1/1/14

சத்குருவுடன் ஒரு நாள்

சத்குருவுடன் ஒரு நாள்



கோவைக்கு அருகில் வெள்ளியங்கிரி மலைச்சாரலின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையம். நடுவில் தூண்கள் எதுவுமில்லாது  நவீனமாக எழுப்பட்டிருக்கும் பிரமாண்டமான ஆதியோகி ஆலயம் என அழைக்கப்படும் தியான மண்டபம்..ராணுவ ஒழுங்கில் அமர்ந்திருப்பவர்களின் முன்னே விளக்கொளியில் சத்குரு. அவரின் கட்டளைகளுக்கு ஏற்ப யோக பயிற்சிகளை செய்கின்றனர். இடையிடையே சில நேரங்களில் சீடர்களுடன் உரையாடும் ஜென் ஞானியைபோலவும், சில நேரங்களில் வேறுஒருகாலத்தின் கதையை திறம்பட சொல்லும் கதை சொல்லியாகவும், சில சமயங்களில் பிரபஞ்சத்தின் கடினமான விஷயங்களை விளக்கும் ஞானிபோலவும் பேசிகொண்டிருக்கிறார். கன்னட வாசனையில் தமிழ். கம்பிரமான ஆனால் கனிவான குரல், ஈஷாவின் ”சத்குருவுடன் ஒரு நாள்”- நிகழச்சிக்கு பின்னர்  அவர் கல்கிக்காக அளித்த  Exclusive பேட்டி

யோகா, பிராணாயமம்  போன்றவைகள் ஒரு குருவின் மூலம் ஒவ்வொருக்கும் தனித்தனியாக சொல்லிகொடுக்க வேண்டிய ஒர் பயிற்சி. அதை இப்படி பிரமாண்ட கூட்டங்களில் சொல்லிக்கொடுப்பது எந்த அளவிற்கு கற்றுகொள்பவர்களுக்கு பலன் அளிக்கும்?. தவறாக கற்று கொள்ளகூடிய வாய்ப்பும் இருக்கிறதே?
ஈஷா அமைப்பு கடந்த 30  ஆண்டுகளாக யோகா பயிற்சிகளை கற்பித்து வருகிறது. அதை சரியான முறையில் சொல்லிக்கொடுக்க  ஆசிரியர்களுக்கு நாங்கள் ஆண்டுகணக்கில் பயிற்சி அளித்திருக்கிறோம். கற்பிப்பதில் தவறுகள் நேர்ந்துவிடாத வண்ணம் நிறைய ”டெம்பிளேட்”களை உருவாக்கியிருக்கிறோம்.  ஆனாலும் நீங்கள் கேட்பது புரிகிறது. இம்மாதிரி மாஸ் புரோகிராம்களில் நான் கற்பிப்பது யோகாவின் ஒரு அங்கமான    –”உப-யோகா- இதில் சில எளிய பயிற்சிகளை கற்று அதன் பலனை உணர்பவர்கள், அடுத்த கட்டத்தில் தொடர வேண்டும் என்பதுதான் நோக்கம். 1000 இல்லை 15000 பேராக இருந்தாலும்  எண்ணத்தை ஒருமுகபடுத்தி கண்களைமூடி நான் சொல்லுவதை கேட்கும்போது  சாதகர்கள் நான் தனியாக அவருக்கு சொல்லிகொடுப்பதை போல உணர்ந்தை பலர் சொல்லி கேட்டிருக்கிறேன். மேலும் ஒரே இடத்தில் பலர் பயிற்சி செய்ய முயற்சிக்கும் போது அந்த இடத்தில் ஏற்படும் சக்தி அதிர்வலைகள்  கற்கும் திறனைப் பெருக்குகிறது.

  ஒரு ஆன்மீக குருவாக இருந்துகொண்டு எப்படி ஈஷா வின் அத்தனை பகுதிகளையும் நேரடியாக  நிர்வகிக்கிறீர்கள்?
ஆன்மீகம்  என்பது தவறாக புரிந்து கொள்ளபட்டிருக்கிறது. ஒரு ஆன்மீக வாதியை தங்கள்  இறைவழிபாட்டுக்கான கருவியாக பலர் எண்ணுகிறார்கள்.  சமூகத்தில் ஒர் ஆன்மீக வாதிக்கான பொறுப்பு மிகஅதிகம். தான் சார்ந்துள்ள சமூகத்திற்கு ஆன்மிகம் என கருதப்படும் நல்ல நெறிகளைபோதித்து அதேநேரத்தில் அந்த கால கட்டத்திற்கு அவசியமான சமூக மேம்பாட்டிற்கான பலவிஷயங்களையும் முன்னெடுத்து செய்யமுயற்சிகவேண்டும் அதைத்தான் ஈஷா மூலமாக நாங்கள் முயற்சிக்கிறோம். ஒரே நேரத்தில் பல விஷயங்களை செய்வது ஒரு பெரிய விஷயமில்லை. அவைகளோடு ஆன்மீக, யோக பயிற்சிகளை விடாமல் செய்யவதுதான் முக்கியம். எங்கள் பிரம்மச்சாரிகளையும், தொண்டர்களையும் அதற்கு தயார் செய்திருக்கிறோம்.

 உங்கள் கூட்டங்களிலும் சரி தனி சந்திப்புகளிலும் சரி ஆன்மீகம் மட்டுமில்லாமல் விஞ்ஞானம், மருத்துவம், மேனஜ்மெண்ட். என்று   எதைப்பற்றிக்கேட்டாலும் எப்படி உங்களால்  உடனடியாக பதில் சொல்ல முடிகிறது.?
 நான் எதைப்பற்றியும் சொந்தமாக சிந்திப்பதில்லை. எதை பற்றியமுடிவுகளும் என் சிந்தனையில் இல்லை.  என் தலை காலியாக இருக்கிறது. எனக்கு சொந்தமான ஒரு மூளையில்லை என்று சொன்னால் சிரிப்பீர்கள். ஆனால் அதுதான் உண்மை. எனக்கு தேவையானது நான் சொல்லவேண்டியது  எல்லாம் பிரபஞ்ச மூளையிலிருந்து வருகிறது, சில என்னுள் பதிவாகிறது. பல பதிவாதில்லை. எனக்கு தெரிந்த விஷயங்கள் எல்லாமே ஒரு கணத்தில் நிகழந்தவை. எனக்கு எதுவுமே தெரியாது. ஆனால்  அதே நேரம் நீங்கள் கேட்கும் எல்லாமே  எனக்கு தெரியும். நீங்கள் மனித வாழ்க்கை தொடர்பாக, அதன் உள்நிலை தொடர்பாக என்ன கேட்டாலும் எந்தவித தயக்கமுமின்றி தெளிவாக பதில் தருவது போல நீயூக்லீயர் பிசிக்ஸ் பற்றி கேட்டாலும் தருவேன். நான் என்குருவை சிலவினாடிகள் மட்டுமே சந்தித்தேன். அவர் என்னை கையால் தொடவில்லை, கையிலிருந்த ஊன்றுகோலால் தொட்டார். பத்துபிறவிகள் படித்தாலும் தெரிந்து கொள்ளமுடியாத விஷயங்கள் அந்த ஒருவினாடியில்  எனக்கு வழங்கபட்டன,. அவைகளை அறிந்துகொள்ளும் தொழில் நுட்புமும் எனக்கு தரப்பட்டது. அது வழங்கப்பட்டபோது,ஒரு சக்திநிலையாக வழங்கபட்டது. அது நினைவாற்றல்லாக அல்லது தர்க்க அறிவிவாக வழங்கபடவில்லை. அதனால் தான் அவைகளை நான் அவசியமில்லாதபோது சிந்திப்பதில்லை.. எனக்கென்று எந்த சிந்தனைகளோ அதுபற்றிய முடிவுகளோ என்னிடம் இல்லை.
உங்களால் முந்தியபிறவிகளை உணரமுடியும் என சொல்லுகிறீர்கள். கடந்த பிறவிகளில் உங்களுடன் தொடர்பு கொண்டவர்களை இந்த பிறவியில் உங்களால்  அடையாளம் காணமுடியுமா?
கடந்த 370 ஆண்டுகளுக்கு முன் என்னுடன் தொடர்பு கொண்டர்வர்களில் சிலர் இங்கே இருக்கிறார்கள்,  ஆனால் அதை ஆராய்வதும் அவர்கள் அந்த பிறவியில் செய்தது பற்றி ஆராய்வதும் இப்போது அவசியமில்லாதது.                                                                          
                                                                          

நீண்ட கால தவத்திற்குபின்  உங்கள் குருவின் கட்டளயையான தியானலிங்கத்தை நிறுவி அதற்கு சக்தியூட்டி அர்பணித்தபோது, இது வழிபடும் கோவில் இல்லை. எந்த பூஜையோ சடங்குகளோ கிடையாது  என அறிவித்திருக்கிறீர்கள். இப்போது லிங்க பைரவி என்ற தேவியின் கோவிலை நிறுவி எல்லா சடங்குகளையும் செய்கிறீர்கள் ஏன் இப்படி  ஒரு நேர்மாறான நிலை?
தியான லிங்கமும் கோவிலாகத்தான் உணரபடுகிறது. அங்கு எழும் சக்தி வலிமை மிகுந்ததாக இருப்பதால் ஒரு வார்த்தைமந்திரம் உச்சரிக்கமுடியாது, பூஜைகள் எதுவும் செய்ய முடியாது. ஆனால் அந்த வலிமை மிகுந்த சக்தியை தங்களுடைய மந்திர தந்திர சக்திகளை பெருக்கி கொள்ள  சிலர் முயற்சிப்பதை உணர்ந்தேன். அதை தடுக்க ஒரு பாதுகாப்பு சக்தி அவசியமாயிற்று. அந்த அவசியம் லிங்கபைரவி கோவிலாக உருவெடுத்தது. நீங்கள் நினப்பது போல இது நேர்மாறான நிலையில்லை. ஒன்றுக்குஒன்று உதவும் நிலை.  ஒரு குடும்பம்  கணவன் மற்றும் மனைவி சேர்ந்தது. இதை நேர்மாறான நிலை என்பீர்களா?  அதுபோலதான் இதுவும். தியான லிங்கத்தை எழுப்பும் போதே  இப்படி ஒரு சக்தி ஸ்தல்ம் உருவாக்கும் எண்ணமிருந்தது. அவசியம் வரும்போது செய்யலாம் என தீர்மானித்திருந்தேன், இப்போது அவசியம் எழுந்திருப்பதினால்  உருவாகியிருக்கிறது. சடங்குகள் பற்றி கேட்டீர்கள். நமது வழிபாட்டுமுறைகளில் சடங்குகள் என்பதின் மூலம் எளிதாக பலரை, பலதரபட்ட மக்களை  ஒரு சக்தியைநோக்கி ஒருமுகபடுத்தமுடியும். சடங்குகள் தவறில்லை. ஆனால் அந்த சடங்குகள் மூலம் மக்கள் ஏமாற்றபடுவதும் சுரண்டபடுவதும் தான் தவறு. இப்போதுஇந்த கோவிலில் அத்தகைய சடங்குகளை செய்பவர்கள் உலகத்தையே நீங்கள் கொடுத்தால் கூட தவறான காரியங்களை செய்யமாட்டார்கள். அவர்களை பற்றி நான் பெருமைபடுகிறேன்/
ஏன் இந்த கோவிலில் தேவியை அர்ச்சிக்கும், பூஜிக்கும் உரிமை பெண்களுக்கு மட்டுமே வழங்கபட்டிருக்கிறது.?
பெண்களுக்கு இந்த உரிமை நீண்ட நெடுங்காலத்திற்கு முன்னரே இருக்கிறது. நடுவில் இது தடுக்க பட்டிருந்தது.   இங்கு அந்த பணியை செய்பவர்கள் அர்ச்சகர்கள் இல்லை. அவர்கள்  ”கடவுளின் சக்தி”வாய்ந்த மனிதர்கள். முன் காலங்களிலிருந்த அத்தகைய மனிதர்கள் இப்போது இல்லை. அதனால்தான் இந்த முறை. இவர்கள் பெருகி மனிதர்களுடன்  சமூகத்தில் உறவாடும்போது  உலகில் நல்ல அதிர்வுகளும் அதன் பயனாக் நல்வாழ்க்கையும்  எளிதாக ஏற்படும்

உங்கள் கோவில்கள், தியான ஹால்கள் என எல்லா இடங்களிலும் அதிகம் மாக பாம்புகளின் வடிவங்களும் படங்களும் காணப்படுகிறது, ஏன் பாம்புகளின் மீது இப்படி ஒரு அப்ஸஷன்?
அப்ஸ்ஸஷன் ? (பலமாக சிரிக்கிறார்) பாம்புகளும் பசுக்கள் போல புனிதமானவை. என்பதை பலர் புரிந்துகொள்ளவில்லை. பாம்பு என்பது குண்டலினி ஆற்றலின் ஒரு குறீயிடு. நகர்கிறபோதும் அசைவற்று இருக்கும் போதும்  குண்டலினி ஆற்றலும் பாம்பும் ஒன்றுபோல இருக்கின்றன. உயிர்களினுடைய பரிமாண வளர்ச்சியில் பாம்பு என்பது மிக முக்கியமான அம்சம்.. அதனால் தான் பாம்பை கொல்ல கூடாது என்று நம் பாரம்பரியம் சொல்லுகிறது. என்னைப் பொருத்தவரையில் என்னைசுற்றி பாம்புகள் இருந்து கொண்டேதான் இருக்கிறது. கிருத்தவ மதத்தில் பாம்பு சாத்தானின் தூதுவனாக  சொல்லபட்டு ஒரு எதிர்புணர்ச்சியை வளர்த்துவிட்டார்கள்.   இந்த பூமியில் உயிர்கள் என்பவை கடவுளின்  படைப்பு  என்பதை நீங்கள் ஏற்பீர்கள் என்றால் அதற்காக ஏவாளை தூண்டிய பாம்பை கடவுளின் தூதர் என்றுதானே சொல்ல வேண்டும்.? எப்படி சாத்தானாவார்?  ஆதிகாலங்களிலிருந்தே பாம்புகள் நமது கோவில்களில் வழிபடபட்டு வந்தவை.   குண்டலி சக்தியின் உயர்ந்த நிலையில் அதை தன்உச்சியில் நிலைநிறுத்தபட்டிருப்பதின் அறிகுறியாகத்தான் ஆதியோகி அதை தன் தலையருகில் இடம்கொடுத்திருப்பதாக சித்தரிக்கப்படுகிறது. ஒரு பயப்படும் ஜந்துவாக பார்க்காமல் அதன் சக்தியை உணரச்செய்ய எற்பட்டிருக்கும் ஒரு முயற்சிதான்  இது.
ஈஷா உறுப்பினர்களை “புனித பயணங்கள்” அழைத்து செல்லுகிறீர்கள். இதன் நோக்கம் என்ன?
ஆன்மீக விஷயங்களில் கவனம் செலுத்துபவர்கள் எல்லோருக்கும்  இந்த பழம்பெரும் நாட்டின் புனிதம், சில இடங்களின் வலிமை புரிவதில்லை. அதற்காக இந்த நாட்டின் சக்தி நிறைந்த பிரதேசங்களுக்கு பயணம் செய்வதை ஒரு அனுபவமாக கொடுக்க தீர்மானித்தோம். முதலில் கைலாஷ்  என்று துவங்கி, இமயமலைபகுதி, என தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக காசிக்கு பயணங்கள் செய்கிறோம். இது ஒரு சுற்றுலா இல்லை. உடலை,வறுத்திக்கொண்டு செய்யும் பக்தி பயணமும் இல்லை. அந்த இடத்திற்கு சென்று அங்குள்ள சக்திகளை அதன் அதிர்வுகளை உணரசெய்ய ஒரு வாய்ப்பு. எங்கள் எதிர்பார்ப்புகளையல்லாம் தாண்டி அதிக அளவில் ஆர்வம் காட்டுகிறார்கள். நிர்வகிப்பதிலுள்ள சிரமங்களினால் எல்லா விண்ணப்பங்களையும் ஏற்க இயலாது போகிறது.


இன்றைய இளைஞர்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட ஆன்மீகத்தில் நாட்டம் அதிகம் இருப்பதை போல தோன்றுகிறது. இது உண்மையானால் ஏன்?
ஆன்மீகம் மட்டுமில்லை இன்றைய இளைஞர்கள் எல்லாவற்றிலும் ஆர்வமும் ஒரு அவசரமும் காட்டுகிறார்கள். இது ஒரு நல்ல டிரண்டாக இருந்தாலும் அவர்களை நெறிபடுத்தி சரியான பாதையை காட்ட வே ஈஷா முயற்சிக்கிறது. அதற்காக தான் நாங்கள் அர்பணிப்புமிகுந்த ஆசிரியர்களை மிகுந்த கவனத்துடன்  உருவாக்குகிறோம்.
ஆன்மீக வகுப்புகளை தாண்டி சமூக அக்கறையுடன் பலவிஷயங்களை செய்து கொண்டிருக்கிறீர்கள் உங்கள்  இறுதி குறிக்கோள் தான் என்ன?
 ஈஷா குறிக்கோள்களுக்கு இறுதி என ஒரு வடிவம் கொடுத்துகொள்வதில்லை. எது எப்போது அவசியமோ அதை செய்து கொண்டிருக்கிறோம். இப்போது ஒரு லீடர்ஷிப் அகடெமி துவக்குவது பற்றி திட்டமிட்டுகொண்டிருக்கிறோம். நாட்டிலுள்ள பல மேனேஜ்மெண்ட் ஸ்கூல்கள் போல இல்லை இது. இப்போது சிறு நகரங்களிலும் கிராமங்களிலும் பஞ்சாய்த்துகள் உதவிகுழுக்கள் போன்றவைகளில் தலமை வாய்ப்பு  எளியவர்களுக்கும் சாமன்யர்களுக்கும் உருவாக்க பட்டிருக்கிறது. இவர்களுக்கு அதை திறம்பட செய்ய கற்பிக்க பட வேண்டும். அதற்கான முறையான பயிற்சிகூடங்களை அமைக்க விரும்புகிறோம். அடுத்தபடியாக இன்று இந்திய  இளைஞர்கள் வேலைகிடைக்கும் ஒரே காரணத்தினால் ஐடி துறையில் தான் ஆர்வமாகயிருக்கிறார்கள். சயின்ஸ், கணிதம் படிக்க முன் வருவதில்லை. இந்த நிலை நீடித்தால் அடுத்த 15 ஆண்டுகளில் நமக்கு பேஸிக் சயின்ஸ்  பற்றிய அறிவு இல்லாது ஒரு தலைமுறை உருவாகிவிடும். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு டெக்னாலாஜி மட்டும் போதாது ”சயிண்டிபிக் டெம்பர்” அவசியமாக வேண்டும் இதை வளர்க்க குழந்தைகளையும், இளைஞர்களையும் ஈர்க்கும் வகையில் மையங்கள் நிறுவ விரும்புகிறோம். பிராஜ்கெட் ரிபோர்ட்டும் புளுப்ரிண்ட்டும் ரெடியாகயிருக்கிறது. இதற்கு அரசு உதவியுடன் ஸ்பான்ஸ்ர்களை அணுக முயற்சித்துகொண்டிருக்கிறோம்.
ஈஷாவின் எல்லா முயற்சிகளைப்போல இதுவும் வெற்றிபெற கல்கி வாசகர்களின் சார்பில் வாழ்த்துக்கள்

ரொம்ப சந்தோஷம்

சந்திப்பும் படங்களும்

ரமணன்
கல்கி 29/12/13




கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்