கல்கி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கல்கி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

30/8/16

அமெரிக்காவிலிருந்து குஜராத்திற்கு படம் எடுக்க வந்த மைதிலி




அமெரிக்காவிலிருந்து  குஜராத்திற்கு  படம் எடுக்க வந்த மைதிலி


2010ஆம் ஆண்டு தெஹல்கா இதழில் பணியாற்றிய பத்திரிகையாளரான ரானா அயூப் ஒரு துணிச்சலான பத்திரிகைபுலானய்வு பணியை தன் உயிரைப் பயணம் வைத்து மேற்கொண்டபெண்மணி.  2002 ஆம் ஆண்டு நடந்த குஜராத் படுகொலைகள், பின்னர் அதைத்தொடர்ந்து நடைபெற்ற போலி என்கவுண்டர்கள் குறித்து  அந்தக் காலகட்டத்தில்(2001-2010)  குஜராத் மாநிலத்தில் காவல்துறை மற்றும் உள்துறை அதிகாரிகளாகப் பணியாற்றியவர்கள் மனம் திறந்து பேசியதை ஒரு ஸ்டிங் ஆப்ரேஷன் மூலமாக ரகசியமாகப் பதிவு செய்தவர்.ஒரு சமூக படுகொலை நடைபெற அரசு இயதிரம் பயன்படுத்தப்பட்டதையும், முக்கிய அதிகாரிகள் அதற்கு மௌன சாட்சியாகவும் இருந்தை அவர்கள் வாக்குமூலமாகவே வெளிக்கொண்டுவந்திருப்பவர்.இவரது புலனாய்வு கட்டுரைகள் அம்பலப் படுத்திய தகவல்களினால்தான் 2010ஆம் ஆண்டு அமித்ஷா சிறைக்குச் சென்றார். தொடர்ந்து அவர் செய்த பணியில் தொகுத்த தகவல்களை  அரசியல் காரணங்களால் அவரது தெல்ஹா நிறுவனம் அவரது பதிவுகளை புத்தகமாக்க மறுத்துவிட்ட நிலையில் குஜராத் கோப்புகள்-(GUJARAT FILES)  என்ற பெயரில் தானே சொந்தமாக புத்தகமாகப் பதிப்பித்துள்ளார். நூல் தமிழில் மொழிபெயர்க்கப் பட்டு வெளியாகியிருக்கிறது. சமீபத்தில் அதன் வெளியீட்டு விழாவிற்காகச் சென்னை வந்திருந்தார். திருமதி ரான அயூப்
புத்தகத்திற்கு வரவேற்பு எப்படி இருக்கிறது.?
 5 லட்சம் வங்கியில் என்பெயரில்  கடன் வாங்கிப் பதிப்பித்த புத்தகத்தின் அறிமுக விழாவிற்கு டெல்லியில்  பல பத்திரிகைகள் உள்பட 400 பேர் வந்திருந்தனர். ஆனால் மறுநாள் தினசரிகளில் ஒருவரி செய்திகூட இல்லை. இப்போது சமூக வலைத்தளங்களில் புத்தகம் அதிகம்  பேசப்படுவதால் மெல்லச் சூடுபிடிக்கிறது. தமிழ் மொழிபெயர்ப்புக்குப் பலர் முன்பதிவு செய்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது.


எப்படி இந்த ஆப்ரேஷனைச் செய்தீர்கள்?
2002ல் மிகவும் கொடூரமான முறையில் நடைபெற்ற அரசியல் படுகொலைகள் காரணமாக ரத்த ஆறு ஓடிய சமயத்தில் பணியிலிருந்த பல நேர்மையான அதிகாரிகள் இந்த அக்கிரமங்களிலிருந்து ஒதுங்கியிருந்தது எனக்குத் தெரியும். தெல்ஹாவின் பத்திரிகையாளரான எனக்கு அவர்கள் ஏதேனும் ஒரு விதத்தில் உதவ முடியும் என்று அவர்கள் வீட்டு கதவைதட்டியபோதெல்லாம் அவை மூடப்பட்டன. உண்மையைக் கண்டறிய பத்திரிகையாளர் கடைப்பிடிக்கும் கடைசி வழி மாறுவேடம் அணிவது. நான் ஒரு பெண்,அதுவும் ஒரு  முஸ்லீம் பெண் என்பது நான் செய்யப் போகும் பணிக்கு  உதவாது என்பதால் ரானா அய்யுப் கான்பூரில் இருந்து வந்த மைதிலி தியாகி என்ற ஒரு காய்ஸ்தா(இந்துபிராமண) பெண்ணாக மாறவேண்டியிருந்தது. மேலும் நான் அமெரிக்கத் திரைப்பபடகல்லூரி ஒன்றின் மாணவி என்றும், குஜராத்தின் வளர்ச்சி மாடல் குறித்தும். உலகம் முழுவதும் வசிக்கும் இந்தியர்கள் மத்தியில் வளர்ந்துவரும் நரேந்திரமோடியின் செல்வாக்கு குறித்தும் ஒரு திரைப்படம் தயாரிப்பதற்காக வந்திருப்பதாகவும் சொல்லி பலரைச் சந்தித்தேன்.  என் உடை, பாவனை மொழி எல்லாவற்றையும் மாற்றிக்கொள்ள வேண்டியிருந்தது. குர்த்தாபட்டனில் பொருத்திய ரகசிய கேமிரா  கையில் அதை இயக்கும் வாட்ச், டைரியின் அட்டையில் இன்னொரு கேமிரா  எனப் பல ரகசிய ஏற்பாடுகளுடன் செய்ய வேண்டியிருந்தது..நம்பகத்தனமை அதிகரிக்க நிஜமாகவே மைக் என்ற ஒரு பிரெஞ்ச் மாணவனை உதவியாளானாகச் சேர்த்துக்கொண்டு எல்லா இடங்களுக்கும் போனேன்
பல முன்னாள் போலீஸ்  சீனியர் அதிகாரிகளை, உளவுத்துறை அதிகாரிகளைக்கூடச் சந்தித்து  சந்தித்திருக்கிறீர்கள். அவர்களுக்குச் சந்தேகம் வரவில்லியா?
நான்முதல் சந்திப்பிலேயே எல்லாம் பேசுவதில்லை. என்மீது நம்பிக்கை வந்து அவர்கள் என் படத்திற்கு உதவ முன்வரும்போதுதான் தொடரும் சந்திப்புகளில் தேவையான கேள்விகளை எழுப்புவேன். சிலமுறை மயிரிழையில் தெய்வாதீனமாக மாட்டாமல் தப்பியிருக்கிறேன். சந்தேகமும் வந்திருக்கிறது. நான் தங்கியிருந்த அறை நான் இல்லாதபோது ஒரு சோதனையிடப்பட்டிருந்தது.. ஆனால்  பாதுகாப்புடன் என் லேப்டாப்பிலிருந்து எல்லாவற்றிலும் நான் ஒரு   இந்து, அமெரிக்க பல்கலைக்கழக மாணவியின் அடையாளங்கள் மட்டுமே அறையிலிருக்கும்படி பார்த்துக்கொண்டிருந்தேன்

 இப்படி துணிச்சலான வேலைகளைசெய்தது உங்கள் குடும்பத்துக்கு தெரியுமா?
நன்றாக. முந்திய மணிப்பூர் பணியினால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த என்னிடம்  என் அம்மா தான் செர்ராபுதின்  கொலைச் செய்தியைக் காண்பித்து இதைப்பற்றி எழுதேன் என்று சொன்னார். நான் இந்தப் பணியிலிருந்தபோது மனம் தளரும்போதெல்லாம் அம்மாவிடம் போனில்பேசுவேன். அண்ணன். அப்பா எல்லோருக்கும் தெரியும்.
 இந்த ஆப்ரேஷனில் மோடியைச் சந்தித்திருக்கிறீர்களா?
ஆம் ஒரு முறை.  அவர் முதல்வராக இருந்தபோது கேமிரா, மைக் சகிதம் அவர் இல்லத்தில் சந்தித்திருக்கிறேன்..மெட்டல் டிடக்கரில் மாட்டிக்கொண்டால் அடுத்த நிமிடம் கைது என்ற பயத்துடன் தான் சென்றேன். ஒபாமா பற்றி நிறையப் பேசினார்.  மேஜையில் அவர் புத்தகங்கள்
என படத்துக்கு உதவ  அவர் பயணப் படங்கள் ஆடியோ டேப்கள் கொடுக்க அவர் உதவியாளர்களிடம் சொன்னார். கலவரம், படுகொலைகள் பற்றி அடுத்தடுத்த சந்திப்பில் பேச திட்டமிட்டிருந்தேன். அதற்குள் வேறு பல மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன.
உங்கள் புத்தகத்தில் சம்பந்தப்பட்டவர்களின் பெயர்கள்,  வகித்தபதவிகள் விபரங்களுடன் உரையாடல்களை வெளியிட்டிருக்கிறீர்கள். புத்தகம் வெளிவந்து  பார்த்தபின் யாராவது பேசினார்களா?
இதுவரை இல்லை, இனி நிகழலாம். உண்மைதகவல்தானே எனக் கண்டுகொள்ளாமலும் இருக்கலாம். ஆனால் இதுவரை இதில் பேசயிருப்பவர்கள் எவரும் சொன்னதை மறுக்கவில்லை.


 இந்தஆப்ரேஷனின் திருப்புமுனை என எதைச் சொல்வீர்கள்?
  பாதுகாப்பற்ற நீண்ட பயணத்தின் முடிவில்-  அனைத்தும் வெளிப்படும் நிலையில், முதல்வர் மோடி மீண்டும் அழைப்பார் என்ற நிலையில், என் டெல்லி அலுவலகம் என்னைத் திரும்ப அழைத்தது.  தலைமை ஆசிரியர்கள் “ மோடி பிரதமராகப் போகிறார். மிக வலுவான பிரதமராக இருப்பார்.  அவர் மீது கைவைத்தால் நாம் அனைவரும் தீர்த்துக் கட்டப்பட்டுவிடுவோம். பங்காரு லஷ்மணன் விஷயத்தில் நம் அலுவலகத்தை மூட வைத்தவர்கள் அவர்கள்.”  அதனால்  புலனாய்வை பிரசுரிக்க வேண்டாம் என முடிவெடுத்திருக்கிறோம் என்றனர்..
அதிகாரத்திலிருப்பவர்கள்  பேச்சைக்கேட்டு என் கடின உழைப்பில் பிறந்த  உண்மைக் கதை வெளிவராமலே கொல்லப்படும்போது என்னால் தாங்கிக் கொள்ள முடியவே இல்லை.
ஒரு நல்ல  புலனாய்வு இதழியலாளர் தான் உருவாக்கிடும் கதைகளிலிருந்து தன்னைக் கத்தரித்துக் கொண்டு நடைமுறையில் இயல்பாக இருக்கவேண்டும் என ஆசிரியர் சொன்னார். என்னால் அப்படியிருக்க முடியவில்லை.
இன்று அமித்ஷா. மோடி போன்றவர்கள் அதிகாரத்தில் இருக்கும் சமயத்தில் இந்தப் புத்தகத்தை வெளியிட்டிருக்கிறீர்கள். . உங்களுக்கு  அச்சமாக இல்லையா?
உண்மைச்சொன்னதற்காக சில சமயம் பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும். இன்று தேசத்துரோகம் என  எதையும் சொல்லிவிடலாம் என்ற நிலை எழுந்திருக்கிறது. . அந்த சட்டத்தின் கீழ் நான் கைது செய்யப்பட்ட செய்தி வந்தால் ஆச்சரியப்படாதீர்கள்.
                                             
4/09/16 கல்கியில் எழுதியது 

12/8/16

நெருப்பில் பிறந்த அழகி


கல்கி பவளவிழா மலரில் வெளியாகியிருக்கும் எனது பயணக் கட்டுரை





 
எங்கும் எரிந்த பிழம்புகளின் தழும்புகள். புகையின் கறைகளோடு நிற்கும் இடிந்த சுவர்கள். சாம்பல் குவியல்கள். நதிக்கரையிலிருந்த அந்த வணிக நகரம் முழுவதுமே எரிந்து நாசமாகியிருக்கிறது. தப்பித்து ஓடியவர்கள் மெல்லத் திரும்பித் தங்கள் உடமைகளை தேடிக்கொண்டிருக்கின்றனர். நகரின் நிர்வாகக் குழு நகரை மீண்டும் எழுப்பும் திட்டங்களை விவாதிக்க பாதிஎரிந்த நகர சபை கட்டிடத்தில் கூடியிருக்கிறார்கள்.
எதையும் சிறிய அளவில் திட்டமிடாதீர்கள்....அவற்றில் மனித மனங்களின் ஆற்றலைத் தூண்டும் எந்த மந்திர சக்தியும் இல்லை. மிகப் பிரம்மாண்டமான பெரிய திட்டங்கள் - உயர்ந்த இலக்குகள், - கடின உழைப்பு எனத் திட்டமிடுங்கள். அப்போதுதான் நமது நகரை உலகின் சிறந்த நகரங்களில் ஒன்றாக உருவாக்க முடியும்” 
இந்த அழிவில் கற்ற பாடங்களினால் ஒரு அழகான வலிமையான நகரை உருவாக்கத் திட்டமிடுவோம், புகழ்பெற்ற இந்த “make no little plans” வார்த்தைகளைச் “சொன்னவர். டேனியல் ஹட்ஸ்ன் பர்ன்பாம் என்ற நகர நிர்மாண கலைஞர். 1871ல் எரிந்து அழிந்துமீண்டு பினிக்ஸாக எழுந்த நகரம் தான் அமெரிக்காவில் உள்ள சிக்காகோ. இன்று அமெரிக்காவின் இரண்டாவது பெரிய நகரம்.

நிமிர்ந்து பார்த்துப் பார்த்தே கழுத்து வலிக்கும் அளவிற்கு வானளாவ உயர்ந்து நிற்கும் பலமாடி கண்ணாடி கட்டிடங்கள் -பளீரென பல மைல்களுக்குக் கடற்கரைபோல் விரிந்து நிற்கும் வெண்மணற்பரப்பானஏரிக்கரை- பசுஞ்சோலைகளாகப் பரவிக்கிடக்கும் பெரிய பூங்காக்கள் -நகரின் நடுவே நேர்த்தியான பராமரிப்புடன் அழகாக ஓடும் சிக்ககோ நதி- அதன் மீது பல இடங்களில் கம்பீரமாக நிற்கும் பாலங்கள்- இவற்றையெல்லாம் இன்றைய சிக்காகோ நகரில் பார்க்கும்போது 100 ஆண்டுகளுக்கு முன் திட்டமிட்ட டேனியல் ஹட்சனின் தொலைநோக்கு பார்வையும், தொடர்ந்து வந்தவர்களின் அற்புதமான நிர்மாண ஆற்றலும் நம்மைப் பிரமிப்பில் ஆழ்த்துகிறது.
கடந்த ஆண்டு வந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 40 கோடியையும் தாண்டிவிட்டது. இதில் அமெரிக்க உள் நாட்டுப் பயணிகளும் அடக்கம். நகரின் பாரம்பரியமும், பிரம்மாண்டமும் மட்டும் சுற்றாலா பயணிகளைக் கவர காரணமில்லை. சுற்றுலாத்துறையின் சிறப்பான சேவையும், நகரை நேசிக்கும் உள்ளுர் வாசிகளும் ஒரு முக்கிய காரணம். நிரந்தர உழியர்கள் தவிர நூற்றுக்கணக்கில் தன்னார்வ தொண்டர்கள் உதவுகிறார்கள்.

விடுமுறைக்காலங்களில் நகருக்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு முக்கிய இடங்களைப்பார்க்கப் பஸ் இலவசம். மூன்று வெவ்வேறு பாதைகளில் தொடர்ந்து சுற்றி சுற்றி ஓடிக்கொண்டே இருக்கும் இவற்றை டிராலி (படம்) என அழைக்கிறார்கள். செல்லும் பாதையை எளிதில் அடையாளம் கண்டுகொள்ள வெவ்வேறு வண்ணங்கள். அவை நிற்கும் இடங்களிலும் அதே வண்ணத்தில் போர்டுகள். பஸ்ஸில் டிரைவர், கண்டெக்டர், கைட் எல்லாம் ஒருவரே. கழுத்தில் தொங்கும் மைக்கில் பேசியபடியே ஒட்டுகிறார்.  தன் பணியை நேசிக்க தெரிந்தவர்களைத் தேர்ந்தெடுத்திற்கிறார்கள்! கதை சொல்லுகிறார். குழந்தைகளுடன் பாடுகிறார்.

நகரின் பெரும்பாலான சாலைகள், சோப்பு போட்டுக் கழுவிய வீட்டுத்தரையைப் போலப் படு சுத்தமாக இருக்கிறது. சாலைகள் மட்டுமில்லை, சுரங்கப்பாதைகள் பஸ் ஸ்டாப்களின் கண்ணாடிச் சுவர்கள் கூடப் பளீரென இருக்கிறது. சாலைகளின் நடுவில் பகுப்பு சுவர்களாக, தெரு விளக்குகளில் தொங்கும் கூடையாக, அரசு கட்டிடஜன்னல்களின் வெளி அலங்காரமாக எங்குப் பார்த்தாலும் நம்பைப்பார்த்துச் சிரிக்கும் வண்ண வண்ண மலர்கள். நகரில் போஸ்டர், பேனர்களுக்கு எங்கும் அனுமதியில்லை. பொது நிகழ்ச்சிகளின் விளம்பரங்களை நகர நிர்வாகமே அதற்காக நிறுவி யிருக்கும் அழகான கண்ணாடிப்பலகைகளில் மட்டும் செய்கிறது.விளம்பரங்கள் கலையுணர்ச்சியுடன்உருவாக்கபட்டிருக்கின்றன(6). செய்திதாட்கள் கடையில் விற்கப்படுவதில்லை காசு போட்டால் திறக்கக்கூடிய கண்ணாடி அலமாரிக்குள் அடுக்கபட்டிருப்பவைகளிலிருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். அருகிலேயே ரூபாய் நோட்டுக்கு சில்லறை தரும் இயந்திரம். பூட்டப்படாத அலமாரிகளில் இலவச இதழ்கள்.

நகரின் நடுவே சிக்காகோ நதி அமைதியாக அழகழான பெரிய சிறிய படகுகளுடன் ஓடிக்கொண்டிருக்கிறது..நதிக்கரையிலிருந்து சில நூறு அடிகளில் பலமான அஸ்திவாரங்களில் நெருக்கமாக எழும்பியிருக்கும் பல அடுக்கு மாடிகட்டிடங்கள். இந்த நதியின் கரையில் தரைதளத்திற்கும் கீழே பாதாளத்தில் நான்கு அடுக்குடனும் மேலே 14 மாடிகளுடனும் நகரின், முக்கிய ரயில் நிலையமான யூனியன் ஸ்டேஷன்(9) பரபரப்புடன் இயங்கிக்கொண்டிருப்பதைப் பார்க்கும் போது நதியின் பக்க சுவர்களை எவ்வளவு கவனமாகத் திட்டமிட்டு உருவாக்கியிருக்க வேண்டும்? என்ற வியப்பு தோன்றுகிறது. நதியின் நடுவே நகரவீதிகளையிணைக்கும் 52 பாலங்கள். அவைகளி¢ல் 38 நமது பாம்பன் பாலத்தைப் போலப் பெரிய படகுகள் வரும்போது திறந்து வழிவிடக்கூடியது. அவை மூடிச் சாலையாக யிருக்கும் இரும்பு பாலத்தில் பஸ்கள் போகும்போது அருகில் நாம் போகும் நடைபாதை கூட அதிர்கிறது. ஆனால் உள்ளுர் வாசிகள் இந்தப் பாலங்களில் மட்டுமில்லை, நகரின் பாதி சாலைகள் ஒருவழிப்பாதையாக இருப்பதால், எல்லாயிடங்களிலும் மிக வேகமாகத்தான் கார் ஓட்டுகிறார்கள்.

முழுவதும் மரக்கட்டங்களினால் உருவாக்கப்பட்டிருந்த நகரம் எரிந்துபோனதால் புதிய சிக்காகோ நகரம் ஸ்டில் சிமிண்ட் பயன் படுத்தி நிர்மாணிக்கப்பட்டது. உலகின் முதல் அடுக்குமாடி கட்டிடம் 1885ல் (10மாடிகள் !) எழுந்தது இங்குதான். தொடர்ந்த சில ஆண்டுகளில் பல பிரம்மாண்ட கட்டடங்கள் எழுந்தன. இதனால் நவீன கட்டிடகலையின் பிறப்பிடமாக சிக்ககோ கருதப்படுகிறது. நகரம் இன்று நூற்றுக்கணக்கான ---- அடுக்குமாடிக்கட்டிடங்களால் நிரம்பி வழிந்தாலும், இந்தக் கான்கீரிட் காட்டின் நடுவே ஆங்காங்கே அழகான ஆரஞ்சு வண்ண மலர்களாக பாதுகாக்கப்பட்ட பாரம்பரியம் மிக்க பழைய கட்டிடங்கள்.அவற்றின் முன்னே சரித்திரம் சொல்லும் சிலைகள். அப்படியொரு கட்டிடம் தான் ஆர்ட் இன்ஸ்ட்டியூட் ஆப்
சிக்காகோ.பெரிய இரண்டு சிங்கங்கள் கம்பீரமாக நிற்கும் இந்த ஓவிய கூடத்தைப் பார்க்க வேண்டும் என்பது உலகில் உள்ள ஒவ்வொரு ஓவியனின் கனவாகியிருக்கும்.. 1879ல் துவங்கிய இதில் உலகின் பல அரிய ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.  இந்த கண்காட்சியில் எரியும் சிகாகோவின் படத்தைப் பார்த்தபின் அந்த விபத்தின் விபரீதம் புரிந்தது.
இது தான்  இளம்துறவி விவேகானந்தர் சொற்பொழிவாற்றிய இடம் என்பதால் அதைப் பற்றி விசாரித்தேன். அதிகம் பேர் அறிந்திராத இந்த விஷயத்தைக் கேட்டதும் அந்த காலரியில் பகுதி நேரத் தொண்டராக பணியாற்றி வரும் ஒரு 82 வயது மாது-முன்னாள் பள்ளி ஆசிரியை திருமதி AlienEva இன்ஸ்ட்ட்யூட் அலுவகத்தில் தேடி1893ல் அந்தக் கட்டிடத்தின் வரைபடத்துடன் அன்று விவேகானந்தர் பேசிய இடம் இன்று புதிப்பிக்கபட்டு ஃல்லர்டன் அரங்கமாக வடிவெடுத்திருப்பதையும், அவர் பேசிய இடம் தான் இன்றைய பேச்சாளர்கள் நிற்கும் மேடை என்பதையும் சொல்லும் குறிப்பையும் தந்தார். அந்த அரங்கத்தின் பக்க சுவரில் இதைச்சொல்லும் பட்டயம் பதிக்கப்பட்டிருக்கிறது.
தேடிப்போன அந்த அரங்கம் பூட்டப்பட்டிருந்ததால் மீண்டும் தொடர்புகொண்டவுடன் திறந்து காட்ட ஏற்பாடு செய்தார். 120 ஆண்டுகளுக்கு முன் விவேகானந்தர் பேசிய இடத்தில் இன்று நிற்கிறோம் என்ற எண்ணம் எழுந்த அந்தக்கணம் உடலில் சிலிர்ப்பை எழுப்பியது நிஜம்.
அருகிலிருக்கும் தெருவிற்கு அவர் பெயர் சூட்டியிருக்கிறார்கள் 


கான்கீர்ட் கட்டிடங்கள் மட்டுமில்லை. பல விஷயங்களில் “முதல்” என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது இந்த நகரம். உலகின் முதல் தொழிளார் போராட்டம், உலகத்தொழிலாளிகளே ஒன்று படுங்கள் என்ற கோஷம் பிறந்ததும் இங்குதான். இன்று உலகின் பல நகரங்களில் ஒட்டும் மெட்ரோ பிறந்ததும் இங்கேதான்.

வாகனங்கள் செல்லும் குறுகிய சாலைகளில் இரும்புத்தூண்களை எழுப்பி அதன்மீது ஒடிய ரயில் இன்றும் ஓடுகிறது. லூப் என அழைக்கப்படும் அது. பயணம் செய்யும்போது. உயரமான பல மாடிக் கட்டிடங்களின் ஜன்னல்களின்  தொட்டுவிடும் தூரத்தில் இருப்பது ஒரு வினோதமான அனுபவம்
.

சிக்காகோவின் கட்டிடகலையின் அழகைக் காட்டுவதற்காகவே ஓர் படகுப் பயணத்தை நடத்துகிறார்கள் “சிக்ககோ ஆர்கிடெக்டெக்ரல் பவுண்டேஷன்” சங்கத்தினர். “சிக்காகோ'ஸ் பர்ஸ்ட் லேடி” என அழைக்கப்படும் அந்தச் சொகுசு கப்பலின் கூரையில்லாத மேல் தளத்தில் எல்லாப் பக்கங்களிலும் திரும்பும் வசதிகொண்ட நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறோம். படகின் மோட்டார் ஓசை அடங்கி நிதானமாகப் பயணிக்கிறது. மெல்லிய இசையுடன் வர்ணனை.

உங்களது வலது புறம் தெரிவது 1925ல் “நாட்ர்டாம் சர்ச் பாணியில் நிறுவப்பட்ட டிரிபியூன் டவர்ஸ். சிக்ககோ டிரிபியூன் செய்தித்தாளின் அலுவலகம். உலகின் அழகான கட்டிடத்திற்கான வடிவத்திற்கு போட்டிநடத்தி தேர்ந்தெடுத்த வடிவம். இந்தக் கட்டிடத்தின் உட்புற சுவரில் தாஜ்மஹல், (!) சீன நெடுஞ்சுவர் போன்ற உலகின் பல பிரபலமான கட்டிடங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட கற்கள் பதிக்பட்டிருக்கின்றன -இடது புறம் நீங்கள் பார்ப்பது அவர்களின் புதிய 64 மாடி கட்டிடம். .” இப்படி 45 நிமிட பயணத்தை நேரம் போவது தெரியாமல் சுவாரஸ்யமாக்குகிறார்கள்.
புகழ் பெற்ற உலகின் உயர்ந்த 110 மாடிக்கட்டிடமான ஸீயர்ஸ் கட்டிடத்தின் அருகில் நெருங்கியதும் படகிலிருந்து இறங்கி கட்டிடத்தின் உள்ளே சென்று மேலேயிருந்து பார்த்துவிட்டு பயணத்தைத் தொடர அழைக்கிறார்கள்

கட்டிடத்தின் மேல் மாடியிலிருக்கும் தொலைநோக்கியில் 4 அண்டைமாநிலங்கள் தெளிவாகதெரிகிறது. பார்ப்பது கடல் இல்லை பெரிய ஏரி என்பதையும். 5 ஏரிகள் சுழந்திருக்கும் காட்சியை அந்த உயரத்தில் ஏரிகளின் நீரின் வண்ண வேறுபாடுகளுடன் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது.

ஸியர்ஸ் போலவே மற்றொரு மிக உயரமான கட்டிடம் ஜான் ஹான்காக் டவர்.(15) ஜான் ஹான்காக் அமெரிக்க சுதந்திர பிரகடனத்தில் கையெழுத்திட்டவர்களில் ஒருவர். அமெரிக்காவின் முதல் இன்ஷுரன்ஸ் கம்பெனியைத் தனது பெயராலே நிறுவியவர். 46000டன் ஸ்டீலில் எழும்பியிருக்கும் இந்த 1500 அடி உயர,100மாடி கட்டிடத்தில்தான் உலகின் அதி வேகமான லிப்ட்..2 நிமிடத்தில் 94வது மாடி வந்துவிட்டது.அங்கேயிருந்து பார்க்கும்பொழுது மிச்சிகன்ஏரியின் படகுகள் எறும்புகளாகத் தெரிகிறது. இதன் 44வது மாடிக்குமேல் குடியிருப்புகள். வசிப்பவர்களின், ஜன்னலுக்கு கீழே மேகம் மிதந்து செல்வதால், வெளியில் கிளம்பும்போது கீழே செயூரிட்டிக்கு போன் செய்து தெருவில் மழையா வெயிலா என்பதைத் தெரிந்துகொள்கிறார்கள். 
படகில் போகும்போது சுட்டு நிறுத்திவைத்த சோளக்கதிர் கொண்டைகளின் முத்துக்கள் போல வட்ட வட்ட பால்கனிகளுடன் இரண்டு கட்டிடங்கள். முதல் 10 தளத்தில் கார்கள் நிறுத்தப்பட்டிருந்த விசாரித்தில் கட்டிடத்தின் பெயர் மெரீனா. 40 ஆண்டுகள் ஆகிவிட்டதால் விரைவில் இடித்துவிட்டு வேறு கட்டுவார்களாம்.
பழைய பல மாடிக்கட்டிடங்களைத்தான் இடிக்கத் திட்டமிடுகிறார்களே தவிர நகரின் பாரம்பரியத்தை பறைசாற்றும் கட்டிடங்களை
இளம்ஆரஞ்சுவண்ணமிட்டு அருமையாகப் பராமரிக்கிறார்கள். அவற்றில் ஒன்று சிக்காகோ மத்திய நூலகம். அலங்கார வளைவுகளில் தொங்கும் அழகிய லாந்தர் விளக்குகள் தங்க (ஜொலிக்கிறது) வண்ண கதவுகள் (19,20) என முன் புறமும், பளபளக்கும் கண்ணாடி சுவர்களுடன் பல மாடிகட்டிடமாக பின் பகுதியுமாக நிற்கும், இங்கே உலகின் பல மொழிகளில் புத்தகங்களிருக்கிறது. தமிழில் திருக்குறளும் பைபிளும்.. அரசின் முலமாகவோ அல்லது தூதரகத்தின் முலமாகவோ அனுப்பினால் தான் புதிய புத்தகங்களைப்பெற்றுக் கொள்வார்களாம்.நூலகத்தின் உச்சி மாடத்தின் முனையில் ஆந்தை சிற்பம். ஆந்தை அறிவு ஜிவிகளின் அடையாளமாம்.!

.
நகரின் நடுவே தியட்டர் டிஸ்டிரிக்ட் என்ற பகுதியில் நிறைய அரங்கங்கள். இந்தப் பகுதியில் உருவான முதல் தியட்டர். “தி சிக்காகோ தியட்டர் “. பாலிஷ் பளபளக்கும் மரக் கைப்பிடிகளுடன் வளைந்து செல்லும், கார்பெட் பதித்த அகலமான மாடிப் படிகள். சுவரெங்கும் கலைநயம் மிளிரும் ஓவியங்கள் நடுவில் தொங்கும் பெரிய சர விளக்கு.தங்கமாக மின்னும் கைப்பிடிகளுடன் வெல்வெட் நாற்காலிகள், பொன் வண்ணத்தில் ஓவியங்கள் (தேரில் சூரிய பகவான் ! ) சரவிளக்குகள் அலங்கரிக்கும் ஆடம்பரமான மேடையென ஒரு கிரேக்க அரண்மனைப் போல இருக்கும் இது ஒரு சினிமா, நாடகம்,இசை நிகழ்ச்சிகள் நடைபெறும் அரங்கம். 1921ல் துவங்கிய இது காலத்தின் தேவைக்கேற்ப செய்யப்பட்ட மாற்றங்களுடன் தொடர்ந்து இயங்கிவருகிறது. . 3600 பேர் அமரக்கூடிய இந்த அரங்கத்தின் கடைசிக்காலரி 6 வது மாடியில்.

.1985ல் நஷ்டமதிகரித்ததனால் தியட்டர் மூடப்பட்டு விற்கபட்டுவிட்டது. மற்றொரு அடுக்குமாடி கட்டிடம் எழ வசதியாக இடிக்கப்படத் தயாரானது. வெகுண்டு எழுந்த கலை ஆர்வலர்கள் நீதி மன்றத்தில் போராடி காப்பாற்றியிருக்கிறார்கள். பராம்பரிய கட்டிடங்களைப் பாதுகாக்க சட்ட பிறக்க இந்த நிகழ்ச்சியும் ஒரு காரணமாகிறது. புதிபிக்கபட்டிருக்கும் இன்றைக்கு மிக அதி தொழில் நுட்ப வசதியுடன் இயங்குகிறது.


.சர்ச்சைகளை, சரித்திரங்களை உருவாக்கும் சிக்ககோ நகரின் சிற்பங்களில் இன்று, உலகம் முழுவதும் சிற்பகலைஞர்களால் பேசப்படுவது மில்லியனம் பார்க்கில் பிரமாண்டமாக நிற்கும் “க்ளவுட் கேட்” (cloud gate) என்ற படைப்புதான். 2004 ஆண்டு நகரின் நூற்றாண்டு விழாவின் நினைவாக ஒரு பெரிய சதுக்கத்தை உருவாக்கியிருக்கிறார்கள். கிரேக்க பாணி நுழை வாயிலுடன் ஒரு பூங்கா, பரந்த புல்வெளி அதன்பின்னே ஒரு ரோஜாத் தோட்டம் என விரியும் இந்த வாளாகத்தின் ஒரு பகுதியில் பிரம்மாண்டமாக நிற்கிறது இந்தப் படைப்பு.

முழுவதும் பளபளக்கும் ஸ்டியன்லெஸ்ஸ்டிலால் ஆன இந்த படைப்புக்கு சிற்பி தந்த பெயர் “மேகங்களின் நூழை வாயில்”. ஆனால் ஒரு இது ஒரு பீன்ஸ் விதையைப்போலிருப்பதால் மக்கள் செல்லமாக பீன்ஸ் என்றே அழைக்கிறார்கள். 39 அடி உயரமும் 110 டன் எடையும் கொண்ட இதை வடிவமைத்தவர் அனிஷ் கபூர் என்ற இந்தியஓவிய சிற்ப கலைஞர்.. லண்டனில் வாழும் இந்த ஒவியரின் படைப்புகள் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் பிரபலமானவை. இந்து மதகோட்பாடுகளை தனது ஒவியங்களின் மூலமாக திணிக்க முயல்பவர் என்ற சர்சையிலும் சிக்கியவர் என்பதால் இந்தபடைப்பும் விமர்சனங்களுக்குத் தப்பவில்லை. நகரும் மேகங்களின் பின்னணியில் அருகில் உள்ள வானாளாவிய கட்டிடங்கள் தங்களை அழகு பார்த்துக்கொண்டிருக்கும் இந்த பளபளக்கும் ராட்சதபடைப்புக்கு முன் நாம் நிற்கும்போது இந்த பெரிய உலகத்தின் முன் நாம் எத்தனை சிறியவர்கள் என்ற எண்ணம் எழுகிறது.
மிகப் பிரம்மாண்டமான இதன் வழியே எளிதில் 50பேர் நுழைந்து வெளிவரலாம். அப்படி நுழையும்போது நமது உருவத்தையே தலைகிழாக தொங்குவதைப் போல் பார்ப்பது ஒரு வினோதமான அனுபவம்
.
அதே வாளாகத்தில் ஒரு 60 அடி உயர சுவற்றில், சுவர்முழுவதும் நிறைந்த ஒரு முகம் 5 நிடத்திற்கு ஒரு முறை மாறிக் கொண்டேயிருக்கிறது.ஓவ்வொரு முறையும் அந்த உருவத்தின் வாயிலிருந்து நீர் கொட்டுகிறது.ஏதோ விளம்பரம் என்று நினைக்கத் தோன்றும் இதுவும் டிஜிட்டல் சிற்பகலையின் ஒரு வகையாக கருதப்படும் டிஜிட்டல் நீருற்று சிற்பம். பல மில்லியன் டாலர் செலவில் உருவாக்கபட்டிருக்கிறது. படங்கள் மாறிக்கொண்டேயிருக்கிறது. கண்களைச்சிமிட்டிய சில வினாடிகளில் வாயிலிருந்து நீர் கொட்டுகிறது. தோன்றும் முகங்கள் அனைத்தும் சிக்காகோ வாசிகள். அவர்கள் அறியாமல் எடுக்கப்பட்ட படங்கள்.இன்று தங்கள் முகம் வருமோ என்ற எதிர்பார்ப்புடன் உள்ளூர் வாசிகளும், நீரில் நனைந்து விளையாடக் குழந்தைகளும், ஒரு பெரிய படம் பலதுளி டிஜிட்டல் பட சதுரங்களாக படைக்கப்பட்டு இணைக்கபட்டிருக்கும். இதில் அடுத்த படம் மாறும் செய்நேர்த்தியை காண மக்கள் காத்திருக்கின்றனர். சிலைகள் சிற்பங்கள் என்றால் அசையாது நிற்கும் அழகான படைப்புகளையே பார்த்துப் பார்த்து பழகிவிட்ட நமக்கு இவைகளையெல்லாம் சிற்பங்கள் என ஏற்று கொள்ள சற்று கஷ்டமாகத்தானிருக்கிறது.

டேனியல் ஹட்ஸ்ன் கனவு கண்டதைப்போலச் சிக்காகோவில் எல்லாமே பிரம்மாண்டமாகத்தான்உருவாகி உலகின் முக்கிய நகரமாகி, விட்டது.இன்று இன்னமும் பிரம்மாண்டமாகிக்கொண்டே போகிறது. ஓவ்வொரு ஆண்டும் நகரம் உருமாறிக் கொண்டே யிருக்கிறது.

சிக்காகோவைப்பற்றிப் பல ஆண்டுகளுக்கு முன் மார்க் ட்வைன் சொன்னவை இது:

அவள் எப்போதுமே அழகாக, புதுமையாகயிருப்பவள்.

நீங்கள் கடந்த முறை பார்த்ததைப் போல
அடுத்தமுறை இருக்கமாட்டாள்
இன்னும் அழகாகியிருப்பாள். .

எவ்வளவு உண்மையான வாசகங்கள்?

26/7/16

நாலு நூற்றாண்டுகளாக நடக்கும் நாடகங்கள்



உலகம் போற்றும் நாடகஆசிரியர் ஷேக்ஸ்பியரின் 400வது நினைவு நாள் கடந்த மாதம் இங்கிலாந்தில் தேசிய விழாவாக நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. ஷேக்ஸ்பியர் பிறந்த கிராமத்தில் அந்த விழாக்கள் துவங்கியது. அதைப் பார்ப்பதற்காகவே அங்குச் சென்ற திருமதி சந்திரா திலீப் தனது அனுபவங்களைப் வாசகர்களிடம் பகிர்ந்து கொள்கிறார்.

சிறுவயதில், பள்ளிக்காலத்திலிருந்தே நான் ஷேக்ஸ்பியரின் நாடகங்களை படித்துப் பிரமித்தவள் நான். தொடர்ந்து கல்லூரி, வங்கி வேலை என்று வாழ்க்கை தொடர்ந்த போதும் ஷேக்ஸ்பியரின் எழுத்துகளைத் தேடி தேடிப் படித்தேன். அவர் பிறந்த வீட்டையும் வாழ்ந்த ஊரையும் பார்க்க வேண்டும் என்பது என் கனவுகளில் ஒன்று. சில முறை வெளிநாடுகள் சென்றிருந்தாலும் இந்த வாய்ப்பு கிட்டவில்லை. ஷேக்ஸ்பியரின் 400 வது நினைவுநாளை இந்கிலாந்தில் மிகப் பெரிய அளவில் கொண்டாடப் போகிறார்கள் என அறிந்ததும் அதைப் பார்க்க, அதில் கலந்துகொள்ள, ஆவல் கொண்டு என் விருப்பத்தை என் கணவர் திலீப்பிடம் தெரிவித்தபோது, அவரும் உடன் வரச் சம்மதித்தது ஆச்சரியம். காரணம் அவருக்கும் ஆங்கில இலக்கியத்தில் மிகவிருப்பம் என்றாலும் என்னளவு ஷேக்ஸ்பியரின் பயங்கர ரசிகரில்லை.
ஸ்டார்ட்போர்ட் அப் ஆன் ஆவோன்(Stratford-upon-Avon) என்பது இங்கிலாந்தில். லண்டனிலிருந்து 163 கிமீ தூர ரயில் பயணத்தில் இருக்கும். ஒரு சின்ன கிராமம். ஸ்டார்ட்போர்ட் பெயரில் வேறு நகரங்கள் இருந்ததால் ஆவோன் நதிக்கரையிலிருக்கும் என்ற அடைமொழியுடன் அழைக்கப்படும் இது இன்றும் போன நூற்றாண்டின் சாயல் மாறாமல் மிக அழகாக இருக்கிறது.

இது தான் ஷேக்ஸ்பியர் பிறந்து வளர்ந்து வாழ்ந்த(1564-1616) கிராமம். இங்குள்ள அரங்கத்தில் தான் அவரது நாடகம் முதலில் அரங்கேயிருக்கிறது. இங்கு ஆண்டுதோறும் அவரது பிறந்த நாளையொட்டி (ஏப்23)வரும் வார இறுதியில் இசை நாடக நிகழ்ச்சிகளை விழாவாகக் கொண்டாடுவார்கள். 25000 பேர் மட்டுமே மக்கள்தொகை கொண்ட இந்தக் கிராமத்துக்கு ஆண்டுக்கு 5 லட்சம் சுற்றாலா பயணிகள் வருகிறார்கள்.
இந்த வருடம் அவரது 400 வது நினைவு நாளை மிகப்பெரிய அளவில் இங்கிலாந்து நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டது. அதன் முக்கிய நிகழ்ச்சிகள் இந்த இடத்திலிருந்து துவங்கியது. இதற்காகத் தனி இணைய தளம், கமிட்டிகள், அரசாங்க அறிவிப்புகள் என ஆறு மாதமாக அமர்க்களப்படுத்திக் கொண்டிருந்தார்கள். அங்கு இரண்டுநாள் தங்கி நடைபெறும் நாடக/ இசை விழாக்களில் பங்குபெறக் கட்டணம், ஹோட்டல் எல்லாவற்றிருக்கும் முன்பதிவு செய்து உதவப் பல டிராவல் கம்பெனிகள் அறிவித்துக் கொண்டிருந்தன.

இந்தச் சின்ன நகரத்தில் ஷேக்ஸ்பியரின் வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட விஷயங்கள் அனைத்தும் இருக்கின்றன. அவர் பிறந்த விடு, படித்த கிங் எட்வர்ட் பள்ளி, அவர் மனைவியின் குடும்ப வீடு, மகள் வசித்த வீடு, அவரது பெற்றோர்கள் வீடு அவர் வாங்கி வாழ்ந்து பின் இறந்த வீடு முதல் நாடகம் அரங்கேறிய தியட்டர், அவருக்கு ஞானஸ்தானம் செய்விக்கப் பட்ட சர்ச், அதில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட பகுதி இப்படி எல்லாம்,

அவரும் ஒரு பங்குதாராரக இருந்து இங்குத் துவக்கிய ராயல் ஷேக்ஸ்பியர் தியட்டர் என்ற நாடக அரங்கம் கடந்த சில ஆண்டுகளில்;புதுப்பிக்கப்பட்டு அதிநவீனமாக இருக்கிறது.
இந்த இடங்களுக்குக் குழுக்களாக அழைத்துச்சென்று கைடு விளக்குகிறார். மறு நாள் 400வது நினைவுநாள் விழாவிற்கான எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அந்த நகரம் அமைதியாக இருந்தது ஆச்சரியமாக இருந்தது.
38 நாடகங்களும், 154 14 வரிப் பாடல்களும், இரண்டு நீண்ட கவிதைகளும் எழுதியிருக்கும் ஷேக்ஸ்பியரின் படைப்புகளின் கையெழுத்துப் பிரதிகளோ. அவரைப் பற்றி அவர் எழுதிய குறிப்புகளோ எதுவுமே இன்று இல்லை. அவருடைய போட்டோ கூடக் கடையாது. அவர் புத்தகத்தின் முதல் பதிப்பில் இருக்கும் ஒரு கோட்டுஒவியத்தின் அடிப்படையில்தான் பின்னாளில் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டிருக்கின்றன.

அவர் மறைந்த 7 ஆண்டுகளுக்குப் பின் அவரது நண்பர்கள் ஜானும் ஹென்றியும் 1623ல் வெளியிட்ட “முதல் பக்கம் என்ற தொகுப்பின் முலம்தான் ஷேக்ஸ்பியரை எழுத்துவடிவில் இந்த உலகம் அறிந்துகொண்டது. . இந்தப் புத்தகத்தைக் கண்ணாடிப்பேழையில் அவர் வாழ்ந்த வீட்டில் காட்சிக்கு வைத்திருந்தார்கள்.

இன்று ஷேக்ஸ்பியரைப் பற்றி நாம் அறியும் பலவிஷயங்கள் நீண்ட ஆராய்சிகளுக்கும் அலசலுகளுக்கும் பின்னர் கிடைத்தவை., இதைச்செய்தவர்கள் இங்குள்ள ஷேக்ஸ்பியர் சொஸைட்டி. இன்னும் ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள். இன்று ஆராய்ச்சி நிலையமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கும் இதில் பலர் ஷேக்ஸ்பியர் எழுதியவற்றை ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள்
.
முதல் நாள் இந்த இடங்களைப் பார்த்தபின் முன்னணி நடிகர்கள் நடிக்கும் நாடகங்களில் ஒன்றைத்தேர்ந்தெடுத்துப் பார்த்தோம். மறுநாள் காலையில் நகர மேயர் ஆட்சிமன்ற குழுவினருடன் முன்னணியில் செல்ல, பள்ளி மாணவர்கள் சீருடையில் அணிவகுக்க, நகர இசைக்குழுவின் இசையில் “ஷேக்ஸ்பியர் வாக் என்ற நடைப்பயணம். அந்தக் கிராமத்தின் குறுகிய வளைந்த தெருக்களில் சென்றது. அவர் இந்த வீதிகளிலேதானே நடந்திருப்பார், இந்தப்பள்ளியில்தானே படித்திருப்பார், இந்த வீட்டில்தானே மனைவியைச்சந்திருப்பார், என்ற எண்ணஓட்டங்களுடன், எங்களைப்போலக் கடல்கடந்து வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள், இங்கிலாந்தின் பல பகுதிகளிலிருந்து வந்தவர்கள். பக்கத்து ஊர்கார்கள் எனப் பலர் அதில் இணைந்தனர்
.
தெருமுனைகளில் உள்ளூர் இசைக்குழுவினரின் வரவேற்பு, ஷேக்ஸ்பியரின் பாத்திரங்களின் வேடமணிந்து உற்சாகமூட்டம் நண்பர்கள் என விழாக்கோலம். ஆங்காங்கே பள்ளிகளிலும் பொது மண்டபங்களிலும் நாடகங்கள். பெரிய மேடை செட்டுக்கள் எல்லாம் கிடையாது. தரைதளத்தில் தொட்டுவிடும் தூரத்தில் நடிகர்கள் சற்று தள்ளி இசைக்கலைஞர்கள்.

விழாவின் இறுதியில் பவனியின் பங்கு பெற்றோரும் அதைப், பார்த்துக்கொண்டிருந்தோரும், இந்த விழாவிற்காகத் தயாரிக்கப்பட்டிருந்த ஷேக்ஸ்பியரின் முகம் பதிக்கப்பட்ட ஒரு முகமூடியை அணிந்து கொண்டு அந்த மேதைக்கு 3 முறை வாழ்த்தொலி எழுப்பினார்கள். மிக அற்புதமாக உணர்ந்த நிமிடங்கள் அவை.

பவனியின் இறுதியில் ஷேக்ஸ்பியரின் உடல் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் ஹோலி டிரினிடி சர்ச். இங்கு அவருக்கும் அவரது மனை.விக்கும் அருகருகே சமாதிகள். அவைகள் மீது எங்களுக்கு முன் வந்தவர்கள் வைத்திருந்த அழகான மலர்கொத்து. கல்லறை வாசகம் லத்தீன் மொழியில் எழுதப்பட்டிருக்கிறது. அதன் அருகே

இந்த தூசிபடிந்த இடத்தில் தோண்டும் அன்பான நண்பரே
யேசுபெருமான் மன்னிப்பாராக
கல்பலகைகளை விட்டுவைப்பவர்களை வாழ்த்துகிறேன்
என் எலும்புகளை எடுப்பவர்களை சபிக்கிறேன்.”
.
 என்று சொல்லும் ஆங்கில மொழிபெயர்ப்பு. அந்த காலகட்டத்தில் கல்லறைகளிலிருந்து எலும்புகள் திருடப்படுவது வழக்கமாம். அத்னால் இந்த வாசகங்கள் என்றார் கைடு.
அன்றைய விழாவிற்கு இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்ஸும் அவரது மனைவி கேமிலாவும் வந்திருந்தனர். இளவரசர் சார்லஸ் போட்டோக்களில் பார்ப்பதைவிட சற்று வயதான ஆனால் கம்பீரமான தோற்றத்தில் இருக்கிறார். .அன்று அரச தம்பதியினர் ராயல்ஷேக்ஸ்பியர் தியட்டரில் ஒரு நாடகமும் பார்த்தனர்.
ஆண்டுதோறும் நமக்கும், இந்த உலகிற்கும் வயது அதிகமாகிக்கொண்டிருக்கிறது. ஆனால் சில விஷயங்கள் எப்போதுமே அழியாத இளமையுடன் இருக்கின்றன. அதில் ஷேக்ஸ்பியரின் நாடகங்களும் ஒன்று.


சந்திப்பு     ரமணன்


 மங்கையர் மலர் ஜுலை இதழிலிருந்து 















22/6/16

வெற்றிப் பயணமா? வெறும் பேச்சா?





பதவியேற்றதிலிருந்து பறந்துகொண்டேயிருக்கிறார். பார்லிமெண்டில் நாற்காலியில் உட்கார்ந்தால் கூட சீட் பெல்ட்டைத் தேடுகிறார் என்று சமுக ஊடகங்களில் கிண்டல் அடிக்கப் படும் மோடியின் வெளிநாட்டுப்பயணங்களில் லேட்டஸ்ட் “5 நாடுகளின் பயணம். அதிலும் குறிப்பாக அமெரிக்கப் பயணம். இது மிகவும் வெற்றிகரமான பயணம், NSG அமைப்பில் இந்தியா இணைந்து அணு உலகிற்குள் அடி எடுத்துவைக்கப் போகிறது என்று ஊடகங்கள் வர்ணிக்கின்றன. இது எந்த அளவுக்கு உண்மை என்பதைப் பார்க்கும் முன் அது என்ன என்.எஸ் ஜி? அதில் இந்தியா இடம்பெற வேண்டியது அவசியமா?? என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
அணு எரிபொருள் வினியோக கூட்டமைப்பான NSG(nuclear supply group)யில் இப்போது உறுப்பினராக 48 நாடுகள். அணுசக்தி தொடர்பான வர்த்தகங்களைத் தொழில்நுட்பங்களை இவை தங்களுக்குள்ளாகவே பரிமாறிக்கொள்கின்றன. வளர்ர்சியடைந்த நாடுகளூம், வல்லரசுகளும் உறுப்பினராக இருக்கும் இதில் இந்தியா உறுப்பினராக அனுமதிக்கப்படவில்லை. அதற்குக் காரணம் நாம் அணு ஆயுத பரவல் தடுப்பு சட்டம் என்று உலகின் பல நாடுகள் ஒப்புக்கொண்ட விதிகளை நாம் ஏற்கவில்லை. இதில் கையெழுத்திடாதால் இந்தியாவை என்.எஸ்ஜியில் சேர்க்கக் கூடாது என்ற தடுத்தவர் அன்றைய அமெரிக்க அதிபர் புஷ். அவரைத்தொடர்ந்து வந்த அமெரிக்க அதிபர்களும் இதே நிலையைத்தான் தொடர்ந்தார்கள். இந்திரா காலத்திலிருந்தே இந்தியாவும் தன் நிலையில் அணுஆயுத பரவல் சட்டத்தை ஏற்கமாட்டோம் என்பதில் பிடிவாதமாக இருந்தது. தனித்து இருந்தோமா, தனிமைப்படுத்தப்பட்டோமா என்பது வேறு விவாதம்.
இப்போது காலம் கனிந்திருக்கிறது, காட்சிகள் மாறப் போகிறது. என்.பி.டியில் கையெழுத்திடாமலேயே என்.எஸ்.ஜியில் அமெரிக்கா, மெக்சிகோ நாடுகளின் ஆதரவோடு இந்தியா உறுப்பினராகப் போகிறது. இதற்கான அறிவிப்புக்கள் வெளியாகியிருப்பது தான் இந்தப் பயணத்தின் வெற்றி. ஆனால் இந்த நிலைக்கான முழுப்பெருமையையும் மோடி எடுத்துக்கொள்ள முடியாது. என்றாவது ஒரு நாள் இந்த நிலைவரும் என்று நம்பி பிடிவாதமாக இருந்த இந்திரா, நரசிம்மராவ், மன்மோகன் போன்ற முந்தைய பிரதமர்களுக்கும் பங்கு இருக்கிறது, ரிலே ரேசில் கடைசியாக ஓடி வெற்றி கோட்டைத் தொடும் வீரன் கைதட்டல் பெறுவதுபோல நிகழ்ந்திருக்கும் விஷயம் இது.
இப்படி இந்தியாவிடம் தீடிரென்று அமெரிக்கா கரிசனம் காட்டுவதற்குக் காரணம் மோடியின் கோரிக்கையும் பயணமும் மட்டுமில்லை. சும்மா ஆடாத சோழியனின் குடுமி போல அமெரிக்கா எதையும் பலன் இல்லாமல் செய்யாது.
சீனா என்.எஸ்ஜியில் இந்தியா இடம் பெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. உலக போலீஸாக தன்னை கருதிக்கொள்ளும் அமெரிக்கா, தென் பசிபிக் கடல் பிரதேசத்தில் இந்தியாவுடன் இணைந்து கூட்டாகப் பாதுகாப்பு பணிகளைச் செய்யது சீனாவிற்கு செக் வைக்க விரும்புகிறது.. இதற்காகத் தரவேண்டிய விலையாக இந்த விஷயத்தில் இந்தியாவிற்கு ஆதரவுநிலையை எடுத்திருக்கிறது.
அதைவிட முக்கியமான விஷயம் சர்வ தேச சந்தையில் டாலரின் மதிப்பு சரிந்து யூரோ எழுச்சி பெற்று கொண்டிருக்கிறது. பொருளாதாரம் விழுந்துகொண்டிருக்கிறது என்ற இன்றைய நிலையில் அமரிக்காவிற்கு அதன் வெளிநாட்டு வாணிகத்தைப் பெருக்க வேண்டிய கட்டாயம் எழுந்திருக்கிறது. அமெரிக்காவின் ஏற்றுமதியில் முக்கிய இடம் மற்ற நாடுகளின் ராணுவத்திற்கான ஆயுதம் மற்றும் தளவாடங்கள்தான். 60 சதவீத ஆயுதங்களை இறக்குமதி செய்யும் இந்தியாவில். ஆட்சிக்குவந்தவுடனேயே இந்திய ராணுவம் நவீனப்படுத்தப்படும் என்ற மோடியின் அறிவிப்பினால் முழித்துக்கொண்டது அமெரிக்கா.
தொடர்ந்து ராணுவ அமைச்சராகப் பொறுப்பேற்ற மனோகர் பரேக்கர் முந்தைய ஆட்சியில் செய்யப்பட்ட ஆயூத சப்ளை காண்டிராக்ட்களை நிறுத்திவைத்தார். அமெரிக்கா. இந்த வாய்ப்பை தவறவிடக் கூடாது எனத் திட்டமிடத்தொடங்கியது. அதற்காக இந்தியாவை எதையாவது செய்து தஜா செய்ய வேண்டிய நிலைக்கு வந்தது. மேலும் இந்தியாவின் மின் உற்பத்தியில் அணு உலைகள் முக்கிய இடத்தைப்பிடிக்கபோவது திட்டங்களில் வெளியாகியிருப்பதால் அணுசக்தி துறைக்கு உதவக்கூடிய கட்டுமானம் மற்றும் இதர தொழில் நுட்பத் துறைகளில் அமெரிக்க நிறுவனங்கள் நீண்ட கால முதலீடு செய்யும் வாய்ப்புகளையும் உணர்ந்திருக்கிறது. அணு உலைகளுக்கான மூலப்பொருள் தராளாமாகக் கிடைக்காவிட்டால் இந்த வாய்ப்பு அவைகளைத் இப்போது இந்தியாவிற்குத் தந்து கொண்டிருக்கும் வேறு நாடுகளுக்குப் போய்விடும்.

இந்த அமைப்பில் சேருவதனால் இந்தியாவிற்கு என்ன பயன்?
அணுசக்தி ஆராய்ச்சிக்கு முக்கிய தேவை யுரேனியம். இது இந்தியாவில் மிகக் குறைவாகவே கிடைப்பதால், நாம் இறக்குமதியைச் சார்ந்திருக்கிறோம். இந்த என்.எஸ்ஜி அமைப்பைபில் இடம் பிடித்துவிட்டால் நமக்குத் தாராளமாக யுரேனியம் கிடைக்கும். அணுஆயுதம் அல்லாத, மின் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு பொதுப் பயன்பாட்டு திட்டங்களுக்கு மூலப்பொருட்களையும், தொழில் நுட்பத்தையும் பெற இந்த அமைப்பில் உடனடியாக உறுப்பினராவது அவசியம் என்ற நிலைப்பாட்டை, வளர்ச்சியை நோக்கி வேகமாக முன்னேற்ற விரும்பும் மோடியின் அரசு எடுத்திருக்கிறது அணுதொடர்பான நமது ஆராய்ச்சிகள் இனி புலிப் பாய்ச்சலில் இருக்கும். ஏவுகணை தொழில் நுட்பத்தில், அக்னி, பிரமோஸ் பிருத்வி போன்ற உலகத்தரம் வாய்ந்த ஏவுகளைகளை செலுத்தி உலக அரங்கில் நம் திறனைக் காட்டியிருக்கும் நாம் அந்த டெக்னலாஜிகளை உறுப்பு நாடுகளுடன் வணிக ரீதியாக விற்பனை செய்ய முடியும்.

இந்தப் பயணத்தின் உடன் விளைவாக 6 புதிய அணுமின்நிலையங்களை இந்திய அணுமின்கழகமும் அமெரிக்காவின் வெஸ்டிங் ஹவுஸ் நிறுவனமும் அமைக்கப் போகின்றன. இதன் மூலம் உடனடியாக, அமெரிக்காவும், கட்டமைப்பு பணிகளில் ஈடுபடப்போகும் அதானி, ரிலெயன்ஸ் நிறுவனங்கள்தான் என்ற குரல் எழு ஆரம்பித்திருக்கிறது. நாட்டின் பல பகுதிகளில் அணு உலைகளின் ஆபத்துகுறித்து குரல்கள் வலுத்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இந்தப் பயணம் உண்மையிலேயே வெற்றிதானா என்பதைக் காலம் தான் தீர்மானிக்கப் போகிறது.

பாக்ஸ் 1 சில் வரவேண்டியது

Nuclear Non-Proliferation treaty எனப்படுகிற (NPT)) அணுஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில்கைய்ழுத்து இடும் நாடுகள் எவ்வித நிபந்தனையுமின்றி தங்கள் அணு ஆயுத தயாரிப்பு வசதிகளைச் சர்வ தேச அணுசக்தி ஏஜின்சியின் சோதனைக்கு அனுமதிக்க வேண்டும். அணு ஆயுத உற்பத்தியையும் அடையோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்.
வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா,சீனா, பிரான்ஸ் பிரிட்டன் போன்ற நாடுகள் அணு ஆயுதங்களைத் தயாரித்து அடுக்கி வைத்துக்கொண்டு வளரும் நாடுகளைத் தடுப்பது நியாமில்லை என்று இந்தியா இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட  மறுத்து  கொண்டிருக்கிறது.

பாக்ஸ் 2ல் வரவேண்டியது
1968 என் பி டியி கையெழுத்திடமாட்டோம் என அறிவிக்கப்பட்டது
1974-முதல் அணுகுண்டு சோதனை
1998-இரண்டாவது முறையாக அணுகுண்டு சோதனைகள் (5 முறை நடந்தது)
2006-அமெரிக்க செனட் இந்திய அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு சட்டத்தை நிறைவேற்றியது
2007= இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் 123 கையெழுத்தானது
2016 -என்.எஸ்.ஜியில் இந்தியா இணைய அமெரிக்கா ஆதரவை அறிவித்தது.

(கல்கி 23/06/16 இதழலில் இருந்து)





/


22/3/16

GOல்டு வார்




மக்களோ, அரசோ, இயல்புவாழ்க்கையோ பாதிக்கப்படாத போராட்டம் ஒன்று நடந்திருக்குமானால் அது சமீபத்தில் நடந்த நகைக்கடை வியாபாரிகளின் போராட்டமாகத்தான் இருக்கும். அதே போல் நாடுதழுவிய கடையடைப்பு என அறிவித்துவிட்டு டிவியிலும் செய்திதாட்களிலும் நகைக்கடைகளுக்கு அதிகளவில் விளம்பரங்கள் செய்த கொண்டிருந்த முரண்பாடு இருந்ததும் இந்தப் போராட்டத்தில் தான். பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது பாலைத் தெருவில் கொட்டினார்கள். தங்க வியாபாரிகள் அதுபோல் செய்யவேண்டியதுதானே எனச் சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்யும் விஷயமாகிப் போயிருந்தது இந்தப் போராட்டம். உலகிலேயே அதிகமாகத் தங்க நகைகள் வாங்கும் நுகர்வோர் இந்தியாவில் மட்டுமே. இந்தியாவில் மக்கள் தமது வருமானத்தில் சராசரியாக 30% சேமிப்பாக வைக்கிறார்கள் என்றால், அதில் 10 சதவீதத்தைத் தங்கமாக வாங்கி வைக்கிறார்கள் என்கின்றன ஆய்வுகள். இதில் கைமாறும் பணத்தில் பெருமளவிற்கு சரியான பில்கள், கணக்குகள் காட்டப்படுவதில்லை. உள்நாட்டுக் கருப்புப் பணத்தில் தங்கம் பெரும்பகுதியாக இருக்கிறது என்பதால் அரசு, தங்கத்தைப் பயன்படுத்துவதைக் குறைக்க மத்திய அரசு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இறக்குமதி வரி அதிகரிப்பு, தங்கத்தின் மீதான முதலீட்டுக்கு வரி ஆகியவற்றைத் தொடர்ந்து தற்போது தங்கம் மற்றும் வைரம்மீதான கலால் வரி உயர்த்தப்பட்டிருக்கிறது. இதனால் தங்கம் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. ரூ.2 லட்சத்துக்கு அதிகமாக நகைகள் வாங்குவோரின் பான் கார்டு (வருமான வரி நிரந்தர எண்) தெரிவித்தல் கட்டாயம் என்ற நிபந்தனையை இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதலாக அமல்படுத்தியது. பெரும்பாலும் கணக்கில் காட்டப்படாத பணம், லஞ்சப்பணம்தான் தங்கமாக மாறிக்கொண்டிருக்கிறது. இதைத் தடுக்கும் முதல் முயற்சியே பான் கார்டு கட்டாயம் என்ற உத்தரவு. இதைத்தொடர்ந்து தங்க கொள்முதலை விற்பனையைக் கண்காணிக்க 1% கலால் வரி அறிவிக்கப்பட்டது. கலால் வரி செலுத்துவதற்கு இருக்கும்நடைமுறைகளினால் நகை உற்பத்தியாளர்கள் பலவற்றை மறைக்க முடியாது,. தங்கம் வாங்குபவர்களில் 68% மக்கள் கிராமப்புறங்களில் வசிப்போர். இவர்களிடம் வங்கிக் கணக்குகள் இல்லை. வரி செலுத்துவோர் மக்கள் தொகையில் 3% மட்டுமே. ஆகவே, பான் கார்டு அனைவரிடமும் இருக்காது. எனவே இப்படிப் பட்ட அறிவிப்புகள்  தங்கம் வாங்க விரும்பும் சதாரண மக்களை  பல இன்னல்களுக்கு உள்ளாக்கும் என்றும் அதைவலியுறுத்துவதற்காக அகில இந்திய அளவில் கடையடைப்புப் போராட்டங்களை அறிவித்தது நகை வியாபாரிகள் சங்கம். ஆனால் இந்தப் போராட்டங்கள் எந்தவித சலனத்தையும் ஏற்படுத்தாதற்கு முக்கியக் காரணம் தங்கம் ஏழைகள் அன்றாடம் வாங்கும் பொருள் அல்ல. எனவே அதன் விலையேற்றம் வாங்க முடியாதவர்களைப் பாதிக்கப்போவதில்லை. வாங்கும் வசதி படைத்தவர்களுக் விலையைப் பற்றிய கவலை இல்லை. ”இந்த வரிவிதிப்பினால் தங்கம் வாங்கமுடியாமல் எங்கள் வீட்டுக் கல்யாணம் நின்றுவிட்டது” என்ற குரலோ, திட்டமிட்டமிட்டபடி சேமிப்பிலிருந்து ”தங்கம் வாங்க முடியவில்லையே” என்ற ஆதங்கக் குரலோ முணுமுணுப்போ கூட மக்களிடமிருந்து எழவில்லை. நாடு முழுவதும் தங்க விற்பனையில் வரிஏய்ப்பு செய்யும், தாங்கள் கண்காணிக்கப்படுவதை விரும்பாத நகை வியாபாரிகள் தான் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறார்கள் . மேலும் கோடிக்கணக்கில் தங்கம் ஸ்டாக் வைத்திருக்கும் வியாபாரிகள் இந்த விலையேற்றத்தினால் எந்த நஷ்டமும் அடையப்போவதில்லை என்பதால் மக்களுக்கு அவர்கள்மீது எந்த அனுதாபமும் எழவில்லை. எல்லாவற்றையும் விட 1% வரிவிதிப்பை வியாபாரிகள் மக்கள்மீதுதான் திணிக்கப் போகிறார்கள்.அப்புறம் ஏன் இந்த முதலைக் கண்ணீர் என்ற எண்ணமும் எழுந்திருக்கிறது. அதாவது வாங்குவோருக்கும் விற்பனையாளர் என்ற இரு தரப்புக்குமே பாதிப்பில்லாத ஒரு விஷயத்திற்கு நடந்த போராட்டம் தோற்றத்தில் ஆச்சரியமில்லை வருட வருமானத்தின் 10% சேமிப்பான 2 லட்சத்தைத் தங்கத்தில் முதலீடு செய்பவர்களின் வருமானம் 20 லட்சமாக இருக்கும் என்பதால்  வருமானவரி செலுத்தும் அவரிடம் பான் கார்ட் இருக்கும்.  கிராமங்களிலிருப்பவர்களுக்கு வங்கிக்கணக்கில்லை என்பதையும் முழுவதுமாக ஏற்பதிற்கில்லை. சமீபத்தில்  பல கோடி ரூபாய் வெள்ள நிவாரணம் இரண்டே நாளில் மக்களின் வங்கிக்கணக்கில் சேர்ந்தது.  இதுபலருக்கு வங்கி கணக்கு இருப்பதையும், அதன் அவசியத்தை மக்கள் உணர்ந்திப்பதையும் காட்டுகிறது. இந்தப் போராட்டத்தால் அரசுக்கு இழப்பு இல்லையா? உண்டு தங்க நகை விற்பனை தடைப்படும் ஒவ்வொரு நாளும் பல்வேறு நிலைகளிலும், அதாவது தங்கம் இறக்குமதி, விற்பனை, நகைகள் தயாரிப்பு, நகை விற்பனை எனப் பல நிலைகளில் சுமார் 40% வரி விதிப்பு உள்ளது.ஆனாலும் மத்திய அரசு இந்த இழப்பைப்,பொருட்படுத்தவில்லை.காரணம் இதைவிட முக்கியமான விஷயமான ஆண்டுதோறும் அதிகரிக்கும் தங்க இறக்குமதியைக் குறைப்பதன் மூலம் நடப்பு கணக்கின் பற்றாக்குறையை கணிசமாகக் குறைக்க முடியும் என்பதால் இந்த வருமானஇழப்பை சந்திக்கத் தயாராகவிருக்கிறது. கருப்புப் பணம் தங்கமாகிறது என்பதும், அதிகாரிகள் பலரும் லஞ்சம் பெறுவது தங்கமாகத்தான் இருக்கிறது என்பதும் எல்லோரும் அறிந்த உண்மை.மக்கள் தங்கத்தில் முதலீடு செய்வதில் தவறில்லை. . ஆனால், கருப்புப் பணம் தங்கமாகப் பதுக்கப்படுவது தடுக்கப்பட்டேயாக வேண்டும். விற்பனை கண்காணிக்கப்பட வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி, கொண்டு வரப்பட்டிருக்கும் அரசின் இந்த முயற்சி மக்களிடம் அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியிருப்பது மகிழ்ச்சியான விஷயம் 110316

16/3/16





மெல்லப்பரவும் துல்லியமான ஒலி, கண்களை உறுத்தாத இதமான ஒளி. அழகான இணைப்புரை. இதமான ஏசிஅமைதியாக ரசிக்கும் ரசிகர்கள். இதைவிட வேறென்ன வேண்டும் ஒரு நாட்டிய நிகழ்ச்சியின் வெற்றிக்கு.? .அப்படியொருஇசையும் நடனமும் இணைந்து பரிமளித்த ஒரு நிகழ்ச்சியுடன் தான் எம். எஸ் அம்மாவின் நூற்றாண்டைக் கல்கிசதாசிவம் அறக்கட்டளை கடந்த வாரம் கொண்டாடியது

அமரர் கல்கி அவர்கள் எழுதிய பல பாடல்களில் ஒன்று ”மாலைப்பொழுதினிலே” அதையே தலைப்பாகக் கொண்டு திருமதிகெளரி நாராயணன் தயாரித்திருந்த இசை-நாட்டிய நிகழ்ச்சி அது. நிஷா ராஜகோபலன் பாட, பிரியா கோவிந்த் நடனமாடினார்.எம்எஸ்ஸை இசைஅரசியாகத்தான் உலகம் அறியும். அவர் தன் அன்பு மகள்களின் நடனத்துக்குப் பாவங்களும், அபிநயங்கள்சொல்லிக்கொடுத்து ஜதி சொல்லிபாடியுமிருக்கிறார் என்பதிலிருந்து அவர் பாடிய சில பாடல்கள் எப்படிப் பிறந்தது போன்றசுவையான தகவல்களுடன் கெளரிராம்நாராயணனின் இணைப்பு உரையுடன் நிஷாவின் பாட்டு. எம் எஸ் பாடியபாடல்களில் நடனத்துக்கு ஏற்றது தேர்ந்த்டுக்கபட்டிருந்தன. 

எம்.எஸ் அம்மா பாடிய பாட்டு என்பதைத்தாண்டி எம்.எஸ்ஸின் குரல் சாயலை நிஷா பாடியபோது உணர்ந்தது நிஜம்.நடனங்களுக்கு பாடுபவர்கள் ஒரு தனி இனம். ஓங்கிய தங்கள் குரலால் ஜதிஸ்வரங்கள் சொல்லித் தங்கள் இருப்பதைஅழுத்தமாகப் பதிவு செய்வார்கள். அன்று நிஷா அப்படி எதுவும் செய்து மிரட்டாமல் கச்சேரியில் பாடுவது போல அழகாகவயலினுடன் இணைந்து மிதந்த குரலுடன் நடனத்தைச் சிறப்பாக்கினார். 
பாடல்களின் ஒவ்வோரு வார்த்தைக்கும் வரிகளுக்கும் தனது நளினமான உடல்மொழி,
மற்றும் பாவங்களினால்உயிருட்டினார் பிரியா கோவிந்த். பாரதீய வித்யாபவனின் அந்தப் பெரிய ஸ்டேஜ் முழுவதும் வினாடிகளில் ஒடிப்பரவிஆடிக் காட்டிய அபிநயங்களை ரசிகர்கள் தங்களை மறந்து பார்த்துக்கொண்டிருந்தனர். இவரிடம் நடனம் கற்கும்மாணவிகள் நிச்சியமாகக் கொடுத்துவைத்தவர்கள்தான். 
ஆண்டுதோறும் கல்கி சதாசிவம் நினைவு அறக்கட்டளை கல்வியில் சிறந்து பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ளமாணவர்களுக்குக் கல்விக்கான உதவித்தொகையும், தமிழ் பத்திரிகைகளில் இடம் பெற்ற விளம்பரங்களில்கலைச்சிறப்பும் சமுதாய சிந்தனையும் இணைந்ததான ஒரு சிறந்த விளம்பரத்துக்கு ரூ 25000 பரிசும் வழங்குகிறார்கள்.இசை நடன நிகழ்ச்சிக்கு முன்னர் அன்றைய விளம்பரத்துக்காகக் கடந்த 16 ஆண்டுகளாக வழங்கப்படும் இந்த விருதை இந்த ஆண்டு பெற்றவர்கள் விஜய் டிவி நிறுவனம். அவர்கள் பத்திரிகைகளில் வெளியிட்டிருந்த ஹெல்மெட் அணிவதின் அவசியம் குறித்த விளம்பரம் பரிசு பெற்றது. இந்த விருதுக்குகான இறுதிக்கட்ட நடுவர்களில் ஒருவராக இருக்கும் வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டிருந்தது. அதற்காக அன்றைய விழாவில் எனக்கும் ஒரு நினைவுப்பரிசு வழங்கினார்கள். விழாவிற்கு தலைமையேற்ற வயலின், வாய்பாட்டு வித்தகரும் எம்,.எஸ் அம்மாவுக்கு நீண்டநாள் வாசித்த கலைஞருமான ஸ்ரீராம்குமார் பரிசினை வழங்கினார். 
நாம் மிகவும் மதிக்கும் கல்கி குழுமத்திலிருந்து இத்தகைய கெளரவம் பெற்றது மிகவும் சந்தோஷமாகியிருக்கிறது.

10/3/16

அடுத்த அமெரிக்க அதிபராவாரா? இந்தப் பெண்மணி

250 ஆண்டு அமெரிக்க வாலாற்றில் இதுவரை ஒரு பெண்மணி அதிபரானதில்லை. இந்த ஆண்டு நடக்கப்போகும் அதிபர் தேர்தலில்அதற்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம் இந்த ஆண்டு முடிவடைகிறது. அடுத்த அதிபருக்கான தேர்தல் வரும் நவம்பர் 8ம் தேதி நடைபெறவிருக்கிறது. அமெரிக்க தேர்தல் முறைப்படி பிரதான அரசியல் கட்சிகள் தங்கள் கட்சி வேட்பாளர்களை அறிவிக்கும்முன் அவர்கள் கட்சியினால் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். உட்கட்சி ஜனநாயகம் வலுவான அரசியல் அமைப்பு முறையுள்ள அமெரிக்க அரசியலில் கட்சிகள் இந்தத் தேர்தல்களை மாநிலந்தோறும் நடத்தி எந்த வேட்பாளர் அதிகமான மாநிலங்களில் கட்சி உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப் படுகிறாரோ அவரைத் தங்கள் கட்சியின் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள். அவர்களில் ஒருவரை மக்கள் நேரிடையாக வாக்களித்து அதிபராகத் தேர்ந்தெடுப்பார்கள்.
இப்போது அமெரிக்க அரசியல் கட்சிகளான குடியரசு, மற்றும் ஜனநாயக கட்சிகளில் உட்கட்சி தேர்தல்களம் சூடுபிடித்துவிட்டது. ஜனநாயகக் கட்சியின் முதல் உட்கட்சி தேர்தல் அய்வோவா மாநிலத்தில் துவங்கியது. அதில் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற்றார். இந்த மாநிலத்தின் முதல் தேர்தலில் வெற்றி பெற்ற ஜனநாயக கட்சி வேட்பாளர்கள் தான் அதிபர் தேர்தல் போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அதனால் ஹிலாரியின் வெற்றி ”அமெரிக்காவிற்கு ஒரு பெண் அதிபர்” என்பதற்கான அறிகுறிதென்படுவதாக ஊடகங்கள் பேசின.
இந்த முதல் வெற்றிக்குப் பின் நடந்த இரண்டாவது நீயூஹெமிஸிபியர் மாநில தேர்தலில் ஹிலாரி கிளிண்டனுக்கும் போட்டியாளர், பெர்னி சாண்டர்சுக்கும் இடையே கடும் போட்டி யிருந்தது. அதில் ஹிலாரி வெற்றி பெறவில்லை. இது கட்சி வட்டாரத்தில்; அதிர்ச்சி அலைகளை எழுப்பியிருக்கிறது. இந்த மாநிலத்தில்தான் முந்திய கட்சி வேட்பாளர் தேர்தலில் ஒபாமாவை எதிர்த்துப் போட்டியிட்டு ஹிலாரி வெற்றிபெற்றிருந்தார். ஆனால் ஒரு மாநில தேர்தல் முடிவு மட்டும் முழுவெற்றியாகிவிடாது இன்னும் 48 மாநில தேர்தல்கள் இருக்கிறது என்ற எண்ணமும், ஹிலாரி சேமித்திருக்கும் தேர்தல் நிதியும் நம்பிக்கை தருகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் மிகப்பெரிய அளவில் பணம் செலவழிக்கப்படும். அதற்காகக் கட்சிகள் மட்டுமில்லாமல் வேட்பாளர்களும் தனியாக நிதி திரட்டுவார்கள். அரசுப் பதவியில் அமைச்சராக இருந்து கொண்டு தேர்தலில் போட்டியிட முடியாது என்பதால், பதவியிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே பதவி விலகி நிதி சேர்க்க ஆரம்பித்த விட்ட ஹிலாரியிடம் இப்போது 100 மில்லியன்(1 மில்லியன் 10 லட்சம்) டாலர்களுக்கும் மேல் இருக்கிறது. இந்தப் பணவசதி, பிரச்னைகளை எதிர் நோக்கும் துணிவு, அயலுறவு அமைச்சராகப் பணியாற்றிய அனுபவம் எல்லாம் இவருடைய பலம். இவர் அமைச்சராக இருந்தபோது அரசாங்க விஷயங்களுக்குத் தன்னுடைய சொந்த இ மெயிலை பயன் படுத்தினார் என்ற குற்ற சாட்டுக்கான 11 மணி நேர பாராளுமன்ற குழுவின் விசாரணையை சந்தித்தவர். மேலும் கணவர் கிளிண்ட்டன் தேர்தலுக்காகப் பணியாற்றிய காலத்திலியே தேர்தலைச் சந்திக்கும் யுக்திகள் தெரிந்த ஸ்டிரஜிஸ்ட்டாக மதிக்கப்பட்டவர். இவற்றினால் இவர் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஆவதற்கான வாய்ப்பு அதிகம் எனப் பத்திரிகைகள் கணிக்கின்றன.
இதைப் போல மற்றொரு கட்சியான குடியரசுக் கட்சி சார்பில் இம்மாநிலத்தில் நடந்த உட்கட்சி தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றிருக்கிறார். பிரபல தொழிலதிபரான இவருடைய அதிரடி அணுகுமுறையால் அமெரிக்க தேர்தல் களம் அதகளப்பட்டுக் கொண்டிருக்கிறது. இவர் வல்லவரா ? அல்லது வடிவேலுவா? என்று பொதுமக்களும் ஊடகங்களும் குழம்பிப் போய்க் கிடக்கிறார்கள். முதலில் யாருமே சீரியஸாக கண்டுகொள்ளாத இவர், ஒருவேளை வெற்று பெற்று அதிபரும் ஆகி விடுவாரோ என்ற நிலை தற்போது நிலவுகிறது. டொனால்ட் ட்ரம்ப் அதிரடி பேச்சுகளில் நம்ம ஊர் அரசியல்வாதிகளுக்கு எந்த விதத்திலும் சளைத்தவர் இல்லை. முன்னதாக இஸ்லாமியர்களை அமெரிக்காவுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று கூறி பரபரப்பு ஏற்படுத்தினார். 'நான் அதிபர் ஆனால் ஒரு டாலருக்கு ஒரு காலன் பெட்ரோல் தருகிறேன்' என்று தற்போது புதிய பரபரப்பை கிளப்பியுள்ளார். சவுதி அரேபியாவிடம் அமெரிக்கா சரியாக 'டீல்' செய்தால் பெட்ரோல் மலிவாகக் கிடைக்கும். தொழிலதிபரான தனக்கு வியாபார டீல் என்பது கை வந்த கலை. மற்ற அதிபர் வேட்பாளர்களுக்கு அது தெரியாது. மேலும் ஐஎஸ் ஐஎஸ் வசம் உள்ள பெட்ரோலை கைப்பற்றுவேன். அதன் மூலம் பெட்ரோல் விலை 50 சென்ட்கள் (அரை டாலர்) வரை குறையும்.
பெட்ரோல் விலை சாமானிய அமெரிக்கர்களின் அன்றாட பிரச்சனை. நம்ம ஊரில் ரூபாய்க்கு 3 படி அரிசி, கிலோ ஒரு ரூபாய் அரிசி, இப்போது இலவச அரிசி திட்டங்கள் மாதிரிதான் உலக சந்தையில் பெட்ரோல் விலை அடிமாட்டு விலைக்குக் குறைந்துள்ள நிலையில், தானாகவே ஒரு டாலருக்கு விலை குறைந்தாலும் ஆச்சரியமில்லை. இந்தப் போக்கு தொடர்ந்தால் 'வாரத்திற்கு பத்து காலன் இலவச பெட்ரோல் தருகிறேன்' என்று கூட டொனால்ட் ட்ரம்ப் வாக்குறுதி தரக்கூடும்!
இந்த மனிதர் குடியரசுக் கட்சி வேட்பாளராகவும், ஹிலாரிகிளிண்ட்டன் ஜனநாயக கட்சி வேட்பாளராகவும் இறுதி முடிவானால் ’சபாஷ் சரியான போட்டி’ என்று இருக்கும். ஆனால் சதுரங்க ஆட்டத்தின் முதல் மூவ்களில் முடிவைக் கணிக்க முடியாதைப் போல இந்த முதல் கட்டத்தில் எதுவும் சொல்ல முடியாது.
கடைசி மூவ் யாருடையது என்பதைக் காண உலகம் காத்திருக்கிறது
 (கல்கி 7/3/16)
.