1/8/10

30 கோடி முகங்களுடன் ஒரு புத்தகம்




காதலில் தோல்வியுற்ற ஒரு இளைஞன் என்ன செய்வான்? விரக்தியில் தாடி வளர்ப்பது, சோகத்தில் கவிதை எழுதுவது, என்பதலிருந்து மாறுபட்டு செயல்பட்ட ஒரு இளைஞனின் முயற்சியில் எழுந்ததுதான் இன்று உலகத்தையே கலக்கிகொண்டிருக்கும் ஃபேஸ் புக் என்ற சோஷியல் நெட்வொர்க்கிங்’ இணையதளம். 2004ம் ஆண்டு அமெரிக்க ஹார்வர்ட் பல்கலைகழக மாணவர் மார்க் ஸூக்கர்பெர்க்  (Mark Zuckerberg) தன் காதலை எற்காமல் போன காதலியின் நினைவுகளை மறக்க எதாவது சீரியஸாக செய்ய வேண்டும் என்று ஒரு இரவு முழுவதும் யோசித்ததில் பிறந்தது இது.. அமெரிக்க பல்கலைகழகங்களில் சேரும் மாணவர்கள், ஆசிரியர்கள் பற்றிய விபரங்களை ஒரு  முக அளவு போட்டோவுடன் ஒரு “ஃபேஸ்புக்காக” அச்சிட்டு வெளியிடுவார்கள். மார்க்ஸூக்கர்பெர்க்கு    அந்த காலகட்டதில் பிரபலமாகிக்கொண்டிருந்த    இணைய தள அமைப்பில் இதைச் செய்தால் என்ன என்று எழுந்த எண்ணத்தில் அறை நண்பர்களின் உதவியுடன் ஃபேஸ் ப்க் இணய தளமாக மலர்ந்த காதலி இவள்.. ஹார்வர்ட் பல்கலை மாணவர்களுக்கு மட்டும், என முதலில் துவங்கபட்ட இது பக்கத்து பல்கலைகழகம்,பக்கத்து மாநிலம், அமெரிக்கா முழுவதும் உள்ள மாணவர்களுக்கு மட்டும்,பின்னர் உலக மாணவர்களுக்கு எல்லாம்,என்று பல நிலைகளை கடந்து இன்று 13 வயதிற்கு மேற்பட்ட எவர் வேண்டுமானாலும் ஒரு இ மெயில் ஐடி இருந்தால் போதும் இலவசமாக உறுப்பினாராக முடியும் என்ற  பிரமாண்ட எல்லையை  தொட்டிருக்கிறது.  தொடர்ந்து வேகமாக வளர்ந்துகொண்டிருக்கும் இதன் மதிப்பு 300மில்லியன் டாலர்கள்(135 கோடி ரூபாய்கள்)   இதே போல் மைஸ்பேஸ், ஆர்குட் போன்ற தளங்கள் இருந்தாலும் இதுதான் உறுப்பினர் எண்ணிக்கையிலும், அதிக முறை அடிக்கடி பார்க்கப்படும் தளங்களிலும் முதலிடத்திலிருக்கிறது. உலகம் முழுவதும் 30 கோடி பேர் இதை பயன்படுத்துகிறார்கள். ஓரளவு முதலீடு செய்திருக்கும் மைக்ரோசாப்ட் உள்பட பல பெரிய நிறுவனங்களுக்கு இதன் மேல் ஒரு கண். வளைத்துபோட்டு இணைத்துகொள்ள தயாராகயிருக்கிறார்கள்.
அப்படி என்னதான் இந்த இணையதளத்திலிருக்கிறது?
 ஒரே வார்த்தையில் சொல்வதானால்-எல்லாமே. உறுப்பினர்கள் தங்களைப்பற்றிய விபரங்கள், படங்கள், சொந்த, சமுக பிரச்சனைகள், யோசனைகள்,விமர்சனங்கள்,பராட்டுகள், கவலைகள் படித்தவை,அதில் பிடித்தவை பார்த்த சினிமா அரட்டை,கோபம்  இப்படி எல்லாவற்றையும்  பதிவு செய்யலாம். பார்க்கும் உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளையும் பதிவு செய்வார்கள், இதனால் புதிய நட்புகள் அரும்புகின்றன. தொடர்பில்லில்லாத  பழைய நண்பர்களையும் இதன் வழியாக அடையாளம் காணமுடிகிறது. ஒரே துறையை சார்ந்தவர்கள், ஒருமித்த கருத்துடையவர்கள் குழுவாக இணந்து தகவல்களை பரிமாறிக்கொள்கிறார்கள், சில இடங்களில் நேரில் சந்தித்து விவாத கூட்டங்கள் கூட நடத்திக்கொள்கிறார்கள். இளைஞர்களை அதிகமாகவே ஈர்த்திருக்கும் இன்னும் அவர்களை கவர தொடர்ந்து பல புதிய விஷயங்களை அறிமுகப்படுத்தி கொண்டேயிருக்கிறார்கள். புறநகர் இளைஞர்கள் இப்போது தாங்கள் பேஸ்புக்கிலிருப்பதையும் அதை மற்றவருக்கு சொல்லுவதையும் கெளரவமாக கருதுகிறார்கள்.  