27/1/15

திட்ட குழுவின் புதிய அவதாரம்.- அவசியமா? அரசியலா?



பிரதமர் மோடியின் 2014 ஆம் ஆண்டின்   உணர்ச்சி மயமான சுதந்திர தின உரையில் அதிரடியாக அறிவிக்க பட்ட ஒரு விஷயம் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வரும்  நாட்டின் திட்ட குழு  நீக்கபடும்.  அதற்கு பதிலாக ஒரு புதிய அமைப்பு நிறுவப்படும். என்பது. அறிவிக்கபட்ட படி மறுநாளே திட்டகுழு ஒழிக்கபட்டுவிட்டதின் அடையாளாமாக அதன் இணைய தளம் மூடப்பட்டு ஆவணகாப்பகமாக்கப்பட்டது.  ஆனால் திட்ட குழுவிற்கு மாற்றாக உருவாக்கபட்டிருக்கும் புதிய நிருவனத்தினைப் பற்றி அறிய நாடு ஆறு மாதம் காத்திருக்க வேண்டியிருந்தது. 
மோடி அரசின் புத்தாண்டு பரிசாக “நீதி ஆயோக்” என்ற அமைப்பு திட்ட குழுவிற்கு மாற்றாக அறிவிக்க பட்டது. இந்தியாவை மாற்றியமைக்கும் தேசிய அமைப்பு (என்.ஐ.டி.ஐ) என்கிற "நீதி ஆயோக்' இனிமேல் திட்டக் குழுவின் பணிகளை ஏற்று நடத்தும். திட்டக் குழு, "நீதி ஆயோக்' அல்லது மத்திய கொள்கைக் குழு என்று பெயரில் அழைக்கபடும் என தெரிவித்த அறிவிப்பில் மற்ற விபரங்கள் உடனேயே வெளியிடவில்லை.. தொடர்ந்து வெளியாகியிருக்கின்ற விபரங்கள் பல கேள்விகளை எழுப்புகின்றன.  
திட்ட கமிஷனின் வரலாறு.
திட்டமிடல் "Planing" என்பது ஒரு விசாலமான பார்வை. நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு போகும் பல அம்சங்களில் ஒரு பகுதி. அறிவையும் - ஆற்றலையும் இணைத்து மக்களுக்கு சேவை செய்வதற்காக பட்டை தீட்டப்பட்ட கனவு.
இந்தியாவில் திட்டமிடல் என்ற கொள்கையை உருவாக்கியவர்களில் மூன்று பேர் முக்கியமானவர்கள். முதலாவது, விஞ்ஞானி மெக்னாட் சாகா இரண்டாவது, பொறியாளர் எம்.விஸ்வேஷ்வரய்யா. மூன்றாவது ஸ்காட்லாந்து நாட்டவரான பல்துறை வல்லுனர் பேட்ரிக் கெட்டெஸ் (Patrick Geddes). இவர்கள் இந்திய விடுதலைக்கு பல காலம் முன்னரே பிறக்கப்போகும் புதிய தேசத்தின் வளர்ச்சிக்காக 1938லேயே  தொலை நோக்குடன் திட்டமிட துவங்கியவர்கள்
விஞ்ஞானியான சாகா காந்திய பொருளாதாரகொள்கைகளில் நம்பிக்கை இல்லாதவர். அறிவியல் அடிப்படையலான ஒரு சமூகம் பற்றிய கனவுகள் அவரிடம் நிறைய இருந்தது. 
போல்ஸ்விக் புரட்சிக்கு பின்னர் ரஷ்யாவின் லெனினின் திட்டமிட்ட வளர்ச்சி பாதையையே நாமும் முன்மாதிரியாக கொள்ள வேண்டும் என்ற கருத்தைக்கொண்டிருந்தார். .கனியூச சித்தாந்த்த்தில் நம்பிக்கை இல்லாத  பொறியிலாளாரான விஸ்வேஸ்வரய்யா தேசம் முழுவதுற்குமான பிரமாண்ட கட்டுமானங்கள் அணைகள் போன்ற திட்டங்களை தயாரித்துகொண்டிருந்தார். அன்றைய காங்கிரஸ் கட்சியின்  மாநாட்டில் திட்டமிடல் பற்றிய இந்த மாறுபட்ட கருத்துக்கள் விவாதிக்க பட்டிருக்கின்றன.   சீனாவின் ஐந்தாண்டு திட்டங்களை சென்று பார்த்தவந்திருந்த நேருவின் திட்டங்கள் பற்றிய பார்வை மக்கள் சார்ந்ததாக இருந்தது.  இறுதியில்  அரசியலையும், அறிவியலையும் உள்ளடக்கிய திட்டங்களை வடிவமைபதற்கு கட்சியில் தேசிய திட்டகுழு ஒன்று அமைக்கபட்டு அதன் தலைவராக ஜவஹர்லால் தேர்ந்தெடுக்கபட்டார்.

நாட்டின் விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு, 1950-ஆம் ஆண்டு, சக அமைச்சர்களை, மூத்த அதிகாரிகளை, சில பொருளாதார நிபுணர்களை அழைத்துப் பேசினார். அந்த கூட்டத்தில் தேசத்தில் வளர்ச்சியும் முன்னேற்றமும் விரைவாக நடைபெற வேண்டும். அதற்கு சோவியத் ரஷியாவின் பாணியில்  திட்டக் குழுவை ஏற்படுத்துவது பற்றி விவாதிக்க பட்டது நமக்கும் ரஷியாவுக்கும் ஆட்சி அமைப்பு முறை வித்தியாசமானது. அவர்களது சேமிப்பு 30 சதவீதம், நமது சேமிப்பு 5 சதவீதத்திற்கும் குறைவானது. அவர்களால் அதிக முதலீட்டைத் திரட்ட முடியும், நம் நாட்டில்பெரிய திட்டங்களுக்கு முதலீடுகளை அதிகம் திரட்டுவது கடினம் என்பது ஆதிகாரிகளின் வாதமாக இருந்தது..
இருப்பினும் நாட்டில் சீரான, முறையான வளர்ச்சிக்கு திட்டமிடுதல் அவசியம். திட்டக் குழுவும் அவசியம் என்று முடிவு எடுக்கப்பட்டது. 1950 மார்ச் 15-ஆம் நாளன்று திட்டக் குழு அமைக்கப்பட்டதாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
தீட்டிய திட்டங்களை செயல்படுத்துவதில் பிரதமர் நேரு மிகுந்த  ஆர்வத்தையும், அர்ப்பணிப்பையும்.காட்டினார். அமைச்சரவை கூட்டங்களில் திட்டங்களின் முக்கியப் பகுதிகளை எடுத்து விளக்குவார்.திட்டங்கள் செயல்படும் விதத்தையும், வேகத்தையும் அடிக்கடி தானே ஆய்வு செய்வார். அரசு இயந்திரத்தை முடுக்கிவிட்ட தோடு, வல்லுனர்களின் ஆலோசனைகளும், ஒத்துழைப்பும் திட்டக் குழுவுக்குக் கிடைப்பதை உறுதி செய்தார்அப்படி உதவிய மேதைகளின் பட்டியலில்,  பெரிது. புள்ளியியல் நிபுணர் மகனலோபிஸ், பொருளாதார மேதை பி.எஸ்.லோகநாதன், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன், மேதை பிதாம்பர் பட் ஆகியோர் முக்கியமானவர்கள்.. .
அதேபோல், மேல் நாட்டு அறிஞர்கள் சுமார் 15 பேர் இந்தியாவுக்கு வந்து, தங்கி திட்டக் குழுவுக்கு வழிகாட்டியிருக்கிறார்கள்.. நமது நாட்டுக்கு திட்டமிட வெளிநாட்டு நிபுணர்கள் அவசியமா? என  விமர்சிக்கப்பட்டதற்கு நேரு சொன்ன பதில்  "நான் வெளிநாட்டுப் பொருள்களை இறக்குமதி செய்ய விரும்பவில்லை. மாறாக, வெளிநாட்டிலிருந்து சிறந்த நவீன சிந்தனைகளை இறக்குமதி செய்ய விரும்புகிறேன்' 
இத்தகைய பின்புலத்தில் பிறந்த,, தொடர்ந்து 60 ஆண்டுகள் இயங்கி வந்த, பல முறை விமர்சிக்கபட்ட திட்டகமிஷன்  அமைப்பு தான் இப்போது  தேவை இல்லை என ஒழிக்க பட்டிருக்கிறது. 
இந்த திட்ட குழு வே தேவையில்லை என குரல் எழுந்திருப்பது இது முதல் முறையில்லை. திட்டக் குழு பிறக்கும் போதே, . "நிதி திரட்டுவதையும், ஒதுக்குவதையும் நிதி அமைச்சகமும், பிற அமைச்சகங்களும் பார்த்துக் கொள்ள முடியும். திட்டக் குழு தேவை இல்லை. அது நிதி அமைச்சகத்தின் முக்கியத்துவத்தைக் குறைத்து விடும்' என்று எதிர்ப்புத் தெரிவித்து, தன் பதவியையே ராஜிநாமா செய்திருக்கிறார் அன்றைய நிதி அமைச்சர் ஜான் மத்தாய்.
திட்ட இலக்குகள், அதில் முன்னுரிமை போன்றவைகளை இந்த திட்டகுழுவே முடிவு செய்தது. முதல் திட்டத்தில் விடுபட்டு இறுதியில் அசோக் மேத்தா சுட்டிகாட்டிய பின்னர் சேர்க்க்க பட்ட விஷயம் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல். அறிவியல் ரீதியாக திட்டங்கள் வகுப்படவேண்டும் என்பதை நேரு விரும்பினாலும், உடன் இருந்தவர்கள் பலவித நம்பிக்கைகளூம் எண்ணங்களும் கொண்டவர்களாக இருந்தனர். நாட்டின் முதல் ஐந்தாண்டு திட்ட அறிக்கை திட்டகுழுவின் ஒப்புதலுக்கான கூட்டத்திற்கு  குறிக்க பட்ட நாள் 07/07/1951.மாலை 7 மணி. எல்லாவகையான சோதிடத்திலும் நம்பிக்கை கொண்டிருந்த  அமைச்சர் நந்தா தேர்ந்தெடுத்தது இது. எல்லாவற்றிலும் 7 என்ற எண் வருகிற்து என்பது காரணம்.  இதில் எல்லாம் நமபிக்கை இல்லாத நேரு  மாலையில் வேறு நிகழ்ச்சி இருப்பதால் நேரத்தை மாற்றச் சொன்னார்.  மாற்றிய நேரம் 3.30.மணி 7ல் பாதி  வருவதால் பாதகமில்லை என அமைச்சர் நந்தா ஏற்றார்.  இப்படி அறிஞர்களின் கருத்துகளுக்கும் தனிநபர்களின் நம்பிக்கைகளுக்கும் மதிப்பு கொடுக்கபட்டு    உருவாகி, அறிஞர்களின் வழி காட்டுதலில் இயங்கி வந்த திட்டக் குழுதான் இப்போது கலைக்க பட்டிருக்கிறது.
ஏன் மோடி அரசு இந்த குழுவை கலைத்தது? 
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம், முதல் 5 ஆண்டுத் திட்ட காலத்தில் (1951-1956) 3.5 சதவீதம் மட்டுமே. அது 6-ஆவது திட்ட காலத்தில் 5.5 ஆகக் கூடியது. 10-ஆவது திட்ட காலத்தில் 7.6 சதவீதமாகவும், 11-ஆவது திட்ட காலத்தில் 7.9 சதவீதமாகவும் (2007-2012) உயர்ந்துள்ளது. 12-ஆவது திட்ட காலத்தில் (2012-2017) இந்த வளர்ச்சி விகிதத்தை 8 சதவீதமாக ஆக்க வேண்டும் என்பதே திட்டக் குழுவின் இலக்காகும்.
உலகமே பொருளாதார மந்தத்தில் சிக்கியிருக்கும் இன்றைய சூழலில், இத்தகைய பொருளாதார வளர்ச்சி திருப்திகரமானது மட்டுமல்ல, பாராட்டத் தக்கதும் கூட என்பது உலகலவிளவில் பல பொருளாதார நிபுணர்கள் ஏற்று கொண்ட கருத்து.
.ஆனால் இன்று ஆளும் கட்சியாக பொறுப்பு ஏற்றிருக்கும் பிஜெபியின் பார்வை வேறாக இருக்கிறது. 
இந்தியா சுதந்திரம் அடைந்திருந்த நிலையில் திட்டக் குழுவுக்கான அவசியம் இருந்தது. அதுவரை தனித்தனியாக இயங்கி வந்த பல சமஸ்தானங்களையும், பிரிட்டிஷ் ஆளுநர்களால் நிர்வகிக்கப்பட்ட பகுதிகளையும் ஒருங்கிணைத்து இந்தியா என்கிற நாடு உருவாகி இருந்த காலகட்டம் அது. இந்தச் சூழலில் சமச்சீரான வளர்ச்சியை உறுதி செய்தால் மட்டுமே, ஒருங்கிணைந்த இந்தியாவை ஒற்றுமை குலையாமல் காப்பாற்ற முடியும் என்கிற நிலைமை.
விவசாயம் சார்ந்த தேசமான இந்தியாவில் நீர்ப்பாசன வசதிகளோ, நீர்ப்பாசனத்தை உறுதி செய்யும் நீர்ப்பாசனத் திட்டங்களோ அப்போது கிடையாது. அதேபோல, தொழிற்சாலைகள் என்று எடுத்துக் கொண்டால் நூற்பாலைகள் மட்டும்தான். அதுவும் இந்தியாவின் ஒரு சில நகரங்களில் மட்டுமே காணப்பட்டன. கனரக தொழிற்சாலைகளை நிறுவுவதற்கான முதலீடு தனியார் துறையிடம் இல்லாமல் இருந்த நிலைமை.
அப்படிப்பட்ட சூழலில், இந்தியாவின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்து கொள்ளவும், சமச்சீரான வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கவும், நீர்ப்பாசன, நீர்மின் நிலையத் திட்டங்களை நிறுவுவதற்கும் அரசால் மட்டுமே முதலீட்டைக் கொணர முடியும் என்கிற சூழலில் திட்டக் குழுவுக்கு முக்கியப் பங்கு இருந்தது. வெளிநாடுகளிலிருந்து அரசு கடனுதவி பெற்று, கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கவும், கனரகத் தொழிற்சாலைகளை சமச்சீராக பல்வேறு மாநிலங்களில் நிறுவவும் திட்டமிடல் தேவைப்பட்டது.
1991-இல் பொருளாதார சீர்திருத்தமும், தனியார்மயமும் வந்தபோது, திட்டக் குழுவின் அவசியம் குறைந்துவிட்டது. காலப்போக்கில் திட்டக் குழு என்பது தேசத்தின் நிதி வருவாயை, மாநிலங்களுக்குப் பிரித்துக் கொடுக்கும் அமைப்பாகவும், மாநிலங்கள் அந்த நிதி ஒதுக்கீட்டை எப்படி செலவு செய்கின்றன என்பதைக் கண்காணிக்கும் அமைப்பாகவும் மாறிவிட்டது.
இந்த நிலையினால் இன்று இப்படி ஒரு திட்ட குழு அவசியமில்லை. மாறாக இன்றை சூழலுக்கு ஏற்ப இந்தியாவை மாற்றியமைக்கும் தேசிய  என்ற அமைப்பு (என்.ஐ.டி.ஐ) தேவை அது இந்த திட்டமிடலை செய்யும் என மோடியின் அரசு அறிவித்திருக்கிறது. 
 உலகமயமாதல் அடிப்படையில் கார்ப்பரேட்டுகள் வளரவும்,  மெல்ல பொதுத்துறை தனியார் வசமாவதுமாக எழுந்திருக்கும் இன்றைய சூழலில் திட்டக்குழுவே தேவை இல்லை என்பது பிஜபியின் வாதம்.  நியாயமாகப் பார்த்தால் கி.பி. 2000-த்திலேயே திட்டக்குழு கலைக்கப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில், தனியார்மயமாதல் மற்றும் கார்ப்பரேட்டுகள் வளர்ச்சி தேவை என்ற சூழ்நிலை வந்துவிட்ட பின் திட்டக் குழுவுக்கு வேலை இல்லையே! கடந்த 15 ஆண்டுகளாக ஓய்வுபெற்ற நிதித் துறைச் செயலாளர்களுக்ம், வேறு துறை நிபுணர்களும் பழைய செல்வாக்குடனும், அதிகார மிடுக்குடனும் வலம்வரக்கூடிய ஒரு புகலிடமாக மாறிவிட்டது.
இப்போது  தொழிற்துறையில் அரசின் முலதனம் குறைந்துவிட்டது. தனியார் மூதலீடுகள் உயர்ந்து கொண்டிருக்கின்றன அதனால் இந்த திட்ட கமிஷன் அவசியமில்லை என்ற காரணத்தை தாண்டி வேறு சில அரசியல் காரணங்களும் இருக்கின்றன.
மத்திய அரசின் ஆட்சியில் இருக்கும் கட்சியின் கைப்பாவையாக கடந்த 20 ஆண்டுகளாகத் திட்டக் குழு செயல்பட்டு வந்தது. தங்களுக்குச் சாதகமாக உள்ள மாநில அரசுகளுக்கு அதிக ஒதுக்கீடும், எதிர்க்கட்சி ஆட்சியில் இருக்கும் மாநிலங்களுக்கு பாரபட்சமான ஒதுக்கீடும் திட்டக் குழுவால் செய்யப்படுவதாக தொடர்ந்து சில மாநில அரசுகள் குரல் எழுப்பி கொண்டிருந்தது.. திட்டகுழு புள்ளிவிபரங்களுடன் மறுத்தாலும், மாநில முதலமைச்சர்கள் குரல் எழுப்பி கொண்டிருந்தனர். அப்படி குரல் எழுப்பியவர்களில் அன்று மாநில முதல்வராக இருந்த மோடியும் ஒருவர். 
 ஒவ்வொரு ஆண்டும் மாநில முதலமைச்சர்கள் கூட்டத்தை திட்டக் குழு நடத்துவதுண்டு.  ஆனால் இது ஒரு அரசின் சடங்காகிவிட்டது.  கடந்த ஆட்சி காலத்தில் அப்படி ஒரு முறை அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக முதல்வர் ஜெயலலிதா, கூட்ட முடிவில் பேட்டி அளித்தபோது, "தில்லிக்கு வந்து திட்டக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு நான் பேசிய பிறகு, அலுவாலியா "உங்கள் திட்டச் செலவுக்கான நிதி ஆதாரத்தை நீங்களே தேடிக் கொள்ள வேண்டியதுதான் என்று கூறுகிறார். இந்தப் பதிலைக் கேட்க எனக்கு ஒரு தில்லிப் பயணம் தேவைதானா?' என்றார். தமிழ்நாடு மட்டுமல்ல, ஐக்கிய முற்போக்கு கூட்டணி இல்லாத இதர மாநில முதலமைச்சர்கள் எல்லோருக்கும் அதே பதில்தான். மோடி முதலமைச்சராயிருந்த காலகட்டத்தில் திட்டக் குழுவுடன் பலமுறை மோதல்கள் நிகழ்ந்ததுண்டு. ஆகவே, திட்டக்குழுவுக்கு மோடி முடிவு கட்டுவார் என்பது எதிர்பார்த்ததுதான்.
திட்ட குழு என்ற அமைப்பு அரசியலமைப்புச் சட்ட அதிகார எல்லைகளுக்கு உட்பட்டதில்லை. சுயாட்சி கொண்ட அமைப்பு. அதனால் ஒரு அறிவிப்பின் மூலம் அதை மோடியால் கலைக்க முடிந்துவிட்டது.

புதிய அமைப்பு- அரசியல் வாதிகளின் பார்வை 
எதிர்பார்த்த படி இந்த புதிய திட்டமிடும்  அமைப்புக்கு  எல்லா அரசியல் கட்சிகளிடையேயும்  வரவேற்பு இல்லை  தமிழகத்தில் மத்திய அரசின் அறிவிப்புகளையும், திட்டங்களையும் ஆழந்து ஆராயும் பாமா கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இதை வரவேற்கவில்லை. அவர் “

” சீர்திருத்தம் என்ற பெயரில் செய்யப்படும் இந்த தொலைநோக்கற்ற மாற்றத்தால் ஏற்படும் நன்மைகளை விட பாதிப்புகள் தான் அதிகமாக இருக்கும். தொடக்கத்தில் திட்டக் குழு அதன் பணியை சிறப்பாகவே செய்து வந்தது. அதன்பின் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், மத்திய திட்டக் குழுவை சீரமைக்க வேண்டிய  தேவை ஏற்பட்டிருப்பது என்னவோ உண்மை தான். ஆனால்,  திட்டக் குழுவையே அடியோடு கலைத்துவிட்டு புதிய அமைப்பை ஏற்படுத்துவது தேவையில்லாதது.
இதுவரை நடைமுறையில் இருந்த மத்திய திட்டக் குழு வளர்ச்சிக்கு வழி வகுத்தது ஒருபுறமிருக்க, மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் சமநிலையை பராமரிக்கும் ஒழுங்குமுறை அமைப்பாக செயல்பட்டது. ஆனால், புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள நிதி ஆயோக், வளர்ச்சி மற்றும் கொள்கை தொடர்பான விஷயங்களில் மத்திய அரசுக்கு ஆலோசனை கூறும் அமைப்பாக திகழுமே தவிர முடிவெடுக்கும் அதிகாரம் கொண்டதாக இருக்கும் என்று தோன்றவில்லை.
 தனியார் துறையினர் அல்லது பெரு நிறுவனங்களின் வளர்ச்சி தான் இந்தியாவின் வளர்ச்சி என்று கருதும் மெத்தப்படித்த வல்லுனர்கள் நிதி ஆயோக்கில் இடம் பெறும் பட்சத்தில், அவர்களின் நோக்கம் என்னவாக இருக்கும் என்பதை சொல்லித் தெரியவில்லை. மேலும் இத்தகைய வல்லுனர்கள் பொதுவாக மானியங்களுக்கு எதிரானவர்களாக இருப்பர் என்பதால், கல்வி, சுகாதாரம், விவசாயம் போன்ற ஆக்கபூர்வமான பயன்பாட்டுக்கான மானியங்களையும் குறைக்கும்படி நிதி ஆயோக் நெருக்கடி எழும். அதற்கு அரசு பணிந்தால் அனைவருக்கும் பயனளிக்கும் வளர்ச்சியை ஏற்படுத்த முடியாது.
மத்திய திட்டக்குழு இருந்தவரை அதன் ஒப்புதல் பெறாமல் மத்திய அரசு திட்டங்கள் எதையும் செயல்படுத்த முடியாது. அதுமட்டுமின்றி, மாநில அரசுகளுக்கான திட்ட ஒதுக்கீட்டை திட்டக்குழு தான் தீர்மானிக்கும். இதில் பாகுபாடு காட்டப்படாமல் இருப்பதற்காக நிலையான விதிகள் வகுக்கப் பட்டிருந்தன. ஆனால், புதிய அமைப்புக்கு அத்தகைய அதிகாரங்கள் எதுவும் இல்லை. எனவே, மாநில அரசுகளுக்கு நிதி ஒதுக்குவதாக இருந்தாலும், மத்திய அரசின் திட்டங்களுக்கு அனுமதி அளிப்பதாக இருந்தாலும் பிரதமரின் முடிவு தான் இறுதியாக இருக்கும். அத்தகைய சூழலில் பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களுக்கு அதிக நிதியும், மற்ற மாநிலங்களுக்கு குறைவான நிதியும் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது. இதற்கெல்லாம் மேலாக எல்லா அதிகாரங்களும் பிரதமரிடம் குவிக்கப்பட்டால், அது நன்மைக்கு வழி வகுக்காது; மாறாக, நாட்டில் சர்வாதிகாரம் பெருகுவதற்குத் தான் வழி வகுக்கும்.
மத்திய, மாநில அரசுகளுக்கிடையிலான உறவுகளை பாதிக்கும் இந்நடவடிக்கை மிகவும் ஆபத்தானது ஆகும்.
எனவே, மத்திய திட்டக்குழுவுக்கு மாற்றாக புதிய அமைப்பை உருவாக்கும் அறிவிப்பை இரத்து செய்ய வேண்டும். ஏற்கனவே செயல்பட்டு வந்த திட்டக்குழுவை சீரமைத்து செயல்படுத்த வேண்டும்.” என  அறிக்கை வெளியிட்டிருக்கிறார். 
நாடளுமன்றத்தில் எந்த விவாதமும் இல்லாமல் ஒர் பொது கருத்தை உருவாக்கமல் இப்படி அதிரடியாக செய்வது அதிகாரங்களை தங்கள் வசப்படுத்திகொள்வது ஜனநாயகமில்லை என இடது சாரிகட்சிகளும் அறிவித்திருக்கின்றன.
புதிய அமைப்பு
இந்த புதிய அமைப்பிற்கு NATIONAL INSTITUON OF TRANSFORMING INDIA (NITI) என்று பெயரிடப்பட்டிருக்கிறது இதன் சுருக்கமாக  NITI (நீதி)  என அழைக்கபடும்.இதன் தலைவர் பிரதமர். துணைத்தலைவரும் ஒரு தலைமைச் செயல் அதிகாரியும் முழுநேர பணியாளாராக இருப்பார்கள். பல்கலைகழகங்களிலிருந்து இரண்டு பகுதி நேர உறுப்பினர்கள் மற்றும் நான்கு மத்திய அமைச்சர்களும் குழுவிலிருப்பார்கள். எல்லா மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேச துணை ஆளுனர்கள் கொண்ட  நிர்வாக குழுவும் இயங்கும். இதைத்தவிர அண்டை மாநிலங்களுடன் இணைந்த வட்டார கவுன்சில்கள் அமைக்க படும். தேசிய வளர்ச்சி திட்டங்களுக்கான முன்னுரிமைகளும், துறைகளும், அதற்கான  வழிமுறைகளையும் மாநில அரசுகளின் பங்கேற்புடன் உருவாக்கப்பட வேண்டும் என்பது இதன் முக்கிய குறிக்கோளாக அறிவிக்கபட்டிருக்கிறது. இதை அறிவிக்கும் போது பிரதமர் co-opertive fedralisim  ”மாநிலங்களின் கூட்டுறவு” என்ற வாசகத்தைப் பயன்படுத்தியிருக்கிறார். 
இந்த அமைப்பின் முக்கிய நோக்கம், சோஷலிச பார்வை கொண்ட திட்டகமிஷனின் பணிகளை இன்றைய  சுழலுக்கு ஏற்ப மாற்றியமைப்பது, இதில் பேசப்படும் இரண்டு முக்கியமான விஷயங்கள் 
1)திட்டங்களில் “மேலிருந்து கீழ்” என்ற  முறையை மாற்றி திட்டங்கள் கிழீருந்து அதாவது . திட்டங்கள் மேலே வகுக்கப்பட்டு கீழே திணிக்கப்படுகிறது. மாறாக, கீழே இருந்து திட்டங்கள் உருவாகி மேலே செல்ல வேண்டும் என்பதாகும்.
2) மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டப்படுகிறது 
இந்த புதிய அமைப்பின் திட்டங்களையும், இருக்கும் திட்டகுழு செயல்பாடுகளையும் ஒப்பீடும் முன்  இப்போதிருக்கும் திட்ட குழு இயங்கும் முறைகளை பார்ப்போம்.
தற்போது  நடைமுறையில், ஒவ்வொரு துறையிலும் (விவசாயம், கல்வி, மருத்துவம்) உள்ள மாவட்ட அளவிலான நிர்வாகிகள் களத் தேவைகளை அறிந்து, கலந்து பேசி, திட்டங்களை தனது துறையின் மாநிலத் தலைவருக்கு அனுப்புகிறார்கள்.
அவைகளை ஆய்வுக்குப்பின், துறைத் தலைவர்கள் மாநிலத் திட்டக் குழுவுக்கு அனுப்புகிறார்கள். அது, முதல் அமைச்சர் தலைமையிலான நிரந்தர நிதிக் குழுவினால் விவாதிக்க பட்டு  முழுவடிவம் பெறுகிறது. அதன்பின் மத்திய திட்டக் குழுவிற்கு அனுப்பப்பட்டு விவாதத்திற்குப் பின்பு ஒப்புதல் தரப்படுகிறது. இது தான் உண்மையில் கீழிருந்து மேல் திட்டம். இதில் என்ன மாற்றம் வரப்போகிறது என்பதை பொறுத்துதிருந்துதான் பார்க்க வேண்டும்
அடுத்தது நிதி ஒதுக்கீடு.  இந்த ஒதுக்கீடு சில அடிப்படை விதிகளின்படி விகிதசார முறைப்படி ஒதுக்கபடுகிறது.இந்தியா போன்ற ஒரு பரந்த தேசத்தில் எல்லா மாநிலங்களின் வ்ருவாயும், செலவினங்களும் ஒரே மாதிரி இருக்க முடியாது. தேசிய வளர்ச்சி என்ற கண்னோட்டத்தில் இந்த விகிதாசாரங்கள் வல்லுனர்களார் விவாதிக்கபட்டு தீர்மானிக்கபட்ட ஒரு விஷயம். இது அவ்வப்போது மாறுதலுக்கும் உள்ளாகிறது. மாநில தேவைகள் எல்லாவற்றையும் எல்லா சமயங்களிலும்  பூர்த்தி செய்ய இயலாது. அதிலும் மாநில கட்சிகளின் அரசியல் அறிவிப்புகளினால் ஏற்படும் அதிக சுமைகள் மறுக்கபடும்போது “பாரபட்சம் காட்டப்படுவதாக” குற்ற சாட்டுகள் எழுவது தவிர்க்க முடியாத ஓன்று.
நிதிNITI அமைப்பும்- திட்டகமிஷன்- ஒரு ஒப்பீடு

செயல்பாடுகள்          திட்ட கமிஷன்                               நிதி(NITI) அமைப்பு     

முழு நேர உறுப்பினர்கள்
ஒழிக்கபடும்முன்  இறுதியாக இருந்தவர்கள் 
8 பேர்
திட்ட கமிஷனை விட குறைவானது(எண்ணிக்கை அறிவிக்கபடவில்லை)
மாநிலங்களின் பங்களிப்பு
தேசிய வளர்ச்சி குழு கூடங்களில் திட்ட விவாதங்களில் மட்டுமே மாநிலங்கள்பங்கேற்கின்றன.
மாநிலங்களின் அதிக அளவு பங்கேற்புஎதிர்பார்க்கபடுகிறது
உறுப்பினர்/
செயலர்
செயலர்கள் அரசின் வழக்கமான முறையில் நியமிக்கப்படுவார்கள்
இவர் தலைமை செயல் அதிகாரி என அழைக்கப்படுவார்
பகுதி நேர உறுப்பினர்கள்
பகுதி நேர உறுப்பினர்கள் கிடையாது
தேவைக்கேற்ப பகுதிநேர உறுப்பினர்கள் நியமிக்க படுவார்கள்
நிதி ஆதாரம்
மாநிலங்களுக்கும் மத்திய அமைச்சரகங்களுக்கும்  நிதி வழங்கும் அதிகாரம் பெற்றது
இது ஒரு ஆலோசனை வழங்கும் அமைப்பு. நிதிவழங்கும் அதிகாரம் இல்லை
            



இந்த ஒப்பிட்டை சற்று உற்று நோக்கினால் தெரியம் ஒரு விஷயம். திட்ட கமிஷனுக்கு இருந்த மிக முக்கியமான  நிதி வழங்கும் அதிகாரம்பறிக்க பட்டுவிட்டது. அது நிதிஅமைச்சகத்துக்கு மாற்றபட்டுவிட்டது. அதாவது அமைச்சரவை தீர்மானிக்க கூடிய ஒரு விஷயமாகிவிட்டது. இந்த அமைப்பு ஒரு ஆலோசனை வழங்கும் அமைப்பாக சுருக்க பட்டுவிட்டது. இதன் மூலம் மத்திய அரசில் ஆட்சியில் இருக்கும் கட்சி தங்கள் கட்சி சார்பில்லாத  அரசுகள் இருக்கும் மாநில அரசுகளை கட்டுபடுத்த முடியும். இப்போது சொல்லப்படும்  நிதி பங்கிட்டில் பாரபட்ச குற்ற சாட்டுக்கள் பெரிய அளவில் தொடர வாய்ப்புகள் அதிகம்.
இதைப்புரிந்து கொள்ள திட்டங்களுக்கான  நதி ஒதுக்கீடுகளயும்  தெரிந்துகொள்ள வேண்டும். 
திட்டங்களுக்கான,  நிதி ஒதுக்கீடுகளை மூன்று வகையாக அரசின் நிலயான நிதிக்குழு பிரித்துள்ளது. 
அவைகள்1 திட்டம் சார்ந்த செலவுகள் (P​aSc), 2மத்திய அரசு பரிந்துரைத்த திட்டங்கள் (C​aSSc)​:​​ 3திட்டம் சாரா செலவுகள் - N​P​aSc:​​
(1) திட்டம் சார்ந்த செலவுகள் (P​aSc)​:​​ இவை தான் மத்திய திட்டக் குழுவால் ஒப்புதல் பெறப்படுபவை. இதற்குரிய செலவை மத்திய, மாநில அரசுகள் ஒரு விகிதாசாரத்தில் பகிர்ந்து கொள்கின்றன.
(2) மத்திய அரசு பரிந்துரைத்த திட்டங்கள் (C​aSSc)​:​​ இத்திட்டங்களின் செலவை, மத்திய, மாநில, நகராட்சி, ஊராட்சிகள் ஒரு குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டும். அதில் மத்திய அரசின் பங்களிப்பு அதிகம் இருக்கும்.
(3) திட்டம் சாரா செலவுகள் - N​P​aSc:​​ இவை மாநில அரசின் திட்டங்கள். இவற்றிற்கான செலவை, மாநில அரசே தன் வரி வருவாய் மூலம் ஏற்க வேண்டும்.
இந்த முறையில் எந்த மாற்றங்களும் அறிவிக்க படவில்லை என்பதால். முதல் இரண்டு வகை திட்டங்களுக்கும் மாநிலங்களுக்கு அளிக்க பட வேண்டிய நிதியை மத்திய அரசு தீர்மானிக்கப் போகிறது.   முந்தை திட்ட கமிஷனிலும்  மத்திய அரசுக்கு அதிகாரங்கள் இருந்தபோதிலும், திட்ட குழு ஒரு ஆலோசனை குழுவாக இல்லாமல் அதிகாரங்களுடன் இருந்த்தால் அதை ஏற்க வேண்டிய ஒரு சூழல் இருந்தது. இப்போது அது இல்லை.
கீர்த்தி பரேக் முன்னாள் திட்ட கமிஷன் உறுப்பினர். அரசுக்கு ஆலோசகராக இருந்தவர். இந்த புதிய  அமைப்பை பற்றி அவர் CNBCக்கு அளித்த பேட்டியில் “ இந்த புதிய அமைப்பில் எந்த மாற்றத்தையும் நான் புரிந்து கொள்ளவில்லை. திட்ட கமிஷன் தேசிய வளர்ச்சிக்குழுவிடம் தன் அறிக்கைகளை கொடுத்த்து. இப்போது நிர்வாக குழுவிடன் தரப்போகிறது. இந்த நிர்வாக் குழுவில் இருக்க போகிறவர்கள் தேசிய வளர்ச்சி குழுவில் இருந்த  மாநில முதலமைச்சர்கள் தானே? மாநிலங்களிலிருந்து திட்டம் என்பது நல்லது தான். ஆனால் ஒதுக்க பட்ட நிதி ஆதாரத்துக்குள் இயலாத திட்டங்களை கொண்டுவந்தால் எப்படி சமாளிக்க முடியம். ?  அண்டை மாநிலங்களுக்கிடையேயான வட்டாரகுழுக்கள் இப்போதும்  சில மாநிலங்களுக்கிடையே இருக்கிறது. இது புதிது என சொல்வதிற்கில்லை”. என சொல்லியிருக்கிறார்.
மாநிலங்களுக்கான  நிதி ஒதுக்கிடு அதிகாரத்தை மறைமுகமாக இந்த மாற்றத்தின் மூலம் மத்திய அரசு எடுத்துக்கோண்டுவிட்டது என்பது பரவலாக  விமர்சிக்கபடுகிறது. 

64 ஆண்டுகள் நிலைத்து நின்று தேசத்தின் வளர்ச்சிக்கு திட்டமிட்டு தந்த ஒரு அமைப்பை கலைக்காமல் திருப்தியில்லாத அதன் செயல்பாடுகளை  தக்க ஆய்வுகள்மூலம்  மாற்றங்களையும்  கண்காணிப்பு முறைகளையும் அறிமுகபடுத்தி புதுரத்தம் பாய்ச்சி சீராக்கி திறன் மிக்க ஒரு அமைப்பாக மாற்றியிருந்தால் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் இருக்கும் புதிய அரசின்  மீது மக்களின் நம்பிக்கை அதிகரித்திருக்கும்
(ஆழம் பிப் 15 இதழுக்காக எழுதியது.)


19/1/15

புத்தகக் காட்சி 2015 (13 01 2015) நேருவின் ஆட்சி வெளியீடு










 நேரு புத்தக புத்தக வெளியிட்டை ஒரு டிவி சானல் நடத்தியது புதிய அனுபவம்.  புத்தகம் பற்றிய கேள்விகள் சுவாரஸ்சியமாக இருந்தது. இரண்டு புத்தகம் வெளியிட்டதனால் நிறைய எடிட்டிங்குப்பின் நிகழ்ச்சி சுருக்க பட்டிருக்கிறது.
நண்பர் நெல்சன் முழு பதிவையும்  அனுப்புவதாக சொல்லியிருக்கிறார்.

17/1/15

மனதில் நிற்கும் மகிழ்வான தருணங்கள்




எழுதுபவனின் வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்று அவனது புத்தகம் சிறப்பாக வெளியிடப்படுவது, அவனது எழுத்துக்காக கெளரவிக்கபடுவது,  எனக்கு அத்தகைய தருணம் 12/1/15 அன்று வாய்த்தது. அதிலும் மாலனுடன் சேர்ந்து அந்த கெளரவத்தை பெற்றது மிக சந்தோஷமாக இருந்தது. இருவரும் சேர்ந்து எழுத ஆரம்பித்தது 1975ல் மணியனின் இதயம் பேசுகிறது இதழில். பின் மாலன் எழுத்தையே வாழ்க்கையாக்கி கொண்டார். நான் வாழ்க்கையின் நடுவே அவ்வப்போது எழுதிக்கொண்டிருந்தேன். இப்போது சற்று அதிகமாக எழுதுகிறேன். ஆனால் இருவரும் ஒரே மேடையில் கெளரவிக்க பட்டது இதுதான் முதல் முறை.. தங்கள் பிளைகள் எழுதுவதில் பெருமை கொண்ட எங்கள் பெற்றோர்கள் சொர்க்கத்திலிருந்து பார்த்து சந்தோஷபட்டிருக்கும் இந்த காட்சிகளை காண அருமை மனைவியும் அன்பு மகனும் நேரில் பங்கேற்றது மகிழ்ச்சியின் கனத்தை கூட்டிற்று.






தமிழகத்தின் சிறு கிராமம் ஒன்றில் பிறந்த பால. பாலச்சந்திரன் இன்று உலகம் அறிந்த ஒரு மேனேஜ்மெண்ட் குரு.சிகாகோவில் வசிக்கிறார்.  கிரேட் லேக்ஸ் எனற மேலாண்மைக் கல்லூரியை நிறுவி 10 ஆண்டுகளில் அதைமுதல் 10 நிறுவனங்களுக்கள் நிலைநிறுத்தியிருப்பவ்ர்.  சவாலான, சாதனையான அவரது வாழ்க்கைக் கதையை நான் புதிய தலைமுறையில் தொடராக வெற்றி வெளியே இல்லைஎன எழுதியிருந்தேன்.  அடுத்த வாரம் அது புத்தகமாக வெளிவருகிறது.
அதன் ஆங்கில மொழிபெயர்ப்பான “DARE TO DREAM” மும்பை தாஜ் ஹோட்டலில் இந்திய கார்ப்ரேட்டின் முன்னணித் தலைவர்கள் கேக்கி டாடிசேத் (Mr.Keki Dadiseth) (இந்துஸ்தான் லீவர் தலைவர்,  ஆதி காத்திரஜ், ஜெரிராவ் (சிட்டி வாங்கியின் முன்னாள்தலைவர் விருந்தினர்களாக பங்கேற்ற விழாவில் வெளியிடப்பட்டது.உடல் நல குறைவால் ரத்தன் டாட்டா பங்கேற்கவில்லை.  மும்பயின் பல கார்ப்பெரேட்களின் ”தலை”கள் பங்கேற்ற இந்த விழாவில் ஜெரிராவ் புத்தகத்தைவெளியிட்டு பேசினார். அழகான ஆங்கில உரை.  அவருக்கு தமிழும் நன்றாக தெரிந்திருப்பது  ஒர். ஆச்சரியம் குறளை மேற்கோள் காட்டி, ஆங்காங்கே புத்தக பக்கங்களைசுட்டிகாட்டி பேசினார். பேராசிரியர் பாலாவின் வாழ்க்கை சாதனை தமிழ்நாட்டுக்கு பெருமை என்றார்.
ஆங்கில புத்தகங்களின் வீச்சு அதிகம் என்பதை அறிந்திருந்தாலும் அன்று மும்பைவிழாவில் அதை உணர முடிந்தது. மொழிபெயர்ப்பினால் என் எழுத்து புதிய திசையில பயணிக்க துவங்கியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.  


11/1/15

இருளில் நிசப்தத்தை படிப்பவர்


நண்பர் மணிகண்டனின் வலைப்பூவிலிருந்து 





JAN 11, 2015
அடேயப்பா



 நேற்று காலையில் பதற்றமாகத்தான் இருந்தது. இயல்பான பதற்றம்தான். வழக்கமாக புத்தக வெளியீட்டுக்கு முன்பாக இருக்கும். ஆனால் பதிப்பாளரும், வேடியப்பனும் உற்சாகமாகத்தான் இருந்தார்கள். கொஞ்ச நேரம்தான். கண்காட்சிக்குள் நுழைந்ததும் இயல்பாகிவிட்டேன். 

திருப்பதியிலிருந்து மகேஷ் தனது நண்பரின் உதவியோடு வந்திருந்தார். வழக்கமாக புத்தக வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொள்பவர்களுக்கு எழுத்தாளர்கள் சார்பில் ஏதாவது நினைவுப்பொருளை வழங்குவார்கள். அதைப் பற்றி நான் நினைக்கவே இல்லை. ஆனால் மகேஷ் எனக்கு வழங்கினார். அதன்பிறகுதான் எனக்கு உறைத்தது. போக்குவரத்துச் செலவையாவது வாங்கிக் கொள்ளுங்கள் என்றால் அதையும் மறுத்துவிட்டார். பார்வை இல்லையென்றாலும் எப்படி நிசப்தத்தை வாசிக்கிறார் என்பதையெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். நெகிழ்ந்து கொண்டிருந்தேன். அவர் கொடுத்துச் சென்ற ஏழெட்டு திருப்பதி லட்டுகளை கண்காட்சியில் எதிர்பட்டவர்களுக்கெல்லாம் கொடுத்துக் கொண்டிருந்தோம். ஒரு அழைப்புக்காக இவ்வளவு மெனக்கெட்டிருக்கிறார்.

அதே போலத்தான் திருமதி மீரா ரமணன் தம்பதியினரும். ரமணன் அவர்கள் தனது கைக்காசைக் கொடுத்துவிட்டுச் சென்றார். ட்ரஸ்ட்டுக்காக வைத்துக் கொள்ளுங்கள்என்றார். அறக்கட்டளைக்காக கையில் பணம் வாங்குவதில்லை. அது ஒரு எழுதப்படாத விதி. கையில் வாங்குவதையோ அல்லது பெர்சனல் வங்கிக் கணக்கு எண்ணைக் கொடுப்பதையோ முழுமையாகத் தவிர்த்துவிடுவதுதான் நல்லது. வாங்கத் துவங்கினால் அது தேவையற்ற பேச்சுகளுக்கு இடமளித்துவிடும். அதனால் அந்தத் தொகையை பதிப்பாளரிடம் கொடுத்து அதை ராயல்டியுடன் சேர்த்துத் தரச் சொல்லிவிட்டார்கள். ராயல்டி தொகை அரசுப்பள்ளியில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவிக்கு வழங்கப்படும் என்பதால் இந்த ஏற்பாடு.

இளவரசன் பத்துப் பிரதிகளை வாங்கி தனது நண்பர்களுக்கு விநியோகிப்பதாகச் சொன்னார். புகழேந்தி ஐந்து பிரதிகள் வாங்கிக் கொண்டு அவரும் அதையேதான் சொன்னார். இன்னும் நிறையப்பேர்கள். அத்தனை பேரையும் நினைவு படுத்த முடியுமா என்று தெரியவில்லை.

