29/3/16

தேசம் பிறந்த கதையைச் சொல்லிக்கொண்டிருக்கும் நகரம்







ழகுறவடிவமைக்கபட்ட அந்தத் திரையரங்கம் நிரம்பியிருக்கிறது. அதி தொழில்நுட்ப ஒலிவசதிகளுடன் அமைக்கப்பட்டிருக்கும் அதன் திரையில்-  ஓடும் காட்சி- கடும் இடியோசையுடன் கொட்டும் மழையில் சுழன்றடிக்கும் காற்றில் மிக வேகமாக ஓடிவரும் குதிரையின் மேல் மழைக்கோட்டும் தொப்பியும் அணிந்த மனிதர். கட்டிட வாயிலை நெருங்கும்போது உள்ளே இன்னும் 5 நிமிடத்தில் ஒட்டு போடும் நேரம் முடிகிறது என ஒருவர் அறிவித்துக் கொண்டிருக்கிறார். நின்ற குதிரையிலிருந்து தாவிக் குதித்து  ஈர உடையுடனும் சேறு படிந்த காலணிகளுடனும் பாய்ந்த அந்த மனிதர்
 ”நான் வந்து விட்டேன் எனது ஓட்டு புதிய தேசத்துடன் இணைவதற்கானது” என்று சொல்லி ஆவணங்களில்  கையெழுத்திடுகிறார்.
 ”பிரச்சனை தீர்ந்தது. அமெரிக்க ஐக்கிய நாட்டில் முதல் மாநிலமாக டெலவேர் இணைந்துவிட்டது” என்று தலைவர் அறிவிக்கிறார்.
அந்த அறையில் கூடியிருந்தோர் கைத்தட்டுகிறார்கள். அந்தக்காட்சி, அரங்கத்தில் படக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தவர்களையும் கைதட்டவைக்கிறது
.

அமெரிக்க நாட்டின் சரித்திரத்திரத்தில் மிக முக்கியமான இடம் பிலடெல்பியா நகருக்கு உண்டு. அமெரிக்கா”ஐக்கிய” நாடாகப் பிறந்தது இந்த நகரில் தான். பெருமை மிக்க தங்கள் நாடு உருவானதை சுற்றுலா பயணிகளுக்கும் வரும் தலைமுறைக்கும் சொல்ல ”நேஷனல் கான்ஸ்டியூஷன் சென்டர்” என்ற வளாகத்தை இங்கு உருவாக்கியிருக்கிறார்கள். கண்காட்சிகள், நூல்நிலையம், விவாத அரங்கு, பயிற்சிவகுப்புகள், திரையரங்குகள் எனப் பலவசதிகளுடன் பிரமாண்டமானதாக அழகாக இருக்கிறது. அமெரிக்க சட்டத்தின் முதல் வாசகத்தை முகப்பு சுவரில் கொண்டிருக்கும் இங்கு, ஆண்டுமுழுவதும் மக்கள் பங்குகொள்ளும் நிகழ்ச்சிகள் நடைபெற்றுக்கொண்டேயிருக்கிறது. ஒவ்வொரு மாதமும் ஒரு மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் வருகிறார்கள். வெளிநாடு, உள்நாட்டுச் சுற்றுலா பயணிகளும் குவிகிறார்கள் அந்த வளாகத்திலிருக்கும் ஒரு திரையரங்கில் பார்த்த படத்தின் காட்சி தான் நாம் மேலே பார்த்தது..
சுதந்திர வேட்கை வேகமாக எழுந்து பரவி ஆங்கிலேயர்களை வெளியேற்றப் போராட்டங்கள் துவங்கிய ஆரம்ப கட்டத்தில் தாமஸ் ஜெபர்சன்  தலைமையில் அமெரிக்க சுதந்திரபிகடனம் அறிவிக்கப்பட்ட இடம் பிலடெலபியாவின் சட்டமன்றம். இதற்கு இன்று பிஃரிடம் ஹால் எனப் பெயரிட்டிருக்கிறார்கள். இதன் அருகில் தான் இந்த வளாகத்தை வடிவமைத்திருக்கிறார்கள்.,
13 மாநிலங்கள் இணைந்து சுதந்திர பிரகடனத்தில் கையெழுத்திட்டு அமெரிக்க ஐக்கிய நாடு என்ற புதிய தேசம் அறிவிக்கப்பட்டவுடன் அதை ஏற்று மற்ற மாநிலங்கள் ஒவ்வொன்றாக இணைய வேண்டும் என்பது திட்டம். ஆனால் பிரகடனம் தயாரானவுடன் முதலில் ஒப்புக் கொண்ட டெலவேர் மாநிலத்தின் தீர்மானத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் சரி சமமான ஒட்டு கிடைத்திருந்ததால் சிக்கல் ஏற்பட்டது. அதைத்தவிர்க்க டெலவேர் மாநில அமைப்பின் தலைவர் தன் நண்பர் சீஸர்ரோட்னிக்கு செய்தி அனுப்பி, அவர் குதிரையில் விரைந்து வந்து கையெழுத்திட்டு மெஜாரிட்டி ஒட்டு கிடைக்க செய்த காட்சியைத்தான் படத்தில் பார்த்தோம்.  அமெரிக்க தேசம் பிறந்த கதையைச்சொல்லும் இந்தப்படம் வெறும் ஆவணப்படமாக இல்லாமல் இது போல பல சுவாரசியமான காட்சிகளாலான அருமையான திரைப்படம்.
இங்கே அமெரிக்க நாட்டின் சுதந்திர சம்பந்தப்பட்ட அனைவரையும் அழகாக, ரசிக்கும் விதத்தில் அமைத்திருக்கிறார்கள். அமெரிக்க கொடி பிறந்த கதையையும், அமெரிக்க டாலர் எப்படி வடிவமைக்கப்பட்டது பற்றியும் காதில் மாட்டியிருக்கும் போனில் ஒலிக்க காட்சிகளைப் பார்த்துக்கொண்டே நகருகிறோம். இதேபோல் பல தகவல்கள்.
ஜெபர்சன் தங்கி சுதந்திரபிரகடனத்தை இரண்டேநாளில் எழுதிய அறை இருந்த ஹோட்டலை பாரம்பரிய சின்னமாக அறிவித்து அன்றிருந்தைப்போலவே பாதுகாக்கிறார்கள். அதேபோல் சுதந்திர பிகடனம் கையெழுத்திட்ட முதல் சட்ட மன்றத்தை அன்றிருந்தது போலவே, அதே மேசைகள் பயன் படுத்திய பேனாக்கள் உட்பட அப்படியே காட்சி படுத்தியிருக்கிறார்கள். அழைத்துச் சென்று காட்டி விளக்கம் சொல்பவர் கூட அன்றைய பாணி உடையிலிருக்கிறார். நாட்டின் சுதந்திரம் பற்றிப் பேசும் கட்டிடங்கள் இருப்பதால் இந்தப் பகுதியை" சுதந்திர பூங்கா" என அழைக்கிறார்கள்.
இந்தச் சுதந்திர பூங்காவில் அழகான ஒரு தனி வளாகத்தில் 30அடி உயரமும், 900கிலோ எடையும் கொண்ட அந்தப் பிரமாண்டமான ”லிபர்ட்டி பெல்” அதன் பின்னே உள்ள கண்ணாடி சுவரின் வழியே தெரியும் அமெரிக்க முதல் சட்டமன்றத்தின் பின்னணியில் கம்பீரமாக நிற்கிறது ஆண்டுக்கு 10 லட்சம் பேர் வந்து பார்க்கும் இந்த மணிக்கு அமெரிக்க தேசிய கொடிக்கு நிகரான அந்தஸ்து வழங்கப் பட்டிருக்கிறது.
காட்சியகத்தில் காலச்சுவடுகளின் படங்களோடும் ஒலிஓளிகாட்சிகளோடும் நிறுவப்பட்டிருக்கும் இந்த மணியை சில ஆண்டுகளுக்கு முன் வந்த ஒரு பார்வையாளர், தான் கொண்டுவந்த சுத்தியால் அடித்துப் பார்க்க முயன்றதால் இப்போது இதற்கு 24/7காவல். .மணியைத் தொட்டுபார்க்க முடியாதபடி அமைத்திருக்கிறார்கள்
.
அமெரிக்காவின் முதல் பாங்க், முதல் சிறை இப்படிப் பல பழைய விஷயங்கள் இந்த பிலடெல்பியா நகரில் இருந்தாலும் எல்லா அமெரிக்க நகரங்களைப் போல நவீனமாகவிருக்கிறது.முக்கியமான பழைய கட்டிடங்களை இடிக்க அனுமதியில்லாதால் அவை அருகிலிருக்கும் கட்டிடங்களின் கண்ணாடிச் சுவர்களில் தங்களை அழகுபார்த்துக்கொண்டிருக்கின்றன. நகரின் பழைய கட்டிடங்களின் பக்கச் சுவர்களில் மிகப்பெரிய படங்களை எழுதி அழகுட்டும் இயக்கம் ஒன்று வலுவாக இயங்கிக் கொண்டிருப்பதால் நகரில் எங்குப்பார்த்தாலும் பெரிய சவர் சித்திரங்கள்.
தங்கள் நாட்டின் சுதந்திர காலகட்டத்தை அழகாக அடுத்த தலைமுறையினருக்காக இப்படி காட்சியாக்கியிருக்கும் அமெரிக்கர்களைப் பாராட்டத் தோன்றினாலும் நாம் ஏன் இதுபோல இன்னும் செய்யவில்லை? என்று நம் மனதில் எழும் கேள்வியைத் தவிர்க்க முடியவில்லை.

(அமுத சுரபி ஏப்ரல் 2016)



22/3/16

GOல்டு வார்




மக்களோ, அரசோ, இயல்புவாழ்க்கையோ பாதிக்கப்படாத போராட்டம் ஒன்று நடந்திருக்குமானால் அது சமீபத்தில் நடந்த நகைக்கடை வியாபாரிகளின் போராட்டமாகத்தான் இருக்கும். அதே போல் நாடுதழுவிய கடையடைப்பு என அறிவித்துவிட்டு டிவியிலும் செய்திதாட்களிலும் நகைக்கடைகளுக்கு அதிகளவில் விளம்பரங்கள் செய்த கொண்டிருந்த முரண்பாடு இருந்ததும் இந்தப் போராட்டத்தில் தான். பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது பாலைத் தெருவில் கொட்டினார்கள். தங்க வியாபாரிகள் அதுபோல் செய்யவேண்டியதுதானே எனச் சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்யும் விஷயமாகிப் போயிருந்தது இந்தப் போராட்டம். உலகிலேயே அதிகமாகத் தங்க நகைகள் வாங்கும் நுகர்வோர் இந்தியாவில் மட்டுமே. இந்தியாவில் மக்கள் தமது வருமானத்தில் சராசரியாக 30% சேமிப்பாக வைக்கிறார்கள் என்றால், அதில் 10 சதவீதத்தைத் தங்கமாக வாங்கி வைக்கிறார்கள் என்கின்றன ஆய்வுகள். இதில் கைமாறும் பணத்தில் பெருமளவிற்கு சரியான பில்கள், கணக்குகள் காட்டப்படுவதில்லை. உள்நாட்டுக் கருப்புப் பணத்தில் தங்கம் பெரும்பகுதியாக இருக்கிறது என்பதால் அரசு, தங்கத்தைப் பயன்படுத்துவதைக் குறைக்க மத்திய அரசு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இறக்குமதி வரி அதிகரிப்பு, தங்கத்தின் மீதான முதலீட்டுக்கு வரி ஆகியவற்றைத் தொடர்ந்து தற்போது தங்கம் மற்றும் வைரம்மீதான கலால் வரி உயர்த்தப்பட்டிருக்கிறது. இதனால் தங்கம் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. ரூ.2 லட்சத்துக்கு அதிகமாக நகைகள் வாங்குவோரின் பான் கார்டு (வருமான வரி நிரந்தர எண்) தெரிவித்தல் கட்டாயம் என்ற நிபந்தனையை இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதலாக அமல்படுத்தியது. பெரும்பாலும் கணக்கில் காட்டப்படாத பணம், லஞ்சப்பணம்தான் தங்கமாக மாறிக்கொண்டிருக்கிறது. இதைத் தடுக்கும் முதல் முயற்சியே பான் கார்டு கட்டாயம் என்ற உத்தரவு. இதைத்தொடர்ந்து தங்க கொள்முதலை விற்பனையைக் கண்காணிக்க 1% கலால் வரி அறிவிக்கப்பட்டது. கலால் வரி செலுத்துவதற்கு இருக்கும்நடைமுறைகளினால் நகை உற்பத்தியாளர்கள் பலவற்றை மறைக்க முடியாது,. தங்கம் வாங்குபவர்களில் 68% மக்கள் கிராமப்புறங்களில் வசிப்போர். இவர்களிடம் வங்கிக் கணக்குகள் இல்லை. வரி செலுத்துவோர் மக்கள் தொகையில் 3% மட்டுமே. ஆகவே, பான் கார்டு அனைவரிடமும் இருக்காது. எனவே இப்படிப் பட்ட அறிவிப்புகள்  தங்கம் வாங்க விரும்பும் சதாரண மக்களை  பல இன்னல்களுக்கு உள்ளாக்கும் என்றும் அதைவலியுறுத்துவதற்காக அகில இந்திய அளவில் கடையடைப்புப் போராட்டங்களை அறிவித்தது நகை வியாபாரிகள் சங்கம். ஆனால் இந்தப் போராட்டங்கள் எந்தவித சலனத்தையும் ஏற்படுத்தாதற்கு முக்கியக் காரணம் தங்கம் ஏழைகள் அன்றாடம் வாங்கும் பொருள் அல்ல. எனவே அதன் விலையேற்றம் வாங்க முடியாதவர்களைப் பாதிக்கப்போவதில்லை. வாங்கும் வசதி படைத்தவர்களுக் விலையைப் பற்றிய கவலை இல்லை. ”இந்த வரிவிதிப்பினால் தங்கம் வாங்கமுடியாமல் எங்கள் வீட்டுக் கல்யாணம் நின்றுவிட்டது” என்ற குரலோ, திட்டமிட்டமிட்டபடி சேமிப்பிலிருந்து ”தங்கம் வாங்க முடியவில்லையே” என்ற ஆதங்கக் குரலோ முணுமுணுப்போ கூட மக்களிடமிருந்து எழவில்லை. நாடு முழுவதும் தங்க விற்பனையில் வரிஏய்ப்பு செய்யும், தாங்கள் கண்காணிக்கப்படுவதை விரும்பாத நகை வியாபாரிகள் தான் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறார்கள் . மேலும் கோடிக்கணக்கில் தங்கம் ஸ்டாக் வைத்திருக்கும் வியாபாரிகள் இந்த விலையேற்றத்தினால் எந்த நஷ்டமும் அடையப்போவதில்லை என்பதால் மக்களுக்கு அவர்கள்மீது எந்த அனுதாபமும் எழவில்லை. எல்லாவற்றையும் விட 1% வரிவிதிப்பை வியாபாரிகள் மக்கள்மீதுதான் திணிக்கப் போகிறார்கள்.அப்புறம் ஏன் இந்த முதலைக் கண்ணீர் என்ற எண்ணமும் எழுந்திருக்கிறது. அதாவது வாங்குவோருக்கும் விற்பனையாளர் என்ற இரு தரப்புக்குமே பாதிப்பில்லாத ஒரு விஷயத்திற்கு நடந்த போராட்டம் தோற்றத்தில் ஆச்சரியமில்லை வருட வருமானத்தின் 10% சேமிப்பான 2 லட்சத்தைத் தங்கத்தில் முதலீடு செய்பவர்களின் வருமானம் 20 லட்சமாக இருக்கும் என்பதால்  வருமானவரி செலுத்தும் அவரிடம் பான் கார்ட் இருக்கும்.  கிராமங்களிலிருப்பவர்களுக்கு வங்கிக்கணக்கில்லை என்பதையும் முழுவதுமாக ஏற்பதிற்கில்லை. சமீபத்தில்  பல கோடி ரூபாய் வெள்ள நிவாரணம் இரண்டே நாளில் மக்களின் வங்கிக்கணக்கில் சேர்ந்தது.  இதுபலருக்கு வங்கி கணக்கு இருப்பதையும், அதன் அவசியத்தை மக்கள் உணர்ந்திப்பதையும் காட்டுகிறது. இந்தப் போராட்டத்தால் அரசுக்கு இழப்பு இல்லையா? உண்டு தங்க நகை விற்பனை தடைப்படும் ஒவ்வொரு நாளும் பல்வேறு நிலைகளிலும், அதாவது தங்கம் இறக்குமதி, விற்பனை, நகைகள் தயாரிப்பு, நகை விற்பனை எனப் பல நிலைகளில் சுமார் 40% வரி விதிப்பு உள்ளது.ஆனாலும் மத்திய அரசு இந்த இழப்பைப்,பொருட்படுத்தவில்லை.காரணம் இதைவிட முக்கியமான விஷயமான ஆண்டுதோறும் அதிகரிக்கும் தங்க இறக்குமதியைக் குறைப்பதன் மூலம் நடப்பு கணக்கின் பற்றாக்குறையை கணிசமாகக் குறைக்க முடியும் என்பதால் இந்த வருமானஇழப்பை சந்திக்கத் தயாராகவிருக்கிறது. கருப்புப் பணம் தங்கமாகிறது என்பதும், அதிகாரிகள் பலரும் லஞ்சம் பெறுவது தங்கமாகத்தான் இருக்கிறது என்பதும் எல்லோரும் அறிந்த உண்மை.மக்கள் தங்கத்தில் முதலீடு செய்வதில் தவறில்லை. . ஆனால், கருப்புப் பணம் தங்கமாகப் பதுக்கப்படுவது தடுக்கப்பட்டேயாக வேண்டும். விற்பனை கண்காணிக்கப்பட வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி, கொண்டு வரப்பட்டிருக்கும் அரசின் இந்த முயற்சி மக்களிடம் அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியிருப்பது மகிழ்ச்சியான விஷயம் 110316

16/3/16





மெல்லப்பரவும் துல்லியமான ஒலி, கண்களை உறுத்தாத இதமான ஒளி. அழகான இணைப்புரை. இதமான ஏசிஅமைதியாக ரசிக்கும் ரசிகர்கள். இதைவிட வேறென்ன வேண்டும் ஒரு நாட்டிய நிகழ்ச்சியின் வெற்றிக்கு.? .அப்படியொருஇசையும் நடனமும் இணைந்து பரிமளித்த ஒரு நிகழ்ச்சியுடன் தான் எம். எஸ் அம்மாவின் நூற்றாண்டைக் கல்கிசதாசிவம் அறக்கட்டளை கடந்த வாரம் கொண்டாடியது

அமரர் கல்கி அவர்கள் எழுதிய பல பாடல்களில் ஒன்று ”மாலைப்பொழுதினிலே” அதையே தலைப்பாகக் கொண்டு திருமதிகெளரி நாராயணன் தயாரித்திருந்த இசை-நாட்டிய நிகழ்ச்சி அது. நிஷா ராஜகோபலன் பாட, பிரியா கோவிந்த் நடனமாடினார்.எம்எஸ்ஸை இசைஅரசியாகத்தான் உலகம் அறியும். அவர் தன் அன்பு மகள்களின் நடனத்துக்குப் பாவங்களும், அபிநயங்கள்சொல்லிக்கொடுத்து ஜதி சொல்லிபாடியுமிருக்கிறார் என்பதிலிருந்து அவர் பாடிய சில பாடல்கள் எப்படிப் பிறந்தது போன்றசுவையான தகவல்களுடன் கெளரிராம்நாராயணனின் இணைப்பு உரையுடன் நிஷாவின் பாட்டு. எம் எஸ் பாடியபாடல்களில் நடனத்துக்கு ஏற்றது தேர்ந்த்டுக்கபட்டிருந்தன. 

எம்.எஸ் அம்மா பாடிய பாட்டு என்பதைத்தாண்டி எம்.எஸ்ஸின் குரல் சாயலை நிஷா பாடியபோது உணர்ந்தது நிஜம்.நடனங்களுக்கு பாடுபவர்கள் ஒரு தனி இனம். ஓங்கிய தங்கள் குரலால் ஜதிஸ்வரங்கள் சொல்லித் தங்கள் இருப்பதைஅழுத்தமாகப் பதிவு செய்வார்கள். அன்று நிஷா அப்படி எதுவும் செய்து மிரட்டாமல் கச்சேரியில் பாடுவது போல அழகாகவயலினுடன் இணைந்து மிதந்த குரலுடன் நடனத்தைச் சிறப்பாக்கினார். 
பாடல்களின் ஒவ்வோரு வார்த்தைக்கும் வரிகளுக்கும் தனது நளினமான உடல்மொழி,
மற்றும் பாவங்களினால்உயிருட்டினார் பிரியா கோவிந்த். பாரதீய வித்யாபவனின் அந்தப் பெரிய ஸ்டேஜ் முழுவதும் வினாடிகளில் ஒடிப்பரவிஆடிக் காட்டிய அபிநயங்களை ரசிகர்கள் தங்களை மறந்து பார்த்துக்கொண்டிருந்தனர். இவரிடம் நடனம் கற்கும்மாணவிகள் நிச்சியமாகக் கொடுத்துவைத்தவர்கள்தான். 
ஆண்டுதோறும் கல்கி சதாசிவம் நினைவு அறக்கட்டளை கல்வியில் சிறந்து பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ளமாணவர்களுக்குக் கல்விக்கான உதவித்தொகையும், தமிழ் பத்திரிகைகளில் இடம் பெற்ற விளம்பரங்களில்கலைச்சிறப்பும் சமுதாய சிந்தனையும் இணைந்ததான ஒரு சிறந்த விளம்பரத்துக்கு ரூ 25000 பரிசும் வழங்குகிறார்கள்.இசை நடன நிகழ்ச்சிக்கு முன்னர் அன்றைய விளம்பரத்துக்காகக் கடந்த 16 ஆண்டுகளாக வழங்கப்படும் இந்த விருதை இந்த ஆண்டு பெற்றவர்கள் விஜய் டிவி நிறுவனம். அவர்கள் பத்திரிகைகளில் வெளியிட்டிருந்த ஹெல்மெட் அணிவதின் அவசியம் குறித்த விளம்பரம் பரிசு பெற்றது. இந்த விருதுக்குகான இறுதிக்கட்ட நடுவர்களில் ஒருவராக இருக்கும் வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டிருந்தது. அதற்காக அன்றைய விழாவில் எனக்கும் ஒரு நினைவுப்பரிசு வழங்கினார்கள். விழாவிற்கு தலைமையேற்ற வயலின், வாய்பாட்டு வித்தகரும் எம்,.எஸ் அம்மாவுக்கு நீண்டநாள் வாசித்த கலைஞருமான ஸ்ரீராம்குமார் பரிசினை வழங்கினார். 
நாம் மிகவும் மதிக்கும் கல்கி குழுமத்திலிருந்து இத்தகைய கெளரவம் பெற்றது மிகவும் சந்தோஷமாகியிருக்கிறது.

