சமுக பிரச்சனைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமுக பிரச்சனைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

3/9/16

இரும்பு பட்டாம்பூச்சி

இந்த மாத மங்கையர் மலரில் எழுதியிருப்பது  


 இரும்பு பட்டாம்பூச்சி 
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில், முதல்வர் திரு இபோபி சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. வடகிழக்கு மாநிலங்களில், சீனாவின் தூண்டுதலுடன், அவ்வப்போது, போராட்டங்கள் வெடித்து வந்ததால், பாதுகாப்பு பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இதற்காக, ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் அமல்படுத்தப்பட்டது. மணிப்பூர் உள்ளிட்ட 7 வடகிழக்கு மாநிலங்களில் அண்டை நாட்டவரின் ஊடுருவலைத் தடுக்கும் வகையில் அங்கு 1958-ஆம் ஆண்டு ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. இதனால் இந்த மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் முழுக்க முழுக்க பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டனர்.இந்தச் சட்டத்தின் மூலம் சந்தேகிக்கப்படும் நபரின் வீட்டுக்குள் நீதிமன்ற அனுமதி இல்லாமல் பாதுகாப்பு படையினர் சோதனையில் ஈடுபட முடியும். மேலும் சந்தேகப்படும் நபர்களை யும் கைது செய்ய முடியும். அவர்கள் நீதிமன்றத்துக்குச் செல்ல முடியாது. 
பாதுகாப்புப் படையினருக்கு கூடுதல் அதிகாரங்களை இச்சட்டம் வழங்குவதால் மனித உரிமைகள் அதிக அளவில் மீறப்படுவதாக அவ்வப்போது குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், கடந்த 2000-ஆம் ஆண்டு மணிப்பூரில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த 10 பேரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர். ஆனால், இதுதொடர்பாக பாதுகாப்புப்படையினர் முறையாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
இந்தச் சம்பவமே சமூக ஆர்வலரான இரோம் ஷர்மிளாவை போராட்டத்தில் இறங்கத் தூண்டியது. இதன் தொடர்ச்சியாக, மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி இரோம் ஷர்மிளா உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். ஆனால், அவரது கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்காததால் தனது காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என இரோம்ஷர்மிளா அறிவித்தார்.மணிப்பூர் மாநில உரிமைகளை மீட்கக் கோரி பொதுமக்களுடன் இணைந்து பல்வேறுகட்ட போராட்டங்களில் அவர் ஈடுபட்டார்.
இந்த ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை எதிர்த்து, 16 ஆண்டுக்காலம், இரோம் ஷர்மிளா உண்ணாவிரதம் இருந்தார். உணவு, தண்ணீர் குடிக்க மறுத்து வரும் அவரை, தற்கொலைக்கு முயன்றதாக அரசு கைது செய்தது. 2006ம் ஆண்டு, டில்லியில் உண்ணாவிரதம் இருந்தபோது, அவர் கைது செய்யப்பட்டார்; பின், விடுவிக்கப்பட்டார். எனினும், மணிப்பூர் திரும்பிய அவர், மீண்டும் கைதானார். உணவருந்தாததால் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் மீது தற்கொலைமுயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. எனினும், தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்த ஷர்மிளா, உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடவில்லை. 
 இம்பாலில் உள்ள, ஜவகர்லால் நேரு மருத்துவமனையில், வலுக்கட்டாயமாக அவருக்கு மூச்சு குழாய் வழியாக உணவு செலுத்தப்பட்டுவந்தது. . தொடர்ந்து, 16 ஆண்டுகளாகப் போராடி வரும்  இரும்பு பெண் என  வர்ணிக்கப்பட்ட அவர்  சிலவாரங்களுக்கு முன் இம்பால் நீதிமன்றத்தில் ஆஜரானபோது  “:ஆயுதப் படை சிறப்பு அதிகார சட்டத்தை, உண்ணாவிரதத்தால் மட்டுமே, முடிவுக்குக் கொண்டு வந்து விட முடியாது. எனவே, ஆகஸ்ட் 9ம் தேதியுடன், உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்கிறேன் என நீதிபதியிடம் தெரிவித்தார்.  
.உண்ணாவிரதப் போராட்டம் இருந்த வரை அவருக்கு இருந்த ஆதரவு அத்தனையும் அவரது அறிவிப்பு வந்தது  முதல் எதிர்ப்பாகிப் போனது. அவர் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுவதற்கு  மணிப்பூர் தனிநாடு கோரும் தீவிரவாத அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இரோம் உண்ணாவிரதத்தைக் கைவிடுவதாக அறிவித்த அதே நேரத்திலேயே அவருக்கு எதிரான போராட்டங்களும் வெடித்தன. 
தன்னுடைய  உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினார் இரோம் ஷர்மிளா. ஆனால் தாய், சகோதரர்கள் உட்பட உறவினர்கள் யாரும் அவரை வீட்டில் தங்க அனுமதிக்கவில்லை. இதற்குத் தீவிரவாதிகள் வந்து தாக்குதல் நடத்துவார்களோ என்ற அச்சமும் காரணமாக இருக்கலாம்.  இரோம் ஷர்மிளா சென்ற இடமெங்கும் எதிர்ப்பு போராட்டங்கள்தான் நடந்தன... பின்னர் காவல்துறை அவரை மருத்துவர் தியாம் சுரேஷ் என்பவர் வீட்டுக்கு அழைத்துச் செல்ல முயன்றனர். ஆனால் அங்கும் போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் வேறுவழியின்றி இரோம் ஷர்மிளா காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் ஒருவழியாக அவர் இதுவரை சிறைவாசம் அனுபவித்த 'மருத்துவமனை'யில் தங்க வைப்பது என  முடிவு செய்யப்பட்டது. இதனால் மீண்டும் மருத்துவமனைக்கே அவர் திரும்ப நேரிட்டதுதான் சோகம்!
மறுநாள்  பத்திரிகையாளர் கூட்டத்தில் “எனது உண்ணாவிரதத்தால் மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் ரத்து செய்யப்படும் என்ற நம்பிக்கை பொய்த்துவிட்டது. எனவே அரசியலில் இணைந்து அதன்மூலமாக எனது போராட்டத்தை தொடருவேன். வரும் 2017 சட்டப்பேரவைத் தேர்தலில் குரால் தொகுதியில் இருந்து சுயேச்சையாக போட்டியிடுவேன். இதில் வெற்றி பெற்று முதல்வரானால் அமலில் உள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை நிச்சயம் ரத்து செய்வேன்’’ என்று இரோம் ஷர்மிளா அறிவித்திருக்கிறார்..
எந்த  ஒரு அரசியல்கட்சியின் பின்னணியும் இல்லாமல் ஒரு மிக நீண்ட போரட்டத்தை நடத்திய இந்த இரும்பு பெண் அரசியலுக்கு வரப் போவதை நமது  அரசியல் வாதிகள் எப்படிப் பார்க்கிறார்கள்?



