13/9/17

விற்கப் படும் வீரப்பதக்கங்கள்



தலை நகரில் குடியரசு தின அணிவகுப்புக்கு முன்னர் குடியரசுத் தலைவர் இந்திய ராணுவத்தின் உயரிய கெளரவமான பரம வீர் சக்ரா. வீர்சக்ரா போன்ற பதக்கங்களை வழங்கும்போது, அவற்றை அதிகாரிகள் பெருமிதத்தோடு பெறும் கம்பீரமான காட்சிகளைப் பார்த்திருக்கிறோம். இந்த உயரிய விருது பதக்கங்களைத்தவிர 10 விதமான பதக்கங்களை நமது ராணுவ அதிகாரிகளுக்கும் வீரர்களுக்கும் வழங்குகிறது இந்திய அரசு என்ற செய்தியை நம்மில் பலர் அறிந்திருக்கக்கூடும்.

ஆனால் அதிர்ச்சியான செய்தி இந்தப் பதக்கங்கள் கடைகளில் விற்கப்படுகிறது என்பதுதான். செகந்திரா பாத் நகரில் லால் பஸார் என்ற பகுதியில் மிலிட்டிரி லேன் என்றழைக்கப்படும் ஒரு சிறிய சந்திலிருக்கும் கடைகளில் இந்திய ராணுவம் தரும் எந்தமெடலும் விலைக்குக் கிடைக்கிறது. மெடல்கள் மட்டுமில்லை ராணுவ அதிகாரிகள் தோள்பட்டையில் அணியும் அந்தஸ்த்தை குறிக்கும் ஸடார்கள், பட்டைகள் எல்லாமே கிடைக்கிறது. 2500 ரூபாய்களில் ஒரு ராணுவ அதிகாரி தன் வீர தீரச் செயல்களுக்காகப் பெறும் அத்தனை மெடல்களுடன் அதிகாரி அணியும் யூனிபார்மே கிடைக்கிறது.

1999 கார்கில் போர் ஆப்ரேஷன் விஜய் யில் பங்குபெற்றதற்கான மெடல் 40ரூபாய், சியாச்சின் பனிச்சிகரங்களின் பணியிலிருந்ததற்காகத் தரப்படும் உச் துங்கட்டா மெடல் 40 ரூபாய், மிகச்சிறந்த பணிக்கான மெடல் ரு 180 என விலைபட்டியலைப் பார்த்துசொல்லுகிறார்கள். மெடல்கள் ஷோ கேஸ்களில் காட்சிக்கு வைக்கபடவில்லையே தவிர, மருந்துக்கடை களிலிருப்பது போல அட்டைப்பெட்டிகளில் போட்டுப் பெயர் எழுதி அடுக்கி வைத்திருக்கிறார்கள். உங்களுக்கு எந்த மெடல் வேண்டும்? எனக் கேட்டுத் தருகிறார்கள். மெடல்கள் கோர்க்கபட்டிருக்கும் ரிப்பன்களின் கலரும் டிசைனும் அது எந்த வகை மெடலை சேர்ந்தது என்பதைச்சொல்லும். எல்லா நேரங்களிம் மெடல் அணிய முடியாதாகையால் இந்த ரிப்பன் வண்ணங்களை ஒரு குறிப்பிட்ட அளவில் பேட்ஜ்களாக அணிவார்கள். இதை அதிகாரிகள் யூனிபார்ம் அணியாத போதும் அணிந்துகொள்வார்கள். அந்த மாதிரி பேட்ஜ்களூம் கிடைக்கிறது.
யார் இதை வாங்குகிறார்கள்? என்ற கேள்விக்கு—“நமது வீரர்கள் தான்” என்று வந்த பதில் நமது அதிர்ச்சியை அதிகபடுத்துகிறது. விருது பெற்ற வீரர்கள் அதை ஏன் இவர்களிடம் வாங்குகிறார்கள்?,

ராணுவத்தில் ஆண்டுதோறும் சிறந்த சேவைக்காக, திறமையான பணிக்காக என பல மெடல்கள் அறிவிக்கபட்டாலும், அந்தக் கடிதமும், சிலசமயம் அதற்கான பணப்பரிசும் அந்த வீரர்களுக்கு அனுப்பபடும். ஆனால் மெடல்கள் அவர்களுக்கு அளிக்கத் தாமதம் ஆகும். சில சமயங்களில் ஆண்டுகள் கூட ஆகிவிடுமாம். 10  ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கபட்ட மெடல்கள் இன்னும் கொடுக்கபடவில்லையாம்.  
 இந்த மெடல்களில் ராணூவத்தினரின் பெயரோ அலலது நம்பரோ பொறிக்க பட்டிருக்காது. பணப்பரிசை விட மெடல் அணிந்துகொள்வதை பெரிய  கெளவரமாகக் கருதுவதால் வீரர்கள் இந்த மாதிரிகடைகளில் கிடைக்கும் டூப்பிளிகேட்களை வாங்கி அணிந்து கொள்கிறார்கள். 
இதை டூப்பிளீகேட் எனச்சொல்லக் கூடாதாம். இவற்றிற்கு “டெயிலர் காப்பி” என்று பெயர் என்ற கடைக்காரர்களிடம் இதற்கு அவர்களுக்குரிய அனுமதி வழங்கப்பட்டிருக்கிறதா என்று கேட்டால் மழுப்புகிறார்கள். ஒரு கடைக்காரர் யூனிபாரம் தைத்து விற்க அனுமதியிருக்கிறது. மெடல்களும் யூனிபார்மின் ஒரு பகுதிதானே என்றார். வாங்குபவர்கள் ராணுத்தினரா? என்று கூடக் கேட்பதில்லை
.
ஒரு கடையில் சில ஓரிஜனல் மெடல்களையும் விற்கிறார்கள். பஞ்சாப் மாநில போலீஸின் விருதான ஸ்பெஷல் டுயூடி மெடலை அதனுடைய பெட்டியுடன் காட்டினார்கள்.
 சரியான போர்டு கூட இல்லாத கடைகளில் இப்படி விற்கிறார்களேயென ஒரு முன்னாள் ராணுவ அதிகாரியிடம் கேட்டபோது, “நமது மெடல்களை தயாரிப்பது அரசின் மின்ட் தான். அவர்களால் ஒரே நேரத்தில் பல மெடல்களை உரிய நேரத்தில் தயாரித்துக்கொடுக்க முடியவில்லை. அதனால் அந்த மெடல்களை தயாரிக்கும் மோல்ட்களை தயாரித்து இப்படி மெடல்களைச் செய்யும் ஒரு நிறுவனம் பஞ்சாபில் துவங்கியது. இவைகள் மிகவும் மலிவான உலோகங்களில்  கனம் இல்லாமல் செய்யப்பட்டிருக்கும். ராணுவத்தினருக்கு அது ஒரிஜினல் இல்லை என்பது எளிதாகத் தெரிந்துவிடும்.
இப்போது பெரிய பிஸினஸ் ஆகி விட்டது. சில சமயம் அரசின் முடிவுகளும் காரணம். இந்திய சுதந்திரத்தின் 50 வது ஆண்டுவிழா நினைவாக இந்திய ராணுவத்திலிருக்கும் அனைவருக்கும்  மெடல் என்று அறிவிக்கபட்டது. அதை எல்லோருக்கும் வினியோகிக்க 5 ஆண்டுகள் ஆனது. அதற்குள் சிலர் ஓய்வே பெற்றுவிட்டார்கள்.பலருக்கு போயே சேரவில்லை. இது போலச் சில குழப்பங்கள் என்ற அவர். இந்த ஒரிஜினல் மெடல்களை நீங்கள் ஆன்லைனிலேயே கூட வாங்கலாம்” என்றார்
.
ஆச்சரியப்பட்டு இணையத்தில் தேடியபோது  இந்திய சுதந்திர 50ஆம் ஆண்டு மெடல்  360 ருபாய்க்கும் மற்றொரு நிறுவனத்தில் அதைவிட 10 ரூபாய் குறைவாகவும் கிடைக்கிறது. இதைத்தேடும்போது பார்த்த  மற்றோரு விஷயம் இ பே என்ற ஆன்லைன் நிறுவனம் இந்திய ராணுவ  மெடல்களை ஏலத்தில் விற்கிறது. ஒன்பது வெவ்வேறு மெடல்கள் அடங்கிய ஒரு மெடல் பார் ரூ 3500 என்று ஒரு நிறுவனம் விலை சொல்லுகிறது.
 அதிகாரிகளின்பெயர்களுடனும் நம்பர்களுடனும் உள்ள ஒரிஜினல் மெடல்களுக்கு அமெரிக்க டாலரில் விலைபட்டியலிட்டிருக்கும் இ பே அவற்றை இந்தியாவிற்கு அனுப்ப முடியாது என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறது
.
“பெயர் பொறிக்கப்பட்டிருக்கும் மெடல்களை எந்த ராணுவ வீரனும் விற்க மாட்டான். அவன் உயிரைவிடவும் நேசிக்கும் விஷயம் அது. சில சமயங்களில் மரணத்துக்குப் பின் புதைக்கும்போது கூட அதை அணிந்த நிலையில் தான் புதைப்பார்கள். இப்படி விற்பனைக்குக்  கிடைப்பது திருடப்பட்டது அல்லது வீரர் இறந்த பின் எவரும் உரிமை கோராத தாக இருக்கும் என்கிறார். ஒரு மூத்த முன்னாள் ராணுவ வீரர்.

ராணுவத்தினருக்கு வெற்றி பதக்கங்கள் என்பது அவர்களின் சாதனைகளைப் பார்ப்பவருக்குச் சொல்லும் அடையாளம். சியாச்சின் பள்ளதாக்குகளின் பனிப்புயல்களிலும், இமயப்பகுதி எல்லைகளிலும் பலவிதமான இடையூறுகளுக்குமிடையில் தங்கள் சிறப்பான பணிக்காகப் பெறும் விருதுகளூம் பதக்கங்களும் அவர்களை உடனே அடைவதில்லை என்பது மிக வருத்ததுக்குரிய விஷயம்.
 எவ்வளவோ விஷயங்களை மாற்றத்துடிக்கும் இந்த அரசு இதையும் கவனிக்குமா?










கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்