புதியதலைமுறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதியதலைமுறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

1/6/16

செவ்வாய் கிரகத்திற்குச் செல்லப்போகும் முதல் பெண்.

செவ்வாய் கிரகத்திற்குச் செல்லப்போகும் முதல் பெண்.


மெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் லாஸேஞ்சல்நகருக்கு அருகிலிருக்கும்  பாஸடினா(Pasadena) பகுதியிலிருக்கிறது நாஸா (NASA)வின்  செவ்வாய் கிரக ஆராய்ச்சி நிலையம். 80களின் இறுதியிலிருந்தே தனது ஆய்வுகளை செய்து கொண்டிருக்குக்கும் இந்த நிறுவனம்   பூமியிலிருந்து 57 கோடி கீமீ தொலைவிலிருக்கும் செவ்வாய் கிரகத்தில் உயிரினம் வாழ தேவையான ஆக்ஸிஜன்.தண்ணீர் இருக்கிறதா என்பதை அறிந்தபின்னர்  அங்கு முதலில் மனிதனை அனுப்பும் மிகப்பெரிய கனவு திட்டத்துடன் இயங்குகிறது .  இப்போது 14000க்கு மேற்பட்டவர்கள் பணியாற்றும் இந்த நிலையத்தில் இதற்காக தொடர்ந்து முயற்சிகள், பரிசோதனைகள் செய்யபட்டுவருகிறது. , முதல் கட்டமாக செவ்வாய் கிரகத்தின் அருகில்  சென்று சுற்றி வந்து தகவல்கள் பெற  விண்வெளிகலங்கள் அனுப்பட்டன. அதன் மூலம் கிடைத்த அடிப்படை தகவல்களின் அடிப்படையில் நேரிடியாக செவ்வாய் கிரகத்தில் ஒரு விண்கலத்தை இறக்கி சோதனைகள் செய்ய முடிவு செய்து அதற்காகவே உருவாக்கபட்டது கியூரியாஸிட்டி”“ எனற விண்கலம்.   அதுவெற்றிகரமாக தரையிறங்கி செய்திகளை அனுப்பிகொண்டிருக்கிறது.  இதன் அடுத்த கட்டமாக அடுத்த 15 ஆண்டுகளுக்குள் மனிதனை அனுப்பும் திட்டங்களை தயாரித்துகொண்டிருக்கிறது.
அலீஸா கார்சன் என்ற  13 வயது பெண், ஏழாம் வகுப்பு மாணவி இப்போதே அந்த பயணத்துக்கான  பல தகுதிகளையும் பெற்று தன்னை தயாரித்துகொண்டிருக்கிறார்..  நாசா இந்த பெண்ணுக்கு நிறைய முன்னுரிமைகளை அளித்து ஊக்குவிக்கிறது. அனேகமாக செவ்வாயில் காலடி வைக்கபோகும் முதல் மனித இனம் இந்த பெண்ணாக இருக்கலாம் என அமெரிக்க பத்திரிகைகள் எழுதுகின்றன.  மத்திய அமெரிக்காவின்  லூயிசினா(Louisiana) மாநிலத்தில் வசிக்கிறார். அவரை போனில் தொடர்பு கொண்டபோது அவரது தந்தையுடனும் பேசும் வாய்ப்பும்கிடைத்தது. அலீஸா  புதியதலைமுறைக்காக  போனில் அளித்த  எக்ஸ்கூளிஸிவ் பேட்டி


ஒரு பள்ளிகுழந்தையின் சந்தோஷத்தோடு ஆனால் மிக தெளிவான ஆங்கிலத்தில்   ”என் உச்சரிப்பை புரிந்துகொள்வதில் கஷ்டம் ஏதுமில்லையே?”  என கேட்டு  பேசுகிறார். இந்தியாவைப்பற்றி அறிந்திருக்கிறார்.

செவ்வாய் கிரகத்தின் மீது உங்களுக்கு என் ஆர்வம் ஏற்பட்டது?
நான் 3 அல்லது 4 வயது குழந்தையாக இருந்தபோது, செவ்வாய் கிரகத்திற்கு போகும்மனிதர்கள் பற்றி ஒரு படம் பார்த்தேன். அப்பாவிடம் இதுவரை யாராவது இப்படி போயிருக்கிறார்களா? என்று கேட்டேன். அவர்  இதுவரை யாரும் போகவில்லை என்றும் அந்த கிரகத்தைபற்றியும் நிறைய சொல்லிகொடுத்தார். ஒரு மேப் கூட கொடுத்தார்.  தொடர்ந்து அதை பார்ர்துகொண்டே இருப்பேன்.  நிறைய படித்துதெரிந்து கொண்டேன். பள்ளியில் சேரும்போதே நான் விண்வெளி பயணியாகி செவ்வாய் கிரகத்திற்கு போக முடிவு செய்துவிட்டேன்.  தொடர்ந்து எல்லோரிடமும் செவ்வாய் கிரகத்தைப்பற்றி கேட்டுகொண்டே இருப்பேன் பள்ளியில் என் எல்லா பிராஜக்கெட்டும் செவ்வாய் கிரகம் பற்றிதான்.
உங்களுக்கு நாசாவில் பயிற்சி கொடுத்திருக்கிறார்களாமே?
நாஸாவில் ”பாஸ்போர்ட்” என்று ஒரு திட்டமிருக்கிறது. இது பள்ளி மாணவர்களுக்கானது. அமெரிக்காவில் நாஸா 14 இடங்களில் தகவல் மையங்களை அமைத்திருக்கிறது.  ஒவ்வொன்றும்  அவர்களின் ஒரு திட்டம் பற்றியது. அதில் படங்கள் சார்ட்கள் புத்தகங்கள் ஸ்லைடு காட்சிகள் எல்லாம் இருக்கும். அதை நன்கு பார்த்த பின் விரும்பினால் ஒரு பரீட்சை எழுதலாம். அப்படி எழுதி தேர்ந்தால்  பாஸ்போர்ட் மாதிரி  ஒரு புத்தகத்தில்  சீல் இட்டு கொடுப்பார்கள். நான் அந்த 14 நிலையங்களுக்கும் சென்று பரீட்சைகள் எழுதி என் பாஸ்போர்ட்டில் அந்த ஸீல்களை பெற்றேன்.  எல்லாபரிட்சைகளிலும் முதல் மார்க் வாங்கியிருகிறேன். இதை முதலில் செய்திருக்கும் ஒரே அமெரிக்க மாணவி நான் தான்
 இதனால் நாஸாவில் விஞ்ஞானிகளுக்கு மட்டுமே அனுமதியுள்ள இடத்திலிருந்து ஏவுகணைகள் ஏவப்படுவதை பார்க்க என்னை அனுமதிப்பார்கள்  ஏரோநாட்டிக்ஸ் முடித்தவர்களுக்கு நடத்தும் ஒரு பயிற்சி முகாமுக்கு என்னையும் அழைத்தார்கள். அதில் அவர்களோடு நானும்பயிற்சியை முடித்திருக்கிறேன் அந்த பரீட்சையையும் எழுதினேன்.,. அந்த பயிற்சியின்  ஒரு பகுதியாக சிறுவிமானம் ஓட்ட கற்று கொடுப்பார்கள். எனக்கு கார் டிரைவிங் லைசென்ஸே இல்லாதால், முதலில்  அதை வாங்கிகொண்டு மீண்டும் பயிற்சிக்கு வா என்று சொல்லியிருக்கிறார்கள்.  ஸ்டூடண்ட் கார் டிரைவிங் லைசன்ஸ் வாங்க நான் அடுத்த பெர்த்டே வரை காத்திருக்கவேண்டும்.
பள்ளி படிப்பையும் இவைகளையும் எப்படி செய்யமுடிகிறது?
 பள்ளியில் பாடங்கள் எனக்கு கஷ்டமாக இருப்பதில்லை. நல்ல கிரேடுகளை வாங்குகிறேன்.  நேரத்தை சமாளிப்பது தான் சவால்.சிலசமயம் மிக கஷ்டமாக இருக்கும். ஆனால் அப்பா நேரத்தை எப்படி செலவழிக்க வேண்டும் என சொல்லிகொடுத்திருக்கிறார். எதை முதலில் எதை பின்னால் செய்யவேண்டும் என்று எனக்கு 5ஆம் வகுப்பில் படிக்கும்போதே சொல்லி கொடுத்துவிட்டார்.   பள்ளிகூடத்தில் என் ஆசிரியர்களுக்கும் பிரண்ட்ஸ்களுக்கு என்னைப்பற்றி ரொம்ப பெருமை அதுவும் ஒரு வசதியாக இருக்கிறது.
வானியல்,ராக்கெட்சயின்ஸ் தவிர வேறு எதில் ஆர்வம்.?
பள்ளியில் புட்பால் ஆடுவேன், இபோது கூட  உங்கள் போனுக்கு முன்னால் ஒரு மாட்ச் ஆடிவிட்டுதான் வந்தேன். பியோனோ வாசிக்க கற்றிருக்கிறேன்.  டான்ஸும் தெரியும். எங்கள் பள்ளி ரோபோடிக்ஸ் பிரிவு ஒரு ரோபோவை உருவாக்குகிறது.  அந்த டீமில் நான் இருக்கிறேன் நான் ஒரு கேர்ல் ஸ்கெளட். நிறைய பேட்ஜ் வாங்கியிருக்கிறேன் பெர்ஸி ஜாக்ஸன் புத்தகங்கள் படிப்பேன்.
நீங்கள் மற்ற பள்ளிகளில் சிறு குழந்தைகளுக்காக பேசுகிறீர்களாமே? அது எதைப்பற்றி?
பள்ளிகளுக்கு போய் பேசுவதில்லை. ஸ்கைப்பில் அவர்களிடம் பேசுவேன். இதுவரை  நடந்த நாஸாவின் விண்வெளிபயணங்களைப்பற்றி சொல்வேன். கேள்விகள் கேட்பார்கள் பதில் சொல்லுவேன். தெரியாததை அப்பாவிடம் கேட்டு பின்னாளில் சொல்லுவேன். முக்கியமாக உங்களுக்கு பிடித்த பாடத்தை கண்டுபிடித்து படிக்கவும் என்ன நீங்கள் என்ன ஆகவேண்டும் என்பதை நீங்களேதான் தீர்மானிக்க வேண்டும். மற்றவர்கள் இல்லை என்று சொல்லுவேன். இரண்டு பள்ளிகளில் நான் பேசியது பிடித்திருந்ததால்.  மற்ற பள்ளிகள் இப்போது அழைக்கிறார்கள். எனக்கு பரிட்சைகள் இருக்கும்நாட்களில் நான் இதைச்செய்வதில்லை.
 செவ்வாய் கிரகம் போகவேண்டும் என்ற உங்கள் லட்சியம் நிறைவேறினால் அதன் பின் என்ன செய்வீர்கள்? ஒருவேலை போக முடியாமல் போனால் என்ன செய்யபோகிறீர்கள்?
அந்த லட்சியத்தை அடைய நான் இன்னும் நிறைய செய்யவேண்டும். முதலில் 17 வயது ஆனபின் பைலட் லைசன்ஸ், ஸ்கை டைவிங் லைசன்ஸ் எல்லாம் நல்ல கிரேடில் வாங்கவேண்டும் இங்கிலாந்திலிருக்கும்  கேம்பிர்ட்ஜ்ஜின் இண்டர்நேஷனல் ஸ்பேஸ் பல்கலைகழகத்தில் போஸ்ட்கிராஜ்வேட் படிப்பேன் பின்னர் அமெரிக்காவின் MIT யில் (மாசாசூஸ்ட் இன்ஸ்டீயூட் ஆப் டெக்னாலாஜி) டாக்ட்ரேட் வாங்க வேண்டும். இடையில் நாசா நடத்தும்  முகாம்களிலும், பரிட்சைகளிலும்  பங்கு கொண்டு தேர்வாவேன்.
ஒருவேளை நீங்கள் கேட்பதுபோல செவ்வாய் போகும் வாய்ப்பு நழுவினால்…  நாஸாவின் செவ்வாய் திட்டத்தில் மிஷின் கண்ட்ரோலில் ஒரு எஞ்னியாராக இருப்பேன். செவ்வாய் கிரகம் என் வாழ்க்கையோடு இணைந்து போன விஷயமாக செய்துகொள்வேன்.
 உங்கள் பெற்றோர்கள், நண்பர்கள் பற்றி சொல்லுங்கள்.

நான் குடும்பத்தின் ஒரே பெண்.  அன்பான தந்தையால் வளர்க்கபடுகிறேன். என் விருப்பங்களை கனவுகளை பெரிதும் மதித்து அதை அடைய உதவி செய்யும் அன்பான மனிதர் அவர்.  என் கனவுகளுக்கு உதவுவதை தன் லட்சியமாக கொண்டிருப்பவர்.சொந்தமாக டிவி சானல் வைத்திருக்கிறார் எனக்கு அதில் ஆர்வம் இல்லை. . நண்பர்கள் பற்றி கேட்கிறீர்கள்…ம்ம் பள்ளீயில் நிறைய, முகாம்களுக்கு போனதால் நாசாவில் சிலர், ஆனால் பெஸ்ட் பிரண்ட் என் வகுப்பு தோழி மேகி தான்.  இப்போது உங்களுடன் பேசுவதை ரிகார்ட் செய்துகொண்டிருகிறேன். இரவில் அவளுக்கு போட்டுகாட்டுவேன்.
இந்தியாவின் மங்கள்யாண் திட்டம் பற்றி தெரியுமா?
ஓ தெரியுமே!. அதுபற்றி பள்ளியில் ஒரு பேப்பர் தயாரித்து படித்திருக்கிறேன், உங்களுக்கு அனுப்புகிறேன்.
பேட்டி அளித்ததற்கு நன்றி அலீஸா. உங்கள் கனவுகள் வெற்றியாக  எங்களுடைய வாழ்த்துக்கள்
நன்றி சார். பேட்டி வெளியான உங்கள் பத்திரிகையை அனுப்புவீர்கள்தானே?
நிச்சியமாக.
நன்றி சார்.

(புதிய தலைமுறை இதழ் )

4/8/15

நீங்கள் நீங்களாக இருந்தால் வெற்றி நிச்சியம்

` சென்னை நந்தம்பாக்கம்  வணிக வளாகம். கறுப்பு கவுன், தொப்பிகளுடன் சந்தோஷப் பூக்களாக மலர்ந்திருக்கும் மாணவ மாணவிகளின் சிரிப்புஅலைகளினாலும்  மகிழ்ச்சி குரல்களினாலும் நிறைந்திருக்கிறது செல்பி எடுத்துக் கொண்டிருக்கும் குழுக்கள். பரவசத்தில் பெற்றோர்கள் .. படிப்பை முடிக்கு முன்னரே வேலை கிடைத்த அதிர்ஷட்ட சாலிகளான கிரேட் லேக  மானேஜ்மெண்ட் இன்ஸ்டியூட்டின்  மாணவர்களின் பட்டமளிப்பு விழா.
டாட்டா  குழுமத்தின் முன்னாள் தலைவர் திரு ரத்தன் டாட்டாவும் பல்கலைக்கழக பேராசிரியர்களும் ஊர்வலமாக நுழைந்தவுடன் கனத்த அமைதி. சம்பிரதாயமான பட்டமளிப்புவிழா உரையாக இல்லாமல்.  மாணவர்களின் தேர்ந்தெடுத்த கேள்விகளை பல்கலைகழக டீன் பாலா பாலசந்தரன் கேட்க  பதில் தந்தார் ரத்தன் டாட்டா.  அவற்றிலிருந்து  சில

ஓரு மனேஜ்மெண்ட் பட்டதாரி அடுத்த 30 ஆண்டுகள் தன் தொழில் வாழ்க்கையில்ஜெயிக்கமுதல்5 ஆண்டுகள்எந்தமாதிரியானகொள்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்?
இம்மாதிரி இன்ஸ்டியூட்டிலிருந்து  வரும் மாணவர்கள் அதிக அளவில் சம்பளம், பெரிய நிறுவனங்களில் பதவி என்பதை மட்டும் குறிக்கோளாக கொள்ளக் கூடாது. எனக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பினால் மாறுதல் களைச்  செய்ய முடியும் என்ற நம்பிக்கையுடன் மாறு பட்டு சிந்தித்து துணிவுடன் செயல்படுபவர்களாக உங்களை அடையாளம் காட்ட வேண்டும்.  பாப்புலாராக இருப்பது மட்டும் வெற்றியில்லை. பல் ஆண்டுகளுக்கு முன் நான் பொறுப்பேற்ற போது ஒரு  ஆற்றல் மிகுந்த ஒரு மிகப்பெரிய  மனிதரின் காலணிகளுக்குள் நுழைந்து செயலாற்ற வேண்டியிருந்தது. அது எனக்கு பொருத்தமாகவும் இயலாமலும் இல்லாதிருந்தது. அப்போது நான் நானாகஇருந்து பணியாற்றினேன். மாறுதல்களைச் செய்ய முடியும் என நம்பி செயலாற்றினேன். இன்று பல் லட்சம் பேர்களில்  வாய்ப்பும் அதைச்செயல்படுத்த கருவிகளும், நல்லசூழுலும்  பெற்ற அதிர்ஷட சாலிகள் நீங்கள் .  நீங்கள்: நீங்களாகவே இருந்து  உங்கள் துறையில் மாறுதல் களை செய்ய முடியும் என நம்புங்கள். நியாமன நேர்மையான வழியில் குறிக்கோள்களை அடைய முயற்சியுங்கள். நீங்கள் சரி என்று நினைப்பதை நிலைநிறுத்த அவசியமானால்  போராடாவும் தயங்காதீர்கள். நிச்சியம் வெற்றி அடைவீர்கள்

நான் சரியான முடிவுகள் எடுப்பதில்லை. முடிவுகளை எடுத்த பின்னர் அவற்றை சரியாக்குகிறேன்என்று சொல்லியிருக்கிறீர்கள். அப்படி நீங்கள் செய்த ஏதாவது ஒரு முடிவைப் பற்றி சொல்ல முடியுமா?

சமூக வலைத்தளங்களில் நான் சொன்னதாக உலவிக்கொண்டிருக்கும் ஒரு கருத்து இது. நான் அப்படிச் சொன்னதில்லை.  இம்மாதிரி வாக்கியங்கள் ஆணவத்தைக் காட்டுகிறது அது சரியில்லை.  எல்லாராலும் எல்லா நேரத்திலும் சரியான முடிவுகளை மட்டுமே எடுக்க முடியாது.  சில முடிவுகள் தவறாகலாம். நமது முடிவுகள் தவறானால் அதன் விளைவுகளுக்குப்  பொறுப்பேற்கும் துணிவும், அதைச் சரிசெய்யும் ஆற்றலையும் நிர்வாகிகள் பெறவேண்டும்.  வருங்காலத்தில் உங்கள் தொழில் வாழ்க்கையில் நீங்கள்  நிறைய முடிவுகளை எடுக்கவேண்டிவரும். அப்போது  இதை நினைவில் கொள்ளுங்கள் . நிறுவனங்களில் உயர் பதவிகளில் இருப்பவர்கள்  கடினமான முடிவுகளை எடுக்கும்போது தனிமைப்படுத்தப்படுவார்கள். பலர் அந்த முடிவை ஏற்காமல் இருக்கலாம்.. ஆனாலும் பாப்புலாரிட்டிக்காக இல்லாமல்  துணிவுடன் செயல்பட்டு  நியாமானநீங்கள் சரியென நம்பும் முடிவுகளை துணிவுடன்  எடுக்க வேண்டும்.  இந்தச் சந்தர்ப்பத்தில் எனது முடிவுகள் பற்றி சொல்லுப்பட்டுகொண்டிருக்கும்  தவறான கருத்துகளுக்கு  ஒரு விளக்கம் அளிக்கக் கிடைத்த வாய்ப்புக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்.

 100 கம்பெனிகளை உள்ளடக்கிய  50 லட்சம் ஊழியர்களைக் கொண்ட டாடா சாம்ராஜ்யத்தை நிர்வகித்தவர் நீங்கள். இன்று பல புதிய சிறு கம்பெனிகள் வேகமாகத் தோன்றி வளருகின்றன. சில ஆண்டுகளில் இவை டாடா போன்ற பெரிய கம்பெனிகளுடன் இணைக்கப்படுகின்றன. இந்த நிலையில் எப்படி இந்த சிறு நிறுவனங்கள் அந்தப் பெரிய நிறுவனங்களின் கலாச்சாரங்களுடன் எளிதாக ஒருங்கிணைகிறதுநிறுவனத்தின் வெற்றிக்கு எது முக்கிய காரணம் என நினைக்கிறீர்கள்

அதிர்ஷடவசமாக டாடா நிறுவனத்திற்கு 150 ஆண்டு கால பாரம்பரியம் இருக்கிறது. ஒரு நிறுவனம் பாரம்பரிய கெளரவத்தைப் பெற அதன் தலைமைப்பொறுப்பில் இருப்பவர் மிகச் சரியாக நாணயமாக இயங்க வேண்டும். ஒரு கண்ணாடி  மீன் தொட்டியிலிருக்கும் மீனைப்போல மிக சுத்தமாக எல்லோருக்கும் தெரியும் ஒளிவு மறைவு இல்லாதாக  இருக்க வேண்டும். தலைவர் இப்படி இயங்கினால் நிறுவனத்தில் மற்றவர்கள் அதைத் தொடர்வார்கள். அது மிக முக்கியம் டாடாவில் என் முன்னோர்கள் கடைப்பிடித்த இந்த விஷயத்தை நான் தொடந்தேன். என்னைத் தொடர்ந்து வருபவர்களும் செய்கிறார்கள். தலைவரின் பண்பு நிறுவனத்தின் பண்பாகிறது. இதை டாட்டா நிறுவனத்டின் வெற்றியாக கருதுகிறேன்.


 உங்கள் பணிநிறைவுக்கு பின்னர்  நீங்கள்  இப்போது புதிதாக உருவாகிக்கொண்டிருக்கும் ஸ்டார்டப் கம்பெனிகளில் மட்டுமே  அதிக அளவில் முதலீடு செய்வதாக அறிகிறோம். இது ஏன்? மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்யமான டாடா நிறுவனம் இதை ஏன் செய்யவில்லை?

நான் டாடாவின் தலமைப்பொறுப்பில் இருந்த போது என் சொந்த விருப்பங்களைச் செய்ய முடியாது. அது சரியானதும் இல்லை. டாடா போன்ற எல்லாவற்றிலும் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களின் தலைவர் வேறு நிறுவனங்களில் முதலீடு செய்தால் அது டாடாநிறுவனதிற்கு  சிக்கல்களை ஏற்படுத்தலாம் என்பதும் ஒரு காரணம். ஒய்வு பெற்றபின் நான் மிகப்பெரிய பணக்காரன் இல்லை என்னிடமிருக்கும் சேமிப்பை நான் இ காமர்ஸ் ஆன் லைன் வணிகம் போன்றவற்றில் முதலீடு செய்திருக்கிறேன். 80களில் அமெரிக்காவில் எழுந்ததைப்போல  இங்கு ஒரு அலை எழுந்திருப்பதை உணர்கிறேன். இளைஞர்கள் இடுபட்டிருக்கும் இந்த் துறைகள் தான்  நாட்டின் மிகச்சிறந்த எதிர்காலத்திற்கு காரணமாக இருக்க போகிறது என்று கணிக்கப்பட்டிருப்பதால் நான்  அவைகளில் முதலீடு செய்துகொண்டிருக்கிறேன். . இந்த முதலீடுகளை முடிவு செய்ய தனி டீம் எதுவுமில்லை. நானே புதிய நிறுவனங்களின் வளர்ச்சியை ஆராய்கிறேன்.   முதலீடு செய்கிறேன் அதில் பலர் எனக்கு முன் அறிமுகம் இல்லாதவர்கள். .

நானோ காரின் டிசைன், தயாரிப்பு  விற்பனை போன்றவற்றினால் டாட்டா நிறுவனம் கற்ற பாடம் என்ன? 


நிறையக் கற்றோம். அந்த காரின் வடிவமைப்பில் ஈடுபட்டவர்களின் சராசரி வயது 26. இந்திய இளைஞர்களால் இந்தியர்களுக்காகத் தயாரிக்க பட்ட கார அது. ஆனால் திட்டமிட்ட படி அதை வெளியிட முடியவில்லை.  உற்பத்திக்கான  தொழிற்சாலையை அமைக்க அழைக்கப் பட்ட  மாநிலத்தில் இருந்து வெளியேறவேண்டியிருந்தது.  பெங்கால் டைகர் தாக்கியதாக மீடியாக்கள் சொன்னது. டைகரோ டைகரஸோ(பெண்புலி)  விளைவுகள் வீபரீதமாக இருந்தது. ஆலையை புதிய இடத்தில் மீண்டும்துவக்கியதில் தயாரிப்பு ஓராண்டு தாமதாமாகிவிட்டது.  விற்பனையிலும் எஜெண்ட்கள் இல்லாமல் நாங்கள் அறிமுகப்படுத்திய முறை வரவேற்பைப் பெறவில்லை. விளமபர்ஙளில் இது இந்தியவின்  மலிவான கார் என்று சொல்லிக்கொண்டிருந்தோம். இந்தியாவில் கார் என்பது ஒரு அந்தஸ்தின் சின்னம். அதில் மலிவானது எனச் சொல்லப்பட்டதை வாங்க மக்கள் தயங்கினர்.  நாங்கள் ”இதுஎல்லோரும் வாங்க்கூடிய கார்” என விளம்பர படுத்தியிருக்க வேண்டும். காரின் தரம்,வசதிகளை விட இந்த மலிவு  எனற வார்த்தை பெரிய விஷயமாக போட்டியாளர்களால் பேசப்பட்டதினால் விற்பனை பாதித்தது. இப்போதுபுதிய மாடலை அறிமுகப்படுத்தி  மெல்லச் சரிசெய்து கொண்டிருக்கிறார்கள். வரும் காலங்களில் இது சீராகும்.  என்று நம்புகிறேன்
(நனறி புதிய தலைமுறை060815)

13/4/15

உறங்கிக்கொண்டிருக்கும் புயல் மீண்டும் வருகிறதா?

 புதிய தலைமுற 16/4/15 இதழில் எழுதியது 

(பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் சதி திட்டம் தீட்டியதாக பாஜ மூத்த தலைவர் எல்.கே. அத்வானி உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுகள்  கைவிடப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் 4 வாரத்தில் பதிலளிக்கும்படி எல்.கே. அத்வானி, ஜோஷி உள்பட 20 பேருக்கு நோட்டீஸ்  அனுப்ப சமீபத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.  இந்தவழக்கு, இந்த  அதிரடி உத்தரவின் பின்னணியைப் பற்றிய ஒரு அலசல் ).
டிசம்பர் 6 1992. இந்திய வரலாற்றில்  ஒர் கருப்பு பக்கம். ராமஜன்ம பூமியாக வர்ணிக்கபடும்  அயோத்தியாவில், இருந்த பாபர் மசூதி இடித்து தரை மட்டமாக்க பட்டதும் அதன் விளைவாக எழுந்த கலவரங்களும் போராட்டங்களும் கால் நூற்றாண்டை கடந்த பின்னரும் அழியாவடுக்களாக இன்றும்  பலர் மனதிலிருக்கிறது.  கர சேவைக்காக போன பக்தர்கள் கூட்டம் தலைவர்களின் எழுச்சி மிக்க பேச்சுகளால் ஆவேசம் அடைந்து, உணர்ச்சி வசப்பட்டு அந்த பழைய கட்டிடத்தை இடித்துவிட்டார்கள் என்று சொல்ல பட்ட இந்த ”விபத்து” குறித்து, நீண்ட காலம் தொடர்ந்து , வழக்குகளும் கமிஷனின் விசாரணைகளும் நடந்து ஒய்ந்திருக்கும் நிலையில்  உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட   ஒரு மனுவின் அடிப்படையில்  இந்த நோட்டீஸ்கள் அனுப்ப பட்டிருக்கிறது. . பதில்களை ஏற்று உச்ச நீதிமன்றம் வழக்கை விசாரிக்குமானால் மீண்டும் உயிர் பெறப்போவது வழக்கு மட்டுமில்ல. சில அரசியல் பிரச்னைகளும்தான்.
என்ன வழக்கு? ஏன் தலைவர்கள் மீது வழக்கு?
அயோத்தி நகரம் கடவுள்-அரசர் இராமர் பிறந்த இடமென்றும் இந்தியாவின் புனிததன்மை வாய்ந்த இடங்களுள் ஒன்றாகவும் ருதப்படுகிறது.  1528இல் முகலாயர் படையெடுப்பிற்குப் பின் முகலாய படைத்தலைவர் மிர் பாங்கியினால் முகலாயப் பேரரசர் பாபரின்பெயரால் அயோத்தியில் ஒரு மசூதி கட்டப்பட்டது. அங்கிருந்த இராமர் கோயிலை இடித்த பின்னரே மீர் பாங்கி மசூதியைக் கட்டினார் என்று இந்துக்கள் நம்புகின்றனர். ராமர் சிலைகள் பின்னாளில் கொண்டுவந்து வைத்து வழிபட்டனர் இந்துக்கள் என்று இஸ்லாமியர்கள் சொல்லுகின்றனர். ஆனால்  பல ஆண்டுகளாக இந்த இடம்  இந்துக்களாலும் இஸ்லாமியர்களாலும் மத வழிபாடுகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆங்கிலேயேர் ஆட்சிகாலத்திலியே இடத்திற்கு உரிமை கோரி வழக்குக்குள் இருந்த போதிலும் அது மத மோதலாகவோ கலவரமாகவோ இல்லை.  இந்திய விடுதலைக்குப் பிறகு, பல இயக்கங்கள் அவ்விடத்தைச் சொந்தம் கொண்டாடி புதிய வழக்குகளைத் தொடர்ந்தன.
பாரதிய ஜனதா கட்சி (பாஜக) 1989 தேர்தலின்  இந்த அயோத்தி பிரச்சனையை தேர்தல் களத்தில் வைத்தது. . செப்டம்பர் 1990இல் பாஜக தலைவர் எல். கே. அத்வானி அயோத்தி பிரச்னையை நாடெங்கும் எடுத்துச் செல்லும் வழியாக ஓர் இரதப் பயணத்தைத் (இரத யாத்திரை) தொடங்கினார். இதனால் நாடெங்கும் மதவாத உணர்ச்சி அலைகள் வீசத்துவங்கின.  இன்னும் அந்த அலைகள்  ஒயவில்லை.
அயோத்தியில் இருந்த ராமர் கோயிலை இடித்துவிட்டுதான் பாபர் மசூதி கட்டப்பட்டது. எனவே நாங்கள் பாபர் மசூதியை இடித்துவிட்டு ராமர் கோயில் கட்டப் போகிறோம்என்ற பழிக்குப் பழிபாலிடிக்ஸ்தான் இதன் அடிப்படை. ‘1996&ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ம் தேதி  பகல் 12.15 மணிக்கு அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிகள் தொடங்கும்என்று வெட்ட வெளிச்சமாக அறிவித்துவிட்டுதான் அயோத்தியை நோக்கி கிளம்பினார்கள் பா.ஜ.க., விஸ்வ இந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளின் தொண்டர்கள். சுமார் 2 லட்சம் பேர். பெருங்கூட்டமாக குவிந்துவர அயோத்தி குலுங்கியது. உணர்ச்சிபூர்வமான பேச்சு  ஒருங்கிணைக்கப்ட்ட கூட்டு நடவடிக்கையின் விளைவுவாக  475 ஆண்டுகள் பழமையான பாபர் மசூதி இடித்து தரை மட்டமாக்கப்பட்டது.
தேசமே அதிர்ந்துது போனது. கலவரங்கள் வெடித்தன,  சட்டம் மெதுவாக அதன் கடமையை செய்ய ஆரம்பித்தது.

பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு இரண்டு குற்றப் பத்திரிகைகளை தாக்கல் செய்தது. மசூதியை இடித்ததாக `பெயர்  தெரியாத லட்சக்கணக்கான கரசேவகர்கள் மீது ஒரு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மசூதியை இடிக்க சதி திட்டம் தீட்டியதாக பாஜ மூத்த தலைவர்  எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மத்திய அமைச்சர் உமாபாரதி, முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் உள்பட 20 பேர் மீது மற்றொரு  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தவிர மதக் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியது, தேச ஒற்றுமைக்கு எதிராக செயல்பட்டது, உள்பட  பல்வேறு பிரிவுகளின் கீழ் அத்வானி உள்ளிட்டோர் மீது மற்றொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
 சதி திட்டம் தீட்டியதாக அத்வானி, ஜோஷி உள்ளிட்ட பலர் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் இல்லாததால் அவற்றை கைவிடுவதாக 2001,
  மே 4ம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது
. அலகாபாத் உயர் நீதிமன்றம் 2010 மே 21ம் தேதி அளித்த தீர்ப்பில், சதி திட்டம் தீட்டியதாக தொடரப்பட்ட குற்றச்சாட்டில் ஆதாரம் இல்லை  என்று அத்வானி உள்ளிட்டோரை விடுதலை செய்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது.
ஆனால், அத்வானி உள்பட பிறர் மீது  கூறப்பட்டுள்ள மற்ற குற்றச்சாட்டுகள் குறித்து ரேபரேலி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை தொடர்ந்து நடத்த அனுமதி அளித்தது.
அலகாபாத் உயர் நீதி மன்ற தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய அரசு முடிவெடுத்தது.  ஆனால் 6 மாதங்களுக்குள்ளாக செய்திருக்கவேண்டிய மேல் முறையீட்டை 8 மாதத்திற்கு பின்தான் செய்தது வழக்கை குறிபிட்ட கால கெடுவுக்குள் செய்யாமல் தாமதபடுத்தி செய்திருந்தது. இம்மாதிரியான நடைமுறை வீதிமீறல்கள் செய்வது  எதிர்வாதம் செய்யபவர்களுக்கு அனுகூலமாக முடியும்.ஆனால் உச்ச நீதிமன்றம் தாமதத்தை கண்டித்து காரணம் கேட்டு சிபிஐயை விளாசியது. தாமதத்திற்காக சொல்லபட்ட காரணம் ”வழக்கில் சம்பந்தபட்டவர்கள்  அனைவரும் மிக முக்கிய அரசியல் வாதிகள் என்பதால் மிக ஜாக்கிரதையாக கையாளுகிறோம்” என்பது. அப்போது ஆட்சியில் இருந்தவர்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணி. அவர்கள் இந்த வழக்கைஏன் தமாதப்படுத்தினார்கள்? என்பது இந்திய அரசியலில் புரிந்து கொள்ள முடியாத புதிர்களில்  ஒன்று.
இப்போது மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.
 இந்த கட்டத்தில் தான்  தற்போது மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் அத்வானி உள்ளிட்டோர் மீதான சதி திட்டம் தீட்டிய வழக்கில் மேல்முறையீடு செய்வதில் சிபிஐ  காலதாமதம் செய்து வருகிறது.  வழக்கை நீர்த்துபோகும் வகையில் சிபிஐ செயல்படுகிறதுபிஜே பி கட்சியின் செல்வாக்கு மிகுந்தவர்கள் ஆட்சியிலும் மூக்கிய பதவிகளிலும் இருக்கிறார்கள். மேலும் இந்த வழக்கில் தலைவர்கள் விடிவிக்கபட்ட்து நீதிமன்ற வரலாற்றில்  வழங்கப்பட்ட முக்கியமா அநீதி.  செயலைதூண்டியது, அதைச்செய்யவசதிகள் செய்துகொடுத்தது மசூதியை உடைத்தது எல்லாமே ஒரு சதிச்செயலின் அடிப்படையில் எழுந்த விஷயம். அப்படியிருக்க சதித்திட்டத்தைமட்டும் தனியாக பிரித்து குற்றத்திற்கான ஆதாதரம் இல்லை என சொல்லியிருப்பது நீதிமன்ற த்தின் தவறு என்பதால்  . அத்வானி உள்ளிட்டோர் மீதான சதி திட்டம் தீட்டிய வழக்கை  மீண்டும் முழுமையாக விசாரிக்க உத்தரவிட  வேண்டும் என்ற ஹாஜி மக்மூத் அகமதுவின் மனுவை  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல். தத்து  தலைமையில் நீதிபதி அருண் மிஸ்ரா அடங்கிய பெஞ்ச் ஏற்றுகொண்டு நோட்டீஸ்கள் அனுப்பிருக்கிறது.

அயோத்தி நிகழ்வும் அரசியலும்.
பாபர் மசூதி இடிப்பு நிகழ்வு இந்திய அரசியலில்  சில புதிய அத்தியாங்களை உருவாக்கின. மதவாதத்துக்கும் வாக்குபெட்டிக்கும்  உறவு வலிமையானது..
‘‘இந்திய முஸ்லிம்களை இந்தியாவுக்கு எதிரான சக்தியாக மாற்ற பாகிஸ்தான் உளவு நிறுவனம் ஐ.எஸ்.ஐ. எவ்வளவோ முயற்சித்தது. ஆனால் இஸ்லாமியர்கள் நாங்கள் இந்தியர்என்று ஒருங்கிணைந்து நின்றார்கள். பாபர் மசூதியை இடித்ததன் மூலம் ஐ.எஸ்.ஐ. செய்ய முடியாததை பா.ஜ.க.வும்,  ஆர்.எஸ்.எஸ்ஸும் ஒரே நாளில் செய்து முடித்தன’’  என்று இந்திய உளவு நிறுவனம் ராவின் முன்னால் உளவு அதிகாரி ராமன் தனது புத்தகத்தில் எழுதியிருக்கிறார்.நெருக்கடி நிலையை முழுமுச்சாய் எதிர்த்து அரசியலில் ஜனநாயகவாதிகளாக நிலை நாட்டிக் கொண்டவர்கள் மதவாத அரசியல்வாதிகளாக அடையாளம் காணப்பட்டார்கள்.
பார் மசூதி இடிப்பை தொடர்ந்து கிரிமினல் வழக்குகளைத் தவிர மத்திய அரசு ஒரு கமிஷன் அமைத்தது.விசாரணைக் கமிஷன் தலைவர் லிப்ரான்.
பாபர் மசூதி இடிப்புச் சம்பவத்திற்கும் 1992 ல் டிசம்பர் பதினாறாம் தேதி அதாவது பாபர் மசூதி இடிக்கபட்ட பத்து நாட்களுக்குப் பின நீதிபதி லிப்ரான் தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கபட்டது. சர்ச்சைக்குரிய கட்டிடத்தை இடித்ததில் மாநில அரசு - முதல்வர், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், மற்றும் மதவாத அமைப்புகளின் பங்கு என்ன? உத்திரப்பிரதேச அரசின் பாதுகாப்பு குறைபாடுகள் என்ன? இவை பற்றி விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி கமிஷனை மத்திய அரசுகேட்டுக்கொண்டது.விசாரணைக் கமிஷனின் கெடு காலம் மூன்று மாதம் என்றும் அறிவித்தது.
48 முறை நீடிக்கபட்ட கமிஷன் விசாரணை செய்ய நீதிபதி லிப்ரன் பதினேழு ஆண்டு காலம் எடுத்து கொண்டார். பதினேழு ஆண்டு விசாரணைக்கு மத்திய அரசு செலவு செய்த தொகை எட்டு கோடி ரூபாய். கமிஷனின் ரகசிய அறிக்கை அதிகாரபூர்மாக வெளியிடப்படாமலேயே கசிந்து வெளியாகிவிட்டது. அத்வானியின் ரத யாத்திரை, மசூதி இடிக்கப்படுவதற்கு முதல் நாள் அயோத்திக்கு வந்து உரையாற்றிச் சென்ற வாஜ்பாய், இடிக்கப்படும் புகைப்படங்கள், வீடியோ ஆதாரங்கள், மசூதி இடிக்கப்பட்டதை நியாயப்படுத்தி பால்தாக்கரே, கல்யாண் சிங், உமாபாரதி ஆகியோர் வெளியிட்ட அறிக்கைகள் (ராமனுக்கு அயோத்தியில் கோயில் கட்டாமல் வேறு எங்கு கட்டுவது?’ &ஜெயலலிதா) என்று பல ஆதாரங்கள் அறிக்கையில் சொல்லப்பட்டிருந்தாலும்  கமிஷனின் அறிக்கையின் அடிப்படையில் அரசு எந்த வழக்கையும்  தொடரவில்லை.
தினசரிகளில் அவ்வபோது 4 பக்கத்தில் தலைகாட்டிக்கொண்டிருந்த இந்த விஷயம் மெல்ல மறக்கப்பட்டுகொண்டிருந்தபோது  கடந்த ஆண்டு  துவக்கத்தில்
பாபர் மசூதி இடிப்பு வி.ஹெச்.பி., சிவசேனாவால் நடத்தப்பட்ட திட்டமிடப்பட்ட சதிச் செயல் என்றும்,  இந்த இரு அமைப்புகளும் தங்களது தொண்டர்களுக்கு பல மாதங்களுக்கு முன்பாகவே பயிற்சி அளித்ததாகவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் பலிதானி ஜாதாஎனும் பெயரில் தற்கொலைப்படைகளும் அமைக்கப்படதாகவும் கூறப்பட்டுள்ளளது. பயிற்சி குஜராத்தில் ஒரு கிராமத்தில் முன்னாள் ராணுவ அதிகாரிகளால் அளிக்கபட்டது. எதற்கு பயிற்சி என்று சொல்லப்படாத நிலையில் கடின மலைஏற்றம், கயிற்றில் தொங்கி சுவற்றை உடைப்பது போன்ற பயிற்சிகள் தரப்பட்டன. இந்த படைக்கு லக்‌ஷ்மண சேனை என்று பெயர்.  என ஒரு அதிரடி செய்தியை வெளியிட்ட்து கோப்ரா போஸ்ட். கோப்ரா போஸ்ட் என்பது ஒரு புலனாய்வு இணைய பத்திரிகை. (டெஹ்ல்கா மாதிரி) இதன் இணை ஆசிரியர்  கே ஆஷிஷ்  பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக ஓர் ஆய்வு நூல் எழுதுவதாக  சொல்லி , 23 முக்கிய தலைவர்களை பேட்டி எடுத்துள்ளார்இவர்களில் 15 பேரை நீதிபதி லிபரான் கமிஷன் குற்றவாளிகள் என்று குறிப்பிட்டுள்ளது. 19 பேர் குற்றவாளிகள் என்று சிபிஐ தனது குற்றப்பத்திரிக்கையில் தெரிவித்துள்ளது. ஆப்ரேஷன் ஜென்மபூமிஎன்ற பெயரில் நடத்தப்பட்ட சதிச்செயலின் அடித்தளம் வரை சென்று கண்டறிந்த பல உண்மைகளை வெளியிட்டிருக்கும்  'கோப்ரா போஸ்ட்'  இது எங்களது இரண்டாண்டு புலானாய்வு. அத்தனைக்கும் பதிவு செய்யபட்ட ஆதாரம் இருக்கிறது வழக்குகளை சந்திக்கதயார் என சவால் விட்ட்து. ஆனாலும் ஐமு அணி அரசு  அசையவில்லை யார் மீதும் வழக்கு எதுவும் போடவில்லை.

இனிமேல்  என்ன நடக்கலாம்? 
அரசியலின் போக்கை நீதிமன்ற வழக்குகளின் முடிவுகளும், அரசின் முடிவுகள் வழக்குகளின் போக்கையும் மாற்றும் என்பதை சமீப அரசியல் சரித்திரங்கள் நமக்கு சொல்லுகின்றன.  இந்த வழக்கை உச்சநீதி மன்றம்  தீவிரமாக விசாரிக்க ஆரம்பித்தால், சமீபகாலமாக அது கடைப்பிடிக்கும் வழிமுறையான ஒரு சிறப்பு புலனாய்வை அமைத்து நேரடியாக தங்களிடம்  அறிக்கைகள் தந்து  குறிப்பிட்ட கால கெடுவுக்குள்  வழக்கை முடிக்க செய்யும். அல்லதுசிபிஐயை கண்டித்து உடனடியாக வழக்கை நடத்தி முடிக்க முடுக்கிவிடும்.
கிளமாக்ஸாக மனுவே தள்ளுபடியும் செய்யபடலாம். (வாய்ப்பு மிக குறைவு. விபரங்கள் கேட்டபின் பொதுவாக தள்ளுபடி செய்யப்படுவதில்லை)
எப்படி நடந்தாலும் அது அரசியலில் நேரிடையான தாக்கத்தை விளைவிக்கும். காரணம் எவ்வளவு விரைவாக நடைபெற்றாலும் வழ்க்கு முடிய ஒராண்டு ஆகும்
 இந்த வழக்கின்  முடிவுகள் வரும்போது 2016ல்  சில மாநிலங்கள் தேர்தலை சந்திக்கிறது. அதில் ஒன்று இந்த காட்சிகளின் களனான உத்திரபிரதேசம்,
இப்போது உபி சட்டமன்றத்தில் 403 சீட்டுகளில் வெறும் 47 மட்டுமே வைத்திருக்கும் பிஜெபி. கடந்த நாடாளுமன்றத்தில் கூட்டணியோடு 83 சீட்டுகளில் 70ஐ பெற்றிருப்பதால் 2017 ல் அங்கு மாநில ஆட்சியை பிடிக்கும் கனவில் இருக்கிறது.  இந்த வழக்கில் தலைவர்கள் வீடுவிக்க பட்டால் தங்கள் மீது பூசப்பட்டிருக்கும் மதவாத கரை மறைந்து விட்டதாக அறிவித்துவிடுவார்கள். மாறாக தண்டிக்கபட்டால் ராமருக்காக நாங்கள் செய்த தியாகம் என அந்த அனுதாபத்தை ஓட்டாக மாற்ற முயற்சிப்பார்கள்.
வழக்கு தீவிர கட்டத்தை அடைவதற்குள் காங்கிரஸின் தலைவராகியிருக்கும் ராகுல்  இந்த வழக்கினையே ஆயூதமாக கையிலெடுத்து பிஜேபியின் மதவாத அரசியலை  கண்டனம் செய்து களமிறங்கும் வாய்ப்பும் இருக்கிறது. ஆட்சியிலிருந்த போது கிடைத்த வாய்ப்பை நழுவவிட்டவர்கள் இதையாவது கோட்டைவிடாமல் செய்யவார்களா என்ற  கேள்வியும் எழுகிறது. .
எந்த பிரச்னையிலும் ஒரு வாய்ப்பை கண்டுபிடிப்பவர்கள் அரசியல் வாதிகள். பிஜெபி தங்கள் உட்கட்சி அரசியல் பிரச்னைகளை சரி செய்ய  இந்த வழக்கை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டாலும் ஆச்சரியம் இல்லை.. மோடி பிரதமரான நேரத்தில்  கட்சியின் மூத்த தலைவர்கள் ஒரங்கட்டபட்டார்கள்:. இந்த வழக்கில் சம்பந்தபட்டவர்களும் அவர்கள்தான். காங்கிரஸ் ஒரு கட்டத்தில்  முன்னாள் பிரதமர்  நரசிம்ம ராவை ஒதுக்கி அவர் மீதுள்ள வழக்குகளை அவரே சமாளித்துகொள்ள வேண்டும் என சொன்னது போல  இவர்களையும் பிஜேபி ஒதுக்கி விடும் ஒரு நிலையும் ஏற்படலாம். அதன் மூலம் இன்றைய தலைவர்கள் தாங்கள் மதவாத தீவிரவாதிகள் இல்லை என்ற பிம்பத்தை ஏற்படுத்தவும் முயற்சிக்கலாம்.
எப்படியாக இருந்தாலும் இந்த வழக்கு 2016 மாநில தேர்தலுக்குமுன் மக்களின் மிக கவனம் பெரும் வழக்காக இருக்கும்.

”இந்திய அரசியலின் முக்கிய முடிவுகள் இப்போது கோர்ட்களில் எடுக்கபடுகிறது. மக்கள் தேர்தல் முடிவுகளைப் போல சில  வழக்குகளில் நீதிமன்றத்தின் முடிவுகளை காண  ஆவலுடன் காத்திருக்கிறார்கள்” என ஒரு ஆங்கில நாளிதழின் மூத்த செய்திஆசிரியர் எழுதுகிறார்.

அது இந்த வழக்குக்கும் பொருந்தும்.

3/1/15

புத்தாண்டின் முதல் நாள் காலையில்


புத்தாண்டின் முதல் நாள் காலையில் முதலில் படித்த பதிவு இது. நண்பர் சரவணின் விமர்சனம். ஒரு அருமையான பதிவாக கருதுகிறேன். எழுதியிருப்பதை சொல்லிவிட்டு விடுபட்டிருப்பதை அவர் பார்வையில் பேசியிருக்கிறார். எழுதுபவனின் சந்தோஷங்களிள் ஒன்று அதைப்பற்றி மற்றவர்கள் பேசுவது. இந்த புத்தாண்டுதினத்தில் அந்த சந்தோஷத்தை கொடுத்த நண்பர் சரவணுக்கு நன்றி.





பூ.கொ. சரவணன்
நேருவின் ஆட்சி- பதியம் போட்ட 18 ஆண்டுகள் புத்தகத்தைப் புத்தாண்டின் முதல் புத்தகமாக வாசித்து முடித்தேன். நேருவின் வாழ்க்கையைப் பற்றிப் பேசுகையில் தேச விடுதலைக்குப் பாடுபட்ட காலத்தைப் பதிவு செய்துவிட்டு, சீனா,காஷ்மீர் சிக்கல்கள் ஆகியவற்றில் நேரு சொதப்பினார் என்று சொல்வதோடு நேருவின் ஆட்சிக்காலத்துக்கு முற்றும் போட்டு முடித்துவிடுவதே பெரும்பாலும் நடக்கிறது. நேருவின் இந்தப் பதினெட்டு ஆண்டுகால ஆட்சி பற்றித் தனியான புத்தகங்கள் வந்ததில்லை என்கிற பெரிய குறையை ஆசிரியர் தீர்க்க முயன்றிருக்கிறார். நூலின் உள்ளடக்கம் பற்றிப் பேசிவிட்டு பின்னர் விமர்சனங்களுக்குள் செல்கிறேன் :
தனியாக முஸ்லீம்களுக்கு ஒரு தேசம் என்று சொல்லி வெறுப்பை விதைத்து அறுவடை செய்த ஜின்னாவுக்கே நாட்டின் பிரதமர் பதவியைக் கொடுத்து சிக்கலைத் தீர்க்கலாம் என்று காந்தி சொன்ன பொழுது அதை நேரு ஏற்க மறுத்தார். கிருபாளினி, படேல் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி நேருவை தலைமைப் பொறுப்புக்குக் கொண்டு வருவதைக் காந்தி உறுதி செய்திருந்தாலும் எல்லாச் சமயத்திலும் அவர் சொல்வதே தான் கேட்க வேண்டிய அவசியமில்லை என்பதை நேரு செய்து காண்பித்தார். இந்திய விடுதலையைப் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் சர்ச்சில் முதலிய பலபேர் எதிர்க்க உப்பு சத்தியாகிரகத்தின் பொழுது இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த இர்வின் உணர்ச்சியும், உண்மையும் கலந்த ஒரு உரையை நிகழ்த்தி நாடாளுமன்ற அனுமதி பெற்று தனியான தேசமாக இந்தியா உருவாவதை சாதித்தார்.
பிரிவினைக்குப் பிறகு தேசம் உருவாகிறது. நேரு விடுதலை நாளுக்குத் தயாராக வேண்டும். தேச விடுதலைக்கு முக்கியக் காரணமான காந்தி மதத்தின் பெயரால் வெட்டிக்கொண்டிருந்த மக்களிடையே அமைதியை கொண்டுவர போயிருந்தார். லாகூரில் இந்துக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்கிற தகவல் வந்து சேர்ந்து கண்ணீர்விட்டு அழுத நேரு எப்படி மக்கள் முன் உரையாற்றப் போகிறோம் என்று உள்ளுக்குள் கலங்கிக்கொண்டு இருந்தார். எந்தத் தயாரிப்பும் இல்லாமல், வெறுப்பை விடுத்து சகோதரர்களாக இணைந்து புதுத் தேசம் படைப்போம் என்பதை ‘விதியோடு சந்திப்புக்கு ஒரு ஒப்பந்தம்’ உரையில் நேரு தேச மக்களின் மனதில் விதைத்தார். மவுண்ட்பேட்டனிடம் நேரு கொடுத்த அமைச்சரவை பட்டியல் என்று பெயரிடப்பட்ட உறைக்குள் வெறும் வெள்ளைத்தாள் தான் இருந்ததாம்.
சமஸ்தானங்களை இந்தியாவோடு இணைக்கும் பணியில் படேல், மேனன் ஆகியோர் ஈடுபட்ட பொழுது நேரு உறுதுணையாக இருந்தாலும் சமயங்களில் முரண்டும் பிடித்திருக்கிறார். இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த நிஜாம் ஆண்டுகொண்டிருந்த ஹைதரபாத்தை உடனே தாக்குவது இந்திய முஸ்லீம்களை அச்சத்துக்கு உள்ளாக்கும் என்று அமைதி காத்த நேருவை மீறி அங்கே ரஸாக்கர்களின் அட்டூழியத்தை ஒழிக்கப் போலீஸ் நடவடிக்கை தேவை என்று படேல் வாதிட்ட பொழுது ‘நீங்கள் மதவாதி!’ என்று சொல்லிவிட்டு நேரு வெளியேறினார். பின்னர் ராஜாஜி கிறிஸ்துவக் கன்னியாஸ்திரிகள் வன்புணர்வுக்கு ரஸாக்கர்களால் உள்ளாக்கப்பட்டு இருப்பதாக அயல்நாட்டு தூதுவர் அனுப்பிய கடிதத்தைக் காண்பித்ததும் நிலைமையின் வீரியம் உணர்ந்து நேர்ந்த அவலங்களால் ஏற்பட்ட கண்ணீரை அடக்க முடியாமல் போலீஸ் நடவடிக்கைக்கு அனுமதி தந்தார் நேரு. இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்த ஜூனாகாத்தை ஜின்னா தந்திரமாகப் பெற்ற பின்னர் அதை இந்தியாவோடு இணைத்த பின்பு அங்கே வாக்கெடுப்பு நடத்தி இணைத்துச் சிக்கல்களை நேரு தவிர்த்தார்.
காஷ்மீருக்குள் பாகிஸ்தான் பகுதி பதான்கள் நுழைந்த நிலையில் இந்தியாவின் உதவியை ஹரிசிங் கேட்டதும் ராணுவத்தை நேரு அனுப்பி வைக்கலாமா வேண்டாமா என்று நீண்ட நெடிய கூட்டத்தை நடத்தி, போரைத் தவிர்க்கலாம், ரஷ்ய உதவி, ஆப்ரிக்க மாதிரிகள் என்று ஓயாமல் பேசிக்கொண்டே இருந்தார். ராய்புச்சர் என்கிற ஆங்கில அரசை சேர்ந்த ராணுவத் தளபதி பதவியை ராஜினாமா செய்துவிடுவேன் என்று மிரட்டுவதும் நடந்தது. படேல் தீர்க்கமாகக் காஷ்மீர் நோக்கி ராணுவம் செல்லும் என்று சொன்னதோடு, ராய் புச்சர் பதவி விலகிக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டார். காஷ்மீர் இந்தியா, பாகிஸ்தான் இரண்டு பிரதேசங்களுக்கு இடையே பிரிந்திருக்க வேண்டும் என்பதையே பிரிட்டன் விரும்பியிருக்கிறது. அடித்துக்கொண்டு கிடப்பார்கள் என்பது ஒருபுறம், காஷ்மீர் முழுமையாக இந்தியாவுக்குக் கிடைத்துவிட்டால் பாகிஸ்தானை அது விழுங்கிவிடும் என்றும் அஞ்சியிருக்கிறார்கள். காஷ்மீர் சிக்கலை ஐ.நா. சபைக்குக் கொண்டு சென்று உள்நாட்டு சிக்கலாக முடிந்திருக்க வேண்டிய அதைச் சர்வதேச சிக்கலாக நேரு மாற்றினார் என்பதோடு, வாக்கெடுப்புக்கு அவர் ஒத்துக்கொண்டார். பாகிஸ்தான் முழுமையாக விலகிய பிறகே வாக்கெடுப்பு என்பதைப் பாகிஸ்தான் கேட்கத்தயாராக இல்லை என்பதால் முதல் போர் முடியாத போராக இருக்கிறது.
காந்தியின் படுகொலைக்குப் பின்னர்ப் படேல், நேரு இணைந்து ஆர்.எஸ்.எஸ். அமைப்புத் தடை செய்யப்படுவதை உறுதி செய்ததன் மூலம் இந்தியா இந்து பாகிஸ்தான் ஆவதை தடுத்தார்கள். விடுதலைக்குப் பின்னர் ஜனநாயக ரீதியிலேயே தேர்தல் நடக்கவேண்டும் என்று சொல்லி கம்யூனிஸ்ட் பாணியிலான அரசையோ, ராணுவ அரசையோ, சர்வாதிகார போக்கையோ நேரு முன்னெடுக்காமல் உலகின் மிகப்பெரிய தேர்தலை நடத்தி சாதித்தார்.
இந்துப் பெண்களுக்கு ஜீவனாம்சம், விவாகரத்து பெற உரிமை, சொத்துரிமை ஆகியவற்றை வழங்கும் இந்து பொதுச்சட்டங்களை நேரு நிறைவேற்ற முயன்ற பொழுது இந்து மதத்தின் காவலர்களாகச் சொல்லிக்கொள்ளும் ஜனசங்கம், ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் அதை எதிர்த்தன. ஆனால், அவற்றை நிறைவேற்றி சீர்திருத்தங்களுக்குச் சட்டரீதியான முகம் கொடுத்தார் நேரு.
மொழிவாரியாக மாநிலங்களைப் பிரிவினை ஏற்படுத்திய ரணத்தால் முதலில் மறுத்த நேரு அதற்குப் பரவலான ஆதரவு இருந்ததால் அப்படியே அமைக்க ஜனநாயகரீதியில் ஒத்துக்கொண்டார். ‘நியாயமான முறையில் நியாயமான தேசத்தைக் கட்டமைத்தேன்.’ என்று நேரு சொன்னது பெரும்பாலும் உண்மையே. பழங்குடியினர், பட்டியல் ஜாதியினர் ஆகியோருக்கு உதவிகள் தேவை என்கிற எண்ணம் கொண்டிருந்தவர் நேரு. அதேசமயம் அவர்களுக்கு இட ஒதுக்கீடு தருவதைக்கூட அவர் விரும்பவில்லை. திறன் குறையும் என்று அவர் கருதினார். எனினும், அவர்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டை நீக்க அவர் முயற்சிக்கவில்லை. அதேசமயம் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்கிற பரிந்துரையை அதைப் பற்றி ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவின் தலைவரே நிராகரித்ததால் கிடப்பில் போட்டார்கள்,
முழுமையாகச் சோஷலிசம் என்று பாயாமல் நேரு ஜனநாயக சோசலிசத்தை முன்னெடுத்தார் என்பதே உண்மை. அவரின் ஆரம்பகால வேகத்தைப் பார்த்துக் கம்யூனிஸ்ட்களே அஞ்சினாலும் அவர் அத்தனை வேகமாகச் சோசியலிசம் நோக்கிப் பயணப்படவில்லை என்பதே உண்மை. கல்வி, நிலப்பங்கீடு ஆகியவற்றில் மகத்தான சீர்திருத்தங்கள், தொழிலாளர்கள் மீது காவல்துறை பாயத்தடை என்று இயங்கிய நம்பூதிரிபாட் அரசை கலைக்கச் சொல்லி உத்தரவிட்ட நேருவின் செயல் அவரின் ஜனநாயகப்பண்பில் கரும்புள்ளியாக விழுந்தது.
சீனச்சிக்கலில் கிருஷ்ணமேனனை நம்பிக்கொண்டு என்ன நடக்கிறது என்றே கவலைப்படாமல் நேரு இருந்தார். சீனா பல்வேறு பகுதிகளில் நுழைந்து கையகப்படுத்தி இருந்த பொழுது சீனப்படைகளைத் தூக்கி எறிவேன் என்று நாடாளுமன்றத்தில் சவால் விட்டுக்கொண்டிருக்கிற அளவுக்கு அறியாமை கொண்டிருந்தார் அவர். கவுல், முல்லிக் முதலிய திறனற்ற தளபதிகள் ஜீப் ஊழலில் சிக்கிய கிருஷ்ணமேனனின் தயவில் களத்தில் நின்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் உயிரழக்க முக்கியக் காரணமானார்கள். தலாய்லாமாவை இந்தியாவுக்குள் அனுமதித்த நேரு சீனாவின் திபெத் ஆக்கிரமிப்பை ஏற்றுக்கொண்டாலும் அவர்களின் நம்பிக்கையை அவர் பெறவே இல்லை என்பதைச் சீனப் போர் நிரூபித்தது. போரில் இந்தியா சிக்குண்டு திணறிய பொழுது அமெரிக்காவே பேருதவி செய்தது. ஆயுதங்கள் தந்ததோடு நில்லாமல், விமானப்படையை அனுப்புவதாகவும் அது பயமுறுத்தியதும் சீனா போரை முடித்துக்கொள்ளக் காரணம்.
அணிசேராக்கொள்கையை உருவாக்கி சுதந்திரமான அயலுறவுக்கொள்கையை நேரு சாதித்தார். இந்தியை தென்னகத்தின் மீது திணிக்கிற வேலையை அவர் செய்யவில்லை. நீங்கள் விரும்பும் வரை ஆங்கிலமே இணை மொழியாகத் தொடரும் என்று அவர் உறுதியளித்தார். சீனப்போர் தோல்விக்குப் பின்னர்த் தான் பெருந்தோல்வி அடைந்த கே ப்ளான் வந்தது. இடதுகையில் பக்கவாதம், சீராகச் செயல்படாத சிறுநீரகம் இவற்றோடும் இந்திய மக்களுக்காக உழைத்த ஆளுமையாக நேரு திகழ்ந்தார். 150 பக்கங்களில் இத்தனை பெரிய வாழ்க்கையை அடக்கியதற்கு ஆசிரியருக்கு பூங்கொத்து. மேலும் பல இடங்களில் பின்புலத்தைத் தொட்டுவிட்டே நேரு கால அரசியலுக்கு வந்து அசத்துகிறார். நேரு பற்றி தமிழில் வந்த புத்தகங்களிலேயே ( மொழிபெயர்ப்பான இந்தியா காந்திக்குப் பிறகை தவிர்த்து ) சிறந்த புத்தகம் இதுவே.
சிக்ஸ்த்சென்ஸ் வெளியீடு
ஆசிரியர் : ரமணன்
பக்கங்கள் :152
விலை : 115
புத்தகத்தை வாங்க http://www.wecanshopping.com
---------------------------------------------------------------------------------------------------
இனி விமர்சனங்கள் :
படேல் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தடை செய்தார் என்று எழுதுகிற பகுதியில் நேரு எப்படி ஆர்.எஸ்.எஸ். அமைப்பை எப்பொழுதும் சந்தேகத்தோடு பார்த்தார், அது சார்ந்து அவருக்கும் படேலுக்கும் இருந்த கருத்துப் பேதங்களைப் பதிவு செய்யவில்லை ஆசிரியர். படேல் மட்டுமே ஆர்.எஸ்.எஸ். தடைக்கு முழுக்காரணம் என்பது போன்ற பிம்பம் எழுகிறது. சுயராஜ்யம் எனது பிறப்புரிமை என்ற திலகர் பெண்ணின் மணவயதை ஏற்றியதை ஆதரிக்க மறுத்தது ஆச்சரியமே என்று எழுதுகிற ஆசிரியருக்கு திலகர் பசுவதைக்கு ஆதரவாகத் தீவிரமாக இயங்கியதும், அவரின் கணபதி, சிவாஜி விழாக்கள் மதரீதியாக மாறி இந்து-முஸ்லீம் கலவரங்களுக்கு வழிவகுத்தது தெரிந்திருக்கும். மத ரீதியாகப் பழமைவாதியாகவே அவர் இருந்தார் என்கிற பொழுது எப்படி இப்படி ஆச்சரியப்பட்டார் என்று தெரியவில்லை.
ஷேக் அப்துல்லா பகுதியில் ஒரு வரலாற்றுப் பார்வைக்குப் பதிலாக ஆசிரியரின் சொந்தப் பார்வையே மிகுந்துள்ளது வருத்தமான ஒன்று. ஷேக் அப்துல்லாவை துரோகி என்று சொல்கிற அளவுக்கு ஆசிரியர் சென்றுவிட்டார். அந்த வாதத்துக்குள் போக விரும்பாவிட்டாலும் ஜனசங்கம் காஷ்மீரில் செய்த குழப்பங்கள் அப்துல்லாவை தனிக் காஷ்மீர் என்பதை நோக்கி தீவிரமாகத் தள்ளியது என்பதையும் சமநிலையோடு ஆசிரியர் பதிவு செய்திருக்க வேண்டும். ஐந்தில் நான்கு பேர் இஸ்லாமியர்கள் என்பதையும், அவர்கள் நிலை ஹரிசிங் காலத்தில் மோசம் என்பதையும் பதிந்துவிட்டு ஷேக் அப்துல்லா கொண்டுவந்த நில சீர்திருத்தங்கள் காஷ்மீரை முஸ்லீம் தேசமாக மாற்றியது என்பது சாய்வான வாதம் இல்லையா ? ஷேக் அப்துல்லா மதச்சார்பின்மையைத் தூக்கிப் பிடித்துக் கலவரங்கள் என்பதை மத ரீதியாக நடக்காமல் தடுக்கிற முக்கியமான சக்தியாக அவர் காலத்தில் இருந்தார். தேர்தலில் தொகுதிகளை விரும்பியபடி வரைந்து கொண்டார் அவர் என்று எழுதும் ஆசிரியர் ஜனசங்கம் ஜெயித்திருக்குமே என்கிற ஆதங்கத்தோடு எழுதியதாகப் படுகிறது. பல தொகுதிகளில் எதிர் வேட்பாளர்கள் நிற்பதை தேர்தல் மனுக்களை நிராகரித்துத் தவிர்த்ததில் நேருவுக்குப் பங்கில்லை என்று மறுத்துவிட முடியாது. ஷேக் அப்துல்லா பக்கம் பட்ட பார்வை ஷ்யாம் பிராசத் முகர்ஜி பக்கமும் சென்றிருக்கலாம். நூலின் கனத்தை அசைக்கிறது இப்பகுதி.
அதே போலச் சீனாப் பக்கம் நேரு சாதகமாக இருந்தார் என்று எழுத வந்ததற்குக் கொரியப் போரில் அவர் செய்த விமர்சனத்தை எடுத்துக்காட்டாகக் காட்டியதற்குப் பதிலாக ஐ.நா. சபையில் நிரந்தர உறுப்பு நாடாகச் சீனாவை ஆக்கச்சொல்லி கேட்டதையோ வேறு எதையோ குறிப்பிட்டு இருக்கலாம். இந்தியா கொரியப்போரில் இடதுசாரி அரசுகள் மற்றும் அமெரிக்கா முதலிய நாடுகளின் விமர்சனங்களை ஒருங்கே பெறுகிற அளவுக்கு நடுநிலையோடு செயல்பட்டது என்பது பலரின் பார்வை.
இட ஒதுக்கீட்டை நேரு விரும்பவில்லை என்பதை மட்டும் பதியும் ஆசிரியர், இட ஒதுக்கீடு தேவையே இல்லை என்று சொல்ல வந்து அதற்குத் தற்கால மருத்துவ மதிப்பெண்கள் எடுத்துக்காட்டைத் தருகிறார். நேரு காலத்தில் எவ்வளவு மதிப்பெண்கள் தேவைப்பட்டது என்று சொல்லித்தானே இடஒதுக்கீட்டுக்கான தேவையைப் பற்றிய வாதத்தை முன்வைப்பது சரியாக இருக்க முடியும்? நேரு கால வரலாற்றை எழுதுகிறோம் என்பதை அங்கே மறந்துவிட்டார் ஆசிரியர்.
சோஷலிசம் பற்றிய பக்கங்களில் நேரு அவ்வளவாகத் தீவிரமாகச் செயல்படுத்தாத நில சீர்திருத்தங்கள் பற்றியும், ஆரம்பக்கல்விக்கு அளிக்கப்படாத முன்னுரிமை பற்றியும் பேசவில்லை. அவர் காலத்தில் எழுந்த வளர்ச்சித் திட்டங்கள் பற்றியும் இன்னமும் ஆழமாகப் பேசியிருக்க முயன்றிருக்கலாம். குறைந்தபட்சம் அவற்றைப் பற்றிக் குறிப்பிடவாவது செய்திருக்கலாம்.
  • Shah Jahan //எழுதுபவனின் சந்தோஷங்களிள் ஒன்று அதைப்பற்றி மற்றவர்கள் பேசுவது.//சரியாகச் சொன்னீர்கள்.
  • Vedha Gopalan # எழுதுபவனின் சந்தோஷங்களிள் ஒன்று அதைப்பற்றி மற்றவர்கள் பேசுவது #

    Very correct.! அனுபவப்பூர்வமாக உண்ர்ந்திருக்கிறேன்! ஆனால் இதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டது இன்னும் பெரிய சந்தோஷம் அளிக்கிறது


13/9/14

நாடு திரும்பிய நடராஜர்



ஆஸ்திரேலிய பிரதமர்  டோனி அபோட்டின் சமீபத்திய இந்திய வருகையினால் மிக சந்தோஷம் அடைந்தவர்கள் தமிழ்நாட்டின் அரியலூர் அருகிலிருக்கும் சின்னஞ்சிறிய கிராமமான ஸ்ரீபுரந்தன் கிராம மக்கள்தான். காரணம் அவர்கள் ஊரிலிருந்து பல ஆண்டுகளுக்கு முன்னால் காணாமல் போன 1000 ஆண்டுகள் பழமையான நடராஜார்  சிலையை  அவர் கொண்டுவந்திருக்கிறார் என்பது தான்.
ஸ்ரீபுரந்தன்  அரியலூர்  மாவட்டத்திலிருக்கும் ஒரு மிகச்சிறிய கிராமம். இங்கு  சோழர்கள் காலத்தில் கட்டபட்ட  ஒரு பிரகதீஸ்வரர் கோவில்  இருக்கிறது. அதனுள் நிறுவபட்டு பல நூற்றாண்டுகள்  வழிபடபட்டுவந்த தெய்வம் நடராஜரும் அன்னை சிவகாமிசுந்தரியும். 1970களின் இறுதியில்; போதிய வருவாய் இல்லாதால் அர்ச்சகர் பணிவிலகி போனபின் கோவில் பூட்டப்படுவிட்டது. கிராமத்தின் காளி கோவில் பிரபலமாகிவந்ததால் மக்கள் மெல்ல இதை மறந்தே போனார்கள்.  மீண்டும் திறந்து வழிபடும் ஆர்வத்துடன் இருந்தவர்களுக்கும் போதிய ஆதரவும் உதவிகளும் கிடைக்கவில்லை. இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை காளிபூஜை அன்று இந்த கோவில் முன் கொண்டு வந்து வழிபடும் முறையும் ஒரு முறை அந்த பூசாரியை இந்த பழையகோவிலின் உள்ளிருந்து வந்த ராட்சத தேனி கொட்டிவிட்டதால்  நின்று போயிருந்தது.  ஊரில்  இன்றய தலைமுறையினர்  அந்த கோவிலின் பாரம்பரியத்தையும், அந்த விக்கரகங்களின் பெருமையும் அறிந்திருக்கவில்லை.
2008ம் ஆண்டில்  அருகிலுள்ள சுத்த மல்லி என்ற கிராமத்தின் கோவிலில் இருந்த விக்கரகங்கள் காணமல் போன சமயத்தில்  இம்மாதிரி கோவில்களின் விக்கரகங்களை  அருங்காட்சியகத்தில் பத்திரபடுத்தலாம் என்று யோசனை தெரிவிக்கபட்டிருந்தது. அதற்கான முயற்சியில் தொல்பொருள் துறை இறங்கிய போது  கிராம மக்கள் எங்கள் தெய்வத்தை எல்லையை விட்டு வெளியே அனுப்ப சம்மதிக்க மாட்டோம் என ஒத்துழைக்க மறுத்தார்கள். பாதுகாப்பகாக கோவிலின் நுழைவாயில்களுக்கு சுருக்கி –விரிக்கும் இரும்புகதவுகளை (collapsible gate) போடலாம் என்று பஞ்சாயத்தாயிற்று.   போலீஸின் சிலைதிருட்டுகளை தடுக்கும் பிரிவின் உதவியுடன் அதற்காக கோவிலின் கதவுகளை திறந்த போது அதிர்ச்சி.  உள்ளே இருக்கும் நடராஜர் உள்பட 8 சிலைகளும் காணவில்லை, எப்போது எப்படி திருடு போனது? என்பதே தெரியவில்லை.. இந்த அதிர்ச்சியான செய்தி வெளியானபோது நடராஜர் 9000 கிமீ பயணித்து ஆஸ்திரேலியாவில் கானிபரா  நகரத்தில் தேசிய அருங்காட்சியகத்திலிருக்கிறார் என்பதை அவர்கள் அறிந்திருக்க நியாமில்லை.
சிலை எப்படி திருடபட்டது?
சுபாஷ் கபூர் கடந்த 40 ஆண்டுகளாக அமெரிக்காவில் நீயூயார்க் நகரில் கலைப்பொருட்கள் இறக்குமதி செய்து விற்கும் கடையை நடத்தி வரும் அமெரிக்க இந்தியர்.  உலகின் பல பிரபல மீயூசியங்களுக்கும், கலைச்செல்வங்களை சேகரிக்கும் உலக பணக்கார்களுக்கும் அறிமுகமானவர் ஆனால்  இறக்குமதி என்ற போர்வையில் பாரம்பரிய சிலைகளை கடத்தி விற்பனை செய்வது தான் உண்மையான தொழில் என்பது யாருக்கும் தெரியாது.  உலகின் கண்ணுக்கு இவர் ஒரு செல்வாக்குள்ள, நிறைய விஷய்ங்கள் தெரிந்த  ஆர்ட் டீலர்.
.100 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான (1மில்லியன்= 10 லட்சம்) 150க்குமேலான  இந்தியாவிலிருந்து பழைய சிலைகளை கடத்தியிருப்பதாக  இவர் மீது வழக்கு போடபட்டிருக்கிறது. உலகம் முழுவதும் இண்டர்போலால் தேடப்பட்டு வந்த இவரை ஜெர்மானிய போலீஸார் கைது செய்து தமிழக போலீசிடம் ஒப்படைத்தது. இப்போது சிறையில் இருக்கிறார், இவருக்கு உதவிய ஆட்களையும் கைது செய்திருக்கிறார்கள். இவர்கள் தந்த ஓப்புதல் வாக்குமூலத்தின் படி குற்ற பத்திரிகை தயாரிக்க பட்டிருக்கிறது.

கபூருக்கு  உலகம் முழுவதுமுள்ள கோவில்களில், அரண்மனைகளில் இருக்கும் பராம்பரிய சின்னங்கள் சிலைகளின் விபரங்கள் அத்துப்படி.  இந்தியாவைத்தவிர பாக்கிஸ்தான். ஆப்கானிஸ்தான்,பங்களாதேஷ்,ஹாங்காங்,இந்தோனிஷியா,துபாய்.கம்போடியா என உலகின் பலநாடுகளில்   இவருக்கு உள்ளுர் எஜெண்ட்கள். தாஜ் மாதிரியான  ஆடம்பர ஹோட்டல்களில் தங்கி தனது ஏஜெண்ட்களிடம் எந்த கோவிலிருந்து எந்த சிலை வேண்டும் என்பதை போட்டோவை காட்டி சொல்லிவிடுவார். அவர்களுக்கு பெருமளவில் பணம் தரப்படும். 28 சிலைகளுக்கு 7 லட்சம் டாலர்கள்   இவருடைய எச் எஸ் பி வங்கி கணக்கிலிருந்து இந்தியாவிற்கு இதற்காகவே மாற்றபட்டிருக்கிறது என்கிறது போலீஸ் குற்றபத்திரிகை.  அந்த ஏஜண்ட்கள் உள்ளூர்  ஆட்கள் மூலம், யாருக்காக செய்கிறோம் என்பது கூட  தெரியாமல் வேலையை முடித்து கொடுப்பார்கள்.  சென்னையில் இவரது எஜெண்ட் அசோகன்  இவர் இந்த பணியை செய்ய ஓப்புகொண்டார். இந்த கோவிலில் பாழடைந்த நிலையில் இருந்தது வசதியாக போய்விட்டது.  முதலில்  அந்த பழைய பூட்டை உடைத்து 3 சிலைகளை அப்புறப்டுத்திவிட்டு பூட்டை மீண்டும்  பூட்டிய நிலையில் இருப்பது போல ஒட்டிவிட்டார்கள். கிராமத்தில் யாருக்கும் சந்தேகம் வரவில்லை என்பதை உறுதிசெய்துகொண்டு சில நாட்களில் ஒரு லாரியில் நிறைய மண்ணை கோண்டுவந்து அருகில்  நிறுத்தி கொண்டு 3 அடி உயரமும் 150கிலோ எடையையும் கொண்ட அந்த நடராஜரை கோவிலிலிருந்து கிளப்பி மண்ணில் புதைத்து கொண்டுபோய்விட்டார்கள்.
நடராஜர் ஆஸ்திரேலியா எப்படி போனார்.?
சர்வதேச சிலைகடத்தல் மன்னன் கபூரின் நெட் ஒர்க் மிகப் பெரியது. வலிமையானது. இந்தியாவிலிருந்து ஒரு சிலை அல்லது கலைப்பொருள் ஏற்றுமதி செய்யப்படவேண்டுமானால் அது பழங்கால அல்லது பாதுக்காக்க பட்ட சிற்பம் இல்லை என்பதை தொல்பொருள் துறையினர் அல்லது அவர்து அங்கீகாரம் பெறப்பட்டவர்கள் சான்றிதழ் அளிக்கவேண்டும். கபூர் தான் திருடும் சிலைகளின் படங்களையும் மாதிரிகளையும் கொடுத்து ஸ்வாமிமலையில் சிற்பிகளிடம்  புதிய சிலைகளை வடிக்கசெய்யவார். ”பழையது மாதிரியான (”antic look சிலகளுக்கு இப்போது மவுசு அதிகம் என்பதால் அதே போல் செய்ய சில சிலைகளைச் செய்ய  சொல்லி அதற்கு சான்றிதழ் வாங்கி  அனுப்பும் போது அதில் ஒன்றாக திருடிய சிலையையும் கலந்து  அனுப்பிவிடுவார்.  நியூயார்க்கில் அவருடைய நிறுவனதிற்கு எது மதிப்பு வாய்ந்தது என்பதை கண்டுபிடிக்க தெரியும். இப்படி கொண்டுவரபட்ட சிலைகளை தனது  நிறுவன கேட்லாக்கில் மிகபழமையான அரிய சிற்பம் என்றும் அது எங்கிருந்து  எப்போது வாங்கி யாரல் விற்பட்டது என்ற சரித்திரங்களை, ஆதாரங்களாக போலியாக தயரித்து ஆவணமாக்கியிருப்பார். அப்படி 2010ம் ஆண்டு இவர்  வெளியிட்டிருந்த கேட்லாக்கிலிருந்த இந்த நடராஜரை ஆஸ்திரேலிய தேசிய மீயூசிய இயக்குனர் பார்த்துவிட்டு நியார்க் வந்து இவரை சந்தித்து விலை பேசி தனது மியூசியத்திற்கு வாங்கியிருக்கிறார். விலை என்ன தெரியுமா? இந்திய மதிப்பில் 31 கோடிகள்.
காட்டிக்கொடுத்தார் கணேசர்
இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ள திருடர்களில் ஒருவன் பிச்சுமணி. ஸ்ரீபுரந்தன் நடராஜரை திருடும் முன் சுத்த மலை சிலைகலை திருடிய போது ஒரு நாலு அங்குல அளவில் ஒரு அழகான வினாயகர் சிலையை தனக்காக ஒதுக்கி கொண்டுவிட்டான். அன்னை பார்வதியை வினாயகர் மடியில் இருத்தியிருக்கும் அபூர்வமான சிலை அது.  எப்போதும் அதை தன்னுடன் வைத்திருப்பான். ஒரு நாள் கேரள எல்லையை தாண்டும்போது மதுபானம் இருக்கிறதா என சோதனையிட்ட செக்போஸ்ட் போலீஸாருக்கு இது கோவில் சன்னதி சிலையாக இருக்கும் என்ற சந்தேகத்தில் கைது செய்து தமிழக சிலை திருட்டு பிரிவு போலீசிடம் ஒப்படைத்ததுவிட்டார்கள்.  சுத்த மலை சிலை திருட்டை ஆராய்ந்து கொண்டிருந்த அவர்களுக்கு  அப்போது லட்டுவாக கிடைத்த துப்பு இது. அவர்களது கவனிப்பில் அசோகன் தொடர்பு, ஸ்ரீபுரந்தன் கோவில் திருட்டு வெளிநாட்டிலிருந்து பணம், உடன் வேலை செய்தவர்கள் எல்லாம் வெளிவந்துவிட்டது.
ஆண்டவனே ஆனாலும் ஆவணம் முக்கியம்
தமிழகத்தில்  பெருமளவில் சிலைகடத்தல் நடைபெற்றுகொண்டிருந்ததால்  காவல்துறையின் அந்த பிரிவு விரிவான  ஆராய்ச்சியில்  ஈடுபட்டிருந்தது.  அவர்கள் எதிர் கொண்ட ஒரு விஷயம் ஆஸ்திரேலிய  தேசிய மீயூசியத்தின் ஆண்டுமலர் புத்தகத்தில்  புதிய சேர்க்கை என போடபட்டிருக்கும் நடராஜரின் படம் நமது ஸ்ரீபுரந்தன் கோவிலைச்சேர்ந்தது என்பது. உடனே முழித்துகொண்டார்கள்.    அதை அவர்களிடமிருந்து மீட்க கோர்ட் உத்தரவு வேண்டும். என்பதால்  சட்ட விதிகளின்படி உள்ளூர்  மாஜிஸ்ட்ரேட் கோட்டில் மனுச்செய்தார்கள். நீதிபதி கேட்ட கேள்வி இந்த சிலைதான்  கோவிலில் இருந்தது என்பதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா?   தெய்வ சன்னதிகளை படம் எடுக்க அனுமதிப்பதில்லை என்பதால் ஒரு போட்டோ கூட இல்லை. அரசின் அறநிலத்துறையிலும் இல்லை. திகைத்தது போலீஸ்.  செய்திகளை தினசரியில் பார்த்து கைகொடுத்து உதவினர் பாண்டிச்சேரியை சேர்ந்த பிரென்ச் இன்ஸிடியூட் ஆப் பாண்டிச்சேரி என்ற நிறுவனத்தினர். இவர்களின் ஆராய்ச்சையில் ஒரு அங்கம் இந்து கோவில்களீன் சிலைகள். உரிய அனுமதியுடன் தமிழக பண்டைய கோவில்கலையும் சிலைகளை ஆராய்பவர்கள். அவர்களிடம் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட கோவில் சிலைகளின் படங்கள் இருக்கின்றன.  அதன் ஆராய்ச்சியாளர் முருகேசன் இந்த நடராஜரின் படத்தை கொடுத்து உதவினார். அவர் 1958ல் எடுத்தது, 1994ல் மீண்டும் எடுத்ததையும் கொடுத்தார். (இந்த படங்களும்,ஆஸ்திரேலிய மீயூசிய படமும் கபூரின் போனிலிருந்த படமும் ஒத்துபோயிற்று. இதனால்தான் இண்டர்போல் கபூரை கைது செய்யவும் முடிந்தது.) அதை ஏற்று மாஜிஸ்ட்ரேட் ஆஸ்திரிலியே மீயூசியத்துக்கு நோட்டிஸ் அனுப்பினார்.  மத்திய அரசு அதிகாரிகளுக்கு மீயூசியம் இம்மாதிரி சிறிய கோர்ட்  ஆணைகளை ஏற்பார்கள் என்ற நம்பிக்கையில்லை. ஆனால் ஆச்சரியமாக அந்த மியூசியம்  உடனடியாக செயலில் இறங்கி  விசாரணையில் அது திருட்டு பொருள் என கண்டுபிடித்துவுடன்.இந்தியாவிற்கு திருப்பி அனுப்பிவிடுவதாக அறிவித்துவிட்டார்கள். கபூர்நிறுவனத்தின் மீது தாங்கள் செலுத்திய பணத்தையும் நஷ்ட ஈடாக மிகப்பெரிய தொகையையும் கேட்டு வழக்கு போட்டிருக்கிறார்கள்.

இந்த நடராஜரைத்தான் ஆஸ்திரேலிய பிரதமர் தன் கையோடு கொண்டுவந்திருக்கிறார். இந்திய பிரதமரிடம் ஒப்படைத்திருக்கிறார்.  இந்த நடராஜருடன் ஆஸ்திரேலிய பிரதமர் கொண்டுவந்தது ஒரு அர்தநாரிஸ்வரர் சிலை. இது விருத்தாச்சலத்திலிருக்கும் விருந்த கீரிஸ்ரவர் கோவிலில் இருந்து திருடபட்டு ஆஸ்திரேலியாவிற்கு கடத்தபட்ட கற்சிலை. இது ஆஸ்திரேலியாவின் நீயூ சவுத் வேல்ஸ் பகுதி மீயூசியத்தில் இருந்தது..  கர்பக்கிருஹத்தின் பக்கவாட்டு சுவரிலிருந்த இதன் இடத்தில் ஒரு போலியை நிறுவி விட்டு  இதை அபேஸ் செய்திருக்கிறார்கள்.  எப்போது காணாமல் போனது என்று யாராலும் சொல்ல முடியவில்லை. பாண்டிச்சேரி இன்ஸ்டியூட் 1974ல் படம் எடுத்திருக்கிறார்கள். அதற்கு பின்னால் என்றோ ஒரு நாள் இடம் மாற்றப்பட்டிருக்கிறது
.
எப்போது இந்த சிலைகள் கோவிலுக்கு வரும்?
டில்லி வந்து விட்ட நடராஜர் எப்போது ஸ்ரீபுரந்தன் வருவார்?   நாட்டின் பிரதமரே கொண்டுவந்து கொடுத்தாலும்  சில சட்ட சிக்கல்களை   நடராஜர்  சந்திக்கவேண்டியிருப்பதை  தவிர்க்க முடியாது. . சட்டப்படி இவைகள் கோர்ட்டால் ஆணையிட்டு கண்டுபிடிக்க பட்ட திருட்டு சொத்துக்கள். வழக்கு முடியம் வரை இவை கோர்ட்டின் பாதுகாப்பில்தான்.  இருக்க வேண்டும். வழக்கு, மேல்முறையீடுகள் முடிய பல வருடங்கள் ஆகலாம். ஆனால்  இம்மாதிரி வழக்குகளில் சில முன்மாதிரிகள் இருக்கின்றன. பல ஆண்டுகளுக்கு முன்  கும்பகோணம் அருகே உள்ள சிவபுரம் நடராஜர் கடத்தபட்டு மீட்க பட்ட போது  வழக்கு முடியம் வரை அதை மயிலாப்பூர் கபாலி கோவிலில் பாதுகாக்கவும் பூஜிக்கவும் நீதிபதி அனுமதித்தார். அதுபோல் இதற்கு அனுமதிப்பார்கள் என கிராம மக்கள் எதிர்பார்த்துகொண்டிருக்கிறார்கள். பாழடைந்த கோவிலை சீராக்க நிதி திரட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
நம் கடவுள்கள் பத்திரமாக இருக்கிறார்களா?
 அபின் கஞ்சா போன்ற போதைப்பொருட்களை கடத்துவதைவிட  சிலைகடத்தல் மிக பெரிய லாபத்தைக்கொடுக்கும் பிஸினஸ் என்பதால் உலகின் பல இடங்களில் கபூர்கள் இயங்கிகொண்டிருக்கிறார்கள். இந்தியா ஒரு  முக்கிய டார்கெர்கெட். தமிழக காவல்துறையின் சிலைகடத்தல் தடுப்பு  பிரிவு கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக இயங்கி வருகிறார்கள்.  இப்போது 28 சிலைகளை மும்பரமாக தேடிக்கொண்டிருக்கிறார்கள். 5  சிலைகள் மீயூசியங்களில் இருப்பதை கண்டுபிடித்துவிட்டார்கள்.  இவர்கள் சந்திக்கும் பெரிய பிரச்னை  மாநிலத்தில் இருக்கும் 45000 கோவில்கள். இதில் பலவற்றில் சிற்பங்களுக்கும் சிலைகளுக்கும் போட்டோக் களோ விபரங்களோ இல்லை. காணாமல் போனால்  அடையாளம் சொல்லக்கூட முடியாது.  இவர்கள் முயற்சியில் ஒரு 900 ஆண்டு பழமையான நடராஜர் சிலையும் ஒரு1000 ஆண்டு பழமையான சம்பந்தர் சிலையும் வெளிநாட்டு மியூசியத்தில் இருப்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள். அவைகள் தமிழ்நாட்டிலிருந்து கடத்த பட்டிருக்கும் தொன்ம சிலைகள் என நம்புகிறார்கள்.  ஆனால் எந்த கோவிலுடையது என்பது தெரியவில்லை. அது தெரியாமல், அதை நீருபிக்காமல்  அவைகளை மீட்க முடியாது. அந்த கோவில்களை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை கேட்டு  திரு பொன் மாணிக்கம் டிஐஜி அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். (அவசியமானல் போலீஸ் அறிவிப்பை பாக்ஸில் போடாலாம்-தந்தி 7/9/14)
ஸ்ரீபுரந்தன் நடராஜர். கூடவே இருந்து காணமல் போன அம்பிகை இப்போது அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறார்.  நல்ல வேளையாக விற்பனை செய்யப்படுமுன் அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை கைபற்றிவிட்டது.  இந்தியா கொண்டுவர முயற்சிகள் துவங்கியிருகின்றன. உலகம் சுற்றியபின் ஆண்டவன் வந்துவிட்டார். அம்பிகை எப்போது வருவாரோ? .
அரும் சிலைகளும் கலைப்பொருட்களும்  வெளிநாடுகளுக்கு கடத்தபடுவதும், மீட்கபடுவதும்  நீண்ட நாட்களாக நடைபெற்றுவரும்  விஷயங்கள். ஆனால் ஒரு நாட்டின் பிரதமர் நல்லெண்ண பயணத்தின் போது கொண்டுவந்து தருவது இதுவே முதல் முறை.  நமது பிரதமர்  இதற்காக நன்றி சொன்ன போது  டோனி அபோட் சொன்னது ”இந்தியர்களின்  கோவில் வழிபாட்டு முறைகளை நாங்கள்  அறிவோம். அவற்றை மதிக்கிறோம்”