21/6/17

அமெரிக்க அதிபரின் அடுத்த அதிரடி.. !




அதிரடி அறிவிப்பு மன்னராகவே ஆகிவிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அண்மையில்  வெள்ளைமாளிகையில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில், “அமெரிக்கர்களின் நலனைக் கருத்திற்கொண்டும், மூடப்பட்ட தொழிற்சாலைகளையும், வேலைவாய்ப்பை மீண்டும் உருவாக்கும் வகையில் “பாரிஸ் காலநிலை உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா வெளியேறுகிறது” என்று திடுக்கிடும் முடிவை  அறிவித்திருக்கிறார். 
அமெரிக்க அதிபராகக் கடந்த ஜனவரி மாதம் டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து அந்நாட்டு மக்களுடனும், சர்வதேச நாடுகளுடனும் மோதல் போக்கையே காட்டி வருகிறார். குறிப்பாக அறிவியல்ரீதியாக நடைமுறைப்படுத்த இயலாததாகக் கூறப்படும் அமெரிக்கா - மெக்ஸிகோ எல்லைச்சுவர் விவகாரம், முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்கள் மீதான பயணத்தடை, ஒபாமாகேர் என்னும் சுகாதாரக் காப்பீட்டுத் திட்ட ஒழிப்பு, ஊடகங்கள் மீதான பாகுபாடு மற்றும் நீதித்துறையின் மீது வெறுப்புணர்வு,  போன்ற அறிவிப்புகளின் பட்டியலில் லேட்டஸ்ட் இது. 
 அதிவேகமாக மோசமடைந்துவரும் புவியின் காலநிலை மாற்றத்தைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்காக உலகின் 195 நாடுகள் இணைந்து உருவாக்கிய பாரிஸ் காலநிலை உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாகச்சொல்லும்,  உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும்  இந்த அறிவிப்பில் அவர் இந்தியாவைக் குறிப்பாக  தாக்கியிருக்கிறார்.
அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் கோபத்தைப் புரிந்துகொள்ள பாரிஸ் காலநிலை உடன்படிக்கை என்ன என்பதைப் புரிந்து கொள்ளுவது அவசியமாகிறது. 
நமது பூமியினுடைய மேற்பரப்பின் சராசரி வெப்பநிலை 14 டிகிரி செல்சியஸ் ஆகும். ஆனால், அது மேலும் ஒரு டிகிரி செல்சியஸ் அதிகரித்ததன் விளைவாக வெப்பநிலை அதிகரித்தல், பனிப்பாறைகள் உருகுதல், கடல் நீர்மட்டம் உயருதல், பேய் - மழை, கடும் வறட்சி, நோய்கள் போன்றவை பல வகையில் அதிகரித்து நம்மை அச்சுறுத்திக்கொண்டிருக்கின்றன. தொடரும் பாதிப்புகளைத் தவிர்க்கும் பொருட்டு ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை பணித்திட்டப் பேரவையானது
(United Nations Framework Convention on Climate Change – UNFCCC) கடந்த 1992-ம் உருவாக்கப்பட்டது. இது, தொடர்ந்து 23 ஆண்டுகள் ஆம் 23 ஆண்டுகள் !  உலக நாடுகளுடன்  பல நகரங்களில் பேச்சு வார்த்தைகள் நடத்திவந்தது.  ஒரு நாட்டின் கருத்தை சில அல்லது பல நாடுகள் ஏற்காமல் தொடர்ந்து  அடுத்தடுத்த மாநாட்டிற்கு ஒத்திவைக்கப்பட்ட விஷயம் இந்த  காலநிலை உடன் படிக்கை.     2015ல் பாரிஸில்  7 நாட்களுக்குத் திட்டமிட்டு 11 நாட்களாக  நீடித்து நடந்த பேச்சுவார்த்தைக்குப்  பிறகு, 2015 டிசம்பரில் பாரீஸில் நடந்த காலநிலை மாநாட்டில்  வரலாற்றுச் சிறப்புமிக்க “பாரிஸ் உடன்படிக்கை” உருவானது.  அது உலகின் 195 நாடுகளினால் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இதில் இந்தியாவின் பங்களிப்பு கணிசமானது. வளரும் நாடுகளின் சார்பாக வாதிட்ட இந்தியா வளர்ந்த நாடுகள் எப்படிச் சூழலை மாசு படுத்தியிபின் வளரும் நாடுகளின் மீது  கட்டுப்பாட்டை கொண்டுவருகிறது என்பதையும். இதைச் செயலாக்க வளரும் நாடுகளுக்குக் கொடுக்க  வளர்ந்த நாடுகள் பெரிய அளவில் நிதியுதவி அளிக்க வேண்டும் என்றும் வாதாடி வென்றது. 
குறிப்பாகப்  வாயுக்களை அதிக அளவில் வெளியிடும் அமெரிக்கா போன்ற நாடுகளானது, இந்தியா, பிரேசில் போன்ற வளரும் நாடுகளுக்குத் தேவையான நிதியுதவியை அளிக்கவேண்டும்  என்பது இந்த  உடன் படிக்கையின்  முக்கிய அம்சம். 
இந்த உடன்படிக்கையின்படி, பூமியின் மேற்பரப்பின் சராசரி வெப்பநிலையை 16 டிகிரி செல்சியஸைத் தாண்டவிடாமல் தடுக்கும் வகையில், அதற்கு முக்கியக் காரணமான  வாயுக்களை வெளியிடும் அளவைக் குறைக்க உலக நாடுகள் முடிவு செய்திருந்தன.  இதன் படி புவி வெப்பமயமாவதை 2 டிகிரி செல்சியஸ் குறைக்க வேண்டுமென்று பாரிஸ் பருவநிலை மாற்ற மாநாட்டில் வரைவு ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டது.
  .இதன்படி, புவி வெப்பமயமாவதைத் தடுக்க 2020-ஆம் ஆண்டு முதல் வளரும் நாடுகளுக்கு ரூ.6,70,000 கோடி ஆண்டுதோறும் வழங்கப்படும்.. வரைவு ஒப்பந்தத்தில் சொல்லியிருந்த படி புவி வெப்பமயமாவதை 2 டிகிரி செல்சியஸாகக் குறைக்க வேண்டுமென்பதை ஏற்றால்  இந்தியா, சீனா போன்ற வளரும் நாடுகளில் நிலக்கரி போன்ற எரிபொருளைப் பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்படும்.எனவே, வளரும் நாடுகளான இந்தியாவும், சீனாவும் இந்த அளவைக் குறைக்க வற்புறுத்தின.  இறுதியில் அதை 1,5 டிகிரி செல்சியஸ் ஆக குறைக்க ஒப்புக்கொண்டன. 

அந்த. மாநாட்டில் எட்டப்பட்டுள்ள உடன்பாட்டை இந்தியா உள்பட 195 நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன. “இந்த உடன்பாடு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது” என்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா பாராட்டி. “அனைவரும் ஒன்றானால் என்ன நடக்கும் என்பதை நாம் உலகிற்குக் காட்டியுள்ளோம்” என்று பெருமையுடன் அறிவித்தார்.  தொடர்ந்து நாடுகள். அதிகாரப்பூர்வமாக உடன்பாட்டில் கையெழுத்திட்டன.  
இந்த ஒப்பந்தத்திலிருந்தான் விலகுவதாக இப்போது  அறிவித்திருக்கிறார் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.  இந்தத் தீர்மானத்தினால் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு குறையும் என்பது அவரது கணிப்பு.  மேலும் பாரீஸ் காலநிலை உடன்படிக்கையின் காரணமாக அமெரிக்கா புதிய அனல்மின் நிலையங்களைத் திறப்பது தடுக்கப்படுவதாகவும் ஆனால் அதே நேரத்தில் இந்தியா ஒவ்வொரு வருடமும் பல பில்லியன் டாலர்களை நிதியை வளர்ந்த நாடுகளிடமிருந்து பெற்று,  2020-ம் ஆண்டுக்குள் இந்தியா தனது அனல்மின் நிலையங்களை இருமடங்காக்கிக் கொண்டுவிடும் என்பது தான் அவரின் கோபத்துக்கு காரணம்  இப்படி இந்தியாவின் மீது இருக்கும் வெறுப்பும், அதற்கு பணம் கொடுக்க வேண்டியிருக்கிறதே என்ற நிலையும்  இந்த அதிரடி அறிவிப்புக்கு ஒரு காரணம். .
வளர்ந்த நாடுகள் செலுத்தப்போகும் பணம் அவர்கள் சுற்று சூழலின் வெப்பளவை இதுநாள் வரை தொடர்ந்து அதிகரித்தற்காக  தரும் ஈடுதான் என்ற புரிதல் அவருக்கு இல்லை எனச்சொல்லிவிட முடியாது.. அதிபர் தேர்தலுக்கு பல நாள் முன்னரே அவர் தனது டிவிட்டரில் பாரிஸ் மாநாட்டைக் கடுமையாக சாடியிருக்கிறார்.  தேர்தல் அறிக்கையிலும் சொல்லியிருந்தார். ஆனால்   அவருடைய தேர்தல் அறிக்கையை  பலர் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை. 
இந்த அறிவிப்பைப் பல உலக நாடுகளின் தலைவர்கள் மட்டுமில்லை அமெரிக்காவின்  கூகுள்.  மைக்ரோசாப்ட் போன்ற பெரும் தொழில் நிறுவனங்களின் தலைவர்களும்  கண்டனம் செய்திருக்கின்றனர்.  அவரது கட்சியின் அறிவு ஜீவிகளும் எதிர்க்கிறார்கள். 
 ஐக்கிய நாடுகளின் ஆதரவுடன் எழும் இந்த மாதிரி உடன்படிக்கைகளிலிருந்து  கையெழுத்திட்ட நாடுகள் வெளியேற விரும்பினால் அதற்கான விதிமுறைகளையும் அதில்  சேர்க்கப்பட்டிருக்கும். அதன் படி இந்த உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா வெளியேற வேண்டுமானால் அதற்கான ஒராண்டு நோட்டிஸையே 2019 நவம்பரில் தான் கொடுக்க முடியும். அதற்கு ஒராண்டுக்குபின்னர் அதாவது 2020 நவம்பருக்குப் பின்னர்தான் வெளியேற முடியும். டிரம்பின் பதவிக்காலம் 2020 நவம்பர் 4 வரைதான்.
இது அவருக்குத் தெரியாதா?  இதுமட்டுமில்லை. தெரிந்த விஷயங்களையும் தெரியாத மாதிரி அறிவிப்பது தான் அதிரடி அரசியல் என்பதும் அதிபருக்குத் தெரியும். 

9/6/17

டிரம்ப் தான் பிரச்சனையா?



 கடந்த சில வாரங்களாகத் தலைப்பு செய்தியாக அடிபட்டுக்கொண்டிருக்கும் இதைப் பற்றி ஓர் அலசல்
அமெரிக்காவில் அமெரிக்கர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு என்ற கோஷத்துடன் தேர்தலில்  வென்ற, அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அரசு பதவியேற்ற பின், அங்கு பணியாற்றும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும், 'எச் - 1 பி' விசாக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.                     
மேலும், 'வெளிநாடுகளைச் சேர்ந்த கம்ப்யூட்டர் புரோகிராமர்களை, எச் - 1 பி விசா மூலம் அமெரிக்காவுக்கு வரவழைத்துப் பணியமர்த்தும் போது, அவர்களுக்குக் கூடுதல் சம்பளம் தர வேண்டும்' எனவும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதனால், அமெரிக்காவில் செயல்பட்டு வரும், இந்திய, ஐ.டி., நிறுவனங்கள், இந்தியாவில் இருந்து ஊழியர்களைப் பணியமர்த்துவதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதையடுத்து, கூடுதல் சம்பளம் மற்றும் விசா கெடுபிடி காரண மாக, பணியில் இருக்கும் ஊழியர்களை ஆட் குறைப்பு செய்ய, ஐ.டி., நிறுவனங்கள் முடிவு செய்துஉள்ளன.
இன்போசிஸ், டெக் மகேந்திரா உட்பட, ஏழு முக்கிய, ஐ.டி., நிறுவனங்கள், இந்த ஆண்டில், இன்போசிஸ், டெக் மகேந்திரா உட்பட, ஏழு முக்கிய, ஐ.டி., நிறுவனங்கள், இந்த ஆண்டில், 56 ஆயிரம் ஊழியர்களை, ஆட்குறைப்பு செய்ய திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகி யுள்ளது.
இது எந்தளவுக்கு உண்மை? என்பதை ஆராய்ந்ததில் தெரிந்த விஷயங்கள்
இந்திய - ஐ.டி., நிறுவனங்கள், ஆட்குறைப்பு நடவடிக்கையை, அமெரிக்க தேர்தலுக்கு முன்னரே துவங்கிவிட்டன. அமெரிக்க அதிபரின் அறிவிப்பால்  அது தலைப்பு செய்தியாகியிருக்கிறது.

கடந்த பிப்ரவரி மாதம் நாஸ்காம் இந்தியா தலைமைப்பண்பு மாநாட்டில், ஐடி துறைப் பணியாளர்கள் சந்திக்கவிருக்கும் சவால்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதில், அடுத்த மூன்றாண்டுகளில் ஐடி துறையில் பணியாற்றும் பலரும் தேவையற்றவர்களாகிவிடுவார்கள். நவீனத் தொழில்நுட்ப மாற்றங்களால், 50-60 சதவிகிதம் வரையிலான பணியாளர்களைத் தக்கவைப்பதில் நிறுவனங்கள் கடும் சவால்களைச் சந்திக்க நேரிடும். புதிதாகக் கற்றுக்கொள்வதில் உள்ள சிரமங்களால், 35 வயதுக்கு மேற்பட்டோர் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. மேலும், இனி வரும் காலங்களில் வேலை இழக்கும் ஐடி நிறுவன ஊழியர்களுக்கு வேறு வேலை கிடைப்பதிலும் பல சிரமங்கள் உள்ளன’ எனக் குறிப்பிட்டு, மெக்கின்ஸி நிறுவனம் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.
 ஓராண்டுக்கும் மேலாக, தகவல் தொழில் நுட்பம் சார்ந்த புதிய வாய்ப்புகள், வெளிநாடு களைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு அதிக அளவில் கிடைத்து வருகின்றன. வெளிநாட்டு நிறுவனங்களுடன் போட்டி போட்டு, புதிய தொழில் வாய்ப்புகளை பெறும் நிலையில், இந்திய - ஐ.டி., நிறுவனங்கள் இல்லை.
சர்வதேச போட்டி, தொழில் மந்தநிலை போன்ற காரணங்களால், இந்திய, ஐ.டி., துறை, கடுமை யான நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. பல் வேறு வாய்ப்புகளும், வெளிநாட்டு நிறுவனங்களுக்குச் செல்கின்றன. இந்நிலையில்,அமெரிக்காவில், அதிபர் டொனால்டு டிரம்ப் அரசு, எச் - 1 பி விசாவுக்கு விதித்து வரும் கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக, ஊழியர்களுக்கான செலவு அதிகரித்து வருகிறது; செலவைக் கணிசமாக குறைக்க வேண்டிய கட்டாயத்தில்  இருக்கும் நிறுவனங்கள் இதைப் பயன்படுத்திக்கொண்டு ஊழியர் களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நடவடிக் கையில், இந்திய - ஐ.டி., நிறுவனங்கள் இறங்கி யுள்ளது., எனவே, திறன் குறைந்த மற்றும் மிக அதிக சம்பளம் பெறும் ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இந்திய - ஐ.டி., துறை.     நாஸ்காம்  மதிப்பீட்டின் படி, இந்த ஆண்டில், 56 ஆயிரம் ஊழியர்கள் வரை, ஆட்குறைப்பு செய்யப்பட வாய்ப்புள்ளது

ஆட்குறைப்பு காரணம் இது மட்டுமில்லை. நாம் சர்வதேச தேவைகளுக்கெற்ற்ப அப்டேட் ஆக வில்லை என்பது தான்  உண்மை என்கிறார். வா. மணிகண்டன். இவர் பல பயிற்சிகள் பெற்ற பென்பொறியாளர். பங்களூருவில் பணியிலிருக்கிறார்.
“கடந்த ஏழெட்டு ஆண்டுகளில் தகவல் தொழில்நுட்பத்துறை வெகு வேகமாக புதிய பரப்புகளை அடைந்திருக்கிறது. ஆராய்ச்சிக் கட்டுரைகளில் மட்டுமே மொட்டுகளாக இருந்த சொற்கள் எல்லாம் இன்றைக்கு பூத்துக் காயாகி கனியாகி நிற்கின்றன. இந்தத் துறையின் வேகம் அலாதியானது. ஆனால் நாம்தான் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக எதைக் கற்றுக் கொண்டிருந்தோமோ அதையே கற்றுக் கொண்டிருக்கிறோம். இந்திய வேலைச் சந்தையில் தகவல் தொழில்நுட்பத்துறையின் புதிய பிரிவுகளுக்கு ஆட்கள் இல்லை என்று பேசத் தொடங்கியிருக்கிறார்கள். வேலையில் இருப்பவர்களும் சரி, மாணவர்களும் சரி புதிய பிரிவுகளைப் பற்றி தெளிவான புரிதல்களை உருவாக்கிக் கொள்ள வேண்டிய அவசியம் உண்டாகியிருக்கிறது.

இன்றைக்கு மென்பொருள் துறையில் வேலையில் இருக்கிறவர்களின் பெரிய பிரச்சினை தம்மை ஒரு மென்பொருளோடு பிணைத்துக் கொள்வதுதான். ஆரக்கிளிலில் வேலை செய்தால் அதை மட்டுமே தெரிந்து வைத்துக் கொண்டால் போதும் என்கிற மனநிலை பலருக்கும் இருக்கிறது. மென்பொருள்களைத் தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம்தான் என்றாலும் அது மட்டுமே போதுமானது இல்லை. இன்றைக்கு ஆரக்கிள் இருக்கிறது. நாளைக்கு டேரக்கிள் என்று புதியதாக ஏதேனும் வரக் கூடும். எந்தவொரு மென்பொருளையுமே பத்து நாட்கள் மண்டையை உடைத்தால் கற்றுக் கொள்ள முடியும். அது பெரிய காரியமே இல்லை. அப்படியென்றால் எது பெரிய காரியம்? நம்முடைய துறை சார்ந்த அறிவை வளர்த்துக் கொள்வது. இன்றைக்கு தொலைத் தொடர்புத்துறைக்கான ப்ராஜக்ட் ஒன்றை .net ஐ வைத்துச் செய்து கொடுத்தால் .netஇல் பிஸ்தாவாக இருப்பதைவிடவும் தொலைத்தொடர்புத் துறையில் பிஸ்தாவாக இருப்பதுதான் பெரிய காரியம். உற்பத்தி (manufacturing), ஊர்தி (automobile) என எந்தத் துறையில் வேலை செய்கிறோமோ அதைக் கற்று வைத்துக் கொள்ள வேண்டும். domain knowledge என்பார்கள். அக்குவேறு ஆணி வேறாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்படியொரு அறிவை வளர்த்துக் கொண்டவர்கள் என்னதான் மென்பொருள் மாறினாலும் சமாளித்துவிடலாம்.

புதிதாக என்ன களம் உருவானாலும் அதை நம் துறையில் எப்படிப் பயன்படுத்த முடியும் என்று தெரிந்து வைத்திருக்கிற ஆட்களுக்கு அவசியம் இருந்து கொண்டேயிருக்கும். அப்படிப் பட்டவர்களுக்கு ஆயிரம் வாய்ப்புகளா என்று கேட்டால், ஆம், ஆயிரம் வாய்ப்புகள்தான். என்கிறார்.
கிபி 2000 ஆம் ஆண்டுவாக்கில் சி, சி++, ஜாவா அதன் பிறகு .net என்று படித்துக்
கொண்டிருந்தோம். இன்றைக்கும் கிட்டத்தட்ட அதே நிலைமையில்தான் இருக்கிறோம். கல்லூரிகளில் இத்தகைய பாடங்களைத்தான் சொல்லித் தருகிறார்கள். Cloud, IoT, Business Intelligence மாதிரியான புதிய களங்களைக் கல்லூரிகள் சொல்லித் தருவதில்லை. சுடச்சுட வளர்ந்து வரும் பிரிவுகளைப் பற்றிக் கற்றுத் தருகிற பயிற்சி நிறுவனங்களும் வெகு குறைவு.  என்கிறார் திரு  குஹன் ரமணன். இவர் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளை  உலகளவில் மேற்கொள்ளும் ஒரு நிறுவனத்தின் இயக்குநர்.
 எனவே பிரச்சினைகளுக்கு டிரம்ப் மட்டுமே காரணம் இல்லை நிலவும்  டிரெண்டும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்




31/5/17

யார் நமது அடுத்த ஜனாதிபதி ?


இரு அணிகளின் இணைப்பு  நிகழாதிருப்பதைக் கண்டு  ஒபிஎஸ் கலங்கியிருப்பதற்கும், இபிஎஸ் கவலைப்படாதிருப்பதற்கும்  திமுகவின் செயல் தலைவர் திரு ஸ்டாலின் கலைஞரின் வைரவிழாவினை அகில இந்திய  கட்சி தலைவர்களின் பங்கேற்புடன் பிரம்மாண்டமாக கொண்டாடத் திட்டமிட்டிருப்பதற்கும் ஒரே  காரணம் 

இந்தியாவின் 14வது ஜனாதிபதி யார்? என்ற கேள்விதான்.  
திரு பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் 2017 ஜூலை 25ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே அதற்கு முன் புதிய ஜனாதிபதியைத் தேர்வு செய்ய வேண்டும். தேர்தல் நடைமுறைகளை ஜூனில் தொடங்க வேண்டும். 
வெற்றிக்குதேவையானஓட்டுகள்
ஜனாதிபதி தேர்தல் நடந்தால் இந்தியாவில் உள்ள 4120 எம்எல்ஏக்கள் மற்றும் 776 எம்பிக்கள் வாக்களிப்பார்கள். எம்எல்ஏக்களின் ஒட்டுமொத்த வாக்குமதிப்பு 5,49,474. எம்பிக்களின் வாக்கு மதிப்பு 5,49,408. ஒட்டுமொத்தமாக எம்பி, எம்எல்ஏக்கள் என 4896 பேர் வாக்களிப்பார்கள். அவர்களின் வாக்குமதிப்பு 10,98,882. இதில் பாதிக்கும் மேல் அதாவது 5,49,442 வாக்கு பெறும் வேட்பாளர் வெற்றி பெறுவார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த 5 மாநில தேர்தல்  முடிவுகளில் உபியை பா.ஜனதா ஒட்டுமொத்தமாக அள்ளிக்கொண்ட பின்னர்  அதன்  ஜனாதிபதி தேர்தல் வாக்கு வலிமை அதிகரித்துவிட்டது  

தற்போதுள்ள நிலையில் பா.ஜனதா கூட்டணி பலம் மக்களவையில் 2,37,888ஓட்டுகளும், ராஜ்யசபையில் 49,560 ஓட்டுகளும், மாநில சட்டப்பேரவையில் 2,39,923 ஓட்டுகளும் உள்ளன. மொத்தம் பா.ஜனதா அணிக்கு தற்போது 5,27,371 ஓட்டுகள் உள்ளன. காங்கிரஸ் மற்றும் பிறகட்சிகளுக்கு 5,68,148 ஓட்டுகள் உள்ளன. எனவே வித்தியாசம் 40,777 ஓட்டுகள் தான்.
இந்த  40777 ஒட்டுக்களை எப்படியாவது சேகரித்து தங்கள் வலுவைக் காட்ட  பா.ஜனதா களம் இறங்கியுள்ளது. அதன் முதல் குறி அதிமுக. காரணம் ஜனாதிபதி தேர்தலில் அதிமுகவின் இரு அணிகளுக்கும் 134 எம்எல்ஏக்கள் உள்ளனர். மேலும் 50 எம்பிக்கள் உள்ளனர். இவர்களின் ஒட்டுமொத்த ஓட்டு மதிப்பு 58,984. இந்த ஓட்டுக்கள் முழுமையாகவோ அல்லது கணிசமாகவோ கிடைத்தால்தான்  பா. ஜா காவின் வேட்பாளரின் வெற்றியை உறுதி செய்யமுடியும் 

ஜெயலிதா இருந்திருந்தால் இந்த நிலையையே காட்டி பாஜாகாவையே மிரட்டியிருப்பார். ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்வதைக்கூட கையில் எடுத்திருப்பார்.. ஆனால் மாறாக  இன்று  தற்போதைய சூழலில் அதிமுக  இரு அணிகளுமே  பா.ஜனதாவைப் போட்டி போட்டுகொண்டு ஆதரிக்கும் என்ற நிலை உருவாகிவிட்டது. ஜெயலலிதா மறைவுக்குப் பின் தமிழகத்தில் அதிமுக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பல அமைச்சர்கள் முறைகேட்டில் சிக்கிய புகார்கள் வருகின்றன. இதனால் உருவாகியிருக்கும்  ஒரு நிலையற்ற தன்மையை தங்களுக்க சாதகமாக பயன்படுத்தக் காய் நகர்த்தத் துவங்கியிருக்கிறது பாஜக . தங்கள் பதவியையும், அரசையும் காப்பாற்ற ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதாவை  ஆதரிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு அதிமுக எம்எல்ஏக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

காங்கிரஸின் கணிப்பு  
தொடர்ந்து தோல்விகளை சந்தித்துக்கொண்டிருக்கும் காங்கிரஸ்  2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் எதிர்க்கட்சிகளை ஒட்டுமொத்தமாக ஒரே அணியில் திரட்ட வேண்டிய கட்டாயத்திலிருக்கிறது. இந்த  ஜனாதிபதி தேர்தலை அதற்கு முன்னோட்டமாகப் பயன்படுத்த காங்கிரஸ் விரும்புகிறது. . உடல் நலிவுற்ற நிலையிலும் இந்தப் பணிகளில் சோனியாகாந்தி அதிக ஆர்வம் காட்டி வருகிறார். முதல்கட்டமாக ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத்யாதவ், பீகார் முதல்வர் நிதீஷ்குமார் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து பா.ஜனதாவுக்கு எதிரான அத்தனை எதிர்க்கட்சிகளையும் குறிப்பாக உபியில் எதிரும் புதிருமாக திகழும் முலாயம், மாயாவதி, மேற்குவங்கத்தில் மம்தா மற்றும் கம்யூனிஸ்ட் ஆகியோருடனும் கூட பேச்சுவார்த்தை நடத்தி முடித்து விட்டார்.  தொடர்ந்து திமுக வின் ஆதரவைகேட்ட நிலையில் எழுந்த எண்ணம் தான்  ஜூன் 3ல் கருணாநிதி பிறந்ததினம் மற்றும் சட்டமன்ற வைரவிழாவை முன்னிட்டு சென்னையில் அனைத்து எதிர்க்கட்சிகளையும் பங்கேற்கச்செய்யும் வகையில் தங்கள் பலத்தைக் காட்ட ஒரு மெகா ஷோ..   அது ஜனாதிபதி தேர்தலுக்கு மிகப்பெரிய முன்னோட்டமாக அமையும் வகையில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
ஜனாதிபதி வேட்பாளராக எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து ஆலோசனைகள்முடிந்துவிட்டது. .. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, மகாத்மா காந்தியின் பேரன் கோபால் காந்தி, முன்னாள் சபாநாயகர் மீராகுமார் மற்றும் ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத்யாதவ் இவர்களில் ஒருவர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம்.
 இந்த முயற்சியில் . காங்கிரஸ் வெற்றி பெற்றால் , அது பா.ஜனதாவுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் ஒரு பெரிய அணியை உருவாக்கி விடும். அது 2019 நாடாளுமன்ற தேர்தலில் ஆபத்தாகக் கூட முடியலாம்  என்பதைக் கணித்த பாஜக  மிக வேகமாக வேலைசெய்ய ஆரம்பித்துவிட்டது.  மத்திய அரசின் அமைச்சர்கள் மாநிலங்களுக்கு அடிக்கடி பறக்கிறார்கள். அறிக்கை மழை கொட்டுகிறது
.தெலங்கானா மாநில நலனுக்காக பா.ஜனதா வேட்பாளரை ஆதரிக்கத் தயார் என்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் அறிவித்து விட்டார்.  வருமானவரி வழக்கில் சிக்கியிருக்கும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியும் பா.ஜனதா ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து விட்டார்.  வரும் வாரங்களில்  மேலும் சில கட்சிகள்   பா.ஜனதாவின் மறைமுக விளையாட்டில் சிக்கிவிடும் தற்போதைய சூழலில் பா.ஜனதா வேட்பாளர் வெற்றி பெற 20 ஆயிரம் ஓட்டுகள் மட்டுமே தேவை.

யார் நமது  அடுத்த ஜனாதிபதி ?


இதனால் இந்த ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் அவர் வெற்றி பெறக்கூடிய வாய்ப்புதான் பிகாசமாகயிருக்கிறது.   அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, சுமித்ரா மகாஜன், சுஷ்மா சுவராஜ், திரளெபதி மர்மு, மோகன்பகவத் பெயர்கள் அடிபட்டன. பகவத் மறுத்திருக்கிறார். அத்வானி மீது பாபர் மசூதி வழக்கு மறுபிறப்பெடுத்திருக்கிறது.   ஓடிசா மாநில பழங்குடி இனத் தலைவரும் தற்போதைய ஜார்கண்ட் கவர்னருமான திருமதி திரளெபதி மர்மு    இந்த அதிகாரமிக்க ஆசனத்தை அலங்கரிக்கலாம்.

23/5/17

இன்றைய உலகம் சந்திக்கும் இணையப் போர்


அண்மையில் ஒரே நாளில் 150 நாடுகளில்பல்கலைகழகங்கள்,மருத்துவ மனைகள்  தொழிற்சாலைகளின் 200000 கணினிகள்  ஒரு ரான்ஸ்ம்வேர்  வைரஸால் தாக்கப்பட்டு உலகமே அதிர்ச்சியில் உறைந்தது. பல கணணிகள் செயல் இழந்தன. சில பூட்டப்பட்டன, சிலவற்றில் இருந்தது அத்தனையும் அழிக்கப்பட்டிருந்தன  அமெரிக்காவின் மிகப்பெரிய நிறுவனமான ஃபெட் எகஸ்பிரஸ்,  ஸ்பெயினின் மொபையல் நிறுவனங்கள், இங்கிலாந்தின் மருத்துவமனை  நெட் ஒர்க் ஜெர்மனியின் ரெயில்வே நெட் ஒர்க், பிரான்ஸின் ரென்னால்ட் கார் நிறுவனம் ரஷ்ய உள்துறை அமைச்சகம் ஜப்பானில் பல தனியார் கணணிகள் சினாவில் 40,000 நிறுவனங்கள் எல்லாம் ஒரே நேரத்தில் இந்த ரான்சம் வேரால் தாக்கப்பட்டிருக்கிறது. கணனி பிறந்த போதே இம்மாதிரி ஆபத்துகளும் பிறந்துவிட்டன, ஆனால்  . உலக வரலாற்றில் மிகப்பெரிய ரான்சம்வேர் தாக்குதல் என்று  “எஃப் செக்யூர்”  என்ற உலகின் முன்னணி கணணி  பாதுகாப்பு நிறுவனம் இதைக் குறிப்பிடுகின்றது. 
மால்வேர், ஸ்பைவேர் கேள்விப்பட்டிருக்கிறோம். அதென்ன ரான்சம்வேர்? கணினிகளில் நுழைந்த சில விநாடிகளிலே ஒட்டுமொத்த கணினியையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விடுகின்ற இந்த மால்வேரின் பெயர் ரான்சம்வேர்  
. நிஜ உலகில் கடத்தல்காரர்கள் யாரையாவது பிடித்து வைத்துக்கொண்டு பணம் தந்தால்தான் விடுவிக்க முடியும் என மிரட்டுவது போல, இணைய உலகில் ஹேக்கர்கள் என்பவர்கள், பயனாளிகளின் கணினி உள்ளிட்ட சாதனங்கள் அல்லது அவற்றில் உள்ள முக்கியமான கோப்புகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு, அதை விடுவிக்கப் பணம் தர வேண்டும் என மிரட்ட இதைப் பயன்படுத்துவதால் இந்தப்பெயர். . 
நிஜ உலகக் கடத்தலுக்கும், இந்த வகைக் கடத்தலுக்கும் என்ன வேறுபாடு என்றால் இதில் விஷமிகள் எதையும் கடத்திச்செல்வதில்லை. மாறாகப் பயனாளிகளின் கணினிக்குள் அத்துமீறி நுழைந்து அதைப் பயன்படுத்த முடியாமல் செய்து விடுகின்றனர்.
இது புதிய மோசடி அல்ல. ஆனால் சமீப காலத்தில் இதன் தீவிரம் அதிகமாகிப் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகியிருக்கிறது ரான்சம்வேரில் பல வகைகள் இருக்கின்றன. கணினிக்குள் நுழைந்து அதைப் பயன்படுத்த முடியாமல் பூட்டுப்போட்டு விட்டுப் பணம் கேட்டு மிரட்டுவது ஒரு ரகம். இன்னொரு ரகம், முக்கியமான கோப்புகளை ‘என்கிரிப்ட்' செய்து விட்டு அதை விடுவிக்கப் பணம் கேட்டு மிரட்டுவது. கணினி என்றில்லை, ஸ்மார்ட்போன் உள்ளிட்ட சாதனங்களையும் இப்படிக் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு  ஹேக்கர்ஸ் மிரட்டிப் பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். பெரிய வர்த்தக நிறுவனங்களே இவ்வாறு குறி வைக்கப்படுகின்றன.  என்றாலும் தனிமனிதர்களும் தப்பவில்லை.  இந்த ரான்சம்வேர் தாக்கிய கணினியில் ,  ‘பிட்காயின்’ என்கிற டிஜிட்டல் கரன்சி வடிவத்தில் குறிப்பிட்ட $300 (ரூ.19200) அக்கவுன்ட்டில் பணம் செலுத்தினால் மட்டுமே மேற்கொண்டு இயக்கமுடியும். இல்லையெனில், தகவல்கள் அழிக்கப்படும் என மிரட்டும் வகையிலான அறிவிப்பு 28 மொழிகளில்  வருகிறது. ஏன் இந்த பிட்காயின் என்றால் இதில் அனுப்புபவர்களை எளிதில் அடையாளம் காணமுடியாது. வேறு வழியில்லாமல் இதை ஏற்றுகொண்டுவர்கள் பலர். இப்போது  இது அசுர வடிவம் எடுத்திருக்கிறது 
இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் இந்த வகைத் தாக்குதல்கள் மூன்று மடங்கு அதிகரித்திருப்பதாக ஒரு அறிக்கை தெரிவிக்கிறது. 
இதுமாதிரி ஏதோ ஒன்று வரப்போகிறது என்று சில வாரங்களுக்குமுன் செய்தி கசிந்தது.. ஆனால் இந்த விஸ்வரூபத்தை எவரும் எதிர்பார்க்கவில்லை. பல நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா அதிகம் பாதிக்கப் படவில்லை(இந்தக் கட்டுரை எழுதும் வரை) சில பெரிய மென்பொருள் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன ஆனால் அது அவர்கள் தொழில் ரகசியங்களையும் வியாபாரத்தையும் பாதிக்கும் என்பதால்  அறிவிக்கவில்லை என்றும் சொல்லுகிறார்கள். வங்கிகளுக்கு பாதிப்பில்லை  என்று இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் அறிவித்திருக்கிறார்கள்.
யார் இதைச் செய்திருக்கிறார்கள்?
“ ரஷ்ய அரசின் உள்துறை” என்கிறது அமெரிக்கா. “எதுவானாலும் எங்களைக் குற்றம் சொல்லுவதே இவர்களுக்கு  வேலயையாய் போச்சு  செய்திருப்பது அவர்களுடைய  உளவுத்துறைதான்” என்று அறிவித்திருக்கிறார் ரஷ்ய அதிபர் புட்டின். 
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை (என்.எஸ்.ஏ.) விண்டோஸ் கணனிகளுக்குள் நுழைய, உருவாக்கிய,இணையவழி தாக்குதல் ‘டூல்’களை (கருவிகளை) கொண்டு இது நடந்திருக்கிறது. பாதுகாப்புத்துறை. அசட்டையாக இருந்ததால், அது  திருடப்பட்டு எதிரிகளின் கைகளுக்கு போய், இப்படியான தாக்குதல் சாத்தியமாகியுள்ளது என தனது டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார் எட்வர்ட் ஸ்னோடன்   இவர்  அமெரிக்காவின்  சூப்பர் கில்லாடி  ஹேக்கர். 
பெரிய நிறுவனங்களும், மருத்துமனை, அரசு அலுவலகங்கள் தாக்கப்பட்டிருப்பதால் இது வெறும் பணம்  பிடுங்கும் சமாசாரம் இல்லை. “எங்களால் உங்கள் கணினிகளை உடைக்க முடியும் என்று காட்டும் செயல். அது தீவிரவாதிகளா? அல்லது  அடுத்தவர் துன்பத்தைக் கண்டு சந்தோஷிக்கும் கொடூரமான ஒரு குழு வா?” என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று நியூயார்க் டைம்ஸ் எழுதியிருக்கிறது. 
பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பே இல்லையா ?
ஹேக்கர்களுக்கு இணையாக அதைச் சமாளிக்கும்  வித்தைகளைத் தெரிந்தவர்களும் நிறைந்தது இணைய உலகம். தாக்குதல் நிகழ்ந்த சில மணி நேரங்களிலேயே  ஐரோப்பிய காவல்துறையான “யூரோபோல்” ஒரு அறிவிப்பை வெளியிட்டது. “ நோ-மோர் ரான்சம்” என்ற தளத்தை  உருவாக்கி உடனடியாக தொடர்புகொள்ளுங்கள்  பூட்டப்பட்ட உங்கள் கம்யூட்டரை திறக்கும் சாவியை நாங்கள் தருகிறோம். என்று அறிவித்திருக்கிறது. நெதர்லாந்து காவல்துறை மற்றும் இன்டெல் செக்யூரிட்டி மற்றும் காஸ்பெர்ஸ்கி லேப் ஆகியவையும் இதில் இணைந்துள்ளன.தாக்குதலுக்கு இலக்கானவர்களுக்குத் தேவையான உதவியை இந்தத் தளம் அளிக்கிறது. ரான்சம்வேர் தாக்குதல் தொடர்பான தகவல்கள் இந்தத் தளத்தில் தொடர்ந்து ‘அப்டேட்' செய்யப்பட்டு வருகிறது 
 எது எப்படியோ? உலகின் எந்த கணணிக்குள் நுழையும் ஒரு சக்தி பிறந்திருக்கிறது என்பதும்   அது சிலரின் இன்று  விரல் நுனியில் இருக்கிறது என்பது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.  அது தேவதைகளின்  விரலா, அல்லது அசுரர்களுடையதா என்பது நாம் கணணியைத் திறக்கும் நேரத்தில் நமது அதிர்ஷ்டத்தைப் பொருத்த விஷயம்   


 இம்மாதிரி தாக்குதலிலிருந்து காத்துக்கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்?

1. கணினியின் இயங்கு தளமான (ஆபரேடிங் சிஸ்டம்) விண்டோஸ் பழைய வெர்சனாக இருந்தால் அதை தற்போது உள்ள புதிய வெர்சனுக்கு (விண்டோஸ் 10) ஏற்றது போல அப்டேட் செய்து கொள்ள வேண்டும். 
2. ஒருவேளை நீங்கள் பழைய ஆபரேடிங் சிஸ்டமை (விண்டோஸ் XP, 7, விஸ்டா) பயன்படுத்தி வந்தால், தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனம் அதற்கான அவசர பாதுகாப்பு இணைப்பை உருவாக்கியுள்ளது. அதை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
3. கணினியில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள ஆண்டி வைரஸ் உள்ளிட்ட முக்கிய சாப்ட்வேர்களை தற்போது வரை சரியான அப்டேட்களை செய்து கொள்ள வேண்டும்.
4. கணினியில் இணைய வசதிகளை கொண்டிருக்கும் பட்சத்தில் முக்கியமாக பயர்வால் (firewall) வசதியை கண்டிப்பாக ஆக்டிவ் செய்ய வேண்டும். ஆக்டிவாக இருந்தாலும் இணைய வழி ஊடுருவலை தடுக்கும் வகையில் பயர்வால் அமைப்புகளை (setting) மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்.
5. சர்வரில் இருந்து தகவல்களை அனுப்பும் அமைப்பை தற்காலிகமாக செயலிழக்கச் செய்யுமாறு மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
6. கணினியில் உள்ள தேவையான தகவல்களை பேக்அப் (Backup) செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் தகவல்களின் இழப்பைத் தடுக்கலாம்.
7. முன் அறிமுகம் இல்லாத நபர்களிடமிருந்து வரும் இ-மெயில் தகவல்களை திறந்து வாசிக்க முயற்சிக்க வேண்டாம். விளம்பரம் உள்ளிட்ட தேவையற்ற இ-மெயில்களிடமிருந்து விலகியிருப்பது நல்லது.
8 ஈ மெயில்களில் எதேனும் இணையதளத்தின் லிங்க் கொடுக்கபடிருந்தால் அதை மெயிலில் இருந்து கிளிக் செய்து திறக்க வேண்டாம். அவசியமானால் அந்தத் தளத்தை நேரடியாகத் திறக்கலாம். ஆபத்தானதால் உங்கள் கணனி எச்சரிக்கும் 
 தினசரி கணினியை  ஆப்  செய்தபின்

1. கணினியின் சர்வர் மற்றும் நெட்வொர்க் ஸ்விட்சுகளின் இணைப்பைத் துண்டிக்க வேண்டும்.
2. வை-பை இணைப்பு, லேன் (LAN) இணைப்பு, ரூட்டர்கள் ஆகியவற்றைத் துண்டித்து ஆப் செய்து வைக்க வேண்டும்.
3. ஸ்மார்ட் டி.வி, டேப்லட், மொபைல் போன்கள் ஆகியவற்றையும் ஆப் செய்து வைக்க வேண்டும்.
4. கணினி, மொபைல் ஆகியவற்றில் ப்ளூ டூத், ஹாட்ஸ்பாட் ஆகியவற்றை ஆன் செய்ய வேண்டாம்.
 எல்லா வற்றிற்கும் மேலாக இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க சிறிது நாட்களுக்கு இணைய இணைப்பை பயன்படுத்தாமல் இருக்கலாம்.
V,Ramanan
13-03-2017


11/5/17

அடுத்த கோஹினூர் வைரம்உங்களுக்குக் கிடைக்குமா?


இந்திய அரசியல் வரலாற்றில் சகா வரம்பெற்ற சில செய்திகள் உண்டு. அதில் ஒன்று கோஹினுர் வைரம். 



இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள கோல்கொண்டா சுரங்கத்தில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட 105 காரட் மதிப்பு கொண்ட வைரம் தான் தற்போது வரை உலகின் மிகப் பெரிய வைரமாகக் கருதப்படுகிறது. இதனை கோஹினூர் வைரம் என்று வர்ணிக்கின்றனர். இந்தியாவுக்கு சொந்தமான இந்த வைரம் பல நூற்றாண்டுகளாக பலரிடம் கைமாறி இறுதியாக 1850-ல் பிரிட்டன் மகாராணி விக்டோரியாவிடம் சென்று சேர்ந்தது.
அப்போது முதல் இந்த வைரம் பிரிட்டன் மன்னர் பரம்பரையின் சொத்தாக மாறியுள்ளது. தற்போது மகாராணியின் மகுடத்தில் இந்த வைரம் பதிக்கப்பட்டிருக்கிறது., ஆண்டு தோறும் லண்டனில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படுகிறது

.
105 காரட், 21 கிராம் எடையும் உள்ள இந்த  வைரத்தின் மதிப்பு  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கபடவில்லை. ஆனால் இது பதிக்கப்பட்டிருக்கும் கீரிடத்தின் மதிப்பை  இங்கிலாந்து அரசு அறிவித்திருப்பதால் அதிலிருந்து இதன் மதிப்பை ஒரு பில்லியன் டாலர்(6700 கோடிகள்) என மதிப்பிடுகிறார்கள்  
 பாகிஸ்தான், வங்கதேசம் உள்பட கோஹினூர் வைரத்தைப் பல நாடுகள் சொந்தம் கொண்டாடி வருகின்றன. அந்த வைரம் இந்தியாவின் இறையாண்மையைப் பிரதிபலிக்கும் வைரம். அது இந்தியாவில் தான் இருக்க வேண்டும் பிறப்பிடத்துக்கே மத்திய அந்த  அரசு கோஹினூர் வைரத்தை மீட்டுக் கொண்டுவர உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் “ஆல் இந்தியா ஹியூமன் ரைட்ஸ் அண்ட் சோஷியல் ஜஸ்டிஸ் பிரன்ட்” என்ற அமைப்பு பொதுநல மனு தாக்கல் செய்யதது. நீண்ட நாட்களுக்குப்பின் இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹார் தலைமையிலான அமர்வு, "வெளிநாட்டு அரசாங்கத்துக்கு நாம் எவ்வித உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. இத்தகைய மனுக்கள் அவசியமற்றது"  என்று தீர்ப்பளித்திருக்கிறார். 
இந்த வைரம் இனி இந்தியாவிற்குத் திரும்பவாய்ப்பில்லை என்ற நிலை எழுந்திருக்கும்  நேரத்தில்,  வெளியாகியிருக்கும் ஒரு செய்தி இந்த வைரம் கிடைத்த இடத்தில் வைரம் தேடும் வேட்டை இந்த  ஆண்டு திவிரமாகத் துவங்கியிருக்கிறது. 
விஜயவாடாவில் இருந்து சுமார் 100 கி.மீ. தொலைவில் உள்ளது கொல்லூர் கிராமம் இதுகிருஷ்ணா ஆற்றின் மீது  டாக்டர் KL ராவ் சாகர் நீர்ப்பாசன திட்டத்தினால் உருவான ஒரு அணையினால் முழ்கிய 2.லட்சம் சதுர கிலோமீட்டரில் மூழ்கிய   கிராமங்களில் ஒன்று. .  
இந்தக் கிராமமும் அதன் பகுதிகளும்  பல நூற்றாண்டுகளாக வைர சுரங்கமாக இருந்திருக்கிறது, குதுப் ஷாஹி வம்சத்தின் கீழ் அதன் தலைநகரமான கோல்கொண்டா வர்த்தகத்தின் ஒரு உலகளாவிய மையமாக இருந்திருக்கிறது மில்லியன் கணக்கான வைரங்கள் பல காரட்களில் 15லிருந்து 19 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையிலான காலத்தில்  கொல்லூர் நகரத்தில் இருந்து வெட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.
கோஹினூர் 16 ஆம் நூற்றாண்டின் போது வெட்டப்பட்டது மற்றும் கோல்கொண்டாவில் விற்பனை செய்யப்பட்டது. கொல்லூர்-பாரிடலா பகுதிகளைச் சுற்றியுள்ள சுரங்கங்கள் 1830 ஆம் ஆண்டு வரை செயல்பட்டன, ஆனால் அவை படிப்படியாக கைவிடப்பட்டன. 1990 களில் மாவோயிஸ்டுகள் இப்பிராந்தியத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தபோது, ஏறக்குறைய 1,000 ஏக்கர் நிலப்பரப்பை ஏழைகளுக்கு  வழங்கினார்கள்.  பின்னர் 2004 ஆம் ஆண்டில்,  கிருஷ்ணாவின் தண்ணீரைத் தடுத்து  ஒரு பாசன நீர் திட்டத்தை ராஜசேகர ரெட்டி அரசாங்கம்  துவக்கியதின் விளைவாக கொல்லூர் உட்பட எல்லாக் கிராமங்களும் 50 அடி நீரில் முழ்கி கிடக்கிறது. அந்த கிராங்களில் வசித்தவர்களுக்கு மாற்று இருப்பிடங்கள், நிலங்கள் வழங்கப்பட்ட போதிலும் இந்த ஏரிக்கரை ஓரத்திற்கு  ஒவ்வொரு  கோடைக்காலத்திலும்  அந்த மக்கள் வருகிறார்கள்.  அவர்கள் மட்டுமில்லை ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்கள், பெரிய வைர வியாபாரிகள் என்றும் பலரும் வருகிறார்கள்.
 எதற்குத்  தெரியுமா? அந்த ஆற்றின்  நீர் வற்றி கரைப்பகுதிகளிலிருக்கும் பாறைகளில் இடுக்குகளில் கிடைக்கும் அபூர்வ கற்களுக்காக. சுரங்கங்கள் அழிந்து பல காலங்கள் ஆனாலும் இன்னும்  வைரக்கற்கள் இருக்கின்றன என அவர்கள் நம்புகின்றனர். அவ்வப்போது  தொடர்ந்து கிடைக்கும் சில விலை மதிப்புள்ள கற்கள் இந்த நம்பிக்கையை  வலுவடையச்செய்கிறது.  
 இந்த பகுதியில் வாழும்  விவசாயக்கூலிகள், ஆடுமாடு மேய்ப்போருக்கு  இங்கு வைரக்கற்கள் தேடுவது ஒரு பார்ட் டைம் பிசினஸ். நீர்த்தேக்கத்தில் நீர் குறைய ஆரம்பிக்கும் போது ஒவ்வொரு ஆண்டும் இவர்கள் பிஸியாகி விடுவார்கள். கற்களை தேடிஎடுத்து சேமித்துக்கொள்வார்கள்.  பின்னர் வியாபாரிகளிடம் காட்டி விற்று விடுகிறார்கள். இதற்காகவே  இப்போது இங்கு  வெளி மாநிலங்களிருந்து வியாபாரிகள் வந்து அருகிலிருக்கும் குண்டூர், விஜயவாடா போன்ற இடங்களில்   தங்கி நேரடியாக  கூலிக்கு இவர்களை அமர்த்தி கற்களை சேகரிக்கிறார்கள். கற்கள் கிடைத்தவுடன் அவர்களுக்கு செல்போன் மூலம் தெரிவிக்கிறார்கள்.   நாள் கூலியைத்தவிர கொண்டுவரும் கற்களை ஆராய்ந்து அதற்கேற்ப நல்ல   விலையும்  தருகிறார்கள் என்கிறார் உள்ளூர் வங்கி மேலாளர் ஒருவர். 
ஒரு கல்லை எப்படி மதிப்பிடுகிறார்கள்? இதற்கான   நவீன எலக்டிரானிக் கருவிகளை இங்கு வரும்  வியாபாரிகள் கொண்டுவருகிறார்கள்.  முதல் சோதனையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கற்கள் அதில் தீவிரமாகச் சோதிக்கப்பட்டு  கிராம கமிட்டி தலைவர்,  தேடி  எடுத்தவர்கள்  முன்னிலையில் விலை நிர்ணயக்கபடுகிறது  

பிரச்சனைகள் இல்லாமல் இல்லை. சில ஆண்டுகளுக்கு முன் ஆடுமேய்க்கும் ஒரு சிறுமிக்கு கிடைத்த கல்லின் மதிப்பு 7 லட்சம்  என்றவுடன் அத்தனை கிராமங்களும் மகிழ்ச்சியடைந்தன. ஆனால் அந்தச் சிறுமியின் உயிருக்கே பாதுகாப்பில்லை என்ற  நிலை எழுந்தது, கடைசியில் போலீஸார் தலையிட்டினால் அந்த பெண்ணுக்கிடைத்தது 30, 000 ரூ  தான் என்கிறார்   இதில் ஈடுபட்டிருக்கும் ஒரு வியாபாரி. இந்த நிலையினால் இப்போது கிராம மக்கள் கூலிக்கு வைரங்களைத் தேடுவதையே விரும்புகிறார்கள் தனியாகப் போய் தேடபவர்களும் இருக்கிறார்கள் .  
 அரசின் அனுதி வேண்டாமா?  எந்த ஒரு நீர்ப் பாசன திட்டப்பகுதியின் நிலப்பரப்பும்  அரசுக்குச்சொந்தமானது. அதில் இப்படிப் போய்த் தேடுவது சட்டப்படி குற்றம்.  ஆனால் 40 ஆண்டுகளாக நடைபெறும் இந்த வைரத்தேடல் அரசால் அதிகம் கண்டுகொள்ளப்படவில்லை என்பதால்  ஆர்வத்துடன்  வருபவர்கள்  ஆண்டுதோறும் அதிகரிக்கிறார்கள்  முதல் முறையாக வருபவர்களுக்கு  பணம் வாங்கிக்கொண்டு வழிகாட்டியாக உதவ, உள்ளூர் இளைஞர்கள் காத்திருக்கின்றனர்.  
நீங்களும் போய் முயற்சிக்கலாம்.   அடுத்த கோஹினூர் கிடைக்கும் அதிர்ஷடசாலி   ஒரு வேளை நீங்களாக   இருக்கலாமே

4/5/17

600 புன்னகை மன்னர்கள்




கவர்ச்சியில்லாத உடலமைப்பு, பொருந்தாத உடைகள், நைந்து போனகாலணிகள்,  பழைய தொப்பி, வளைந்த   ஒரு பிரம்புக்கைத்தடி கோணல் நடையுடனான நடிகர் என்று சொல்லி முடிக்கும்முன்னரே நம் மனதில் நிற்கும் உருவம் சார்லி சாப்ளின். திரைப்படங்கள் பேச ஆரம்பிக்கும் முன்னரே அதில் நடித்த இவரது நடிப்புப் பேசப்பட்டது.  நான்கு தலைமுறைகளுக்கு அறிமுகமாகியிருக்கும் இந்தக் கலைஞரின் 128 வது பிறந்த நாள் அண்மையில்  மிகப் புதுமையான முறையில் ஜெனிவாவில் கொண்டாடப்பட்டது. 
அந்த விழாவிற்கு வந்த  662 பேர்களும், பெண்கள், குழந்தைகள் உள்பட அனைவரும்  சார்லி சாப்பிளினின் டிரேட் மார்க் உடையான  ஹிட்லர் மீசை,கருப்பு கோட்டு, தொப்பி, பிரம்பு உடன் வந்திருந்தார்கள்.  இந்த 128 வது பிறந்த நாள் மட்டும் அப்படி என்ன விசேஷம் என்கிறீர்களா?  இருக்கிறது

.
சுவிட்ஸ்ர்லாந்தில் ஜெனிவா நகருக்கு அருகிலிருக்கும் ஒரு அழகான ஏரிக்கரையிலிருக்கும்  வீட்டில் தான் சார்லி சாப்ளின் வாழ்க்கையின் கடைசி 25 ஆண்டுகள் வாழ்ந்தார்.  ஏழ்மைநிலையிலிருந்து மிகுந்த கஷ்டங்களுக்கிடையே கலைஞனாக, படத்தயாரிப்பாளாரக, இசை அமைப்பாளராக  வளர்ந்து உலகையே திரும்பிபார்க்கவைத்த சார்லி சாப்ளினுக்கு அமெரிக்கா சென்று அங்கு வாழ ஆசை. ஆனால் 1950 களில் ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் நிகழ்ந்து  கொண்டிருந்த பனிப்போரினால், கம்னியூஸ்ட்களாக இருப்பார்கள் எனச் சந்தேகப்படுபவர்களுக்கு விசாக்கள் மறுக்கப்பட்டது. சார்லி இடதுசாரி சிந்தனை கொண்டவர் எனக் கருதப்பட்டதால் அவருக்கும் விசா மறுக்கப்பட்டது. அதனால் அமெரிக்காவிற்கு எக்காலத்திலும் வரமாட்டேன் எனச் சபதம் செய்த சாப்பிளின் ஐரோப்பாவில் சுவிஸ்ஸர்லாந்தில் 14 ஏக்கர் பரப்பில் அழகான தோட்டத்துடன் கூடிய  ஒரு அரண்மனை வாங்கி வசித்துவந்தார். 
அந்த இடம் அவருடைய மறைவுக்குப் பின் இப்போது  சாரலியின் கருவூலமாக்கப் பட்டிருக்கிறது .  ஒற்றுமையில்லாத சார்லியின் வாரிசுகளுமிடருந்து (அவருக்கு 11 குழந்தைகள்) நீண்ட நாள் போராட்டத்திற்கு பின் பெறப்பட்ட அந்த அரண்மனையை பெரும் செலவில் புதுப்பித்து  சார்லி சாப்ளின் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் சேகரித்து ஒரு கருவூலமாக உருவாக்கியிருக்கிறார்கள் சார்லியின்  ரசிகர்கள் கொண்ட ஒரு குழு. 
அவர் நடித்த முதல் படத்திலிருந்து கடைசிப்படம் வரை  உள்ள ஸ்டில்கள், சில செட்டுகள், அவரது அறை படித்த புத்தகங்கள், சந்திப்புகளின் படங்கள் விருதுகள், அவரைக் கவர்ந்தவர்களின் தத்ரூப மெழுகுச்சிலை  எனப் பலவிஷயங்களால் நிரம்பியிருக்கிறது அந்த இல்லம். அவரைக் கவர்ந்தவர்களின் உருவங்களில் சர்ச்சிலுக்கு அருகில் காந்தி.  சார்லி சாப்பிளினுக்கு 8 நாடுகளில் நிறுவப்பட்டிருக்கும்  சிலைகளின் படங்களும் இங்கே காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது . ஆண்டுக்கு 5 லட்சம் சுற்றுலாப்பயணிகளை கவர்கிறது இந்த இடம்.

கடந்த ஆண்டு திறந்து வைக்கப்பட்ட இதை உருவாக்கப் பிடித்த காலம் 10 ஆண்டுகள். காட்சிக்காகப் படங்கள் சேர்ப்பது மட்டுமில்லாமல் சில அரசாங்கங்கள் உள்பட சமந்தப்பட்டவர்களிடம், ,  காட்சிப் பொருட்களை பயன்படுத்திக்கொள்ளும் உரிமைகளைப் பெற்றிருக்கிறார்கள். ‘செட்’களை அந்தக் கலைஞர்களைக்கொண்டே உருவாக்கியிருக்கிறார்கள். உள்ளே இருக்கும் அரங்கத்தில் பிலிம் சுருளை ஓட விட்டு பழைய ப்ரொஜ்க்டரில்  சார்லியின் பேசாத படங்களை ஓட்டிக் காட்டுகிறார்கள். இத்தனை ஏற்பாடுகளையும் செய்ய வேண்டியிருந்ததானால் தான்  10 ஆண்டுகள்
 .இந்த மியூசியம்தான் அவர்களது  முதலாமாண்டு விழாவைக்கொண்டா  சார்லியின் ரசிகர்களுக்கு “அவரைப்போல உடையணிந்து வாருங்கள்” என விடுத்த அழைப்பின் விளைவுதான் 600க்கும் மேற்பட்ட சாப்ளின்கள். 
அவர்களைத்தவிர  குழந்தைகளும் குடும்பத்தினரும் சார்லின் சாப்ளினின் உடையில் வருவார்கள் என்பது நாங்களே எதிர்பார்க்காத ஒன்று என்கிறார்.   திருமதி பிலிப்பி மெய்லன் என்ற கட்டிட கலைஞர். இவர்தான்  இந்த குருவூலத்தை உருவாக்கிய குழுவின் தலைவர்.

வந்தவர்கள் அனைவரும் ஒரு நட்சத்திர வடிவில் நின்று சார்லிக்கு பிடித்த  ஒரு பாடலைப் பாடினார்கள்

மிக அழகான சூழலில் ஏரிக்கரையிலிருக்கும் இந்த பூங்காவில்   சார்லி சாப்பிளினுக்கு ஒரு சிலையும் இருக்கிறது. உலகில் சொந்த நாட்டில் சிலை நிறுவப்பட்டிருக்கும் ஒரே காமெடியன்  சார்லி சாப்ளின் எனச்சொல்லுகிறது அதன் கீழ் உள்ளக் குறிப்பு. 

அவர்களுக்குத்தெரியாதது 
நாம் கலைவாணருக்கு சிலை நிறுவி கௌரவித்திருக்கும் விஷயம்




(கல்கி 7/4/2017)

21/4/17

ஹலோ ஸ்மார்ட் இந்தியா


மாரத்தான் தெரியும். வாக்கத்தான் கூட தெரியும். அதென்ன ஹாக்கத்தான்?

கணினித்துறையினர் பலர் ஒன்றாகக்கூடி தங்களுடைய புதிய யோசனைகளை- “பெட்டிக்கு வெளியே” என்று சொல்லுவார்களே அந்த அவுட் ஆப் பாக்ஸ் திங்கிங்கில் உதித்த புதிய எண்ணங்களை ஒரு திட்ட அறிக்கையாக சமர்ப்பித்து அதை விளக்குவார்கள். நீதிபதிகளாக இருக்கும் வல்லுநர் குழு தேர்ந்தெடுக்கும் சிறந்த திட்டங்களுக்கு பரிசுகளும் பெரிய நிறுவனங்கள் அந்த யோசனையை நல்லவிலை கொடுத்து வாங்கும் வாய்ப்பு எல்லாம் கிடைக்கும்.
“ ஹாக்” என்றால்கணினி மென்பொருள் திருட்டு என்ற அர்த்தத்தில் மட்டுமே பரவலாக அறியப்பட்ட இந்த வார்த்தையின் சரியான அர்த்தம் ஒரு கணினி யின் மென்பொருள் திட்டத்தை “அலசி ஆராய்வது” என்பது. அதில் பலர் பங்கேற்று குறிபிட்ட நேரத்துக்குள் தாங்கள்: யோசனைகளைச்சொல்லும் போட்டியானதால் அதை மாராத்தானுடன் இணைத்து “ஹாக்கத்தன்” எனப் பெயரிட்டார்கள். 1990ல் மிக சாதாரணமாக ஒரு நகர அளவில் துவங்கிய இது 2010லிருந்து உலகின் பல நாடுகளில், சில சமயம் யாஹு போன்ற பெரிய நிறுவனங்களுன் நடத்த ஆரம்பித்தன. இப்போது உலகின் பல நாடுகளில் இது நடக்கிறது. ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் நடைபெறும் இதில் முக்கியமான விஷயம் தன்னைப்போல சிந்திக்கும் பல இளைஞர்களைச் சந்திக்கும் வாய்ப்புதான். செலவுகள் பங்கேற்பவர்களுடையது. என்பதால் சாதாரண தங்குமிடம், (சிலசமயங்களில் டென்ட் தான்) எளிமையான உணவு போன்றவற்றுடன் ஓய்வு நேரங்களில் இளைஞர் பட்டாளம் பாட்டு, ஆட்டங்களுடன் கலக்கிக்கொண்டிருப்பார்கள்

பிரதமர் மோடி அறிவித்த டிஜிட்டல் இந்தியாவின் ஒரு பகுதியான ஸ்மாட் இந்தியாவின் ஒரு பகுதியாக இந்தியாவில் “ஹாக்கதான் 2017” ஒரு சில மாற்றங்களுடன். அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் இதை அரசின் நிறுவனங்கள் முன்னெடுக்கும். போட்டிகளை விதிகளுடன் நடத்த மனிதவள அமைச்சகத்தின் மேற்பார்வையில் இயங்கும் ஒரு குழு நடத்தி அரசே பரிகளையும் அளிக்கும். நாட்டிலுள்ள அனைத்து பொறியில் கல்லூரியிலிருக்கும் கணினி பிரிவு மாணவர்களின் குழு அந்தக் கல்லூரியின் சார்பாகப் பங்குகொள்ளலாம்.. ஒரு குழுவில் ஆறு பேர் இருக்கலாம்.அதில் கட்டாயமாக ஒரு மாணவி இருக்கவேண்டும். குழுவைக் கல்லூரியின் பேராசியர் ஒருவர் தலைவராக இருந்து வழிநடத்த வேண்டும். ஒருகல்லூரி 3 குழுக்கள் வரை அனுப்பலாம். கணனிப்பாடத்தை எடுத்துப் படிக்காத ஆனால் ஆர்வமுள்ள மாணவர்களும் அந்தக் குழுவில் இருக்கலாம் போன்ற நிபந்தனைகளுடன் திட்டம் அறிவிக்கபட்டது. உலகில் இதுவரை இந்த ஹாக்கத்தான் அரசின் ஆதரவுடன் நடந்ததில்லை

இந்திய விண்வெளி நிறுவனத்தின் ஆராய்ச்சி பிரிவிடம் இதை நடத்தும் பொறுப்பு ஒப்படைக்கப் பட்டது. அவர்கள் செய்த முதல் காரியம் அரசுத்துறைகளிடம் உங்கள் துறையில் சமூகம் சார்ந்த புதிய கண்டுபிடிப்பாக அல்லது இருப்பதில் எதை விரிவாக்கம் செய்ய வேண்டும்? என்று கருதுகிறீர்கள் என்பதைத் தெரிவிக்கக்கோரினார்கள் . 29 அமைச்சகங்களிலிருந்து வந்து சேர்ந்த பல யோசனைகளில் 598 பிரச்சனைகளை அடையாளம் கண்டு அதை ஒரு போட்டியாக ஹாக்கத்தான் 2017க்காக அறிவித்தார்கள்.
முதலாண்டு என்பதால் ஓரளவுதான் பங்கேற்பு இருக்கும் என எதிர்பார்த்த ஐஎஸ் ஆர்வோ போட்டிக்கு பதிசெய்தவர்களின் எண்ணிக்கைக் கண்டு மிரண்டுவிட்டது. ஆன்லனையில் பதிவு என்பதால் கடைசிநிமிடம் வரை விண்ணப்பங்கள் குவிந்தன. 42000 மாணவர்கள் பங்கேற்கும் 7531 குழுக்கள் விண்ணப்பித்திருந்தன. அவற்றில் 10000 மாணவர்கள் அடங்கிய 1266 குழுக்கள் மட்டும் போட்டிக்கு தேர்ந்த்டுக்கப்பட்டன. இந்தக்குழுக்கள் நாட்டின் 26 மையங்களில் ஒரே நாளில் ஒரே நேரத்தில் தங்கள் திட்டங்களை வல்லுநர்களுக்கு விளக்கினர். 5 நிமிடம் தான் நேரம் அதில் 3 நிமிட விளக்கஉரைக்கு 2 நிமிடம் கேள்வி பதிலுக்கு என ஒட்டம் நடந்து முடிந்தது. இதில் தேர்வு பெற்றவர்கள் இறுதிச்சுற்று ஹாக்கதானில் பங்குகொண்டார்கள்
இந்த ஆண்டு ஹாக்த்தானை நடத்திய மையங்களில் ஒன்றான அகமதாபாத் மையம் ஹாக்கதான் 2017 இறுதிச்சுற்றை நடத்தியது. 50 குழுக்கள் பங்கேற்றன. போட்டிக்காக அறிவிக்கப்பட்ட 35 பிரச்சனைகளில் ஒன்றுக்கு இவர்கள் தங்கள் கண்டுபிடிப்பான தீர்வுகளை விளக்கினார்கள். தொடர்ந்து 36 மணி நேரம் மாணவர் குழுக்கள் விரைவாக தங்கள் எண்ணங்களை கொட்டிக்கொண்டிருந்தார்கள். நிபுணர்கள் குழு திக்குமுக்காடிபோனது. இறுதியில் டென்ஷனில் நகம் கடித்துக்கொண்டிருந்த போட்டியாளர்களிடம் முதல்பரிசான ஒரு லட்சதைப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது தமிழகத்தைச்சேர்ந்த காஞ்சிபுரத்திலிருக்கும் ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியின் டீம். சரி - இரண்டாவது இடம் யாருக்கு? எனக் காத்திருந்போது ஒலித்த அறிவிப்பு மதுரை தியாகராயர் கல்லூரி
கர்நாடக மாநிலத்தின் கல்லூரிக்கு மூன்றாம் இடமும் டில்லி, மும்பய் கல்லூரிகளுக்கு ஆறுதல் பரிசுகளும் அறிவிக்கப் பட்டன. ஐஎஸ் ஆர்வோ தலைவர் பரிசுகளை வழங்கினார்.

இந்த இறுதிச்சுற்றின் முடிவில் போட்டியாளர்களுடன் விடியோ கான்பரன்ஸில் பிரதமர் உரையாற்றினார். இறுதிச்சுற்றுக்கு வராதவர்களும் போட்டிகள் நடந்த மையங்களிடமிருந்து அவருடன் உரையாடினார்கள்.
“உங்களைக் கண்டு நான் பெருமிதம் கொள்ளுகிறேன்” என்று இரவு 8 மணிக்குத் துவங்கிய பிரதமரின் உரையாடல் முடிந்தபோது இரவு மணி 11.
பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு கிராமப்புற சேவை கட்டாயமாக்கப்படவேண்டும், கிராமப்புற இளம்பெண்களுக்கு அரசே நாப்கின்கள் வழங்க வேண்டும் என்பதிலிருந்து அதிநவீன 3டி பிரின்டிங், இயந்திரங்களின் புத்திசாலித்தனம் வரை மாணவர்கள் சொல்லும் சிலயோசனைகளை பிரதமர் பாராட்டுகிறார். சிலவற்றிற்கு கேள்விகள் கேட்கிறார். இறுதியாக

“இன்று அரசாங்கம் அடையாளம் கண்ட பல பிரச்சனைகளுக்கு தீர்வுகளை முன் வைத்திருக்கிறீர்கள். அரசாங்க பிரச்சனைகளுக்கு முடிவு சொல்ல வேண்டியது அரசாங்கம் மட்டும் தான் என்ற மாயை உடைத்து எங்களாலும் முடியும் எனச் சொல்லியிருக்கிறீர்கள்” என்று போட்டியாளர்களைப் பாராடினார்.

‘மாராத்தான் ஓட்டங்களின் வெற்றி என்பது பரிசுபெற்ற சிலரால் நிர்ணயிக்கப்படுவதில்லை. பங்குகொண்டவர்கள் அனைவரும் தான் இந்தப் போட்டிகளை வெற்றியாக்குகிறார்கள்’ என்ற வாசகங்கள் பாரிஸ் நகரில் இருக்கும் சர்வதேச மாராத்தன் பவுண்டேஷனின் முகப்பில் பொறிக்கப்பட்டிருக்கிறது.
இந்த இந்திய ஹாக்கதான் 2017க்கு அது மிகவும் பொருந்தும்.
நாடு முழுவதிலிருந்தும் 42000 ஸ்மார்ட்டான மாணவர்கள் தங்கள் எண்ணங்களை ஓட விட்டிருக்கிறார்களே .


18/4/17

ஹார்ட் பிரேக்கிங் நீயூஸ்



நாள் முழுவதும் செய்திகளை மட்டுமே தந்துகொண்டிருக்கும் செய்தி சானல்கள் இப்போது பெருகிக்கொண்டேயிருக்கிறது. யார் எந்தச்செய்தியை முந்தித்தருவது என்பதிலிருக்கும் போட்டி, இப்போது செய்தி அறிவிப்பாளர்களின் பணியை சவாலானதாக்கியிருக்கிறது. தயாரிக்ப்பட்டு வாசித்துக்கொண்டிருக்கும் செய்திகளுக்குக்கிடையே தன் முன்னே இருக்கும் ஸ்கிரின்லின் வரும் செய்திமின்னல்களையும் உடனே மொழிபெயர்த்துச் சொல்ல வேண்டும் , இதை பிரேக்கிங் நீயூஸ் என்று ஆங்கிலத்தில்சொல்லுகிறார்கள். சில சமயம் இம்மாதிரி செய்திகளில் அறிவிக்கப்படும் கோரவிபத்துகள் கேட்பவர்களை உலுக்கும்.

சட்டிஸ்கர் மாநிலத்தின் மிகவும் செய்தி சானலான IBC 24 யில் மிகவும் பாப்புலரான செய்தி வாசிப்பாளர் திருமதி சுப்ரீத் கவுர். தெளிவான குரல், தீர்க்கமான உச்சரிப்பால் அவருக்கு விசிறிகள் அதிகம்
அன்றும் வழக்கம்போல காலை பத்துமணி செய்திகளை வாசித்துக்கொண்டிருந்தவரின் முன்னே இருக்கும் ஸ்கீரினில் பிளாஷ் ஆன செய்தி ரெய்ச்சூர் பிரதான சாலையில் நிலநிமிடங்களுக்கு முன் நிகழ்ந்த ஒரு மோசமான கார் விபத்து. அதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே மரணம், மற்ற இருவரின் நிலை கவலைக்கிடம். கார் குறித்து வந்த விபரங்களிலிருந்தும், படங்களிலிருந்தும் சுப்பீரீத்தை தாக்கிய விஷயம் உருக்குலைந்த அந்த கார் அவர்களுடையது, சம்பவ இடத்திலிருக்கும் செய்தியாளருக்கு இறந்தவர்களின் பெயர்கள் தெரியவில்லை. . அதை போலீஸ் அறிவிக்க அவர் காத்திருக்கிறார். ஆனால் விபத்துக்குள்ளாகி இறந்திருப்பது அவரது கணவர், என்பது சுப்ரீத்துக்கு தெரிந்துவிட்டது வெடித்து அழுதிருக்க வேண்டிய அந்தத் தருணத்தில் குரல் கம்ம அந்தச் செய்தியைச் சொல்லுகிறார்.
நேரலையில் போகும் செய்தி என்பதால் தொடர்ந்து வந்த செய்திகளைச் சொல்லிவிட்டு முடிந்தவுடன் எழுந்து ஓடி செய்தியாளிரிடம் போனில் உறுதிசெய்து கொண்டு கதறிஅழுகிறார். இவர் செய்தியை வாசித்துக்கொண்டிருக்கும் போதே , செய்திப்பிரிவின் ஆசிரியருக்கும் டீமுக்கும் விஷயம் தெரிந்திருந்தது, ஆனால் சுப்ரீத்திடம் அதைச்சொல்ல அவர்களுக்குத் துணிவில்லை.
தன் கணவர் விபத்தில் இறந்த செய்தியை நேரலையில் சொல்லவேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலை இவரைப்போல உலகில் எந்த செய்தியாளருக்கும் நேர்ந்திருக்காது.
அந்தக் கட்டத்திலும் மனதைப் பிசையும் சோகத்தையும் துக்கத்தையும் வெளியே காட்டாமல் தொடர்ந்து 10 நிமிடங்களில் அவர் மற்ற செய்திகளை வாசித்தது அவரின் பணியைச் செய்துமுடித்துவிடவேண்டும் என்ற பொறுப்புணர்ச்சியைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை இது சதாரணவிஷயம் இல்லை எல்லோராலும் இதைச் செய்ய முடியாது. எங்கள் ஊழியர் சுப்ரீத்துக்காக நாங்கள் பெருமைப்படுகிறோம் என்று சானலலின் தலைவர் சொல்லியிருக்கிறார். இதையே தான் இந்தியாமுழுவதும் இருக்கும் அத்தனை தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்களும் எதிரொலிக்கிறார்கள்.
சில ஆண்டுகளுக்குமுன் திருமணம் செய்துகொண்டிருக்கும் சப்ரீத் அண்மையில் ஒரு பெண் குழந்தைக்குத் தாயானவர்.

16/4/17

நைனிதால் -தேவதைகள் வாழும் வீடு


பசுமையான ஊசிமுனை இலைகளுடன் ஓங்கிவளர்ந்திருக்கும் தேவதாரு மரங்கள் நிறைந்த அந்த மலைச்சரிவிலிருக்கும் விடுதியிலிருந்து பார்க்கும்போது எதிரே மரகதப்பச்சை வண்ணத்தில் அமைதியாக அழகாகப் பரந்து விரிந்திருக்கும் நைனிதால் ஏரியும் அதன் மீது அமர்வதற்காக மெல்ல மிதந்து கொண்டிருக்கும் வெண்பனிமேக கூட்டங்களும் அவை அந்த ஏரியிலிருக்கும் அழகான வண்ண வண்ண பாய்களிடனிருக்கும் சிறு படகுகளுடன் ஆடும் கண்ணாமூச்சி ஆட்டமும் இந்த உயரத்திலிருந்து பார்க்க மிக அழகாகியிருக்கிறது. ஏரியின் ஒரு கோடியிலிருக்கும் நைனா தேவியின் கோவிலும் அதன் மீது கொடியும் தெளிவாகத் தெரிகிறது
>
ஒரு மாவட்டத்தலைநகர் என்ற எந்த பந்தாவும் இல்லாத இந்த சின்னஞ்சிறிய ஊர் உத்திரபிரேதசத்திலிருந்து பிரித்து
உருவாக்கப்பட்ட உத்திரகாண்ட் மாநிலத்தின்  முக்கிய நகரம்...
மலைப்பகுதியான இந்த நகரம் ஒரு சுற்றாலத்தலமட்டுமில்லை, புராதன புண்ணிய பூமியும் கூட. . சுற்றிலிருக்கும்
7 மலைகளில் அழகான ஏரிகள் மட்டுமில்லை. வீரம், கல்வி,நீதி, கலை, செல்வம் போன்றவகளை காக்கும் தேதைகளின்கோவில்களும் இருக்கின்றன.
,
நகரின் நடுவே இருக்கும் நைனிதால் ஏரியின் ஒரு பக்க கரையின் மீது தான் சாலை. அது மக்கள் நடக்க மட்டுமே. அந்த சாலையில் பொது வாகனங்கள் செல்ல அனுமதியில்லை நடக்கமுடியாதவர்களக்கு சைக்கிள் ரிக்க்ஷா வசதி. அதற்கு Q வில் நின்று 3 ரூபாய் டோக்கன் வாங்கவேண்டும். ( இந்தியாவில் எங்கும் பார்க்க முடியாத பீரிப்பெய்டு சைக்கிள்ரிக்ஷாக்கள்!) .

ஏரியின் ஒரு முனையிலிருக்கிறது நைனாதேவியின் கோவில் அர்ச்சகர் நல்ல ஆங்கிலம் பேசுகிறார். "இது மற்ற இந்தியகோடை வாசஸ்தலம் போல வெள்ளைக்காரர்களால் கண்டுபிடிக்கப்படவில்லை.இந்தப் பகுதி முழுவதும் இந்து மதபுராணங்களுடன் சம்பந்தப்பட்டது,
தெய்வங்களும், தேவர்களும் வாழ்ந்த பூமி. 1000 கோவில்களுக்கு மேலுள்ள மலைத்தொடர்களில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே சந்தன் வம்ச மன்னர்களின் ஆட்சியில் மக்கள் சந்தோஷமாக வாழ்ந்திருக்கிறார்கள் இந்த ஏரி தட்சனின் யாகத்தில் பங்கேற்தற்காக கோபத்தில் சிவ பெருமான் தேவியை வெட்டிஎறிந்தபோது பார்வதிதேவின் கண் விழுந்த இடம். அதனால்தான் நைனி-தால் எனப்பெயர்
. 100 மைல் தூரத்தில் 12 ஜோதிலிங்கங்களின் ஆதி ஜோதிலிங்கமிருக்கிறது. போய்பாருங்களேன்." என்று அந்த அர்ச்சகர் ஆர்வத்தைத் தூண்டியதால் அந்தமிகப் பழமையான, ஜோதி லிங்ககளின் ஆதி லிங்கத்தைத் தரிசிக்க . இப்போது ஜோகெஷ்வருக்குப் போய்க்கொண்டிருக்கிறோம்.
வளைந்து, வளைந்து செல்லும் மலைப்பாதை, இதமான குளிர் சாலையின் இரண்டுபுறமும் பளபளக்கும் பெரிய பச்சை கார்பெட் விரித்ததுபோல பசுமையான காடு. பார்க்குமிடமெல்லாம் நிந்தன் பச்சைநிறம் தோன்றுதடா என பாடவைக்கிறது. சிறு சிறு மலை கிராமங்களை கடந்துபோய்க்கொண்டிருக்கும் நம்மை பள்ளத்தாக்கில்
தெரியும் அந்த கிராமம் சட்டென்று கவர்கிறது. அல்மெடா (ஆங்கிலத்தில் அல்மோரா என எழுதுகிறார்கள்) என அறிவிக்கும் வரவேற்பு பலகையின் அருகில் ராமகிருஷ்ண மடத்து இலச்சினையுடன் ஒரு சிறிய போர்டு. ஆச்சரியப்பட்டு விசாரித்து மெல்ல அந்த மலைச்சரிவில்இறங்கினால்.அழகான பள்ளத்தாக்கை நோக்கிய எளிமையான கட்டிடங்களுடன் அமைக்கப்பட்ட ஆஸ்ரமம்.மற்ற ராமகிருஷ்ண ஆஸ்ரமங்களைப்போலவே அமைதியும்,அழகும்



மெல்ல முடிய பனிமேகங்கள் சட்டென்று விலகி பளிச்சென்று வெய்யில் தாக்கும் ஒரு வினோதமான வானிலையில் பயணத்தை தொடர்கிறோம். வழிநெடுக சிறிதும்பெரிதுமாக கோவில்கள்.உள்ளுர் காவல் தெய்வங்களிலிருந்து சிவபெருமான்
வரை பலவிதமான கோவில்கள். அதில் ஒன்று சிட்டை என்ற இடத்திலிருக்கும் கொலுதேவதா கோவில். வித்தியாசமாக இருக்கிறது. நுழைவாயில்,பாதை,மேற்கூரை கோவிலின் தூண்கள் மரங்கள் என்று எங்கு பார்த்தாலும் பெரிய,சிறிய மணிகள் கொத்துகொத்தாக தொங்குகிறது. விசாரித்ததில் நீதி தேவதையான அந்த தேவியிடம் கோர்ட் வழக்கு விவகாரங்கள்,வசூலிக்கமுடியாதகடன்,நிறைவேறாத ஒப்பந்தங்கள் போன்றவற்றின்,நகலுடன் ஒரு சிறிய மணியை இணைத்துக் கட்டி, நல்ல முடிவு வேண்டிப் பிரார்த்தித்து,கடவுளுக்கு கடிதம் எழுதுவார்களாம். வேண்டுதல் நிறைவேறியதும் பெரியமணிகட்டுவதாக வேண்டிக்கொள்கிறார்கள் என்றுதெரிந்தது.
பல மலைச்சரிவுகளையும் ஏற்றங்களையும் கொண்ட அந்த 35 கீமி மலைச்சாலையைக் கடக்க 2மணி நேரத்திற்கு மேலாகிறது. தேவதாருமரக் காடுகளுக்கே உள்ள மணம் நாசியைத்தாக்குகிறது. அடர்த்தியாக ஓங்கி வளர்ந்திருக்கும் தேவதாரு மரங்களும் ,வீசும் குளிர்ந்த காற்றும் அதிக உயரத்திற்கு வந்துவிட்டதை உணர்த்துகிறது. இங்கிருந்து ஜோகேஷ்வர் வளாகம் துவங்குகிறது என்ற தொல்பொருள் துறையினரின் அறிவிப்பு நம்மை வரவேற்கிறது 9ம் 10ம் நூற்றாண்டுகளில் பல காலகட்டங்களில் எழுப்பட்டதாகவும் முக்கியமான ஜோதிர்லிங்கம் இருக்கும் பெரிய கோவில் 3கிமீ தொலைவில் இருப்பதாகச் சொல்லும் அந்த குறிப்பைபார்த்துவிட்டு பயணத்தைத் தொடர்கிறோம் சட்டென்று திரும்பிய ஒரு திருப்பத்தில் பள்ளத்தாக்கில் பசுமையான மரங்களின் பின்னணியில் சிறிதும், பெரிதுமாகக் கும்பலாக பல கோவில்கள். சதுரமான கீழ்ப்பகுதியாக துவங்கி,
நுழைவாயிலைத்தவிர வேறு எந்த திறப்போ மாடமோ இல்லாமல் இறுக்கி அடுக்கிய கல்கோட்டையாக உயர்ந்து கோபுரமாக குவிந்த உச்சியின் மீது மரத்தால் செய்த சிறிய மண்டபத்தைத் தொப்பியாக அணிந்திருக்கும் ஒரு பெரிய கோவில்.
அதேவடிவத்தில் சிறிதும் பெரிதுமாக அருகருகே பல கோவில்கள்.வேகமாக நடந்தால் இடித்துக் கொள்ளுமளவிற்கு நெருக்கமாகப் பல குட்டி (100கும்மேலிருக்கும்)கோவில்கள். . கோவில் தொல்பொருள் சின்னம் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் பூஜைகள் உண்டு. பிரதான கோவிலில் மூர்த்தி ஜோகெஷ்வர் சுயம்புவாக எழுந்த லிங்கம். தரையிலிருந்து 1அடி உயரமிருக்கும்

மூர்த்தியைச் சுற்றி மூன்றுபக்கங்களிலும் பக்தர்கள் கர்ப்பககிரகத்தில் பொறுமையுடன் உட்கார்ந்திருக்க, பளபளக்கும் ஆரஞ்சு வண்ண உடையில்அர்ச்சகர் வந்து அவர் ஆசனத்தில் அமர்கிறார். பாலில் தோய்ந்த அரிசி தேவதாரு இலைகளுடன்அரளிப்பூ எல்லோருக்கும் தருகிறார்.அவருடன் நாமும் செய்யும் அபிஷகம் முடிந்ததும் மெல்லிய குரலில் உள்ளூர் மொழியில் ஒரு ஸ்லோகம் சொல்லுகிறார் இடையிடையே அவர் அர்ச்சிக்கும்போது நாமும் அர்ச்சிக்கிறோம். பின் தீபாரதனை. பூஜைமுடிந்தது.
பூஜைக்குக் கட்டணம் விஐபி தரிசனம் எதுவும் கிடையாது. முதலில்வருவபருக்கு ஸ்வாமியின் அருகே அமர முன்னுரிமை. நம் அருகிலிமர்ந்து பூஜை செய்தவர் உத்திராஞ்சல் மாநில உயர் நீதிமன்ற நீதிபதி என்பதை வெளியில் வந்தபின் அவருக்குள்ள பாதுகாப்பை பார்த்தபின்தான் தெரிந்துகொள்கிறோம்.
அருகில் ஒரு சின்ன குன்றின் மேல் குபேரனுக்கு ஒரு கோவில். மூர்த்தி லிங்க வடிவிலிருக்கிறார். நுழைவாயிலில்
"வேண்டிக்கொள்ளும் பக்தர்களுக்கு செல்வம் சேரும்" என எழுதப் பட்ட வாசகங்கள். அருகிலிருக்கு ஜோகேஷ்வருக்கு அவ்வளவு கூட்டமிருந்தும் இங்கு ஏன் அதிகமில்லை என்ற நமது கேள்விக்கு அந்த அர்ச்சகர் தந்த பதில் பற்றி சிந்தித்துக்கொண்டே நைனிதாலுக்கு திரும்பும் பயணத்தை துவக்குகிறோம்.

வேடிக்கைக்காகச் சொன்னதோ அல்லது வேதனையில் சொன்னதோ -நம்மைச் சிந்திக்கவைத்த அந்த வார்த்தைகள்
"செல்வம் சேர்ந்தால் பிரச்சனைகள் வரும் பிரச்சனைகளினால் வேதனை உண்டாகும் என்பதால் தேடிப்போய் வேண்டி வேதனையை வாங்கிக் கொள்வானேன் என்று பலர் நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள்"


5/4/17

மரணத்தில் மர்மம்- விசாரணை துவங்கியிருக்கிறது


பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த  கோலாலம்பூர் விமான நிலையத்தில்  விமானம் ஏற காத்திருப்பவர்களின் வரிசையில் நின்றுகொண்டிருந்தவர்களில் ஒருவரின் அருகில்ஹாய்”  என்று சொல்லிக்கொண்டே அந்த அழகிய இரண்டு பெண்கள்  அவர் முகத்தில் சென்ட் மாதிரி  எதையோ ஸ்பிரே செய்கிறார்கள்சில நிமிடங்களில் உதவி கேட்டு கூச்சலிட்டு அந்த மனிதர் தரையில் விழுகிறார். அழகியபெண்கள் அம்பேல்ஆம்புலன்ஸ் வந்து அந்த மனிதரை அள்ளிக்கொண்டு மருத்துமனைக்குப் பறக்கிறது. ஆனால் பாதி வழியிலேயே அவர் இறந்து போகிறார். மருத்துமனையில் கண்டுபிடிக்கப்பட்டவிஷயம்  அவர் மீது ஸ்பிரே செய்யப்பட்டிருப்பது  விஎக்ஸ் என்ற கொடிய ரசாயன விஷம்தெளிக்கப்பட்டவர் 20 நிமிடங்களுக்குள் இறப்பது நிச்சியம் என்றளவினாலான கொடுமையான விஷம். உலகின் பல நாடுகளில் தடை செய்யப் பட்டிருக்கும் ஒரு ரசயானம்.
யார், ஏன் இதை இவருக்குச் செலுத்தியிருக்கிறார்கள் என ஆராய்ந்த மலேசியப் போலீசுக்கு  ஒன்றின்பின் ஒன்றாகத் தொடர் ஆச்சரியங்கள் காத்திருந்தன.
கொலை செய்யப்பட்டிருப்பவரின் பெயர் கிம் ஜாங் நம் என்பதை அவர் பாஸ்போர்ட்டின் மூலம் அறிந்தவர்களை அடுத்துத் தாக்கிய ஆச்சரியம் அவர்  வட கொரிய அதிபரான  கிம் ஜாங் உன்   னின் ஒன்று  விட்ட சகோதரர் மற்றொரு நாட்டின் அரசியல் குடும்ப உறுப்பினர் மலேசிய மண்ணில் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பது புரிந்தவுடன் அரசு இயந்திரம் மிக வேகமாக இயங்கியதுஸ்பிரே அடித்தப் பெண்கள் வளைக்கப்பட்டனர்.
 “இது ஒரு ரியாலிட்டி ஷோ, நீங்கள் அடிக்கப்போவது வாசனைத் தண்ணீர். ஆனால் அவர் பயந்து விழுவார். பின்னர் சிரித்துக்கொண்டே எழுந்துவிடுவார். நாங்கள் வீடியோபடமெடுப்பதைக் காட்டுவோம்” என்று ஒரு    டிவி சானல் சொல்லிப் பணம் கொடுத்ததினால் செய்தோம். இது விஷம் என்றோ அல்லது அவர் இறந்து போவார் என்றோ தெரியாது என்றனர் அந்த மாடல் அழகிகள். விசாரணையின் எல்லைகள் விரிந்தன. வெளியான விஷயம் கிம் ஜாங் நம் கொல்லப்பட்டதற்கு பின்னால் ஒரு சதி திட்டம் இருப்பதையும் அதைச் செய்தவர்கள் வடகொரியாவின் உளவுத்துறை என்பது.
 ஏன் இந்தப் படுகொலை? என்பதைப் புரிந்துகொள்ள  வினோதமான வடகொரிய அரசியலைக் கொஞ்சம் தெரிந்துகொள்ள வேண்டும். இரண்டாம் உலகப்போருக்குப் பின்  அமெரிக்காவும் சோவியத் யூனியனும் கொரியாவை ஆளுக்குப் பாதி எனப் பங்கு போட்டுக்கொண்டனர். அதில் வட பகுதி  சோவியத்தின் உதவியுடன் இயங்கிவந்த எதேச்சாதிகார நாடுநாடு வறுமையில் சிக்கி தவித்துக்கொண்டிருந்தாலும்  திடும் திடும் எனச்  சக்தி வாய்ந்த ராக்கெட்களை ஏவியும், அணுகுண்டு சோதனைகளைச்செய்தும் மிரட்டிக்கொண்டிருப்பவர்கள்  நாட்டின் பெயர் தான்  ‘மக்கள் குடியரசு”  ஆனால்  நடப்பது  அதிபரின் குடும்ப ஆட்சிதான். முதல் அதிபர் கிம் இல் சுங்-இன் ஆட்சி, 1994இல் அவர் மரணம்வரை நீடித்தது. தொடர்ந்து அவரது மகன், அவரைத்தொடர்ந்து அவரது மகன் என்று பரம்பரையாக குடியரசு ஆட்சி செய்துகொண்டிருக்கிறது அதிஅப்ரின் குடும்பம்
 இந்த முறைப்படி கொலை செய்யப்பட்டிருக்கும் கிம் ஜாங் நம் தான் வட கொரியாவின் ஆட்சி யாளராக வந்திருக்க வேண் டும். ஆனால், இவர் போலி பாஸ் போர்ட்டில் ஜப்பான் சென்று அங்கு  கைது செய்யப்பட்டது இவரது  எதிர் காலத்தை சூனியமாக்கியது. இதனால் வட கொ ரிய முன் னாள் அதிபர் கிம் ஜால் இல், தனது 3வது இளைய மகன் கிம் ஜாங் உன்னை தனது அரசி யல் வாரி சாக அறி வித் தார். ஆட்சி கட்டிலில் அமர முடியாமல் போன கிம் ஜாங் நம், வட கொரியா திரும் வில்லை. ஹாங்காங் அருகேயுள்ள சீனா வின் மகுவா பகுதியில் தான் வசித்து வந்தார். இவருக்கு வட கொரியா வின் நட்பு நாடாக இருந்த சீனா ஆதரவு அளித்து வந்தது.
 சமீப காலமாக அதிபர் கிம் ஜாங் உன் பற்றி, கிம் ஜாங் நம் வெளிப்படையாக விமர்சிக்க ஆரம்பித்தார். அவரது ஆட்சியை ஜோக் எனவும், வட கொ ரியாவை கட்டுப்படுத்தும் அளவுக்கு அவருக்கு வயது போதாது எனக் கடுமையாக விமர்சித்து வந்தார்  கிம் ஜாங் நம். இது கிங் ஜாம் உன்னுக்கு வெறுப்பை ஏற்படுத்தியதுஅன்னிய சக்திகளின் ஆதரவுடன் இவர்  தன் ஆட்சியை கவிழ்த்துவிடுவார்  எனப் பயந்து  இவரை உளவுத் துறை மூலம் தீர்த் துக் கட்ட கிம் ஜாங் உன் முடிவு செய்தார். அந்த தொடர் முயற்சிகளின் கிளைமாக்ஸ் தான் கோலாலம்பூர்  விமான நிலையத்தில் அரங்கேறியது..

மரணத்தில் . எந்த சந்தேகமும் வராமல் தீர்த்து கட்ட அவர் கள் பயன்படுத் திய ஆயுதம் தான் ரசாயன போர் முறை யில் இது பயன்படுத்தப் படும் வி.எக்ஸ்.   . உலகம் முழுவதும் தடை செய்யப் பட்ட ரசாயனம். இந்த ரசாயனம் தோலில் பட் டால், அல்லது நுகர்ந் தால் நரம்பு மண் டலம் ஸ்தம் பித்து சில நிமிடங் ளில் மர ணம் ஏற்படும் என்பது சாதாரண நபர்களுக்குத் தெரியாது.
கிம் ஜாங் நம் மலேசியா வந்திருப்பதை அறிந்த கொலைகாரகும்பல், அவரைத் தீர்த்து கட்டும் சதியில் இறங்கியது. பிரபலம் இல்லாதவர் என்பதால், அவரை யாருக்கும் அடை யாளம் தெரியாதுஎன்பதால் விமான நிலையம்.. ஆனால் மலேசிய போலீஸ் விழித்துக் கொண்டுவிட்டது. தடயவியல் சோதனையில் கிம் ஜாங் நம் மீது  தெளிக்கப்பட்ட ரசாயனம்  வி.எக்ஸ் என உறுதி செய்யப் பட்டதும் பெரும் அதிர்ச்சியான அந்த விஷயத்தை உலக நாடுகளுக்கு அது அறிவித்தது.  பிரச்சனைகளைத் தவிர்க்க இவரது உடலை உடனடியாக ஒப்படைக்கும் படி வட கொரியா, மலேசியாவுக்கு நெருக்கடி கொடுத்தது..மலேசிய அரசு, கிம் ஜாங் நம் உடலை உறுதி செய்ய அவரது குடும் பத்தினரின் டிஎன்ஏ மாதிரியை கேட் டது. ஆனால் அவரது குடும்பத்தினர் யாரும், உடலை ஒப்படைக்கும் படி உரிமை கோரவில்லை.
மலேசியா இனி நடத்தும் விசாரணையில்  உண்மை நிலவரம் தெரியவரும். வட கொரியாவின் சதி உறுதியானால்,சர்வ தேச தடையை மீறி வி.எக்ஸ் ரசாயனத்தை பயன் படுத்தப் பட்டதை .நாவும், உலக நாடு களும் சாதாரண விஷயமாக எடுத் துக் கொள்ளாது  வடகொரியா   உலக நாடுகளின் நெருக்கடியைச் சந்திக்க நேரிடும்.