24/4/16

வாருங்களேன்..





#################################################################################


எழுத்துப்பிழையினால் கொள்ளையிலிருந்து தப்பிய 80 கோடி டாலர்கள்


வளர்ந்துவரும் இணயதொழில்நுட்பம் நம் வாழ்க்கை முறையில் பலமாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இன்று வங்கிக்கணக்கை ஆன் லையன் மூலம் பயன்படுத்துபவர்கள் நாள்தோறும் அதிகரித்து வருகின்றனர். அதில் பயன் படுத்தும் ரகசிய எண்களையும் கடவுச்சொல்லையும் கவனமாகப் பாதுகாக்க வேண்டியதின் அவசியத்தை வங்கிகள் அதன் வாடிக்கையாளர்களுக்குத் தொடர்ந்து பல வகைகளில் வலியுறுத்திக்கொண்டு இருக்கின்றன. ஆனால் அண்மையில் அமெரிக்கப் பெடரல் வங்கியிலிருக்கும் ஒரு நாட்டின் மத்திய வங்கி கணக்கு ஹாக் செய்யப்பட்டு முகம் தெரியாதவர்களால் பெருமளவில் அதிலிருந்து பணம் பல கணக்குகளுக்கு மாற்றப்பட்டிருக்கிறது. இந்தச் செய்தியினால் உலகின் அத்தனை வங்கிகளும் அதிர்ந்து போயிருக்கின்றன.
பெஃடரல் ரிசர்வ் என அறியப்படும் அமெரிக்க மத்திய வங்கியில் நமது ரிசர்வ் வங்கியைப் போல இயங்கும் பல நாடுகளின் மத்திய வங்கியின் கணக்குகள் இருக்கின்றன. 250 நாடுகளுக்கும் மேல் இப்படிப்பட்ட கணக்குகளை வைத்திருக்கின்றன. இந்த வங்கிகணக்குகளை அந்தந்த நாட்டின் மத்திய வங்கி சர்வதேச பணபரிமாற்றங்களுக்குப் பயன் படுத்தும். அண்மையில் பங்களாதேஷ் நாட்டின் வங்கிக்கணக்கில் 81 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (ஒரு மில்லியன்= 10 லட்சம்) இணையம் வழியாகத் திருடப்பட்டிருக்கிறது.
வங்கிகளுக்கிடையே நிகழும் இத்தகைய இணையப் பரிமாற்றங்களை நிர்வகிக்க SWT என்ற அமைப்பு இயங்குகிறது. இது எந்த ஒரு தனி வங்கியையும் சேராத ஆனால் வங்கிகளால் உருவாக்கப்பட்ட ஒரு கூட்டமைப்பு இது. அதிவேக, அதிநவீனதொழில்நுட்பங்கள் நிறைந்த இந்த அமைப்பின் தலைமையகம் பெல்ஜியம்  நாட்டிலிருக்கிறது. இதன் கம்யூட்டர்களின் வழியாகத்தான் பல நாட்டின் வங்கிகளுக்கிடையேயான பணபறிமாற்றம் மட்டுமில்லை அனைத்துச் செய்தி பரிமாற்றங்களும் நடைபெறுகிறது. வங்கிகளுக்கு இந்த அமைப்பு தரும் குறீயிட்டு எண்கள்,பாஸ்வேர்ட்கள்  பலகட்ட பாதுகாப்புக்குள்ளானது.
இந்தக் குறீயிட்டு எண்களையும் கடவுச்சொல்லையும் பயன்படுத்தித்தான் பங்களாதேஷ் வங்கி தருவது போல் அமெரிக்க மத்திய வங்கிக்குப் பணம் மாற்றக் கட்டளைகள் கொடுக்கப்பட்டு அந்தக் கணக்கிலிருந்து பணம் பிலிப்பைன்ஸ் நாட்டில் ஒரு வங்கிக்கு மாற்றப்பட்டிருக்கிறது. மிகப் புத்திசாலித்தனமாகத் திட்டமிடப்பட்டிருக்கும் திருட்டு, இந்த ஆண்டுப் பிப்ரவரி மாதம் 4ம்தேதி  நிகழ்ந்திருக்கிறது. அன்று வியாழன். மறுநாள் வெள்ளி பங்களாதேஷில் வங்கிகளுக்கு விடுமுறை. சனி, ஞாயிறு நியூயார்க்கில் வங்கிகளுக்கு விடுமுறை, திங்களன்று பிலிப்பைன்சில் சீன புத்தாண்டுக்காக வங்கி விடுமுறை. இதனால் பங்களாதேஷ் வங்கி தங்கள் கணக்கில் இருப்பு குறைந்திருப்பதைக் கண்டுபிடிக்கவே நான்கு நாட்களாகியிருக்கிறது.
