கீமி நீள பாலம். அந்த பாலத்திலிருந்து கங்கையையும் அத்தனை படித்துதுறைகளையும் பார்த்தது   இப்போதும் கண்ணில் நிற்கும் காட்சி. ஒரு நல்ல ஓவியத்தை பார்த்தது போலிருந்தது
.  மறு கரையிலிருக்கும் பனாரஸ்  நாம் பார்த்த காசிக்கு எந்தவித சம்பந்தமும்மில்லாத ஒரு தொழில்நகரம். பட்டுநெசவு, சரிகைஉற்பத்தி, பித்தளை பாத்திரங்கள், பூஜைபொருட்கள் உற்பத்தி என பல தொழில்கள். எல்லா தொழில்நகரங்களுக்கும் உள்ள பிரச்சனைகளுடன் இருக்கிறது. இந்நகர் வாசிகள் காசி நகருக்கு வருவதில்லை. பிஸினசில்தான் கவனமாகயிருக்கிறார்கள். இந்நகருக்கு முன்னே இருப்பது ராம்நகர். அங்கும்  எல்லா வீடுகளிலும் பட்டுநெசவுதுத்தொழில். தொழிலாளிகளில் பலர்  சந்தோஷமாகயில்லை. ஒரு புடவையை முடிக்க 15 நாள் ஆகும் டிசைனைப்பொறுத்து 1000 ரூபாய்வரை கூலி  கிடைக்கும். அதை புடவையின் தயாரிப்பு நிலையை பொறுத்து  அவ்வப்போது கொடுப்பர்கள் என்கிறார். 40 ஆண்டு இந்த தொழிலை செய்யும் நெசவாளி ஒருவர்
தான் நெய்து கொண்டிருக்கும் புடவையின் விலை தனக்கு தெரியாது என்றும் சொல்லுகிறார்.
ராம்நகரில் தான் பனாராஸ் மன்னரின் அரண்மனை. கங்கையின் கரையில் ஒரு கம்பீரமான கோட்டை. அதன் மதில் களை தாண்டி அரண்மனை. பாராட்டும்படியான பாராமரிப்பு  இல்லையென்றாலும் பளிச்சென்று அரண்மைக்கான களையுடன் இருக்கிறது.  அரச வம்சத்தின் இன்றைய தலைமுறை குடும்பத்தினர் இங்குதான் வசிக்கிறார்கள்.
கடைசி மன்னர் 2000ல் மறைந்த பின்னர்  வாரிசுகள் அரசர்கள் அழைக்கபடவேண்டியது இல்லை என்பது சட்டமானலும் இங்குள்ளவர்களுக்கு இவர் மாட்சிமைதாங்கிய மன்னர்தான். காசி விஸ்வநாதர் கோவிலின் தலமை அறங்காவலர். பனாரஸ் இந்து பலகலை கழகத்தின் வேந்தர்  எல்லாம் இவர் தான்.  கோவில் விழாக்கள், சிறப்பு பூஜைகள் எல்லாவற்றிக்கும் இவர் உத்தரவு தர வேண்டும்.  அரண்மனைமுகப்பில் கொடி ஏற்ற பட்டிருந்தால் மன்னர் அரண்மனையில் இருக்கிறார் என்று அர்த்தமாம். 
அரண்மனையின் ஒரு பகுதி  சரஸ்வதி மஹால். அது அருங்காட்சியமாக மாற்றப்பட்டிருக்கிறது.  மன்னர் வம்சங்களின்  கலைப்பொருட்களின் சேமிப்புகள்.   ஆடை அணிகலன்களுடன் அவர்கள் பயன்படுத்திய பல்லக்குகள் - தந்தம், மூங்கில், வெள்ளி என பல பல்லக்குகள். விதவிதமான வாட்கள், கடிகாரங்கள், எல்லாம். துளிசிதாஸ் எழுதிய ராமசரித்திரத்திரத்தின்  மூலப்பிரதி கண்ணாடிப்பேழைக்குள் பட்டு மெத்தையில் இருக்கிறது.  கடைசி அரசர் துப்பாக்கிகளின் காதலராம். 1000 வகை துப்பாக்கிகள். குறிபார்த்து சுடுவதில் வல்லுரான அவரால்  தூக்கி எறியபட்டபோது சுடப்பட்ட  நாணையங்கள் உருக்குலைந்தநிலையில் அந்த துப்பாக்கிகளுக்கு அருகில் வைக்கபட்டிருக்கிறது.  வெளியே வந்த நாம் பார்ப்பது பெரிய திறந்த வெளியின் முன்னே  ஷெட்களில் அணிவகுத்து நிற்கும்  சாரட்டுகள், பழைய கார்கள்.
இந்தியாவிற்கு வந்த முதல் ரோல்ஸ் ராய்ஸ், ஸுடூடிபேக்கர்  போன்ற கார்கள்.  எல்லவாற்றிலும் ராஜ இலச்சினை. எல்லாவற்றிலும் நம்பர் பேளேட்டில் எண் 1.  இந்த காட்சியகத்தின் பணியாளார்கள் மன்னரின் அரண்மனை பணியாளார்கள். இன்றைய மன்னர் என்ன கார் பயன்படுத்துகிறார்? என்ற நாம் கேட்டதற்கு பதில் ”மன்னரின் சொந்த விஷயங்களை நாங்கள் பேசுவதில்லை.”  வெளியில் வரும் போது எவரும் பார்க்ககூடிய ஒரு விஷயத்தை கூட சொல்ல மறுக்கும் அந்த ஊழியரின் ராஜ விசுவாசம்  நமக்கு சிரிப்பை வரவழைக்கிறது..  நதிக்கரையிலிருக்கும்  அந்த கோட்டையின் அருகிலிருந்து எதிர்கரைக்கு  படகிலும் போகலாம் என்பதை அறிந்தவுடன் மீண்டும் ஒரு முறை கங்கையில் படகில் போகும் வாய்ப்பு என்று மனம் துள்ளியது. படகு  கிளம்பியதும் பக்கத்து படித்துறையில் பார்த்தது வாரியிறைத்த வானவில்லாக பரந்து கிடந்த பட்டுசேலைகள். விசாரித்ததில் அது பனாராஸ் சேலையில் ஒரு வகைஎன்றும். கெமிக்கல் இல்லாத இயற்கைமுறையில் தயாரிக்கபட்ட சாயத்தில் தோய்க்கபட்ட நூல்களினால் நெய்தது என்றும் அதை கடைசியில் மீண்டும் இப்படி  ஒரு முறை இப்படி உலர்த்துவார்கள் என்றும் சொன்னார்கள்
முதல் முறை கரையின் அருகிலேயே படகில் பயணித்த நாம் இன்று கங்கையையின் குறுக்காக பயணித்து மறுகரைக்குப் போகிறோம். எதிரே தெரியும் படித்துறைகள் நம்மை நெருங்குகிறது. படகில் நம்முடனேயே  வரும் போட்டோகிராபர்  விரும்புவர்களை கங்கையின் பின்னணியில் படமெடுத்து, உடனே அதை படகிலேயே இருக்கும் பேட்ரியில் இயங்கும்  ஒரு பிரிண்ட்டரில் படமாக்கி தந்துகொண்டிருக்கிறார்.  20 ருபாய்களுக்கு நடு கங்கையில் படமெடுத்து பிரிண்ட்ட தருகிறார்கள் டிஜிட்டல் டெக்னாலாஜி உபயம்.
ஓவ்வொரு ”காட்”லும் ஒரு கோவில் மூன்று வேளைபூஜை. அதனால் எந்த படித்துறையில்  நீங்கள் குளித்தாலும் முதலில் அங்குள்ள தெய்வத்தை வழிபட்டபின்னரே நகருக்குள் செல்ல வேண்டும்.  , குழந்தை பிறப்பு, கல்வியின் துவக்கம், திருமணம், உடல்நலம், குடும்பத்தினர் நலம் மணவாழ்வுநலம், இறுதியாக மரணம் என்று மனித வாழ்வு சம்பந்தபட்ட ஓவ்வொருவிஷயத்திற்கும் இந்த  கங்கைக்கரையில் ஒரு தெய்வ சன்னதியிருப்பது பார்க்கும்போது எப்படி இந்த கங்கைக்கரை வாழ்வோடு  இணைந்த ஒரு விஷயமாகியிருக்கிறது என்று புரிகிறது. 
படகு மணீகர்ணா தீர்த்த கட்டத்தை நெருங்குகிறது.   தொலைவிலிருந்து பார்த்த புகையும் நெருப்பும் இப்போது பளீரென தெரிகிறது. மிதக்கும் படகிலிருந்து கரையில் நிகழும் மனித மரணத்தின் கடைசிகாட்சிகளை பார்க்கும்போது மனம் கனமாகி  இனம்தெரியாத உணர்வுகள் நம்மை தாக்குகிறது. எரிவது எவரோ என்றாலும் ஐயோ என்ற எண்னம் எழுவதை தவிர்க்க முடியவில்லை. பார்த்துகொண்டு இருக்கும்போதே  பத்து நிமிடத்தில் வந்த இரண்டு உயிரற்ற உடல்கள்,  அவைகளுக்கு இடமில்லாதால் எரிந்துகொண்டிருப்பவைகள் தகனமேடையிலிருந்து கிழே தள்ளப்பட்டது, உடல்களை எரியூட்ட படகுகளில் வந்துகொண்டிருந்த விறகுகள்,
எல்லாம்  அவர்களுக்கு இது  தினசரி வாடிக்கை என்பதை புரியவைத்தது. ஆனால் நமக்கு மறக்கவிரும்பும் மனதை பிசைந்த காட்சிகள் அவை. சராசரி ஒரு நாளைக்கு 50 உடல்கள் வரும்,  இரவு பகலாக எரியும் இந்த நெருப்பை பல நூறு ஆண்டுகளாக அணைப்பதே இல்லை என்று என படகோட்டி சொன்னபோது இந்த உலகில் நிரந்தரமாக நடக்கும் விஷயங்களில் மரணமும் ஒன்று, நமக்கும் ஒரு நாள்  நிகழும் அது வரை அது பார்க்கும்போது  வருத்தமான விஷயமாகத்தான் இருக்கும் என்று உரைத்தது. .  உயிரற்ற உடல்கள் உருக்குலைந்ததை அத்துணை அருகில் பார்த்ததினால் நம் மனம் கனமாக இருப்பதைப்போல நம்படகும் கனமாகிவிட்டதோ என்று எண்ணும் அளவிற்கு படகும் மெல்ல செல்கிறது. நீரின் வேக  ஓட்டம் போதுமானதாக இருப்பதால் துடுப்பு போடவில்லை என்ற படகோட்டி சொல்லுகிறார். 
படகு கரையை அடைந்தாலும் காட்சியின் தாக்கம் கரையவில்லை. சாலையில் நடக்கும்போது காசிநகரின் எல்லாப்பகுதிகளிலும் கேட்கும் டிரிங், டிரிங் சைக்கிள் ரிக்‌ஷாகளின் மணியோசையும்,பலமொழிகளின் ஓசையும் மெல்ல நம்மை இந்த உலகிற்கு இழுத்துவருகிறது.
நாளைகாலை  புத்த கயாவிற்கு போக இருக்கும் விவரங்களை அறிவிக்கிறார்கள்.  இறப்பின் துயரத்தை பார்த்து  துவண்டு துறவறம் பூண்ட புத்தரை தரிசிக்க நாமும் இன்று அத்தகைய  சோகங்களை பார்த்தபின் போகப்போகும் வினோத ஒற்றுமையை எண்ணிக்கொண்டே தூங்கச்செல்லுகிறோம்
^^^^^^^^^^^^^^
சத்குருவின் பதில்கள்

 நம் வேதங்கள்  இந்த காசிநகரில்தான்  எழுதபட்டதாக சொல்லப்படுகிறதே?


 பலர் நினைப்பது போல நமது நான்கு வேதங்களும் ஒருவராலோ அல்லது ஒருசிலராலோ  எழுதப்படவில்லை.  நீண்ட காலத்திற்கு வாய்வழியாக சரியான ஒலி வடிவில் மற்றவர்களுக்கு சொல்லபட்டிருக்கிறது. அது இங்கு நிறைய நடந்திருக்கிறது. வேதங்கள் இந்த பூமியின் மிகத் தொன்மையான நூல்களாக இருப்பினும், மற்ற எந்த நூலையும் விட விரிவான, விஸ்தாரமான உள்ளடக்கம் கொண்டவை. வேதங்கள் யாரோ  ஒருவர் எழுதி வைத்த ஒழுக்க விதிகள் அல்ல. அவை வெளிநிலை மற்றும் உள்நிலை சம்பந்தமான பல ஆழமான கண்டுபிடிப்புகளின் தொகுப்பு. பலர் செய்திருக்கிறார்கள். 
வடிவத்தை யந்திரம் என்றும், ஒலியை மந்திரம் என்றும், இவை இரண்டையும் இணைத்துப் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை தாந்திரீகம் என்றும் சொல்கிறோம்.
வடிவங்களை ஒலியாக மாற்றுவதைப் பற்றி வேதங்களின் பல்வேறு பகுதிகள் பேசுகின்றன. ஒரு ஒலியை, ஒலி அளக்கும் கருவியான ஆசிலாஸ்கோப்பிற்குள் செலுத்தினால், அது அந்த ஒலிக்கு ஏற்ப ஒரு வடிவத்தைக் கொடுக்கிறது. ஒவ்வொரு ஒலிக்கும் ஒரு வடிவம் இருக்கிறதென்று இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது. அதே போல ஒவ்வொரு வடிவத்திற்கும் ஒரு ஒலி இருக்கிறது. ஒலிக்கும், வடிவத்திற்குமான இந்த உறவை வேதங்களில் மிக விரிவாக விளக்கியிருக்கிறார்கள். ரிக், சாம, மற்றும் அதர்வண வேதங்கள் பெரும்பாலும் இந்தப் பிரபஞ்சத்தை ஒலி வடிவமாக மாற்றி, அந்த ஒலியை உச்சரிப்பதன் மூலம் இந்த பிரபஞ்சத்தை நமக்குள் எதிரொலிக்கச் செய்வது பற்றித் தான் பேசுகின்றன. ஒலியின் மீது ஆளுமை பெறுவதன் மூலம், வடிவத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்த முடியும். இதுதான் மந்திரங்களின் விஞ்ஞானம்.