உலகம் முழுவதும் 30 கோடிபேர் பயன்படுத்தும் இதில் ஒருகோடிபேர் இந்தியர்கள்.இந்தியாவில் செல்போன் பயன் படுத்துவர்களில் 20%க்கும்மேல்  ஃபேஸ்புக் உறுப்பினர்கள்.  உலகிலேயே செல்போன் உபயோகிப்போரின் எண்ணிக்கையில் முதலிடத்தை இந்தியா விரைவில் பிடிக்கும் என்பதால் இந்த நிறுவனம் இந்தியாவை தனது முக்கிய இலக்காக கொண்டிருக்கிறது. இப்போது ஹிந்தி, பஞ்சாபி, பெங்காலி, தெலுங்கு, மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய ஆறு மொழிகளில் ஃபேஸ்புக்கில் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள முடியும். விரைவில் இன்னும் பல இந்திய மொழிகளில் இந்த வசதியை வழங்க ஹைதராபாத்தில் அலுவலகத்தை திறக்கவிருக்கிறார்கள். ஆசிய நாடுகளிலேயே ஃபேஸ்புக்கின் அலுவலகம் திறக்கப்படுவது ஹைதராபாத்தில்தான்.
“என் நாய்குட்டி ஜிம்மிக்கு உடம்பு சரியில்லை.இரண்டுநாட்களாக சரியாக சாப்பிடவில்லை”என்ற செய்தியை நீங்கள் ஃபேஸ்புக்கில் போட்டால், உடனே ஆறுதல். ஆலோசனை, மருந்து,தொடர்புகொள்ளவேண்டியடாக்டர், தங்களின் நாய்க்கு நேர்ந்தது போன்ற செய்திகள் ஒரு 10 நண்பர்களிடமிருந்தாவது பறந்து வரும். மனித உறவுகள் பலவீனம் அடைந்து  சிறுகுடும்பத்தீவுகளாகிப்போன இன்றய சூழ்நிலையில் இத்தகைய நேசக்கரங்களை நிபந்தனையில்லமல் நீட்டும்  இதன் வசதி மக்களுக்கு பிடித்திருப்பதும் இதன் வெற்றிக்கு ஒரு காரணம்.
பிரபலமான விஷயங்களில் எதாவது பிரச்சனையிருக்கும் என்பதற்கு இது விதிவிலக்கில்லை.நம் சொந்த விஷயங்கள் எளிதாக எல்லோருக்கும் கிடைப்பதினால் பிரச்சனைகள் எற்பட வாய்ப்புகளும் உண்டு. இன்றைய இளைஞர்கள் இந்த தளங்களை பாதுகாப்புடன் கையாளுவது பற்றியும் அறிந்திருக்கிரார்கள்.இப்போது உறுப்பினர்களின் தகவல்களை யார் பார்க்கலாம் என்பதை அவர்களே முடிவுசெய்யலாம்.
உங்கள் வீட்டில்  இண்டர்நெட்டும்,15 வயதுக்கு மேல் குழந்தைகளும் இருந்தால் அவர்கள் ஃபேஸ்புக்கிலிருப்பார்கள் என்ற நிலையை தாண்டி வேலையிருந்துஓய்வு பெற்றவிட்ட  உங்கள் 65 வயது அப்பாவும் அம்மாவும் ஃபபேஸ்புக்கில் மெம்பர் என்ற நிலை உருவாகிக்கொண்டிருக்கிறது. ஆமாம். இப்போது வயதானவர்களுக்கு போரடிக்காமலிருக்க கிடைத்த வரப்பிரசாதங்களில் இதுவும் ஒன்று.
K(கல்கி01.08.10)



முப்பது கோடி முகமுடையா ளுயிர்
மொய்ம்புற வொன்று டையாள் - இவள்
செப்பு மொழி பதினெட்டு டையாள், எனிற்
சிந்தனை யொன்று டையாள்"
-பாரதியார்

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்