பணம் ஒரு வங்கிக்கணக்குத்தானே போயிருக்கிறது.பணம் சேர்க்க பட்டிருக்கும் கணக்கின் சொந்தக்காரர்களை மடக்கிவிடமுடியாதா? இங்கே தான் கில்லாடித்தனத்தின் உச்சக்கட்டம்.
கடந்த சில ஆண்டுகளில் பிலிப்பைன் நாட்டின் பல நகரங்களில் சூதாட்ட கிளப்களான காசினோக்கள் பிரமாண்ட அளவில் வளர்ந்திருக்கின்றன. சீனாவில் இப்போது காசினோக்கள் தடை செய்யபட்டுவிட்டதால் பிலிப்பைன்ஸ் அரசின் புதிய பொருளாதாரக் கொள்கையின் படி அவர்கள் இங்கு வந்து கடை விரித்திருக்கிறார்கள். இவர்களுக்கு வெளிநாட்டிலிருந்து வரும் முதலீடுகளுக்கும், சூதாட அனுப்பப்பட்ட பணத்திற்கு வரி கிடையாது என்பது மட்டுமில்லை அந்தப் பணத்திற்குக் கறுப்புப் பணச் சலவை (money landuring) சட்டத்திலிருந்து விலக்கும் அளிக்கப்பட்டிருக்கிறது. இதைச்செம்மையாகப் பயன் படுத்திக் கொண்டுவிட்டனர் கொள்ளையர்கள். வந்த டாலர்கள் பிலிப்பைன் பிசோக்களாக மாற்றபட்டு பல காசினோகளில் அதன் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்களின் கணக்கில் சேர்க்கப் பட்டிருக்கிறது. இதில் பலபேர் சூதாட்டத்தில் இழந்ததற்காகக் கிளப்புக்கு தர வேண்டிய நிலுவை பாக்கி. என்றும் அது  இப்போது வசூல் செய்யபட்டுவிட்டதாகவும் கணக்குக் காட்டபட்டுவிட்டது.
இந்த இணையக்கொள்ளையர்கள் இப்படி அந்த இரவில் மாற்றத் திட்டமிட்டிருந்தது 1  ஒரு பில்லியன் டாலர்கள் (100கோடி) அதற்காக உலகின் பல இடங்களில் உள்ள வங்கிகளுக்கு மாற்ற. பங்களாதேஷ் வங்கி அனுப்பியதைப் போல 36 வெவ்வேறு கட்டளைகளை அமெரிக்க ஃபெடரல் வங்கிக்கு அனுப்பியிருக்கிறார்கள். அப்படி அனுப்பட்ட ஒன்று இலங்கையில் உள்ள ஒரு தொண்டுநிறுவனத்தின் கணக்கிற்கு 2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் . அந்தக் கணக்கு இருப்பது ஒரு சிறிய கிராமத்தின் வங்கிகிளையில்.  SWIFT மெசேஜ் கிடைத்ததும் அந்த வங்கி அதில் சேர்க்கப்படவேண்டிய கணக்கின் பெயரில் ர் எழுத்துப் பிழை இருந்ததாலும் (foundation என்பது fandation என்று இருந்திருக்கிறது) பணம் பெரிய அளவில் இருந்ததாலும் பங்களாதேஷ் வங்கியைத் தொடர்பு கொண்டு உறுதி செய்யக் கேட்டபோது, விழித்துக்கொண்டது பங்களாதேஷ் வங்கி. உடனடியாக அந்தப் பணத்தைத் திரும்பப் பெற்றதுடன் , மற்ற போலி பணமாற்ற கட்டளைகளையும் நிறுத்தியது. இந்த எழுத்துப் பிழையினால் அந்தத் தேசத்தின் பணம், 80 மில்லியன் டாலர் தப்பியது.
”நாங்கள் இத்தனை ஆண்டுகளில் ஒரே நாளில் இப்படிப் பல நாடுகளுக்குப் பணம் மாற்றியதில்லை. நீங்கள் எங்கள் கணக்கைக் கவனமாகக் கையாளவில்லை”. எனப் பங்களாதேஷ்  அரசு அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் வங்கிமீது குற்றம் சாட்டி வழக்குப் போட்டிருக்கிறது.
எங்களது கணினி கட்டமைப்பின் மூலம் எந்தத் தவறும் நிகழவில்லையென உறுதியாகச்சொல்லுகிறது பெல்ஜியத்திலிருக்கும்  SWIFT( Society for Worldwide Interbank Financial Telecommunication) (“SWIFT”)

பங்களாதேஷ் மத்திய வங்கியின் கணணி கட்டுப்பாட்டில் மிகப்பெரிய அளவில் ஊடுருவல் நிகழ்ந்து அதன்மூலம்  வெளி நாட்டிலிருந்து யாரோ  கணக்கை இயக்கியிருக்கலாம் என்கிறார்கள் ஐரோப்பிய கணணி வல்லுநர்கள்.
இது எங்கள் மத்திய வங்கியின் கெளரவம். நம்பிக்கை சார்ந்த விஷயம் என்று  எப்.பி விசாரணையை முடிக்கிவிட்டிருக்கிறது அமெரிக்க அரசு.
இலங்கை, பிலிப்பைன்ஸ் என்று எல்லாஇடங்களிலும் அரசுகள் புலன் விசாரணை துவங்கி விட்டது. அமெரிக்கப் பெடரல் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் அத்தனை நாடுகளும் தங்கள் கணக்குகளைச் சரிபார்க்க ஆரம்பித்திருக்கின்றன.

கணனி தொழில் நுட்பம் ஒரு பக்கம் எண்ணற்ற வசதிகளை வழங்கித் தன் இனிய முகத்தைக் காட்டுகிறது. ஆனாலும் ஹாக்கிங், ஆபாசம், ஸ்பாம் போன்ற தனது கோர முகத்தையும் அவ்வப்போது காட்டுகிறது. வரும் காலங்களில் இந்த ஆபத்தான முகத்தைச் சமாளிப்பதுதான் மிகப்பெரிய சவாலாகயிருக்கப் போகிறது


29/3/16

தேசம் பிறந்த கதையைச் சொல்லிக்கொண்டிருக்கும் நகரம்







ழகுறவடிவமைக்கபட்ட அந்தத் திரையரங்கம் நிரம்பியிருக்கிறது. அதி தொழில்நுட்ப ஒலிவசதிகளுடன் அமைக்கப்பட்டிருக்கும் அதன் திரையில்-  ஓடும் காட்சி- கடும் இடியோசையுடன் கொட்டும் மழையில் சுழன்றடிக்கும் காற்றில் மிக வேகமாக ஓடிவரும் குதிரையின் மேல் மழைக்கோட்டும் தொப்பியும் அணிந்த மனிதர். கட்டிட வாயிலை நெருங்கும்போது உள்ளே இன்னும் 5 நிமிடத்தில் ஒட்டு போடும் நேரம் முடிகிறது என ஒருவர் அறிவித்துக் கொண்டிருக்கிறார். நின்ற குதிரையிலிருந்து தாவிக் குதித்து  ஈர உடையுடனும் சேறு படிந்த காலணிகளுடனும் பாய்ந்த அந்த மனிதர்
 ”நான் வந்து விட்டேன் எனது ஓட்டு புதிய தேசத்துடன் இணைவதற்கானது” என்று சொல்லி ஆவணங்களில்  கையெழுத்திடுகிறார்.
 ”பிரச்சனை தீர்ந்தது. அமெரிக்க ஐக்கிய நாட்டில் முதல் மாநிலமாக டெலவேர் இணைந்துவிட்டது” என்று தலைவர் அறிவிக்கிறார்.
அந்த அறையில் கூடியிருந்தோர் கைத்தட்டுகிறார்கள். அந்தக்காட்சி, அரங்கத்தில் படக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தவர்களையும் கைதட்டவைக்கிறது
.

அமெரிக்க நாட்டின் சரித்திரத்திரத்தில் மிக முக்கியமான இடம் பிலடெல்பியா நகருக்கு உண்டு. அமெரிக்கா”ஐக்கிய” நாடாகப் பிறந்தது இந்த நகரில் தான். பெருமை மிக்க தங்கள் நாடு உருவானதை சுற்றுலா பயணிகளுக்கும் வரும் தலைமுறைக்கும் சொல்ல ”நேஷனல் கான்ஸ்டியூஷன் சென்டர்” என்ற வளாகத்தை இங்கு உருவாக்கியிருக்கிறார்கள். கண்காட்சிகள், நூல்நிலையம், விவாத அரங்கு, பயிற்சிவகுப்புகள், திரையரங்குகள் எனப் பலவசதிகளுடன் பிரமாண்டமானதாக அழகாக இருக்கிறது. அமெரிக்க சட்டத்தின் முதல் வாசகத்தை முகப்பு சுவரில் கொண்டிருக்கும் இங்கு, ஆண்டுமுழுவதும் மக்கள் பங்குகொள்ளும் நிகழ்ச்சிகள் நடைபெற்றுக்கொண்டேயிருக்கிறது. ஒவ்வொரு மாதமும் ஒரு மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் வருகிறார்கள். வெளிநாடு, உள்நாட்டுச் சுற்றுலா பயணிகளும் குவிகிறார்கள் அந்த வளாகத்திலிருக்கும் ஒரு திரையரங்கில் பார்த்த படத்தின் காட்சி தான் நாம் மேலே பார்த்தது..
சுதந்திர வேட்கை வேகமாக எழுந்து பரவி ஆங்கிலேயர்களை வெளியேற்றப் போராட்டங்கள் துவங்கிய ஆரம்ப கட்டத்தில் தாமஸ் ஜெபர்சன்  தலைமையில் அமெரிக்க சுதந்திரபிகடனம் அறிவிக்கப்பட்ட இடம் பிலடெலபியாவின் சட்டமன்றம். இதற்கு இன்று பிஃரிடம் ஹால் எனப் பெயரிட்டிருக்கிறார்கள். இதன் அருகில் தான் இந்த வளாகத்தை வடிவமைத்திருக்கிறார்கள்.,
13 மாநிலங்கள் இணைந்து சுதந்திர பிரகடனத்தில் கையெழுத்திட்டு அமெரிக்க ஐக்கிய நாடு என்ற புதிய தேசம் அறிவிக்கப்பட்டவுடன் அதை ஏற்று மற்ற மாநிலங்கள் ஒவ்வொன்றாக இணைய வேண்டும் என்பது திட்டம். ஆனால் பிரகடனம் தயாரானவுடன் முதலில் ஒப்புக் கொண்ட டெலவேர் மாநிலத்தின் தீர்மானத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் சரி சமமான ஒட்டு கிடைத்திருந்ததால் சிக்கல் ஏற்பட்டது. அதைத்தவிர்க்க டெலவேர் மாநில அமைப்பின் தலைவர் தன் நண்பர் சீஸர்ரோட்னிக்கு செய்தி அனுப்பி, அவர் குதிரையில் விரைந்து வந்து கையெழுத்திட்டு மெஜாரிட்டி ஒட்டு கிடைக்க செய்த காட்சியைத்தான் படத்தில் பார்த்தோம்.  அமெரிக்க தேசம் பிறந்த கதையைச்சொல்லும் இந்தப்படம் வெறும் ஆவணப்படமாக இல்லாமல் இது போல பல சுவாரசியமான காட்சிகளாலான அருமையான திரைப்படம்.