துரதிருஷ்டவசமாக, காலப்போக்கில் மந்திரங்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு, தவறாகப் பயன்படுத்தப்பட்டுவிட்டன. வேதங்கள், மனம் மற்றும் உள்நிலை சார்ந்த அறிவியல் என்பதால் அவற்றைக் கற்க ஆழமான ஈடுபாடும், அர்ப்பணிப்பும் தேவை. அதற்காக நீங்கள் உயிரையே விடத் தயாராக இருக்கவேண்டும்; இல்லாவிட்டால் அவை உங்களுக்குப் பலன் தராது. உங்களுக்கு கல்வித்தகுதியாகவோ, வேலைவாய்ப்பாகவோ இதை நினைத்தால், இதனால் உங்களுக்கு எவ்விதமான பயனும் கிடைக்காது. உங்களையே அதற்கு அர்ப்பணித்தால்தான், உங்களுக்குப் அதன் பயன் கிட்டும். இதற்குத் தேவையான உண்மையான அர்ப்பணிப்பு இல்லாமல் போனதால், எல்லா வகையான தவறான புரிதல்களுக்கும், பயன்பாடுகளுக்கும் ஆளாகி இந்த விஞ்ஞானம் சீரழிந்துவிட்டது.
வேத முறைகள் எப்போதுமே மனிதனின் புரிதலை ஆழமாக்குவதை நோக்கித்தான் இருந்ததே தவிர அவன் அறிவை விஸ்தாரமாக்கவதற்காக ஏற்பட்டதில்லை.  உங்கள் புரிதல் பொருட்தன்மையைத் தாண்டி உயரும்போதுதான், உண்மையான ஆன்மீகப் பயணம் துவங்குகிறது  இதைத்தான் நம் முன்னோர்கள் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இதைச் செய்து கொண்டிருந்தார்கள்; 

31/3/14

கங்கைக் கரை ரகசியங்கள் 12

பாட்னா நகரின் கங்கைக்கரையில் காந்திகாட் டிலிருந்து கிளம்பி சூரியோதம் பார்ப்பதற்காகவே ஒரு ரவுண்ட் வரும் M.V கங்கா விஹார் என்ற இரண்டு அடுக்கு மோட்டர் படகிலிருக்கிறோம். நேற்றிரவு  கங்கையில் எங்கே பாதுகாப்பாக குளிக்கலாம்? என்ற கேட்டபோது பீஹார் டூரிஸ்ட்டின் இந்த படகு சவாரி பற்றி சொல்லி புண்ணியம் கட்டிக்கொண்டவர் அந்த ஹோட்டல் மேனேஜர். கங்கையில் சூரியோதத்தை காசுகொடுத்துபார்க்க வைக்கும் புத்திசாலிகளான பிஹார் டூரிஸம் துறையினரின் இந்த படகில் ஏர்கண்டிஷன் ரெஸ்டோரண்ட்டும் இருக்கிறது.  அந்த விடியற்காலைப்பொழுதில்  நமக்கு வினோதமாகவும் பலருக்கு விருப்பமாகவும் இருக்கும் பிரேக்பாஸ்ட்டாக  ஜிலேபியையும்,  எண்ணை மினுமினுக்கும் ஆலுபரோத்தாவையும்  தருகிறார்கள். படகு கட்டணம் இதற்கும் சேர்த்துதானம். இந்தியாவின் மிகப்பிரமாண்டமான நதிப்பாலங்களில்  ஒன்றான காந்தி சேதுவை ஒரு ரவுண்ட் சுற்றி கரைக்கு திரும்புகிறது படகு.

வாரணஸியிலிருந்து கங்கைக்கரையோடு புத்த தேசத்தில் பயணித்து கொண்டிருந்த நாம் இப்போது பயணத்தின் இறுதிகட்டமாக அந்த புனித நதியின் கரையிலிருக்கும்  பாட்னாவிலிருக்கிறோம். இன்று ஒரு மாநில தலைநகரமாகயிருக்கும் இந்த நகரம் பாடலிபுத்திரமாக இருந்தபோது மகத நாட்டின் தலைநகராக, இன்றைய  இந்தியபரப்பளவின்  முக்கால் பகுதிக்கு தலைநகராகயிருந்திருக்கிறது. வேறு எந்த இந்திய நகரத்துக்கும் இந்த சரித்திர பாரம்பரிய பெருமை கிடையாது.  ஆனால் இன்று அந்த   சரித்திரங்களின் சான்றைச் சொல்ல நகரில் ஒரு பழமையான கட்டிடம் கூட இல்லை.  நகர் முழுவதும்  நவீன கட்டிடங்கள். இந்தியாவில் தனிநபர் வருமானம் அதிகமுள்ள நகர்களின் பட்டியலில் முக்கிய இடத்தில் இருக்கிறது இந்த நகரம். கடந்த சில ஆண்டுகளில் மிக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது.
 நமது சென்னை பயணம் மாலையில் தான் துவங்க இருப்பதால்  இங்குவேறு என்ன பார்க்கலாம்? என விசாரிக்கிறோம்.  நகரின் மையப்பகுதியிலுள்ள பெரிய காந்தி மைதானத்தின் மேற்கு மூலையில் இருக்கும்  ”கோல்-கர்” என்ற இடத்தை சொன்னார்கள்.  கோள வடிவ இல்லம் என்று சொல்லபட்டாலும் அது உருண்டையாக இல்லை..  ஒரு கோழிமுட்டையின் வடிவில்    கட்டபட்டிருக்கும் சேமிப்பு கிடங்கு.

