18/1/17

மேகங்கள் வாழும் சொர்க்கம் 3

அந்தப் பெரிய அறையின் ஒவ்வொரு சதுர அங்குலத்திலும் ராணுவத்தின் மிடுக்கு தெரிகிறது.. கண்ணாடிப்பேழையினுள்ளே கலைப் பொருட்கள், விருது கேடயங்கள் கோப்பைகள் எல்லாம் மின்னுகிறது. பக்கச்சுவர்களில் X குறிகளாக நிற்கும் ஈட்டிகள். அழகான ஆயில் பெயிண்ட்டிங்கள். அந்த ரெஜிமென்ட்டின் உயர் அதிகாரி எனது சகோதரர் (கஸின் பிரதர்) எங்களுக்கு ஒரு இரவு விருந்து அளிக்க அவருடைய மெஸ்ஸுக்கு அழைத்துப் போனார். மெஸ் என்றால் மைலாப்பூர் மாமி மெஸ் மாதிரி சாப்பாடு மட்டும் இல்லை. ராணுவத்தில் அதிகாரிகளின் மெஸ் என்பது பணக்கார கிளப் மாதிரி, பார், ,சாப்பாடு, சினிமாஹால், பில்லியர்ஸ் மேஜை லைப்பரரி எல்லாம் இருக்கும். மிக நேர்த்தியாக பாரமரிக்கபடும் இடம். நுழைவாயிலில் அந்த ரெஜிமென்ட்டின் சின்னமான காண்டாமிருகம் வரவேற்கிறது. இங்கு காண்டாமிருகத்துக்கு நிறைய மரியாதை. அதிகாரிகள் தொப்பி, அவர்களின் ஜீப், கார் வரை எல்லாவற்றிலும் காபி கப்பில் கூட இருக்கிறார். சார் என்று அழைக்காததான குறை.
உடன் உணவருந்த அன்று இரண்டு இளம் அதிகாரிகளும் அழைக்கப்பட்டிருந்தனர். சாப்பிடும் போது அந்த அதிகாரிகள் அளவாகச் சாப்பிட்டது போலவே அளவாகவே பேசினார்கள். நாம் அல்லது அதிகாரி பேசும் போதும் “ஸ்ஸார்” என்கிறார்கள். “எஸ்” என்பதின் ஆர்மி பாஷை அது. டின்னர் முடிந்து சகோதரர் எனக்கு வேலையிருக்கிறது. நீங்கள் பேசிக்கொண்டிருங்கள் என்று கிளம்பியபின் இந்த இளைஞர்கள் சட்டென்று வேறு சானல் மாற்றிய டிவி மாதிரி இயல்பாகப் பேசினார்கள்.. .அதிகாரிகளுடன் இருக்கும்போது அவர்களின் எல்லா அசைவுகளும் கவனிக்கப்பட்டு அவர்களின் பழகும் திறன் மதிப்பிடப்பட்டுக்கொண்டேயிருக்குமாம். . 
அன்று இந்த அதிகாரிகள் என்னைப் பல விஷயங்களில் ஆச்சரியப்படுத்தினார்கள். முதலில் கேப்டன் நேகா. இந்தப்பெண் இரண்டு முறை நேஷனல் ஜூடோ தேசிய சாம்பினானவர். இப்போது மூன்றாம் முறைக்கு தயாரித்துக் கொண்டிருக்கிறார். கம்ப்யூட்டர் சயின்ஸ் பி.ஈ. காம்ப்பெஸ்ஸில் சூப்பர் புத்திசாலிகளை தேர்ந்த்டுக்கும் ஐபிஎம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டு நல்ல சம்பளத்தில் வேலை பார்த்தவர். ஏன் ராணுவம்? குடும்பத்தில் யாராவது ராணுவ அதிகாரியா:? என்று கேட்டபோது நான் ஜூடோவில் பலமெடல்கள் பெற்றவள். மேஜையில் உட்கார்ந்து வேலை செய்வதில் ஒரு திரில்லும் இல்லை. சம்பளம் ஒரு விஷயமில்லை. அட்வெண்ட்சராக இருக்கும் ஒரு வேலையைத் தேடினேன். ராணுவத்தின் அதிகாரியாகத் தேர்வானேன், என்றார்.
அடுத்த ஆண்டு மீண்டும் சாம்பியனானால் அடுத்த பிரமோஷன் கிடைக்குமா? . அதெல்லாம் சோல்ஜர்களுக்கு மடும்தானாம் அதிகாரிகளுக்கு கிடையாதாம். ஒரு சாதனைச் செய்த சந்தோஷம் தான் என்று சொன்ன அவர் குடும்பத்தைப் பற்றிச் சொன்னபோது அசந்து போனேன். தந்தை கர்நடாகவில் ஒரு பெரிய கட்சியின் மாநிலத் தலைவர். தாய் முன்னாள் அமைச்சர். அரசியல் வாதிகளின் பிள்ளைகளை தனியார் மருத்துவக் கல்லூரியில் படித்த டாக்டர்களாகவோ, பெரிய நிறுவன அதிகாரிகளாகவோ இல்லாவிட்டால் வளரும் அரசியல் வாரிசாகவோ பார்த்திருந்த எனக்கு இந்தத் தகவல் “அரசியல் வாதிகளிலும் சில மாறுபட்டவர்கள் இருக்கிறார்கள். தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் சுதந்திரத்தை அவர்களுக்கு அளிக்கும் நல்ல பெற்றோர்களும் இருக்கிறார்கள்- என்பதைச் சொன்னது. 
அடுத்தவர் லெப்டினட் சதிஷ். வசதியான விவசாயக் குடுமப்பபின்னணி. ராணுவப்பணி என் பள்ளிக்கால கனவு. என்றார். சைனிக்பள்யில் படித்து டேராடூனில் பயிற்சிபெற்றவர். பி.ஈ சிவில் முதல் வகுப்பு பட்டதாரி. மாநில அளவிலான கிரிகெட் வீரர். ரஞ்சித் கோப்பைக்காக ஆடியிருக்கிறார். ரயில்வேயில் விளையாட்டுவிரர்களுக்கான கோட்டாவில் வேலைகிடைத்தும் மறுத்துவிட்டு காக்கிக்குள் புகுந்திருக்கிறார். ஆங்கில இலக்கியமும் இசையும் பிடிக்குமாம். ஒரு பாட்டுப்பாடுங்களேன் என்று கேட்டேன். விதிகளின் படி மெஸ்ஸில் பாடக்கூடாதாம். (இன்னும் என்னென்வெல்லாம் விதிகளோ ? ) இவர்களின் போட்டோக்களை சுவடுகளில் போட விதிகள் என்ன சொல்லுகிறது? என தெரியாதால் காண்டாமிருகம், மற்றும் மெஸ்ஸின் டைனிங் ஹால் படங்கள் மட்டும் இணைப்பில் 
நுழைவாயிலின் மேலே Rogues Gallery” என்ற போர்டுக்கு கீழே வரிசையாக பதக்கங்களுடன் அதிகாரிகளின் படங்கள். சரியாகத்தான் படிக்கிறேனா? என்று பார்த்தேன் Rogues தான். கேட்டபோது அது சும்மா ஃபன் சார், உங்கள் பேங்க்கில் திறமையான ஜிஎம்களை கில்லாடிகள் என்று சொல்வதைப் போல என்றார்கள். இது பல விஷயங்களுக்கு தனிப்பார்வை கொண்ட தனி உலகம் போலிருக்கிறது.

இந்த இளைஞர்களைப் பார்க்கும் போது இந்திய ராணுவம் புத்திசாலி,இளைஞர்களையும் ஈர்த்துக்கொண்டிருக்கிறது, மெல்ல அவர்களின் கைகளுக்குப் போய்க் கொண்டிருக்கிறது என்று தோன்றிற்று. இருந்தாலும் நம் அரசும் சமூகமும் இவர்களுக்கும், ராணுவத்தினருக்கும் உரிய கெளரவத்தை முழு அளவில் அளிக்கிறதா? என்ற கேள்வியும் மனதில் எழுந்தது.

16/1/17

தமிழ்த் தாத்தாவின் தாத்தா காலத்திற்கு முன்னரே சுவடிகளைத் தேடியவர்.



இந்த மாத இதழ் அமுதசுரபியில் வெளியாகியிருக்கும் எனது கட்டுரை. இதழாசிரியருக்கு நன்றியுடன்.. இங்கே..
தமிழ்த் தாத்தாவின் தாத்தா காலத்திற்கு முன்னரே சுவடிகளைத் தேடியவர்.
தமிழுக்காகவே வாழ்ந்தவர்கள், தமிழை வைத்தே பிழைத்தவர்கள், தமிழை வியாபாரம் செய்பவர்கள், தமிழால் புகழ் பெற்றவர்கள், தமிழைத் தன்னுடைய வளர்ச்சிக்குப் பயன்படுத்தியவர்கள், மனமகிழ்ச்சிக்காகத் தமிழைப் படித்தவர்கள், இலக்கிய சுவைக்காகத் தமிழை நேசித்தவர்கள்.. எனப் பல விதத்தில் தமிழைப் பயன்படுத்திக்கொண்டிருக்கும் மனிதர்களுக்கெல்லாம் தெரியும் கரையானுக்கும், செல்லரிப்புக்கும் பலியாகிக் கொண்டிருந்த நூல்களைக் காப்பாற்றி நமக்குக் கொடுத்தவர் தமிழ்த் தாத்தா என்று அழைக்கப்படுகிற உ.வே.சுவாமிநாத ஐயர்.என்பது.
ஆனால் தமிழ் தாத்தா பிறந்த 1855 ஆம் ஆண்டுக்கு 72 ஆண்டுகளுக்குமுன்னே(1783) அதாவது தமிழ் தாத்தாவின் தாத்தா காலத்திலேயே ஒரு மனிதன் தமிழக கிராமங்களில் சுவடிகளையும், செப்பு தகடுகளையும் தேடி அலைந்து சேகரித்து தொகுத்திருக்கிறார் என்பது ஓர் ஆச்சரியமான செய்தி. அதைவிட ஆச்சரியம் அந்த மனிதன் தமிழன் அல்ல என்பது மட்டுமில்லை தமிழே தெரியாத ஆங்கிலேயர் என்பது தான்.
அந்த ஆங்கிலேயர் காலின் மெக்கன்சி. தொல்பொருளியல், நாணயவியல், வரைபடவியல், மானுடவியல், நாட்டுப்புறவியல், மதம், தத்துவம் சார்ந்த அறிவியல் போன்ற பல துறைகளில் ஆர்வம் மிகக் கொண்ட ஒரு ஆங்கிலேய அரசு அதிகாரி.. தமிழ்த் தாத்தாவைப்போல ஊர் ஊராகச் சென்று சுவடிகளைச் சேகரித்தது போல இவரும் கைப்பணத்தைச் செலவழித்து உதவியாளர்கள் மூலம் தொகுத்த சுவடிகளும், சில கல்வெட்டுக்களின் பிரதிகளும் பின்னாளில் செய்யப்பட்ட ஆய்வுகளுக்கு மூல ஆதாரமாக இருந்திருக்கிறது. இவர் தமிழகம் மட்டுமில்லாமல் இலங்கை, ஜாவா தீவுகளுக்கும் சென்று சுவடிகளை சேகரித்திருக்கிறார்..
தமிழகத்தின் பல்வேறு முகங்களை வெளிக்காட்டும், அரியச் செய்திகளைச்சொல்லும் இந்தத் தொகுப்புக்களை தொகுத்துக் குவித்திருப்பவர் மெக்கன்ஸி என்ற ஆங்கிலேயர்.

யாரிந்த மெக்கன்சி? 


 இந்தியாவில் முதன் முதலில் கள ஆய்வினைத்தொடங்கிவைத்தவரான மெக்கன்சி ஸ்காட்லாந்தில் பிறந்தவர் அவர் கிழக்கிந்திய கம்பெனியில் 30ஆவது வயதில் இணைந்து சில போர்களிலும் பங்கேற்று இறுதியில் சென்னையில். தலைமை நில அளவை ஆய்வாளராக பொறுப்பேற்று அரை நூற்றாண்டு . காலம் பணியாற்றிய பொழுது ஆர்வம் காரணமாக செய்த காரியம் இந்த சேகரிப்பும் தொகுப்பும் என்று பதிவு செய்யப்பட்டிருக்கிறது.. மெக்கன்சி தன் அலுவலக பணிக்காக சென்ற இடங்களில் எல்லாம் தன் சுவடி சேகரிப்பு, தொகுப்புப் பணிகளை செய்து வந்திருக்கிறார். இப்படி 30 ஆண்டுக்காலம் அவர் தொகுத்த தொல்பொருள் தொகுப்பை அவரே அழகாக வகைப்படுத்தி பட்டியிலிட்டிருக்கிறார். இன்றைக்குத் தமிழக வரலாற்றை ஆராய்பவர்களுக்கு உதவும் அரிய பொக்கிஷம். அவரது மரணத்திற்குப் பின்னர் இங்கிலாந்துக்கு அனுப்பப் பட்ட அறிக்கை காணாமல் போயிவிட்டது. இன்று இருப்பது சென்னை ஆவணக்காப்பகத்திலிருக்கும் அதன் நகல் மட்டுமே 
வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த மதுரை தான் மெக்ன்சியின் தொகுப்புப் பணியில் முதலிடம் பெற்றிருக்கிறது அதற்குக் காரணம் அவர் அங்கு தங்கியிருந்த போது தமிழ் அறிஞர்களிடம், நண்பர்களிடமும் விவாதித்தபோதுதான் தமிழ் நாட்டின் வரலாறு, வாழ்க்கைமுறை, இலக்கியம் பற்றி நிறையத் தெரிந்துகொண்டிருக்கிறார். அவை பற்றிய செய்திகளின் சேகரிப்பின், தொகுக்கப்படவேண்டியதின் அவசியத்தை உணர்ந்திருக்கிறார்..
இந்த ஆர்வத்தினால், அலுவலக பணிக்காக அடிக்கடி குமரி முதல் கிருஷ்ணா வரையிலும் சென்று வரும்போதெல்லாம் தொகுப்பு பணியில் ஈடுபட்டிருக்கிறார். பலருடன் இயங்கும் ஒரு நிறுவனம் கூட தொகுத்திட முடியாத அளவிலான தொகுப்புகளை தனிப்பட்ட முறையில் தொகுத்திருக்கிறார். 
இப்படி இந்த மனிதர் சேகரித்து தொகுத்திருப்பதின் எண்ணிக்கைகளைப் பாருங்கள். கல்லிலும் செம்பிலும் உள்ள சாசனங்கள்3000, பல்வேறு மொழிகளைச்சேர்ந்த சுவடிகள் 1568, கல்வெட்டுக்கள் 8076, ஓவியங்கள் 2630 வரைபடங்கள் 78 நாணயங்கள் 6218. இவற்றை சேகரிக்கபட்ட்து மட்டுமில்லாமல் மட்டுமில்லை மொழி வாரியாக, நியாயம் , தர்மம், சட்டம், கணிதம் எனப் பல பிரிவுகளில் தொகுக்கவும் பட்டிருக்கிறது. 
தொல்பொருள் தொகுப்பில் மெக்கன்சி காட்டிய ஆர்வம் ஆச்சரியப்படவைக்கிறது. எங்கோ ஸ்காட்;லாந்தில் ஒரு சதாரண குடும்பத்தில் பிறந்து பணி நிமித்தம் இந்த நாட்டிற்கு வந்து செய்த அலுவலகப்பணியோடு இத்தகைய அரியச் சாதனை செய்திருக்கும் இவரது சேவைகளுக்கு நமது வரலாற்றில் உரிய இடம் தரப்படவில்லை,

மலையாளம், தெலுங்கு கன்னட மொழிகளுக்கு உதவ அறிஞர்கள், கிராமங்களுக்குச் சென்று சேகரிக்க பணியாளார்கள், குடும்பங்களின் வரலாறுகளை அந்த குடுபத்தினரையே எழுதிதரச்சொல்வது, மலைவாழ்மக்களை சந்தித்துக் குறிப்பு எழுதிக்கொள்வது, கல்வெட்டுகளைத் தாளில் பதிந்துகொள்வது, புரியாதவற்றை ஓவியமாக்கிக் கொண்டுவந்து பரிசீலிப்பது போன்ற முறைகளைப் பயன் படுத்தி தன் தொகுப்பைச் செம்மைப்படுத்தியிருக்கிறார். எல்லாவற்றையும் விட நம் கவனத்தை கவர்வது சேகரித்ததில் தெளிவாகப் புரியாத விஷயங்களைப் பற்றி ஒரு வினா பட்டியலை சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி விடைகள் பெற்று தொகுப்பில் சேர்த்திருப்பதுதான்.
தமிழக வரலாற்றில் ஒரு முக்கிய கட்டமான 15, 16 ஆம் நூற்றாண்டுகளில் தஞ்சை வரலாற்றை அறிந்து கொள்ள, கல்வெட்டுகளில் இருக்கும் தவறுகளை திருத்திக்கொள்ள இவர் தொகுப்பில் இருக்கும் தெலுங்கு, தமிழ் சுவடிகள் தான் உதவியிருக்கின்றன. தவிர . அதே போல இவர் ஜாவா தீவுகளில் பணியாற்றிய போது கண்ட, எகிப்திய பிரமிடுகளைவிடப் பழமையான புத்தர் கோவிலை பற்றி இவர் எழுதிய குறிப்புக்கள் தான் புத்த மதம் ஜாவாவில் பரவியிருந்ததற்கு முதல் சான்று. 
 பணியில் இருந்த காலத்தில் (1818) இந்தியாவின் வரலாறு என்று ஒரு புத்தகம் எழுதத் திட்டமிட்டிருப்பதாக ஒரு குறிப்பில் சொல்லும் மெக்கன்சி இறுதிவரை அதை எழுதவே இல்லை. தன்னுடைய 38 ஆண்டுக்கால இந்திய பணியில் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் பணியாற்றிய மெக்கன்சி கல்கத்தாவில் இருக்கும்போது தன் தொகுப்புப் பணிகளை இங்கிலாந்து சென்று தொடரவிரும்பினார், விடுமுறை கிடைப்பதற்குள் இறந்துவிடுகிறார். அவரது தொகுப்புகளை அவரது மனைவியிடமிருந்து கிழக்கிந்திய கம்பெனி விலைக்குப் பெற்று அதை கம்பெனியின் சொத்தாக அறிவிக்கிறது. மெக்கன்சியின் தொகுப்புகள் பல இங்கிலாந்து அனுப்பபட்டுவிட்டன தென் இந்தியப்பகுதிகளைச் சேர்ந்த சுவடிகள் ஆவணங்கள், கட்டுரைகள், கல்வெட்டு பிரதிகள் போன்றவகைகள் இப்போது சென்னையில் இருக்கிறது. மெக்கசிக்கு பின் இவைகள் தேர்ந்த உதவியாளர்களால் பட்டியலிடப்பட்டிருக்கிறது
. 
ஆராய்ச்சியாளர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் சென்னை கோட்டையிலிருக்கும் ஆவணக்காப்பகத்தில் மெக்ஸியின் குறிப்புகளுக்கு என தனிப்பகுதியே இருக்கிறது. அதிலிருக்கும் தமிழ் சுவடிகளை பேராசியர் முனைவர் ராசேந்திரன் அன்றைய தமிழகத்தின் அரசியல், சமுதாயப் பொருளியல், பண்பாடு நிலைகள் பற்றி ஆய்ந்து 1793-95, 1796-1810, 1811-1813, என்று முன்று கால கட்டங்களாக பிரித்து காலின் மெக்கன்சி வரலாறும் சுவடிகளும் என ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார். இன்றும் பல வெளிநாட்டு உள்நாட்டு பல்கலைக்கழக மானவர்களின் ஆராய்சிகளுக்கு இந்தக் குறிப்புகள் உதவுகின்றன. 
“ மெக்கன்சியின் பெருமையைப் பற்றி நாம் ஒன்றும் சொல்ல வேண்டாம் அவருடைய தொகுப்பே என்றும் அவர் பெருமையை சொல்லும்” என்று குறிப்பு எழுதியிருக்கிறார் அன்றைய வைஸ்ராய் கர்னல் வெல்லீஸ்லி.

எவ்வளவு உண்மையான வார்த்தைகள்?

7/1/17

டிஜிட்டல் பரிவர்த்தனைகள் விலை உயர்வுக்கு வழி செய்கிறதா?


500 மற்றும் 1000 ரூபாய்கள் மதிப்பிழப்பு அறிவிக்கப் பட்டபின் எழுந்த பணத்தட்டுபாடு இன்னும் தொடர்கிறது. செல்லாத ரூபாய் நோட்டுகளுக்கு சமமான புது நோட்டு புழக்கத்தில் விடப்படும் என்று முன்பு அறிவித்த மத்திய அரசு, டிஜிட்டல் பரிவர்த்தனையை கருத்தில் கொண்டு தனது முடிவை மாற்றிவிட்டது.  மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி, செல்லாது என அறிவிக்கப்பட்ட நோட்டுகளுக்குச் சமமான அளவில் புது நோட்டுகள் வெளியிடப்படாது என்றும் . இந்த இடைவெளி டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் நிரப்பப்படும் என்றும் அறிவித்துவிட்டார்.  இது  பொது மக்கள் கார்டுகளின் மூலம் அல்லது மற்ற டிஜிட்டல் முறைகள் மூலம்  தங்கள் பரிவர்த்தனைகளைச் செய்யது கொள்ள  வேண்டிய கட்டாய சூழலை ஏற்படுத்தியிருக்கிறது.
இது எந்த  அளவு வெற்றிபெறும்? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.  இந்தியாவில் 24 கோடிக்கு மேல் கிரிடிட் கார்டுகளும்  6.50 கோடிகளுக்கு மேல் டெபிட் கார்ட்களும் இருப்பதாக ரிசர்வ் வங்கியின்  மார்ச் 2016 அறிக்கை  சொல்லுகிறது. இதில் பயன்படுத்தாத கார்டுகள் 39%க்கும் மேலிருக்கிறது.

 நாட்டின்  மொத்த சில்லறை வணிகம் 12 லட்சம் கோடி என மதிப்பிடப் பட்டிருக்கிறது. இது ஆண்டுக்கு 6 % வளருகிறது என்றும்  உலகிலேயே மிக அதிகளவில் சில்லறை வணிகம் செய்யும் கடைகள் இந்தியாவில் தான் அதிகம் என்றும் அறிவிக்கப் பட்டிருக்கிறது.  இந்த நிலையில் சில்லறை வணிக   பரிவர்த்தனைகள்  முழுவதுமாக இல்லாவிட்டாலும் கூட பெரிய அளவில் இப்போது பயன்பாட்டில் இருக்கும்   கார்ட் களின் மூலம் நடைபெறமுடியாது.
இந்த நிலையை மாற்ற. கார்டு பரிவர்த்தனைகளை  ஊக்குவிக்கும் வகையில், அதற்கான கட்டண குறைப்பு, ஊக்கப் பரிசுகள் போன்றவற்றை அரசு அறிவித்திருக்கிறது.  தற்போது  கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பரிவர்த்தனையின்போது  கட்டணம் ரூப்பய் 2,000 வரை 0.75 சதவீதமாகவும், x2,000க்கு மேல் ஒரு சத வீதமாகவும் உள்ளது. கார்டு பரிவர்த்தனையை ஊக்குவிக்க இந்தக் கட்டணம்  தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதோடு, பிற சேவை கட்டணங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இவை எந்த அளவுக்கு  நுகர்வோருக்கு உதவும்?
 டெபிட்கார்டுகளுக்கான கட்டணங்கள்  ரத்து செய்யப்பட்டதால், நுகர் வோருக்கு எந்தப் பலனும் கிடைக்காது  காரணம் இந்தக் கட்டணம், வணிகர்களுக்கான கட்டணம்.  இது தள்ளுபடி செய்யப் பட்டதால், அவர்கள்  இது நாள் வரை செலுத்திவந்த இந்தக் கட்டணத்தை சம்பந்தப்பட்ட வங்கிக்குச் செலுத்த வேண்டியதில்லை.  ஆனால் அதற்காகப் பொருட்களின் விலையைக் குறைக்கப்போவதில்லை.
டெபிட் கார்டுகளுக்கான இந்தக் கட்டணம் ஒரு சதவீதத்துக்கு மேல் கூடாது என்றபோதும், கிரெடிட் கார்டுகளுக்கு இந்தக் கட்டண உச்சவரம்பு இல்லை. இது சில வங்கிகளில் 2.5 % வரை இருக்கிறது. . இதனால் தான் இன்று பல இடங்களில் கார்ட்களுக்கான வங்கி கட்டணத்தை நகர்வோர்களிடம் வசூலிக்கிறார்கள். இந்த முறையில் பெரிய மாற்றம் வராதவரை நுகர்வோர் கார்ட் முறைகளுக்கு மாறுவதால்  வாங்கும் பொருட்களுக்கு  அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும்.

