3/11/16

ஒன்ஸ்மோர்


தினமணி கதிர் வார இதழில் புத்தகத்திலிருந்து ஒரு பகுதியை வெளியிட்டு எனது புத்தகத்தை  அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். தொகுத்த திரு கேசி அவர்களுக்கும் , ஆசிரியருக்கும் நன்றி


அடையாற்றின் கரையில் உள்ள கோட்டூர்புரம் ஓர் அமைதியான பகுதி. நுங்கம்பாக்கத்திலிருந்து மாறி இந்த அதிகம் சந்தடியில்லாத இடத்திலிருந்த "சுபம்சிவம்இல்லத்தில்தான் சதாசிவமும் எம்.எஸ்ஸும் வசித்து வந்தனர். சிறிய அந்த அழகான வீடு எப்போதும் இசையால் நிரம்பியிருக்கும். நுழையும்போதே தம்பூரா ஒலி பூஜை அறையிலிருந்து பரவிக் கொண்டிருக்கும்.
கல்கி தோட்டம்போல பரபரப்பாக இல்லாவிட்டாலும், தினசரி சந்திக்க வருபவர்களுக்குக் குறைவில்லை. வருபவர்களை அவருக்கே உரிய இயல்பான இன்முகத்தோடு வரவேற்று உபசரிப்பார் எம்.எஸ். வருபவர்களை இளையவர்களானால் வாஞ்சையோடு, "பாட்டு கற்றுக் கொள்கிறீயா?'' எனக் கேட்டு பாடச் சொல்லிக் கேட்பார்.
ராதாவின் துணையில்லாததால் மனம் சோர்ந்திருந்தவருக்கு உடல் நலமும் குன்ற ஆரம்பித்தது. சர்க்கரை நோய், மூட்டு வலி போன்ற உபாதைகளினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். கச்சேரிகள் செய்வதற்கான அழைப்புகளை ஏற்காதிருந்தார். இந்தக் கட்டத்தில்தான் எதிர்பாராமல் நிகழ்ந்தது சதாசிவத்தின் மரணம். இது அவரை மிகவும் தாக்கியது. வாழ்க்கையே இருண்டு போனதுபோல் உணர்ந்தார். எப்போதும் அவரின் நினைப்பில் தனிமையில் இருந்தார். பூஜை அறையில் மட்டும் பாடிக் கொண்டிருந்தார். மகள் ராதா, பேத்தி கௌரி, விஜயா வந்தால் அவர்களுடன் சேர்ந்து ஏதாவது பாடுவார்.
கனத்த மனத்துடன் வாழ்க்கையில் பற்று குறைந்துகொண்டு வந்த நிலையில்தான் "பாரத ரத்னா' அறிவிக்கப்பட்டது. ஆத்மா போன்றவர்களின் வற்புறுத்தலால் தில்லி சென்றாரே தவிர, முழு மனமகிழ்வுடன் அதை அவர் பெற்றுக் கொள்ளவில்லை. இதைத் தொடர்ந்து தில்லி அரசு அறிவித்த வாழ்நாள் சாதனை விருதைப் போய் வாங்கவில்லை. அவரது அன்புப் பேத்தி சீதா ரவி (கல்கி இதழின் ஆசிரியர்) தான் அவர் சார்பில் பெற்றார். அதில் கிடைத்த பரிசுத் தொகை 11 லட்சத்தையும் உருவாகிக் கொண்டிருந்த காஞ்சி முனிவரின் நினைவு மண்டபப் பணிக்குத் தரச் சொல்லிவிட்டார்.
நாட்கள் செல்லச் செல்ல உடல்நிலை மோசமாகிக் கொண்டே இருந்தது. பல நாட்கள் அமைதியாகி, பூஜை அறையில் பாடிக் கொண்டிருந்ததையும் நிறுத்தியிருந்தார். ஒருநாள் ராதாவின் வீட்டுக்குப்போன இடத்தில் விழுந்து இடுப்பில் அடிபட்டது. எலும்பு முறிவு இல்லையென்றாலும் அதற்கான சிகிச்சை பல மாதங்கள் தொடர்ந்தது. அது முழுவதும் சரியானபோது மறுபடியும் அதேபோன்று விழுந்ததில் எலும்பு முறிவு ஏற்பட்டுவிட்டது. அதனால் அறுவை சிகிச்சை, அதைத் தொடர்ந்து நீண்ட நாள் சிகிச்சை என்று துன்பங்கள் தொடர்கதையாயின. சிகிச்சைகள் மெல்ல  பலன் அளித்துக் கொண்டிருந்தாலும், மனம் அமைதியாக இல்லாமல் தவித்தார். அந்தக் கட்டத்தில் அவரைத் தாக்கியது மறதி நோய். இரண்டாயிரம் பாடல்களையும் ராகங்களையும் நினைவிலிருந்து எதையும் பார்க்காமல் பாடும் பாடகிக்கு மறதி நோய் வந்திருந்ததை ஆத்மா மிகுந்த வருத்தத்துடன் சொல்லக் கேட்டபோது மனம் உடைந்து போனது நிஜம்.
அதைவிடச் சோகம் வானொலி, தொலைக்காட்சியில் ஏதாவது கர்நாடக இசையைக் கேட்டால், "அதை நிறுத்து'' என ஆத்மாவிடம் சொல்லியிருந்ததுதான்.
 
உடல் நிலை மோசமானதால் 2004, டிசம்பர் 2-ஆம் தேதி இஸபெல்லா மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார் எம்.எஸ். பத்து நாள் போராட்டத்தில் மருத்துவர்கள் தோற்றார்கள். விதி வென்றது. மல்லிகை தேசத்தில் பிறந்து மலர்ந்த அந்த தாமரை கடைசி விநாடியில் ஆத்மாவின் கையைப் பிடித்துக்கொண்டே வாடி விழுந்தது.
புனேவிலிருக்கும் திலிப் ராய் என்ற ஆன்மிக குருவின் ஆசிரமத்தில் எம்.எஸ். தங்கிப் பாடியபோது ஒரு நிகழ்ச்சியில் அவர் எம்.எஸ்ஸுக்காக எழுதிப் பாடிய கவிதை இது.
 
"இடையறாது பாடிக் கொண்டே
  
எங்களை அழகிலிருந்து
 
ஆனந்தத்திற்கு இட்டுச் செல்
 
ராதா கிருஷ்ண ஜோதியின்
 
நிரந்தர தீபமாய்
 
சுடர்விட்டுக் கொண்டே இரு''

எவ்வளவு அருமையான வார்த்தைகள். ஆசிரியர் கல்கி, வீணை பவானி என்ற கதையில்,  "பவானியை மற்ற மனிதர்களைப் படைத்ததைப்போல பிரம்மா படைக்கவில்லை. மோகனத்தையும் செஞ்சுருட்டியையும் சேர்த்துப் படைத்திருக்கிறார். பவானி செத்துப் போகும்போது அவளுடைய உடம்பு அப்படியே கரைந்து உருகி ராகங்களாகக் காற்றில் போகும்
 என்று வர்ணித்திருப்பார்அமரர் கல்கியின் இந்த வரிகள் எம்.எஸ்ஸுக்கானது என்றால் தவறில்லை.
 
பல்வேறு ராகங்களாகக் காற்றில் கரைந்து போன எம்.எஸ்., நமக்காகத் தினமும் காற்றிலே வரும் கீதமாக ஒலித்துக் கொண்டுதானேயிருக்கிறார்?

"காற்றினிலேவரும்கீதம்: இசையரசியின் வாழ்க்கைப் பயணம்'          என்ற நூலில் ரமணன்.

தொகுப்பு: கேசி


15/10/16

கவிதா--- 40






கடந்த மாதம் 24/09/16 அன்று கவித பதிப்பகம் அவர்களது 40 வது ஆண்டுவிழாவை வெகுவிமரிசையாகக் கொண்டாடினார்கள். ஒரு பதிப்பகத்தின் விழா போல் இல்லாமல்  செட்டிநாட்டு வீட்டு திருமணம் போல  சுவையான விருந்துடனும் நடைபெற்றது... இந்த ஆண்டு இதுவரை அவர்கள் பதிப்பித்த 105 புத்தகங்களையும் அன்று வெளியிட்டார்கள். எனது காற்றினிலே வரும் கீதம் புத்தகத்தை சிறப்பு வெளீயிடாக,  குன்றக்குடி அடிகளார், திரு ப. சிதம்பரம் முன்னிலையில்  நல்லி குப்புசாமி வெளியிட திருமதி கெளரி ராம்நாரயாண் பெற்றுக்கொண்டார். எழுத்தாளர்களும்,கவிஞர்களும் பேசிய அந்த நீண்ட விழாவில் இந்த புத்தகவெளியீடுதான் ஹைலைட்..ஒரு எழுத்தாளானாக என் வாழ்வில் மறக்கமுடியாத நிகழ்வு.  அந்த விழாவின் வீடியோவிலிருந்து  எனது புத்தக அறிமுக உரையையும், திருமதி கெளரி அவர்களின் புத்தக விமர்சன உரையையும் இங்கே பார்க்கலாம்