இங்கே அமெரிக்க நாட்டின் சுதந்திர சம்பந்தப்பட்ட அனைவரையும் அழகாக, ரசிக்கும் விதத்தில் அமைத்திருக்கிறார்கள். அமெரிக்க கொடி பிறந்த கதையையும், அமெரிக்க டாலர் எப்படி வடிவமைக்கப்பட்டது பற்றியும் காதில் மாட்டியிருக்கும் போனில் ஒலிக்க காட்சிகளைப் பார்த்துக்கொண்டே நகருகிறோம். இதேபோல் பல தகவல்கள்.
ஜெபர்சன் தங்கி சுதந்திரபிரகடனத்தை இரண்டேநாளில் எழுதிய அறை இருந்த ஹோட்டலை பாரம்பரிய சின்னமாக அறிவித்து அன்றிருந்தைப்போலவே பாதுகாக்கிறார்கள். அதேபோல் சுதந்திர பிகடனம் கையெழுத்திட்ட முதல் சட்ட மன்றத்தை அன்றிருந்தது போலவே, அதே மேசைகள் பயன் படுத்திய பேனாக்கள் உட்பட அப்படியே காட்சி படுத்தியிருக்கிறார்கள். அழைத்துச் சென்று காட்டி விளக்கம் சொல்பவர் கூட அன்றைய பாணி உடையிலிருக்கிறார். நாட்டின் சுதந்திரம் பற்றிப் பேசும் கட்டிடங்கள் இருப்பதால் இந்தப் பகுதியை" சுதந்திர பூங்கா" என அழைக்கிறார்கள்.
இந்தச் சுதந்திர பூங்காவில் அழகான ஒரு தனி வளாகத்தில் 30அடி உயரமும், 900கிலோ எடையும் கொண்ட அந்தப் பிரமாண்டமான ”லிபர்ட்டி பெல்” அதன் பின்னே உள்ள கண்ணாடி சுவரின் வழியே தெரியும் அமெரிக்க முதல் சட்டமன்றத்தின் பின்னணியில் கம்பீரமாக நிற்கிறது ஆண்டுக்கு 10 லட்சம் பேர் வந்து பார்க்கும் இந்த மணிக்கு அமெரிக்க தேசிய கொடிக்கு நிகரான அந்தஸ்து வழங்கப் பட்டிருக்கிறது.
காட்சியகத்தில் காலச்சுவடுகளின் படங்களோடும் ஒலிஓளிகாட்சிகளோடும் நிறுவப்பட்டிருக்கும் இந்த மணியை சில ஆண்டுகளுக்கு முன் வந்த ஒரு பார்வையாளர், தான் கொண்டுவந்த சுத்தியால் அடித்துப் பார்க்க முயன்றதால் இப்போது இதற்கு 24/7காவல். .மணியைத் தொட்டுபார்க்க முடியாதபடி அமைத்திருக்கிறார்கள்
.
அமெரிக்காவின் முதல் பாங்க், முதல் சிறை இப்படிப் பல பழைய விஷயங்கள் இந்த பிலடெல்பியா நகரில் இருந்தாலும் எல்லா அமெரிக்க நகரங்களைப் போல நவீனமாகவிருக்கிறது.முக்கியமான பழைய கட்டிடங்களை இடிக்க அனுமதியில்லாதால் அவை அருகிலிருக்கும் கட்டிடங்களின் கண்ணாடிச் சுவர்களில் தங்களை அழகுபார்த்துக்கொண்டிருக்கின்றன. நகரின் பழைய கட்டிடங்களின் பக்கச் சுவர்களில் மிகப்பெரிய படங்களை எழுதி அழகுட்டும் இயக்கம் ஒன்று வலுவாக இயங்கிக் கொண்டிருப்பதால் நகரில் எங்குப்பார்த்தாலும் பெரிய சவர் சித்திரங்கள்.
தங்கள் நாட்டின் சுதந்திர காலகட்டத்தை அழகாக அடுத்த தலைமுறையினருக்காக இப்படி காட்சியாக்கியிருக்கும் அமெரிக்கர்களைப் பாராட்டத் தோன்றினாலும் நாம் ஏன் இதுபோல இன்னும் செய்யவில்லை? என்று நம் மனதில் எழும் கேள்வியைத் தவிர்க்க முடியவில்லை.

