19/7/14

உலக அமைதிக்காக உருவாகும் ஒரு காலசக்கரம்




”ஷெய்” என்பது ஜம்மூ-காஷ்மீர மாநிலத்தின் வடகோடியில் லடாக் மாவட்டத்திலிருக்கும் ஒர் சின்னஞ்சிறிய ஊர். மக்கள்தொகை 1000க்கும் குறைவு. மாவட்ட தலைநகர் ”லே” விலிருந்து 8 கீமீ தொலைவில்  இண்ட்ஸ் நதிக்கரையில் மலைச்சரிவில் இருக்கும் இந்த இடம் வருடத்தில் பாதி நாள் பனியால் மூடபட்டும், மீதி நாட்களில்  வெப்பம் மிகுந்த  வரண்ட பாலைவனமாகவும் இருக்கும் ஒரு மலைச்சரிவுபகுதி . கடந்த வாரம் இந்த இடத்தில் உலகின் பல பகுதிகளிலிருந்தும் 150,000 பேர் கூடினார்கள். காரணம் “ காலச்சக்கரம்”
காலச்சக்கரம் என்பது வ்ஜராயன பிரிவு புத்தமதத்தின் தலைவர் தலாய்லாமா, உலக அமைதி,மற்றும் உலக உயிர்கள் அனைத்தும் உன்னதமான உயர்  நிலை அடைய வேண்டும்  என்பதற்காக செய்யும்  ஒரு மிக முக்கியமான பூஜை. ஒரு வார விழாவாக கொண்டாடப்படும்  1954லிருந்து இதுவரை 32  முறை வெவ்வேறு ஆண்டுகளில் அமெரிக்கா, கனடா, மங்கோலியா ஸ்பெயின், ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகளிலும் சில இந்திய நகரங்களிலும்  கொண்டாடப் பட்டிருக்கிறது. எப்போது, எந்த இடத்தில் நடைபெறவேண்டும் என்பதை புத்தரிடம் இருந்து கிடைக்கும் செய்தியின் அடிப்படையில் தலாய்லாமா  ஒராண்டுக்கு முன்னர் அறிவிப்பார். அங்குள்ள புத்தர் சொசைட்டி  விழா ஏற்பாடுகளைச்செய்யும். இம்முறை திருவிழா நடைபெறும் இடத்தின்  தனிசிறப்பு இதுதான்  1959ல்  தலைலாமா தப்பி ஒடிவந்தபின் முதலில் தங்கிய இந்தியப்பகுதி. 



காலச்சக்கரம் என்பது வெறும் திருவிழா இல்லை. மிகுந்த கவனத்துடன் பல சாஸ்திரங்களையும் நியமங்ளையும்  பின்பற்றி செய்யப்படும்  10 நாள் பூஜை.  காலம் என்பதை புத்தமதம்  அகம் புறம், பிரபஞ்சம் என  மூன்று நிலைகளாக சொல்லுகிறது.    நாம்  அறிந்திருக்கும் கால அளவுகளும், பிரபஞ்சத்தில் இயங்கும் கோள்களின்   நாம் அறியாத காலஅளவுகளும்   தொடர்புடையது.. அவற்றை ஒருங்கிணைக்கும் ஒரு முயற்சிதான் இந்த காலசக்கர பூஜை.  இதில் பங்கு கொண்டவர்களுக்கு தலாய்லாமா தீட்சை வழங்குவார்.  இதனால் உலகெங்குமிருக்கும் புத்த பிட்சுக்களும். பக்கதர்களும் கூடுகிறார்கள். இவர்களைத்தவிர இது என்னவென்று பார்க்க வந்த டூரிஸ்ட்கள், மீடியாகாரர்களின் கூட்டமும் சேருகிறது.
காலசக்கரம் உலகில் எந்த நகரில் என்று தீர்மானிக்க பட்டபின் தலாய்லாமா அங்கு சென்று இடத்தை தேர்வு செய்கிறார். அங்கு புதிய கோவில், கட்டிடங்கள் எதுவும் எழுப்ப படுவதில்லை.  மூங்கில், மரப்பலகைகள் திபேத்திய கலைநயமும் வண்ணங்களும் மின்னும் திரைச்சிலைகள் போன்றவற்றால்  தற்காலிகமாக ஒரு பெரிய பந்தல் அமைக்கபடுகிறது.  அந்த. பிரார்த்தனை கூடத்தின் ஒரு புறத்தில்  வெண்னையில் வண்ணங்களை சேர்த்து ஒரு புத்தரின் உருவம் நிறுவப்படுகிறது.  அதுதான் சன்னதி. 

  நடுவில் பூஜைக்காக ஒருமேடை. அதை நோக்கி தலாய்லாமாவிற்கு ஒரு மேடை.. பூஜை செய்வதற்கான மேடையில் ”மண்டாலா”  எழுதப்படுகிறது. உலகின் பல பகுதிகளிலிருந்து சேகரிக்கபட்ட பல நிற மெல்லிய மணல்களால் காலச்சக்கரம் நிறுவப்படுகிறது. ஒரு பெரிய வட்டத்தின் உள்ளே நான்கு புறமும்  நுழைவாயில்கள் கொண்ட 7 அடுக்கு மாடி கோட்டையின் வடிவத்தை தட்டையாக,  நுணுக்கமான கோலமாக இடப்படுகிறது.மெல்லிய மூங்கில் குழல்கள் மூலம் வண்ண மணல் கட்டங்களில் நிறப்படுகிறது  இதன் அமைப்பு கட்டங்களின் அளவுகள், வண்ணங்கள் எல்லாம் புத்தரால் சொல்லபட்டு ரகசிய மந்திரங்களாக பாதுகாக்கபட்டுவருகிறது. ஒவ்வொரு கோடும், புள்ளிகளுக்கும் மந்திரங்கள் இருக்கிறது அவைகள் பல தெய்வங்களையும் சக்திநிலைகளையும் குறிக்கிறது. முதல் கோட்டை தலாய்லாமா போட்டு துவக்கியபின்னர் 7 புத்த துறவிகள் 4 நாட்களில் இதை உருவாக்குகிறார்கள்.. அப்போது மற்ற புத்தபிக்குகள் மந்திரங்களை ஜபித்துகொண்டே இருப்பார்கள்.  அந்த காலச்சக்கரம் பிரபஞ்சமாகவும் அதன் நடுவில் எட்டு இதழ் தாமரையில் புத்தர் இருக்கும்  சக்தி நிலையுடன் நம் உடல் மனம், ஆகியவற்றை இணைக்கும் நிலைக்கு  உயர பிரார்த்தனை செய்து பின்  குரு தீட்சை வழங்குவதற்காக இந்த  காலசக்கரம் உருவாக்கபடுகிறது.  மனுச்செய்தவர்களில் தேர்ந்தெடுக்கபட்டவர்களுக்கு மட்டுமே தீட்சை வழங்கபடும். ஆனால் வழிபாட்டில் விரும்புவர்கள் பங்கேற்கலாம். ஒராண்டு முன்னரே பதிவு செய்து கொள்ளவேண்டும்.,
புத்தமதவழிபாடுகளில் நடனமும், இசையும் ஒர் அங்கம் என்பதால் அவைகளும் முன் கூட்டியே தீர்மானிக்க பட்டு பூஜைகளின் ஒரு பகுதியாகவே நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்பதற்காவே புத்தமத கலைஞர்கள் பல நாடுகளிலிருந்து வருகிறார்கள்.
ஆறாம் நாளிலிருந்து தலாய் லாமா தனது ஆசனத்திலிருந்து பூஜை செய்கிறார். ஆன்மீக உரையாற்றுகிறார், லாமக்களில் இப்போது நிறைய ஹைடெக் காரர்கள் இருப்பதால் நிகழ்ச்சிகள் இணையத்தில் ஒளிபரப்பு, பெரிய எல்இடி டிவிதிரைகள்,  ஹிந்தி உள்பட 15 மொழிகளில்   உடனடி மொழிபெயர்ப்புடன் எப்,எம் ஒலிபரப்பு   மீடியாகார்களின் வசதிக்காக சாட்டிலைட் வசதிகளுடன் மீடியா சென்ட்டர். என அமர்களபடுத்துகிறார்கள். 
இந்த திருவிழாவில் தொலைந்து போனவர்கள் உள்ளுர்கார்கள் தான். இதுவரை அவர்கள் எளிமையான புத்த பிக்குகளைத்தான் பார்த்திருக்கிறார்கள். . நல்ல சாலையில்லாதால் பெரிய பஸ்களைகூட பார்க்காதவர்கள் ஊருக்குள் பெரிய கார்களையும், டிரக்குகளையும்  ஐந்து நட்சத்திர டெண்ட்ஹோட்டல்களையும்,,  அரைக்கால் டிராயர்களில் அமெரிக்கபெண்களையும் கண்டு மிரண்டுபோய்விட்டர்கள். 

அடுத்த காலசக்கரம் எங்கே எப்போது? புத்தபெருமான் தலாய்லமாவிற்கு சொல்லும் வரை காத்திருக்கவேண்டும் 
ரமணன்
9444902215 


1 கருத்து :

  1. சுந்தர் கோவை19 ஜூலை, 2014 அன்று PM 4:18

    அருமையான கட்டுரை. இந்த செய்திகள் இதுவரை நான் அறியாதது.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள்