15/2/14

கங்கைக் கரை ரகசியங்கள் ....6



இந்த கங்கைக்கரை  இந்துகளுக்கு மட்டும் புனிதமானதல்லசமணர்கள், சீக்கியர்கள், பெளத்தர்கள் மூஸ்லிம்கள் ஆகிய அனைவருக்கும் மிக முக்கியமான தலம். மஹாபாரத காலம் முதல் இன்றுவரை போற்றபடும் இந்த கங்கைக்கரையின் மஹோன்னதம் பற்றி பலர் எழுதியிருக்கிறார்கள்பெர்ஷியாவிலிருந்து கஜினி படையெடுத்து வந்து இந்த நகரத்தை அழித்தபோது அவருடன் வந்த அமைச்சர்களில் ஒருவரான அல்-பைரனி என்பவர்அனைத்து மதத்தினரையும் ஈர்க்கும் இந்த நகரிலேயே தங்கி விட்டார். காரணம்  இந்த சக்தி வாய்ந்த நகரில் ஒரு மசூதி எழுப்பி மூஸ்லீம் இனத்தவர் வழிபட வழிசெய்ய விரும்பினார். இதை  1019ம் ஆண்டு தனதுகுறிப்பில் எழுதியிருக்கிறார்இப்படி காலங்காலமாக எந்த மதத்தவரையும்  தன்னை நோக்கி பயணிக்க செய்த கங்கைக்கரைதான்  சித்தார்த்தன்  புத்தராகும் முன் வந்த தங்கிய  முதல் இடம்மன்னன் சித்தார்த்தன்  துயரங்களைப் பார்த்து கலங்கி ஞானம்  அடையும் வழியை தேடினாரோஅல்லது சமீபத்திய ஆய்வுகள் சொல்லுவது போல அவருடைய நாட்டில் எழுந்த  நதி நீர்பிரச்ச்னையை  தீர்க்க எழவிருந்த போரை விரும்பாமல் துறவறம் பூண புறபட்டாரோ - வந்த இடம்  இந்த கங்கையின் கரைநேப்பாளத்திலிருந்து இங்கு வரை நடந்திருக்கிறார்உடன் வந்தவர் அவரது பணியாளர் சன்னாகடலென விரிந்திருக்கும் கங்கையின் கரையில் வழிபாட்டுக்கு பின்  அமர்ந்து தன் உதவியாளரிடம் இந்த கங்கையில் குளிப்பதால் முக்தி கிடைக்கும் என நினைக்கிறாயா? என கேட்கிறார். சில நொடிகளுக்கு பின் அவரே  அது உண்மையானால் இந்த நதியிலிருக்கும் மீன்களும் இறால்களும், சிப்பிகளும்  முக்தி அடைந்து அந்த இனம் இல்லாமலே போயிருக்குமே என சொல்லிக்கொண்டு எழுந்துஞானத்தை தேடி அலைந்த அந்த இளைஞன்  உடலை வருத்தி கடும் தவம் செய்யும் வழியை நாடி  நடக்க ஆரம்பிக்கிறார்மான்கள்  துள்ளி ஓடும் ஒரு அடர்ந்த காட்டுப்பகுதியை தேர்ந்தெடுத்து அங்கு தன் தவத்தை துவக்குகிறார். அது தான்  இன்று சாரநாத்அழைக்கப்படும் ரிஷிபட்டினம்பல ஆண்டுகள் பலரிஷிகள் கடும் தவமிருந்து தங்கள் உடலை துறந்து முக்கி அடைந்த இடம் அது.   காசி நகரிலிருந்து  10 கீ மீ தூரத்திலிருக்கும்  சாரநாத்திற்கு  இப்போது வந்திருக்கிறோம்இந்தியாவிற்கும் புத்தமதத்திற்கும்  இருக்கும் தொடர்புகளை உலகுச்சொல்ல உதவிய இடம் இதுதான்.



 பரந்த ஒரு பசும் புல்வெளிகளின் நடுவே  , அகழ்வாய்வு ஆராய்ச்சியின் அடையாளங்களான கண்டுபிடிக்கப்பட்ட இடிபாடுகள், சிறிய ஸ்தூபிகளின் அடிப்பகுதிகள்,பெரியபிராகாரங்களின் அடையாளங்கள்  என நிறைந்திருக்கும் பகுதியின் நீண்ட பாதையை கடந்து வந்த பின் நாம் பார்ப்பது சாரநாத் ஸ்தூபி. இபோது இந்த ஸ்தூபி தூண் வடிவில் இல்லை. வட்டவடிவில் . ஒரு உடைந்த செங்கல் கட்டித்தின் வட்ட அடிப்பகுதியைபோல  50 அடி உயர்ந்திருக்கிறதுகற்களாலான அடிப்பகுதியில் சில சிற்பங்களும் புத்தர் உருவங்களும் இருக்கிறது
கிமு 600 லியே சாரநாத் சமணர்களுக்கு  ஞானம் அருளுமிடமாகயிருந்திருக்கிறது. சமண தீர்த்தங்கர்களில் மூவர் வாழ்ந்து உயிர் துறந்த இடம் இது. இதற்கு 300 ஆண்டுகளுக்கு பின்னர் தான் சித்தார்த்தன் இந்த இடத்திற்குதான் காசியிலிருந்து  கடும் தவம் செய்து ஞானம் அடையும் வழியை தேடி வந்திருக்கிறார்பின்னர் சமணர்களுடன் சேர்ந்து உடலை வருத்தி கடும்தவம் செய்வதினால் உடல் மட்டுமேநலிந்துபோகிறது ஞானம் எதுவும் அடைய முடியாது என்பதை உணர்ந்து தனியாக தவம் செய்ய  கயாவிற்கு பயணம் செய்துபோதியின் அடியில் தவம் செய்து ஞானம் பெற்று புத்தராகி இதே சாரநாத்துக்கு திரும்பி தன்னுடன் தவத்திலிருந்த  5 சமணர்களுக்கு தான் உணர்ந்ததை போதித்து மனம் மாற்றுகிறார். இந்த மனமாற்றத்தில் பிறந்ததுதான் பெளத்தம். அதனால் இந்த இடம் தான் புத்தமார்க்கத்தின் பிறப்பிடமாக அறியப்படுகிறது.
பின் நாளில்  புத்தர் தன் முதல் 5 சீடர்களை பெற்ற இடம், தான் பெற்ற ஞானத்தை மக்களுக்கு எடுத்து சொல்லி முதல் உறையாற்றிய இடம் என்பதை கெளரவிக்க  மன்னர் அசோகர் எழுப்பிய சின்னம் இது. இந்த இடம் புத்த மத்த்தினருக்கும் மிகமுக்கியமான புனிதஸ்தலம், வாழ்நாளில் ஒருமுறையாவது வர விரும்பும் இடம். அணி அணியாக ஜப்பானியர், சீனர், ஸ்ரீலங்கர் வந்து அமைதியாக வளாகத்தில் ஏதாவது ஒரு இடத்தில் அமர்ந்து பிரார்த்திக்கிறார்கள், சிறிது மண் எடுத்து பத்திரப்படுத்திகொள்கிறார்கள். புத்தர் வாழ்ந்த காலத்தில் இது அவர்கள் மார்க்கத்தின் தலமைப்பீடமாகவும், சீடர்களுக்கு போதிக்கும் கல்விக்கூடமாகவும் இருந்திருக்கிறதுஆனால் சுல்தான்களில் படையெடுப்பால் கால் வெள்ளத்தில் கரைந்து காணமல்போன புத்தமதத்தினால் இந்த இடமும் மறக்க பட்டு சாரநாத்  மடிந்து கொண்டிருந்தது. இதை நமக்கு கண்டுபிடித்து புத்தரின் சரித்திரத்தை அறிய உதவியவர் ஒர் ஆங்கிலேலே அதிகாரிஅலக்ஸாண்டர் கன்னிங்ஹாம் என்ற அந்த ஆய்வாளருக்கு  நாம் என்றென்றும் நன்றி சொல்ல கடமைபட்டிருக்கிறோம். இந்த மனிதனின் முயற்சியில்லை என்றால் இன்று சாரநாத் இருக்கிறத்தில் தொழிற்சாலைகளோ அடுக்குமாடி கட்டிடங்களோ எழுந்திருக்கும். இவர் இந்த ஸ்தூபியை பற்றி அறிந்தது ஒரு எதிர்பாராத ஆச்சரியம். 1794ல் காசியில் மன்னர் ஆட்சி இருந்தாலும் மற்ற பல ஸமஸ்தான்ங்களைப்போல ஆங்கிலேயரின் ஆதிக்கமும் நுழைந்துகொண்டிருந்த காலம் அது.   காசி நகரில் ஏதேனும் கட்டிடம் கட்டவேண்டுமானால் இந்த இடிபாடுகளுக்கிடயே இருக்கும் தரமான செங்கற்களை எடுத்து செல்வார்கள்காசி அரசவை அமைச்சர் தன் வீட்டு கட்டிடத்திற்காக  இந்த இடிபாடுகளின் மேல்பகுதியை உடைத்து தரமான நன்கு சூடப்பட்ட முழு செங்கற்களை எடுத்துவரச்சொன்னர். அதை செய்து கொண்டிருந்தவர்கள் கண்டது ஒரு பெட்டியையும் அதனுள் ஒரு மரகத புத்தர் சிலை மற்றும் சில ஆபரணங்களையும்அதிர்ந்து போன அமைச்சர். மன்னரிடம் சொல்ல அவர் ஆங்கிலேயர்களிடம் கூற உடனே யாரும் இடிக்கூடாது என்ற ஆணையுடன் ஆராய்ச்சி துவங்குகிறது. போதிய பணம் ஒதுக்காத பிரிட்டிஷ் அரசுடன் போராடி இங்கிலாந்திலிருந்து நிபுணர்களை வரவழைத்து அகழ்வாரய்ச்சியை தொடர்ந்து நமது சரித்திரத்தை மீட்டெடுத்து கொடுத்திருக்கிறார் இந்த ஆங்கிலேயர்.
இந்த சரித்திர சான்றுகள்  கிடைத்த இடத்திலியே ஒரு அருங்காட்சியகம் நிறுவியிருக்கிறார்கள். இம்மாதிரி சான்றுகள் இருக்குமிடத்திலியே காட்சியகம் இருப்பது சில இடங்களில் மட்டுமே. மிக அழகாக நிர்வகிக்கபடும் இந்த காட்சியகத்தில்தான்  முதல்முதலாக கண்டெடுக்கபட்ட புத்தரின் சிலை இருக்கிறது. அதுவரை  அனைவரும் பார்த்த  புத்தர் உருவம்  ஓவியர்களின்  கற்பனையில் பிறந்தவை அசோகர் நிறுவிய இந்த ஸ்தூபியின் முன்னால் நின்று கொண்டிருந்த  வெற்றித்தூண் இன்று 6 பகுதிகளாக உடைந்த நிலையில் இருக்கிறது. அதன் தலையில் இருந்த நான்கு சிங்களும் சக்கரமும் உள்ள சிலைதான் நம் தேசிய சின்னமாக அறிவிக்கபட்டிருக்கிறதுநான்கு திக்குகளுக்கும் புதிய மார்க்கத்தை பரப்ப புத்தர் இந்த இடத்திலிருந்துதான்  சீடர்களை  அனுப்பினார் என்பதை உணர்த்த  எழுந்த சின்னம் இது  அருங்காட்சியகத்தின் உள்ளே நுழைந்த உடனே நம்மை அசத்தி  நிற்க வைப்பது
தலைப்பைச் சேருங்கள்
இந்த கம்பீரமான சின்னம்தான்
, ராஜஸ்தான் பகுதியில் காணப்படும் ஸாண்ட் ஸ்டோன் என்ற வகை சலவைக்கல்லில் பழுப்பு நிறத்தில் தொட்டு பார்க்க அழைக்கும் வழவழப்புடன் பளீசென்றிருக்கிறது. கவிழ்த்த தமாரை மலர் பீடத்தில் மான், சக்கரம், யானை சிற்பங்களுடன் இருக்கிறது. சக்கரத்தில் காணப்படும்  36 ஆரக்கால்கள் , நமது தேசிய சின்னத்தில் 24 தானே? என்ற கேள்வியை எழுப்பிற்று. அந்த சிலையின் வடிவமைப்பும் கம்பீரமும் இது தேசிய சின்னமானது சரிதான் என்ற எண்ணவைக்கிறதுநல்ல வேளை இது ஒரு மதம் சார்ந்தது, அஹிம்சையை போதித்த தேசத்திற்கு ஏன் சிங்கங்கள்? என யாரும் அப்போது போராடவில்லைகாட்சியகத்திற்குள் இருக்கும் புத்தர் சிலைகள் அற்புதமானவை. மெல்லிய ஆடை, விரல்நகங்கள் கூட நுட்பமாக வடிக்கபட்டிருக்கின்றன.
அருகில் புத்தருக்கு  ஒரு கோவில். உள்ளே தங்கத்திலான புத்தர். வளாகம் முழுவதும் ஜப்பனிய, சீன  பாலி மொழிகளில் வாசகங்கள் பெரிய பெரிய கல்வெட்டுகளாக படிக்க வசதியாக சாய்வாக நிறுத்தபட்டிருக்கிறது. நாம் பார்க்க மட்டுமே செய்கிறோம். கம்பீரமான ஒரு மணி. புத்த பூர்ணிமா அன்று மட்டும் தான் ஒலிப்பார்களாம்முதல் 5 சீடர்களுக்கு உபதேசம் செய்த காட்சி சிலையாக்கப்பட்டிருக்கிறது.
அதில்  முற்றும் துறந்த புத்தருக்கும் அவர் சீடர்களுக்கும் பளபளக்கும் பட்டாடை. கோவிலின் பின்னே ஒரு ஆலமரம். புத்தகயாவிலிருந்து கொண்டுவந்த கிளை மரமாக வளர்க்கபட்டிருக்கிறது. தொட அனுமதியில்லை.
உருவ வழிபாடு அவசியமில்லை என்று சொன்னவர் புத்தர். அவரையே கடவுளாக்கி வழிபடும் முறை  எப்படி தோன்றியிருக்கும்? என சிந்தித்துக் கொண்டே காசி நகர் திரும்புகிறோம். மாலையில் பனாராஸ் புடவைகள் வாங்குவதைப்பற்றி  பஸ்சில் பலர் பேசிகொண்டிருக்கிறார்கள். நாம் காசியில் வேறு என்ன பார்க்கலாம் என யோசித்து கொண்டிருக்கிறோம்
-----------------------------------------------------------------------------------------------------------------------------


புத்தர் தன் மனைவி மற்றும்  குழந்தையை விட்டுவிட்டு யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் இரவோடு இரவாக  அரண்மனையை விட்டு வெளியேறினார்.   ஒரு கணவனாக, மன்னனாக தனது பொறுப்புகளை சரிவர செய்யாமல் இப்படி செய்தது சரியா?
  புத்தரின் அந்த செய்கையை ஒரு சதாரண மனிதனின் செயலாக நீங்கள் பார்க்கீறீர்கள். அதனால் இப்படி கேட்கிறீர்கள். சித்தார்த்னாக அவதரிக்கும் முன்னரே கருவிலிருக்கும்போதே  பிறக்கும் குழந்தை துறவியாவான் என்பது அவருடைய தாய்க்கு ஒரு கனவின் மூலம் தெரிந்தது. குழந்தை பிறந்த 7 நாளில் தாய் இறந்துபோனதால் இது பலருக்கு தெரியாதுஅவர் புத்தர் ஆகும் முன்னரே மிகசிறிய வயதிலேயே  உயர்ந்த சிந்தனைகளும்  பல நடைமுறைகளை தவறு என்று சொல்லும் துணிவுடனும் இருந்தார்அந்த காலகட்டத்தில்  சரி என்று நம்பப்பட்ட விஷயங்களை மறுத்தவர் அவர். உதராணமாக மனிதஉயிர்களை கொல்லுவது  தவறு என்று சொன்னார். இப்படிபட்டவன் எப்படி அரசனாக கடமை ஆற்றி போர் செய்ய முடியும்?. ஒரு வேடனின் அம்பினால் தாக்கப்பட்ட பறவை இவர் காலடியில் விழுந்த போது அதை காப்பற்றினார்வேட்டையாடியது வேடனுக்கு சொந்தம் என்பதை மறுத்து காப்பாற்றியவனுக்குதான் சொந்தம் என விதியை மாற்றினார்இப்படி பட்ட ஒரு மனிதன் எப்படி எல்லோருரையும் போல சாதாரண மனிதாக இருக்கமுடியும்.? பெரிய சக்தியாக உருவாகப்போகும்  மேன்மையான மனிதர்கள் இப்படி குடும்பத்தை பிரிந்ததை நீங்கள் பல மஹானின்  வாழ்க்கையில் பார்த்திருப்பீர்களே? புத்தன் செய்தது சரியா என்று யோசிப்பதை விட  இப்படி யோசியுங்களேன்.  2000 வருடங்களுக்கு பின்னரும் அவர் செய்த விஷயங்களைப் பற்றி அவர் உருவாக்கிய கோட்பாடுகள் எல்லாம் பற்றி  நாம் பேசுவது அவர் புத்தர் ஆனதினால் தானே?. எல்லா மன்னர்களையும் போல அவரும் நாடு, மனைவி, குழந்தைகளுடன் வாழ்ந்திருந்தால் இன்று நாம் அந்த சித்தார்த்தனைப் பற்றி பேசுவோமா?.



14/2/14

மன்மோகன் சிங்

New post on ஆழம்

மன்மோகன் சிங் பாவங்களும் சிலுவைகளும்

by ரமணன்
பிரதமர் கனவு இல்லாத ஓர் அரசியல்வாதியைச் சுட்டிக்காட்டச் சொன்னால் நாம் திணறவேண்டியிருக்கும். பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் தொடங்கி சிறையில் இருக்கும் அந்தப் பழம்பெரும் அரசியல்வாதி வரை அனைவரும் பிரதமர் பதவியையே குறிவைத்து கனவு கண்டு வருகிறார்கள். ஒரே விதிவிலக்கு அந்தப் பதவியில் ஏற்கெனவே அமர்ந்திருக்கும் மன்மோகன் சிங். சமீபத்திய ஐந்து மாநிலத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியுற்றதால் கலைந்துவிட்ட கனவல்ல இது. மாறாக, தொடக்கம் முதலே மன்மோகன் சிங் பதவியாசை இல்லாதவராகவே இருந்திருக்கிறார். இருந்தும் அவருடைய விருப்பத்துக்கு மாறாக சூழ்நிலைகள் அவரை இந்த  அளவுக்கு உயர்த்தியிருக்கின்றன. மீண்டும்,  அவர் விருப்பத்துக்கு மாறாக அதே சூழ்நிலைகள் அவரை இப்போது படுகுழியிலும் தள்ளியிருக்கின்றன. இதற்கு ஒருவகையில் அவரும்கூட காரணம். இந்திய அரசியல் களம் இதுவரை கண்டிராத ஒரு சிக்கலான, விநோதமான கதை அவருடையது.
1991ல் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது, காங்கிரஸ் கட்சி நரசிம்ம ராவை நாடாளுமன்ற உறுப்பினர்களின் தலைவராகத் தேர்ந்தெடுத்தது. அப்போது மன்மோகன் சிங் அரசியல் களத்திலேயே இல்லை. இருந்தும் அவரைச் சென்று சந்தித்து, பிரதமர் உங்களை நிதியமைச்சராக நியமிக்க விரும்புகிறார், தயாராக இருங்கள் என்று காபினட் செயலர் சொல்லியிருக்கிறார். மன்மோகன் சிங் இதை நம்பவில்லை. மறுநாள்  நரசிம்ம ராவ் நேரடியாக மன்மோகனைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். நேற்று ஏன் என்னைச் சந்திக்க நீங்கள் வரவில்லை? மதியம் அசோகா ஹாலுக்கு வந்துவிடுங்கள். பதவியேற்புக்குத் தயாராகிவிடுங்கள். அப்போதும் மன்மோகன் சிங்குக்குப் புரியவில்லை. எதற்காக இந்தத் திடீர் அழைப்பு? எதற்காகப் பதவி நியமனம்? இந்தக் கேள்விகளுக்கு விடை தெரியாமலேயே நிதித்துறை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்யப்படுகிறார் மன்மோகன் சிங்.
தான் அரசியல்வாதியான கதையை 2005ல் பிபிசிக்கு விவரித்தபோது அவர் இதனைப் பகிர்ந்துகொண்டார். ஓர் அரசியல்வாதியாக இல்லாமல் இருந்தும் நேரடியாக நிதியமைச்சராக மன்மோகன் சிங் நியமிக்கப்பட்டதற்கு ஒரேயொரு காரணம்தான் இருக்கமுடியும். அவருடைய கூர்மையான அறிவுத் திறன்.
மிக எளிமையான குடும்பப் பின்னணி அவருடையது. பள்ளியிலிருந்தே எல்லா வகுப்பிலும் முதல் மாணவர். அதனால் கிடைத்த ஸ்காலர்ஷிப்புகள் வாயிலாக கல்லூரியில் இணைந்தார். பிஏ பல்கலைக்கழக முதல் மாணவனாக தங்கப் பதக்கம் வாங்கியதால் எம்ஏ படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அங்கும் ஒரு தங்கப் பதக்கம் வாங்கியதால் லண்டன் கேம்பிரிட்ஜில் முழு ஸ்காலர்ஷிப்புடன் இடம் கிடைத்தது. அதிலும் நல்ல மதிப்பெண் பெற்று இந்தியா திரும்பினார். தனது மாநிலமான பஞ்சாபில் ஒரு கல்லூரியில் இணைந்தார். இதுதான் அவருடைய கனவு.
மூன்றாண்டு பேராசிரியர் பணிக்குப் பின்னர், மேற்கொண்டு படிக்கும் உந்துதலில் மன்மோகன் 1960ல் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் ஆய்வு படிப்பில் இணைந்தார். அதையும் வெற்றிகரமாக முடித்து இந்தியா திரும்பி டெல்லியில் தன் ஆசிரியர் பணியைத் தொடர்ந்தார். லண்டனிலுள்ள  கேம்பிரிட்ஜ் பேராசிரியரின் சிபாரிசால் ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அங்கமான யுஎன்டிஏசிடியில் ஆய்வுப் பணி மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் பணியைத் திறம்படச் செய்துவந்த சமயத்தில் எல்.என். மிஸ்ரா என்ற மத்திய அமைச்சரை அவர் அடிக்கடி சந்தித்து வந்தார். மன்மோகனின் திறமையைக் கூர்ந்து கவனித்த அவர் தன் அமைச்சரவைக்கு ஆலோசகராக வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்தார்.
அப்பொதெல்லாம் அரசாங்க ஆலோசகர் என்பது இன்றுபோல செயலாளருக்கு நிகரான பொறுப்பல்ல. ஆனாலும் ஆய்வுகளுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதால் மன்மோகன் இந்த அழைப்பை ஏற்றார்.  அரசியல்வாதியாக இல்லாமலேயே பின்னாளில் அமைச்சரானதைப்போல ஐஏஎஸ் அதிகாரியாக இல்லாமலேயே அதிகாரிகள் வர்க்கத்தில் அவர் அன்று நுழைந்தார். தொடர்ந்து பல அமைச்சகங்களுக்கு ஆலோசகராகப் பணியாற்றி பலருடைய கவனத்தை ஈர்த்தார்.
ஒரு கட்டத்தில் நாட்டின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக அவருக்கு உயர்வு கிடைக்கிறது. 1976ல் ரிசர்வ் வங்கியின் கவர்னராக நியமிக்கப்படுகிறார். இது அவருடைய வாழ்வில் ஏற்பட்ட மிகப் பெரிய திருப்பம். நாட்டின் பொருளாதார நிலைமை சீராகவில்லை, அதை சரிசெய்ய மிகத் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று துணிச்சலுடன் அரசுக்குச் சொன்ன முதல் ரிசர்வ் வங்கி கவர்னர் இவரே. அதனாலேயே அந்த வழிமுறைகளை அரசுக்கு அதிகாரபூர்வமாகச் சொல்ல திட்ட கமிஷனின் உதவித் தலைவராக அவர் நியமிக்கப்பட்டார். இந்தப் பதவி நிதியமைச்சர், பிரதமர் ஆகியோரிடம் நெருக்கத்தை வளர்க்க உதவியது.
அதே சமயம், இந்தியா கிட்டத்தட்ட திவாலாகிக்கொண்டிருக்கிறது என்று அறிவிக்கவேண்டிய கட்டாயத்தில் இருந்தார் மன்மோகன் சிங். பொறுப்புக்கு வந்தவுடனேயே மிக மோசமான ஒரு செய்தியை அறிவிக்கவேண்டிய நிர்பந்தம். மிகப் பெரிய அடிப்படை மாற்றங்களைக் கொள்கையளவில் கொண்டுவந்தாலொழிய மீள்வது சிரமம் என்பதே மன்மோகன் சிங்கின் ஆலோசனையாக இருந்தது. அதை அவர் தயங்காமல் நரசிம்ம ராவிடம் பகிர்ந்துகொண்டார். நரசிம்ம ராவும் தயாராகவே இருந்தார். தேவைப்பட்ட மாற்றங்களைச் செய்வதற்கும் நடைமுறைப்படுத்துவதற்குமான உரிமை மன்மோகனுக்கு வழங்கப்பட்டது.
சுதந்தர இந்தியா சந்தித்த மிகப்பெரிய பொருளாதாரப் புரட்சியை மன்மோகன் சிங் தொடங்கி வைத்தார். உலகமே பார்த்து வியந்த ஒரு விஷயம் இது.  வெளி நாடுகளிலிருந்து, பன்னாட்டு நிதி ஆணையங்களில் இருந்து கடன் பெறமுடியாத பரிதாபகரமான நிலையில் இருந்த இந்தியா ஐந்தே ஆண்டுகளில் முதலீட்டுக்கான ஒரு நல்ல களமாக மாறிப்போனது. காரணம், மன்மோகன் சிங்.
பொருளாதாரம் மளமளவென்று வளரத் தொடங்கியது. இந்தியாவைப் புறக்கணித்துவிட்டு உலக வர்த்தகத்தில் ஈடுபடமுடியாது என்னும் நிலைக்குப் பன்னாட்டு நிறுவனங்கள் தள்ளப்பட்டன. இந்தியாவைப் பொருட்படுத்தியே தீரவேண்டிய அவசியத்துக்கு வல்லரசுகள் வந்து சேர்ந்த காரணம், மன்மோகன் சிங்.
ஆனால் இதை அடைய உள்நாட்டில் அவர் பல எதிர்ப்புகளைச் சந்திக்கவேண்டியிருந்தது. பல்வேறு சந்தேகங்களை அவர் கடக்கவேண்டியிருந்தது. பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்குப் பிறகும் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் மீண்டும் அமர்ந்ததற்குக் காரணமாக இருந்தார் மன்மோகன் சிங். அன்று மீடியாவின் டார்லிங் அவர்தான்.
எந்த மீடியா அவரை உச்சத்தில் ஏற்றி வைத்து அழகு பார்த்ததோ அதே மீடியா இன்று அவரை எள்ளி நகையாடிக்கொண்டிருக்கிறது. அவரது முழுமுற்றான வீழ்ச்சியை எதிர்நோக்கி ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கிறது. எந்தப் பொருளாதாரப் புரட்சியை அமைதியாக அவர் அரங்கேற்றினாரோ அந்தப் புரட்சியின் நோக்கங்கள் இன்று கேள்விக்கு உள்ளாக்கப்படுகின்றன. மன்மோகனின் அமைதியான அணுகுமுறை அன்று பாராட்டப்பட்டது. இன்று  அவருடைய அமைதி கேலி செய்யப்படுகிறது. அதிகம் சாதிக்காத பிரதமர் என்று தலைப்பிட்டு கட்டுரை எழுதுகிறது வாஷிங்டன் போஸ்ட்.
ஏன் ஏற்பட்டது இந்த நிலைமை? ஆழ்ந்து நோக்கினால் மூன்று காரணங்கள் தெளிவாகப் புலப்படும்.
1) தேசமல்ல, கட்சியே பிரதானம்!
இதற்கு இன்னொரு பெயர் அதர்மம். காங்கிரஸ் தலைமையிலான தேசிய முற்போக்குக் கூட்டணி தன் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள எதையும் செய்யத் தயாராக இருந்தது. தேசத்தின் நலன் முக்கியமா அல்லது ஆட்சியில் நீடிப்பது முக்கியமா என்னும் கேள்வியை காங்கிரஸ் எழுப்பியதாகவே தெரியவில்லை. அதற்கான விடையை அது தெளிவாகவே அறிந்திருந்தது. கூட்டணி கட்சிகளின் பேரங்கள் அனைத்துக்கும் செவிகொடுத்தது. இதற்கெல்லாம் காரணம் கட்சியின் தலைவர் சோனியா காந்திதான் என்று ஒருவர் சொல்லிவிடலாம். ஆனால் அமைதியாக இருந்து அனைத்தையும் அனுமதித்த ஒரே காரணத்துக்காக மன்மேகன் சிங்கும் இதற்கு காரணமாகிறார் என்பதை மறுக்கமுடியாது.
இந்தியாவின் பிரதமராக அல்லாமல், கட்சியின் காவலராகவே மன்மோகன் சிங் கடந்த இரு ஆட்சிக்காலத்திலும் செயல்பட்டிருக்கிறார். தேசத்தின் குரலைவிட தன் கட்சித் தலைவரின் குரல் அவருக்கு முக்கியமாகப் பட்டிருக்கிறது. தேசத்தின் தேவைகளைவிட கட்சியின் தேவைகள் முக்கியமாகிவிட்டன. அந்த வகையில் மக்களின் எதிர்பார்ப்புகளை அவர் நிறைவேற்றத் தவறிவிட்டார். அடுத்தடுத்து ஊழல் குற்றச்சாட்டுகள் பெருகிவந்த நிலையிலும்கூட மன்மோகன் சிங் கட்சியைக் காக்கும் நடவடிக்கையில்தான் ஈடுபட்டார். தேசத்தைக் காப்பாற்றும் நடவடிக்கைகளில் அல்ல.
2)நாற்காலியை விடமாட்டேன்!
அவரை மிகக் கடுமையாக விமரிசிப்பவர்களும்கூட மன்மோகன் சிங்கை ஊழல் கறை படியாதவர் என்று ஒப்புக்கொள்ளவே செய்கிறார்கள். நிலம், பூமி, காற்று என்று தொடங்கி பஞ்ச பூதங்களிலும் காங்கிரஸ் ஊழல்கள் பல செய்தபோதும் தனிப்பட்ட முறையில் குற்றமற்றவராகவே மன்மோகன் சிங் பலரால் பார்க்கப்படுகிறார். இது ஆச்சரியம்தான். அதே சமயம், கட்சியின் தவறுகளுக்குத் தார்மிக அளவிலாவது பொறுப்பேற்று அவர் ஏன் ராஜிநாமா செய்யவில்லை என்னும் கேள்வியை எழுப்பாதவர்களே இல்லை.
ஏன் கட்சி மேலிடத்தை எதிர்த்து ஒருவார்த்தைகூட அவரால் பேசமுடியவில்லை? தன்னளவில் சுத்தமாக இருந்தும் களங்கப்பட்டுப்போன தன் கட்சியை ஏன் அவரால் எதிர்க்கமுடியவில்லை? அவர் ஒரு பலிகடாவாக மாற்றப்பட்டுவிட்டாரா? அல்லது தானாகவே முன்வந்து இந்தப் பதவியையும் அவர் ஏற்றுக்கொண்டுவிட்டாரா?
இரண்டாவதுதான் சரி என்று தோன்றுகிறது. காங்கிரஸும் குறிப்பாக சோனியா காந்தியும் தனக்கு அளித்த மரியாதைகளையும் அங்கீகாரங்களையும் அவர் இன்னமும் மறக்கவில்லை என்றே தெரிகிறது. காங்கிரஸுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் என்னும் உணர்வை அவரால் உதறித் தள்ளமுடியவில்லை. தனக்குக் கெட்ட பெயர் வந்தாலும் பரவாயில்லை, கட்சியை மீட்டெடுக்கவேண்டும் என்று அவர் நினைத்திருக்கிறார். இன்றும் நினைத்துக்கொண்டிருக்கிறார் போலும்.
3)தலைமைத்துவம்
அறிவாற்றல்மிக்க பொருளாதார நிபுணர்தான் என்றபோதும் தேசத்தைத் தலைமை தாங்கி நடத்திச் செல்லும் தனிச்சிறப்பான இயல்புகள் மன்மோகன் சிங்கிடம் இல்லை என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. கட்சியின் தவறுகளை அவரால் தடுத்து நிறுத்தமுடியவில்லை. தவறிழைத்த அமைச்சர்களைக் கேள்வி கேட்க இயலவில்லை. தறிகெட்டு ஓடும் நிர்வாகத்தைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. அமைச்சரவை கூடி எடுத்த முடிவொன்றை கட்சியின் எந்தப் பொறுப்பிலும் இல்லாத ஒருவர் கிழித்தெறிந்து பேசியபோதும்கூட மன்மோகன் சிங் அமைதியே காத்திருக்கிறார். இதை அவருடைய மாண்பாகவும் நல்லியல்பாகவும் எடுத்துக்கொள்ளலாம் என்றபோதும், ஒரு தலைவராக அவருடைய தோல்வி பளிச்சென்று புலப்படுவதை அவராலும் தடுக்கமுடியவில்லை.
1999ல் முதல்முறையாக நாடாளுமன்றத் தேர்தலில் நின்று போட்டியிட்டு தோற்றார் மன்மோகன் சிங். அப்போது தேர்தல் செலவுக்காக குஷ்வந்த் சிங்கிடம் அவர் கடன் வாங்கியிருக்கிறார். அதை மறுநாளே தன்னிடம் கொண்டு வந்து கொடுத்த மன்மோகன் சிங்கை ஆச்சரியமான மனிதன் என்று அழைக்கிறார் மன்மோகன் சிங். இத்தகைய பல அபூர்வமான விஷயங்களைப் பலர் அவரிடம் கண்டடைந்து ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள்.
அரசியல் களத்தில் மன்மோகன் சிங் அபூர்வமானவர் என்பதில் மாற்று கருத்தில்லை. இருந்தும் அவர் இன்று வருத்தப்பட்டு சுமக்கும் பாரங்கள் தனிப்பட்ட முறையில் அவரை அழுத்திக்கொண்டிருக்கின்றன, கீழே கீழே பிடித்து இழுத்துக்கொண்டிருக்கின்றன.
நடப்பு அரசியல்வாதிகளோ ஊடகமோ எதிர்க்கட்சிகளோ அல்ல, வரலாறு என்னை மதிப்பிடும் என்று சமீபத்தில் நடைபெற்ற ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் சொல்லியிருக்கிறார் மன்மோகன் சிங். உண்மைதான். கால ஓட்டத்தில் அவர்மீது ஒட்டிக்கொண்டிருக்கும் தூசுகள் உதிர்ந்துபோகக்கூடும். அவர் செய்தவை அல்லது செய்யத் தவறியவை மன்னிக்கப்படலாம். ஆனால் அவருடைய சாதனைகள், குறிப்பாகப் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் அவர் பெயரை உயர்த்திப் பிடிக்கும் என்றே தோன்றுகிறது. அப்போது அவர் புத்துயிர் பெறுவார்.
ரமணன் | February 13, 2014 at 2:50 pm | URL: http://wp.me/p2eZn6-Zr