(அமுத சுரபி ஏப்ரல் 2016)



22/3/16

GOல்டு வார்




மக்களோ, அரசோ, இயல்புவாழ்க்கையோ பாதிக்கப்படாத போராட்டம் ஒன்று நடந்திருக்குமானால் அது சமீபத்தில் நடந்த நகைக்கடை வியாபாரிகளின் போராட்டமாகத்தான் இருக்கும். அதே போல் நாடுதழுவிய கடையடைப்பு என அறிவித்துவிட்டு டிவியிலும் செய்திதாட்களிலும் நகைக்கடைகளுக்கு அதிகளவில் விளம்பரங்கள் செய்த கொண்டிருந்த முரண்பாடு இருந்ததும் இந்தப் போராட்டத்தில் தான். பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது பாலைத் தெருவில் கொட்டினார்கள். தங்க வியாபாரிகள் அதுபோல் செய்யவேண்டியதுதானே எனச் சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்யும் விஷயமாகிப் போயிருந்தது இந்தப் போராட்டம். உலகிலேயே அதிகமாகத் தங்க நகைகள் வாங்கும் நுகர்வோர் இந்தியாவில் மட்டுமே. இந்தியாவில் மக்கள் தமது வருமானத்தில் சராசரியாக 30% சேமிப்பாக வைக்கிறார்கள் என்றால், அதில் 10 சதவீதத்தைத் தங்கமாக வாங்கி வைக்கிறார்கள் என்கின்றன ஆய்வுகள். இதில் கைமாறும் பணத்தில் பெருமளவிற்கு சரியான பில்கள், கணக்குகள் காட்டப்படுவதில்லை. உள்நாட்டுக் கருப்புப் பணத்தில் தங்கம் பெரும்பகுதியாக இருக்கிறது என்பதால் அரசு, தங்கத்தைப் பயன்படுத்துவதைக் குறைக்க மத்திய அரசு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இறக்குமதி வரி அதிகரிப்பு, தங்கத்தின் மீதான முதலீட்டுக்கு வரி ஆகியவற்றைத் தொடர்ந்து தற்போது தங்கம் மற்றும் வைரம்மீதான கலால் வரி உயர்த்தப்பட்டிருக்கிறது. இதனால் தங்கம் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. ரூ.2 லட்சத்துக்கு அதிகமாக நகைகள் வாங்குவோரின் பான் கார்டு (வருமான வரி நிரந்தர எண்) தெரிவித்தல் கட்டாயம் என்ற நிபந்தனையை இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதலாக அமல்படுத்தியது. பெரும்பாலும் கணக்கில் காட்டப்படாத பணம், லஞ்சப்பணம்தான் தங்கமாக மாறிக்கொண்டிருக்கிறது. இதைத் தடுக்கும் முதல் முயற்சியே பான் கார்டு கட்டாயம் என்ற உத்தரவு. இதைத்தொடர்ந்து தங்க கொள்முதலை விற்பனையைக் கண்காணிக்க 1% கலால் வரி அறிவிக்கப்பட்டது. கலால் வரி செலுத்துவதற்கு இருக்கும்நடைமுறைகளினால் நகை உற்பத்தியாளர்கள் பலவற்றை மறைக்க முடியாது,. தங்கம் வாங்குபவர்களில் 68% மக்கள் கிராமப்புறங்களில் வசிப்போர். இவர்களிடம் வங்கிக் கணக்குகள் இல்லை. வரி செலுத்துவோர் மக்கள் தொகையில் 3% மட்டுமே. ஆகவே, பான் கார்டு அனைவரிடமும் இருக்காது. எனவே இப்படிப் பட்ட அறிவிப்புகள்  தங்கம் வாங்க விரும்பும் சதாரண மக்களை  பல இன்னல்களுக்கு உள்ளாக்கும் என்றும் அதைவலியுறுத்துவதற்காக அகில இந்திய அளவில் கடையடைப்புப் போராட்டங்களை அறிவித்தது நகை வியாபாரிகள் சங்கம். ஆனால் இந்தப் போராட்டங்கள் எந்தவித சலனத்தையும் ஏற்படுத்தாதற்கு முக்கியக் காரணம் தங்கம் ஏழைகள் அன்றாடம் வாங்கும் பொருள் அல்ல. எனவே