அறிவியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அறிவியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

21/2/16

என்று தணியும் இந்தத்தாகம் ?




அறிவியலாளர்கள் ஆச்சரியங்களை நம்புவதில்லை. எந்த ஒரு நிகழ்வுக்கும் அறிவுபூர்வமான காரணங்களைச் சொல்லுவார்கள் அல்லது ஆராய்ந்து கண்டுபிடிப்பார்கள். ஆனால் நமது எல்லையில் சியாச்சின் மலைச்சரிவில் நிகழந்த ஒரு பனிப்பாறைசரிவில் சிக்கிய ராணுவ வீரர் ஒருவர 25 அடி ஆழத்தில் உறைபனிகளுக்கு நடுவில் மைனஸ் 45 டிகிரி குளிரில் ஆறு நாட்களாக உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அவரை மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டிருக்கும் செய்தி அறிவியல் உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
காஷ்மீரின் லடாக்கின் பனி மலைப் பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 19 ஆயிரத்து 600 அடி உயரத்திலிருக்கும் சியாட்சின் பனிமலைப்பகுதிதான். உலகிலேயே மிக அதிக உயரத்தில், ஆபத்துகள் மிகுந்த போர்க்களமாக அறியபட்டிருக்கும் பகுதி. வருடம் முழுவதும் உறைபனியும், 60 டிகிரி குளிரும், மணிக்கு 100கீமி வேகத்தில் பனிக்காற்றும் வீசும் பகுதி. புல் பூண்டு எதுவும் இல்லாத இந்தப் பனி பாலைவனப்பகுதியை ஒரு நாளைக்கு 6 கோடி செலவில் இந்திய ராணுவம் பாதுகாக்கிறது.அதிரடி தாக்குதலுக்குப் பெயர் பெற்ற மெட்ராஸ் ரெஜெமெண்ட்க்கு தான் இந்தப் பணி.  1949 கராச்சி ஒப்பந்தம் 1972 சிம்லா ஒப்பந்தம் எதிலும் இந்த மலைப்பகுதியின் எல்லைப்பிரச்சனை தெளிவாக வரையறுக்கப்படாதால், இந்தியா-பாக்கிஸ்தான் இரு நாடுகளும் ”போர் தயார்” நிலையிலேயே எப்போதும் இந்த பகுதியைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறது.
இங்குள்ள பாகிஸ்தான் எல்லைக்கு 5 கீமி அருகே மெட்ராஸ் படைப் பிரிவைச் சேர்ந்த வீரர்கள் முகாமிட்டிருந்தனர். அப்போது அங்கு 800 அடி உயரம், 400 அகலம் உள்ள பனிப்பாறை ஒன்று சரிந்து முகாமின்மேல் விழுந்து 10 வீரர்களை 25 அடி ஆழத்தில் புதைத்தது. இவர்களில் 4 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். பனியில் 25 அடிக்குக் கீழே புதைந்த வீரர் களை மீட்கும் பணியில் ராணுவத்தினரும், விமானப் படைப்பிரிவினரும் ஈடுபட்டனர். உடனடியாக மீட்க முடியாததால், 10 பேரும் இறந்ததாகக் கடந்த 5ம் தேதி அறிவிக்கப்பட்டனர்.
போரே நடக்காத இந்தப் பகுதியில் இதுவரை 869 வீரர்கள் இறந்ததாகப் பாராளுமன்றத்தில் பதிவு செய்யபட்டிருக்கிறது. இவர்கள் பனியின் சீற்றத்திற்கு பலியானவர்கள். இவர்களைத்தவிர பலநூற்றுகணக்கானவீரர்கள் உடல் உறுப்புகளை இழந்திருக்கிறார்கள்
ஒரு ராணுவ வீரன் பணியிலோ அல்லது போரிலோ இறந்தால் அவரது உடலைத் தகுந்த மரியாதைகளுடன் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அதனால் இறந்த வீரர்களின் உடல்களைத் தேடும் பணி துவங்கியது. விடா முயற்சியுடன் 150 வீரர்களும், டாட் மற்றும் மிஷா என்ற இரண்டு மோப்ப நாய்களும் மீட்புபணியில் இறங்கின. எலக்ட்ரிக் ரம்பம் மூலம் பனிப்பாறைகள் அறுக்கப்பட்டு, ரேடார், ரேடியோ சிக்னல் கருவிமூலம் வீரர்களின் உடல்கள் தேடப்பட்டன. இரவு நேரத்தில் வெப்ப நிலை மைனஸ் 55 டிகிரி வரை சென்றதாலும், கடும் குளிர் காற்று வீசியதாலும் மீட்பு பணி அவ்வப்போது பாதிக்கப் பட்டது. அதையும் மீறிப் பனிப்பாறைகளைத் தோண்டியதில் ஹனுமந்தப்பா என்ற வீரர் உயிருடன் புதைந்திருந்ததை மீட்பு குழுவினர் கண்டு பிடித்தனர். பனியில் புதைந்து 6 நாட்களுக்குப் பின் அவர் உயிருடன் இருந்தது மீட்பு குழுவினரை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியது.
அதிர்ச்சியில் சோர்வாக இருந்த ஹனுமந்தாவின் உடல் சூடான ஆக்ஸிஜன் மற்றும் ஹீட்டர்கள் மூலம் சூடேற்றப் பட்டு ஹெலிகாப்டரிலேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு கட்டுபாட்டு கேந்திரத்தில் காத்திருந்த ஏர் ஆம்புலன்ஸ் விமானம்மூலம் உடனடியாக டெல்லி மருத்துவ மனைக்குக் கொண்டுவரப்பட்டார். காத்திருந்த சிறப்பு மெடிகல் டீம் தங்கள் பணியைத் தொடர்ந்தது. அனைத்தும் மின்னல் வேகத்தில் சில மணிநேரங்களில் நடந்தது .ஆனால் ஆறு நாட்கள் ஆச்சரியமாக உயிர்பிழைத்திருந்த ஹனுமந்தப்பாவை சிறந்த மருத்துவ வசதிகள் இருந்தும் காப்பாற்றமுடியவில்லை. பிராத்தனை செய்து கொண்டிருந்த தேசம், வருந்தியது
பனிச்சரிவுகளில் மீட்பு பணி மிகச் சவாலானது. நம் வீரர்களுக்கு இதற்கான பயிற்சிகளும் அளிக்கபட்டிருக்கிறது. போட்டிருக்கும் அத்தனை பாதுகாப்பு உடைகளையும் தாண்டி எலும்பைத் தாக்கும் குளிரில் மிகவும் சிக்கலான கருவிகளைத் திறம்பட இயக்கி இறந்தவர்களைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். புதைந்திருப்பது எந்தப் பகுதி என்பதை கண்டறிய ஒலிக்கதிர்களை விமானத்திலிருந்து அந்தப் பகுதியில் செலுத்தி கண்டுபிடித்தபின் அந்த இடங்களில் சக்திவாய்ந்த ட்ரில்லர்கள் மூலம் துளையிட்டு அதன் மூலம் மின் அலை சிக்கனல்களை அனுப்பினார்கள். சியாச்சினில் பணியிலிருக்கும் ராணுவத்தினர் தங்களிருப்பிடத்தை அறியும் சிக்னல் எழுப்பும் கருவி அணிந்திருப்பார்கள். சில இடங்களிலிருந்து அந்த சிக்னல்கிடைத்தவுடன்  அந்த இடங்களில் விசேஷ கட்டர்களை செலுத்தி பனிப்பாறைகளை அறுக்க வேண்டும். கல், கான்கீரிட் போன்றவைகளைவிட கடுமையான இந்தப் நீலப்பனிப்பாறைகளை அறுக்கும் கத்திகள் இயங்க தேவையான அதிசக்தி மோட்டர்கள் அதற்கான பேட்ரிகள் எல்லாம் அடிவாரத்திலிருந்து ஹெலிகாப்படரில் கொண்டுவரபட்டது. அவைகள் இயங்க நின்றநிலையில் ஒரு ஹெலிகாப்டர் என்ஜின் ஒடிக்கொண்டிருந்தது.  மீட்புப் பணிகளைப் பகலில் கடுங்குளிருடன் கண்பார்வையை இழக்க செய்யும் அளவிற்கான வெண்பனியில் பட்டுத் திரும்பும் சூரிய ஓளியிலும், இரவில் மைனஸ் 35 டிகிரி குளிரிலும் செய்திருக்கிறார்கள்.
.கடும் போராட்டத்துடன் நடந்த இந்த மீட்பு பணியில் மற்ற 8 வீரர் களின் உடல்களும் மீட்கப் பட்டு விட்டன.

செய்திஅறிந்தவுடன் பிரதமர் டிவிட்டரில்''ஹனுமந்தப்பாவை பார்க்கப் போகிறேன். அவர் உடல் நலம் தேறி வர வேண்டுமென்று நாடே வேண்டுகிறது'' எனக் குறிப்பிட்டுவிட்டு மருத்துவமனைக்கு விரைந்து சென்றிருக்கிறார். பிரதமரின் இந்தச் செய்கை ராணுவவீரர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்திருக்கிறது.
இறந்த வீரர்களுக்கு அஞ்சலியும் சவாலான மீட்புபணிகளை வெற்றிகரமாகச் செய்த வீரர்களுக்குப் பாரட்டுகளை தெரிவிக்கும் ஒவ்வொரு இந்தியனின் மனத்தில் எழும் கேள்வி


என்று தணியும் இந்த எல்லைப் பிரச்சனையின் தாகம்?




4/2/16

இளைஞர்களே இந்தியா உங்களுக்கு நன்றி சொல்லுகிறது.

 




கடந்த சில ஆண்டுகளுக்குமுன் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு தொழில்நுட்ப வசதி. GPS. உங்கள் காரில் இருக்கும் அந்தக் கருவியில் நீங்கள் போகவேண்டிய இடத்தைச் சொன்னால் அந்த இடம் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது சரியான பாதை போகும் நேரம் எல்லாம் அந்தக் கருவி சொல்லும். அது சொன்ன பாதையிலிருந்து மாறி நீங்கள் வேறுபாதையில் காரை ஒட்டிக்கொண்டு போனால் நீங்கள் தவறாகப் போகிறீர்கள் என்றும் அந்த இடத்திலிருந்து மீண்டும் எப்படி சரியான இடத்துக்குப் போக வேண்டும் என்றும் சொல்லும்.(திட்டாமல்- கோபித்துக்கொள்ளாமல்) ஆம்! அந்தக் கருவி பேசும். இது இப்போது இந்திய கார்களிலும் செல்போன்களிலும் வந்துவிட்டது.
இப்படியொரு ஜிபிஎஸ் கருவி இருந்தால்போதும், அமோசன் காடுகளிலோ, அண்டார்ட்டிகா பனிபாலைவனத்திலோ கூட நீங்கள் காணாமல் போகவே முடியாது ஏழு கடல், ஏழு மலையையும் சர்வசாதாரணமாகத் தாண்டி வீட்டுக்கு வந்துவிட முடியும். காரணம், தெளிவான வழிப்பாதையை அதன் மூலம் அறிய முடிவதுதான். இன்று இந்தியாவிலும் இந்த வசதி கிடைத்ததற்கு காரணம் அமெரிக்கா விண்வெளியில் நிறுத்தியிருக்கும் செயற்கை கோள்கள் தான்.
அமெரிக்காவும், ஐரோப்பிய கூட்டமைப்பும் மட்டுமே கொண்டிருக்கும் இந்தச் செயற்கை கோள் வசதியை நமது இஸ்ரோ நமக்காக  இப்போது செய்யவதற்காக அனுப்பிக் கொண்டிருக்கும் கோள்கள்தான் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். கோள்கள். .கடந்த சில வாரங்களுக்கு முன் இந்த வரிசையில் 5 (1-இ) வது கோளை விண்வெளிக்கு அனுப்பி சரியான இடத்தில் நிறுத்தியிருக்கிறது. இஸ்ரோவின் சாதனை மகுடத்தில் இது இன்னொரு வைரம்.
இஸ்ரோவின் நொடிப்பொழுதில் வழிகாட்டும் GPS திட்டம் சரியாக இயங்க 7 கோள்கள் கொண்ட ஒரு தொகுப்பு பூமத்திய ரேகைக்கு 36000 கீமீக்கு மேலே நிறுவப்பட வேண்டும். அதில் 3 பூமத்திய ரேகைக் மேலேயும் மற்ற 4ம்அதற்கு 29 டிகிரி சாய்வாகவும் நிறுவப்பட வேண்டும். எனக் கணக்கிட்டு 2013ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொன்றாக அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். இந்தக் கோள்கள் நிறுத்தப் பட வேண்டிய இடங்கள் மிக துல்லியமாகக் கணக்கிடப்பட்டு, அந்த இடத்தில் கச்சிதமாக நிறுத்தபடவில்லை என்றால் திட்டம் வெற்றி பெறாது. இதுவரை அனுப்பிய 4 கோள்களும் சரியான இடத்திலிருப்பதைப் போலவே இந்த 5வது கோளும் திட்டமிட்டபடி விண்வெளியில் பாய்ந்த சில நிமிடங்களில் அதன் திட்டமிட்ட இலக்கில் போய் நின்றது
 ஏன் எழு கோள்கள்?.
 இஸ்ரோ இந்த வசதியைத் திட்டமிட்டிருப்பது இந்தியாவிற்கு மட்டுமில்லை. இதனால் பலன் பெறப்போவது பல தென்கிழக்கு நாடுகளும் தான். இந்தியாவைச் சுற்றி 1500 கீமி பரப்பளவை கண்காணிக்கபோகிறது என்பதாலும், இப்போது அமெரிக்கா கோள்கள் தரும் தகவல்களைவிட மிக அதிகளவு தகவல்களைப் பெற வேண்டும் என்பதற்காகவும் 7 கோள்கள் திட்டமிடபட்டிருக்கிறது.
இந்தக் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். கோள்கள் எப்படி வேலைசெய்கிறது?. ஒவ்வொரு கோளிலும் சக்திவாய்ந்த ஒரு அணுசக்தி கடிகாரம் இருக்கிறது. அது அனுப்பும் மின் அலைகளைப் பூமியில் உள்ள GPS கருவி பெற்று அது இருக்குமிடத்தகவலை கோளுக்கு அனுப்புகிறது.கோளிலிருக்கும் மேப் ரிடர் போன்ற மற்ற கருவிகளின் உதவியுடன் வழிகாட்டும் பணி நடைபெறுகிறது. இவ்வளவும் ஒருவினாடியின் ஒரு லட்சம்பகுதிக்குள் நடைபெறும். வினாடி பிசகினால் வழி காட்டவேண்டிய இடம் தவறலாதாகி ஓர் லட்சம் மைல் தள்ளியிருக்கும் இடத்தைக் காட்டிவிடும் இந்தக் காரணத்தினால் கோளில் உள்ள அணுசக்தி கடிகாரம் மிக மிகத் துல்லியமாக இயங்க வேண்டும். . கோள்களில் இருக்கும் அந்தக் கடிகாரங்கள் 300மில்லியன் ஆண்டுகளில் ஒரு வினாடி மட்டுமே தாமதமாகும் என்ற அளவுக்குத் துல்லியமானது. எல்லாவற்றையும் விட இந்தப் பணிகளைச்செய்ய அந்தக் கோள் மிகச்சரியான் இடத்தில் நிலைநிறுத்த பட வேண்டும்.
. இந்தச் சவாலான சாதனையைத்தான் இஸ்ரோ தவறு இல்லாமல் 5 முறையும் செய்திருக்கிறது. அடுத்த ஆண்டுக்குள் மற்ற இரண்டையும்(1F,1G) அனுப்பி இந்தக் கோள்களின் கட்டமைப்பை உருவாக்கி விட்டால் இந்திய GPS செயல்பாட்டுக்கு வந்துவிடும்.
ஏற்கனவே இருக்கும் இந்த வசதியை ஏன் நாம் மீண்டும் செய்ய வேண்டும்? இப்போது அமெரிக்கா தந்திருக்கும் வசதி பிறநாடுகளில் 24 மணி நேரமும்கிடைப்பதில்லை. அதுமட்டுமில்லாமல் இந்தியா உருவாக்கும் இந்தச் சேவை தரை, கடல் தவிர் வான்வெளி பாதைகளுக்கும் இயற்கையின் சீற்றங்களின் போக்கை அறிவதற்கும் பயன்படப்போகிறது.

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையம் நாசாவின், ஓராண்டு பட்ஜெட்டில் செலவழிக்கும் தொகையில் பாதியைத்தான் இதுவரையில், அதாவது கடந்த 40 ஆண்டுகளில் இஸ்ரோ செலவிட்டுள்ளது. அதற்குள் விண்வெளித்துறையில் எந்த நாடும் எட்ட முடியாத பல சாதனைகளைச் செய்திருக்கிறது. இந்த வெற்றிகளுக்குப் பின்னே இருக்கும் விஞ்ஞானிகள், பொறியாளர்களில் பலர் இளைஞர்கள். உலக அரங்கில் இவர்களின் அர்ப்பணிப்பான பணிகளினால் தான் நாட்டின் பெருமையும் கெளரவும் உயர்ந்திருக்கிறது. 
அவர்கள் சாதனையால் காலரைத் தூக்கிவிட்டுக்கொள்ளும் நாம் அவர்களுக்கு நம் நன்றியையும் சொல்வோம்

  

18/12/15

நோபல் பரிசு பெறுவாரா இந்த தமிழ்ப்பெண்?

கற்பனையில் கூட எல்லைகளை நிர்ணயிக்க முடியாத  அளவில் பறந்து விரிந்து கிடக்கும்  பிரமாண்டமான  பிரபஞ்சவெளி எண்ணற்ற ஆச்சரியங்களும்   எளிதில் புரிந்துகொள்ளமுடியாத புதிர்களும்  நிறைந்ததுஇந்த மர்ம தேசத்தில் இன்னும்  முழுவதுமாக அவிழ்க்கப்படாத முடிச்சுகளில் ஒன்றுகருப்பு துளைகள்என அறியப்பட்டிருக்கும்  black holes.  பூமியிலிருந்து 1260 கோடி ஒளியாண்டு தொலைவில் உள்ளது இந்தக் கருந்துளை. அதாவது அங்கிருந்து புறப்பட்ட ஒளி நம்மை வந்து அடையச் சுமார் 1260 கோடி ஆண்டுகள் ஆகியிருக்கின்றன என்று அர்த்தம். சூரியன் பிறந்தே சுமார் 460 கோடி ஆண்டுகள்தாம் ஆகின்றன   என்பதிலிருந்து தூரத்தை  யூகித்துக்கொள்ளுங்கள்.
 இந்த கருப்பு துளைகள் பற்றிய  விண்ணியல் ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சிகள் கடந்த இரண்டு நூற்றாண்டுகளாகத்  தொடர்ந்து கொண்டுவருகின்றனஇதில் ஒரு புதிய விஷயத்தைத் தனது ஆராய்ச்சிகள் மூலம் கண்டுபிடித்து   உலகநாடுகளிலுள்ள  விண்ணியல் விஞ்ஞானிகளை வியக்க வைத்திருக்கிறார்  இந்த இந்திய பெண் விஞ்ஞானி. அமெரிக்காவிலிருக்கும் அவருடன் பேசியபோது அறிந்தவை இவை