மாலை ஏழு மணிக்குள் டிஸ்கவரி அரங்கில் கொண்டு வந்து வைத்திருந்த நூறு பிரதிகளும் தீர்ந்துவிட்டன. பதிப்பாளரும், விற்பனையாளரும் இது ஆச்சரியம் என்றார்கள். எனக்கே ஆச்சரியம்தான். இவ்வளவு பேர் நம்புகிறார்கள். தாங்கிப் பிடிக்கிறார்கள். ஏற்கனவே
 ஆன்லைன் ஆர்டர்கள் கிட்டத்தட்ட நூறை நெருங்கியிருக்கும் போலிருக்கிறது. ஆக, பதிப்பாளர் தப்பித்துவிடுவார் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. இதுதான் அவசியம். நம்மை நம்பி முதலீடு செய்கிறார்கள். அவர்கள் சிக்கிக் கொள்ளக் கூடாது என்றுதான் பதற்றமாக இருந்தேன். 
  
 அதெல்லாம் ஒரு பக்கம். 

புத்தகம் அச்சிடுவதும் அதை விற்பனை செய்வதும் கூட பெரிய விஷயமாகத் தெரியவில்லை. பதிப்பாளரிலிருந்து, விற்பனையாளர், வாசித்துவிட்டு நமக்காக மெனக்கெடுபவர்கள் என இப்படியான மனிதர்கள் உடன் நிற்கிறார்கள் அல்லவா? அதுதான் உச்சபட்ச சந்தோஷம். அதற்காக மட்டுமே இன்னும் எவ்வளவு வேண்டுமானாலும் உழைக்கலாம். சிரமப்படலாம்.

மாலை வரை வீட்டிலிருந்து ஒரு அழைப்பும் இல்லை. கிளம்பும் போதே பார்க்கர் பேனா ஒன்றை வாங்கிக் கொடுத்து சட்டைப்பையில் வைத்துக் கொள்ளச் சொல்லியிருந்தாள். இதெல்லாம் ஓவரா இல்லையா?’ என்றேன்.
 எந்த ஃபோட்டோவிலும் அந்தப் பேனா இல்லாமல் நீங்க இருக்கக் கூடாதுஎன்று உத்தரவிட்டிருந்தாள். யாருக்குமே பயப்படவில்லையென்றாலும் அவளுக்கு பயப்படுகிறேன். பயப்பட்டுத்தானே ஆக வேண்டும்? 

மாலையில்தான் அழைத்துக் கேட்டாள் புத்தகக் கண்காட்சியில் உங்களை மதிச்சாங்களா?’என்று. என்ன பதில் சொன்னாலும் ம்க்கும்என்ற பதில்தான் வரும் என்று தெரியும். பதில் சொன்னேன். நினைத்த பதிலேதான் வந்தது.

இன்றும் புத்தகக் கண்காட்சியில் சுற்ற வேண்டும். நேற்றே பட்டியல் தயாரித்துவிட்டேன். இன்று வாங்கி விடலாம். வழக்கமாக கையில் பணத்தோடுதான் வருவேன். இந்த மாதம் புது நிறுவனத்திற்கு மாறியதால் சம்பளம் வரவில்லை. தம்பியிடமிருந்து மூன்றாயிரம் ரூபாய் வாங்கி வந்து எண்ணி எண்ணி செலவு செய்து கொண்டிருந்தேன். அந்தக் கடவுளுக்கே பரிதாபமாக இருந்திருக்கும் போலிருக்கிறது. பழைய நிறுவனத்தில் இறுதிக் கணக்காக ஒரு தொகையைப் போட்டிருக்கிறார்கள். எஸ்.எம்.எஸ் வந்ததும் இரண்டு சிறகுகள் முளைத்ததை அருகிலிருந்தால் நீங்கள் பார்த்திருக்கலாம். இன்று தூள் கிளப்பிவிடலாம். கடவுளுக்கும் நன்றி.

எல்லாத் திசைகளிலிருந்தும் கிடைக்கும் இந்த அன்பும் பிரியமும் எனது உழைப்புக்கும் திறமைக்கும் மீறியது என்று நினைக்கிறேன். உண்மையாகவே மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன். ஒவ்வொருவருக்கும் மனப்பூர்வமான நன்றி.

DARE TO DREAM



 தமிழகத்தின் சிறு கிராமம் ஒன்றில் பிறந்த  பால. பாலச்சந்திரன் இன்று உலகம் அறிந்த  மேனேஜ்மெண்ட் குரு. அவரது வாழ்க்கை கதையை நான் புதிய தலைமுறையில் தொடராக ”வெற்றி வெளியே இல்லை” என எழுதியிருந்தேன். அது புத்தக வடிவில் இம்மாதம் 23ம் தேதி வெளியாகிறது.  அதற்கு முன் அதன் ஆங்கிலபதிப்பு நாளை12/1/15ல் மும்பையில் வெளியாகிறது. இந்திய கார்ப்ரேட்டின் முன்னணித்  தலைவர்கள் ரத்தன் டாட்டா, ஆதி காத்திரஜ், தீபக்  ப்ரேக்  விழாவில் பங்கேற்கிறார்கள்.(விபரங்கள் அழைப்பில்)
விழா விபரங்களும் படங்களும் அடுத்த பதிவில்


8/1/15

டிராகன் பறக்க ஆரம்பித்துவிட்டது



பழமை,வறுமை, குழப்பம், பெரிய மக்கள் தொகை, முதலாளித்துவத்தை எதிர்க்கும் கம்னியூசம் எல்லாம் இருந்தும்  பிரம்மாண்ட வளர்ச்சியை சீனா அடைந்திருப்பதின் ரகசியம் என்ன?
தொடர்ந்த வளர்ச்சி என்ற தொலைநோக்குடன் இயங்கும் சீரிய தலமையா?
ஜனநாயகத்தை பலிகொடுத்து அடைந்து கொண்டிருக்கும் செயற்கையான வளர்ச்சியா?
இந்தியா இது போன்ற வளர்ச்சியை திட்டமிட்டு அடையமுடியுமா?
இத்தனை வேகத்தில் பறக்கும் டிராகன் உலகின் முதலிடத்துக்குச் சென்றாலும் அந்த இடத்தில் நிலைக்குமா? 
அந்த இடத்தில் தன்னை உறுதியாக தக்க வைத்துக்கொள்ளுமா?
இந்த அடுக்கடுக்கான கேள்விகளை ஆராய்கிறது இந்த புத்தகம். 

எனது இந்த புதிய புத்தகத்தை கிழக்கு வெளியிட்டிருக்கிறது பக் 104 
விலை 90.ரு. புத்தக கண்காட்சியில் கிடைக்கும் ஆன்லையனிலும் வாங்கலாம்

3/1/15

புத்தாண்டின் முதல் நாள் காலையில்


புத்தாண்டின் முதல் நாள் காலையில் முதலில் படித்த பதிவு இது. நண்பர் சரவணின் விமர்சனம். ஒரு அருமையான பதிவாக கருதுகிறேன். எழுதியிருப்பதை சொல்லிவிட்டு விடுபட்டிருப்பதை அவர் பார்வையில் பேசியிருக்கிறார். எழுதுபவனின் சந்தோஷங்களிள் ஒன்று அதைப்பற்றி மற்றவர்கள் பேசுவது. இந்த புத்தாண்டுதினத்தில் அந்த சந்தோஷத்தை கொடுத்த நண்பர் சரவணுக்கு நன்றி.





பூ.கொ. சரவணன்
நேருவின் ஆட்சி- பதியம் போட்ட 18 ஆண்டுகள் புத்தகத்தைப் புத்தாண்டின் முதல் புத்தகமாக வாசித்து முடித்தேன். நேருவின் வாழ்க்கையைப் பற்றிப் பேசுகையில் தேச விடுதலைக்குப் பாடுபட்ட காலத்தைப் பதிவு செய்துவிட்டு, சீனா,காஷ்மீர் சிக்கல்கள் ஆகியவற்றில் நேரு சொதப்பினார் என்று சொல்வதோடு நேருவின் ஆட்சிக்காலத்துக்கு முற்றும் போட்டு முடித்துவிடுவதே பெரும்பாலும் நடக்கிறது. நேருவின் இந்தப் பதினெட்டு ஆண்டுகால ஆட்சி பற்றித் தனியான புத்தகங்கள் வந்ததில்லை என்கிற பெரிய குறையை ஆசிரியர் தீர்க்க முயன்றிருக்கிறார். நூலின் உள்ளடக்கம் பற்றிப் பேசிவிட்டு பின்னர் விமர்சனங்களுக்குள் செல்கிறேன் :
தனியாக முஸ்லீம்களுக்கு ஒரு தேசம் என்று சொல்லி வெறுப்பை விதைத்து அறுவடை செய்த ஜின்னாவுக்கே நாட்டின் பிரதமர் பதவியைக் கொடுத்து சிக்கலைத் தீர்க்கலாம் என்று காந்தி சொன்ன பொழுது அதை நேரு ஏற்க மறுத்தார். கிருபாளினி, படேல் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி நேருவை தலைமைப் பொறுப்புக்குக் கொண்டு வருவதைக் காந்தி உறுதி செய்திருந்தாலும் எல்லாச் சமயத்திலும் அவர் சொல்வதே தான் கேட்க வேண்டிய அவசியமில்லை என்பதை நேரு செய்து காண்பித்தார். இந்திய விடுதலையைப் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் சர்ச்சில் முதலிய பலபேர் எதிர்க்க உப்பு சத்தியாகிரகத்தின் பொழுது இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த இர்வின் உணர்ச்சியும், உண்மையும் கலந்த ஒரு உரையை நிகழ்த்தி நாடாளுமன்ற அனுமதி பெற்று தனியான தேசமாக இந்தியா உருவாவதை சாதித்தார்.
பிரிவினைக்குப் பிறகு தேசம் உருவாகிறது. நேரு விடுதலை நாளுக்குத் தயாராக வேண்டும். தேச விடுதலைக்கு முக்கியக் காரணமான காந்தி மதத்தின் பெயரால் வெட்டிக்கொண்டிருந்த மக்களிடையே அமைதியை கொண்டுவர போயிருந்தார். லாகூரில் இந்துக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்கிற தகவல் வந்து சேர்ந்து கண்ணீர்விட்டு அழுத நேரு எப்படி மக்கள் முன் உரையாற்றப் போகிறோம் என்று உள்ளுக்குள் கலங்கிக்கொண்டு இருந்தார். எந்தத் தயாரிப்பும் இல்லாமல், வெறுப்பை விடுத்து சகோதரர்களாக இணைந்து புதுத் தேசம் படைப்போம் என்பதை ‘விதியோடு சந்திப்புக்கு ஒரு ஒப்பந்தம்’ உரையில் நேரு தேச மக்களின் மனதில் விதைத்தார். மவுண்ட்பேட்டனிடம் நேரு கொடுத்த அமைச்சரவை பட்டியல் என்று பெயரிடப்பட்ட உறைக்குள் வெறும் வெள்ளைத்தாள் தான் இருந்ததாம்.
சமஸ்தானங்களை இந்தியாவோடு இணைக்கும் பணியில் படேல், மேனன் ஆகியோர் ஈடுபட்ட பொழுது நேரு உறுதுணையாக இருந்தாலும் சமயங்களில் முரண்டும் பிடித்திருக்கிறார். இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த நிஜாம் ஆண்டுகொண்டிருந்த ஹைதரபாத்தை உடனே தாக்குவது இந்திய முஸ்லீம்களை அச்சத்துக்கு உள்ளாக்கும் என்று அமைதி காத்த நேருவை மீறி அங்கே ரஸாக்கர்களின் அட்டூழியத்தை ஒழிக்கப் போலீஸ் நடவடிக்கை தேவை என்று படேல் வாதிட்ட பொழுது ‘நீங்கள் மதவாதி!’ என்று சொல்லிவிட்டு நேரு வெளியேறினார். பின்னர் ராஜாஜி கிறிஸ்துவக் கன்னியாஸ்திரிகள் வன்புணர்வுக்கு ரஸாக்கர்களால் உள்ளாக்கப்பட்டு இருப்பதாக அயல்நாட்டு தூதுவர் அனுப்பிய கடிதத்தைக் காண்பித்ததும் நிலைமையின் வீரியம் உணர்ந்து நேர்ந்த அவலங்களால் ஏற்பட்ட கண்ணீரை அடக்க முடியாமல் போலீஸ் நடவடிக்கைக்கு அனுமதி தந்தார் நேரு. இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்த ஜூனாகாத்தை ஜின்னா தந்திரமாகப் பெற்ற பின்னர் அதை இந்தியாவோடு இணைத்த பின்பு அங்கே வாக்கெடுப்பு நடத்தி இணைத்துச் சிக்கல்களை நேரு தவிர்த்தார்.
காஷ்மீருக்குள் பாகிஸ்தான் பகுதி பதான்கள் நுழைந்த நிலையில் இந்தியாவின் உதவியை ஹரிசிங் கேட்டதும் ராணுவத்தை நேரு அனுப்பி வைக்கலாமா வேண்டாமா என்று நீண்ட நெடிய கூட்டத்தை நடத்தி, போரைத் தவிர்க்கலாம், ரஷ்ய உதவி, ஆப்ரிக்க மாதிரிகள் என்று ஓயாமல் பேசிக்கொண்டே இருந்தார். ராய்புச்சர் என்கிற ஆங்கில அரசை சேர்ந்த ராணுவத் தளபதி பதவியை ராஜினாமா செய்துவிடுவேன் என்று மிரட்டுவதும் நடந்தது. படேல் தீர்க்கமாகக் காஷ்மீர் நோக்கி ராணுவம் செல்லும் என்று சொன்னதோடு, ராய் புச்சர் பதவி விலகிக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டார். காஷ்மீர் இந்தியா, பாகிஸ்தான் இரண்டு பிரதேசங்களுக்கு இடையே பிரிந்திருக்க வேண்டும் என்பதையே பிரிட்டன் விரும்பியிருக்கிறது. அடித்துக்கொண்டு கிடப்பார்கள் என்பது ஒருபுறம், காஷ்மீர் முழுமையாக இந்தியாவுக்குக் கிடைத்துவிட்டால் பாகிஸ்தானை அது விழுங்கிவிடும் என்றும் அஞ்சியிருக்கிறார்கள். காஷ்மீர் சிக்கலை ஐ.நா. சபைக்குக் கொண்டு சென்று உள்நாட்டு சிக்கலாக முடிந்திருக்க வேண்டிய அதைச் சர்வதேச சிக்கலாக நேரு மாற்றினார் என்பதோடு, வாக்கெடுப்புக்கு அவர் ஒத்துக்கொண்டார். பாகிஸ்தான் முழுமையாக விலகிய பிறகே வாக்கெடுப்பு என்பதைப் பாகிஸ்தான் கேட்கத்தயாராக இல்லை என்பதால் முதல் போர் முடியாத போராக இருக்கிறது.
காந்தியின் படுகொலைக்குப் பின்னர்ப் படேல், நேரு இணைந்து ஆர்.எஸ்.எஸ். அமைப்புத் தடை செய்யப்படுவதை உறுதி செய்ததன் மூலம் இந்தியா இந்து பாகிஸ்தான் ஆவதை தடுத்தார்கள். விடுதலைக்குப் பின்னர் ஜனநாயக ரீதியிலேயே தேர்தல் நடக்கவேண்டும் என்று சொல்லி கம்யூனிஸ்ட் பாணியிலான அரசையோ, ராணுவ அரசையோ, சர்வாதிகார போக்கையோ நேரு முன்னெடுக்காமல் உலகின் மிகப்பெரிய தேர்தலை நடத்தி சாதித்தார்.
இந்துப் பெண்களுக்கு ஜீவனாம்சம், விவாகரத்து பெற உரிமை, சொத்துரிமை ஆகியவற்றை வழங்கும் இந்து பொதுச்சட்டங்களை நேரு நிறைவேற்ற முயன்ற பொழுது இந்து மதத்தின் காவலர்களாகச் சொல்லிக்கொள்ளும் ஜனசங்கம், ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் அதை எதிர்த்தன. ஆனால், அவற்றை நிறைவேற்றி சீர்திருத்தங்களுக்குச் சட்டரீதியான முகம் கொடுத்தார் நேரு.
மொழிவாரியாக மாநிலங்களைப் பிரிவினை ஏற்படுத்திய ரணத்தால் முதலில் மறுத்த நேரு அதற்குப் பரவலான ஆதரவு இருந்ததால் அப்படியே அமைக்க ஜனநாயகரீதியில் ஒத்துக்கொண்டார். ‘நியாயமான முறையில் நியாயமான தேசத்தைக் கட்டமைத்தேன்.’ என்று நேரு சொன்னது பெரும்பாலும் உண்மையே. பழங்குடியினர், பட்டியல் ஜாதியினர் ஆகியோருக்கு உதவிகள் தேவை என்கிற எண்ணம் கொண்டிருந்தவர் நேரு. அதேசமயம் அவர்களுக்கு இட ஒதுக்கீடு தருவதைக்கூட அவர் விரும்பவில்லை. திறன் குறையும் என்று அவர் கருதினார். எனினும், அவர்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டை நீக்க அவர் முயற்சிக்கவில்லை. அதேசமயம் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்கிற பரிந்துரையை அதைப் பற்றி ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவின் தலைவரே நிராகரித்ததால் கிடப்பில் போட்டார்கள்,
முழுமையாகச் சோஷலிசம் என்று பாயாமல் நேரு ஜனநாயக சோசலிசத்தை முன்னெடுத்தார் என்பதே உண்மை. அவரின் ஆரம்பகால வேகத்தைப் பார்த்துக் கம்யூனிஸ்ட்களே அஞ்சினாலும் அவர் அத்தனை வேகமாகச் சோசியலிசம் நோக்கிப் பயணப்படவில்லை என்பதே உண்மை. கல்வி, நிலப்பங்கீடு ஆகியவற்றில் மகத்தான சீர்திருத்தங்கள், தொழிலாளர்கள் மீது காவல்துறை பாயத்தடை என்று இயங்கிய நம்பூதிரிபாட் அரசை கலைக்கச் சொல்லி உத்தரவிட்ட நேருவின் செயல் அவரின் ஜனநாயகப்பண்பில் கரும்புள்ளியாக விழுந்தது.
சீனச்சிக்கலில் கிருஷ்ணமேனனை நம்பிக்கொண்டு என்ன நடக்கிறது என்றே கவலைப்படாமல் நேரு இருந்தார். சீனா பல்வேறு பகுதிகளில் நுழைந்து கையகப்படுத்தி இருந்த பொழுது சீனப்படைகளைத் தூக்கி எறிவேன் என்று நாடாளுமன்றத்தில் சவால் விட்டுக்கொண்டிருக்கிற அளவுக்கு அறியாமை கொண்டிருந்தார் அவர். கவுல், முல்லிக் முதலிய திறனற்ற தளபதிகள் ஜீப் ஊழலில் சிக்கிய கிருஷ்ணமேனனின் தயவில் களத்தில் நின்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் உயிரழக்க முக்கியக் காரணமானார்கள். தலாய்லாமாவை இந்தியாவுக்குள் அனுமதித்த நேரு சீனாவின் திபெத் ஆக்கிரமிப்பை ஏற்றுக்கொண்டாலும் அவர்களின் நம்பிக்கையை அவர் பெறவே இல்லை என்பதைச் சீனப் போர் நிரூபித்தது. போரில் இந்தியா சிக்குண்டு திணறிய பொழுது அமெரிக்காவே பேருதவி செய்தது. ஆயுதங்கள் தந்ததோடு நில்லாமல், விமானப்படையை அனுப்புவதாகவும் அது பயமுறுத்தியதும் சீனா போரை முடித்துக்கொள்ளக் காரணம்.
அணிசேராக்கொள்கையை உருவாக்கி சுதந்திரமான அயலுறவுக்கொள்கையை நேரு சாதித்தார். இந்தியை தென்னகத்தின் மீது திணிக்கிற வேலையை அவர் செய்யவில்லை. நீங்கள் விரும்பும் வரை ஆங்கிலமே இணை மொழியாகத் தொடரும் என்று அவர் உறுதியளித்தார். சீனப்போர் தோல்விக்குப் பின்னர்த் தான் பெருந்தோல்வி அடைந்த கே ப்ளான் வந்தது. இடதுகையில் பக்கவாதம், சீராகச் செயல்படாத சிறுநீரகம் இவற்றோடும் இந்திய மக்களுக்காக உழைத்த ஆளுமையாக நேரு திகழ்ந்தார். 150 பக்கங்களில் இத்தனை பெரிய வாழ்க்கையை அடக்கியதற்கு ஆசிரியருக்கு பூங்கொத்து. மேலும் பல இடங்களில் பின்புலத்தைத் தொட்டுவிட்டே நேரு கால அரசியலுக்கு வந்து அசத்துகிறார். நேரு பற்றி தமிழில் வந்த புத்தகங்களிலேயே ( மொழிபெயர்ப்பான இந்தியா காந்திக்குப் பிறகை தவிர்த்து ) சிறந்த புத்தகம் இதுவே.
சிக்ஸ்த்சென்ஸ் வெளியீடு
ஆசிரியர் : ரமணன்
பக்கங்கள் :152
விலை : 115
புத்தகத்தை வாங்க http://www.wecanshopping.com
---------------------------------------------------------------------------------------------------
இனி விமர்சனங்கள் :
படேல் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தடை செய்தார் என்று எழுதுகிற பகுதியில் நேரு எப்படி ஆர்.எஸ்.எஸ். அமைப்பை எப்பொழுதும் சந்தேகத்தோடு பார்த்தார், அது சார்ந்து அவருக்கும் படேலுக்கும் இருந்த கருத்துப் பேதங்களைப் பதிவு செய்யவில்லை ஆசிரியர். படேல் மட்டுமே ஆர்.எஸ்.எஸ். தடைக்கு முழுக்காரணம் என்பது போன்ற பிம்பம் எழுகிறது. சுயராஜ்யம் எனது பிறப்புரிமை என்ற திலகர் பெண்ணின் மணவயதை ஏற்றியதை ஆதரிக்க மறுத்தது ஆச்சரியமே என்று எழுதுகிற ஆசிரியருக்கு திலகர் பசுவதைக்கு ஆதரவாகத் தீவிரமாக இயங்கியதும், அவரின் கணபதி, சிவாஜி விழாக்கள் மதரீதியாக மாறி இந்து-முஸ்லீம் கலவரங்களுக்கு வழிவகுத்தது தெரிந்திருக்கும். மத ரீதியாகப் பழமைவாதியாகவே அவர் இருந்தார் என்கிற பொழுது எப்படி இப்படி ஆச்சரியப்பட்டார் என்று தெரியவில்லை.
ஷேக் அப்துல்லா பகுதியில் ஒரு வரலாற்றுப் பார்வைக்குப் பதிலாக ஆசிரியரின் சொந்தப் பார்வையே மிகுந்துள்ளது வருத்தமான ஒன்று. ஷேக் அப்துல்லாவை துரோகி என்று சொல்கிற அளவுக்கு ஆசிரியர் சென்றுவிட்டார். அந்த வாதத்துக்குள் போக விரும்பாவிட்டாலும் ஜனசங்கம் காஷ்மீரில் செய்த குழப்பங்கள் அப்துல்லாவை தனிக் காஷ்மீர் என்பதை நோக்கி தீவிரமாகத் தள்ளியது என்பதையும் சமநிலையோடு ஆசிரியர் பதிவு செய்திருக்க வேண்டும். ஐந்தில் நான்கு பேர் இஸ்லாமியர்கள் என்பதையும், அவர்கள் நிலை ஹரிசிங் காலத்தில் மோசம் என்பதையும் பதிந்துவிட்டு ஷேக் அப்துல்லா கொண்டுவந்த நில சீர்திருத்தங்கள் காஷ்மீரை முஸ்லீம் தேசமாக மாற்றியது என்பது சாய்வான வாதம் இல்லையா ? ஷேக் அப்துல்லா மதச்சார்பின்மையைத் தூக்கிப் பிடித்துக் கலவரங்கள் என்பதை மத ரீதியாக நடக்காமல் தடுக்கிற முக்கியமான சக்தியாக அவர் காலத்தில் இருந்தார். தேர்தலில் தொகுதிகளை விரும்பியபடி வரைந்து கொண்டார் அவர் என்று எழுதும் ஆசிரியர் ஜனசங்கம் ஜெயித்திருக்குமே என்கிற ஆதங்கத்தோடு எழுதியதாகப் படுகிறது. பல தொகுதிகளில் எதிர் வேட்பாளர்கள் நிற்பதை தேர்தல் மனுக்களை நிராகரித்துத் தவிர்த்ததில் நேருவுக்குப் பங்கில்லை என்று மறுத்துவிட முடியாது. ஷேக் அப்துல்லா பக்கம் பட்ட பார்வை ஷ்யாம் பிராசத் முகர்ஜி பக்கமும் சென்றிருக்கலாம். நூலின் கனத்தை அசைக்கிறது இப்பகுதி.
அதே போலச் சீனாப் பக்கம் நேரு சாதகமாக இருந்தார் என்று எழுத வந்ததற்குக் கொரியப் போரில் அவர் செய்த விமர்சனத்தை எடுத்துக்காட்டாகக் காட்டியதற்குப் பதிலாக ஐ.நா. சபையில் நிரந்தர உறுப்பு நாடாகச் சீனாவை ஆக்கச்சொல்லி கேட்டதையோ வேறு எதையோ குறிப்பிட்டு இருக்கலாம். இந்தியா கொரியப்போரில் இடதுசாரி அரசுகள் மற்றும் அமெரிக்கா முதலிய நாடுகளின் விமர்சனங்களை ஒருங்கே பெறுகிற அளவுக்கு நடுநிலையோடு செயல்பட்டது என்பது பலரின் பார்வை.
இட ஒதுக்கீட்டை நேரு விரும்பவில்லை என்பதை மட்டும் பதியும் ஆசிரியர், இட ஒதுக்கீடு தேவையே இல்லை என்று சொல்ல வந்து அதற்குத் தற்கால மருத்துவ மதிப்பெண்கள் எடுத்துக்காட்டைத் தருகிறார். நேரு காலத்தில் எவ்வளவு மதிப்பெண்கள் தேவைப்பட்டது என்று சொல்லித்தானே இடஒதுக்கீட்டுக்கான தேவையைப் பற்றிய வாதத்தை முன்வைப்பது சரியாக இருக்க முடியும்? நேரு கால வரலாற்றை எழுதுகிறோம் என்பதை அங்கே மறந்துவிட்டார் ஆசிரியர்.
சோஷலிசம் பற்றிய பக்கங்களில் நேரு அவ்வளவாகத் தீவிரமாகச் செயல்படுத்தாத நில சீர்திருத்தங்கள் பற்றியும், ஆரம்பக்கல்விக்கு அளிக்கப்படாத முன்னுரிமை பற்றியும் பேசவில்லை. அவர் காலத்தில் எழுந்த வளர்ச்சித் திட்டங்கள் பற்றியும் இன்னமும் ஆழமாகப் பேசியிருக்க முயன்றிருக்கலாம். குறைந்தபட்சம் அவற்றைப் பற்றிக் குறிப்பிடவாவது செய்திருக்கலாம்.
  • Shah Jahan //எழுதுபவனின் சந்தோஷங்களிள் ஒன்று அதைப்பற்றி மற்றவர்கள் பேசுவது.//சரியாகச் சொன்னீர்கள்.
  • Vedha Gopalan # எழுதுபவனின் சந்தோஷங்களிள் ஒன்று அதைப்பற்றி மற்றவர்கள் பேசுவது #

    Very correct.! அனுபவப்பூர்வமாக உண்ர்ந்திருக்கிறேன்! ஆனால் இதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டது இன்னும் பெரிய சந்தோஷம் அளிக்கிறது