10/10/16

காற்றினிலே வரும் கீதம்




கவிதா பதிப்பகம் அவர்களது 40ஆம் ஆன்டுவிழாவை சிறப்பான விழாவாகக்  24/09/16 அன்று கொண்டாடினார்கள். அதில் எனது காற்றினிலே வரும் கீதம் புத்தகம் வெளியிடப்பட்டது.   எழுத்தும் எடுத்த முயற்சிகளும்  நல்ல முறையில் கெளரவிக்கப்பட்டது சந்தோஷமாக இருந்தது.  நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட படங்களிள் சில இங்கே வீடியோ வாக பார்க்கலாம்   கீழே வலது மூலையிலிருக்கும் சதுரத்தைக் கிளிக்கினால்  படங்களைப் பெரிதாகப் பார்க்கலாம்.

 காணொளிகள்  அனுப்பவதாகச் சொல்லியிருக்கிறார்கள்.. 













28/9/16

இவர்கள் தெய்வங்கள்



காவிரி பிரச்சனை கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த நாள். நிஜமாகவே பஸ்கள் கொளுத்தப் பட்டு எரிந்த ஊரடங்கு உத்தரவு, மாநில எல்லைகளில் வாகனங்கள் நிறுத்தம் எனப் பதட்டமாக இருந்த அந்த நாளின் இரவில் இரவு 1 மணிக்குக் கர்நாடக மாநில எல்லையில் வந்து நிற்கிறது ஒரு பிரபல மருத்துவ மனையின் ஆம்புலன்ஸ். அதிலிருந்து ஒரு நோயாளியுடன் இருக்கும் ஒரு சக்கர நாற்காலியை வேகமாகத் தள்ளிக்கொண்டு 4 பேர் கொண்ட ஒரு டாக்டர் குழு தமிழ் நாட்டு எல்லைக்கு விரைகிறது. பாதுகாப்பு நின்றிருக்கும் போலீஸார் அந்த நள்ளிரவில் நடந்து கொண்டிருப்பது என்னவென்று திகைத்து நிற்க அந்த டாகடர் குழு சேலத்திலிருந்து வந்த எல்லையில் தமிழக ரிஜிஸ்ட்ரேஷன் எண்ணுடன் காத்திருந்த ஒரு ஆம்புலன்ஸில் ஏறியவுடன் அது சேலத்துக்கு பறக்கிறது.
நாக்பூரிகிருந்து பங்களுர் மணிப்பால் மருத்தவமனையில் குடல் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டிருந்த ஒருவருக்கு, மாற்று அறுவை சிகிச்சைமூலம் குடலை மாற்ற வேண்டும் என முடிவு செய்யப்பட்டிருந்தது. அவரும் அவரது டாக்டர்களும் கடந்த இரண்டு வருடமாக உடல் உறுப்பு தானம் செய்துவிட்டு இறந்த ஒரு கொடையாளிக்காகக் காத்திருந்தனர்.
சேலத்திற்கு அருகில் சாலை விபத்தில் முதல் நாள் இறந்த ஒருவர் தன் உடலுறுப்புக்களை தானமாக வழங்கியிருந்தார். அந்தச் செய்தியை அறிந்த மணிப்பால் மருத்தவ மனை அதில் குடலை மாற்று அறுவை சிகைச்சை மூலம் தங்கள் நோயாளிக்கு அறுவைச் சிகிச்சைமூலம் மாற்றத் தீர்மானித்தது. அதன் விளைவு தான் சினிமா காட்சிப் போல இந்தப் பயணங்கள்.
இந்த அறுவை சிகைச்சையை நடத்தியவர் ஒலித்செல்வன் (Dr Olithselven) இவர் மணிப்பால் மருத்தவமனையின் குடல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்.பாண்டிச்சேரி ஜிம்ப்பரில் படித்து, அங்குப்  பணி புரிந்தவர்.

இரு மாநிலங்களுக்கிடையே நடக்கும் போராட்டங்களினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதை காரணமாகக் காட்டி இதை நாங்கள் தவிர்த்திருக்கலாம். ஆனால் காத்திருக்கும் ஒரு நோயாளின் உயிரைக் காப்பாற்ற வேண்டிய கடமையும், உடனே பயன் படுத்தி நன்கொடை கொடுத்த நபரின் தியாக உணர்வுகளை மதிக்க வேண்டிய பொறுப்பும் டாக்டர் என்ற முறையில் எங்களுக்கு இருக்கிறது. அதனால் தான் துணிந்து ஆபத்தானது என்று தெரிந்தும் இந்த முடிவை எடுத்தோம். பிரச்ச்னைகளையும் விளம்பரத்தைத் தவிர்க்க இரவு எல்லையைக் கடக்க திட்டமிட்டோம். மாநில எல்லையில் ஒரு கிமீ அந்த இரவில் நடந்தபோய் தமிழக ஆம்புலன்ஸ்ஸில் ஏறும் வரை திக் திக் தான். போர் நடக்கும் இரண்டு நாடுகளின் எல்லையைக் கடப்பது போலிருந்தது.” என்கிறார் டாக்டர் ஒலித்செல்வன் (Dr Olithselven)
பங்களூரிலிருந்து சேலம் வர 4 மணி நேரமாகியிருக்கிறது. சேலத்துக்குக் காலை  3 மணிக்கு வந்த இந்த மருத்தவர் குழு ஒரு நிமிடம் கூட வீணாகாமல் அறுவை சிகைச்சையை துவக்கிவிட்டார்கள், 12 மணி சஸ்பென்ஸ்க்கு பின்னர் அறுவை சிகிச்சை வெற்றியென மருத்தவர் குழு அறிவிக்கிறது
அந்த நிமிடத்தில் ஒரு தமிழ் கொடையாளியினால் மறுவாழ்வு பெற்ற அந்த நோயாளியின், அவரது குடும்பத்தினர் அடைந்த சந்தோஷத்தைப் பார்த்தபோது ஆபத்து நிறைந்த முடிவை எடுத்தது சரியானது தான் என்ற எண்ணம் எழுந்தது என்கிறார் டாக்டர் ஒலித்செல்வன் (Dr Olithselven)

கர்நாடக மாநிலத்திலிருந்து சென்னைக்கும், அந்த மாநிலத்தின் பல பகுதிகளுக்குச் சொகுசு பஸ்களை இயக்கிக் கொண்டிருக்கும் நிறுவனம் தமிழகத்தைச் சேர்ந்த கேபி என்.
இவர்களது பஸ் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையத்தில் போராளிகள் புகுந்து 52 பஸ்களையும் பெட்ரோல் விட்டு எரித்துவிட்டார்கள். பஸ்களை இழந்த வேதனையிலும் சேலத்திலிருக்கும் அந்த நிறுவனத்தின் தலைமையகத்தில் தங்கள் டிரைவர்கள், ஊழியர்கள் என்ன வானார்கள்? என்ற கவலையில் இருந்தனர்

மறுநாள் காலையில்நாங்கள் பத்திரமாக ஹோசூர் வந்துவிட்டோம்என்று அவர்கள் சொன்ன தகவல் தலமையகத்தினருக்கு ஆச்சரியமாக இருந்தது. எப்படி நிகழ்ந்தது இது?
கர்நாடகாவைச் சேர்ந்த சாமராஜ்பேட் பகுதியில்சிவா டிராவல்ஸ்என்ற நிறுவனம் நடத்தி வரும் சிவண்ணா என்பவர், இந்த ஓட்டுநர்களை தன்னுடைய லாரிகளில், பத்திரமாக ஓசூருக்கு அழைத்துவந்துவிட்டார். .
என்னுடைய டிராவல்ஸ் நிறுவனத்தின் சேவை, பெரும்பாலும் தமிழகத்தில் நடைபெறுகிறது. தமிழ்நாட்டு மக்களின் உப்பை நான் சாப்பிட்டிருப்பதாக என் மனதில் தோன்றியது. கர்நாடகத்தில் தவித்த தமிழ் ஓட்டுநர்களை காப்பற்ற வேண்டியது என்னுடைய கடமை என்று நினைத்தேன். அதனால்தான் அவர்களைப் பாதுகாப்பாக ஓசூர் கொண்டு சேர்த்தேன், என்கிறார் நெகிழ்ச்சியுடன் சிவண்ணா பாதுகாப்பாகத் தமிழ்நாட்டிற்கு சென்ற ஓட்டுநர்கள் அனைவரும், அவர்களது வீடுகளுக்குத் திரும்பியதும் தனக்கு  தொலைபேசியில் அழைத்து நன்றி தெரிவித்தபோது   மிகவும் மகிழ்ச்சியாக் இருந்தது  என்கிறார் திருசிவண்ணா.
மனிதாபிமான அடைப்படையில் கூடக் காவிரி நீரை நமக்குத் தராமல் கர்நாடக அரசு தடுக்கலாம். ஆனால் நல்ல மனிதர்களின் மனதிலிருந்து பெருகி வரும் மனிதாபிமான ஆற்றை  அவர்களால்  தடுக்க முடியாது


கல்கி 02./10.16 இதழில் எழுதியது