பிரியம்வதா என்னும் பிரியா டெல்லியில் ஒரு தமிழ்க் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். அவரது தந்தையார் வெங்கடேச நடராஜன் ஓர் எஞ்சினீயர். தாயார் லலிதா நடராஜன் ஒரு சமூகவியல் பட்டதாரி. இரு சகோதரருடன் பிறந்த பிரியா எல்லாருக்கும் மூத்தவர். மேற்படிப்புக்கு அமெரிக்கா போனவர். உலகப்புகழ் பெற்ற  அமெரிக்க MIT பல்கலை கழகத்தில் விண்ணியலில் முதுகலை, தொடர்ந்து முனைவர் பட்டங்கள் பெற்று தற்போது அமெரிக்க யேல் பல்கலைக்கழகத்தில்  விண்ணியல் துறையின் தலைமைப் பொறுப்பிலிருப்பவர். தனது ஆராய்ச்சிகளையும் தொடர்ந்து செய்து  கொண்டிருப்பவர்டென்மார்க் நாட்டின் கியூபன் ஹோவன் விண்ணியல் பல்கலைகழகத்தில் சிறப்பு பேராசியராக  அழைக்கப்பட்டிருப்பவர். டெல்லி  பல்கலை கழகத்தின் வாழ்நாள் பேராசிரியராகவும் கௌரவிக்க பட்டிருப்பவர்,
உலக விண்ணியல் விஞ்ஞானிகள் பிரமித்து போகுமளவிற்கு இவர் சமீபத்தில்  கண்டு பிடித்திருப்பது என்ன என்பதைப் பற்றி அறிந்து கொள்ள கருப்பு துளைகளை பற்றி நாம் சற்று புரிந்து கொள்ள வேண்டும்
விந்தைகள் நிறைந்த விண்பேரண்டவெளியில்  ஒரு பகுதி இந்த   கருங்குழிகள் (Black Hole) அல்லது கருந்துளைகள் என்பன, இவை  வலுவான ஈர்ப்புச் சதியைக் கொண்டுள்ளவை தானும் ஒளிராது, தன் மீது விழும் ஒளியையும் பிரதிபலிக்காது  இந்தக் கருந்துளைகள்.. எனவே, கருந்துளையை நேரடியாகப் பார்க்க முடியாது. நேரடியாகப் பார்க்க முடியாவிட்டாலும் கருந்துளையை இனம் காண வானவியலாளர்கள் வேறு வழிகளைக் கண்டுள்ளனர்.அதன் மிகக் கூடுதலான ஈர்ப்பு விசையின் காரணமாக, அதைச் சுற்றி இருக்கும் வான் முகில்கள், விண்மீன்களைப் பிடித்துக் கபளீகரம் செய்துவிடும். அவ்வாறு அருகில் உள்ள பொருள்களைக் கபளீகரம் செய்யும்போது அந்தப் பொருள்கள் மேலே எறிந்த கல் நேரே கீழே விழுவது போல நேரடியாகக் கருந்துளையில் விழாது. வாஷ்பேசினில் நீர் சுழன்று சுழன்று துளைக்குள் விழுவதுபோலக் கருந்துளையைச் சுற்றிச் சுற்றிப் பொருள்கள் விழும்.
இதன் சுற்றுப்பாதையில் இப்படிச் சுழன்றுகொண்டிருக்கும்   கோள்களின் வேகம், அவைகள் இருக்கும் நிலைகளின் மூலம் இந்தக் கருந்துளைகளின்  அமைப்பை கணக்கீடுகள் மூலம் எப்படியிருக்கும் எனக் கணித்திருக்கிறார்கள். வளரும் தொழில் நுட்பம் கைகொடுக்க பெருமளவில் கணினிகள் மூலமும் ராட்சத டெலிஸ்கோப்புகள் மூலமும் இந்தக் கணக்கீடுகளை உறுதிசெய்திருக்கிறார்கள். இந்தக் கருந்துளைகள் இருக்கும் அடர் கருப்பு பகுதி  வாழ்நாள் முடிந்த பின் எரிந்துபோன நட்சத்திரங்களின் கூட்டம் என்றும். அவற்றுடன்  புதியஎரிந்தநட்சத்திரங்கள்  சேர்வதால் அவை  வரமின்றி வளர்கின்றன என்றும் சொல்லப்பட்டது.
இந்தப் பின்னணியில் பிரியம்வதா கடந்த சில ஆண்டுகளில் தனது தொடர்ந்த ஆராய்ச்சிகள் மூலம்  கருந்துளைகளை உருவாக்கும் அடிப்படையான  அடர் கருப்பு பொருள்களின் (dark matter)   இயல்புகளையும், கருந்துளைகள் உருவாகி வளர்வது குறித்தும் ஆராய்ந்து அறிக்கைகள் கட்டுரைகள் தந்திருக்கிறார். பலகாலமாக நம்பப் பட்டுவந்ததுபோல இந்த கருங்குழிகள் இறந்த நட்சத்திரங்களின் தொகுப்பு இல்லை. அவைகள்  ஒரு வாயுவாக தானாகவேஉருவாகி மிக வேகமாக வளர்ந்து ஒரு கட்டத்தில் தன் வளர்ச்சியைத் தானே நிறுத்திக் கொண்டுவிடுகிறது. கருந்துளைகளுக்கும் வரம்பு,விளிம்பு உண்டு என்பது தான் இவர் கண்டுபிடித்து அறிவித்திருக்கும் விஷயம்.  இந்த முடிவு இப்போது விண்ணியல் விஞ்ஞானிகளுக்கு பல கேள்விகளை எழுப்பியிருக்கிறதுஇது கரும் துளைகளை பற்றிய ஆராய்ச்சிகளை வேறு கோணத்திற்கு இட்டுச் செல்லப்போகிறது.
அவர் முதன்முதலாக கண்டுபிடித்து விஞ்ஞானிகளுக்கு அறிவித்திருக்கும் இந்த ஆராய்ச்சி முடிவு  உலக அரங்கில் பிரமிப்பை உண்டாக்கி உள்ளது ! “ராமன் விளைவு” “சந்திரசேகர் வரையறைஎன்பதைப் போல பிரியா வரம்பு என்பதும் பேசப்பட்டு வருகிறது.
பிரியம்வதாவின் இந்த அரிய ஆராய்ச்சிக்காக அவருக்கு  பல நாடுகளின்  நிறுவனங்களின் விருதுகளும் ஃபெலோஷிப்புகளும்  வழங்கப்பட்டிருக்கிறது  ஸ்வீடன் நாட்டில் வழங்கப்படும் உலகின் மிக உயர்ந்த விருதை மிகவிரைவில் இவர் பெறுவார்  என விஞ்ஞான உலகம் கணித்திருக்கிறது.
ஆண்டு தோறும் தவறாமல்  பாரதிக்கு விழா எடுத்து அதில் அரிய சாதனைகள் செய்தவரைத் தேர்ந்தெடுத்து  ”பாரதி விருது” வழங்கும் வானவில் பண்பாட்டு கழகம் இந்த ஆண்டின் பாரதி விருதுக்குப் பெருமைக்குரிய இந்த தமிழ்ப்பெண்மணியைதேர்ந்தெடுத்திருக்கிறது.

வானை, கடல்மீன்களை அளப்போதோடு நின்றுவிடாமல் விண்ணியல் சாத்திரத்தில் தமிழ் மக்கள் தேர்ச்சி பெற்று அவர்கள் புகழ் உலகெங்கும் பரவ வேண்டும்என கனவுகண்டவன் பாரதி. அந்தக் கனவை மெய்ப்பித்திருக்கும் இந்தப் பெண்ணை அந்த விருதுக்குத் தேர்வு செய்திருப்பது, மிகப்பொருத்தமானது.
விண்ணியல் விஞ்ஞானி பிரியம்வதா நடராஜன் அவரது சாதனைக்காகவும்இந்திய ஊடகங்களின் வெளிச்சம் இன்னும் விழாத இந்தப் பெருமைக்குரிய தமிழரைத் தேடிக்கண்டுபித்தற்காக வானவில் பண்பாட்டு கழக  நிறுவனர் ரவி அவர்களும் பாராட்டப்படவேண்டியவர்கள்