10/2/14

உரையாடல்





ஈஷா வின்  இணைய தளத்திலிருந்து

சத்குரு அவர்களுடனான “புதிய தலைமுறை” இதழின் ஆசிரியர் திரு. மாலன் அவர்களின் சந்திப்பு “ஞானியின் பார்வையில்” என்ற தலைப்பில் நேற்று (பிப் 8) நடைபெற்றது. சென்னை கீழ்பாக்கம் ராஜாஜி வித்யாஷ்ரம் பள்ளி – பவன் ஆடிடோரியத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 1200 பேர் கலந்து கொண்டனர். அரசியலிலிருந்து, ஆன்மீகம், எதிர்கால இந்தியா போன்ற பல தலைப்புகளிலும் திரு. மாலன் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு சத்குரு அளித்த பதில்கள் மிகவும் சுவாரஸ்யமாக அமைந்தது.



(இந்த உரையாடலின்  பதிவுகளை …ஈஷா வின்/மாலனின்  face book லும் காணலாம்.ஓளிப்பதிவு செய்யபட்டிருக்கும் இது விரைவில் சின்னத்திரையில் வரும் )

“இன்றைய நிகழ்ச்சியில் உள்நிலையிலிருந்து உலகம் வரையில், காடுகள் தொடங்கி கடவுள் வரையில், தேகம் தொடங்கி தேசத்தின் விஸ்தாரம் வரையில், பல கேள்விகள் கேட்டார் திரு. மாலன். அத்தனை கேள்விகளுக்கும் தனது தீர்க்கமான பதில்களால் பார்வையாளர்களை நாற்காலியோடு கட்டிப்போட்டார் சத்குரு. நெஞ்சை அள்ளும் மற்றொரு அருமையான உரையாடல் நிகழ்ச்சியில் இணைவோம்.
நிகழ்ச்சியில் மிகுந்த சிறப்புடன் பங்குபெற்ற திரு. மாலன் அவர்களுக்கு உள்ளம் கனிந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்”.
 -மரபின் முத்தையா




கங்கை கரை ரகசியங்கள் ...5


புதிதாக பிறக்கும்ஒவ்வொரு நாள் காலையிலும் புத்துணர்ச்சியும் சக்தியும்  தரும் எம். எஸ் அவர்களின் கணீர் குரலில் ஒலிக்கும் சுப்ர பாதத்தில் வரும்  ”வாரணாஸீ குலபதே மம சுப்ரபாதம் “ என்ற  வார்த்தைகள் நினைவிருக்கிறதா?   இந்த வாரணாஸீ  என்பது தான் பிறை வடிவில் கங்கை
வளைந்து ஒடும் , இப்போது படித்துறைகளால் நிரம்பிக்கிடக்கும் கங்கையின் கரைப்பகுதி  ஏன்  இங்கு மட்டும் இவ்வளவு படித்துறைகள்?  என்ற நமது கேள்விக்கு  இதற்கு காசி நகரின் அமைப்பை புரிந்துகொள்ள வேண்டும் என்று பதில் சொல்லபட்டிருந்தது.
பல கோவில்களை உள்ளடக்கிய வட்டவடிவமாக ஒரு சக்தி இயந்திரமாக உருவாக்கபட்டிருப்பது காசி நகரம்.  மூன்று முக்கிய சிவன்கோவில்கள் ஒரு நேர்கோட்டிலும் சக்தி வளையமாக நிறுவபட்ட மற்ற கோவில்ககளை இணைக்கும் ஆரமாக சிறிய கல்பாவிய நடைபாதைகள். அமைக்க பட்டிருந்திருக்கிறது. ஒரு கால கட்டத்தில் இந்த வாளாகத்திலிருந்த 468 கோவில்களிலும் ஒரே நேரத்தில் சப்தரிஷி பூஜைகள் நடந்திருக்கின்றன. கங்கைநதி  காசிநகருக்கு வெளியே   ஒரு வட்டத்தின் பரிதியைப்போல சற்றே வளைந்து ஒடுகிறது   கங்கையில்  நீராடியபின் எளிதாக பக்தர்கள் விரும்பும் கோவில்களுக்கு நேரடியாக போய் வழிபடும் வகையில் இந்த படித்துறைகள். அமைக்கபட்டிருக்கின. இன்றும்  எந்த படித்துறையிலிருந்து நேராக நடந்தாலும் ஒரு கோவிலுக்கு போகும் பாதை வருகிறது.  இன்று சிறு சந்துகளாகிவிட்ட அந்த பாதைகள் தான் சக்தி வளையத்தின் ஆரங்கள்..   கோவில்களில் பூஜிப்பவர்களை தவிர மற்றவர்கள் வசிக்க அனுமதியில்லாத.  அந்தபுனிதமான பாதைகள் தான் காலசக்கர சுழற்சியில் பலரின் வாழ்விடமாகவும், அவர்களின் வாழ்வாதரத்திற்கான வியாபாரஸ்தல்மாகவும் நிறைந்து ”கல்லி” களாகியிருக்கின்றன.  இந்த செய்தியை அறிந்ததும் காசியின் குறுகிய சந்துகளின்  புனிதமான அகலமும்  அதை  நாசமாக்கிய நம்மவர்களின் குறுகிய மனமும் புரிந்தது.   


பயண குழுவிலிருந்த ஒரு நண்பர் தான் கங்கையில் குளிக்க ஒரு நல்ல இடத்தை கண்டுபிடித்திருப்பதாகவும் விரும்புகிறவர்களை அழைத்து போவதாகவும் சொன்னார்.   200 பேர் கொண்ட ஈஷாவின்  இந்த பயணத்தில் இரண்டாம் நாளே புதிய நட்பு வட்டங்கள் சிறு குழுக்களாக உருவாகியிருந்தது.வெளிநாட்டவர்கள்,பிறமாநிலத்தவர் என்று பலரை இந்த பயணம் இணைக்கிறது அதனால் எங்குபோனாலும் ஒரு சின்ன டீம்தான்.  காலை உணவு முடிந்ததும் கங்கைக்கு போகும் ஒரு குழுவுடன் போகிறோம். காசியில்  இயங்கும் சைக்கிள் ரிக்‌ஷா  சிஸ்டம் மிக பிரமாதமாக இருக்கிறது.. பஸ்களில் வரும் பெரிய பயணகுழுக்களுக்கு  தேவையான அதிக ரிக்‌ஷாகளை ஏற்பாடு செய்ய ஒரு குருப் லீடர். நிர்ணயக்கபட்ட கட்டணத்தை அவரிடம் மொத்தமாக செலுத்த வேண்டும். அவர் விசில் கொடுத்தால் தெருவில் போகும் காலி ரிக்‌ஷாக்கள் அணிவகுத்து வந்து நிற்கிறது. ஒரே எண் எழுதிய இரண்டு சீட்டு நம்மிடம் தருகிறார்கள். இறங்கும் இடத்தில் அதில் ஒன்றை கொடுத்தால் போதும்.  பேரம் பணம் எதுமில்லை.. திரும்பும் பயணத்திற்கு நம்மிடமுள்ள அடுத்த சீட்டை பயன்படுத்திகொள்ள வேண்டும். எந்த ரிக்‌ஷாவிலும் பயணிக்கலாம்.
அந்த ரிக்‌ஷாகாரர் இதுபோல் சேரும் சீட்டுகளை மாலையில் கொடுத்து பணம் வாங்கிகொள்கிறார் இந்த பீரிபெய்ட் முறையினால்  மொழிப்பிரச்னை, கட்டணபேரம், சரியான இடத்துக்குதான் போகிறோமா என்ற பயம் என்பதெல்லாம் இல்லை 
கங்கையின் நடுவில் சில இடங்களில் மண்மேடிட்டு திட்டுகள் உருவாகியிருக்கிறது.  காலை 10-11 மணிக்கு அங்கு நீரின் மட்டம் சற்று குறைந்திருக்கிறது, படகுகாரர் அப்படி ஒரிடத்திற்கு நம்மை அழைத்து செல்லுகிறார். தெளிவான கங்கை, அதிக ஆழாமில்லாமல் காலடியில் மணல்.ஆனந்தமான குளியல்.நதிக்குளியல் சுகமான இதமான அனுபவம், எத்தனையோ நதிகளில் குளித்திருந்தாலும் கங்கை குளியல் சர்வ நிச்சியமாக சிலிர்ப்பை கொடுக்கும் விஷயம். கங்கைத்தாய் அனபுடன் தன் மெல்லிய அலைகளால் தொடர்ந்து நிராடச்சொல்லி அழைத்தாலும் படகுக்காரின் அழைப்பு முக்கியமாக பட்டது. நடுகங்கையில் நம்மை விட்டுவிட்டு அவர் போய்விட்டால் நம் கதி என்ன ஆவது?  மெல்ல படகில் கரை திரும்பும் போது கண்ணில் பட்ட  சிவப்பு வெள்ளை  வண்ணகளில் பட்டையிட்ட கோவில் சுவர்களுடனும் தமிழகபாணி கோபுர முகப்புகளுடன் ஒரு படித்துறை. அது கேதார் படித்துறை என்றும் உள்ளே ஜோதிர் லிங்கமான ராமேஸ்வரத்தின் ராமநாதஸ்வாமி   என்றும் அதற்கு போனால் ராமேஸ்வரம் போக வேண்டாம் என்றும் படகுகாரர் சொன்னார். அதன் அருகில் படகை நிறுத்த சொல்லி இறங்குகிறோம்.

நிறைய படிகளுடன் மிக உயரத்தில் இருக்கும் அதன் முன்னே ஒரு சின்ன குளம் கட்டியிருக்கிறார்கள். கண்ணெதிரே, கால் அடியில் கங்கை இருக்க எதற்கு குளம்? ராமேஸ்வரம் இல்லையா தீர்த்த குண்டம் அமைத்திருக்கிறார்கள். கோவில் வெளிப்புற சுவர் முழுவதும் சலவைகற்களில் தமிழ் பாடல்கள் யார் எழுதியது என்றவிபரம் இல்லை. சிலபுரியவும் இல்லை. பழுப்பேறி, மங்கிய அதன் வண்ணம்  வயதை சொல்லியது. உள்ளே கோவில் முகப்புக்கு துளியும் சம்பந்தமிலாமல் வடநாட்டு கோவிலின் சாயலில் பளபளப்பான தரை. மற்ற கோவில்களைபோல கூட்டம் இல்லாதால் அர்ச்சகரும் இல்லை. தரிசித்தபின்னர் படித்துறையிலிருந்து காசிநகர வீதிக்கு வருகிறோம்  மூன்று நாட்களில் நகர வீதிகள் பழகிபோயிருந்தன.  ஷாப்பிங், மற்ற கோவில்களைப் பார்க்க என குழு பிரிகிறது. ”நல்ல தமிழ் நாட்டு சாப்பாடு சாப்பிட வருகிரீர்களா? என ஒரு நண்பர் கேட்டவுடன் நதியில் குளித்திருந்தனால் வாயை திறப்பதற்கு முன்னதாகவே வயிறு ”ஓ யெஸ்” என்று  பதில் சொல்லியது. சிலர் உலகின் எந்த முலையிலும் நம் சாப்பாடு எங்கே கிடைக்கும் என்பதை கண்டு பிடித்துவிடுவார்கள்  சைக்கிள் ரிக்‌ஷாவில் ஏறியதும் ”நாட்கோட் சட்டர்” என்றார். ஏதோ குஜராத்தி ரெஸ்டோரண்ட் என நினைத்த நமக்கு ஆச்சரியம் காத்திருந்தது. நண்பர் அழைத்து சென்றது  காசி நாட்டுகோட்டை நகரத்தார் சத்திரத்திற்கு.  காசியின் எல்லா பிரதான இடங்களைபோல்  நடந்து மட்டுமே போகக்கூடிய ஒரு சிறிய சந்தில்
செட்டிநாட்டு பாணி வீட்டின் முகப்புடன் இருக்கும் இந்த சத்திரம் காசிக்கு வரும் பயணிகளுக்கு உதவுவதற்காகவே 1863ல் உருவாக்க பட்ட  ஒரு அறக்கட்டளை. என்பதை  அன்றைய தமிழிலில் தெரிவிக்கும் கல்வெட்டு. வரவேற்கிறது. மிக அழகாக நிர்வகிக்கிறார்கள். சுத்தமான அறைகள் 100க்கு மேல் இருக்கிறது, கட்டணம் நம்ம முடியாத ஒர் அதிசயம். நிறைய பணியாட்கள். சாப்பாடும் அதை போடுவர்களின் அன்பான சேவையும் அன் லிமிட்டெட்,  விலை? நம்ம ஊரில் ஹோடல்களின் இரண்டு காபியை விட குறைவு!  காலையில் 8 மணிக்குள் கூப்பன் வாங்கிவிட வேண்டும்.  அங்கு தங்கியிருப்பவர் நமக்காக வாங்கிவைத்திருந்தார்.
சுத்தமான அறைகள். நவீன கிச்சன், லிப்ட் என சுற்றி காட்டிய  மனேஜர் குழுவாக வருபவர்கள் மண்டபத்தில் தங்கினால் இலவசம் படுக்க ஜமுக்காளம் தலயணை தருகிறோம். என்று சொல்லி ஆச்சரியத்தில் ஆழத்தினார். எவரும் வரலாம். சிபார்சு கடிதம் எல்லாம் வேண்டாம் முன்பதிவு செய்தால் எமாற்றத்தை  தவிர்க்கலாம். இதைப்போல வசதி கயா, அலகாபாத் அயோத்தியா, நாஸிக்  நகரங்களிலும் இருக்கிறதாம். கல்கியில் எழுதுங்கள் என்றார். எழுதிவிட்டோம்.  
மகா கவி பாரதியார் காசியில் சில காலம் வாழந்திருக்கிறார். அவர் வாழ்ந்த இடத்தில்   ஒரு சிலை இருப்பதை பற்றி படித்திருப்பதால் அது எங்கே இருக்கிறது? என்று கடந்த இரண்டுநாட்களாக விசாரித்துகொண்டிருந்த நாம் அதை இவர்களிடமும் கேட்க, சந்துகளின் வழியே எளிதாக  அங்கே போக ஒரு டெக்னிக்கைச்சொன்னார்கள்.. சந்துகளில் தரையில் பாவியிருக்கும் கற்கள் ஒரேமாதிரி டிசையினில் இருக்கிறதா? எனறு கவனித்து கொள்ளுங்கள். திருப்பங்கள் இருந்தாலும் டிசைன் ஒரே மாதிரியா இருந்தால் நீங்கள் திசை மாறாமல் போகிறீர்கள் என்று அர்த்தம். வழியை தவறவிட வாய்ப்பில்லை. என்றார். சூப்பர் டெக்னிக், இதையும் காசியின் பெருமையாக அரசின் டூரிஸம் விளம்பரபடுத்தலாம்.  அதிகம் பேர் அறியாத அந்த சிலை இருக்கும் இடத்தை அடைந்த நமக்கு அதிர்ச்சி.
ஒரு தெருவின் துவக்கத்தில் நன்கொடையாக பெறபட்ட மனையில் சிலையை நிறுவி அதற்கு காம்பெண்ட் சுவரும் கதவும் இட்டிருக்கிறார்கள். ஆனால் அதன் எதிரே பகலில் லஸ்ஸியும் இரவில் பாலும் விற்கும் ஒரு நடைபாதை கடைகாரர் தன் பாத்திரங்களை கழுவி கவுத்தும் இடமாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்.  அசலான ஆக்ரமிப்பு.  ”நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்”  என்று புலம்பவதை தவிர வேறு வழியில்லை நமக்கு. 
காசிநகரின் வீதிகளில் நடந்து கொண்டிருக்கிறோம். பல்லாயிரம் ஆண்டுகள் பழைமையான இந்த நகரில் தான் எத்தனை விதமான சக்திகளின் வெளிப்பாடு?  உலகிற்கு பூஜ்யத்தின் மகிமையை சொன்ன ஆர்யபட்டாவிலிருந்து  எல்லாம் இந்த நகரில் பிறந்தவை. ஆயுர்வேதம் காசியில் எழுதப்பட்டிருக்கிறது. யோக அறிவியலின் தந்தையான பதஞ்சலி முனிவர் யோக சூத்திரத்தை இங்கிருந்தான் படைத்திருக்கிறார். துளசிதாசரின் ராம சரிதம் மானஸம் உருவானதும் இங்கே தான். நம் தலமுறையில் அறிந்த இசை மேதைகளான சித்தார் பண்டிட் ரவிசங்கர், ஹிந்துஸ்தானி இசை மேதை உஸ்ஸாத் பிஸ்மிலாகான் ஆகியோர்களை தந்ததும் இந்த புண்ணிய நகர் தான். இப்படி இசை, கலை, அறிவியல் போன்ற பல விஷயங்களை தந்த இந்த நகரில் நாம் இன்று நாமும் நடந்துகொண்டிருக்கிறோம்  என்ற எண்ணமே நம்மை பெருமை கொள்ளசெய்கிறது. சுவாமி விவேகானந்தர் சொன்னது போல எந்த ஒரு இந்தியனும் தனியே நடப்பதில்லை. ஐந்தாயிரம் ஆண்டுப் பாரம்பரியமும் கலாசாரமும் விழுமியமும் இந்தியாவின் பொக்கிஷமாக அவ்னோடு கூட நடக்கின்றன.
தெருக்களின் சந்திப்பில் ஒரு லஸ்ஸி கடை என்பது பார்த்ததும் தெரிகிறது. போர்டு வித்தியாசமான மொழியில் இருப்பதை பார்த்து கேட்டபோது அது கொரியன் மொழி.  எனக்குஅந்த மொழி தெரியாது. வந்த சாப்பிட்ட ஒரு கொரியாகாரர் எழுதி கொடுத்தது. அதனால் நிறைய கொரியர்கள் அங்கே வருகிறார்கள் என்று அவர்களுக்காக தயாரிக்க பட்ட மெனுகார்டையே காட்டுகிறார். இங்கு கொரியர்கள்மட்டுமில்லை,  சீனர்கள் ஜப்பானியர், தாய்லாந்தினர், மியாமரினர் எல்லோரையும் காசியில் பார்க்கலாம். புத்த மதத்தினருக்கும் காசிக்கும் என்ன சம்பந்தம் என்று தோன்றுகிறதல்லவா? ரம்மியமான இந்த கங்கைக்கரை சொல்லும் பல ரகசியங்களில்  சித்தார்த்தனை புத்தனாக்க வழிகாட்டியதும் ஒன்று. அவன் தன் போதனைகளைத் துவக்கி, வாழ்ந்த அருகிலிருக்கும் புத்த தேசத்திற்கு நாளை போகப்போகிறோம்



சத்குரு எல்லா நதிகளும்  நாம் வழிபடவேண்டிய புனிதமானவைகள்தானே? அப்படியானால் கங்கை மட்டும் எந்தவகையில் உயர்ந்தது?

இப்போ நீங்க ஒரு கிளாஸ்லே தண்ணீர் எடுத்து  என் கையில் தந்தால் ஒரு நிமிஷத்தில் அதனுடைய அதிர்வை மாத்தி கொடுத்திடுவேன், நீங்க அதை ஆன்மிக பலம் அப்படின்னு சொல்லிடுவிங்க.  ஆனா இதையெல்லாம் இப்போ  விஞ்ஞான பூர்வமாக நீருபித்திருக்கிறார்கள். நீரில் பாசிட்டிவ், நெகட்டிவ் எனஜர்ஜிக்களை பாய்ச்சலாம்., சதா தண்ணீரை ஹெவி வாட்டராக மாற்றமுடியும் என்கிறது இன்றைய விஞ்ஞானம். பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே நம்ம ஆட்கள் நமக்கு இதை சொல்லிட்டு போயிருக்காங்க. உங்கள் பாட்டி, அம்மா சொல்லியிருப்பாங்களே. தாமிரப் பாத்திரத்தில் வைத்த தண்ணியை  மறுநாள் குடித்தால் சக்தி என்று. சாதாரண தண்ணிரை  தீர்த்தமாக மாற்றும் ஆன்மீக ரசாயனம் இயற்கையாகவே அமைந்த ஒன்று. இந்த கங்கை ஹிமாலய பர்வதத்திலிருந்து ஒடிவருது. வரும்போது  அதன் வழியில் சேர்த்துகொள்ளும் சக்தி அதிர்வு எல்லாம் இந்த இடத்தில் அதிகமாக இருக்கிறது. அந்த உணர்வு நமக்கு அதில் குளிக்கும்போது முக்தியை நோக்கி தள்ளுதுன்னு முன்னாடி சொன்னாங்க. இப்போ விஞ்ஞான பூர்வ்மாக ஒரு இம்பாக்ட் இருக்குன்னு சொல்லுறாங்க. முக்தியோ இல்லையோ நிச்சியமாக நமக்கு நன்மை செய்யும் ஒரு சக்தி.   ஒரு நதியில் இயற்கையின்  சக்தி அதிர்வுகள் இணைந்தால் தான் அது தீர்த்தம். இப்போது ஒரு குளத்தை கட்டி அதை தீர்த்தம் என்கிறார்கள் அதுவியபாரம்.

காசி கங்கை கரையில் வசதியாக நிம்மதியாக குளிக்க ஈஷா எதாவது செய்ய முடியாதா?
நாம் எல்லோரும் சுத்தமாக இருக்கவேண்டும் என விருபுகிறோம். ஆனால் அதை யாராவது செய்துவைக்க வேண்டும் என நினைக்கிறோம் அதுதான் பிரச்னையே. மாசற்ற சுழலை உருவாக்க ஈஷாவின் முயற்சிகளை அறிந்திருப்பீர்கள். அதன் ஒரு பகுதியாக காசியிலும் ஒரு தீர்த்தகட்டத்தை தேர்ந்தெத்து ”நிர்மல் கங்காவாக” பராமரிக்க திட்டமிட்டிருக்கிறோம். இதற்கு  உள்ளூர் நிர்வாகம், அரசாங்கம், அங்குள்ள கடைக்கார்கள் அரசியல்வாதிகள் என பலரின்  ஆதரவு அதிகம் தேவையாக இருக்கிறது. முயற்சிகளை துவக்கியிருக்கிறோம். இன்னும் சில ஆண்டுகளுக்கு பின் நீங்கள் வந்து நீராடலாம். 




8/2/14

தாயகம் கடந்த தமிழ்க் காதல்”




தமிழ்  இன்று உலகம் முழுவதும் பரவிப் படர்ந்துள்ள மொழி. தமிழர்கள் தாங்கள் சென்ற இடங்களுக்கெல்லாம் கங்காரு தன் குட்டியை தூக்கிசெல்வது போல தங்கள் மொழியை கொண்டுசென்றார்கள். அதற்கு காரணம் அவர்கள்  மொழியை கலாச்சாரத்தின் அடையாளமாக, பண்பாட்டின் சின்னமாகப் போற்றியதுதான். . அதனால் தான் எங்கு சென்றாலும் அங்கு  . தன் மொழிக்கான இலக்கியங்களை படைக்கிறார்கள்.  இன்று கடல் கடந்து நிற்கும் தமிழ் மொழியை அதிவேகமாக மாறிவரும் இன்றைய உலகின் தேவைக்கேற்ப படைப்பிலக்கியங்களையும் தாண்டி ஊடகம், தொழில்நுட்பம்,  கல்வி போன்றவைகள் மூலம் அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்லும் அரும் பணியை  உலகெங்கும் பலர் செய்து கொண்டிருக்கிறார்கள். ஜப்பான் முதல் கலிபோர்னியா வரை விரவி, பரவி நிற்கிற அவர்களில் முன்னணியில் இருப்பவர்களை அழைத்து “ தாயகம் கடந்த தமிழ்” என்ற உலக தமிழ் எழுத்தாளார்கள் கருத்தரங்கு ஒன்றை நடத்தியது கோவையிலுள்ள தமிழ் பண்பாட்டு மையம்.
 தமிழ்மொழி, தமிழர்பண்பாடு,கலைகள்வளர்ச்சி மேம்பாட்டுக்கென்று இந்த மையத்தைஉருவாக்கியிருப்பவர். டாக்டர் நல்ல பழனிசாமி. கோவை மெடிகல் சென்டர் என்ற பல்துறை மருத்துவ மனையின் தலைவர். இவர் என்.ஜி பி என்ற கல்விகுழுமத்தின் தலைவரும் கூட.(படம்-அவசியம்)  தமிழின் மீது அளவற்ற பற்று கொண்டவர்.  கருத்தரங்கில் பங்கேற்றவர்களை வரவேற்பதிலிருந்து வழியனுப்புவது வரை  கொங்குநாட்டுக்கே உரிய  பாங்குடன் ஒரு பெரும் தொண்டர் படையுடன் முன்நின்று செய்தவர்
. கருத்தரங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் மூத்த பத்திரிகையாளரும், எழுத்தாளருமான மாலன். இம்மாதிரி மாநாடுகளில் வாசிக்கப்படும் கட்டுரைகள் புத்தக்கமாக வெளிவர சிலகாலம் ஆகும். ஆனால் இங்கு பதிவு செய்து பங்கேற்க வந்தவர்களுக்கு கருத்தரங்கு துவங்கும் முன்னரே  அந்த புத்தகம்  இலவசமாக வழங்கபட்டது. அந்த அளவிற்கு எல்லா ஏற்பாடுகளும் கச்சிதம். 

 சிறப்பாக நடைபெற்ற துவக்க விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி. ராமசுப்பரமணியம்  துவக்கி வைத்த இந்த கருத்தரங்கம் இரண்டு நாள்  7 அமர்வுகளாக  7 வெவ்வேறு பிரிவுகளில் நடைபெற்றது. 12 நாடுகளிலிருந்து 35 எழுத்தாளார்கள் பங்கேற்ற இந்த கருத்தரங்கில்  கலந்துகொண்ட பார்வையாளார்கள் 500க்கும் மேல். கே எம் சி யின் ஹைடெக் அரங்கம் நிறைந்து வழிந்ததால் மற்றொரு அரங்கத்தில் வீடியோகாட்சியாக ஒளிபரப்பினார்கள்.   பேசபட்ட விஷயங்களும், பேச்சாளர்களின் ஆற்றலும்  நேரகட்டுபாட்டை  நிர்வகித்த அமர்வுகளின் தலைவர்களின் கண்டிப்பும் பார்வையாளர்களை கட்டிபோட்ட விஷயங்கள்.  கருத்தரங்குக்கு வந்திருந்தவர்களில் சிலரின் அறிமுகமும், அவர்களின் பேச்சுகளிலிருந்து சில துளிகளும். 
சீனா ரேடியோ இண்டெர்நேஷனல் (CRI) என்பது சீன அரசு வெளிநாட்டினருக்காக பல நிகழ்ச்சிகளை ஒலிபரப்பும் வானொலிநிலையம். 70 ஆண்டுகளாக இயங்கி கொண்டிருக்கும் இந்த நிலையம் இப்போது 60  நாடுகளுக்கு அந்தந்த நாட்டு மொழிகளில் நிகழச்சிகளை வழங்குகிறது. இந்திய மொழிகளில் கடந்த 50 ஆண்டுகளாக நிகழ்ச்சிகளை வழங்கும். இதன் தமிழ் ஒலிபரப்பு மிகவும் பிரபலம். 25000 க்கும்மேல் பதிவு செய்து கொண்ட நேயர்கள் இருக்கிறார்கள். 150 நேயர் மன்றங்களும் செயல்பட்டுவருகின்றன. ஆண்டுக்கு 5 லட்சம்  தமிழ் நேயர் கடிதங்கள் வருகின்றன. இது சீன வானொலிக்கு வரும் கடித எண்ணிக்கையில் முதலிடம். இந்த நிலையத்தின் தலைவர்  செல்வி சாவ்சியாங்.(ZHAO JIANG) சீனத் தகவல் தொடர்பு பல்கலைகழகத்தில் தமிழ் மொழியில் பட்டம் பெற்றவர். இரண்டு தமிழ் புத்தகங்கள் எழுதியிருக்கிறார்.
கலைமகள் என்று தன் பெயரை மாற்றிக்கொண்டிருக்கும் இவர் “தமிழ் கூறும் ஊடக உலகம்” அமர்வில் கட்டுரை வாசித்தார்.  உச்சரிப்பு பிழையின்றி அழகான தமிழில் பேசும் இவரைப்போலவே இவருடன் வந்திருந்த உதவியாளர்கள் செல்வி ஈஸ்வரி. செல்வி இலக்கியா வும் பேசுகின்றனர்.  தனது உரையில் ”எங்களது பல தமிழ் நிகழ்ச்சிகளுடன் சீனாவில் வாழும் தமிழர்கள் என்ற பகுதியில் சீனாவின் பல பகுதிகளில் வாழும் தமிழர்கள்,  எங்கள் நாட்டிற்கு வருகைதரும் தமிழ் பிரமுகர்களையும் அறிமுகப்படுத்துகிறோம்   இந்த சிறப்பு நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.  இதன் மூலம் தமிழர் பார்வையில் பிற தமிழர்களுக்கு சீனாவை அறிமுகபடுத்துகிறோம்.
நிலையத்தின் தமிழ் பகுதியில் பணிசெய்யும் 18 பேரும் தமிழ் அறிந்த சீனர்கள். இப்போது மொபைல் போனில் தமிழில் எங்கள் நிகழ்ச்சி குறித்து குறுஞ்செய்தி அனுப்பும் வசதி இருப்பது பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது  தேன் மதுர தமிழோசை உலகெங்கும் பரவ எங்கள் வானொலியும் உதவுகிறது என்றார்.. உண்மைதான். கருத்தரங்கு நிகழ்ச்சிகளை அவ்வப்போது  பார்வையாளர்களின் பேட்டிகளுடன் இவரது உதவியாளர்கள்  சீன நிலையத்துக்கு அனுப்பிகொண்டிருந்தார்கள்.   அவர்கள் நல்ல தமிழில்  கேள்விகள் கேட்க நம்மவர்கள் ஆங்கில வார்த்தைகள் கலந்த தமிழில் பதில் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

