அடேஅப்படியா? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அடேஅப்படியா? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

19/8/13

பென்ஸ் காரின் விலையில் ஒரு எருமை

ஆதித்தியா
அரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் உள்ள சின்சுவாஸ் கிராமத்தை சேர்ந்த விவசாயி கபூர்சிங். இவர் ஒரு பெண் எருமையை  லட்சுமி என பெயரிட்டு அன்புடன்  வளர்த்து பராமரித்து வந்தார். அரியானா மாநிலத்தின் முர்ரா எருமை மாடுகள்  உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்றது. அவை நாளொன்றுக்கு 32 கிலோ அளவிற்கு கூட பால் கறக்கும்   அந்த இனத்தை சேர்ந்த லட்சுமி நாள்  ஒன்றுக்கு சராசரியாக 22.5 லிட்டர் முதல் 28 லிட்டர் வரை பால் கறக்கிறது..


லட்சுமி பல கால் நடை கண்காட்சிகளில் கலந்து கொண்டு பல லட்சம் மதிப்புள்ள பரிசுகளை பெற்றுள்ளது. சமீபத்தில் முக்ஸ்டார் என்ற இடத்தில் நடந்த கண்காட்சியில் ”அழகி போட்டி” அதிக அளவு பால் வழங்கும் எருமை” போன்ற  பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று ரூ.3 லட்சம் பரிசை வென்றதினால் இந்த கருப்பு அழகி  மாநிலம் முழுவதும் பாப்புலர்..

 பலர் விலைக்கு கேட்டும் தர மறுத்துகொண்டிருந்தார் அதன் உரிமையாளர். . கடந்த மாதம் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த விவசாயி ராஜீவ் சார்பாஞ்ச் என்பவர்   மிக அதிக விலையாக லட்சுமிக்கு 19 லட்சம் தருவதாக கேட்டபோது அவரை தவிர்ப்பதற்காக  விலை 25 லட்சம் என்று சொல்லியிருக்கிறார்.  ராஜீவ் அதை தர சம்மதித்து உரிமையாளர் கபூர் சிங்கை ஆச்சரியபடுத்தினார்,   இவ்வளவு பெரும் பணத்தை தனக்கு அளித்த அருமை லட்சுமியை ஒரு பிரிவுபசார விழா நடத்தி மரியாதையோடு அனுப்ப விரும்பினார் கபூர் சிங்.விழாவிற்கு நாள் குறிக்க பட்டது. அன்று லஷ்மிக்கு விசேஷமாக தயாரிக்கப்பட்ட ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி நகைகளை அணிவித்து  அலங்கரித்தார். 

 
அதை தனது கிராமத்தை சுற்றி ஊர்வலமாக அழைத்து சென்றார். மேலும்  அரியானா மாநிலத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள், அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் என 2 ஆயிரம் பேரை அழைத்து அவர்களுக்கு தடபுடலாக விருந்து அதற்கு மட்டும் ரூ.2 லட்சம் செலவு செய்திருக்கிறார்.   அருகிலுள்ள கிராம மக்களும் பங்கு கொண்ட  அந்த விழாவில் அரசு அதிகாரிகளும் கலந்துகொண்டிருக்கிறார்கள். மாநில கால்நடைத்துறையின் மூத்த அதிகாரி இம்மாதிரி நிகழ்ச்சிகள் மேலும் பல விவசாயிகள் இத்கைய மாடுகளை வாங்கி பால் உற்பத்தியை பெருக்க தூண்டும்  என்று சொல்லுகிறார். நிகழச்சியை பிபிசி டிவி கவர் செய்திருக்கிறது.
இதை கடந்த 2 ஆண்டுக்கு முன்பு கபூர்சிங் இதை வாங்கிய விலை 2 லட்சம்.  தற்போது இது 3-வது தடவை கர்ப்பமாக உள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் கன்று ஈனும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 ஆந்திராவிலிருந்து அரியான  வந்து  ஒரு பென்ஸ்காரின் விலையில் ஏன் இப்படி இந்த  எருமை மாட்டை வாங்குகிறார் ?  2014 ஜனவரியில் ஆந்திர அரசு நடத்தவிற்கும் கால்நடை கண்காட்சியில்  தேர்ந்தெடுக்கபடும்  சிறாந்த எருமைக்கு கிடைக்க போகும் பரிசு   ஒரு கிலோ தங்கமாம்.



ஆதித்தியா

12/8/13

"பேசும்” பொன்னியின் செல்வன்


 ஒரு நல்ல புத்தகத்தை வாசிப்பது என்பது ஒரு சுகமான அனுபவம், அதைவிட சுகமானது அதை யாராவது உணர்ச்சி பொங்க படிக்க, ரசித்து கேட்பது.  கல்கியின் அமர காவியமான பொன்னியின் செல்வனின் அத்தனை கதாபாத்திரங்களும் அவர் எழுதிய வார்த்தைகளை அப்படியே பேசுகின்றன. கதாசிரியரின் வர்ணனைகள் சொல்ல படும்போது அந்த காட்சிகள் கண்முன்னே விரிகிறது ஸ்ரீகாந்த் சீனிவாசா  தயாரித்திருக்கும் ஆடியோ புத்தகத்தில்.  கடந்த சில ஆண்டுகளாக ஆங்கில புத்தகங்களைபோலநல்ல தமிழ் புத்தகங்களும் ஆடியோ புத்தகமாக  சி. டி வடிவில் வெளிவருகின்றன. ஆனால் ஸ்ரீகாந்த் தயாரிப்பு இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்யக்கூடிய ஆடியோ புக் வகையைசேர்ந்தது.  
ஸ்ரீகாந்த் அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில் சான்பிரான்ஸிஸ் நகரில் கடந்த 20 ஆண்டுகளாக வசிப்பவர். மென்பொருள் நிறுவனத்தில் அதிகாரியாக பணி. பாரதியின் கவிதைகள் நாடகம், தமிழசை போன்ற பலவற்றில் ஆர்வம்கொண்டவர். பாரதி தமிழ் மன்ற தலைவர்.  ”ஸ்ரீ” என்று  பாப்புலராக அறியபட்டிருக்கும் இவரது முகம் மட்டுமில்லை குரலும் அங்கிருக்கும் தமிழர்கள் அனைவருக்கும் பரிச்சியமானது., காரணம்.  நகரிலுள்ள ஸ்டான்போர்ட் பல்கலை கழகம் நடத்தும் பண்பலை ரேடியோ நிலையத்தின் தமிழ் சேவைக்காக ஒவ்வொரு புதன் கிழமையும் 3 மணி நிகழ்ச்சியை தயாரித்து, தொகுத்துவழங்குபவர் இவர்தான். அதில் பாடல். நேர்காணல். நாடகம், தமிழகத்திலிருந்துவரும் பிரமுகர்களின் பேட்டி எல்லாம் உண்டு. கடந்த 11 ஆண்டுகளாக இதை செய்து வருகிறார்.
ஆடியோ புத்தக ஐடியா எப்படி வந்தது? வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் அடுத்த தலைமுறை தமிழை முறையாக கற்பதில்லை. பல குடும்பங்களில்  நன்றாக புரிந்தாலும் கூட தமிழில் பேசுவது கூட குறைந்து வருகிறது.. அவர்களை கவர, படிக்க முடியாத நிலையில் இருக்கும் முதியோரின் வசதிக்காக இதைச்செய்தால் என்ன என்ற எண்ணம் எழுந்தது. தமிழ் மேடை நாடகங்களில் நடித்த அனுபவம், ஆர்வம் நம்பிக்கையை தந்தது. என்று சொல்லுகிறார். ஆடியோ புத்தகம் எனறால் செய்தி வாசிப்பது போலிருக்கும் என்ற  எண்ணத்தை மாற்றுகிறது இவரது படைப்பு.. நாவலின் நடையில், காட்சி விவரிப்புக்கு ஒரு குரலையும், கதாபாத்திரங்கள் பேசுவதற்கு பல வகையான குரல்களையும் பயன்படுத்தி. கல்கியின், "பொன்னியின் செல்வன்' நூலில் வரும், பெண்பாத்திரங்கள் உள்பட  40க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களை, இவர் மட்டுமே பேசி அசத்தியுள்ளார். பேசியிருப்பவர் ஒரே நபர் என்பது சொன்னால் தான் தெரியும் அந்த அளவிற்கு பாத்திரங்களுக்கேற்ற கச்சிதமான குரல் மாடுலேஷன்.   நாவல் முழுவதும் பாத்திரங்கள் தொடர்ந்து அதே குரலில் பேசுகிறார்கள்.   75 மணி நேரம் ஓடும் இந்த ஆடியோ புத்தகம் 5 பகுதிகளானது.  இதைப்போல பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம்  ஆடியோ புத்தகங்களையும் தயாரித்து இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்.. நிறைய மனழுத்தம் கொடுக்ககூடிய பரப்பரபான பணியுடனும் பயணங்களுக்குமிடையே  ஸ்ரீகாந்த்தால் இதை எப்படி செய்ய முடிந்த்தது? ஆர்வம், சாதிக்கவேண்டும் என்றவெறி, அன்பு மனைவி ஜானகியின் ஒத்துழைப்பு என்கிறார், வீட்டிலேயே ஒரு சின்ன ஆடியோ ஸ்டுடியோ அமைத்துகொண்டு இரண்டு வருடங்கள் நீண்ட இரவுகளிலும்,அத்தனை விடுமுறைநாட்களிலும் உழைத்திருக்கிறார்.



   ஐ போன், ஐபேட், டேபிளட் என எதில் வேண்டுமானாலும் டவுன்லோட் செய்து கொள்ளகூடிய வசதியுள்ளது.. கட்டணம்? மிக மிக குறைவு, 120 ரூபாய் ஆன்லைனைல் செலுத்தினால்  போதும் ஒரு புத்தகத்தை டௌன்லோட் செய்துகொள்ளாலாம். (www.tamilaudiobooks.com)விற்பனை எப்படியிருக்கிறது? உலகின் பல மூலைகளிலிருக்கும் தமிழர்கள்  வாங்குகிறார்கள். விற்பனையைவிட  “என் தந்தைக்கு அவரது இளமை காலத்தை திருப்பி கொடுத்திருக்கிறீர்கள்”  ஆடியோ புத்தகத்தை கேட்ட  என் அம்மா அழுதுவிட்டார்” போன்ற  வார்த்தைகள் தான் மிகுந்த சந்தோஷத்தை தருகிறது என்கிறார். “ஸ்ரீ” இவரது அடுத்த பிராஜெக்ட் தமிழ் தாத்தாவின் “ என் சரித்திரம்”
கல்கியின் அமர காவியங்களுக்கு தனது குரலால் உயிருட்டி உலகமெங்கும் ஒலிக்க செய்திருக்கும் இந்த மனிதரின்  பணி மகத்தானது.

-ஆதித்தியா (ரமணன்)

3/8/13

மொட்டை “ பாஸ்”

ஆதித்தியா
 அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ்புஷ் இப்போது  டெக்ஸாஸ் மாநிலத்தில் ஹூயூஸ்டன் நகருக்கு அருகே வசிக்கிறார்.   முன்னாள் அதிபர்களுக்கான உரிமைகளில் ஒன்று  முழுநேர செக்யூரிட்டி.. அதற்காக ஒரு சிறிய ரகசிய உளவுப் படைப்பிரிவு இயங்குகிறது, அந்த குழுவில் ஒருவரின் மகன் பாட்ரிக்.   வயது இரண்டு. சமீபத்தில் அந்த குழந்தை லுக்கேமியா என்ற ரத்த புற்றுநோயால் தாக்கபட்டிருப்பது கண்டறியபட்டது.  அதன் சிகிச்சையின் தீவிரத்தால் அந்த குழந்தையின் தலை முடி முழுவதும்  கொட்டி மொட்டையாகியிருக்கிறது. அந்த குழந்தைக்கு அது வினோதமாக தெரியக்கூடாது என்பதற்காக  ஒரே காலனியில் வசிக்கும் பாட்ரிக்கின் தந்தை ஜோனின் குழுவினர் அனைவரும் மொட்டை அடித்துகொண்டனர். அந்த குழந்தையின் மருத்துவ செலவிற்கு நிதிதிரட்ட பாட்ரிக் பிரண்ட்ஸ் என்ற பெயரில் ஒரு  வெப் சைட்டையும் துவக்கி நன்கொடைகள் கேட்டிருக்கின்றனர்.
திடுமென ஒருநாள் தன் அத்தனை பாதுகாவலர்களும் மொட்டைதலையர்களாக இருந்ததைப்பார்த்து விசாரித்து விஷயம் அறிந்த புஷ் உடனே பெரிய அளவில் நிதிஉதவி செய்தததோடு அந்த குழுவில் தானும் இருப்பதை அறிவிக்கும் வகையில்  மொட்டை அடித்து கொண்டார்.  அவர்களோடு  ஒரு குருப் போட்டோ எடுத்து அதை அவர்களின் வெப் ஸைட்டில் வெளியிடச்செய்தார்.
நன்கொடை வசூலிப்பதற்காக நகரில் ஒரு மோட்டார் சைக்கிள் பந்தையத்தைதானே முன்னின்று நடத்தியிருக்கிறார். அதோடு நிற்காமல் அந்த சிறுவனோடு ஒரு படம் எடுத்துகொண்டார் அதை திருமதி புஷ் தேசிய நாளிதழ்களுக்கு அனுப்பி அந்த சிறுவனின் மருத்துவ செலவிற்கு உதவ வேண்டியிருக்கிறார்.



கையில் மோட்டார்  பொம்மைகளுடன் யார் மடியில் இருக்கிறோம் என்பது கூட புரியாமல் உட்கார்ந்திருக்கும் அந்த மொட்டை சிறுவனும் மொட்டைதலையுடன்  முன்னாள் அதிபர் புஷ்ஷும் இருக்கும் அந்த படம் பலரை பாட்ரிக் நண்பர்கள் குழுவிற்கு நன்கொடை அனுப்ப செய்திருக்கிறது.
அதிபர் புஷ்ஷுக்கு இபோது வயது 89, பெர்க்கின்ஸ் நோய் தாக்கியிருப்பதால் சக்ர நாற்காலியிலிருக்கிறார்.

கல்கி11/08/13

26/7/13

நம்ம ஆளுங்க கலக்கறாங்க !

 

ஓபாமாவை கவர்ந்த ஸ்ரீகாந்த்



 !

அமெரிக்கவாழ் இந்தியர்களின் இரண்டாவது, மூன்றாவது தலைமுறையினர் இப்போது மெல்ல அமெரிக்க  சமூக,அரசியல், கலாசார வாழ்க்கையில் நன்கு பின்னி பிணைந்து கலக்கி கொண்டிருக்கிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன் வந்து வாழ்க்கையை துவக்கியவர்களில் பலர் அவர்களின் துறைகளில் உயர்ந்து  தங்கள் அடையாளங்களை பதித்துகொண்டிருக்கிறார்கள். அமெரிக்க இந்தியர்களாக அறியப்படும் இவர்கள்  பெரிய கார்ப்ரேட்களில், அரசியல் கட்சி,  பொறுப்புகளில், மாநில அரசுகளின் உயர்ந்த பதவிகளில், மாநில கவர்னராக கூட இருக்கிறார்கள். இந்த வரிசையில் சமீபத்தில் இடம்பெற்றிருப்பவர் ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசன்.அமெரிக்காவின் இரண்டாவது பெரியஉயர் நீதிமன்ற நீதிபதியாக அதிபர் ஒபாமாவால் நியமிக்கபட்டிருக்கிறார். அமெரிக்க நீதிமன்ற முறை நம்முடையதிலிருந்து சற்று மாறுபட்டது.. தேசம் 13 நீதி மண்டலங்கள் அதன் கீழ் பல நீதி மாவட்டங்கள்.என பிரிக்கபட்டிருகின்றன.. இங்குள்ள வழக்குகளை மேல்முறையீடு செய்ய 13 அப்பீல் கோர்ட்டுகள். அமெரிக்க உச்சநீதிமன்றம் ஒர் ஆண்டுக்கு 100 வழக்குகளுக்கு மேல் எடுத்துகொள்வதில்லை என்பதால் இந்த அப்பீல் கோர்ட்டுகள் நமது உயர்நீதி மன்றங்களைவிட வலிமையானது. மாநில. பெடரல் சட்டபிரச்சனைகளைகூடவிசாரிக்கிறது.அத்தகைய கோர்ட்களில் அமெரிக்காவின் இரண்டாவது பெரிய கோர்ட். வாஷிங்டனிலிருக்கிறது.  அதில் தான் ஸ்ரீகாந்த் ஸ்ரீனிவாசன். நீதிபதியாக நியமிக்கபட்டிருக்கிறார். மாவட்ட நீதிமன்றங்கள் இரண்டில்  இந்தியர்கள் நீதிபதிகளாக இருந்தாலும் ஒரு உயர் நீதி மன்றத்தின் நீதிபதியாக அமெரிக்க அதிபரால் நியமிக்க படும் முதல் இந்தியர் மற்றும் ஆசியரும் இவரே.

At a reception in honor of Sri Srinivasan, the first South Asian American judge in the US Court of Appeals for the DC Circuit, at the Embassy Residence, are seen (from left to right): Sri Srinivasan; Mrs. Saroja Srinivasan; Indian Ambassador Mrs. Nirupama Rao; and Srinija Srinivasan. Photo credit: Embassy of India, Washington


சண்டிகரில் பிறந்த ஸ்ரீகாந்த்தின் தந்தை ஸ்ரீனிவாசனும் அம்மாவும்   படிக்க அமெரிக்கா சென்னறவர்கள். பின்னால இருவருக்கும் கன்ஸாஸ் பலகலகழகத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததாதால் அங்கேயே தங்கிவிட்டனர். அதனால் உயர்நிலைப் பள்ளிபடிப்பை அமெரிக்காவில் தொடர்ந்து அங்கேயே வளர்ந்தவர். பள்ளியிலும் கல்லூரியிலும் பேஸ்கட்பால் வீரர். இவருடைய லாரன்ஸ் பள்ளி டிம் மேட்கள் இன்று தேசிய சாம்பியன்கள். இன்றும் வாரம் ஒருமுறை பேஸ்பால்  விளையாடுகிறார்.புகழ் பெற்ற ஸ்டன்ஃபோர்ட் பல்கலைகழத்தில் எம்பிஏ வும் சட்டமும் படித்தவர்  சட்டம் முதுகலைப் படிப்பில் சிறப்பு தேர்ச்சி பெற்றவர். சில காலம் ஹார்வர்ட் பல்கலகழகத்தில் ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார்.
இவரது ஓரே சகோதரி ஸ்ரீநிஜா யாஹூ நிறுவனம் துவங்கபாடபோது சேர்ந்த முதல் ஐவரில் ஒருவர். 15 ஆண்டுகள் அதனுடன் வளர்ந்து பல உயரங்களைத் தொட்ட பின் இப்போது தனி நிறுவனம் துவக்கியிருக்கிறார். நாட்டின் சிறநத அறிஞர்களை... தேர்ந்தெடுக்கும் வெள்ளை மாளிகையின் குழுவில் ஒருவராக நியமித்திருக்கிறார்


அமெரிக்கஅரசுக்காகவும்  அதற்குஎதிராக தனியார் நிறுவனங்களுக்காகவும் \ வாதாடியவர் ஸ்ரீநிவாஸ் அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் 20 வழக்குகளூக்கு மேல் வென்று புகழ் பெற்றவர்எதிர்கட்சியை சேர்ந்த அதிபர் புஷ் அவர் காலத்தில் அரசின் உதவி ஸொலிட்டராக அமர்த்தபட்டஒருவரை. ஒபாமா நீதிபதியாக அறிவித்தபோது அவரது கட்சியில் சின்ன சலசலப்பு.நான் ஒரு வழக்கறிஞரென்ற முறையில். ஸ்ரீகாந்த்தின் திறமமையை  நன்கு அறிவேன். அவரைப்போன்ற திறமைசாலிகள் அமெரிக்க நீதித்துறையில் இருப்பது நாட்டுக்கு கெளரவம்  என சொல்லியிருக்கிறார். 43 வயதாகும் ஸ்ரீகாந்த்துக்கு இது ஆயூட்கால பதவி. எட்டே நீதிபதிகள் கொண்ட அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் வருங்காலத்தில் அமரக்கூடிய வாய்ப்பும் இருக்கிறது.
“ஸ்ரீ“ என நண்பர்களால் அழைக்கபடும் ஸ்ரீகாந்த் சட்டபடிப்பு முடிந்தபின் அமெரிக்க முறைப்படி ஒரு வழக்கறிஞர்கள் நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்றி அந்த நிறுவனத்தின் பங்குதாரராகவும் பினஅதன் தலைவருமாக வளர்ந்தவர்


13/7/13

மோடியின் எதிர்கால கனவுகளும், என்கவுண்ட்டர்களும்


அதிகாரபூர்வமாக அறிவிக்கபடாவிட்டாலும் பிஜேபியின் பிரதமர் வேட்பாளாரக அறியபட்டிருக்கும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு  கட்சியில் முறைத்து கொள்ளும் மூத்த தலைவர்கள், உதறிவிட்டுபோகும் கூட்டணிகட்சிகள் போன்ற பிரச்சனைகளுடன் இப்போது சேர்ந்திருக்கும் புதிய தலைவலி 9 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு என்கவுண்ட்டர்.
2004ஆம் ஆண்டு ஜூன் 15ந் தேதி அகமதாபாத்-காந்திநகர் நெடுஞ்சாலையில் நடந்த இந்த என்கவுண்ட்டர் சம்பவம் குஜராத்தை மட்டுமல்ல, இந்தியா முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.  இளம்பெண் இஷ்ரத் ஜகானுடன் பிரனேஷ் பிள்ளை என்கிற ஜாவத் குலாம் ஷேக், அம்ஜத் அலி ரோனா, ஜீஷன் ஜோகர் ஆகிய நான்கு முஸ்லிம்கள் என்கவுண்ட்டர் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை உண்டாக்கியது.இதில் இஷ்ரத் ஜகான் 19 வயது கல்லூரி மாணவி. பீகாரை சேர்ந்தவர்.இவர் மும்பையில் உள்ள குருஞானக் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்தார் இவருக்கு தீவிரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்பு என்றும், குஜராத் முதல்வரான நரேந்திர மோடியைக் கொலை செய்யத் திட்டமிட்ட லஷ்கர்-இ-தொய்பாவின் இளைஞர்கள் மூவருடன் இஷ்ரத் இணைந்து செயல்பட்டார் என்றும் இவர்கள் தங்கள் இயக்கத்திற்கான செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தபோது போலீசாரால் என்கவுண்ட்டர் செய்யப்பட்டனர் என்றும் குஜராத் காவல்துறை தெரிவித்தது. இந்த என்கவுண்ட்டரை நடத்தியது டி.ஐஜி வன்சார என்பவர், இவர் பல என்கவுண்ட்டர்களை நடத்தியிருக்கும் ஒரு என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட். கொல்லபட்ட நால்வரும் ல்ஷ்கர்-இ-தொய்பா அமைப்பினர் என்றும் முதல்வரை கொல்ல சதி செய்தற்கான ஆதாரங்களும் இருப்பதாக சொல்லியிருந்தார். ஆனால், இஷரத் ஜகான் குடும்பத்தினரும், பிர்னேஷ் பிள்ளையின் தந்தையும் இது என்கவுண்ட்டரே அல்ல. திட்டமிட்ட படுகொலைஎன்றனர். மனித உரிமை அமைப்பினரும் குஜராத் எதிர்க்கட்சியினரும்,பத்திரிகைகளும் இதே குற்றச்சாட்டை எழுப்பின.
 5 ஆண்டுகால விசாரணைக்குப் பிறகு 2009ல், “இஷ்ரத் ஜகான் உள்ளிட்ட நால்வரும் என்கவுண்ட்டரில் கொல்லப்படவில்லை. போலீஸ் திட்டமிட்டு செயல்பட்டுள்ளதுன்றார் அகமதாபாத் மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்டிரேட். அவர் தனது நீண்ட 243 பக்க அறிக்கையில்  பதவி உயர்வுக்கும், மெடல்களுக்கும், பாதுகாப்பாற்ற நிலையிலிருக்கும் முதல் அமைச்சரை காப்பாற்றியதைபோல நல்ல பெயரை வாங்கவும் இந்த படுகொலையை போலீஸ் அதிகாரிகள் செய்திருக்கிறார்கள் என்று  தீர்ப்பளித்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத குஜராத் அரசு  தீர்ப்பை எதிர்த்து  உயர்நீதிமன்றத்தில்.  அப்பீல் செய்தது. கொலை, திட்டத்தை நிறைவேற்ற வந்திருக்கும் தீவீரவாதிகளைப்பற்றிய  தகவலை தந்தது மத்திய உளவுத்துறையினர்தான். என்றும் அதை போலீஸ் செயலாக்கியிருக்கிறது.  என்றும் மனுவில் சொல்ல பட்டது.
உண்மை நிலையை அறிய உயர் நீதிமன்றம் ஒரு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது..  குழுவும் விசாரணை தொடர்ந்தது. குஜராத் உயர்நீதிமன்றத்தில், 2011ஆம் ஆண்டு சிறப்பு புலனாய்வுக் குழு தாக்கல் செய்த மனுவில், “இது முறைப்படி நடந்த என்கவுண்ட்டரே அல்ல. என்கவுண்ட்டர் நடந்ததாகச் சொல்லப்படும் தேதிக்கு முன்பாகவே இஷ்ரத் ஜகான் உள்பட நால்வரும் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்என்று தெரிவித்தது. அதாவது, நால்வரும் போலீசாரால் ஏற்கனவே பிடிக்கப்பட்டு, போலீசின் கஸ்டடியிலேயே கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கை.இதனை ஏற்றுக்கொண்ட குஜராத் ஐகோர்ட்டு இந்த போலி என்கவுண்ட்டர் பற்றி உரிய விசாரணை நடத்த சி.பி.ஐ. போலீசாருக்கு உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கு விசாரணை தகவல்களை கோர்ட்டுக்கு அவ்வப்போது தெரிவிக்க வேண்டும் என்று கூறியதோடு சி.பி.ஐ. விசாரணையையும் கோர்ட்டு நேரடியாக கண்காணித்து வந்தது.  கடந்த மார்ச் மாதம் வழக்கு விசாரணையில்  எந்த முன்னேற்றமும் இல்லாதை கண்டித்து  இரண்டு வாரத்திற்குள் குற்றபத்திரிகை தாக்கல்செய்யபடவேண்டும் என  சிபிஐக்கு கட்டளையிட்டது. இந்த  நால்வர் கொலை செய்யப்பட்ட என்கவுண்ட்டரிலும் சம்பந்தபட்டிருந்த டிஐஜி வன்சாரா சிறையிலிருக்கிறார். காரணம் 2005ஆம் ஆண்டு ஷொராபுதீன் ஷேக் என்பவர் லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடையவர் என்றும், அவரும் மோடியை கொல்லத் திட்டமிட்டார் என்று என்கவுண்ட்டர்பாணியில் குஜராத் போலீஸ்  தீர்த்துக் கட்டியிருந்தது. இந்த என்கவுண்ட்டரை முன்னின்று நடத்தியவரும் டி.ஐ.ஜி வன்சராதான். ஷொராபுதீன் என்கவுண்ட்டர் நடந்த இரண்டாவது நாளில் அவரது மனைவி கவுசர்பீ, டி.ஐ.ஜி.வன்சராவின் சொந்த கிராமத்திற்கு அருகே கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார் .இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்குட்பட்டு, சுப்ரீம் கோர்ட் வரை சென்றது. அப்போது, கவுசர்பீ கொலைதான் செய்யப்பட்டார் என்பதை குஜராத் அரசின் வழக்கறிஞரே சுப்ரீம் கோர்ட்டில் ஒப்புக்கொண்டார். ஷொராபுதீன் என்கவுண்ட்டரும் போலியானதே என்பது தெரிய வந்தது. இதனால் இந்த வழக்கில் டி.ஐ.ஜி வன்சரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரிடம்  கோர்ட் அனுமதியுடன் ஜெயிலில் விசாரணை நடத்தியபின் சிபிஐ குற்றபத்திரிகையை தாக்கல் செய்திருக்கிறது. சாம்பல் தாடியும் கறுப்பு தாடியும் இந்த என்கவுண்ட்டருக்குஒப்புதல் கொடுத்த பிறகுதான் எங்கள் பிடியில் இருந்த அந்த 4 பேரையும் தீர்த்துக் கட்டினோம்என்று சிபிஐயிடம் சொல்லியிருக்கிறார் டி.ஐ.ஜி. வன்சரா. என்பது சிபிஐ தரப்பிலிருந்து கசியும் செய்தி.  இந்த அடையாளாங்கள்  குஜராத் முதல்வரையும், உள் துறை அமைச்சராகயிருந்த அமித் ஷாவையும் குறிப்பிடுகிறது அத்துடன், இந்த என்கவுண்ட்டர் படுகொலைக்கு முன்பாக இரண்டு முறை அமித் ஷாவிடம் வன்சரா பேசியிருப்பதாகவும் சி.பி.ஐ. தெரிவிக்கிறது.பதிவு செய்யபட்டிருக்கும் இந்த வாக்குமூலம் கோர்ட்டில் உறுதி செய்யபட்டால் மோடிக்கும், அமித்ஷாவிற்கும் பிரச்சனை ஏற்படும்.
 ஆனால் பல போலீஸ் அதிகாரிகளை குற்றபத்திரிகையில் பட்டியிலிட்டிருக்கும் சிபிஐ அமைச்சர்களை சேர்க்கவில்லை. தொடர்ந்து சமர்பிக்கபடும் கூடுதல் குற்றபத்திரிகைகளில் அமித் ஷாவின் பெயர் சேர்க்கபடும் வாய்ப்பு இருக்கிறது. இது மோடிக்கு அரசியல் ரீதியாக மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்.
மேலும் குற்றபத்திரிகையில் சிபிஐ வெடிகுண்டாக  ஒரு  டேப்பை இணைத்திருக்கிறது, அதில் மாநில கல்வி, சட்ட, உள்துறை அமைச்சர், முதல்வரின் செயலாளர் பங்குபெற்ற ஒரு கூட்டத்தில் அதில் குஜராத் அட்வகேட் ஜெனரல் திரிவேதி   “சிறப்பு புலனாய்வுக் குழு தன்னுடைய அறிக்கையில், இஷ்ரத் ஜகான் கொல்லப்பட்டது போலி என்கவுண்ட்டரில்தான் என்று சொன்னால், நாம் அரசுக்கோ அதிகாரிக்கோ எந்த சிக்கலும் இல்லாமல் முறியடிக்கவேண்டும் அதுதான் முக்கியம்என்று சொல்லியிருக்கிறார். . தடய அறிவியல் துறையால் பரிசோதிக்கபட்டிருக்கும் இந்த டேப்பை ரகசியமாக பதிவு செய்தவர் அந்த கூட்டத்தில் பங்குகொண்ட ஒரு போலீஸ் அதிகாரி.
மற்றொரு அதிர்ச்சியான தகவல் மத்திய உளவுத்துறையினர் இதில் சம்பந்தபட்டிருப்பது. ஐபி  என்பது மத்திய உள்துறைஅமைச்சகத்தின் ஒரு அமைப்பு. இவர்களுக்கு சட்டரீதியான எந்த அங்கீகாரமும் கிடையாது. ஆனால் மிக வலிமையான அமைப்பு. ஒவ்வொரு மாநிலத்திலும்   மத்திய அரசின் மூத்த போலீஸ் அதிகாரியின் கீழ் ஒரு சின்னபிரிவு இயங்கும். மாநில போலீஸுக்கு முக்கிய ரகசியங்களையும்   அவர்களைப்பற்றி மத்திய அரசுக்கு தகவல்களையும்  தருவது இவர்கள் பணியில் ஒன்று. குஜராத்தில் அப்படி இருந்த மூத்த ஐபி அதிகாரி ராஜேந்திர குமார். இவர் மோடியுடன் மிக நெருக்கமாகயிருந்த அதிகாரி. இவர் தந்த தவறான தகவலினால்தான் இந்த என்கவுண்ட்டர் என்பதை இப்போது சிபிஐ கண்டுபிடித்திருக்கிறது. இவரை கைது செய்து விசாரிக்க வேண்டும் என சிபிஐ முயற்சிக்கிறது. அதற்கான அனுமதியை அரசிடம் கோரியிருக்கிறது.  இப்படி மத்திய உளவுதுறையின் மீது வழக்கபோட முயற்சிப்பது இதுதான் முதல் முறை.  எந்த சட்டபிரிவின் கீழும் வராத அந்த அமைப்பின் மீதுவழக்குபோடமுடியுமா என்பதே சந்தேகத்திற்கு உரிய கேள்வியாகயிருந்தாலும், அரசு இயந்திரத்தின் இரு அமைப்புகள் இப்படி மோதிக்கொள்ள மத்திய அரசு அனுமதிக்குமா? என்பது தான் இப்போது எழும் முதல் கேள்வி.   உளவுத்துறையின் கண்ணியத்தை காப்பாற்ற மேல் நடவடிக்கைகள்  எதுவும் எடுக்காமல் விடப்பட்டால்  பலன் பெறப்போவது மோடிதான். என்பதை உணர்ந்திற்கும் காங்கிரஸ் அரசு இதை எப்படி கையாளாளப்போகிறது என்பதை சிபிஐ, ஐபி இரண்டு அமைப்புகளின் அதிகாரிகளும்  கூர்ந்து கவனித்துகொண்டிருக்கின்றனர்.
சிபிஐக்கு வெற்றி வாய்ப்புள்ள, குஜராத் அரசுக்கு எதிரான  இந்த போலிஎன்கவுண்ட்டர் வழக்கு மோடியின் பிரதமர் கனவு பலிப்பதை பாதிக்குமா?
நிச்சியமாக இல்லை என்று சொல்லமுடியாவிட்டாலும் இமேஜ் சரிகிறது என்பது நிஜம்.   அவர் இமேஜை பாதிக்கும் விஷயங்களாக பட்டியலிடபட்டிருக்கும், கேப்டலிஸ்ட்,தீவிரமதவாதி,சிறுபான்மையினருக்கு எதிரானவர், போன்றவகைளோடு   போலீஸையும் உளவுத்துறையையும் சுயநலத்திற்காக கையாளுபவர் என்ற லேபிலும் சேர்வதை தவிர்க்கமுடியாது

-ஆதித்யா 
கல்கி  21/07/13 இதழலில்

3/7/13

கொடிகட்டி பறக்கும் பிரார்த்தனைகள்

குஜராத் பயணம் 3
3


கொடி என்பது ஒரு நாட்டின்,அரசின், அல்லது இயக்கத்தின் தனித்துவத்தை  கம்பீரமாக வெளிப்படுத்தும் சின்னம். தனிச்சிறப்புகளைச்சொல்லும் அதன் வண்ணங்களும், அதில் உள்ள சின்னங்களும் உன்னதமானவைகளாக போற்றப்படுபவை.நம் தேசம் முழுவதும் எல்லா மதத்தினரின் கோவில்களிலும்வழிபட்டுதலங்களிலும் கொடி என்பது விழாக்காலங்களின் அடையாளமாக அறியபட்டவை.

ஆனால் குஜராத் மாநிலத்தில் மேற்கு கோடியில் கடலோரமாக இருக்கும் புகழ் பெற்ற துவாரகா நகரிலிருக்கும் கண்ணன் கோவிலில் தினசரி கொடிகள் தனிநபர்களின் பிரார்த்தனையின்வெளிப்பாடாக ஏற்றப்படுகிறது. மதுராவிலிருந்து இங்கு வந்த கண்ணன் கடல் அரசனிடம் கேட்டு அவன் ஒதுங்கி வழி விட்ட இடத்தில் துவாரகா நகரை நிர்மாணித்து ஆட்சி செய்த தேசம் இது, இந்த கோவில் அவரது அரண்மனை என்கிறது இதிகாசம், 16ம் நூற்றாண்டில் சாளுக்கிய பாணியில் கட்டபட்ட கோவில் என்று யூனஸ்கோ இதை பாதுகாக்கபடவேண்டிய உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக அறிவித்திருக்கிறது. போல பளபளக்கும் பல வண்ணங்களில் உடலைபிடிக்கும் மன்னர்களின் உடைகளைபோல் பட்டு சட்டை அணிந்த பண்டிட்களும் கண்ணனும் எப்ப்போதும் பிசியாக இருக்கும் இந்த கோவிலுக்கு சதாரண நாட்களில் 5000 பேர் வருகிறார்கள். சன்னதியில்  பளபளக்கும் கறுப்பு பளிங்கில் கோவர்த்தனாக கண்ணன் காட்சி தரும் இந்த கோவிலின் கோபுரத்தில் கொடி  தினசரி 4 முறைகளும் வியாழன் அன்று 5 முறைகளும் வெவ்வேறு வண்ணங்களில் ஏற்றபடுகிறது. 170 அடிகள் உயரமான கோபுரத்தின் உச்சியில் பறக்கும் இந்த கொடி மிக பிரமாண்டமானது. நகரின் எந்த பகுதியிலிருந்து பார்த்தாலும் பளிச்சென்று தெரிகிறது. 52கஜ நீளத்தில் நீண்ட முக்கோண வடிவத்தில் பட்டு துணியில் விசேஷமாக தயாரிக்கபடும் இந்த கொடிகள் பக்தர்கள் பிராத்தனை செய்து விரும்பவதை வேண்டிக்கொண்டு ஏற்றபடுவது. 52 சிறிய கொடிகளாக தயாரிக்க பட்டு நீண்ட கொடியாக இணைக்க படுகிறது. அதென்ன 52 கஜம் என்ற கணக்கு? .. 27 நக்ஷத்திரங்கள், 12 ராசிகள், 9 கிரஹங்கள், 4 திக்குகள் என்ற வற்றைக் கூட்டினால் வரும் எண்ணிக்கையின்படி 52 கஜம் நீளமுள்ள கொடி இது என்கிறார் திரு வேளுக்குடி கிருஷ்ணன். கொடிகள் கோவிலால் அனுமதிக்க பட்டவர்களால் மட்டுமே தயாரிக்கபடுகிறது.
சிவப்பு, பச்சை, மஞ்சள், நீலம் வெள்ளை காவி, வானவில்லின் அத்தனை வண்ணங்களும் இணைந்தவை போன்ற பலவண்ணங்களில் கொடிகள்.எந்த வண்ணமாக இருந்தாலும் அதில் சூரியன் சந்திரன் சின்னங்கள். திருமணம், தொழில்வெற்றி, நீண்டஆயுள், செல்வம் மேன்மை போன்றவைகளை அடைய அவைகளை குறிப்பவைகளாக அறியபட்ட வண்ணகொடியை பிரார்த்தனையாக ஏற்ற பக்தர்கள் முன்பதிவு செய்தது காத்திருக்கிறார்கள். அடுத்த ஆண்டு முழுவதற்கும் இப்போதே முன்பதிவு செய்யபட்டுவிட்டது. 25000ரூபாய் பணம் கட்டி புக் செய்திருப்பவர்களின் குடும்பத்தினர் அவர்களுக்காக ஒதுக்கபட்ட நாளில் ஒரு பெரிய பந்தாக சுருட்டபட்டிருக்கும் அந்த கொடியை மலர்களுடன்