இந்தக் கட்டணங்களில் பெரிய பகுதி  கார்ட் முறையில் செலுத்த உதவும் பாயிண்ட் ஆப் சேல்ஸ் என்ற கருவி வழங்கியிருக்கும் நிறுவனத்துக்கும் வங்கிகளுக்கும் போகிறது. இதனால் அவர்களின் வருமானம் உயரும். நுகர்வோர்  ரொக்கத்துக்கு வாங்குவதை விட அதிக விலையாக இந்த கட்டங்களைக்  கொடுக்க வேண்டியிருக்கும்.
இதைத்தவிர வங்கிகள் காரட்டுகளை வழங்க ஆண்டு கட்டணம் வசூலிக்கின்றன. இதற்கு ரிசர்வ் வங்கியின் விதிகள் எதுவும் இல்லாதால், இந்தக் கட்டணம்  எல்லா வங்கிகளிலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. மேலும் இந்தக் கட்டணங்கள்  கார்டை பயன்படுத்தாவிட்டாலும் செலுத்த வேண்டும். சில வெளிநாட்டு வங்கிகள் கார்டை பயன்படுத்தாற்காகவும்  அதிக கட்டணம் வசூலிக்கிறது.
கார்ட் பரிவர்த்தனைகளுக்கு சந்தை தயாராகயிருக்கிறதா?
இப்போது நாடு முழுவதிலும் 15.1 லட்சம் ஸ்வைப் மிஷின்கள் இருக்கின்றன.  அரசின் திட்டப்படி கார்ட் மூலம் வணிகம் பரவலாக அதிகரிக்க வேண்டுமானால் இன்னும் 20 லட்சம் மிஷின்கள்  உடனடியாக வேண்டும். ஆனால் இதைச் செயல்படுத்த  குறைந்தபட்சம் ஒராண்டு ஆகும் என்கிறார் பாரத ஸ்டேட்வங்கியின்  முதன்மை பொருளாதாரஆலோசகர்  திரு எஸ். கே கோஷ். மேலும்   அதிவேக இன்டர்னெட் இணைப்புகள் இல்லாமல் இது வெற்றிகரமாகச் சாத்தியமில்லை. மின்சாரமே பிரச்னையாக இருக்கும் பல கிராமப் பகுதிகளில் இது மிகப்பெரிய சவாலாக எழும்.
ரிசர்வ் வங்கியின் அறிக்கையின் படி  நோட்டுகளின் மதிப்பழிப்புக்கு  முன் ஒரு டெபிட் கார்டில் மாதத்துக்கு சராசரியாக 1500 ரூபாய் பரிவர்த்தனை நடந்து கொண்டிருந்தது.  அறிவிப்புக்குப் பின்னர் இந்த எண்ணிக்கையில் பெரும் மாற்றமில்லை. அதாவது கார்டுகளை ஏற்கனவே பயன்படுத்திக்கொண்டிருந்தவர்களை விடப் புதிதாக  அதிகமானோர் இதைப் பயன்படுத்தவில்லை.

 

வாலட் முறை எளிதா?

பிரதமர்  ஒரு கூட்டத்தில் பேசும்போது “கார்டுகள் கூட அவசியமில்லை. உங்கள் போன்களை பயன் படுத்தி பரிவர்த்தனைகளைச் செய்யுங்கள்” எனத் அறிவித்தார். இந்த ‘இ வால்ட்’ முறையிபடி உங்களுக்கு கார்டுகள் வேண்டாம். உங்கள் வங்கி கணக்கு, அல்லது அதுபோன்ற ஒரு அமைப்பில்  நீங்கள் வைத்திருக்கும் பணத்திலிருந்து போன் மூலமாகவே விற்பனையாளர்  வங்கிக்கணக்கு பணத்தை நேரிடையாகச்  செலுத்த முடியும்.
இது எந்த அளவுக்குச் சாத்தியம்? இதற்கு ஸ்மார்ட் போன்கள் தேவை  என்பது மட்டுமில்லை அதை வங்கி பரிவர்த்தனைக்கு  எளிதாகக் கையாள  எல்லோருக்கும் தெரிந்திருக்கவும் வேண்டும். இந்தியாவில்  மொபையல் போன் பயன்படுத்துபவர்கள் 100கோடிக்கும் மேல் என்பதும், உலகில்  இந்தியா 2 வது இடத்தில் இருக்கிறது என்பதும்  உண்மை  என்றாலும்  அதில் ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் 3 கோடிகளுக்கும் குறைவு. முக்கிய காரணம் விலை..
 இவர்கள் ஸ்மார்ட் போன் வாங்குது மட்டுமில்லாமல் இணைய வேகத்துக்குஏற்ப டேட்டா கட்டணமும் செலுத்த வேண்டும். இந்த டேட்டா கட்டணத்துக்காக  கூடுதலாக மாத பட்ஜெட்டில் ஒரு தொகையை ஒதுக்கினால்தான்  இ வாலட் முறையைப் பயன்படுத்த முடியும்

 இந்தச்சூழலில் அரசு என்ன செய்ய வேண்டும்?


மிகப் பெரிய அளவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் பயன்கள் பற்றி  தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும், குறிப்பாக கிராமமக்களிடம் இதை ஒரு இயக்கமாகவே எடுத்துச் செல்லவேண்டும்.
கட்டணம் வசூலிப்பதால்,  சிறு வணிகர்கள் ஸ்வைப்பிங் மிஷின்களை நிறுவத் தயங்குகிறார்கள், இதைத் தவிரிக்க வங்கிகள் குறைந்த கட்டணத்தில் இதை வழங்கவேண்டும்  அவர்கள் வங்கிக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களையும் வெகுவாக குறைக்க வேண்டும். டிஜிட்டல் முறை  மூலம் நடந்த பரிவர்த்தனைகளுக்கு 80 c பிரிவின் கீழ் வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும்.
இதுபோன்ற திட்டங்களை அறிவிக்காமல், லாட்டரி பரிசுகளை மட்டும்  அறிவிப்பதினால் பயன் ஏற்படாது. டிஜிட்டல்  பண பரிமாற்றத்தினால்  மக்கள்  செலுத்த வேண்டிய  மறைமுக கட்டணங்கள், வேகமில்லாத இணைய இணைப்புகள்  போன்று  சந்திக்கும் பல கஷ்டங்களை  நீக்க உடனடியாக ஆவன செய்யாவிட்டால் வர்த்தக முடக்கமும்  பணத்தட்டுபாடும்   அரசின் மீது மக்களின்  வெறுப்பும் தொடர்கதையாகிவிடும்.

2/1/17

"மேகங்கள் வாழும் சொர்க்கம்"- டிஸர் 3






 ஸ்படிகம் போல ஜலம் எனச் சொல்லுவதைக்கேட்டிருக்கிறேன். இந்தப் பயணத்தில் அதைப் பார்க்கும் ஒரு வாய்ப்பு. ஷில்லாங்கிலிருந்து 85 கீமியில் ஒரு மலைச்சிகரத்துக்கு அருகில் ஒடுகிறது துவாக்கி (DAWKI) என்றழைக்கப்படும் நதி. மிக மிக அமைதியாக அழகாக இருக்கிறது, (Jaintia Hills Dawki-Tamabil) ஜெய்நிதா, துவாக்கி என்ற இரண்டு மலைச்சரிவுகளுக்கிடையே ஓடும் இந்த நதி பங்களாதேஷ் வரை செல்லுகிறது. இந்த மலைகளை இணைக்கும் பாலத்தின் ஒரு முனையில் தான் இந்திய -பங்களாதேஷ் எல்லை
இருபுறமும் கட்டிய கல்சுவர்கள் போல செதுக்கிவைக்கபட்ட வடிவில் நிற்கும் மலைகளின் பாறைகள். துவாக்கி கிராமப் பகுதியில் ஓடும் ஆறு இது. மலைச்சரிவுகளில் இறங்கி இந்த ஏரியின் கரையை அடைய வேண்டும். அங்குள்ள நீர் தெள்ளத்தளிவாக இருக்கிறது. மரகதப்பச்சை வண்ணத்தில் நீர் மிக மெல்லிய வேகத்தில் போய்க்கொண்டிருக்கிறது. கண்ணாடி மூடியிட்ட தொட்டிக்குள் பார்ப்பதுபோல் பளிச்சென்ற தெளிவு. அருகில் போகும் படகின் அடிப்பகுதியும் அதன் நிழல் நீரின் ஆழத்திலிருக்கும் மணல் தரையில் விழுவதையும் துல்லியமாகப் பார்க்க முடிகிறது. படகு செல்லுமிடத்தில் நீரின் ஆழம் 12 அடிக்கும் மேல் என்று சொன்னார்கள். ஆனால் கீழே கிடக்கும் பளிங்கு கற்கள் தொட்டுவிடும் தூரத்தில் இருப்பது போல் பளிச் சென்று தெரிகிறது. துள்ளிவிளையாடும் மீன்களைக் கண்ணாடி பெட்டிக்குள் பார்ப்பதைப் போல பார்க்க முடிகிறது. ஓரிடத்தில் நதி வழிந்து சற்று கீழே பாயும் முனையில்தான். பங்களாதேஷின் எல்லை துவங்குகிறது. அதைத்தாண்டி அனுமதியில்லாத படகுகள் செல்லமுடியாது. 
 ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நதி என்பதையே உணர முடியாத அளவிற்கு அமைதியாக இருக்கும் இந்த ஏரியில் கிடைக்கும் மீன் மிகச் சுவையானதாம். ஆனால் எளிதில் தூண்டிலில் சிக்காதாம். அதனால் படகுகளில் அசையாமல் சிலைகளைப் போல் மணிக்கணக்கில் உட்கார்ந்து உள்ளூர் மக்கள் மீன் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள் ஏடிம் கியூ ,2000க்கு சில்லறை கிடைக்காத பிரச்சனைகள் எல்லாம் இல்லாத கவலையில்லாத மனிதர்கள். 
ஏரியின் நடுவே ஒரு திட்டு. அதில் ஒரு ஸ்நாக் கடை. அந்த ஆள் இல்லாத கடையில் வெறும் காப்பிஆற்றும் நிலை, பற்றி கவலைப்படாமல் சின்ன சோலர் பேனலில் இணைக்கப்பட்டிருக்கும் சிஸ்டத்தில் சுகமாகப் பாட்டுக் கேட்டுக்கொண்டிருக்கிறார். அதன் முதலாளி.
வெளிநாட்டிலிருந்து டிரெக் செய்ய வருபவ ர்களுக்கு தங்க டெண்ட் வாடகைக்குத் தருகிறார். ஒரு நாளைக்கு 1000 ருபாயாம். பிரஷ்ஷாக பிடித்த மீன்களைச் சமைத்து சாப்பாடும் கொடுப்பாராம்



  மலையிருக்கும் ஒரு சுனையிலிருந்து குடிநீரை நதியின் வழியே குழாய் மூலம் கொண்டு வந்து அதை பல துளைகளிட்ட ஒரு மூங்கிலில் இணைத்து 24x7 குடிநீர் வசதி செய்துண்டிருக்கும் புத்திசாலி
நதியில் படகு போகும் போது தலைக்கும் மேலே தெரிந்த பாலம் ஒரு இன்டர்நேஷன்ல் பிரிட்ஜ் என்றார் படகுக்காரர். அது என்ன இன்டர்நேஷனல் பாலம் என்று போய்ப் பார்க்கலாமா?
(வடகிழக்கு மாநிலங்களில் பார்த்தது, கேட்டது. கற்றது. பெற்றது தொலைத்தது பற்றி எல்லாம் விரிவாக புத்தாண்டில் எழுதவிருக்கிறேன்


. அதற்குமுன் இந்த குறிப்புகள்- 
சினிமாக்கார்கள் பாஷையில் சொன்னால்- டீஸர்கள் 
மேகங்கள் வாழும் சொர்க்கம் டிஸர் 3 இது)



முக நூலிலில் இருந்து



Anand Balasubramanian The write up matches the beauty of the images ! Awesome!
Shahjahan R ஒவ்வொரு டீசரும் செம்மை.
Mathanagopal Nagarajan டீஸர் அருமை. ஆவலை தூண்டுகிறது!
Anbu Jaya அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
Nana Shaam Marina ஆஹா... அந்த நதி போல மெல்லிய நடை...இடையில் ஏடி எம்..மேட்டர்...கற்றது...தொலைத்தது...என்ன ஒரு Satire த்தனம்...ப்ரமாதம்...சார்...# i m waiting
Valiyur Subramanian எனக்கொரு புத்தகத்தை இப்போதே பதிவு செய்து கொள்கிறேன்.
LikeReply23 hrs
Uma Maheswari என்ன சார் இது. ஒவ்வொரு டீஸரிலும் அங்கே போவதற்கான ஆவல் அதிகரிக்கிறதே. மேகலாயாவின் சுற்றுலா தூதரோ?
LikeReply21 hrs
Moorthy Athiyanan சிலிர்கிறது ஷில்லாங் !அருமை சார்.மீன்,மக்கள் ,டீக்கடைமூங்கில் பைப் ,....தாகம்!!!!
LikeReply20 hrs
Subramaniyam Rangaswamy வாழ்த்துகள்
LikeReply19 hrs
MP Udayasooriyan ஸ்படிகம் போன்ற உங்கள் எழுத்தில் அந்தப் பயண சுகத்தை அப்படியே பெறுகிறேன் சார்...
LikeReply118 hrs
Vedha Gopalan அருமையான டீஸர், உடனே பதிவோடு வரவும்
LikeReply17 hrs
Revathi Sundaram Wow.so beautiful.
LikeReply16 hrs
Raghunathan Vaidyanathan Dear Ramanan Sir,
Happy new year 
...See More
LikeReply15 hrs
Narain Seshadri Happy New YEar Ramanan Very nice discription - quite inviting to visit the place - but I think I have crossed the age to venture
LikeReply14 hrs
Sridhar Trafco டீசர் அருமை.. இடமும் அற்புதம். உங்க பதிவிற்கு காத்திருக்கிறோம்...
LikeReply111 hrs
Isha Mala YAK YAK...  (அதாவது yaanum avvanname korum!)
LikeReply7 hrs