இன்று உலகெங்கும்  உள்ள தமிழர்கள் கணனியில்  தமிழ் எழுத பயன் படுத்தும் முரசு அஞ்சல் செயலியை உருவாக்கியவர் திரு முத்து நெடுமாறன்.(படம்)  கணனி தொழில் நுட்பத்தில் 25 ஆண்டு அனுபவம் உள்ள இவர் மலேசியாவில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் தலமை நிர்வாக அதிகாரி.  இவருடைய படைப்புகள் சீங்கப்பூர் மற்றும் மலேசியக் கல்வி அமைச்சுகளினால் ஆதிகாரபூர்வமாக பயன்படுத்தப்படுகின்றன.  அண்மையில் ஆப்பிளின் மெக்கிண்டாஷ் கணனியிலும் ஐபோனிலும் பயன்படுத்தபடும் இந்திய, இந்தோ சீன மொழிகளுக்கான எழுத்துகளையும் உருவாக்கியவர் இவர்.  தொழில் நுட்பம் தரும் வாய்ப்புகள் என்ற அமர்வில் ”கைபேசியில் தமிழ்”  பற்றி உரையாற்றினார்.




இந்தியாவில் ஆங்கிலப் புழக்கம் அதிகமாக இருந்தாலும், கணனி வாங்கக்கூடிய வசதி உள்ளவர்கள் ஆங்கிலத்தில் பேசவும், எழுதவும் நல்ல தேர்ச்சி பெற்றிருந்ததாலும் இந்திய மொழிகளை கணனியில் சேர்க்க வேண்டிய கட்டாயம் எந்த கணனி நிறுவனத்திற்கும் ஏற்பட்டதில்லை. மேலும் சீனா, ஜப்பான் போல இந்திய மொழிகளின் தேவையை கட்டாயப்படுத்தும் சட்டங்களும் இல்லை. இதனால் ஜெர்மன். பிரஞ்சு, இத்தாலி,கொரியா, அரபு மொழிகள் போல இந்திய மொழிகள் கணனியில் முதலில் சேர்க்க படவில்லை. மிகத் தமாதமாக 2000 ஆண்டிலேயே இது முடிந்தது.  இந்த நிலை இப்போது வெகுவேகமாக பரவும் கையடக்க கருவிகளான செல்போன், ஐபேட், டேப் போன்றவைகளிலும் நேர்ந்துவிடக்கூடாது என பாடுபடுகிறோம் நாங்கள்.   இந்த முயற்சிகளினால் தான் இன்று ஆப்பிள் நிருவன தயாரிப்புகளிலும், பல ஸ்மார்ட் போன்களிலும் தமிழை உள்ளிடமுடிகிறது. செல்லினம் என்ற செயலி ஐபோனில் தமிழ் எழுதுவதை எளிமைப்படுத்தியது.  இது தமிழ் உலகிற்கு மலேசியா தந்த கொடை. பயணிகள் இருந்தால் தான் பயணம் தொடரும். அதுபோல தொழில்நுட்ப உலகில் பயனர் இருந்தால் தான் புதியன பிறக்கும்.  தமிழ் மொழியை தொழில்நுட்ப உலகில்மேலோங்கி நிற்க செய்வதில் நம் அனைவருக்கும் பங்குண்டு. தமிழை ஆங்கிலத்தை போல இயல்பாக இந்த கருவிகளில்  அதிகமாக பயன்படுத்த பழக வேண்டும்.
      

 அமெரிக்காவிற்கு புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் அடுத்த தலைமுறைக்கு முறையாக தமிழ் கற்பிக்க கலிபோனியா தமிழ்க்கழகம் என்ற அமைப்பை நிறுவி 1998ல் துவங்கியவர் திருமதி வெற்றிச் செல்வி.(படம்) 13 குழந்தைகளுடன்  துவங்கிய இது இன்று   லண்டன், துபாய் போன்ற உலகின் பிற பகுதிகளுக்கும் பரவி இன்று 4000 மாணவர்களுடனும் 840 ஆசிரியர்களுடனும்   ”அனைத்துலக தமிழ் கழகமாக” மாறி  வேருன்யிருக்கிறது.   நேரிடையாகவும்,  அங்கீகரிக்க பட்ட பள்ளிகளின் மூலம்  தமிழ் மொழி பேச, எழுத கற்பிக்கிறது. புலம்பெயர்ந்து வாழம் குழந்தைகளுக்கு ஏற்ப பாடதிட்டத்தை  வகுத்து இந்த  அமைப்பு தமிழ் கற்பிக்கிறது. அமெரிக்க நகரங்களிலுள்ள பள்ளி, கல்லூரி கட்டிடங்களில் வார இறுதியில் வகுப்புகளை நடத்தும் இவர்கள் ஆசிரியர்களாக பணீயாற்றுவர்களையும் தன்னார்வ தொண்டர்களையும்  தேர்ந்தெடுத்து பயிற்சியும் கொடுக்கிறார்கள்  சீங்கப்பூர் பள்ளிகளின் பாடபுத்தகங்களை, தமிழ் இணையபல்கலைகழக ஆலோசனைகலையின் படி பயன் படுத்துகிறார்கள்.  இப்போது வெளிநாட்டு சூழ்நிலைகளுக்கு ஏற்ப புத்தகங்களை தயாரிக்க துவங்கியிருக்கிறார்கள்.  ”தமிழகத்திற்கு அப்பால் தமிழ் கல்வி” என்ற அமர்வில் இவர்   ஒரு பேச்சாளர்.
”பாலர் வகுப்புகளில் ஆர்வமாக வரும் குழந்தைகள் பெரிய வகுப்புகளுக்கு வருவதில் ஆர்வம் காட்டுவதில்லை. அவர்களை கவர்வதற்காக இங்குள்ள கல்வி முறைப்படி  5 ஆண்டுகள் மற்ற மொழி கற்றால்  ஆண்டுக்கு 10 பாயிண்ட் கிரீடிட் கிடைக்கும் வகையில் கலிபோர்னியா பல்கலைகழகத்தில்  எங்கள் பாட திட்டத்திற்கு  அனுமதிபெற்றோம். இது மிகப்பெரிய விஷயம். பல்கலைகழக தர கட்டுப்பாடும் வகுப்பு நடத்தும் விதிகளும் கடினமானவை.  ஆனாலும் எங்கள் முன் இருக்கும் சவால் ”இங்கு வாழப்போகும் நான் தமிழ் படித்து என்ன செய்யபோகிறேன்? என்று  மாணவர்கள் எழுப்பும் கேள்விதான்,  இந்த கருத்தரங்கு சரியான பதிலை நாங்கள் அவர்களுக்கு சொல்ல உதவ வேண்டும்.   கற்பிக்கும் பணியில் தமிழகத்திலிருந்து கல்வியாளர்கள் ஆலோசனை வழங்கி உதவுகிறார்கள். ஆனாலும் கடினமான இலக்கணம், சூழ்நலைக்கு ஏற்ப இல்லாத தன்மையில் பாடங்கள்  மாணவர்களை சோர்வடையச் செய்கிறது.  தமிழை  ஒரு பாடமாககூட படிக்காத தலைமுறை இப்போது  தமிழ் நாட்டிலிருந்து அமெரிக்காகவிற்கு வந்துகொண்டிருக்கிறது. பெற்றோர்களுக்கு மொழியின் அருமையும் அவசியமும் தெரிந்தால் தானே அவர்களின் குழந்தைகள் தமிழ் படிப்பதை பற்றி யோசிப்பார்கள்?  என்று தான் சந்திக்கும் சவால்களை சொல்லும் இவர் மிகுந்த நம்பிக்கையுடன் தன் முயற்சியை தொடர்கிறார். வெளிநாட்டின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப குழந்தைகளை கவரும் வகையில் பாடபுத்தகங்களை, கற்பிக்கும் கருவிகளை. யுக்திகளை தமிழ் நாட்டு கல்வியாளார்களிடம் இருந்து வரவேற்கிறார். 

கடல் கடந்து வாழந்தாலும் தமிழின் மீது இவர்கள் வைத்திருக்கும் அபரிமதமான அன்பைப்பார்க்கும் போது மாநாட்டின் தலைப்பை இப்படி மாற்ரிவைதிருக்கலாம் என்று தோன்றியது
 “ தாயகம் கடந்த தமிழ்க் காதல்”

 - ஆதித்தியா

கல்கி 16/02/14