அதன் விலையேற்றம் வாங்க முடியாதவர்களைப் பாதிக்கப்போவதில்லை. வாங்கும் வசதி படைத்தவர்களுக் விலையைப் பற்றிய கவலை இல்லை. ”இந்த வரிவிதிப்பினால் தங்கம் வாங்கமுடியாமல் எங்கள் வீட்டுக் கல்யாணம் நின்றுவிட்டது” என்ற குரலோ, திட்டமிட்டமிட்டபடி சேமிப்பிலிருந்து ”தங்கம் வாங்க முடியவில்லையே” என்ற ஆதங்கக் குரலோ முணுமுணுப்போ கூட மக்களிடமிருந்து எழவில்லை. நாடு முழுவதும் தங்க விற்பனையில் வரிஏய்ப்பு செய்யும், தாங்கள் கண்காணிக்கப்படுவதை விரும்பாத நகை வியாபாரிகள் தான் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறார்கள் . மேலும் கோடிக்கணக்கில் தங்கம் ஸ்டாக் வைத்திருக்கும் வியாபாரிகள் இந்த விலையேற்றத்தினால் எந்த நஷ்டமும் அடையப்போவதில்லை என்பதால் மக்களுக்கு அவர்கள்மீது எந்த அனுதாபமும் எழவில்லை. எல்லாவற்றையும் விட 1% வரிவிதிப்பை வியாபாரிகள் மக்கள்மீதுதான் திணிக்கப் போகிறார்கள்.அப்புறம் ஏன் இந்த முதலைக் கண்ணீர் என்ற எண்ணமும் எழுந்திருக்கிறது. அதாவது வாங்குவோருக்கும் விற்பனையாளர் என்ற இரு தரப்புக்குமே பாதிப்பில்லாத ஒரு விஷயத்திற்கு நடந்த போராட்டம் தோற்றத்தில் ஆச்சரியமில்லை வருட வருமானத்தின் 10% சேமிப்பான 2 லட்சத்தைத் தங்கத்தில் முதலீடு செய்பவர்களின் வருமானம் 20 லட்சமாக இருக்கும் என்பதால்  வருமானவரி செலுத்தும் அவரிடம் பான் கார்ட் இருக்கும்.  கிராமங்களிலிருப்பவர்களுக்கு வங்கிக்கணக்கில்லை என்பதையும் முழுவதுமாக ஏற்பதிற்கில்லை. சமீபத்தில்  பல கோடி ரூபாய் வெள்ள நிவாரணம் இரண்டே நாளில் மக்களின் வங்கிக்கணக்கில் சேர்ந்தது.  இதுபலருக்கு வங்கி கணக்கு இருப்பதையும், அதன் அவசியத்தை மக்கள் உணர்ந்திப்பதையும் காட்டுகிறது. இந்தப் போராட்டத்தால் அரசுக்கு இழப்பு இல்லையா? உண்டு தங்க நகை விற்பனை தடைப்படும் ஒவ்வொரு நாளும் பல்வேறு நிலைகளிலும், அதாவது தங்கம் இறக்குமதி, விற்பனை, நகைகள் தயாரிப்பு, நகை விற்பனை எனப் பல நிலைகளில் சுமார் 40% வரி விதிப்பு உள்ளது.ஆனாலும் மத்திய அரசு இந்த இழப்பைப்,பொருட்படுத்தவில்லை.காரணம் இதைவிட முக்கியமான விஷயமான ஆண்டுதோறும் அதிகரிக்கும் தங்க இறக்குமதியைக் குறைப்பதன் மூலம் நடப்பு கணக்கின் பற்றாக்குறையை கணிசமாகக் குறைக்க முடியும் என்பதால் இந்த வருமானஇழப்பை சந்திக்கத் தயாராகவிருக்கிறது. கருப்புப் பணம் தங்கமாகிறது என்பதும், அதிகாரிகள் பலரும் லஞ்சம் பெறுவது தங்கமாகத்தான் இருக்கிறது என்பதும் எல்லோரும் அறிந்த உண்மை.மக்கள் தங்கத்தில் முதலீடு செய்வதில் தவறில்லை. . ஆனால், கருப்புப் பணம் தங்கமாகப் பதுக்கப்படுவது தடுக்கப்பட்டேயாக வேண்டும். விற்பனை கண்காணிக்கப்பட வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி, கொண்டு வரப்பட்டிருக்கும் அரசின் இந்த முயற்சி மக்களிடம் அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியிருப்பது மகிழ்ச்சியான விஷயம் 110316