13/9/14

நாடு திரும்பிய நடராஜர்



ஆஸ்திரேலிய பிரதமர்  டோனி அபோட்டின் சமீபத்திய இந்திய வருகையினால் மிக சந்தோஷம் அடைந்தவர்கள் தமிழ்நாட்டின் அரியலூர் அருகிலிருக்கும் சின்னஞ்சிறிய கிராமமான ஸ்ரீபுரந்தன் கிராம மக்கள்தான். காரணம் அவர்கள் ஊரிலிருந்து பல ஆண்டுகளுக்கு முன்னால் காணாமல் போன 1000 ஆண்டுகள் பழமையான நடராஜார்  சிலையை  அவர் கொண்டுவந்திருக்கிறார் என்பது தான்.
ஸ்ரீபுரந்தன்  அரியலூர்  மாவட்டத்திலிருக்கும் ஒரு மிகச்சிறிய கிராமம். இங்கு  சோழர்கள் காலத்தில் கட்டபட்ட  ஒரு பிரகதீஸ்வரர் கோவில்  இருக்கிறது. அதனுள் நிறுவபட்டு பல நூற்றாண்டுகள்  வழிபடபட்டுவந்த தெய்வம் நடராஜரும் அன்னை சிவகாமிசுந்தரியும். 1970களின் இறுதியில்; போதிய வருவாய் இல்லாதால் அர்ச்சகர் பணிவிலகி போனபின் கோவில் பூட்டப்படுவிட்டது. கிராமத்தின் காளி கோவில் பிரபலமாகிவந்ததால் மக்கள் மெல்ல இதை மறந்தே போனார்கள்.  மீண்டும் திறந்து வழிபடும் ஆர்வத்துடன் இருந்தவர்களுக்கும் போதிய ஆதரவும் உதவிகளும் கிடைக்கவில்லை. இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை காளிபூஜை அன்று இந்த கோவில் முன் கொண்டு வந்து வழிபடும் முறையும் ஒரு முறை அந்த பூசாரியை இந்த பழையகோவிலின் உள்ளிருந்து வந்த ராட்சத தேனி கொட்டிவிட்டதால்  நின்று போயிருந்தது.  ஊரில்  இன்றய தலைமுறையினர்  அந்த கோவிலின் பாரம்பரியத்தையும், அந்த விக்கரகங்களின் பெருமையும் அறிந்திருக்கவில்லை.
2008ம் ஆண்டில்  அருகிலுள்ள சுத்த மல்லி என்ற கிராமத்தின் கோவிலில் இருந்த விக்கரகங்கள் காணமல் போன சமயத்தில்  இம்மாதிரி கோவில்களின் விக்கரகங்களை  அருங்காட்சியகத்தில் பத்திரபடுத்தலாம் என்று யோசனை தெரிவிக்கபட்டிருந்தது. அதற்கான முயற்சியில் தொல்பொருள் துறை இறங்கிய போது  கிராம மக்கள் எங்கள் தெய்வத்தை எல்லையை விட்டு வெளியே அனுப்ப சம்மதிக்க மாட்டோம் என ஒத்துழைக்க மறுத்தார்கள். பாதுகாப்பகாக கோவிலின் நுழைவாயில்களுக்கு சுருக்கி –விரிக்கும் இரும்புகதவுகளை (collapsible gate) போடலாம் என்று பஞ்சாயத்தாயிற்று.   போலீஸின் சிலைதிருட்டுகளை தடுக்கும் பிரிவின் உதவியுடன் அதற்காக கோவிலின் கதவுகளை திறந்த போது அதிர்ச்சி.  உள்ளே இருக்கும் நடராஜர் உள்பட 8 சிலைகளும் காணவில்லை, எப்போது எப்படி திருடு போனது? என்பதே தெரியவில்லை.. இந்த அதிர்ச்சியான செய்தி வெளியானபோது நடராஜர் 9000 கிமீ பயணித்து ஆஸ்திரேலியாவில் கானிபரா  நகரத்தில் தேசிய அருங்காட்சியகத்திலிருக்கிறார் என்பதை அவர்கள் அறிந்திருக்க நியாமில்லை.
சிலை எப்படி திருடபட்டது?
சுபாஷ் கபூர் கடந்த 40 ஆண்டுகளாக அமெரிக்காவில் நீயூயார்க் நகரில் கலைப்பொருட்கள் இறக்குமதி செய்து விற்கும் கடையை நடத்தி வரும் அமெரிக்க இந்தியர்.  உலகின் பல பிரபல மீயூசியங்களுக்கும், கலைச்செல்வங்களை சேகரிக்கும் உலக பணக்கார்களுக்கும் அறிமுகமானவர் ஆனால்  இறக்குமதி என்ற போர்வையில் பாரம்பரிய சிலைகளை கடத்தி விற்பனை செய்வது தான் உண்மையான தொழில் என்பது யாருக்கும் தெரியாது.  உலகின் கண்ணுக்கு இவர் ஒரு செல்வாக்குள்ள, நிறைய விஷய்ங்கள் தெரிந்த  ஆர்ட் டீலர்.
.100 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான (1மில்லியன்= 10 லட்சம்) 150க்குமேலான  இந்தியாவிலிருந்து பழைய சிலைகளை கடத்தியிருப்பதாக  இவர் மீது வழக்கு போடபட்டிருக்கிறது. உலகம் முழுவதும் இண்டர்போலால் தேடப்பட்டு வந்த இவரை ஜெர்மானிய போலீஸார் கைது செய்து தமிழக போலீசிடம் ஒப்படைத்தது. இப்போது சிறையில் இருக்கிறார், இவருக்கு உதவிய ஆட்களையும் கைது செய்திருக்கிறார்கள். இவர்கள் தந்த ஓப்புதல் வாக்குமூலத்தின் படி குற்ற பத்திரிகை தயாரிக்க பட்டிருக்கிறது.

கபூருக்கு  உலகம் முழுவதுமுள்ள கோவில்களில், அரண்மனைகளில் இருக்கும் பராம்பரிய சின்னங்கள் சிலைகளின் விபரங்கள் அத்துப்படி.  இந்தியாவைத்தவிர பாக்கிஸ்தான். ஆப்கானிஸ்தான்,பங்களாதேஷ்,ஹாங்காங்,இந்தோனிஷியா,துபாய்.கம்போடியா என உலகின் பலநாடுகளில்   இவருக்கு உள்ளுர் எஜெண்ட்கள். தாஜ் மாதிரியான  ஆடம்பர ஹோட்டல்களில் தங்கி தனது ஏஜெண்ட்களிடம் எந்த கோவிலிருந்து எந்த சிலை வேண்டும் என்பதை போட்டோவை காட்டி சொல்லிவிடுவார். அவர்களுக்கு பெருமளவில் பணம் தரப்படும். 28 சிலைகளுக்கு 7 லட்சம் டாலர்கள்   இவருடைய எச் எஸ் பி வங்கி கணக்கிலிருந்து இந்தியாவிற்கு இதற்காகவே மாற்றபட்டிருக்கிறது என்கிறது போலீஸ் குற்றபத்திரிகை.  அந்த ஏஜண்ட்கள் உள்ளூர்  ஆட்கள் மூலம், யாருக்காக செய்கிறோம் என்பது கூட  தெரியாமல் வேலையை முடித்து கொடுப்பார்கள்.  சென்னையில் இவரது எஜெண்ட் அசோகன்  இவர் இந்த பணியை செய்ய ஓப்புகொண்டார். இந்த கோவிலில் பாழடைந்த நிலையில் இருந்தது வசதியாக போய்விட்டது.  முதலில்  அந்த பழைய பூட்டை உடைத்து 3 சிலைகளை அப்புறப்டுத்திவிட்டு பூட்டை மீண்டும்  பூட்டிய நிலையில் இருப்பது போல ஒட்டிவிட்டார்கள். கிராமத்தில் யாருக்கும் சந்தேகம் வரவில்லை என்பதை உறுதிசெய்துகொண்டு சில நாட்களில் ஒரு லாரியில் நிறைய மண்ணை கோண்டுவந்து அருகில்  நிறுத்தி கொண்டு 3 அடி உயரமும் 150கிலோ எடையையும் கொண்ட அந்த நடராஜரை கோவிலிலிருந்து கிளப்பி மண்ணில் புதைத்து கொண்டுபோய்விட்டார்கள்.
நடராஜர் ஆஸ்திரேலியா எப்படி போனார்.?
சர்வதேச சிலைகடத்தல் மன்னன் கபூரின் நெட் ஒர்க் மிகப் பெரியது. வலிமையானது. இந்தியாவிலிருந்து ஒரு சிலை அல்லது கலைப்பொருள் ஏற்றுமதி செய்யப்படவேண்டுமானால் அது பழங்கால அல்லது பாதுக்காக்க பட்ட சிற்பம் இல்லை என்பதை தொல்பொருள் துறையினர் அல்லது அவர்து அங்கீகாரம் பெறப்பட்டவர்கள் சான்றிதழ் அளிக்கவேண்டும். கபூர் தான் திருடும் சிலைகளின் படங்களையும் மாதிரிகளையும் கொடுத்து ஸ்வாமிமலையில் சிற்பிகளிடம்  புதிய சிலைகளை வடிக்கசெய்யவார். ”பழையது மாதிரியான (”antic look சிலகளுக்கு இப்போது மவுசு அதிகம் என்பதால் அதே போல் செய்ய சில சிலைகளைச் செய்ய  சொல்லி அதற்கு சான்றிதழ் வாங்கி  அனுப்பும் போது அதில் ஒன்றாக திருடிய சிலையையும் கலந்து  அனுப்பிவிடுவார்.  நியூயார்க்கில் அவருடைய நிறுவனதிற்கு எது மதிப்பு வாய்ந்தது என்பதை கண்டுபிடிக்க தெரியும். இப்படி கொண்டுவரபட்ட சிலைகளை தனது  நிறுவன கேட்லாக்கில் மிகபழமையான அரிய சிற்பம் என்றும் அது எங்கிருந்து  எப்போது வாங்கி யாரல் விற்பட்டது என்ற சரித்திரங்களை, ஆதாரங்களாக போலியாக தயரித்து ஆவணமாக்கியிருப்பார். அப்படி 2010ம் ஆண்டு இவர்  வெளியிட்டிருந்த கேட்லாக்கிலிருந்த இந்த நடராஜரை ஆஸ்திரேலிய தேசிய மீயூசிய இயக்குனர் பார்த்துவிட்டு நியார்க் வந்து இவரை சந்தித்து விலை பேசி தனது மியூசியத்திற்கு வாங்கியிருக்கிறார். விலை என்ன தெரியுமா? இந்திய மதிப்பில் 31 கோடிகள்.
காட்டிக்கொடுத்தார் கணேசர்
இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ள திருடர்களில் ஒருவன் பிச்சுமணி. ஸ்ரீபுரந்தன் நடராஜரை திருடும் முன் சுத்த மலை சிலைகலை திருடிய போது ஒரு நாலு அங்குல அளவில் ஒரு அழகான வினாயகர் சிலையை தனக்காக ஒதுக்கி கொண்டுவிட்டான். அன்னை பார்வதியை வினாயகர் மடியில் இருத்தியிருக்கும் அபூர்வமான சிலை அது.  எப்போதும் அதை தன்னுடன் வைத்திருப்பான். ஒரு நாள் கேரள எல்லையை தாண்டும்போது மதுபானம் இருக்கிறதா என சோதனையிட்ட செக்போஸ்ட் போலீஸாருக்கு இது கோவில் சன்னதி சிலையாக இருக்கும் என்ற சந்தேகத்தில் கைது செய்து தமிழக சிலை திருட்டு பிரிவு போலீசிடம் ஒப்படைத்ததுவிட்டார்கள்.  சுத்த மலை சிலை திருட்டை ஆராய்ந்து கொண்டிருந்த அவர்களுக்கு  அப்போது லட்டுவாக கிடைத்த துப்பு இது. அவர்களது கவனிப்பில் அசோகன் தொடர்பு, ஸ்ரீபுரந்தன் கோவில் திருட்டு வெளிநாட்டிலிருந்து பணம், உடன் வேலை செய்தவர்கள் எல்லாம் வெளிவந்துவிட்டது.
ஆண்டவனே ஆனாலும் ஆவணம் முக்கியம்
தமிழகத்தில்  பெருமளவில் சிலைகடத்தல் நடைபெற்றுகொண்டிருந்ததால்  காவல்துறையின் அந்த பிரிவு விரிவான  ஆராய்ச்சியில்  ஈடுபட்டிருந்தது.  அவர்கள் எதிர் கொண்ட ஒரு விஷயம் ஆஸ்திரேலிய  தேசிய மீயூசியத்தின் ஆண்டுமலர் புத்தகத்தில்  புதிய சேர்க்கை என போடபட்டிருக்கும் நடராஜரின் படம் நமது ஸ்ரீபுரந்தன் கோவிலைச்சேர்ந்தது என்பது. உடனே முழித்துகொண்டார்கள்.    அதை அவர்களிடமிருந்து மீட்க கோர்ட் உத்தரவு வேண்டும். என்பதால்  சட்ட விதிகளின்படி உள்ளூர்  மாஜிஸ்ட்ரேட் கோட்டில் மனுச்செய்தார்கள். நீதிபதி கேட்ட கேள்வி இந்த சிலைதான்  கோவிலில் இருந்தது என்பதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா?   தெய்வ சன்னதிகளை படம் எடுக்க அனுமதிப்பதில்லை என்பதால் ஒரு போட்டோ கூட இல்லை. அரசின் அறநிலத்துறையிலும் இல்லை. திகைத்தது போலீஸ்.  செய்திகளை தினசரியில் பார்த்து கைகொடுத்து உதவினர் பாண்டிச்சேரியை சேர்ந்த பிரென்ச் இன்ஸிடியூட் ஆப் பாண்டிச்சேரி என்ற நிறுவனத்தினர். இவர்களின் ஆராய்ச்சையில் ஒரு அங்கம் இந்து கோவில்களீன் சிலைகள். உரிய அனுமதியுடன் தமிழக பண்டைய கோவில்கலையும் சிலைகளை ஆராய்பவர்கள். அவர்களிடம் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட கோவில் சிலைகளின் படங்கள் இருக்கின்றன.  அதன் ஆராய்ச்சியாளர் முருகேசன் இந்த நடராஜரின் படத்தை கொடுத்து உதவினார். அவர் 1958ல் எடுத்தது, 1994ல் மீண்டும் எடுத்ததையும் கொடுத்தார். (இந்த படங்களும்,ஆஸ்திரேலிய மீயூசிய படமும் கபூரின் போனிலிருந்த படமும் ஒத்துபோயிற்று. இதனால்தான் இண்டர்போல் கபூரை கைது செய்யவும் முடிந்தது.) அதை ஏற்று மாஜிஸ்ட்ரேட் ஆஸ்திரிலியே மீயூசியத்துக்கு நோட்டிஸ் அனுப்பினார்.  மத்திய அரசு அதிகாரிகளுக்கு மீயூசியம் இம்மாதிரி சிறிய கோர்ட்  ஆணைகளை ஏற்பார்கள் என்ற நம்பிக்கையில்லை. ஆனால் ஆச்சரியமாக அந்த மியூசியம்  உடனடியாக செயலில் இறங்கி  விசாரணையில் அது திருட்டு பொருள் என கண்டுபிடித்துவுடன்.இந்தியாவிற்கு திருப்பி அனுப்பிவிடுவதாக அறிவித்துவிட்டார்கள். கபூர்நிறுவனத்தின் மீது தாங்கள் செலுத்திய பணத்தையும் நஷ்ட ஈடாக மிகப்பெரிய தொகையையும் கேட்டு வழக்கு போட்டிருக்கிறார்கள்.

இந்த நடராஜரைத்தான் ஆஸ்திரேலிய பிரதமர் தன் கையோடு கொண்டுவந்திருக்கிறார். இந்திய பிரதமரிடம் ஒப்படைத்திருக்கிறார்.  இந்த நடராஜருடன் ஆஸ்திரேலிய பிரதமர் கொண்டுவந்தது ஒரு அர்தநாரிஸ்வரர் சிலை. இது விருத்தாச்சலத்திலிருக்கும் விருந்த கீரிஸ்ரவர் கோவிலில் இருந்து திருடபட்டு ஆஸ்திரேலியாவிற்கு கடத்தபட்ட கற்சிலை. இது ஆஸ்திரேலியாவின் நீயூ சவுத் வேல்ஸ் பகுதி மீயூசியத்தில் இருந்தது..  கர்பக்கிருஹத்தின் பக்கவாட்டு சுவரிலிருந்த இதன் இடத்தில் ஒரு போலியை நிறுவி விட்டு  இதை அபேஸ் செய்திருக்கிறார்கள்.  எப்போது காணாமல் போனது என்று யாராலும் சொல்ல முடியவில்லை. பாண்டிச்சேரி இன்ஸ்டியூட் 1974ல் படம் எடுத்திருக்கிறார்கள். அதற்கு பின்னால் என்றோ ஒரு நாள் இடம் மாற்றப்பட்டிருக்கிறது
.
எப்போது இந்த சிலைகள் கோவிலுக்கு வரும்?
டில்லி வந்து விட்ட நடராஜர் எப்போது ஸ்ரீபுரந்தன் வருவார்?   நாட்டின் பிரதமரே கொண்டுவந்து கொடுத்தாலும்  சில சட்ட சிக்கல்களை   நடராஜர்  சந்திக்கவேண்டியிருப்பதை  தவிர்க்க முடியாது. . சட்டப்படி இவைகள் கோர்ட்டால் ஆணையிட்டு கண்டுபிடிக்க பட்ட திருட்டு சொத்துக்கள். வழக்கு முடியம் வரை இவை கோர்ட்டின் பாதுகாப்பில்தான்.  இருக்க வேண்டும். வழக்கு, மேல்முறையீடுகள் முடிய பல வருடங்கள் ஆகலாம். ஆனால்  இம்மாதிரி வழக்குகளில் சில முன்மாதிரிகள் இருக்கின்றன. பல ஆண்டுகளுக்கு முன்  கும்பகோணம் அருகே உள்ள சிவபுரம் நடராஜர் கடத்தபட்டு மீட்க பட்ட போது  வழக்கு முடியம் வரை அதை மயிலாப்பூர் கபாலி கோவிலில் பாதுகாக்கவும் பூஜிக்கவும் நீதிபதி அனுமதித்தார். அதுபோல் இதற்கு அனுமதிப்பார்கள் என கிராம மக்கள் எதிர்பார்த்துகொண்டிருக்கிறார்கள். பாழடைந்த கோவிலை சீராக்க நிதி திரட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
நம் கடவுள்கள் பத்திரமாக இருக்கிறார்களா?
 அபின் கஞ்சா போன்ற போதைப்பொருட்களை கடத்துவதைவிட  சிலைகடத்தல் மிக பெரிய லாபத்தைக்கொடுக்கும் பிஸினஸ் என்பதால் உலகின் பல இடங்களில் கபூர்கள் இயங்கிகொண்டிருக்கிறார்கள். இந்தியா ஒரு  முக்கிய டார்கெர்கெட். தமிழக காவல்துறையின் சிலைகடத்தல் தடுப்பு  பிரிவு கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக இயங்கி வருகிறார்கள்.  இப்போது 28 சிலைகளை மும்பரமாக தேடிக்கொண்டிருக்கிறார்கள். 5  சிலைகள் மீயூசியங்களில் இருப்பதை கண்டுபிடித்துவிட்டார்கள்.  இவர்கள் சந்திக்கும் பெரிய பிரச்னை  மாநிலத்தில் இருக்கும் 45000 கோவில்கள். இதில் பலவற்றில் சிற்பங்களுக்கும் சிலைகளுக்கும் போட்டோக் களோ விபரங்களோ இல்லை. காணாமல் போனால்  அடையாளம் சொல்லக்கூட முடியாது.  இவர்கள் முயற்சியில் ஒரு 900 ஆண்டு பழமையான நடராஜர் சிலையும் ஒரு1000 ஆண்டு பழமையான சம்பந்தர் சிலையும் வெளிநாட்டு மியூசியத்தில் இருப்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள். அவைகள் தமிழ்நாட்டிலிருந்து கடத்த பட்டிருக்கும் தொன்ம சிலைகள் என நம்புகிறார்கள்.  ஆனால் எந்த கோவிலுடையது என்பது தெரியவில்லை. அது தெரியாமல், அதை நீருபிக்காமல்  அவைகளை மீட்க முடியாது. அந்த கோவில்களை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை கேட்டு  திரு பொன் மாணிக்கம் டிஐஜி அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். (அவசியமானல் போலீஸ் அறிவிப்பை பாக்ஸில் போடாலாம்-தந்தி 7/9/14)
ஸ்ரீபுரந்தன் நடராஜர். கூடவே இருந்து காணமல் போன அம்பிகை இப்போது அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறார்.  நல்ல வேளையாக விற்பனை செய்யப்படுமுன் அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை கைபற்றிவிட்டது.  இந்தியா கொண்டுவர முயற்சிகள் துவங்கியிருகின்றன. உலகம் சுற்றியபின் ஆண்டவன் வந்துவிட்டார். அம்பிகை எப்போது வருவாரோ? .
அரும் சிலைகளும் கலைப்பொருட்களும்  வெளிநாடுகளுக்கு கடத்தபடுவதும், மீட்கபடுவதும்  நீண்ட நாட்களாக நடைபெற்றுவரும்  விஷயங்கள். ஆனால் ஒரு நாட்டின் பிரதமர் நல்லெண்ண பயணத்தின் போது கொண்டுவந்து தருவது இதுவே முதல் முறை.  நமது பிரதமர்  இதற்காக நன்றி சொன்ன போது  டோனி அபோட் சொன்னது ”இந்தியர்களின்  கோவில் வழிபாட்டு முறைகளை நாங்கள்  அறிவோம். அவற்றை மதிக்கிறோம்”  