10/3/16

அடுத்த அமெரிக்க அதிபராவாரா? இந்தப் பெண்மணி

250 ஆண்டு அமெரிக்க வாலாற்றில் இதுவரை ஒரு பெண்மணி அதிபரானதில்லை. இந்த ஆண்டு நடக்கப்போகும் அதிபர் தேர்தலில்அதற்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம் இந்த ஆண்டு முடிவடைகிறது. அடுத்த அதிபருக்கான தேர்தல் வரும் நவம்பர் 8ம் தேதி நடைபெறவிருக்கிறது. அமெரிக்க தேர்தல் முறைப்படி பிரதான அரசியல் கட்சிகள் தங்கள் கட்சி வேட்பாளர்களை அறிவிக்கும்முன் அவர்கள் கட்சியினால் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். உட்கட்சி ஜனநாயகம் வலுவான அரசியல் அமைப்பு முறையுள்ள அமெரிக்க அரசியலில் கட்சிகள் இந்தத் தேர்தல்களை மாநிலந்தோறும் நடத்தி எந்த வேட்பாளர் அதிகமான மாநிலங்களில் கட்சி உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப் படுகிறாரோ அவரைத் தங்கள் கட்சியின் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள். அவர்களில் ஒருவரை மக்கள் நேரிடையாக வாக்களித்து அதிபராகத் தேர்ந்தெடுப்பார்கள்.
இப்போது அமெரிக்க அரசியல் கட்சிகளான குடியரசு, மற்றும் ஜனநாயக கட்சிகளில் உட்கட்சி தேர்தல்களம் சூடுபிடித்துவிட்டது. ஜனநாயகக் கட்சியின் முதல் உட்கட்சி தேர்தல் அய்வோவா மாநிலத்தில் துவங்கியது. அதில் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற்றார். இந்த மாநிலத்தின் முதல் தேர்தலில் வெற்றி பெற்ற ஜனநாயக கட்சி வேட்பாளர்கள் தான் அதிபர் தேர்தல் போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அதனால் ஹிலாரியின் வெற்றி ”அமெரிக்காவிற்கு ஒரு பெண் அதிபர்” என்பதற்கான அறிகுறிதென்படுவதாக ஊடகங்கள் பேசின.
இந்த முதல் வெற்றிக்குப் பின் நடந்த இரண்டாவது நீயூஹெமிஸிபியர் மாநில தேர்தலில் ஹிலாரி கிளிண்டனுக்கும் போட்டியாளர், பெர்னி சாண்டர்சுக்கும் இடையே கடும் போட்டி யிருந்தது. அதில் ஹிலாரி வெற்றி பெறவில்லை. இது கட்சி வட்டாரத்தில்; அதிர்ச்சி அலைகளை எழுப்பியிருக்கிறது. இந்த மாநிலத்தில்தான் முந்திய கட்சி வேட்பாளர் தேர்தலில் ஒபாமாவை எதிர்த்துப் போட்டியிட்டு ஹிலாரி வெற்றிபெற்றிருந்தார். ஆனால் ஒரு மாநில தேர்தல் முடிவு மட்டும் முழுவெற்றியாகிவிடாது இன்னும் 48 மாநில தேர்தல்கள் இருக்கிறது என்ற எண்ணமும், ஹிலாரி சேமித்திருக்கும் தேர்தல் நிதியும் நம்பிக்கை தருகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் மிகப்பெரிய அளவில் பணம் செலவழிக்கப்படும். அதற்காகக் கட்சிகள் மட்டுமில்லாமல் வேட்பாளர்களும் தனியாக நிதி திரட்டுவார்கள். அரசுப் பதவியில் அமைச்சராக இருந்து கொண்டு தேர்தலில் போட்டியிட முடியாது என்பதால், பதவியிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே பதவி விலகி நிதி சேர்க்க ஆரம்பித்த விட்ட ஹிலாரியிடம் இப்போது 100 மில்லியன்(1 மில்லியன் 10 லட்சம்) டாலர்களுக்கும் மேல் இருக்கிறது. இந்தப் பணவசதி, பிரச்னைகளை எதிர் நோக்கும் துணிவு, அயலுறவு அமைச்சராகப் பணியாற்றிய அனுபவம் எல்லாம் இவருடைய பலம். இவர் அமைச்சராக இருந்தபோது அரசாங்க விஷயங்களுக்குத் தன்னுடைய சொந்த இ மெயிலை பயன் படுத்தினார் என்ற குற்ற சாட்டுக்கான 11 மணி நேர பாராளுமன்ற குழுவின் விசாரணையை சந்தித்தவர். மேலும் கணவர் கிளிண்ட்டன் தேர்தலுக்காகப் பணியாற்றிய காலத்திலியே தேர்தலைச் சந்திக்கும் யுக்திகள் தெரிந்த ஸ்டிரஜிஸ்ட்டாக மதிக்கப்பட்டவர். இவற்றினால் இவர் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஆவதற்கான வாய்ப்பு அதிகம் எனப் பத்திரிகைகள் கணிக்கின்றன.
இதைப் போல மற்றொரு கட்சியான குடியரசுக் கட்சி சார்பில் இம்மாநிலத்தில் நடந்த உட்கட்சி தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றிருக்கிறார். பிரபல தொழிலதிபரான இவருடைய அதிரடி அணுகுமுறையால் அமெரிக்க தேர்தல் களம் அதகளப்பட்டுக் கொண்டிருக்கிறது. இவர் வல்லவரா ? அல்லது வடிவேலுவா? என்று பொதுமக்களும் ஊடகங்களும் குழம்பிப் போய்க் கிடக்கிறார்கள். முதலில் யாருமே சீரியஸாக கண்டுகொள்ளாத இவர், ஒருவேளை வெற்று பெற்று அதிபரும் ஆகி விடுவாரோ என்ற நிலை தற்போது நிலவுகிறது. டொனால்ட் ட்ரம்ப் அதிரடி பேச்சுகளில் நம்ம ஊர் அரசியல்வாதிகளுக்கு எந்த விதத்திலும் சளைத்தவர் இல்லை. முன்னதாக இஸ்லாமியர்களை அமெரிக்காவுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று கூறி பரபரப்பு ஏற்படுத்தினார். 'நான் அதிபர் ஆனால் ஒரு டாலருக்கு ஒரு காலன் பெட்ரோல் தருகிறேன்' என்று தற்போது புதிய பரபரப்பை கிளப்பியுள்ளார். சவுதி அரேபியாவிடம் அமெரிக்கா சரியாக 'டீல்' செய்தால் பெட்ரோல் மலிவாகக் கிடைக்கும். தொழிலதிபரான தனக்கு வியாபார டீல் என்பது கை வந்த கலை. மற்ற அதிபர் வேட்பாளர்களுக்கு அது தெரியாது. மேலும் ஐஎஸ் ஐஎஸ் வசம் உள்ள பெட்ரோலை கைப்பற்றுவேன். அதன் மூலம் பெட்ரோல் விலை 50 சென்ட்கள் (அரை டாலர்) வரை குறையும்.
பெட்ரோல் விலை சாமானிய அமெரிக்கர்களின் அன்றாட பிரச்சனை. நம்ம ஊரில் ரூபாய்க்கு 3 படி அரிசி, கிலோ ஒரு ரூபாய் அரிசி, இப்போது இலவச அரிசி திட்டங்கள் மாதிரிதான் உலக சந்தையில் பெட்ரோல் விலை அடிமாட்டு விலைக்குக் குறைந்துள்ள நிலையில், தானாகவே ஒரு டாலருக்கு விலை குறைந்தாலும் ஆச்சரியமில்லை. இந்தப் போக்கு தொடர்ந்தால் 'வாரத்திற்கு பத்து காலன் இலவச பெட்ரோல் தருகிறேன்' என்று கூட டொனால்ட் ட்ரம்ப் வாக்குறுதி தரக்கூடும்!
இந்த மனிதர் குடியரசுக் கட்சி வேட்பாளராகவும், ஹிலாரிகிளிண்ட்டன் ஜனநாயக கட்சி வேட்பாளராகவும் இறுதி முடிவானால் ’சபாஷ் சரியான போட்டி’ என்று இருக்கும். ஆனால் சதுரங்க ஆட்டத்தின் முதல் மூவ்களில் முடிவைக் கணிக்க முடியாதைப் போல இந்த முதல் கட்டத்தில் எதுவும் சொல்ல முடியாது.
கடைசி மூவ் யாருடையது என்பதைக் காண உலகம் காத்திருக்கிறது
 (கல்கி 7/3/16)
.  