 திருமதி ஜோதிமணி (தேசிய காங்கிரஸ்)
நான் பெரிதும் மதிக்கும் ஓர் ஆளுமை இரோம் ஷர்மிளா. வன்முறைகள் அதிகரித்துக்கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்திலும் தன்னுடைய கோரிக்கையை வலியுறுத்தி அண்ணல் காட்டிய சத்தியாகிரஹ வழியில் 16 ஆண்டுகள் உண்ணாவிரதமிருந்து போராடியவர். தனது இளமையையே பலி கொடுத்த அவரது தியாகம் போற்றுதலுக்குரியது. அவர் அரசியலுக்கு வருவது என்பதை என் போன்ற பெண் அரசியல்வாதிகள் பெருமையாகப் பார்க்கும் விஷயம். அவருடைய சமூகப் பார்வையும் போராட்ட குணமும், துணிவும் அரசியலில் ஈடுபடுவோருக்கான தகுதிகள்

ஆனால் அவர் இந்த முடிவை அறிவித்தவுடன் அங்குள்ள போராளிகள் வரவேற்காமல் எதிர்ப்பு தெரிவித்திருப்பது எனக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் தந்த விஷயம். இது இம்மாதிரி போராட்டங்களை மேற்கொள்பவர்களின் மன உறுதியை குலையச் செய்யும் கவலையளிக்கும் விஷயம். தன் குறிக்கோளை நோக்கிச் செல்ல அவர் வேறுபாதையைத் தேர்ந்தெடுக்க முயலுவதைத் தவறு என்று சொல்லுவது எந்தவகையிலும் நியாயமாகாது. அதேபோல் அவர் தன் திருமணம் பற்றி அறிவித்திருப்பதும் எதிர்மறையாக விமர்சிக்கப்பட்டிருப்பது மிகவும் துரதிரஷட்டமானது. திருமணம் செய்தபெண் அரசியலுக்கு வரக் கூடாது என்று .பேசப்படுவது பெரும் துயரமான அதிர்ச்சி
வடகிழக்கு மாநிலங்களின் எங்கள் கட்சி பொறுப்பாளராக நான் இருந்திருக்கிறேன். அதனால் அங்குள்ள பிரச்சனைகளின் முழுத்தீவீரமும் அறிந்திருக்கிறேன். சுயேட்சையாக வெற்றி பெற்று முதல்வராக முடிந்தால் கூட அவரால் மட்டும் இந்தச் சட்டத்தை நீக்கிவிட முடியாது. அது முழுக்க முழுக்க மத்திய அரசின் கையில் இருக்கிறது. இப்போது மணிப்பூரில் இருக்கும் காங்கிரஸ் அரசும் இந்தச் சட்டத்தை நீடிக்க விரும்பவில்லை. ஆனால் நாட்டின் பாதுகாப்பை கருதி எல்லைப்பகுதியில் இப்படியொரு சட்டதேவையை ராணுவ அமைச்சகமும் உள்துறை அமைச்சகமும் உணர்ந்ததனால் அங்கு இது இருப்பதைத் தவிர்க்க முடியவில்லை. ஆனால் அது அத்துமீறி மக்களுக்கும் குறிப்பாகப் பெண்களும் பெருமளவில் பாதிக்கப்படும்போது அதுகுறித்து பெரிய அளவில் விவாதம் செய்யப்படவேண்டிய விஷயம் என்பதை ஏற்கிறேன்
--------
திரு அருணன். (இந்திய மார்க்ஸிஸ்ட் கட்சி)


   16 ஆண்டுகள் இப்படி உலகில் யாருமே செய்யத்துணியாத ஒரு உண்ணாநிலையை நிகழ்த்தித் தன் நோக்கத்தை உலகமறியச் செய்த இந்தப் பெண்மணியின் மகத்தான தியாகத்தை ஒரு அரசியல் வாதி என்ற முறையில் நான்  போற்றி பாராட்டுகிறேன். 28 வயதில் துவங்கி 44 வயது வரை இப்படித் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தவரை உலகம் இதுவரை சந்தித்தில்லை என் கார்டியன் பத்திரிகை எழுதியிருக்கிறது. இவர் செய்துவந்தது ஒரு தியாக வேள்வி. அதன் மூலம் தன் இலக்கை அடைவதில் வெற்றிபெற முடியவில்லை என்ற நிதர்சனத்தை உணர்ந்து தானே அதைக் கைவிடவும், ஆனாலும் தொடர்ந்து தன் லட்சியத்துக்காக வேறு வழியில் போராட துணிந்திருப்பது மிகவும் பாராட்டத்தக்கது.

7 சகோதரிகள் என்றழைக்கப்படும் இந்த மலைப்பகுதிகளில் அமுலாக்கியிருக்கும் வலிமைவாய்ந்த இந்தச் சட்டத்தின் மூலம் அந்தப் பகுதி மக்களுக்கு இந்திய ராணுவம் அளித்த வலி, வேதனை இந்த நாட்டில் பலருக்குத்தெரியாது. அன்னிய ஊடூஉருவலையும், தீவிரவாதிகளையும் தடுக்க உதவும் இந்த சட்டத்தைத் துஷ்பிரோயகம் செய்து அங்குள்ள மக்கள் குறிப்பாகப் பெண்கள் பாலியில் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்கள். இதைக்கண்டு கொதித்தெழுந்த இரோம் ஷர்மிளா   தன் போராட்டத்தைத் துவங்கினார். ஒரு கட்டத்தில் மக்கள் ஆதரவு திரண்டு பெண்கள் நிர்வாணமாக நின்று சாலைமறியல் செய்தார்கள். எந்த அளவு அவர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் இதைச் செய்திருப்பார்கள்?. அவர்களின் இந்த நிலையை, ராணுவத்தின் அத்துமீறலை நாட்டுமக்களின், உலகின் கவனத்துக்கு கொண்டுவந்தது இவரின் போராட்டம் தான். இன்று அவர்  உண்ணாவிரதத்தைக் கைவிட்டதை அங்குள்ள சிலர் எதிர்ப்பதாகச் செய்திகள் வருகின்றன. இது எந்தவகையிலும் நியாமில்லை. கொள்கைக்காக 16 ஆண்டுகள் போராடிய ஒரு போராளியை யாரும் வாழ்நாள் முழுவதும் தொடரும் படி நிர்ப்பந்திக்க முடியாது. அது தவறு.

இரோம் ஷர்மிளா  அரசியலில் களம் இறங்குவேன் என்ற அறிவிப்பு வரவேற்கப்படவேண்டிய ஒன்று. இம்மாதிரி தீவிர கொள்கைப்பிடிப்பு இருப்பவர்கள் இந்திய அரசியலுக்கு வரவேண்டியது இன்றைய சூழலுக்கு மிக அவசியம். ஆனால் சுயேட்சையாக நின்று முதல்வராகி சட்டத்தை நீக்குவேன் என்பதுதான்  சற்று புதிராக இருக்கிறது. மணிப்பூர் 60 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே கொண்ட சிறிய மாநிலம். அதில் 31 பேர் சுயேட்சை வேட்பாளராக வெற்றி பெற்றால் தான் இது முடியும். மிகச்சவாலான இது இன்றைய பெரும்பான்மை கட்சி ஜனநாயகத்தில் இந்தக் கனவு சாத்தியப்படும் என்று தோன்றவில்லை. சிலநாட்கள் முன் அவர் ஒரு புதிய கட்சி துவக்கி களம் காணுவார் என்ற செய்திகள் வந்தனஒருக்கால் அப்படி நிகழ்ந்தால் இவரது கனவு நனவாகும் வாய்ப்புகள் அதிகம்
-------
திருமதி வாசுகி ( தலைவி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்)


இதுநாள்  வரை ஒரே ஒரு கோரிக்கையை முன்வைத்து  தனிநபர்  சத்தியாகிரஹ போராட்டத்திற்குக் கிடைத்த மக்கள் ஆதரவை  உணர்ந்த அவர் தன் போராட்டவடிவை மாற்றி   அரசியல் தளத்திற்கு வர முடிவுசெய்திருப்பது  மிகவும்  வரவேற்கத்தக்க விஷயம்.
சுயேட்சை வேட்பாளராக  மக்கள் ஆதரவுடன் தேர்தலில் அவர் பெரிய வெற்றி பெறலாம். ஜெயிக்கும்கட்சி  அல்லது அணி அவரை அமைச்சராகக் கூட அறிவிக்கலாம். ஆனால் அவருடைய இலக்கை அடைய  அரசியலில் அவர் எடுக்கப்போகும் நிலைப்பாடு மிக முக்கியம். அவர் இத்தனை நாள் போராடிய. விஷயத்தை ஆதரிக்காத கட்சிகளுடன் இணைந்தாலோ அல்லது சுயேட்சையாக இருந்து அவர்களின் ஆதரவைப்பெற்றாலோ  இதுநாள் வரை அவர் போராடியது அர்த்தமில்லாமல் போய்விடும்,

மணிப்பூரைப் போன்ற சுழலில் இருக்கும் திரிபுராவிலும் இந்தச் சட்டம் இருக்கிறது. அங்கு இருக்கும் இடதுமுன்னணி கூட்டணி ஆட்சி அதை அவசியமான எல்லைப்பகுதிகளில் மட்டும் தேவையான அளவில் செயல்படுத்துகிறது. அதைப்போல ஒரு நிலை மணிப்பூரில் ஏற்பட இடது சாரிகளுடன் இணைந்து தோள்கொடுப்பதுதான் அவர் எடுக்க வேண்டிய அரசியல் நிலைப்பாடு என் நான் நினைக்கிறேன். இது பலவகையில் பலன் தரக்கூடிய முடிவாக இருக்கும் .
  மங்கையர் மலர்  அக் 16






30/8/16

அமெரிக்காவிலிருந்து குஜராத்திற்கு படம் எடுக்க வந்த மைதிலி




அமெரிக்காவிலிருந்து  குஜராத்திற்கு  படம் எடுக்க வந்த மைதிலி


2010ஆம் ஆண்டு தெஹல்கா இதழில் பணியாற்றிய பத்திரிகையாளரான ரானா அயூப் ஒரு துணிச்சலான பத்திரிகைபுலானய்வு பணியை தன் உயிரைப் பயணம் வைத்து மேற்கொண்டபெண்மணி.  2002 ஆம் ஆண்டு நடந்த குஜராத் படுகொலைகள், பின்னர் அதைத்தொடர்ந்து நடைபெற்ற போலி என்கவுண்டர்கள் குறித்து  அந்தக் காலகட்டத்தில்(2001-2010)  குஜராத் மாநிலத்தில் காவல்துறை மற்றும் உள்துறை அதிகாரிகளாகப் பணியாற்றியவர்கள் மனம் திறந்து பேசியதை ஒரு ஸ்டிங் ஆப்ரேஷன் மூலமாக ரகசியமாகப் பதிவு செய்தவர்.ஒரு சமூக படுகொலை நடைபெற அரசு இயதிரம் பயன்படுத்தப்பட்டதையும், முக்கிய அதிகாரிகள் அதற்கு மௌன சாட்சியாகவும் இருந்தை அவர்கள் வாக்குமூலமாகவே வெளிக்கொண்டுவந்திருப்பவர்.இவரது புலனாய்வு கட்டுரைகள் அம்பலப் படுத்திய தகவல்களினால்தான் 2010ஆம் ஆண்டு அமித்ஷா சிறைக்குச் சென்றார். தொடர்ந்து அவர் செய்த பணியில் தொகுத்த தகவல்களை  அரசியல் காரணங்களால் அவரது தெல்ஹா நிறுவனம் அவரது பதிவுகளை புத்தகமாக்க மறுத்துவிட்ட நிலையில் குஜராத் கோப்புகள்-(GUJARAT FILES)  என்ற பெயரில் தானே சொந்தமாக புத்தகமாகப் பதிப்பித்துள்ளார். நூல் தமிழில் மொழிபெயர்க்கப் பட்டு வெளியாகியிருக்கிறது. சமீபத்தில் அதன் வெளியீட்டு விழாவிற்காகச் சென்னை வந்திருந்தார். திருமதி ரான அயூப்
புத்தகத்திற்கு வரவேற்பு எப்படி இருக்கிறது.?
 5 லட்சம் வங்கியில் என்பெயரில்  கடன் வாங்கிப் பதிப்பித்த புத்தகத்தின் அறிமுக விழாவிற்கு டெல்லியில்  பல பத்திரிகைகள் உள்பட 400 பேர் வந்திருந்தனர். ஆனால் மறுநாள் தினசரிகளில் ஒருவரி செய்திகூட இல்லை. இப்போது சமூக வலைத்தளங்களில் புத்தகம் அதிகம்  பேசப்படுவதால் மெல்லச் சூடுபிடிக்கிறது. தமிழ் மொழிபெயர்ப்புக்குப் பலர் முன்பதிவு செய்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது.


எப்படி இந்த ஆப்ரேஷனைச் செய்தீர்கள்?
2002ல் மிகவும் கொடூரமான முறையில் நடைபெற்ற அரசியல் படுகொலைகள் காரணமாக ரத்த ஆறு ஓடிய சமயத்தில் பணியிலிருந்த பல நேர்மையான அதிகாரிகள் இந்த அக்கிரமங்களிலிருந்து ஒதுங்கியிருந்தது எனக்குத் தெரியும். தெல்ஹாவின் பத்திரிகையாளரான எனக்கு அவர்கள் ஏதேனும் ஒரு விதத்தில் உதவ முடியும் என்று அவர்கள் வீட்டு கதவைதட்டியபோதெல்லாம் அவை மூடப்பட்டன. உண்மையைக் கண்டறிய பத்திரிகையாளர் கடைப்பிடிக்கும் கடைசி வழி மாறுவேடம் அணிவது. நான் ஒரு பெண்,அதுவும் ஒரு  முஸ்லீம் பெண் என்பது நான் செய்யப் போகும் பணிக்கு  உதவாது என்பதால் ரானா அய்யுப் கான்பூரில் இருந்து வந்த மைதிலி தியாகி என்ற ஒரு காய்ஸ்தா(இந்துபிராமண) பெண்ணாக மாறவேண்டியிருந்தது. மேலும் நான் அமெரிக்கத் திரைப்பபடகல்லூரி ஒன்றின் மாணவி என்றும், குஜராத்தின் வளர்ச்சி மாடல் குறித்தும். உலகம் முழுவதும் வசிக்கும் இந்தியர்கள் மத்தியில் வளர்ந்துவரும் நரேந்திரமோடியின் செல்வாக்கு குறித்தும் ஒரு திரைப்படம் தயாரிப்பதற்காக வந்திருப்பதாகவும் சொல்லி பலரைச் சந்தித்தேன்.  என் உடை, பாவனை மொழி எல்லாவற்றையும் மாற்றிக்கொள்ள வேண்டியிருந்தது. குர்த்தாபட்டனில் பொருத்திய ரகசிய கேமிரா  கையில் அதை இயக்கும் வாட்ச், டைரியின் அட்டையில் இன்னொரு கேமிரா  எனப் பல ரகசிய ஏற்பாடுகளுடன் செய்ய வேண்டியிருந்தது..நம்பகத்தனமை அதிகரிக்க நிஜமாகவே மைக் என்ற ஒரு பிரெஞ்ச் மாணவனை உதவியாளானாகச் சேர்த்துக்கொண்டு எல்லா இடங்களுக்கும் போனேன்
பல முன்னாள் போலீஸ்  சீனியர் அதிகாரிகளை, உளவுத்துறை அதிகாரிகளைக்கூடச் சந்தித்து  சந்தித்திருக்கிறீர்கள். அவர்களுக்குச் சந்தேகம் வரவில்லியா?
நான்முதல் சந்திப்பிலேயே எல்லாம் பேசுவதில்லை. என்மீது நம்பிக்கை வந்து அவர்கள் என் படத்திற்கு உதவ முன்வரும்போதுதான் தொடரும் சந்திப்புகளில் தேவையான கேள்விகளை எழுப்புவேன். சிலமுறை மயிரிழையில் தெய்வாதீனமாக மாட்டாமல் தப்பியிருக்கிறேன். சந்தேகமும் வந்திருக்கிறது. நான் தங்கியிருந்த அறை நான் இல்லாதபோது ஒரு சோதனையிடப்பட்டிருந்தது.. ஆனால்  பாதுகாப்புடன் என் லேப்டாப்பிலிருந்து எல்லாவற்றிலும் நான் ஒரு   இந்து, அமெரிக்க பல்கலைக்கழக மாணவியின் அடையாளங்கள் மட்டுமே அறையிலிருக்கும்படி பார்த்துக்கொண்டிருந்தேன்

 இப்படி துணிச்சலான வேலைகளைசெய்தது உங்கள் குடும்பத்துக்கு தெரியுமா?
நன்றாக. முந்திய மணிப்பூர் பணியினால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த என்னிடம்  என் அம்மா தான் செர்ராபுதின்  கொலைச் செய்தியைக் காண்பித்து இதைப்பற்றி எழுதேன் என்று சொன்னார். நான் இந்தப் பணியிலிருந்தபோது மனம் தளரும்போதெல்லாம் அம்மாவிடம் போனில்பேசுவேன். அண்ணன். அப்பா எல்லோருக்கும் தெரியும்.
 இந்த ஆப்ரேஷனில் மோடியைச் சந்தித்திருக்கிறீர்களா?
ஆம் ஒரு முறை.  அவர் முதல்வராக இருந்தபோது கேமிரா, மைக் சகிதம் அவர் இல்லத்தில் சந்தித்திருக்கிறேன்..மெட்டல் டிடக்கரில் மாட்டிக்கொண்டால் அடுத்த நிமிடம் கைது என்ற பயத்துடன் தான் சென்றேன். ஒபாமா பற்றி நிறையப் பேசினார்.  மேஜையில் அவர் புத்தகங்கள்
என படத்துக்கு உதவ  அவர் பயணப் படங்கள் ஆடியோ டேப்கள் கொடுக்க அவர் உதவியாளர்களிடம் சொன்னார். கலவரம், படுகொலைகள் பற்றி அடுத்தடுத்த சந்திப்பில் பேச திட்டமிட்டிருந்தேன். அதற்குள் வேறு பல மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன.
உங்கள் புத்தகத்தில் சம்பந்தப்பட்டவர்களின் பெயர்கள்,  வகித்தபதவிகள் விபரங்களுடன் உரையாடல்களை வெளியிட்டிருக்கிறீர்கள். புத்தகம் வெளிவந்து  பார்த்தபின் யாராவது பேசினார்களா?
இதுவரை இல்லை, இனி நிகழலாம். உண்மைதகவல்தானே எனக் கண்டுகொள்ளாமலும் இருக்கலாம். ஆனால் இதுவரை இதில் பேசயிருப்பவர்கள் எவரும் சொன்னதை மறுக்கவில்லை.


 இந்தஆப்ரேஷனின் திருப்புமுனை என எதைச் சொல்வீர்கள்?
  பாதுகாப்பற்ற நீண்ட பயணத்தின் முடிவில்-  அனைத்தும் வெளிப்படும் நிலையில், முதல்வர் மோடி மீண்டும் அழைப்பார் என்ற நிலையில், என் டெல்லி அலுவலகம் என்னைத் திரும்ப அழைத்தது.  தலைமை ஆசிரியர்கள் “ மோடி பிரதமராகப் போகிறார். மிக வலுவான பிரதமராக இருப்பார்.  அவர் மீது கைவைத்தால் நாம் அனைவரும் தீர்த்துக் கட்டப்பட்டுவிடுவோம். பங்காரு லஷ்மணன் விஷயத்தில் நம் அலுவலகத்தை மூட வைத்தவர்கள் அவர்கள்.”  அதனால்  புலனாய்வை பிரசுரிக்க வேண்டாம் என முடிவெடுத்திருக்கிறோம் என்றனர்..
அதிகாரத்திலிருப்பவர்கள்  பேச்சைக்கேட்டு என் கடின உழைப்பில் பிறந்த  உண்மைக் கதை வெளிவராமலே கொல்லப்படும்போது என்னால் தாங்கிக் கொள்ள முடியவே இல்லை.
ஒரு நல்ல  புலனாய்வு இதழியலாளர் தான் உருவாக்கிடும் கதைகளிலிருந்து தன்னைக் கத்தரித்துக் கொண்டு நடைமுறையில் இயல்பாக இருக்கவேண்டும் என ஆசிரியர் சொன்னார். என்னால் அப்படியிருக்க முடியவில்லை.
இன்று அமித்ஷா. மோடி போன்றவர்கள் அதிகாரத்தில் இருக்கும் சமயத்தில் இந்தப் புத்தகத்தை வெளியிட்டிருக்கிறீர்கள். . உங்களுக்கு  அச்சமாக இல்லையா?
உண்மைச்சொன்னதற்காக சில சமயம் பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும். இன்று தேசத்துரோகம் என  எதையும் சொல்லிவிடலாம் என்ற நிலை எழுந்திருக்கிறது. . அந்த சட்டத்தின் கீழ் நான் கைது செய்யப்பட்ட செய்தி வந்தால் ஆச்சரியப்படாதீர்கள்.
                                             
4/09/16 கல்கியில் எழுதியது 

22/3/16

GOல்டு வார்




மக்களோ, அரசோ, இயல்புவாழ்க்கையோ பாதிக்கப்படாத போராட்டம் ஒன்று நடந்திருக்குமானால் அது சமீபத்தில் நடந்த நகைக்கடை வியாபாரிகளின் போராட்டமாகத்தான் இருக்கும். அதே போல் நாடுதழுவிய கடையடைப்பு என அறிவித்துவிட்டு டிவியிலும் செய்திதாட்களிலும் நகைக்கடைகளுக்கு அதிகளவில் விளம்பரங்கள் செய்த கொண்டிருந்த முரண்பாடு இருந்ததும் இந்தப் போராட்டத்தில் தான். பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது பாலைத் தெருவில் கொட்டினார்கள். தங்க வியாபாரிகள் அதுபோல் செய்யவேண்டியதுதானே எனச் சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்யும் விஷயமாகிப் போயிருந்தது இந்தப் போராட்டம். உலகிலேயே அதிகமாகத் தங்க நகைகள் வாங்கும் நுகர்வோர் இந்தியாவில் மட்டுமே. இந்தியாவில் மக்கள் தமது வருமானத்தில் சராசரியாக 30% சேமிப்பாக வைக்கிறார்கள் என்றால், அதில் 10 சதவீதத்தைத் தங்கமாக வாங்கி வைக்கிறார்கள் என்கின்றன ஆய்வுகள். இதில் கைமாறும் பணத்தில் பெருமளவிற்கு சரியான பில்கள், கணக்குகள் காட்டப்படுவதில்லை. உள்நாட்டுக் கருப்புப் பணத்தில் தங்கம் பெரும்பகுதியாக இருக்கிறது என்பதால் அரசு, தங்கத்தைப் பயன்படுத்துவதைக் குறைக்க மத்திய அரசு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இறக்குமதி வரி அதிகரிப்பு, தங்கத்தின் மீதான முதலீட்டுக்கு வரி ஆகியவற்றைத் தொடர்ந்து தற்போது தங்கம் மற்றும் வைரம்மீதான கலால் வரி உயர்த்தப்பட்டிருக்கிறது. இதனால் தங்கம் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. ரூ.2 லட்சத்துக்கு அதிகமாக நகைகள் வாங்குவோரின் பான் கார்டு (வருமான வரி நிரந்தர எண்) தெரிவித்தல் கட்டாயம் என்ற நிபந்தனையை இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதலாக அமல்படுத்தியது. பெரும்பாலும் கணக்கில் காட்டப்படாத பணம், லஞ்சப்பணம்தான் தங்கமாக மாறிக்கொண்டிருக்கிறது. இதைத் தடுக்கும் முதல் முயற்சியே பான் கார்டு கட்டாயம் என்ற உத்தரவு. இதைத்தொடர்ந்து தங்க கொள்முதலை விற்பனையைக் கண்காணிக்க 1% கலால் வரி அறிவிக்கப்பட்டது. கலால் வரி செலுத்துவதற்கு இருக்கும்நடைமுறைகளினால் நகை உற்பத்தியாளர்கள் பலவற்றை மறைக்க முடியாது,. தங்கம் வாங்குபவர்களில் 68% மக்கள் கிராமப்புறங்களில் வசிப்போர். இவர்களிடம் வங்கிக் கணக்குகள் இல்லை. வரி செலுத்துவோர் மக்கள் தொகையில் 3% மட்டுமே. ஆகவே, பான் கார்டு அனைவரிடமும் இருக்காது. எனவே இப்படிப் பட்ட அறிவிப்புகள்  தங்கம் வாங்க விரும்பும் சதாரண மக்களை  பல இன்னல்களுக்கு உள்ளாக்கும் என்றும் அதைவலியுறுத்துவதற்காக அகில இந்திய அளவில் கடையடைப்புப் போராட்டங்களை அறிவித்தது நகை வியாபாரிகள் சங்கம். ஆனால் இந்தப் போராட்டங்கள் எந்தவித சலனத்தையும் ஏற்படுத்தாதற்கு முக்கியக் காரணம் தங்கம் ஏழைகள் அன்றாடம் வாங்கும் பொருள் அல்ல. எனவே அதன் விலையேற்றம் வாங்க முடியாதவர்களைப் பாதிக்கப்போவதில்லை. வாங்கும் வசதி படைத்தவர்களுக் விலையைப் பற்றிய கவலை இல்லை. ”இந்த வரிவிதிப்பினால் தங்கம் வாங்கமுடியாமல் எங்கள் வீட்டுக் கல்யாணம் நின்றுவிட்டது” என்ற குரலோ, திட்டமிட்டமிட்டபடி சேமிப்பிலிருந்து ”தங்கம் வாங்க முடியவில்லையே” என்ற ஆதங்கக் குரலோ முணுமுணுப்போ கூட மக்களிடமிருந்து எழவில்லை. நாடு முழுவதும் தங்க விற்பனையில் வரிஏய்ப்பு செய்யும், தாங்கள் கண்காணிக்கப்படுவதை விரும்பாத நகை வியாபாரிகள் தான் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறார்கள் . மேலும் கோடிக்கணக்கில் தங்கம் ஸ்டாக் வைத்திருக்கும் வியாபாரிகள் இந்த விலையேற்றத்தினால் எந்த நஷ்டமும் அடையப்போவதில்லை என்பதால் மக்களுக்கு அவர்கள்மீது எந்த அனுதாபமும் எழவில்லை. எல்லாவற்றையும் விட 1% வரிவிதிப்பை வியாபாரிகள் மக்கள்மீதுதான் திணிக்கப் போகிறார்கள்.அப்புறம் ஏன் இந்த முதலைக் கண்ணீர் என்ற எண்ணமும் எழுந்திருக்கிறது. அதாவது வாங்குவோருக்கும் விற்பனையாளர் என்ற இரு தரப்புக்குமே பாதிப்பில்லாத ஒரு விஷயத்திற்கு நடந்த போராட்டம் தோற்றத்தில் ஆச்சரியமில்லை வருட வருமானத்தின் 10% சேமிப்பான 2 லட்சத்தைத் தங்கத்தில் முதலீடு செய்பவர்களின் வருமானம் 20 லட்சமாக இருக்கும் என்பதால்  வருமானவரி செலுத்தும் அவரிடம் பான் கார்ட் இருக்கும்.  கிராமங்களிலிருப்பவர்களுக்கு வங்கிக்கணக்கில்லை என்பதையும் முழுவதுமாக ஏற்பதிற்கில்லை. சமீபத்தில்  பல கோடி ரூபாய் வெள்ள நிவாரணம் இரண்டே நாளில் மக்களின் வங்கிக்கணக்கில் சேர்ந்தது.  இதுபலருக்கு வங்கி கணக்கு இருப்பதையும், அதன் அவசியத்தை மக்கள் உணர்ந்திப்பதையும் காட்டுகிறது. இந்தப் போராட்டத்தால் அரசுக்கு இழப்பு இல்லையா? உண்டு தங்க நகை விற்பனை தடைப்படும் ஒவ்வொரு நாளும் பல்வேறு நிலைகளிலும், அதாவது தங்கம் இறக்குமதி, விற்பனை, நகைகள் தயாரிப்பு, நகை விற்பனை எனப் பல நிலைகளில் சுமார் 40% வரி விதிப்பு உள்ளது.ஆனாலும் மத்திய அரசு இந்த இழப்பைப்,பொருட்படுத்தவில்லை.காரணம் இதைவிட முக்கியமான விஷயமான ஆண்டுதோறும் அதிகரிக்கும் தங்க இறக்குமதியைக் குறைப்பதன் மூலம் நடப்பு கணக்கின் பற்றாக்குறையை கணிசமாகக் குறைக்க முடியும் என்பதால் இந்த வருமானஇழப்பை சந்திக்கத் தயாராகவிருக்கிறது. கருப்புப் பணம் தங்கமாகிறது என்பதும், அதிகாரிகள் பலரும் லஞ்சம் பெறுவது தங்கமாகத்தான் இருக்கிறது என்பதும் எல்லோரும் அறிந்த உண்மை.மக்கள் தங்கத்தில் முதலீடு செய்வதில் தவறில்லை. . ஆனால், கருப்புப் பணம் தங்கமாகப் பதுக்கப்படுவது தடுக்கப்பட்டேயாக வேண்டும். விற்பனை கண்காணிக்கப்பட வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி, கொண்டு வரப்பட்டிருக்கும் அரசின் இந்த முயற்சி மக்களிடம் அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியிருப்பது மகிழ்ச்சியான விஷயம் 110316

10/7/15

மத்தியபிரதேசத்தில் தொடரும் மர்ம மரணங்கள்


இந்த தேசம் கடந்த பல ஆண்டுகளில் பல பூதாகாரமான ஊழல்களை தொடர்ந்து  சந்தித்திருக்கிறது.. அவைகள் விசாரணைகள்,அதிரடி கைதுகள், என பரபரப்பாக முதல் பக்க செய்தியாகவுமிருந்திருக்கிறது. ஆனால் முதல் முறையாக ஒரு  ஊழல் வெளிச்சதிற்கு வந்தபின்னர்  தொடராக அதில் சம்பந்தபட்ட 44 பேர்களின் அடுத்தடுத்த மர்ம மரணங்கள் நிகழ்ந்திருப்பது  பாரதீய ஜனதா கட்சி ஆட்சியிலிருக்கும் மத்திய பிரதேச மாநிலத்தில் இப்போது வெடித்திருக்கும் “ வியாபம்” மெகா ஊழலில்தான் 
மத்திய பிரதேச மாநிலத்தில் மருத்துவம், உயர் தொழில்நுட்பக் கல்வி மற்றும் அரசுத் துறை வேலைகளுக்கான போட்டித்தேர்வைநடத்துவது ’மத்திய பிரதேச தொழில்முறைத் தேர்வாணையம்’ (Madhya Pradesh Professional Examination Board – MPPEB) அதன் இந்தி மொழி பெயர்ப்பு– வ்யாவ்சாயிக் பரிக்ஷா மண்டல் சுருக்கமாக – "வியாபம்".
மாநில அரசின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் இதை நாட்டிலேயே நேர்மையாக நியாமாக நடக்கும் சுயாட்சி அமைப்பு இது என மத்தியபிரதேச அரசு மார் தட்டிக்கொண்டிருந்த ஒரு விஷயம்.  இதில்  நடந்த ஊழல் தான் இப்போது வெளிச்சதிற்கு வந்திருக்கிறது. அதன் தொடர்விளைவாகதான்  நடந்துகொண்டிருக்கும் மர்ம மரணங்கள்.
வேறெந்த வழக்கிலும் நடந்திராத வகையில், குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் வழக்கின் சாட்சிகள் உள்ளிட்ட 44 பேர் மர்மமான முறைகளில் இறந்துள்ளனர் – அதாவது கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு இறந்தவர்களில் மாநில ஆளுனர் ராம் நரேஷ் யாதவின் மகன் சைலேஷ் யாதவும் ஒருவர்.. இந்த பட்டியலில் கடைசியாக இடம் பெற்றிருப்பவர் ஊழலால் பாதிக்கப் பட்ட ஒரு குடும்பத்தினரை பேட்டிகண்ட டிவி செய்தியாளர்அக்‌ஷய் சிங் என்ற செய்தி வெளியாகிய பரபரப்பு அடங்குவதற்குள் மறுநாளே  வியாபம் ஊழல் விசாரணைக்கு தகவல்களை அளித்து உதவி வந்த மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் அருண் சர்மா, டெல்லி ஹோட்டல் ஒன்றில்  மர்மமமான முறையில் இறந்து கிடந்தார் இந்த  தொடர் மரணங்களினால்  தெரிந்த விஷயங்களைக்கூட போலீசில் சொல்ல மக்கள் அஞ்சுகின்றனர்..  மாநில போலிஸால் கொலையாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதை மக்களும் மீடியாக்காரர்களும் நம்ப மறுக்கிறார்கள். 
உலகிலேயே மிக எளிதாக  டாக்டராகவோ எஞ்னியாராகவோ மத்தியபிரதேசத்தில் தான் முடியும். பணம். – பணம், மட்டுமே இருந்தால் போதும். 
மருத்துவம் அல்லது வேறு ஏதேனும் ஒரு உயர் கல்விப் பிரிவு அல்லது அரசுத் துறை ஒன்றில் வேலைக்கான போட்டித் தேர்வுகள் எழுதும் ஒருவர், அதற்காக சிரமப்பட்டு படிக்கத் தேவையில்லை –பணக்கட்டுகள் போதும் அவர்களைத் தேடி இடைத் தரகர்கள் வருவார்கள். நீங்களே தேர்வை எழுதுவதானால், உங்களுக்கு முன்னோ பின்னோ ஒருவர் அமர்ந்து உங்களுக்குத் தேவையான பதில்களைத் தருவார்கள்.
இல்லையென்றால், உங்கள் பெயரில் வேறு ஒருவர் தேர்வை எழுதிக் கொடுப்பார்கள். இதற்காக சம்பந்தப்பட்ட துறையின் தேர்வாணையத்தை சரிக்கட்டுவது, தேர்வு நிலைய கண்காணிப்பாளர்களைச் சரிகட்டுவது, விடைத்தாள் திருத்துபவர்களைச் சரிகட்டுவது மட்டுமின்றி, சம்பந்தப்பட்ட அரசுத் துறை அல்லது கல்வித் துறை அதிகாரிகள், அமைச்சர்கள் வரை கவனித்துகொள்லும் வேலையை  இடைத்தரகர்கள் கவனித்துகொள்ளுவார்கள்.
நடந்துகொண்டிருக்கும் மரணங்கள் திகில் படங்களில் வரும் காட்சிகளாக இருப்பதைப்போல  நடந்த ஊழல்களும் சினிமா பாணீயில் . சயிண்டிபிக்காக பல வழிவகைகளில் செய்திருக்கிறார்கள். இந்த வசூல் ராஜாக்கள் வடிவமைத்திருக்கும்   விஞ்ஞான பூர்வமான தேர்வு ஊழல்களில் தான் எத்தனை வகை? 
1)   ஆள்மாறாட்டம் : தேர்வு எழுத வேண்டியவருக்கு பதிலாக, தேர்வு எழுதுவதையே தொழிலாக கொண்ட வேறு ஒரு ‘திறமைசாலி’ தேர்வை எழுதுவது. தேர்வுமைய நுழைவுச் சீட்டை போர்ஜரி செய்வது, 
2)   ரயில் இன்ஜின் / ரயில் பெட்டி (Engine Bogie System): தேர்வு மையத்தில் உண்மையாகவே தேர்வு எழுத வந்திருப்பவர்களுக்கு இடையில் சம்பந்தமில்லாத (ஆனால், அந்த துறை பற்றி நன்கு அறிந்த ஒருவரை)  நுழைத்து அவர் எழுத (இன்ஜின்) மற்றவர்கள் காப்பி அடிக்க (இன்ஜினைத் தொடரும் பெட்டிகள்) செய்வது. – உதாரணமாக, ஒரு மருத்துவ நுழைவுத் தேர்வு என்றால், தேர்வு எழுத வந்த ஒருவர் 4 அல்லது 5 லட்சம் கொடுத்து இன்னொருவரை இன்ஜினாக அமர்த்திக் கொள்ளலாம்
3)   காலி விடைத்தாள்கள் : அதாவது தேர்வு எழுத வந்தவர் விடைத்தாளை காலியாக வைத்து விட வேண்டும். தேர்வு நேரம் முடிந்து தேவையான மதிப்பெண்களை முதலில் வழங்கி விடுவார்கள் – பின்னர் அரசின் பாதுகாப்பில் உள்ள அந்த காலித் தாள்களில் கிடைத்த மதிப்பெண்களுக்கு ஏற்றாற் போல் விடை எழுதி, அதைத் திருத்துவது போல் திருத்தி, மதிப்பெண் போடுவது போல் போட்டுவிடிவார்கள். இதெல்லாம் சாத்தியாமா? என தோன்றுகிறதல்லவா?   ஆனால், இப்படித் தான் நடந்துள்ளது. சம்பந்தபட்டவர்கள் சாட்சியம்  அளித்திருக்கிறார்கள். 
2009-ம் ஆண்டு வியாபம் முறைகேடுகள் குறித்து முதன் முறையாக பொது நல வழக்கைத் தொடர்ந்த வினோத் ராய், தனியார் மருத்துவக் கல்லூரிகள் மட்டும் ஆண்டொன்றுக்கு சுமார் 40,000 கோடியை இருக்கை ஒதுக்கீடுகளின் மூலம் குவிக்கிறது என்கிறார். வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட 42 சதவீத இடங்களுக்கும் நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள 43 சதவீத இடங்களுக்கு ஏராளமான தொகை கணக்கில் காட்டாமல் வசூலிக்கப்படுகிறது. 15 சதவீத இடங்கள் (அதாவது 300) தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகின்றது –  இந்த 300 இடங்களில்தான்  லஞ்ச ஊழல் ஆக மொத்தம் மத்திய பிரதேசத்தில் மருத்துவப் படிப்பில் 100 சதவீத இடங்களும் காசு கொடுப்பவர்களுக்கே என்று நிலை நிலவுகிறது.
இதைத்தவிர 1.40 லட்சம் பேர் ஒவ்வொருவரும் 25 லட்சம் கொடுத்து பல அரசு வேலைகளை பெற்றிருக்கிறார்கள். இந்த பொதுவழக்குகள் போடும் முன் அரசுக்கு கடிதம் , பத்திரிகைகளில் கட்டுரைகள் என போராடியவர் வினோத் ராய்.  அதற்காக விலைபேசபட்டு அதை ஏற்காததால் கொலை மிரட்டலகளையும் சந்தித்துகொண்டிருப்பவர். இறுதியில் கோர்ட் ஆணைப்படி ,விசாராணை  சிறப்புபோலீஸ் புலானய்வு குழு விசாரணையை துவங்கியது.
இப்போது 28 பேர் மீது பல வழக்குகளை பதிவு செய்பட்டிருக்கிறது..  இவர் கள் 3292 வித மான குற்றங்களில் ஈடுபட்டு உள்ளனர் என்றும் கண்டு பிடிக்கப்பட்டு நூற்றுக்கணக்கான பிரிவுகளில் வழக்குகள் பதிவாயிருக்கின்றன. இதுவரை இவ்வளவு பிரிவுகளில் வழக்குகள் போடபட்டதில்லை. . ஊழலுக்கு காரணமான குற்றவாளிகள் மீது குற்றங்களை நிரூபிக்கும் வகையில் 92,176 ஆவணங்கள் கோர்ட்டில் ஒப்படைக் கப்பட்டிருக்கின்றன. இதுவரை சுமார் 1800 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது பட்டியலில் உள்ள சுமார் 300 பேர் தலைமறைவாக உள்ளனர். மத்திய பிரதேச ஆளுனர் ராம் நரேஷ் யாதவ், முன்னாள் ஆர்.எஸ்.எஸ் தலைவர் கே.சி சுதர்ஷன், ம.பி முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் அவரது மனைவி சாதனா உள்ளிட்டோர் இந்த ஊழலில் சம்பந்தப்பட்டுள்ளாதாக சொல்லப்படுகிறது. 
அமைச்சர்களே தமக்கு வேண்டியவர்கள், தாம் கைநீட்டி லஞ்சம் பெற்றுக் கொண்டவர்களை தேர்வுகளில் வெற்றி பெற இடைத்தரகர்கள் மூலம் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர். கைது செய்யப்பட்ட 1800 பேரில் பாரதிய ஜனதாவின் முன்னாள் மாநில கல்வி அமைச்சர் லட்சுமி காந்த் ஷர்மா, ஐ.பி.எஸ் அதிகாரி ஆர்.கே ஷிவாரே, புகழ்பெற்ற மருத்துவர் வினோத் பண்டாரி மற்றும் மத்தியப்பிரதேச மாநிலத்தின் சுரங்க அதிபர்  சுதீர் ஷர்மா ஆகியரோம் அடக்கம்.. இந்த ஆப்ரேஷனின் முளையாக செயல் பட்ட வினோத் பண்டாரி என்பவர்  தப்பி மொரீஷியல் தீவுக்கு சென்று விட்டார்
தவிர்க்கவே இயலாத வகையில் பல்வேறு பொதுநல வழக்குகளுக்கும், எதிர்கட்சிகளின் அழுத்தங்களுக்கும், நீதி மன்றங்களின் உத்தரவுகளுக்கும் பின் மத்திய பிரதேசத்தின் சிறப்புக் காவல் துறையின் விசாரணைக்கு உள்ளாகியுள்ள இந்த ஊழல் மிகத்  தவறான திசையை நோக்கிச் செல்கிறது. குற்றம் இழைத்த ஒரு சிலரோடு சேர்த்து குற்றத்தால் பாதிக்கப்பட்ட பலரும் கைது செய்யப்பட்டுள்ளதாக  வட இந்திய ஊடகங்கள்  எழுதுகின்றன. . மேற்கொண்டு மக்கள் மத்தியில் இருந்து புகார்கள் ஏதும் எழாமலிருக்க, அவர்களை அச்சுறுத்தும் வகையிலேயே கைதுகள் செய்யப்படுகின்றன. என்றும் குற்றம் சாட்டுகின்றன.  அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், கல்வித்துறை வல்லுனர்கள் எனப்பல துறைகளினரின் ஒருங்கிணைப்போடு மிகந்த தொழில்நேர்த்தியோடு நடந்திருக்கிறது இந்த போலி டாக்டர்களை உருவாக்கும் ஊழல். 
வெளியாகியிருப்பது  மருத்துவத்துறையில் மட்டும் தான். இன்னும் பிற உயர் கல்வி நிலையங்களின்  இருக்கை ஒதுக்கீடுகள், போட்டித் தேர்வுகள் மூலம்  செய்யப்படும் பணி நியமனங்கள் என்பதையெல்லாம் கணக்கில் எடுத்துகொண்டால் , ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான கோடிகள்  2ஜி ஊழலைவிட அதிகமான அளவில்   இருக்கும்  என மதிப்பிடப்பிடபடுகிறது.  இதில் இன்னுமொரு ஆச்சரியம் இத்தனைக்கு பிறகும், வியாபம் தான் இன்னும்  இந்த ஆண்டுக்கான அட்மிஷன், வேலைகளுக்கான தேர்வை செய்துகொண்டிருக்கிறது. 
.இந்த விஷயத்தில்  மாநில அரசு மெத்தனமாக இருக்கிறது. சுஷ்மா, வசுந்திரா ராஜி ஊழல் அலைகளை விட  பிரமாண்டமாக எழுந்திருக்கும் இந்த ஊழல் அலை பற்றியும் வழக்கம்போல பிரதமர் மோடி மெளனம் காக்கிறார். உச்ச நீதிமன்ற தலையிட்டு சிபிஐ விசாரணையும்,  சிறப்பு குழுவும்  அமைக்க வேண்டுகிறது காங்கிரஸ்.. முதல்வரின் ராஜினாமாவை கோருகிறது எதிர்கட்சிகள்.
மத்திய பிரதே மக்கள் இந்த   தொடர் மரணங்களை உடனே  நிறுத்த யாராவது ஏதாவது செய்யமாட்டர்களா? எனத்   துடித்துகொண்டிருக்கிறார்கள்  


============================================================================  
ஊழலில் வந்த டாப் 10
கடந்த 2011 ல் மருத்துவ நுழைவு தேர்வு முடிந்ததும் டாப் 10 மாணவர்கள் அழைக்கப் பட்டனர். அவர்களில் யாரும் உண்மையாக எழுதி சாதிக்கவில்லை. பல லட்சம் லஞ்சம் தந்து, ஆள் மாறாட்ட முறையில் தான் அதிக மதிப்பெண் பெற்றனர்.
இவர்களுக்காக தேர்வு எழுதிய 145 பேரை கண்டு பிடிக்க போலீஸ் தீவிரமாக இறங்கியது. முதலில் சிக்கியது உபி மாநில கான்பூர் நகரை சேர்ந்த சத்யேந்திர வர்மா. இவர் 4 லட்சம் ரூபாய் வாங்கி கொண்டு அஷிஷ் யாதவ் என்ற மாணவனுக்காக தேர்வு எழுதியுள்ளார்.
இவரில் ஆரம்பித்து தான் இந்த ஊழலின் வெளிப்பாடு. பின்னர் 145 பேர் சிக்கினர். ஆள் மாறாட்டம் செய்த மாணவர் களுக்காக தேர்வு எழுதிய இவர்களுக்கு பல லட்சம் ரூபாய் தந்துள்ளனர் இடைத் தரகர்கள். இவர்கள் பெரும்பாலோர் உபியை சேர்ந்தவர்கள்.
==========================================================================
கல்கி 19/07/15 ல் எழுதியது


4/7/15

கிரிஸ்- திவாலாகும் தேசம்



நிதி மேலாண்மையைச் சரியாக நிர்வகிக்காததால் கடன் சுமையால் தனிமனிதர்கள், வியாபார நிறுவனங்கள்ஏன்? பெரிய கார்பெரேட் நிறுவனங்கள் கூடத் திவாலாகும் நிலைக்குத் தள்ளப்படுவதுண்டுரு தேசத்திற்கே அப்படி நேருமா?- நேர்ந்திருக்கிறது கீரிஸ் நாட்டுக்கு.
பால்கன் தீபகற்பத்தின் தெற்குமுனையில் ஆசிய, ஐரோப்பா மற்றும் ஆப்ரிக்காவின் குறுக்கு பாதையில் அமைந்துள்ள குட்டி தேசம் கீரிஸ். மக்கள் தொகையே1.30 கோடிதான் மன்னராட்சியிலிருந்த கீரிஸ் 1970ல்தான்   மக்களாட்சிக்கு மாறியது.
கடந்த வாரம் நாட்டின் பிரதமர் அலெக்சிஸ் சிப்ரஸ் ஒரு நாள் இரவு டிவியில் தோன்றி நாளை காலை முதல் நாட்டின் எல்லா வங்கிகளும் பங்கு சந்தையும் மூடப்படும். ஏடிஎம் மில்லிருந்து நாள் ஒன்றுக்கு 60 யூரோ மட்டுமே எடுக்க முடியும்என அதிரடியாக அறிவித்துவிட்டார். மாத முதல் வாரத்தில் பென்ஷன்பணம், சம்பளப் பணம் எடுக்கமுடியாத நிலை.ஏடிம்களில் நீள் வரிசை. வங்கிகள் இயங்காதால், வணிக உலகம் திணறுகிறது. தேசம் அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறது.

ஏன் இந்த நெருக்கடி?
கீரிஸின்  முந்தைய கரன்சி டிராஷ்மா.  கடின முயற்சிகளுக்குப் பின்னர்1981லைரோப்பிய கூட்டமைப்பில் இணைந்த நாடு.இது. 2002 முதல் யூரோ கரன்சிக்கு மாறியது. அங்கே ஆரம்பித்தது சிக்கல். வளர்ச்சியில்லாத பொருளாதார நிலையைச் சமாளிக்க அதுவரை டிராஷ்மா பணநோட்டுகளை  அதிகளவில் அச்சிட்டு வெளியிட்டு வந்த நிலையைத் தொடரமுடியவில்லை. கடன் சுமையும், பணவீக்கமும் அதிகரித்துக்கொண்டே போயின. மிகச்சிறிய நாடாக இருந்தாலும் கூட்டமைப்பின் உறுப்பினர் என்ற முறையில் பன்னாட்டு நிதியம்,ஐரோப்பிய மத்திய வங்கி ஐரோப்பிய ஆணையம் கீரிசுக்கு உதவிக்கரம் நீட்டின.
சிக்கன நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் 2010லிருந்து 2012 வரை  மூன்று தவணைகளில்970 கோடி யூரோ கடனாகத் தந்தது. ஆனால் கீரிஸ் தனது பொருளாதாரச் சீர்திருத்தங்களில் தோல்வியைச் சந்தித்ததுஇந்தக் கடனில் ஒரு தவணையான 160 கோடியூரோவைச் செலுத்த வேண்டிய நாளான ஜுன் 30ல் செலுத்தவில்லைஇதனால் எழுந்த நிலைதான் தேசம் திவாலாகும் மோசமான நிலை. திலிருந்து கிரிஸை காப்பற்ற இன்னும் 2400கோடி யூரோவைக் கடனாக இந்த நிறுவனங்கள் தர ஒரு திட்டத்தைத் தயாரித்தனர்.
ஆனால், அதற்குப் பல நிபந்தனைகளைக் கிரீசுக்கு ஐரோப்பியயூனியன் நாடுகள் விதித்துள்ளன. குறிப்பாக, கிரீஸ் அரசு கடும்சிக்கன நடவடிக்கையாக, மானியக் குறைப்பு, ஓய்வூதிய வயதை அதிகப் படுத்தி, பலனைக் குறைக்க வேண்டும், வரி, மின் கட்டணத்தை அதிகப்படுத்த வேண்டும், பட்ஜெட் தொகையைக் குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. ஏற்கனவே கடந்த 5 ஆண்டுகளாகப் பெரும் நிதி நெருக்கடியில் கிரீஸ் சிக்கித் தவித்து அரசு சிக்கன நடவடிக்கைகளை கடை பிடித்து வருகிறது. இந்நிலையில், மேற்கொண்டு சிக்கன நடவடிக்கையை அதிகப் படுத்தினால், மக்களிடையே பெருங்குழப்பத்தை ஏற்படுத்தும் என அஞ்சும் கீரிஸ் ஆட்சியாளர்கள்  வாங்கிய கடனை முழுவதுமாக ரத்து செய்துவிட்டுப் புதிய கடன்களை வழங்குமாறு கேட்கிறது 10 சுற்று  பேச்சு வார்த்தை நடந்தும் எந்த முன்னேற்றமும் இல்லை.

அரசியல்

கீரிஸில் இப்போது ஆட்சியில் இருப்பதில் பெரும்பான்மையானவர்கள் இடதுசாரியினர். பெரும் போராட்டங்களுக்குப் பின் ஆட்சிக்கு வந்தவர்கள். இப்போது  மக்களிடையே ஏகாதிபத்திய நாடுகளின் நிபந்தனைகளுக்கு  நாம் அடிமையாகிவிடக்கூடாது என்ற குரல் வலுத்துக்கொண்டிருக்கும் நேரத்தில் கடும் நிபந்தனைகளுடன் உதவியை ஏற்பதா வேண்டாமா என்பதை மக்கள் மன்றத்திற்கு கொண்டு போகிறார். பிரதமர்., ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் நாடுகள் அளிக்கும் அவசரக் கால நிதி உதவியை ஏற்பதா என்பது குறித்து முடிவு செய்ய ஜூலை 5-ம் தேதி நாடாளு மன்றத்தைக் கூட்டி விவாதித்துப் பின்பு, 6-ம் தேதி பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று  நாட்டின் பிரதமர்  அறிவித்துள்ளார்.
  
விளைவுகள்
இந்த நெருக்கடியினால் கிரீஸ் நாடு திவாலாகும் நிலைக்குத் தள்ளப் பட்டு, வலுகட்டாயமாக ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறும் நிலைமைக்கு ஆளாகியுள்ளது. உடனடி விளைவாக ஐரோப்பிய பொருளாதாரம், பாதிக்கப்பட்டது,ஐரோப்பிய பங்கு சந்தை சற்று குலுங்கி முதலீட்டாளர்களுக்கு நட்டத்தை ஏற்படுத்திய பின்  நின்றது.
இந்தப் பிரச்சனையில்  ஒரு வேளை கிரீஸ் ஐரோப்பிய கூட்டணியிலிருந்து வெளியேறினால், அது ஐரோப்பிய கூட்டமைப்புக்குப் பெரும் பலவீனமாக அமையும். மேலும், இதே நிதி நெருக்கடியில் இருக்கும் இத்தாலி, போர்ச் சுக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளும் வெளியேறினால் ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பை மேலும் பலவீனமடையச் செய்யும் என ஐரோப்பிய  கூட்டமைப்பின் தலமை கணிக்கிறது. இதனால்எப்படியாவதுசமாளித்துவிட வேண்டுமென்று  அந்த நாடுகள் விரும்புகின்றன. இதைப் புரிந்துகொண்டுவிட்டதால் தான் கீரிஸ் இந்த அளவுக்குத் துணிந்து சவால் விடுகிறது என்றும் சில பிரிட்டிஷ் பத்திரிகைகள் எழுதுகின்றன.
இந்தியா பாதிக்கப்படுமா?
சில அன்னிய முதலீட்டு நிறுவனங்களின் தலைமையகங்கள் கீரிஸில் இருந்தாலும் அவை அமெரிக்க வங்கிகளின் மூலமாக இயங்குவதால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. இரண்டு வாரங்களுக்கு முன்னரே ரிசர்வ் வங்கியின் கவர்னர் ராஜன் லண்டனின் பேசும்போது கீரிஸில் பிரச்னை எழுந்தால் அது இந்தியாவைப் பாதிக்காது என அறிவித்திருக்கிறார். நமது அதிகமான  அன்னியச் செலவாணி கையிருப்பும், நிர்வாகத் திறனும் அவரது பேச்சில் எதிரொலித்தது.

மக்களின் தீர்ப்புக்காகக் கழுத்தை  நெருக்கும் கடனலிருக்கும் கிரிஸ் நாடு மட்டுமில்லை கடன்கொடுத்த நாடுகளும் பதற்றத்துடன் காத்திருக்கின்றன.
.
கல்கி 12/7/15ல் எழுதியது.