4 கருத்துகள் :

  1. விஜயகுமார் சீங்கப்பூர்13 செப்டம்பர், 2014 அன்று PM 1:11

    விபரமான கட்டுரை. விறுவிறுப்பாக எழுதியிருக்கீறீர்கள். நன்றி

    பதிலளிநீக்கு
  2. தங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா ? திருநெல்வேலி கிருஷ்ணாபுரம் கோவிலில் பழங்கால சிற்பங்களை புகைப்படம் எடுக்க அனுமதிக்கவில்லை , அறநிலையத்துறை அனுமதி வேண்டும்என்றார்கள். ஆனால், எல்லாக் கோவில்களின் விவரம் மற்றும் புகைப்படங்கள் அவர்களிடம் இல்லாதது வருத்தைக்குரியது. கடவுள் கைவிடவில்லை , பிரெஞ்சு இன்ஸ்டிட்யூட் முலம் தன்னை அறிமுகபடுதிக்கொண்டு இருக்கிறார்

    பதிலளிநீக்கு
  3. தங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா ? திருநெல்வேலி கிருஷ்ணாபுரம் கோவிலில் பழங்கால சிற்பங்களை புகைப்படம் எடுக்க அனுமதிக்கவில்லை , அறநிலையத்துறை அனுமதி வேண்டும்என்றார்கள். ஆனால், எல்லாக் கோவில்களின் விவரம் மற்றும் புகைப்படங்கள் அவர்களிடம் இல்லாதது வருத்தைக்குரியது. கடவுள் கைவிடவில்லை , பிரெஞ்சு இன்ஸ்டிட்யூட் முலம் தன்னை அறிமுகபடுதிக்கொண்டு இருக்கிறார்

    பதிலளிநீக்கு
  4. Very well researched and even better written. A real eye-opener. Thanks.

    Regards,

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள்