30/8/16

அமெரிக்காவிலிருந்து குஜராத்திற்கு படம் எடுக்க வந்த மைதிலி




அமெரிக்காவிலிருந்து  குஜராத்திற்கு  படம் எடுக்க வந்த மைதிலி


2010ஆம் ஆண்டு தெஹல்கா இதழில் பணியாற்றிய பத்திரிகையாளரான ரானா அயூப் ஒரு துணிச்சலான பத்திரிகைபுலானய்வு பணியை தன் உயிரைப் பயணம் வைத்து மேற்கொண்டபெண்மணி.  2002 ஆம் ஆண்டு நடந்த குஜராத் படுகொலைகள், பின்னர் அதைத்தொடர்ந்து நடைபெற்ற போலி என்கவுண்டர்கள் குறித்து  அந்தக் காலகட்டத்தில்(2001-2010)  குஜராத் மாநிலத்தில் காவல்துறை மற்றும் உள்துறை அதிகாரிகளாகப் பணியாற்றியவர்கள் மனம் திறந்து பேசியதை ஒரு ஸ்டிங் ஆப்ரேஷன் மூலமாக ரகசியமாகப் பதிவு செய்தவர்.ஒரு சமூக படுகொலை நடைபெற அரசு இயதிரம் பயன்படுத்தப்பட்டதையும், முக்கிய அதிகாரிகள் அதற்கு மௌன சாட்சியாகவும் இருந்தை அவர்கள் வாக்குமூலமாகவே வெளிக்கொண்டுவந்திருப்பவர்.இவரது புலனாய்வு கட்டுரைகள் அம்பலப் படுத்திய தகவல்களினால்தான் 2010ஆம் ஆண்டு அமித்ஷா சிறைக்குச் சென்றார். தொடர்ந்து அவர் செய்த பணியில் தொகுத்த தகவல்களை  அரசியல் காரணங்களால் அவரது தெல்ஹா நிறுவனம் அவரது பதிவுகளை புத்தகமாக்க மறுத்துவிட்ட நிலையில் குஜராத் கோப்புகள்-(GUJARAT FILES)  என்ற பெயரில் தானே சொந்தமாக புத்தகமாகப் பதிப்பித்துள்ளார். நூல் தமிழில் மொழிபெயர்க்கப் பட்டு வெளியாகியிருக்கிறது. சமீபத்தில் அதன் வெளியீட்டு விழாவிற்காகச் சென்னை வந்திருந்தார். திருமதி ரான அயூப்
புத்தகத்திற்கு வரவேற்பு எப்படி இருக்கிறது.?
 5 லட்சம் வங்கியில் என்பெயரில்  கடன் வாங்கிப் பதிப்பித்த புத்தகத்தின் அறிமுக விழாவிற்கு டெல்லியில்  பல பத்திரிகைகள் உள்பட 400 பேர் வந்திருந்தனர். ஆனால் மறுநாள் தினசரிகளில் ஒருவரி செய்திகூட இல்லை. இப்போது சமூக வலைத்தளங்களில் புத்தகம் அதிகம்  பேசப்படுவதால் மெல்லச் சூடுபிடிக்கிறது. தமிழ் மொழிபெயர்ப்புக்குப் பலர் முன்பதிவு செய்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது.


