3/7/13

கொடிகட்டி பறக்கும் பிரார்த்தனைகள்

குஜராத் பயணம் 3
3


கொடி என்பது ஒரு நாட்டின்,அரசின், அல்லது இயக்கத்தின் தனித்துவத்தை  கம்பீரமாக வெளிப்படுத்தும் சின்னம். தனிச்சிறப்புகளைச்சொல்லும் அதன் வண்ணங்களும், அதில் உள்ள சின்னங்களும் உன்னதமானவைகளாக போற்றப்படுபவை.நம் தேசம் முழுவதும் எல்லா மதத்தினரின் கோவில்களிலும்வழிபட்டுதலங்களிலும் கொடி என்பது விழாக்காலங்களின் அடையாளமாக அறியபட்டவை.

ஆனால் குஜராத் மாநிலத்தில் மேற்கு கோடியில் கடலோரமாக இருக்கும் புகழ் பெற்ற துவாரகா நகரிலிருக்கும் கண்ணன் கோவிலில் தினசரி கொடிகள் தனிநபர்களின் பிரார்த்தனையின்வெளிப்பாடாக ஏற்றப்படுகிறது. மதுராவிலிருந்து இங்கு வந்த கண்ணன் கடல் அரசனிடம் கேட்டு அவன் ஒதுங்கி வழி விட்ட இடத்தில் துவாரகா நகரை நிர்மாணித்து ஆட்சி செய்த தேசம் இது, இந்த கோவில் அவரது அரண்மனை என்கிறது இதிகாசம், 16ம் நூற்றாண்டில் சாளுக்கிய பாணியில் கட்டபட்ட கோவில் என்று யூனஸ்கோ இதை பாதுகாக்கபடவேண்டிய உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக அறிவித்திருக்கிறது. போல பளபளக்கும் பல வண்ணங்களில் உடலைபிடிக்கும் மன்னர்களின் உடைகளைபோல் பட்டு சட்டை அணிந்த பண்டிட்களும் கண்ணனும் எப்ப்போதும் பிசியாக இருக்கும் இந்த கோவிலுக்கு சதாரண நாட்களில் 5000 பேர் வருகிறார்கள். சன்னதியில்  பளபளக்கும் கறுப்பு பளிங்கில் கோவர்த்தனாக கண்ணன் காட்சி தரும் இந்த கோவிலின் கோபுரத்தில் கொடி  தினசரி 4 முறைகளும் வியாழன் அன்று 5 முறைகளும் வெவ்வேறு வண்ணங்களில் ஏற்றபடுகிறது. 170 அடிகள் உயரமான கோபுரத்தின் உச்சியில் பறக்கும் இந்த கொடி மிக பிரமாண்டமானது. நகரின் எந்த பகுதியிலிருந்து பார்த்தாலும் பளிச்சென்று தெரிகிறது. 52கஜ நீளத்தில் நீண்ட முக்கோண வடிவத்தில் பட்டு துணியில் விசேஷமாக தயாரிக்கபடும் இந்த கொடிகள் பக்தர்கள் பிராத்தனை செய்து விரும்பவதை வேண்டிக்கொண்டு ஏற்றபடுவது. 52 சிறிய கொடிகளாக தயாரிக்க பட்டு நீண்ட கொடியாக இணைக்க படுகிறது. அதென்ன 52 கஜம் என்ற கணக்கு? .. 27 நக்ஷத்திரங்கள், 12 ராசிகள், 9 கிரஹங்கள், 4 திக்குகள் என்ற வற்றைக் கூட்டினால் வரும் எண்ணிக்கையின்படி 52 கஜம் நீளமுள்ள கொடி இது என்கிறார் திரு வேளுக்குடி கிருஷ்ணன். கொடிகள் கோவிலால் அனுமதிக்க பட்டவர்களால் மட்டுமே தயாரிக்கபடுகிறது.
சிவப்பு, பச்சை, மஞ்சள், நீலம் வெள்ளை காவி, வானவில்லின் அத்தனை வண்ணங்களும் இணைந்தவை போன்ற பலவண்ணங்களில் கொடிகள்.எந்த வண்ணமாக இருந்தாலும் அதில் சூரியன் சந்திரன் சின்னங்கள். திருமணம், தொழில்வெற்றி, நீண்டஆயுள், செல்வம் மேன்மை போன்றவைகளை அடைய அவைகளை குறிப்பவைகளாக அறியபட்ட வண்ணகொடியை பிரார்த்தனையாக ஏற்ற பக்தர்கள் முன்பதிவு செய்தது காத்திருக்கிறார்கள். அடுத்த ஆண்டு முழுவதற்கும் இப்போதே முன்பதிவு செய்யபட்டுவிட்டது. 25000ரூபாய் பணம் கட்டி புக் செய்திருப்பவர்களின் குடும்பத்தினர் அவர்களுக்காக ஒதுக்கபட்ட நாளில் ஒரு பெரிய பந்தாக சுருட்டபட்டிருக்கும் அந்த கொடியை மலர்களுடன்