உலகம் முழுவதும் பேசப்பட்ட 1770 ன் வங்காளப் பஞ்சத்திற்கு பின் அன்றைய  கவர்னர் ஜெனரல் வாரன்ஹேஸ்டிங்கின் ஆணையின் படி உருவாக்கபட்ட தானிய கிடங்கு இது.  ஒரு லட்சம் டன்களுக்கு மேல் சேமிக்கலாம். ஒரு புத்த ஸ்தூபியின் வடிவில் உட்புறம் காலியாக நிறுவபட்டு,
 அதன் மேல்புறத்திலிருக்கும் வாய்ப்பகுதி வழியாக தானியங்கள் உள்ளே கொட்டப்படும். அதற்கு வசதியாக வளைவாக படிகட்டுகள். கீழே உள்ள கதவுகளின் மூலம் எடுத்து கொள்ளப் படும்.  தானியம் யாருக்காக சேமிக்கப்பட்டிருக்கிறது தெரியுமா? அன்றைய ராணுவத்தினருக்காக. முழுவதும் பலவிதமான செங்கற்களை மட்டுமே பயன்படுத்தி கட்டபட்டிருக்கும் இது கட்டிடஇயலில் ஒரு சாதனையாக இன்றும் ஆர்க்கிடெட்களால் வர்ணிக்கப்படுகிறது. இன்று இதில் எதுவும் சேமிக்கபடுவதில்லை. சுற்றுலா வருபவர்கள் பார்க்குமிடமாகியிருகிறது.   குறுகலாக இருக்கும் 145 படிகள்.  மூச்சுவாங்க ஏறிப்போனால் நகரையும், கங்கையும் பார்க்கலாம்.  கங்கை எல்லா இடங்களிலுமிருப்பது போல அழகாக, கம்பீரமாக  இருக்கிறது.  அங்கிருந்து அன்னைக்கு ஒரு குட்பை சொல்லிவிட்டு இறங்கி நகரை சுற்றிவிட்டு திரும்புகிறோம்.
பரபரக்கும் பாட்னா ஸ்டேஷனில் பத்தாவது பிளாட்பாரத்திலிருந்து சங்க மித்திரா எக்ஸ்பிரஸ் சென்னைக்கு தன் பயணத்தை முன்னோக்கி துவக்கி வேகமெடுக்கிறது.   இந்த இனிய பயணத்தில் பார்த்ததை, அனுபவித்ததை. நினைவுச் சிதறலாகயிருப்பதை,  வீட்டிற்கு போனதும் நம் குடுமபத்தினருடன்  எதை? எப்படி? பகிர்ந்துகொள்வது என்பதை நம் மனம் அலசுகிறது, மனம் பின்னோக்கி காசிநகருக்குக்கு போகிறது. முதல் நாளும், அதற்கு பின்னரும் ஒருமுறை பார்த்த, கண்ணிலேயே நிற்கும் கங்கா ஆர்த்தி காட்சி  படமாக ஓடுகிறது.

 சில்லென்ற கங்கைமாலைக்காற்றின் சுகத்தில் படகுப்பயணத்தை அனுபவித்து கொண்டே ஆர்த்தி கட்டத்தை நெருங்குகிறோம். துவங்க இன்னும் அரைமணி நேரமிருந்தாலும் படித்துறையில்  மக்கள் உட்கார ஆரம்பித்துவிட்டார்கள்.ஓலிபெருக்கியில் பக்தியிசை, அறிவிப்புகள். நிறைய வெளிநாட்டினர் நம்மைப் போல படகில் காத்திருக்கிறார்கள்.வேறு சிலர் படகில் பயணம் செய்யாவிட்டாலும் பார்ப்தற்காக,  படமெடுப்பதற்காக காசு கொடுத்து காலிப்படகுகளில் உட்காருகிறார்கள் . மெல்ல இருள் பரவுகிறது.அதிகமாகிக்கொண்டிருக்கும் கூட்டம், ஆர்வத்தைத்துண்டும் அறிவிப்புகள் ஆர்த்திப் பாடல்பாடும் குழு வந்தமர்கிறது. இந்திய மொழிகள் அனைத்தும் காதில்விழுகிறது. படிகளினிடையே பலகையினால் நிறுவப்பட்ட சிறிய மேடையில் தங்கமாய் மின்னும் ஒரு குட்டி மண்டபம். உள்ளே முகம் மட்டும் தெரியும் கங்காமாதா. அருகில் பூஜை சாதனங்கள்.பக்கவாட்டில் பக்கத்திற்கு இரண்டாக நாலு சிறிய மேடைகள் அதிலும் பூஜை பொருட்கள். மணி 7ஐ நெருங்குகிறது.படிகளில் கூட்டம் வழிகிறது.. மின் விளக்கு வெளிச்சத்தில்  தகதகவென பளபளக்கும் ஆரஞ்சுக் கலர்பட்டாடையில் பூஜைமேடைஅருகே கம்பீரமாக நிற்கும்  இளைஞர்கள். டாண்ணெண்று 7 மணிக்கு சங்கு ஒலி அறிவிப்பபைத் தொடர்ந்து பூஜையை நடுமேடையில் வந்தமரும் தலமைப்பூசாரி துவக்குகிறார். பள்ளியில் காலை வணக்க கூட்டத்தில் சலசலத்துக் கொண்டிருக்கும் குழந்தைகள் விசிலடித்ததும்  அமைதியாகிவிடுவதுபோல  சட்டென்று கூட்டம் அமைதியாகி கவனமாக பார்த்துக் கொண்டிருக்கிறது. மேடையிலிருக்கும் தேவிக்கு முதல் பூஜை முடிந்து  ஒரு சிறிய தீபாரதனை. அந்த தீபத்திலிருந்த எடுத்த அக்கினியில் அருகில் தயாராகயிருக்கும் பெரிய தீபங்கள் ஏற்றபடுகிறது. இசைகுழுவின் ஆர்த்திபாடல் ஒலிக்கிறது. ஓவ்வொன்றாக 7 விதமான தீபங்கள், படியிலிருந்து கங்கையை நோக்கி மூன்று திசைகளுக்கும் காண்பிக்கபடுகிறது. ஒவ்வொருமுறையும் 5 பேரும் இசையுடன் இணைந்து துல்லியமான அசைவுகளைக்கூட ஒரு பிசிரில்லாமல் தேர்ந்த  நடன கலைஞர்களைப் போல நேர்த்தியாக  செய்யும் அந்த காட்சி நம்மை பிரமிக்க வைக்கிறது. கனமான,சூடான அந்த  அடுக்குத்தீபங்களை ஒருகையில் தூக்கிச்சுழற்றிக்கொண்டே மறு கையில் கனமான மணியை ஆட்டி அடித்துக்கொண்டே ஒரு காலில் மண்டியிட்டு  5 பேரும் ஒரே நேரத்தில் வினாடிபிசாகமல் திரும்புகிறார்கள். தொடர்ந்த பயிற்சி,இசைஞானம்,பக்தி இவை யெல்லாம் இல்லாமல் இதைச்செய்யமுடியாது நூற்றுகணக்கான விடியோக்கள் இயங்குகின்றன.ஆயிரக்கணக்கான காமிராக்கள் பதிவுசெய்கின்றன.100 வருடங்களாக ஒருநாள்கூட விடாமல் தொடர்ந்து நடைபெறுவதாக சொல்லப்படும் இந்த நிகழ்ச்சிக்கு கட்டணம் எதுவுமில்லை.பார்ப்பவர்கள் தரும் காணிக்கைகளதான்.
இறுதியில் பல அடுக்கு விளக்குகளுடன் மஹாஆர்த்தி. காத்திருந்த மக்கள் தங்கள் கைகளில் புஷ்பங்களுடன் இலைகளில் வைத்திருக்கும் சிறு தீபங்களை மிதக்க விடுகிறார்கள். சில நிமிடங்களில் நூற்றுக்கணக்கில் நம் படகை கடந்து மிதக்கும்
அந்த மின்னும்  நட்சத்திரங்களை ரசித்த வண்ணம் கவனமாக அருகில் நிற்கும் படகுகளில் மாறி மாறி  நடந்து  கரையை அடைகிறோம். உச்சஸ்தாயில்  இசைகுழுவின்  குரலின் பின்ணியில் இறுதியாக மூன்று முறை சுழற்றப்பட்ட அந்த பெரிய தீபம் மக்களை நோக்கிகாட்டபட்டபின் அணைக்படுகிறது. பக்திபரவசத்தில் அங்கிருந்தவர்கள் ஓங்கி ஒரேகுரலில் எழுப்பிய, இப்போதும் நமக்கு கேட்கும் கோஷம்….   “கங்காமாதாகீ ஜே”


. (பயணம் நிறைகிறது)

  ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
முனைவர் ராஜமாணிக்கம்-  தலவர் ஒஷோ பயோடெக் ஆராய்ச்சி கழகம் மதுரை 
எனது மனைவி ஜெயஸ்ரீ ஒரு மருத்துவர். ஈஷா அமைப்பிலும், அதன் தொண்டுபணிகளிலும் மிகுந்த ஈடுபாடுகொண்டவர். எனது ஆராய்ச்சி  மற்றும் பி.ஹெச் டி மாணவர்களுக்கு வழிகாட்டும் பணிகளினாலும் நான் அதில் அதிக நேரம் செலவிட்டதில்லை. ஒரு நாள் தற்செயலாக சத்குரு காசி நகர்  பற்றியும் காலம் என்பது பற்றியும் பேசினதை கேட்டேன்.   காசிநகரம் இவ்வளவு சக்தி வாய்ந்தா? என ஆச்சரியபட்டேன்.அப்போது இங்கு வரவேண்டும் என்று எழுந்த எண்ணம் இன்று நிறைவேறியிருப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
லார் பாக் லீயாங் & திருமதி டான் பீ கெங் (Mr.Lor bak Liang &Mrs. Tan Bee kheng) சீஙகப்பூர் 

நான் சீங்கபூரில் ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறேன்.  என் மனைவி சீன மொழி மொழிபெயர்ப்பாளர். எங்கள் ஆன்மீக எண்ணங்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டது. சத்குருவின் புத்தகம் ஒன்றைபடித்தபின் ஈஷா பால் நாட்டம் ஏற்பட்டது. அவர்களின் யோக பயிற்சிகளை முறையாக கற்றேன். சில ஆண்டுகளுக்கு முன் நான் அவருடன் கைலாஷ் யாத்திரை சென்ற போது ஒருநாள் காலைஉணவின் போது அவருடன் பேசியிருக்கிறேன். அவரிடம் ஒரு தெய்விக சக்தியிருப்பதை உணர்ந்தேன். காசி பற்றிய அவருடைய வீடியோவை பார்த்தபின் நானும் என்மனைவியுடன் இதை கலந்து கொள்ள  முடிவு செய்து வந்திருக்கிறேன். காசி பற்றி முக்தி அடைவது பற்றி இவ்வளவு விபரங்கள் இந்த பயணம் வரும் முன் தெரியாது
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நந்தினி  
 நான் பிடெக் முடித்து ஸ்வீடனில் எம்.எஸ் படிக்க போகிறேன். அட்மிஷன் கிடைத்துவிட்டது. விசா தாமதமாகிறது.  சேலத்திலிருக்கும் என் தாய் ஈஷாவில் ஈடுபாடு உள்ளவர். நான் தியானம் கற்றிருந்தாலும் சீரியசாக செய்வதில்லை. இந்த பயணத்துக்கு அம்மாவுடன் வருவதாக இருந்தது. ஒரு சீட் மட்டுமே கிடைத்ததால் ”விசாவைப் பற்றி கவலைப்படாமல் போய்வா. நிச்சியம் கிடைக்கும்” என அம்மா என்னை அனுப்பினார்..  எல்லோரும்  தனியாகவா வந்தாய்? என கேட்கிறார்கள். ஈஷா குழுவில் வர என்ன பயம்? நம் தேசத்தின் பெருமைகளை அறிய, குறிப்பாக காசியை தெரிந்துகொள்ள இந்த பயணம் உதவியது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பாண்டியன்  -தொண்டர்.
தென்மவட்டத்தில் ஒரு சின்ன கிராமத்தில் எளிய தொழிலாளர் குடும்பத்தை சேர்ந்தவன் நான்.  கோவையில் படிப்பதற்கு உதவி கேட்டு ஈஷாவிற்கு வந்தவன். இப்போது கோவை செண்டரில் முழுநேர தொண்டன். படிப்பிற்கு  பின் இங்கு அக்கெண்ட்ஸ் டிபார்ட்மென்ட்டில்  ஆடிட்டிங் பிரிவில் பணி. இந்த பயணத்திற்கு உதவியாளாரக தேர்ந்தெடுக்கபட்டேன். இம்மாதிரி பணிகள் எனக்கு சந்தோஷத்தையும், புதியவைகளை கற்கும் வாய்ப்பையும் அளிக்கிறது.என் வாழ் நாள் முழுவதும் ஈஷாவின் பணிகளில் இணைந்திருப்பேன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
 சத்குருவின் பதில்கள்

சமயம் கடந்த  சாதிகடந்த யோகா என்று ஈஷாவை ஆரம்பித்து இப்போது கோவில் குளம் தேவிவழிபாடு,புனிதப்யணம் என்று சென்றுகொண்டிருக்கிறீர்களே?

 இங்கே எதைச்செய்தாலும் ஜாதியுடனோ மதங்களுடனோ அடையாளபடுத்திப் பாக்கிற  இயலா பழக்கங்களைவைத்தே மதங்களை கற்பித்து விடுவீர்கள். இட்லி சாப்பிடுகிறீர்கள் என்றால் அது இந்துக்களின் உணவு என்பீர்கள் ரொட்டி சாப்பிட்டால் கிறிஸ்த்துவ உணவு என்பீர்கள். பிரியாணி சாப்பிட்டால் இஸ்லாமிய உணவு என்பீர்கள். எப்படி  உடை உடுத்தினாலும் அதை எதாவது ஒரு மதத்தோடு தொடர்புபடுத்தி சொல்லுவீர்கள். மதத்தின் சில அம்சங்கள் மூட நம்பிக்கை சார்ந்ததாகப் போவதால் மதங்கள் என்றாலே உங்களுக்கு எதிர்ப்புணர்வு ஏற்பட்டுவிட்டது.யோகா என்பது எப்படி ஒரு விஞ்ஞானமோ, ஒரு தொழில் நுட்பமோ தியானலிங்கமும். லிங்கபைரவியும் ஒரு விஞ்ஞானம். அவை ஒரு தொழில்நுட்பம். ஈஷா யோக மண்டபத்தில் அமைந்திருக்கும் தீர்த்தகுண்டமும் ஒரு விஞ்ஞானம். தீர்த்தகுண்டத்தில் விஞ்ஞான அதிசயம் ஒன்று நிகழந்திருக்கிறது. நவீன விஞ்ஞானத்தில் கூட கெட்டிபடுத்த பட்ட பாதரசம் என்பது யாரும் பார்த்திராத ஒன்று. பொதுவாக பாதரசத்தை திடபடுத்த வேண்டுமென்றால் அதனை உறைய வைக்கும் குளிர் நிலையில் மட்டுமே செய்ய முடியும். ஆனால் 32 டிகிரி சீதோஷணத்தில் தீர்த்தகுண்டத்தில் பாதரசம் அமர்ந்திருக்கிறது. இது சராசரி விஞ்ஞானத்திற்கு அப்பாற்பட்ட விஞ்ஞானம். அதிசயம். இதை வெறும் குளம் என்று சொல்லிவிட முடியாது. மனிதன் தன் எல்லைகளைத் தாண்டி. உணர்வதற்கு உருவாக்கபட்டுள்ள இந்த கருவிகளை கோவில்கள், குளங்கள் என நினைக்காமல்   பயன்படுத்திகொள்வதே புத்திசாலித்தனம்.
இந்த பயணக்கட்டுரைக்காக விசேஷமாக அளித்த பேட்டிக்கு  வாசகர்கள் சார்பில் நன்றி
சந்தோஷம்.
. படங்கள் ரமணன்




30/3/14

கஙகைக்கரை ரகசியங்கள் 11




நேற்று செய்தது போல
உலகின் முதல் பல்கலைகழகம் என  வர்ணிக்கபடும் நாளந்தா இந்த புத்த தேசத்தில் தான் இருக்கிறது. பல்கலை கழகத்தை தவிர ஒர் பெரிய புத்த மடாலாயமும் இருந்திருக்கிறது. ராஜ்கீரிலிருந்து புத்தர் இந்த இடத்திற்கு தான் வந்திருக்கிறார். அந்த பல்கலைகழகத்தில் தான் கண்ட உண்மையை போதித்தாரா? அல்லது  அங்கிருந்த மற்ற சமய அறிஞ்கர்களுடன் தன் கொள்ககைகளை விவாதித்தாரா என்பதில் ஆராய்ச்சியாளார்கள் வேறுபடுகிறார்கள்.   இன்று  உலகின் பல பல்கலைகழகங்களுக்கு நம் மாணவர்கள் போகிறார்கள். ஆனால் கி,மு 5 ஆம் நூற்றாண்டிலேயே உலகின் பல பகுதிகளிலிருந்து மாணவர்கள் படிக்க இந்த மண்ணிற்கு வந்திருக்கிறார்கள். அந்த இடத்தில் இன்று இருக்கும்  அடையாளங்களை பார்க்க போய்க்கொண்டிருக்கிறோம். ராஜ்கீர்- நாளந்தா பகுதி பல பெரிய கல்விக்கூடங்களின் தொகுதியாகயிருந்திருக்கிறது. இசை, நடன நாடக கலைகள் முறையாக கற்பிக்க பட்டிருக்கின்றன.
 ராஜ்கீரிலிருந்து நாளந்தா போகும் வழியில் ஏதேனும் ஒரு  அழகான கிராமிய மணம் கமுழும் சூழலை கண்டுபிடித்து   பிக்னிக் போல   மதிய உணவை குழுவினர் முடிக்கவேண்டும் என்பது திட்டம்.  ஆனால் அதைச்செயாலாற்றியதில் ஒரு சின்ன சறுக்கல். மொத்த குழுவினரும்  5 பஸ்களில் பயணித்து கொண்டிருந்தோம்.  ராஜ்கீரிலிருந்து  புறப்பட்டபின் நாளந்தா விற்கு வரும் வழியில்  முதல் பஸ் ஒரு பாதையிலும் மற்றவை பிரிந்து  மற்றோர் பாதையிலும்  போய்விட்டது. இன்றறைய செல்போன், ஜிபிஎஸ்  யுகத்திலும் இத்தகைய தவறுகள் நேரத்தான் செய்கின்றன.  சாப்பாடு பாக்கெட்டுகள் அனைத்தும் ஒரு பஸ்ஸில் இருந்ததால் அனைவரின் வருகைக்காக ஒரு  வயல்வெளியில் காத்திருக்க நேர்ந்தது.  நெல்வயல்கள், தோப்புகள்  சுடாத வெய்யில்,மெல்லியகாற்றுஇருந்தும்,,நேரம்விணாகிக்கொண்டிருக்கிறதே
சாப்பாடு சங்கிலி
என்ற உணர்வும்,பசியும் சுழலை ரசிக்க முடியாமல் செய்தது. பஸ்கள் வந்ததும் எல்லோருக்கும்உடனே உணவு பாக்கெட்கள் கிடைக்க ஈஷா தொண்டர் படை செய்த காரியம் அவர்களின் அனுபவத்தை காட்டியது. ஓவ்வொரு பஸ்முன்பும் 10 பேர்களின் மனித சங்கிலி. பாக்கெட்கள் சர சரவென கைமாறியது. கடைசிபஸ்ஸில் இருப்பவர்களுக்கு கிடைத்தவுடன் அந்த சங்கிலி அங்கே துண்டிக்கபட்ட்து.  அதேபோல் அடுத்தடுத்த பஸ்களுக்கும். இப்படி 10 நிமிடத்திற்குள் 200 பேர் கையிலும் பாக்கெட்கள். இந்தப் பயணத்தில் இந்த தொண்டர் படையினரின் பணி நம்மை ஆச்சரியபடுத்திய விஷயங்களில் ஒன்று. தண்ணீர் பாட்டிலா, தலைவலி மாத்திரையா, செல்போன் சார்ஜரா,  எதுவாகயிருந்தாலும் நிமிடங்களில் வந்தது. இவர்கள் ஈஷா செண்டரில்  ஆடிட்டிங், பதிப்புகள், யோகாஆசிரியர் என வெவ்வேறு பிரிவுகளில் இருக்கும் முழுநேர தொண்டர்கள்.  இந்த  பயணப் பணிகளை செய்ய பணிக்கப்பட்டிருப்பவர்கள். எவ்வித தயக்கமும் இல்லாமல் எல்லாப் பணியையும் செய்கிறார்கள். ஒரு ஹோட்டலில் உணவு தாமதமானது. இவர்களே கிச்சனில் நுழைந்து  அவர்களுக்கு தயாரிப்பில் உதவினார்கள்.
பஸ் குழப்பத்தினால் நேர்ந்த தாமதத்தை தவிர்க்க  நளாந்தா பயணத்தை தவிர்த்து நேரடியாக பாட்னா செல்வது என்ற முடிவை அறிவிக்கிறார்கள். பலருக்கு ஏமாற்றம். குழுவில் இந்தியாவின் பல பகுதிகளுக்கும் திரும்பிச்செல்லபவர்களுக்கு அங்கிருந்து  அன்றிரவு பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததால் மனமில்லாமல் ஏற்கிறார்கள். இவ்வளவு தூரம் வந்து நாளந்தா பார்க்கமல் திரும்ப விரும்பாத அதைப்பார்க்க போகமுடிவுசெய்த ஒரு சிறுகுழுவுடன் நாம் இணைந்து கொண்டு நாளந்தாவிற்கு பயணத்தை தொடர்கிறோம்.
கங்கையின் கிளைநதிகளில் ஒன்றின் அருகில் படா கோவன் என்ற சின்ன கிராமத்தின்  நடுவே இருக்கிறது அன்று நாளந்தாபல்கலைகழகம் இருந்த இடம்.  நாளந்தா என்றால் தாமரையின் உறைவிடம் என்று பொருள். தாமரை மலர் நமது மரபில் வேதகாலம் முதல் கல்வியின், ஞானத்தின் அடையாளமாக மதிக்கப்பட்டிருக்கிறது. இன்று வெறும் செங்கல் கட்டிட இடிபாடுகளாக இருக்கும் இந்த இடத்தில் தான் புத்தருக்கு முன்னரே கி.மு 5 நூற்றாண்டிலேயே வானியல், சோதிடம்,மருத்துவம், இலக்கணம், மதவியல், கணிதம்  போன்றவைகளை கற்பிக்க தனித்தனிதுறைகளுடன்   
டெரக்கோட்டா சீல்
ஒரு பல்கலைகழகம், மாணவர்கள் தங்கி படிக்கும் வசதியுடன் இயங்கியிருக்கிறது.  உலகிலேயே அனைத்து கல்விகளையும் ஒரே குடையின் கீழ் ,ஒருபல்கலைகழகழகமாக்கும் முறை இங்குதான் முதலில் அறிமுகபடுத்தபட்டிருக்கிறது. 10,000 மாணவர்களும், 2000 ஆசிரியர்களும் இருந்திருக்கிறார்கள். கிபி 12ஆம் நூற்றாண்டுவரை இயங்கியிருக்கிறது. 1700 வருடங்கள் முன்,இன்று உலகின் புகழ் பெற்ற பலகலைகழகங்கள் இருந்த நகரங்கள் கூட பிறக்காத காலத்திலியே ஒரு பல்கலைகழகமிருந்த இடம் இது.   மொழி இலக்கணத்தை படைத்த பாணிணி, வானியல்விற்பன்னர் ஆரியபட்டர், மருத்துவத்தின் தந்தை வராஹமிஹிரர் போன்றவர்கள் இங்கிருந்து தான் ஆராய்ச்சிகளைச் செய்திருக்கிறார்கள்.
வளாகத்தின் நடுவே ஒரு ஸ்தூபி சுற்றிலும்  பெரிய கட்டிடங்களின் அடிச்சுவர்களின் மிச்சங்கள். மேற்பகுதி மரத்தாலானவைகளாக இருந்து அழிந்திருக்கலாம். இன்று காலச்சுவடுகளாக வெறும் கற்களாக நிற்கிறது.  புத்தருக்குமுன், புத்தர் காலத்தில், புத்தருக்குபின் மன்னர்  ஹர்ஷவர்தன் காலம் என்று மூன்று காலகட்டத்தை கடந்து நின்றிருக்கிறது.  சமண தீர்தங்கள்  மாகவீர்ர் உள்பட பலர் வந்திருக்கிறார்கள். சீன யாத்திரிகர் யூவான் சுவாங் இந்த பலகலை கழகத்தை பார்க்கவந்தவர் 5 ஆண்டு காலம் தங்கி சம்ஸ்கிருதமும், பெளத்தமும் பயின்றிருக்கிறார்.  அவர் எழுதி சீனாவில் இருக்கும் குறிப்புகள் தான் இந்த பெருமைமிக்க இடத்தை அடையாளம் காட்டியிருக்கிறது.
டெல்லிக்கு வந்த முகம்மதியர்  ஆட்சியில் பக்தியார் கில்ஜி 1203ல்  தன் எல்லைகளை விரிவாக்கிய படையெடுப்புகளில் இது அழிந்திருக்கிறது. 10000 பிட்சுகள் கொல்லபட்டு பிரமாண்டமான சுவடி நூலகம் எரிக்கபட்டிருக்கிறது. முகமதிய ஆக்ரமிப்பாளார்கள் கண்டு பயந்த ஆயுதம் கல்வி,  கல்வியாளர்களையும், அவர்களின் சேமிப்புகளையும். அழித்துவிட்டால் அந்த சமூகத்தையே அழித்துவிடலாம் என கருதியிருக்கிறார்கள். ஆனால்  எரித்து சூறையாடபட்ட நாளந்தாவில் 1235ல் ஒரு 90 வயது ஆசிரியர் ராகுல ஸ்ரீபத்ரா 70  மாணவர்களுக்கு பாடம் நடத்திக்கொண்டிருந்தார் என எழுதுகிறார் யுவான் சுவாங்.  எரிந்த சுவடி நூலகத்தில் மிஞ்சியவை இன்று திபேத்திய  நூலகத்தில் இருக்கின்றன.
 வளாகத்தின் எதிரில் ஒரு சிறிய  அருங்காட்சியகம். அங்கு  அகழ்வாராய்ச்சியில் கிடைத்தவைகளை சேமித்திருக்கிறார்க்ள். நிறைய புத்தர் சிலைகள், கருவிகள், கல்வெட்டுக்கள்.  கருப்பு வண்ணத்தில் ஒரு வலது கை தரையை நோக்கி இருக்கும் ஒரு  புத்தர் கருங்கல் சிலை  நேற்று செய்ததைப்போல் பொலிவுடன்  இருக்கிறது. பல்கலைகழகம் எப்படியிருந்திருக்கும் என்பதை காட்டும் வரைந்த படம் நமக்கு அதன் கம்பீரத்தைப் புரிய வைக்கிறது. யூவான் சுவாங்க்கு ஒரு நினைவு மண்டபம் அதன் முன் அவர் சிலை. உடை அலங்காரம் சற்று வினோதமாகயிருக்கிறது.