எப்படி இந்த ஆப்ரேஷனைச் செய்தீர்கள்?
2002ல் மிகவும் கொடூரமான முறையில் நடைபெற்ற அரசியல் படுகொலைகள் காரணமாக ரத்த ஆறு ஓடிய சமயத்தில் பணியிலிருந்த பல நேர்மையான அதிகாரிகள் இந்த அக்கிரமங்களிலிருந்து ஒதுங்கியிருந்தது எனக்குத் தெரியும். தெல்ஹாவின் பத்திரிகையாளரான எனக்கு அவர்கள் ஏதேனும் ஒரு விதத்தில் உதவ முடியும் என்று அவர்கள் வீட்டு கதவைதட்டியபோதெல்லாம் அவை மூடப்பட்டன. உண்மையைக் கண்டறிய பத்திரிகையாளர் கடைப்பிடிக்கும் கடைசி வழி மாறுவேடம் அணிவது. நான் ஒரு பெண்,அதுவும் ஒரு  முஸ்லீம் பெண் என்பது நான் செய்யப் போகும் பணிக்கு  உதவாது என்பதால் ரானா அய்யுப் கான்பூரில் இருந்து வந்த மைதிலி தியாகி என்ற ஒரு காய்ஸ்தா(இந்துபிராமண) பெண்ணாக மாறவேண்டியிருந்தது. மேலும் நான் அமெரிக்கத் திரைப்பபடகல்லூரி ஒன்றின் மாணவி என்றும், குஜராத்தின் வளர்ச்சி மாடல் குறித்தும். உலகம் முழுவதும் வசிக்கும் இந்தியர்கள் மத்தியில் வளர்ந்துவரும் நரேந்திரமோடியின் செல்வாக்கு குறித்தும் ஒரு திரைப்படம் தயாரிப்பதற்காக வந்திருப்பதாகவும் சொல்லி பலரைச் சந்தித்தேன்.  என் உடை, பாவனை மொழி எல்லாவற்றையும் மாற்றிக்கொள்ள வேண்டியிருந்தது. குர்த்தாபட்டனில் பொருத்திய ரகசிய கேமிரா  கையில் அதை இயக்கும் வாட்ச், டைரியின் அட்டையில் இன்னொரு கேமிரா  எனப் பல ரகசிய ஏற்பாடுகளுடன் செய்ய வேண்டியிருந்தது..நம்பகத்தனமை அதிகரிக்க நிஜமாகவே மைக் என்ற ஒரு பிரெஞ்ச் மாணவனை உதவியாளானாகச் சேர்த்துக்கொண்டு எல்லா இடங்களுக்கும் போனேன்
பல முன்னாள் போலீஸ்  சீனியர் அதிகாரிகளை, உளவுத்துறை அதிகாரிகளைக்கூடச் சந்தித்து  சந்தித்திருக்கிறீர்கள். அவர்களுக்குச் சந்தேகம் வரவில்லியா?
நான்முதல் சந்திப்பிலேயே எல்லாம் பேசுவதில்லை. என்மீது நம்பிக்கை வந்து அவர்கள் என் படத்திற்கு உதவ முன்வரும்போதுதான் தொடரும் சந்திப்புகளில் தேவையான கேள்விகளை எழுப்புவேன். சிலமுறை மயிரிழையில் தெய்வாதீனமாக மாட்டாமல் தப்பியிருக்கிறேன். சந்தேகமும் வந்திருக்கிறது. நான் தங்கியிருந்த அறை நான் இல்லாதபோது ஒரு சோதனையிடப்பட்டிருந்தது.. ஆனால்  பாதுகாப்புடன் என் லேப்டாப்பிலிருந்து எல்லாவற்றிலும் நான் ஒரு   இந்து, அமெரிக்க பல்கலைக்கழக மாணவியின் அடையாளங்கள் மட்டுமே அறையிலிருக்கும்படி பார்த்துக்கொண்டிருந்தேன்

 இப்படி துணிச்சலான வேலைகளைசெய்தது உங்கள் குடும்பத்துக்கு தெரியுமா?
நன்றாக. முந்திய மணிப்பூர் பணியினால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த என்னிடம்  என் அம்மா தான் செர்ராபுதின்  கொலைச் செய்தியைக் காண்பித்து இதைப்பற்றி எழுதேன் என்று சொன்னார். நான் இந்தப் பணியிலிருந்தபோது மனம் தளரும்போதெல்லாம் அம்மாவிடம் போனில்பேசுவேன். அண்ணன். அப்பா எல்லோருக்கும் தெரியும்.
 இந்த ஆப்ரேஷனில் மோடியைச் சந்தித்திருக்கிறீர்களா?
ஆம் ஒரு முறை.  அவர் முதல்வராக இருந்தபோது கேமிரா, மைக் சகிதம் அவர் இல்லத்தில் சந்தித்திருக்கிறேன்..மெட்டல் டிடக்கரில் மாட்டிக்கொண்டால் அடுத்த நிமிடம் கைது என்ற பயத்துடன் தான் சென்றேன். ஒபாமா பற்றி நிறையப் பேசினார்.  மேஜையில் அவர் புத்தகங்கள்
என படத்துக்கு உதவ  அவர் பயணப் படங்கள் ஆடியோ டேப்கள் கொடுக்க அவர் உதவியாளர்களிடம் சொன்னார். கலவரம், படுகொலைகள் பற்றி அடுத்தடுத்த சந்திப்பில் பேச திட்டமிட்டிருந்தேன். அதற்குள் வேறு பல மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன.
உங்கள் புத்தகத்தில் சம்பந்தப்பட்டவர்களின் பெயர்கள்,  வகித்தபதவிகள் விபரங்களுடன் உரையாடல்களை வெளியிட்டிருக்கிறீர்கள். புத்தகம் வெளிவந்து  பார்த்தபின் யாராவது பேசினார்களா?
இதுவரை இல்லை, இனி நிகழலாம். உண்மைதகவல்தானே எனக் கண்டுகொள்ளாமலும் இருக்கலாம். ஆனால் இதுவரை இதில் பேசயிருப்பவர்கள் எவரும் சொன்னதை மறுக்கவில்லை.


 இந்தஆப்ரேஷனின் திருப்புமுனை என எதைச் சொல்வீர்கள்?
  பாதுகாப்பற்ற நீண்ட பயணத்தின் முடிவில்-  அனைத்தும் வெளிப்படும் நிலையில், முதல்வர் மோடி மீண்டும் அழைப்பார் என்ற நிலையில், என் டெல்லி அலுவலகம் என்னைத் திரும்ப அழைத்தது.  தலைமை ஆசிரியர்கள் “ மோடி பிரதமராகப் போகிறார். மிக வலுவான பிரதமராக இருப்பார்.  அவர் மீது கைவைத்தால் நாம் அனைவரும் தீர்த்துக் கட்டப்பட்டுவிடுவோம். பங்காரு லஷ்மணன் விஷயத்தில் நம் அலுவலகத்தை மூட வைத்தவர்கள் அவர்கள்.”  அதனால்  புலனாய்வை பிரசுரிக்க வேண்டாம் என முடிவெடுத்திருக்கிறோம் என்றனர்..
அதிகாரத்திலிருப்பவர்கள்  பேச்சைக்கேட்டு என் கடின உழைப்பில் பிறந்த  உண்மைக் கதை வெளிவராமலே கொல்லப்படும்போது என்னால் தாங்கிக் கொள்ள முடியவே இல்லை.
ஒரு நல்ல  புலனாய்வு இதழியலாளர் தான் உருவாக்கிடும் கதைகளிலிருந்து தன்னைக் கத்தரித்துக் கொண்டு நடைமுறையில் இயல்பாக இருக்கவேண்டும் என ஆசிரியர் சொன்னார். என்னால் அப்படியிருக்க முடியவில்லை.
இன்று அமித்ஷா. மோடி போன்றவர்கள் அதிகாரத்தில் இருக்கும் சமயத்தில் இந்தப் புத்தகத்தை வெளியிட்டிருக்கிறீர்கள். . உங்களுக்கு  அச்சமாக இல்லையா?
உண்மைச்சொன்னதற்காக சில சமயம் பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும். இன்று தேசத்துரோகம் என  எதையும் சொல்லிவிடலாம் என்ற நிலை எழுந்திருக்கிறது. . அந்த சட்டத்தின் கீழ் நான் கைது செய்யப்பட்ட செய்தி வந்தால் ஆச்சரியப்படாதீர்கள்.
                                             
4/09/16 கல்கியில் எழுதியது 

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்