3/3/16

ஈர்ப்பு விசையை -இசையாகக் கேட்கலாம்.

அறிவியல் அற்புதம்!


கடந்த சில வாரங்களுக்குமுன் இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த அறிவியல் கண்டுபிடிப்பு அறிவிக்கப் பட்டிருக்கிறது. விண்வெளி ஆராய்ச்சிகளில் மிகவும் முக் கியமானதாகக் கருதப்படும்ஈர்ப்பு விசை அலைகள்பற்றி, நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தனது சார்பு நிலை கோட்பாடு எனும் இயற்பியல் தத்துவத்தில் விளக்கி இருந்தார். ஈர்ப்பு விசைபற்றி ஐன்ஸ் டீன் விளக்கம் அளித்து இருந்தாலும், சில சந்தேகங்களையும் தனது ஆய்வு கட்டுரையில் எழுப்பி இருந்தார். விண்வெளியில் உள்ள கருந்துளைகள் ஒன்றோடு ஒன்று மோதும்போது வெளிப்படும் அதிர்வலைகள் தான்ஈர்ப்பலைஎனப்படுகி றது.
இந்தஈர்ப்பலைஒளியின் வேகத்துக்கு இணையாகச் செல்லக் கூடியது. இதன் ஆற்றலை எதைக் கொண்டும் தடுக்க முடியாது.இந்த அலைகள் வெளிப்படுவது வெறும் கண்ணுக்குத் தெரியாது. இதைப்பார்க்க முடியுமா என்பதும் அதன் வேகத்தை அளக்க முடியுமா என்பதும் சந்தேகமே இதை நிரூபிக்க இயலாது என்றும், அத்தகைய அலைகள் மிகவும் நுட்பமானவை என்றும் அவர் கட்டுரையில் கூறியிருந்தார்.

.அணுவைத் துளைக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கும் அறிவியல் ஆய்வுகள்மூலம் இந்த ஈர்ப்பாற்றல் அலையையும் அதன் வேகம் போன்றவைகளைத் தான் இப்போது கண்டறிந்துள்ளனர் லிகோ விஞ்ஞானிகள். லிகோ என்பது ஒரு சர்வ தேச விஞ்ஞான ஆய்வகம்.(. Laser Interferometer Gravitational Wave Observatory (LIGO) —
அமெரிக்காவில் ஹான்போர்ட் என்ற இடத்தில் திறந்த வெளியில்  பெரும் செலவில் உருவாக்கிப் பல ஆண்டுகளாக ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். இம்மாதிரி லிகோஆய்வு மையங்களை உலகின் பல பகுதிகளில் நிறுவத் திட்டமிடப்பட்டிருக்கிறது. அதற்காக அடையாளம் காணப்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

4 கீமி நீளத்தில் ல் L வடிவத்தில் அமைக்கப் பட்ட  நீண்ட கான்கீரிட் குகைகளில் வெற்றிடத்தை உருவாக்கி அதில் ஈர்ப்பு சக்தியின் கூறுகளை ஆராய்ந்தார்கள். 2010 வரை ஈர்ப்பு சக்தி என்பது ஒரு அலையாக இருக்கிறதை அவர்களின் ஆய்வுகளின் மூலம் நிரூபிக்க முடியவில்லை, ஆனால் நம்பிக்கையுடன் தொடர்ந்து முயன்று கொண்டிருந்தார்கள். இந்த ஆண்டு ஆராய்ச்சியில் வெற்றி பெற்ற லீகோ அறிவியல் அறிஞர்கள். . ஈர்ப்பாற்றல் அலைகளை ஒலி வடிவமாக்கி ஏற்றத் தாழ்வுகளுடன் ஒலிக்கும் இசையைப்போல அதைக் கணினியில் காட்டியிருக்கிறார்கள்.
அந்த ஈர்ப்பு அலைகளில் வேறு பொருட்கள் மோதினால் உண்டாக்கும் தாக்கத்தையும் கணினியில் காட்டினார்கள்.

இந்த வரலாற்றுப் பெருமை மிக்க வெற்றி சாதனையில் இந்தியர்களுக்குப் பெரும் பங்கு இருக்கிறது. . லிகோவிற்காக உலகம் முழுவதும் 1000க்கும் அதிகமான விஞ்ஞானிகள் தீவிரமான ஆய்வு மேற் கொண்டு வந்தனர். இந்தியாவிலிருந்து 37 விஞ்ஞானிகள் இந்த ஆய்வில் பங்கெடுத்தனர். புனேவில் உள்ள வானியல் மற்றும் விண் வெளி இயற்பியல் பல்கலைக் கழக மையத்தில் பணி யாற்றும் சஞ்சீவ் துரந்தர் மற்றும் சத்ய பிரகாஷ் எனும் விஞ்ஞானிகள் நவீன தொழில் நுட் பத்தின் மூலம் ஈர்ப்பு அலைகளைக் கண்டறிவது பற்றிக் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னரே கட்டுரைகள் வெளியிட்டிருக்கின்றனர். .அதன் அடிப்படையில் தொடர்ந்த அனைத்து விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிகளினால்தான் தற்போது ஈர்ப்பு விசை என்பது அலைவடிவிலிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அளவிட முடியாது எனக் கருதப்பட்ட ஈர்ப்பு விசை ஒலியைப் போல அலையாகப் பரவும் தன்மை கொண்டது என்பதை அந்த விசையை ஒலி வடிவமாக்கிக் காட்டியிருக்கின்றனர் லிகோ விஞ்ஞானிகள்.

இந்தக் கண்டுபிடிப்பால் என்ன பயன்?
வானொலி அலைகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு இயற்பியலில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்தது. தகவல் தொழில்நுட்பத்தில் மெல்ல, மெல்லப் பல மாற்றங்கள் ஏற்பட்டு இன்று உலகம் முழுவதும் இணைய வலைக்குள் பின்னிக்கிடக்கிறது. அதே போன்று, ஈர்ப்பாற்றல் அலைகளின் அடுத்தகட்ட ஆய்வுகள் பயனுறும் அறிவியலாக மாறும்போது வானவியலில் மிகப்பெரும் மாற்றம் ஏற்படும். நாம் கனவிலும் கூட நினைத்திராத, அல்லது சில அறிவியல் புதினங்களில் நாம் படித்து வியந்த பல விஷயங்கள் நடைமுறை வாழ்வில் வரக்கூடும். ஆய்வு படிப்படியாக நகர்ந்து பல ஆயிரம் ஆண்டுகளாகத் தொடரும் இந்த உலகம் எப்படி உருவானது? என்ற கேள்விக் கூட விடை கண்டுபிடிக்க உதவப்போகிறது என்கிறார்கள் அறிவியலாளர்கள். இந்தப் பேரண்டத்தில் உள்ள கோள்கள் எப்படித் தடம் மாறாமல் அந்தரத்தில் சுழலுகின்றன?.என்ற கேள்விகளுக்கு ஈர்ப்பாற்றல் அலைகள் ஒரு புதிய பதிலைக் கொடுக்கக்கூடும்.

.8 ஆண்டுகளுக்கு முன்னரே அமெரிக்கத் தொழில்நுட்ப உதவியுடன் இந்தியாவில் ஒரு லிகோ ஆய்வு மையம் 1000கோடி செலவில் அமைக்கும் அறிவிக்கப்பட்ட திட்டம் அமைச்சகங்களில் சிவப்பு நாடாக்களுக்குள் தூங்கிக் கொண்டிருந்தது. இப்போது ஆராய்ச்சியின் வெற்றி அறிவிக்கப்பட்டவுடன் பிரதமர் மோடி கொள்கையளவில் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியிருக்கிறார். ஆனால் செயலாகக் குறைந்த பட்சம் 8 ஆண்டுகள் ஆகும் என இந்து பத்திரிகை எழுதியிருக்கிறது.

.சர்வதேச அளவிலான இது போன்ற ஆராய்ச்சிகளில் இந்திய விஞ்ஞானிகள் பங்கேற்று பெரும் பங்களித்திருப்பது ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை தரும் விஷயமாக இருந்தாலும். , இந்தியாவிலேயே இத்தகைய ஆய்வுகளை மேற்கொள்ள இதுவரை நமது அரசு நம் விஞ்ஞானிகளுக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என்ற எண்ணம் எழுவதைத் தவிர்க்கமுடியவில்லை.