 சீனத் தலைநகரில்  துவங்கி ஆப்கானிஸ்தான்,பாக்கிஸ்தான் வழியாக இந்தியாவிற்கு வந்த யூவான் சுவாங் தமிழகத்தின் காஞ்சிபுரம் வரை வந்து பின்னர்  பாட்னா வழியாக இங்கு வந்து  இந்த பல்கலைகழகத்தை கண்டு மயங்கி  5 ஆண்டுகள் யோகசாஸ்திரமும், சமஸ்கிருதம் கற்றிருக்கிறார்.  இங்கிருந்து தாய் நாட்டுக்கு திரும்பும்போது 22 குதிரைகளில் 620 புத்தகங்களையும் புத்தர் பொற்சிலையும் சீனாவிற்கு எடுத்துசென்றிருக்கிறார். பல சமஸ்கிருத புத்தகங்களை  தன் இறுதிக்காலத்தில் சீன மொழியில்  மொழிபெயர்த்திருக்கிறார் இந்த ஆச்சரியமான உலகம் சுற்றிய பயணி.
 அருங்காட்சியகத்தில் எரிக்கப்பட்ட நாளந்தாவிலிருந்த கிடைத்த அரிசி என ஒரு தட்டில் கறுப்பு வண்ண அரிசி கண்ணாடிப்  பேழைக்குள் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள்.
இன்றுஇதே பலகழகத்தை மீண்டும் உருவாக்க முடியாது என்றாலும் பீஹார் அரசு இந்த பகுதி முழுவதிலும் அத்தனைவிதமான உயர் கல்வி நிலயங்களையும் நிறுவி  கல்விநகரமாக்க வேண்டும், அவைகளை இணைத்து ஒரு புதியமாதிரி பல்லைகழகத்தை நிறுவவேண்டும்
என்று  நோபல் அறிஞர் அமிர்தாசென்னின் தலமையில் ஒரு குழு அமைத்து செயல்பட்டுகொண்டிருக்கிறது. எந்தவிதமான ஒதுக்கீடுமுறைகளும் இல்லாமல்,தகுதியின் அடிப்படையில் மட்டுமே உலகின் எந்த பகுதியிலிருக்கும் மாணவர்கள் இந்த புதிய நளாந்தாவில் சேர்க்கப்படபோகிறார்கள் என்ற மகிழ்ச்சியான செய்தியை அறிந்து கொண்டு  இரவு பட்னா நகர் திரும்புகிறோம்.
-----------------------------------------------------------------------------------------------------
 சத்குருவின் பதில்கள்
இந்தியாவில் தோன்றிய பௌத்த மதம் ஏன் இந்தியாவில் வேர் விட்டு வளராமல் போனது?

ஒரு மதத்தை உருவாக்கும் நோக்கம் புத்தருக்கு அப்போது இல்லை. இந்தியாவில் பௌத்தம் வளராமல் வெளிநாட்டில் போய் இருக்கிறது என்றால், அதற்குப் புத்தர் செய்த வேலைதான் அடிப்படைக் காரணம். இந்த நாட்டில், இந்த கலாச்சாரத்தில் அவர் சொன்னது ஒன்றும் புதிதல்ல. முதலில் இருந்தே இருந்த ஒன்றுதான். ஆரம்பத்தில் சிலர் ரொம்ப முக்கியான படிநிலையாக ஆன்மிகம் என்பது வெறும் சமஸ்கிருத பாஷையில் மட்டும்தான் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு வைத்திருந்தார்கள். இந்த சமஸ்கிருத பாஷை ஏதோ ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும்தான் வாய்ப்பாக இருந்தது. அப்போ சாமானிய மக்களுக்கு இந்த ஆன்மீகத்தின் வழியை அடைய வாய்ப்பில்லாத சூழல் இருந்தது. புத்தர் வந்தபோது முக்கியமான வேலை என்ன செய்தார் என்றால், சாமானிய பாஷையில் பேச ஆரம்பித்தார். அதுவே ஒரு பெரிய புரட்சியாக நடந்தது. சாமானிய மக்கள் அதையெல்லாம் காதில் கேட்டதே இல்லை. ஆனால், மேற்கத்திய வெளிநாடுகளின் பக்கம் போனால், அவர்கள் இதையெல்லாம் கேள்விப்பட்டதே இல்லை.மனிதன் உள்நோக்கிச் செல்லும் நிலையே அவர்களுக்குத் தெரியாது. எல்லாவற்றிற்கும் கடவுளைக் கூப்பிட வேண்டும் என்ற மனநிலையில் இருக்கிறார்கள். மதமில்லாத ஆன்மிகம் இங்கேதான் பிறந்து வளர்ந்திருக்கிறது. அதனால் அது அங்கே வளர்ந்தது.
புத்தர் சொன்ன முக்கியமான புரட்சி என்னவென்றால், இந்துக் கலாச்சாரம் அந்தக் காலத்தில் சடங்குகளால் சிக்கிக் கிடந்தது. அதனால் தியான நிலையில் அதுக்கு மேல ஒரு விஷயத்தைச் செதுக்க முடியும் என்று இந்தத் தியான வழியைக் காட்டினார். ஆனால் இப்போ இருக்கும் புத்தம் இந்த இந்துக் கலாச்சாரத்தில் என்ன சடங்குகள் இருக்கோ, அதற்கும் மேலே சடங்குகள் வைத்திருக்கிறார்கள். அதனால் இந்த நாட்டில் இப்போது அது செல்லாது போய்விட்டது