ஒரு மூங்கில் கூடையில் தலையில் சுமந்து வீதிகளிலும் கோவிலின் பிராகாரத்திலும்  வாத்தியங்களும் பாடல்களும் ஒலிக்க நடனமாடி(சூப்பர் குதாட்டம்!) வலம் வந்து கிருஷ்ணரின் சன்னதியில் பாதத்தில் வைத்து பூஜை செய்து 52 படிகள் ஏறி கோபுரத்தின் முதல் தளத்திற்கு எடுத்துசெல்லுகிறார்கள். அதற்கு மேல் இந்த கொடியை கோபுரஉச்சிக்கு எடுத்து சென்று ஏற்றும் உரிமை பெற்றவர்கள் ஒரு சில யாதவ குடும்பத்தினர் மட்டுமே. பின்குடுமி வைத்திருக்கும் இவர்கள் ஜீன்சும் சட்டையும் அணிந்திருக்கிறார்கள், கோபுரத்தின் உச்சியில் கலசத்திற்கு அருகில் ஒரு சிறியமர மேடை. அது புடவை போன்ற  நீண்ட இரண்டு துணிகளினால் கலசத்துடன் இணைக்கபட்டிருக்கிறது. மேலே ஏற எந்த வசதிகளும் இல்லாத அந்த கோபுரத்தின் உச்சியில்  அந்த துணியைபிடித்து மேடையில் ஏறுகிறார்கள் இந்த ஜோடியினர். ஒருவர்  மேடையின்மீது நிற்கும் 25 அடி உயர கொடிகம்பத்தை அதன் இடத்திலிருந்து எடுத்து  கொடியைமட்டும் உருவி  எடுத்துகொண்டபின் கம்பத்தை மட்டும் மற்றொருவரிடம் கொடுகிகிறார். அவர் அதில் புதிய கொடியை நுழைத்து திருப்பிக் கொடுக்க புதுக்கொடி மேடையில் நிறுத்தபடுகிறது. பாதங்களின் விரல்கள் வினாடி தவறினால் விபரீதம்
என்ற நிலையில் எந்த பாதுகாப்பு வசதிகளும் இல்லாத அந்த உயரத்தில் இரண்டுபேர் மிக அனாசியமாக 10-15 நிமிடங்களில் அவ்வளவு பிரமாண்டமான கொடியை மாற்றிவிட்டு பணம் கட்டியவர்களுக்காக தலையால் மரத்தை தொட்டு பிராத்தனை செய்துவிட்டு இறங்கி விடுகிறார்கள் கொடி ஏற்றும்போது இவர்கள் பத்திரத்திற்காவும் நாம் பிரார்த்திக்கிறோம்.(கீழே இருக்கும் வீடியோவை பாருங்கள்).
அடுத்து என்ன வண்ணத்தில், எதைகுறித்தபிராத்தனைக்காக கொடி ஏற்றபடும் என்பதுமுன்பே தெரியாதால், மாறும் இந்த கொடிகளின் வண்ணங்கள் ஒரு சகுனமாக மற்றபக்கதர்களால் பார்க்கபடுகிறது. தரிசனத்திற்கு வரும் பத்தர்கள் தங்கள் வேண்டுதல் இந்த கொடியின் வண்ணத்தில் பிரதிபலித்தால் அதை ஒரு நல்ல சகுனமாகவும் கிருஷ்ணனின் அனுமதியாகவும் எடுத்துகொள்கின்றனர்.
ஐஸ்வர்யா, அபிஷேக் திருமணத்திற்கு முன் அவர்கள் குடும்பத்தின் சார்பில் இங்கு பிராத்தனை செய்து கொடிஏற்றபட்டிருக்கிறது.

26/6/13

அழகிய காதலிக்காக ஒரு ஆழ்கிணறு

 2

 குஜராத் பயணம் 2 


குஜராத் மொழியில் வாவ் என்று சொன்னால் படிக்கட்டுகளுடன் உள்ள ஆழ் கிணறு என்று அர்த்தம். அஹமதாபாத் நகருக்கு அருகில் 18 கீமீ தொலைவில் இருக்கும் அடலாஜி என்ற கிராமத்தில் இருக்கும் இந்த கிணற்றை பார்ப்பவர்கள் பிரமித்துபோய் ஆச்சரியத்தில் சொல்லுவது “ "வாவ்”. கலைநயம் மிளிரும் தூண்களுடன் நிற்கும் ஐந்து பெரிய தளங்கள். மலர்கள், பறவைகள் யானைகள் என்று அழகான சிற்பங்களுடன் அதன் பக்க சுவர்கள், வழவழப்பான அதன் தரைகள்,. இவ்வளவும் பூமிக்கு அடியில். 300 அடிகள் ஆழத்திற்கு அமைக்கபட்டிருக்கிறது. எண்கோண வடிவில் பிரமாண்டமாக அமைக்க பட்டிருக்கும் இதன் மூன்று பக்கங்களிலும் இருக்கும் அகலமான படிகள் கிழே முதல் தளத்திற்கு இட்டு செல்லுகிறது. அங்கிருந்து கிழே தண்ணீர் இருக்கும் பகுதிக்கு இறங்க வசதியாக  அமைக்கபட்டிருக்கும் 344 படிக்கட்டுகளின் பக்க சுவர்களை இணைத்து வட்டவடிவில் தளங்கள். எளிதாக நூறுபேர் அமரலாம். அவற்றிலிருந்து கிழே கிணற்று நீரை பாதுகாப்புடன் பார்க்க சுற்று சுவர்கள், மாடங்கள். தள சுவர்களில் சமஸ்கிருத எழுத்துக்களில் ஸ்லோகங்கள், சிற்பங்கள் இந்த கிணற்றின் கதை எல்லாம். இதை ஒரு கிணறாக மட்டுமில்லாமல் மக்கள் கூடும் பலவகை பயன்பாட்டிருக்கு உதவும் ஒரு சமூதாய கூடமாக அமைக்கபட்டிருப்பது புரிகிறது  இதைஎல்லாம் விட ஆச்சரியம். 300 அடை ஆழத்தில் அண்டர்கிரவுண்ட்டில் இருக்கிறோம் என்பதை மறக்க செய்யும் வெளிச்சமும் காற்றும்.வெளியே அனலாக கொதிக்கும் ஏப்பரல் மாத அஹமதாபாத்தின் தாக்கமே இல்லாமல் இதமான சுழல்.


கட்டிட கலையில் மிக சவலானது நிலத்தடியில் கட்டிடம் எழுப்பவது. அதுவும் சரியான இடத்தில் ஒரு வற்றாத ஆழ்கிணற்றின் நீர் நிலையை கண்டுபிடித்து (இன்றும் அதில் தண்ணீர் இருக்கிறது) அதில் பருவகாலத்தில் அதிகபட்ச நீர் நிறையும்இடத்தைகணக்கிட்டு  மேல் நோக்கி கலைநுணுக்கத்துடன் தளங்களைஎழுப்பி இணைத்திருப்பது ஒரு சாதனை.. 15ஆம் நூற்றாண்டிலேயேஇதை இந்திய கட்டிடகலைஞர்கள் சாதித்திருக்கிறார்கள் என்பதற்கு சாட்சியாக நிற்கும் இது,  தாஜ்மஹாலைப்போல ஒரு காதல் சின்னம் என்பதை அதன் சுவர்களிலிருக்கும் கல்வெட்டுக்கள் சொல்வது  நம் ஆச்சரியத்தை இன்னும் அதிகமாக்குகிறது.
15ம் நூற்றாண்டில் இந்த பகுதியை ஆண்ட மன்னன் ராணா வீர்சிங். அவரது காதலித்து மணம் புரிந்த கொண்டது ரூபா என்ற அழகிய கிராமப் பெண்ணை..தன்னைப்போல தன் ஊர் மக்கள் தண்ணீருக்காக நீண்ட தூரம் நடப்பதை தவிர்க்க தங்கள் காதலின் நினைவு பரிசாக தன் கிராம மக்களுக்கு ஒரு அழகான கிணற்றை நிர்மாணிக்க வேண்டினார் ருபா. மகிழ்ச்சியுடன் சம்மதித்த மன்னர் உடனே செய்ய துவங்கினார். ஆனால் 3 வது மாட பணிகள் நடந்து கொண்டிருந்தபோது, அந்த காலகட்டத்தில் வேகமாக பரவி வந்த முகமதியர் படைஎடுப்பினால் பக்கத்து நாட்டு முகமதிய மன்னன் தொடுத்த போரில் ராணா வீர்சிங்  கொல்லபட்டு நாடு முகமதியர் வசமாகிறது. முகமதிய மன்னர் ராணி ரூபாவின் அழகில் மயங்கி தன் காதலை அவரிடம் சொல்ல,ராணி ரூபா சொன்ன ஒரே நிபந்தனை இந்த கிணற்றின் பணியை முடித்து மக்களுக்கு கொடுங்கள் நான் உங்கள் மனைவியாகிறேன் என்பது தான்.
கட்டிட பணி தொடர்கிறது. ரஜபுத்திர கட்டிடகலைபாணியில் துவக்கபட்ட கிணற்றின் கடைசி இரு மாடங்கள் முகமதியர் பாணியில் முடிக்கபடுகிறது. மக்களுக்கு அர்பணிக்கும் விழாவின் மறுநாள் திருமணம் என்ற நிலையில் ரஜபுத்திர பெண் ரூபா அந்த கிணற்றை வலம் வந்து அதில் விழுந்து தன் உயிரை போக்கி கொள்ளுகிறார். அதற்கு சில நாட்கள் முன்பு அருகிலிருக்கு ஸ்வாமி நாராயணன் கோவிலின் தலமையிடம் தான் செய்ய போகும் காரியத்தையும் தன் மரணத்திற்கு பின் கிணற்று நீரை புனிதபடுத்த வேண்டிய சடங்குகளைசெய்யது மக்கள் பயன்படுத்தஉதவ வேண்டும் என்று வேண்டியிருக்கிறார். (இது அந்த கோவிலிலும் பதிவு செய்யபட்டிருக்கிறது). தான் ஏமாற்றபட்டவிட்ட கோபத்தில் முகம்மதிய மன்னன் இதை இடித்து தள்ளாமல் விட்டதைவிட ஆச்சரியம் தகுந்த பாதுகாப்புடன் மக்கள் அதை பயன்படுத்த அனுமதித்ததுதான். அவரின் ஒருதலைகாதலின் சின்னமாக இருக்கட்டும் என விட்டிருக்கலாம் என சில சரித்திர ஆசிரியர்கள் எழுதியிருக்கிறார்கள்.
அழகான, ஆழமான இந்த கிணறு இரண்டு மன்னர்களும் காதலித்தது ஒரு பெண்ணை மட்டுமில்லை கட்டிடகலையையும் தான் எனபதை நமக்கு சொல்லுகிறது.
படங்களை ஸ்லைட் ஷோவில் பார்க்கலாம் 











23/6/13

பெரிய அண்ணன் பார்த்து கொண்டிருக்கிறார்,





உங்கள் ஈ மெயில், பேஸ்புக், டிவிட்டர், பிளாக்இண்டர்நெட்டில் அனுப்படும் போட்டோக்கள், ஸைக்ப்பில் பேசுவது, யூடூபில் பார்ப்பது, அனுப்புவது எதுவாக இருந்தாலும் அமெரிக்க உளவுதுறையால் எப்போது வேண்டுமானாலும் உங்கள் இண்ட்ர்னெட்டின் சர்வரிலிருந்து நேரிடையாக பெற்று பார்க்க முடியும். தொடர்ந்து கண்காணிக்கவும் முடியும்.  அதற்கான அதிகாரமும்  அத்தனை வசதிகளும் அவர்களிடமிருக்கிறது. .  ஆப்பிள், மைக்ரோசாப்ட். குகூள், யாகூ போன்ற எல்லா நிறுவனங்களும் இதற்கு உதவ ஒப்பந்தம் செய்து  கொண்டிருக்கின்றன,இந்த திட்டத்திற்கு பிரிசம்”PRISM என்று பெயர்  ”உலகம் முழுவமுள்ள தனி மனிதர்களின்  சுதந்திரத்தில் தலையிடும் மிகப்பெரிய குறுக்கீடு, மனித உரிமை மீறல் இது என்ற அதிர்ச்சியான தகவலை கடந்த வாரம் அமெரிக்காவின் புகழ் பெற்ற தினசரி கார்டியன்” வெளியிட்டிருக்கிறது கார்டியன் இதழ் அதன் நம்பகமான செய்திகளுக்கும், ஆணித்தரமான தலையங்களுக்கும் பெயர் பெற்றது. தொடர்ந்து வாஷிங்டன் போஸ்ட் தினசரியும்  இது பற்றி ஒரு கட்டுரையை வெளியிட்டிருக்கிறது.
NSA நேஷனல் தேசீய ஏஜென்ஸி என்பது அமெரிக்க உளவு துறையின் 
ஒரு அங்கம் 1952லேயே துவக்கபட்ட இது முதல் 20 ஆண்டுகள் எங்கிருந்து இயங்குகிறது எனபதே தெரியாத அளவிற்கு ரகசியமானதாக இருந்தது. NSA என்றால் ”நோ ஸ்ச் ஏஜென்சி” என்று கூட கிண்டல் செய்யபட்டது. 1975ல் ”இது வெளிநாடுகளில் அமெரிக்க பாதுகாப்புக்கு ஏதிராக நடவடிக்கைகளில் ஈடுபடும் சந்தேகத்திற்குரிய நபர்களின் செய்தி தொடர்புகளை கண்காணிக்கிறது. அமெரிக்க மக்களின் தனிநபர் சுதந்திரத்தில் தலையீடுவதில்லை” என்று இதன் அன்றைய தலைவர்  அமெரிக்க நாடளுமன்றத்தில் ஆஜாராகி தெரிவித்தார். ஆனால் இந்த நிறுவனம்தான்  இப்போது அமெரிக்கா மட்டுமில்லை உலகம் முழுவதும் உள்ள அத்தனை பேரின் அந்தரங்களுக்குள்  ஊடூருவும் சர்வ வல்லமை பெற்றிருக்கிறது.. இது அமெரிக்க அதிபரின் அனுமதியையும் பெற்றிருக்கிறது என்கிறது கார்டியன். NSA இன்று ஆண்டுக்கு 20 கோடி டாலர் பட்ஜெட்டில் 1000பேருக்கு மேல் பணியாற்றும்-(பலர் ராணுவ சேவை எனற போர்வையில்) - நிறுவனம். பல வெளிநாடுகளில் அலுவலகங்கள் எனஇன்று உலகின் மிகப்பெரிய கண்காணிப்பு நிறுவனமாக பிரமாண்டமாக வளர்ந்திருக்கிறது. இதன் கண்காணிப்பு பட்டியலில் 5 வது இடத்தில் இருப்பது இந்தியா. கடந்த மார்ச் மாதம்மட்டும்  இவர்கள் ஆராய்ந்திருப்பது 63 லட்சம் இந்திய செய்திகளை!
அமெரிக்க சட்டத்தின் படிஒரு அமெரிக்கரின் அல்லது வெளிநாட்டாவரின் போன் அல்லது எந்த ஒரு செய்தி தொடர்புகளை கண்காணிக்க வேண்டுமானால் அரசு அதற்கென மட்டுமே இயங்கும் ஒரு கோர்ட்டில் ரகசிய ஆணையை வாரண்ட்டாக பெற வேண்டும். இது செனட் கமிட்டிக்கு தெரிவிக்கபடும். ஆனால் இப்போது இது NSA வின் நடவடிக்கைகளுக்கு பொருந்தாது என அமெரிக்க அதிபர் விசேஷ அதிகாரம் அளித்திருக்கிறார். அதனால் அவர்கள் எப்போது வேண்டுமானலும் யாருடைய கணக்கையும் கண்காணிக்க முடியும். இந்த அதிகாரம் புஷ் அதிபராக இருந்தபோது வழங்கபட்டது. ஒபாமா அதன் ஆயூட்காலத்தை இப்போது நீடித்திருக்கிறார். ஒபாமா தன் முதல் தேர்தலில்”புஷ் நிர்வாகத்தில் அமெரிக்க மக்களின் தனி உரிமைகளில் அரசாங்கத்தின் தலையீடுகளை” கண்டித்தவர்.
 செய்தி வெளியாகி ஊடகங்கள் கலக்கி கொண்டிருந்தபோது , ”பிரிஸமா ?” அப்படி ஒன்றும் எங்களுக்கு தெரியாதே!. நாங்கள் கோர்ட் கேட்கும் தகவல்களை மட்டுமே கொடுப்போம். எங்கள் வாடிக்கையாளர்களின் செய்திகளை நாங்கள் யாருடனும் பகிர்ந்து கொள்வதில்லை என எல்லா இண்ட்ர்நெட் சேவை நிறுவனங்களும் தெரிவித்தன. எல்லா கம்பெனிகளின் அறிக்கைகளூம் ஒரே மாதிரியான வாசகங்களை கொண்டிருப்பதிலிருந்தே உண்மை புரிய வில்லையா? என கேட்கிறது வாஷிங்டன் போஸ்ட்.  கார்டியன் வெளியிட்ட செய்திகள் முழுவது உண்மையில்லை என சொல்லும் NSA வின் தலைவர் கண்காணிக்க படுவதை மறுக்க வில்லை.  அமெரிக்க அதிபர் ஓபாமா ”தேச நலனுக்காக செய்யபடும் விஷயங்களில் எந்த நிர்வாகமும் 100% வீத பாதுகாப்பும், 100% தனிஉரிமையையும் 0% யாருக்கு தொல்லையில்லாத வாழக்கையை எல்லோருக்கும் அளிக்க முடியாது” என்று  சொல்லியிருப்பது அவரின் ஆசியுடன் தான் இந்த விஷயங்கள் நடைபெறுகிறது என்பதை உறுதி செய்கிறது. பிரிஸம் பிரிவினருக்கு பயிற்சி அளிக்க தயாரிக்க பட்டிருந்த 41 ஸ்லைட்(power point slides) கள் கார்டியனிடம் சிக்கியதால் வெளிச்சதிற்கு வந்த விஷயம் இது. எப்படி இந்த அதி ரகசிய ஆவணம் லீக் ஆனது? என்பதை விசாரிக்க உயர்மட்ட குழு அமைக்கபட்டிருக்கிறது. மக்கள் நலன் கருதி சொன்னது நான் தான் என எட்வர்ட் என்பவர் அறிவித்திருக்கிறார். இவர் முன்னாள் ஊழியர்.
இணையஉலக வாசிகள் அதிர்ந்துபோயிருக்கிறார்கள். அமெரிக்காவில் எதிர்க்ட்சிகள் நாடளுமன்றத்தில் எழுப்ப காத்திருக்கின்றன. மீடியாக்கள்எதிர் குரல் எழுப்பிகொண்டிருக்கின்றன. இந்தியாவில் அகில இந்திய சேவை வழங்குவோர் சங்கம், அமைச்சர் கபில் சிபிலை சந்தித்து பிரச்சனை குறித்து பேசவிருக்கிறார்கள்.
ஏது எப்படியோ இனி மெயில் எழுதும்போது பேஸ்புக் கமெண்ட் போடும்போது ஜாக்கிரதையாக (தலைவர் ஒபாமா வாழ்க?) எழுதுங்கள்.  பெரிய அண்ணன் பார்த்து கொண்டிருக்கிறார்,    

3/6/13

“ஏர்போர்ஸ் ஒன்” என்பது அமெரிக்க  ஜனாதிபதிகள் மட்டும் பயன் படுத்தும் விமானம். சகலவசதிகளுடனும் மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடனும்  இருக்கும் இந்த விமானத்தை அமெரிக்க அதிபர்கள் தங்கள் உள்நாட்டு வெளிநாட்டு பயணங்களுக்கு  பயன்படுத்துவார்கள். அதிபர் குடும்பத்தினர், அவரது விருந்தினர்கள் மட்டுமே பயணிக்கும் இந்த பெரிய விமானத்தில் குறைவான இருக்கைகள் அதிகமான வசதிகள். அதிபருக்கு வெள்ளமாளிகை “ஓவல் ஆபிஸ்” போல ஒரு  அறை,குடும்பத்தினருக்கு தனி அறைகள், ஜிம்,  அதிகாரிகள் கூட்டத்திற்கான கான்பிரன்ஸ்ரூம்,தொலைதொடர்பு வசதிகளுடன் பத்திரிகையாளர்கள் அறை, அதிபரின் குரூப் ரத்ததின் சேமிப்புடன் ஒரு குட்டி ஆஸ்பத்திரி  என எல்லாம் இருக்கும்.
அவசியமானால் பறந்துகொண்டிருக்கும்போதே மற்றொருவிமானத்திலிருந்து பெட்ரோல் நிரப்ப வசதி,  தரையிலிருந்து பாயும் ஏவுகணைகள் விமானத்தை தாக்க முடியாத பக்க சுவர்கள் போன்ற பாதுகாப்பு வசதிகள்,  வாஷிங்டனிலுள்ள வெள்ளை மாளிகையுடன் எப்போது தொடர்பிலிருக்கும் ஹாட்லைன். உலகின் எந்த நாட்டு அதிபரையும்  தொடர்புகொள்ளும் வசதியுள்ள டெலிபோன்கள் போன்ற சகல வசதிகளுடன் கூடிய  ஒரு பறக்கும் ”வெள்ளை மாளிகை” இது


1990லிருந்து அமெரிக்காவின் முன்னாள் அதிபர்கள் ஜெரால்ட் ஃபோர்ட், ஜிம்மி கார்ட்டர், ரொனல்ட் ரீகன், ஜார்ஜ் எஸ்.புஷ், பில் கிளிண்டன், ஜார்ஜ் டபிள்யு.புஷ் ஆகியோர் பயணம் செய்த போயிங்  DC9-32 வகையை சேர்ந்த இந்த ஏர்போர்ஸ் ஒன் விமானத்தை  இப்போது ஏலம் போடபோகிறார்கள். இதைவிட இன்னும் அதிகமான பாதுகாப்பு  மற்ற வசதிகளுடன் கூடிய புதிய விமானத்தை அதிபர் ஒபாமாவின் பயன்பட்டிற்காக வாங்கியிருப்பது தான் காரணம். இம்மாதிரி அதிபரின் ஏர்போர்ஸ் ஒன்  விமானத்தை ஏலம்போடுவது இதுதான் முதல்முறை.  ஆன்லைனில் நடைபெறும் இந்த ஏலத்திற்கு 50000 டாலர்கள் குறைந்த பட்ச தொகை என்று நிர்ணயத்திருக்கிறார்கள்.  ”நாங்கள் இப்படி ஒரு சரித்திர சம்பங்களுக்கு சாட்சியான அரிய பொருளை அடிக்கடி விற்பதில்லை. வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள் என விளம்பரபடுத்தி எவரும் பங்குகொள்ளகூடிய ”ஆன்லைன்” ஏலத்தை அறிவித்திருக்கிறது GSA(Govt. Service Agency). இவர்கள் தான் அமெரிக்க அரசாங்க அலுவலக சொத்துகளை பராமரிப்பவர்கள்.   ஏலத்தில் கேட்கபடும் அதிக தொகைக்கு விமானம் விற்கபடும்.. அரிசோனா மாநிலத்தில் போனிக்ஸ் விமான நிலையத்தில்  நிற்கும் இந்த விமானத்தை அப்படியே அங்கிருந்து எடுத்து செல்லும் பொறுப்பு வாங்குகிறவர்களுடையது
விமானத்தை வாங்கியவர்கள் ”ஏர் போர்ஸ் ஒன்” என்ற பெயரையோ அல்லது அதிபரின் சின்னத்தையோ பயன்படுத்தமுடியாது. ஏனென்றால் ஏர்போர்ஸ் ஒன் என்பது அமெரிக்க அதிபர் பயணம் செய்யும்  விமானத்தின் அடையாள எண்.  அதிபர் அந்த விமானத்தில் இருந்தால் மட்டுமே அந்த பெயரால் அழைக்கபடும் என்கிறது அமெரிக்க விமானதுறை சட்டம். .இது மிக அதிகமான் செலவில்  தயாரிக்கபட்ட விமானம் என்பதால் இதன் உதிரிபாகங்கள் அதைதயாரித்த நிறுவனத்திடம் மட்டுமே கிடைக்கும் அதுவும் மிக அதிக விலையில்தான் இருக்கும் அந்த விலைக்கு புது ஜெட் விமானமே வாங்கிவிடலாமாம். அப்படியானால் யார் வாங்குபவர்கள்? வாங்கி  என்ன செய்வார்கள்.?

”அருமையான கிச்சன் வசதி இருப்பதால் அதை அப்படியே நிறுத்தி ரெஸ்டோரண்ட் நடத்தலாம்..” ஆபிஸ் அருகில் நிறுத்தி கான்பிரன்ஸ் போன்ற தங்கள் அலுவ்லக மீட்டிங்களுக்கு பயன்படுத்தலாம். பணக்காரர்கள் தங்கள் வீட்டு வாசலில் நிறுத்தி “ நான் சின்ன பையானாக இருந்த போது இதில்தான் நம் பிரெஸிடெண்ட் போவார் என்று பேரகுழந்தைகளுக்கு காட்டலாம் என்ற ரீதியில்  இணைய தளத்திலும் பேஸ் புக்கிலும் பல ஐடியாக்கள் கொட்டுகின்றன. விமானத்திற்கு விலையை சொல்லுபவர்களை விட விதவிதமான யோசனைகள்  சொல்பவர்கள் தான் அதிகமாகிக்கொண்டிருக்கிறார்கள். ம்ம். யார்வீட்டு வாசலில்  இது நிற்கபோகிறதோ?