ஒரு மூங்கில் கூடையில் தலையில் சுமந்து வீதிகளிலும் கோவிலின் பிராகாரத்திலும்  வாத்தியங்களும் பாடல்களும் ஒலிக்க நடனமாடி(சூப்பர் குதாட்டம்!) வலம் வந்து கிருஷ்ணரின் சன்னதியில் பாதத்தில் வைத்து பூஜை செய்து 52 படிகள் ஏறி கோபுரத்தின் முதல் தளத்திற்கு எடுத்துசெல்லுகிறார்கள். அதற்கு மேல் இந்த கொடியை கோபுரஉச்சிக்கு எடுத்து சென்று ஏற்றும் உரிமை பெற்றவர்கள் ஒரு சில யாதவ குடும்பத்தினர் மட்டுமே. பின்குடுமி வைத்திருக்கும் இவர்கள் ஜீன்சும் சட்டையும் அணிந்திருக்கிறார்கள், கோபுரத்தின் உச்சியில் கலசத்திற்கு அருகில் ஒரு சிறியமர மேடை. அது புடவை போன்ற  நீண்ட இரண்டு துணிகளினால் கலசத்துடன் இணைக்கபட்டிருக்கிறது. மேலே ஏற எந்த வசதிகளும் இல்லாத அந்த கோபுரத்தின் உச்சியில்  அந்த துணியைபிடித்து மேடையில் ஏறுகிறார்கள் இந்த ஜோடியினர். ஒருவர்  மேடையின்மீது நிற்கும் 25 அடி உயர கொடிகம்பத்தை அதன் இடத்திலிருந்து எடுத்து  கொடியைமட்டும் உருவி  எடுத்துகொண்டபின் கம்பத்தை மட்டும் மற்றொருவரிடம் கொடுகிகிறார். அவர் அதில் புதிய கொடியை நுழைத்து திருப்பிக் கொடுக்க புதுக்கொடி மேடையில் நிறுத்தபடுகிறது. பாதங்களின் விரல்கள் வினாடி தவறினால் விபரீதம்
என்ற நிலையில் எந்த பாதுகாப்பு வசதிகளும் இல்லாத அந்த உயரத்தில் இரண்டுபேர் மிக அனாசியமாக 10-15 நிமிடங்களில் அவ்வளவு பிரமாண்டமான கொடியை மாற்றிவிட்டு பணம் கட்டியவர்களுக்காக தலையால் மரத்தை தொட்டு பிராத்தனை செய்துவிட்டு இறங்கி விடுகிறார்கள் கொடி ஏற்றும்போது இவர்கள் பத்திரத்திற்காவும் நாம் பிரார்த்திக்கிறோம்.(கீழே இருக்கும் வீடியோவை பாருங்கள்).
அடுத்து என்ன வண்ணத்தில், எதைகுறித்தபிராத்தனைக்காக கொடி ஏற்றபடும் என்பதுமுன்பே தெரியாதால், மாறும் இந்த கொடிகளின் வண்ணங்கள் ஒரு சகுனமாக மற்றபக்கதர்களால் பார்க்கபடுகிறது. தரிசனத்திற்கு வரும் பத்தர்கள் தங்கள் வேண்டுதல் இந்த கொடியின் வண்ணத்தில் பிரதிபலித்தால் அதை ஒரு நல்ல சகுனமாகவும் கிருஷ்ணனின் அனுமதியாகவும் எடுத்துகொள்கின்றனர்.
ஐஸ்வர்யா, அபிஷேக் திருமணத்திற்கு முன் அவர்கள் குடும்பத்தின் சார்பில் இங்கு பிராத்தனை செய்து கொடிஏற்றபட்டிருக்கிறது.





2 கருத்துகள் :

  1. பாலகிருஷ்ணன்.3 ஜூலை, 2013 அன்று PM 7:23

    ரமணன் சார்
    உங்கள் சுவடுகளை தவறாமல் படிக்கிறேன். சூப்பர் சார்.
    துவாராகா போயிருக்கிறேன். ஆனால் இந்த கொடி சமாசாரம் தெரியாது. கேதார் பற்றி படித்ததும் நீங்கள் போய்விட்டு வந்து கொடுத்த உங்கள் ஆல்பத்தையும் அதில் மேடம் எழுதியிருந்ததையும் அம்மா இன்னும் நினைவில் வைத்திருக்கிறார்கள். தொடர்ந்து குஜராத் பற்றி நிறைய எழுங்கள்
    பாலா

    பதிலளிநீக்கு
  2. சுவாரஸ்யமான தகவல்கள்.மழை காலத்தில் கொடி எப்படி ஏற்ரபடுகின்றது?
    Very good Video (bit lengthy) coverage.
    வீடியோவில் உங்களது வர்ணனை இருந்தால் நன்றாக இருந்திருக்கும்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள்