தீபாவளி மலர்களில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தீபாவளி மலர்களில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

15/2/16

இசை அரசியின் ஏழு ஸ்வரங்கள்




தமிழ் இந்து 2016 பொங்கல் மலரில் வெளியாகியிருக்கும்  எனது கட்டுரை.


அவர் பெயரைக்கேட்டவுடனேயே மகிழ்ச்சியைச் சொல்லும் பளிச்சென்ற ஒரு முகமும் இனிய குரலும் மனதில் மின்னும் அளவிற்குத் தன் இசையால் எண்ணற்றவர்களின் மனதில் இடம்பிடித்திருப்பவர் எம்,எஸ். இசையோடு பிறந்து, இசையோடு வளர்ந்து இசையில் புதிய உயரங்களைத் தொட்ட அவரது இசை ஒரு சகாப்தம். மறைந்து 10 ஆண்டுகளுக்குப் பின்னரும் ரசிகர்கள் போற்றிப் பாராட்டும் இடத்தில் இருக்கும் இந்தக் கலைஞர் கடந்துவந்த பாதை ரோஜாமலர்களால் மட்டும் நிறைந்தது அல்ல. என்பதையும், முட்களும், தடைகளும் கொண்டிருந்தது என்பதையும் அவரது வாழ்க்கை கதை நமக்குச்சொல்லுகிறது. பலர் நடந்து பழக்கமான பாதையிலிருந்து விலகித் துணிவுடன் அவர் முதலில் நடந்து அமைத்த புதிய பாதையில்தான் இன்று இசையுலகில் பலர் எளிதாகப் பவனி வந்து கொண்டிருக்கிறார்கள்.
10வயதில் துவங்கி 77 ஆண்டுகள் தொடர்ந்த நீண்ட இசைப்பயணம் இவருடையது. இது ஒரு உலகச் சாதனை. பல இசைக்கலைஞர்களால் இன்று தெய்வத்துக்கு நிகராகப் போற்றப்படும் இந்தப் பெண்மணியின் இத்தகைய வெற்றிக்குக் காரணம், இவருக்கு வாய்த்திருந்த தெய்வீக குரலா, எதையும் எளிதில் கிரகித்துக்கொள்ளும் ஆற்றலா, இசைஞானமா, முன்னணியிலிருக்க இவரது கணவர் செய்த தொடர்ந்து மார்கெட்டிங்கா என்பதை இவரது வாழ்க்கை பாதையுடன் சென்று ஆராய முற்பட்டபோது, இவற்றையெல்லாம் தாண்டி சில விஷயங்கள் புலப்படுகின்றன.
இவர் இசை உலகில் காலடி எடுத்துவைத்த காலத்தைச் சற்று உற்று நோக்குவோம். இசைக் கவிதை, இலக்கியம், ஏன் கல்வி கூட ஆண்களுக்கு மட்டுமே உரிய ஏக போக சாம்ராஜ்யமாக இருந்த காலம் அது. பெண் மேடையில் பாடும் பாடகியாக இருந்தால் குடும்பப்பெண்ணாக இருக்க முடியாது என நம்பப்பட்ட காலம். ”கானல்வரி கவிதை” புனைந்த நடனக்காரி மாதவி காலத்திலிருந்து தொடர்ந்த பாரம்பரியம் அது. இசைத்துறைக்கு வந்த பெண்களைப் பற்றிய சமூக மதிப்பீடுகள் மிக மோசமானதாக இருந்த காலம். இந்தக் காலகட்டத்தில் தான் மதுரை நகரில் வாழ்ந்த வீணைக் கலைஞரான எம்.எஸ்ஸின் தாய் சண்முகவடிவு தன் மகளின் குரல் வளத்தைக் கண்டுணர்ந்து அவரை ஒரு இசைக்கலைஞராக்கமுடிவு செய்கிறார். மகிழ்ச்சியில்லாத போராட்டமான அவரது வாழ்க்கையிலும் இதைச் சவாலாக ஏற்று வெற்றிகரமாகச் செய்கிறார் அந்தத் தாய். தேவதாசி குடும்பங்களுக்கென்று ஒரு தனி இசைப்பராம்பரியம்/ பாணி உண்டு. அந்தப் பாணி இசையில்லாமல் சாஸ்திரியமான கர்நாடக இசையை மேடைகளில் பாடுமளவிற்கு மகளுக்கு முறையாக குரு மூலம் கற்பிக்கிறார். மிகுந்த ஆர்வத்துடன் இசை கற்றகொண்ட அந்தசிறுபெண் பாடி வெளிவந்த முதல் இசைதட்டு பெரும் வெற்றியை அடைகிறது, தொடர்ந்து அம்மாவுடன் மேடையில் பாடத்துவங்கிய அந்தப் பெண் ஒரு கட்டத்தில் இசை தனக்கு அளிக்கப்பட்டிருக்கும் வரம் என்பதை உணர்ந்து அதில் தான் சிறப்பாக வளரவேண்டும் எனத் துடிக்கிறார், ஆனால் தங்கள் குல வழக்கப்படி இசையை நன்கு அறிந்த கலையை ஆதரிக்கும் ஒரு பெரிய மனிதரின் ஆதரவில் வசதிகளுடன் ஒரு பாதுகாப்பான வாழ்க்கையுடன் தன் மகள் இசையைத் தொடரவேண்டும் எனத் திட்டமிடுகிறார் சண்முகவடிவு.. அதுவரை அம்மாவின் சொல்லே வேதம் என வளர்ந்த சுப்புலட்சுமி இந்தக் கட்டத்தில் அம்மாவின் வார்த்தைகளை ஏற்க மறுக்கிறார். அந்த இளம்வயதிலேயே ”நான் தேவதாசி வாழ்க்கை முறையை ஏற்க மாட்டேன். முறையாக ஒருவரைத் திருமணம் செய்துகொண்டு குடும்பத்தலைவியாகத்தான் வாழ்வேன்” எனத் துணிவுடன் சொல்லுகிறார் சுப்புலட்சுமி. இந்த முடிவைச்சொன்ன அந்தப் பெண் பள்ளி சென்று படித்தவரில்லை, நாகரிக சமூகத்தின் முகங்களைச் சந்திக்க வாய்ப்பில்லாத, வசதிகள்அதிகமில்லாத சூழலில் வளர்ந்தவர்.
பின்னாளில் இசையரசியாகப் போற்றப்பட்ட எம்.எஸ் இளமைக்காலத்தில் கொண்டிருந்த அசைக்கமுடியாத தன்னம்பிக்கையைக் காட்டும் இந்தச் செயல் அந்தக் குலத்தில் பின்னாளில் எழுந்த சமூக மாற்றங்களுக்கு விழுந்த ஒரு வித்து என்பதைச் சரியான முறையில் வரலாற்றாளர்கள் பதிவு செய்யவில்லை. இந்தத் தன்னம்பிக்கையும் துணிவும் அவருடைய நீண்ட இசைப்பயணத்தில் பல வெற்றிகளைச் சாதிக்க உதவியிருக்கிறது
17 வயதில் சுப்புலட்சுமி சென்னை சங்கீத வித்வ சபையில்(மியூசிக் அக்கடமி) செய்த முதல் கச்சேரி நகரமே பேசும் கச்சேரியாகி பலரால் பாராட்டப்படுகிறது. இதனால் மகளின் இசைக்கச்சேரிகளுக்குச் சென்னையில் வாய்ப்புக்கள் அதிகம் கிடைக்குக்கும் என்ற நம்பிக்கையில் சென்னைக்கு இடம்பெயர்கிறது குடும்பம். இசைக்கச்சேரிகளுக்கான வாய்ப்புகளுடன் அந்த அழகிய பெண்ணுக்கு எதிர்பாராதவிதமாக அவர் விரும்பிய குடும்ப வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் ஒரு வாய்ப்பும் கிடைத்தது ஆனந்தவிகடன் பத்திரிகைக்காகச் சந்தித்த துடிப்பான அழகான இளைஞர் சதாசிவத்தால் ஈர்க்கப்படுகிறார்.தொடர்ந்த சந்திப்புகளிலும் ,பயணங்களிலும் காதல் கனிகிறது. நமக்குக் குடும்ப வாழ்க்கையை அளிக்க ஏற்ற நல்ல மனிதர் இவர் என்ற எண்ணம் சுப்புலட்சுமிக்கு மிக அழுத்தமாக எழுகிறது. ஆனால் அவருடைய அன்பான அம்மா இந்தக் காதலை ஏற்கவில்லை. அதற்கு முக்கியமான காரணம் மகள் விரும்பும் சதாசிவம் ஏற்கனவே திருமணமாகி மனைவி குழந்தைகளுடன் வாழ்ந்துகொண்டிருப்பவர். அதனால் அவர் சுப்புலட்சுமியை துணைவியாக மட்டும்தான் ஏற்பார் திருமணம் செய்து கொள்ளமாட்டார் எனத் தீர்மானமாக அவர் நம்பினார். ஏன் தன் பெண் இப்படி ஒரு வாழ்க்கையைத் தேடிப்போகிறார் என்ற சஞ்சலத்துடன் மகளின் காதலை மறுக்கிறார். தான் தன் வாழ்க்கையில் அதிக வருமானமில்லாத ஒரு சதாரணக் குடும்பஸ்தருக்குத் துணையாகிப்போய்க் கஷ்டப்பட்டதைப்போலத் தன் மகளுக்கும் நேர்ந்துவிடக்கூடாது எனத் துடித்தது அந்தத் தாய்யுள்ளம். ஆனால் சுப்புலட்சுமி தன்னை இரண்டாம் தாராமாகச் சதாசிவம் திருமணம் செய்துகொள்வார் என்பதில் உறுதியாக இருந்தார். அவருடன் காதலும், அன்பாக வளர்த்த அம்மாவுடன் சண்டைகளும் தொடர்ந்தது. இறுதியில் காதல் தாய்ப் பாசத்தை வென்றது. சுப்புலட்சுமி சதாசிவத்தின் குடும்பத்துடன் திருமணம் செய்து கொள்ளாமலே வாழத்துவங்கிறார். சண்முகவடிவு மனமுடைந்து மதுரை திரும்புகிறார். இந்தக் கட்டத்தில் சுப்புலட்சுமி எடுத்த முடிவு அவர் தான் நம்புவதைச் செயலாற்றக்கூடிய ஒரு மிகத்துணிச்சலான பெண் என்பதைப் புரியவைக்கிறது. இரண்டாம்தாரம் என்பது சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட காலம் அது. ஆனால் அந்தப்பெண் வேறு சமூகத்தினராக இருந்தால் மனைவியாக மதிக்கப்படாத காலம் அம்மாதிரியான ஒரு காலகட்டத்தில் பிராமணர்கள் மட்டுமே வசிக்கும் அக்கிரகாரத்தில் முதல் மனைவி குழந்தைகளுடன் இருக்கும் ஒரு குடும்பத்தில் தன் வாழ்க்கையைத் துவக்கிய இவரது துணிச்சல், தன் காதலர் நிச்சியம் தன்னைத் திருமணம் செய்துகொள்வார் என்று அவர் மீது கொண்ட அதீத நம்பிக்கை நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. எதிர்பார்த்தபடி சதாசிவம் உடனடியாக அவரைத் திருமணம் செய்துகொள்ளவில்லை
அதனால் ஏமாற்றமடைந்து மனமுடைந்து அம்மாவிடம் திரும்பவில்லை சுப்புலட்சுமி. தான் நம்பியவர் நிச்சியம் வாழ்வுதருவார் எனக் காலம் கனிந்துவரும் வரை பொறுமையுடன், நம்பிக்கையுடன் காத்திருந்தார். பொறுமையுடன் நம்பிக்கையுடன் இருந்தால் நினைத்த சாதிக்க முடியும் என்ற இவருடைய இந்தக் குணம் பின்னாளில் பல கட்டங்களில் வெளிப்பட்டிருக்கிறது
புதிய வாழ்கையில் தான்விரும்பியபடி ஒரு பிராமணகுடும்பத்தலைவியாகத் தன்னைச் சுவீகரித்துக்கொண்டு, நடை, உடை, பாவனை அனைத்தையும் மாற்றிக்கொண்டு சதாசிவத்தின் குடும்பத்தினரை ஆச்சரியப்படுத்திய சுப்புலட்சுமிக்கு அந்தக் காலகட்டத்தில் தன்வாழ்க்கையின் அடிநாதமான இசை கூட இரண்டாம்பட்சமாகத்தான் இருந்திருக்கிறது. அந்த அளவுக்குக் குடும்ப வாழ்க்கையில் ஆர்வம். சதாசிவத்தின் முதல் மனைவியையின் குழந்தைகளின் அளவற்ற பாசம், அவரது குடும்ப மூத்த உறுப்பினர்களிடம் மீது காட்டிய மரியாதை எல்லாம் இவரது குல பின்னணியை மறக்கச்செய்து மற்றவர்களை நேசிக்கச் செய்திருக்கிறது. தேசபக்தராகத் தன் வாழ்க்கைதுவக்கிய சதாசிவம் நாட்டின் விடுதலைக்குப் பின்னர் தான் அந்தஸ்தும் செல்வாக்கும் கொண்ட ஒரு வாழ்க்கையை அடையவேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். விகடனிலிருந்து விலகிய ஆசிரியர் கலகியுடன் இணைந்து புதிய பத்திரிகையைத் துவக்க திட்டமிடுகிறார். தமிழ் சினிமா புதிய வியாபார எல்லைகளை நோக்கி பயணப்பட்டுக்கொண்டிருந்த சமயம் அது. தன் முயற்சிகளுக்கு நிதி ஆதாரம் தேட சுப்புலட்சுமியின் நடிப்பில் ஒரு சினிமா எடுக்கத் தீர்மானிக்கிறார். அப்போது சினிமாவில் நடித்துப் பணமும் புகழும் பெறுவது என்பது பல தேவதாசிகுடும்பத்தினரின் கனவாகவே இருந்தது. ஆனால் அதில் நாட்டமில்லாமல் விலகி சந்தோஷமான குடும்பப்பெண்ணாக வாழ்க்கையைத் துவக்கியிருந்த சுப்புலட்சுமிக்கு இந்த எண்ணம் பிடிக்கவில்லை. ஆர்வம் அதிகம் காட்டாமல் தவிர்க்க முயற்சிக்கிறார். ஆனால் சதாசிவம் தீர்மானமாகவிருக்கிறார். இறுதியில் காதல் கணவரின் கட்டளையை மீற முடியாமல் ஏற்கிறார். மீரா திரைப்படம் உருவாகிறது. படம் மீராவின் கதையாக இருந்ததால் கிடைத்த நல் வாய்ப்பைப் பயன்படுத்தித் தன் இசைத்திறமை முழுவதையும் நடிப்போடு வெளிப்படுத்தினார். தனக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் தான் செய்ய வேண்டியதை மிகுந்த சிரத்தையுடன் பல புதிய விஷயங்களைக் கற்றுக் கொண்டு மிகச்சிறப்பாகச் செய்திருந்தார். ஒரே காரணம் அது தன் அன்பு கணவரின் கட்டளை என்பது
தான். இதைப்போல் இறுதிநாள் வரை எந்த விஷயத்திலும் தன் கணவர் சொன்னதை மட்டுமே செய்திருக்கிறார். இதைப் பதிபக்தி என்ற சின்னச் சொல்லில் மட்டும் அடக்கிவிடமுடியாது. இவரது வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டமும் செயலும் சதாசிவத்தினால் மட்டுமே தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. சுப்புலட்சுமி அதைத் தான் மனமகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டதை பெருமிதத்துடன் சொல்லியிருக்கிறார். ஒரு பெண் கணவனின் சொற்படி நடப்பது சதாரண விஷயம் என்றாலும் பல கலைஞர்களின் வாழ்க்கையில் நெருடலை ஏற்படுத்திய விஷயம் இது. கலைஞர்களின் வாழக்கையில் வெற்றிகள் குவியும்போது குடும்பத்தினரின் குறுக்கீடுகள் விபரீதமான விளைவுகள் ஏற்படுத்தியதை பார்த்திருக்கிறோம். கலைஞர் தன் கலையலக வாழ்க்கை அல்லது குடும்பம் என்று ஏதாவது ஒன்றை இழக்கும் நிலை உருவாகும். ஆனால் எம்.எஸ் இந்த சஞ்சலங்களுக்கு இடம் கொடுக்கவே இல்லை.
எதிர்பார்த்த படி மீரா படம் பெரிய வெற்றி. தலைநகர் டெல்லியில் பிரதமர் நேரு குடும்பத்தினர் உட்படப் பல தலைவர்கள் பங்கு கொண்ட முதல் காட்சியுடன் துவங்கிய அந்தப் படம் தேசம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிய ஒரு படம். இன்றைய சினிமா பாஷையில் சொல்லவேண்டுமானால் அருமை டூப்பர் சக்ஸஸ். தொடர்ந்த வந்த வாய்ப்புகளை அவர் பயன்படுத்திகொண்டிருப்பாரேயானல் திரை வானில் ஒரு நட்சத்திரமாக மின்னியிருப்பார் இந்திய இசையுலகம் எம்.எஸ்சை இழந்திருக்கும். ஆனால் தன் முதல் காதலான இசையின் பல பரிமாணங்களைக் கற்று அதில் தனியிடம் பெறவேண்டும் என்ற தன் எண்ணத்தில் உறுதியாக இருந்த எம்.எஸ் அந்த வாய்ப்புகளை மறுத்தார். பணமும் புகழும் எளிதில் கிடைத்திருக்கும் வாய்ப்புகளைவிடத் தான் நேசித்த விஷயத்தில் சாதிப்பதற்காகக் காத்திருப்பதையே விரும்பினார். பலருக்குக் கனவாகவே இருந்த கனவு தொழிற்சாலையின் அழைப்புத் தன்னைத் தேடிவந்தபோதும் அதை ஒதுக்குவதற்கு அந்த வயதில் ஒரு அசாத்திய துணிச்சல் வேண்டும். அத்தகைய துணிச்சலும் அதன் விளைவுகளைச் சந்திக்கும் மனோ பலமும் பெற்றவராக இருந்திருக்கிறார் இந்தப் பெண்மணி.
,சதாசிவம் சுப்புலட்சுமி தம்பதியின் வாழக்கையை ஆழ்ந்து நோக்கும் போது புரியம் மற்றொரு விஷயம் இருவரும் தங்கள் பலங்களை உணர்ந்திருக்கிறார்கள்.பரஸ்பரம் அதைப் பயன்படுத்திக்கொண்டு தங்கள் வாழக்கையைச் சிறப்பித்திருக்கிறார்கள் என்பது. அன்பு மனைவிக்குச் சினிமாவில் தொடர விருப்பமில்லை இசைத்துறையில் தான் சாதிக்க விரும்புகிறார் என்பதை உணர்ந்த சதாசிவம் அதற்கானவற்றைச் செய்கிறார். ஹிந்தி மீராவால் நாடு முழுவதும் புகழ்பெற்றிருந்த ஒரு நடிகையின் இசைக்கலைஞர் என்ற மற்றொரு முகத்தை அந்தப் புகழின் வாயிலாகவே அறிமுகப்படுத்துகிறார் மார்க்கெட்டிங் ஸ்ட்டிரஜிஸ்ட் சதாசிவம். மிகக்குறுகிய காலத்திலேயே எம்.எஸ் என்பது நாடுமுழுவதும் அறிந்த பெயராகிறது. அப்போது தென்னிந்திய கர்நாடக சங்கீத கலைஞர்கள் பின்பற்றிய பாணியான வெறும் சாஸ்த்திரிய சங்கீதம் என்ற நிலையை மாற்றி அந்தந்த பிரதேசங்களின் புகழ்பெற்றஆசிரியர்களின் பாடல்கள்,பஜன்கள் போன்றவற்றைக் கச்சேரியில் பாடுகிறார். இந்தப் பாணியினால் தங்கள் மொழிபாடல்களை ஒரு தென்னிந்தியப் பெண்ணின் வசீகரமான குரலில் கேட்டு மயங்கினார்கள் ரசிகர்கள். இசையில் எம்.எஸ் தனியிடம் பெற இது பெரிதும் உதவிற்று. இந்த வெற்றிக்கு முழுக்காரணம் சதாசிவம் தான். எம்.எஸ்ஸின் திறமையை நன்கு புரிந்திருந்திருந்த இவர் அதில் எங்கு எதை எப்படி அழகாகக் காட்ட முடியும் என்பதைச் சரியாகக் கணித்திருந்தார். ஒவ்வொரு கச்சேரியையும் அந்தந்த இடத்துக்கேற்ப, முன்னணி ரசிகர்களைக் கவரும் வகையில் திட்டமிட்டு அமைப்பார். இன்று பல இசைக்கலைஞர்கள் பின்பற்றும் இந்த முறைக்கு முன்னோடி இவர்தான். ”ஒவ்வொரு கச்சேரியிலும் நான் என்றபாடவேண்டும், எந்த வரிசையில் பாடவேண்டும் என்பதை மாமாதான் முடிவு செய்வார். எதையும் மாற்றமுடியாது” என்று எம்,எஸ் சொல்லியிருக்கிறார். நாடு முழுவதும் தன் கந்தர்வகுரலால் இசைஞானத்தால் புகழ்பெற்ற எம்.எஸ் பிரதமரால் இசைஅரசி என்று புகழப்படும் அளவிற்குப் புதிய உயரங்களைத் தொட்ட அவரை அடுத்த கட்டமாக சர்வதேச இசை அரங்குகளை நோக்கி நகர்த்த சதாசிவம் முயற்சித்து வெற்றிஅடைகிறார். இங்கிலாந்தில் எடின்பர்க் இசைவிழா, எகித்து அரசின் அழைப்பு, ஐரோப்பிய அமெரிக்கப்பயணங்கள். என இசைப் பயணம் தொடர்கிறது.
  
புகழின் உச்சிக்குச் சென்ற பின்னர் ஒரு கலைஞர் அவர் சார்ந்த கலையின் அடையாளமாகப் பார்க்கப்பட்டுக் கௌரவிக்கப் படுவார். எம் எஸ் ஸின் விஷயத்தில் அவர் தமிழகத்தில், தென் இந்தியாவில் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் இசையின் அடையாளமாக அறியப்பட்டார். அதன் முக்கியக் காரணம் அவர் பக்தி இசைக்குக் கொடுத்த முக்கியத்துவம். பல இந்திய மொழிகளில் குறைந்த பட்சம் ஒரு பக்தி பாடலாவது பாடியிருப்பவர் அவர். கண் மூடிக் கேட்பவர்களுக்கு அவர் பாடலில் துதி செய்யும் கடவுள் காட்சி தரும் அளவுக்குப் பக்தியும் இசையும் இழைந்தோடும் குரல் அவருடையது. இசை ஆன்மீகத்தின் ஒரு வடிவம் என்பதை உணர்ந்த அவர் 80களில் நிறையப் பக்தி பாடல்கள்தான் பாடியிருக்கிறார். இந்தக் கட்டத்தில் அவர் ஆன்மீகத்தின் பக்கம் அதிகம் ஈர்க்கப்பட்டிருக்கிறார்.
1954ல் சதாசிவம் மனசஞ்சலத்தில் இருந்தார். அன்பு மனைவி எம்.எஸ் உடல் நிலை பாதிக்கப் பட்டிருந்தது. மகள் ராதாவின் திருமணம் நிச்சியம் ஆவது தாமதமாகிக் கொண்டிருந்தது. அந்தக் கட்டத்தில் காஞ்சி பெரியவாளை தரிசனம் பண்ணுங்கோ எல்லாம் சரியாகும் என யோசனை சொன்னவர் சதாசிவத்தின் அருமை நண்பர் செம்மங்குடி. அதை ஏற்று இருவரும் காஞ்சி பெரியவர் முகாமிட்டிருந்த தலத்தில் போய்ச் சந்தித்தனர். அந்த முதல் சந்திப்பிலேயே எம்.எஸ் பெரியவரின் காந்தப் பார்வையில் ஆயிரம் அர்த்தங்களை உணர்ந்தார். இவர் தான் உன் ஆன்மீக குரு என்று உள்ளே ஒரு குரல் ஒலித்தது.. அவர்களைப் பக்தர்களாக ஏற்றுக்கொண்ட காஞ்சி முனிவரைக் கடவுளாகவே வழி பட்டனர். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவரைச் சந்தித்து அவர் முன்னிலையில் மணிக்கணக்கில் பக்தி பரவசத்தோடு பாடுவார். அதி தீவிர பக்தர்களாகிவிட்ட இந்தத் தம்பதியினர். எம்.எஸ். எந்தப் பணியைத் தொடங்கினாலும் குருவிடம் ஆசி பெறுவதையும் எந்த விஷயத்தின் வெற்றிகளையும் அவருக்குச் சமர்ப்பிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தனர். இந்த ஆசிகள் எம்.எச்சின் இசைவாழ்க்கையின் தொடர்ந்த வெற்றிகளுக்குப் பெரிதும் உதவியிருக்கிறது.
ஆன்மிக குருவிடம் அளவுகடந்த பக்தி கொண்டிருந்தைபோலவே தனக்கு இசையை, அதன் நுணுக்கங்களைக் கற்பித்த பல மூத்தவர் வித்துவான்களின் மீது அவர் பெருமதிப்புக் கொண்டிருந்தார். மத்தியபிரேதேச அரசு காளிதாஸ் சன்மான் என்ற விருதைப் பணமுடிப்போடு அளிக்க அழைத்தபோதும், திருப்பதி தேவஸ்தானம் ஆஸ்தான வித்துவான் கெளரவம் அளிக்க வந்தபோதும் தன் குருவிற்கு அளிக்கப்படாத விருது தனக்கு வேண்டாம் என மறுத்தார். தன்னுடைய அன்னைக்கு அடுத்தஸ்தானத்தில் குருவைப் போற்றியவர்.
உலகளவில் புகழ் பெற்று உச்சத்தைத் தொட்டாலும் எம்.எஸ் மிக எளிமையாக எவருடனும் பழகுபவராகவும் அன்பும் பாசமும் கொண்டவராகவும் இருந்தார். சங்கீதக்காரர்கள் மட்டுமில்லை சதாரண மக்கள் கூட ”நம்ப எம் எஸ்” என்று பெருமிதத்துடன் வணங்கும் நிலையை அடைந்தவர். இவர் அந்த நிலையை அடைய உதவியது அவரது தனித்தன்மை கொண்ட தெய்வீக குரல், ஆண்டவனின் அருள், முன்பிறவியில் அவர் செய்த புண்ணியம், சதாசிவத்தின் தனித்திறமையான மேல்மட்ட தொடர்புகள் எனப் பலவிதமாகப் பலரால் வர்ணிக்கப் பட்டாலும், உண்மையான அடிப்படையான காரணம் இவற்றையெல்லாம் தாண்டி அவர் தன் திறனை உணர்ந்த பின்னர் அதை வளர்த்துக்கொள்ள, செழுமைப்படுத்திக்கொள்ள அவர் மேற்கொண்ட கடினமான உண்மையான உழைப்பு தான், எப்போதும் தாம் கற்றது கையளவு மட்டுமே என்ற எண்ணத்தில் கற்றுக்கொள்வதைத் தொடர்ந்து செய்துகொண்டிருந்ததுதான். இதை அவரே பல இடங்களில் சொல்லியிருக்கிறார்.
மீரா சினிமாவில் நடிக்கப் போனபோது இந்திப் பாடல்களை எப்படி கவனமாகக் கற்றுக்கொண்டு பாடினாரோ அதைப்போல வாழ்நாள் முழுவதும் மாணவியாக இருந்து கற்றுக்கொண்டே இருந்திருக்கிறார். பெங்காலி பாடல்களை திலிப் குமார், ஹிந்தி பாடல்களைச் சித்தேஸ்வரி தேவி என அந்தந்தத் துறை வல்லுநர்களிடம் எந்தத் தயக்கமும் இல்லாமல் கற்றுக்கொண்டவர்.
60 ஆண்டுகள் இசையே தன் உயிர் மூச்சாக வாழ்வே சங்கீதமாகவே வாழ்ந்த எம்.எஸ் அவர்கள் கிட்டதட்ட 2500 பாடல்களை மனப்பாடமாகத் தெரிந்துவைத்திருந்தார். எட்டு வயதில் எப்படித் தன் முதல் குருவிடம் மிககவனமாகப் பயின்றாரோ அதே கவனத்துடன், தன் 80 வது வயதிலும் புதிய பாடல்களை விஷயங்களைக் கற்றுக்கொண்டிருக்கிறார்.
தமிழ் தவிர, தெலுங்கு, கன்னடம், சம்ஸ்கிருதம் மலையாளம், ஹிந்தி மராத்தி குஜராத்தி மொழிப்பாடல்களைப் பாடியிருக்கிறார். ஒரு ஆங்கிலப் பாடலும் பாடியிருக்கிறார்.. பள்ளிக்கூடம் சென்று முறையாகக் கல்விகற்றவர் இல்லை எம்.எஸ். ஆனால் ஒரு பாடலை சரியாகச் சிறப்பாகப் பாடவேண்டும் என்றால். அதன் மொழி, வார்த்தைகளின் சரியான அர்த்தம், அது அந்தப்பாடலில் கையாளப்பட்டிருக்கும் பாங்கு சரியான உச்சரிப்பு இவற்றை உணர்ந்து நன்றாகக் கற்றுக்கொண்ட பின் பல முறை சரிபார்த்துகொண்டபின்னர்தான் பாடுவார்.
பாடலை முதலில் தன் கைப்பட நோட்டில் எழுதிக்கொள்வார். எழுதி என்றால் வெறும் காப்பி எடுத்துக்கொள்ளவதில்லை. முதலில் பாடலின் மொழியில் பதம் பிரித்து இடைவெளியிட்டு எழுதி அதன் கீழ் தமிழில் அந்த வார்த்தைகளின் தமிழ் அர்த்தம் பின் அதன் கீழே ஒவ்வொரு வார்த்தையும் பாடலில் எப்படி உச்சரிக்கப்படவேண்டும் என்ற நொட்டேஷன் மாதிரியான குறிப்பு இப்படி ஒவ்வொரு பாடலையும் எழுதி பயிற்சி செய்திருக்கிறார். ஒவ்வொரு புதிய பாடலைக் கற்கும் போதும் இதைச் செய்திருக்கிறார். இவ்வளவு அருமையாகத்  குறிப்புக்கள் தயாரிக்கப் பட்டிருந்த போதும் ஒரு பாடலைக்கூட அவர் நோட்டுபுத்தகத்தைப் பார்த்துப் பாடியதில்லை. ஒரு முறை எழுதி மனப்பாடம் செய்துவிட்டால் இந்தக் குறிப்புகள் பாடும் போது அவர் மனக்கண் முன்னே வருமோ என்னவோ அப்படியே பாடுவார். தனக்கு அடுத்த தலைமுறை புத்தகம் பார்த்து பாடுவதைக் கண்டு வருந்தியிருக்கிறார். ஒரு பாடலை முழுவதுமாக உள்வாங்கிக் கொள்ளாமல் பார்த்துப் பாடினால் அந்தப் பாடலை எழுதியவரை அவமதிப்பதாகும் என்று சொல்லுவார்,
வார்த்தைகள் மனதில் இருந்து வராவிட்டால் பாடலில் எப்படி உணர்ச்சிகளை வெளிக்காட்டமுடியும் என்பது அவருடைய கேள்வி.
பாடல்களை மனப்பாடம் செய்வதோடு மட்டும் எம். எஸ் நிறுத்திக்கொள்வதில்லை. அதை வார்த்தைகளில் உச்சரிப்புத் திருத்தமாக இருக்கிறதா வார்த்தைகளுக்கு இடையில் சரியான இடைவெளியில் பாடுகிறரா என அந்தப் பாடல் சம்மந்தப்பட்ட வல்லுநர்களிடம் பாடி காட்டி ஒப்புதல் பெற்றபின்னரே மேடையில் பாடுவார். கம்பராமாயணப் பாடல்கள் என்றால் கம்பனில் கரைகண்ட நீதியரசர் பாடலை கேட்டு ஒப்புதல் தந்தபின்னர்தான் ரிக்கார்டிங். சம்ஸ்கிருத, தெலுங்கு கீர்த்தனைகளைச் சரியாகப் பாட வேண்டும் என்பதற்காக அந்த மொழியை முதலில் கற்றவர். அவரது சம்ஸ்கிருத உச்சரிப்பை காசிநகர பண்டிதர்களே வியந்து அருமையாக இருக்கிறது என்று பாராட்டியிருக்கிறார்கள்.இப்படி ’என்றென்றும் கற்கும் மாணவியாக’ இருந்ததால் தான் பலவாழ்நாள் சாதனைகளை இவரால் நிகழ்த்த முடிந்திருக்கிறது.
 “நெஞ்சக் கனகல் நெகிழ்ந்துருக…
பாடும்பணியே பணியாய் அருள்வாய்” என்று முருகனிடம் வேண்டுகிறார் அருணகிரிநாதர்.  அதை தன் வாழ்வில் இசைப்பணியை இறைப்பணியாகவே தன் வாழ்வில் நீண்டநாள் செய்தவர் எம்.எஸ்.
அவர் அமரான செய்திகேட்ட உடன் சென்னைக்கு வந்த அப்துல் கலாம் சமர்ப்பித்த தனது அஞ்சலி கவிதையை
 ”யாழிசையில் பிறந்த ஏழிசை கீதம் நீ” எனத் துவக்குகிறார்.
தனக்குத் தெய்வம் தந்த இசையின் ஸ்வரங்களோடு தன் வாழ்க்கைப்பாடலை 
ஆர்வம்,நம்பிக்கை,கடினஉழைப்பு,புலமை பக்தி,ஈதல்.எளிமை 
என்ற எழுஸ்வரங்களுடன்  
அமைத்துக்கொண்டு வாழ்ந்து காட்டியவர் எம் எஸ்

20/11/15




புத்தக பதிப்பில் புதிய அலைகள்- தமிழில் மின்நூல்கள்

புத்தக பதிப்பில் புதிய அலைகள்- தமிழில் மின்நூல்கள்
ஒரு  மொழியின் வளர்ச்சிக்கும்  வளமைக்கும்  பெரிதும் உதவும் விஷயங்களில் ஒன்று  அதன் படைப்பிலக்கியங்கள்  தொடர்ந்து பதிப்பிக்கப்படுவது. அச்சுக்கலை இந்தியாவில் அறிமுகமான காலத்திலிருந்து இன்று வரை தமிழில் பல லட்சக்கணக்கான புத்தகங்கள் அச்சிடப்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டு புத்தக கண்காட்சியிலும் உயரும் விற்பனையின் எண்ணிக்கை புத்தகங்களை நேசித்து வாசிப்பவர்கள் அதிகரித்துக் கொண்டிருப்பதை சொல்லுகிறது.   தொடர்ந்து வளரும்  உயரிய தொழில்நுட்பம் கைகொடுக்கக் கடந்த சில ஆண்டுகளில் பதிப்பகத்துறை பல புதிய எல்லைகளைத் தொட்டிருக்கிறது.  இன்று பதிப்பக துறையில் தொழில்நுட்பத்தின் பங்கு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது. கணணியில் எழுதி மின் அஞ்சலில் அனுப்பப்பட்ட படைப்புக்கள் பதிப்பாசிரியரின் கணணியில்பெறபட்டு அது  திருத்தப்பட்டு புத்தக பக்கங்களாக்க லே அவுட் கலைஞருக்கு மின் அஞ்சலில் அவரால் அனுப்பப்படுகிறது.  அந்தக் கலைஞரின் கணணியிலிருந்தே நேராக  அச்சகத்தில் அச்சிடப்பட்டு பக்கங்களை ஒருங்கிணைத்துக் கட்டமைக்கும் இயந்திரம் மூலமாகப் புத்தகமாக வெளிவருகிறது. இந்தப்பணிகள் பிரமிக்கத்தக்க வேகத்தில் நடைபெறுவது மட்டுமில்லை. வெவ்வேறு இடங்களில் நடைபெறுகிறது.  மதுரையிலிருக்கும் படைப்பாளி அனுப்புவது சென்னையிலிருக்கும் பதிப்பாசிரியரால் திருத்தப்பட்டு தஞ்சையிலிருக்கு,ம்  அச்சு கலைஞரால் வடிவமைக்கப்பட்டு மும்பையில் அச்சிடப்பட்டு சென்னைக்கு விற்பனைக்கு வருகிறது.  இந்தத் தொழில் நுட்ப வளர்ச்சிகள் பதிப்புத்துறையை பல  புதிய பரிமாணங்களுக்கு  எடுத்துச் சென்றிருக்கிறது. இப்போது  விற்பனைக்குத் தேவையான புத்தகங்கள் மட்டுமே பதிப்பிக்கப்படுகின்றன. ”ப்ரிண்ட் ஆன் டிமாண்ட்”  என்ற இந்த  முறையில் மிகக் குறைவான அளவில் கூட, ஏன் ஒரே ஒரு புத்தகம் கூட  அச்சிட்டுக் கொள்ள முடியும். இதனால் பதிப்பகங்களில்  புத்தகங்கள் விற்பனையாகமல் தேங்குவதில்லை. வாசகர்களுக்குக் கொடுக்கும் விலைக்கு எப்போதும் பளிச்சென்ற புதியவெள்ளை தாளில் நேர்த்தியான அச்சில் புத்தகங்கள் கிடைக்கின்றன.  இப்போது  இந்த தமிழ்பதிப்பு துறை  அடுத்தகட்டமான  “மின்நூல்கள்” நோக்கி வேகமாக நகர்ந்துகொண்டிருக்கிறது. 
மின் நூல்கள் 
எலக்டிரானிக் புக் அல்லது இ புக் என உலகம் முழுவதும் அறியப்பட்டிருக்கும் இந்த மின் நூல்கள், வாசகர்கள், பதிப்பாளர்கள், ஆசிரியர்கள் என எல்லாப் பகுதியினரிடமும் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.  அச்சு வடிவில் இருக்கும் புத்தகங்கள் டிஜிட்டில் வடிவமாக்கப்பட்டு  கணணிகளில் படிக்க முடியும்  என்று  துவங்கிய இந்த மின் புத்தகம் இன்று பல புதிய உயரங்களைத் தொட்டுக் கொண்டிருக்கிறது.  
70களிலேயே அன்றைய காலகட்டத்திலிருந்த கணணிகளில் இந்த முயற்சிகள் தொடங்கப்பட்டிருந்தாலும்,  இ புத்தகங்களின் முழு விச்சும் உணரப்பட்டது. 2005க்குபின்னர்தான்.  அந்த ஆண்டு சோனி, அமேசான் நிறுவனங்கள்  மின் புத்தகங்களை படிப்பதற்கென்றே  ஈ ரீடர் என்ற கருவிகளை அறிமுகப்படுத்தி அதில் படிப்பதற்கான புத்தகங்களின் பட்டியலையும்வெளியிட்டது.  இதில்  உலகின் மிகப் பெரிய இணைய புத்தக்கடையாக அறியப்பட்டிருந்த அமேசான் அறிமுகப்படுத்திய கின்டில் என்ற மின்நூல்படிக்கும் கருவி  இ ரீடர்  2007 ல் அமெரிக்காவில்  அறிமுகப்படுத்திய ஆறு மணிநேரத்திற்குள்  விற்றுத் தீர்ந்துவிட்டது.  வாசகர்கள் ஒரே சமயத்தில் பல புத்தகங்களை  எடுத்துச் செல்லும் வசதியுள்ள  கையடக்கமான இந்தக் கருவியை விரும்ப ஆரம்பித்தார்கள்.  அச்சில் வரும் புத்தகம் அனைத்தும் இதில் அதைவிடக் குறைவான விலைக்குக் கிடைக்கும் என்பதாலும் எங்கு எளிதாக எடுத்துச் செல்லாம் என்பதாலும்   பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போயிற்று. 2010ஆம் ஆண்டு அமேசான் ”நாங்கள் விற்கும் 100 அச்சிட்ட புத்தகத்திற்கும் 140 இ புக் குகளை விற்றுக்கொண்டிருக்கிறோம்” என அறிவித்ததும்  இதைப் பயன்படுத்துவோர்  எண்ணிக்கை 28% அதிகரித்தது.  புத்தக பதிப்பில் எழுந்த இந்தப்  புரட்சி உலகம் முழுவதும் மிக வேகமாகப் பரவிக்கொண்டிருந்த நேரத்தில்  சுனாமியாக  வந்து தாக்கியது  ஆண்டராய்ட் என்ற  அதிதொழில்நுட்பம்.    இணைய இணைப்பு உள்பட   கணணியின் அத்தனை வசதிகளையும் உள்ளடக்கிய ஒரு நோட்டு புத்தக  வடிவில் ஐ பேட்   வெளியிட்ட  ஆப்பிள் நிறுவனம் அந்த கைகண்ணியிலேயே  இ புத்தகங்களையும் படிக்கும் வாய்ப்பை  சில இலவச புத்தகங்களின் இணைப்புடன்  அளித்தது. கைக்கணணியிலேயே புத்தகங்களைப் படிக்கமுடியும் போது இதற்கு எதற்கு ஒரு தனிக்கருவி என்ற எழுந்த எண்ணம் கின்டில் போன்ற இ ரீடர்களின் விற்பனையை வெகுவாக தாக்கியது.  ஆனால் புத்திசாலி நிறுவனமான அமேசான் கின்டில் நிறுவனத்தை தனிப்பதிப்பகமாக்கி அதன் புத்தகங்களைஆப்பிளின் ஐபாட் உள்பட எல்லா ஆண்டிரய்ட் கருவிகளிலும் தரவிறக்கிப் படிக்க முடியும் என அறிவித்து தங்கள்  இ புக் விற்பனையை தக்கவைத்துக்கொண்டார்கள்  இது காலத்தின் கட்டயாகமாகிவிட்டதால் கூகுகிள் பிளே போன்ற நிறுவனங்களும்  உடனே மின் புத்தக விற்பனை களத்தில் இறங்கி இப்போது எல்லோரும் கலக்கி கொண்டிருக்கிறார்கள்.  இந்தப் புரட்சியினால் இன்று உலகெங்கும் மின் புத்தகங்களை ஐ பேடிலோ, டேப்லெட்டிலோ, போனிலோ ஒவ்வொரு வினாடியும்  குறைந்த பட்டசம் 10ஆயிரம் வாசகர்கள் படித்து கொண்டிருக்கிறார்கள் 
தமிழில் மின்  நூல்கள்
இன்று உலகளவில்  இணையத்தில் அதிக அளவில் பயன்படுத்தம் மொழிகளில் ஒன்று தமிழ்.  தமிழ் புத்தகங்களை மின்புத்தகங்களாக்கி சேமிக்க வேண்டும் என்ற முயற்சி 1995லேயே துவங்கிவிட்டது.   வெளிநாடுகளில் வசிக்கும் முனைவர் கே கல்யாணசுந்திரம், முனைவர் குமார் மல்லிகார்ஜுனன்  என்ற இருவரின் முயற்சியால் துவங்கப்பட்ட”மதுரை திட்டம்” இன்றளவும் எண்ணற்ற தமிழ் புத்தகங்களை மின்நூல் வடிவாக்கி தங்கள் தளத்தில் சேமித்திருக்கிறார்கள். ஆராய்ச்சியாளர்களுக்கும், நூல் ஆர்வலர்களுக்கும் மிகப்பெரிய அளவில் பயன்படும் இந்த தளம் எந்தவித வியாபார நோக்கமுமின்றி நடைபெறுகின்ற ஒரு தன்னார்வ (voluntary) முயற்சி. . உலகில் வெவ்வேறு நாடுகளில் வசிக்கும் முன்னூற்றுக்கு மேற்பட்ட தமிழர்களும் தமிழார்வலர்களும் ஒன்றுகூடி இத்திட்டத்தை நடத்தி வருகின்றனர்.  இதில் தொல்காப்பியத்திலிருந்து பொன்னியின் செல்வன் வரை  500க்கும் மேற்பட்ட புத்தகங்களை    மின்நூலாக இலவசமாகப் பெறமுடியும் 

இதைப்போலவே  2001 ஆம் ஆண்டு ஜெர்மனியில் வசிக்கும் முனைவர் சுபாஷணி, மலேசியாவிலிருக்கும் பேராசிரியர் கண்ணன். முத்த பத்திரிகையாளர் மாலன் போன்றவர்களின் முயற்சியான தமிழ் மரபு அறக்கட்டளையின் தளத்தில்  400க்கும் மேற்பட்ட பல பழமையான தமிழ் நூல்களை மின்நூலாக   சேமித்திருக்கிறார்கள். அவற்றை இலவசமாகப் பெறலாம். சமகால மின்னூடகத்தின் வழியே தமிழ் மரபை அறிந்துகொள்ள உதவும் இந்தத் தளம், ஒரு தகவல் சுரங்கம்
ஆனால் இந்தத் தளங்களில் இருப்பவை எல்லாம் பாரம்பரியம் மிக்க பழந்தமிழ்நூல்கள். அவற்றை மின்பதிப்பாக மாற்றி ஒரு நூல்நிலையம் போல் செயல் படுகிறார்களே தவிர  சமகால புத்தகங்களை  மின் புத்தகமாக பதிப்பிக்கவில்லை. அந்த முயற்சி 2003ல்தான் துவங்கியிருக்கிறது. முதல்வன் என்ற பெயரில் ஒரு மின்நூல் வெளியிடப்பட்டிருக்கிறது. இதன் ஆசிரியர் முனைவர்சிதம்பரம்.  இந்த ”முதல்வன்” தான் தமிழின் முதல்  மின்நூலாக கருதப்படுகிறது. 
சமீப காலம் வரை தமிழ் மின்புத்தகங்கள் பெரிய அளவில் வெளிவராதற்கு காரணம் அதற்கான சரியான இயங்குதளம் ஒன்று இல்லாதுதான். உலகின் மிகப்பெரிய மின் நூல்களின் பதிப்பகமாக இருக்கும் கின்டில்  ஆங்கிலம் தவிர 50 மொழிகளில் புத்தகங்களை  வெளியிட்டாலும் இந்திய மொழிகளில் வெளியிடுவதில்லை  இந்திய மொழி புத்தகங்களை வெளியிடத் தளங்களும் புத்தகங்களுக்கான விலையை இந்திய பணத்தில் செலுத்தும் வசதியும் இருந்தால் தான் இந்திய மொழி  இ புத்தகங்களின் வெளியீடு வெற்றியாக முடியும் என்ற நிலை சில ஆண்டுகளாக  நீடித்துக்கொண்டிருந்தது.  இந்த நிலையை மாற்றி பல தொழில்நுட்ப சிக்கல்களுக்கிடையேயும் தமிழ்  இ புத்தகங்களுக்காகவே  ஒரு தளத்தை நிறுவ முனைந்து செயல்பட்டுக்கொண்டிருந்தவர்   கிழக்கு பதிப்பகத்தின் நிறுவனர் முனைவர் பத்ரி சேஷாத்திரி. ஐஐடியிலும் வெளிநாட்டிலும் பொறியியல்  படித்த பொறியியலாளரான இவர்  ஆர்வத்தினால் புத்தக  பதிப்பளாரகி புதிய சாதனைகளைச்செய்திருப்பவர்.  இவரது முயற்சிகள் இறுதிகட்டத்தில் இருந்தபோது தான்   தினசரிகள் வெளியாகும் செய்திகளை தொகுத்து  இணையத்தில்   வெளியிட்டு மிகப்பெரிய வெற்றியைச் சந்தித்த  நீயுஸ் ஹண்ட் என்ற தளம் இந்திய மொழியில் இ புத்தகங்களை  அவர்கள் தளத்தின் மூலமாக வெளியிடும் முயற்சியில் இறங்கியது.  வாசகர்கள்  வரவேற்பினால்  அந்த முயற்சி பெரும் வெற்றி பெற்றது.. இப்போது இதில் கிழக்கு உள்பட சில தமிழ் பதிப்பகங்களின் புத்தகங்கள் கிடைக்கின்றன.  பதிப்பகங்களைத்தவிர, ராஜேஷ் குமார், ரமணி சந்திரன் போன்ற எழுத்தாளர்கள்  நேரடியாக வெளியிடும் புத்தகங்களும் கிடைக்கின்றன.    நீயூஸ்ஹண்ட்டின்  வெற்றியைத் தொடர்ந்து கூகுள் நிறுவனம் இப்போது  தங்கள் இணைய கடையான ”கூகிள் பிளே ஸ்டோரில்” இந்தியமொழிபுத்தகங்களை இந்திய பணத்திலேயே வாங்கும் வசதியை அறிவித்திருக்கிறது. 
இ புத்தக உலகில்  சமீபத்தில் நிகழ்ந்திருக்கும் இத்தகைய காட்சி மாற்றங்கள்  தமிழில் வெளியாகும் இ புத்தகங்களுக்கு நல்ல சந்தை வாய்ப்பை ஏற்படுத்தும் என்கிறார் பத்ரி சேஷத்திரி.  விரைவில்  இவரது கிழக்கு பதிப்பகத்தின் பல புத்தகங்கள் கூகுள் பிளே, நியூஸ்ஹண்ட் போன்ற எல்லாத் தளங்களிலும் ஒரே விலையில் கிடைப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்திருக்கிறார்.  இவரைப் பல  தமிழ்ப் புத்தக பதிப்பாளர்கள் பின்பற்றுவார்கள் என்பது உறுதி. அடுத்த ஆண்டு இறுதிக்குள் ஆயிரக்கணக்கான தமிழ் புத்தகங்கள்  இ புத்தகமாக வெளிவந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.  இ புத்தகங்களின் விலை அச்சடிக்கப் பட்ட புத்தகங்களின் விலையில் பாதிக்கும் குறைவாக இருக்கிறது  ஒரு முறை தரவிறக்கம் செய்து கொண்டால் நம்  நேர வசதிக்கேற்ப படிக்கலாம். 
அச்சு கூலி பேப்பர் விலை  போன்றவை இல்லாதாலும். மின்நூலாக்கும் செலவு ஒரு முறைதான் செய்யப்படுவதாலும்  மின் நூல்களை இப்படிக் குறைந்த விலைக்குக் கொடுக்க முடிகிறது என்கிறார் பத்ரி.  அச்சில் வந்தபின் மின் புத்தகமாக வரும் இன்றைய நிலையைத் தாண்டி மின் புத்தகமாக வெளியிடுவதற்காகவே ஆசிரியர்கள் எழுதப்போகும் காலம் வெகுதொலைவில் இல்லை என்கிறார் இவர். மின்புத்தக பதிப்பில் மிக முக்கியமானது மின்னூலாக்கம். கணணிகளின் செயலாக்கத்தில் பல மாறுதல்கள் நிகழ்ந்து கொண்டிருப்பது போல  இதிலும் தொடர் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அச்சு புத்தகத்தில் பக்கங்களைத் திருப்பி  படிப்பதைப் போல பக்கங்களைப் புரட்டும் வசதி தெளிவான  வண்ணப்படங்களுடன்  அழகான லேஅவுட் போன்றவற்றைச் செய்யப் பல மென்பொருட்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. 
இலவச மின் புத்தகங்கள் 
மின் புத்தகங்களை வணிக சந்தை படுத்த இம்மாதிரி முயற்சிகள் தொடர்ந்து கொண்டிருந்தாலும் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தமிழில் பல ஆயிரக்கணக்கான புத்தகங்கள் இலவச மின்நூலாகவே கிடைக்கிறது. பங்களுருவிலிருந்து இயங்கும் ப்ரதிலிபி  என்ற நிறுவனம் தமிழ் உள்ளிட்ட 6 இந்திய மொழிகளில்  8000த்துக்கும் மேற்பட்ட படைப்புகளை இலவசமாக வழங்குகிறார்கள். தமிழில் மட்டும் 1500 புத்தகங்கள். கிடைக்கின்றன.  பிட்ஸ் பிலானி, அண்ணாபல்கலகழகம், டெல்லி பல்கலகழகம் போன்ற சிறந்த  கல்விக்கூடங்களில் பயின்றபின்னர்  அமேசான், சிட்டிபாங்க், போன்ற பெரிய நிறுவனங்களில் பணியாற்றிய  5 பேர் கொண்ட ஒரு  இளைஞர் குழு முழுநேரப்பணியாக இதைச் செய்து கொண்டிருக்கிறது. 
ஏன் இலவசமாகக் கொடுக்கிறார்கள்?  
பதிப்பிக்கப்பட்ட நூலை  மின்நூலக்குவது டெக்கினிக்கல் பிரச்னைகள் நிறைந்த பணி. அதற்காகச் செலவிடும் நேரம், உழைப்பவர்களுக்கான ஊதியம் போன்றவை அதிகம் இருந்தும் எப்படி, ஏன் இதை இலவசமாகக் கொடுக்கிறார்கள்?. 
”எழுதப்படிக்க தெரிந்த இந்தியர்கள் எல்லோருக்கும் ஆங்கிலம் தெரியாது.. ஆங்கிலம் தெரியாத ஆனால் ஆண்டிராய் கருவிகளைத் தங்கள் மொழிகளில் பயன்படுத்த தெரிந்தவர்கள் 7 கோடிக்கும்மேல். இது வரும் ஆண்டுகளில் பல மடங்காக உயரப் போகிறது.  ஒரு இந்திய மொழியில் மட்டும் 9000 அச்சடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இது வாசகர்களை அடையவில்லை மார்க்கெட்டிங்கும் செய்யப்படவில்லை. இந்த இரண்டு விஷயங்களையும் ஒருங்கிணைத்து பாருங்கள் இந்த சந்தையின் வீச்சு புரியும் என்கிறார். சங்கரநாராயணன். இவர் ப்ரதிலிபியின் நிறுவன குழவின் தலைவர். இணையம் பயன்படுத்துபவர்கள் அனைவரும் புத்தகங்களை இணையத்தில் படிக்க வேண்டும் அந்த பழக்கத்தை ஏற்படுத்த, புதிய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்த நாங்கள் எடுத்திருக்கும் முயற்சி இது என்று சொல்லும் இவரின் குழு இந்தச் சாதனையை  துவக்கிய முதாலாம் ஆண்டிலியே சாதித்திருக்கிறார்கள்.  நமது மொழியின் படைப்புகளை மின்னூலாக்கிப் படிக்கும் வசதியை யாராவது தருவார்கள் எனக்காத்திருந்து எவரும் முன்வராததால் நாங்களே இந்த முயற்சியில் இறங்கிட்டோம் எனச் சொல்லும் சங்கர நாராயணண். எங்களுக்கு புகழ்பெற்ற ஆசிரியர்கள் அவர்களின்  படைப்புகளை வெளியிடக்கொடுத்து  எங்கள் முயற்சிகளைப் பாராட்டி உதவ முன்வந்தது  ஒரு மகிழ்ச்சியான விஷயம்.  என்கிறார்.   இனி சொந்தபணத்தை செலவழித்து தங்கள் முதல் படைப்பை அச்சில் வெளியிட வேண்டாம் எங்கள் ப்ரதிலிபி  புதிய எழுத்தாளர்களின் படைப்புகளை வரவேற்கிறது" ( www.pratilipi.com) என்கிறது இவர்கள் குழு. இப்போது துவக்க கட்ட திலிருக்கும் இந்த நிருவனம். பெரிய அளவில் பயனாளிகள் படைப்பாளிகள் கட்டமைப்பை உருவாக்கிய பின்னர்தான் வணிக ரீதியான மின்பதிப்புகளை வெளியிடப்போகிறார்கள் 
இவர்களின் முயற்சிகளை அறிந்தவர்களில் 70%க்கும் மேற்பட்டவர்கள் அதை பேஸ்புக் மூலமாகத்தான் அறிந்திருக்கிறார்கள். முகநூலில் இவர்கள் பக்கத்தை 5000க்கு மேற்பட்டவர்கள் பின்பற்றுகிறார்கள்.  உலகின் மிகப்பெரிய இந்திய மொழிகளின்  இ பதிப்பகமாக வேண்டும் என்ற கனவில் இயங்கும் இந்தக் குழுவினர் சொல்வது ”ஒருவேளை நாங்கள் இந்த முயற்சியில் வெற்றியடையாமல் போகலாம் ஆனால்  நாங்கள் வெற்றிகரமாக ஏற்றிய இந்த தீபத்தை வேறு எவரேனும் எடுத்துச் செல்வார்கள் என்றே நம்புகிறோம்” 
ப்ரதிலிபி யைப் போலவே சென்னையிலும் ஒரு குழு இத்தகைய பணிகளைச் செய்கிறது. ”ப்ரீ தமிழ் இ புக்ஸ்” (http://FreeTamilEbooks.com) என்ற  குழு.  இதன் உறுப்பினர்கள் தமிழகத்தின் பல நகரங்களிலும் வெளிநாடுகளிலும்  இருப்பவர்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்  துவக்க பட்ட  15 பேர் கொண்ட குழு. இது. இதில் மூவர் பெண்கள். எல்லோருமே   கணணி தொழில்நுட்பம் அறிந்தவர்கள். புத்தக முகப்பு தயாரிப்பு,மின்னூலாக்கம். ஆசிரியர் தொடர்புகள் எனப் பணிகளை பிரித்துக்கொண்டு இயங்குகிறார்கள்.  இவர்கள் அனைவரும் தன்னார்வலர்கள்.  இவர்கள் இலவசமாக மின்பதிப்புகளைக்கொடுப்பதின் நோக்கம்  -அதிகமானோர் தமிழ் புத்தகங்களை இணையவழியில் படிக்கச்செய்யவேண்டும் என்ற ஆர்வம் மட்டுமே என்கிறார். இந்தக் குழுவின் உறுப்பினரான திரு அன்வர்.  இதுவரை 200 புத்தகங்களை மின்னூலாக்கியிருக்கும் இவர்கள் புதிய மின்னூல்கள் மட்டுமில்லை தொடர்ந்து வலைப்பூக்களை எழுதிவருபவர்களின் படைப்புகளையும் தொகுத்து ஒரு மின்னூலாக்கப்படுவதையும் வரவேற்கிறார்கள் 
நாம்  வேகமாக மாற்றங்கள் நிகழும்  காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.அரசியலில், கலாச்சாரத்தில், பண்பாட்டில், இலக்கியத்தில், வேளாண்மையில், மருத்துவத்தில்… என சகல தளங்களிலும் மாற்றங்கள் நிகழந்துகொண்டிருக்கிறது. புத்தகபதிப்பு துறையும் இதற்கு விதிவிலக்கில்லை என்பதை  புலிபாய்ச்சலில் வரும்  மின்நூல்கள் புரியவைக்கின்றன. கிண்டில் போன்ற e-readerகளையோ, அல்லது டேப்லெட்களையோ, கைபேசியையோ பயன்படுத்தினால், எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் சென்று படிக்கலாம். டேப்;லெட்களில் ஒரே நேரத்தில் பல திரைகளைத் திறந்து கொண்டு மின் புத்தகங்களை இறக்கிக் கொண்டு Cross reference செய்து கொள்ளலாம். எழுத்துக்களைப் பெரிதாக்கிக் கொண்டு மூக்குக் கண்ணாடி இல்லாமல் படிக்கலாம். டேப்லெட்டிலோ, கிண்டிலிலோ தரவிறக்கம் செய்து கொண்டால் அதுவும் பொக்கிஷமாக ஆகிவிடும். இணையத்தில் தமிழ் மொழி பெரிய அளவில் உலவ முனைந்து வெற்றிகண்டவர்களைப்போல மின் புத்தக அலையை தமிழ் பதிப்புலகிற்கு  கொண்டு வரும் முன்னோடிகளான  இளைஞர் பட்டாளத்தை,  ஊக்குவித்து  அவர்களின் முயற்சிகள்  வெற்றி பெற வாழ்த்துவோம்

(கல்கி தீபாவளி மலர் 21015 )
 இலவசமாக மின் நூல்களை பெற உதவும்  சில இணைய தளங்கள்
.http://freetamilebooks.com/
www.pratilipi.com . 
http://noolagam.org/
http://www.projectmadurai.org/pmworks.html
 http://thamizham.net
http://www.chennailibrary.com





 

3/11/14

செல்வம் நங்கூரமிடும் துறைமுகம்.


மிகச்சிறிய 32 குட்டிதிட்டுகளிணைந்து சின்ன  தீவாகயிருக்கும் அந்த நாட்டில் இருப்பது ஒரு சிறிய மீன் பிடிதுறைமுகம்தான்சிறியபயண கப்பல்கள்கூட வரமுடியாது. ஆனால் இன்று உலகம் முழுவதும்நிதி நிலையங்களின் துறைமுகமாக” ( Financial Harbour) அறியபட்டிருக்கும் அந்த வாமனதேசம்தான் பஹரைன்  .
 மிகச்சிறிய இந்த வளைகுடா  தீவில்தான்  முதல் எண்ணைக் கிணறு நிறுவபட்டது..அதன் வளம் குறைந்து இன்னும்10 ஆண்டுகளில் மூடப்பட்டுவிடும் என்ற நிலையிலேயே, நாட்டின் பொருளாதாரத்தை வளமாக்க இந்த தீவின் அரசு செய்த காரியங்கள் இரண்டுஅண்டை நாடான செளதி அரேபியாவிலிருந்து கச்சா எண்ணையை கடலின் அடியில் பதிக்கபட்ட குழாய்களின் மூலம் கொண்டுவந்து சுத்திகரித்து அவர்களுக்கு அனுப்பவதற்காக அதிதொழில்நுட்பத்தில் ஆலைகளை நிறுவி,எண்ணையின்விலையில் பாதியை கட்டணமாக வசூலித்தது. மற்றொன்று வெளிநாட்டு வங்கிகளை  இங்கிருந்து தொழில்செய்ய வரவேற்றது. இன்றைக்கு 300க்கும் மேற்பட்ட வெளிநாட்டு வங்கிகள் இயங்கும் இந்த தேசத்தில் இன்னும் அவர்கள் வருகை தொடர்ந்தவண்ணமிருக்கிறது.
அவர்களின் வசதிக்காகவே நகரின் நடுவே .நவீன வசதிகளுடன் அலுவலகம் சிறப்பான  தொலைதொடர்பு வசதிகள் கொண்ட  பிரமாண்ட 53 மாடி கட்டிடத்தை எழுப்பியிருக்கிறார்கள். இரண்டு  ராட்டசத வடிவ பூட்ஸ் வகை காலணியை எதிரும் புதிருமாக நிறுத்தியதைப்போல நிற்கும் இந்த கட்டிடங்களின் பெயர்  “பைனாஷியல் ஹார்பர்” Financial Harbour
தொழில்வளம் எதுவுமில்லாத வெறும் ஈச்ச மர காடுகளாயிருக்கும் இந்த சின்னஞ்சிறு பாலைவனத்தீவில்  இவ்வளவு வங்கிகள் என்னசெய்கின்றனஉலகஆப் ஷோர் பேங்கிங்”(off shore banking) என்ற பேங்க்கிங் தொழிலின்  முக்கிய கேந்திரம் இதுதான், , உலகில் நல்ல வருமானம் தரும் தொழில்களில் மற்றொரு  நாட்டில்  முதலீடு செய்ய விரும்பும்  நிறுவனங்களுக்கு, அதை அவர்கள் நாட்டிலிருந்து செய்யாமல் மற்றொரு நாட்டிலிருந்து செய்ய  உதவது இந்த வங்கிகளின் பணி. எளிதாக சொல்லவேண்டுமானால்ஒரு ஜப்பானிய நிறுவனம்  மெக்கிஸிக்கோவில் அதிக லாபம் ஈட்டும் தொழிலில் முதலீடு செய்ய இங்குள்ள ஸ்விடன் நாட்டு வங்கிக்கிளை உதவும். இதனால் பல நாடுகளின் பொருளாதாரத்தை கண்கொத்தி பாம்பாக கண்காணித்து தங்கள் வாடிக்கையாளார்களை செல்வந்தர்களாக்கிகொண்டிருக்கிரார்கள் இந்த வங்கியாளார்கள். ஒரே இரவில் கோடிகளை ஈட்டவும், இழக்கவும் செய்கிறார்கள். வருமானத்திற்கு வரி எதுவும் கிடையாது.லாபத்தை உலகின் எந்த மூலைக்கு மாற்ற தடையேதுமில்லை. பல வங்கிகளில் இந்தியர்கள் அதில் கணிசமான அளவில் தமிழர்கள் பணியிலிருக்கிறார்கள்
கடந்த  10 ஆண்டுகளில் இந்த வங்கித்தொழில் நாட்டின் முகத்தையே மாற்றியிருக்கிறது. பிரமாண்டமான பல மாடிகட்டிடங்கள், அகன்ற சாலைகள் என வளர்ந்து கொண்டிருக்கிறது. நகரின் புதிய அடையாளமாக எழுந்திருப்பது
    240மீட்டர் உயரத்தில்  வேர்ல்ட் டிரேட் செண்ட்டர்.(world trade center) இரட்டை கோபுரம். தொலவிலிருந்து பார்க்கும்போது சாய்த்து நிறுத்திவைக்கபட்டிருக்கும் படகைப் போல இருக்கும் இதை அருகில் பார்க்கும் போது தான் அது  ஒரு படகில் விரித்து கட்டப்பட்டிருக்கும் இரண்டு பாய்மரங்கள் என்ற வடிவம்  புரிகிறது. 50 மாடிகளுடன் அமைக்கப் பட்டிருக்கும்  இந்த  இரண்டு கட்டடித்திற்கு இடையில் பெரிய காற்றாடிகளை நிறுவி மின் சக்தி பெற ஒரு காற்றாலையை நிறுவியிருக்கிரார்கள். இது இந்த கட்டிடத்திற்கான மின் வசதியை தருகிறது. கட்டிடத்தில் பல பன்னாட்டு நிறுவனங்களின் அலுவலகங்கள். வங்கிகள்மேலேயிருந்து பார்க்கும்போது தேசம் முழுவதும் தெரிகிறது. ஆம். இந்த நகரம் மட்டும் தான் முழுதேசமே!. கீழ்தளத்தில் மிகப்பெரிய ஷாப்பிங் மால்  நிறைய சர்வதேச பிராண்டுகளின் கடைகள்.
இங்குமட்டுமில்லை நகரின் அத்தனை பெரிய கட்டிடங்களிலும்  கீழ் தளம் மால் தான்எல்லா மால்களிலும் பிராத்தனைக்கு என தனி இடம். இவைகளைத்தவிர பல லட்சம் மீட்டர் பரப்பளவில் பல மாடிகட்டிடங்களில்  பல தனி மால்கள்..உலகின் எந்த முண்ணணி பிராண்டும் தங்கள் படைப்பை முதலில் அறிமுகப்படுத்துமிடம் பஹரைன் தான்இந்த மால்களில்தான்.. சில மிக பிரமாண்டமானவை. ஒரு மாலில்  5000 கார்களை நிறுத்த அடுக்கமாடி பார்க்கிங் நிறுவியிருக்கிறார்கள். கடைகளில் யார் வாங்குகிறார்கள்? எந்த வித வரியுமில்லாமல் சர்வதேச விலையைவிட மலிவாக  கிடைப்பதால்  அருகிலிருக்கும் சவுதி அரேபியா போன்ற அண்டை நாடுகளிலிருந்து விடுமுறைகளில் வந்து வாங்கித்தள்ளுகிரார்கள். இதற்கு வசதியாகியிருப்பது பஹரைன் மன்னர் பெயரில் அமைக்கபட்டிருக்கும் கடல் வழி சாலை தான். குறிப்பிட்ட இடங்களில் மட்டும் கீழே படகுகள் கடந்து போக  உயர்ந்தநிலையில்  பாலமாக அமைக்கபட்டிருக்கும் கடல்வழி சாலையில் பலநாட்களில் நெருக்கடியாகிவிடுமளவிற்கு போக்குவரத்துபோக விஸா அவசியமானாலும்  இங்கிருந்து தினசரி  சவுதி அரேபியாவின் நகரங்களுக்கு போய் வேலை செய்து திரும்புவர்களுமிருக்கிறார்கள்.
ஒரே ஒரு நகரமாகயிருக்கும் இந்த தேசத்தை இப்போது நிறைய வசதிகளுடன் ஒரு சுற்றுலா மையமாகக்க  துவங்கியிருக்கிறார்கள். உலகின் சிறந்த ஹோட்டல்கள் இங்கு வந்திருக்கின்றன. ஒரு ஹோட்டல் அருகிலிருக்கும் அமைதியான கடலை அலையடிக்கும்,கடலாகஇயந்திரங்களின் உதவியால்  உருவாக்கியிருக்கிறார்கள்அருகிலுள்ள குட்டி தீவுகளை ரிஸார்ட்டாக மாற்றிக்கொண்டிருக்கிரார்கள். ஃபார்முலா ஒன் என்ற சர்வதேச கார் ரேஸ்களை நடத்த மிக அதிக செலவில் டிராக்களை அமைத்து உலகம் முழுவதுமிருக்கும் கார் ரேஸ்பிரியர்களை ஈர்க்கிறார்கள்
நகர் உருவாகும் போது நிறுவபட்ட  “பாபல் பஹரைன்என்ற நுழைவாயில் முகப்பை மாற்றாமல் போற்றி பாதுகாக்கும் பகுதியில்தான் நகரின்பிரதான கடை வீதிகள். நிறைய  குறுகிய தெருக்கள் நிறைய இந்திய முகங்கள். வீதியோர கடைகள். சன்னமான குரலில் சரளமான மலையாளம். நடிகர் மோகன்லால்,மம்முட்டி படங்களுடன் முடிதிருத்துமிடத்திலிருந்து, குருவாயரப்பன் சன்னதியுடன் கோவிலாக மாற்றபட்டிருக்கும் 2 பெட்ரூம் பிளாட் வரை எங்கும் நிறைந்த கேரள வாசனை. காய்கறி மார்கெட்டைப்போல தங்க நகைகளுக்கு தனியாக 300 கடைகளுடன்  கோல்ட் சிட்டி. என்ற மார்க்கெட்.

மெக்கா விலிருந்து கொண்டுவரப்பட்ட கற்களினானால் பிரமாண்டமாக நிறுவபட்டிருக்கிறது அந்த மசூதி.. இத்தாலிய மார்பிள் தரை, இந்திய தேக்கில் கதவுகள்,பிரான்ஸில் வடிவமைக்கபட்ட கண்னாடி சாரளங்கள்.ஸ்பெய்னில் வடிவமைக்கபட்ட பைபர்கிளாஸ் விதானம், தரை முழுவதும் பெர்ஷ்ய கார்பெட் என மிக நேர்த்தியாக கலையுணர்வுடனிருக்கும் அதனுள் பிராத்தனை இல்லாத சமயங்களில் பார்க்க அனுமதிக்கிறார்கள். எந்த நாட்டினாராக, எந்த மதத்தினாராக யிருந்தாலும் பெண்கள் உள்ளே நுழைய பர்தா அணிந்தால்தான் அனுமதி..  ஏர்கண்டிஷன் செய்யப்பட்டிருக்கும் பெரிய பிராத்தனை கூடத்தில் விதானத்திலிருந்து தொங்கும் சரவிளக்கில் இணைக்கபட்டிருக்கும் ஒரு பிரமாண்ட வட்டம்  1000 பல்புகளுடன் நம்மை பிரமிக்கவைக்கிறது.(1000விளக்கு மசூதி)
ஒரு  வளமான முகலாய நாட்டில் அவர்களது வழிபாட்டுதலம் ஆடம்பரமாக இருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஆனால்  நகரின் வெளியே 10 மைல் தொலைவில் பார்த்த ஒரு மரம் தான் ஆச்சரியமான விஷயம். சுற்றுவட்டாரத்தில் 20 மைலுக்கு எந்தநீர்வளம் இல்லாத அந்த மணல் பாலைவனத்தில் 400 ஆண்டுகளுக்கும் மேலாக உயிர் வாழும் ஒரு மரம்.. எங்கிருந்து தனக்கு வேண்டிய நீரை எடுத்துகொள்கிறது என்ற ஆச்சரியத்தை தரும் இந்த மரத்தின் அடி பாகம் ஆலமரம்போலவும் இலைகள் புளிய மர இலைகளைபோலவும் தன் கிளைகளை  சிறு மாமரம்போல தாழ்வாக பரப்பி  ஆராய்சியாளர்களுக்கு சவால் விட்டுகொண்டு நிற்கிறது. மிக அரிதான தாவரமாக அறிவிக்கபட்டு வாழும் மரமாக(tree of life) பாதுகாகப்படுகிறது. வழிபாட்டுக்கு உரியதாக மதிக்கப்படும் இதில் சிலர் தங்கள் பெயரை செதுக்கியிருக்கிறார்கள். அவை தமிழ் எழுத்துகளாக இருப்பது     நெஞ்சில் வலியை உண்டாக்கியது.
.
இந்த வாழும் மரத்தை பார்த்து திரும்பும்போதுஇறைவன் படைப்பில் புரிந்துகொள்ளமுடியாத சில ஆச்சரியங்கள் அவன் மீது கொண்டுள்ள நம்பிக்கையை அதிகரிக்கசெய்கிறது.” என்ற இஸ்ரேலிய பழமொழி  நினைவிற்கு வந்ததது.






24/10/14

இயற்கையின் சிரிப்பில் இறைவனை காண்பவர்கள்









உலகின் அழகான இடங்களில் ஒன்றாக வர்ணிக்கப்படும் இடம் ஹவாய் தீவுகள். அடங்கிய எரிமலைகள், அடர்ந்தகாடுகள், அழகிய நீர்விழ்ச்சிகள் பரந்தபசும்புல்வெளிகள், பல வண்ணமலர்கூட்டங்கள்,, வெண் மணலைத்தொட்டுசெல்லும் நீலக்கடல் என பூலோக சொர்க்கமாக பசிபிக் பெருங்கடலில் இருக்கும் இந்த  தீவுக்கூட்டம் அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஒரு மாநிலம். 8 தீவுகள் அடங்கிய இந்த தீவு கூட்டத்தின் கடைசியில் இருக்கும் குட்டி தீவு குவாய் (KUHAI). ஓரு மிதக்கும் இலையின் வடிவில் இருக்கும் இந்த  அழகானதீவு முழுவதும் பரவியிருப்பது  பலவிதமான மலர்கள். உலகில் வேறு எங்கும் பார்க்க முடியாத மலர்களும் இங்கு இருப்பதால்   இதை மலர் தோட்ட தீவு என்றே அழைக்கின்றார்கள்  இந்த  எழில் கொஞ்சும் இடத்தில் நடராஜருக்கு  கடந்த 50  அண்டுகளாக ஒரு கோவில் இருக்கிறது.  அங்கு வழிபடப்படும் ஸபடிகலிங்கத்திற்காக  மற்றொரு பிரமாண்டமான கோவிலும் அருகில்  எழுந்து கொண்டிருகிறது.



இந்த கோவிலை நிறுவிய குருதேவர்  கலிபோர்னியாவில் பிறந்தவர். 11வயதில் பெற்றோரை இழந்ததால், குடும்ப நண்பரால் வளர்க்கபட்டவர். அந்த நண்பர்  இந்தியாவின் மீதும் இந்து மதத்தின் மீதும் ஈர்ப்பு கொண்டவராதலால் இந்துமத அடிப்படைகளை அவரிடம் அறிந்தார். யோகா முறைகளையும் அறிந்தார்,  . ஆர்வத்துடன்  கிழக்கத்திய, மேற்கத்திய  நடனங்கள் கற்று  புகழ்பெற்ற சான்பிரான்ஸில்கோ நடனகுழுவின் முக்கிய நட்சத்திரமாக உயர்ந்த அந்த இளைஞன். 19 வயதில் எல்லாவற்றையும் துறந்து  ”முழுமையான உண்மையை” அறிந்து கொள்ள இந்தியாவிற்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டு அதன் நீட்சியாக இலங்கையை அடைந்தான். அங்கு காட்டுப்பகுதியில் ஒரு குகையில் நீண்ட நாள் தவத்திலிருந்த போது இவரைத்தேடி வந்தவர்  சிவ யோகஸ்வாமி என்ற சிவாச்சாரியர்.  அவர் அந்த இளைஞனுக்கு சுப்ரமணியன் எனப்பெயரிட்டு உபதேசித்து தீட்சை வழங்கினார். அவருடைய அருளாசியால் ஞானம் பெற்ற சுப்ரமணியன் உலகின் பலநாடுகளில் பயணித்து இறுதியில் இந்த இடத்திற்கு வந்த போது இங்கு  சிவபெருமான் வாழ்ந்ததை உணர்ந்திருக்கிறார். . இலங்கையில் அவருக்கு ஞானம் வழங்கியவர்  குரு யோகஸ்வாமி.  சைவசித்தாந்த மரபின் படி  2200 வருட பழமையான கைலாச பாரமபரியத்தில் வந்த குரு. அவர் தனது 77வது வயதில் தன் வாரிசாக சுப்பரணிஸ்வாமியை  நியமித்து தன் பணியை தொடர ஆணையிட்டார்..  அதையெற்று 1970ல் தான் சிவனை கண்ட இந்த இடத்தில்  வழிபட ஒரு கோவிலையும், அதை முறைப்படி நிர்வகிக்க ஒரு ஆதினத்தையும் உருவக்கினார். 31 ஆண்டுகள் சிவாய சுப்ரமணி ஸ்வாமியாக  அவர் வாழ்ந்த இந்த இடம்  படிப்படியாக வளர்ந்து இன்று 363 ஏக்கரில் பரந்து விரிந்திருக்கிறது. 2001ல் குருவின் மறைவுக்கு பின்  அவரால் தலவராக நியமிக்க பட்ட போதிநாத வெய்லான் ஸ்வாமியால்  ஆதினம் நிர்வகிக்கபடுகிறது. இவர் கலிபோர்னியாவில் பிறந்த அமெரிக்கர். பள்ளி மாணவனாக இருந்த போதே குருவால் அடையாளம் காணப்பட்டு வளர்க்கபட்டவர்.    அமெரிக்கர், ஐரோப்பியர் போன்ற பலநாட்டினர்  இந்த ஆதினத்தின் மரபுகளுக்கேற்ப இந்துவாகி இங்கு வருகின்றனர், வழிபடுகின்றனர்.. உலகின் பல நாடுகளில் இவரை குருவாக ஏற்ற இந்துக்கள் இருக்கின்றனர்.  வழிபாட்டு மன்றங்களும் இருக்கின்றன.  மொரிஷிசியஸ் நாட்டில் ஒரு கோவிலையும் நிறுவயிருக்கிறார்கள்.

கேரளகோவில் பாணியில் சரிவான கூரையிட்ட உயரமான கட்டிடத்தில் கோவில். சன்னதியில் கம்பீரமாக நடராஜர். அதன் முன்னே நுழைவாயிலில்  தனி மண்டபத்தில் பெரிய நந்தி. அருகே தாமரை பூத்த தாடகம். நுழையும் முன் தடாகத்தில் கால் அலம்பிகொண்டபின்  நந்தியாரை வலம் வந்த பின்னர் சன்னதிக்கு போக வேண்டும், வாசல் கதவு அருகிலேயே சந்தனமரத்தில் வடித்த வினயாகர்.  சன்னதிக்கு போகும் முன் கடக்கும் நீண்ட கூடத்தின் இருபுறமும் நாட்டியத்தின் 108 கர்ணங்களை காட்டும் நடராஜரின் பிரபஞ்சநாட்டியவடிவங்களில் சிறிய சிலைகள். தங்கத்தில் மின்னுகின்றன. இந்த கோவிலை நடராஜர் கோவில் என சொல்லுவதில்லை. ”கடவுள் கோவில்” என அழைக்கிறார்கள்


  சன்னதியில் நடராஜர் முன்னே ஸ்படிக லிங்கம் தினசரி காலயில் அபிஷகம் பூஜை... சன்னதிக்கு  இருபுறமும் பெரிய அளவில் பிள்ளையார், முருகன் சன்னதிகள்  தினசரி காலையில்  9 மணிக்கு வரும் பக்தர்களுக்காக பூஜை .  சமஸ்கிருத மந்திரங்களை ஸ்பஷ்ட்டமாக சொல்லும் அமெரிக்க ஐரோப்பிய அர்ச்சகர்கள். தமிழக சிவன் கோவில் சம்பிராதயங்கள் கடைப்பிடிக்கபடுகின்றன,  . இப்போது இந்த ஆதினத்தில்  6 நாடுகளைச்சேர்ந்த 21 ஸ்வாமிகள்(இவர்கள் சிவாச்சாரியர்கள் என்று சொல்வதில்லை) இருக்கிறார்கள். மூன்று மணி நேர காலத்திற்கு ஒருவர் என தொடர்ந்து இவர்கள் சிவபூஜை செய்துவருகிறார்கள்.    1973ல் இந்த கடவுள் கோவிலில் பூஜைதுவங்கிய காலத்திலிருந்து விடாமல் தொடர்ந்து செய்யபட்டுவருகிறதாம்.  நடராஜரின் பாதங்களுக்கு அருகில் வைத்து ஆராதிக்கப்படும்  3 அடி உயர ஸ்படிக லிங்கம் தான் உலகிலேயே உயரமான ஸ்படிகலிங்கமாம்.  இதற்கான ஒரு தனிக்கோவிலைத்தான் இப்போது கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.  அதற்கு ”இறைவன் கோவில்” என பெயரிட்டிருக்கிறார்கள்.  இறைவன், அல்லது கடவுள் என்பது தான் நம்மை காக்கும், உயர்ந்த சக்தி. கோவில் என்பது அந்த சக்தியின்  பல வடிவங்களின்  இருப்பிடம் அந்த வடிவங்கள்தான்  தெய்வங்கள் என்கிறார்கள்..
பசுஞ்சோலையாக இருக்கும் இந்த வளாகத்தின் ஒரு புறத்தில் இறைவனுக்கு கோவில் எழுந்து கொண்டிருக்கிறது. பெரும்பாலான பணி முடிந்தநிலையில் இருக்கும் இந்த கோவில் கணபதி ஸ்தபதியால் வடிவமைக்கபட்டது, இப்போது அவரது உதவியாளார்களால் தொடரப்படுகிறது. முக்கிய பகுதிகள் பங்களூர் அருகே இந்தகோவிலுக்கென்றே  ஏற்படுத்தபட்டிருக்கும் சிற்பசாலையில் உருவாக்க பட்டு இங்கே அனுப்படுகிறது. அவைகளை இணைத்து கோவிலை உருவாக்கும் பணியில் தமிழ் நாட்டிலிருந்து வந்த சிற்பிகள் ஈடுபட்டிருக்கிறார்கள். கோவிலின் தூண்கள், படிகட்டுக்கள் என ஒவ்வொரு பகுதியும் மிக நேர்த்தியுடனும், கலைநுணுக்கத்துடனும் வடிக்கபட்டுகொண்டிருக்கிறது கோவில் கட்டுமானத்தில் கற்கள் மட்டுமே-.   கான்கீரிட், சிமிண்ட் கிடையாது. சன்னதிக்கு தங்க விதானம்,  சுற்றுபுற நடைபாத தளகற்கள்  கூட பங்களுரிலிருந்து இறக்குமதி செய்யபடும் கற்கள்தான். ஒரு மாதத்திற்கு  65000 அமெரிக்க டாலர்கள் செலவாகிறதாம்.. 2017க்குள் முடிந்து கும்பாஷேகத்திற்கு திட்டமிட்டிருக்கிறார்கள்.  இதற்காக  இந்தியா உட்பட பல நாடுகளுக்கு பயணம் செய்து  நன்கொடைகள் சேகரிக்கிறார் மடத்தலைவர் போதிநாத வெய்லான் ஸ்வாமிகள்.  மொத்தம்  தேவையான பணம் 16 மில்லியன் டாலர்கள் என்பது  திட்டம். (ஒரு மில்லியன் 10 லட்சம்) 
கோவில்கள் ஹாவாய்தீவிலிருப்பதால் பக்தர்களைத்தவிர நிறைய டூரிஸ்ட்கள் வருகிறார்கள்.  ஒரு  சுற்றுலா சொகுசு கப்பல் இந்த கோவிலைக்காண்பிபதற்காகவே  இந்த தீவில் நிற்கிறது. கோவிலில் உணவோ, தங்க அனுமதியோ கிடையாது. அதனால் இந்த இறைவன் அருளால் அருகில் நிறைய ஹோட்டல்கள். ரிசார்ட்கள்.

இயற்கையாகவே வனப்பு மிகுந்த இந்த வனப் பகுதியை மேலும் அழகாக்கியிருக்கிறார்கள் இவர்கள். செயற்கை அருவி, நீர்தேக்கம் எல்லாமிருக்கும்  தோட்ட பகுதியை புனித காடு என அழைக்கிறார்கள்.  ஆங்காங்கே பெரிய அளவில் கருங்கலில் தக்‌ஷணாமூர்த்தி, ஆஞ்னேயர்,  ஆறுமுகன் சிலைகள்.
ஹவாய் தீவுகளுக்ககே உரிய அழகிய மலர்கள் அனைத்தும் இங்கே இருக்கிறது. சில, உலகில் இந்த தீவில் மட்டுமே மலரும் அபுர்வமான வகைகள்.  இந்த தோட்டதின் மலர்கள்தான் பூஜைக்கு பயன்படுத்தபடுகிறது. ஒரு பகுதியில் காய்கறி  கீரைகள் தோட்டம், இங்கு வசிக்கும் ஸ்வாமிகளுக்கு தேவையான உணவு பொருட்களை இங்கேயே விளைவித்து கொள்கிறார்கள். இமய மலைப்பகுதியில் வளரும் உருத்திராட்ச மரம் இங்கே வளர்வது ஒரு ஆச்சரியம்.   ரூத்திராட்ச மரத்தின் பழங்கள் நீல வண்ணத்திலிருக்கிறது
.
வெறும் வழிபாட்டு தலமாக இல்லாமல் இந்த ஆதினம்  இந்து மதம், சைவசித்தாந்தம் குறித்து ஆராய்பவர்களுக்கு உதவியாக ஹிமாலயன் அகெடமி என்று ஒரு கல்வி நிறுவனத்தையும். ஹிந்துயிஸம் டுடே என்ற காலாண்டு பத்திரிகையும் நடத்துகிறது  ஆதின தலைவர் சத்குரு போதிநாத வெயிலான் ஸ்வாமிகள் தான் இதன் ஆசிரியர். உலகெங்கும் ஒரு லட்சம் வாசகர்கள் இருக்கிறார்கள்.  ஆசிரியர்குழுவிலிருக்கும் ஸ்வாமிகள் எல்லாம்  ஆப்பிள் மெக்கிண்டாஷ் கம்ப்யூட்டர்கள், ஐபோன் சாட்லைட் போன் எல்லாம் பயன்படுத்தும்  ஹை டெக்கிகளாக இருக்கிறார்கள்,  இவர்களின் இணைய தளத்தின் மூலம் தலைவரின்  அருளுரைகளும் தினசரி ஒலிபரப்பபடுகிறது
உலகின் எந்த பகுதியில் வாழ்ந்தாலும் அங்கு தங்கள் கோவில்களை நிறுவி வழிபடுவது இந்தியர்களின்-தமிழர்களின் மரபு. ஆனால் இந்தியர்கள் மிக குறைந்த அளவிலியே இருக்கும் இந்த தீவில்  ”அமெரிக்க இந்துக்கள்” இப்படி ஒரு அழகான கோவிலை நிறுவியிருப்பதை பார்க்கும்போது ஏற்படுவது   ஒரு சந்தோஷமான ஆச்சரியம்

கல்கி திபாவளி மலர் 2014ல் எழுதியது


17/12/13

குதிரை சொல்லும் கதை


இந்த ஆண்டு அமுத சுரபி தீபாவளி மலர் வெளியிட்டிருக்கும் எனது கட்டுரை 



சென்னை தீவுதிடலின் எதிரில் கடலை பார்த்து   சற்றே கழுத்தை  சாய்த்து கம்பீரமாக  தன்மீது வாளூடன்  அமர்ந்திருக்கும் ஒரு வீரனுடன்  கடந்த 175 ஆண்டுகளாக  நிற்கிறது. கிரேக்க பாணியில் வடிவமைக்கபட்ட அந்த குதிரை சிலை.  உலகில்  குதிரை மீது மனிதர் அமர்ந்த நிலையில் இருக்கும் சிலைகள்  ஐந்து இடங்களில் மட்டுமே இருக்கிறது. மன்னர்களுக்கு மட்டுமே அளிக்கபட்ட இந்த கெளரவம்  இந்தியாவில் ஒரு ஆங்கில கவர்னருக்கு அளிக்கபட்டிருக்கிறது,  அவர் தாமஸ் மன்றோ. இந்தியாவில் ஒரு சிப்பாயாக வாழ்க்கையைத் தொடங்கி, 12 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றிய பிறகு, நிர்வாகப் பணிக்கு மாற்றம் செய்யப்பட்டவர் தாமஸ் மன்றோ.  தனது கடின உழைப்பால் முன்னேறி ஆளுனராக உயர்ந்தவர்.  1820 முதல் 1827 வரை சென்னை மாநில கவர்னாராகயிருந்தவர். தனது நேர்மையான நிர்வாகத்தால் மக்கள் மனதில் இடம் பெற்றிருந்த ஒரு சில ஆங்கிலேய அதிகாரிகளில் இவரும் ஒருவர் . இன்றுள்ள தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களின் பெரும்பான்மையான பகுதியும் திருப்பத்தூர் பகுதியும் ஒன்றாக  பாராமகால் என்று அறிய பட்டபகுதியில் ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக, கலைக்டராக இருந்தவர். மாவட்டம் முழுவதும் குதிரையில் அலைந்து திரிந்து விவசாயிகளின் உண்மை நிலைமையை நேரடியாக அறிந்துகொண்ட மன்றோ. விவசாயிகளின் வரிச்சுமையை மாற்றி அமைக்க முற்பட்டவர்.தன் பதவிகாலம் முடிந்ததும் இங்கிலாந்து செல்லும் முன் தன்பணியாற்றிய கடப்பா பகுதியில் பயணம் செய்தபோது  1827ல் இறந்துபோனார். இவர்அந்த பகுதியிலிருக்கும் ராகவேந்திரர் சமாதியில் வழிபட்டபோது அவர் இவருக்கு காட்சி கொடுத்தாதாக அரசு குறிப்புகளில் பதிவாகியிருக்கிறது. இப்போதும், கடப்பாவில் உள்ள ஒரு அனுமார் கோயிலில் ராமர் சீதை படங்களுடன் தாமஸ் மன்றோவின் படமும் இருக்கிறது. அங்கே, தினமும் நடக்கும் பூஜையில் மன்றோ படத்துக்கும் தீபாராதனை காட்டப்படுகிறது.
மக்களின் நன்மதிப்பை பெற்றிருந்த இந்த அதிகாரிக்கு  மக்களிடம் நன்கொடை பெற்று ஒரு சிலை வைக்கமுடிவு செய்யபட்டவுடன்  இங்கிலாந்தின் எஃப் சான்ட்ரீ என்ற புகழ்பெற்ற சிற்பி நியமிக்கபடுகிறார். மாடலுக்கான அரபிகுதிரையை  4ம் ஜார்ஜ்  மன்னரின் லாயத்திலிருந்து தேர்ந்தெடுத்து பணியை  செய்யத அந்த கலைஞன் சந்தித்த அடுத்த சவால் மன்றோவின் முழு உருவபடம் எதுமில்லாததினால்  கிடைத்த மார்பளவு படத்திலிருந்து  உருவாக்கவேண்டியிருந்தது
இந்த 6 டன் எடையுள்ள சிலை முதலில் பிளாஸ்ட் ஆப் பாரிஸ்ஸில் வடிவமைக்கபட்டு பின்னர் வெண்கலத்தில் வார்க்கபட்டிருக்கிறது. குதிரை, வால்பகுதி,  மன்றோவின்உருவம், வாள்இருக்கும்பகுதி என 5 தனிதனிப்பகுதிகளாக  கப்பலில் கொண்டுவரபட்டு  இங்கு இணைக்கபட்டிருக்கிறது.  அன்று சென்னையில் பெரிய அளவில் துறைமுகமேஇல்லாத  நிலையில் கப்பலிலிருந்து சிறுபடகுகளில் பகுதிகளாக கரைக்கு கொண்டுவந்திருக்கிறார்கள். இந்த 15 அடி சிலையை மேலும் கம்பீரமாக்க 25 அடியில் ஒரு பீடம் உள்ளூர் கலைஞர்களின் உதவியுடன்  செய்திருக்கிறது ஆங்கிலேய நிறுவனம்.



.இந்த சிலையை படைத்த சிற்பியிடம் ஏறி அமர்வதற்கு சேணத்திலிருந்து 

 தொங்கும் கால்வைக்கும் வளையங்கள் இல்லையே என அவரது சிறுவயது

 மகன் கேட்டதால் தற்கொலை செய்துகொண்டுவிட்டாதாக  சொல்லப்படுவது

 ஒரு வளமான கற்பனை கதை என்கிறார் வி. ஸ்ரீராம். இவர் சென்னை நகரின்

பாரம்பரியத்தை பற்றி ஆராயந்து கட்டுரைகள் எழுதியிருப்பவர். படைத்த

 சிற்பி சான்ட்ரீ பல ஆண்டுகளுக்கு பின்னர் இதய நோயால் இறந்ததற்கான

குறிப்புகள் இருக்கின்றன என்கிறார் இவர். செம்மொழி மாநாட்டிற்கு முன்

  ஆங்கிலேயர்களின் பெயரில் இருந்த தெருக்களை மாற்றியபோது இந்த

சிலையையும் எடுக்க தீர்மானித்திருந்த அரசின் முடிவு எதனாலோ

 கைவிடபட்டது


 40 ஆண்டுகாலம் உதவிகலைக்டெர் முதல் கவர்னர் வரை நேர்மையாக ஊழல்புரியாத அதிகாரியாக பணியாற்றிய தாம்ஸ் மன்றோ அன்றைய ஆட்சியில் துளிர்விட  துவங்கிய லஞ்சம் பற்றி 1795ல்  எழுதிய குறிப்பு இது

  இந்தியாவின் வறுமைக்கு முக்கியக் காரணம், அரசு இயந்திரத்தின் நிர்வாகக் குளறுபடிகளே. ஒரு மாவட்ட ஆட்சித் தலைவரே முறைகேடான செயல்களுக்கு துணை நின்றால், அவரால் எப்படி ஒரு நேர்மையான நிர்வாகத்தை நடத்த முடியும் "கலெக்டர்கள் தாங்கள் பதவிக்கு வந்து சில ஆண்டுகளிலேயே சொத்துகளைக் குவித்துவிடுகிறார்கள். வருவாய்க்கு மேல் டாம்பீகமாகச் செலவு செய்கிறார்கள். நாட்டைச் சுரண்டும் கலெக்டர் (அன்றைக்கு அமைச்சர்கள் கிடையாது; கலெக்டர்கள்தான் ஆட்சியாளர்கள்) நாடு  எப்படி முன்னேறும்?

 மூதறிஞர் ராஜாஜி பதவிஏற்கும் முன் தன்னை சந்திக்கவரும் இளம்

அதிகாரிகளுக்கு  நிர்வாகத்தில் மன்றோவின் அணுகுமுறை பற்றி படிக்க

 சொல்லுவாராம்.

பொதுவாழ்வில் தூய்மைக்கும்  நிர்வாகத்தில் நேர்மைக்கும்   குரல் கொடுத்த

முதல் மனிதன்  இவர் என அறியும்போது மக்கள் வரிப் பணத்தில் இல்லாமல்

 நன்கொடைகள் மூலம் எழுப்பபட்ட இந்த சிலை இன்னும்  கம்பீரமாக

தெரிகிறது.



8/11/13

இந்த ஆண்டு கல்கி திபாவளி மலர் எனது 3 கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறது. இது அதில் ஒன்று. 














தமிழால் பெருமை பெற்ற ஜப்பானியர்.

 ஆதித்யா

இந்திய அரசின் உயர்ந்த கெளரவமான பத்ம விருதுகள் குடியரசு தலைவரால்  டில்லி ராஷ்டிரபதி பவனத்தில் மட்டுமே வழங்கப்படும். இது ஒரு சில வெளி நாட்டவருக்கும் வழங்கபட்டிருக்கிறது.   இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது அறிவிக்கபட்ட ஜப்பானியர் ஒருவர்   உடல் நல குறைவினால் விருதுவழங்கும் விழாவில் பங்கேற்க இயலவில்லை.  நம் பிரதமர் மன்மோகன் சிங்  தனது ஜப்பான் பயணத்தின் போது  இந்திய குடியரசு தலைவர் சார்பாக .பத்ம ஸ்ரீ விருதை அவருக்கு வழங்கினார். அவர் திரு. நொபொரு கராஷிமா  (Noboru Karashima). நாட்டின் பிரதமர், குடியரசு தலைவர் சார்பாக வெளிநாட்டில் நேரில் ஒருவருக்கு விருது வழங்குவது இதுதான் முதல் முறை. இத்தகைய விசேஷ கெளரவத்தை பெற்ற  திரு நொபொரு கராஷிமா  ஒரு ஜப்பானிய வரலாற்றாசிரியர்.  எழுத்தாளரும் கூட. தமிழ் நாட்டுக்கு வந்து சென்னை பல்கலைகழகத்தில் தமிழும், கல்வெட்டு ஆராய்சிகலையையும் பயின்று பட்டம் பெற்றவர்.  இலக்கண சுத்தமாக தமிழ் எழுத,படிக்க பேச தெரிந்தவர்.  தென் இந்திய சரித்திரத்தை ஆராய்ந்து பல புத்தகங்களும் கட்டுரைகளும் எழுதியிருப்பவர். தெனிந்திய கல்வெட்டுகளின் ஆராய்ச்சிகளில் வல்லுனராக மதிக்கபடுபவர்.  1964ல் டோக்கியோ பல்கலை கழகத்தில் சேர்ந்த இவர் 1974ல் அதன் தெற்காசிய வரலாற்று துறையின் தலவராக 20 ஆண்டுகள் பணியாற்றியவர்.  இன்றும் டோக்கியோ பல்கலை கழகத்தில் கெளரவ சிறப்பு பேராசரியராக தன் ஆராய்ச்சிபணிகளை தொடர்ந்து கொண்டிருக்கும் இவருக்கு வயது 80. நொபொருகராஷிமா சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கத்தின்(IATR) முன்னாள் தலைவர்,1985ல் தஞ்சாவூரில் 8 வது உலக தமிழ் மாநாட்டை தலைமையேற்று நடத்தியவர். இவரது கல்வி சேவைக்காகவும் தமிழ் பணிக்காவும் பத்மஸ்ரீ வழங்கபட்டிருக்கிறது. அவருடன் உரையாடியபோது..  
பத்மஸ்ரீ  விருது பெற்றதற்காக கல்கியின் வாழ்த்துக்கள். விருதைப் பெற்றபோது  எப்படி உணர்ந்தீர்கள் ?
மிகமிக மகழ்ச்சியடைந்தேன். உடல்நிலை ஒத்துழைக்காததால் டெல்லி போகமுடியவில்லை என்ற வருத்தம் இருந்தது. அதை பாரத பிரதமர் கையால் என் நாட்டிலேயே பெற்றதை மிகப்பெரிய கெளவரமாக, நான் பெற்ற விருதுகளிலேயே  இதை மிக அறிதானதாக  கருதுகிறேன்.  இது தமிழ் மொழியினால் எனக்கு கிடைத்த பெருமை. இந்திய அரசுக்கும், பிரதமருக்கும் நன்றியை  பதிவு செய்ய விரும்புகிறேன்.

சர்வதேச தமிழ் ஆராய்ச்சி கழகத்தின்   துவக்க காலத்திலிருந்தே  உலக தமிழ் மாநாடுகளில் பங்கேற்று  தமிழுக்காக நல்ல பணிகளை செய்துவந்த நீங்கள் ஏன்  கோவையில் 2010ல் நடைபெற்ற செம்மொழி மாநாட்டை புறக்கணித்தீர்கள் ?
புறகணிப்பு என சொல்லப்படுவதை நான் விரும்பவில்லை. உலக தமிழ் மாநாடுகள்  சரியாக திட்டமிடபட்டு ஆராயச்சியாளார்கள் கட்டுரைகள் தயாரிக்க  ஒராண்டாவது கால அவகாசம் அளிக்க பட்டபின்னரே நடத்தபடவேண்டும் என்பது  சர்வதேச தமிழ் ஆராய்ச்சி கழகத்தின் கொள்கை. கோவையில் நடந்த  மாநாடு  மிக அவசரமாக  திட்டமிடபட்டு ஒரு அரசியல் நிகழ்ச்சியாக நடத்தபட்டதில் எனக்கு உடன்பாடில்லை.  அதிக அவகாசம் தர இயலாதற்கு  தேர்தல் ஒரு காரணமாக சொல்லபட்டது. ஒரு சர்வதேச ஆராய்ச்சி நிருவனம் இதெற்கெல்லாம் அப்பாற்பட்டிருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்.  இது பற்றி மிக விளக்கமாக அந்த கால்கட்டத்திலேயே இந்து நாளிதழுக்கு ஒரு பேட்டி அளித்து விளக்கியிருக்கிறேன்.. சர்வதேச தமிழ் ஆராய்ச்சி கழகத்தின்  நிர்வாக குழு உறுப்பினர்களிடையே இது குறித்து கருத்து ஒற்றுமை இல்லாதாதால் நான் தலைவர் பதவியிலிருந்து விலகிவிட்டேன்.  ஆராய்ச்சிகழகத்தின் முக்கிய குறிக்கோளான தமிழ் மொழிக்கு சர்வதேச அந்தஸ்த்து அளிக்கபடவேண்டும்  என்பது   நன்கு  உணரப்பட்ட நிலை  இன்று ஏற்பட்டிருப்பதில் எனக்கு மகிழ்ச்சியே.  இப்போது சர்வ தேச தமிழ் ஆராய்ச்சி கழகம் புதிய தலவர்களின் தலைமையில் புதிய அவதாரம் எடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறது.

இன்றைய இளம் தலைமுறையினர், உங்களைபோல ஒரு மொழியின், அதன் சமூக சார்ந்த சரித்திரத்தை ஆராய்ச்சி செய்வதில் நாட்டம் கொள்கிறார்களா?

 ஆர்வம் குறைந்து வருவது உண்மையாக இருக்கலாம் ஆனால் அறேவே இல்லை என்று சொல்லிவிடமுடியாது. நல்ல ஆசிரியர்களின் பல்கலைகழகங்களின் அரசின் ஆதரவு இல்லாமல் இதைச் செய்யமுடியாது. 1961ல் நான் மெட்ராஸ் யூனிவர்ஸிட்டியில் தொல்லியல் மாணவனாக சேர்ந்த போது நீலகண்ட சாஸ்த்திரி, வெங்கட்டரமணய்யா போன்ற மேதைகள் தங்கள் ஆராய்ச்சிகளையும் தொடர்ந்துகொண்டு எங்களுக்கும் கற்பித்தார்கள். இன்று அத்தகையவர்கள் இல்லை. பல்கலைகழகங்களும் இதை இன்னும் ஒரு  ”பாடமாக” தான் மதிக்க துவங்கிவிட்டார்கள். ஆராய்ச்சியாளர்களை அரசாங்கள் கெளரவித்தால் சமூகத்தில் அவர்களின் மதிப்பு உயரும்.

இப்போது மொழி வளர்ச்சிக்காக பல ஆராய்ச்சி நிறுவனங்கள், தனிபல்கலைகழங்கள் அரசின் உதவியுடன் துவங்க பட்டிருக்கின்றனவே. ?
இருக்கலாம். ஆனால் அவைகளின் விசித்திரமான நிலை எனக்கு ஆச்சரியமளிக்கிறது. பணம் ஒதுக்கி ஒரு ஆராய்ச்சி நிறுவனத்தை உருவாக்கி அதற்கு ஒரு ஐ ஏ ஸ் அதிகாரி நியமிக்க படுகிறார், இந்திய தொல் பொருள் துறையின் தலைவராக நியமிக்க படுபவர்களுக்கு கல்வெட்டுக்களின் மொழியை  படிக்க தெரியாது. அதேபோல் மாநில தொல்பொருள் ஆராய்சி நிறுவனங்களிலும்  தலமை நிர்வாகிகள் அதுபற்றி அறியாமல் இருப்பது துரதிர்ஷ்டமே. கல்வெட்டு எழுத்துகளை ஆராய்ந்து நகல் எடுக்கப்பட்டு அச்சிடப்பட்டிருக்கும்  குறிப்புகளிலிருந்துதான் இன்று பலர் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இது வருத்த்ததிற்குரிய விஷயம். சமீபத்தில் தமிழ் பலகலை கழகம் தொல்பொருள் துறையினருடன் இணைந்து கல்வெட்டுகளின் டிஜிட்டல் பதிவுகளை மைசூர் ”மொழியில் கழகத்தில்” சேமிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த நல்ல பணி எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. வெற்றிகரமாக  தொடர வேண்டும்.

வரும் தலைமுறையில் தமிழ் மொழி படிப்பவர்களும்,எழுதுபவர்களும் குறைந்துவருவதால்   மொழியே அழிந்துவிடும் என்ற அபாயம் இருப்பதாக ஒரு கருத்து நிலவுகிறதே?
அரசாங்களின் அணுகு முறையினால், கல்விமுறைகளினால் தாய்மொழியின் பயன்பாடு குறைந்து வருவது உலகின் பல பழைய மொழிகள் சந்திக்கும் ஒரு பிரச்சினை. ஆசிரியர்களும் குறிப்பாக பெற்றோர்களும் அவசியம் கவனம் செலுத்த வேண்டிய ஒரு விஷயம் இது. ஆனால் பல ஆயிரம் ஆண்டுகள் பயன்பாட்டிலிருக்கும் ஒரு மொழி அழிந்து போய்விடும் என்பதை ஏற்பதிற்கில்லை.  ஒரு நாட்டின் பாரம்பரியங்களும் கலாசாரங்களும் பல தலமுறைகளாக தொடர்வது போல மொழியும் தொடர்ந்து வளர்ந்து செழிக்கும், அதுவும் நிச்சியமாக தமிழ் மொழி நீடித்து நிலைத்து நிற்கும் என நான் நமபுகிறேன்.
நேரம் ஒதுக்கியதற்கு நன்றி
நன்றி  விழா நாள் வாழ்த்துகள்